அணு உலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணு உலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 11

கொலைக்களமாகும் கூடங்குளம்...??!


தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை தமிழகத்தில் மிக அருமையாக நடந்துகொண்டிருக்கிறது. போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு அலறி துடிக்கும் மக்கள். பெண்கள் சிறுவர் சிறுமியரை போராட்டத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்கள் என்ற அதிகாரவர்க்கத்தின் பேச்சுகள் ஆத்திரத்தை மூட்டுகிறது. ஏன் பெண்கள், சிறு பிள்ளைகள் சிந்திக்க திறனற்றவர்களா? தங்கள் அச்சத்தை தெரியபடுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு ஆட்சி நடக்கிறது. ஓட்டு போட மக்களை நாடி வரும் அரசியல் கட்சிகள்  ஓடி சென்று ஒளிந்து கொண்டன. மக்களுக்கான அரசு என்று மார்தட்டி கொள்ளும் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்திருக்கும் இந்த அடக்குமுறை மக்களின் மீதே என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். 

கூடங்குளம் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடிய நிலையில் யாருமில்லை...அதை தாண்டி வெளியில் இருக்கும் நாம் கூட !!?

உதயகுமார் என்ற தனிமனிதன் தன் சுயநலத்துக்காக மக்களை தூண்டிவிடுவதை போல சித்தரிக்கப்பட்டு கூடங்குளம் வெளியே இருக்கும் மக்கள் மூளை சலவை செய்ய வைக்கப் படுகிறார்கள்.

காலங்காலமாக அங்கே வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த மண்ணின் மீது உரிமை இல்லை. அங்கிருக்கும் மக்கள் நல்வாழ்வு முக்கியம் இல்லை, ஆனால் மின்சாரம் தான் வேண்டும் என நிர்பந்திக்கும் அணுஉலை ஆதரவாளர்கள் !!?

போன வருடம்  செப் 11 இல் தீவிரமடைந்த இந்த போராட்டம் ஒரு வருடமாக கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. (நேரில் பார்த்து தெரிந்துகொண்ட ஒன்று) பெரிய தலைவர்கள் எவரின் ஒத்துழைப்பும் இன்றி மக்களால் மக்களுக்காக நடந்துகொண்டிருக்கும் இதை தீவிரவாதிகளின் போராட்டம் என சித்தரித்தார்கள். தனது சொந்த நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக  போராடினால் அவர்கள் தீவிரவாதிகள் !! அருமை !!

மது  அருந்திவிட்டு போராட்டபந்தலுக்கு வரக் கூடாது , மீறி வருபவர்கள் ஊர் கமிட்டியால் விரட்டபடுவார்கள் என்று ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது, அவ்வாறு  ஒருவரும் வெளியேற்றபடவில்லை என்ற ஒரு உதாரணம் போதும் போராட்டம் எத்தகைய ஒழுங்கின் கீழ் நடந்துவருகிறது என்பதற்கு...!

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும்  அச்சத்தை மத்திய மாநில அரசுகள் போக்கவேண்டும் என்பது தான் அவர்களின் அடிப்படை கோரிக்கை.
"எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும் இதை ஒரு வருடகாலமாக அமைதியான முறையில் கேட்டுகொண்டிருக்கிறோம். மிக தெளிவாக சொல்கிறோம் எங்களின் அச்சத்தை போக்கவேண்டும் !!" 

ஆனால் மக்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படும் போது சாவின் விளிம்பை தொட்டு பார்க்கவும் துணிந்து விடுவார்கள் என்பது கண் முன் காட்சிகளாக விரியும் போது நெஞ்சம் பதறுகிறது.

மகாத்மாவின் உண்ணாவிரதம் இன்றுவரை பெரிது படுத்தபடுகிறது ஆனால் இந்த மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.


கலைந்து போக கொடுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம், அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மொத்தமாக எழுந்து நிற்க கூட இந்த நேரம் போதாது. பின் எப்படி அந்த இடம் விட்டு செல்ல...?! உடனே பிரயோகிக்கப்பட்டது தடியடி, கண்ணீர்புகை...!! எத்தனையோ காரணங்கள், பேச்சுக்கள், சப்பைக்கட்டுகள், சமாளிப்புகள் சக மனிதனை கொலை வெறியோடு அணுகும் நிலை கண்கொண்டு காண இயலவில்லை!!

தமிழ் நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை, அதனால் தான் மின்தடை...கூடங்குளம் வேலை தொடங்கிவிட்டால் தமிழகமே ஒளிர்ந்துவிடும் என மக்கள் மூளை சலவை செய்யபடுகிறார்கள் கை தேர்ந்த அரசியல்வாதிகளால் !!  தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு தரை வார்க்கபடுகிறதே அதை கேள்வி கேட்ட முடியுமா நம்மால்...கேட்டால் இது எப்பவோ போட்ட ஒப்பந்தம் என்பார்கள். ஒப்பந்தத்தை மீறி நமக்கு தரவேண்டிய தண்ணியை ஒரு சொட்டு கூட தரமுடியாது என திமிராக சொல்வார்கள் நாம மட்டும் சரிங்க என்று கேட்டுக்கணும்.

40 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் அதுவும் சலுகை விலையில் !! ஆனால் மக்கள் இருளில் கிடக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்துக்கு கொடுக்க மாட்டார்கள். 

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் அதிக அளவு மின்சாரம் வீணாகிறது. அரசியல் வாதிகள், அதிகாரிகள்  இதில் கவனம் செலுத்தலாம். எந்த விதங்களில் எல்லாம் மின் இழப்பு ஏற்படுகிறது என கவனித்து சரி படுத்தினாலே தமிழகம் ஒளிர்ந்துவிடும்.



நாட்டின் வளர்ச்சி கருதி ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கூறும்  அணுஉலை ஆதரவாளர்களின் வீரம், தன் வீடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒன்றினால் மட்டும் தான். அணு உலை ஆதரவாளர்கள் புத்திசாலிகள் என்றும் அணுஉலையை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்பதை போல எண்ணுவது பேதைமை.

அணுஉலை கழிவுகள் அகற்றுவதை பற்றி இன்றுவரை சரியான விளக்கம் இல்லை. அணு விஞ்ஞானிகள் பாதிப்பில்லை என்று கூறுகிறார்கள் என்பது அங்கே வேலை செய்பவர்கள் தங்கள் வேலை குறைவு உள்ளது என்று எப்படி கூறுவார்கள் இவர்கள் சொன்னார்களாம் அதை நம்பி ஆகணும் என்று மக்களை வலுக்கட்டாயமாக சம்மதிக்க சொல்வது வேடிக்கை.

வன்முறையற்ற வழியில் போராடும் கூடங்குளம் மக்களை போராட்டகாரர்கள் என்று சித்தரித்து வரலாறு காணாத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கான பிரச்சனை என்று மட்டும் எண்ணி வாய்மூடி மௌனியாக இருக்கும் மக்களே! எங்கோ ஈழத்தில் கொத்துகொத்தாய் மடிந்த போது அமைதியாக இருந்ததை போல இப்போதும் இருக்குறீர்களே...கண்ணீர் புகையினால் பாதிக்கபடும் சிறுகுழந்தைகள் பற்றி யாரும் யோசிக்கமாட்டார்களா? அடிதடி, கதறல், வேதனை, வலி இதில் பாதிக்கப்படும்  அவர்களின் மனநிலை, அவர்களின் எதிர்காலம் !!!!???
 
வீடு புகுந்து ஆண்களை கைது செய்து இழுத்து போகிறது காவல்துறை. வாழும்  உரிமை கேட்டு போராடியதற்கு சிறை. மற்றொரு சுதந்திர போர் இப்போது நமக்கு எதிரி வெள்ளைக்காரன் அல்ல, அவனுக்கு பரிந்துகொண்டே சொந்த மக்களை கொல்ல துணிந்துவிட்டது மத்திய மாநில அரசுகள். 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டுமே தவிர பாதகமாக அல்ல...   

எங்கென்றாலும் அழிவதும், அடிவாங்குவதும் தமிழ் இனமாகவே இருக்கிறது !

மனித உரிமை கமிஷன்னு ஒன்னு உண்டு, இப்ப எங்கேன்னு வேற தெரியல...!!?

நமக்கென்ன, நேற்று ஒரு சிவகாசி இன்று ஒரு கூடங்குளம் எப்படியோ நமக்கு பொழுது போனால் சரி !! வெறும் சராசரிகளாக இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் என்றொரு இனம் இருக்குமோ தெரியவில்லை. புரட்சி, போராட்டம் என்று முழக்கமிட்டவர்கள் எல்லாம் செத்து அழிந்துவிட்டார்கள் போலும்...

கூடங்குளம் மக்கள் 
உடலில் உயிர் இருக்கும் வரை கத்தி ஓயட்டும்
அந்த பிணங்களின் மீதிருந்து வரும் மின்சாரம் 
பெற்று பலகாலம் சுகித்து சுகமாய் வாழுவோம் 
வாழ்த்தட்டும் அம்மக்களின் ஆத்மா !!

சொந்த  நாட்டில் அகதிகளாகிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை கூறி என் இயலாமையை இங்கே வரிகளாக்குவதுடன் சகமனுசி என் வேலை முடிந்துவிட்டது என்ற நிறைவுடன்(?) முடிக்கிறேன்.

கூடங்குளத்தில் இருந்து கூடல்பாலா  'ஒவ்வொரு வீடாக புகுந்து ஆண்களை இழுத்து கொண்டு செல்கிறார்கள் நான் பாத்ரூமில் மறைந்து கொண்டு உங்களுக்கு போன் செய்கிறேன்...தெருவில் பெண்கள்  கத்தி கதறி முறையிட்டு(யாரிடம்?!) அழுது கொண்டிருக்கிறார்கள் ' என்றார்.

அவர் பேசியபோது அவரது குரலில் தெரிந்த நடுக்கம், பின்னால் ஒலித்த துப்பாக்கிச்சத்தம் நெஞ்சை பிசைய செய்வதறியாது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னே என் கையாலாகாத்தனம்...!? வெட்கப்படுகிறேன் !!



வெள்ளி, செப்டம்பர் 16

கூடங்குளத்தில் வெடித்த மக்கள் புரட்சி...!



நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நேரத்தில் அணு உலை திட்டத்தை கைவிட கோரி தற்போது கூடங்குளம் அருகில் உள்ள இடிந்தகரையில் ஆறாவது நாளாக 10 ஆயிரம் பேருக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த உண்ணாவிரதம் நேற்று பேசி இன்று தொடங்கப்பட்டது இல்லை, பல காலமாக மக்கள் போராடிவருகிறார்கள்...ஒவ்வொரு போராட்டத்திற்கும் பல சமாதானங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது...!! பொறுத்து பார்த்த மக்கள் இப்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். காந்திய வழி என்றால் எல்லோருக்கும் உடனே புரிந்துவிடும். யாரோ ஒருவர் போராடுகிறார் என்றால் மக்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தருவார்கள், ஆனால் மக்கள் போராடினால் அதற்கு ஆதரவு கிடைப்பது இல்லை என்பது ஒரு சாபக்கேடு ?

முக்கியமாக ஊடகங்கள் பெரிதாக இதை ஏன் கண்டுகொள்ளவில்லை...?! அணு உலைகளை பற்றிய முழு விழிப்புணர்வு நம்மிடையே இல்லையா?  குறிப்பிட்ட சில ஊர்களை பற்றிய பிரச்சனை, நம்ம வீடு பத்திரமாக தானே இருக்கிறது என்கிற மனோபாவமா ?? மத்திய அரசுக்கு, தமிழ்நாடு தானே என்கிற அலட்சியமா ??  

எது எப்படி என்றாலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆறு நாட்களாக உண்ணாவிரதம் (இதில் 127 பேர் ஆறுநாளும் முழுமையான உண்ணாவிரதம் )இருந்து வரும் வேளையில் ஏன் இன்னும் அரசாங்கத்தால் சரியாக கவனிக்க படவில்லை...??! அவர்களில் சிலர் மயங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக வரும் தகவல்கள் யார் காதையும் எட்டவில்லையா??


மக்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் ?

ஒரு அணு உலை அமைக்கும் போது ஒன்றும் சொல்லாத மக்கள், மின்சாரம் தயாரிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட பின்னர் இப்போது எதிர்க்க என்ன காரணம்...??! இத்தனை வருடம் என்ன செய்தார்கள் என்று பலரின் மனதிலும் ஒரு கேள்வி இருக்கிறது...?!!

ஆங்கிலேயர்களை ஆரம்பத்தில் வரவேற்கவே செய்தோம், கெடுதல் என்னவென்று தெரியாமல்...!! அதன் பின் எவ்வளவு போராடி வெளியேற்றினோம் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன் !!

அணு உலையை பொருத்தவரை நம்ம மக்களின் அறியாமை, இயலாமை அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்...?! கூடங்குளத்தில் அணு உலை அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு வேலை கிடைக்கும், குடியிருக்க மாற்று இடங்களும் அமைக்கப்படும் என்று ஆரம்பத்தில் தடுக்காமல் இருந்துள்ளனர்...இப்போது தான் அணு உலை என்றால் என்ன? அதன் கதிரியக்கம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற தெளிவே வந்திருக்கிறது.இதன் ஆபத்து பற்றி தெரிந்ததால் எதிர்க்கின்றனர்.  சமீபத்தில் ஜப்பானில்  என்ன நடந்தது என்பதை பற்றி அறிந்ததால் கூட இருக்கலாம்.

எது எப்படியோ இப்போது இத்தனை மக்கள் தங்கள் உயிருக்காகவும் எதிர்காலத்தின் மேல் உள்ள அச்சத்தினாலும் போராடி வருகின்றனர்...இனியும் அரசாங்கம் இப்படி அமைதியாக இருக்காமல் உடனடியாக மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

* அணு உலையால் ஆபத்து இருக்கிறதா இல்லையா ?

* அணு உலையால் என்ன நன்மை ?

கேள்விகளுக்கான பதில் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க பட்டதா ??

ஒரு வேளை விபத்து நடந்துவிட்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியுமா ?

கதிரியக்கத்தின் பாதிப்பு உடனே தெரியாது...இன்று ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதற்காக இதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா ??



பூகம்பம், சுனாமி போன்றவைகளை அடிக்கடி சந்தித்து திட மனதை கொண்ட ஜப்பானிய மக்கள் இப்போது ஏற்பட்ட அணு உலை பிரச்சனையால் நிலை குலைந்து உள்ளனர். பல சவால்களை சந்தித்து பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு  துரிதமாக செயல்படகூடிய அவங்களே முடியாமல் அணு உலையைச் சுற்றி சுவர்களை கட்டியும், இன்னும் பிற ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலக பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த ஜப்பானால் ஒரு பெரிய சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், ஓரளவிற்கு சமாளிச்சிட்டோம் என்கிற மாதிரியான ஒரு நம்பிக்கையை மட்டும் தான் மக்களுக்கு கொடுக்க முடிந்தது. ஆனால் ஒரு பிரச்சனை என்றால், உடனே அடுத்த நாடுகளின் உதவியை நாடக்கூடிய நிலையில் இருக்கும் நாம் ?!!

கூடங்குளம் அணுஉலை குறித்து எழுதப்பட்ட பதிவுகள்

பதிவர் கூடல் பாலா கூடங்குளம் அணு உலை பற்றிய பல பதிவுகளை தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்...தகவல்கள் தெளிவாக தெரியவேண்டும் என்றால் அவரது பதிவுகளை படித்துபாருங்கள். இங்கே சில சுட்டிகளை இணைத்துள்ளேன். 

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள கூடல் பாலா அவர்களை நாம் பாராட்டுவோம்,வாழ்த்துவோம்.அவரது பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக...

அணு உலையால் ஏற்படக்கூடிய 10 முக்கிய பாதிப்புகள் பற்றி தெரிய வேண்டுமா? இங்கே செல்லவும் !

மார்ச் மாதம் 26 ல் நடைபெற்ற போராட்டம் பற்றி படிக்க இங்கே செல்லவும் !

அணு உலையை பற்றிய மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் படிக்க இங்கே செல்லவும் 

மேலும் ஒரு செய்தி 

வேண்டுகோள் :

கூடங்குளத்திற்காக...கூடுங்கள் நண்பர்களே !

மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்டு கொண்டு இருக்கும் இந்த போராட்டம் மத்திய மாநில அரசின் பார்வைக்கு இன்னும் சரியாக கொண்டு செல்லப்படவில்லை ?!! இணைய நண்பர்கள் நாம் முன்னெடுப்போம்.....ஒன்று கூடுவோம்.....உரக்க குரல் கொடுப்போம்..... எழுச்சி அலை மோதட்டும்.....மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.....உண்ணாவிரதம் இருக்கும் அந்த நெஞ்சங்களுக்கு ஆதரவு திரட்டுவோம்.....இடிந்தகரையில் நடக்கும் இந்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவட்டும்.....! ஒத்துழையுங்கள் பதிவுலக நல்லுள்ளங்களே ! 

அவர்களுக்காக மட்டும் அல்ல இந்த போராட்டம்...ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக !!