ஆதங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 30

மின்சாரம் வேண்டுமாம் மின்சாரம்...?! தொடரும் கூடங்குளத்தின் அவலம் !!


சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அன்றே அணுமின் நிலையம் திறக்கப்பட்டு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 மற்றும் பணியாளர்கள் 950 பேரும் பணிக்கு திரும்பினர். வேலைகளும் நடைபெற தொடங்கி விட்டன...எப்படியும் ஆகஸ்டில் உற்பத்தி துவங்கி விடும்...!?

பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக தொடங்க மற்றொரு பக்கம் கூடங்குளத்தில் அதிரடி வியூகம் அமைக்கப்பட்டு மக்கள் நாலாபக்கமும் நகரமுடியாத படி சிறை வைக்கப்பட்டனர்...5000 போலிஸ், துணை ராணுவம் !!

11 பேர்களை கைது செய்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைதை எதிர்த்த கூட்டப்புளி கிராம மக்களை சுமார் 178 பேர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்...இதில் 45 பெண்கள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் !!

இவையெல்லாம் கடந்த வாரம் தினசரியில் தொடர்ச்சியாக வந்த செய்திகள்...! 

* * * * *

ஏன் இத்தனை களேபரம்...?

கூடங்குளம் அணு உலை திறந்தால் மின்சாரம் கிடைக்கும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பொதுமக்கள் தங்கள் உயிர் பிரச்னையாக எண்ணி போராடி கொண்டிருக்கும் இதனை ஏன் ஒரு மனிதாபிமான அடிப்படையில் பார்க்க கூடாது...?!

இடைதேர்தல் முடியும் வரை போராட்டகாரர்களுக்கு சாதகமாய் இருப்பதை போல் காட்டிக்கொண்டு அதற்கு பின் அதிரடியாய் காரியத்தில் இறங்கி இருக்கிறது. நிச்சயமாக ஒரே நாளில் திட்டமிடப்படவில்லை, முன்னரே திட்டம் தீட்டப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து தேர்தல் முடிந்ததும் ஊரை சூழ்ந்து விட்டார்கள்.

இடைதேர்தலுக்கு தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் முகாமிட்டிருந்தார்கள். அங்கே வந்த ஒருவர் கூட 8 மாதங்களாக , 250 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு ஆறுதலை சொல்வோம் என்று கூட எண்ணி அங்கே செல்லவில்லை. இவர்கள் தானா மக்களின் காவலர்கள்...!? மக்களுக்காக அரசு என்று சொல்வதெல்லாம் மேடை விட்டு இறங்கியதும் மறந்து போய்விடும் போல...கூடங்குளத்தில் போராடி கொண்டிருப்பவர்களும் இந்தியாவை,தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான், யாரோ எவரோ என்பது போல் மத்திய மாநில அரசுகள் எண்ணி செயல்படுவது வருந்ததக்கது.

எத்தகைய போராட்டம் இது ?

மக்களே போராடும் ஒரு அறவழி போராட்டம் இது . அணு உலை நல்லதா கேடா என விவாதங்கள் பேசினது போதும்...பதில் விளக்கம் எதுவாக வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், ஆனால் அணு உலையின் மீதான மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை. இதை செய்ய தவறிய அரசு, இப்போது அதிரடியாக காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு இருப்பது மட்டும் என்ன நியாயம்...?! ஒரு மாநிலத்துக்குள் ஒரு மூலையில் இத்தனை நாளாக நடந்து வருவதை பற்றி துளி கூட அக்கறை இன்றி தங்களை முன்னெடுப்பதில் முன்னணியில் இருக்கின்றன மத்திய மாநில அரசுகள்...!


அமெரிக்காவின் கைக்கூலி உதயகுமார் என்றார்கள்...ரஷ்யாவின் கை இந்தியாவில் ஓங்கிவிடகூடாது அதை தடுக்கவே கூடங்குளம் மக்களை, அணு உலைக்கு அமெரிக்கா எதிராக திருப்பிவிட்டதாகவும்...வெளிநாட்டு பணம் போராட்டத்திற்கு உதவுகிறது...குறிப்பிட மதத்தினரின் தூண்டுதல் இப்படி அப்படினு பல குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது...அத்தனையும் தாண்டி இறுதியாக தற்போது நக்சல் தீவிரவாதிகளின் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்...!! 

பேங்க் கொள்ளை அடித்தவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிய வீரம் செறிந்த தமிழ்நாட்டு போலீசுக்கு நக்சல் தீவிரவாதிகள் ஊடுருவியதும், இத்தனை நாள் போராட்டத்திற்கு உதவியதும் இதுவரை எப்படி தெரியாமல் போனது ?!!!!

8 மாதத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லாத அளவு மிக அமைதியான முறையில் நடந்து வருகிறது ! இவர்களை பார்த்து காவல்துறை சொல்கிறதாம் 'அணு உலையின் மீது அணு குண்டை வீச முயற்சி செய்தார்கள் அதனால் கைது செய்தோம்' என்று...!?

மக்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து நடந்துகொண்டிருக்கும் இந்த களேபரம் பற்றி தமிழகத்தின் பிற பகுதி மக்கள் சிறிதும் அலட்டி கொள்ளவில்லை...இலங்கையில் கொத்து கொத்தாய் தமிழர்கள் பிணமாய் சரிந்த போது வேடிக்கை பார்த்த அதே கூட்டம் தன் தாய் நாட்டிற்குள் நடப்பதையும் கை கட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும் அவலம் ! மக்களுக்காக அரசு என்பது இல்லாமல் அரசு என்ற உயிரற்ற ஒன்றுக்காக இயங்கும் மக்கள் என்று மாறி விட்டது காலத்தின் கோலம். 

வேறு திசை நோக்கி... 

இப்போது பிரச்சனை வேறு திசையை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது...மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தி அச்சத்தை போக்குவதற்கு  மாறாக  அவர்களை துன்புறுத்துவது என்பது தொடங்கிவிட்டது.பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படாமல் காக்க வேண்டியதை மறந்து அரசே மக்களுக்கு எதிராக காவல் துறையை முடுக்கி விட்டு இருக்கிறது. பொதுமக்களை காக்கிறோம் என்ற போர்வையில் பிற வெளி ஊர் மக்களிடம் இருந்து இம்மக்கள் தனிமை படுத்த படுகிறார்கள் ! ஒரு போர் சூழல் அளவிற்கு ஊரடங்கு உத்தரவும், காவல் படைகளும் தேவையா என்பதே அங்குள்ள மக்களின் கேள்வி.


இடிந்தகரைக்கு வரும் அத்தனை வழிகளும் அடைக்க பட்டுவிட்டன...பால் விநியோகம், மின் விநியோகம், குடிநீர் விநியோகம் போன்றவரையும் நிறுத்தி அந்த ஊரே ஒரு தனி தீவு போல துப்பாக்கி ஏந்திய காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டது அதீதமாக இருக்கிறது. பிற ஊர்களில் இருந்து மக்கள் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் வழியின்றி தவிக்கும் ஒரு நிலை...ஒரு மாநிலத்தில் இருந்து ஒரு பகுதி மட்டும் ஒரு எதிரி நாடு போல் பிரித்து பார்க்கபட்டுவிட்டது.

"அணுமின் நிலையம் பிடிக்காவிட்டால் இழப்பீடு வாங்கிவிட்டு ஊரைவிட்டு வெளியேறி எங்கேயாவது போய் வாழுங்கள் " என்றாராம் அரசியல்வாதி ஒருவர்.

வாழ்வது தமிழ் நாடா அல்லது இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியா என தெரியவில்லை...தமிழர்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே சுதந்திரம் மறுக்க படுவது கொடுமையிலும் கொடுமை...இவ்வாறு மக்களை துன்புறுத்தி தான் மின்சாரம் பெற வேண்டுமா என கூடங்குளத்தை ஆதரிப்பவர்கள் சிறிது யோசியுங்களேன்...

தற்போது அதிகரித்திருக்கும் மின்வெட்டை சாதகமாக மாற்றுகிறது அரசு. (ஏன் இதுவும் ஒரு உளவியல் ரீதியிலான மாற்றத்தில் ஒன்றாக இருக்ககூடாது !?) மக்களும் கூடங்குளம் அணுஉலை வந்தால் மின்சாரம் உடனே கிடைத்துவிடும் என்பதை போல ஒரு மாயைக்குள் வந்துவிட்டார்கள். அவ்வாறு வர வைத்தது  ஆட்சியாளர்களின் புத்திசாலித்தனம். உளவியல் ரீதியாக அணு உலை வேண்டும் என்ற நிலைக்கு கூடங்குளம் தாண்டி வெளியில் உள்ள மக்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்...உதயகுமாரை சரணடைய சொல்லி வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன...பதுங்கு குழியில் இருப்பதை போல 'வெளியே வா , வந்து சரணடை' என்கிறார்கள். உதயகுமார் சாதாரணமாக மக்கள் முன் நடமாடுகிறார், மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கிறார்...!!? 

(ஒரு பத்திரிகை வேற அப்ப அப்ப சலிக்காமல் செய்தி வெளியிட்டு அவதூறு பரப்பி கொண்டிருக்கிறது. அதை படிகிறவங்களை பைத்தியம் என்று நினைச்சு செய்தி வெளியிடுகிறதா அல்லது செய்தியை படித்து பைத்தியமாகனும்,ஒருத்தனும் தெளிவா புத்தியோட இருக்ககூடாது என முடிவு கட்டி இருக்கா தெரியல...)

அப்பாவி கிராம மக்களை தங்கள் சுயநலத்திற்க்காக பயன்படுத்தபடுகிறார்கள் என பேசபடுகிறது. மூன்று மாதத்திற்கு முன் நான் அங்கு சென்ற போது பத்து வயது சிறுவர், சிறுமிகள் கூட அணு உலை பற்றியும் , அணு கழிவுகள் பற்றியும் தெள்ள தெளிவாக எடுத்து சொன்னார்கள். வயதானவர்கள் படிக்காதவர்கள் என யாவரும் புள்ளிவிவரங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள். 

'இத்தனை கோடி பணம் செலவு பண்ணியிருக்கு யார் பணம் எல்லாம் மக்களின் பணம்' என ஆதங்கபடுபவர்களிடம் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடலில் கொட்டிய பணம் எவ்வளவு என நினைவு இருக்கா ? னு கேட்கணும். ஒவ்வொரு நதியையும் சுத்தபடுத்த என்று பல கோடிகள்,எத்தனை எத்தனை மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் பாதியில் நிற்கின்றன, அதில் போடப்பட்ட பணம்...இப்படி வீணான பணம் பற்றி ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.அப்புறம் இப்ப லேட்டஸ்டா கனிம சுரங்க ஊழல் 10.7 லட்சம் கோடியாம் !! வெளிநாட்டு வங்கியில் இருக்கும் கருப்பு பணம் யாருடையது...?! அந்த பணம் எல்லாம் முதலில் வெளில வரட்டும் அப்புறம் பேசலாம், கூடங்குளத்தில் வீணான பணத்தை பற்றி...

தொடரும் போராட்டம்...

போராட்ட மக்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்பதற்காக என்ன இடைஞ்சல்கள் கொடுக்க முடியுமோ அத்தனையில் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசுகள். உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் புரட்சியாளர்கள் என்பது மாறி அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் யாவரும் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கபடுவது ஜனநாயக நாடு என்பதில் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

அகிம்சை வழியில் போராடினால் அதன் முடிவு இதுதான் என்பதை தெரிந்து கொள்ளும் நம் இளைஞர்கள் புரட்சி என ஆயுதங்களை தூக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதைத்தானா விரும்புகிறோம்...?!

15 பேர் எட்டுநாளாக இருந்த உண்ணாவிரதம் முடிவிற்கு வந்து விட்டது , ஆனால் 5 கட்டமாக போராட்டம் தொடங்கி இருக்கிறார்கள்...! 

அணுமின் நிலையங்களை அமைக்கும் போது அதை சுற்றி 30 கி.மீ தூரத்தில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. இந்த பயிற்சியினை கொடுக்க முதலில் ஏற்பாடு செய்யட்டும்...அதன்பின் தெரிந்துவிடும் இது எத்தகைய தன்மை வாய்ந்தது என்று...! இதுவரை இடிந்தகரை மக்கள் மட்டும் போராட்டத்தில் இருக்கிறார்கள் இனி சுற்றி இருக்கும் பிற கிராமங்களும் போராடபோகின்றன...இது தான் நடக்க போகிறது...!

உண்மையை சொல்லப்போனால் இனிதான் போராட்டம் முழு வேகத்தில் செல்ல போகிறது...

ஐ.நா சபையின் பார்வைக்கு ஒரு தமிழர் கூடங்குளம் பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறார்...இனி சர்வதேச அளவிலும் இதற்க்கு ஆதரவு கிடைக்ககூடும். கனடாவில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மார்ச் 26 அன்று நடந்திருக்கிறது.

மக்களின் அவல நிலை 

கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் ஒன்றாக கூடி இருக்கும் இடத்தில் ஏற்படக்கூடிய சுற்றுப் புற சுகாதாரக் கேடுகள் எத்தனை ? இதனால் நோய் பரவும் ஆபத்தும் இருக்கிறது.

சாலை வழியாக உணவு பொருட்கள் கொண்டுசெல்ல தடை செய்யபடுவதால் பிற கடலோர கிராம மக்கள் படகுகளில் சென்று உணவு தண்ணீர் போன்றவற்றை கொடுக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டு ஆறுதல் அடைய முடியவில்லை மாறாக முள்வேலிக்குள் அடைபட்டு கிடந்த நம் ஈழத் தமிழர்களின் அவல நிலைதான் நினைவுக்கு வந்து வேதனை அளிக்கிறது.


லேசா  வியர்த்தாலே என்னடா வாழ்க்கைன்னு சலித்து கொள்பவர்க்கு எங்கே தெரியும், மணலிலும், வெயிலிலும் இவர்கள் படும் அவஸ்தை...!

உண்ணாவிரதம் இருந்தால் முகம் வாடி இருக்கணுமே உடல் சோர்ந்திருக்கனுமே என புகைப்படத்தை உற்று நோக்கி கிண்டலடித்து கும்மாளமிடும் வெட்டி பேச்சு வீணர்கள் அதிகம் உலவும் இடம் என்பதை எண்ணி வருந்துகிறேன் !! ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் உணவுக்காகவும் , தண்ணீருக்காகவும் கை ஏந்தி எம்மக்கள் நிற்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்போன்றோரின் இயலாமை...கொடுந் துயரம் !! 

உழைத்து கௌரவமாக வாழ்ந்த மக்களை தன் குழந்தையின் பசிக்கு பால் கிடைக்காதா என பரிதவித்து கொண்டிருக்கும் தாய்மார்களின் வயிற்றில் எரியும் நெருப்பை எந்த நீர் கொண்டு அணைக்க...!??

உங்களுக்கு தேவை மின்சாரம்...அது யார் பிணத்தின் மீதிருந்து கிடைத்தால் என்ன ?! நாசமாய் போகட்டும்...மனிதம் !?



* * * * *

இப்பதிவு எனது தனிப்பட்ட பார்வை...இம்மக்களின் துயரத்தை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்த பின்  ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தையாக்கி இருக்கிறேன்...!! இப்போராட்டம் இனி தொடர்ந்து பல இடங்களிலும் பரவலாம்...மக்களின் துயரத்துக்கு விடிவு காலம் நிச்சயம் உண்டு என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம் இருக்கிறது...!

கூடங்குளம் பற்றிய குறும்படத்தின் லிங்க்...நேரம் இருப்பின் பாருங்கள்...நண்பர்களுக்கும்  பகிருங்கள்...!! நன்றி.
http://www.youtube.com/watch?v=Qe-IN-iA2Yo&feature=share

* * * * *


படங்கள் - நன்றி கூகுள்



வெள்ளி, ஜனவரி 14

எனதருமை பச்சைத் தமிழர்களே.....!



வந்து விட்டது வழக்கம் போல்
வருடத்தின் அடுத்த பண்டிகை !

ஒட்டடை அடித்து பழையனவற்றை  கழித்து
வெளியே கொட்டி வீதியில் அசுத்தபடுத்துங்கள்,
நம் வீடு சுத்தமாகட்டும் !!?

கண்டதையும் கொளுத்தி போட்டு 
காற்றை மாசு படுத்துங்கள்
தென்றல் காற்றை நூலகத்தில் தேடுவோம் !?

விவசாயத்தில் விளைந்த புதுநெல்லை வைத்து கொண்டாட 
அருகதை அற்றவன் தமிழன் என்று அரசு தருகிறதாம் 
இலவச  பொங்கல் பொருட்கள் !?

யானை கட்டி போரடித்த மரபு என்று பழங்கதை பேசிக்கொண்டு 
வீணாய் போகாமல் ரேசன் கடை முன் கையேந்துங்கள்  
சோழன் அன்றே செத்துவிட்டான் !?

உழைக்க வழி செய்து கொடுப்பதை விடுத்து  
உழைத்தவர்கள் உட்கார்ந்து பொழுது போக்க 
தொலைக்காட்சி பெட்டி, உணவிற்கு ஒரு ரூபாய் அரிசி !?

விவசாய நிலங்கள் பிற மாநிலத்தவரின் ரியல் எஸ்டேட்களாக 
மாறி கொண்டிருப்பதை கண்டு கொள்ளாத 
சுயநல அரசு , கையாலாகாத மக்கள் !?

தீமையை கொளுத்த முயன்று தன்னையே 
கொளுத்தி கரிகட்டையான தமிழன் முத்துகுமார் 
மறைந்து மறக்கடிக்கபட்டு விட்டான்  !?

பச்சை தமிழனாய் பிறந்தது பாவம் என்று 
தாமதமாய் உணர்ந்து சிகப்பு தமிழனாய் 
கடல் தாண்டி அழிந்து கொண்டிருக்கிறான் !?

மீன் பிடிக்க போன தமிழனின் உயிர் பிடித்து செல்லும் 
வாடிக்கை இன்று வேடிக்கையாகி 
எமக்கு பழகிவிட்டது தினசரி செய்திகளும் !?
  
அக்கறையில்லை எதைபற்றியும், எம்மக்களுக்கு 
பண்டிகை வாழ்த்து செய்தி சொன்னால் மறந்துவிடுவார்கள் 
அறிக்கையிடும் நரித்தன அரசியல்வாதிகள் !?

மறதி நோய் பிடித்த மக்களும் மூணு நாள் விடுமுறை 
கிடைத்த மகிழ்ச்சியில் தொலைகாட்சி முன் அமர்ந்து 
பண்டிகை கொண்டாடி திருப்தி அடைந்து கொள்வார்கள் !?

மாட்டு பொங்கல் !


பக்கத்து மாநில மக்களின் உடல் சதையை வளர்க்க அடிமாட்டை அனுப்புங்கள், அது வியாபாரம். பத்து மாடுகள் நிற்கும் இடத்தில் அம்பது மாடுகளை அடைத்து தலை வெட்டப்படும் முன்னரே உயிர் வதைக்கும் சித்திரவதையை செய்து கொண்டு அல்லது பார்த்துக்கொண்டு மற்றொரு பக்கம் அவற்றை அலங்கரித்து மாட்டுபொங்கலாம்...?!!மாடுகள் கூட மன்னிக்காது மனிதனை !!?

காணும் பொங்கல் !

இன்றாவது கைவிடப்பட்ட உறவுகளை, முதியோர்களை சென்று காணுங்கள், அவர்களுடன் கூடி களியுங்கள்.....சுயநலத்தால் பலவீனப்பட்டுக் கிடைக்கும் இதயத்திற்கு அன்பு என்னும் புது இரத்தம் பாயட்டும்...தழைக்கட்டும் நல் உறவுகள்.....புத்தன், இயேசு,கீதை, குரான் சொன்ன அன்பு வழியில்.....!!

வருடந்தோறும் தை மட்டும் பிறக்கிறது !
தமிழனுக்கு வழிமட்டும் பிறக்கிறதா தெரியவில்லை !!

வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!

பொங்கட்டும் பொங்கல்...தங்கட்டும் மகிழ்ச்சி இல்லந்தோறும் !








படங்கள் - நன்றி கூகுள்