வெள்ளி, ஜூன் 8

PM 11:43
15



எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான  ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.....?! பொருட்படுத்துவதும் இல்லை.....!? ஒரு முக்கியமான மாற்றம் தான் பெண் குழந்தைகளின் விரைவான பூப்படைதல். சமீப காலமாக பருவமடையும் வயது குறைந்து கொண்டே செல்கிறது. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் பருவமடைந்திருக்கிறது...இங்கே இல்லை லண்டனில்...?!!

அவ்வாறு விரைவில் வயதிற்கு வருவது நல்லதல்ல என்பதே மருத்துவர்கள், ஆய்வாளர்களின் கருத்து.  பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் மனமும் உடலும் ஒன்றாக  சேர்ந்து வளர வேண்டும். உடல் மட்டுமே வளர்ந்து, மனதில் குழந்தையாக இருப்பவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை விட பல ஆபத்துகளுக்கும் இது வழி வகுக்கும்.

இது ஏன் அவ்வாறு விரைவாக ஏற்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருப்பது  அக்குழந்தையின் பெற்றோர் தான் ?!

இதனை பற்றியதே இந்த பதிவு.....

முன்பு எல்லாம் பதினாறு வயதில், பின் அதுவும்  குறைந்து பதினாலு வயதில் பருவமடைதல் என்றானது...இப்போது 12 வயதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதில்....!! பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வருவது என்பது அவர்கள் வளரும் சூழ்நிலை, பரம்பரை, உணவு பழக்க வழக்கம் இவற்றை அடிப்படையாக வைத்து தான் நடை பெறும்.

உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

*  குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

*   பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை பலவிதத்திலும் பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் இது பெண் குழந்தைகள் விரைவில் வயதிற்கு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறும் போது பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது போன்றவை பெண் குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது, இது  ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, பிரச்சனை நேருகிறது. உடல் வளர்ச்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு முடிவில் விரைவாக அக்குழந்தையை பூப்படையச்  செய்து விடுகிறது.

*  ஆணின் அரவணைப்பு இல்லாமல்...

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஆணின் அரவணைப்பு அதாவது தன்  தந்தையின் நெருக்கம் அவசியம் தேவை. தந்தையில்லாத , தந்தை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் படி நேர்ந்தால்,  அவர்களின் பெண் குழந்தைகள் விரைந்து வயதிற்கு வந்து விடுகிறார்கள்....!!

சகோதரனின் பாசமும் ஹார்மோன்களின் குழப்பத்தை சரி செய்யும். இப்போது பெரும்பாலான  வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால் அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்துவிட்டால் சகோதரன் என்ற ஒரு உறவே தெரியாமல் தான் அக்குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தந்தையின் அருகாமையும், பாசமான அரவணைப்பும் மட்டுமாவது கண்டிப்பாக தேவை.

*  தொலைகாட்சியும் ஒரு காரணம் !!?

நம் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதில் இந்த தொலைக்காட்சிக்கு அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழப்பமான மனதுடனே  தூங்கவும் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் விரைவில் பூப்படைகிறார்கள்  என்று அறிஞர்கள் தங்களது ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

சீக்கிரம் வயதிற்கு வருவதால் ஏற்படக்கூடிய அசௌரியங்கள்

* முதலில் இதை பற்றி என்ன வென்றே தெரியாத ஒரு நிலை.
* நிகழ்ந்த பின் ஏற்படக்கூடிய ஒரு அச்சம், குழப்பம், எதனால் என்கிற கேள்வி ?!!
* பள்ளியில் சக மாணவிகள்/மாணவர்கள்  வினா எழுப்பும் பார்வைகள்.
* தனிமையான ஒரு உணர்வு.
* மனதளவில் குழந்தை, உடலளவில் பெண் ?!!

தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்...பெண் குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்

பெற்றோர்கள் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டில் குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல முறையில் தான் வளருவார்கள்....குழந்தைகள் முன்னால் சண்டை போடும் பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் மனநிலை பாதிக்கபடுவது மட்டும் இன்றி ஹார்மோன் குளறுபாடுகள்  ஏற்பட்டு விரைவில் பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதும் ஏற்படுகிறது.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே! கொஞ்சம் உங்கள் குழந்தையின் மனநிலையிலும் அக்கறைக் காட்டுங்கள்.

இதற்கு ஒரு தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது, குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.


பூ மெதுவாய்.....இயல்பாய் மலரட்டுமே....!


Tweet

15 கருத்துகள்:

  1. //குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.//

    நல்லதொரு உபயோகமான பதிவு.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படைப்பு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தலைப்பும் பதிவும் அருமை, அத்தியாவசியமானதும் கூட!

    பதிலளிநீக்கு
  4. //தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்..//
    Well said kousalya ..

    இதைப்பற்றி நிறைய பகிர இருக்கு .உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன் .

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா7:08 AM, ஜூன் 11, 2011

    good and much needed one

    பதிலளிநீக்கு
  6. கச்சிதமான கருத்துப் பதிவு சகோ. இன்றைய உணவு பழக்க வழக்கங்களும்(துரித உணவு), குடிக்கும் பாலிலும் குதர்க்கமான கலப்படங்களும்(ஆக்ஸிடோஸின்)இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  7. அறியாமையால் நாம் மூடி மறைக்கும் பல விஷயங்களைத் துணிச்சலாக எடுத்துச் சொல்கிறீர்கள். நன்றி, வாழ்த்துக்கள்.

    ஆண் அரவணைப்பில்லாமல் பெண்கள் சடுதியில் பூப்படைவது ஏற்க முடியவில்லை, மன்னிக்கவும். பெண்கள் பூப்படைவதன் காரணம் 90-95% சதவிகிதத்துக்கு மேல் உடல் வளர்ச்சி, உணவு மற்றும் genetics. இந்த combination காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப சற்று மாறலாமே தவிர (உஷ்ணப் பிரதேசங்களில் வேறு விதமாக இருக்கலாம்) emotional factorsகளின் பாதிப்பு குறைவே.

    இன்றைய காலத்தில் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். estrogen மற்றும் corn syrup கலந்த பொருட்களை (பாலிலிருந்து இவற்றைக் கலக்கிறார்கள்) முடிந்தவரைத் தவிர்ப்பது (முடிகிற காரியமா?) நல்லது.

    6-9 வயதுகளில் உடற்பயிற்சி செய்வதும் நல்லது. 'ரொம்ப ஓடாத பெண்ணே, வயசுக்கு வந்துருவே' போன்ற மூடப் பேச்சை நிறுத்த வேண்டும். பூப்படைந்த பெண்களில் டிவி முன் நேரத்தைச் செலவழிக்கும் பெண்கள் அதிகம் என்கிறார்கள். இன்றைக்கு பள்ளிக்கூடம், டிவி என்று நேரத்தைக் கழிக்கும் பெண் பிள்ளைகள் தான் பெரிய risk.

    அதிகமாக எடை போடும் பாட்டிகள்/தாய்கள் தங்கள் சந்ததிகள் விரைவில் பூப்பெய்தும் riskஐ அதிகரிக்கிறார்கள் - இது இப்போதைக்கு சந்தேக அளவில் தான் இருக்கிறது என்றாலும் சாத்தியமென்று நிரூபிக்கப்படும் என்பது என் கணிப்பு.

    முக்கியமாக, இது இயற்கை (!) என்று உணர்ந்து, அதற்கேற்றார் போல் நடந்து கொள்வது நல்லது. பூப்படைவதன் அதிர்ச்சியை அந்தப் பெண்கள் எப்படித் தாங்குவார்கள் என்பதை யோசிக்காத பெற்றோர் தான் இன்னும் அதிகம்! தக்க தருணத்தில் இதைப் பற்றிச் சொல்லி வைப்பது பூப்படைந்த முதல் இரண்டு வருடங்களின் மனநிலையைச் சீராக்கும்.

    விரைவில் பூப்படைவதால் ஏற்படும் தொல்லைகள் பிடிக்கவில்லையென்றாலோ, வயதும் மனதும் முதிரவில்லை என்றாலோ, இன்றைக்கு மருத்துவ வசதி கிடைக்கிறது - பூப்பின் விளைவுகளை மூன்று வருடங்கள் வரை ஒத்திப் போடுவதற்கு. ஏனோ இதை அரசாங்கமும் சமூகமும் அதிகம் பயன்படுத்திக் கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  8. @@ வை.கோபாலகிருஷ்ணன்...

    நன்றிகள் சார்.



    @@ Mahan.Thamesh...

    உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.



    @@ middleclassmadhavi...

    மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  9. @@ angelin...

    உங்களின் மெயில் பார்த்தேன் தோழி. நீங்க குறிப்பிட்டது ஒரு வித்தியாசமான பிரச்னை... இப்படியும் இருக்கிறதா என எண்ண வைக்கிறது...இயன்றால் இதை பற்றியும் ஒரு பதிவு எழுதுகிறேன்.

    நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  10. @@ திவ்யாம்மா...

    நன்றிகள்.



    @@ யாதவன்...

    நன்றி யாதவன்.

    பதிலளிநீக்கு
  11. @@ FOOD...

    //இன்றைய உணவு பழக்க வழக்கங்களும்(துரித உணவு), குடிக்கும் பாலிலும் குதர்க்கமான கலப்படங்களும்(ஆக்ஸிடோஸின்)இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.//

    உண்மைதான் அண்ணா. இது முக்கிய காரணம்.

    பதிலளிநீக்கு
  12. @@ சி.பி.செந்தில்குமார்...

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  13. @@ அப்பாதுரை said...

    //ஆண் அரவணைப்பில்லாமல் பெண்கள் சடுதியில் பூப்படைவது ஏற்க முடியவில்லை//

    சகோ இதை நான் ஒரு பத்திரிகையில் ஒரு ஆய்வு செய்தி என்று படித்தேன்...

    இப்படியும் காரணம் இருக்க முடியுமா என்ற ஆச்சரியத்தில் இருந்தேன், தவிரவும் குழந்தைகளின் மனநிலை, உடல்நிலையில் கூட பெற்றோர்களின் கருத்துவேறுபாடுகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது என்னை அதிகம் பாதித்ததால் அதை பதிவிட எண்ணினேன்.

    மன்னிப்பு வேண்டாமே சகோ. உங்களை பற்றி எனக்கு நன்கு புரியும், போற போக்கில் எதையும் சொல்லிவிட்டு போகமாட்டீங்க.

    உண்மையை சரியான கோணத்தில் கொண்டு சேர்க்கணும் என்கிற தீவிர விருப்பம் உடையவர் நீங்கள். உங்களின் பின்னூட்டம் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கும் தெரியும்.

    இங்கே நீங்க சொன்னவைகள் அனைத்தும் மிக தேவை.

    //பூப்பின் விளைவுகளை மூன்று வருடங்கள் வரை ஒத்திப் போடுவதற்கு.//

    உண்மையில் எனக்கு இது புது தகவல்.

    தெளிவான விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...