தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை தமிழகத்தில் மிக அருமையாக நடந்துகொண்டிருக்கிறது. போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு அலறி துடிக்கும் மக்கள். பெண்கள் சிறுவர் சிறுமியரை போராட்டத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்கள் என்ற அதிகாரவர்க்கத்தின் பேச்சுகள் ஆத்திரத்தை மூட்டுகிறது. ஏன் பெண்கள், சிறு பிள்ளைகள் சிந்திக்க திறனற்றவர்களா? தங்கள் அச்சத்தை தெரியபடுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.
ஜனநாயகத்தை
குழி தோண்டி புதைத்து விட்டு ஆட்சி நடக்கிறது. ஓட்டு போட மக்களை
நாடி வரும் அரசியல் கட்சிகள் ஓடி சென்று ஒளிந்து கொண்டன. மக்களுக்கான அரசு
என்று மார்தட்டி கொள்ளும் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்திருக்கும் இந்த
அடக்குமுறை மக்களின் மீதே என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்து
கொண்டிருக்கிறோம்.
கூடங்குளம் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடிய நிலையில் யாருமில்லை...அதை தாண்டி வெளியில் இருக்கும் நாம் கூட !!?
உதயகுமார் என்ற தனிமனிதன்
தன் சுயநலத்துக்காக மக்களை தூண்டிவிடுவதை போல சித்தரிக்கப்பட்டு
கூடங்குளம் வெளியே இருக்கும் மக்கள் மூளை சலவை செய்ய வைக்கப் படுகிறார்கள்.
காலங்காலமாக
அங்கே வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த மண்ணின் மீது உரிமை இல்லை.
அங்கிருக்கும் மக்கள் நல்வாழ்வு முக்கியம் இல்லை, ஆனால் மின்சாரம் தான்
வேண்டும் என நிர்பந்திக்கும் அணுஉலை ஆதரவாளர்கள் !!?
போன வருடம் செப் 11 இல் தீவிரமடைந்த இந்த போராட்டம் ஒரு வருடமாக கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. (நேரில் பார்த்து தெரிந்துகொண்ட ஒன்று) பெரிய தலைவர்கள் எவரின் ஒத்துழைப்பும் இன்றி மக்களால் மக்களுக்காக நடந்துகொண்டிருக்கும் இதை தீவிரவாதிகளின் போராட்டம் என சித்தரித்தார்கள். தனது சொந்த நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக போராடினால் அவர்கள் தீவிரவாதிகள் !! அருமை !!
மது அருந்திவிட்டு போராட்டபந்தலுக்கு வரக் கூடாது , மீறி வருபவர்கள் ஊர் கமிட்டியால் விரட்டபடுவார்கள் என்று ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது, அவ்வாறு ஒருவரும் வெளியேற்றபடவில்லை என்ற ஒரு உதாரணம் போதும் போராட்டம் எத்தகைய ஒழுங்கின் கீழ் நடந்துவருகிறது என்பதற்கு...!
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் அச்சத்தை மத்திய மாநில அரசுகள் போக்கவேண்டும் என்பது தான் அவர்களின் அடிப்படை கோரிக்கை.
"எங்களின்
உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும் இதை ஒரு வருடகாலமாக அமைதியான
முறையில் கேட்டுகொண்டிருக்கிறோம். மிக தெளிவாக சொல்கிறோம் எங்களின்
அச்சத்தை போக்கவேண்டும் !!"
ஆனால்
மக்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படும் போது சாவின் விளிம்பை தொட்டு
பார்க்கவும் துணிந்து விடுவார்கள் என்பது கண் முன் காட்சிகளாக விரியும் போது
நெஞ்சம் பதறுகிறது.
மகாத்மாவின் உண்ணாவிரதம் இன்றுவரை பெரிது படுத்தபடுகிறது ஆனால் இந்த மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.
கலைந்து போக கொடுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம், அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மொத்தமாக எழுந்து நிற்க கூட இந்த நேரம் போதாது. பின் எப்படி அந்த இடம் விட்டு செல்ல...?! உடனே பிரயோகிக்கப்பட்டது தடியடி, கண்ணீர்புகை...!! எத்தனையோ காரணங்கள், பேச்சுக்கள், சப்பைக்கட்டுகள், சமாளிப்புகள் சக மனிதனை கொலை வெறியோடு அணுகும் நிலை கண்கொண்டு காண இயலவில்லை!!
தமிழ் நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை, அதனால் தான் மின்தடை...கூடங்குளம் வேலை தொடங்கிவிட்டால் தமிழகமே ஒளிர்ந்துவிடும் என மக்கள் மூளை சலவை செய்யபடுகிறார்கள் கை தேர்ந்த அரசியல்வாதிகளால் !! தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு தரை வார்க்கபடுகிறதே அதை கேள்வி கேட்ட முடியுமா நம்மால்...கேட்டால் இது எப்பவோ போட்ட ஒப்பந்தம் என்பார்கள். ஒப்பந்தத்தை மீறி நமக்கு தரவேண்டிய தண்ணியை ஒரு சொட்டு கூட தரமுடியாது என திமிராக சொல்வார்கள் நாம மட்டும் சரிங்க என்று கேட்டுக்கணும்.
40 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் அதுவும் சலுகை விலையில்
!! ஆனால் மக்கள் இருளில் கிடக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு கொடுத்தாலும்
கொடுப்பார்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்துக்கு கொடுக்க
மாட்டார்கள்.
மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் அதிக அளவு மின்சாரம்
வீணாகிறது. அரசியல் வாதிகள், அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தலாம். எந்த
விதங்களில் எல்லாம் மின் இழப்பு ஏற்படுகிறது என கவனித்து சரி படுத்தினாலே
தமிழகம் ஒளிர்ந்துவிடும்.
அணுஉலை
கழிவுகள் அகற்றுவதை பற்றி இன்றுவரை சரியான விளக்கம் இல்லை. அணு
விஞ்ஞானிகள் பாதிப்பில்லை என்று கூறுகிறார்கள் என்பது அங்கே வேலை
செய்பவர்கள் தங்கள் வேலை குறைவு உள்ளது என்று எப்படி கூறுவார்கள் இவர்கள்
சொன்னார்களாம் அதை நம்பி ஆகணும் என்று மக்களை வலுக்கட்டாயமாக சம்மதிக்க
சொல்வது வேடிக்கை.
வன்முறையற்ற
வழியில் போராடும் கூடங்குளம் மக்களை போராட்டகாரர்கள் என்று சித்தரித்து
வரலாறு காணாத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
மனித உரிமை கமிஷன்னு ஒன்னு உண்டு, இப்ப எங்கேன்னு வேற தெரியல...!!?
நமக்கென்ன, நேற்று ஒரு சிவகாசி இன்று ஒரு கூடங்குளம் எப்படியோ நமக்கு பொழுது போனால் சரி !! வெறும் சராசரிகளாக இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் என்றொரு இனம் இருக்குமோ தெரியவில்லை. புரட்சி, போராட்டம் என்று முழக்கமிட்டவர்கள் எல்லாம் செத்து அழிந்துவிட்டார்கள் போலும்...
கூடங்குளம் மக்கள்
உடலில் உயிர் இருக்கும் வரை கத்தி ஓயட்டும்
அந்த பிணங்களின் மீதிருந்து வரும் மின்சாரம்
பெற்று பலகாலம் சுகித்து சுகமாய் வாழுவோம்
வாழ்த்தட்டும் அம்மக்களின் ஆத்மா !!
வாழ்த்தட்டும் அம்மக்களின் ஆத்மா !!
சொந்த நாட்டில் அகதிகளாகிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை கூறி என் இயலாமையை இங்கே வரிகளாக்குவதுடன் சகமனுசி என் வேலை முடிந்துவிட்டது என்ற நிறைவுடன்(?) முடிக்கிறேன்.
கூடங்குளத்தில் இருந்து கூடல்பாலா 'ஒவ்வொரு வீடாக புகுந்து ஆண்களை இழுத்து கொண்டு செல்கிறார்கள் நான் பாத்ரூமில் மறைந்து கொண்டு உங்களுக்கு போன் செய்கிறேன்...தெருவில் பெண்கள் கத்தி கதறி முறையிட்டு(யாரிடம்?!) அழுது கொண்டிருக்கிறார்கள் ' என்றார்.
அவர் பேசியபோது அவரது குரலில் தெரிந்த நடுக்கம், பின்னால் ஒலித்த துப்பாக்கிச்சத்தம் நெஞ்சை பிசைய செய்வதறியாது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
என்னே என் கையாலாகாத்தனம்...!? வெட்கப்படுகிறேன் !!





.jpg)





