அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 4

மனதோடு மட்டும்...!



‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால்,   பதிவுலகத்  தொடர்பு எல்லைக்கு வெளியேச்  சென்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது என அர்த்தமாகும். எதிரில் பார்க்கும் எதையும் எழுத்தாக்கி பகிரும் வேகம், துடிப்பு, உத்வேகம் எல்லாம் மலையேறி புதிதாய் எழுதவருவதைப்  போல  என் போன்றோர் நிலை கொஞ்சம் பரிதாபம்தான். என்னத்த எழுத என்ற சலிப்பு, வேலை பிஸி என்ற முகமூடி போட்டுக்கொள்கிறதோ என்னவோ!

மறுபடி எழுத வந்ததற்கு தோழி  ஏஞ்சல் ஒரு முக்கிய காரணம். (எழுத போறிங்களா இல்லையானு பேஸ்புக் இன்பாக்ஸ், ஜிமெயில் போதாதுன்னு போன் செய்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்) தவிர எங்க போனிங்க என்ன ஆச்சு என்று அடிக்கடி என்னை "அன்புடன்" விசாரித்துக்கொண்டிருக்கும் அந்த நாலு பேருக்கு என் நன்றிகள். மனிதர்களுக்கு எப்போதும் போன், இணையம் என ஏதோ ஒரு தொடர்பில் இருந்தாகவேண்டும்...இல்லனா மத்தவங்க நம்மள சுத்தமா மறந்து போய்டுவாங்க இல்லையா (நினைச்சுகிட்டே இருக்குற அளவுக்கு நாம பெருசா ஒன்னும் பண்ணலன்றது வேற) உயிருடன் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடன் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள் என்றால் மரணித்தப் பின்னால் பெரிதாக என்ன இருக்கப்போகிறது  .....முதல் நாள்  கண்ணீர் மறுநாள் சோகம் அடுத்தநாள் அவங்க அவங்க சொந்த வேலை கவலை ... நமது பெயரும் அடுத்த சில வருடங்களில் மறந்துப்  போகும் ....இவ்வளவுதான் வாழ்க்கை! இதை புரிந்துக் கொள்ள இமயமலை தேடி ஓட வேண்டியதில்லை, கண் முன் கடந்து போகும் ஒரு மரணம் போதும்...  

என்னைப்  பொறுத்தவரை எந்த ஊர்ல இப்ப இருக்கிறேன்னு பக்கத்தில் இருக்கிறவங்க நினைவுப் படுத்துகிற அளவுக்கு அதி பிரமாதமாகப்  போகுது வாழ்க்கை...  ஓடி ஓடி   களைத்துச்  சாய ஒரு தோள் கிடைக்காதா என ஏங்கி அவ்வாறு  கிடைத்தாலும் சாய நேரம் இல்லை போன்றதொரு நிலை.  

எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு அது கொடுத்த வலி சோகம் துக்கம் இவை எல்லாவற்றையும் கடக்க அதிகப்  பிரயத்தனம் எடுத்தும் அதுக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிந்ததும் சரி ஒரு ஓரமாக அதுவும் இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒருவரை இழந்த பிறகே, ‘அவருடன் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே , பிடிச்சதைச்  சமைச்சு  கொடுத்திருக்கலாமே, உடன் ஊர் சுற்றி இருக்கலாமே, அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையேனும் போன் செய்து எப்டி இருக்குற என விசாரித்து இருக்கலாமே என தோன்றுகிறது. இதில் ஒன்றையுமே செய்யாமல் போனப் பின்பு ஐயோ போயிட்டியே என அரட்டுவதை என் மனசாட்சியே சும்மா நடிக்காதே என பரிகசித்தது. ஆமாம் உண்மைச்  சுடுகிறது. இதுநாள் வரை அப்படிதானே நடந்திருக்கிறேன், நான் எனது வீடு குடும்பம் தொழில் என சுயநலமாகவே வாழ்ந்துவிட்டு அன்றைக்கு துக்க வீட்டில் அழுதது கூட அபத்தமாக தோன்றியது.

மரணமல்ல ஜனனம்!

ஒரு மரணம் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது... பிறரிடம் இருக்கும் நல்லது தீயது இரண்டில் நல்லதை மட்டுமே பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்... இதுவரை பிறரின் தவறுகளை மன்னித்த நான்  இப்போது அதை மறக்கவும் முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் பெற்றுவிட்டேன். ஒரு தெளிந்த நீரோடையாக மனதை வைத்துக் கொள்ள  முயற்சி செய்கிறேன். உண்மையில் இது மிக பிடித்திருக்கிறது. முன்பை விட அதிகமாக எல்லோரையும் நேசிக்கவேண்டும், இன்னும் அதிகமாக பிறருக்கு உதவவேண்டும், இன்னும் அதிகமாக  இந்த சமூகத்திற்காக   உழைக்கவேண்டும், தெரிந்த சமூக அவலங்களை எழுத்திலாவது எழுதி வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது.

நந்தினி,ஹாசினி ரித்திகா என்ற அழகான பெயர்கள் துக்கக்கரமாக மாறிப்போனபோது பச்ச குழந்தைகளை போய் எப்படிடா என்னடா வேணும் உங்களுக்கு என கதறியே விட்டேன். இரவுகளில் தூங்கவிடாமல் ஓலமிடும் மனதிடம் இதோ எழுதி ஆதங்கத்தை தீர்த்துவிடுகிறேன் என சமாதானம் செய்வேன். பாலியல்  பிரச்சனைகளின்  மூலம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால்  குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கட்டுரையை இனி தொடரலாம்... மூலம் என்று தேடிப்போனால் பேசாப்  பொருளா காமம் பற்றி பேசணும் சரி அதை பற்றியும் தொடர்ந்து எழுதலாம்... இதற்கு  பெற்றோர்கள் எவ்விதம் காரணமாகிறார்கள் என்பதை  தாம்பத்தியம் தொடரில் கொஞ்சம் தொட்டுக்  காட்டலாம்.......அப்படி இப்படி என்று மறுபடி பதிவுகள் எழுத காரணங்களை நானாக யோசித்ததன் விளைவு இதோ எழுத தொடங்கியாயிற்று... எது ஒன்றுக்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும், தூண்டுகோல்  வெளியில் இருந்து வரவேண்டும் என்றில்லை நாமாக உருவாக்கிக் கொள்ளலாம் ... நமக்கு தெரிந்ததை பிறரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான இடத்தில்(பதிவுலகம்) இருந்துக் கொண்டும் வாளாவிருப்பது வீண்தானே.

என்ன செய்துவிடும் எழுத்து 

இந்த ஒரு வருடத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் !! மக்களை எப்போதும் பரபரப்பாக்கி வைத்துவிடுகிறது ஊடக உலகம். அதிலும் சமூக வலைத்தளம் முன்னணி, காபி போட்டு குடிகிறார்களோ இல்லையோ காபி கப் போட்டோ வந்துவிடும். மனித மனம் எப்போதும் பிறரது அங்கீகாரத்திற்காகவே காத்துக்கிடக்கிறது... எல்லோருக்கும் பிடித்தவராக யாராலும் இருக்கமுடியாது என்றாலும் தனக்கென்று ஒரு சிறு கூட்டத்தை சம்பாதித்தே தீரவேண்டும் என்ற ஆசை வெறியாக மாறுவதை கண் முன்னால்  பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்களை மதிக்கவேண்டும் என மகளிர்தின வாழ்த்துக்கள் கூறி மறுநாளே இவ மூஞ்சிக்கு ஐநா கேக்குதா என பகடி செய்யும் முரண்பாட்டு மூட்டைகள் நிறைந்த உலகிது!  'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் ' பாரதி எத்தனை பாடினாலும் போகப் பொருளாகவே  பார்த்து பழகிய கண்கள், எம்பி குதிக்கும் டென்னிஸ் வீராங்கனையின் உள்ளாடையை க்ளோஸ்அப்பில் படம் பிடித்து போடும் பத்திரிகை கேமரா அனர்த்தங்கள்.  

சிறிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்த அனுபவம் கூட இல்லாமல் தான் பதிவுலகம் வந்தேன்...பொன்னியின் செல்வன் பற்றி பலரும் சிலாகிக்கும்போது படிச்சுத்தான் பார்ப்போமே என்று வாங்கிப்  படித்தேன், புத்தகம் படிங்க என்று வற்புறுத்தி ஐந்து புத்தகங்கள் அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர் அப்படியாவது எனக்கு எழுத்து கைவராதா என்று...  புத்தகங்கள் படித்ததற்கு பிறகு  ‘நாம எழுதுறதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற பயம்  வேறு வந்துவிட்டது. ஆனால் உணர்வுகளை கொட்ட ‘தெரிந்த/பழகிய வார்த்தைகள்’  வேண்டுமே தவிர இலக்கியம் இலக்கணம் தேவையில்லை... வாசிப்பவர்களின் மனதோடு எனது எழுத்துக்கள் பேசினால் போதும்... மேடை ஏறி பரிசுகளை வெல்லவேண்டும் என்று இல்லையே... என்றெல்லாம் மனதைத்  தேற்றி என்னை நானே சமாதானம் செய்து இதோ பேச வந்தேவிட்டேன் மறுபடியும் உங்களின் மனதோடு மட்டும்...

“யார் சூறையாடியது காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
புன்னகைபுரிந்த முற்றிலும் முழுமையான காலம்
எனது ‘நான்’ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே
கவிதை அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டதும் அங்குதானே !”

-சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்

 பிரியங்களுடன்
கௌசல்யா

pic : google 

வெள்ளி, நவம்பர் 6

வாழத்தானே வாழ்க்கை ...!

"நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு  துரதிர்ஷ்டம் ...இன்று நாம் எல்லோரும் இந்த துரதிர்ஷ்டதிற்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்" - ஆல்பெர் காம்யு.

தற்செயலாக இதை வாசிக்க நேர்ந்தது... எவ்வளவு உண்மை !!!  கணினி செல்போன் இணையம் இல்லாத காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.  கணினி வேகத்திற்கு ஈடுக்கொடுத்து மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். ஐஸ்க்ரீம் கரைவதற்குள் சாப்பிட்டு விடவேண்டும் என்பதை போன்று வேக வேகமாக  வாழ்கிறோம் , ஆனால் உண்மையாக வாழ்கிறோமா என்றால்  இல்லை என்றுதான் சொல்வேன்.  யாருக்கு போன் செய்தாலும் பிரீயா இருக்கிங்களா பேசலாமா என கேட்டு பேசுவது எனது வழக்கம், ஏன்னா அவங்க இப்ப நான் பிசி, வை போனைனு சொல்றதுக்கு முன்னாடி நாமலா கேட்டுறது நல்லது பாருங்க. :-) இரண்டு நிமிடம் பேசவும் நேரமில்லாத மனிதர்கள் தானே  நாம், என்னையும் சேர்த்துதான். ஆனால் ஏன் இப்படி வாழ்றோம் என்று யோசிக்கவேண்டும்.      






நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் ஒரு ஹாய் ஹலோ சொல்ல கூட இயலாத நிலை நல்லதா கெட்டதா ? இது யதார்த்தம் தான் என சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உறவுகள் நட்புகளிடம் நேரில் பேசுவது குறைந்து செல்போன் இணையத்துடன் பேசிக் கொண்டும் அல்லது தனக்குள் தானே பேசிக் கொண்டு ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்து வாழ்கையை கடினப் படுத்திக் கொள்கிறோம். 

எனது நெருங்கிய தோழிக்கு  (25 வருட நட்பு)           எப்போது போன் செய்தாலும் 'கால் யூ பேக்'  என்ற sms வரும்,  பிறகு  அவளாக மாலை ஐந்து மணிக்கு அழைப்பாள்,  ஒரு கை காரின் ஸ்டியரிங்கிலும், மறுகையில் போன்னுமாக பேசுவாள், வீட்டை எட்டுவதற்குள் எங்களின் பேச்சு முடிந்துவிடும் அல்லது முடித்துக் கொள்வோம்... இதைத் தவிர வேறு நேரம் அவளுக்கு கிடைப்பதில்லை. சமையல், வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் வீட்டிலும் தோழி பிசியாகவே  இருப்பாள்... கணவன் மனைவி இருவரும் சேர்ந்து லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.   பெங்களூரில் சொந்தமாக மாடி வீடு, சென்னையிலும்  வீடு நிலம் என்று இருக்கிறது, ஒரே மகன், வாரத்திற்கு ஒரு வேளை ஒன்றாக அமர்ந்து உணவருந்தவும் இயலாமல் எப்போதும் எதன்  பின்னோ ஓடிக் கொண்டே இருக்கிறாள், நடுநடுவே சலித்தும் கொள்வாள், ஒரு நாளும் ரிலாக்ஸ் பண்ண முடியவில்லை என்று. அவள் வாழும் வாழ்க்கையை பார்த்து எனக்கு மிகுந்த  ஆயாசமாக இருக்கிறது. 

2015 வருடப் பிறப்பன்று வாழ்த்து சொல்ல தோழியை போனில் அழைத்தேன் 'ஊருக்கு போய்ட்டு இருக்கேன்,  அப்புறம் கூப்பிடுறேன்' என்று SMS, நிச்சயமாக 2016 புது வருட வாழ்த்து நான் சொல்வதற்குள் அவளாக கூப்பிட்டு விடுவாள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.  :-) இதில் சுவாரசியம் என்னவென்றால் அவளது நெருங்கிய ஒரே தோழி நான்தான். இந்த லட்சணத்தில் தான் இருக்கும் போல பலரது நட்புகளும் :-))

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்ததிற்குரியவர்கள். அவர்களால் அவர்களை சேர்ந்தவர்களுக்கு  சிறிய அளவிலான சந்தோசத்தை  கூட கொடுக்க இயலாது . பிசி   பிசி  என்று தானும் தொலைந்து அவர்களை நேசிப்பவர்களின் நேசத்தையும்  அலட்சியம் செய்கிறார்கள்.  பரப்பரப்பான வேலைக்கு நடுவிலும் சிறு புன்னகையை கூட காட்டாமல் வாழும் வாழ்க்கை உண்மையில் நரகம். பிசி என்ற முகமூடியை போட்டுக் கொண்டு அன்பானவர்களிடம் தோற்றுப் போகிறோம். பகிரப் படாத அன்பும் கவனிக்கப் படாத நேசமும் யாருக்கும் பிரயோசனம் இன்றி விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும்  ஒரு சிறிய  நலம் விசாரிப்பு சிறு புன்னகை செய்ய கூட இயலவில்லை என்றால் என்ன வாழ்க்கை.  வலிய வலியச் சென்று உறவுக் கொள்வது ஒரு கட்டத்தில் சலிப்பை வெறுப்பை கொடுக்கும், உலகத்தில் இவர் ஒருவர் தானா இருக்கிறார் நாம் பேச பழக, இந்த உலகம் ரொம்ப பெரியது என்று புது புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் தவறில்லை.  சாதாரண நட்புகள் என்றால் பரவாயில்லை... நெருங்கிய உறவாக இருந்தால் என்னாகும் யோசிக்கவேண்டும் அல்லவா?!

இயந்திர உலகில் எல்லோருக்கும் தான் வேலை, பிரச்னை இருக்கிறது அத்தனைக்கும் நடுவிலும் உறவுகள் நட்புகளுடன் தொடர்பில் இருப்பதுதான் உயிர்ப்பான வாழ்க்கை. பிறரை நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது பேரின்பம், இதனை அலட்சியப்படுத்தி வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்?!!  நேசிப்பவர்களை காயப்படுத்தி அதில் சுகம் காணுவதும் ஒரு மனநோய் தான்.

இவ்வாறுதான் நம்மில் பலரும் இருக்கிறோம், பலவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு 'சே எப்போவும் ஒரே டென்சன், பிரீயா இருக்கவே முடியல' என்று... ரிலாக்ஸ் என்பது வேறு எங்கயோவா இருக்கு, ஓய்வுக்கு தேவையான நேரத்தை நாம் தான் ஒதுக்கவேண்டும். அதையும் நம்மை நேசிக்கிறவர்களுடன் செலவிட்டால்  உற்சாகம் இரட்டிப்பாகும்.   

நட்புகள் உறவுகளை நேரில் சந்தித்து பேச இயலாவிட்டாலும் போனில் தொடர்பு கொண்டு பேசலாம் . ஆனால் சமூக வலைதளங்கள் வந்தப் பின் அதற்கும் நேரமில்லாமல்  'அப்புறம் கூப்டுறேன்' என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக்கில் நுழைந்து   'ஹாய் சொல்லுடா கூப்டியே' என்று டைப் பண்ற அளவுக்கு போய்டுச்சு. போனில்   இரண்டு வார்த்தை பேச வழியில்லை ஆனால் பேஸ்புக்கில் அன்பொழுக  பேசுவது    வேடிக்கை.

அப்புறம் இன்னொன்னும் புரிய மாட்டேங்குது, போன் ல பேச நேரம் இல்ல பிசி பிசி சொல்ற ஆட்கள் பேஸ்புக் ஸ்டேடஸ் ஒரு பக்கத்துக்கு டைப் பண்ண எப்டி முடியுது... லைக் கிடைக்குதுன்றதுக்காவா ?! என்னவோ போங்க ...அன்பு நேசம் பாசம் நட்பு எல்லாம் விரல் நுனிக்குள் அடங்கிவிட்டன.  

தம்மை நேசிக்கும் உறவுகளிடம் ஏன் இந்த அலட்சியம். இயந்திர உலகில் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் மிகவும் குறைவு என்றபோது   மிக சிலரிடம் கூட உறவை சரியாக பேணாமல் வாழும் வாழ்க்கையில்  உயிர்ப்பு இருக்குமா என்ன...நிச்சயமாக இல்லை. இளமையில் நமது இந்த அலட்சியம் பெரிதாக  தெரியாது, காலம் செல்ல செல்ல ஒரு வெறுமை  சூழும்  நம்மை பார்த்து புன்னகைக்கவும் ஒருத்தர் இல்லையே எல்லோரும் எங்கே சென்றார்கள் என்று மனசு ஏங்கும். அன்பிற்கு இன்னொரு பக்கமும்  இருக்கிறது அதற்கு பெயர் வெறுப்பு, ஆம் அதுவரை மென்மையாகவும் பரிவாகவும் நம் ஒரு விழி பார்வைக்காக  ஒரு ஐந்து நிமிட பேச்சுக்காக காத்துக் கிடந்த அன்பு வெறுப்பாக மாறி இருக்கும். அன்பை மதிக்காவரிடத்து செலுத்தப் பட்ட அன்பு இப்படி ஆகிவிடுவது இயல்பு.  ஆனால் இது நல்லது அல்ல. நாம் வாழும் சூழல் அன்பு நேசம் பாசம் பிரியம்  நிறைந்ததாக இருக்க வேண்டும் அத்தகைய இடத்தில் தான் இறைவனின் பார்வை இருக்கும்.

அப்படியல்லாமல் எதன் பின்னோ ஓடி நமக்கான வாழ்க்கையை வாழாமல் போவதுடன், காலமும் அப்படி இப்படி நம்மை  அலைகழித்து ஓடச்செய்துவிடுகிறது.  அத்தகைய ஓட்டத்தில் வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களை கவனிக்காமல் வெற்றுப்புலம்பல் எரிச்சல் சலிப்புடன் மரணித்தேப்  போகிறோம்...


அடிக்கடி இல்லையென்றாலும் சந்திக்கும் நேரத்திலாவது  மெல்லிய புன்னகை சில அன்பான வார்த்தைகளை பிறருக்கு கொடுத்துச் செல்வதை வழக்கமாக்கி கொண்டோம் என்றால் இவையே நம்மை வாழும் காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்...

இனியாவது இப்படியும் கொஞ்சம் வாழ்ந்துப் பார்ப்போமே... ஆம்  'வாழத்தானே வாழ்க்கை' !!!





பிரியங்களுடன்
கௌசல்யா




   





திங்கள், மார்ச் 2

வாழ்தல் இனிது ...!

'பிறந்துவிட்டோம் அதனால் வாழ்கிறோம்' என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாலும் 'அடடா ஏன் இப்படி, வாழத்தானே வாழ்க்கை' என்று  கையை பிடித்து இழுத்து வந்து எங்கே சிரிங்க எங்கே ரசிங்க என்று உற்சாகப் படுத்துபவர்கள் சூழ வாழ்வது வரம். அதே வரம் இரட்டிப்பாய் கிடைத்தால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எனது குழந்தைகள்.  அரிதாய்  கிடைத்த இந்த வாழ்க்கையின்  ஒவ்வொரு  நிமிடத்தையும்  பெற்றோரை அனுபவிக்க  வைத்து   ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்  !!   

முதல் வரம் 

பிளஸ் 2 படிக்கும் எனது மூத்த மகன் பள்ளியில் 'பிரிவு உபச்சார விழா'விற்காக A Tribute to Teachers  என்ற ஆறு நிமிட வீடியோ ஒன்றை தயாரித்தான். மூன்று நண்பர்களுடன் ஆலோசனை செய்து  கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலைகளை இவன் செய்து முடித்தான்.சும்மா செய்து பார்ப்போமே என்று செய்த இவனது முதல் முயற்சி  ஸ்கூல் பிரின்சிபால் , ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றதில் அம்மாவா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வீடியோ ரெடி  ஆகும் வரை நாலுபேரை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இவர்கள் மறைக்கப் பட்ட பாட்டை நேரில் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். ஸ்கூல் எதிரில்  தான் எங்களின் வீடு என்பதால் பசங்க வருவதும் போவதுமாக இருக்கும்.  ஆசிரியர்களின் போட்டோக்களை பழைய குரூப் போட்டோக்களில் இருந்தும்  மாணவர்களின் போட்டோக்களை அவர்களின்  பேஸ்புக்(!) ப்ரோபைலில் இருந்தும் சம்பந்தப்பட்ட இசை, காட்சிகளை நெட்டில் எடுத்தும் இணைத்திருந்தான். தங்களின் போட்டோக்களை பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சர்ய சந்தோசம் கூடவே மனதை தொட்ட கான்செப்ட்,  இவனது கையை பிடித்து வாழ்த்தி சந்தோஷத்தில் கத்தி தீர்த்துவிட்டார்கள்.

ஒரு வாரத்தில் பப்ளிக் எக்ஸாம் , அந்த டென்ஷனை குறைக்க இந்த வீடியோ தயாரிப்பு  உதவும் என்பதை போல அவனும் ஜாலியாக இந்த வீடியோ பண்ணிய விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. முதலில் சிலைட் ஷோ பண்ண போவதாக இருந்தான், பிறகு என்ன நினைத்தானோ ஒரு கான்செப்டுடன் ஆறு நிமிட விடியோவானது. அதில் புகைப்படம் கிடைக்காமல் விடுபட்ட ஆசிரியர்களுக்கு  சாரி சொன்ன விதம், மூன்று நண்பர்களின் பெயரை சேர்த்தவன் தனது பெயரை (சந்தோஷ்) போடாமல் sam workshop என்று முடித்திருந்தான். காரணம் கேட்டதற்கு 'எதுக்குமா  பேரு, பண்ணினது யாருன்னு யோசிக்கட்டுமே' என்று சிரித்தான்.

 ஸ்கூல்ல ஒரு டீச்சர்,  'பப்ளிக் எக்ஸாம்  வச்சிட்டு இதை பண்ண வீட்டுல எப்டி அலோ பண்ணினாங்க' னு கேட்டதுக்கு 'என் பக்கத்துல உக்காந்து என்கரேஜ் பண்ணுனதே எங்க அம்மாதானே' என்றதும் டீச்சர் அப்படியே சைலென்ட்.  you tube யில் வீடியோவை ராத்திரி  அப்லோட் செய்த மறுநாள் எழுதிய கெமிஸ்ட்ரி மாடல் எக்ஸாமில் 93 சதவீத மதிப்பெண். சந்தோசமாக பரிட்சையை எதிர்க் கொள்ளனும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணத்தை நான் சொல்ல.:-) வீடியோவில்  பப்ளிக் எக்ஸாம் பற்றிய இடத்தில் விஜய் டயலாக் வர சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இடத்திற்கு பொருத்தமாக இருந்தது என்பதை விட அவனது மனநிலை அது என்பது எனக்குதானே தெரியும் :-) (ஒரு வருசமா இந்த பரீட்சையை சொல்லியே  ஸ்கூல் கொடுக்குற டார்ச்சரால எப்படா முடிச்சு தொலைப்போம்னு இல்ல இருக்கிறான்) :-)

நேரம் இருப்பின் வீடியோ பாருங்க.




இன்றைய குழந்தைகளின் ஆர்வம் ஈடுபாடு அலாதியானது தான். அதிலும் நம் பிள்ளை செய்கிறது என்றால் உலகத்திலேயே அதுதானே  ரொம்ப ரொம்ப பெரிசு இல்லையா :-)

இரண்டாவது வரம்

கடந்த வெள்ளிகிழமை(20/2/15)பிறந்தநாள் அன்று ஹாஸ்டலில் நண்பர்கள் போட்டிப் போட்டு பரிசுகள் கொடுத்து வாழ்த்தியதும் சந்தோஷத்தில்  கண் கலங்கி அழுதிருக்கிறான் எங்களின் இளைய மகன் விஷால். கிப்ட்ஸ்  எதையும் பிரிக்காமல் அப்படியே வீட்டுக்கு எடுத்துவந்தவன் என் முன்னால் வேகவேகமாக பிரித்தான். ஒவ்வொரு கிப்டும் வெள்ளை காகிதத்தால் சுற்றப்பட்டு சிகப்பு நிற ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது.  டியர் விஷால், ஹேப்பி பர்த்டே என்று எழுதி இருந்தவை அனைத்தும் ஓவியம்.  பேக்கிங்கின் உள்ளே இருந்தவை வெறும் பொருளாக எனக்கு தெரியவில்லை ... அங்கே சில பொருட்களின்  வடிவில் அமைதியாக உட்கார்ந்திருந்தது  நேசம் !!  நட்பிற்கு உருவம் கொடுத்தால் அது இப்படி இந்த புகைப்படத்தில் இருப்பதைப் போலத்தான்  இருக்கும் !!





ரெசிடென்சியல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பரிசு பொருள்கள் வாங்க  கடைகளுக்கு எவ்வாறு செல்ல முடியும். ஆனாலும் தங்களின் நேசத்தை இவ்வாறேனும்  வெளிப்படுத்துவோம் என்று  தங்களிடம் இருக்கும் பொருட்களில் கையில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து பேக்கிங் செய்து பரிசளித்த அச்சிறு குழந்தைகளின் முன்னால் பெரிய மால்களில் இருக்கும் பொருள்கள் கட்டாயம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்.  கிப்ட் கொடுத்ததும் என் மகன் அழுததின் காரணம் எனக்கும் புரிந்தது. ஹாஸ்டலில் இருந்தால் என்ன  நண்பனுக்கு பரிசளித்தே ஆகணும் என்று ரகசியக்கூட்டம் போட்டு முடிவு செய்தபின்னர் என்ன பொருளை கொடுக்க என்றெல்லாம் அதிகம் யோசிக்கவில்லை அவர்கள்... மூன்று நாளாக  அதுவும் என் மகனுக்கு தெரியக்கூடாது சஸ்பென்சாக இருக்கணும் என்று ஒளிந்திருந்து பேக் செய்திருக்கிறார்கள்.

மகன் விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்கு சென்றபின் தான், இந்த பொருட்களை  மறுபடி எப்போது பார்த்தாலும்  அழகிய அத்தருணம் அவனுக்கு நினைவுக்கு வருமே என்று போட்டோ எடுத்தேன்.  முன்பே இந்த யோசனை இருந்தால் பிரிக்கும் முன்பே எடுத்திருக்கலாம்.பேக்கிங்கை அவ்வளவு அழகாய் நேர்த்தியாய் செய்திருந்தார்கள்   ஆறாவது  மட்டுமே படிக்கும் அச்சிறு குழந்தைகள் !!

ஹாஸ்டலுக்கு ஒவ்வொரு திங்கள்கிழமை மாலையும் போன் செய்து நமது குழந்தையுடன் பேசலாம்...   அவ்வாறு என் மகனுடன் பேசும்போதெல்லாம் தவறாமல் இரண்டு எண்களையாவது கொடுத்து 'இந்த நம்பருக்கு போன் பண்ணி அவங்க பையனுக்கு உடனே போன் பண்ண சொல்லுங்க, ரொம்ப நேரமா வெயிட் பண்றான் என் பிரெண்ட்' என்பான் அக்கறையுடன். பொருள் தேடும் அவசரத்தில் ஹாஸ்டலில் இருக்கும் குழந்தையிடம் பேசணும் என்பதையே மறந்துவிடுகிறார்களே பெற்றோர்கள்.

பொருளின் பின்னே ஓடி ஓடி ஒருநாள் திரும்பிப் பார்க்கும் போது அங்கே நம்  குழந்தைகள் இருக்க மாட்டார்கள், நம் குழந்தைகளின்  சாயலில் வளர்ந்த ஒரு இயந்திரம் அங்கே  இருக்கும், கூடவே முதியோர் இல்லத்திற்கான முகவரியும்...!!  இதை புரிந்துக் கொண்டால் குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுவோம். நமது குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை எவ்வளவு விலை  கொடுத்தாலும் மீண்டும்  வாங்கவே  முடியாது.  நமது எல்லா வேலைகளையும் விட மிக மிக முக்கியம் குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் கொஞ்சம் நேரம்  மட்டுமே.

'இருபது பேருக்கு மேல் இருக்கும், உங்க மகனுக்கு வந்த பரிசுகளைப் போல இங்க வேற யாருக்கும் இப்படி நடக்கல' என்று ஹாஸ்டல் வார்டன் என் கணவரிடம் ஆச்சர்யப் பட்டதை அறிந்ததும்  இத்தனை பேரின் அன்பை சம்பாதித்த மகனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.  சக மனிதர்களை நேசிக்கும் இந்த ஒரு பண்பு போதும் படிப்பு பணம் புகழ் அனைத்தும் தானாகவே  அவனிடம் மண்டியிட்டு விடும்.  

பையனின் பிறந்தநாளுக்கு நான் எழுதிய போஸ்ட் பார்த்து  கமெண்ட்ஸிலும் பேஸ்புக் இன்பாக்சிலும் போன் செய்தும் வாழ்த்திய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அதிலும் போனில் அழைத்து  'போஸ்ட்ட  காலைல போடுறத விட்டுட்டு, போடவா வேண்டாமான்னு சாயங்காலம் வரைக்கும்  யோசிச்சி போட்டிங்களாக்கும்' என்று  என் தலையில் நறுக்குனு குட்டிய அன்பு நண்பர், எனது மகனின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து அவனை வாழ்த்தி மகிழ்ந்த அன்பு நண்பர் கே.ஆர்.பி.செந்தில்   போன்றவர்களை பெற்றிருக்கிறேன் என்பதை விட இந்த வாழ்க்கையில் சந்தோசம் வேறென்ன இருக்கப் போகிறது.



அன்புள்ளங்கள் சூழ வாழ்வது வரம் !! ஆம்... வாழ்தல் இனிது !!!


பிரியங்களுடன்
கௌசல்யா ...





வெள்ளி, பிப்ரவரி 20

பிள்ளைக் கனியமுதே ...கண்ணம்மா !!



எப்படித் தொடங்க என்று வேறு எந்த போஸ்டுக்கும் இவ்ளோ  யோசிக்கல ...சரி மனசுல வர்றத எழுதிவுடுவோம்  ...படிக்கிறவங்க பாடு ! :-)  ஆனா உண்மையில் எனக்கு இந்த பதிவு ஒரு அழகான நினைவுகளின் மீட்டல். அவனை பற்றி எழுத அமர்ந்ததும் இதயத் துடிப்பு அதிகரிக்க மனசு உளற கை நடுங்க கணினியின் மீது மெல்ல விரல்களை ஒத்தி எடுக்க ஆரம்பிக்கிறேன்... அவன் சில சமயம் இப்படித்தான் என் நினைவுகளில் உட்கார்ந்துக் கொண்டு என்னை நினைவிழக்கச் செய்வான் ... என்னை அதிகம் சிரிக்கவைப்பவன்... அவனுக்கு என்னை அடிக்கடி கட்டிக்கணும்... ஐ லவ் யூ சொல்லேன் என கெஞ்சினால் சரி சரி நானும் ஐ லவ் யூ  என்று சொல்லி போனஸாக என் கன்னத்தில் முத்தமிட்டு சிரிப்பான்.

அப்படி சிரிக்கும் போது அவன் கன்னத்தில் விழும் சின்ன குழிக்காக என் செல்லம், என் பட்டு , புஜ்ஜிமா, கண்ணம்மா என நீளும் என் கொஞ்சல்கள். மாதா பிதா குரு தெய்வம் நாலையும் விட மேலான ஒன்று இருக்குமென்றால் அதுதான் அவன்.  ஒருமுறை ஊசி குத்தி என் விரலில் ரத்தம் போது ஷ் ஆ என்று கொஞ்சம் சத்தமா கத்திட்டேன் போல... first aid பாக்சை தூக்கி வந்து  (கண்ணுக்கே தெரியாத காயத்திற்கு) கட்டுப் போட ஆரம்பித்துவிட்டான். அவனது செய்கையால் கலங்கிய என் கண்களை பார்த்தவன் வலிக்குதா சரியாப் போய்டும்  என விரலை நீவிவிட்ட அன்பில் கரைந்தே போய்விட்டேன். அவன் வந்தபிறகே பிரிக்கவேண்டும் என்று கட்டுடன் பகல் முழுவதும் சுற்றினேன், ஸ்கூல் முடிந்து வந்தவன் இப்போ எப்டிமா இருக்கு கேட்டுக் கொண்டே கட்டை பிரித்து பார்த்திங்களா சரியா போச்சு , நானும் அட ஆமால என்றேன் அவனை ரசித்துக்   கொண்டே ...

அவன் எப்போதும் அப்படித் தான்... பிறரின் மீதான நேசத்தை காட்டுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.  ஒரு குழந்தை போதும் என்று ஐந்தரை வருடங்களை கடந்த சமயத்தில் தற்செயலாக சந்தித்த ஒரு தூரத்து உறவினர், 'ஆணோ பெண்ணோ இன்னொன்னு பெத்துக் கோங்க, நம்ம காலத்துக்கு பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் கவனிச்சுப்பாங்க' என்றதுடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை தொடர்ந்தவர் 'உங்க பையனின் மீது உங்களுக்கு அன்பும் அக்கறையும் இருந்தால் அவனுக்கு ஒரு துணையை கொடுங்க,  ஒரு  பையனா தனியா வளருவது சரியல்ல' என்றார். அதன் பின் நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை... அதற்கு அடுத்த மாதம் ஜனித்து பத்தாவது மாதத்தில் கையில் தவழ்ந்தான் எங்களின் இரண்டாவது மகன் விஷால்!

இவன் பிறந்து மூணு வருடம் கழித்து ஒருநாள் பெரிய மகனிடம் விஷாலின் பிளாஷ் பேக் பற்றி 'அந்த அங்கிள் சொன்னதும் கடவுள்கிட்ட கேட்டோம் இவன் பொறந்தான்'னு கதை மாதிரி சொன்னேன், பொறுமையா கேட்டவன் 'அந்த ஆள் மட்டும் என் கைல கிடைச்சான், அத்தோட தொலைஞ்சான்' அப்டினு ஒரு வெறியோட சொல்லவும், உண்மை புரிந்து சிரித்துவிட்டேன்.   அவ்ளோ அட்டகாசம் அராஜகம் பண்ணுவான் சின்னவன். கோபம், பிடிவாதம், வைராக்கியம் எல்லாமே ஜாஸ்தி. நினைச்சதும் நடந்தாகணும் இல்லைனா பக்கத்துல இருக்குறவங்க தலைமுடில பாதி இவன் இரண்டு கைக்கும்  போய்டும்.  அவன் வளர வளர எங்களின் பயமும் அதிகமாச்சு. கவுன்சிலிங் பண்ணா சரியாகிடும்னு நண்பர் ஒருத்தர் சொன்னதால பாளையங்கோட்டையில் இருக்கும் பன்னீர்செல்வம் டாக்டரை பார்க்கப் போனோம்.  ஹாஸ்பிடல் வாசலில் மனநல மருத்துவமனை என்ற போர்டை பார்த்ததும் என் மனசு என்னவோ பண்ண, உள்ள போகாம திரும்பி வந்துட்டோம்.

அவனோட ஸ்கூல்ல  டீச்சர்ஸ் இவனை பத்தி நிறைய கம்பிளைன்ட் பண்ணுவாங்க, கிளாஸ்ல பசங்ககிட்ட பேசிட்டே இருக்கிறான், பாடத்தை கவனிக்காம படம் வரைஞ்சிட்டு இருக்கிறான்னு....பரவாயில்லை கண்டிக்காதிங்க , நான் பார்த்துக்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு வருவேன். ஹோம் வொர்க் செய்யமாட்டான், சொல்லிகொடுக்க உட்கார்ந்தாலும் இரண்டு நிமிசத்துல அவன் பார்வை  வேற பக்கம் போய்டும்.   A  for Apple என்று தொடங்கி  Z  வரைகூட சரியாக சொல்லமாட்டான். இப்படியே நாலாவது வகுப்பு முடித்தான்.  கம்ப்யூட்டர் கேம்ஸ், படம் வரையறது என ரொம்ப சுதந்திரமாக சந்தோசமாக  வளர்ந்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் நிறைய பேசுவேன், அவனையும் பேச வைப்பேன். அவங்க அப்பா பஞ்சதந்திர கதைகள், விக்கரமாதித்தன்,தெனாலி ராமன் கதைகள் என்று புக்ஸ் வாங்கி படித்து இரவு இவனுக்கு கதை சொல்வார். படிப்பை விட அவனது குழந்தைமையை கெடுக்காம இருக்கணும் என்பதில் கவனமாக இருந்தேன்.   

ஒருநாள் அவன் கைப்பிடித்து ரேகைபார்த்து, குட்டிமா நீ பெரிய சைன்டிஸ்ட் ஆ வருவ போலிருக்கே' என்றதற்கு அவனும் 'ஆமாமா எனக்கும்  ஏதாவது ஆராய்ச்சிப் பண்ணனும்னு தோணிட்டே இருக்குமா' என்றான். எனது ரேகை ஜோஸ்யமும் அவன் மனதை படித்து சொன்னதுதானே. எங்க ஊரில் பல வசதியான வீட்டு பிள்ளைகள் சைனிக் மிலிட்டரி ஸ்கூலில் சேருவதற்கு  வருடாவருடம் முயற்சி செய்வதை பற்றி என் கணவர் பேசிக் கொண்டிருந்தார்.  6 ஆம் அல்லது  8 ஆம் வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும். அங்கே இடம் கிடைப்பது மிக கடினம்,  அங்க படிச்சா ஆர்மி ,  நேவி , ஏர்போர்ஸ் போன்றவற்றில் ஆபிசர் ஆகலாம் என்று சொல்லவும், அருகில் இருந்த விஷால் அந்த ஸ்கூலை பற்றி கூகுளில் தேடி எடுத்தான். ஹார்ஸ் ரைடிங், ட்ரெக்கிங் என்று போட்டோஸ் இருந்ததை பார்த்ததும் நான் அங்க படிக்கப் போறேன்மா என சீரியசாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டான்.  போட்டி அதிகம் இருக்கும் என்பதால் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத தயார் செய்வதற்கு கோச்சிங் சென்டரில் முதலில் சேர்க்கணும். 'ஒகே அப்போ அங்க சேருங்க' என விஷால் சொல்லவும் எனக்கு வயித்தில் புளியை கரைக்க ஆரம்பித்தது.

நீண்ட ஆலோசனை விவாதத்திற்கு பிறகு உடுமலைபேட்டை அருகில் அமராவதி நகர்  சைனிக் ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்தோம். இங்கேயும் இண்டர்வியூ வைத்தே செலக்ட் செய்கிறார்கள். இவனுடன் எங்கள் ஊர் பசங்க மூணு பேரும் அங்கேயே   சேர்ந்தார்கள். சேர்த்துவிட்டு கிளம்பும் நேரம் என் மனதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக, 'இருந்துப்பியா குட்டி' என்று கேட்டேன், அவனோ கொஞ்சமும் தயங்காமல்  'நான் இருந்துப்பேன், உங்களாலத்தான் முடியாது, அம்மாவ பார்த்துக்கோங்க அப்பா' என்று  பெரிய மனுஷன் மாதிரி சொல்லிவிட்டு வேகவேகமா ஹாஸ்டலுக்கு  உள்ளே சென்றே விட்டான்.   

அங்கிருந்து பழனி திண்டுக்கல் வரையும் தொடர்ந்தது என் அழுகை.  என் கணவர், 'அவனுக்கு எவ்ளோ வைராக்கியம் பாரேன், விரும்பியது நிறைவேறனும்ன்ற பிடிவாதம் இருக்குற இவன் நல்லா இருந்துப்பான், நீ தைரியமா இரு' என்றார். உண்மைதான். ஆறு மாதம் கோச்சிங் முடிந்து  போன வருடம் 2014 ஜனவரியில் எக்ஸாம் நடந்தது. Written exam, Interview இரண்டும் சைனிக் ஸ்கூலிலும் மெடிக்கல் பிட்நெஸ் செக்கப்  கோவையிலுமாக நடந்து முடிந்து ஊர் திரும்பினோம்.  மூன்றிலும் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சிப் பெற்றான், ஆனால் செலக்ட் ஆகவில்லை. தமிழகத்தில் ஒன்றுமாக  இந்தியாவில் மொத்தம் 23 சைனிக் ஸ்கூல்கள் இருக்கின்றன. தமிழக ஸ்கூல் சீட்க்கு ஆயிரக்கணக்கில் போட்டி போட்ட மாணவர்களில் மொத்தம் 90 பேரை செலக்ட் செய்திருந்தார்கள். இதில் அதிக சதவீதத்தில் வட நாட்டினர் இருந்தார்கள்.  விசாரித்ததில்  நம்ம பசங்க +2 முடித்ததும் டாக்டர், இஞ்சினியர் என்று போய்விடுகிறார்கள், ஸ்கூல் நடத்துவதின் குறிக்கோள் பூர்த்தி அடைவதில்லையாம். காரணம் என்னவோ இருக்கட்டும் என் மகனின் விருப்பம் நிறைவேறலையே என்ற வருத்தத்தில் அவனிடம், 'அடுத்து என்னமா பண்றது'  என்று கேட்டேன். கொஞ்சம் வருத்தம் நிறைய யோசனை என்றிருந்த அவன் சொன்னான், 'இந்த லெவல்ல இருக்குற வேற ஸ்கூல் பாருங்க, படிக்கிறேன்'.  அதை கேட்டதும் 'மறுபடியும் ஹாஸ்டலா வேண்டாம்டா' என்றதற்கு 'அடப்போமா உன்கூட இருந்தா படிக்க மாட்டேன், நான் சைன்டிஸ்ட் ஆகணும் நிறைய படிக்கணும்' 

அப்புறமென்ன மறுபடியும் ஸ்கூல் தேடும் படலம். மதுரையை அடுத்த திருப் புவனம் ஊரில் இருக்கும் வேலம்மாள் ரெசிடென்சியல் ஸ்கூலை முடிவு செய்தோம். அங்கேயும் ஒரு Interview + 1 1/2 லட்சத்தில் பீஸ். வாரா வாரம் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவோம். ஆச்சு இதோ ஒரூ வருடம் முடியப்போகிறது.  எல்லா பாடத்திலும் 95, 97 என்று எடுக்கிறான். கூடவே டிரம்ஸ் , டென்னிஸ், ஸ்விம்மிங், யோகா என்று என்னவெல்லாம் விருப்பமோ அதை எல்லாம் கற்று வருகிறான்.  ஸ்கூல் உள்ளே இருக்கும் லைப்ரரியில்  எடுத்து படிக்கும் புக்ஸ் பத்தி நிறைய பேசுவான். எங்களிடம் கதை கேட்டு கேட்டு கதை சொல்ற பழக்கம் அவனுக்கும் வந்துவிட்டது. போன வாரம் போனில் பேசும்போது சொன்னேன், நீயா கதை எழுத டிரை பண்ணிப் பாரேன் என்று. சரி என்றவன் இன்று வீட்டுக்கு வந்ததும்  நோட்டை காட்டினான்,அழகான கையெழுத்தில் ஐந்து பக்கத்திற்கு கதை அங்கே இருந்தது... எனக்கு முன்னால் அவன்  புக் போட்டுட்டுவான்னு நினைக்கிறேன். :-)

அப்பா அம்மாவை விட தனது அண்ணன் மேல் உயிரையே வைத்திருக்கிறான். இரண்டு வருடமாகிறது இருவரும் சண்டைப்போட்டு, லீவுக்கு இவன் வந்ததும் தனது லேப்டாப்பை இவனிடம் ஒப்படைத்துவிடுவான் பெரியவன். கேம்ஸ் , ஆங்கில படங்கள் என்று முழு நேரமும் அதில் மூழ்கிவிடுவான். மகன்கள்  இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக பேசி விளையாடுவதை ஓரமாக நின்று ரசிப்பதுதான் எங்கள் இருவரின் பெரிய சந்தோசமே, வாழ்தல் இனிது !!

இப்போ ஆறாவது படிக்கிற இவரு ஒரு மாசமா 'டென்த் முடித்ததும் அமெரிக்கா போய் படிக்கப் போறேன், பணத்தை ரெடி பண்ணிக் கோங்க' என்று சொல்றாரு. ஏண்டா அங்க போகணும்னு கேட்டதுக்கு, எனக்கு பிடிச்ச வில்ஸ்மித், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், கார்ட்டூன் காரெக்டர்ஸ் எல்லாம் நியூயார்க்லதான் இருக்காங்க, சோ ஹேப்பியா ஜாலியா படிப்பேன்னு சொல்றான். என்னத்த சொல்ல... குழந்தைகளின் உலகம் ஆச்சரியங்கள் நிரம்பியதுமட்டுமல்ல, இப்படி சில திடீர் திருப்பங்களும் தான். :-)  விஷாலிடம் இப்போதும் அதே பிடிவாதம் வைராக்கியம் உண்டு, தனது விருப்பத்தை நிறைவேற்ற இவை இருக்கட்டும் என்பதை புரிந்தவனாச்சே  அவன் !

புதிதாக நிறைய தெரிந்துக் கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இன்றைய குழந்தைகளிடம் அதிகம். சுதந்திரமாக சிந்திக்கவும்  செயல்படவும் விட்டுவிட்டால்  அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதை புரியவைத்தவன் விஷால்.  எல்லாவற்றையும்விட  குழந்தையை ஒரு குழந்தையாக எப்படி வளர்க்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்.

* * *

இது வெறும் கட்டுரை அல்ல பதினோரு வயது வரையிலான அவனது அனுபவங்களின் சிறிய தொகுப்பு, என்றாவது ஒரு நாள் இந்த அனுபவங்களை, அவனது பார்வையில் அவன் எழுதலாம் ஒரு பிளாக் ஆரம்பித்து...! பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருப்பவனுக்கு  பிளாக்கில்  அக்கவுன்ட் வைக்க ரொம்ப நாளாகுமா என்ன  !!! :-)   

அப்புறம்

சொல்ல மறந்துட்டேனே  இந்த பதிவு யார் கண்ல எல்லாம்படுதோ  அவங்கலாம் என் மகனை அவசியம் (மனதிலாவது) வாழ்த்தியே ஆகணும்... பின்ன இன்னைக்கு(20/2/15) அவனுடைய பிறந்தநாள் ஆச்சே ... 

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா 
பேசும் பொற்ச்சித்திரமே...
அள்ளி அணைத்திடவே 
என் முன்னே ஆடி வரும் தேனே... !!

பெரியோர்களின் பரிபூர்ண அன்பும் ஆசியும் பெற்று தமிழ் போல் செம்மையாய் நீ வாழ வேண்டுமாய் இறைவனை வேண்டுகிறேன்.

என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிமா !!!


பிரியங்களுடன்
விஷால் அம்மா. 


பின்குறிப்பு : சைன்டிஸ்ட் ஆவாய் என்று நான் சொன்னதற்கு காரணம்  அவனுக்கு படிப்பின் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தணும் என்பதற்காக... அந்த ஐடியா நல்லவிதமாக வொர்க் அவுட் ஆனது. குழந்தைகளுக்கு இப்படி எதையாவது மறைமுகமாக சொல்லி அவர்களின் கவனத்தை நல்ல விதத்தில் திசைதிருப்பலாம் என்பது எனது அனுபவம்.


வியாழன், ஜனவரி 29

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 4


இதற்கு முந்தையப்  பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - 1 
வீட்டுத்தோட்டம் - 2 
வீட்டுத்தோட்டம் - 3

வீட்டுத் தோட்டம் என்பது சுவையான, சத்துள்ள, இரசாயனத்தன்மை அற்ற காய்கறிகளை உற்பத்திச்  செய்வது மட்டுமல்ல...பழையப்  பொருட்களை மறு சுழற்சிச்  செய்வதும் தான். பழைய பிவிசி பைப் , பிளாஸ்டி டப்பாக்கள் , பெயின்ட் வாளி, ஓட்டை உடைசல் பாத்திரங்கள், அட்டைப் பெட்டிகள்  மட்டுமல்ல வீணாக குப்பைக்கு போகும் சமையலறைக்  கழிவுகள், காய்கறிக் கழிவுகள், காய்ந்த இலைத் தழைகள், முட்டை ஓடு, தேயிலை, காபித்  தூள் கழிவுகள் போன்றவற்றை மறுஉபயோகம் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மிக பெரிய  நன்மையை செய்தவர்களாகிறோம். (இனி யாரும் உங்களைப் பார்த்து நீ பொறந்த இந்த மண்ணுக்கு பெருசா என்ன  செஞ்சனுக்  கேக்கவே முடியாது) :-)

ஊரில் எங்களின்  சொந்த வீட்டைச்  சுற்றி நிறைய இடம் அதுவும் வளமான செம்மண் இருப்பதால் தொட்டிகளில் காய்கறித்தோட்டம் போட வாய்ப்பில்லை.  ஆனால் தொட்டியில் வளர்த்துப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் தற்போது அமையவே பயன்படுத்திக் கொண்டேன். இது எனக்கு முற்றிலும் ஒரு இனிய அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அவற்றை இங்கே பகிருகிறேன். நிச்சயமாக  எனது இந்த அனுபவங்கள் உங்களுக்குப்  பயன்படும். 
  
பால்கனித் தோட்டம்

ஒரு சொந்த வேலையாக உடுமலைபேட்டையில்  ஏழு  மாதம் தங்கவேண்டிய சூழல். மாடியில் வீடு, முன்னாடி சிறிய பால்கனி, நல்ல காற்றோட்டமான இடம் மனதை வசீகரிக்கத்  தோட்ட வேலையை ஆரம்பித்துவிட்டேன். தினமும் ஒரு மணி நேரம் இங்கே செலவுச்  செய்கிறேன். நான்கு மாதம் ஆகிறது... தற்போது இங்கே இருப்பவை பாகற்காய், சுரைக்காய், தட்டைபயிறு, சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடி வகைகள், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற செடி வகைகள், மணத்தக்காளி, மஞ்சள் கரிசிலாங்கண்ணி, பச்சை, சிகப்பு பசலை கீரைகள், பாலக் கீரை,  புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணி, புதினா  போன்ற கீரை வகைகள், பிரண்டை, லெமன் கிராஸ், வெற்றிலை , துளசி, சோற்றுக் கற்றாழை, கற்பூரவல்லி (ஓமவல்லி) போன்ற மூலிகைகள் இவை தவிர  அன்னாசி , 2 ரோஜா செடிகள், changing ரோஸ் ஒன்று, செவ்வந்தி, இரண்டு வகை செம்பருத்தி, நான்கு வகை குரோட்டன்ஸ், மற்றும் ஒரு அவகோடா, ஒரு செண்பக மரக்கன்று, செவ்வாழை கன்று, இரண்டு பாக்கு மரக்கன்றும் (ஊர் போனதும் மண் தரையில் எடுத்து வைக்கவேண்டும்) இருக்கின்றன.  

இயற்கை முறையில் மாடித்தோட்டம் ,
அட்டைப் பெட்டியில் பாகற்காய் கொடி  

அனைத்தும் பிளாஸ்டிக் தொட்டிகள், அட்டைப் பெட்டிகள்,  மினரல் வாட்டர் கேன்கள், அரிசி சாக்குகள் , பிளாஸ்டிக் கவர்கள் தவிர கையில் கிடைக்கும் எந்த பொருளும் தொட்டியாக மாறிவிடும். இளநீர் குடிச்சதும் அவற்றையும்    தொட்டியாக மாற்றியாச்சு.

முக்கியமாக இவை எதற்கும் மண் போடவில்லை. உடுமலைபேட்டை,பொள்ளாச்சியை சுற்றி  தேங்காய் நார் கழிவு (coco peat) கம்பெனிகள் இருப்பதால் அவர்களிடம் coco peat blocks வாங்கி
அதனுடன் ஊரில் இருந்து கொண்டு வந்த மக்கிய ஆட்டுச் சாணம் கலந்திருக்கிறேன். இவை இரண்டும் தவிர கிச்சன் கழிவுகள் அனைத்தையும் உரமாக மாற்றிப் போட்டுவிடுவேன்.  அரிசி கழுவிய தண்ணீர், மீன், சிக்கன், மட்டன் கழுவிய தண்ணீர் , முட்டை ஓடுகள் என அனைத்தும் பால்கனிக்கு வந்துவிடும். தேங்காய் நார் கழிவு, நீரை பிடித்துவைத்து கொள்வதால் மூன்று  நாள் தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடிகள் வாடுவதில்லை. coco peat இன் எடை லேசாக இருப்பதால்  தொட்டிகளின் கனம் தாங்காமல் வாடகை வீட்டு மாடி பால்கனி  டமால்னு கீழே விழுந்துவிடும் என்ற பயம் இல்லவே இல்லை :-)

மனதோடு மட்டும் - மாடித்தோட்டம்
மிதிப் பாகற்காய் என்ற ஒரு வகை , சுவை மிகுந்தது 

பூக்கள் பூக்கத் தொடங்கியதும் வண்ணத்துப்பூச்சிகள் வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டன. தேன்சிட்டு ஒன்று ரெகுலர் விசிட்டர்,  வீட்டினுள்ளே பரவும் பூக்களின் மணம்  அவ்ளோ ரம்யம் !! தக்காளி, பாகற்காய், அவரைக்காய் காய்த்து தற்போது சமையலறைக்கும் வந்துவிட்டன. புதினாவை இருமுறை துவையலுக்கும் மூன்று முறை பிரியாணிக்கு சேர்க்கவும் பறித்தாகிவிட்டது. பறிக்கப்  பறிக்க வேக வேகமாக வளருவதே ஒரு அழகுதான்.

செடிகளில் எறும்பு தெரிந்தால் மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் தூவுவேன். பூச்சிகள் இருந்தால் பூண்டு,பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து சாறு  எடுத்து தண்ணீர் கலந்துத்  தெளிப்பேன்.  வேப்ப இலைகளை அரைத்து கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம். இன்னும் பல முறைகள் இருக்கின்றன...அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாகச்  சொல்கிறேன்.

மாடியில் தோட்டம் போடுவதால் பூச்சிகளின் தொல்லை சுமார் 70 சதவீதம் குறையும் என்கிறார்கள்.

எளிய பந்தல்  முறை


கொடி படர ஆரம்பித்தப்போது ...

பாகற்காய் பந்தல் போட பால்கனியில் வசதி இல்லை. ஸ்லாபில் மழை நீர் வடிய அரை அடி நீள பிவிசி பைப் இரு பக்கமும் இருந்தது.  இரண்டுக்குமாய் கட்டுக்கம்பியை இழுத்துக்  கட்டினேன். (4 அடி நீளத்திற்கு கட்டு கம்பியை 14 துண்டு  வெட்டி வைத்துக் கொண்டேன்)  ஓரத்தில் இருந்து ஒவ்வொரு கம்பியாக  கட்டி தொங்க விட்டேன். கீழ் நுனியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கட்டினேன்,   கம்பி வளையாமல் ஸ்ட்ரைடாக இருப்பதற்காக. (பாட்டில்களில் cocopeat + compost  நிரப்பி புதினா,தக்காளி , பசலை கீரைகளை நட்டு வைத்திருக்கிறேன்) இப்படி வரிசையாக ஏழு  கம்பிகளையும் கட்டி பாட்டில்களைத்  தொங்க விட்ட பின் குறுக்காக  மிச்ச ஏழு கம்பிகளையும் சிறிது இடைவெளி விட்டு கட்டினேன்.  குறுக்கும் நெடுக்கும் இணைக்க கம்பியை சிறிது வளைத்து ஒரு சுற்று சுற்றினால் போதும். அவ்வளவுதான்.  பந்தல் ரெடி.  இருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது கற்பனையை சிறிது கலந்தால் போதும், எத்தகைய சிறு இடத்திலும் தோட்டம் போட்டுவிடலாம்.

காய்கறிக் கழிவு உரம்

கடைகளில் இதற்கென மண் கலன்கள் கிடைக்கின்றன. கிடைக்காதவர்கள் வீட்டில் இருப்பதை வைத்தே தயாரிக்கலாம். மண் தொட்டி, மண்பானையையும் பயன்படுத்தலாம். நான் பழைய இருபது லிட்டர் மினரல் வாட் கேன் ஒன்றின் அடி பகுதியில் சிறு துளை இட்டு அதனடியில் ஒரு பிளாஸ்டிக் பிளேட்  என தயார் செய்தேன்.. மேல் பகுதி வழியாக கழிவுகளை போட்டுக் கொண்டு வர  கழிவு நீர் பிளேட்டில் சேகரமாகும். வாரம் ஒரு முறை அதை எடுத்து தண்ணீர் கலந்துச்  செடிகளுக்கு ஊற்றலாம். கழிவு நீர் வீரியம் ஜாஸ்தி என்பதால் அப்படியே ஊற்றக் கூடாது, செடி கருகிவிடும்.  maggot எனப்படும் புழுக்கள் கழிவுகளில் உருவாகும், இவைதான் கழிவுகளை மக்க வைப்பவை. கழிவுகள் போடப்பட்டதும் கேனின் வாய் பகுதியை மூடி விட  வேண்டும். ஒரு நீளமான குச்சியால் கிளறிவிடலாம்.  கேன் நிறைந்ததும் அடுத்த கேனில் போட்டுவரவேண்டும்.  அறுபது நாளில் அதிகபட்சம் மூன்று மாதத்தில் உரம் தயாராகிவிடும். கருமைநிறமாக மாறி இருக்கும் உரத்தை கேனின் வாய்பகுதி வழியாக எடுக்கலாம்.

( காய்கறிக் கழிவுகளை உரமாக மாற்றும்  Kamba என்னும் compost bin ஒன்றை கோயம்புத்தூரில் வாங்கினேன். அதைப்  பற்றிய விவரம்  அடுத்த பதிவில்...)

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவச்  செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.


தோட்டம் போடுவது பொழுதுபோக்கு, சந்தோசம்  தவிர தேவையான காய்கறிகள்,பழங்கள்  கைக்கெட்டும் தூரத்தில் ப்ரெஷாக கிடைக்கும் என்றளவில் இருந்த என் எண்ணம் பசுமைவிடியல் அமைப்பு ஆரம்பித்ததும் இயற்கையின் மீதான ஈடுபாடு தீவிரமடைந்து தற்போது இயற்கை விவசாயம் செய்ய  நிலம் வாங்குவதில் முடிந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல்  பலரையும் வீட்டுத்தோட்டத்தின் பால் அவசியம் இழுத்தே ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் எனக்கு தெரிந்த குறிப்புகள் தகவல்களை பலர் கேட்க, சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  

பசுமைவிடியல் பேஸ்புக் தளத்திலும் பகிர்ந்து வருகிறேன்.  வீட்டுத்தோட்டம் பற்றிய இந்த தொடரைத்  தொடர்ந்து எழுத உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இயலாது...படித்துவிட்டு தோன்றும் சந்தேகங்கள் , உங்களுக்கு தெரிந்த தகவல்களை மெயில், கமென்ட் மூலமாக தெரிவியுங்கள். பலரையும் இதில் ஈடுபட வைப்போம். வெறும் நாலே  மாதத்தில் சிறிய இடத்தில்  பால்கனியில் இத்தனை வகையான செடிக் கொடிகளை வளர்ப்பது சாத்தியம் என்றால் உங்களாலும் முடியும் தானே  ... இதுவரை வீட்டுத்தோட்டம் போடவில்லை என்றால் இன்றேனும் ஆரம்பியுங்கள்...

வீட்டுத் தோட்டம்


ஆரோக்கியமான குடும்பமாக எல்லோரின் குடும்பமும் இருக்கவேண்டும் என்ற நமது விருப்பம் சிறிதாவது நிறைவேறும் என்ற  நம்பிக்கையில் ...

ப்ரியங்களுடன்
'மனதோடு மட்டும் ' கௌசல்யா

மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


செவ்வாய், ஜனவரி 20

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3

முந்தையப் பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - அனுபவம் 1 
வீட்டுத்தோட்டம் - அனுபவம் 2 

வீட்டுத்தோட்டம் ஏன் அவசியம் என்ற கேள்வி கேட்டவர்களுக்காக
இந்த எச்சரிக்கை ரிப்போர்ட் :-

'எண்டோசல்பான்' என்ற  பூச்சிக்கொல்லியை  2 ஆம் நிலை விஷப் பொருள் என்று உலக சுகாதார நிறுவனமும் முதல் நிலையில் 2 ஆம் பிரிவை சேர்ந்த விஷப் பொருள் என அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் அறிவித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் எண்டோசல்பான் தயாரிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது...!! 

மேலும்

தடை செய்யப்பட்ட  இரசாயன பூச்சிக்கொல்லி  மருந்துகள் நமது உடலில் இருப்பதாக மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  Cypermethrinheptachlor, quinalphos, aldrin, chlorodane, dichlorvas, cypermethrin ஆகியவை அரசால் தடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிமருந்துகள் காலிப்ளவர் முட்டைகோஸ் கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் மீதும் பிற தானியங்களின் மீதும் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்றும்  கடைகளில் விற்கப் படும் காய்கறிகளில் அதிகளவு அதாவது ஆயிரம் மடங்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும்  கண்டறியப்பட்டுள்ளன .

Home Garden

* கத்திரிக்காயில் மட்டும் சாதாரண அளவை விட 860% தடை செய்யப்பட பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இருந்ததாம். இதற்கு அடுத்த இடத்தில் காலிபிளவரும் மூன்றாம் இடத்தில் முட்டை கோஸ் இருக்கிறதாம்.

இந்த இரசாயனப்  பூச்சி மருந்துகள் அனைத்துமே neurotoxins அதாவது நரம்பு மண்டலத்தை தாக்கிப்  பாதிப்புக்குள்ளாகும் நச்சுப் பொருள்கள். மேலும் இவை நாளமில்லா சுரப்பிகள் ஈரல் சிறுநீரகம் அனைத்தையும் பாதிப்பவை. உணவில் நச்சுத்தன்மை மற்றும் பல ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா ஆகியவற்றின் மூலக்காரணம் இந்த தடைச் செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளே !

கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் மரபணு மாற்றங்கள் placenta மூலம் கருவையும் தாக்குகின்றன. ஆப்பிள் சாப்பிட்டால் நோய் வராது என்பதெல்லாம்  அந்தகாலம். ஆப்பிள் , ஆரஞ்சு பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்ட அளவினை விட 140% அதிகம் இருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் மூன்று மடங்குக்கும் அதிக அளவு இரசாயனப்  பூச்சி மருந்துக்  கலவையில்  பழங்கள், காய்கறிகள் கீரைகளை  முக்கி எடுத்த பின்னர்தான் கடைகளுக்கு  விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். விரைவாக அழுகி விடக் கூடாது என்பதற்காக...!

பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் பளப்பளப்பாக பிளாஸ்டிக் கவர்களில் இருப்பவை சுத்தமானவை என்று நம்பிவிடாதீர்கள். அதில் எவ்வளவு இரசாயனம், மெழுகுப்பூச்சு இருக்குமோ ?  
(Reference :Times of India)

மேலும்

2025 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும்  இரண்டு குழந்தைகளில் ஒருவர் (பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர்) ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்ற  அதிர்ச்சித்  தகவலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். பாதிப்பிற்குக்  காரணமாக கூறப்படுவது மான்சான்டோ !! இந்நிறுவனத்தின் அரும் பெரும் கண்டுப்பிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி ஒரு எமன்.



நேரம் இருப்பின் இந்த லிங்க் சென்று படித்துப் பாருங்கள்.

தாவரங்களைத்  தாக்கும் பூச்சிகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நன்மை செய்யும் பூச்சி, மற்றொன்று தீமைச்  செய்யும் பூச்சி. சைவ பூச்சி, அசைவ பூச்சி என்றும் சொல்வார்கள். நன்மை செய்யும் பூச்சி, அசைவ இனம் பிற பூச்சிகளை ஸ்வாஹா செய்யும், இதனால் தாவரத்திற்குப்  பாதிப்பு இல்லை. இவற்றில் நன்மை செய்யும் பூச்சி இலையின் மேலே இருக்கும், தீமை செய்யும் பூச்சி இலையின் அடியில் இருக்கும். நாம் என்ன செய்கிறோம் பூச்சி மருந்து அடித்து நன்மைச்  செய்யும் பூச்சிகளைக்  கொன்றுவிடுகிறோம்,  (இது சின்ன உதாரணம்தான், தொடர்ந்து பூச்சிகளின் நன்மை, தீமை பற்றி பகிர்கிறேன்)

இவ்வளவும் தெரிந்துக்கொண்ட பிறகாவது  நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எப்படி? நம் வீட்டிற்குப்  பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது?? பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதாது. நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். தொடர்ந்து வாசிங்க, அந்த ஏதாவது என்ன என்று இப்போது உங்களுக்கு  புரியும்.

ஒன்றே செய் அதை இன்றே செய் 

ஒரே வழி இயற்கைக்கு மாறுவது தான் ! இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை  நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை   ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும்.  சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது.  இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா ? டாக்டரை பார்க்கிறோம், ஊசி போடுகிறார், சரி ஆனதும் அத்தோடு விட்டுவிடுகிறோம்...ஆனால் ஒவ்வொரு முறை காய்ச்சல், அலர்ஜி, வலி ஏற்படும் போதும் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என நாம் எண்ணுவதே இல்லை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறளின் பொருளை மறந்தேவிட்டோம்.

எவ்வாறு இயற்கையை நோக்கிச் செல்வது

இது பெரிய வித்தை எல்லாம் இல்லை, நமது சுற்றுப்புறத்தை பசுமைச்  சூழ இருக்குமாறுப்  பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போடப்பட்டவைகளை அறவேத்  தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த தானியங்கள்,காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான ஒரே தீர்வுதான்  வீட்டுத்தோட்டம். நெருக்கடி மிகுந்த அப்பார்ட்மென்டிலும் தோட்டம் போட வழிமுறைகள் இருக்கின்றன.  பலர் இணைந்தும் செய்யலாம்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.

how old are you என்ற ஒரு மலையாளப் படத்தை பலரும் பார்த்திருக்கலாம், ரசித்திருக்கலாம். அட இப்படியுமா என ஆச்சர்யப்பட்டிருக்கலாம். அந்த படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து எடுப்பதையும் கேள்விப்  பட்டிருக்கலாம். நிச்சயமாக அதில் சொல்லப்பட்ட விஷயம் பலரின்  மனதை பாதித்திருக்கும்,  மலையாளப் படம்  பார்க்காதவர்கள் தமிழில் வெளி வந்த பிறகாவது கட்டாயம் பாருங்கள்.

நடிகை மஞ்சுவாரியரின் முக்கியமான மேடைப் பேச்சு உங்களின் பார்வைக்காக...




வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தோட்டம் போடத் தொடங்குங்கள்...சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் எனது மெயில் ஐடியில் அல்லது கமெண்டில் தெரிவியுங்கள். பதில் சொல்லக்  காத்திருக்கிறேன்.



ப்ரியங்களுடன்...
கௌசல்யா.
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


தகவல் உதவி :Angelin 
படம்:கூகிள் 

புதன், ஏப்ரல் 2

மனிதர் உணர்ந்துக் கொள்ள... இது மனிதக் காதல் அல்ல !!

Love story of malena

என் அன்புக் காதலா... 

கவிதைகளில் உன்னை பேசிப் பேசியும் தீரவில்லை என் காதல்... அதுதானோ என்னவோ கவிதை இன்று இப்படி கடிதமாகிவிட்டது. ம்ம்...தீராக் காதலை எப்படி சொன்னால் தான் என்ன  தீர்ந்தாப் போய்விடும் !   

'கா த ல்' என்ற வார்த்தையை இதுவரை மெல்ல உச்சரித்தவள் இன்று சற்றே சத்தமாக சொன்னேன்... அல்ல அல்ல கத்தியே விட்டேன். செவிப்பறை அடைந்த என் கத்தல் உள்ளுக்குள் ஏதோ ஒன்றை உடைத்து ஏற்படுத்திய உணர்வு பிரவாகத்தில் மூழ்குவதும் மிதப்பதுமான அதி அற்புதமான ஒரு உன்னத நிலை...மயங்கிச் சரிந்தேன் மெல்ல. ஒரு வார்த்தைக்கு இவ்வளவு வலிமையா ... என்னைத்  தொலைத்து உன்னில் என்னைத் தேடும் அபத்தத்திற்கு ஒரு அழகானப்  பெயரே காதல் ! 

நம் இருவரின் தேசங்கள் வேறு, திசைகள் வேறு, நான் கிழக்கு நீ மேற்கு... எந்த புள்ளியில் இணைந்தோம் இணைத்தது எது என்பதைப்  பற்றியெல்லாம் இதுவரை யோசித்ததில்லை யோசிக்க நேரமுமில்லை, காதலில் மூழ்கிப் போன நெஞ்சம் வேறு எதைத் தான் சிந்தித்தது. என்   சிந்தனை சொல் செயல் எல்லாம் உன்னை பற்றியே உன் ஒருவனை பற்றியே ...விடியலில் தூக்கம் கலையும் போதே உன்னுடனான கனவும் கலைந்துவிட மறுபடி இழுத்து அணைத்துக் கொள்கிறாய் நினைவுகளால்....இரவின் கனவுகளில் பகலின் கற்பனையில் என்று உன்னைப்  பார்த்துக் கொண்டே இருக்கும் என் விழிகள் வேறு யாரைத்தான் அறியும்!

நம் தேசங்களின் இடைவெளியோ பல ஆயிரம் மைல்கள், காதல் வந்தப்பின் தேசமென்ன திசையென்ன தூரமென்ன நடுவில் எதிர்படும் மலை என்ன தடுக்கும் கடல்தான்  என்ன?

நீயும் நானும் பேசிப் பேசியே
இருவருக்கும் இடையிலான
கடலளவு தூரத்தை
குறைத்து விடமாட்டோமா என்ன?
பிரிவும் தூரமும் காதலை
அதிகரிக்கவேச் செய்யும்
என்று சொன்னவனே நீ தானே !   

நன்றாக நினைவிருக்கிறது, பறவைகள் சூடான இடம் தேடி நாடு விட்டு நாடு இடம்பெயரும் ஒரு குளிர்காலம் அது.  அப்பொழுது தானே என்னைக் காக்கும் தேவனாய் வெகுத் தொலைவில் இருந்து நீ வந்துச்  சேர்ந்தாய். அன்பை வளர்த்தாய் ஆதரவு நானே என உன் தோள் சாய்த்தாய். உறவாடி உயிரானோம்... உயிர்(கள்) வளர்த்தோம்...  

கையிழந்து
கவலைச் சுமந்து வாழ்ந்த மனதில்
உன்னைச் சுமக்க வைத்தாய்... 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் நான்
கவலைச்  சுமக்கிறாய் நீ !! 

தற்செயலாய் சந்தித்ததாய் ஒருநாள் சொன்னாய், உன்னை என்னிடம் அழைத்து வந்த அந்த தற்செயல் சொல்லிவிட்டது என்னைத் தேடிய உனது ஜென்மாந்திரத் தேடலை...!

விழிகளால் பேசிக் நட்பை வளர்த்து, செல்லச் சண்டைகளில் மூழ்கித் திளைத்து,  ஏதோ ஒரு தருணத்தில் என்னையே காதலைச்  சொல்லவும் வைத்துவிட்டாய்  ...சிறிதும் லக்ஜையின்றி நேராய் உன் முகம் பார்த்து காதலை நான் சொல்ல அதை ஓரக் கண்ணால் ரசித்துக் கொண்டே தலைக்  குனிந்தாய். அது வெட்கமா சம்மதமா என்ற குழப்பத்தில் நான் நிற்க எனது ஒரு கை கோர்த்து உள்ளங்கை வெப்பத்தில் மௌனமாய் உணர்த்தினாய். இன்று வரை நொடிக்கொரு முறை நான் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க நீயோ காதலாகவே இருக்கிறாய், வாழ்கிறாய்... 

காதலால் கட்டுண்டு வருடங்கள் பல உருண்டோடிவிட்டன.  நம் காதல், நாட்களை எண்ணுவதில்லை... பிரிந்தப்  பொழுதில் சேரும் பொழுதையும் சேர்ந்தப்  பொழுதில் ஒருவரை ஒருவருமாக  எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிக்  காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்!

இதோ இந்த மார்ச் மாதத்துடன் நமது காதல் 12 வது ஆண்டை எட்டி விட்டது.  குளிர்காலம் முடிந்ததும் உன்னை பிரிய மனமின்றி பிரிந்து அடுத்த குளிர்காலத்திற்காக வழக்கம் போலவே காத்திருக்கப் போகிறேன்... காதல் என்றும் அழிவதில்லை அது நம்மை போன்ற பறவையின் காதலாக இருந்தாலும்...

இப்படிக்கு,

உன் அன்புக்காதலி 
மலேனா.   
மலேனா பறவையின் தீராக்காதல் கதை


இரண்டு பறவைகளின் காதல் கதை   
---------------------------------------------------------

1993 ஆம் ஆண்டு குரேஷியா நாட்டில் வேட்டைக்காரன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதால் ஒரு இறக்கையை இழந்துத்  தவித்தது ஒரு பெண் நாரை. அதை  Stjepan Vokic என்ற ஒரு நல்ல மனிதர் அன்புடன் எடுத்துக் காப்பாற்றி தனது வீட்டின் கூரையில் இடம் ஒதுக்கிக் கொடுத்து  உணவிட்டு 20 வருடமாக வளர்த்து வருகிறார். 

தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலமாக இருந்தப்போது அங்கிருந்து குரேஷியா வந்த ஒரு ஆண் நாரை இறக்கை இழந்த பெண் பறவை மலேனா மீது தீராக் காதல் கொண்டது.  வருடந்தோறும் தவறாமல் மார்ச் மாதம் வருவதும் காதலில் திளைப்பதும் வழக்கமாகிவிட்டது. பெண் நாரை முட்டை இட்டு குஞ்சுகள் பொரித்ததும் பொறுப்புள்ள தகப்பனாக அவற்றிற்கு பறக்கக்  கற்றுக் கொடுக்கிறது.  பிள்ளைகள் நன்கு பறக்கப்  பழகியதும் அவற்றை அழைத்துக் கொண்டு தனது சொந்த  நாடான தென் ஆப்பிரிக்கா கிளம்பி விடுகிறது. இப்படியே கடந்த  32 பிள்ளைகளை பெற்று(!) வளர்த்து அழைத்துச் சென்றிருக்கிறது.

அந்த அன்புக் காதலன் ரோடான் ஒவ்வொரு வருடமும் மத்தியத்தரை கடல், மலைகள், பாலைவனம் எல்லாவற்றையும் கடந்து சுமார் எட்டாயிரம் மைல்கள் பறந்து வருகிறது . தனது காதலி மலேனா காத்திருப்பாள் அதற்கு ஏமாற்றம் தரக் கூடாது என்பதை ரோடான் நன்கு அறிந்திருக்கிறது. சரியாக மார்ச் மாதம் வந்து  அன்பாக குடும்பம் நடத்தி, தனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு காதலியிடம் விடைப் பெற்றுக் கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது நாட்டிற்கு கிளம்பி விடுகிறது. 

காதலின் வலிமை இனம் மொழி மதம் தேசம் கடந்து மனிதர்களிடம் மட்டுமல்ல ஐந்தறிவு உயிர்களிடமும் உண்டு என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இவர்களை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்க இயலவில்லை. 

மறுபடியும் 
உனது பயணத்தைத்  தொடங்கிவிடாதே
காதலை நான் வாசித்து
முடிக்கும் வரையிலாவது  
சற்றுப் பொறுத்துக் கொள்
முடிக்கவும் இயலாக் காதலை 
எனக்கு கொடுத்துவிட்டு
விட்டு விலகிச்செல்வது
அவ்வளவு சுலபமில்லை
புரியவைக்கிறேன் என்னை 
கொஞ்சம் அருகினில் 
நெருங்கி வா என் கண்ணே!  

என்று கொஞ்சிப்  பேசி மகிழ தனது காதல் கணவன் அடுத்து எப்போது வருவார் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மலேனா... கூடவே Stjepan என்ற நல்ல மனிதரும் !!  எங்கே ரோடான் வராமல் போய்விடுமோ என்ற கவலையுடன் காத்திருக்கும் இவர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். பணமில்லாமல் தனது தொலைபேசியையும் விற்று மலேனாவிற்கு உணவு வாங்கிய  இவரை போன்றவர்களால் தான் இப்பறவைகளின் காதல் வென்றிருக்கிறது ... உலகில் மனிதம் நிலைத்திருக்கிறது. 


மலேனாவின் காதல் !

இதோ இப்போது இந்த  மார்ச் மாதமும் கிளம்பி வந்துவிட்டது. தனது காதலியுடன் இணைந்து தங்களது 12 வது ஆண்டு விழாவை வெகுச்  சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த காதல் பறவைகளை நாமும் வாழ்த்துவோம் !!!  

                                 * * * * *

பின் குறிப்பு:

மலேனா ரோடான் பற்றி தனது தளத்தில் எழுதிய அன்புத்தோழி ஏஞ்சல் இவர்களைப்  பற்றி நீங்களும் எழுத வேண்டும் என்று அன்புக் கட்டளை இட நெருங்கிய தோழியாச்சே மீற முடியவில்லை, என்பதை  விட இந்த பறவைகளின் காதல் கண்டுப் பிரமித்துவிட்டேன். எனக்கு மிகப் பிடித்த 'காதல்' அவர்களிடம் கொட்டிக் கிடக்க இதோ எழுதியே விட்டேன். படிச்சிட்டுத்  திட்டுறதுனா தோழியை திட்டுங்க :-) 


பிரியங்களுடன்... 

கௌசல்யா     




புதன், மார்ச் 26

சும்மா ஒரு ஹாய் ஒரு ஹலோ ...!

just want to say hi ,hello

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

பதிவுகள் எழுதி ரொம்ப நாள்(மாசம்) ஆச்சு ...இனியாவது  தொடர்ந்து எழுத லாம் என இருக்கிறேன், அப்படி தீவிரமாக  பதிவுகள் எழுதுறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு ஹாய் சொல்ல இந்த பதிவு . எப்படி இருக்கிறீர்கள் ? நலம் தானே !  எங்கே ஆள காணும் என்று நலம் விசாரித்த நட்புகளுக்கு எம் அன்பான நன்றிகள்!

மே மாதம் வரை மாணவர்களுக்கு தேர்வு டென்ஷன்... நமக்கு தேர்தல் டென்ஷன் ! (யார் வந்தா நமக்கென்ன என்று இருப்பவர்களுக்கு எந்நாளும் நன்னாளே) சமூக தளங்கள் தான் தேர்தல் முடிவை உறுதிச்  செய்யப்  போவதைப்  போல பரபரப்பாக இருக்கிறது. அரசியல் நக்கல் , நையாண்டிகள் , நிறைய பிளாஷ்பேக் கதைகள் என்று சூடு பிடித்து விட்டது. என்னைபோல அரசியல் கிலோ என்ன விலை என்பவர்களுக்குத் தான் இவங்கலாம் எதை பத்தி யாரை பத்தி பேசுறாங்கனு ஒரே குழப்பமாக இருக்கிறது .  ஜனநாயக கடமையைச்  சிறப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும்  சக வலைத்தள நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.

வாழ்க்கை ஏதாவது  ஒரு பாடத்தை நமக்கு தினமும்  சொல்லிக் கொடுத்து கொண்டே இருந்தாலும் அத்தனை பேருமா அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், வெகு  சிலரே  கற்றுக் கொள்கிறார்கள், பலர் கற்க தவறி விடுகிறார்கள். ஒருவேளை நாம தவறவிட்டாலும் நம்ம கூட இருக்கிறவங்க கற்றுக் கொடுத்துடுவாங்கப்  போல. சிரிக்கத் தெரிந்த  மனிதனாச்சே நாம ,      சங்கடங்கள்  சிரமங்களைச்  சிரித்தே கடந்து விடலாம் என்று எண்ணினால், எங்கே சிரிக்க விடுகிறார்கள்...நம்மைச்  சுற்றி இருக்கிறவர்கள். எப்பொழுதும் எதையாவது பேசி, விவாதம் என்ற பெயரில் நம்மள குழப்பி,  கழுத்து சுளுக்குற அளவு கருத்துச்  சொல்லி...னு என்னவோ போங்க ரொம்பவேப்  படுத்தி எடுக்குறாங்க. அவங்க கூட பழகிப்  பழகி நமக்கும் அதே  பழக்கம் தொத்திகிடுச்சு (இல்லைனாலும் ஒன்னும் தெரியாதாக்கும்) அதிலும் முக்கியமா இந்த பதிவுலகம்  வந்ததில் இருந்து  வெளில யார் கிட்ட பேசினாலும் பதிவுல எழுதுற  மாதிரியே பேசிக்கிட்டு இருக்கிறேன். ரொம்ப நாள் கழிச்சு என்னோட காலேஜ் பிரெண்ட் ஒருத்திய  சந்திச்சேன், 'என்ன நீ என்னவோ மாதிரி பேசுற, நிறுத்தி நிதானமா,  முன்ன எல்லாம் இப்படி பேச மாட்டியே' கேட்ட பிறகு தான் எனக்கே இது புரியுது. :-)

சமீபத்துல கோர்ட்க்கு ஒரு கேஸ்ல சாட்சியாகப்  போனேன்...    எதிர்தரப்பு  வக்கீல் என்கிட்ட வந்து , நான் யாருக்காக போனேனோ அவரை  குற்றவாளி அப்டி இப்டினு சொல்லி, இதுக்கு என்ன பதில் சொல்ரிங்கனு கேட்க, டக்னு  'இப்டி நீங்க சொல்வதை வன்மையாகக்  கண்டிக்கிறேன்' னு சொல்லிட்டேன்,  வக்கீல் முறைக்க... கோர்ட் மொத்தமும் சிரிக்க...நீதிபதியும் லேசா சிரிச்சிக்கிட்டே , 'இங்க நாந்தான்மா கண்டிக்கணும், நீங்க கண்டிக்கக்கூடாது' என்று சொல்ல...நாக்க நான் கடிக்க...சில நொடிகள் கழிச்சி , 'அப்ப எதிர் வக்கீல் சொல்வதை வன்மையாக மறுக்கிறேன்' என்றேன் மெதுவாக !  (அங்க வச்சா நான் எழுதிய கண்டனம் போஸ்ட் ஞாபகத்துக்கு  வரணும்)  ஒரு வழியாக  விசாரணை  முடிஞ்சு வெளில வர,  எங்க தரப்பு வக்கீல், உள்ள போறதுக்கு முன்னாடி அவ்ளோ யோசிச்சிங்க, இப்படி தைரியமாகப்  பேசுவிங்கனு  நான் எதிர்பார்க்கல...முக்கிய சாட்சி உங்களோட இந்த ஒரு பதில் போதும் கேஸ் ஜெயிச்சிடும்னு  சொல்றாரு. (தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக முடிந்தது) 

பார்த்திங்களா, இந்த பதிவுலகம் எப்படி என்னை வளர்த்து விட்டுருக்குதுனு ! 

இப்படி இங்கே நான் கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய  ! கடந்த நாலு மாதமாக எழுதுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. பிற வேலைகள்,பிரயாணங்கள்  அதிகரித்து விட்டதால் மனமும் சோர்ந்துப் போய்விட்டது. . மறுபடி இதோ இன்று எழுதும் போது அதே பழைய உற்சாகம் ! அதுதான் இந்த பதிவுலகின் விந்தை. பழைய நண்பர்களை பார்த்ததும் வருமே ஒரு குஷி, அந்த மாதிரி !!!

பதிவுலகம் வரலைனாலும் டேப்லெட் மூலம் பேஸ்புக்  செக் பண்ணிட்டு இருப்பேன், பசுமைவிடியல் தளத்தில் அப்டேட் பண்ணுவேன். ஆனா  ஒரு  இம்சை ! ஓபன் பண்ணிய  கொஞ்ச நேரத்துல  இன்பாக்ஸ்ல  வந்து ' நீங்க ஆன்லைன் இருக்குறது தெரியும் , ஏன் பதில் சொல்ல மாட்டேன்கிறிங்க' என்பார்கள் சில துப்பறிவாளர்கள்! 'ஹாய், நல்லா இருக்கிங்களா?' ன்ற கேள்விக்கு எத்தனை முறைதாங்க பதில் சொல்றது. நிஜமா முடியல !!  அதை விட ஒரு சகோதரர் கேட்டார், 'என்னங்க இத்தனை மணிக்கு பேஸ்புக்ல இருக்கிங்க...அதும் ஒரு பெண்ணா இருந்துகிட்டு ?!'  என்ன கொடுமைங்க இது ?? நான் என்ன ரோட்லையா ராத்திரி 1 மணிக்கு தனியா நின்னேன். அப்படியே நின்னாலும் அது அவங்கவங்க  சொந்த விஷயம்... இவங்கள மாதிரியானவங்க கற்காலத்த விட்டு வெளில வரமாட்டாங்க போல !

அடிக்கடி கணவருடன் இரவு நேரத்தில் வெளியூர் பயணம் செல்லும்  சூழல் , வண்டி ஓட்டுற அவர் தூங்கக்கூடாதேனு  பேஸ்புக் அப்டேட்ஸ் படிச்சு அதை பத்தி பேசிக்கிட்டுப்  போவோம். அப்படியே ஊரும் வந்துவிடும்.....இதைப்   பத்தி எல்லாம் தெரியாம அடுத்தவங்களின் தனிப்பட்ட விசயத்தில்  மூக்கை நுழைக்கும் அதிக பிரசங்கிகள் எப்போ திருந்தப்  போகுதோ தெரியல . உங்களுக்கு தோணலாம் ,இந்த மாதிரி ஆட்களை பிளாக் பண்ணி இருக்கலாமே என்று , அப்படியும் கொஞ்ச  பேரை பிளாக் பண்ணியாச்சு,  எதுக்கும் நாம  கொஞ்ச நாள் ஒதுங்கி இருப்போம்னு  டீஆக்டிவேட் பண்ணி வச்சேன்... அப்போதான் தெரியுது வெளியுலகம் ரொம்ப அழகு என்று !! இப்படி அடிக்கடி வெளியுலகம் போய்வருவது  எல்லோருக்கும் நல்லது !! :-)

வாட்ஸ்அப் என்றொரு இனிய இம்சை

ஒருநாள்  ரெஸ்டாரென்ட் ஒன்றில் ஆர்டர் கொடுத்துவிட்டு டேப்லெட்டில் கேம்ஸ் விளையாடிகிட்டு இருந்தேன். அந்த பக்கம் வந்த ஒருத்தர் , நீங்க வாட்ஸ்அப்ல இருக்கிங்களா என்றார். நான் ரொம்ப வேகமா இல்லைங்க பேஸ்புக் ல இருக்கேன் சொன்னேன் . ஓ ! மீ டூ பட் வாட்ஸ்அப் இஸ் த பெஸ்ட் அப்டி இப்டி னு எடுத்துவிட்டுக்கிட்டே  இருந்தார். அப்டி என்னடா அதுல இருக்கும் ரொம்ப ஆர்வமாகி   கற்போம்  பிரபு தம்பிக்கு கால் பண்ணேன் , ஆண்ட்ராயிடு போன்ல இது ஒரு ஆப்ஸ் , fb இன்பாக்ஸ் மாதிரி சாட் பண்ணிக்கலாம் .போட்டோஸ், விடியோஸ் ஷேர் பண்ணிக்கலாம் என்று அவர்   சொன்னதையே விரிவாகச்   சொன்னான். சரி அதையும் என்னனு பார்த்திடலாம்னு டவுன்லோட் பண்ணி  யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். டைப் பண்ணப்  பொறுமை இல்லைனாச்  சொல்ல வேண்டியதைப்  பேசி அனுப்பிடலாம் என்பது எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு.  முக்கியமா,  பிடித்தவர்கள் குரலை லைவா கேட்பதும்  நினைத்தப்போது எல்லாம் மறுபடி போட்டு கேட்பதும் ஒரு அலாதி குஷி!! :-)

வாட்ஸ்அப் நிஜமா பெஸ்ட். ஆனா பாருங்க இதுலயும்  அதே இம்சை ! ஓபன் பண்ணதும் 'ஆன்லைன்' னு காட்டிக் கொடுத்துவிடும். நான் இரண்டு நாளா இத ஓபன் பண்ணவே இல்லன்னு சத்தியம் எல்லாம் செய்ய  முடியாது. Last seen ல   மாட்டி அசடு வழிய வேண்டியதுதான். இதுக்கும் ஒரு வழி இருக்குனு இப்போதான் கண்டுப்பிடிச்சேன்  "WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி?  ன்ற போஸ்ட்ல சொன்னபடி செட்டிங்க்ஸ் செஞ்சுக்கலாம். 

சில பேர் இதை மொபைல் என்பதையே மறந்துடுவாங்க, இஷ்டத்துக்கு வீடியோ, சாங் , படங்கள்னு அனுப்புவாங்க, மெமரி வேகமா காலியாகி நான்  ஓபன் பண்றப்போ  'மரியாதையா  ரீசார்ஜ் பண்ணப்  போறியா இல்லையா'னு மிரட்டுது ஆன்ட்ராயிடு! பார்வேர்ட் மெசெஜ் ஒரு நாலு பக்கம் அளவுக்கு அனுப்புவாங்க, எல்லாம் படிச்சு நம்ம அறிவை வளர்த்துக்கவாம், இதையெல்லாம் முதல்ல அவங்க படிப்பாங்களானு தெரியல. அதைவிட  'இதை அப்டியே 108 முறை எழுதி அனுப்புங்க உடனே நல்லது நடக்கும்' என்ற அப்போதைய போஸ்ட் கார்ட் டைப்  மெசெஜ அப்படியே  வாட்ஸ்அப்ல அனுப்பி கொல்றாங்க. அறிவியல் வளர்ந்தாலும் இவங்க இன்னும் வளரலையே நினைக்குறப்போ அழவா சிரிக்கவா தெரியல.  இப்போ முடிவு பண்ணிட்டேன் இது போல அவஸ்தை படுத்துற அன்பு நபர்களை பிளாக் பண்ணியே ஆகணும்னு, ஏன் பண்ணினனு கேட்க மாட்டாங்க (நம்புங்க) அப்படியே கேட்டாலும் சொல்லிக்கலாம், என் போன்  என் உரிமை ! :-)  இந்த பாலிஸிய ஏன்  எல்லா இடத்திலும் பாலோ பண்ண முடியறதில்லை என்பது தான் நம்ம பலவீனம். ஆனா கண்டிப்பா  பாலோ பண்ணனும் ஏன்னா நம்ம ஹெல்த் முக்கியமில்லையா !

அவசியமான விசயங்களைக்  கேட்பதற்கும், சொல்வதற்கும் உபயோகப் படுத்துவதற்கு பதிலாக  ஹாய், ஹலோ, நலமா, என்ன பண்றிங்க , இப்போ பிரீயா, சாப்டிங்களா, என்று கேள்வியா கேட்டு வதைப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் ஒரே கேள்வியை தினமும்...பல பேர் கேட்டா நிலைமை அவ்ளோதான். இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓட்டம், நிற்க நேரம் இன்றி ஓடிக்  கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் எங்கே நிதானமாக பதில் சொல்ல முடிகிறது. அன்பு அதீத அன்பாக மாறி எதிர்பார்ப்புகள் அதிகரித்து இறுதியில் மன வருத்தத்தில் முடிந்து விடுகிறது. அன்பையும் அளவோடு செலுத்துவது  நல்லது அது நட்பாக இருந்தாலும் நெருங்கிய உறவாக இருந்தாலும்... அதிக உரிமை அதிக மன கசப்பு.  (அனுபவம்)

மேலும் இது போன்ற நவீன வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய பிரைவசி பறிப்  போனது போல் இருக்கிறது. நம்ம வீட்டு கிச்சனை மத்தவங்க  எட்டி பாக்குற ஒரு பீல் (பெட்ரூம்னு சொன்னா மட்டும் மக்கள் புரிஞ்சுத்  திருந்திட போறாங்களா என்ன) நம்மளை யாரோ பின்தொடருகிற ஒரு உணர்வு எப்போதும் இருந்துக் கொண்டே இருப்பது நல்லாவா இருக்கு. தியேட்டர், ரெஸ்டாரென்ட், ஷாப்பிங் மால் , ஆபீஸ், துணி கடை, பாத்திர கடை , சூப்பர் மார்கெட் னு எங்க பார்த்தாலும் கேமரா, கெடுபிடி  !! பாதுகாப்பு என்ற பெயரில் தனி மனிதனின் சுதந்திரம் சுத்தமாக  பறிப்  போய்விட்டது.

எது எப்படி இருந்தாலும் நம் வாழ்க்கை நம் உரிமை என்று போய்க் கொண்டே இருக்கவேண்டும் ... அப்போது தான் நிம்மதி சாஸ்வதம். அவ்வாறு போகும் போது  எதிர்படும் எல்லா உயிர்களிடத்தும் சிறு  புன்னகை ஒன்றை உதிர்த்துச் செல்வோம் ... அது போதும் (ஒரு ஹாய் சொல்றேன்னு சொல்லிட்டு என்னை மாதிரி இப்படி கதைச்  சொல்லிக்கிட்டு இருக்கப்படாது) :-)



உலகம் அழகானது...அன்பு உயர்வானது  ...அன்பால் உலகை ஆளுவோம் !!


பிரியங்களுடன்
'மனதோடு மட்டும்'
கௌசல்யா