கூடங்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடங்குளம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 11

கொலைக்களமாகும் கூடங்குளம்...??!


தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை தமிழகத்தில் மிக அருமையாக நடந்துகொண்டிருக்கிறது. போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு அலறி துடிக்கும் மக்கள். பெண்கள் சிறுவர் சிறுமியரை போராட்டத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்கள் என்ற அதிகாரவர்க்கத்தின் பேச்சுகள் ஆத்திரத்தை மூட்டுகிறது. ஏன் பெண்கள், சிறு பிள்ளைகள் சிந்திக்க திறனற்றவர்களா? தங்கள் அச்சத்தை தெரியபடுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு ஆட்சி நடக்கிறது. ஓட்டு போட மக்களை நாடி வரும் அரசியல் கட்சிகள்  ஓடி சென்று ஒளிந்து கொண்டன. மக்களுக்கான அரசு என்று மார்தட்டி கொள்ளும் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்திருக்கும் இந்த அடக்குமுறை மக்களின் மீதே என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். 

கூடங்குளம் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடிய நிலையில் யாருமில்லை...அதை தாண்டி வெளியில் இருக்கும் நாம் கூட !!?

உதயகுமார் என்ற தனிமனிதன் தன் சுயநலத்துக்காக மக்களை தூண்டிவிடுவதை போல சித்தரிக்கப்பட்டு கூடங்குளம் வெளியே இருக்கும் மக்கள் மூளை சலவை செய்ய வைக்கப் படுகிறார்கள்.

காலங்காலமாக அங்கே வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த மண்ணின் மீது உரிமை இல்லை. அங்கிருக்கும் மக்கள் நல்வாழ்வு முக்கியம் இல்லை, ஆனால் மின்சாரம் தான் வேண்டும் என நிர்பந்திக்கும் அணுஉலை ஆதரவாளர்கள் !!?

போன வருடம்  செப் 11 இல் தீவிரமடைந்த இந்த போராட்டம் ஒரு வருடமாக கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. (நேரில் பார்த்து தெரிந்துகொண்ட ஒன்று) பெரிய தலைவர்கள் எவரின் ஒத்துழைப்பும் இன்றி மக்களால் மக்களுக்காக நடந்துகொண்டிருக்கும் இதை தீவிரவாதிகளின் போராட்டம் என சித்தரித்தார்கள். தனது சொந்த நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக  போராடினால் அவர்கள் தீவிரவாதிகள் !! அருமை !!

மது  அருந்திவிட்டு போராட்டபந்தலுக்கு வரக் கூடாது , மீறி வருபவர்கள் ஊர் கமிட்டியால் விரட்டபடுவார்கள் என்று ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது, அவ்வாறு  ஒருவரும் வெளியேற்றபடவில்லை என்ற ஒரு உதாரணம் போதும் போராட்டம் எத்தகைய ஒழுங்கின் கீழ் நடந்துவருகிறது என்பதற்கு...!

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும்  அச்சத்தை மத்திய மாநில அரசுகள் போக்கவேண்டும் என்பது தான் அவர்களின் அடிப்படை கோரிக்கை.
"எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும் இதை ஒரு வருடகாலமாக அமைதியான முறையில் கேட்டுகொண்டிருக்கிறோம். மிக தெளிவாக சொல்கிறோம் எங்களின் அச்சத்தை போக்கவேண்டும் !!" 

ஆனால் மக்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படும் போது சாவின் விளிம்பை தொட்டு பார்க்கவும் துணிந்து விடுவார்கள் என்பது கண் முன் காட்சிகளாக விரியும் போது நெஞ்சம் பதறுகிறது.

மகாத்மாவின் உண்ணாவிரதம் இன்றுவரை பெரிது படுத்தபடுகிறது ஆனால் இந்த மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.


கலைந்து போக கொடுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம், அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மொத்தமாக எழுந்து நிற்க கூட இந்த நேரம் போதாது. பின் எப்படி அந்த இடம் விட்டு செல்ல...?! உடனே பிரயோகிக்கப்பட்டது தடியடி, கண்ணீர்புகை...!! எத்தனையோ காரணங்கள், பேச்சுக்கள், சப்பைக்கட்டுகள், சமாளிப்புகள் சக மனிதனை கொலை வெறியோடு அணுகும் நிலை கண்கொண்டு காண இயலவில்லை!!

தமிழ் நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை, அதனால் தான் மின்தடை...கூடங்குளம் வேலை தொடங்கிவிட்டால் தமிழகமே ஒளிர்ந்துவிடும் என மக்கள் மூளை சலவை செய்யபடுகிறார்கள் கை தேர்ந்த அரசியல்வாதிகளால் !!  தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு தரை வார்க்கபடுகிறதே அதை கேள்வி கேட்ட முடியுமா நம்மால்...கேட்டால் இது எப்பவோ போட்ட ஒப்பந்தம் என்பார்கள். ஒப்பந்தத்தை மீறி நமக்கு தரவேண்டிய தண்ணியை ஒரு சொட்டு கூட தரமுடியாது என திமிராக சொல்வார்கள் நாம மட்டும் சரிங்க என்று கேட்டுக்கணும்.

40 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் அதுவும் சலுகை விலையில் !! ஆனால் மக்கள் இருளில் கிடக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்துக்கு கொடுக்க மாட்டார்கள். 

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் அதிக அளவு மின்சாரம் வீணாகிறது. அரசியல் வாதிகள், அதிகாரிகள்  இதில் கவனம் செலுத்தலாம். எந்த விதங்களில் எல்லாம் மின் இழப்பு ஏற்படுகிறது என கவனித்து சரி படுத்தினாலே தமிழகம் ஒளிர்ந்துவிடும்.



நாட்டின் வளர்ச்சி கருதி ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கூறும்  அணுஉலை ஆதரவாளர்களின் வீரம், தன் வீடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒன்றினால் மட்டும் தான். அணு உலை ஆதரவாளர்கள் புத்திசாலிகள் என்றும் அணுஉலையை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்பதை போல எண்ணுவது பேதைமை.

அணுஉலை கழிவுகள் அகற்றுவதை பற்றி இன்றுவரை சரியான விளக்கம் இல்லை. அணு விஞ்ஞானிகள் பாதிப்பில்லை என்று கூறுகிறார்கள் என்பது அங்கே வேலை செய்பவர்கள் தங்கள் வேலை குறைவு உள்ளது என்று எப்படி கூறுவார்கள் இவர்கள் சொன்னார்களாம் அதை நம்பி ஆகணும் என்று மக்களை வலுக்கட்டாயமாக சம்மதிக்க சொல்வது வேடிக்கை.

வன்முறையற்ற வழியில் போராடும் கூடங்குளம் மக்களை போராட்டகாரர்கள் என்று சித்தரித்து வரலாறு காணாத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கான பிரச்சனை என்று மட்டும் எண்ணி வாய்மூடி மௌனியாக இருக்கும் மக்களே! எங்கோ ஈழத்தில் கொத்துகொத்தாய் மடிந்த போது அமைதியாக இருந்ததை போல இப்போதும் இருக்குறீர்களே...கண்ணீர் புகையினால் பாதிக்கபடும் சிறுகுழந்தைகள் பற்றி யாரும் யோசிக்கமாட்டார்களா? அடிதடி, கதறல், வேதனை, வலி இதில் பாதிக்கப்படும்  அவர்களின் மனநிலை, அவர்களின் எதிர்காலம் !!!!???
 
வீடு புகுந்து ஆண்களை கைது செய்து இழுத்து போகிறது காவல்துறை. வாழும்  உரிமை கேட்டு போராடியதற்கு சிறை. மற்றொரு சுதந்திர போர் இப்போது நமக்கு எதிரி வெள்ளைக்காரன் அல்ல, அவனுக்கு பரிந்துகொண்டே சொந்த மக்களை கொல்ல துணிந்துவிட்டது மத்திய மாநில அரசுகள். 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டுமே தவிர பாதகமாக அல்ல...   

எங்கென்றாலும் அழிவதும், அடிவாங்குவதும் தமிழ் இனமாகவே இருக்கிறது !

மனித உரிமை கமிஷன்னு ஒன்னு உண்டு, இப்ப எங்கேன்னு வேற தெரியல...!!?

நமக்கென்ன, நேற்று ஒரு சிவகாசி இன்று ஒரு கூடங்குளம் எப்படியோ நமக்கு பொழுது போனால் சரி !! வெறும் சராசரிகளாக இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் என்றொரு இனம் இருக்குமோ தெரியவில்லை. புரட்சி, போராட்டம் என்று முழக்கமிட்டவர்கள் எல்லாம் செத்து அழிந்துவிட்டார்கள் போலும்...

கூடங்குளம் மக்கள் 
உடலில் உயிர் இருக்கும் வரை கத்தி ஓயட்டும்
அந்த பிணங்களின் மீதிருந்து வரும் மின்சாரம் 
பெற்று பலகாலம் சுகித்து சுகமாய் வாழுவோம் 
வாழ்த்தட்டும் அம்மக்களின் ஆத்மா !!

சொந்த  நாட்டில் அகதிகளாகிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை கூறி என் இயலாமையை இங்கே வரிகளாக்குவதுடன் சகமனுசி என் வேலை முடிந்துவிட்டது என்ற நிறைவுடன்(?) முடிக்கிறேன்.

கூடங்குளத்தில் இருந்து கூடல்பாலா  'ஒவ்வொரு வீடாக புகுந்து ஆண்களை இழுத்து கொண்டு செல்கிறார்கள் நான் பாத்ரூமில் மறைந்து கொண்டு உங்களுக்கு போன் செய்கிறேன்...தெருவில் பெண்கள்  கத்தி கதறி முறையிட்டு(யாரிடம்?!) அழுது கொண்டிருக்கிறார்கள் ' என்றார்.

அவர் பேசியபோது அவரது குரலில் தெரிந்த நடுக்கம், பின்னால் ஒலித்த துப்பாக்கிச்சத்தம் நெஞ்சை பிசைய செய்வதறியாது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னே என் கையாலாகாத்தனம்...!? வெட்கப்படுகிறேன் !!



வெள்ளி, மார்ச் 30

மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!


சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அன்றே அணுமின் நிலையம் திறக்கப்பட்டு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 மற்றும் பணியாளர்கள் 950 பேரும் பணிக்கு திரும்பினர். வேலைகளும் நடைபெற தொடங்கி விட்டன...எப்படியும் ஆகஸ்டில் உற்பத்தி துவங்கி விடும்...!?

பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக தொடங்க மற்றொரு பக்கம் கூடங்குளத்தில் அதிரடி வியூகம் அமைக்கப்பட்டு மக்கள் நாலாபக்கமும் நகரமுடியாத படி சிறை வைக்கப்பட்டனர்...5000 போலிஸ், துணை ராணுவம் !!

11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைதை எதிர்த்த கூட்டப்புளி கிராம மக்களை சுமார் 178 பேர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்...இதில் 45 பெண்கள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !!

இவையெல்லாம் கடந்த வாரம் தினசரியில் தொடர்ச்சியாக வந்த செய்திகள்...! 

* * * * *

ஏன் இத்தனை களேபரம்...?

கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பொதுமக்கள் தங்கள் உயிர் பிரச்னையாக எண்ணி போராடி கொண்டிருக்கும் இதனை ஏன் ஒரு மனிதாபிமான அடிப்படையில் பார்க்க கூடாது...?!

இடைதேர்தல் முடியும் வரை போராட்டகாரர்களுக்கு சாதகமாய் இருப்பதை போல் காட்டிக்கொண்டு அதற்கு பின் அதிரடியாய் காரியத்தில் இறங்கி இருக்கிறது. நிச்சயமாக ஒரே நாளில் திட்டமிடப்படவில்லை, முன்னரே திட்டம் தீட்டப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து தேர்தல் முடிந்ததும் ஊரை சூழ்ந்து விட்டார்கள்.

இடைதேர்தலுக்கு தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் முகாமிட்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவர் கூட 8 மாதங்களாக , 250 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு ஆறுதலை சொல்வோம் என்று கூட எண்ணி அங்கே செல்லவில்லை. இவர்கள் தானா மக்களின் காவலர்கள்...!? மக்களுக்காக அரசு என்று சொல்வதெல்லாம் மேடை விட்டு இறங்கியதும் மறந்து போய்விடும் போல...கூடங்குளத்தில் போராடி கொண்டிருப்பவர்களும் இந்தியாவை,தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான், யாரோ எவரோ என்பது போல் மத்திய மாநில அரசுகள் எண்ணி செயல்படுவது வருந்ததக்கது.

எத்தகைய போராட்டம் இது ?

மக்களே போராடும் ஒரு அறவழி போராட்டம் இது . அணு உலை நல்லதா கேடா என விவாதங்கள் பேசினது போதும்...பதில் விளக்கம் எதுவாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?! ஒரு மாநிலத்துக்குள் ஒரு மூலையில் இத்தனை நாளாக நடந்து வருவதை பற்றி துளி கூட அக்கறை இன்றி தங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்கின்றன மத்திய மாநில அரசுகள்...!


அமெரிக்காவின் கைக்கூலி உதயகுமார் என்றார்கள்...ரஷ்யாவின் கை இந்தியாவில் ஓங்கிவிடகூடாது அதை தடுக்கவே கூடங்குளம் மக்களை, அணு உலைக்கு அமெரிக்கா எதிராக திருப்பிவிட்டதாகவும்...வெளிநாட்டு பணம் போராட்டத்திற்கு உதவுகிறது...குறிப்பிட மதத்தினரின் தூண்டுதல் இப்படி அப்படினு பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது...அத்தனையும் தாண்டி இறுதியாக தற்போது நக்சல் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்...!! 

பேங்க் கொள்ளை அடித்தவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிய வீரம் செறிந்த தமிழ்நாட்டு போலீசுக்கு நக்சல் தீவிரவாதிகள் ஊடுருவியதும், இத்தனை நாள் போராட்டத்திற்கு உதவியதும் இதுவரை எப்படி தெரியாமல் போனது ?!!!!

8 மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லாத அளவு மிக அமைதியான முறையில் நடந்து வருகிறது ! இவர்களை பார்த்து காவல்துறை சொல்கிறதாம் 'அணு உலையின் மீது அணு குண்டை வீச முயற்சி செய்தார்கள் அதனால் கைது செய்தோம்' என்று...!?

மக்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து நடந்துகொண்டிருக்கும் இந்த களேபரம் பற்றி தமிழகத்தின் பிற பகுதி மக்கள் சிறிதும் அலட்டி கொள்ளவில்லை...இலங்கையில் கொத்து கொத்தாய் தமிழர்கள் பிணமாய் சரிந்த போது வேடிக்கை பார்த்த அதே கூட்டம் தன் தாய் நாட்டிற்குள் நடப்பதையும் கை கட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும் அவலம் ! மக்களுக்காக அரசு என்பது இல்லாமல் அரசு என்ற உயிரற்ற ஒன்றுக்காக இயங்கும் மக்கள் என்று மாறி விட்டது காலத்தின் கோலம். 

வேறு திசை நோக்கி... 

இப்போது பிரச்சனை வேறு திசையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது...மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி அச்சத்தை போக்குவதற்கு  மாறாக  அவர்களை துன்புறுத்துவது என்பது தொடங்கிவிட்டது.பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படாமல் காக்க வேண்டியதை மறந்து அரசே மக்களுக்கு எதிராக காவல் துறையை முடுக்கி விட்டு இருக்கிறது. பொதுமக்களை காக்கிறோம் என்ற போர்வையில் பிற வெளி ஊர் மக்களிடம் இருந்து இம்மக்கள் தனிமை படுத்த படுகிறார்கள் ! ஒரு போர் சூழல் அளவிற்கு ஊரடங்கு உத்தரவும், காவல் படைகளும் தேவையா என்பதே அங்குள்ள மக்களின் கேள்வி.


இடிந்தகரைக்கு வரும் அத்தனை வழிகளும் அடைக்க பட்டுவிட்டன...பால் விநியோகம், மின் விநியோகம், குடிநீர் விநியோகம் போன்றவரையும் நிறுத்தி அந்த ஊரே ஒரு தனி தீவு போல துப்பாக்கி ஏந்திய காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டது அதீதமாக இருக்கிறது. பிற ஊர்களில் இருந்து மக்கள் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் வழியின்றி தவிக்கும் ஒரு நிலை...ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு பகுதி மட்டும் ஒரு எதிரி நாடு போல் பிரித்து பார்க்கபட்டுவிட்டது.

"அணுமின் நிலையம் பிடிக்காவிட்டால் இழப்பீடு வாங்கிவிட்டு ஊரைவிட்டு வெளியேறி எங்கேயாவது போய் வாழுங்கள் " என்றாராம் அரசியல்வாதி ஒருவர்.

வாழ்வது தமிழ் நாடா அல்லது இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியா என தெரியவில்லை...தமிழர்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே சுதந்திரம் மறுக்க படுவது கொடுமையிலும் கொடுமை...இவ்வாறு மக்களை துன்புறுத்தி தான் மின்சாரம் பெற வேண்டுமா என கூடங்குளத்தை ஆதரிப்பவர்கள் சிறிது யோசியுங்களேன்...

தற்போது அதிகரித்திருக்கும் மின்வெட்டை சாதகமாக மாற்றுகிறது அரசு. (ஏன் இதுவும் ஒரு உளவியல் ரீதியிலான மாற்றத்தில் ஒன்றாக இருக்ககூடாது !?) மக்களும் கூடங்குளம் அணுஉலை வந்தால் மின்சாரம் உடனே கிடைத்துவிடும் என்பதை போல ஒரு மாயைக்குள் வந்துவிட்டார்கள். அவ்வாறு வர வைத்தது  ஆட்சியாளர்களின் புத்திசாலித்தனம். உளவியல் ரீதியாக அணு உலை வேண்டும் என்ற நிலைக்கு கூடங்குளம் தாண்டி வெளியில் உள்ள மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்...உதயகுமாரை சரணடைய சொல்லி வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன...பதுங்கு குழியில் இருப்பதை போல 'வெளியே வா , வந்து சரணடை' என்கிறார்கள். உதயகுமார் சாதாரணமாக மக்கள் முன் நடமாடுகிறார், மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கிறார்...!!? 

(ஒரு பத்திரிகை வேற அப்ப அப்ப சலிக்காமல் செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பி கொண்டிருக்கிறது. அதை படிகிறவங்களை பைத்தியம் என்று நினைச்சு செய்தி வெளியிடுகிறதா அல்லது செய்தியை படித்து பைத்தியமாகனும்,ஒருத்தனும் தெளிவா புத்தியோட இருக்ககூடாது என முடிவு கட்டி இருக்கா தெரியல...)

அப்பாவி கிராம மக்களை தங்கள் சுயநலத்திற்க்காக பயன்படுத்தபடுகிறார்கள் என பேசபடுகிறது. மூன்று மாதத்திற்கு முன் நான் அங்கு சென்ற போது பத்து வயது சிறுவர், சிறுமிகள் கூட அணு உலை பற்றியும் , அணு கழிவுகள் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்து சொன்னார்கள். வயதானவர்கள் படிக்காதவர்கள் என யாவரும் புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள். 

'இத்தனை கோடி பணம் செலவு பண்ணியிருக்கு யார் பணம் எல்லாம் மக்களின் பணம்' என ஆதங்கபடுபவர்களிடம் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடலில் கொட்டிய பணம் எவ்வளவு என நினைவு இருக்கா ? னு கேட்கணும். ஒவ்வொரு நதியையும் சுத்தபடுத்த என்று பல கோடிகள்,எத்தனை எத்தனை மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பாதியில் நிற்கின்றன, அதில் போடப்பட்ட பணம்...இப்படி வீணான பணம் பற்றி ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.அப்புறம் இப்ப லேட்டஸ்டா கனிம சுரங்க ஊழல் 10.7 லட்சம் கோடியாம் !! வெளிநாட்டு வங்கியில் இருக்கும் கருப்பு பணம் யாருடையது...?! அந்த பணம் எல்லாம் முதலில் வெளில வரட்டும் அப்புறம் பேசலாம், கூடங்குளத்தில் வீணான பணத்தை பற்றி...

தொடரும் போராட்டம்...

போராட்ட மக்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காக என்ன இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அத்தனையில் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசுகள். உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் புரட்சியாளர்கள் என்பது மாறி அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் யாவரும் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கபடுவது ஜனநாயக நாடு என்பதில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

அகிம்சை வழியில் போராடினால் அதன் முடிவு இதுதான் என்பதை தெரிந்து கொள்ளும் நம் இளைஞர்கள் புரட்சி என ஆயுதங்களை தூக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதைத்தானா விரும்புகிறோம்...?!

15 பேர் எட்டுநாளாக இருந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வந்து விட்டது , ஆனால் 5 கட்டமாக போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள்...! 

அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!

உண்மையை சொல்லப்போனால் இனிதான் போராட்டம் முழு வேகத்தில் செல்ல போகிறது...

ஐ.நா சபையின் பார்வைக்கு ஒரு தமிழர் கூடங்குளம் பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறார்...இனி சர்வதேச அளவிலும் இதற்க்கு ஆதரவு கிடைக்ககூடும். கனடாவில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மார்ச் 26 அன்று நடந்திருக்கிறது.

மக்களின் அவல நிலை 

கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் ஒன்றாக கூடி இருக்கும் இடத்தில் ஏற்படக்கூடிய சுற்றுப் புற சுகாதாரக் கேடுகள் எத்தனை ? இதனால் நோய் பரவும் ஆபத்தும் இருக்கிறது.

சாலை வழியாக உணவு பொருட்கள் கொண்டுசெல்ல தடை செய்யபடுவதால் பிற கடலோர கிராம மக்கள் படகுகளில் சென்று உணவு தண்ணீர் போன்றவற்றை கொடுக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு ஆறுதல் அடைய முடியவில்லை மாறாக முள்வேலிக்குள் அடைபட்டு கிடந்த நம் ஈழத் தமிழர்களின் அவல நிலைதான் நினைவுக்கு வந்து வேதனை அளிக்கிறது.


லேசா  வியர்த்தாலே என்னடா வாழ்க்கைன்னு சலித்து கொள்பவர்க்கு எங்கே தெரியும், மணலிலும், வெயிலிலும் இவர்கள் படும் அவஸ்தை...!

உண்ணாவிரதம் இருந்தால் முகம் வாடி இருக்கணுமே உடல் சோர்ந்திருக்கனுமே என புகைப்படத்தை உற்று நோக்கி கிண்டலடித்து கும்மாளமிடும் வெட்டி பேச்சு வீணர்கள் அதிகம் உலவும் இடம் என்பதை எண்ணி வருந்துகிறேன் !! ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் கை ஏந்தி எம்மக்கள் நிற்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்போன்றோரின் இயலாமை...கொடுந் துயரம் !! 

உழைத்து கௌரவமாக வாழ்ந்த மக்களை தன் குழந்தையின் பசிக்கு பால் கிடைக்காதா என பரிதவித்து கொண்டிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் எரியும் நெருப்பை எந்த நீர் கொண்டு அணைக்க...!??

உங்களுக்கு தேவை மின்சாரம்...அது யார் பிணத்தின் மீதிருந்து கிடைத்தால் என்ன ?! நாசமாய் போகட்டும்...மனிதம் !?



* * * * *

இப்பதிவு எனது தனிப்பட்ட பார்வை...இம்மக்களின் துயரத்தை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்த பின்  ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையாக்கி இருக்கிறேன்...!! இப்போராட்டம் இனி தொடர்ந்து பல இடங்களிலும் பரவலாம்...மக்களின் துயரத்துக்கு விடிவு காலம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம் இருக்கிறது...!

கூடங்குளம் பற்றிய குறும்படத்தின் லிங்க்...நேரம் இருப்பின் பாருங்கள்...நண்பர்களுக்கும்  பகிருங்கள்...!! நன்றி.
http://www.youtube.com/watch?v=Qe-IN-iA2Yo&feature=share

* * * * *


படங்கள் - நன்றி கூகுள்



வியாழன், அக்டோபர் 20

உண்ணாவிரதத்தின் மற்றொரு முகம்...! கூடல்பாலா !?


எதற்கு எடுத்தாலும் உண்ணாவிரதம் இருக்கிறாங்கபா, நாடு கெட்டுவிட்டது  என்று சலித்து கொள்ளும் சராசரி இந்திய குடிமகன்கள் ஒருமுறை முறையான உண்ணாவிரதம் இருந்து பார்க்கவேண்டும்.அதன்பின் புரியும் இது எத்தகையதொரு வேள்வி, தியாகம் என்று. ஏற்கனவே கூடங்குளத்தில் நடந்து  முடிந்த 11 நாள் உண்ணாவிரதம் எல்லோரும் அறிவோம், அது முடிவுக்கு வந்ததும் அதை அப்படியே மறந்துவிட்டோம். ஆனால் முழு பட்டினி கிடந்த இவர்களின் நிலை...!? உண்ணாவிரதம் இருந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது சற்று சிரமம். இதில் கலந்துகொண்டவர்களில் கூடல்பாலா உடல்நலம் பாதிக்கபட்டுள்ளதாக போனில் பேசும்போது என்னிடம் கூறினார்.

சமூக சேவகி மேதா பட்கருக்கு கை கொடுக்கும் பாலா 

கூடன்குளம் போனபோது முதலில் அவர் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தோம்...பாலாவும் அவரின் அம்மாவும் அன்புடன் வரவேற்றார்கள். சில சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின் அவரது உடல்நிலை பற்றி விசாரித்தேன். விரதம் முடிந்ததும் எப்போதும் போல் சாப்பிட தொடங்கி இருக்கிறார், தனது தொழில் நிமித்தமாக வெளியே சென்ற நேரம், திடிரென்று  இவர்  மயங்கி சரிந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்கள். 

தீவிர சிகிச்சைக்குப்பின், இப்போதும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். குடல் புண்ணாகி அல்சரில் கொண்டுபோய் விட்டு இருக்கிறது. என்னுடன் பேசிகொண்டிருக்கும் போது அடிக்கடி தன் இரு கைகளை நெஞ்சில் வைத்து அமுக்கி பிடித்துவிட்டு கொண்டே இருந்தார். தொடர்ந்து பேசினால் நெஞ்சடைப்பதை போல இருப்பதால் போனில் கூட அவ்வளவாக யாரிடமும் பேச இயலவில்லை என்றார். 

மிக மெதுவாக வித்தியாசமாக நடந்தார், அருகில் இருந்த அம்மாவிடம், 'ஏன் இப்படி நடக்கிறார்' என்று கேட்டேன். 'இப்பதான் இப்படி நடக்கிறான், அவனால் வேகமாக நடக்க இயலவில்லை, அதுதான் நாங்க வெளில எங்கும் அனுப்புறது இல்லை, வீட்டிலையே வச்சுக்கிறோம்' என்றார்.  நாங்கள் வருவது தெரிந்து பாலா சட்டை எடுத்து அணியவும் அவரது நான்கு வயது மகன், 'அப்பா வெளில போறீங்களா, வேண்டாம்பா' என்று கை பிடித்து தடுத்து  இருக்கிறான்...!!? இவருக்கு இப்படி ஆனது தெரிந்ததும் நண்பர்கள் உடனே இரண்டு வாழைதார்களை கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்கள். பழம், மோர், இளநீர், மற்றும் சுத்தமாக காரம் இல்லாத உணவு போன்றவற்றை மட்டும்  எடுத்துகொள்கிறார்.  


அவரிடம் 'உங்க மனைவி எங்கே?' என்றேன் 'காலையில் உண்ணாவிரத பந்தலுக்கு போயிட்டு மாலையில்  தான் வருவா' என்றார் பாலாவின் அம்மா. இவங்க வீட்டில் இருந்து அந்த இடம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. தினமும் சலிக்காம நடந்து சென்று வராங்க. ஊரில் இருப்பவர்களில் உடல்நிலை முடியாதவர்களும், மிக வயதானவர்களும் கலந்துகொள்வதில்லை.

எதற்காக இந்த தவ வாழ்க்கை ? யாருக்காக ? தெரிந்தே துன்பம் அனுபவிப்பதற்கு என்ன காரணம் ? யோசித்து பார்த்தால் இவர்களின் தியாகம் புரியும். இதில் சிறிதும் சுயநலம் இல்லை...

நமக்கு தேர்ந்தவரை பாலா ஒரு பதிவர் அவ்வளவே. ஆனால் அணுமின் நிலையத்தை பற்றிய செய்திகளை விரல் நுனியில் வைத்திருக்கிறார். நான் கேள்விகள் கேட்க கேட்க கணினியில் அது தொடர்பான செய்திகளை படங்களுடன் உடனே எடுத்து காட்டி விளக்கினார். கூடங்குளத்தில் நடக்கும் அனைத்தையும்  உடனுக்கு உடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிற கூடல் பாலாவிற்கு நாம் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். வாழ்த்துவோம்.

                                   இதில் ஆரஞ்ச் கலர் ஷர்ட்டில் இருப்பவர் பாலா 


அவர் நிறைய விஷயம் எங்களிடம் பகிர்ந்து கொண்டாலும் அதில் குறிப்பிட்ட சில மட்டும் இங்கே...

*  இது போன்ற பெரிய அணு உலைகள் மக்கள் தொகை மிக குறைவான பகுதியில்(16 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்)அமைக்கபடவேண்டும். இந்த அணுஉலை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் இங்கே...! 30 கிலோ மீட்டருக்குள் 10  லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள்.

* ஒருவேளை கதிரியக்கம் வெளியானால் கடலில் கலந்து கடல் வளங்கள் அழியும்.

* அணுஉலை கழிவுகள் மண்ணுக்கடியில் புதைக்கபட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.மேலும் இவற்றை 24 ,000 ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்...?!!!  

* அணுஉலைகள் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 9  மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த சுனாமி அலைகள் இரண்டு பனை மரம் உயரத்திற்கு மேல் எழும்பியது நினைவு இருக்கலாம். சமீபத்தில்
ஜப்பான் அணு உலையைத் தாக்கிய சுனாமி 20  மீட்டர் உயரம் .மேலும் அணு
உலையில் விபத்துக்கள் நிகழ சுனாமி மட்டும் காரணமாக இருக்காது ,மனித தவறு மூலமாகக்கூட நிகழலாம் . !! 

சுனாமி இங்கே வர வாய்ப்பு இல்லை என்ற சமாளிப்புகள், சமாதானங்கள் , அறிவியல் அறிவிப்புகள் இயற்கையின் முன் செல்லுபடியாகாது...இயற்கை அன்னை எப்போது, எந்த இடத்தை  தன் காலால் எட்டி உதைப்பாள் என யார் அறிவார்...? 2006 ஆம் ஆண்டுக்கு முன் சுனாமி என்ற வார்த்தை இருக்கிறது என்பதாவது நமக்கு தெரியுமா??    

* கூடங்குளத்தில் மின்னுற்பத்தி தொடங்க இன்னும் வேலைகள் பாக்கி இருக்கின்றன...மிச்சமும் முடிந்து உற்பத்தி பணி தொடங்க இன்னும் 1 1/2 அல்லது  2 ஆண்டுகள் ஆகலாம். (இந்த டிசம்பரில் தொடங்கிவிடும் என்று அரசு சொல்கிறது...?!) இதை இப்ப ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு முறை பதிவுலகில் மின்சாரம் பற்றிய பேச்சு வந்தபோது நட்புகள் என்னிடம் சொன்னார்கள், "உங்களுக்கு என்ன, அங்கே பக்கத்தில் கூடங்குளம் இருப்பதால் மின் வெட்டு பிரச்சனை இல்ல...!!?" சதா இணையத்தில் சுத்தி சுத்தி வந்தாலும் நம்மவர்களின் தெளிவு இந்த அளவில் தான் இருக்கிறது.



காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி 

கூடங்குளத்தில் சுற்றிலும் காற்றாலைகள், அவைகளின் ஒரு மணி நேர மின் உற்பத்தி (ஒரு காற்றாலை, ஒரு மணிநேரம் = 1 1/2 மெகா வாட்) 1,500 மெகா வாட்ஸ் !!

அணுஉலை மின் உற்பத்தியை தொடங்கினால் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்... (தமிழ்நாட்டுக்கு 45% மின்சாரம் கிடைக்கும் )    

இன்னும் அதிக அளவில் காற்றாலைகளை நிறுவினாலே அபிரிதமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அதைவிடுத்து அணுஉலைகள் நமக்கு தேவையா என முடிவு  செய்யவேண்டிய முக்கியமான தருணமிது. 

ஊரை சுற்றி காற்றலைகளின் அணிவகுப்பால் மின் வெட்டு பிரச்சனை இங்கு கிடையாது.

 கல்பாக்கத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு என்று வேறு செய்திகள் வருகின்றன...! கூடங்குளத்தில் நடப்பது அவர்களுக்காக மட்டும் அல்ல, எங்கும் அணு உலைகள் தேவை இல்லை என்பதின் ஒட்டுமொத்த போராட்டம் !!


விடை பெற்றேன் 

நலம் விசாரிப்பு, அணுஉலை செய்திகள், பதிவுலகம், அரசாங்கத்தின் நிலை, மீடியாக்கள், கூடங்குளம் மக்கள், அரசியல் இப்படி கலவையாக பலவற்றை மனதில் ஏந்திக் கொண்டு அங்கிருந்து நானும் என் கணவரும் விடை பெற்றோம். 

உண்மையில் அவ்வூர் மக்களின் வெள்ளை பேச்சில் சிறிது நேரம் மயங்கித்தான் போனேன்.

உண்ணாவிரதத்தால் உடல் சுகவீனமானவர்களுக்கு அங்கே இருக்கும் ஒரு  ஹாஸ்பிடல் இலவசமாக வைத்தியம் செய்து வருகிறது.

இப்படி மனித நேயத்தை நேரில் கண்டும், உணர்ந்தும், கேட்டும் இன்னும் நான் என்னை பக்குவபடுத்தி கொண்டேன். இன,மதம், ஏழை, பணக்காரன் எல்லா வேறுபாட்டையும் மறந்து ஒன்று சேர்ந்திருக்கும் இவர்களின் நடுவில்தான் இறைவன் இருக்கிறான். இறைவனை  நேரில்  தரிசித்த   உணர்வில் இன்று நான் இருக்கிறேன். 

மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! 

இந்த மானுடம் வெல்லட்டும்...!!     

* * * * * * * * * * * * * * * * * *

நேரம் கிடைக்கும் போது இவற்றையும் படியுங்கள்


கூடங்குளம் அணுமின் நிலையம் : மாற்று தீர்வு இல்லையா ?

*  மாற்று வழிகள் பற்றிய ஒரு பார்வை 



* * * * * * * * * * * * * * * * * * 



வெள்ளி, செப்டம்பர் 16

கூடங்குளத்தில் வெடித்த மக்கள் புரட்சி...!



நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டாவது அணு உலை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நேரத்தில் அணு உலை திட்டத்தை கைவிட கோரி தற்போது கூடங்குளம் அருகில் உள்ள இடிந்தகரையில் ஆறாவது நாளாக 10 ஆயிரம் பேருக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த உண்ணாவிரதம் நேற்று பேசி இன்று தொடங்கப்பட்டது இல்லை, பல காலமாக மக்கள் போராடிவருகிறார்கள்...ஒவ்வொரு போராட்டத்திற்கும் பல சமாதானங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது...!! பொறுத்து பார்த்த மக்கள் இப்போது உண்ணாவிரதம் மேற்கொண்டு அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். காந்திய வழி என்றால் எல்லோருக்கும் உடனே புரிந்துவிடும். யாரோ ஒருவர் போராடுகிறார் என்றால் மக்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தருவார்கள், ஆனால் மக்கள் போராடினால் அதற்கு ஆதரவு கிடைப்பது இல்லை என்பது ஒரு சாபக்கேடு ?

முக்கியமாக ஊடகங்கள் பெரிதாக இதை ஏன் கண்டுகொள்ளவில்லை...?! அணு உலைகளை பற்றிய முழு விழிப்புணர்வு நம்மிடையே இல்லையா?  குறிப்பிட்ட சில ஊர்களை பற்றிய பிரச்சனை, நம்ம வீடு பத்திரமாக தானே இருக்கிறது என்கிற மனோபாவமா ?? மத்திய அரசுக்கு, தமிழ்நாடு தானே என்கிற அலட்சியமா ??  

எது எப்படி என்றாலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆறு நாட்களாக உண்ணாவிரதம் (இதில் 127 பேர் ஆறுநாளும் முழுமையான உண்ணாவிரதம் )இருந்து வரும் வேளையில் ஏன் இன்னும் அரசாங்கத்தால் சரியாக கவனிக்க படவில்லை...??! அவர்களில் சிலர் மயங்கிய நிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக வரும் தகவல்கள் யார் காதையும் எட்டவில்லையா??


மக்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள் ?

ஒரு அணு உலை அமைக்கும் போது ஒன்றும் சொல்லாத மக்கள், மின்சாரம் தயாரிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்ட பின்னர் இப்போது எதிர்க்க என்ன காரணம்...??! இத்தனை வருடம் என்ன செய்தார்கள் என்று பலரின் மனதிலும் ஒரு கேள்வி இருக்கிறது...?!!

ஆங்கிலேயர்களை ஆரம்பத்தில் வரவேற்கவே செய்தோம், கெடுதல் என்னவென்று தெரியாமல்...!! அதன் பின் எவ்வளவு போராடி வெளியேற்றினோம் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன் !!

அணு உலையை பொருத்தவரை நம்ம மக்களின் அறியாமை, இயலாமை அன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்...?! கூடங்குளத்தில் அணு உலை அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு வேலை கிடைக்கும், குடியிருக்க மாற்று இடங்களும் அமைக்கப்படும் என்று ஆரம்பத்தில் தடுக்காமல் இருந்துள்ளனர்...இப்போது தான் அணு உலை என்றால் என்ன? அதன் கதிரியக்கம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற தெளிவே வந்திருக்கிறது.இதன் ஆபத்து பற்றி தெரிந்ததால் எதிர்க்கின்றனர்.  சமீபத்தில் ஜப்பானில்  என்ன நடந்தது என்பதை பற்றி அறிந்ததால் கூட இருக்கலாம்.

எது எப்படியோ இப்போது இத்தனை மக்கள் தங்கள் உயிருக்காகவும் எதிர்காலத்தின் மேல் உள்ள அச்சத்தினாலும் போராடி வருகின்றனர்...இனியும் அரசாங்கம் இப்படி அமைதியாக இருக்காமல் உடனடியாக மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

* அணு உலையால் ஆபத்து இருக்கிறதா இல்லையா ?

* அணு உலையால் என்ன நன்மை ?

கேள்விகளுக்கான பதில் மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க பட்டதா ??

ஒரு வேளை விபத்து நடந்துவிட்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிற உத்தரவாதம் கொடுக்க முடியுமா ?

கதிரியக்கத்தின் பாதிப்பு உடனே தெரியாது...இன்று ஒன்றும் பிரச்சனை இல்லை என்பதற்காக இதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா ??



பூகம்பம், சுனாமி போன்றவைகளை அடிக்கடி சந்தித்து திட மனதை கொண்ட ஜப்பானிய மக்கள் இப்போது ஏற்பட்ட அணு உலை பிரச்சனையால் நிலை குலைந்து உள்ளனர். பல சவால்களை சந்தித்து பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு  துரிதமாக செயல்படகூடிய அவங்களே முடியாமல் அணு உலையைச் சுற்றி சுவர்களை கட்டியும், இன்னும் பிற ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலக பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் இருந்த ஜப்பானால் ஒரு பெரிய சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், ஓரளவிற்கு சமாளிச்சிட்டோம் என்கிற மாதிரியான ஒரு நம்பிக்கையை மட்டும் தான் மக்களுக்கு கொடுக்க முடிந்தது. ஆனால் ஒரு பிரச்சனை என்றால், உடனே அடுத்த நாடுகளின் உதவியை நாடக்கூடிய நிலையில் இருக்கும் நாம் ?!!

கூடங்குளம் அணுஉலை குறித்து எழுதப்பட்ட பதிவுகள்

பதிவர் கூடல் பாலா கூடங்குளம் அணு உலை பற்றிய பல பதிவுகளை தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்...தகவல்கள் தெளிவாக தெரியவேண்டும் என்றால் அவரது பதிவுகளை படித்துபாருங்கள். இங்கே சில சுட்டிகளை இணைத்துள்ளேன். 

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ள கூடல் பாலா அவர்களை நாம் பாராட்டுவோம்,வாழ்த்துவோம்.அவரது பதிவுகள் சில உங்கள் பார்வைக்காக...

அணு உலையால் ஏற்படக்கூடிய 10 முக்கிய பாதிப்புகள் பற்றி தெரிய வேண்டுமா? இங்கே செல்லவும் !

மார்ச் மாதம் 26 ல் நடைபெற்ற போராட்டம் பற்றி படிக்க இங்கே செல்லவும் !

அணு உலையை பற்றிய மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் படிக்க இங்கே செல்லவும் 

மேலும் ஒரு செய்தி 

வேண்டுகோள் :

கூடங்குளத்திற்காக...கூடுங்கள் நண்பர்களே !

மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்டு கொண்டு இருக்கும் இந்த போராட்டம் மத்திய மாநில அரசின் பார்வைக்கு இன்னும் சரியாக கொண்டு செல்லப்படவில்லை ?!! இணைய நண்பர்கள் நாம் முன்னெடுப்போம்.....ஒன்று கூடுவோம்.....உரக்க குரல் கொடுப்போம்..... எழுச்சி அலை மோதட்டும்.....மக்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்.....உண்ணாவிரதம் இருக்கும் அந்த நெஞ்சங்களுக்கு ஆதரவு திரட்டுவோம்.....இடிந்தகரையில் நடக்கும் இந்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவட்டும்.....! ஒத்துழையுங்கள் பதிவுலக நல்லுள்ளங்களே ! 

அவர்களுக்காக மட்டும் அல்ல இந்த போராட்டம்...ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக !!