சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச்சூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், செப்டம்பர் 10

ஒரு புதிய முயற்சி - 'தினம் ஒரு மரம்'

அருமை இணைய உறவுகளே,

வணக்கம். 

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல்  தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .  

 

தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
 மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை  நிச்சயம் ஊக்கப்படுத்தும்

                                                                               * * * * *                                                                      

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின்  இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம்.  அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது  'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'. 

இணைந்து செயலாற்றுவோம். 
                                    வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...
 
ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
                                       மரம் நடுவோம்! 
                                                                           மண் காப்போம்!!

                                                                                      * * * * *

பிரியங்களுடன்

கௌசல்யா 
பசுமைவிடியல்.


செவ்வாய், ஆகஸ்ட் 21

எத்தனை ஆச்சர்யங்கள் !! மரங்களும் நம் முன்னோர்களும்...!


மரம் வெட்டாதே என்று எத்தனை சட்டங்கள், கட்டுபாடுகள்  போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.  வெப்பமயமாதல் குறித்து உலகம் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்க்கிறோம், வளர்க்கச்  சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் மரத்தை நடுவது முக்கியம் அல்ல...முதலில் இருக்கும் மரங்களை வெட்டாமல் பாதுக்காக்க வேண்டும். ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், ஆனால் சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள்...!!

மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் கருதியதுடன் மட்டும் அல்லாமல் நடைமுறையிலும் செயல்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பதை பற்றி இணையத்தில் படித்த போது மிக பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. என் ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.


சங்கப்பாடல்களில் பல அரிய தகவல்கள் புதைந்து கிடக்கின்றன...
அவற்றில் சில மட்டும் இங்கே...

* நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )

இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டி அந்த இடத்தில் விவசாயம் செய்பவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி அல்ல, இது குறித்து கொஞ்சம் யோசி" என தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க, 'மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல்' என்பதை என்னவென்று சொல்ல...

" எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இதை போன்று மற்றொரு பாடல்,

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை  (திணைமாலை நூ.ஐ.61 )

இன்றைய அவசர யுகத்தில் சக மனிதனை எந்த அளவு சொல்லாலும் , செயலாலும் துன்புறுத்த முடியுமோ அந்த அளவிற்கு நடந்து கொள்ள சிறிதும் அஞ்சாமல் இருக்கிறோம். ஆனால் மரம், செடி கொடிகளை சக உயிராக எண்ணி அதனுடன் பேசுவதும் உரையாடுவதும், செல்லக் கோபப்படுவதும், கொஞ்சி விளையாடுவதும் என இருந்ததை பற்றி பாடல்களில் படிக்கும் போது பழந்தமிழர்களை எண்ணி பெருமைபடாமல் இருக்க இயலவில்லை.

ஒரு பாடலில் மரங்களுக்கு உயிர் இருக்கிறதாக குறிப்பிடுவதாக இருக்கும், 

உடன்போக்குச்சென்ற தலைவியைத் தேடியலையும் ஒரு செவிலித்தாய் வழியில் தென்படும் கொங்க மரத்தைப் பார்த்து "நீயும் ஒரு தாய், குலைகளை  ஈன்றிருக்கிறாய். என் நிலையறிந்து மனம் நெகிழ்ந்து மொழி வழி இல்லையாயினும் உன் முள் எயிற்றால் அவள் சென்ற வழிக்காட்டு " (திணைமாலை 150-65) என்கிறாள்.

பேசும் சக்தி இல்லாத மரங்களுக்கு உயிர் உண்டு, உணர்வு உண்டு, மனம் உண்டு அதனால் கூர்மையான முள் போன்ற விரலினால் அவள் சென்ற வழிக் காட்டு என கேட்கிறாள்.

அறியாமை என்பது இல்லை

இயற்கையை தங்களில் ஒரு பகுதியாக எண்ணி பேணிப் பாதுகாக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் அறியாமை என்பது எவ்வாறு இருக்கும் என நம்மை கேட்கிறது (ஐந்திணை ஐம்பது.8)  " நாடா கொன்றோ காடா கொன்றோ...எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே "

தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !!

குடிநீரை பற்றிய அக்கறை 

இன்றைக்கு குடிநீரை பற்றி பெரிய அளவில் பேசிக்கொண்டு வருகிறோம். காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறோம்.ஆனால் அக்காலத்திலேயே நீரை காய்ச்சி பருகவேண்டும் என்று " குடிநீர் அட்டு உண்ணும்"(382) பழக்கத்தை அறிவுறுத்தியும்,வெயில் காலத்தில் புது மண் பானையை பயன்படுத்த வேண்டும் என்றும் நாலடியார் கூறுகிறது.

எப்படி இருந்த நாம் இப்படி ஆகிவிட்டோம் 

பலவிதமான சோப்,ஷாம்பூகளை உபயோகித்து குளித்து, துணி துவைத்து என ஆற்றுநீர் மாசுபட மக்களும் ஒரு காரணம். 'துறை இருந்து ஆடை கழுவுதல்  இன்னா' (இன்னா நாற்பது 23) , 'பொது இடத்தில் துப்பகூடாது' என்பதை ஆசாரக் கோவை 'இழியாமை நன்குமிழ்ந்தெச்சி அறவாய்' என்றும் சாப்பிடும் முன், பின் 'வாய் கழுவுதல் அவசியம்' என்றும், வைரஸ், மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகிருமிகள் கண்களை பாதிக்காமலிருக்க பிறர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதை ' கண்ணெச்சில் கண்நூட்டார்' (ஆசாரக்கோவை 41)

இயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கப்படுவதின் சிறப்பு பற்றி நாலடியார், 'வேம்பின் இலையுள் கனியினும் வாழை தீஞ்சுவை யாதும் திரியாதாம்'(244)என்ற பாடல் மூலம் வேப்ப மர இலைகளுக்குள் பழங்களை பழுக்க வைப்பது தான் சிறந்த முறை என்கிறது (வயிற்றை கெடுக்கும் கார்பைட் கல் நினைவுக்கு வருகிறது)

ஆழிபேரலை

சுனாமி வந்தப்போது முதல்முறையா புதுசா வந்த மாதிரி பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்...ஆனால்  நம் பண்டைய வரலாறுகளை சரியாக படித்திருந்தோமென்றால்  சுனாமி என்பதை பற்றிய ஒரு விழிப்புணர்வு நமக்கு இருந்திருக்கும்...

மாத்தளை சோமு என்பவர் தனது புத்தகமான 'வியக்கவைக்கும் தமிழகம்' என்பதில் தமிழ்நாட்டை 7 ஆழிபேரலைகள் தாக்கி உள்ளதை குறிபிடுகிறார். சங்ககாலத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களை விற்றூற்று மூதெயினனார் (குறுந்தொகை 372) எழுதியுள்ளார்.'கடுவளி' என்றழைக்கப்பட்ட பேய்க்காற்று பனைமரத்து மடல்களைக் குருத்தோடு அடித்துச் சென்றுவிடும் ஆற்றலுடையது. இப்படி வீசி எறியப்பட்ட  மடல்கள் வெகு தொலைவில் உள்ள மலை உச்சியில் காய்ந்து கொண்டிருக்கும்... இக்காற்றினால் கடற்கரை மணலானது வெகுதொலைவிற்கு மேலேஎழும்பி பின் வீசியடிக்கப்படும்.அவ்வாறு வீசியெறியப்பட்ட மணலானது அருவியில் நீர் கொட்டுவது போல மணலைக் கொட்டும். இக்காட்சியை அயிர் சேற்று அருவி என்று குறிப்பிடுகிறார் (குறுந்தொகை 372)

பாதிப்பை பலமுறை சந்தித்துள்ள தமிழர்கள் அதற்கான தீர்வுகளை இயற்கையே வழங்கி இருப்பதையும் அறிந்து வைத்துள்ளனர். சுனாமியால் பாதிக்கப்படாத அளவில் ஊர்களை வடிவமைத்துள்ளனர்...சங்க இலக்கியங்களில் அத்தகைய ஊர்களை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன... முக்கியமாக மூன்று கடல்கள் சூழப்பட்டுள்ள தென் பகுதியே பாதிக்கப்படும் என்பதை அறிந்தே இப்ப பகுதிகளில் தாழை  மரங்களை வளர்த்து வந்துள்ளனர்.


(வேதிப்பெயர் - pandanus odoratissimus இம்மரத்தின் சிறப்பை பற்றி தனிப் பதிவு எழுதணும், அவ்ளோ விஷயம் இருக்கிறது)
  
கண்டல் மரங்களும் தாழை மரங்களும் கடலோர பகுதியில் தடுப்பணை போல இருந்து வந்துள்ளன...நம் முன்னோர்களும் இதை அறிந்து வளர்த்து வந்துள்ளனர் என்று எண்ணும்போது என் பிரமிப்பு இன்னும் அதிகமாகிறது...

ஆனால் முன்னோர்கள் சொல்லி சென்றவைகளை எல்லாம் விட்டுவிட்டு மந்திரத்துல மாங்காயப்பழுக்க வச்சிடலாம்னு விஞ்ஞான ஆராய்ச்சி பண்ணிட்டு வானத்தை பார்த்துட்டு   இருக்கிறோம் !!

சுனாமியால் பாதிக்கபட வாய்ப்பில்லாத ஒரு ஊர் இருந்ததாம்...அதன் பெயர் கண்டவாயில் (கண்டல்வேலி)

"புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்கு தொறும் குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும் தென்கடல்
கண்டல் வேலிய ஊர்" (நற்.74.7)

இவ்வூரைச் சுற்றி உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்கள் இருக்கும்,  இதன் கடற்கரை முற்றிய பனைமரங்கள் மணல்மேட்டில் முள்வேலி இட்டது போல சூழப்பட்டிருக்கும்.


பனைமரங்கள், ஞாழல், தாழை, புன்னைமரங்கள் போன்றவை கடற்கரைகளை சுற்றி அடர்ந்த வேலிபோல் அமைந்து சுனாமி பேரலைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும். இப்படி பட்ட மரங்களால் சூழப்பட்ட சோலைகளை நாட்டு வேலி, பெருநீர்வேலி,கண்டல்வேலி என பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
இதை பார்க்கும் புலவர்க்கு மதில்கள் சூழ்ந்த அரண்மனை கோட்டையை போல தோன்றுகிறதாம்.

அயில்திணி நெடுங்கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடுகளிறே போல் " (கலி.135.3-5)

பேரலைகள் - போர்யானைகள்
அரண்மனை கோட்டைகள் - கண்டல் சோலைகள்

மோதுற அலைகளோட கதி??

"பெருநீர்க்கள் பொறு சிறுனுரை மெல்ல மெல்ல இல்லாகுமே" (குறுந் 290.4-6)

இந்த சோலைகளில் மோதியதும் அவை சிறுநுரையை போல சிதறி ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதாம்...

இது கற்பனையாக எழுதப்பட்ட வரிகள் அல்ல பேரலை சிறு நுரையாக மாற தாழையின் மடங்கிய தன்மைதான் காரணம் என்றும் தெளிவாக சொல்லி இருக்காங்க.

வணங்கிய  தாழை " (அகம்.128.1-2) என்ற பாடலில் காக்கும் கடல், அருள் மறந்து அழிக்க முற்படும் போது அதன் சினத்தைத் தணிக்க தாழையின் மடங்கிய தன்மையாலே  இயலும் என்று கூறுகிறது.

திரைமுதிர் அரிய தடந்தாட் தாழை (அகம்.131.3-5)

புன்னை,  தாழை இரண்டும் உறுதியானவை, பேரலைகளுக்கும் தாக்கு பிடிக்கக்கூடியவை. கடற்கரையோரங்களிலும், ஆற்றின் கரையோரங்களிலும் வளர்த்து வந்துள்ளனர். பரிபாடல் (12-6) இவற்றை கண்டிப்பாக வளர்க்கவேண்டும் என்று வற்புறுத்துகிறது.

என்ன தெரியும் இன்றைய மக்களுக்கு...?!

கடல் போன்ற சங்க பாடல்களில் மரங்களை குறித்து ஒரு துளி மட்டும் இங்கே சொல்லி இருக்கிறேன்...எத்தனை ஆச்சர்யங்கள் நம் முன்னோர்களிடம்...அவர்கள் வழி வந்த நாம் வழி மறந்து, முன்னோர்கள் சொன்னதையும்  மறந்துவிட்டோம். அவர்கள் வளர்த்து வணங்கி பராமரித்து வந்த மரங்களை, காடுகளை அழித்து சிதைத்து சின்னாபின்னபடுத்தி கொண்டிருக்கிறோம்...அவர்கள் செய்தவை எல்லாம் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின்  நல்வாழ்வை எண்ணி...ஆனால் நாமோ நாம் பெற்ற குழந்தைகளுக்கு கூட(?) நல்லதை விட்டு செல்ல இயலாதவர்களாக இருக்கிறோம்.

இருக்கும் மரங்களை வெட்டி வீடு கட்டி, அதன் பின்னர் மரக்கன்று நடுகிறோம்...வேடிக்கையாக இல்லையா !? இயற்கை கைகொட்டி சிரிக்கும் இந்த வேடிக்கை மனிதர்களை பார்த்து !!

"மரம் நடவில்லை என்றாலும் பரவாயில்லை !  
மரத்தை வெட்டாதே மனிதா, நீ அழிந்து போவாய் !!"         -  இயற்கை


                                                            SAVE TREES...! 
                                                                                       PLEASE !!


                                                                           * * * * * * *



படங்கள் - நன்றி கூகுள் 

புதன், ஜூன் 13

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2

வீட்டுத் தோட்டம் முதல் பாகத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி...மேலும் சிலவற்றை சிறிய அளவில் இங்கே விளக்கி இருக்கிறேன்...தொடரும் பதிவுகளில் ஒவ்வொன்றை குறித்தும் தனித் தனியாக பகிர்கிறேன்...

உருளை கிழங்கு

                                                              (photo courtesy - Siva)

உருளைகிழங்கை பாதியாக கட் பண்ணி, கட் செய்த பகுதியை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்...ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது. இல்லைஎன்றாலும் பரவாயில்லை.நன்றாக விளைந்ததாக இருந்தா ஒகே.

சேப்பங்கிழங்கு



சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமாக  பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.

தக்காளி, மிளகாய், கத்தரி


நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு தக்காளியை பிசைந்து விட வேண்டும்....விதைகள் தனியே பிரியும்...பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்...

நன்கு முற்றிய கத்தரிக்காய்  வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்துக்  கொள்ள வேண்டும்

பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

விதைக்கும் முறை 

விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்...காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்...செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்று அல்லது இரண்டாக  நட்டு விட வேண்டும்...


தக்காளி காய்க்கத்  தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.

பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும். அதுக்கும் சிம்பிளா ஒரு வழி இருக்கு. 

பந்தல் முறை  

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்...இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கைப்பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்...கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டிக்  கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்...இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.

கயிறுக்கு  பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகப் படுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வச்சு உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க...அவ்வளவுதான் !

மற்றொரு பந்தல் முறை 

நாலு சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்...இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்...மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.

 உரம்  

இரண்டு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பிளாஸ்டிக் சாக்கில் சமையலறை கழிவுகள்/காய்ந்த இலைகள் போன்றவற்றை சேகரித்து போட்டு கொண்டே வரவேண்டும்...ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் போட்டு வர வேண்டும்...முதலில் போட்டு வைத்தது கொஞ்ச நாளில் மக்கியதும் அதை எடுத்து, செடிகள் இருக்கும் தொட்டியின் மணலை லேசாக கிளறி மக்கிய காய்கறி கழிவை கொஞ்சம் அள்ளி போடலாம்...மீன்,மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் செடிக்கு விடலாம்.நன்கு வளரும். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் எதையும் வீணா சாக்கடையில்  கொட்டாமல் , செடிகளுக்கு ஊற்றுங்கள்... 

பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(நேரடியாக ஊற்றக்கூடாது) சுத்திகரித்துனு சொன்னதும் என்னவோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சுடாதிங்க...ரொம்ப சிம்பிள் தான்.

கழிவு நீரை சுத்திகரித்தல்

சோப்பு தண்ணீர் /கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன...இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல...எனவே இதை ரொம்ப எளிதான வழியில் சுத்திகரிக்கலாம்...

சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி  நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்...விரைவில் வளர்ந்து  விடும்...கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்...நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்...கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்...சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்... 

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவு தான் . மற்றபடி மேலே கூறிய அதே மெதட் தான். கருங்கல்  ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.

ஸ்பெஷல் கேர் 

விதைக்காக கடைகளை தேடி  வருந்துபவர்களுக்கும் /தூரமாக இருக்கிறது யார் போய் வாங்குறது என்பவர்களுக்கும் தான்   இந்த குறிப்பிட்ட வகைகளை மட்டும் கூறினேன்...மற்றவர்கள் கடைகளில் வாங்கி பயிரிடலாம்.

தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை(தார்பாலின் சீட்) விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி  விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ்  !!

* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்...

* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்...சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லையென்றால் சாதாரண தண்ணீர் போதும்.

* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

*மண்புழு உரம் ஆன்லைனில் கிடைக்கும். ஒரு செடிக்கு இரண்டு ஸ்பூன் என்றளவில் போட்டால் போதும். அந்த உரத்தில் மண்புழு முட்டைகள் இருக்கும் மண்ணில் போட்டதும் கொஞ்சநாளில் புழுக்களாக மாறி மண்ணிற்கு மேலும் சத்துக்களை கொடுக்கும் . 

அக்கறையும், கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில மெனக்கிடல்கள் அவசியமாகிறது.

நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க, ஒரு பத்துநாள் ஊருக்கு போய்ட்டோம்னா செடிகள் நெலம அதோ கதிதான் , அதுக்கு என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குறீங்களா? கவலையே படாதிங்க அதுக்கும் கைவசம் சில செட் அப் வேலைகள் இருக்கு !! அது என்னனு அடுத்த பாகத்தில் சொல்றேன்...சரிதானா ?! அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க... 

உற்சாகமான வீட்டுத்  தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!
                                                               * * * * *
அப்புறம்...

வீட்டுத் தோட்டத்தை ரொம்ப ஆசையா பார்த்துப்  பார்த்து செஞ்சிட்டு வர்ற இருவரின் பதிவை அவசியம் படிங்க...இதுக்கு முந்திய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலமாக அந்த இரு தளங்களை காணக்  கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது...

* துளசி மேடம் தளம் - http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/yam.html

* சிவா என்பவரின் தளம் - http://thooddam.blogspot.in

நீங்களும் சென்று பாருங்க...மறக்காதிங்க பிளீஸ் !!

                                                                   * * * * *


Happy Gardening !!

பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

படங்கள் - நன்றி கூகுள் 


புத்தகப் பரிந்துரை : Your One Stop Guide to Growing Plants at Home 

வியாழன், ஏப்ரல் 5

யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

தனி நபர் வளர்த்த காடு

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!!

                                                           
                                              மாமனிதருக்கு...என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!


யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில்  மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .

1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள  ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும்  இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு 

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண்  பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!

                                        இவர்களுக்கு வானம் தொட்டுவிடும் தூரம் தானோ...?!!
      
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம் 

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து  வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல

                                                 மூங்கிலிலை காடுகளே...!! 


தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300 ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான்  இந்த 'முலாய் காடுகள்' !! 

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார். 

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே  முடிந்தது.


      கரை தொடும் நதி...பச்சை புடவை போர்த்திய மலை...பூலோக சுவர்க்கம் இதுவன்றோ !!

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!




                 இயற்கையை நேசிப்போம்...!! எங்கும் பசுமை செழிக்கட்டும்...!!


பின்குறிப்பு 

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும்  வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...


இங்கே இடம்பெற்ற படங்கள் அனைத்தும் முலாய் காடுகளில் எடுக்கப்பட்டது !!



தகவல் -  The Times of India, இணையம் 
படங்கள் - நன்றி கூகுள்
                           

செவ்வாய், மார்ச் 20

காணக் கிடைக்கவில்லை...! சிட்டுகுருவி !!


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது.


எங்கும் படபடவென்று தன சிறகுகளை விரித்து சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருக்கும் சிட்டுகுருவி இன்று எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கிராமங்களிலும் காணமுடிவதில்லை. 


உலக சிட்டுக்குருவிகள் தினம்  

அழிவினை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தினத்தை ஏற்படுத்தி கொண்டாடி கொண்டிருக்கிறோம். வெறும் நினைவுகளை மட்டுமே அசை  போட்டு கொண்டிருக்கும் இந்நிலை நிச்சயமாக மனித வாழ்க்கைக்கு நிறைவை தராது. மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் மனிதனை விட்டு விடைபெற்று சென்று கொண்டிருப்பது காலத்தின் கோலம் அன்றி வேறென்ன...?! பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் அன்ன பறவையை காவியங்களில் பார்த்திருக்கலாம், அவை கற்பனைதானோ !?

எங்கும் மனிதர்கள்...ஒருவரோடு ஒருவர் இடித்துகொள்ளும் அளவிற்கு பெருகிவிட்டார்கள்...அதனால் பிற உயிரினங்கள் தங்களுக்கான இடம் பறிபோய்விட்டது என்ற வருத்தத்தில் அழிந்து போய் கொண்டிருக்கின்றனவோ என்னவோ...?

மனிதன் சற்றும் யோசிக்காமல் மரங்களை வெட்டுகிறான், மணலை அள்ளி ஆறுகளை அழிக்கிறான், சுற்றுபுறத்தை மாசு படுத்துகிறான், பசுமை காடுகளை பாலைவனமாக மாற்றிவிட்டன...நம்முடன் இருந்த பல உயிரினங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகி போய்கொண்டே இருக்கின்றன...

இயற்கை ஆர்வலர்கள் இதனை பாதுகாக்க தற்போது கணக்கெடுப்பதாக இருக்கிறார்கள்...! கண் கெட்ட பின்.......என்றாகிவிட்டது. சக உயிரில் அக்கறை இல்லாதவர்கள் சக மனிதனை எவ்வாறு மதிப்பார்கள் என தெரியவில்லை...

அழிய என்ன காரணம் ?!


செல்போன் கதிரியக்கத்தால் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மை பாதிக்க படுவதாக சொல்லபட்டாலும் மாசுபட்ட சுற்றுப்புறசூழலும், முன்பு எங்கும் சிந்தி சிதறி கிடந்த  உணவு தானியங்களின் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். முன்பு நிலத்தை சிறிது தோண்டினாலும் மண் புழுக்களை பார்க்கலாம், ஆனால் இப்போது வேதி உரங்கள் போடப்பட்ட மண்ணில் உயிர் சத்து இல்லாமல் புழுக்களை காணமுடிவதில்லை. மேலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல் புழு பூச்சிகளை அழித்துவிடுகிறது, குஞ்சு குருவிகளுக்கு இவை நல்லதொரு உணவு. 

சோடியம் விளக்குகளாலும் அழிகின்றன என சொல்கிறார்கள். ஆனால் இவை மட்டும் தான் உண்மையான காரணங்களா என தெரியவில்லை. மனிதரின் அலட்சியம் ஒன்று மட்டும்தான் காரணம் என நினைக்க தோன்றுகிறது. ஒரு பொருள் காணவில்லை என்றானபின் தான் அதன் மேல் அதிக அக்கறை வந்து தேட தொடங்குகிறோம்...அது போன்றுதான் மனிதனை எப்போதும் சுத்தி சுத்தி வந்து வளையமிட்ட சிட்டுக்குருவிகளை சட்டை செய்யாமல் இருந்தோம்...வெகு தாமதமாக அவை குறைந்து போனதை உணர்ந்து 'அடடா இப்படி ஆகிபோச்சே என்ன செய்யலாம்' என தவிக்கிறான் மனிதன்...?!    

இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்...


சிட்டுகுருவிகளுக்காக ஒரு செல்ட்டர் ஒன்று அமைத்து வளர்க்கலாம் (முக்கியமாக செல்போன் டவர் இல்லாத இடத்தில் )என யோசித்தேன். அவ்வாறு வளர்க்கலாமா ? இது போன்ற கூண்டுகளில் அவை வளருமா? என பலரிடமும் ஆலோசனை கேட்ட பின்னே முயற்சிகள் மேற்கொண்டேன்.   வெளியிடங்களில் அவை அழிந்துவருகின்றன என்பதால் இயன்றவரை ஒரு பத்து குருவிகளையாவது பாதுகாக்கலாம் என சொந்த ஊரில் மரங்கள் அடர்ந்த எங்களின் பண்ணை வீட்டில் பெரிய மரங்களை உள்ளடக்கி பிரமாண்ட கம்பி வலை கூண்டு ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் செய்து விட்டேன். பறவைகள் அதனுள் சுதந்திரமாக பறக்ககூடிய அளவில் இருக்கவேண்டும் எனவும் அதன் உள்ளேயே பறவைகளுக்கான உணவு, நீர் போன்றவற்றை தினமும் வைத்து பராமரிக்கவேண்டும் என்ற அளவிலே நிர்மாணித்தேன்...!  


ஆனால்...


சிட்டுகுருவி தேவை என பலரிடம் மூன்று மாதங்களுக்கும் மேலாக கேட்டு கொண்டிருக்கிறேன். கிராம புறங்களில் இதற்கென இருப்பவர்களிடம் சொல்லி வைத்தேன், பிடித்து தாருங்கள் பணம் கொடுத்து பெற்றுகொள்கிறேன் என்று...இதுவரை ஒரு சிட்டுக்குருவியும் கிடைக்கவில்லை...?!!   


காணக் கிடைக்கவில்லை என்ற பதில்களை விட எங்கே தேடுவது என்பதே கேள்வி குறியாகிவிட்டது. நமது சிறுவயதில் இருந்து நம்முடன் ஒன்றாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த ஒரு இனம் இன்று முற்றிலும் அழியும் கட்டத்திற்கு   வந்துவிட்டது...நாளை நம் குழந்தைகள் சிட்டுக்குருவியை புகைப் படங்களில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது நிச்சயம்...!  


தேடுதல் தொடரும்...கிடைக்கும் வரை...!!!


பின் குறிப்பு 


உலக சிட்டுக்குருவிகள் தின வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளும் இந்நாளில் மீதம் இருக்கும் இயற்கையின் அரிய உயிரினங்களையாவது அழிய தொடங்கும் முன்பே அவற்றின்  மீது அக்கறை செலுத்த தொடங்குவோம்...!


படங்கள் - நன்றி கூகுள்


வெள்ளி, ஜனவரி 13

பசுமை தேசம்...இது எங்கள் நம்பிக்கை !!



புதிய வருடத்தில் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்துள்ளபடி எனது மற்றொரு தளத்தை உங்கள் முன் இன்று அறிமுகப்படுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள அத்தளத்தை பார்வையிட்டு உங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுமென வேண்டுகிறேன். 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எங்களது ஈஸ்ட் தொண்டு நிறுவனம்(EAST TRUST, Sankarankovil)  சார்பில் பசுமைவிடியல் என்ற பெயரில் ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களால் கடந்த வியாழன்(Jan/2012) அன்று குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸில் வைத்து பதிவர்கள் முன்னிலையில் இவ்வியக்கத்தின் இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டது.

  
முதல் களப்பணியாக மரம் நடுதல் விழிப்புணர்வுக்கான முதல் மரக்கன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார். இனி இதர பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன... 


பசுமை விடியல் - ஒரு அறிமுகம் 


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... 


மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கைச்  சிறப்பாகச்  செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...


2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!


உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டேச்  செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான்  இருக்கின்றன...!

மக்களை பற்றி நாடு அக்கறைக்  கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?!   அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டுச்  செயல்  படுத்தப் பட வேண்டும்...!

இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!

கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களைக்  கோர்த்து இருக்கிறோம்...!

இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!

ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!


பதிவுலக உறவுகளே !


உங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களை இன்னும் சிறப்பாக வழிநடுத்தும் என்பதால் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்கிறேன்.  மேலும் உங்களின் மேலான ஒத்துழைப்பும்,வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் இருக்க வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றேன்.


இனி தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்...........அவசியம் செல்லவும். உங்களின் வருகைக்காக அங்கே காத்திருக்கிறோம்.



பிரியங்களுடன்
கௌசல்யா



படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், ஜனவரி 9

எங்களை கவர்ந்த மக்கள்பிரதிநிதி...! நேரடி அனுபவம்

நல்ல விசயங்கள் எந்த கணத்தில் நடைபெறும் என்று கணிக்கவே முடியாது...உண்மைதான் அப்படி ஒரு நிகழ்வை சாத்தியமாக்கி காட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி என்ற வார்த்தையில் முடித்துக்கொள்வதை விட தொடர்ந்து அவர்களுடன் அன்பை பரிமாறிகொள்வது ஒன்றே என் கடமை என்று எண்ணுகிறேன். எனவே 'அன்பு தொல்லை இனி தொடரும்' என்ற அன்பான மிரட்டலுடன், நடைபெற்ற ஒரு உன்னத நிகழ்ச்சி பற்றிய சிறு துளிகளை இங்கே பகிர்கிறேன்...



பதிவர் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.  ஜனவரி 12 அல்லது  14 அன்று நிகழ்ச்சி நடத்தலாம் என 'நிகழ்ச்சி நிரல்' மாடல் ஒன்றை வடிவமைத்தும், பதிவர்கள் + எம் எல் ஏ கேள்வி நேரம் ஒன்றுக்காக இருபது கேள்விகள் (அரசியல் தவிர்த்து) ரொம்பவே யோசிச்சு(?) டைப் செய்து முன்தினம் இரவு செல்வா(செல்வாஸ்பீக்கிங் ) அண்ணனுக்கு மெயில் செய்தேன். இனி நட்புகளை அழைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது...ஆனால் மறுநாள்(5/1/12) காலை 11 மணிக்கு "நாளையே  ஏற்பாடு பண்ண முடியுமா , எம்.எல்.ஏ வை இப்போது விட்டால் அடுத்து ஒரு மாதம் ஆகிவிடும்" என்றார் அண்ணன்...! ஒண்ணும் ஓடல...!! விசாலினியை பற்றி பிளாக்கில  எழுதியதும் தொடர்ந்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு போய் விடவேண்டும், தாமதம் பண்ணகூடாது என்பதால் "சரிணா பண்ணிடலாம்" என்றேன்.

அன்று துவங்கவேண்டும் என முடிவு செய்திருந்த பசுமைவிடியல் தளம் முழுமையாக வடிவமைக்கபடவே இல்லை...பெங்களூரில் இருக்கும் பிரபுவை(பலே பிரபு) தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன். "சரிக்கா கவலை படாதிங்க, இரவுக்குள் முடிச்சிடலாம்" என்றான்.

சங்கரலிங்கம் அண்ணாவிற்கு தெரிந்திருந்தாலும் "எல்லாம் நீங்க இருக்கும் தைரியத்தில்தான்,உதவி பண்ணுங்க"னு புலம்பி தள்ளிட்டேன்...எல்லாம் பொறுமையாக கேட்டவர், 'ஓ.கே ஜி (தங்கையை பெயர் சொல்லாமல் 'ஜி' னு மரியாதையாக அழைக்கும் அன்பு அண்ணன் !!) பண்ணிடலாம்' என்றார்.  

அப்புறம் அங்கும் இங்கும் போன் மேல போன் பண்ணிட்டே இருந்தோம். இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் யாரை அழைத்தாலும் நிச்சயமாக வர இயலாது...இது நன்கு தெரிந்தும் அழைத்தோம்...தூரத்தில் இருந்து வந்த சீனா ஐயா, ரத்னவேல் ஐயா, சி.பி.செந்தில்குமார், மதுரை சரவணன் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (தனி போஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு)

நிகழ்ச்சியை அப்படியே சொல்வதை விட என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த அற்புத தருணங்களை மட்டும் இங்கே...

                        சூரிய சக்தியால் மின்சாரம் பெற்று உபயோகபடுத்துகிறார்கள்-இசக்கி ரிசார்ட்ஸ் 

விழா நடைபெறும் இடமான 'குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்' போனதும் எம்.எல்.ஏ கலந்து கொள்ளும் விழாவாச்சே மேடை, மைக் அப்படி இப்படின்னு பந்தா செட்டப் இருக்கும்னு ஹால் கதவை மெதுவா திறந்தா ...திக்குன்னு ஆச்சு !! மேடைக்கு பதில் சின்னதா ஒரு டீப்பா, நோ மைக், நல்லவேளை வி ஐ பி சேர் இருந்தது...நாங்கள் அமர ஷோபா, பிளாஸ்டிக் சேர் என்று போடப்பட்டிருந்தது. அங்கே இருந்தவர்களை இதை பற்றி கேட்டேன், ) ஆனா அவங்க,' எம் எல் ஏ சார் ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு கால் பண்ணி சொல்லிட்டார் மேடம் அதான் இப்படி' என்றார்கள்.

அட என்ன அரசியல்வாதி இவர், ஆடம்பரமா ஏன் பண்ணலன்னு கேட்பார்னு பார்த்தா இப்படி சொல்லி இருக்கிறாரே(எத்தனை சினிமாவுல பார்த்திருக்கோம்...!) ம்...சரி சரி வரட்டும் பார்ப்போம்னு நானும் வேறு எந்தவித உள்வேலைகளும்(இன்டீரியர் டெக்கரேஷன் !?) செய்யாம, டென்ஷனை குறைக்க விசாலினியை தோட்டம் நடுவில வச்சு சுத்தி சுத்தி போட்டோ  எடுத்து தள்ளினேன்.

பதிவுலக நட்புகளின் வருகை 

நம்ம நட்புகள் எல்லாம் வந்து சேர்ந்தாங்க...சீனா ஐயா வந்து அமர்ந்ததும் "யார் வரவேற்பு கொடுக்க போறாங்க , ப்ரோக்ராம் லிஸ்ட் எங்க?" அப்படின்னு கிட்டத்தட்ட மிரட்ட தொடங்கினார் அன்பாகத்தான்...நானும் கொஞ்சம் டென்ஷனோட(?) "வேற யாரு நீங்கதான்" டக்குனு சொல்லவும், ஐயா(வாழ்க) மறுப்பார்னு பார்த்தால் ஒரு நோட்ல குறிக்க தொடங்கிட்டார். மதுரை சரவணன் திருக்குறள் சொல்லி தொடங்க, ஐயா வரவேற்பு என முடிவாகியது.

                                             (பதிவுலக நட்புகளுடன் விசாலினி மற்றும் குடும்பத்தினர் )

சட்டமன்ற உறுப்பினர் உள்ளே என்ட்டர், நாங்க அட்டன்ஷன் பொசிஷனுக்கு வந்தாச்சு...பரஸ்பர அறிமுகம்...பிறகு அகரமுதல் எழுத்தெல்லாம் என சரவணன் சொல்ல விழா தொடங்கியது...அமரப் போன (விழா) தலைவர், இந்த சேர் யார் போட்டா, வேண்டாம் எடுங்க"னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த பிளாஸ்டிக் சேர் எடுத்து போட்டு உட்கார்ந்தே விட்டார். எனக்கு சப்புன்னு ஆகிபோச்சு...!

அப்புறம் பொன்னாடை அணிவிக்க தயார் ஆனதை பார்த்தவர், "என்ன இது", "இது ஷால்...மரியாதைக்கு" னு இழுக்க..."அதெல்லாம் வேண்டாம், இனி இது மாதிரி யாரையும் கௌரவபடுத்தனும்னா இதுக்கு பதிலா ஒரு புக் வாங்கி கொடுங்க போதும்" என்றதும் எனக்கு மயக்கம் வராத குறை...இவர் எம் எல் ஏ இல்லையோ, சந்தேகமே வந்து போச்சு...

சீனா ஐயா மிக அருமையாக வரவேற்பு உரை நிகழ்த்தினார்...எல்லோரை  பற்றியும் சொல்லிவிட்டு 'பசுமை விடியல்' நிர்வாகிகள் நாலு பேரின் பெயர் , இயக்கத்தின் திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் சுருக்கமாக சிறப்பாக எடுத்துரைத்தார்...இதெல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது என ஆச்சரிய பட்டேன், நிகழ்ச்சி முடிந்து வெளில வந்து கேட்டால் 'எனக்கு எப்படி தெரிந்தது' என அவரே வியந்துதான் ஹைலைட் !! (ஒரு வேளை மைன்ட்வாய்ஸ் ரீட் பண்ண தெரியுமோ...?!)

                          இணையதளம் துவக்கம் - M.L.A, விசாலினி,செல்வகுமார் அண்ணா

தொடர்ந்து விழா தலைவர், 'பசுமை விடியல்' இணைய தளத்தினை தொடங்கிவைத்தார். தளத்தினை பார்த்தவர் pages ஒவ்வொன்னும் பார்த்து 'இது என்ன, இது எப்படி' என்று கேட்டு, 'இந்த லிங்கை எனக்கு மெயில் பண்ணிடுங்க' என்று அருகில் இருந்த உதவியாளரிடம் ஐடியை என்னிடம் கொடுக்கசொல்லி சொன்னார்.

பிறகு சட்டுன்னு செல்வகுமார் அண்ணன், 'கௌசல்யா நீ எழுந்து பசுமை விடியல் பத்தி சில வார்த்தைகள் சொல்'லுனு சொல்லிட்டார். சத்தியமா இதை நான் எதிர்ப்பார்க்கல, சும்மா கூட்டத்தில கோவிந்தா போட்டுட்டு இருந்த என்னை தனியா பேச சொன்னா எப்படி ? அதுவும் எம் எல் ஏ முன்னாடி, எத்தனை நாள் பிளான் பண்ணினாரோ தெரியல, நல்லா மாட்டி விட்டுட்டார், அப்புறம் ஏதோ ஒரு வேகத்துல கடகடன்னு ஒப்பிச்சிட்டு வந்துட்டேன். (என்ன பேசி இருப்பேன்னு இப்பவும் யோசிச்சு பார்க்கிறேன் 'ம்ஹூம் சுத்தம், நினைவே இல்ல')என் பேச்சை பொறுத்துக்கொண்ட நட்புகளின் சகிப்புத்தன்மை ரொம்ப பெரியது...!!

சுட்டிப்பெண்ணுக்கு மரியாதை 


விசாலினிக்கு கேடயம் ஒன்று 'தமிழ் இணைய வலைபதிவர்கள்' சார்பில் வழங்கப்பட்டது...அவளை பற்றி அவங்க அம்மா, சட்டமன்ற உறுப்பினரிடம் விவரமாக எடுத்து சொல்லவும், மிக ஆச்சர்யபட்டவர் "நம்ம சி எம் பெண் குழந்தைகளுக்காக நிறைய செஞ்சிட்டு வராங்க,விசாலினி பற்றி சொன்னால் சந்தோசபடுவாங்க,பாராட்டுவாங்க,  கண்டிப்பாக இவளது திறமையை உலகம் அறியச் செய்ய நிச்சயம் சி எம் கிட்ட கொண்டு போவேன்" என்றதும் ஒரே கைதட்டல் !! இதை எதிர்ப்பார்த்து தானே பதிவர்கள் நாங்கள் அனைவரும் குழுமி இருந்தோம் !!


விசாலினி பற்றி அவங்க அம்மா நிறைய சொன்னாங்க...(அவ்வளவையும் சொல்லனும்னா ஒரு தொடர் பதிவு போடணும்...!!)அவளின் பெற்றோர்கள் இவளுக்காக படும் பாடுகள், எடுக்கும் பிரயாசங்கள், செலவு பண்ணும் தொகை எல்லாமே வேறு யாரும் கற்பனை செய்ய கூட இயலாதவை !! இவளுக்காக பெரிய பை நிறைய பைல்கள், போட்டோ ஆல்பம், சான்றிதல்கள் என்று வைத்திருக்கிறார்கள்...இப்பவும் தொடர்ந்து சில கோர்ஸ்கள் படித்து வருகிறாள்...ஒரு தேர்வுக்கு இரண்டு பேப்பர், இதில் ஒரு பேப்பர் தலா ரூபாய் 80,000 என கட்டி இருக்கிறார்கள், இரண்டில் ஒரு பாடத்தில் தோற்றுவிட்டாலும், மொத்தமாக 1,60,000 போய்விடுமாம். என் போன்ற சாதாரண தாய் இப்படிதான் பணத்தை பற்றி யோசிப்பாள் ஆனால் அவர்கள் செலவழித்து கொண்டே இருக்கிறார்கள்...!! பெண்ணின் திறமையை பட்டை தீட்டி கொண்டே இருக்கிறார்கள்...!!


சட்டமன்ற உறுப்பினரின் எளிமை 


எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதி என்றால் மக்களுக்கு(என்னையும் சேர்த்துதான் ) சிலபல  புரிதல்கள் இருக்கின்றன. ஆனால் இவரை பொறுத்தவரை அங்கே இருந்த ஒரு மணி நேரமும் (விழா முடிந்ததும் சென்னை ரயிலை பிடிக்கவேண்டிய அவசரம் வேறு ) எங்களில் ஒருவராக இருந்தார். இவரின் குணம் தெரிந்து தான் செல்வகுமார் அண்ணன் எங்களிடம் அறிமுகம் படுத்திவைக்க 'இப்படி தவித்தாரா ?' என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. மக்களோடு மக்களாக பழகும் இத்தகைய குணம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்...!?

'கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் இத்தனை மரங்கள் நடவேண்டும் என்ற ஒரு யோசனை இருக்கிறது, அப்போது 'பசுமை விடியல்' இயக்கத்தை சேர்த்து கொள்கிறோம்' என்றார். அவரின் ஆர்வத்தை மிக வியந்தேன்...தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் (துகள்களாக்கி)வைத்து சாலைகள் அமைக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது என பகிர்ந்துகொண்டார். நாங்கள் அதற்கு வாழ்த்து சொன்னோம். சில கேள்விகள் கேட்டோம், ரொம்ப கேஷுவலாக பதில் சொன்னார்...'விழா முடிந்ததா நான் கிளம்பலாமா' என கேட்டு அனுமதி(!) கொடுத்த பின் தான் கிளம்பினார்.

மரக்கன்றை செல்வகுமார் அண்ணனிடம் இருந்து இவர் பெறும்போது விசாலினியை அழைத்து "நான் உன்னைவிட ரொம்ப சின்ன பையன்,நீதான் பெரியவ, உன் கையால் தொட்டு கொடு" னு சொல்ல அனைவரின் முகத்திலும் பிரகாசமான புன்னகை !


மரக்கன்றை அதே இடத்தில் நன்றாக நட்டு பேணி வளர்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் சொன்னார்.அந்த செண்பக மரம் பூத்துகுலுங்கி மணம் வீசும் நாள் அன்று பதிவர்களான நம்மை அம்மரம் நிச்சயம் வாழ்த்தும்...! 

மிக சிறப்பாக விழா நடைபெற பேருதவி புரிந்த மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

பின்குறிப்பு

தொடரும் பதிவு ஒன்றில் விசாலினியை பற்றியும் , வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நட்புகள் பற்றியும், ஜெயா டிவி, சன் டிவி, ராஜ் டிவி, விண் டிவி, மக்கள் டிவி, மற்றும் மீடியாக்கள் பற்றியும் சிறிது பகிர்கிறேன்..
 



திங்கள், நவம்பர் 21

என்னை காப்பாத்துங்க...! ஒரு அபலையின் அழுகுரல் !!!


பக்கத்துல ஒரு மனுசன் ஐயோ அம்மானு கதறிட்டு கிடந்தாலும் காது கேட்காத மாதிரியே ஒரு சிலரு இருந்தாலும், ஐயோ பாவம்னு அனுதாப பட, உதவி செய்ய கோடி பேர் இருக்கிறாங்க...அதுவும் என்ன போல அடுத்தவங்களுக்காக உசுற கைல பிடிச்சிட்டு ஓடிட்டு இருக்கிறதாலத்தான் நாட்ல மழையே பெய்யுது...ஆங் !மழைன்னு சொன்னப்ப ஞாபகம் வருது, அப்ப அப்ப என் உசுற இந்த மழைதான் காப்பாத்திட்டு வருது...இதுவும் என்னை கைவிட்டுடா என் நிலமை அவ்ளோதான்.

யார் இப்படி தன்னந்தனியா புலம்பரதுன்னு யோசிக்கிறீங்களா...?! நான்தான் ஆறு...ம்...வற்றாத ஜீவ நதினு நீங்க பெருமையா பேசுற தாமிரபரணி தான் நானு !! என்னடா ஒரு ஆறு புலம்புதுன்னு சிரிக்காதிங்க...முழுசா படிச்சா என்னை இப்படி புலம்ப வைக்கிறதே உங்களை போன்ற சில மனுசங்கதானு புரிஞ்சி தலை குனிவீங்க...!

நானும் யாராவது என்ன காப்பாத்த வருவாங்களானு காத்து கிடந்ததுதான் மிச்சம், ஒருத்தரும் எட்டி பார்க்கல...?! கலெக்டர், மந்திரி, எம்எல்ஏனு  பெரிய பெரிய ஆளுங்கலாம் என்ன கண்டுக்காம போனாலும் பொது சனங்க எம்மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா...?! ஆனா பாவம், அவங்க ரொம்ப அப்பாவிங்க, என் நிலைய பாத்து கண்கலங்கிறதோட முடிச்சுகுவாங்க, அதுதான் இங்க வந்தா நீங்களாவது என் நிலமைய பார்த்து என்னை காப்பாத்துவீங்கனு வந்திருக்கேன்...

பெருமையும், சீரழிவும்

திருநெல்வேலி அல்வாக்கே என்னாலத்தான் ருசி (ஒரு சுய விளம்பரந்தேன் !) அப்படின்னு வெளில பேசிகிறாங்க ! ஆனா இப்போ இருக்கிற தண்ணிய குடிச்சி பாருங்க, சப்புன்னு இருக்கும்...!? முன்னாடி எல்லாம் காடு கழனிக்கு போற விவசாய சனங்க, தண்ணிய அப்படியே அள்ளி குடிச்சி, 'ஆஹா எம்புட்டு ருசி சோறு கூட வேணாம்ல, வயிறு நிறைஞ்சு போச்சு'னு சந்தோசமா சொல்லுவாக...ம்...அதெல்லாம் ஒரு காலம் !


பொதிகை மலையில் பொறந்து அப்படியே நெல்லையை செழிப்பாக்கிட்டு, தூத்துக்குடி மாவட்டம் புன்னை காயல்ல போய் கடலோட கலந்துடுறேன்.....போற பாதை எல்லாம் செழிப்பா பச்சை பசேல்னு இருக்கும்...ஆனா இப்போ கரையோரத்தில கால் வைக்க முடியாத படி சேறும், சகதியுமா குப்பையும், கூளமா நிறைஞ்சு கிடக்குது...ஆத்துல சில இடத்தில அமலை செடிவேற நிறைய வளந்து மூடி கிடக்குது. மாநகராட்சி ஊருக்குள்ள பன்றிகள வளர்க்க தடை போட்டதால அதுங்க எல்லாம் என் கரையோர ஊர்கள்ல குடும்பமா கும்மாளம் போடுதுங்க...இதால கொசுங்க பெருகி போச்சு குழந்தை குட்டிகளுக்கு நோய் வந்திடுமேனு எனக்குதான் கவலையா இருக்கு...

ஆலை கழிவையும் கொண்டு வந்து கொட்டுறாங்க...தொழிற்சாலை கழிவு நீரை ஆத்துல விடுறாங்க...இதை எல்லாம் யாரு கண்டுகிறாங்க ? தட்டி கேட்குறதும் இல்ல ?!

அட படுபாவிகளா !

இன்னொரு பக்கம் என் மடியில கை வைக்கிற பாவிகளை என்னனு சொல்ல ...அவனுங்கள அந்த காமாட்சிதான் பாக்கணும் ! ஜே சி பி எந்திரத்தை வச்சு மணலை அள்ளி கொண்டு போறாங்க...ஐயோ ! எனக்கு வலிக்குதேனு கத்தி கதறினாலும் அரக்க சென்மங்க காதுல எங்க விழுது...?! இதை பாக்குற சனங்களோ இவன் உருபடுவானானு சாபம் போடுறாங்க...ஆனா எப்படி எதுக் கிறதுன்னு அவங்க பயப்படுறத பார்த்து என் வலியை பொறுத்துகிறேங்க...! 


இந்த மணல் கேரளாவுக்கு லாரி லாரியா போவுது...அந்த சனங்க ரொம்ப புத்திசாலிங்க, எங்க இருந்து மணல் வந்தா என்ன, நம்மூரை நல்லா பார்த்துபோம்னு இருக்காங்க...அங்கிருந்து மாலத்தீவுக்கு வேற போகுதாம்...இது எனக்கெப்படி தெரியும்னு பாக்குறீங்களா, இந்த லாரி டிரைவர்கள் பேசுவதை அப்ப அப்ப கொஞ்சம் கேட்பேன், இப்படிதான் என் பொது அறிவு வளருதுங்க...!

ஆமாம் தெரியாமத்தான் கேட்குறேன், மணலை அள்ளி வேற வேற இடத்தில மலையா குவிச்சு வச்சிருக்காங்களே, அரசாங்கத்தோட ஆளுக யாரும் பார்த்து எப்படி ஆத்து மணல் இங்க வந்ததுன்னு கேட்க மாட்டாங்களா ? இதை பறிமுதல் செய்ய சட்டத்தில இடம் இல்லையா ? (ஓட்டைதான் இருக்குனு சொல்றீங்களா, நீங்க சொன்னா சரிதான் !) 

என்ன ஒரு புத்திசாலித்தனம் ?!


எங்க ஊரு பக்கம் சொல்வாங்க..."கள்ளன் பெருசா, காப்பான் பெருசா" னு. இந்த கள்ளங்க எப்படி எல்லாம் பிளான் போடுறாங்க தெரியுமா... 'மணல் எடுக்க தடை போடுறீங்க சரி, ஆனா நாங்க ஆத்து பக்கத்துல நிலம் வாங்கி, அப்புறம் அந்த பட்டா இடத்தில மணலை வேண்டிய மட்டும் அள்ளுவோம், இப்ப என்ன பண்ணுவீங்களாம்'னு சிரிக்கிறானுங்க...?! அட முட்டா பசங்களே! இப்படி நிலத்த வாங்கி கடும் ஆழத்துல தோண்டுறீங்களே, நாளைக்கு ஆத்துல வெள்ளம் வந்தா ஊருக்குள்ள வந்துடுமேனு கொஞ்சமாவது யோசிசீங்களா...?!! உங்க சுயநலத்துக்காக எத்தன பேர் உசிரோட விளையாடுறீங்க...!? நீங்க நல்லா இருப்பீங்களா !



கைவிட்டுடாதிங்க...

இது ஏதோ புலம்பல்னு கண்டுக்காம விட்டுடாதிங்க...பறந்து விரிந்து ஊருக்கு நடுவில கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்...! மணல் எடுக்குற சாக்குல எங்களை கொஞ்ச கொஞ்சமா ஆக்கிரமிச்சிட்டு இருக்கிற மணல் கொள்ளையர்களை கூட்டமா சேர்ந்து தட்டி கேளுங்க, போராட்டம் பண்ணுங்க ...ஆரம்பத்தில எதிர்ப்பு இருந்தாலும் தொடர்ந்து நீங்க கொடுக்கிற டார்ச்சர்ல அவனுங்க இந்த கொள்ளை தொழிலையே மறந்துறணும்...ஊர் கூடி தேர் இழுத்தா தேர் நகராமலா போய்டும்...!? முயன்றுதான் பாருங்களேன்...!!

இது என்னோட தனிப்பட்ட வேதனைனு இல்ல, என்னப் போல பல ஆறுகளும் இப்படி தான் அழிஞ்சிட்டு வருது...சனங்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்துக்கு உதவி செஞ்சி, ஊருக்கே சோறு போடுற எங்க நிலைமை ரொம்ப மோசமா போயிட்டே இருக்குது...! இனியாச்சும் யாராவது கவனம் எடுத்து, சீரழிஞ்சி செத்துக்கிட்டு இருக்கிற எங்கள வாழ வையுங்கனு என் எல்லா உடன்பிறப்பு சார்பில கேட்டுகிறேன்...

இப்ப மழைகாலம் வேற எல்லா தண்ணியும் கெட்டு போய் கிடக்கு...பிளாஸ்டிக் கேன்ல வாங்கினாலும் அதையும் சுட வச்சு குடிங்க...எங்க ஊருகாரவுக உணவு உலகத்தில சங்கரலிங்கம் ஐயாவோட இந்த பதிவை படிச்சி பாருங்க...அவர் சொல்றது உங்க நல்லதுக்கு தான்னு நினைச்சி அதை அப்படியே கடைபிடிங்க... உங்க புள்ள குட்டிகளை நோய் நொடி அண்டாம பத்திரமா பார்த்துகோங்க சனங்களே...

இத்தனை நேரம் பொறுமையா என் வேதனைகளை கேட்ட உங்க நல்ல மனசுக்கு நீங்க எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்துறேன்...முடிஞ்சா மத்தவுககிட்டையும் இதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க...உங்களுக்கு புண்ணியமா போகும்...!

இப்படிக்கு 
தாமிரபரணி ஆறு
திருநெல்வேலி.

* * * * * * * * *



தலைப்பு - நன்றி சங்கரலிங்கம் அண்ணா    
படங்கள் - நன்றி கூகுள்