குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 2

வாழ்தல் இனிது ...!

'பிறந்துவிட்டோம் அதனால் வாழ்கிறோம்' என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாலும் 'அடடா ஏன் இப்படி, வாழத்தானே வாழ்க்கை' என்று  கையை பிடித்து இழுத்து வந்து எங்கே சிரிங்க எங்கே ரசிங்க என்று உற்சாகப் படுத்துபவர்கள் சூழ வாழ்வது வரம். அதே வரம் இரட்டிப்பாய் கிடைத்தால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எனது குழந்தைகள்.  அரிதாய்  கிடைத்த இந்த வாழ்க்கையின்  ஒவ்வொரு  நிமிடத்தையும்  பெற்றோரை அனுபவிக்க  வைத்து   ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்  !!   

முதல் வரம் 

பிளஸ் 2 படிக்கும் எனது மூத்த மகன் பள்ளியில் 'பிரிவு உபச்சார விழா'விற்காக A Tribute to Teachers  என்ற ஆறு நிமிட வீடியோ ஒன்றை தயாரித்தான். மூன்று நண்பர்களுடன் ஆலோசனை செய்து  கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலைகளை இவன் செய்து முடித்தான்.சும்மா செய்து பார்ப்போமே என்று செய்த இவனது முதல் முயற்சி  ஸ்கூல் பிரின்சிபால் , ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றதில் அம்மாவா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வீடியோ ரெடி  ஆகும் வரை நாலுபேரை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இவர்கள் மறைக்கப் பட்ட பாட்டை நேரில் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். ஸ்கூல் எதிரில்  தான் எங்களின் வீடு என்பதால் பசங்க வருவதும் போவதுமாக இருக்கும்.  ஆசிரியர்களின் போட்டோக்களை பழைய குரூப் போட்டோக்களில் இருந்தும்  மாணவர்களின் போட்டோக்களை அவர்களின்  பேஸ்புக்(!) ப்ரோபைலில் இருந்தும் சம்பந்தப்பட்ட இசை, காட்சிகளை நெட்டில் எடுத்தும் இணைத்திருந்தான். தங்களின் போட்டோக்களை பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சர்ய சந்தோசம் கூடவே மனதை தொட்ட கான்செப்ட்,  இவனது கையை பிடித்து வாழ்த்தி சந்தோஷத்தில் கத்தி தீர்த்துவிட்டார்கள்.

ஒரு வாரத்தில் பப்ளிக் எக்ஸாம் , அந்த டென்ஷனை குறைக்க இந்த வீடியோ தயாரிப்பு  உதவும் என்பதை போல அவனும் ஜாலியாக இந்த வீடியோ பண்ணிய விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. முதலில் சிலைட் ஷோ பண்ண போவதாக இருந்தான், பிறகு என்ன நினைத்தானோ ஒரு கான்செப்டுடன் ஆறு நிமிட விடியோவானது. அதில் புகைப்படம் கிடைக்காமல் விடுபட்ட ஆசிரியர்களுக்கு  சாரி சொன்ன விதம், மூன்று நண்பர்களின் பெயரை சேர்த்தவன் தனது பெயரை (சந்தோஷ்) போடாமல் sam workshop என்று முடித்திருந்தான். காரணம் கேட்டதற்கு 'எதுக்குமா  பேரு, பண்ணினது யாருன்னு யோசிக்கட்டுமே' என்று சிரித்தான்.

 ஸ்கூல்ல ஒரு டீச்சர்,  'பப்ளிக் எக்ஸாம்  வச்சிட்டு இதை பண்ண வீட்டுல எப்டி அலோ பண்ணினாங்க' னு கேட்டதுக்கு 'என் பக்கத்துல உக்காந்து என்கரேஜ் பண்ணுனதே எங்க அம்மாதானே' என்றதும் டீச்சர் அப்படியே சைலென்ட்.  you tube யில் வீடியோவை ராத்திரி  அப்லோட் செய்த மறுநாள் எழுதிய கெமிஸ்ட்ரி மாடல் எக்ஸாமில் 93 சதவீத மதிப்பெண். சந்தோசமாக பரிட்சையை எதிர்க் கொள்ளனும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணத்தை நான் சொல்ல.:-) வீடியோவில்  பப்ளிக் எக்ஸாம் பற்றிய இடத்தில் விஜய் டயலாக் வர சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இடத்திற்கு பொருத்தமாக இருந்தது என்பதை விட அவனது மனநிலை அது என்பது எனக்குதானே தெரியும் :-) (ஒரு வருசமா இந்த பரீட்சையை சொல்லியே  ஸ்கூல் கொடுக்குற டார்ச்சரால எப்படா முடிச்சு தொலைப்போம்னு இல்ல இருக்கிறான்) :-)

நேரம் இருப்பின் வீடியோ பாருங்க.




இன்றைய குழந்தைகளின் ஆர்வம் ஈடுபாடு அலாதியானது தான். அதிலும் நம் பிள்ளை செய்கிறது என்றால் உலகத்திலேயே அதுதானே  ரொம்ப ரொம்ப பெரிசு இல்லையா :-)

இரண்டாவது வரம்

கடந்த வெள்ளிகிழமை(20/2/15)பிறந்தநாள் அன்று ஹாஸ்டலில் நண்பர்கள் போட்டிப் போட்டு பரிசுகள் கொடுத்து வாழ்த்தியதும் சந்தோஷத்தில்  கண் கலங்கி அழுதிருக்கிறான் எங்களின் இளைய மகன் விஷால். கிப்ட்ஸ்  எதையும் பிரிக்காமல் அப்படியே வீட்டுக்கு எடுத்துவந்தவன் என் முன்னால் வேகவேகமாக பிரித்தான். ஒவ்வொரு கிப்டும் வெள்ளை காகிதத்தால் சுற்றப்பட்டு சிகப்பு நிற ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது.  டியர் விஷால், ஹேப்பி பர்த்டே என்று எழுதி இருந்தவை அனைத்தும் ஓவியம்.  பேக்கிங்கின் உள்ளே இருந்தவை வெறும் பொருளாக எனக்கு தெரியவில்லை ... அங்கே சில பொருட்களின்  வடிவில் அமைதியாக உட்கார்ந்திருந்தது  நேசம் !!  நட்பிற்கு உருவம் கொடுத்தால் அது இப்படி இந்த புகைப்படத்தில் இருப்பதைப் போலத்தான்  இருக்கும் !!





ரெசிடென்சியல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பரிசு பொருள்கள் வாங்க  கடைகளுக்கு எவ்வாறு செல்ல முடியும். ஆனாலும் தங்களின் நேசத்தை இவ்வாறேனும்  வெளிப்படுத்துவோம் என்று  தங்களிடம் இருக்கும் பொருட்களில் கையில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து பேக்கிங் செய்து பரிசளித்த அச்சிறு குழந்தைகளின் முன்னால் பெரிய மால்களில் இருக்கும் பொருள்கள் கட்டாயம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்.  கிப்ட் கொடுத்ததும் என் மகன் அழுததின் காரணம் எனக்கும் புரிந்தது. ஹாஸ்டலில் இருந்தால் என்ன  நண்பனுக்கு பரிசளித்தே ஆகணும் என்று ரகசியக்கூட்டம் போட்டு முடிவு செய்தபின்னர் என்ன பொருளை கொடுக்க என்றெல்லாம் அதிகம் யோசிக்கவில்லை அவர்கள்... மூன்று நாளாக  அதுவும் என் மகனுக்கு தெரியக்கூடாது சஸ்பென்சாக இருக்கணும் என்று ஒளிந்திருந்து பேக் செய்திருக்கிறார்கள்.

மகன் விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்கு சென்றபின் தான், இந்த பொருட்களை  மறுபடி எப்போது பார்த்தாலும்  அழகிய அத்தருணம் அவனுக்கு நினைவுக்கு வருமே என்று போட்டோ எடுத்தேன்.  முன்பே இந்த யோசனை இருந்தால் பிரிக்கும் முன்பே எடுத்திருக்கலாம்.பேக்கிங்கை அவ்வளவு அழகாய் நேர்த்தியாய் செய்திருந்தார்கள்   ஆறாவது  மட்டுமே படிக்கும் அச்சிறு குழந்தைகள் !!

ஹாஸ்டலுக்கு ஒவ்வொரு திங்கள்கிழமை மாலையும் போன் செய்து நமது குழந்தையுடன் பேசலாம்...   அவ்வாறு என் மகனுடன் பேசும்போதெல்லாம் தவறாமல் இரண்டு எண்களையாவது கொடுத்து 'இந்த நம்பருக்கு போன் பண்ணி அவங்க பையனுக்கு உடனே போன் பண்ண சொல்லுங்க, ரொம்ப நேரமா வெயிட் பண்றான் என் பிரெண்ட்' என்பான் அக்கறையுடன். பொருள் தேடும் அவசரத்தில் ஹாஸ்டலில் இருக்கும் குழந்தையிடம் பேசணும் என்பதையே மறந்துவிடுகிறார்களே பெற்றோர்கள்.

பொருளின் பின்னே ஓடி ஓடி ஒருநாள் திரும்பிப் பார்க்கும் போது அங்கே நம்  குழந்தைகள் இருக்க மாட்டார்கள், நம் குழந்தைகளின்  சாயலில் வளர்ந்த ஒரு இயந்திரம் அங்கே  இருக்கும், கூடவே முதியோர் இல்லத்திற்கான முகவரியும்...!!  இதை புரிந்துக் கொண்டால் குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுவோம். நமது குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை எவ்வளவு விலை  கொடுத்தாலும் மீண்டும்  வாங்கவே  முடியாது.  நமது எல்லா வேலைகளையும் விட மிக மிக முக்கியம் குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் கொஞ்சம் நேரம்  மட்டுமே.

'இருபது பேருக்கு மேல் இருக்கும், உங்க மகனுக்கு வந்த பரிசுகளைப் போல இங்க வேற யாருக்கும் இப்படி நடக்கல' என்று ஹாஸ்டல் வார்டன் என் கணவரிடம் ஆச்சர்யப் பட்டதை அறிந்ததும்  இத்தனை பேரின் அன்பை சம்பாதித்த மகனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.  சக மனிதர்களை நேசிக்கும் இந்த ஒரு பண்பு போதும் படிப்பு பணம் புகழ் அனைத்தும் தானாகவே  அவனிடம் மண்டியிட்டு விடும்.  

பையனின் பிறந்தநாளுக்கு நான் எழுதிய போஸ்ட் பார்த்து  கமெண்ட்ஸிலும் பேஸ்புக் இன்பாக்சிலும் போன் செய்தும் வாழ்த்திய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அதிலும் போனில் அழைத்து  'போஸ்ட்ட  காலைல போடுறத விட்டுட்டு, போடவா வேண்டாமான்னு சாயங்காலம் வரைக்கும்  யோசிச்சி போட்டிங்களாக்கும்' என்று  என் தலையில் நறுக்குனு குட்டிய அன்பு நண்பர், எனது மகனின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து அவனை வாழ்த்தி மகிழ்ந்த அன்பு நண்பர் கே.ஆர்.பி.செந்தில்   போன்றவர்களை பெற்றிருக்கிறேன் என்பதை விட இந்த வாழ்க்கையில் சந்தோசம் வேறென்ன இருக்கப் போகிறது.



அன்புள்ளங்கள் சூழ வாழ்வது வரம் !! ஆம்... வாழ்தல் இனிது !!!


பிரியங்களுடன்
கௌசல்யா ...





வெள்ளி, பிப்ரவரி 20

பிள்ளைக் கனியமுதே ...கண்ணம்மா !!



எப்படித் தொடங்க என்று வேறு எந்த போஸ்டுக்கும் இவ்ளோ  யோசிக்கல ...சரி மனசுல வர்றத எழுதிவுடுவோம்  ...படிக்கிறவங்க பாடு ! :-)  ஆனா உண்மையில் எனக்கு இந்த பதிவு ஒரு அழகான நினைவுகளின் மீட்டல். அவனை பற்றி எழுத அமர்ந்ததும் இதயத் துடிப்பு அதிகரிக்க மனசு உளற கை நடுங்க கணினியின் மீது மெல்ல விரல்களை ஒத்தி எடுக்க ஆரம்பிக்கிறேன்... அவன் சில சமயம் இப்படித்தான் என் நினைவுகளில் உட்கார்ந்துக் கொண்டு என்னை நினைவிழக்கச் செய்வான் ... என்னை அதிகம் சிரிக்கவைப்பவன்... அவனுக்கு என்னை அடிக்கடி கட்டிக்கணும்... ஐ லவ் யூ சொல்லேன் என கெஞ்சினால் சரி சரி நானும் ஐ லவ் யூ  என்று சொல்லி போனஸாக என் கன்னத்தில் முத்தமிட்டு சிரிப்பான்.

அப்படி சிரிக்கும் போது அவன் கன்னத்தில் விழும் சின்ன குழிக்காக என் செல்லம், என் பட்டு , புஜ்ஜிமா, கண்ணம்மா என நீளும் என் கொஞ்சல்கள். மாதா பிதா குரு தெய்வம் நாலையும் விட மேலான ஒன்று இருக்குமென்றால் அதுதான் அவன்.  ஒருமுறை ஊசி குத்தி என் விரலில் ரத்தம் போது ஷ் ஆ என்று கொஞ்சம் சத்தமா கத்திட்டேன் போல... first aid பாக்சை தூக்கி வந்து  (கண்ணுக்கே தெரியாத காயத்திற்கு) கட்டுப் போட ஆரம்பித்துவிட்டான். அவனது செய்கையால் கலங்கிய என் கண்களை பார்த்தவன் வலிக்குதா சரியாப் போய்டும்  என விரலை நீவிவிட்ட அன்பில் கரைந்தே போய்விட்டேன். அவன் வந்தபிறகே பிரிக்கவேண்டும் என்று கட்டுடன் பகல் முழுவதும் சுற்றினேன், ஸ்கூல் முடிந்து வந்தவன் இப்போ எப்டிமா இருக்கு கேட்டுக் கொண்டே கட்டை பிரித்து பார்த்திங்களா சரியா போச்சு , நானும் அட ஆமால என்றேன் அவனை ரசித்துக்   கொண்டே ...

அவன் எப்போதும் அப்படித் தான்... பிறரின் மீதான நேசத்தை காட்டுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.  ஒரு குழந்தை போதும் என்று ஐந்தரை வருடங்களை கடந்த சமயத்தில் தற்செயலாக சந்தித்த ஒரு தூரத்து உறவினர், 'ஆணோ பெண்ணோ இன்னொன்னு பெத்துக் கோங்க, நம்ம காலத்துக்கு பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் கவனிச்சுப்பாங்க' என்றதுடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை தொடர்ந்தவர் 'உங்க பையனின் மீது உங்களுக்கு அன்பும் அக்கறையும் இருந்தால் அவனுக்கு ஒரு துணையை கொடுங்க,  ஒரு  பையனா தனியா வளருவது சரியல்ல' என்றார். அதன் பின் நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை... அதற்கு அடுத்த மாதம் ஜனித்து பத்தாவது மாதத்தில் கையில் தவழ்ந்தான் எங்களின் இரண்டாவது மகன் விஷால்!

இவன் பிறந்து மூணு வருடம் கழித்து ஒருநாள் பெரிய மகனிடம் விஷாலின் பிளாஷ் பேக் பற்றி 'அந்த அங்கிள் சொன்னதும் கடவுள்கிட்ட கேட்டோம் இவன் பொறந்தான்'னு கதை மாதிரி சொன்னேன், பொறுமையா கேட்டவன் 'அந்த ஆள் மட்டும் என் கைல கிடைச்சான், அத்தோட தொலைஞ்சான்' அப்டினு ஒரு வெறியோட சொல்லவும், உண்மை புரிந்து சிரித்துவிட்டேன்.   அவ்ளோ அட்டகாசம் அராஜகம் பண்ணுவான் சின்னவன். கோபம், பிடிவாதம், வைராக்கியம் எல்லாமே ஜாஸ்தி. நினைச்சதும் நடந்தாகணும் இல்லைனா பக்கத்துல இருக்குறவங்க தலைமுடில பாதி இவன் இரண்டு கைக்கும்  போய்டும்.  அவன் வளர வளர எங்களின் பயமும் அதிகமாச்சு. கவுன்சிலிங் பண்ணா சரியாகிடும்னு நண்பர் ஒருத்தர் சொன்னதால பாளையங்கோட்டையில் இருக்கும் பன்னீர்செல்வம் டாக்டரை பார்க்கப் போனோம்.  ஹாஸ்பிடல் வாசலில் மனநல மருத்துவமனை என்ற போர்டை பார்த்ததும் என் மனசு என்னவோ பண்ண, உள்ள போகாம திரும்பி வந்துட்டோம்.

அவனோட ஸ்கூல்ல  டீச்சர்ஸ் இவனை பத்தி நிறைய கம்பிளைன்ட் பண்ணுவாங்க, கிளாஸ்ல பசங்ககிட்ட பேசிட்டே இருக்கிறான், பாடத்தை கவனிக்காம படம் வரைஞ்சிட்டு இருக்கிறான்னு....பரவாயில்லை கண்டிக்காதிங்க , நான் பார்த்துக்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு வருவேன். ஹோம் வொர்க் செய்யமாட்டான், சொல்லிகொடுக்க உட்கார்ந்தாலும் இரண்டு நிமிசத்துல அவன் பார்வை  வேற பக்கம் போய்டும்.   A  for Apple என்று தொடங்கி  Z  வரைகூட சரியாக சொல்லமாட்டான். இப்படியே நாலாவது வகுப்பு முடித்தான்.  கம்ப்யூட்டர் கேம்ஸ், படம் வரையறது என ரொம்ப சுதந்திரமாக சந்தோசமாக  வளர்ந்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் நிறைய பேசுவேன், அவனையும் பேச வைப்பேன். அவங்க அப்பா பஞ்சதந்திர கதைகள், விக்கரமாதித்தன்,தெனாலி ராமன் கதைகள் என்று புக்ஸ் வாங்கி படித்து இரவு இவனுக்கு கதை சொல்வார். படிப்பை விட அவனது குழந்தைமையை கெடுக்காம இருக்கணும் என்பதில் கவனமாக இருந்தேன்.   

ஒருநாள் அவன் கைப்பிடித்து ரேகைபார்த்து, குட்டிமா நீ பெரிய சைன்டிஸ்ட் ஆ வருவ போலிருக்கே' என்றதற்கு அவனும் 'ஆமாமா எனக்கும்  ஏதாவது ஆராய்ச்சிப் பண்ணனும்னு தோணிட்டே இருக்குமா' என்றான். எனது ரேகை ஜோஸ்யமும் அவன் மனதை படித்து சொன்னதுதானே. எங்க ஊரில் பல வசதியான வீட்டு பிள்ளைகள் சைனிக் மிலிட்டரி ஸ்கூலில் சேருவதற்கு  வருடாவருடம் முயற்சி செய்வதை பற்றி என் கணவர் பேசிக் கொண்டிருந்தார்.  6 ஆம் அல்லது  8 ஆம் வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும். அங்கே இடம் கிடைப்பது மிக கடினம்,  அங்க படிச்சா ஆர்மி ,  நேவி , ஏர்போர்ஸ் போன்றவற்றில் ஆபிசர் ஆகலாம் என்று சொல்லவும், அருகில் இருந்த விஷால் அந்த ஸ்கூலை பற்றி கூகுளில் தேடி எடுத்தான். ஹார்ஸ் ரைடிங், ட்ரெக்கிங் என்று போட்டோஸ் இருந்ததை பார்த்ததும் நான் அங்க படிக்கப் போறேன்மா என சீரியசாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டான்.  போட்டி அதிகம் இருக்கும் என்பதால் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத தயார் செய்வதற்கு கோச்சிங் சென்டரில் முதலில் சேர்க்கணும். 'ஒகே அப்போ அங்க சேருங்க' என விஷால் சொல்லவும் எனக்கு வயித்தில் புளியை கரைக்க ஆரம்பித்தது.

நீண்ட ஆலோசனை விவாதத்திற்கு பிறகு உடுமலைபேட்டை அருகில் அமராவதி நகர்  சைனிக் ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்தோம். இங்கேயும் இண்டர்வியூ வைத்தே செலக்ட் செய்கிறார்கள். இவனுடன் எங்கள் ஊர் பசங்க மூணு பேரும் அங்கேயே   சேர்ந்தார்கள். சேர்த்துவிட்டு கிளம்பும் நேரம் என் மனதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக, 'இருந்துப்பியா குட்டி' என்று கேட்டேன், அவனோ கொஞ்சமும் தயங்காமல்  'நான் இருந்துப்பேன், உங்களாலத்தான் முடியாது, அம்மாவ பார்த்துக்கோங்க அப்பா' என்று  பெரிய மனுஷன் மாதிரி சொல்லிவிட்டு வேகவேகமா ஹாஸ்டலுக்கு  உள்ளே சென்றே விட்டான்.   

அங்கிருந்து பழனி திண்டுக்கல் வரையும் தொடர்ந்தது என் அழுகை.  என் கணவர், 'அவனுக்கு எவ்ளோ வைராக்கியம் பாரேன், விரும்பியது நிறைவேறனும்ன்ற பிடிவாதம் இருக்குற இவன் நல்லா இருந்துப்பான், நீ தைரியமா இரு' என்றார். உண்மைதான். ஆறு மாதம் கோச்சிங் முடிந்து  போன வருடம் 2014 ஜனவரியில் எக்ஸாம் நடந்தது. Written exam, Interview இரண்டும் சைனிக் ஸ்கூலிலும் மெடிக்கல் பிட்நெஸ் செக்கப்  கோவையிலுமாக நடந்து முடிந்து ஊர் திரும்பினோம்.  மூன்றிலும் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சிப் பெற்றான், ஆனால் செலக்ட் ஆகவில்லை. தமிழகத்தில் ஒன்றுமாக  இந்தியாவில் மொத்தம் 23 சைனிக் ஸ்கூல்கள் இருக்கின்றன. தமிழக ஸ்கூல் சீட்க்கு ஆயிரக்கணக்கில் போட்டி போட்ட மாணவர்களில் மொத்தம் 90 பேரை செலக்ட் செய்திருந்தார்கள். இதில் அதிக சதவீதத்தில் வட நாட்டினர் இருந்தார்கள்.  விசாரித்ததில்  நம்ம பசங்க +2 முடித்ததும் டாக்டர், இஞ்சினியர் என்று போய்விடுகிறார்கள், ஸ்கூல் நடத்துவதின் குறிக்கோள் பூர்த்தி அடைவதில்லையாம். காரணம் என்னவோ இருக்கட்டும் என் மகனின் விருப்பம் நிறைவேறலையே என்ற வருத்தத்தில் அவனிடம், 'அடுத்து என்னமா பண்றது'  என்று கேட்டேன். கொஞ்சம் வருத்தம் நிறைய யோசனை என்றிருந்த அவன் சொன்னான், 'இந்த லெவல்ல இருக்குற வேற ஸ்கூல் பாருங்க, படிக்கிறேன்'.  அதை கேட்டதும் 'மறுபடியும் ஹாஸ்டலா வேண்டாம்டா' என்றதற்கு 'அடப்போமா உன்கூட இருந்தா படிக்க மாட்டேன், நான் சைன்டிஸ்ட் ஆகணும் நிறைய படிக்கணும்' 

அப்புறமென்ன மறுபடியும் ஸ்கூல் தேடும் படலம். மதுரையை அடுத்த திருப் புவனம் ஊரில் இருக்கும் வேலம்மாள் ரெசிடென்சியல் ஸ்கூலை முடிவு செய்தோம். அங்கேயும் ஒரு Interview + 1 1/2 லட்சத்தில் பீஸ். வாரா வாரம் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவோம். ஆச்சு இதோ ஒரூ வருடம் முடியப்போகிறது.  எல்லா பாடத்திலும் 95, 97 என்று எடுக்கிறான். கூடவே டிரம்ஸ் , டென்னிஸ், ஸ்விம்மிங், யோகா என்று என்னவெல்லாம் விருப்பமோ அதை எல்லாம் கற்று வருகிறான்.  ஸ்கூல் உள்ளே இருக்கும் லைப்ரரியில்  எடுத்து படிக்கும் புக்ஸ் பத்தி நிறைய பேசுவான். எங்களிடம் கதை கேட்டு கேட்டு கதை சொல்ற பழக்கம் அவனுக்கும் வந்துவிட்டது. போன வாரம் போனில் பேசும்போது சொன்னேன், நீயா கதை எழுத டிரை பண்ணிப் பாரேன் என்று. சரி என்றவன் இன்று வீட்டுக்கு வந்ததும்  நோட்டை காட்டினான்,அழகான கையெழுத்தில் ஐந்து பக்கத்திற்கு கதை அங்கே இருந்தது... எனக்கு முன்னால் அவன்  புக் போட்டுட்டுவான்னு நினைக்கிறேன். :-)

அப்பா அம்மாவை விட தனது அண்ணன் மேல் உயிரையே வைத்திருக்கிறான். இரண்டு வருடமாகிறது இருவரும் சண்டைப்போட்டு, லீவுக்கு இவன் வந்ததும் தனது லேப்டாப்பை இவனிடம் ஒப்படைத்துவிடுவான் பெரியவன். கேம்ஸ் , ஆங்கில படங்கள் என்று முழு நேரமும் அதில் மூழ்கிவிடுவான். மகன்கள்  இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக பேசி விளையாடுவதை ஓரமாக நின்று ரசிப்பதுதான் எங்கள் இருவரின் பெரிய சந்தோசமே, வாழ்தல் இனிது !!

இப்போ ஆறாவது படிக்கிற இவரு ஒரு மாசமா 'டென்த் முடித்ததும் அமெரிக்கா போய் படிக்கப் போறேன், பணத்தை ரெடி பண்ணிக் கோங்க' என்று சொல்றாரு. ஏண்டா அங்க போகணும்னு கேட்டதுக்கு, எனக்கு பிடிச்ச வில்ஸ்மித், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், கார்ட்டூன் காரெக்டர்ஸ் எல்லாம் நியூயார்க்லதான் இருக்காங்க, சோ ஹேப்பியா ஜாலியா படிப்பேன்னு சொல்றான். என்னத்த சொல்ல... குழந்தைகளின் உலகம் ஆச்சரியங்கள் நிரம்பியதுமட்டுமல்ல, இப்படி சில திடீர் திருப்பங்களும் தான். :-)  விஷாலிடம் இப்போதும் அதே பிடிவாதம் வைராக்கியம் உண்டு, தனது விருப்பத்தை நிறைவேற்ற இவை இருக்கட்டும் என்பதை புரிந்தவனாச்சே  அவன் !

புதிதாக நிறைய தெரிந்துக் கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இன்றைய குழந்தைகளிடம் அதிகம். சுதந்திரமாக சிந்திக்கவும்  செயல்படவும் விட்டுவிட்டால்  அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதை புரியவைத்தவன் விஷால்.  எல்லாவற்றையும்விட  குழந்தையை ஒரு குழந்தையாக எப்படி வளர்க்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்.

* * *

இது வெறும் கட்டுரை அல்ல பதினோரு வயது வரையிலான அவனது அனுபவங்களின் சிறிய தொகுப்பு, என்றாவது ஒரு நாள் இந்த அனுபவங்களை, அவனது பார்வையில் அவன் எழுதலாம் ஒரு பிளாக் ஆரம்பித்து...! பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருப்பவனுக்கு  பிளாக்கில்  அக்கவுன்ட் வைக்க ரொம்ப நாளாகுமா என்ன  !!! :-)   

அப்புறம்

சொல்ல மறந்துட்டேனே  இந்த பதிவு யார் கண்ல எல்லாம்படுதோ  அவங்கலாம் என் மகனை அவசியம் (மனதிலாவது) வாழ்த்தியே ஆகணும்... பின்ன இன்னைக்கு(20/2/15) அவனுடைய பிறந்தநாள் ஆச்சே ... 

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா 
பேசும் பொற்ச்சித்திரமே...
அள்ளி அணைத்திடவே 
என் முன்னே ஆடி வரும் தேனே... !!

பெரியோர்களின் பரிபூர்ண அன்பும் ஆசியும் பெற்று தமிழ் போல் செம்மையாய் நீ வாழ வேண்டுமாய் இறைவனை வேண்டுகிறேன்.

என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிமா !!!


பிரியங்களுடன்
விஷால் அம்மா. 


பின்குறிப்பு : சைன்டிஸ்ட் ஆவாய் என்று நான் சொன்னதற்கு காரணம்  அவனுக்கு படிப்பின் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தணும் என்பதற்காக... அந்த ஐடியா நல்லவிதமாக வொர்க் அவுட் ஆனது. குழந்தைகளுக்கு இப்படி எதையாவது மறைமுகமாக சொல்லி அவர்களின் கவனத்தை நல்ல விதத்தில் திசைதிருப்பலாம் என்பது எனது அனுபவம்.


செவ்வாய், பிப்ரவரி 17

மாணவர்களை தரம் பிரிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை...??!



குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற   கனவுகளுடன் தேடித் தேடி பள்ளிகளில் சேர்த்தால் மட்டும் போதாது  அங்கே நமது  குழந்தைகளுக்கு உளவியல் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுகிறதா எனவும் கண்காணிப்பதும் இன்றைக்கு அவசியமாகிவிட்டது. 

எனது மகன்  படிக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் டாப்பர்ஸ்(Toppers), ஸ்லோலேனர்ஸ்(slow learners) என்ற பிரிவுகள்  உண்டாம். அதாவது  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிக்கிறார்கள். பாடங்கள் அனைத்தும் நடத்தி முடித்திவிட்ட நிலையில் ஸ்லோலேனர்ஸ் தினமும் பள்ளிக்கு சென்று தனியாக படிக்க வைக்கப் படுகிறார்கள். டாப்பர்ஸ்(முதல் நிலை மாணவர்கள்) தேர்வுகளின் போது மட்டும் வகுப்பிற்கு செல்கிறார்கள், தவிர எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்ற ஸ்பெஷல் சுதந்திரம் உண்டு. பாடங்கள்  குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவென்று தனி சலுகை வேறு .

இந்த முறை கீழ் சாதி மேல் சாதி என்ற பிரிவினைக்கு சிறிதும் குறைந்ததில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஸ்லோலேனர்ஸ் என்பவர்கள் பிறரின் பார்வையில் படிக்காத முட்டாள்கள் எதற்கு லாயக்கேற்றவர்கள்..  இது அவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை எண்ணங்களை எல்லாம் ஏற்படுத்தும் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஆசிரியர் அடித்தால் உடனே பள்ளிக்கு சென்று சண்டை போடுவதில் காட்டும் வேகத்தை பெற்றோர்கள் இதை குறித்தும் காட்டவேண்டும். அடிபட்ட புண் ஆறிவிடும். ஆனால் மனதில் ஏற்பட்ட காயம் ??! அவர்களின் எதிர்காலத்தை முடக்கிவிடும் செயல் இது.

எல்லா பெற்றோர்களுக்கும் இதைப் பற்றி தெரியுமா என தெரியவில்லை தெரிந்தாலும் வருத்தப்பட இதில் என்ன இருக்கிறது, நல்லதுதானே அப்படியாவது படிப்பார்களே என்ற எண்ணம் இருந்தால் ஸ்லோலேனர்ஸ் லிஸ்டில் இருக்கும் ஒரு மாணவனை அழைத்து சாதாரணமாக விசாரித்துப் பாருங்கள், அந்த எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொள்வீர்கள்,

எனது மகனின் நண்பனிடம் இது பற்றி விசாரித்தேன், அவன் சொன்னதில் இருந்து ...

* முதல்நிலை மாணவர்களிடம் நகைச்சுவையாக பேசினாலும் நோஸ்கட் பண்ணுவார்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கும்.  படிப்பின் மீது இருந்த கொஞ்ச ஆர்வமும் குறைந்துவிட்டது.

* ஆசிரியரின் 'என் தலையெழுத்து முட்டாள் பசங்க உங்களை வச்சு மேய்க்கணும்' என்ற  புலம்பலை அடிக்கடி கேட்க நேரும்.

* பள்ளிகளுக்கிடையே நடைபெறும் district level , state level விளையாட்டுப் போட்டிகளுக்கு Toppers மட்டுமே அனுப்பப்படுவார்களாம். (இந்த மாணவன் ஒரு foot boll player) திறமை இருந்தும் ஸ்லோலேனர்ஸ் விளையாட்டில் தவிர்க்கப் படுகிறார்கள்.

* சாதாரண குறும்புகளும் ஸ்லோலேனர்ஸ் செய்யும் போது பெரிதுப் படுத்தி பார்க்கப் படுகின்றன.

* மாணவர்களிடையே நட்பு இருக்கும் ஆனால் ஒற்றுமை இருக்காது !!

* பள்ளிக்குள்  உள்ளே ஏற்படும் வெறுப்பு வெளியிடங்களிலும் எதிரொலிக்கும்.

ஸ்லோலேனர்ஸ் என்ற பதம் மாணவர்களின் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்த ஆசிரியை ஒருவர் late blumers என்று மாற்றினார் .

என்றும் கூறினான்.

மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் போது அவர்களுக்குள் போட்டி பொறாமைகள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் இவை கைகலப்புக்கு கொண்டு செல்லும். இளவயது குற்றங்களின் காரணம் இன்றைய பள்ளிகளில் அல்லவா இருக்கிறது என்றெல்லாம் எண்ணி தனியார் பள்ளிகளில் நடக்கும் இந்த கொடுமையை  அரசு கவனிக்காதா தட்டி கேட்காதா என் மனம்  புழுங்கினேன்.

ஆனால்,  தற்போது தமிழக பள்ளி கல்வித்துறையே தரம் பிரிக்கச்சொல்லி  அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது என்பதை செய்திகளின் மூலம் அறிந்து அதிர்ந்தே விட்டேன்.

அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் பள்ளிக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உள்ள சில மட்டும் உங்கள் பார்வைக்கு...

* அரையாண்டு தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் இடை கடை என்று மாணவர்களை பிரிக்க வேண்டும்.

* கடைநிலை மாணவர்கள் சிறிதும் சிந்தனையில்லாத பரிதாபத்திற்குரியவர்கள்.

* இதில் நம்பர் 1 & 2 பிரிவுகள் டிவி பக்கமே திரும்ப கூடாது. அதே தரத்தில் உள்ள பிற மாணவர்களுடன்  மட்டுமே பேச வேண்டும். கடை நிலை மாணவர்களுடன் பிற மாணவர்கள் பேசக் கூடாது.

* பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 நிமிடங்களுக்குள் மதிய உணவை உண்டு முடித்துவிட வேண்டும். உடனே படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இந்த ரீதியில் தொடரும் அரசின் விளக்கெண்ணை அறிக்கையை இதுக்கு மேல் சொல்லவே வெறுப்பாக இருக்கிறது. 100/100 தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டுமென்றால் இதையெல்லாம் கண்டிப்பாக செய்யுங்கள் என்று ஆசிரியர்களுக்கு கட்டளை இட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு விடப் பட்ட இந்த அறிக்கை முட்டாள்தனத்தின் உச்சம். பெருந்தகை காமராஜர் அவர்களின் வரலாறு தெரியாத இது போன்றவர்கள் கல்வித்துறையில் இருப்பதே சாபக்கேடு.  விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பலர் பள்ளி இறுதியை கூட முடிக்காமல் வாழ்க்கையில் சாதித்ததை கல்வித்துறைக்கு யார் எடுத்துச் சொல்வது.

மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் தரத்தை நிர்ணயிப்பதும்  அதையும் பள்ளிக் கல்வித்துறையே வழிமொழிவதும் இங்கே மட்டும்தான் நடக்கும் . ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களை நீ அறிவாளி நீ முட்டாள் நீ எதுக்கும் லாயக்கற்றவன் என மற்றவர்கள் முன்னாள் சுட்டிக்காட்டி பிரித்து வைத்த பின்னர் அவர்களுக்குள் ஒற்றுமை என்பது எப்படி இருக்கும். அரையாண்டுத் தேர்வு முடிவுக்கு பிறகு நேற்று வரை நண்பனாக தோளில் கைப் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவனிடம் இனி அவனிடம் பேசாதே என்பது எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும். அதிர்ச்சி அவமானம் தாழ்வு மனப்பான்மை அனைத்தும் ஒரு சேர மனதை தாக்க வெளியே சிரித்து உள்ளே அழும்  நிலை பரிதாபம். தனது நண்பன் தன்னைவிட இரண்டு மார்க் அதிகமாக எடுத்தாலே முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பருவம் இது.  அதும் தவிர பெற்றோர்களே நீ வீக் என்று பள்ளியே சொல்லிடுச்சே என குத்தி காட்டும் விபரீதமும் இருக்கிறது.

நன்றாக படிப்பவர்களுடன் பிற மாணவர்களும் கலந்து அமர்ந்து படிக்கும் முந்தைய குரூப் ஸ்டெடி முறை நல்லதொரு முறை. மாறாக     சமத்துவத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய பள்ளிகளை மாணவர்களை தரம் பிரிக்கச்  சொல்லும் பள்ளி கல்வித்துறையின் செயல்  கடும் கண்டனத்திற்குரியது.  (இன்று மதிப்பெண்கள் அடிப்படையில் தரம் பிரிப்பார்கள் நாளை சாதி, மத அடிப்படையில் பிரித்தாளும் பிரிப்பார்கள்)



Slow learners  மன உளைச்சலை ஏற்படுத்தும் இம்முறை Toppers மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதே உண்மை.  தரம் பிரிப்பதை பற்றி பிளஸ் 2 படிக்கும் என் மகனிடம் கேட்டேன்,

'Toppers க்கு அதிக  பிரசர் இருக்கும். பள்ளியின் கெளரவமே உன் கைல தான் இருக்குன்ற மாதிரி ஓவர் பில்டப், டார்சர் எல்லாம் இருக்கும். ஒட்டுமொத்த ஆசிரியர்கள், பள்ளியின் கவனமும் நம்ம மேலேயே  இருந்தால் சுதந்திரமாக இயல்பாக நடக்க முடியாது.  இப்போ என்னை எடுத்துக்கோங்க இந்த இரண்டு category  பத்தியும் நான் கேர் பண்ணமாட்டேன். நான் free bird, படிக்கிறதும் படிக்காததும் என் இஷ்டம், யாரும் வலுகட்டாயமா என்மேல பிரஷரை ஏத்த முடியாது, சோ சந்தோசமா இருக்கிறேன்' என்று கூறினான்.  இந்த மனப்பக்குவம் எல்லா மாணவர்களுக்கும் இருக்குமா என்று சொல்ல முடியாது.

 குழந்தைகளுக்கு இந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கையில் இருக்கிறது. ஒருபோதும் என் மகனை நான் படி படி என்று வற்புறுத்த மாட்டேன், படிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி, அதுவே வாழ்க்கையல்ல என்றே சிறு வயதில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். என் மகனும் டியுஷன்,ஸ்பெஷல் கிளாஸ் என்று இதுவரை போனதில்லை, பத்தாம் வகுப்பில் 468 மார்க் எடுத்தான், அவ்வாறே  பிளஸ் 2 விலும் எடுப்பான்,  மேல்படிப்பு என்ன என்பதையும் அவன் முடிவு செய்திருக்கிறான்.  அதனால் அதற்கேற்றாற்போல் மார்க்  எடுக்கவேண்டும் என்று படிக்கிறான். அது போதும்.

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளின் மனதை பக்குவபடுத்தி வைத்துவிட்டால் பள்ளியும், கல்வித்துறையும் மாத்தி மாத்தி எத்தகைய பிரஷர் கொடுத்தாலும் அது நம் குழந்தைகளை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை.  பள்ளிகளுடன் மல்லு கட்டுவதை விட  இது சுலபம் அல்லவா ?!

இதோ தேர்வு நெருங்கியே  விட்டது. டிவி, கிரிக்கெட் பார்க்கட்டும் தப்பில்லை. மாணவர்களுக்கு தேர்வை பற்றிய பயம் அதிகம் இருக்கும், அதை களைந்து அவர்களின் மனதை ரிலாக்ஸ் ஆக  இருக்குமாறு மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.  மதிப்பெண்ணை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நம்புங்கள் !! அவர்கள் உங்கள் குழந்தைகள் !!





செவ்வாய், ஜனவரி 13

பாதைத் தவறும் "டீன் ஏஜ்" குழந்தைகள் ??!! பகுதி - 2

"18 வயதிற்கு குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 40 சதவீதமாக இருக்கிறது. இவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலச் சமுதாயத்தின் நிலை மிக மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான அத்தனை பிரச்சனைகளிலும் உடனடித் தீர்வு காணப்படவேண்டியது அவசியம். கட்டுப் படுத்த முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் கிடைக்கும் நன்மைகளுக்கு சரிசமமாய் தீமைகளும் இருக்கின்றன" என்றெல்லாம் கவலை தெரிவித்திருப்பவர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி. சஞ்சய் கிஷன் அவர்கள்.

அவரது கவலை அர்த்தமுள்ளது, இந்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கவேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின்  நீரோட்டத்தில் உங்கள் பிள்ளைகள் மிதக்கப் போகிறார்களா?  மூழ்கப் போகிறார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். 



நாம்  அனுபவிக்காததை நம் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என்ற பெருந்தன்மை தான் அனைத்து பிரச்சனைகளின்  ஆணிவேர். நீங்கள் அனுபவிக்காத சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என எண்ணுவது சரி அது எத்தகைய சந்தோசம் என்பதில் கவனம் மிக மிக அவசியம்.

டீன் ஏஜ் பிள்ளைக்கு  அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அக்கவுன்ட் இருப்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அதில் அவர்கள் எவ்விதமாக நடைபோடுகிறார்கள் என்ற கட்டாய கவனிப்பு தேவை.   நம் பிள்ளைதானே தவறென்ன செய்யப்போகிறான்/ள்  என்ற மெத்தனம் இனியும் வேண்டாம். இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கியமானவை செல்போன், இணையம், சினிமா இவை மூன்றும். தவறுகள் ஏற்படவும் அவை தொடரவும் அதிகமாக துணை புரிகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தேவையானதும் கூட ...ஆனால் அதை நாம் கையாளுவதை பொறுத்தே நன்மை தீமைகளின் சதவீதம் அமைகிறது. 

வளர்ந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் இன்னும் குழந்தைகள் தான், பிறந்த குழந்தையை வளர்க்கும் போது கவனம் வைத்ததை விட அதிகளவு கவனத்தை டீன்ஏஜிலும் வைத்தே ஆகவேண்டும் என்பது  காலத்தின் கட்டாயம்.

தவறுகளின் ஆரம்பம் 

மாணவன் ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே பலரும் சுட்டிக் காட்டுவது ஆசிரியர்களை நோக்கியே... தங்களின் ஒரு குழந்தையை சரியாக வளர்க்க முடியாத பெற்றோர் நாற்பது குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரை குறைச்  சொல்வது எவ்விதம் சரி. வெகு சுலபமாக ஆசிரியர்களை கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பள்ளியில் தானே அதிக நேரம் இருக்கிறார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த இடத்தில், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை விட முக்கியம் பெற்றோர்களின் வளர்ப்பு எத்தகையது என்பதே.  தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கத்  தவறினால் அதுவே பல பெரிய தவறுகளின் ஆரம்பமாகிறது. தவறும் குழந்தைகளைக்  கண்டிக்கும் ஆசிரியர்களை ஆள் வைத்து அடிக்கும் அளவிற்கு இன்றைய பெற்றோர் மாறிப் போனது வருத்தத்திற்குரியது. 

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று பெருமிதம் கொள்வோர் அதிகம், அதனால் பிள்ளைகளின் வாழ்க்கை திசை மாறுவதையும் அவர்கள் கவனிப்பதில்லை. அவ்வாறு அவர்களை திசை மாற்றுவதில் முக்கியமானவை செல்போன் பைக் இணையம் சினிமா.   


பள்ளிக் குழந்தைகளின் கைகளில் விதவிதமான செல்போன்கள்...வாங்கி தருபவர்கள் பெற்றோர்! அதன் மூலம் பேஸ்புக் வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து தனித்தே இருக்கிறார்கள். பெற்றோர்களும் இதை பெரிதுப்படுத்துவதில்லை.. 'ஒருவருக்கு ஒரு காதல்' என்று இல்லாமல் பல சிம் பல காதல் என்றாகிப்போனது.

கிராமத்திற்கு சென்றால் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம் ஏதோ ஒரு மரத்தடி அல்லது கோவிலில் அரசு கொடுத்த விலையில்லா மடிகணினியை சுற்றி அமர்ந்து பள்ளிமாணவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை கண்டுக்களிக்கிறார்கள். நகரத்தில் தனி அறையில் மகன் /மகள் படிக்கிறான் என்ற எண்ணத்தில்  வெளியே பெற்றோர், உள்ளே நடப்பதோ வேறு. வரைமுறையற்ற இணையவெளியில் உலவும் இவர்களுக்கு எது சரி எது தவறு என்ற விழிப்புணர்வை கொடுக்கவேண்டிய பெற்றோர் கண்டும்காணாமல் இருப்பது பல விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது.  
   

மொபைல் போன் அதிகம் உபயோகிப்பதால் தூக்கமின்மை, அமைதியின்மை ஏற்பட்டு மறதியில் முடியலாம்.  தவிர கம்ப்யூட்டர் உட்பட அனைத்து நவீன சாதனங்களையும் தூங்கச்  செல்லும் வரை உபயோகித்தால்  இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற இதுவும் ஒரு காரணம். .

என் குழந்தை எந்த தவறும் செய்யமாட்டான்/ள் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை வைத்துக் கொள்ளாதீர்கள். இன்றையநாளில் இத்தகைய நம்பிக்கை ஆபத்தானது. எங்கள்  வீட்டிற்கு எதிரில் இருக்கும் நகரின்  பெரிய பள்ளியின் 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு இருபது பேர் காம்பவுண்ட் சுவரின் அருகே  மரத்தடியில் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வந்து கூடி விடுவார்கள், ஏழரை மணிவரை மொபைல் போனில் பாட்டு கேட்பது, வீடியோ, பேஸ்புக் என்று அரட்டை அடிப்பார்கள். இது தினமும் நடக்கும் காட்சி. இக்கூட்டத்தில் ஒரு மாணவன் (மூன்று மாணவிகளுடன் காதல் ?!)தனியாக சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போனில் பேசிக்கொண்டிருப்பான். அதே பள்ளியில் படிக்கும் என் மகனிடம் 'இந்த பசங்க மாதிரி கட் அடிக்காம  கேர்ள்ஸ்தான்  ஒழுங்கா ட்யூஷனுக்கு போய் படிக்கிறாங்க'  என்றேன் அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், 'இவங்க டியூசன் கட் அடிச்சிட்டு பேசுறாங்க, அவங்க டியூசன்ல போய் பேசுறாங்க அவ்ளோதான் வித்தியாசம் !?'

பள்ளி  மாணவர்களுக்கு எதுக்கு செல்போன்? ஏதாவது அவசரம் உதவி என்றால் செல்போன் அவசியம் என்கிறார்கள், செல்போன் வருவதற்கு முன் நாமெல்லாம் தினம்  செத்துச்  செத்தா பிழைத்தோம்?! மேலும் பல பள்ளிகளில் செல்போன், பைக் இரண்டுக்கும் அனுமதி இல்லை ஆனால் இரண்டும் அவர்களிடம் இருக்கிறது...ஒன்று அமைதியாக(சைலென்ட் மோட்) பையில், மற்றொன்று அடுத்தத்  தெரு மரத்தடியில்...! இரண்டையும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போனில் இவர்களால் பேசமுடிகிறது என்றால் தவறு எங்கே இருக்கிறது.  நம்ம குழந்தைகள் சரியாக டியூசன்,ஸ்கூல் அட்டென்ட் பண்ணுகிறார்களா என்று அந்த இருபது பேரில் ஒருவனின் பெற்றோர் கூடவா  கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களின் இத்தகைய மெத்தன அலட்சியப் போக்கு வருத்தத்திற்குரியது. 

ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் சொல்லிக்கொடுப்பதை மாணவர்கள்  அக்கறையுடன் கவனித்துப் படித்தாலே போதும் , தனியாக எதற்கு  டியூசன்? அதுவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு ஸ்கூலில் டியூசன் க்கு செல்லும் மாணவ மாணவிகள் 9-4 ரெகுலர் கிளாஸ் அட்டென்ட் செய்துவிட்டு அதன் பின் மாலை நேர  டியூஷன் முடித்து  வீடு வர இரவு எட்டு, ஒன்பது  மணிக்கு மேல் ஆகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றிச்  சிறிதும் அக்கறை இன்றி ஸ்கூல் டியூஷன் செல்லாதவர்களை பிரைவேட் டியூஷனில் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். சேர்த்துவிட்டால் மட்டும் போதும், குழந்தைகள் படித்து விடுவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை, சுத்த முட்டாள்தனம்.

சினிமா 

வன்முறை, வக்கிரம், ஆபாசம், விரசம், இரட்டை அர்த்த வசனங்கள் இவைதான்  இன்றைய சினிமா. குழந்தைகளைக்  கட்டி போட்டு வைத்திருக்கும் சினிமா அவர்களின்  மனதில் காதல் என்ற விச(ய)த்தை விதைக்கிறது.  பள்ளி  மாணவர்கள் காதலிப்பதைப்  போல படமெடுபவர்களின் வீட்டுப்  பிள்ளைகள் காதல் திருமணம் செய்தால் மட்டும் பெற்றோருக்கு துரோகம் ,  அவமானம் என்று கண்ணீர் விடுகிறார்கள். ஏதேதோ காரணம் சொல்லிப்  பிரித்தும் விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப்  பார்த்து திசை மாறும் குழந்தைகளைப்  பற்றி யாருக்கும் இங்கே அக்கறையில்லை.  அநேக படங்கள் டீன்ஏஜ் காதலை நியாயப்படுத்துவதை போன்றே எடுக்கப் படுகின்றன. ...இதெல்லாம் சினிமாவில் மட்டும்  தான் சாத்தியம் என்பதை டீன் ஏஜ் குழந்தைகளுக்கு  யார் புரிய வைப்பது.? 

மாணவர்களின் பெரும்பாலான பொழுதுகள் இன்று சினிமாவைச்  சுற்றி மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது...சினிமா ஒரு பொழுது போக்கு என்ற கட்டத்தைத்  தாண்டி சினிமா தான் வாழ்க்கை என்று என்று வந்ததோ அன்றே நம் மாணவர்கள் தொலைந்துவிட்டார்கள்...தங்களின் வாழ்க்கையைத்  தொலைத்துவிட்டார்கள். இன்றைய மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நடிகனின் ரசிகர்கள், அவ்வாறு காட்டிக்கொண்டால்தான்  மாணவர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கிறதாம்??!

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  

புதன், ஆகஸ்ட் 13

குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு தேவை...ஏன் ? சிறு அலசல்

அற்புதமான,உயர்ந்த கலாசாரம் பண்பாடு கொண்டவர்கள்  நாம்  என்று பெருமை பேசும் இங்கேதான் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் மற்ற நாடுகளை விட மிக அதிகமாக இருக்கிறது,  மொத்தம் 53% குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  அதாவது இரண்டில் ஒரு குழந்தை இக்கொடுமைக்கு ஆளாகிறது!? இது எத்தகைய மோசமான நிலை, குழந்தைகள் நன்றாக வாழமுடியாத பாதுகாப்பற்ற ஒரு நாடு வல்லரசு கனவு காண்கின்றது.   இக்கொடுமைகள் நிகழ என்ன காரணம் என விவாதித்துக் கொண்டிருப்பதை விட இனி அவ்வாறு நடக்காமல் நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் முக்கியம். ஆனால்   மனிதனின் மனபிறழ்வு, வளர்ப்பு  முறை, சிதைந்துவிட்ட இன்றைய குடும்ப அமைப்பு, பொருளாதாரத்துக்கு  பின் ஓடும்  பெற்றோர்கள், திரைப்படம், இணையம் போன்ற ஊடகங்கள், சந்தர்ப்பச் சூழல் என்று பல காரணங்கள் இருக்கும் போது  'பண்பாடு கலாசாரம் சீரழிந்து விட்டது' என்ற ஒற்றை வரியில் நாம் இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறோம். 

பாலியல் துன்புறுத்தல் குறித்த சில புள்ளிவிவரங்களை பார்க்க நேர்ந்தபோது குழந்தைகளின் மீதான  கழிவிரக்கம் மேலும் அதிகரித்து மனம் பதறுகிறது.   

* குழந்தைகள் மீதான 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

* ஒருமுறை வன்முறைக்கு ஈடுபடுத்தப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.

* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.

* வன்முறைக்கு  உள்ளாகும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.



இந்த விவரங்கள் வெளிப்படையாக தெரிய வந்தவை மட்டுமே, வெளியில் வராத தெரியாத கொடுமைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும். இந்த கொடுமைகளை தடுக்க நாம் என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் ?! ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்தை குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதைப் போல இதற்கும் சொல்லிக் கொண்டிருப்பதை விட பெற்றோர்கள் தான் இதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.  முக்கியமாக தங்களின்  உடலை பற்றிய புரிதல் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் உறவுகள்/அந்நியர்கள் அத்துமீறும் போது, (அசட்டையாக) அனுமதிக்காமல் தடுக்க தங்களால் ஆன முயற்சியை எடுப்பார்கள். 

பாலியல் கல்வி  அவசியம்

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டிய காலக்கட்டம் இது. பாலியல் கல்வி என்றதும் படித்தவர்களே முகம் சுளிக்கிறார்கள். ஆனால் பாலியல் கல்வி என்பது உடலுறவை பற்றி மட்டுமே சொல்லிக் கொடுப்பது அல்ல என்பதை புரிந்துக் கொள்ள தவறிவிடுகிறார்கள். படம் வரைந்து பாகங்களை குறி என்பதை போன்றதும்  அல்ல பாலியல் கல்வி. ஆண் பெண் உடல் அமைப்பு, உடல் உறுப்புகள் வளர்ச்சி , ஹார்மோன் சுரப்பால் ஏற்படும் மாற்றங்கள், பெண்ணின் மாதவிடாய், ஆணின் விந்து வெளியேற்றம், உறுப்புகளின் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, .....என்று பல இருக்கின்றன. இவைகளை அறிவியல் ரீதியில் படித்து தெளிவது அவசியம். பேசாப் பொருளா மறுக்கப்பட்டத்தன் விதியை மாற்றித்தான ஆகவேண்டும்.

பாலியல் கல்வியை வீட்டில் இருந்தும்  தொடங்கலாம். உதாரணமாக பெண்ணின் மாதவிடாய் என்பது அச்சமூட்டக்கூடியதோ, அருவருப்பானதோ அல்ல அது இயல்பான ஒரு இயற்கை  நிகழ்வு என்பதை டீன்ஏஜ் பெண்களுக்கு புரிய வைப்பது அவசியம், இதை  தனது மகளுக்கு சொல்லவேண்டியது ஒவ்வொரு தாயின் கடமை. அதேபோல் ஆணுக்கும் பெண்ணின் மாதவிடாய் பற்றி தெரிந்திருப்பது நல்லது. அந்த நாட்களில்  பெண்ணின் அப்போதைய  மனநிலை , உடல்   அவஸ்தைகளுக்கு ஏற்றபடி பெண்ணின் உடனிருக்கும் சகோதரன், காதலன், கணவன் போன்றோர் புரிந்து நடந்து கொள்ள இயலும்.    

அதுவும் தவிர , பாலியல் குறித்த புரிதல் இருந்தால் தான்  காதல்  ஒரு உணர்வு என்பதும் பருவ வயதில் வரும் காதல்  பக்குவமான ஒன்றா அல்லது வெறும் இன கவர்ச்சியா என்பதையும் அப்போதுதான் அவர்களால் பிரித்துணரமுடியும். அதன் பிறகே அதற்கு ஏற்றார்ப் போல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சில தவறான புரிதல்கள்

நம் சமூகத்தில் காலங்காலமாக இருக்கும்  சில பழக்கங்களை தற்போது மாற்றினால் நல்லது.  குறிப்பாக சிறு குழந்தைகளின் முன் பெற்றோர் இவ்வாறுதான் நடந்துக் கொள்ள வேண்டும் என வரையறுத்துக் கொண்டதை சொல்லலாம்.

* தாய் உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக அங்கே வரும் குழந்தையிடம் ' அம்மா டிரஸ் பண்ணிட்டு இருக்கேன்ல நீ பாக்கக்  கூடாது வெளில போ' என குரலில் கடுமையுடன் சொல்வதுண்டு.  இது மிக தவறு. 'நான் என்ன பண்ணேன்,  அம்மா ஏன் இப்படி கோபமாகத்  துரத்துகிறாள்' என்று முதலில் குழம்பும், பிறகு 'அப்படியென்ன இருக்கு, நாம பார்த்தா என்னாகிவிடும்'  என்று யோசிக்கும். உடை மாற்றி  வெளியில் வரும் அம்மாவை இத்தகைய கேள்விக்களுடன் ஏறிட்டுப் பார்ப்பது சரியல்லவே. மாறாக அறைக்கு உள்ளே வந்த குழந்தைக்கு எதிர்ப்புறமாக திரும்பிக்  கொண்டு உடையை மாற்றலாம். ஆபாசமாக தெரியாமல் பிறர் அறியாவண்ணம் எவ்வாறு உடை மாற்றுவது என்பது எல்லா பெண்களுமே அறிந்த ஒன்றுதானே.  அப்படி இருக்கும் போது சிறுகுழந்தைகள் முன்பு மாற்றினால் தவறாகப் போய்விடும் என்று எண்ணுவது ஏற்புடையது அல்ல. சொல்லப்போனால் துணி விலகி உடல் தெரிவதை   அவர்களே கவனிக்காமல் இருக்கக்கூடும், ஆனால் பார்க்கக்  கூடாது என்று நீங்கள் வலியுறுத்தும் போதுதான் பார்த்தால் என்ன என்ற கேள்வியே எழும்.

* தற்போது வரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்காமல் முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்று தோன்றுகிறது.   குடும்பத்துடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆபாசமாக ஒரு காட்சி வந்துவிட்டால் உடனே வேகவேகமாக ரிமோட் எடுத்து சேனலை மாற்றும் வழக்கம் அநேகமாக எல்லா பெற்றோருக்கும் உண்டு. ஆனால் இது தேவையில்லை என்கிறேன் நான். அவசரப் படாமல்  இயல்பாக இருங்கள், அவர்கள் இதை சாதாரணமாகப்  பார்க்கலாம் அல்லது அவர்களாக முகத்தை வேறுப் பக்கம் திருப்பிக் கொள்ளலாம்  அல்லது அவ்விடத்தை விட்டு எழுந்துச் செல்லலாம். அவ்வாறு அவர்களாக அந்த காட்சியை தவிர்க்குமாறு விட  வேண்டுமே தவிர நாமாக வலியுறுத்திப்  பார்க்க தடுக்கும் போது 'அது என்னவாக இருக்கும், அதை நாம் ஏன் பார்க்கக் கூடாது, பார்த்தால் என்ன தப்பு' என்று சிந்தனை முழுவதும் அந்த காட்சியை சுற்றியே சுழலும். இறுதியில் அதே காட்சியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளி இடத்திலோ, நண்பர்கள் மூலமோ பார்த்தப் பின்பே  அவர்களின் மனது திருப்தி அடையும்.

* பெற்றோர்கள் தங்களின் பரஸ்பர அன்பை  குழந்தைகள் முன் வெளிக்காட்டக்கூடாது என்பார்கள், அதுவும்  சரியல்ல. இருவரும் லேசாக அணைத்துக் கொள்வதில் பெரிய தவறொன்றும் இல்லை. கட்டிப்பிடிப்பது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல் அவ்வளவே . குழந்தைகளை நாம் கட்டிப் பிடித்தால் அதிக மகிழ்ச்சி அடைவார்கள். அதே போன்று அம்மாவும் அப்பாவும் ஒற்றுமையாக அன்பாக இருக்கிறார்கள் என்று தான் புரிந்துக் கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் இன்றைய மன அழுத்தம் கொடுக்கும் வாழ்க்கை முறையில் இது போன்ற செயல்கள் அதிக பிணைப்பை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும் தெரியட்டுமே பெற்றோர்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பானவர்கள் தான் என்பது. இதை பார்த்து வளரும் குழந்தைகள் நிச்சயம் அன்பானவர்களாகத் தான் இருப்பார்கள்.

மேலே  குறிப்பிட்ட மூன்று விசயங்களும் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக வற்புறுத்தி திணிக்க வேண்டியவை என்று குறிப்பிடவில்லை, மாறாக இயல்பாக நடப்பதை அப்படியே விட்டுவிடுங்கள், பெரிதுப் படுத்த வேண்டாம் என்றே கூறுகின்றேன்.

 வீட்டுக்கு வீடு இணையமும், எல்லோர் கையிலும் மொபைல் போனும் வந்துவிட்ட காலத்தில்  எத்தகைய ஆபாசக் காட்சியையும் ஒரு நொடியில் கண்டு விட  முடியும். பெற்றோர்கள் தடுக்கும் ஒவ்வொன்றையும் அவர்கள் வேறு இடத்தில் கண்டிப்பாகத்  தேடிக் கொள்வார்கள் என்பதே இன்றைய நிதர்சனம்.

மறுக்கப்படும் அனைத்துமே ஒரு சமயத்தில் தனது கட்டுக்களை உடைத்துக் கொண்டாவது  பெற்றேத்தீரும் . அதற்கு தேவை தகுந்த ஒரு சந்தர்ப்பம்... சந்தர்ப்பம் தானாக அமையவில்லை என்றால் அமைத்தும் கொள்வார்கள் இன்றைய குழந்தைகள்.

இவ்வாறு  பாலியல் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள், சிறு விசயங்களை வலிந்து தடுப்பதை விட அவை என்னவென்றும் வயதுக்கு தகுந்தபடி கொஞ்சங்கொஞ்சமாக சொல்லித்தரலாம். கை கழுவிவிட்டுதான்  சாப்பிட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை போல ...

சிறு குழந்தைகளின் பாலியல் தொடர்பான கேள்விகள் 

பெண்களின் மார்பக வளர்ச்சி, உடலுறவு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், கற்பு, குழந்தைப் பிறப்பு பற்றியெல்லாம்  குழந்தைகளுக்கு பலவித சந்தேகங்கள் எழும், கேள்விகள் கேட்கிறார்கள். எதையோ ஒப்புக்கு சொல்லி மழுப்பாமல் உண்மையை சற்று எளிமையாக வயதிற்கு ஏற்றார் போல சொல்வது நல்லது . தொலைக்காட்சியில் ஜியாக்கிரபி சேனலே ஓரளவு சொல்லிவிடுகிறது, அதில் மிருகங்கள், பறவைகளின் வாழ்க்கை, சேர்க்கைகளை தெளிவாகவேப் பார்த்துவிடுகிறார்கள். அதை அப்படியே  மனிதர்களுக்கு பொருத்தி எப்படி சொல்வது என்பதுதான் நமது வேலை என்பதால் மிகவும் சுலபம்.  உங்களிடத்தில் திருப்தியான பதில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் அடுத்துச் செல்லும்  இடம் நண்பர்கள். அவர்களும் இவர்கள் வயதுதான் என்பதால் அங்கேயும் தெளிவு கிடைக்காது, ஆனால் பதில் கிடைக்கும் அதுவும் அரைகுறையாக! முற்றிலும் மாறாக சொல்லக் கூடிய பதிலில் பெரிய ஆபத்து  ஒளிந்திருக்கும். இது பெரிய சிக்கல்.

இன்றைய  குழந்தைகள் மிகவும் வேகமானவர்கள், எல்லாவற்றையும் கூகுளில் தேடுவதை போல இதையும் தேடலாம், மிக அபத்தமான ஆபாசமான பக்கத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்புகள்  அதிகம். எச்சரிக்கை.

அதனால் நீங்களே அவர்களுக்கு தெளிவுப்படுத்துங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, சீரியசாகவோ சொல்லவேண்டியது இல்லை,எளிய மொழியில் இயல்பாக ஜஸ்ட் லைக் தட் மாதிரி சொல்லுங்கள். பெரிய பெரிய விளக்கங்கள் கொடுத்து அவர்களை குழப்பாமல், தத்துப்பித்துனு உளறாமல் பதில் சொல்வது முக்கியம். ஒரு வரியில் பதில் இருந்தாலும் போதும்.

ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும்  ஒருவருக்கு மற்றவரின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும், அவனுக்கு ஏன் அப்படி, அவளுக்கு ஏன் அப்படி இருக்கிறது என்ற சந்தேகங்கள் தோன்றும். எதிர்பாலினத்தவரை அதிகமாக பிடித்தும், சுத்தமாக  பிடிக்காமலும் இருக்கும். இதை பற்றி எல்லாம் அவர்களிடம் சகஜமாக பேசாமல் நாம் தெரிந்துக் கொள்ள முடியாது. அவர்கள் கேள்வி கேட்டால் அதை அசட்டை செய்யாமல் குழந்தைகளிடம் பேச கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பமாக  எண்ணிப் பேசத் தொடங்குங்கள். குழந்தைகளிடம் எதிர்பால் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும்,  உடலமைப்பு தான் வேறு வேறே தவிர  அவர்களும் உங்களை போன்றவர்கள் தான். யாரும் யாருக்கும் குறைந்தவர்களும் அல்ல உயர்ந்தவர்களும் அல்ல என்றும்  சொல்லுங்கள்.

இறுதியாக,

திருமணம் முடிந்து 30 வருடம் கழிந்த பின்பும் உடலுறவில் உச்சம்(கிளைமாக்ஸ்) என்பது என்ன என்பது பலருக்கும் தெரிவதில்லை. அது என்னவென்று தெரியாமலும் அதன் அவசியம்  புரியாமல் தவற விடுவதும், தவறான உறவுகள் ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்பது  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்??

முக்கியமாக ஆணின் சிறு வயதிலேயே இந்த விதத்தில் இன்ன வயதில் இன்ன வயது பெண்ணுடன் தான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும்  மற்றவை எல்லாம் மிக தவறானவை என்பதையும் புரிய வைத்துவிட்டோம் என்றால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பதன் சதவீதம்   குறையலாம். பாலியல் கல்வியின் மூலம் இது சாத்தியமாக வாய்ப்பு இருக்கிறது, சிறு வயதில் இருந்தே  இக்கல்வியை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். வீட்டில் இருந்தே  தொடங்கலாம், பாலியல் கல்வியை வாழ்க்கைக்கான கல்வி என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

எனவே,

சிறு குழந்தைகள் பாலியல் தொடர்பான கேள்விகள் கேட்டால் உடனே பெரியவர்களின் பதில் நீ சின்ன பையன்/பொண்ணு இப்போ சொன்னா ஒன்னும் புரியாது வளர்ந்த பிறகு தானாக தெரியும், அதுவரை இதை பற்றி பேசவே கூடாது , ரொம்ப தப்பு ' என்று இனியும் சொல்லாதீர்கள்.

வளர்ந்ததும் எல்லாமே தானாக புரிந்துவிடாது, அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்கப்பட  வேண்டும். இவை இரண்டுக்குமே நம் சமூகத்தில் வழியில்லை. பாலியல் விழிப்புணர்வு இல்லாத சமூகம் சீரழிந்து தான் போகும் என்பதை கண்கூடாக ஊடகங்களில் கண்டு வருந்தி கடந்து போவதுடன் நமது சமூக கடமை அனேகமாக முடிந்தே விடுகிறது என்பது பெற்றோர்களாகிய நமக்கு மிக பெரிய அவமானம் !!?


* * * * * * * * * * * * * * *

நண்பர்களே இந்த தலைப்பை  சார்ந்து தொடர்ந்து எழுத இருக்கிறேன்...குறைகள் இருப்பின் தெரிவியுங்கள், மேலும் இதை பற்றிய செய்திகள், தகவல்கள் கொடுத்தாலும் உதவியாக இருக்கும்.

எனது இந்த கட்டுரை Lawyersline  மாத இதழில் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா

செவ்வாய், ஏப்ரல் 16

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?

குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு ஆபத்தில் முடிந்துவிட கூடும்...! குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்காக  வளைக்கப் பார்க்கும் பெற்றோரை எண்ணி எழுதப்பட்ட பதிவு மட்டுமே !

படத்தில் இருக்கும் இந்த சிறுவனின் நிலையில் தான் பெரும்பாலான  குழந்தைகள் இருக்கிறார்கள் !

பொம்மலாட்ட பொம்மைகளைப் போல இன்றைய குழந்தைகள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள் ! ஒரே குழந்தை அழகாய் ஆடணும், சுருதி பிசகாமல் பாடணும், விளையாடணும், நீச்சல் பழகணும், கராத்தே கத்துக்கணும்..... இவ்வளவும்  சிறப்பா பண்ணிட்டு படிப்பிலும்  முதல்ல வரணும் அப்படியே ஹிந்தி, ஆங்கிலம் சரளமா பேசணும் !!!??

என்ன கொடுமைங்க இது.  தங்களால் செய்ய முடியாததை தன் குழந்தையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் சரி,  ஆனால் தாங்கள் அன்று அனுபவித்த சின்ன சின்ன சந்தோசங்களை  குழந்தைகளும் அனுபவிக்கணும்னு ஏன் யாருமே நினைக்கிறது இல்ல...?? 


போட்டிகள் நிறைந்த இன்றைய உலகின்  வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமே என்கிறார்கள். அதற்காக குழந்தைகளின் குழந்தைத்தனத்தை பணயம் வைக்கிறார்கள்.   அதன் வயதுக்கு ஏற்ற செயல்களை செய்யவிடாமல் அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து பெரிய மனிதர்களாக்காதீர்கள். அதன் விளைவை வெகு சீக்கிரம் நீங்கள் அனுபவிக்க நேரும் மிக கொடுமையாக...! வயதுக்கு மீறிய பேச்சுகள், செயல்கள் என்றுமே ஆபத்து ! என் குழந்தை எப்படி பேசுறா என்பது எல்லா நேரமும் சாதாரணமாக சொல்லி பெருமைப்படகூடிய விஷயம் அல்ல.  

குழந்தை  குழந்தையாகவே...

தன்  போக்கில் விளையாடும் ஒரு குழந்தையை சிறிது நேரம் கவனித்துப் பாருங்கள்...அத்தனை ஆச்சர்யங்கள் அற்புதங்கள் அங்கே தெரியும் ! ஒவ்வொரு குழந்தையும் மதிப்பிடமுடியா பொக்கிஷங்கள் !! குழந்தை குழந்தையாக இருப்பது மட்டும்தான் அழகு, மாறாக ஒரு பொம்மை போல நடத்துவது மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.  . குழந்தை செய்வதை எல்லாம் திறமை என்ற பெயரை சூட்டி மறைமுகமாக ஒரு வன்முறைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மீடியாக்கள்  வேறு தன் பங்கிற்கு இந்த காரியத்தை கனகச்சிதமாக செய்கிறது

சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு 6 வயது குழந்தை ஆடிய ஆட்டம் எல்லோரையும் ஆரவார கூச்சலிட வைத்தது. முகநூலில் இந்த குழந்தையின் நடனத்தை ரசித்து பல ஆயிரம் ஷேர்ஸ், பலவித கமெண்ட்டுகள், அதிலும் ஒருவர் 'நீ நல்லா வருவே' என வாழ்த்த(?) எதில் நல்லா வர, குத்து பாட்டு நடிகையாகவா ? என்ன சொல்ல தெரியல. இந்த 'நல்லா வருவ' க்கு என்ன அர்த்தம்னும் புரியல.

பார்க்கும்  கண்ணை பொறுத்தது என்று எப்படி இதை ரசிப்பது. இன்றைய திரைப்படங்கள் நன்றாகவே நம் கண்ணையும் கருத்தையும் கெடுத்து வைத்திருக்கிறது. முகநூலில்  கருத்து சொன்னவர்களும் சிறு குழந்தை என்று எண்ணாமல் 'எப்படி இடுப்பை வளைக்குறா', கிறங்கடிக்குது கண்ணு, என்னமா கண் அடிக்கிறா என ஒவ்வொன்றாக வர்ணிக்கும் போது குழந்தையின் தாயால் அதை பாராட்டாக எண்ணி மகிழமுடிகிறது என்பது எனக்கு  ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சி ! 
போனமாதம்  ஒரு விழாவிற்கு சென்றிருந்த இடத்தில் , 4 வயதிருக்கும் ஒரு பெண்குழந்தையை பார்த்து எனக்கு அருகில் இருந்த ஒரு  தோழி ,'செம கிளாமர் ' என கமென்ட் அடித்து சிரித்தார். காரணம் இது தான்,  இடுப்பு தெரியும்விதத்தில் அக்குழந்தை அணிந்திருந்த மாடர்ன் உடை. சிறு குழந்தையின் ஆடை அழகை ரசிக்கும் லட்சணம் இப்படி இருக்கு! அதுவும் ஒரு பெண்ணே ப்படினா... ஆண்கள் ?!!

சினிமா,  தொலைகாட்சி போன்றவற்றை  பார்த்து அதில் வருபவர்களை போல தனது குழந்தையும் இருக்கணும் என்பதை போன்ற போட்டி மனப்பான்மை ஒரு கட்டத்தில் அதீத பிடிவாதமாகி குழந்தையின் மீது அப்படியே திணிக்கப்படுகிறது. பெற்றோர்களின் விருப்பத்திற்கு குழந்தை ஒத்துழைக்காத போது கொடிய வார்த்தைகளால் அர்ச்சனை...இறுதியில் அடி !!?   

அதுவும் தவிர, இது போன்ற போட்டிகள், நிகழ்ச்சிகளினால்  கைத்தட்டு வாங்குவது தான் முக்கியம் என்பது  குழந்தையின் மனதில் ஆழமாக  பதிந்துவிடுகிறது...கிடைக்கும் கைத்தட்டுக்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயாராகிவிடுகிறார்கள். வளர வளர பிறர் நம்மை பாராட்டனும் என்பதை நோக்கித் தான் அதன் பயணம் இருக்கும். தன் சுயத்தை தொலைத்துவிட்டு அடுத்தவங்க புகழ, நல்ல(!) பெயர் எடுக்க என்று முயலுகிறது. இதில் ஏதோ ஒன்றில் தோல்வி என்றபோதில் தன்னையே காயப்படுத்திக் கொள்கிறது...சமயத்தில் தற்கொலை ! 

தேவையற்ற அதிக மன அழுத்தம்


நண்பர்  ஒருத்தர் சொன்னார், 'என் குழந்தை இப்பவே ஓஷோ புக்  படிக்கிறாள்' என்று... நம்மில் பலருக்கு புரிய கடினமான விஷயத்தை குழந்தையை  படிக்கவைக்க வேண்டியதன் அவசியம் என்னனு புரியல...?! ஒன்பது  வயது குழந்தைக்கு வேண்டிய புத்திமதிகளை பெற்றோர்கள் நீங்கள் சொல்லி வழிகாட்ட முடியாதா? யாரோ ஒருவர்  அன்று அவர் வாழ்ந்த சூழல், பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று இன்றைய குழந்தைகளுக்கு எப்படி புரியும், எப்படி இன்றைய சூழலுக்கு சரியாக வரும்.  பெற்றோர்கள் நீங்கள் அதை படித்து அதில் குழந்தையின் வயதிற்கு  தேவையானதை மட்டும் அதன் மொழிக்கு ஏற்ற மாதிரி சொல்லி கொடுங்கள். அதை விட்டுவிட்டு ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ' இதை படித்து தெளிவு படுத்திக்கொள், வாழ்வை தைரியமாக எதிர்கொள்'  என்பது சரியல்ல. சிறு குழந்தையின் மனதைக் கடினமாக்காதீர்கள் ! 

ஒவ்வொரு குழந்தையின் ரோல்மாடல் அவங்க பெற்றோர்கள் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளை  சிறந்தவர்களாக வடிவமைப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. விவேகானந்தர், பாரதி, காந்தி, ஓஷோ, புத்தர்,அரிச்சந்திரன் போன்றவர்களை முதலில் உங்களிடத்தில்  கண்டுக்கொள்ளட்டும்... கண்டு கற்றுக்கொள்ளட்டும்... உணரட்டும்...உங்களை மதிக்கட்டும் ! நாளை புத்தகத்தில் மகான்களை பற்றி படிக்கும் போது என் தந்தை என் தாயும் இவர்கள் வழி நடப்பவர்களே , இவர்களை போன்றவர்களே என பெருமைப்படட்டும். குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகள் முன் பொய் சொல்வதை தவிருங்கள் அது போதும்.

மாறாக,

மகான்களை பாடத்தில் படிக்க வைத்து பிள்ளைகளை சிறந்தவர்களாக்கி விடலாம் என்று மட்டும் எண்ணாதீர்கள். உங்களிடத்தில் காணமுடியாத  நல்லவைகள் வேறு இடத்தில் காணும் போது குழப்பம் தோன்றும், 'நாம மட்டும் ஏன் பின்பற்றணும்' என்ற கேள்வி எழும் ! உங்களிடத்தில் இல்லாத ஒன்றை வேறிடத்தில் காணும்போது உங்கள் மீதான மதிப்பின் சதவீதம் பற்றியும்  சற்று சிந்தியுங்கள் !!  அரிச்சந்திரன் கதையை கேட்டு பின்பற்றி நடந்தது என்பது அந்த காலம் ...இப்போதைய உலகம் வேறு...! விரல் நுனியில் உலகத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் நிறைய பேசுகிறார்கள், அதைவிட நிறைய யோசிக்கிறார்கள் ! 
  
எங்கையோ ஏதோ ஒரு குழந்தை திருக்குறளை மொத்தமாக ஒப்பிக்கிறது    என்பதற்காக உங்கள் குழந்தையையும் படுத்தி எடுக்காதீர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் திறமை இருக்கும். அது எது என்று கண்டு அந்த வழியில் நடக்க விடுங்கள், வழிகாட்டுங்கள், வழிக்காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! மாறாக உங்கள் விருப்பதிற்காக குழந்தைகளை வளைக்க பார்க்காதீர்கள், ஒடிந்துவிடுவார்கள் ! 

பொருளாதாரத்தில்  உயர்ந்தவர்களாக, புகழ் பெற்றவர்களாக ஆகவேண்டும் என்று எண்ணி வளர்க்காமல் நல்ல மனிதர்களாக, அன்பு நிறைந்தவர்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக வளருங்கள். அப்போதுதான் உங்களின் எதிர்காலம் நிம்மதியாக சந்தோசமாக கழியும்.

ஆரோக்கியமான சமூதாயம் நம் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை நினைவில் வைத்து நம் குழந்தைகளை அதன் இயல்பிலேயே வளர்த்து நம் நாட்டிற்கு நல்ல மகனை/மகளை கொடுப்போம். ஒரு சமூகம் சிறப்பாக கட்டமைக்கப்பட பெற்றோர்களின் பணி மிக முக்கியம் !

தயவுசெய்து குழந்தையை குழந்தையாக இருக்க விடுங்கள், வாழவிடுங்கள்...! உலகை தெரிந்துக் கொள்ள அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.. மூன்றே வருடத்தில் தென்னையை  வேண்டுமானால் காய்க்க வையுங்கள் குழந்தையை அல்ல !

குழந்தையின் வயதுக்கு  மீறி அதிகமாக திணிக்கும் போது அதை எதிர்கொள்ளமுடியாமல் சோர்ந்து  தன்னம்பிக்கையை  இழந்து விடுகிறது. சிறுவயதிலேயே பாராட்டுக்கு மயங்கும் குழந்தை அதே பாராட்டை வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் எதிர்பார்க்கும் போது இந்த உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்... எரிச்சல், கோபம் , இயலாமை,விரக்தி, சுயபச்சாதாபம்  போன்றவைகள் மனதை ஆக்ரமித்து கடுமையான மன அழுத்தத்தில் விழுந்து விடுகிறார்கள்.

தனது குழந்தைக்குள்  இவ்வாறு நிகழ்வது பெரும்பாலான பெற்றோருக்கே தெரிவதில்லை. தன்னால் முடியவில்லை என்ற நிலையில் தன் வயதை ஒத்த அல்லது தன்னை விட வயது குறைந்த ஒன்றின் மீது தன் கோபத்தை பதிய வைக்கிறது. அது பாலியல் ரீதியிலாக கூட இருக்கலாம் என்பதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியுடன் கூடிய உண்மை !?

பின்குறிப்பு 

பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் குழந்தைகளை விட பாலியல் துன்புறுத்தலை நிகழ்த்துபவர்கள், வன்கொடுமையை ரசிப்பவர்கள் அதிகம். அவர்களின் ஆரம்பம் எங்கிருந்தும், இப்படியும் தொடங்கலாம் என்பதை இந்த பதிவு உணர்த்த முயலுகிறது. வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம்... தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் .

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் மனதோடு மட்டும்
கௌசல்யா  

வியாழன், ஜூன் 28

பள்ளிகளில் மாணவிகள் படும் சங்கடங்கள்...! ஒரு பார்வையும் தீர்வும் !!

ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம். பெண் கல்வியே சமுதாய முன்னேற்றத்திற்கு சிறந்த வழி - பாரதியார்


மொத்த மக்கள்தொகையில் பாதிக்குபாதி இருக்கும் பெண்கள் கல்வி அறிவில் முன்பை விட இப்போது முன்னேற்றமான நிலையில் இருக்கிறார்கள் என முழுமையாக நிறைவு கொள்ள இயலவில்லை...காரணம் கல்வி நிலையங்களில் மாணவிகள் அனுபவிக்கும் சங்கடமான ஒரு பிரச்சனை. வெளியே பேசவே கூடாத ஒன்று  என்ற நிலை என்று மாறும் தெரியவில்லை...!!


2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கின் படி இந்தியளவில் படித்த பெண்கள் 65%. இது 2001 ஆம் ஆண்டு இருந்ததை விட 12% அதிகமாகும். அதே சமயம் 8 ஆம் வகுப்பில் படிப்பை விட்டு விலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு குடும்ப சூழ்நிலை மட்டும் காரணம் அல்ல பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான கழிப்பறையும், தண்ணீர் வசதியும் இல்லாதது !!? இந்தியாவில் உள்ள அரசு சார்ந்த அனைத்து வகையான பள்ளிகளிலும் 51% பள்ளிகளில் டாய்லெட் வசதியே  இல்லை. 74% பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லையாம். இதனாலேயே 7 & 8 ஆம் வகுப்பு மாணவிகளில் (வயதுக்கு வந்துவிடுவதால்) 7% மாணவிகள் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள் என்ற காரணத்தை ஒரு செய்தியாக எண்ணி கடந்து போக முடியவில்லை.

பள்ளிகளில் கழிப்பறை எவ்வளவு இன்றியமையாதது என்பதில் சிறிதும் அக்கறை இன்றி இருக்கின்றன பள்ளி நிர்வாகமும், அரசும்...!  கிராம, நகர  தெருவோரங்கள் அசிங்கப்படும் அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆரம்ப பள்ளியில் கழிப்பறை பற்றிய கவனத்தை,விழிப்புணர்வை மாணவர்கள் மனதில் பதிய வைக்க தவறியதே...??!! கழிப்பறை இல்லாத அல்லது இருந்தும் சுகாதாரமற்ற பள்ளிகள் எவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை போதிக்கும்...?! நல்லவைகளின் ஆரம்பம் பள்ளி என்பது திரிந்து சமூக ஒழுங்கீனங்களின் ஆரம்பம் பள்ளிகள் என்றாகிவிட்டதோ...??!

ஏற்படும்  பிரச்சனைகள்

இன்றைய தினத்தில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்...ஆனால் பள்ளி செல்லும் நம் குழந்தைகளோ சுகாதாரமற்ற கழிவறை பக்கம் போக தயங்கியே நீர் அருந்துவதில்லை...காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் அவர்கள், மீண்டும் வீடு வந்தபின்னே சிறுநீர் கழிக்கிறார்கள்...இவ்வாறு சிறுநீர் வெளியேறாமல் இருப்பதால் கிட்னி பாதிப்படைய கூடிய வாய்ப்பு இருக்கிறது...தண்ணீர் அருந்தாமல் தவிர்ப்பதால் வயிற்று கோளாறுகளுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். சுகாதாரமற்ற கழிப்பறையை பயன்படுத்துவதின் மூலம் நோய்தொற்று ஏற்பட்டு கருப்பப்பை பாதிப்படைவதுடன் வெள்ளைபடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட அது தொடர்பான பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரும் என சொல்கிறார்கள்.
.
பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது இதை பற்றி அவசியம் விசாரிக்கவேண்டும்...சங்கடமின்றி 'அந்த மூன்று நாட்களை' கடந்து போக கூடிய அளவிற்கு அங்கே பாத்ரூம் வசதி இருக்கிறதா ?! அது சுத்தமாக இருக்கிறதா? இன்னும் சொல்ல போனால் தாய் அந்த இடத்திற்கு சென்று பார்த்து வரலாம்...அங்கே ஏதும் சரியில்லை என்றால் பள்ளி நிர்வாகத்திடம் சரி பண்ண சொல்ல வேண்டும். 

அரசின் இலவச சானிடரி நாப்கின்

தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் கொடுப்பதாக அறிவித்திருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய நல்ல விஷயம்...அதே நேரம் பெண்கள் பள்ளிகளில்/கல்லூரிகளில்  கழிப்பறை வசதி சரியான விதத்தில் இருக்கிறதா என அரசு கவனித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். கட்டாயம் எடுத்தாக  வேண்டும் !!

மாணவிகளின்  தவறு அல்ல !

மாணவிகள் உபயோகித்தப் பின் சானிடரி நாப்கின்களை நல்ல முறையில் டிஸ்போஸ் பண்ண வேண்டும். ஆனால் சரியான முறைப்படி செய்ய இயலாததால் டாய்லெட் மற்றும் கழிவு நீர் செல்லும் குழாய்களில் அவை அடைத்து கொண்டு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது...அகற்றுவதற்கு ஆள் கிடைப்பதில்லை. அடைத்து கொண்டதை அகற்ற தாமதமாகும் ஒவ்வொரு மணி நேரமும் சுகாதார கேடு  அதிகரிக்கிறது.

பள்ளி நிர்வாகம் இது குறித்து மாணவிகளிடம் கண்டிக்கும் நிலையில் அவர்கள் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துவிடுகிறார்கள்...இங்கே தவறு மாணவிகளிடம் இல்லை, பள்ளி நிர்வாகத்திடம் இருக்கிறது.


பள்ளி மாணவிகளை பொறுத்தவரை மாதம் தோறும் அல்லாமல் 2, 3, வெகு சிலருக்கு 5 மாதங்களுக்கு ஒரு முறை தான் மாதவிடாய் நிகழுகிறது...அது போன்ற சமயத்தில் அதிக அளவில் ரத்தபோக்கு இருக்கலாம். கிராமத்து மாணவிகளை பொறுத்தவரை துணியை பயன்படுத்துவார்கள், அதிகபடியான ரத்தபோக்கால் பெரும் அவதிப்பட நேரும். ஒரு நாள் முழுவதும் துணி அல்லது நாப்கின் மாற்றாமல் வகுப்பில் இருப்பது வெகு சிரமம். பிறருக்கு தெரியும் படி ஒருவேளை இருந்துவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய அசுயை, அவமானம் (?) போன்றவை அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். உடல் ரீதியிலான பாதிப்புகளுடன் உளவியல் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள்...

உபயோகித்த நாப்கின்களை அகற்ற சரியான வழிவகை செய்தாக வேண்டும்.

என்னதான் வழி?!

2011 ஆம் ஆண்டு திருப்பூர்  ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திரு. A.ஈஸ்வரன் என்பவர் மாணவிகள் சந்திக்கும் இத்தகைய பிரச்னைக்கு என்ன வழி என தீர யோசித்து ஒரு வழிமுறையை கண்டுபிடித்து வெற்றியும் பெற்று இருக்கிறார். பலரின் பாராட்டையும் பெற்று உள்ளார். இப்படியொரு வித்தியாசமான முயற்சியை பாராட்டி 1997 ஆம் ஆண்டு மங்கையர் மலர், மகளிர் சிந்தனை, மாலை மலர் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. செய்தி கேள்விப்பட்ட திருப்பூர் பகுதிகளில் உள்ள மில் கல்லூரிகளில் இருந்து வந்து இதை பார்வை இட்டு சென்று தங்கள் இடங்களிலும் அமைத்துள்ளனர். தற்போது தொழில் ரீதியாக மின்சாரம், எல்.பி.ஜி கேஸ் போன்றவை பயன்படுத்தி தயாரித்து பெண்கள் கல்லூரி பள்ளிகளுக்கு விற்று வருகிறார்கள்...!

அப்படியென்ன  கண்டுபிடிப்பு ?!

பழைய இரும்பு டிரம்மை சில மாற்றங்கள் செய்து புகை போக்கியுடன் கூடிய பாய்லராக வடிவமைத்து வைத்து அதன் இரு புறமும் 2 பாத்ரூம்களை கட்டி இருக்கிறார். பாத்ரூம் செல்லும் மாணவிகள் சிலிண்டரில் உள்ள சிறிய திறப்பானைத் திறந்து உபயோகபடுத்திய துணியை/நாப்கினை போட்டு விடலாம். பள்ளி முடிந்த மாலை நேரம் பாய்லரின் கீழேயுள்ள கதவைத்திறந்து மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி எரித்து விடலாம். புகை போக்கி மூலமாக புகை வெளியேறி விடும்...!


மத்திய அரசின் RMSA திட்டம் மூலமாக பெண்கள் பள்ளிகளில் கழிப்பறை கட்ட பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்...வெறும் கழிப்பறை மட்டும் கட்டுவதை விட இது போன்ற பாய்லர்களையும் சேர்த்து கட்ட தமிழக அரசும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


ஆணென்ன ? பெண்ணென்ன ?

மாணவன் , மாணவி யாராக இருந்தாலும் வீட்டில் இருப்பதை விட பள்ளிகளில் தான் அவர்களின் பெரும்பாலான நேரம் கழிகிறது. அவர்களின் ஆரோக்கியத்திலும் பள்ளிகள் அக்கறை காட்டவேண்டும். ஒரு நாளைக்கு பள்ளி செல்லும் சிறுமி/சிறுவன் இரண்டு கிளாஸ் நீர் அருந்துவதே அதிகம். பெற்றோர் கொடுத்துவிடும் தண்ணீரையும் குடிக்காமல் மீதம் எடுத்து வருகிறார்கள்...கேட்டால் தண்ணீர் குடிக்க டைம் இல்ல, ஏதாவது ஒரு சாக்கு. இதை பெற்றோர்கள் நாம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளை தயங்காமல் தண்ணீர் அதிகம் குடிக்க சொல்லுங்க...பள்ளியில் இருக்கும் கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்னையை குழந்தைகள் சொல்ல மாட்டார்கள் நாம் தான்  அக்கறை எடுக்கவேண்டும்...தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை அணுகி கழிவறை வசதிகள் எவ்வாறு இருக்கிறது என விசாரித்து கவனியுங்கள்.

பெண் குழந்தைகள் என்றால் மேற்கூறிய பாய்லர் பற்றி பள்ளிகளுக்கு எடுத்து கூறுங்கள். படிப்பில் மட்டும் அக்கறை கொள்ளாமல் அவர்களின் ஆரோக்கியத்திலும் சிறிது கவனம் கொள்ளுங்கள்.

                                                                  * * * * * * * * *

 தகவல்,படங்கள்  உதவி 

- நன்றி திரு. A. ஈஸ்வரன்,
  http://jaivabaieswaran.blogspot.in/2010/04/blog-post_14.html
                                   
  மற்றும் இணையம் 



செவ்வாய், மார்ச் 6

என்னவாயிற்று நம் குழந்தைகளுக்கு ?!


இன்றைய மாணவர்களின் உலகம் எங்கே செல்கிறது ? தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன், சென்னையை போல இங்கயும் உங்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய மாணவர்கள், வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவன், பிளேடால் கையை கிழித்த மாணவன், இதெல்லாம் போதாது என்று நெல்லையை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்...!!?

எதனால் இப்படி?!

பொருளாதார வசதி பெருகிவிட்ட இன்றைய காலத்தில் கை விரல் நுனியில் உலகத்தை கொண்டுவந்து விடும் இணையம், கம்ப்யூட்டர், டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்குகள் என சுற்றிலும் குழந்தைகளின் உலகம் வண்ணமயமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் மனது எந்த நிலையில் இருக்கிறது...எதை சிந்திக்கிறது...எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கிறோம் . 

மாணவன் தவறு செய்தால் பெற்றோர்கள் பள்ளியை கை காட்டுகிறார்கள், பள்ளிகள்  ஆசிரியர்களை கைகாட்ட , ஆசிரியர்கள் கல்வி முறையை கைகாட்ட , கல்வி முறைக்கு காரணம் அரசாங்கத்தில் வந்து முடிகிறது...இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்ததின் மேல் பழியை போட்டு தப்பிவிடுகிறார்கள் அல்லது நழுவி விடுகிறார்கள். ஆனால் தொடரும் அவலங்களை தடுத்து நிறுத்த போவது யார் ? கண் முன்னே சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டு போகும் இன்றைய மாணவச் செல்வங்களை காப்பாற்ற வேண்டாமா ? இவர்கள் தானே நாளைய உலகை ஆளப் போகிறவர்கள், ஆனால் எப்படி ஆள முடியும் இவர்களால்...குப்பைகள் சேகரிக்கும் தொட்டியாக மனதை வைத்துள்ளார்களே ?!

ஏதோ ஒரு மாணவன் முதல் மாணவனாக வந்துவிட்டான் என பெருமை பாராட்டி அவன் பின்னால் ஓடும் சமூகம் பிற மாணவர்களின் மனநிலை பற்றி சிறிதாவது யோசிக்கிறதா ?

நெல்லை மாணவனின் தற்கொலை முயற்சி

பாளையங்கோட்டையை சேர்ந்த மார்டின் ஆரோக்கியராஜ் இவருடைய 13 வயது மகன் ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை வைத்து நெற்றிப் பொட்டில் தன்னைத் தானே சுட்டு கொண்டான். அலறி அடித்து மாடிக்கு சென்ற பெற்றோர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.படிப்பு சரியாக வரவில்லை, தேர்வில் நல்ல மார்க் வாங்கவில்லை, அந்த வருத்தத்தில் சாக முடிவு செய்தததாக கூறி இருக்கிறான்.

இதில் எங்கே நடந்தது தவறு ? பள்ளியிலா, கல்வி முறையிலா எதில் தவறு...?! இவை இரண்டையும் விட தவறின் பக்கம் பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.


இன்றைய பெற்றோர்களே ?!!!

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை  என பிள்ளைகள் மனதில் பதிய வைத்த பெற்றோர் தான் முக்கிய காரணம். சரியாக படிக்கவில்லை, மார்க் குறைவாக எடுக்கிறான் என்று பெற்றோரை அழைத்து சுட்டி காட்ட வேண்டியது பள்ளியின் கடமை. ஆனால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்...?!


தங்கள் பிள்ளைக்கு படிப்பில் நாட்டம் இல்லை என்று தெரிந்ததும், " ஏண்டா இப்படி இருக்கிற, அந்த பையனை பாரு, எல்லா சப்ஜெச்டிலும் 90 க்கு மேல, அவனுக்கு மட்டும் எப்படி முடியுது, நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேனே, இருந்தும் ஏண்டா இப்படி இருக்கிற, எனக்குன்னு வந்து பிறந்தியே ,மத்தவங்க முன்னாடி மானத்தை வாங்கிட்டியே...அப்படி இப்படின்னு பையனை படுத்தி எடுக்கிறார்கள் பெற்றோர்கள். தங்களது டென்ஷனை பையனின் மீது திணித்து அவனை மன அழுத்தத்தில் விழ வைத்து விடுகிறார்கள்...

இது போன்ற ஒரு நிலை நமது குழந்தைக்கு ஏற்பட்டால் கலவரமடைந்து விடாமல் நிதானமாக பொறுமையாக அணுகி பாருங்கள்...

* படிப்பது மனதில் பதியவில்லையா

* படிப்பின் மீது விருப்பம் இல்லையா ? அல்லது வேறு எதன் மீதும் விருப்பம் இருக்கிறதா

* பள்ளி/ஆசிரியர்கள் பிடிக்கவில்லையா?

* அவர்கள் நடத்துவது புரியவில்லையா?

* நாங்க சொல்லி கொடுத்தா பிடிக்குமா?

இப்படி எல்லாம் கேட்டு விட்டு எதற்கும் சரியாக பதில் வரவில்லை என்றால்

" கொஞ்சம் விருப்பம் வைத்தால் சுலபமாக படித்து விடலாம்...உன்னை முதல் மாணவனாக வா என சொல்லவில்லை...ஆனால் போதுமான அளவு படிச்சா போதும், குறைவான மார்க் தான் எடுக்கிறான் என்று ஆசிரியர் புகார் பண்ணினால் அவர்களை நான் பேசி சமாளித்து கொள்கிறேன்...இனி அதை பற்றி கவலைபடாத...ஜாலியா படி...நிறைய விளையாடு...எந்த சப்ஜெக்ட் பிடிக்குதுன்னு சொல் அதையே 11 வது வகுப்பிலும் எடுப்போம்...உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் , உன் மார்க் இல்லை...இதை மனசுல வச்சுக்கோ" சரியாக படிக்காத உங்கள் பிள்ளையிடம் இந்த விதத்தில் சொல்லி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தே இராத  ஒரு மேஜிக் விரைவில் நடக்கும்.

பாண்டிச்சேரியில் மனநல ஆலோசகர் ஒருவர் கவுன்செலிங் கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். குழுமி இருந்த மாணவர்களிடம்,

" என்ன தப்பு செய்தாலும் தண்டனை  கிடையாது, அப்படின்னு சொன்னா யார் யார் என்ன என்ன தப்பு பண்ணுவீங்க " என்றார்.

* சாக்லேட் திருடி தின்பேன்

* அப்பா மூக்கு கண்ணாடியை உடைப்பேன்

* சாம்பாரில் உப்பு அள்ளி போடுவேன், போன்ற பதில்களை தொடர்ந்து ஒரு சிறுவன் " என் அம்மா அப்பாவை குத்தி கொள்வேன்" என்றான்...! நம்பித்தான் ஆகணும் நடந்து உண்மை இது.

காரணம் கேட்டதற்கு, " பகல் புல்லா ஸ்கூல்ல படிச்சிட்டு வந்தா வீட்டிலும் படி படினு நச்சரிக்காங்க, அப்புறம் டியூசன் , ஹிந்தி ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் முடிய 9 மணி ஆகிடும்...சனி, ஞாயிறும் புல்லா ஹோம்வொர்க் கொடுப்பாங்க  ...அதை செய்ய லேட் ஆனா வீட்ல ஒரே திட்டு...இந்த அப்பா அம்மா எனக்கு வேண்டாம் "

அங்கிருந்த ஒருத்தர் முகத்திலும் சிறிதும் சலனமில்லை, வெறித்தபடி இருந்தனர், அவனது பெற்றோர் உட்பட...!! அப்புறம் அந்த பையனுக்கு மட்டும் தனியா கவுன்செலிங் கொடுத்திருக்காங்க...!

ஆகையால்,

" உங்கள் குழந்தை எதுவாக ஆகவேண்டும் என நீங்க எண்ணுகிறீர்களோ அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்...தாங்கள் என்னவாக வேண்டும் என குழந்தைகள் எண்ணுகிறார்களோ அதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள், அது போதும் "

தற்கொலைகள் ?!!

கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளியின் விடுதியில் ஆசிரியர் தன்னை துன்புறுத்துகிறார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டான் பிளஸ் 1 மாணவன். இது ஒரு வகையான பழிவாங்கும் மனோநிலை. ஆசிரியரை பலி வாங்குவதாக எண்ணி தன்னை மாய்த்து கொள்ளும் இத்தகைய செயல் மிகவும் ஆபத்தான ஒன்று. வெளியே பார்க்கும் போது சாதாரணமாக காணப்படும் குழந்தைகளின் மனதில் இதை போன்ற எத்தனை ஆபத்துகள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை.

பெற்றோரின் அதீத கண்டிப்பால் வீட்டைவிட்டு வெளியேறும் மாணவர்களும் இருக்கிறார்கள். பெற்றோரின் கவனிப்பு சரி இன்மையால் வன்முறைக்கு மாறுபவர்களும் உண்டு.

அதிக அழுத்தத்தை மாணவர்களால் சமாளிப்பது இயலாது...பெற்றோரின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு தன் பிள்ளை மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிடவேண்டும் அது கல்வியால் மட்டும் தான் முடியும் என்பது என்னை பொறுத்தவரை ஒரு தவறான கண்ணோட்டம்.

ஒரு பக்கம் பெற்றோர்களின் படி படி என்ற வற்புறுத்தல் மற்ற்றொரு பக்கம் தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற வேண்டும் என்று நெருக்கும் பள்ளி இவற்றுக்கிடையே தத்தளிக்கிறார்கள். அவர்களின் மெல்லிய இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. ஒரு சில பிள்ளைகள் நன்றாக படித்து நெருக்கடியை சுலபமாக சமாளித்துவிடுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சுமாராக படிக்ககூடியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.


அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டும் அறிவாளிகள் அல்ல. யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை, முயற்சி,உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும். பள்ளிப்படிப்பை கூட தாண்டாத பலர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து புரியவைக்க வேண்டும். அது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.


பக்குவபடுத்துங்கள் !! 


தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று உணராத நாம் தான் பிள்ளைகளை குறை சொல்கிறோம். "ஆமாம், அந்த டீச்சருக்கு வேற வேலை இல்லை, எதையாவது சொல்லி கொண்டே இருக்குங்க, நீ கண்டுக்காத விடு " என்று சொல்லும் பெற்றோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். "நானே என் பிள்ளையை அடித்ததில்லை, ஆசிரியர் எப்படி உன்னை அடிக்கலாம்" என்று கூறினால் அந்த பிள்ளைக்கு எப்படி தன் ஆசிரியர் மேல் மரியாதை வரும், ஆசிரியர் தனது நன்மைக்கு தான் கண்டிக்கிறார் என்பது எப்படி புரியும்?!! அறிவுறுத்தும் தனது ஆசிரியரை ஒரு எதிரி போல் தான் எதிர்கொள்வார்கள். 

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் பெற்றோர் பாலமாக இருக்கவேண்டும்.ஆசிரியரை மதிக்க வேண்டும், யாராக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஒருவேளை ஆசிரியரிடமே தவறு இருந்தாலும், கண்டிப்பில் குறை இருந்தாலும் அதை நம் குழந்தைகள் சுலபமாக சமாளித்துவிடுவார்கள், பெரிது படுத்த மாட்டார்கள்.  அவர்களின் மனம் பக்குவபட்டுவிடும். இந்த பக்குவ பட்ட மனநிலைக்கு நம் பிள்ளைகளை தயார் படுத்தி வைத்துவிட்டால் போதும், அதிக பாட சுமையோ, ஆசிரியரின் அதீத கண்டிப்பா எதுவுமே அவர்களை அசைக்காது, தெளிவாக இருப்பார்கள்.

 "ஐயோ உலகம் இப்போ மோசமா இருக்கே என் பிள்ளை இதன் நடுவில் எப்படி, என்ன பாடுபட போறானோ " என்று கவலைபடாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் மெனகிடத்தான் வேண்டும்.


எந்த சூழ்நிலையையும், எத்தகைய மனிதர்களையும் சமாளிக்க கூடிய விதத்தை குழந்தைகள் மனதில் அவர்கள் வயதின் ஒவ்வொரு கட்டத்திலும் பதிய வைக்க வேண்டும்...சிறிய வயதில் பதிந்தவை நாம் உடன் இல்லாத போதிலும் அவர்களுக்கு கைகொடுக்கும்.

பின்குறிப்பு :

அதிக வேலை பளுவின் காரணமாக முந்தைய பதிவில் சொன்னது போல உடனே அடுத்த பதிவை வெளியிட இயலவில்லை. குழந்தைகள் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் , அந்த அளவிற்கு இன்று இப்பிரச்சனை மிக முக்கியமானதாக இருக்கிறது. முடிந்த வரை தொடர்ந்து எழுதுகிறேன். மெயில்/பின்னூட்டம் மூலம் கருத்துக்கள் கூறிய உள்ளங்களுக்கும் தோழி ஏஞ்சலின்க்கும் என் நன்றிகள். 


படங்கள் - நன்றி கூகுள் 

சனி, நவம்பர் 19

ஒரு நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்...!



நவம்பர் 14 குழந்தைகள் தினம்,  'முன்னாள் பாரத பிரதமர் நேரு குழந்தைகள் மிக நேசித்ததால், அவரது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்' இத்தினம் கொண்டாடபடுவதின் காரணம் நமக்கு தெரிந்து இது ஒன்றுதான். ஆனால் உண்மையில் குழந்தைகளின் கையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தவே இந்த தினம்.


விழா

இத்தினம் முக்கியமாக பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆசிரியர்களைப் பொறுத்தவரை விழாவினை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதிலும், பல்வேறு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதில் குழந்தைகளின் சிந்தனைகள் இருக்கும்...ஆனால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எந்தவித சலனமும் இன்றி வருடத்தின் மற்றொரு நாள் இது என்பதாகப் போய்விடுகிறது...!!? 

'குழந்தைகள் தினம்' கொண்டாடுவது முக்கியம் இல்லை...குழந்தைகளை கொண்டாடுவோம் முதலில்...!!

சிறையில் நம் குழந்தைகள் 

சிறைப்பட்ட வண்ணத்துப்பூச்சி பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அதன் சிறகுகள் ஒடிக்கப்பட்டிருப்பதை அது அறியாது. இன்றைய குழந்தைகளும் தாங்களாகவே சிறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.கம்ப்யூட்டர் கேம்ஸ், தொலைக்காட்சி இன்னும் பிற அறிவியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.ஒரு சிலர் தமது வேலைக்கு இடைஞ்சல் வந்துவிட கூடாது என்று அந்த கதவை தட்டுவதுக் கூட இல்லை, அப்புறம் எங்கே திறப்பது...?!

உடலுக்கு சுறுசுறுப்பை தரும் விளையாட்டுகள் சுத்தமாக குறைந்துவிட்டன...பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் கொடுப்பினை நம் குழந்தைகளுக்கு இல்லை...ஜங்க் புட் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளும் தவறான பழக்கம்...உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் பழக்கம் இல்லை, தங்களின் உறவுகள் யார் எவர் என்றே அறியாத பரிதாபம் !   

பல வீடுகளில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட தனிமை சிறையில் குழந்தைகள் ! சில நிமிட நேரங்கள் கூட குழந்தைகளிடம் செலவு பண்ண நேரம் இன்றி பொருளாதார தேடலுக்குப் பின்னே சில பெற்றோர்கள் !

கண்ணில் தெரியுது வானம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இவர்கள் தொட்டே விடுகிறார்கள்...எங்கும் வேகம்...எதிலும் வேகம் என்று இருக்கிற இவர்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டாமா...?!! உணவு, உடை, படிப்பு கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிடுகிறது என்று எண்ணுவது தவறு அல்லவா ? நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய கடமை தானே ?!

பாட்டு, நடன போட்டிகள்

எல்லா டிவி சேனல்களிலும் ஏதாவது குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தங்கள் குழந்தையும் பங்குபெறவேண்டும் என்ற சில பெற்றோரின் ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் இதற்காக தன் அன்றாட வேலைகளை தங்கள் விருப்பபடி செய்யவிடாமல் பெற்றோர்  இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடும் பிள்ளைகள் பாவம்.தன் குழந்தை ஜெயிக்கவேண்டும் என்று திணிக்கப்படுபவை, தோல்வி அடைந்துவிட்டால் பெற்றோரின் அதிக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் மன அழுத்தத்தில் விழ வைத்துவிடுகிறது. தவிர பலர் முன் தோற்றுவிட்டோம் என்பது ஒருவித சுயபச்சாதாபத்தை, தாழ்வுமனப்பான்மையை  ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் போட்டியில் எலிமிநேஷன் என்றதும் அவர்கள் முகத்தில் தெரியும் அச்சமும், செலக்ட் ஆகவில்லை என்றால் ஏற்படும் கலக்கமும் டிவியில் பார்க்கும் நமக்கே வேதனையாக இருக்கும்.

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்ளகூடிய அளவிற்கு மனதை தயார் செய்த பின்னர் இது போன்ற போட்டிகளில் பங்குக்  கொள்ளவைப்பது நல்லது. 

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ குழந்தைகள் பாட்டு போட்டியில் பாடும் இன்றைய ஒரு சில சினிமா பாடல்கள் கேட்கும் போது சங்கடமாகவும், கூச்சத்தில் நெளியவும் வைக்கிறது. இது போன்ற பாடல்களுக்கு பதிலாக பாரதியார், பாரதிதாசன், பாடல்களோ, ஆழ்வார், நாயன்மார்களின் பாசுரங்கள் இன்னும் பல... இவைகளைப் பாட வைக்கலாமே...அதன் மூலம் அப்பாடல்கள் மனதில் பதியும்...மனதில் பதிந்தவை அவர்களை நல் வழிபடுத்தும் !! 

சில பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பதில்லை, அது போன்ற பள்ளிகளை பாராட்டலாம்.

குழந்தைகளை குழந்தைகளாக எண்ணாமல் இதை செய் அதை செய் என்று வறுபுறுத்தி வயதுக்கு மீறியவற்றை செய்யும் போது நம் மனது மகிழவே செய்கிறது...ரசிக்கிறோம்...அதே குழந்தைகள் நாளை பெற்றோரை எதிர்த்து நடக்கும் போது அதையும் ரசிக்க நம்மால் முடியுமா ?! 

என்னவெல்லாம் செய்யலாம்...?!


குழந்தைகள் தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை பள்ளி குழந்தைகளுடன் இணைத்து பெரிய விழாவாக கொண்டாடலாம். அப்போது ஆதரவற்ற குழந்தைகள் என்று ஒரு இனம்(?) இருக்கிறதா என்பது நம் குழந்தைகளுக்கு தெரியவரும்...அவர்களை அணைத்து செல்லவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வளர இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

உலகெங்கும் குழந்தைகள் மீதான குற்றங்கள்/கொடுமைகள்  பெருகிவிட்டன...இதை பற்றி யாரும் பெரிதாக அக்கறைப் பட்டதாக தெரியவில்லை...அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் தானே நடக்கிறது என்று மெத்தனமாக இருக்கும் இந்த நிலை மாறினால் நல்லது.

குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் இந்திய அரசு குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்து வருவதாக எனக்கு தெரியவில்லை...(தெரிந்தவர்கள் சொல்லலாமே...)குழந்தைகளுக்கு என்று நல சங்கங்கள் இருக்கிறதா ? அவை என்ன செய்கின்றன ?! குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கவோ அல்லது அவற்றை களையவோ முயற்சி செய்கிறதா சங்கங்களும், அரசும் ?!!

மூன்று வயது குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது...இதை குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் வேண்டும்...பள்ளிகளில் குழந்தைகளுக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் குட் டச், பேட் டச் பற்றியும் சொல்லி கொடுக்க வேண்டும். ஒருவர் தவறான இடத்தில் தொடுகிறார் என்றால் உடனே எதிர்ப்பை காட்ட தெரிய வேண்டும், பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தண்டனை கடுமையாக்க பட்டால் இவை குறையுமா ? 

இவர்களும் குழந்தைகளே !

* முறையான கல்வி பெற வசதி இல்லாதவர்கள்
* ஆதரவற்ற அநாதை குழந்தைகள் 
* பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் 
* குழந்தை தொழிலாளர்கள் 
* சரிவிகித ஊட்டச்சத்து இன்றி நோயில் பிடியில் அவதிப்படும் குழந்தைகள்   
* பிச்சை எடுக்கும்(எடுக்க வைக்கப்படும்) குழந்தைகள்
* குப்பை பொறுக்கும் குழந்தைகள் 

ஆதரவின்றி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அநேகர் !இத்தகைய குழந்தைகளை பார்க்கும் போது நம்மால் இயன்ற ஒரு உதவியை செய்யலாம், அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து பள்ளிகளில் சேர்த்துவிடலாம்...அல்லது இதற்கென இருக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு இவர்களை ஒப்படைக்கலாம். நமக்கென்ன வந்தது, இதை செய்ய போனால் வேறு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என அச்சம் கொள்ளாமல் இயன்றவரை நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக நல்ல இடங்களில் சேர்த்துவிடுவது நல் இதயம் உள்ள எல்லோரின் கடமை.

தொண்டு நிறுவனங்களின் வேலை இதுவென ஒதுங்கி கொள்ளாமல், தனி நபர் ஒவ்வொருவரும் உதவ முன் வரவேண்டும்.

நம்மில் பலரும் செய்வது பிறந்த நாள், நினைவுநாளின் போது அநாதை ஆசிரமங்களுக்கு சென்று இனிப்பும், உணவும் கொடுப்பது, இத்துடன் கடமை முடிந்துவிடுகிறது என்று நமது சுயம் திருப்திப்பட்டு கொள்கிறது.உணவு மட்டும் அவர்களை திருப்திப்படுத்தி விடுமா ? ஒரு சிலர் இத்தகைய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதும் உண்டு. ஆனால் இவை மட்டும் போதுமா ?!! யோசியுங்கள் !!

நம் குழந்தைகளின் மீது வைக்கும் அதே அன்பை பிற ஆதரவற்ற குழந்தைகளின் மீதும் செலுத்துவோம். அக்குழந்தைகளுக்கும் இப்பூமியில் அனைத்தையும் பெறவும், வாழவும் உரிமை இருக்கிறது...!! அவ்வுரிமையை நாம் மதிப்போம்...எந்த குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்ப்போம்...!! அவர்கள் நலனில் அக்கறை காட்டுவோம்...!!

இக்கட்டுரை அதீதத்தில் வெளிவந்தது...நன்றி அதீதம்.

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே ! இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது கொண்டாட போகிறீர்கள் ?
                                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான்

நாளை நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம்...உலகம் முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாட படுகிறது...!

நம் குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்...! அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...