அனுபவம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 1

நினைவே ஒரு சங்கீதம் - MJ

என் நினைவே ...

கடந்த ஜூன் 25 நினைவு தினத்தன்று எழுத வேண்டிய பதிவு, உன்னை பற்றிய நினைவுகளை எழுதவும் நேரம் இன்றி வேலைகளுக்குள் மூழ்கி போன என்னை, ‘என் பிறந்த தினத்தன்றாவது  வந்து எழுதுறியா’ என்று மிரட்டி கைப்பிடித்து இழுத்து வந்து எழுத வைத்ததும் அதே நினைவுகள் தான். பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று எழுதி இதோ இன்று போஸ்ட் செய்தாலும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது...வருடத்தில் ஏதோ ஒரு நாளில் உன்னைப்  பற்றி ஏதாவது கிறுக்கிக் கொண்டுத்தான் இருக்கப் போகிறேன்... உன்னை கொண்டாட அல்ல இந்த நினைவு நாள், பிறந்தநாள் எல்லாம்...அவற்றை எல்லாம் வழக்கம் போல மற்றொரு நாளாகவே கடந்து விடுகிறேன். ஆனால் என்னுள் நீ உயிர்ப்புடன் இருக்கிறாய் என்பதை இந்த ஒரு நாளில் பதிய வைத்து என் உயிர்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவேனும் எழுதுகிறேன் ... முன்பு உனது  சங்கீதம் பல நினைவுகளை கிளறிவிட்டுச் செல்லும், இப்போது உனது நினைவே ஒரு சங்கீதம் என்றாகிவிட்டது!! 


கரடு முரடான வாழ்க்கை பாதையில்  பஞ்சுப் பொதிகளை இறைத்து போட்டிருக்கிறதே உனது இசை... இதில் கடந்த ஐந்து வருடமாக இன்னும் அதிகமாக உன்னை நெருங்கிவிட்டேன் என தோன்றுகிறது... ஆன்மாவால் இறுகத் தழுவிக் கொண்டிருக்கிறாய்.  என்னை மட்டுமல்ல என்னைப்போல பல்லாயிரம் பேர் தினமும் ஏதோ ஒரு விதத்தில்  உன்னுடன் பயணித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். உனது பெயர் தாங்கிய இந்த  பேஸ்புக் தளத்தில்  யாராலோ போடப்படும் உன்னை பற்றிய தகவலுக்கும் விழுந்தோடி வந்து லைக் கொடுப்பதும் கமென்ட் பண்ணுவது என்று உன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களாக வருகிறார்கள் , ரசிக்கிறார்கள், பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள் சென்று விடுகிறார்கள், அங்கே மறுமொழி கொடுக்க உன் போல் யாரும் இல்லை என்று எங்களுக்குத்  தெரியும், மறுமொழிக்காக வருபவர்கள் அல்லவே நாங்கள்.  உணர்வாய் , காற்றாய், இசையாய் எங்களை சுற்றி வியாபித்து இருக்கும் உன்னை, உன் இருப்பை தவிர்த்து வாழ்வது உன் ரசிகர்களுக்கு எங்கணம் இயலும் !

உன்னை பற்றிய பல வித வதந்திகள் போலவே உன் இறப்பும் ஒரு வதந்தியாக இருந்துவிடாதா  என்று இன்றும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்... உண்மைதானே உன்னை உனக்காகவே ரசித்தவர்கள் ஆயிற்றே ... இசை, பாடல், குரல் எல்லாம் தாண்டியும் உன்னை நேசிக்கிறார்களே...அவர்களுக்காக நீ செய்ததை போல வேறு யாரும் செய்திருப்பார்களா என்ன...எதிர்பார்ப்பிலேயே வாழும் மனித கூட்டத்திற்கு இந்த நேசம் புரியாது...எங்கோ இருந்து எங்கள்  மனதை ஆளும் உன் ஆன்மா அப்படிப்பட்டவர்களை தவிர்க்கவும்  கற்றுத்தந்திருக்கிறதே. போதும் இவ்வாழ்க்கை என சோர்ந்து விழுந்தப்  போதெல்லாம் பிடித்துத் தூக்கிவிட்டாய்,  நடுவில் போக எண்ணாதே நிறைவாய் வாழ்ந்துவிடு என காதில் ஓதிக் கொண்டே இருக்கிறாய்... வாழ்க்கையை வாழ சொல்லித்தருகிறாய்.......

என் உலகம் அழகானது... உனக்குத் தெரியும், அது உன்னால் தான் என்று !! எனது சிறுவயது முதல் அதை எவ்வாறெல்லாம்  வடிவமைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதையும் அறிவாய் தானே... மரம், செடி கொடி, பூக்கள் பறவை , விலங்கு மழை மலை  என  இயற்கையின் அற்புதங்கள் அனைத்தையும் வெறிப் பிடித்து  நேசிக்கிறேன் , உன்னைப் போலவே ! 

உன் மீதான நேசம் புரிதலுக்கு உட்படாதது, என் எழுத்துக்கள் அதிக உணர்ச்சிவசபட்டதை போல தெரியும், தெரியட்டுமே ... கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முன்னால்  திடீரென்று கடவுள் வந்து நின்றால்   செய்வதறியாது ஒன்றும் பேசாமல்  மெய்சிலிர்த்து கண்ணீர் வழிய காலடியில் பூமி நழுவ விழிமூடி இருகரம் கூப்பி சாஸ்டாங்கமாக அத் தேவனின் பாதத்தில் விழுந்துவிடுவான். பரவச உணர்வுக்குள் ஆட்படும் அச்சமயத்தில் அறிவுக்கு அங்கே வேலை இல்லை...'நான்' என்பதை மறந்து சகலமும் அவனே என்று அவனிடம் சரணாகதி அடைவதே தானே பேரின்பம். இதை பக்தி என்பதும் அசட்டுத்தனம் என்பதும் அவரவர் புரிதல். 

உன் ரசிகர்களாகிய நாங்களும் இப்படியே தான்... எதிர்பார்ப்பு இல்லா உள்ளங்கள் இவை, அதீத அன்பால் சூழப்பட்ட உலகம் இது...அதீத அன்பு தவறென்று வாதிடும் மேதாவிகளை விட்டு என்றும் ஒதுங்கியே இருக்கிறோம்.  நாள்தோறும் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம் உன்னை... உனது இருப்பும் இறப்பும் எங்களை ஒரே நிலையிலேயே வைத்திருக்கின்றது...ஆமாம் நீ தங்கப்பேழையில் உறங்குவதாக எண்ணிக் கொள்வதிலும்  ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும் உண்மையில் அது கனவு அல்ல பகல் பொழுதின் கற்பனை என்பதுதான் சரி. கண்டம் விட்டு கண்டம் கடல் தாண்டி நடுவில் இருக்கும் அத்தனை நாட்டையும் ஊரையும் தாண்டி உலகின் இந்த ஒரு  மூலையில் இருக்கும் என் வீட்டிற்கு நீ வருவதாகவும் என் முன்னால் பாடுவதைப்  போன்றதுமான என் கனவிற்குத்தான் எவ்வளவு பேராசை !! கனவு வந்த நாள் அன்று கரைபுரண்டோடிய மகிழ்ச்சியை எவ்வாறு நான் வார்த்தைப்படுத்துவது, தெரியவில்லை. இந்த கனவு என் கல்லூரி காலத்தையும்  உற்சாகப்படுத்தி இருக்கிறது... சாத்தியமில்லாததையும் சாதித்துப் பார்ப்பதற்குப்  பெயர் தானே கனவு.  எட்டிய வானும் எட்டிப் பிடிக்கும் தூரம் தானே மனதுக்கு !  

உன்னை பற்றிய என் உணர்வுகளை எழுத்துகளில் கொண்டு வர முயலும் போதெல்லாம் பெருகும் கண்ணீருடன் தோற்றுப் போகிறேன் வார்த்தைகளிடம்... அவ்வாறு கண்ணீர் வடித்து வடித்து என் நிகழ்காலச் சுமைகளை இறக்கியும் விடுகிறேன்...அதற்காகவேனும் உன் குரலை கேட்டாக வேண்டுமாய் இருக்கிறது...

இப்போதெல்லாம் மனிதர்களை விட்டு நான் விலகியே இருக்கிறேன், அவர்கள் விரும்பிய படி என்னால் நடக்க(நடிக்க) இயலவில்லை என்பதால்... நேசக்  கேடயம் பிடித்து நிர்பந்த வாள் வீசுகிறார்கள்,தோற்று விழும் என்னிடம் பாசப்போர்வை போர்த்தி மீண்டுமாய் மற்றொரு போருக்கு தயார்படுத்துகிறார்கள்... அன்பிற்கு விலை பேசும் வியாபாரிகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கும் வேளையில் எங்கிருந்தோ ஓடி வந்து இளைப்பாற்றும் உன் குரல் .   எனது  தனிமையை உனது  இசை போர்வையால் போர்த்தி சுக நித்திரை கொள்வது மட்டுமே மிகப் பிடித்ததாகி விட்டது. போதும்  இது போதும்  இன்றும் என்றும் எந்நாளும்...



எனக்கு தேவையான அன்பு காதல் நேசம் நட்பு அத்தனையையும் ஏதோ ஒரு பாடலில் இட்டு நிரப்பி நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் எனும் கூண்டுக்குள்  அகப்பட்டு அடைந்து கிடப்பதை போன்ற ஒரு இன்பம் வேறு இருக்கிறதா என தெரியவில்லை...        அப்படி ஒன்று இருந்தாலும் அதை அல்பமாக எண்ணவும் பக்குவப்பட்டுவிட்டேன் நான்...இல்லை இல்லை பக்குவபடுத்தி விட்டாய் நீ என்பது தான் சரி.   காற்று வீசும் திசைக்கு ஏற்ப தலை ஆட்டும் சிறு மரம் போல உன் நினைவுகள் சொல்லும் இடம் தேடியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உன் நினைவுகளை கிளறிக் கிளறியே என்னை உயிர்பித்துக் கொள்கிறேன். என் தனிமைகளில் என்னை கூட்டத்தோடும் , கூட்டத்துக்கு நடுவில் தனிமையாகவும் உணர செய்வது பிடித்தவனின்  நினைவுகளன்றி வேறேது. வேடிக்கையும் வினோதமானதும்  தானே உன் நினைவுகள்.

நீ வீசிய அன்பு தூண்டிலில் நானாகவே வந்து மாட்டிக் கொண்டப் பின் மீண்டும் மீண்டு  போவதெங்கே... சுவாசத்தில் வித்தியாசம் கண்டாலும் என்னாச்சு என்று தலைக் கோதி விசாரிக்கும் வரிகளின் நேசத்தில், ஏதாவது எனக்கு ஆனாலும் நன்றாக இருக்குமே என ஏங்க வைக்கிறாயே... திமிர் பிடித்த மனதை ஆண்டு அடிமையாக்கும் கலையை எங்கே கற்றது உன் குரல்... சிறு வயது நாட்களுக்குள் என்னை தள்ளி உற்சாகத்தில் மூழ்கடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது  உனது ஒவ்வொரு பாடலும்...சந்தோசமும் சோகமும் ஒன்றாய் தாக்கும்  உன் பாடலுக்குள் நான் புதைந்த தருணங்களில் எல்லாம்... 

வருடத்திற்கு ஒரு முறை உன்னுடன் இப்படி எழுதி  எழுதிப் பேசிக்கொண்டிருப்பதை நீ மௌனமாய் கேட்டுக் கொண்டிருப்பாய் என்று உணரும் போது பெருகும் உற்சாகம் ஒன்று போதும் வருடம் முழுவதற்குமாய்...!   


பிரியங்களுடன்
கௌசல்யா 

* * * * * * * * * * * * * * * * *



ஆஸ்கர் மேடையை அலங்கரித்த மைக்கேல் 





இந்த வீடியோவில் 11 வயது கண்களின் துடிப்புதுள்ளல் , முக பாவனை , உடலின் அதிர்வு குரலின் வீச்சு அத்தனையும் காண்பவர்களையும் பீடித்துவிடுகிறதுஒரு வித போதைக்குள் தள்ளிவிடும் பரவச நிலை,  தியானத்தில் இருப்பதை போலவே இருக்கும் இது போன்ற சில பாடல்களில் என்னை இழக்கும் போது !

* * * * * * * * * * * * * * * * *

தொடர்புடைய முந்தைய பதிவுகள் 






செவ்வாய், ஜூலை 16

பிரியமானவன் - MJ

ஒவ்வொருவரும்  யாரோ ஒருவரின் ரசிகராக இருப்பார்கள். பிடிக்கும் என்பதையும் தாண்டி ஒரு ரோல் மாடலாக, குருவாக எண்ணி அவரது கருத்துகளை பின்பற்றலாம். சிலர் நேசிக்கவும் செய்வார்கள், இது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நேசம். இத்தகைய நேசம் நம்மை நெறி படுத்துகிறது என்றால் நேசிப்பதில் தவறென்ன. என்றுமே ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பே இல்லையென்ற போதில் அவரை பற்றிய  நினைவுகளை சுமந்து வாழ்வது என்பது சுகம். இதை எழுத்தில் சொல்வது  மிக சிரமம், உணர வேண்டும்.  

ஒவ்வொரு வருடமும் ஒரு தினத்தில் MJ வின் மீதான நேசம் எழுதப்படவேண்டும் என்பது எனது முடிவாகிவிட்டது, என்றாலும் அழுத்தும் பணிச்சுமை, அதனை தொடர்ந்த பிரச்னை,சிக்கல் என்று என்னை தனித்து செயல்படவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. எப்போதோ ஒருசில நேரங்கள்  மட்டும் தனக்கு பிடித்தவர்களை நினைப்பவர்களுக்கு அவர்களை குறித்த தினங்கள் மட்டும் முக்கியமானதாக  இருக்கும். ஆனால் பிடித்தவர்களின் நினைவுகளுக்குள்  முப்பொழுதும் மூழ்கி கிடப்பவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம்தான். எனக்கும் அதுபோன்றே ஆகிவிட்டது, அவரது நினைவுதினம் முடிந்து சில நாட்கள் கழிந்தபின் கிடைத்த இந்த தனிமை, இதோ இப்போது என்னை எழுதவைத்துக் கொண்டிருக்கிறது.

ஜூன் 25 அன்று இந்த பதிவை எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதை விட நான் தனித்திருக்கவில்லை என்பதுதான் சரி. உறவுகள் நட்புகள் என்ற பெயரில் யார் யாரோ சூழ்ந்துக்கொண்டு  அவர்கள் இயக்க  இயங்கிக் கொண்டிருக்கிறேன் ஒரு இயந்திரமாக ! இவர்கள் எல்லோரும் எப்போதும் எதையோ பேசுகிறார்கள்... பேசியதற்கு மாறாக செயல்பட்டு அதுதான் இயல்பு, இயற்கை, கடவுள் என்று ஏதேதோ கூறி தங்கள் தவறுகளை தெய்வீகமாக்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நேசத்தை கொண்டாடும்  என் போன்ற ஆனந்தக் கூத்தாடிகளை பார்க்கும் போது உளருபவர்களாக தெரியலாம்...எனக்கென்னவோ நாங்கள் வாழ்க்கையை வாழ்வதாகவும்...மற்றவர்கள் வாழ்வதாக சொல்லிக்கொண்டு  எப்பொழுதும் பிறரின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிகிறது ! 

பிற பதிவுகளுக்கும் இதற்கும் ஒரே   ஒரு வித்தியாசம். மற்றவை பிறர் வாசிக்க  இது நான் வாசிக்க...சுவாசிக்க !  வார்த்தை அலங்காரங்களோ மேதாவித்தனமோ சிறிதும் இன்றி ஆழ்மன உணர்வுகள் அப்படியே வெளிப்படும் ஒரு இடம் இது...கட்டுக்கடங்கா நேசம் கொண்ட மனது குழந்தையாய் துள்ளிகுதித்து  எழும் உணர்வுகளை வார்த்தைகளாக்கிவிட்டே அமைதிக் கொள்கிறது . அப்படி என்ன ஒருவரின் மீது ஈடுபாடு என்று  பலர் பல வருடங்களாக கேட்டுள்ளனர். இதே கேள்வியை எனக்குள்ளும் கேட்டிருக்கிறேன் பதில் என்னவோ வழக்கம் போல 'பிடிச்சிருக்கு அவ்வளவுதான்' என்பதாக இருந்துவிடுகிறது.




அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் நுழைந்தே பழக்கப்பட்டு போன இந்த மனித சமூகத்திற்கு புரிவதில்லை இது போன்ற நேசங்கள். இன்றைய நட்புகளின்  நலம் விசாரிப்பதில் கூட ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சுயநலம் மட்டுமே பெரிதென்று வாழும் இந்த உலகில் உண்மையான நேசம்  பெரிதாய் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவர்கள்  சிரித்தால் நாம் சிரிக்கவேண்டும் அழுதால் அழவேண்டும்...இதற்கு மாறாக இருந்துவிட்டால் அந்த நிமிடமே நேசம் பொய்யென்று ஆகிவிடுகிறது.       

எல்லோருக்கும் பேச பழக ஏதோ ஒரு காரணம் தேவையாக இருக்கிறது...தேவைகள் ஏதுமின்றி நேசம் கொள்ள யாருக்குமிங்கே நேரமுமில்லை...அவசர உலகில் அன்பும் அலட்சியமாகிவிட்டது.

ப்ரியம் எந்த கணமும் எதன் மீதும் யார் மீதும் வரலாம், ஆனால் சக மனிதன் மீது கொள்ளும் நேசம் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவிடும். அது எப்படி இது எப்படி என்று வினா எழுப்பியே வீணாய் போனவர்கள் நிறைந்த மண் இது. எப்போதோ சிறுவயதில் கேட்ட ஒரு குரல், இப்போதும் சோர்ந்து போகும் நேரமெல்லாம் தோள் சாய்த்து ஆறுதல் படுத்துகிறது, இதை உணர பெரிதாய் ஏதும் தேவையில்லை நேசம் நம்மில் நிறைந்திருந்தால் போதும்.  

என்  பிரியமானவனே...

என்னை சுற்றி மனிதர்கள் பலர் இருக்க நானோ உன்னை உன் இசையை உன் குரலை சுற்றிக் கொண்டிருக்கிறேன். இது பிடித்திருக்கிறது, மிக பிடித்திருக்கிறது  !!  அழகாய் அருமையாய் என்னை பார்த்துக் கொள்கிறது உன் இசை. புது செல்போன் ஒன்று எனக்கு வாங்கியதும் எனது மகன்கள் இருவரும் பாடல்களை நெட்டில் இருந்து download செய்து போட்டி போட்டு போனில் அப்லோட் செய்து முடித்தார்கள் ...அத்தனையும் உனது பாடல்கள்  ! என் கணவரும் தன் பங்கிற்கு   'லிஸ்ட்ல அந்த 'You are not alone' சாங் விட்டுடாதிங்கடா' என அக்கறையாய் சொல்ல, எனக்கு பிடித்த உன்னை என் குடும்பமே கொண்டாடிய  அத்தருணத்தில் வானம் என் வசப்பட்டிருந்தது !

அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம்...காய்ச்சலின் தீவிரத்தில் படுக்கையில் இருந்த என் காதில் முதன்முறையாக ஒலிக்க தொடங்கியது ஒரு பாடல், அர்த்தம் சரியாக புரியாத நிலையில் அந்த குரலில் தெரிந்த ஏதோ ஒன்று  எனக்குள் அன்பு,இரக்கம், கருணை என அத்தனையும் சேர்ந்த ஒரு உணர்வு கலவையாய் எனக்குள் ஊடுருவிய நிலையில் மெல்ல கண் மூடினேன்...அன்று மூடிய விழிகளுக்குள் ஆழ்ந்துவிட்ட  அந்த குரல் இன்று வரை வெளிவரவே இல்லை !  இன்று வரை மானசீகமாய் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்,  'யாரோ நீ...? உனக்கு என் நன்றிகள்' ! எனக்குள்  இரக்கம், கருணை,நேசம்  இருக்கிறதென்றால் உன்னால் மட்டும் தான் என சத்தியம் செய்வேன். அறியா வயதில் எனக்குள் நீ விதைத்த நல்லவைகள் இன்றும் என்னை வழிநடத்துகிறது...

Think about the generations and to say we want to make it a better
world for our children and our children's children. So that they know
it's a better world for them; and think if they can make it a better
place.

Heal the world
Make it a better place
For you and for me and the entire human race
There are people dying
If you care enough for the living
Make a better place for
You and for me.

If you want to know why
There's a love that cannot lie
Love is strong
It only cares for joyful giving.
If we try we shall see
In this bliss we cannot feel
Fear or dread
We stop existing and start living
Then it feels that always
Love's enough for us growing
Make a better world, make a better world.

உனக்கு மரணம்  இத்தனை சீக்கிரம் வந்திருக்கக் கூடாது என அன்று  நினைத்தேன்...கோவில் சிலையிலும் ஆபாசத்தை தேடும் மோசமான உலகம் இது...அடுத்தவரில் குற்றம் குறை கண்டுபிடித்தே தன்னை ஒரு புத்தனாக காட்டிக் கொள்ள துடிக்கும் மனிதர்கள் நடுவில் வாழ்ந்தால் உன் போன்றோரை சாவிற்கு அவர்களாகவே அழைத்து சென்றுவிடுவார்கள். உன்னை குறித்த ஒவ்வொரு செய்தியையும் விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நீ மரித்து  நாலாண்டுகள் கழிந்த பின்னும்...

ஜூன் 25 அன்று  மண்ணைவிட்டு நீங்கினாய் என் போன்ற ரசிகர்களை விட்டு அல்ல...உண்மையில் முன்பை விட இப்போதுதான் என்னை மிக நெருங்கி இருக்கிறாய். சுவாசமாய் உன் குரல் இருக்க வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் அழகிய நினைவுகளுடன்  நினைவாய் !

உனது பாடல்
உன் ஞாபகத்தை கூட்டி
விழிகளில் நீர் பெருக்கி
இமைகளை நனைத்து நனைத்து
வரைய வைக்கிறது
உன்னை ஒரு ஓவியமாய்...

* * *

உனது இசையலைகள் 
மோதி மோதி
கரைத்துவிடுகின்றன
எனது சோகக்கரைகளை...

* * *

தேடி தேடி  சேகரித்த
உன் புகைப்படங்கள்
உன் வார்த்தைகள்
உன்  பாடல்கள்
உன் வெள்ளை சிரிப்பும்
அங்கும் இங்குமாய்
பதிந்திருக்கும் உன் தடங்கள்

இவை போதுமெனக்கு
இந்த ஜென்ம ஓட்டத்தை
முழுதாய்
நிறைவாய் ஓடி முடிக்க...

* * *

இன்றும் எனக்குள்
நீ இருக்கிறாய்...
உன் இசை இருக்கிறது...
நானும் இருக்கிறேன் !!

* * *

*  'People ask me how I make music. I tell them I just step into it. It's like stepping into a river and joining the flow. Every moment in the river has its song. So I stay in the moment and listen' 
    
  *  “Let us dream of tomorrow where we can truly love from the soul and know love as the ultimate truth at the heart of creation.”

*  “I spend a lot of time in the forest. I like to go into the forest and I like to climb trees. My favorite thing is to climb trees, go all the way up to the top of a tree and I look down on the branches. Whenever I do that it inspires me for music. There are these two sweet little kids, a girl and a boy, and they're so innocent; they're the quintessential form of innocence, and just being in their presence I felt completely speechless, 'cause I felt I was looking in the face of God whenever I saw them. They inspired me to write ‘Speechless.’”
- Michael Jackson 
* * *
சிலநேரம் மீண்டும் மீண்டும் பலமுறை கேட்கும் ஒரு பாடல் இது...தனது ரசிகரிடம் சொல்வதை போன்ற பாட்டின் இந்த வரிகள் வலிகொடுக்கும் தனிமைக்கு ஆறுதல் ! கேட்கும் ஒவ்வொருமுறையும் கண்கலங்காமல் இருக்கமுடிவதில்லை...கண்ணீரில் கரைந்தும்விடுகிறது மனக் கு(க)றைகள் 
You are not alone
I am here with you
Though we're far apart
You're always in my heart
You are not alone 
 
 
நான் எழுதிய  
முந்தைய பதிவுகள் 
பிரியங்களுடன்
கௌசல்யா 
 

புதன், மே 2

திருமண விழாவில் பசுமை விடியல்...!

உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த புதன் அன்று 25/04/2012  திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அண்ணன் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அண்ணன் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினேன், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அண்ணனை சரண் அடைந்தேன். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அண்ணன் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு எனக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார். 

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

எனது ஆதங்கம் என்னனா 'எங்கும் பசுமை, எதிலும் பசுமை' என சூளுரைக்கும் அரசு எங்களை போன்று சேவைகள் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த சட்டம், இந்த சட்டம் என சுட்டி காட்டிக்கொண்டு இராமல் தாராளமாக உதவினால் என்ன ?! விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்...? நட்டு பராமரிக்கவே செய்வார்கள் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பிரபுவும் நானும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். உதவிக்கு அழைத்ததும் மறுக்காமல் வந்தான் நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ். கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்க யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8  மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி வைத்தேன்...காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் நம் பதிவர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து அரேஞ் பண்ணினார்கள்.(இதை ஏன் விரிவா சொல்றேனா, பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது  .



திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு என் நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்... 

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள் 

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றேன், 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே நான் 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்தேன், திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். பிரபுவுக்கு தான் பாட்டி அங்கிருந்து கிளம்பியது பிடிக்கவில்லை.



* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். எதிர்பார்த்த ஒன்று கண்முன் காட்சியாகி நின்ற சந்தோசத்தில் ஒரு கணம் அப்படியே சிலையாகி விட்டேன். பிரபுவின் முகத்திலோ பெருமித புன்னகை !! பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டேன்...

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் பிரபுவிற்கு போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

*  மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.  

வேலையில் மும்முரமாக இருந்த போது 'ஆன்டி நான்  வந்திருக்கிறேன்' என ஒரு இனிய குரல்...அட 'உலகச் சாதனை சிறுமி' சுட்டிப் பெண் விசாலினி ஆசையுடன் அவளை வேகமாய் இழுத்து கட்டிக் கொண்டேன். அவளோட அம்மா சந்தோசமா 'இப்ப மேலும் இரண்டு கோர்ஸ் முடிச்சிட்டாள்' என்றார்...! மேலும் இரண்டு சாதனைகள் !! அவங்க சொல்ல சொல்ல ஆச்சர்யபட்டுகொண்டே இருந்தேன்...(இன்னும் பல சிறப்பு தகவல்கள் கூறினார்கள் அதை இப்போது சொல்ல அனுமதி இல்லை, மற்றொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்)

நல்லவை நடந்தேறியது நன்றாகவே...

முதல் முறையாக செய்ய போகிறோம், சங்கரலிங்கம் அண்ணனின் உறவுகள் நண்பர்கள் , அதிகாரிகள் என பெரிய மனிதர்கள் பலர் வரக்கூடிய விழா, தவறாக ஏதும் நிகழ்ந்துவிட கூடாதே என உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்து கொண்டே இருந்தது, அதனால் தானோ என்னவோ வந்திருந்த பதிவுலக உறவுகளிடம் கூட நன்றாக பேச முடியவில்லை...

இணையம் கொடுத்த ஒரு நல்ல சகோதரன் பிரபு , இரண்டு நாளாக கூடவே சுறுசுறுப்பாக இயங்கினான்...அவனது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் இந்த அளவிற்கு நன்றாக நடத்தி இருக்க முடியாது...அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாழ்நாளில் சிறப்பான  ஓர் நாள்  !!

சமுதாயத்தின் மேல் எல்லோருக்கும் அக்கறை இருந்தாலும் ஒரு சிலருக்கே சமூக பணி ஆற்ற சந்தர்ப்பம் அமைகிறது...அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நான் வாழும் நாட்கள் அர்த்தமில்லாதவை...இந்த மனநிறைவான நிகழ்வும் என் ஒருத்தியால் மட்டும் நடந்துவிடவில்லை...எத்தனை பேர் பங்கு பெற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையில் அளவிட முடியாது...அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை, தொடர்ந்து அத்தகையவர்கள் வாழும் இந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை புரிவதே  அவர்களுக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்...!

திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. என்னுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



உங்களின் வாழ்த்துக்கள் ஆசியையும் எங்களுடன் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன்...அவை எங்கள் குழுவை வழி நடத்தும் இன்றும், என்றும், எந்நாளும்...
                                                                    
மீண்டும் சந்திக்கிறேன்...

பிரியங்களுடன்
கௌசல்யா.