கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 7

அறிவைத் திருடாதே...! இணையதள பதிவு திருடர்களுக்கு கண்டனம் !!


பதிவுலகத்தில் இருக்கும் சிலருக்கு ஒருநாளில் இரண்டு பதிவுக்கு அதிகமாக எழுத இயலும்...ஆனால் என் போன்ற வெகு சிலருக்கு வாரத்திற்கு இரு பதிவு என்பதே அதிகம். இந்நிலையில் கொஞ்சமும் மனசாட்சி இன்றி எனது பதிவுகளை எவ்வித அனுமதியும் பெறாமல் சுலபமாக திருடி தங்கள் தளத்தில் வெளியிடுகிறார்கள்...இதில் எனது பார்வைக்கு வராதவை எத்தனையோ !!?   எங்கிருந்தும் யார் பதிவையும் சுலபமாக இரு நிமிடத்தில் இடம் மாற்றிவிடலாம்...அவ்வாறு செய்வது தவறு என்று பதிவு திருடர்களுக்கு ஏனோ உரைப்பது இல்லை. ஒருவரின் சொந்த கருத்தை அவரறியாமல் திருடுவது அநாகரீகம், அசிங்கம், கேவலம் ...!!

எது ஒன்றும் எங்கிருந்தாவது எடுத்ததாகத்தான் இருக்கும். ரிஷி மூலம் எது என்று யாருக்கும் தெரியாது. ஒரு பதிவை அப்படியே காப்பி செய்து போடுவதை விட அதில் இருக்கும் மூல கருத்தை எடுத்துகொண்டு அத்துடன் தங்களின் சொந்த கருத்துக்களையும் சேர்த்து எழுதுவது ஏற்புடையது. 

அதை விட்டுவிட்டு  ஒரு எழுத்துக்கூட விடாமல் அப்படியே காபி செய்து வெளியிடுவதை பார்க்கும் போது எரிச்சல் தாள முடியவில்லை. இப்போது தான் தெரிகிறது என் போன்ற நிலையை ஏற்கனவே சந்தித்த மற்றவர்களின் நிலை...! சகோதரி ஜலீலா அவர்கள் அப்போது எத்தனை வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை உணருகிறேன். அடுத்தவர்களின் வயிற்றேரிச்சலை கொட்டி திருடர்கள் கண்ட பலன் என்னவோ???

காப்பி  ரைட் வாங்கி வச்சுகோங்கனு நண்பர்கள்  சொன்னாங்க...'நானும் எடுத்து வச்சிருக்கிறேன்' அப்டின்னு சொல்லிக்கலாம்...ஆனா அதை வச்சு கோர்ட்ல கேசா போட முடியும்...?! வேதனை !!

சொந்த(நொந்த) அனுபவங்கள்... 

* முக நூலில் தன்னை சமூக சேவகர் என்று ஒருவர் கூறி கொள்வார், குழந்தைகள் சம்பந்தப்பட்ட எனது பதிவுகளின் சில பாராக்களை காப்பி செய்து முக நூலில் போட்டு இருந்தார். எனது பெயர், லிங்க் எதுவும் இல்லை...அவரது நண்பர்களும் இவர் சொன்ன கருத்து என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்கள், அதை அனுசரித்து இவரும் பதில் கூறி இருந்தார். தொடர்ந்து இங்கிருந்து காப்பி பண்ணி ஸ்டேடஸ் தொடர்ந்து போட்டு கொண்டே இருந்தார்...எனக்கு அதீதமாக படவே, இன்பாக்சில் சுட்டி காட்டினேன், உடனே 'சாரி' என்றதுடன் என் தள லிங்கை அங்கே குறிப்பிட்டார். ஆனால் சற்று நேரத்தில் லிங்க் குறிப்பிட்ட அந்த ஸ்டேடஸ் டெலீட் செய்யப்பட்டு விட்டது... ஏன் இந்த ஈகோ ?! லிங்க் குறிப்பிட்டால் எங்கே தான் அதுவரை போட்டு வந்த பெரிய மனிதன் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சமா ?!! மனதில் சேவை எண்ணம் சிறிதும் இல்லாத, இவர் ஒரு சமூக சேவகர் ?!

* தனி நபர் வளர்த்த காடு பற்றி நான் எழுதிய மற்றொரு பதிவு முக நூலில் சுற்றி வருகிறது...ஆனால் வேறு ஒருவரின் பெயரில்...??! இது எந்த விதத்தில் நியாயம் என புரியவில்லை. நானே எனது இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தான் எழுதி இருந்தேன். ஆனால் லிங்க் , என் பெயர் போடவில்லை என்றாலும் பரவாயில்லை , வேறு ஒருவர் பெயரில் வெளிவருவது  படு அபத்தம் !!?

அந்த பதிவை எழுத எனக்கு  மூன்று வாரம் ஆகியது. The Times of India வில் வந்த செய்தியை பார்த்து அது குறித்த வேறு விரிவான தகவல்கள்  இணையத்தில் இருக்கிறதா என தேடி, மொழிபெயர்த்து என் கருத்துக்களையும் கலந்து எழுதினேன். ஜாதவ் பயேங் போட்டோ தேட இரண்டு நாள் ஆச்சு... இப்படி சிரமப்பட்டு எழுதிய ஒன்றை கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களது பெயரை போட்டு வெளியிடுகிறார்கள்.

கூகுள்ல 'ஜாதவ் பயேங்' என்று டைப் பண்ணினா என் பதிவு மட்டும் தான் இருக்கும் என்பதை பார்க்கலாம்...தமிழ் பிளாக்கில் அவரை பற்றி இதுவரை வேறு யாரும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் (இருந்தால் லிங்க் கொடுக்கவும்)

* மெதுபக்கோடா என்கிற  முக நூல் தளம் ஒன்று சில நாட்களாக எனது தாம்பத்தியம் பதிவுகளை அப்படியே காபி செய்து வெளியிட்டு வருகிறது...அங்கிருந்து பல இடங்களுக்கு பகிரப்பட்டு சென்று கொண்டிருக்கிறது...இப்படி பலராலும் பிற இடங்களுக்கு செல்வது எனக்கு  மன உளைச்சலை கொடுக்கிறது. இதை பலர் ஷேர் செய்வதின் மூலம் அவர்களும் இத்திருட்டுக்கு உடந்தையாகிறார்கள்.

இப்படி மொத்தமாக காபி செய்து போடுவதை விட இன்னார் எழுதியது, இந்த லிங்கில் இருக்கிறது படித்து கொள்ளுங்கள் என்று லிங்க் கொடுக்கலாம்...எல்லோருக்கும் பயன்படதானே எழுதுகிறோம் போய் சேரட்டும் என விட முடியவில்லை...சிலரும், நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? அது தானே எனக்கும்...

மேலும் இந்த தொடரை புத்தகமாக போட இருக்கிறேன்...! நாளை அதை படிப்பவர்கள்  என்னை திருடியாக(?) பார்க்கப்படவும் வாய்ப்பு  இருக்கிறது...!!???  ( வேடிக்கை அல்ல, இப்படியும் நடக்கலாம்...மக்களே !!)

* இந்த பதிவை நேற்று காலையில் எழுதி முடித்தேன்...அதற்குள் மாலையில் சௌந்தர் மெயில் பண்ணி சொல்றான், 'அக்கா உங்க கவிதை இங்க இருக்கு, இது தான் லிங்க்' என்று !! இது ஒரு பெண்(!) சௌந்தர் அங்கே சென்று இது வேறு ஒருவரின் கவிதை, குறைந்த பட்சம் அவங்க பேராவது குறிப்பிடுங்கள் என்று போட்ட அத்தனை கம்மெண்டும் உடனுக்கு உடன் டெலீட் செய்யப்பட்டுவிட்டது...(எவ்வளவு உஷாரா இருக்காங்க ?!)
    
எனது  பல நாள் சிந்தனை, உழைப்பு இப்படி ஒரு நொடியில் திருடபடுவது மனதை மிக வருத்துகிறது...தயவு செய்து பிறரை வேதனைபடுத்தும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்...

பதிவை பாதுகாத்துக்கொள்ள என்ன வழி மேற்கொண்டாலும் பிரயோசனம் இல்லை. எல்லாவற்றுக்கும் குறுக்கு வழி கண்டுபிடித்து விடுகிறார்கள் திருடர்கள்!!

சுத்த  அயோக்கியத்தனம்

சிலர் நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? 

பிறருடைய உழைப்பை, கருத்துக்களை,கற்பனைகளை, படைப்புகளை  திருடி தன்னுடைய பெயரை போடுவது என்பது (வெளிபடையா சொல்ல முடியவில்லை) அவ்வளவு கேவலம்.

எந்த  உரிமையில் தன்னுடையது என்று கூறுகிறார்கள்...கொஞ்சங்கூட யோசிக்க மாட்டார்களா?? அடிப்படை நாகரீகம் என்பதே இல்லாமல் போய்விட்ட மட ஜென்மங்களா...?

தகவல் எடுக்கப்பட்ட எனது தளத்தின் லிங்க் குறிப்பிடாமல் இருப்பது

என் கருத்தை அப்படியே தனது கருத்தாக திரித்து கூறுவது

காபி பேஸ்ட் செய்வது

ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றுவது.

இது  போன்ற எதுவாக இருந்தாலும் தவறு தான்.

முகநூலில் ஒருத்தர் வெளியிட்ட கவிதை, கட்டுரை படிக்கிறவங்க கொஞ்சம் யோசிங்க...இதை வெளியிட்டவர் இந்த மாதிரி எழுத கூடியவர் தானா ? பிளாக் ஏதும் வச்சி அதில் எழுதி இருக்கிறாரா ??  ஒருவேளை வேறு இடத்தில் இருந்து எடுத்தது போல சந்தேகம் வந்தால்/தெரிந்தால் கம்மேண்டில் அதை குறிப்பிடுங்கள்...நண்பர் தானே என்றும் , நேரமின்மை என்றும் ஒருவரின் தவறுக்கு துணை போகாதீர்கள்.
வேண்டுகோள் 

இது  போன்றவை இனி தொடர்ந்து கொண்டே இருந்தால் பிரைவசி செட்டிங்க்ஸ் மூலமாக  குறிப்பிட்ட சிலர் மட்டும் படிக்குமாறு செய்யலாம் என நினைக்கிறேன்...

'மனதோடு மட்டும்' தளத்தில்  உள்ள ஆக்கங்கள் , கட்டுரைகள், தொடர்கள், கவிதைகள் போன்றவற்றை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் எக்காரணம் கொண்டும் என் அனுமதி இன்றி இனிமேல் பிரதி எடுக்க கூடாது என்பதை இங்கே வேண்டுகோளாக வைக்கிறேன்.

                                                                 * * * * *
 
எனது பதிவுகளை என் அனுமதி  இன்றி பிரதி எடுத்து அவர்களின் பதிவு போல் வெளியிட்ட அத்தனை பேர் மேலும்  என் கண்டனத்தை வன்மையாக இங்கே பதிவு செய்கிறேன்...

                                                                 * * * * *
இரண்டு திருடல்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

இந்த படத்தில் உள்ளது என் கவிதை - என்னவனே....!

கவிதை இங்கே - http://sanvishblue.blogspot.in/2010/11/blog-post_5550.html

இந்தப் பதிவை திருடியவர் - Nayaki Krishna

இந்த படத்தில் உள்ளது என் பதிவு - தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

பதிவு இங்கே - http://www.kousalyaraj.com/2011/08/25.html

இந்த பதிவை திருடியவர்[கள்] - மெது பக்கோடா

இன்னும் நிறைய முகப்புத்தகத்தில் உலாவுகின்றன.

நன்றிகள் : 

* தாம்பத்தியம் பதிவுகள் எங்கே திருடப்பட்டன என்பதை கண்டு அங்கே சென்று பல எதிர்ப்பு கமெண்டுகளை பதிவு செய்த தம்பி புவனேஷ்க்கு என் நன்றிகள். இவரது தளம் பிரியமுடன் புவனேஷ்

* வாசல் தளத்தின் பதிவுகள் வெளியிட பட்ட இடத்தை கண்டு எனக்கு தெரிவித்த தம்பி சௌந்தருக்கும் என் நன்றிகள்.

* Screen shot photos எடுத்து கொடுத்த தம்பி பிரபுவுக்கு என் நன்றிகள்.
                                                                    * * * * *

படம் - நன்றி கூகுள் 
               

திங்கள், டிசம்பர் 6

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!

    காதலியை, மனைவியை
    தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர் 
    வாழும் இங்கே தான் 
    வேறு சில புல்லுருவிகள் !
  
    அன்பு, அக்கறை காட்ட வீட்டில் 
    அவளுக்கும்  ஆட்கள்  உண்டு 
    என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய 
    உன் அறியாமை என்னே !
  
    பெண் வீழ்ந்தாள்  என்று நினைத்தாயோ
    வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும்
    உன் வித்தை புரியா
    பேதையவள் அன்றோ !
  
    தாய்க்கும் தாரதிற்க்கும்
    வித்தியாசம் உண்டென்பதை
    உணரா மூடன் நீ அன்றோ !
  
    அடுத்தவன் பெண் தானே
    எடுத்தாள சுலபம் என்று எண்ணியது
    உன் மடமை அன்றோ !
  
    உன் வீட்டு பெண்ணை அடுத்தவன் பார்த்தால்
    மட்டுமே வெகுண்டெழும்  உன் ஆண்மை
    என்ன  வேடிக்கையடா,மானிடா !?
  
    காதலை விட புனிதமான நட்பை 
    காமத்திற்கு என்றே கடைவிரிக்கும் 
    கூட்டத்தின் தலைவன் பதவி உனக்கே !
  
    பாரதியின் ரௌத்ரம் பழகினால் 
    மட்டும் போதாது பெண்ணே....
    செயலிலும் காட்டு,
    அழிந்தொழியட்டும் கயமை ! 
    களை எடுக்க ஏன் தயக்கம்
    தோள் கொடுக்க நல்லவர் பலர் 
    உண்டு இங்கே !
  
    'தேரா  மன்னா' இயம்பிய 
    வழி வந்தவள் அன்றோ நீ !
    உள்ளே கொந்தளிக்கும்
    நெருப்பை  அள்ளி எறி
    எரிந்து சாம்பலாகட்டும்
    அற்ப பதர்கள்... !!

இதை நான் சொல்லியே ஆகணும்...!!

பதிவுலக தோழி ஒருவர் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நிஜ நிகழ்வு,,,,பதிவுலகம் வந்த புதிதில் ஆண் பதிவர்  ஒருவர் ஒரு பெண் பதிவரிடம் நட்பாக பேசி பழகி இருக்கிறார்....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!?  காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த  ஆண் பதிவரின் நட்பு  தொடர்ந்து இருக்கிறது......!

நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...! நட்பு கொஞ்சம் பாதை மாறுவதை உணர்ந்து,  நட்பை  முறித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு அந்த  பெண் பதிவர் வந்ததை தெரிந்து டார்ச்சர் இன்னும் அதிகரித்து இருக்கிறது...கடைசியில் இந்த விவகாரம் அந்த பெண் பதிவரின் கணவன் காதிற்கு போய்விட்டது....அதன் பின் பிரச்சனை வேறு விதமாக திரும்பி விட்டது...தன் மனைவியை சந்தேகப்பட தொடங்கிவிட்டார்....மூணு மாதம் கழித்து அந்த பதிவரின் கணவன் இப்போது கோர்டில் போய் நிற்கிறார்.....!? பெண் பதிவரோ மன உளைச்சலில் சிக்கி பிளாக் எழுதுவதை தற்சமயம்  நிறுத்திவிட்டார். 

வேறு மாதிரியான பிரச்சனைகளையும் இந்த நபர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை பெண் பதிவர் நட்பை முறித்துக்கொண்ட பின் அந்த பதிவரை பற்றி மற்றவர்களிடம் இந்த பெண் அப்படி, இப்படி என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்...(என்ன செய்து இந்த மாதிரியான ஆட்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.) 

வேலையற்ற சில வீணர்களின் விளையாட்டால் இணையத்தில் பெண்கள் இப்படியும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் புதிய பெண் பதிவர்கள் ரொம்பவே கவனமாக பேசவேண்டியது அவசியம். அக்கறையாக, அன்பாக பேசுகிறாரே என்று நெருங்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். மேலும் இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் அளவுக்கு மீறி வரும் பாசம் எதில்  போய் முடியும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை...! கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.

மறுத்தல் அவசியம்

உங்க மெயில் id பெரும்பாலும் கொடுக்காமல் இருந்தால் நலம்...மீறி கொடுத்தாலும் சொந்த விசயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது...செல்போன் எண்ணையும் கொடுக்காமல் தவிர்க்கலாம் .எந்த கேள்விக்கும் நாகரீகமாக மறுப்பு சொல்வது பின்னால் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.....சிலருக்கு பொழுது போக்கே பெண்களின் மெல்லிய  உணர்வுகளோடு விளையாடுவது தான்.....?!

செல்போனில் ஏதாவது நம்பரை டயல் பண்ண வேண்டியது, எதிர்புறத்தில் பெண் குரல் கேட்டால் "சாரிங்க என் பிரண்ட்  நம்பருக்கு டயல் பண்ணினேன், தப்பா உங்களுக்கு வந்துவிட்டது, சரி விடுங்க....நீங்க என்ன பண்றீங்க.....உங்க குரல் காலேஜ் பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கு...எந்த காலேஜ்  படிக்கிறீங்க....?" இந்த மாதிரி உரையாடல் நீண்டு கொண்டே போகும். உடனே கட் பண்ணினாலும் கண்ட நேரத்தில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தொடரும். இந்த ராங் கால் விஷயத்தால் பெண்களில் சிலர் பாதிக்க படுகிறார்கள். 

இதைப்போலத்தான் இணையத்திலும் பெண் பதிவர்களுக்கு தொல்லைகள் தொடருகின்றன.....இந்த சங்கடங்களை வெளியில் சொல்ல இயலாமல் மனதிற்குள் புழுங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.  இரு பெண் தோழிகளிடம் (பதிவர்கள்) இடையே கூட இந்த மாதிரி ஆட்கள் சிண்டு முடித்து, பிரித்து விடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது பொழுது போக்கு, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு....?!! அவர்கள் பாதிப்பு அடைந்தால் அவர்களின் குடும்பமும் பாதிக்கும் என்பதை உணருவார்களா இந்த மாதிரியான ஆட்கள்...??! 

   
" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் " 

எச்சரிக்கை !!



வியாழன், செப்டம்பர் 30

கண்டனம் - எது விழிப்புணர்வு....??!!

பதிவுலகில் சில நேரம்  எந்த கட்டுரை எழுதினாலும் 'கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் எழுதலாமே' என்றும், ஒரு பதிவு பொதுவான விசயங்களை    பற்றிய சிந்தனையுடன் எழுதப்பட்டிருந்தால் 'நல்ல விழிப்புணர்வு பதிவு' என்றும் பின்னூட்டங்கள் வரும். விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தமும், புரிதலும் இல்லாமலேயே கருத்துக்கள்  சொல்வதை 'ஏன் சரி செய்து கொள்ள கூடாது...?'  என்பதே என் ஆதங்கம்.  குறிப்பாக இந்த கண்டனம் என்பது 'விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என்று வாயளவில் சொல்பவர்களை நோக்கித்தான்.

விழிப்புணர்வு

தெரியாத அல்லது புரிந்து கொள்ளப்படாத ஒன்றை அறியாமலும், கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமலும் , பெற வேண்டிய உரிமைகளை பெற்று கொள்ளாமலும், தம்மை பற்றியே உணராமலும் இருப்பதில் இருந்து, தூக்கத்தில் இருந்து ஒருவரை விழித்தெழ வைப்பது போன்று தமது உணர்வுகளை விழித்தெழ வைப்பது தான் விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தம். ஒருவர் தனது பிரச்சனைகளில் இருந்து 'தானாகவே விழிப்புணர்வு அடையவும் முடியும்', மற்றவர்கள் மூலம் 'விழிப்புணர்வு'  ஏற்படுத்தவும் முடியும்.

ஒரு சில பதிவர்கள் அந்த மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவில் நல்ல பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் அவை சரியாக பலரிடமும் சென்று சேருவது இல்லை. காரணம் என்னவென்றால் அங்கு சென்று யாரும் பார்ப்பதும் இல்லை , படிப்பதும் இல்லை, அப்படியே படித்தாலும் தங்களது கருத்துக்களை அங்கே பதிவு செய்வதும்  இல்லை, அதனை பற்றிய தங்களின் சந்தேகங்களையும், கேள்விகளை எழுப்புவதும்  இல்லை. அதை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கட்டுரை  எழுதுங்கள் என்று மட்டும் குரல் ஆங்காங்கே எழுப்பபடுகிறது. சொல்வதுடன் நிற்காமல் செயலில் இறங்கி இன்னும் பல நல்ல பதிவுகள் வர நாம் தூண்டுகோலாய் நாம் இருக்கலாமே இனியாவது......!!

உதாரணத்திற்கு  ஒன்றை இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

ஆண்,பெண் சம்பந்த பட்ட அந்தரங்க உறவுகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு இருக்கிறது என்றால் கருத்துகளை அங்கே பதிவு செய்ய பலரும் தயக்கம் காட்டுகின்றனர், தங்களின் பெயர் அங்கே இடம் பெறுவதை பலரும் விரும்புவது இல்லை. சமுதாய சீர்கேடு இன்றைய காலகட்டத்தில் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். திருமணம் முடித்தவர்களுக்குமே எத்தனை பேருக்கு இதனை பற்றிய முழு தெளிவு இருக்கிறது...??!

மேல்மட்ட மக்கள் இதற்காக counselling  என்ற பேரில் மருத்துவரை நாட தொடங்கிவிட்டார்கள். ஆனால் நடுத்தர, கீழ்மட்ட மக்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு எய்டஸ் என்பதை பற்றி கூட பெயரளவில் தான் தெரிகிறது. பள்ளிகூடங்களில் ' செக்ஸ் கல்வி '  அவசியம் என்ற குரல்கள் ஒலிக்க  தொடங்கியபோதிலும் அது வேண்டாம் என்று மறுக்கும் பெற்றோர்கள் தான் பெருமளவில் இருக்கிறார்கள். செக்ஸ் கல்வி என்பது வெறும் உறவை மட்டும் எடுத்து கூறுவது மட்டும் இல்லை, ஆண், பெண் உடல் அமைப்பு, டீன் ஏஜ் பருவம், தவறான தொடுதல்கள் என்ன, கருத்தடை பற்றியவை, மனித பாலியல் நடத்தைகள் அதில் இருந்து  மனரீதியான தெளிவு எப்படி பெறுவது என்பது போன்ற பல்வேறு வகை பற்றியும் சொல்லிகொடுப்பது ஆகும்.


நம்  பிள்ளைகள் இப்போது இருக்ககூடிய சமூக அமைப்பு பல தவறுகளின் தூண்டுதல்களை தான் கொடுக்கிறது, அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு இந்த கல்வி உதவும் ஆனால் நம்மிடம் தான் எதை பற்றியும் முறையான விழிப்புணர்வு இன்னும் வரலையே பின் எப்படி இது சாத்தியம்....??! சரி அது போகட்டும்....மற்றவர்களை விடுங்கள்.....


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்தை கையாளக்கூடிய நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்தரங்கத்தை பற்றி அலசகூடிய பதிவு இருக்கிறது என்றால் படிப்பவர்கள் அதை எழுதியது யார் என்றுதான் முதலில் பார்கிறார்கள், எழுதியது ஒருவேளை பெண் என்றால் , அவர்  டாக்டர் என்றாலுமே கூட, உடனே ஒரு முக சுளிப்பு 'ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இப்படி வெளிப்படையாக இதைச் சொல்கிறாரே'  என்ற வியப்பு.....ஏன் இந்த கண்ணோட்டம்.....?? இந்த உறவு என்பதே ஒரு பெண்ணை வைத்துத்தானே...... மேலும் திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணுமே,  ஒரு ஆணால் உணரவே முடியாத தாய்மையையும், அதன் மூலமாக உடலுக்குள்ளும் , உடலுக்கு வெளியேயும்  நடக்க கூடிய மாற்றங்களையும் நன்கு உணர்ந்தவள் ஆகிறாள். அப்படிப்பட்ட ஒரு பெண் அந்தரங்கம் பற்றி எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்....??  


(உதாரணதிற்கு ஒன்றை தான், இங்கே நான் குறிப்பிட்டேன்...இதை போல் பல விசயங்கள் உள்ளன விழிப்புணர்வை ஏற்படுத்த...அவற்றில் சில பதிவுகளை என் தளத்தில் இணைத்து இருக்கிறேன்...இன்னும் விடுபட்டவை நிறைய இருக்கிறது...தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும் )


யார் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய அளவில் பதிவு எழுதினாலும் ஆனா, பெண்ணா என்று பார்க்காமல் 'தேவையான நல்ல பதிவு' என்றால் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஏன் தயங்க வேண்டும் ??   நல்ல பதிவு எழுதினால் மட்டும் நல்ல பதிவர் என்று இருக்காமல் பிற நல்ல பதிவுகளையும் தேடிச் சென்று கருத்துகளை பதிவு செய்வதின் மூலம் நல்லதொரு விழிப்புணர்வை (மறைமுகமாக மட்டுமாவது) ஏற்படுத்த முடியும். அந்த பதிவை பற்றி வரும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். விஷயம் ஒன்றும் இல்லாத தளத்திற்கு  சென்று எவ்வளவோ நேரம் செலவழிக்கும் அதே நேரம்,  நல்ல பதிவிற்கும் கொஞ்ச  நேரத்தை  செலவு செய்யுங்கள். 

"சந்தேகம் வரும்போது கேள்வி கேட்பவன், அந்த நேரம் மட்டும் அறியாதவனாக  இருக்கிறான்,  கேள்வி கேட்காதவன்  வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளாதவனாகவே போய்விடுகிறான்....?!!"      

வேண்டுகோள்

ஒரு நாட்டிற்கு பத்திரிகை, தொலைக்காட்சி, பிற மீடியாகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள்  வலைபூக்களை படித்துதான் தங்களுடைய தாய்நாட்டின் அன்றாட நிகழ்வுகளை  தெரிந்து கொள்கிறார்கள். இனி தொடரும் காலங்களில் பெரும்பாலோரின் பார்வையும் இணையத்தை குறிப்பாக வலைபூக்களை நோக்கித்தான் இருக்கும் என்பதே பலரின் அனுமானம். தொலைக்காட்சி, பேப்பரை பார்க்கும் நேரம் கூட இனி குறைந்து வலைபூக்களின் பக்கம்  வருகை அதிகரிக்கும்...அப்படிப்பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருக்கிற பதிவர்களாகிய நாம் நமது பார்வையை கொஞ்சம் சரி செய்து கொள்வோமே... 

பொழுது போக்கு என்று மட்டும் இல்லாமல் உண்மையில் ஏதாவது சமுதாய விழிப்புணர்வுடன்  எழுதுவோம் என்று இருப்பவர்களை நாம் கண்டிப்பாக தேடி கண்டுபிடித்து உற்சாக படுத்த வேண்டும். ரோட்டில் இறங்கித்தான் புரட்சி செய்ய வேண்டும் என்று இல்லை.. இந்த மாதிரி சிறிய அளவிலான நல்ல பதிவுகளை பற்றிய விழிப்புணர்வையாவது பலரிடம் கொண்டு போய் சேர்ப்போமே..... அதனால் தேவையற்ற வீண் விவாதங்களை விடுத்து நல்ல நேர்மையான கருத்துகளை விவாதித்து நம்மை நாம் சீர் படுத்திகொள்வோம். 

செய்வீர்களா...??!! 

ஒன்றை  மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்....

"படித்த பலரது பார்வையும், இப்போது பதிவுலகத்தை ஊன்றி கவனித்து கொண்டிருக்கிறது "

மற்றவர்கள் எப்படியோ  இருந்துவிட்டு போகட்டும்....ஆனால் படித்து, விவரம் தெரிந்த , அறிவியல் விந்தையான இணையத்தை  நுனி விரல்களில் கையாளுகிற நாம் ஏன் 'பத்தோடு பதினொன்னு' என்பது போல் இருக்கவேண்டும்....நல்ல தகவலை தேடி கண்டு பிடித்து வாழ்த்தும் முதல் குரலாக உங்கள் குரல் இருக்கட்டும்...


"பதிவுலகம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்கள் இங்கிருந்தே புறப்பட்டது என்று நாளைய உலகம் புகழட்டும் ...அதை ஓரமாக நின்று நம் வாரிசுகள் ரசிக்கட்டுமே .....!!"





இன்று வாசலில் 'போதிமரம்' 



புதன், ஆகஸ்ட் 18

கண்டனம் 3 - பெண்பதிவர் என்பவர்கள் இங்கே கேலி பொருளா...??


எனது இந்த கண்டனமும் பதிவுலகத்தை நோக்கியே தான்...??!! எங்கே நான் இருக்கிறேனோ அங்கே நிகழும் முறையற்ற செயல்களையே என்னால் சுட்டி காட்ட முடியவில்லை என்றால் வெளி உலகில் நிகழுவதை என்னால் எப்படி சாட முடியும்....

இந்த பதிவுலகில் கடந்த சில தினங்களாக என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்று சிலருக்கு தெரியும் ...பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பெண் பதிவர்களை பற்றிய இந்த பிரச்னைக்கு அவர்கள் சார்பில்  எனது இந்த கண்டனத்தை தெரிவிக்கிறேன். சில விசயங்களை ஆற போடுவது சரி இல்லை.

எழுதியவனை நோக்கி 

வலிமை மிகுந்த ஆயுதமான எழுத்து தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதலாமா ?? அதுவும் முறையற்ற விதத்தில் பதிவுலக பெண் எழுத்தாளர்களை கேலி சித்திரமாகவும் , கேளிக்கை பொருளாகவும் உருவகபடுத்தி....??!!

பொதுவாக ஒரு பெண் கட்டாயம் விமர்சனத்துக்கு உட்பட்டுதான் ஆக வேண்டுமா....?? 

எழுதியவனிடம்  'ஏன் இப்படி எழுதுகிறாய்'  என்று கேள்வி கேட்டதிற்கு 'தன்  தளத்தை விளம்பரபடுத்த இப்படி எழுதுகிறேன்' என்று கேவலமான மட்டமான பதில் வருகிறது.. உன் விளம்பரத்திற்கு கூட பெண்கள் தான் தேவைபடுகிறதா...? பெண் பதிவர்களாகிய எங்கள் புடவையின் பின்னால் மறைந்து நின்று தான் நீ பிரபலம் ஆகவேண்டுமா..... ??  மதி கெட்ட மூடனே வெட்கமாக இல்லையா  உனக்கு.....?? 

உனக்கு இரண்டு சகோதரிகள் உண்டு என்பதை அறிவேன்...அவர்களை இப்படி கேவலமாக சித்திரம் வரைந்து நாலு பேர் பார்க்கும் இடத்தில் வைக்க வேண்டியது தானே...?? 

அன்பு பெண் பதிவர்களே...

நீங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால்.......இன்று,  இவன் நம்மை பற்றி எழுதுவான....நாளை வேறொருவன் எழுதுவான்...இது தொடர்கதையாகும்....சிலருக்கு பெண்மையை இகழ்வது ஒரு மனோவியாதி......அப்படிபட்ட வியாதி உள்ளவர்கள் இங்கே அதிகம் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்..... 

மேலும் ஒன்றை நினைவு கொள்ளுங்கள்...பெண்மை கேலி பொருள் அல்ல....நம் எழுத்தை விமர்சிக்கலாம்...நம் உருவத்தை விமர்சரிக்க கண்டவனுக்கும் இடம் கொடுக்க கூடாது....இப்போது இவர்களை வம்பிற்கு இழுத்தவன் நாளை உங்களையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்....இதைவிட மோசமாக...விபரீதமாக...!!

என் மரியாதைக்குரிய பதிவுலக தோழர்களுக்கு

சாதி, மத , கடவுள் பற்றி ஏதாவது பதிவுகள் வெளி வந்தால் உடனே முகமற்று வரும் அனானிகளின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு காற்றில் கத்தி சண்டை போட்டு கொண்டு இருக்கிறீர்கள்... அதை தவறு என்று சொல்லவில்லை. ..... 

ஆனால் அதே நேரம் இப்போது முழு விலாசத்துடன் , முகம் காட்டி எழுதிக்கொண்டு இருக்கிறவனை என்ன செய்ய போகிறீர்கள்....???  இவனுக்கு உங்கள் கண்டனத்தை தீவிரமாக தெரிவிக்க வேண்டும்...


விஷ செடியை ஆரம்பத்தில் பிடுங்க வேண்டும்...இதுவரை ஆறு பெண் பதிவர்களை பற்றி எழுதி உள்ளான்...இது தொடரும்...எப்போதும் போல் நம் வீடு பாதுகாப்பாக தானே இருக்கிறது என்று மெத்தனமாக இருக்காமல் அந்த செடியை வேர் அறுத்து போடுங்கள்...

உங்கள் வீட்டு பெண்ணிற்கு இந்த மாதிரி நடந்தால், " நாம் நடக்கும் பாதையில் கல், முள் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்கணும் அல்லது எடுத்து போட்டு விட்டு நடக்கணும் "என்று தத்துவம் பேசி கொண்டு இருப்பீர்களா...??  தெளிவு படுத்துங்கள்.  

நண்பர்களே..., நான் சொல்வது சரியென்று பட்டால் உங்கள் கண்டனம் பாயட்டும்..அவனை நோக்கியும் அவனை  போன்றவர்களுக்கு  எதிராகவும் ......

பின் குறிப்பு.

1  அவனது தவறை நான் சுட்டி காட்டியபின் பெண்களின் பெயரை எடுத்துள்ளான். ஆனால் வெறுப்பிற்கு உரிய அந்த சித்திரம் நீக்கப்படவில்லை. 

2  அந்த தளத்தின் முகவரி கொடுக்கவில்லை காரணம்...இந்த  பதிவு சம்பந்தபட்டவனுக்கு போய் சேரணும் என்ற நோக்கில் எழுதப்பட்டது   இப்படி ஒரு கேவலமான பதிவினை வெளியிட்ட தளத்தையும், ஆளையும் குறிப்பிட்டு சொல்லி பிரபலபடுத்தும் அளவிற்கு அவன் பெரிய ஆளில்லை. இந்த பதிவின் சாரம் போய்ச்சேரந்தால் சரிதான்.



புதன், ஆகஸ்ட் 11

கண்டனம் 2- மத உணர்வோடு விளையாடாதீர்கள்....!

எனது இந்த கண்டனம் பதிவுலகில் மத உணர்வுகளை  கண்டபடி கூறுபோட்டு விளாசி தள்ளும் சிலருக்காக.... 

மதம் என்ற வார்த்தை வேண்டாம்...சமயம் என்றே சொல்லுங்க என்றே சிலர் கூறுவர்.
எனக்கு மதம் என்பதே சரியாக தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நாத்திக மதமும், இருக்கிறது என்று வாதம் புரிபவர்களுக்கு ஆன்மீக மதமும் பிடித்து இருக்கிறது என்பதால் மதம் என்று சொல்வது ரொம்ப சரியே.

மதம் பிடித்த யானை எது சரி எது தவறு என்று உணராமல் தன் பாகனையே மிதித்து கொல்லும். அப்படியேதான் இந்த இரண்டு (நாத்தீகம், ஆன்மிகம் ) மதம்  பிடித்தவர்களும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

உங்களின் கருத்துக்களை சரி என்று புரிய வைப்பதற்காக ஏன் மற்றவர்களின் நம்பிக்கையை குறை சொல்ல வேண்டும்....?? கடவுளை வைத்து மனிதனை பிரிக்காதீர்கள். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

அறியாமை

கடவுளை மறுத்தவர் என்ற உதாரணத்துக்கு எல்லோரும் கைகாட்டுவது தந்தை பெரியார் அவர்களை தான்.  அவரும் கடவுளின் பெயரால்  நடக்கும் மூடநம்பிக்கையை தான் அதிகம் சாடினார்... கடவுளையும் மூட நம்பிக்கையையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்.

ஆதி காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து மிரண்டவர்கள் அதை சக்தி , கடவுள் என்று வழிபட்டனர்.  நெருப்பை, மரத்தை, கல்லை என்று விருப்பம்போல் வணங்கினர். ஆனால் இன்றும் சில வழக்கங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வேதனை.  (ரோட்டின் ஓரத்தில் இருக்கும் மைல்கல்லையும் வணங்கும் அளவில் தான் அறியாமை இருக்கிறது, பாதி புதைந்த அளவில் இருக்கும் ஒரு ஆட்டு கல்லில் கூட மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்து ஒரு மஞ்சள்  துணியை சுற்றி வைத்து இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்.)

எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒதுக்கு புறமாய் இருக்கும் ஒரு கல் குவாரியில் இருக்கும் ஒரு வேப்பமரத்தில் ஒரு நாள் வெள்ளை நிறத்தில் திரவம் சுரந்து இருக்கிறது.  இதை கேள்வி பட்ட கொஞ்ச நேரத்தில் அந்த காட்டு பகுதி முழுக்க மக்கள் கூட்டம், அந்த மரத்தை மஞ்சள் , குங்குமத்தால் அலங்கரித்து ஒரே வேண்டுதல்கள் தான். 

என்னதான்  வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை தேடி அங்கே ஓடினார்கள் ....?? அங்கே போனதால் எதை அடைந்தார்கள்....?? ஒன்றுமே புரியவில்லை....??!!

அவர்களின் பக்தி பரவசத்தின் முன் விவரம் தெரிந்த  ஒருத்தர் " இது கடவுள் இல்லைங்க, மரத்தினுள் நடக்கும் சில வேதிவினை மாற்றத்தால் இந்த வெண்மை திரவம் சுரக்கிறது , இரண்டு, மூணு நாளில் வருவது நின்றுவிடும் " என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம், அவ்வளவு தான் அவர் உடம்பை பதம் பார்த்து விடுவார்கள். (இப்போது பால் வருவது நின்றுவிட்டது...ஆனால் அதை சொல்லி பணம் பார்த்தவர், இன்றும் பணம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். )
    
இது மூடத்தனம், கடவுளின் பெயரால்  நடக்கும் இந்த அறியாமையை களைய தான் நாம் முற்படவேண்டுமே தவிர, கடவுளை பழிப்பது சரி இல்லை.  மதத்தை இழிவு  படுத்துவதை ஊக்குவிக்க கூடாது.

அனைத்து மதத்திலும் நம்பிக்கை , மூட நம்பிக்கை என்பது சரி விகிதத்தில் தான் இருக்கிறது.....இதில் மாற்று கருத்து இல்லை....  எனக்கு தெரிந்த ஒன்றை இங்கே சொல்லி இருக்கிறேன்...அவ்வளவே.
  
கடவுளை மறுப்பவர்கள், ஏன் மறுக்கிறோம் என்பதற்கு வலுவான காரணத்தை கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அதை விடுத்து தேவை அற்ற வீண் விவாதங்களை பேசி மத நம்பிக்கை உள்ளவர்களின் மன உணர்வை குத்தி கிளறி நெருப்பு மூட்டி அதில் குளிர்  காயாதீர்கள்...

கடவுளை முழு மனதுடன் விசுவாசத்துடன் தேடுபவர்களே கடவுளை உணருகிறார்கள்.  உங்களால் தேடி அடைய முடியவில்லை  என்பதற்காக அப்படி  ஒன்று இல்லை என்று ஆகிவிடுமா...?? ஒன்று நீங்கள் சரியாக தேடவில்லை அல்லது தேட முயற்சி எடுக்க வில்லை என்று தானே அர்த்தம்.......பழம் கைக்கு எட்டவில்லை  என்பதற்காக இந்த பழம் புளிக்கும் என்று குறை சொல்லி நழுவும் நரியை போல் இருக்காதீர்கள்.....

கடவுள் என்ன செய்வார்...??

அன்பை போதித்த புத்தரை வணங்குகிற இலங்கையில் தான் மனித உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி பந்தாடபடுகின்றன....என்பதற்காக புத்தரை பழிக்க முடியுமா? பிற உயிர்களிடத்தும் சகோதர  பாசம் காட்டுங்கள் என்று வலியுறித்திய முகமது நபி அவர்களை பின்பற்றுகிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக அவரை பழிக்க முடியுமா ?? பைபிளை படிக்கிறவர்கள் தான் ஈரானில் பிற மதத்தவர்களை கொன்று குவித்தார்கள்....நம்மையும் அடிமைபடுத்தி உயிர்களை கொன்று வதைத்தார்கள். அவர்களை இப்படி செய்ய சொல்லி ஏசுநாதர் எங்கே சொன்னார்....??

இப்படி மனித உருவில்  மிருகங்கள் செய்யும் கொடுமைகளுக்கு கடவுளை குறை சொல்வது எவ்வளவு மடத்தனமோ அந்த அளவு மடத்தனம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை பழிப்பதும்...

'கடவுள் பெயரால்' அல்லது 'அந்த பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்பவர்களை',  மனிதனை 'கடவுள்' என்று சொல்லி கொண்டு அலைபவர்களை அலட்சிய படுத்துங்கள், மூட நம்பிக்கையில் உழலுபவர்களை அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லுங்கள்.  மனிதத்தை போதியுங்கள் ...சக மனிதர்களை அன்பால் வசபடுத்த பாருங்கள். மூட நம்பிக்கையை சுட்டி காட்டுகிறேன் என்று மனிதர்களின் நம்பிக்கையை எள்ளி நகையாடாதீர்கள். 

எத்தனை பெரியார்   வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்று வீராவேசமா வசனம் பேசின விவேக், வாஸ்து படி தன் வீட்டை மாற்றியமைத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? எல்லாம் அறியாமையால் வரும் பயம் தான் காரணம்...கடவுள் மேல் இருக்கும் பக்தி இல்லை. 

நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்து கிறது என்று எண்ணி பாருங்கள்..நமக்குள் ஒரு தைரியம் வரும்.....!  அச்சம் விலகும்...! வாழும் நாட்கள் அர்த்தமானதாக தோணும்....! அந்த சக்தி உங்களை  தீய வழியில் போக சொல்லி தூண்டாது.....! பிறருக்கு உதவக்கூடிய எண்ணத்தை கொடுக்கும்....! அந்த சக்தி  அன்பைத்தான் சொல்லும்.... !  அந்த சக்திக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்....!! உங்கள் விருப்பம்.  

தவிரவும் கடவுளை தேடி எங்கேயும்  போக வேண்டாம்....உங்களுக்குள் தேடுங்கள்... கண்டடைவீர்கள்....பிற மனிதனிடம் நீங்கள் அன்பை பரிமாறும் போதே அந்த இடத்தில் கடவுள் நிற்பதை உணரமுடியும்...அதுதான் சிவன், இயேசு, அல்லா,புத்தர்......
கடவுள் இருக்கிறார் , இல்லை என்று வாதிடுவதை விட கண்முன் இருக்கும் மனிதனை அன்பால் அனைத்து  கொள்ளுங்கள்....உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்....அர்த்தமற்ற வீண் விவாதம் புரிந்து உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்.....

கடைசியாக ஒன்று நம் அன்னை தெரேஸா அவர்கள் முதலில் இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தை எடுத்து  கூற  தான் வந்தார்கள்....ஆனால் உண்மையில் நடந்தது என்ன  ..?!!  அன்பை கையில் எடுத்தார்கள்....சக மனிதனை என்று சொல்வதை விட வாழ்வின் இறுதி நாட்களில் ஆதரவற்று தவித்து கொண்டு  இருந்தவர்களை தன் கரத்தால் அணைத்து அன்பால் உதவினார். நம்மிடையே வாழ்ந்த ஒரு தெய்வம்  அவர்கள்....! அந்த மக்களிடையே தான் தன் கடவுளை அவர் கண்டார்.....! அர்த்தத்துடன் வாழ்ந்து முடித்தார்....! 

ஆனால் நாம் வறட்டு விவாதம்  செய்து கொண்டு வீணாய் போய் கொண்டு இருக்கிறோம்.....உணர்வடையுங்கள் மக்களே...!!  




         

வெள்ளி, ஜூலை 16

கண்டனம்

முன் குறிப்பு:  

ஒரு வழியா 50 பதிவை தாண்டியாச்சு...! இனி சதம் அடிப்பதை பற்றிதான் ஒரே கவலை...!! (அதுக்குனு  ஒரு பதிவ மூணா பிரிச்சு போடும் குறுக்கு முயற்சி ஏதும் செய்றதா  இல்லை, என்று உறுதி கூறுகிறேன்)  நான் அரைசதம் அடித்ததை பெருமையுடன் வாழ்த்திய அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும்........,  அல்வா கொடுக்கணும் என்றுதான் ஆசை...?! ஆனால் இருட்டு கடையில் ஸ்டாக் தீர்ந்து விட்டதாம். ரெடி பண்ணதும் சொல்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். பார்போம் இந்த போஸ்ட் எழுதி முடிப்பதற்குள் வருகிறதா என்று.

தலைப்பை பற்றிய சிறு விளக்கம்

இதுவரை சில நல்ல விசயங்களைத்தான் எழுதி இருக்கிறேன் என்று திடமா நம்புகிறேன். இனியும் அப்பணி செவ்வனே  தொடரும்...! நம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிற விரும்பத்தகாத சில நிகழ்வுகளை கண்டனங்கள் என்ற தலைப்பில் பகிரலாம் என்று உள்ளேன்.  அன்றாடம் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அவலங்களை, அதை பற்றிய என் ஆதங்கங்களை இந்த தமிழ் கூறும் பதிவுலகத்திற்கு தெரிய படுத்த எண்ணுகிறேன்.  நான் எழுதும் கண்டனங்களுக்கு எதிர்  பின்னூட்டம் வந்தாலும் அதை புன்னகையுடன் எதிர் கொள்வேன் (அப்படியாவது உங்களை யோசிக்க வைத்து இருக்கிறேனே...?!  ) 

முதல் கண்டனம் -  நைட்டீயா ? மேக்ஸ்சியா ?!

எங்க போடணும், எதுக்கு போடணும் என்று சரியாக தெரிந்து  கொள்ளாமல் கண்ட இடத்துக்கும் நைட்டி என்ற ஆடையை போட்டுக்கொண்டு அலையும் பெண்களுக்கு
எதிராக ( இத படிக்கிற யாரும் பெண்ணுரிமை அப்படி இப்படின்னு ஏதாவது குரல் குடுத்தா, எனக்கு கெட்ட  கோவம் வரும் ஆமா சொல்லிட்டேன்... )

நைட்டி என்ற பெயருக்கே அவமானம்



அழகான , சௌகரியமான ஆடையை தயாரித்து அதற்கு நைட்டி என்று பெயரும் வைத்தவர்கள், இப்போது அது படும்பாட்டை நினைத்தால் நொந்து விடுவார்கள். பகலில்  வெளியில் வேலைக்கு செல்பவர்களும் , வீட்டில் இடுப்பொடிய வேலை செய்கிற பெண்களும்,  இரவில் தூங்க போகும் போதாவது தங்களை கொஞ்சம் ரிலாக்சாக வைத்து கொள்வதற்காக, 6 முழ புடவையை மாற்றி சிம்பிளாக, தளர்வான இந்த உடையை அணிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கபட்டது. (ஸ் ப்பா... என்ன ஒரு நீளமான வாக்கியம் ?!!)  இரவில்  போட வேண்டும் என்பதால் தான்  நைட்டி என்றே  பெயர் வைத்தார்கள்..!! ( என்னவொரு கண்டிபிடிப்பு... கிளாப்ஸ் ப்ளீஸ்) 

நம்ம பெண்களும் தொடக்கத்தில் அப்படித்தான் பயன்படுத்தினார்கள் (இப்ப பாடு படுத்துறாங்க ) அப்புறம் போக போக பகலில் வீட்டில் அணிய தொடங்கினார்கள் . இந்த ஆண்களும் மனைவியிடம் மெதுவாக " நாம் தனியா இருக்கிறப்போ பரவாயில்லைடா , அம்மா, அப்பா இருக்கிறப்போ அவங்க முன்னாடி போகும்போது  மட்டும் புடவையை மாத்திக்கோமா  " என்று சொன்னார்கள். அப்புறம் புடவை  மாத்த நேரம் இல்லை என்று  மேலே  அழகா ஒரு துப்பட்டா போட்டால் போதும் என்று ஆனது.  அப்புறம் கேட்கணுமா நம்ம மாதர்குல மாணிக்கங்களை......? இதுதான் நமது தேசிய உடை என்று கோஷம் போடாத குறையாக  வெளியிலும் போட்டுட்டு போக தொடங்கி விட்டார்கள்.

கொடுமையான விசயங்கள்

இங்கே உதாரணத்துக்கு இரண்டு விசயங்களை சொல்கிறேன். படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க நான் வருத்தபடுறது நியாயமா இல்லையா என்று ...?! 


பெண்கள் முதலில் இந்த உடையுடன் வாசல் வரை வந்தார்கள், அப்புறம் வாசலை  தாண்டினார்கள், அப்புறம் பக்கத்தில் இருக்கிற கடைதானே...!, இதுக்கு போய் புடவை மாத்தவா என்று போனார்கள்....?! அப்படியே  பக்கத்தில் இருக்கிற கிளினிக் தானே.....??! என்று சென்றே  விட்டார்கள்....?? (அதுவும் ஸ்கூட்டியில்..!!) . என்ன கொடுமைங்க இது ? (கிளினிக்கில் லேடி டாக்டர் கிட்ட வயிறு வலி என்று போனால் அவங்க எப்படி டெஸ்ட்  பண்ணுவாங்க ...?!) ஓ.கே நான் கேட்கல விடுங்க  ( யோசிக்கிறப்ப கஷ்டமா இருக்கு இல்ல? அப்ப நேரில் பார்த்த எனக்கு எப்படி இருக்கும்?  ) 

இதை எல்லாம் விட 2000  ௦ பிள்ளைகள் வரை படித்து கொண்டு இருக்கிற பள்ளிகூடத்துக்கு தங்கள் குழந்தையை இரு சக்கர வண்டியில் கொண்டு வந்து விடுகிற பெண்களை நைட்டில பார்த்து பிரமிச்சு போயிட்டேன்...!! இந்த காட்சி வேற எங்கேயும்  இல்லை படித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைத்து கொண்டு இருக்கிற நம்ம சிங்கார  சென்னையில் தான்....!!? வாழ்க தமிழ் கலாசாரம்....!!

இரண்டாவது 

சமீபத்தில் சென்னையில் எனது  உறவினர் மகனுக்கு பெண் பார்க்க முடிவு செய்து எல்லோருமாக சேர்ந்து ஒரு 10௦ பெண்கள் புடை சூழ பயங்கர பந்தாவாக 2   காரில் சென்றோம்.  இதில் போகும்போது இந்த மைசூர் சில்க்குக்கு பதிலா காஞ்சிவரம் கட்டி இருக்கலாமே என்று பையனோட அம்மாவை குறை வேற ( கிண்டலாத்தான் ) சொல்லிட்டு இருந்தோம். 

நாங்கள் எங்க வந்திட்டு இருக்கிறோம் என்று பெண்ணோட அண்ணன் போன் செய்து கேட்டுட்டே இருந்தார். ( பெண்ணோட அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் பெண் அண்ணன்  வீட்டில் இருந்து வேலைக்கு போயிட்டு இருந்தாள் )  இதை பார்த்த நான் வரவேற்ப்பு செம கிராண்டா இருக்கப்போகுது என்று பெருமை வேறு பட்டுக்கொண்டேன். 'அடடா பூ வாங்கலையே' என்று வழியில் பூ வாங்கி ஒன்றுபோல சூடி கொண்டோம். 

பெண் வீட்டை நெருங்கி விட்டோம் , பெண்ணோட  அண்ணன் டிப்டாப்பா வாசலில் நின்று வரவேற்றார்.  நாங்கள் அப்படியே அசந்து உள்ள போனோம், அங்கே பெண்ணோட அண்ணி வந்து நின்னு வணக்கம் சொன்னதும் எல்லோரும் அப்படியே ஆடி போய்ட்டோம் ...??!! ( இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறேன்...ம் .. ம் )  என்னத்த சொல்ல , அண்ணி தேசிய உடையில் (நைட்டி) இருக்காங்க...( அது கொஞ்சம் பளிச்சுன்னு இருந்தாலும் பரவாயில்ல , சாயம் போய், கசங்கி ஒரு மாதிரியா இருந்தது )  

அதற்கு பிறகு நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்திட்டு பொண்ணு ( நல்லவேளை புடவை கட்டி இருந்தாள் ) கொண்டு வந்த காப்பிய குடிச்சிட்டு கிளம்பி வந்திட்டோம். எனக்கு மனசு கேட்காமல் பெண்ணோட அண்ணாகிட்ட கிளம்பும்போது தனியா 'ஏன் இப்படின்னு' கேட்டேவிட்டேன். அவரும் ரொம்ப கூலா அவங்க  வேலைக்கு போறதால வீட்டில்  இப்படித்தான் இருப்பாங்க , அவளுக்கு இதுதான் comfortable என்றார். (ஆனா புதுசா போன நமக்கு...?) 

நம்ம பெண்கள் ஏன் இப்படி மாறிட்டாங்க..?? புதிதாக ஒருத்தர் வீட்டுக்கு வரும்போது நாம எப்படி இருக்கணும் என்ற அடிப்படை நாகரீகம் கூட மறந்து விட்டதா? மற்றவர்களின் முகசுளிப்பை கூட அலட்சியபடுத்துவது ஏன்..?? எங்கே போய் கொண்டு இருக்கிறது நமது அற்புதமான தமிழ் பண்பாடு..?  மேலை நாடும் பொறாமை படும் நமது விருந்தோம்பல் ஒழுங்கு இப்போது எங்கே...? 

எங்கள் வசதிக்கு ஒரு ஆடை உடுத்த கூட எங்களுக்கு உரிமை  இல்லையா ? என்ற அனாவசியமான விதண்டாவாதம் பேசுவது அநாகரீகம்...  எது உரிமை ? மற்றவர்களின் முகசுளிப்புடன் கூடிய பார்வையில் வலம் வருவது தான் உங்கள் உரிமையா ?  பெண்ணுரிமை என்பதின் உண்மையான அர்த்தம் தெரியாத அறிவிலிகள் தான் இங்கே இப்போது பெருகி கொண்டு இருக்கிறார்கள்.  நமக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது , அதை தாண்ட எண்ணுவதே தவறு என்னும் போது, தாண்டியவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது ...??  தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இந்த மாதிரி சுய சிந்தனை  இல்லாதவர்களை எண்ணியே  எனது முதல் கண்டனம். இன்னும் தொடரும் .....
                                                             **************
நன்றி சொல்ல விட்டுப்போனவர்கள்...மன்னிக்கவும்


தாராபுரத்தான்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
தக்குடுபாண்டி
P. Dhanagopal sir
hamaragana
ரோஸ் விக்
தெய்வசுகந்தி
அம்பிகா
ஹேமா
Jayadeva
Jey  

இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.
                                                             ***************