அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 22

அதீதத்தில் பசுமைவிடியல் - நண்பருக்கு நன்றி !!



பதிவுலகம் வந்த புதிதில் எனக்கு அறிமுகமான கார்த்திக்(எல்.கே) அதற்கு பிறகு இப்போது என் கணவருக்கும் நெருங்கிய நண்பராகி விட்டார் ...! தற்போது பிளாக்கில் பதிவுகள் எழுதுவதை குறைத்துவிட்டார். முன்பு பிறரது தளங்களை தனது பாகீரதி தளத்தில் அறிமுகம் செய்து பலரை, பலருக்கும் தெரிய வைத்தவர் எல்.கே. (மீண்டும் பாகீரதியில் 'இவர்களும் பிரபலமானவர்களே' பகுதியை எழுதலாமே !)

நாங்கள் பசுமை விடியல் இயக்கத்தின் இணையதளம் தொடங்கியதை அறிந்து மிக பாராட்டி வாழ்த்தினார். 'அதீதத்தில் பசுமைவிடியல் தளத்தை அறிமுகம் செய்து எழுதட்டுமா?' என ஒரு மாதமாக கேட்டு கொண்டே இருந்தார். தற்போது தான் இருவருக்கும் நேரம் வாய்த்தது...சில கேள்விகளை என்னிடம் கேட்டு பதிலை பெற்றுக்கொண்டு உடனே பதிவை எழுதி வெளியிட்டும் விட்டார். நடந்தது இதுதான் என்றாலும் அதன் பின் நடந்தது தான் நான் சிறிதும் எதிர்பாராத ஒன்று, வெளிவந்த அன்று மாலையே முகநூலில் 'மரத்தை வெட்டுங்கள்' பதிவு சசிதரன் என்பவரால் பகிரப்பட்டு இந்த நிமிடம் வரை 2,083 பகிர்வுகள் வரை பலராலும் கவனிக்கபட்டு கொண்டிருக்கிறது...!!! இரண்டு வருடங்களாக நான் எதிர்பார்த்து கொண்டிருந்த இது போன்ற ஒரு தருணத்திற்கு ஒரு மறைமுக காரணமாக அதீதத்தை நினைக்கிறேன்...! பெருமிதம் கொள்கிறேன் !

பசுமைவிடியல் இயக்கத்தின் சார்பாக நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதீதத்தில் வந்த பதிவு இப்போது உங்கள் பார்வைக்காக...

                                                       * * * * * * * * * * * * * * * * * 


இதுவரை பிற தளங்களை பற்றி வலையோசையில் மட்டுமே பகிர்ந்துள்ளோம்.. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தளத்தை பற்றியக் கட்டுரை இது.. இன்றைக்கு நமது சுற்றுப்புறச் சூழல் பல விதத்திலும் பாதிப்படைந்துள்ளது. பலரும் பலவகையிலும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். இங்கே நமது இணையத்திலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதி வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.அதே நேரம் விழிப்புணர்வை எழுத்தில் வெளிபடுத்துவதுடன் நின்றுவிடாமல் களத்தில் இறங்கி இருக்கும் 'மனதோடுமட்டும்' கௌசல்யாவையும் அவருக்கு உற்றத் துணையாக கை கோர்த்திருக்கும் ISR. செல்வகுமார், பிரபு கிருஷ்ணா , சூர்யபிரகாஷ் போன்றோரையும் பாராட்டுகிறேன்.

இணையத்தின் மூலமாக இணைந்த இவர்கள் 'பசுமைவிடியல்' என்ற இயக்கத்தை தொடங்கி, முறையாக திட்டங்கள் தீட்டி ஒவ்வொரு படியாக நிதானமாக எடுத்து வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்... இதற்கான ஒரு இணையதளம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து பதிவர்களின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் திரு இசக்கி சுப்பையா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

*அன்றே இயக்கத்தின் முதல் மரமாக செண்பக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது...

*மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் சங்கரன்கோவில் ஊரில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

* ISR. Ventures நிறுவனமும் பசுமைவிடியலும் இணைந்து மாங்குரோவ் காடுகளை பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறது...

சீமை கருவேலமரம்


இவ்வியக்கம் மிக முக்கிய பணியாக கையில் எடுத்திருப்பது சீமை கருவேலமரங்களை வேருடன் அழித்தொழிப்பது. சுற்றுச்சூழலையும் , நிலத்தடி நீரையும் பெருமளவில் பாதித்துகொண்டிருக்கும் நச்சு மரமான இதனை வேரறுக்க சீரிய முறையில் பல திட்டங்களை வடிவமைத்து இருக்கிறார்கள். முதல் படியாக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறார்கள். மேலும் விவரம் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

இம்மரத்தை குறித்த விவரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல  வேண்டிய ஏற்பாடுகள் ஒரு புறமும், மக்களிடம் நேரில் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றொரு புறத்திலுமாக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள்.    
இவர்களை நாம் வாழ்த்துவோம்...நமது வாழ்த்துக்கள் அவர்களை அதிக உற்சாகமாக உழைக்க வைக்கும்.

பசுமைவிடியல் தளம் - www.pasumaividiyal.org

அதீதம் சார்பில் இயக்கத்தை குறித்து நான்கு கேள்விகள் கேட்கப்பட்டது...கேள்விகளுக்கான பதிலை பசுமைவிடியலின் சார்பில்  கௌசல்யா தெரிவித்தார்கள்...

1. எல்லோரும் மரம் நடவேண்டும் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்று ஆரம்பித்து உள்ளீர்கள்? 

உலக வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் சொல்வதும், செய்வதும் மரம் நடுவதுதான். ஆனால் நாங்கள் சொல்வோம் நடுவது முக்கியமில்லை, இந்த சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதுதான் முக்கியம் என்று...! ஏன் என்றால் வயலில்  களைகளை அகற்றினால் தான் பயிர் நன்கு வளரும், களைகள் இருப்பின் பயிரை வளரவிடாது என்பது விவசாயம் ! களை இருக்கும் போது பயிருக்கு தண்ணீர்,உரம் போட்டு பயனேதுமில்லை. அதையே தான் இங்கே நாங்களும் சொல்கிறோம், இந்த நச்சு மரங்களை அழித்தால் தான் நல்ல மரங்கள் வளரமுடியும், நல்ல மரங்களின் பயன் முழுதாக பூமிக்கு கிடைக்கும்.

2. சீமை கருவேலமரத்தின் தீமையை சுருக்கமாக கொஞ்சம் சொல்ல முடியுமா ?

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் சீமைக் கருவேல மரம்(வேலிகாத்தான், சீத்த மரம்,டெல்லி முள் என்று பல வட்டார பெயர் உண்டு அறிவியல் பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora))

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டுவாக்கில் விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறோம். மேலே சொன்னபடி களை எடுக்காமல் பயிர் நடுவதும், உரமிடுவதும் வீண் என்ற எண்ணம் தான் இது பற்றிய ஆழமான ஆராய்ச்சியை எங்களுக்குள் உருவாக்கியது மேலும் இதன் தீங்குகள் பற்றி அறிய இங்கே படிக்கவும்
பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

3. களப்பணி தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.  பசுமை விடியல் நிர்வாகிகள் நால்வரும் நான்கு திசையில் இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியம்?
இதில் இப்படி ஒன்று இருக்கிறதா ?? உண்மையில் இந்த கேள்வி எங்களுக்குள் ஏன் இதுவரை எழவில்லை என ஆச்சர்யபடுகிறேன்.  இணைந்து செயல்படவேண்டும் என முடிவு செய்தோமே தவிர 'முடியுமா' என்ற வினா யாருக்கும் எழாததே 'சாத்தியம்' என்பதால் இருக்கலாம் அல்லவா...?! நால்வரின் எண்ணங்கள் ஒத்த அலைவரிசை என்ற போது நிச்சயம் எதுவும் சாத்தியமே !

4. சாத்தியம் என்றால் எவ்வாறு ? கொஞ்சம் சொல்லவும்...
நாங்கள் ஒன்றிணைய இணையம் தான் காரணம் என்பதை மறுக்கயியலாது. அதே நேரம் களத்தில் இறங்கி பணியாற்ற நல்ல மனிதர்களின் உதவிதான் வேண்டும். தகவல்களை பரிமாற்ற, சமூக நோக்கு கொண்டவர்களை ஒன்றிணைக்க, செய்திகளை அறிவிக்க, பலரிடம் இயக்கம் பற்றிய செயல்களை கொண்டு சேர்க்க இணையத்தை பயன்படுத்தி கொள்கிறோம். அவ்வளவே.

தற்போது எங்களுடன் இணைந்திருக்கும் தன்னார்வலர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்...அவர்களுடன் நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்...அந்தந்த இடத்தில் நடக்க வேண்டிய களப்பணிகளை பற்றிய ஆலோசனைகள், முன்னெடுப்புகள் , கருத்துகள் பற்றி எல்லாம் விவாதித்த பின்னே செயலில் இறங்க இருக்கிறோம். களப்பணிகளின் போது கூடுமானவரை எங்களில் ஒருவர் களத்தில் இருப்பார்.  நாங்கள், தன்னார்வலர்கள் இணையும் போது அனைத்தும் சாத்தியமாகும்.

அதீததிற்கு மனமார்ந்த நன்றிகளை எங்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற நல்ல உள்ளங்கள்  எங்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்கு இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது...நாம் வாழும் இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்றவரை சிறு துரும்பையாவது கிள்ளி போடுவோம் என்று சொல்வார்கள் நாங்கள் துரும்பை கிள்ள அல்ல மரத்தையே வெட்டி சாய்க்க போகிறோம்...!!

நன்றி - அதீதம்   
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மீண்டும் ஒரு முறை அதீததிற்கு நன்றியையும் , 'மரங்களை வெட்டுங்கள்' பதிவை பலருக்கும் கொண்டு சேர்க்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 

சனி, நவம்பர் 19

ஒரு நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்...!



நவம்பர் 14 குழந்தைகள் தினம்,  'முன்னாள் பாரத பிரதமர் நேரு குழந்தைகள் மிக நேசித்ததால், அவரது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்' இத்தினம் கொண்டாடபடுவதின் காரணம் நமக்கு தெரிந்து இது ஒன்றுதான். ஆனால் உண்மையில் குழந்தைகளின் கையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தவே இந்த தினம்.


விழா

இத்தினம் முக்கியமாக பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆசிரியர்களைப் பொறுத்தவரை விழாவினை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதிலும், பல்வேறு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதில் குழந்தைகளின் சிந்தனைகள் இருக்கும்...ஆனால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எந்தவித சலனமும் இன்றி வருடத்தின் மற்றொரு நாள் இது என்பதாகப் போய்விடுகிறது...!!? 

'குழந்தைகள் தினம்' கொண்டாடுவது முக்கியம் இல்லை...குழந்தைகளை கொண்டாடுவோம் முதலில்...!!

சிறையில் நம் குழந்தைகள் 

சிறைப்பட்ட வண்ணத்துப்பூச்சி பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அதன் சிறகுகள் ஒடிக்கப்பட்டிருப்பதை அது அறியாது. இன்றைய குழந்தைகளும் தாங்களாகவே சிறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.கம்ப்யூட்டர் கேம்ஸ், தொலைக்காட்சி இன்னும் பிற அறிவியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.ஒரு சிலர் தமது வேலைக்கு இடைஞ்சல் வந்துவிட கூடாது என்று அந்த கதவை தட்டுவதுக் கூட இல்லை, அப்புறம் எங்கே திறப்பது...?!

உடலுக்கு சுறுசுறுப்பை தரும் விளையாட்டுகள் சுத்தமாக குறைந்துவிட்டன...பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் கொடுப்பினை நம் குழந்தைகளுக்கு இல்லை...ஜங்க் புட் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளும் தவறான பழக்கம்...உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் பழக்கம் இல்லை, தங்களின் உறவுகள் யார் எவர் என்றே அறியாத பரிதாபம் !   

பல வீடுகளில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட தனிமை சிறையில் குழந்தைகள் ! சில நிமிட நேரங்கள் கூட குழந்தைகளிடம் செலவு பண்ண நேரம் இன்றி பொருளாதார தேடலுக்குப் பின்னே சில பெற்றோர்கள் !

கண்ணில் தெரியுது வானம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இவர்கள் தொட்டே விடுகிறார்கள்...எங்கும் வேகம்...எதிலும் வேகம் என்று இருக்கிற இவர்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டாமா...?!! உணவு, உடை, படிப்பு கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிடுகிறது என்று எண்ணுவது தவறு அல்லவா ? நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய கடமை தானே ?!

பாட்டு, நடன போட்டிகள்

எல்லா டிவி சேனல்களிலும் ஏதாவது குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தங்கள் குழந்தையும் பங்குபெறவேண்டும் என்ற சில பெற்றோரின் ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் இதற்காக தன் அன்றாட வேலைகளை தங்கள் விருப்பபடி செய்யவிடாமல் பெற்றோர்  இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடும் பிள்ளைகள் பாவம்.தன் குழந்தை ஜெயிக்கவேண்டும் என்று திணிக்கப்படுபவை, தோல்வி அடைந்துவிட்டால் பெற்றோரின் அதிக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் மன அழுத்தத்தில் விழ வைத்துவிடுகிறது. தவிர பலர் முன் தோற்றுவிட்டோம் என்பது ஒருவித சுயபச்சாதாபத்தை, தாழ்வுமனப்பான்மையை  ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் போட்டியில் எலிமிநேஷன் என்றதும் அவர்கள் முகத்தில் தெரியும் அச்சமும், செலக்ட் ஆகவில்லை என்றால் ஏற்படும் கலக்கமும் டிவியில் பார்க்கும் நமக்கே வேதனையாக இருக்கும்.

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்ளகூடிய அளவிற்கு மனதை தயார் செய்த பின்னர் இது போன்ற போட்டிகளில் பங்குக்  கொள்ளவைப்பது நல்லது. 

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ குழந்தைகள் பாட்டு போட்டியில் பாடும் இன்றைய ஒரு சில சினிமா பாடல்கள் கேட்கும் போது சங்கடமாகவும், கூச்சத்தில் நெளியவும் வைக்கிறது. இது போன்ற பாடல்களுக்கு பதிலாக பாரதியார், பாரதிதாசன், பாடல்களோ, ஆழ்வார், நாயன்மார்களின் பாசுரங்கள் இன்னும் பல... இவைகளைப் பாட வைக்கலாமே...அதன் மூலம் அப்பாடல்கள் மனதில் பதியும்...மனதில் பதிந்தவை அவர்களை நல் வழிபடுத்தும் !! 

சில பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பதில்லை, அது போன்ற பள்ளிகளை பாராட்டலாம்.

குழந்தைகளை குழந்தைகளாக எண்ணாமல் இதை செய் அதை செய் என்று வறுபுறுத்தி வயதுக்கு மீறியவற்றை செய்யும் போது நம் மனது மகிழவே செய்கிறது...ரசிக்கிறோம்...அதே குழந்தைகள் நாளை பெற்றோரை எதிர்த்து நடக்கும் போது அதையும் ரசிக்க நம்மால் முடியுமா ?! 

என்னவெல்லாம் செய்யலாம்...?!


குழந்தைகள் தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை பள்ளி குழந்தைகளுடன் இணைத்து பெரிய விழாவாக கொண்டாடலாம். அப்போது ஆதரவற்ற குழந்தைகள் என்று ஒரு இனம்(?) இருக்கிறதா என்பது நம் குழந்தைகளுக்கு தெரியவரும்...அவர்களை அணைத்து செல்லவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வளர இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

உலகெங்கும் குழந்தைகள் மீதான குற்றங்கள்/கொடுமைகள்  பெருகிவிட்டன...இதை பற்றி யாரும் பெரிதாக அக்கறைப் பட்டதாக தெரியவில்லை...அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் தானே நடக்கிறது என்று மெத்தனமாக இருக்கும் இந்த நிலை மாறினால் நல்லது.

குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் இந்திய அரசு குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்து வருவதாக எனக்கு தெரியவில்லை...(தெரிந்தவர்கள் சொல்லலாமே...)குழந்தைகளுக்கு என்று நல சங்கங்கள் இருக்கிறதா ? அவை என்ன செய்கின்றன ?! குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கவோ அல்லது அவற்றை களையவோ முயற்சி செய்கிறதா சங்கங்களும், அரசும் ?!!

மூன்று வயது குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது...இதை குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் வேண்டும்...பள்ளிகளில் குழந்தைகளுக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் குட் டச், பேட் டச் பற்றியும் சொல்லி கொடுக்க வேண்டும். ஒருவர் தவறான இடத்தில் தொடுகிறார் என்றால் உடனே எதிர்ப்பை காட்ட தெரிய வேண்டும், பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தண்டனை கடுமையாக்க பட்டால் இவை குறையுமா ? 

இவர்களும் குழந்தைகளே !

* முறையான கல்வி பெற வசதி இல்லாதவர்கள்
* ஆதரவற்ற அநாதை குழந்தைகள் 
* பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் 
* குழந்தை தொழிலாளர்கள் 
* சரிவிகித ஊட்டச்சத்து இன்றி நோயில் பிடியில் அவதிப்படும் குழந்தைகள்   
* பிச்சை எடுக்கும்(எடுக்க வைக்கப்படும்) குழந்தைகள்
* குப்பை பொறுக்கும் குழந்தைகள் 

ஆதரவின்றி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அநேகர் !இத்தகைய குழந்தைகளை பார்க்கும் போது நம்மால் இயன்ற ஒரு உதவியை செய்யலாம், அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து பள்ளிகளில் சேர்த்துவிடலாம்...அல்லது இதற்கென இருக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு இவர்களை ஒப்படைக்கலாம். நமக்கென்ன வந்தது, இதை செய்ய போனால் வேறு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என அச்சம் கொள்ளாமல் இயன்றவரை நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக நல்ல இடங்களில் சேர்த்துவிடுவது நல் இதயம் உள்ள எல்லோரின் கடமை.

தொண்டு நிறுவனங்களின் வேலை இதுவென ஒதுங்கி கொள்ளாமல், தனி நபர் ஒவ்வொருவரும் உதவ முன் வரவேண்டும்.

நம்மில் பலரும் செய்வது பிறந்த நாள், நினைவுநாளின் போது அநாதை ஆசிரமங்களுக்கு சென்று இனிப்பும், உணவும் கொடுப்பது, இத்துடன் கடமை முடிந்துவிடுகிறது என்று நமது சுயம் திருப்திப்பட்டு கொள்கிறது.உணவு மட்டும் அவர்களை திருப்திப்படுத்தி விடுமா ? ஒரு சிலர் இத்தகைய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதும் உண்டு. ஆனால் இவை மட்டும் போதுமா ?!! யோசியுங்கள் !!

நம் குழந்தைகளின் மீது வைக்கும் அதே அன்பை பிற ஆதரவற்ற குழந்தைகளின் மீதும் செலுத்துவோம். அக்குழந்தைகளுக்கும் இப்பூமியில் அனைத்தையும் பெறவும், வாழவும் உரிமை இருக்கிறது...!! அவ்வுரிமையை நாம் மதிப்போம்...எந்த குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்ப்போம்...!! அவர்கள் நலனில் அக்கறை காட்டுவோம்...!!

இக்கட்டுரை அதீதத்தில் வெளிவந்தது...நன்றி அதீதம்.

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே ! இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது கொண்டாட போகிறீர்கள் ?
                                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான்

நாளை நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம்...உலகம் முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாட படுகிறது...!

நம் குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்...! அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...



போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...