பாலியல் வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் வன்முறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 16

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான் பெரும்பாலான  குழந்தைகள் இருக்கிறார்கள் !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...?? 


போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.  

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி ! 
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே ப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?   

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை ! 

தேவையற்ற அதிக மன அழுத்தம்


நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் ! 

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் ! 
  
எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் ! 

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?

பின்குறிப்பு 

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் குழந்தைகளை விட பாலியல் துன்புறுத்தலை நிகழ்த்துபவர்கள், வன்கொடுமையை ரசிப்பவர்கள் அதிகம். அவர்களின் ஆரம்பம் எங்கிருந்தும், இப்படியும் தொடங்கலாம் என்பதை இந்த பதிவு உணர்த்த முயலுகிறது. வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் மனதோடு மட்டும்
கௌசல்யா  

திங்கள், ஜனவரி 7

அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் - குற்றவாளி யார்...??!



இன்றைய பெண்கள் குறிப்பாக சிறுமிகள் மனதில் ஆண்கள் என்றாலே மோசமானவர்கள் என்பதை மிக அழுத்தமாக இது போன்ற மோசமான நிகழ்வுகள் பதியவைத்துவிடுமோ என்றே வருந்துகிறேன். அருவருக்க தக்க இச்செயல்களை ஒரு சில ஆண்கள் செய்வதால் ஒட்டுமொத்த ஆண்சமூகமும் தலைகுனிந்து நிற்கிறது. நடக்கும் சம்பவங்களுக்கு  ஆண்கள் மட்டுமா காரணம் !!?? என ஒரு கேள்வியும் உடன் எழுகிறது...

ஓடும் பேருந்தில் பலரால் சிதைக்கப்பட்டு இறந்த இளம் பெண், ஆசிட் வீசப்பட்டதால் வாழ்வை தொலைத்தவள், எதிர்வீட்டுக்காரனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கபட்டுவிட்டாள் என தந்தை கையால் கௌரவ(?)கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி, பாலியல் வன்முறையால் கொல்லப்பட்ட சிறுமி புனிதா, வீட்டில் இருந்த 4 ஆம் வகுப்பு மாணவியை இருவர் சிதைத்த கொடுமை......... இவை எல்லாம் விட கொடுமை பிளே ஸ்கூல் படிக்கும் மூன்றை வயது குழந்தையை வன்கொடுமை புரிந்த பள்ளி உரிமையாளரின் கணவன் !!??

ஊடகத்திற்கு வந்தவை கொஞ்சம், ஆனால் இப்படிபட்ட அல்லது இதை விடவும் மோசமான கொடுமையான நிகழ்வுகள் உலகம் முழுவதும் அதிக அளவில், விதவிதமாக பெண்களின் மீது காலங்காலமாக நடந்துக்கொண்டிருக்கின்றன, மீடியாக்களின் உபயத்தில் இன்று அதிகரித்து வருவதை போல தெரிகிறது...

இணையத்தின் விவாதப்பொருளா ?!

டெல்லியில் நடந்தது மட்டும் இப்போது பெரிதுபடுத்தி பார்க்கப்படுகிறது,  பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் ஏன் இல்லை என இணையத்தில் காரசாரமான கருத்துக்கள் கண்டேன்.   ஊடகங்கள் செய்யாவிட்டால் என்ன தனி மனிதர் ஒவ்வொருவரும் போராட வேண்டியது தானே ?! நமக்கு அருகில், தெருவில் ஒரு பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் போது நம்மில் எத்தனை பேர் வேடிக்கை மட்டும் பார்த்து கடந்து சென்றிருப்போம்.

பெண் பாலியல் வன்முறை செய்யப்பட்டுவிட்டாள் என தெரிந்ததும் ஆவேசத்துடன்  சரமாரியாக கருத்துக்கள் இடுபவர்களில் சிலர் முகநூலில் நடிகையின் படத்தை வெளியிட்டு மட்டமாக வர்ணிப்பவர்கள் !! மனதில் இவ்வளவு வக்ரத்தை வைத்துகொண்டு பெண்ணுக்கு ஆதரவாக கருத்திடும் வேடதாரிகள் ஒருவகையில் குற்றவாளிகள் தான் ! உடலை தீண்டி சிதைத்தால்தான் வன்முறையா ? பார்வையால், பேச்சால்  பெண்களை கேலிப்பொருளாக்குபவர்கள் செய்வதற்கு பெயரும் வன்முறைதான்   !!

பெண்களை போகப்பொருளாக எண்ணி பேசுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம், இப்போது பெண்களைப்பற்றி புதிதாக கவலைப்படுவது தான் வினோதம் !!
  
மேலும்

என்னவோ எல்லோரும் தமிழ்நாட்டுக்கு வெளில வாழ்வதை போல 'டெல்லியில் போராடுறாங்க, தமிழ்நாட்டுல ஏன் யாரும் போராடல' என்று முகநூல்,ட்விட்டர்ல  பொங்கறத பார்த்தபோது வேடிக்கையான வேதனை !!??  ஏதோ சொல்லனும்னு கண்டபடி உளறி இந்த மாதிரி நிகழ்வுகளை தயவுசெய்து  வெட்டி விவாதப்  பொருளாக்கி வேடிக்கை பார்க்காதீர்கள் !!  நடந்த கொடுமையை விட இது மிக அதிகமாக வலிக்கிறது !!

இது போன்ற செய்தியை சில நாள் பேசுவதும் பின் மொத்தமாக மறந்து விடுவதுமாக இருக்கும் நாம் தான் மன்னிக்கவே முடியாத குற்றவாளிகள் !! .

போராட்டம் ??

பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப்பிடிக்கிறோம் என்ற பெயரில் போடப்படும் கோஷங்கள் அறிக்கைகள் எல்லாம் தங்கள் உடை சுதந்திரத்தில் யாரும் தலையிட கூடாது , என் உடல் என் விருப்பம் என்பது மாதிரியாக த்தான் இருக்கிறது !! எங்கோ ஒரு மூலையில் நிமிடத்திற்கு ஒரு முறை பெண் கொடுமைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறாள், அவற்றை எதையும் கண்டுகொள்ளாத ஆணுலகம் ஒரு புறம் என்றால், பெண்கள் இயக்கமும், அமைப்புகளும் அமைதியாகவே  இருக்கிறது !

இரோம் ஷர்மிளா என்ற பெண்ணின் பல வருட தொடர் உண்ணாநிலை போராட்டம் இன்று வரை பெரிதுபடுத்தப்படாமல், முடிவும் எட்டப்படவில்லை. எந்த பெண்ணுரிமை இயக்கங்களும் இதனை அவ்வளவாக தீவிரப் படுத்தவும் இல்லை ?! அவருக்கே நீதி கிடைக்காத நாட்டில் வேறு எந்த பெண்ணிற்கு கிடைத்துவிட போகிறது...??!!

தூக்கில் போட்டால் எல்லாம் சரியாகிவிடும்?!!

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு அரசும் அதிகாரிகளும் என்ன செய்வார்கள், அவர்கள் மட்டுமா பொறுப்பு ?! தனி மனித ஒழுக்கம் என்பது இல்லாத வரை எந்த அரசும் என்னவும் செய்ய முடியாது ! அந்த 6 பேரை தூக்கில் போடுவதுடன் முடிந்துவிடுமா அத்தனை கேவலங்களும், அசிங்கங்களும் ?! நிச்சயமாக இதுவல்ல தீர்வு...?!!

குற்றச்செயலின் போது, உணர்ச்சி வசத்தின் பிடியில் சிக்கி இருப்பவர்களுக்கு உயிர் பயம் சுத்தமாக இருக்காது, ஈடுபடும் செயலை முடித்தே தீரவேண்டும் என்ற வெறி மட்டுமே  மனதை ஆக்கிரமித்து இருக்கும் என்ற நிலையில் தண்டனையை பற்றிய எண்ணம் எப்படி வரும் ?

நடக்கும் அத்தனை பாலியல் கொடுமைகளும் வெளிவருவதில்லை...  ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டுமே வெளி உலகம் அறிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தினர் மறைத்துவிடும் அளவில் தான் நமது சமூக அமைப்பு இருக்கிறது. கேவலம் அவமானம் போன்றவைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை பெண்மை மௌனம் சாதித்துத்தான் ஆகவேண்டும் போல...!!

குற்றவாளியை தூக்கில் போடணும், அடிச்சே கொல்லனும் என்கிற ஆவேசமான ஆர்பாட்டங்களை மதிக்கிறேன். ஆனால் இதனால் மட்டும்  இது போன்ற பிரச்சனைகள்  முடிவுக்கு எப்படி வரும்...??!  வன்முறைக்கு மற்றொரு வன்முறை என்பது போல் ஆகுமே தவிர குற்றங்கள் குறைந்துவிடுமா?.  பலிக்கு பலி என்று மனதை சமாதானம் பண்ணிக்கொள்ளலாம், அதே நேரம் இப்படிப்பட்ட பலியை எதிர்பார்க்கும் நமக்கு  என்ன பெயர் ???! 

இன்று இவர்கள் 6 பேரை தூக்கில் போட்டுவிடுவோம், அதே நேரம் இன்னும் பலர் தினசரி செய்திகளில் தொடர்ந்து வருகிறார்களே...அவர்களை என்ன செய்வது...அதன்பிறகு நாளை சிலர் வருவார்களே...அவர்களை...???!!!  தண்டனைகள்  தொடர்கதையாகுமே தவிர வேறு என்ன நடந்துவிடும்.  மாற்றம் வந்தாகவேண்டும்...சமூகத்தில்...அரசியலில்...கல்வியில்...மனிதமனங்களில்...!!

சட்டங்கள் என்ன செய்யும் ??

ஒவ்வொரு கொலை, மரணங்கள்  ஏற்பட்ட பின்னரே விழித்துக்கொண்டு சட்டங்களை இயற்றும் நம் அரசு. பள்ளி கூரை தீப்பிடித்து நூறு குழந்தைகள் இறந்தால், பள்ளிகளை கண்காணிக்க உத்தரவு!  பள்ளி வேனின் ஓட்டையில் குழந்தை விழுந்து இறந்ததும் வாகனங்கள் லைசென்ஸ், பராமரிப்பை தீவிரமாக செக் பண்ணுவார்கள்... இப்போது இந்த பரிதாப டெல்லிப் பெண் கிடைத்துவிட்டார் புதிதாக சட்டங்களை இயற்ற 

கடுமையான தண்டனைகள் கொடுக்ககூடிய சட்டங்களை இயற்றுங்கள் என்பது பலரது கூக்குரல் !! சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்த நாவரசு கொலை பலருக்கு நினைவிருக்கலாம். நாவரசின் கை கால்களை தனித்தனியாக வெட்டி சூட்கேசில் மறைத்த குற்றவாளி ஒரு மருத்துவ கல்லூரி மாணவர் ! உலகமே அதிர்ச்சி அடைந்த அந்த கொடூர கொலைக்கு தண்டனை கிடைக்க 15 வருடம் ஆனது. ராகிங் தடுப்பு சட்டம் (Tamil Nadu Prohibition of Ragging Act)ஒன்றும் அதன் பிறகு இயற்றப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை வேறு ராகிங் குற்றங்களே நடக்கவில்லை என்பது உண்மை என்றால் , பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை இயற்ற சொல்லி போராடலாம் தவறே இல்லை !! 

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை வைத்து  பிடிக்காத கணவன்/ கணவன் வீட்டாரை பழிவாங்கும் சில பெண்கள் இருக்கிறார்கள். அதை  போல இதற்காபோடப்படும் சட்டங்களும் தவறாக பிரயோகிக்கப்படலாம் ...  

அரசாங்கம் 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறோம் என்று மத்திய அரசும், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என மாநில அரசும் சிறிதும் மனசாட்சி இன்றி சொல்கிறது. வேறு என்ன செய்ய முடியும் அவர்களால் ?? மக்கள் அரியணையில் அமரவைத்ததற்கு இதையாவது சொல்ல வேண்டாமா?? இதுபோன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி செய்வதுடன் அரசு தனது பொறுப்பை முடித்துக்கொள்கிறது. சுயநல அரசுகள், கையாலாகாத அதிகாரிகள், ஊழலுக்கு துணை நிற்கும் நீதி மற்றும் காவல்துறை, இவை  எல்லாவற்றையும் விட முதுகெலும்பில்லாத நம் மக்கள் !!!

இணைய தளங்களில் ஆவேசபடுகிற அளவில் தான் மக்களின் தைரியம் இருக்கிறது. அப்படியே ஒரு சிலர் உண்மையாக கருத்திட்டு கோபத்தை காட்டினாலும் சைபர் கிரைம் என்ற பயத்தை காட்டிவிட்டது அரசு.

சமூகம் !!

மக்களால்  கட்டி அமைக்கப்பட்ட இந்த சமூகம் இப்போது மது என்னும் கொடிய அரக்கனாலும், மின் தடையாலும் முடக்கிப்போடப்பட்டுள்ளது. தொழில், வேலை, விவசாயம் பாதிப்பது  ஒரு பக்கம் என்றால் இரவில்  தடை செய்யப்படும் மின்சாரத்தால் சரியான தூக்கமின்றி பகலிலும் தொடரும் உடல், மன சோர்வு, மன உளைச்சலில் கொண்டுபோய் விட்டு விடுகிறது. சிந்தனைகள் முழுவதும் எதன் வசமோ சென்றதை போல் மந்திரித்துவிட்ட கோழியாக வலம்  வருகிறார்கள் மக்கள். இங்கே மக்கள் என்று குறிப்பிடுவது  சென்னையை தவிர்த்த பிற பகுதிகளை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். 

மனம் தடுமாற குடியை காரணம் சொல்கிறான் ஒருவன், ஓ அப்படியா என்று கேட்பதுடன் இங்கே நம் அனைவரின் கடமையும் ஏறக்குறைய முடிந்தே விடுகிறது. குடிக்கிற எல்லோருமா தவறு பண்றாங்க என்ற மேதாவிகளின் விமர்சனங்களை சகித்துகொள்ளவும் பழகிகொள்ளவேண்டும் .

திரைத்துறை, தொலைக்காட்சி, மீடியாக்கள் 

திரைப்படம் விளம்பர படம் எடுக்கும் ஆண்களால் தான் கலாச்சாரச்சீரழிவு  என்ற கருத்துகள் விமர்சனங்கள் சுத்த அபத்தம் ! அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு துணை போகும் பெண்களை என்னவென்று சொல்வீர்கள்...??! உடை குறைக்கவேண்டும், ஆபாச காட்சி இருக்கிறது என்றால் முடியாது என மறுக்காமல் அதற்கு  உடன்படும்  பெண்கள் இருக்கும் வரை இந்த சீரழிவு தொடரத்தான் செய்யும் !! தனது விருப்பத்திற்காக , பணம் புகழுக்காக தனது உடலை, பெண்மையை  கடைவிரித்துவிட்ட பெண்களால் நிரம்பி இருக்கிறது திரைத்துறை, விளம்பர மீடியாக்கள் !! 

பெண்களின் அங்கங்களை கேமரா ஜூம் செய்ய அனுமதித்துவிட்டு கேமராவை  குறை சொல்வதை போல் இருக்கிறது படம் எடுப்பவர்களை குறை சொல்வது ... 

இளைஞர் கூட்டத்திற்கு  தன் அங்கங்களை காட்டிவிட்டு, 'நான் காட்டுவேன் அதை நீ பார்த்து சலனபடகூடாது' என கூறுவது என்ன லாஜிக் தெரியல...உணர்ச்சிகள் அற்றவர்களா மனிதர்கள் ?!! இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கும் மொபைல் போன் ஒன்று போதும் எத்தகைய மோசமான நிகழ்வுகளையும் நிமிடத்தில் கண்டுகளிக்க......இதற்கு மத்தியில் வாழும் இன்றைய இளைஞர்கள்  ஒரு விதத்தில் பரிதாபத்துக்குரியவர்கள், இவர்களுக்கு எது சரி எது தவறு என்று வழிகாட்ட பெற்றோர்களோ, கல்வியோ, சமூகமோ இல்லை. 

பெண்களின் உடைதான் காரணம் என்ற கருத்துகளை படிக்கும் போது  இப்படி கேட்கத் தோன்றுகிறது...திரைப்படங்களில் நடிகைகளின் அரைகுறை உடைகள்  பாலியல் உணர்வுகளை தூண்டுகிறது இனிமேல் அது போன்று உடை அணியக்கூடாது, நாகரீகமாக இருக்கவேண்டும் என அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்தால் என்ன...?!! (முதலில் அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள், அப்புறம் பார்க்கலாம்........!!)

குற்றவாளிகள்  எங்கும் இருக்கிறார்கள்?!

பல ஹாஸ்டல் அறை சுவர்கள் கூட சொல்லும்... பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல் மாதிரியிலான(?) கதைகளை !! ஒரு சிலர்  உடன்பட்டும் மற்றவர்கள் சகித்துக்கொண்டும் கடத்தவேண்டும் நாட்களை!

ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஏன் ஒவ்வொரு வீட்டிலும் கூட ஒரு குற்றவாளி இருக்கலாம் மனபிறழ்வு, மனச்சிதைவு, தாழ்வு மனப்பான்மை, போட்டி பொறாமை, பழி வாங்கும் எண்ணம் , வன்மம்  நிரம்பிய மனது சந்தர்ப்பம் கிடைப்பதற்காக காத்திருந்து சந்தர்ப்பம் அமைந்தால்,  அப்போது தெரியும் நேற்றுவரை சாதுவாக தெரிந்த இவனா இப்படி என்று...!!???

டெல்லி பெண் விசயத்தில் பிடிபட்ட ஒருவரின் வயது 17,  மற்றொருவனுக்கு 18 இருக்குமாம் ??!! என்ன கொடுமை இது !! பாலியல் வெறியை தணித்துகொண்டதுடன் நில்லாமல் உறுப்பை சிதைத்து.......????!! இவர்களின் ரத்தத்தில், மூளையில், உடல் செல்களில் எதில் கலந்திருக்கும் இத்தகைய  வன்மம் !?  அந்த பெண்ணை பார்த்த அந்த கணத்தில் ஏற்பட்ட வன்மம் மட்டும் அல்ல இது, மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு பாதிப்பு, கோபம், காயம், வலி, வடு இருந்திருக்கிறது... அது இப்போது வெளிவந்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அமைதி அடைந்திருக்கிறது .

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு மிருகம்... அன்பிற்கு அர்த்தமோ...ஆண் பெண் பேதமோ...மனித நேயமோ...இடம் பொருளோ...எதுவும் தெரியாது அவ்வளவு ஏன் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வந்ததும்  மறந்து போகும்...
மிருகம் வெளிப்படும் அந்த வேளையில்...

பாலியல் இன்பத்திற்காக, பாலியல் வறட்சி காரணமாக இவை நடக்கின்றன என்றால் நாம் இன்னும் மனித மனதை சரியாக புரிந்துகொள்வில்லை என்றே அர்த்தம்!

ஏதோ ஒன்றை அடைய முயன்று அது முடியாமல் இப்படி தீர்த்துகொள்கிறார்கள்  என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும் இதில் உண்மை இருக்கிறது. எதிலும் நிறைவு அடையாமை, மேலும் மேலும் வேண்டும் என்பதை போன்ற மனதிற்கு, ஏதோ ஒரு வடிகால் தேவை படுகிறது, சமூக சீரழிவு அரங்கேறுகிறது! 


மனிதநேயம், சக மனிதரின் மீதான அன்பு குறைந்து காழ்ப்புணர்ச்சி அதிகரித்துவிட்டது. நம் மதங்கள் கடவுளை முன்னிறுத்துகின்றனவே தவிர  ஆன்மீக விழிப்புணர்ச்சியை கொடுக்கவில்லை. மனிதனுக்குள் இருக்கும் ஆத்மாவை தூய்மை படுத்த முயற்சி செய்யாமல் தனி மனித துதிகள் பெருகிவிட்டது. 

ஒரு குற்றம் நடந்ததற்கு பின்னால் மறைமுக கா'ரணங்கள்' இப்படி பல இருக்கின்றன, ஆனால் செய்தவன் மட்டும் குற்றவாளி என கூண்டில் ஏற்றப்படுகிறான்...! வன்மத்தால் கொடுமை செய்தவனுக்கு தண்டனை வாங்கி தருவது பெரிய காரியமல்ல, வன்மம் ஏற்படாமல் தடுக்க என்ன வழியோ அதை செய்வதே மிக நல்லது !!

* * * * * * * * * * * * *
பாலியல் வன்முறை பெண்கள்  மீது மட்டுமல்ல பெண்களாலும் நடந்துகொண்டிருக்கிறது என்பது கொஞ்சமும்  ஜீரணிக்கமுடியாத உண்மை !! நேரம்  இருப்பின்  படித்து பாருங்கள் - பெண்களா இப்படி ??!!
மற்றும் எனது இரண்டு பதிவுகள் உங்கள் பார்வைக்கு
ஒரு அலசல் - குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு 
குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன்...?
* * * * * * * * * * * * * * 
பெண்களே காரணம்? பெற்றோர் காரணமா? இந்த பிரச்னைக்கு தீர்வு ஏதும் இருக்கிறதா ?? 
தொடர்ந்து பேசுவோம்...சிந்திப்போம் !!