மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 8

ஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...!

Liquor drinking is injuries to health



பெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது  பதிவு ஒரு சிலருக்கு சரியானப் புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும்  இந்த பதிவு ஒரு புரிதலைக் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது ! :-)  

///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///

இது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிடவில்லை...அதுவும் தவிர  அந்த பதிவிலேயேக் குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதைக் குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று.  நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறானப் புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும்  இயலாத காரியம்.  இருப்பினும் மதுவைக் குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும்  என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின்   பிரச்சனையின்  மூலக் காரணம்  மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவைத்  தொடுகிறார்கள் பிறகு விடமுடியாமல் தொடருகிறார்கள்.   

மது அருந்துவதை குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை அதனால்தான்   அரசாங்கம்  விற்கிறது.  டாஸ்மாக் வாசலில் பெண்கள் குடிக்கக்கூடாது, பெண்களுக்கு இங்கே மது விற்கப்படாது என்ற போர்டு இல்லை. பெண்கள் மதுக் குடிப்பதை பற்றிய கவலை அரசிற்கே இல்லை அதுவும் பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில்... அப்படி இருக்க ஆண் குடித்து கும்மாளம் போட்டால்  ஒதுங்கிப்போகும் ஆண்கள், பெண் என்றதும்  கேலி கிண்டல் கூச்சல் கூப்பாடுப் போடுவதும், அதிலும் பெண் குடித்தால் என்ன தவறு என்று கேட்ட  பெண்ணை, நாலு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதுதான் சரி  என்று சொல்வதும் வக்கிரத்தின் உச்சம். 

பெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும்.   ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும், பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம்.  அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமுதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளைக் கொன்*றாலும், சாட்சிச் சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரேத் தவிர கொன்*றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்)  அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள்.  கொ*லை கொள்*ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்... இருப்பார்கள் !
   
என்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைக்குரியவர்களைத் தூற்றுவது  சரியல்ல.   பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்.   அவள் குடிப்பதைத் தடுக்க அல்லது குறைக்க முயற்சிச் செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால்  பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது  பெண்களின் புத்தியில் புதிதாகப் பதிந்துவிட்டது.   குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்துக் கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை  அடிமையாக நடத்தியதன் விளைவு இது.  கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.  

///This is how it started among men too. First 1% started consuming, now it is almost 100% The same thing would happen with women. I dont understand why women should be treated "gently" and "alcohol should be blamed" rather than blaming consuming women.
I am completely against your view in this issue, my respectable friend, Mrs.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.///

மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ?  சமூகத்தின் மீது இதுவரை  இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது  அதுவே நம் வீட்டுப்பெண்ணாக  இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம்.   ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள்.  திருத்துங்கள்.  வளமாகட்டும் நம் சமூகம்.

மது என்னும் அரக்கன் 

உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளைச் சேகரிக்கும்  பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து  மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை  எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி !   அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையைக் காரணம் காட்டுவது. 

என்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம்  உடுமலைபேட்டையில் நீங்கியது.  செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும்  ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் சேர்ந்துக் குடிக்கும் குடும்பங்களும் உண்டு.  மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது  என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...

தினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்தவர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க  அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு  ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக(?) பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது.  அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.

சந்தோஷம்,  திரில் கிடைக்கும் என்பதற்காகக் குடிக்கத் தொடங்கும்  படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.   அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில்     பெண்ணை துகில் உரித்து வன்*புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் பயப்படுகிற  மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.  கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது.  அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.

பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது  அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம்  குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிக்கிட்டே  இருக்கு'. என்று பேச்சோடுப் பேச்சாகச்  சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம்.  அது உடை தொடங்கி  குடி என்று  தொடருகிறது.  இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...

நான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப்  போகிறது.

எனது நிலைப்பாடு :-

பெண்களுக்கு ஒன்று என்றால்  கண்மூடித்தனமாகப் பொங்குவதல்ல  எனது வேலை... காலங்காலமாக பெண் அடிமைப்பட்டுக்  கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்களின் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை.  பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த  மனித சமுத்திரத்தின் வேரானவள் !

விதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து  பெண்ணை விமர்சிக்கலாம்  நாகரீகமாக... பெண்ணை  கிண்டல் செய்யலாம்  நட்பாக... பெண்ணைப்  பற்றி பேசலாம்  வெளிப்படையாக...!  ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து  நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத்  தவிர்க்கலாம் !!! இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.

பெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும்  பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே.  ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தைப் பெறும் பெண் குடிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளைப் பெற்று வளர்த்து  35/40 வயதைத் தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ? ஆண் பெண் யார்  (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனைத் தான் என்று செய்யப்படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை  சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள்  ஊக்குவிக்கக் கூடாது.

தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்குப் பகுத்தறியத்  தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணைப் பற்றிய எந்த விமர்சனமும் எல்லை  மீறி பெண்மையைக் கேவலப்படுத்தி  துன்புறுத்தும் அளவிற்குப் போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.  

குறிப்பு :-

நண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக  இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர்? எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும்  எழுதவும்   வைப்பது  நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்!


வெள்ளி, ஜனவரி 29

பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும் ??!!





பெண்களை வைத்து இதோ அடுத்து ஒரு விவாதம் தொடங்கியாகிவிட்டது. பெண்களைப்  பேசுப்பொருளாக்கி விவாதிப்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் இல்லை என்பதை ஊடகங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. தற்போதைய  தலைப்பு பெண்களும் குடியும்... ஒரு பெண் டிவி ஷோவில் குடித்தால் என்ன தப்பு என்று கேட்டுவிட்டாள், உடனே பத்திக்கிச்சு சமூக வலைத்தளம். விதவிதமாக Memes ரெடி பண்ணித்  தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்களை.  தாளிப்பவர்களில் எத்தனை பேர் குடியை முகர்ந்து கூட பார்க்காத மகாத்மாக்களோ தெரியவில்லை.  விஷயம் இப்போது  எப்படி திசைத்  திரும்புகிறது என்றால் 'குடிப்பழக்கம் சரி ஆனால் பெண்கள் குடிப்பது தவறு'  

சில  நாட்களுக்கு முன்னர் கரூரில் ஒரு பள்ளி மாணவன் குடி*போதையால் மயங்கி விழுந்துக் கிடக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் போட்டிப்போட்டுப்  பகிரப்பட்டு வந்தது. பள்ளி சீருடையுடன் இருந்ததே அப்போது பலரின் கவனத்தை வெகுவாக பாதித்தது. பள்ளி மாணவர்கள் குடி*போதைக்கு  அடிமையாகி ரொம்ப காலமாச்சு. சங்கரன்கோவில் அருகில் ஒரு கிராமத்தில் 9 வது  படிக்கும் இரு  மாணவர்களுக்கும்  சண்டை, காரணம் இருவரும் ஒரே மாணவியைக்  காதலித்தது. குடி*போதையில்  கையில் கத்தியுடன் மலையடிவாரத்தில் கட்டிப் புரண்டுப்  போட்ட சண்டையை காவல்துறை தலையிட்டு அவசர அவசரமாக சமாதானம் செய்து அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. எங்கே இது சாதிச் சண்டையாக மாறிவிடுமோ என்ற கவலை காவல்துறைக்கு !  மாணவர்கள் சார்ந்த இரு பிரிவினருக்கும் பல வருட பகைமை  உண்டு.

குடித்தால் தான் நண்பர்கள் மத்தியில் கௌரவம், குடிப்பது தைரியம் வீரம் இப்படி இன்னும் என்ன கண்றாவி புரிதல்கள்(?) இருக்கிறதோ அத்தனையையும் சினிமா நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.  குடிக்கவைத்து சிறுகச்  சிறுக மக்களைக்   கொன்று அவர்களின் சடலங்கள் மீதேறி நின்று கைக் கொட்டிச் சிரிக்கும் அரசுகள்  வீழ்வதற்குள் இங்கே நாசமாகிப்  போவார்கள்  நம் மாணவ செல்வங்கள் ! பெர்த்டே பார்ட்டி பியருடன் என்ற  கலாச்சாரம்(?) கல்லூரியை  மட்டுமல்ல பள்ளிகளுக்கும் பரவி ரொம்பநாள் ஆச்சு. அதுபோக வாரம் ஒரு முறை வீக் எண்டு செலிபிரேசன் என்ற கண்றாவி  (கலாச்சாரம்=கண்றாவி) வேறு,

இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்தேக்  கொன்று*விட்டான். நினைத்துப்  பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. எவ்ளோ வன்மம் அந்த மாணவனுக்குள் இருந்தால் இத்தகைய கொடூர*த்தை நிகழ்த்த முடியும். அவன் வாழும் சமூகம் அவனுக்குள் விதைத்தது இதை தானா ?  டிவி ஷோவில் குடிகாரத் தகப்பனால் வன்கொடுமைச்  செய்யப்பட்ட சிறுமி தகப்பனை நோக்கிக்  கேட்கிறாள், 'அருகில் படுத்திருப்பது மகளா மனைவியா என்பது கூடவாத்  தெரியாது என்று. குடி*போதையின் விபரீதத்தை சொல்ல இது ஒன்று போதும்?!

சிறந்த பள்ளிகளை தேடி அதிக பணம் கட்டி சேர்த்துவிட்டதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணி பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். தனது மகன்/மகள் எங்கே செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பள்ளி குழந்தைகள் மது அருந்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது நல்ல செய்தி அல்ல.  விடுமுறை தினத்தன்று  குழந்தைகளுடன் செலவழிப்பதை விட தங்கள் நண்பர்களுடன் இணைந்து தண்ணி அடிக்க செல்லும் பொறுப்பற்ற தகப்பன்கள் அதிகரித்துவிட்டார்கள்.  இதில் வேண்டுமானால் தற்போது தாய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  பெற்றோர்கள்  தங்களை ரிலாக்ஸ் செய்வதில் வைக்கும் கவனத்தை தங்களின் குழந்தைகளின்  மீது வைக்கவில்லை என்றால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் 'சிறுவர் சிறைச்சாலை'யில் கழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டு நாளா நீயா நானா வீடியோவை ஷேர் பண்ணி  ஐயையோ ஒரு பெண் இப்டி பேசலாமா, அது எப்டி பொம்பளக்  குடிக்குறது நாடு என்னாவறது சமூகம் கெட்டு குட்டி சுவராப்  போச்சேனு கதறிக்  கதறி அழுவுறாங்க. பெண் குடிக்கலாமா அதுவும் தமிழ் பெண் குடிக்கலாமா என்ற கேள்விகளை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றுத்  தெரியவில்லை.  அந்த பெண் விவாதத்திற்கு பேசினாலே ஒழிய தான் குடிக்கிறேன் அதனால் பேசுகிறேன் என்று சொல்லவில்லை. இதைக்  கூட புரிந்துக் கொள்ளாமல் அந்த பெண்ணின் புறத் தோற்றத்தை வைத்தும் கேலிகிண்டல் செய்து தங்களின் ஆணாதிக்க வெறியைச்  சொறிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடிப்பதில் என்ன ஆண் பெண் வித்தியாசம்... விஷ*த்தை யார் குடித்தாலும்  சாவுதான்.  ஆனால்  இதை ஆண்களால் ஒத்துக் கொள்ள முடியாது, இவங்க தான் புதுசா கண்டுப்பிடிச்ச மாதிரி பொண்ணுக்கு  கர்ப்பப்பை இருக்கு,    குடிச்சா அது கெட்டுப் போய்டும் குழந்தைக்கும் பாதிப்புனு என்னா பேச்சுன்றிங்க ...சகிக்கல! அப்புறம் பொண்ணு குடிச்சா பாலியல் ரீதியிலான துன்பத்துக்கு ஆளாவாளாம். பாலியல் கொடுமை அதிகரிக்க பெண் குடிப்பதும் ஒரு காரணமாம். அப்படினா இந்த ஆம்புளைங்க மூக்கு முட்ட குடிச்சிட்டு போறப்போ எதிர்ல பெண் வந்தாக்  கண்டுக்காம தலையைக்  குனிஞ்சிகிட்டு அப்டியே நேரா வீட்டுக்கு போய் குப்புறப்படுத்துடுவாங்கப்  போல... பெண்  குடிப்பதைக்  கண்டித்தும் ஆண் தனது குடிப்பழக்கத்தை நியாயப் படுத்தவும் எப்படி  எல்லாம் சமாளிக்கிறார்கள்

குடிகார ஆண்கள்.  . மதுப்பாட்டில்களை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதும், குடியைப்  பற்றிய   உற்சாகப்பேச்சுக்களை  ஸ்டேடஸ்/கமெண்ட்ஸ்  என்று போடுபவர்களும் சமூகத்தைக்  கெடுக்கும் படு பாதகர்கள். மதுவை விற்கும் அரசின் செயல் கயமைத்தனம் என்றால் மதுவை  மறைமுகமாக உற்சாகப் படுத்தும் உங்களில் சிலரின் செயலுக்கு என்ன பெயர்? கையில் பியர் பாட்டிலை வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைச்  சிறிதும் வெட்கமின்றிப்  பகிர்ந்து கேவலமாய்  திட்டித்தீர்த்துவிட்டு  வாரக்கடைசியில் 'என்னடா மச்சி இன்னைக்கு பார்ட்டி எங்க' என ஸ்டேடஸ் போடும் அதி உன்னதமான ஆண்கள் நிறைந்த உலகமிது. பேஸ்புக்கில் பரவலாக சனிக்கிழமை (வீக் எண்டு)இரவைப் பற்றிய பேச்சுக்கள்/உளறல்கள் நிறைந்திருக்கும்.  இதை விட சிறந்த பொறு*க்கித்தனம் வேறில்லை. 

மக்களின்  நிகழ்காலத்தைச்  சிதைத்து எதிர்காலம் என்ற ஒன்றே  இல்லாமல் போக்கும் குடியை மட்டும் ஏன் எதிர்க்க முடியவில்லை. ஆண் பெண் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்கள் கூட ஒரு பெண் குடியை பற்றி பேசியதும் உடனே புரட்சி புடலங்காயா மாறிடுவாங்க.

புதுமைப் பெண்களே !

உங்களுக்கு விருப்பம் வசதி இருந்தால் மது அருந்துங்கள் ஆனால் ஆணுக்கு பெண் சமம் என்பதை மது அருந்துவதன் மூலம் நிரூபிப்பதாக சொல்லிக் கொண்டுத்  திரியாதீர்கள். ஒரு பெண் மரத்திலோ தரையிலோ சாய்ந்து கண் மூடி இருக்கும் போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததும் வரும் முதல் கமென்ட் என்ன மட்டை ஆகிடிங்களா? இன்னைக்கு ஓவரா? ஆண்கள் இப்படி கேட்கவேண்டும் என்றே போட்டோவை பகிரும் பெண்கள் ஒரு தனி ரகம், எதை/யாரை  பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை நான் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.  குடித்தால் என்ன தப்பு என்று பேசிய நீயா நானா பெண்ணும் இவர்களும் ஒன்று.  எதில் சமத்துவம் வேண்டும் என்பதேப்  புரியாத பெண்களால் தான் பெண்மை மேலும் மேலும் கேலிக்கு உரியதாக மாறிக் கொண்டிருக்கிறது.    

அரசின் பொறுப்பின்மை 

மதுக் குடிப்பது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப் பட்டது என்றாலும் அரசே அதை ஊக்குவிப்பது வேதனை. ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த சாராயக் கடைகள் இன்று வீதிக்கு ஒன்று என்ற அளவில் குடியிருப்புப்  பகுதியையும் விடாமல் பள்ளிக்கு அருகில் மருத்துவமனைக்கு அருகில் என்று எதைப்  பற்றியும் யோசிக்காமல் இஷ்டத்திற்குப்   பெருகிவிட்டதை எவ்வாறு நியாயப்படுத்துவது. இந்த அரசு கைக்கெட்டிய தூரத்தில் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டு குடிக்காதே குடி பழக்கம் உடலுக்கு கேடு என்று பிரச்சாரம் செய்கிறது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதைப்  போல .

பெண்களின் முன்னேற்றத்தை ஜீரணிக்க ஆண்களால் முடியவில்லை பிற பெண்களாலும் முடியவில்லை. நம் சமூகத்தின் சாபக் கேடு இது. எல்லாவற்றிலும் சமத்துவத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் பெண் குடியிலும் சமத்துவத்தை நாடிவிட்டால் என்னாவது என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி.

ஆண்கள் தான் இதில் அதிகமாக மிரண்டு விட்டார்கள் என்பதை அவர்களின் கருத்துகளின் மூலம் புரிகிறது, எங்கே தனது மனைவி 'வரும் போது எனக்கு ஒரு பகார்டி ஆப்பிள் பிளேவர் வாங்கிட்டு வாங்க' என்று கேட்டுவிடுவாளோ, அவளுக்கு ஆம்லெட், மட்டன் சுக்கா ரெடி பண்ணிக் கொடுக்கும் நிலைமை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம். மத்தபடி கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது.  சுய ஒழுக்கம்  கட்டுப்பாடு நாகரீகம் ஆண் பெண் எல்லோருக்கும் வேண்டும், அளவுக்கு மீறி யார் குடித்தாலும் பாதிப்பு சம்பந்தப்பட்டவங்களுக்கு தான். பெண் குடிப்பது சமூகத்தைப்  பாதிக்கும் என்றால் ஆண் குடிப்பது சமூகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுச்  செல்லுமா என்ன ?!!

ஆண் குடித்து தெருவில் புரண்டால் ஒதுங்கிச் செல்லும் சமூகம் பெண் குடித்து புரளும் போது சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறது துணி எப்போது விலகும் என்று. பாலியல் வறட்சிக் கொண்ட மனிதர்களுக்கு அந்த இடத்தில் பெண் குடித்துவிட்டாள் என்பதை விட பிறவற்றின் மீதுதான் அதிக கவனம்.

பாலியல் வன்*புணர்வு செய்யப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிற சமூகத்தில், பெண் குடிப்பதற்கு மதுவைப் பழிக்காமல் பெண்ணை பழிப்பதுத் தானே வழமை 

பெண்கள் குடிப்பதற்கு வக்காலத்து அல்ல இந்த பதிவு  ஆனால் பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற கூப்பாடு ஏன். அதுதான் பிரச்சனை.  பெண்களைக்  குடிக்காதீர்கள் என்று வற்புறுத்த  'குடிக்கும்'  எந்த ஆண்களுக்கும் உரிமை இல்லை.  வேண்டுமானால் உங்கள் வீட்டுப் பெண்களைக்  குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரமாக இருக்கட்டும்!!