காதலியை, மனைவியை
தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர்
வாழும் இங்கே தான்
வேறு சில புல்லுருவிகள் !
அன்பு, அக்கறை காட்ட வீட்டில்
அவளுக்கும் ஆட்கள் உண்டு
என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய
உன் அறியாமை என்னே !
பெண் வீழ்ந்தாள் என்று நினைத்தாயோ
வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும்
உன் வித்தை புரியா
பேதையவள் அன்றோ !
தாய்க்கும் தாரதிற்க்கும்
வித்தியாசம் உண்டென்பதை
உணரா மூடன் நீ அன்றோ !
அடுத்தவன் பெண் தானே
எடுத்தாள சுலபம் என்று எண்ணியது
உன் மடமை அன்றோ !
உன் வீட்டு பெண்ணை அடுத்தவன் பார்த்தால்
மட்டுமே வெகுண்டெழும் உன் ஆண்மை
என்ன வேடிக்கையடா,மானிடா !?
காதலை விட புனிதமான நட்பை
காமத்திற்கு என்றே கடைவிரிக்கும்
கூட்டத்தின் தலைவன் பதவி உனக்கே !
பாரதியின் ரௌத்ரம் பழகினால்
மட்டும் போதாது பெண்ணே....
செயலிலும் காட்டு,
அழிந்தொழியட்டும் கயமை !
களை எடுக்க ஏன் தயக்கம்
தோள் கொடுக்க நல்லவர் பலர்
உண்டு இங்கே !
'தேரா மன்னா' இயம்பிய
வழி வந்தவள் அன்றோ நீ !
உள்ளே கொந்தளிக்கும்
நெருப்பை அள்ளி எறி
எரிந்து சாம்பலாகட்டும்
அற்ப பதர்கள்... !!
இதை நான் சொல்லியே ஆகணும்...!!
பதிவுலக தோழி ஒருவர் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நிஜ நிகழ்வு,,,,பதிவுலகம் வந்த புதிதில் ஆண் பதிவர் ஒருவர் ஒரு பெண் பதிவரிடம் நட்பாக பேசி பழகி இருக்கிறார்....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!? காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த ஆண் பதிவரின் நட்பு தொடர்ந்து இருக்கிறது......!
நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...! நட்பு கொஞ்சம் பாதை மாறுவதை உணர்ந்து, நட்பை முறித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு அந்த பெண் பதிவர் வந்ததை தெரிந்து டார்ச்சர் இன்னும் அதிகரித்து இருக்கிறது...கடைசியில் இந்த விவகாரம் அந்த பெண் பதிவரின் கணவன் காதிற்கு போய்விட்டது....அதன் பின் பிரச்சனை வேறு விதமாக திரும்பி விட்டது...தன் மனைவியை சந்தேகப்பட தொடங்கிவிட்டார்....மூணு மாதம் கழித்து அந்த பதிவரின் கணவன் இப்போது கோர்டில் போய் நிற்கிறார்.....!? பெண் பதிவரோ மன உளைச்சலில் சிக்கி பிளாக் எழுதுவதை தற்சமயம் நிறுத்திவிட்டார்.
வேறு மாதிரியான பிரச்சனைகளையும் இந்த நபர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை பெண் பதிவர் நட்பை முறித்துக்கொண்ட பின் அந்த பதிவரை பற்றி மற்றவர்களிடம் இந்த பெண் அப்படி, இப்படி என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்...(என்ன செய்து இந்த மாதிரியான ஆட்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.)
வேலையற்ற சில வீணர்களின் விளையாட்டால் இணையத்தில் பெண்கள் இப்படியும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் புதிய பெண் பதிவர்கள் ரொம்பவே கவனமாக பேசவேண்டியது அவசியம். அக்கறையாக, அன்பாக பேசுகிறாரே என்று நெருங்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். மேலும் இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் அளவுக்கு மீறி வரும் பாசம் எதில் போய் முடியும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை...! கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.
மறுத்தல் அவசியம்
உங்க மெயில் id பெரும்பாலும் கொடுக்காமல் இருந்தால் நலம்...மீறி கொடுத்தாலும் சொந்த விசயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது...செல்போன் எண்ணையும் கொடுக்காமல் தவிர்க்கலாம் .எந்த கேள்விக்கும் நாகரீகமாக மறுப்பு சொல்வது பின்னால் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.....சிலருக்கு பொழுது போக்கே பெண்களின் மெல்லிய உணர்வுகளோடு விளையாடுவது தான்.....?!
செல்போனில் ஏதாவது நம்பரை டயல் பண்ண வேண்டியது, எதிர்புறத்தில் பெண் குரல் கேட்டால் "சாரிங்க என் பிரண்ட் நம்பருக்கு டயல் பண்ணினேன், தப்பா உங்களுக்கு வந்துவிட்டது, சரி விடுங்க....நீங்க என்ன பண்றீங்க.....உங்க குரல் காலேஜ் பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கு...எந்த காலேஜ் படிக்கிறீங்க....?" இந்த மாதிரி உரையாடல் நீண்டு கொண்டே போகும். உடனே கட் பண்ணினாலும் கண்ட நேரத்தில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தொடரும். இந்த ராங் கால் விஷயத்தால் பெண்களில் சிலர் பாதிக்க படுகிறார்கள்.
இதைப்போலத்தான் இணையத்திலும் பெண் பதிவர்களுக்கு தொல்லைகள் தொடருகின்றன.....இந்த சங்கடங்களை வெளியில் சொல்ல இயலாமல் மனதிற்குள் புழுங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். இரு பெண் தோழிகளிடம் (பதிவர்கள்) இடையே கூட இந்த மாதிரி ஆட்கள் சிண்டு முடித்து, பிரித்து விடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது பொழுது போக்கு, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு....?!! அவர்கள் பாதிப்பு அடைந்தால் அவர்களின் குடும்பமும் பாதிக்கும் என்பதை உணருவார்களா இந்த மாதிரியான ஆட்கள்...??!
" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் "
எச்சரிக்கை !!