திருநெல்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநெல்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 23

திருநெல்வேலியில் பேஸ்புக், வலைப்பதிவு நண்பர்கள் சங்கமத் திருவிழா

அன்பு நண்பர்களே! 

திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நடந்த பிறகு தற்போது பெரியளவில் நடக்க இருக்கும் ஒரு சந்திப்பு ‘தெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம்’
பேஸ்புக் நண்பர்கள் அதிக அளவில் கலந்துக் கொள்வதால் பெயரை முகநூல் நண்பர்கள் என்று வைத்துவிட்டோம்.  தவிர இப்போது நம்ம பதிவர்கள் எல்லோரும் பதிவுலகத்தை விட அதிக நேரம் பேஸ்புக்கில் தானே இருக்கிறோம். அந்த வகையில் பார்த்தாலும் இந்த பெயர் சரிதானே !! :-)




நாள் - 25/1 /2015 ஞாயிற்றுக் கிழமை அன்று (நாளை மறுநாள்)

இடம் -  பதிவர் சந்திப்பு நடந்த அதே ஜானகிராம்  ஹோட்டலில் பெரிய ஹாலில் நடக்க இருக்கிறது. ஹோட்டலுக்கு வெகு அருகில்தான் ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் இருப்பதால் வெளியூர் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும். 

இந்த சங்கமத்தை நடத்துவதில் பெரும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்  எங்க மண்ணின் மைந்தன் எழுத்தாளர் திரு.நாறும்பூ நாதன் அவர்கள். என்னிடம் பேசும் ஒவ்வொரு முறையும் விழா குறித்த செய்திகள், தகவல்களை விரிவாக பகிர்ந்துக் கொள்வார். இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்திய அனுபவமிக்கவர்.
(கத்துக்குட்டியா இருந்தாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறதே நம்ம பொழப்பாப் போச்சு :-) ஆனா அவரு முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியை நடத்தப் போற மாதிரியே படப்படப்பாகப்  பேசுவார். என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்) 

கடந்த மூன்று மாதங்களாக நடத்தப் பட்ட ஆலோசனைக் கூட்டங்களில் நண்பர்கள் கலந்துக் கொண்டு அதன் அடிப்படையில் நிகழ்ச்சிநிரல் வடிவமைக்கப் பட்டுள்ளது. அனுபவமிக்கவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இளைஞர்களுக்கும் கொடுக்கப்படுவது ஆரோக்கியமான நட்பை பலப்படுத்தும் என்பதை சங்கம ஏற்பாடுகளை கவனித்து புரிந்துக்கொண்டேன்.  

வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் இரு புத்தகங்கள் வெளியீடும், இணைய உலகத்தின் எதிர்ப்பார்ப்புகள் சில பற்றியும் இங்கே பகிரப் பட இருக்கின்றன. பல்வேறு மத இன மொழியினரை இணையம் இணைத்து வைத்திருக்கிறது என்ற சிறப்புடன் மட்டுமே நாம் நின்றுவிடாமல் இந்த சந்தர்ப்பத்தை ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நடைபெறப்போகும் இந்த சங்கமம் ஒரு ஆரம்பமாக இருக்கும் என்பதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

நிகழ்ச்சி நிரல் 

கரிசல்குயில் இசை நிகழ்ச்சியுடன் துவக்கம்.
உறுப்பினர் பதிவு
வரவேற்புரை: இரா.நாறும்பூநாதன்.
முகநூல் நண்பர்கள் சுய அறிமுகம் (தன்னோட பெயர்,ஊர்,பணி, இயங்கும் துறை இதை மட்டுமே சொல்ல வேண்டும்.)
இரண்டு நூல்கள் வெளியீடு.
1.திரு.விமலன் எழுதிய "பந்தக்கால்"
2.திரு.மொஹம்மத் மதார் எழுதிய "வல்லினம் நீ உச்சரித்தால்..."
சிறப்பு விருந்தினர்கள்
எழுத்தாளர்கள் திரு.வண்ணதாசன்,கலாப்ரியா,உதயசங்கர்,மாதவராஜ்,தேவேந்திரபூபதி,சௌந்திரமகாதேவன்,இரா.எட்வின் மற்றும் மனநல மருத்துவர் ராமானுஜம்,கதிர் ஆகியோர் வலைத்தள பதிவுகள் பற்றி எளிமையான துவக்கவுரை

நண்பர்கள் கலந்துரையாடல்.
நன்றியுரை: திரு.மணிகண்டன்.
பிற்பகல் 2 மணி : மதிய உணவு.
நிறைவு.

நிகழ்வை ஒழுங்குபடுத்துபவர்கள் :-  
திரு.சுப்ரா.வே.சுப்ரமணியன்
திருமதி.ருபீனா ராஜ்குமார்
திரு.அனில் புஷ்பதாஸ்

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்குபவர் :-  
குறும்பட இயக்குனர் நெல்லை முத்தமிழ்.

நூறு பேருக்கு குறைவில்லாமல் வருவதாக தெரிகிறது. சுத்துப்பட்டி மாவட்ட மக்களை தவிர்த்து தொலைவில் இருந்து யாரெல்லாம் வராங்கனு பார்த்தால் (இதுவரை பெயர்  கொடுத்துத்தவர்கள்) கத்தாரில் இருந்து திருவாளர்கள் ஜூமாலி ரசூல், சென்னையில் இருந்து ராஜதுரை தமயந்தி, திருச்சியில் இருந்து இரா.எட்வின், கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி சிவாஜி, மதுரையில் இருந்து விசுவேஸ்வரன், குமரி மாவட்டம் தக்கலையில் இருந்து தக்கலை ஹலிமா, நாகர்கோவில் பாபு,விருதுநகரில் இருந்து மணிமாறன், சிவகாசியில் இருந்து ரெங்கசாமி மற்றும்    ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நம்ம ரத்னவேல் ஐயாவும் அம்மாவும் வராங்க.  அப்புறம் சில படைப்புகளும் அங்கே விற்பனைக்கு வைக்கப் பட இருப்பதாக இருக்கிறது, இதெல்லாம் அவங்க அவங்க பொறுப்பு மட்டுமே. 


சந்திப்பு குறித்த நேரத்தில் துவங்க நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் . தொலைவில் இருந்து நண்பர்கள் வருவதால் அவர்கள் ஊர் திரும்ப வசதியாக மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சியை கண்டிப்பாக நிறைவு செய்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒழுங்கு செய்யப் பட்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தாலும் நாம நம் நண்பர்களுடன் எவ்ளோ பேசணுமோ போட்டோ எடுத்துகனுமோ எடுத்துக்க வேண்டியதுதான். எழுத்துக்களின் மூலமே பார்த்து பேசிப் பழகிய உள்ளங்கள் நேரில் என்றால் உற்சாகம் அளவிட முடியாதல்லவா...

சங்கமம் குறித்து பேஸ்புக் அப்டேட்ஸ் பார்த்தே பல நண்பர்கள் வருவதாக தெரிவித்தார்கள்...அதனால் தனிப்பட்ட அழைப்பு இல்லையே என்று எண்ணாமல் நம் குடும்ப விழாவாக எண்ணி வாருங்கள், வருகையை நாளை மதியத்திற்குள் உறுதி செய்துக் கொண்டால் உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். 

தொடர்பிற்கு - திரு.நாறும்பூநாதன் - 9629487873 

பல பெரிய படைப்பாளிகள் வாழ்ந்த, வாழும் நமது தெக்கத்தி மண்ணில் இன்னும் வெளியே தெரியாத படைப்பாளிகள் இருக்கக்கூடும், அத்தகையவர்கள் பலருக்கு தெரியாமல் பதிவுலகில் இருக்கலாம் அல்லது பேஸ்புக்கில் சில வரிகள் எழுதுவதுடன் நின்றிருக்கலாம். இந்த சங்கமம் அத்தகையவர்களை இனம் கண்டு உற்சாகப் படுத்தக் கூடிய ஒரு இடம். எனவே இது போன்ற அருமையான ஒரு சந்தர்ப்பத்தை நண்பர்கள் யாரும் தவறவிட்டுடக் க்கூடாது.  கண்டுக் கொள்ளப் படாத எழுத்துக்கள் இங்கே தெரிந்தக் கொள்ளப்படலாம். யாருக்கு தெரியும் இந்த சங்கமம் முடிந்ததும் பல எழுத்தாளர்கள் அடையாளம் கண்டு வெளிஉலகம் இழுத்துக் கொண்டுப் போகலாம். ஆம் ஆச்சரியங்கள் அதிசயங்கள் தானாக ஏற்படும் என்றில்லையே...நாமாகக் கூட ஏற்படுத்தலாம் !! 

புதிய கதவுகள் திறக்கட்டும் !!

வாழ்த்துக்கள் !!!
   
நன்றி!


ப்ரியங்களுடன் 
கௌசல்யா 



புதன், மே 2

திருமண விழாவில் பசுமை விடியல்...!

உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த புதன் அன்று 25/04/2012  திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அண்ணன் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அண்ணன் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினேன், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அண்ணனை சரண் அடைந்தேன். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அண்ணன் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு எனக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார். 

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

எனது ஆதங்கம் என்னனா 'எங்கும் பசுமை, எதிலும் பசுமை' என சூளுரைக்கும் அரசு எங்களை போன்று சேவைகள் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த சட்டம், இந்த சட்டம் என சுட்டி காட்டிக்கொண்டு இராமல் தாராளமாக உதவினால் என்ன ?! விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்...? நட்டு பராமரிக்கவே செய்வார்கள் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பிரபுவும் நானும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். உதவிக்கு அழைத்ததும் மறுக்காமல் வந்தான் நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ். கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்க யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8  மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி வைத்தேன்...காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் நம் பதிவர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து அரேஞ் பண்ணினார்கள்.(இதை ஏன் விரிவா சொல்றேனா, பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது  .



திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு என் நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்... 

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள் 

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றேன், 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே நான் 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்தேன், திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். பிரபுவுக்கு தான் பாட்டி அங்கிருந்து கிளம்பியது பிடிக்கவில்லை.



* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். எதிர்பார்த்த ஒன்று கண்முன் காட்சியாகி நின்ற சந்தோசத்தில் ஒரு கணம் அப்படியே சிலையாகி விட்டேன். பிரபுவின் முகத்திலோ பெருமித புன்னகை !! பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டேன்...

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் பிரபுவிற்கு போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

*  மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.  

வேலையில் மும்முரமாக இருந்த போது 'ஆன்டி நான்  வந்திருக்கிறேன்' என ஒரு இனிய குரல்...அட 'உலகச் சாதனை சிறுமி' சுட்டிப் பெண் விசாலினி ஆசையுடன் அவளை வேகமாய் இழுத்து கட்டிக் கொண்டேன். அவளோட அம்மா சந்தோசமா 'இப்ப மேலும் இரண்டு கோர்ஸ் முடிச்சிட்டாள்' என்றார்...! மேலும் இரண்டு சாதனைகள் !! அவங்க சொல்ல சொல்ல ஆச்சர்யபட்டுகொண்டே இருந்தேன்...(இன்னும் பல சிறப்பு தகவல்கள் கூறினார்கள் அதை இப்போது சொல்ல அனுமதி இல்லை, மற்றொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்)

நல்லவை நடந்தேறியது நன்றாகவே...

முதல் முறையாக செய்ய போகிறோம், சங்கரலிங்கம் அண்ணனின் உறவுகள் நண்பர்கள் , அதிகாரிகள் என பெரிய மனிதர்கள் பலர் வரக்கூடிய விழா, தவறாக ஏதும் நிகழ்ந்துவிட கூடாதே என உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்து கொண்டே இருந்தது, அதனால் தானோ என்னவோ வந்திருந்த பதிவுலக உறவுகளிடம் கூட நன்றாக பேச முடியவில்லை...

இணையம் கொடுத்த ஒரு நல்ல சகோதரன் பிரபு , இரண்டு நாளாக கூடவே சுறுசுறுப்பாக இயங்கினான்...அவனது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் இந்த அளவிற்கு நன்றாக நடத்தி இருக்க முடியாது...அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாழ்நாளில் சிறப்பான  ஓர் நாள்  !!

சமுதாயத்தின் மேல் எல்லோருக்கும் அக்கறை இருந்தாலும் ஒரு சிலருக்கே சமூக பணி ஆற்ற சந்தர்ப்பம் அமைகிறது...அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நான் வாழும் நாட்கள் அர்த்தமில்லாதவை...இந்த மனநிறைவான நிகழ்வும் என் ஒருத்தியால் மட்டும் நடந்துவிடவில்லை...எத்தனை பேர் பங்கு பெற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையில் அளவிட முடியாது...அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை, தொடர்ந்து அத்தகையவர்கள் வாழும் இந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை புரிவதே  அவர்களுக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்...!

திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. என்னுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



உங்களின் வாழ்த்துக்கள் ஆசியையும் எங்களுடன் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன்...அவை எங்கள் குழுவை வழி நடத்தும் இன்றும், என்றும், எந்நாளும்...
                                                                    
மீண்டும் சந்திக்கிறேன்...

பிரியங்களுடன்
கௌசல்யா. 


செவ்வாய், ஜனவரி 3

யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!




   பதிவர் திரு.சங்கரலிங்கம்  அவர்கள் தனது உணவுஉலகம் தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !! 



ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

                                         

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 




15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.










                                                     
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச் செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
   

                                              

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
                                         


CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை. 



                  

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.




நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில்  பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

நன்றிகள் - இப்பதிவை பகிர எனக்கு ஊக்கம் அளித்த திரு.சங்கரலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



வெள்ளி, டிசம்பர் 9

நாங்க மாறிட்டோம்...அப்ப நீங்க ?!!







திருநெல்வேலி சாலைகளில் பறக்கும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது யார் என்றே இனி கண்டுபிடிக்க முடியாது...ஏன்னா இப்ப எங்க தலை ஹெல்மெட்டுக்கு மாறியாச்சு...!! :) எங்கு காணினும் ஹெல்மெட் தலைகள்...பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது...

அது எப்படி மக்களுக்கு தங்கள் உயிர் மேல் அக்கறை வந்துடுசானு கேட்கபடாது...மக்கள் உயிர் மேல எங்க புது கமிஷனருக்கு அக்கறை அதிகம்...நல்ல மனிதர்.புதிதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக திரு. கருணாசாகர் அவர்கள் பதவி ஏற்றதும் போட்ட முக்கியமான உத்தரவே ஹெல்மெட் அணிவது இனி கட்டாயம் என்பதுதான். 


ஒரு வாரம் அவகாசம் கொடுத்தார். எத்தனை நாள் அவகாசம் கொடுத்தாலும் நமக்கு கடைசி நாள்ல முட்டி மோதி கூட்டத்தோட கூட்டமா எதையும் வாங்குறதுதான் பழக்கம்...! நாம தான் அப்படினா ஊரே அப்படிதான் இருக்கு...ஹெல்மெட் வாங்குற இடத்தில செம கூட்டம்...! 

பழசு ஒன்னு உபயோகம்(?) இல்லாம ஸ்டோர் ரூமில இருக்கு, என்ன கொஞ்சம் தூசி அடைஞ்சி போய் பார்க்க ஒரு மாதிரியா இருந்தாலும் 'பரவாயில்லை அதையே தூசி தட்டி போட்டுகோங்க' சொன்னா இவர் கேட்டாதானே...(சிக்கனத்தில  பெண்களை அடிச்சிக்கவே முடியாது ஆமாம் !)

ம்...நான் சொல்றத கேட்ட மாதிரி தெரியல...!! ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க என்னவர் செம புத்திசாலி...நெல்லையில் இப்ப நம்பர் ஒன் பிசினஸ் எது என்றால் ஹெல்மெட் தான்...பிளாட்பாரம், திருமண மண்டபம் என்று குவிச்சு போட்டு விக்கிறாங்க...விலை இஷ்டம்போல சொல்றாங்க...ஆளுக்கு ஏத்தமாதிரி 600 ல இருந்து 1,500 , 1,800, 2000௦ என்று விக்கிறாங்க...மக்களும் வேற வழி இல்லாம (புலம்பிட்டே தான்)வாங்குறாங்க...! 

ஆனா பக்கத்து மாவட்டத்துக்கு ஒரு வேலையா போன கணவர் அங்கேயே  ஹெல்மெட் வாங்கிவிட்டார். விலை 500 மட்டுமே...நெல்லையில் தான் அதிக விலை, அடுத்த மாவட்டத்தில கம்மியா இருக்கும்னு பிளான் பண்ணி வாங்கின என் கணவர் புத்திசாலிதான்...ஆனா வாங்கிட்டு வந்து இதை சொன்னதும் எனக்கு செம கோபம்...நாம சரியாதானே பண்ணி இருக்கிறோம் எதுக்கு இப்படி முறைக்கிறானு அவருக்கு ஒரே யோசனை ! பின்ன என்னங்க வாங்கினது தான் வாங்கினார், கூட நாலு வாங்கிட்டு வந்திருந்தா அதை அக்கம் பக்கத்துல கொடுத்து இரண்டு மடங்கு அதிக பணம் பார்த்திருப்பேனே...! (என்னதான் சொல்லுங்க இந்த ஆண்களுக்கு சாமார்த்தியம் போதவே போதாது !)


* * * * * * * * * * * * * * * 


என்னங்க படிச்சாச்சா ? இனி நேரா விசயத்துக்கு வரேன்...(அப்ப இப்ப வரை சொன்னது !!?) மேலே சொன்னவை நகைசுவை மாதிரி சொன்னாலும் பலபேரின் பேச்சுக்கள் இப்படிதான் இருக்கிறது...எது எதுக்கோ அனாவசியமா பணம் செலவு செய்வது ஆனா உயிரின் பாதுகாப்பு பற்றிய இந்த விசயத்தில ரொம்ப யோசிச்சு மிச்சம் பிடிக்கிறது...?!! 


தலை கவசம் அவசியம் என்று அரசு சொல்வது நமது நம்மைக்காகத்தான் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். வீட்டில் கிடக்கும் பழையதை தூசி தட்டி போடுவது, பிளாட்பாரத்தில் நூறு, இருநூறுக்கு மலிவாக  கிடைக்கிறதே என்று வாங்கி சாமாளிப்பதும் புத்திசாலித்தனம் அல்லவே அல்ல...


ஹெல்மெட் பற்றிய சில தகவல்கள் 




பைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி.ஸ்டேபிலைசெர் இவற்றின் உதவியுடன் பல அடுக்குகளாக கொண்டு தயாரிக்கபடுகிறது.இதில் ஒவ்வொன்றும் பல தரத்தில் இருக்கிறது. நல்ல தரமான பொருட்கள்  பயன்படுத்தப்பட்டு தயாரிக்க பட்டதை வாங்கவேண்டும். இதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது என்கிற போது ஒரே வழி சிறந்த கம்பெனிகளின் நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவதுதான். சாலை ஓரங்களில் விற்கபடுபவை எந்த அளவிற்கு தரமானவை என்று சொல்ல முடியாது. 


* எடை 800 கிராமுக்கும் 2  கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமானவைகள்.


* உள்ளே இருக்கும் துணியை விலக்கி பார்த்தால் கரடு முரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். இது போலி.


*எடை அதிகமுள்ள ஹெல்மெட் தவிர்த்துவிடுங்கள்...இஞ்ஜக்சன் மோல்டிங் வகையில் கிடைக்கிறது...விலை அதிகம், ஆனால் அணிந்திருப்பது அவ்வளவாக சுமையாக தெரியாது. 


தரமில்லாத ஹெல்மெட் போட்டும் பிரயோசனம் இல்லை, விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால் தலைக்கும் சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே விலையை பார்க்காமல் தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை. 


ஏன் அணியவேண்டும்?! 

சாலை விபத்துகளில் அதிகமாக நடப்பது இருசக்கரவாகனத்தால் என்கின்றனர். எனவே அவசியம் ஹெல்மெட் அணிவது உயிரிழப்பை தடுக்கும். 


ஹெல்மெட் அணிவதினால் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம் சும்மா என்று ஆய்வுகள் சொல்கின்றன. எனவே நம்பாதிர்கள். உண்மையில் இதை அணிவதனால் தலைக்கு பாதுக்காப்பு என்பதுடன் மறைமுகமாக வேறு பல நன்மைகள் இருக்கின்றன என்பதை யோசித்து பார்த்தால் புரியும். 


* பிற வாகனங்களின் இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சப்தம், வாகனங்களின் இரைசல் ஒலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.  


* மார்கழி மாத குளிரில் இருந்து ஓரளவு தப்பிக்கும் காது.


* தூசிகள், மாலை இரவு நேரங்களில் சாலையில் எதிர்வரும் பூச்சிகளில் இருந்து கண்ணையும் காதையும் காத்துக்கொள்ளலாம். 


* மிக முக்கியமா செல்போன் அடிச்சா கேட்காது, வைபிரேசன் மூலம் தெரிந்தாலும் வண்டி ஓட்டிகொண்டு போகும் போது பேச முடியாது !! (அதுதான் நாங்க ஹெட் போன் போட்டுப்போமே என்கிறீர்களா ! ம்...விதி யாரை விட்டது!) 


தெருவுக்கு தெரு இங்கே போலிஸ் நிற்கிறார்கள் போடாதவர்களை பிடித்து ஸ்பாட் பைன் போடுகிறார்கள், வழக்கும் பதிவு செய்யபடுகிறது. கமிஷனர் உத்தரவு போட்டதற்காக அணியவேண்டும் என்பதை விட நம் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அணியவேண்டும்...நெல்லையில் தானே இந்த உத்தரவு கடுமையாக்கபட்டிருக்கிறது. நமக்கு இல்லையே என்று நினைக்காமல் ஹெல்மெட் வாங்கி அணியுங்கள்...அனைத்து ஊர்களுக்கும்  உத்தரவு போட பட்டு இருந்தாலும் இன்னும் சரி வர கடைபிடிக்க படவில்லை. 


சிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல போக முடியல, வியர்வையால் பெரும் சிரமமாக இருக்கிறது என்று. சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!

புரிந்து கொண்டு செயல் படுங்கள்...பெறுவதற்க்கறிய இந்த மானிட பிறப்பை சரியாக வாழ்ந்து முடிக்கும் முன்னே, அனாவசியமாக சாலையோரத்தில் உயிரை விட்டு விடகூடாது...


ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள்...வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் என்றும் எப்போதும்...!!


அரசு தொடர்ந்து முழு உத்வேகத்துடன் ஹெல்மெட் அணிவதை கட்டாயம் செயல்படுத்தபடவேண்டும்...உத்தரவிடும் போது இருக்கும் கண்டிப்பு,அதே வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும்...


நெல்லையில் இதை அருமையாக நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் எங்கள் கமிஷனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! 

                                  தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! 

                                                              * * * * * * * * * 





ஹெல்மெட் பற்றிய தகவல்கள், படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், நவம்பர் 21

என்னை காப்பாத்துங்க...! ஒரு அபலையின் அழுகுரல் !!!


பக்கத்துல ஒரு மனுசன் ஐயோ அம்மானு கதறிட்டு கிடந்தாலும் காது கேட்காத மாதிரியே ஒரு சிலரு இருந்தாலும், ஐயோ பாவம்னு அனுதாப பட, உதவி செய்ய கோடி பேர் இருக்கிறாங்க...அதுவும் என்ன போல அடுத்தவங்களுக்காக உசுற கைல பிடிச்சிட்டு ஓடிட்டு இருக்கிறதாலத்தான் நாட்ல மழையே பெய்யுது...ஆங் !மழைன்னு சொன்னப்ப ஞாபகம் வருது, அப்ப அப்ப என் உசுற இந்த மழைதான் காப்பாத்திட்டு வருது...இதுவும் என்னை கைவிட்டுடா என் நிலமை அவ்ளோதான்.

யார் இப்படி தன்னந்தனியா புலம்பரதுன்னு யோசிக்கிறீங்களா...?! நான்தான் ஆறு...ம்...வற்றாத ஜீவ நதினு நீங்க பெருமையா பேசுற தாமிரபரணி தான் நானு !! என்னடா ஒரு ஆறு புலம்புதுன்னு சிரிக்காதிங்க...முழுசா படிச்சா என்னை இப்படி புலம்ப வைக்கிறதே உங்களை போன்ற சில மனுசங்கதானு புரிஞ்சி தலை குனிவீங்க...!

நானும் யாராவது என்ன காப்பாத்த வருவாங்களானு காத்து கிடந்ததுதான் மிச்சம், ஒருத்தரும் எட்டி பார்க்கல...?! கலெக்டர், மந்திரி, எம்எல்ஏனு  பெரிய பெரிய ஆளுங்கலாம் என்ன கண்டுக்காம போனாலும் பொது சனங்க எம்மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா...?! ஆனா பாவம், அவங்க ரொம்ப அப்பாவிங்க, என் நிலைய பாத்து கண்கலங்கிறதோட முடிச்சுகுவாங்க, அதுதான் இங்க வந்தா நீங்களாவது என் நிலமைய பார்த்து என்னை காப்பாத்துவீங்கனு வந்திருக்கேன்...

பெருமையும், சீரழிவும்

திருநெல்வேலி அல்வாக்கே என்னாலத்தான் ருசி (ஒரு சுய விளம்பரந்தேன் !) அப்படின்னு வெளில பேசிகிறாங்க ! ஆனா இப்போ இருக்கிற தண்ணிய குடிச்சி பாருங்க, சப்புன்னு இருக்கும்...!? முன்னாடி எல்லாம் காடு கழனிக்கு போற விவசாய சனங்க, தண்ணிய அப்படியே அள்ளி குடிச்சி, 'ஆஹா எம்புட்டு ருசி சோறு கூட வேணாம்ல, வயிறு நிறைஞ்சு போச்சு'னு சந்தோசமா சொல்லுவாக...ம்...அதெல்லாம் ஒரு காலம் !


பொதிகை மலையில் பொறந்து அப்படியே நெல்லையை செழிப்பாக்கிட்டு, தூத்துக்குடி மாவட்டம் புன்னை காயல்ல போய் கடலோட கலந்துடுறேன்.....போற பாதை எல்லாம் செழிப்பா பச்சை பசேல்னு இருக்கும்...ஆனா இப்போ கரையோரத்தில கால் வைக்க முடியாத படி சேறும், சகதியுமா குப்பையும், கூளமா நிறைஞ்சு கிடக்குது...ஆத்துல சில இடத்தில அமலை செடிவேற நிறைய வளந்து மூடி கிடக்குது. மாநகராட்சி ஊருக்குள்ள பன்றிகள வளர்க்க தடை போட்டதால அதுங்க எல்லாம் என் கரையோர ஊர்கள்ல குடும்பமா கும்மாளம் போடுதுங்க...இதால கொசுங்க பெருகி போச்சு குழந்தை குட்டிகளுக்கு நோய் வந்திடுமேனு எனக்குதான் கவலையா இருக்கு...

ஆலை கழிவையும் கொண்டு வந்து கொட்டுறாங்க...தொழிற்சாலை கழிவு நீரை ஆத்துல விடுறாங்க...இதை எல்லாம் யாரு கண்டுகிறாங்க ? தட்டி கேட்குறதும் இல்ல ?!

அட படுபாவிகளா !

இன்னொரு பக்கம் என் மடியில கை வைக்கிற பாவிகளை என்னனு சொல்ல ...அவனுங்கள அந்த காமாட்சிதான் பாக்கணும் ! ஜே சி பி எந்திரத்தை வச்சு மணலை அள்ளி கொண்டு போறாங்க...ஐயோ ! எனக்கு வலிக்குதேனு கத்தி கதறினாலும் அரக்க சென்மங்க காதுல எங்க விழுது...?! இதை பாக்குற சனங்களோ இவன் உருபடுவானானு சாபம் போடுறாங்க...ஆனா எப்படி எதுக் கிறதுன்னு அவங்க பயப்படுறத பார்த்து என் வலியை பொறுத்துகிறேங்க...! 


இந்த மணல் கேரளாவுக்கு லாரி லாரியா போவுது...அந்த சனங்க ரொம்ப புத்திசாலிங்க, எங்க இருந்து மணல் வந்தா என்ன, நம்மூரை நல்லா பார்த்துபோம்னு இருக்காங்க...அங்கிருந்து மாலத்தீவுக்கு வேற போகுதாம்...இது எனக்கெப்படி தெரியும்னு பாக்குறீங்களா, இந்த லாரி டிரைவர்கள் பேசுவதை அப்ப அப்ப கொஞ்சம் கேட்பேன், இப்படிதான் என் பொது அறிவு வளருதுங்க...!

ஆமாம் தெரியாமத்தான் கேட்குறேன், மணலை அள்ளி வேற வேற இடத்தில மலையா குவிச்சு வச்சிருக்காங்களே, அரசாங்கத்தோட ஆளுக யாரும் பார்த்து எப்படி ஆத்து மணல் இங்க வந்ததுன்னு கேட்க மாட்டாங்களா ? இதை பறிமுதல் செய்ய சட்டத்தில இடம் இல்லையா ? (ஓட்டைதான் இருக்குனு சொல்றீங்களா, நீங்க சொன்னா சரிதான் !) 

என்ன ஒரு புத்திசாலித்தனம் ?!


எங்க ஊரு பக்கம் சொல்வாங்க..."கள்ளன் பெருசா, காப்பான் பெருசா" னு. இந்த கள்ளங்க எப்படி எல்லாம் பிளான் போடுறாங்க தெரியுமா... 'மணல் எடுக்க தடை போடுறீங்க சரி, ஆனா நாங்க ஆத்து பக்கத்துல நிலம் வாங்கி, அப்புறம் அந்த பட்டா இடத்தில மணலை வேண்டிய மட்டும் அள்ளுவோம், இப்ப என்ன பண்ணுவீங்களாம்'னு சிரிக்கிறானுங்க...?! அட முட்டா பசங்களே! இப்படி நிலத்த வாங்கி கடும் ஆழத்துல தோண்டுறீங்களே, நாளைக்கு ஆத்துல வெள்ளம் வந்தா ஊருக்குள்ள வந்துடுமேனு கொஞ்சமாவது யோசிசீங்களா...?!! உங்க சுயநலத்துக்காக எத்தன பேர் உசிரோட விளையாடுறீங்க...!? நீங்க நல்லா இருப்பீங்களா !



கைவிட்டுடாதிங்க...

இது ஏதோ புலம்பல்னு கண்டுக்காம விட்டுடாதிங்க...பறந்து விரிந்து ஊருக்கு நடுவில கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்...! மணல் எடுக்குற சாக்குல எங்களை கொஞ்ச கொஞ்சமா ஆக்கிரமிச்சிட்டு இருக்கிற மணல் கொள்ளையர்களை கூட்டமா சேர்ந்து தட்டி கேளுங்க, போராட்டம் பண்ணுங்க ...ஆரம்பத்தில எதிர்ப்பு இருந்தாலும் தொடர்ந்து நீங்க கொடுக்கிற டார்ச்சர்ல அவனுங்க இந்த கொள்ளை தொழிலையே மறந்துறணும்...ஊர் கூடி தேர் இழுத்தா தேர் நகராமலா போய்டும்...!? முயன்றுதான் பாருங்களேன்...!!

இது என்னோட தனிப்பட்ட வேதனைனு இல்ல, என்னப் போல பல ஆறுகளும் இப்படி தான் அழிஞ்சிட்டு வருது...சனங்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்துக்கு உதவி செஞ்சி, ஊருக்கே சோறு போடுற எங்க நிலைமை ரொம்ப மோசமா போயிட்டே இருக்குது...! இனியாச்சும் யாராவது கவனம் எடுத்து, சீரழிஞ்சி செத்துக்கிட்டு இருக்கிற எங்கள வாழ வையுங்கனு என் எல்லா உடன்பிறப்பு சார்பில கேட்டுகிறேன்...

இப்ப மழைகாலம் வேற எல்லா தண்ணியும் கெட்டு போய் கிடக்கு...பிளாஸ்டிக் கேன்ல வாங்கினாலும் அதையும் சுட வச்சு குடிங்க...எங்க ஊருகாரவுக உணவு உலகத்தில சங்கரலிங்கம் ஐயாவோட இந்த பதிவை படிச்சி பாருங்க...அவர் சொல்றது உங்க நல்லதுக்கு தான்னு நினைச்சி அதை அப்படியே கடைபிடிங்க... உங்க புள்ள குட்டிகளை நோய் நொடி அண்டாம பத்திரமா பார்த்துகோங்க சனங்களே...

இத்தனை நேரம் பொறுமையா என் வேதனைகளை கேட்ட உங்க நல்ல மனசுக்கு நீங்க எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்துறேன்...முடிஞ்சா மத்தவுககிட்டையும் இதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க...உங்களுக்கு புண்ணியமா போகும்...!

இப்படிக்கு 
தாமிரபரணி ஆறு
திருநெல்வேலி.

* * * * * * * * *



தலைப்பு - நன்றி சங்கரலிங்கம் அண்ணா    
படங்கள் - நன்றி கூகுள்     

செவ்வாய், ஜூன் 14

திருநெல்வேலியில் திருவிழா !




'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' -  சம்பந்தர்
'தண்  பொருநைப் புனல்நாடு'  -  சேக்கிழார்
பொன்திணிந்த  புனல் பெருகும் பொருநைத் திருநதி - கம்பர்

என்று சான்றோர்கள் பாடி பரவசம் அடைந்த பூமி இந்த திருநெல்வேலி !! ஆசியாவின் மிகப் பெரிய சிவன் கோவில், இங்கே உள்ள நெல்லையப்பர் கோவில் என்பது ஒரு சிறப்பு.சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் 'தாமிர சபை' என்று போற்றப்படுவதும் இந்த கோவில் தான்.


திருநெல்வேலி என்றால் இலக்கியம் சுவைத்த டி.கே.சி, விடுதலை உணர்வு தந்த வ.உ.சி, எட்டயபுரத்து பாரதி, உனக்கேன் தரவேண்டும் வட்டி என ஆங்கிலேயரிடம் உறுமிய  கட்டபொம்மன், ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்த மன்னன் பூலித்தேவன், வாஞ்சிநாதன் இப்படி பலரும் நினைவுக்கு வரலாம்.....! பலருக்கு  பாளையங்கோட்டை ஜெயில் நினைவுக்கு வரலாம்.....! முக்கியமாக எல்லோருக்கும் அல்வா நினைவுக்கு வரும்.....!  

இப்ப எதுக்கு இந்த பில்டப்னா,  இனிமேல் பதிவுலகத்திற்கு திருநெல்வேலி என்றால் 'பதிவர்கள் சந்திப்பு' நினைவுக்கு வரணும், வரும்.....!! (இது கொஞ்சம் ஓவர்தான்...!! )

எங்க ஊர்ல விஷேசமுங்க !

ஆம் மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....! 

பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி  அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது  'பதிவர்கள் சந்திப்பு'. 

அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால்  வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு  கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம். 

                      இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி


நிகழ்ச்சி நிரல் 


காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்

 அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
                                                       
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை. 



அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.    

வலைச்சரம் - சீனா ஐயா 
உணவுஉலகம் -சங்கரலிங்கம் 
சாமியின் மன அலைகள் Dr.P. கந்தசாமி 
வெடிவால் - சகாதேவன் 
சங்கவி - சதீஷ் 
அட்ரா சக்க - செந்தில்குமார்
கோமாளி செல்வா 
தமிழ்வாசி - பிரகாஷ் 
எறும்பு - ராஜகோபால்
ஜயவேல் சண்முக வேலாயுதம் 
அன்புடன் எ.மு.ஞானேந்திரன் 
நெல்லை நண்பன் - ராம்குமார் 
வெறும்பய -ஜெயந்த் 
நான் ரசித்தவை - கல்பனா 
ரசிகன் ஷர்புதீன்
ஜோசபின் பாபா 

இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் புதன்கிழமை (நாளை) கன்பர்ம் செய்து,  சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.

உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா  அவர்களின் மெயில் ஐடி   unavuulagam@gmail.com  
அவரது செல் எண் 9442201331.

ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், நம் நட்பை பரிமாறிக்கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த பதிவர்கள் சந்திப்பு இருக்கும்.


அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம் 


தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும்  மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.   

இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை  பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....


வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம்.  இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!


நெல்லையும் நாங்களும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இணையம் என்ற கடலில் வந்து விழுந்த நதிகள் நாம் ! நம்மிடையே இருக்கலாம் பல வேற்றுமைகள், இருந்தும் ஒன்றிணைகின்றோம்  நட்பு என்ற அற்புதத்தால் !! சகோதர பாசத்தையும், தோழமை அன்பையும், மனித மாண்பையும் போற்றுவோம் !!  

கலந்து கொள்ள இயலாத தோழமைகளிடம் இருந்து வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும்  எதிர்பார்கின்றோம்...!

தமிழர்களாய், தமிழால் ஒன்றுபடுவோம் !
அன்பால் மனிதர்களை வசப்படுத்துவோம் ! 
நட்பால் உலகை வெல்வோம் !

வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்கள் ! வளர்க அவர்தம் புகழ் !






படங்கள் - கூகுள்