டீன் ஏஜ் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டீன் ஏஜ் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 13

பாதைத் தவறும் "டீன் ஏஜ்" குழந்தைகள் ??!! பகுதி - 2

"18 வயதிற்கு குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 40 சதவீதமாக இருக்கிறது. இவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலச் சமுதாயத்தின் நிலை மிக மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான அத்தனை பிரச்சனைகளிலும் உடனடித் தீர்வு காணப்படவேண்டியது அவசியம். கட்டுப் படுத்த முடியாத தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் கிடைக்கும் நன்மைகளுக்கு சரிசமமாய் தீமைகளும் இருக்கின்றன" என்றெல்லாம் கவலை தெரிவித்திருப்பவர் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி. சஞ்சய் கிஷன் அவர்கள்.

அவரது கவலை அர்த்தமுள்ளது, இந்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கவேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின்  நீரோட்டத்தில் உங்கள் பிள்ளைகள் மிதக்கப் போகிறார்களா?  மூழ்கப் போகிறார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். 



நாம்  அனுபவிக்காததை நம் பிள்ளைகளாவது அனுபவிக்கட்டும் என்ற பெருந்தன்மை தான் அனைத்து பிரச்சனைகளின்  ஆணிவேர். நீங்கள் அனுபவிக்காத சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என எண்ணுவது சரி அது எத்தகைய சந்தோசம் என்பதில் கவனம் மிக மிக அவசியம்.

டீன் ஏஜ் பிள்ளைக்கு  அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அக்கவுன்ட் இருப்பதில் தவறொன்றும் இல்லை, ஆனால் அதில் அவர்கள் எவ்விதமாக நடைபோடுகிறார்கள் என்ற கட்டாய கவனிப்பு தேவை.   நம் பிள்ளைதானே தவறென்ன செய்யப்போகிறான்/ள்  என்ற மெத்தனம் இனியும் வேண்டாம். இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கியமானவை செல்போன், இணையம், சினிமா இவை மூன்றும். தவறுகள் ஏற்படவும் அவை தொடரவும் அதிகமாக துணை புரிகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தேவையானதும் கூட ...ஆனால் அதை நாம் கையாளுவதை பொறுத்தே நன்மை தீமைகளின் சதவீதம் அமைகிறது. 

வளர்ந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் இன்னும் குழந்தைகள் தான், பிறந்த குழந்தையை வளர்க்கும் போது கவனம் வைத்ததை விட அதிகளவு கவனத்தை டீன்ஏஜிலும் வைத்தே ஆகவேண்டும் என்பது  காலத்தின் கட்டாயம்.

தவறுகளின் ஆரம்பம் 

மாணவன் ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே பலரும் சுட்டிக் காட்டுவது ஆசிரியர்களை நோக்கியே... தங்களின் ஒரு குழந்தையை சரியாக வளர்க்க முடியாத பெற்றோர் நாற்பது குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியரை குறைச்  சொல்வது எவ்விதம் சரி. வெகு சுலபமாக ஆசிரியர்களை கைகாட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். பள்ளியில் தானே அதிக நேரம் இருக்கிறார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த இடத்தில், எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை விட முக்கியம் பெற்றோர்களின் வளர்ப்பு எத்தகையது என்பதே.  தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கத்  தவறினால் அதுவே பல பெரிய தவறுகளின் ஆரம்பமாகிறது. தவறும் குழந்தைகளைக்  கண்டிக்கும் ஆசிரியர்களை ஆள் வைத்து அடிக்கும் அளவிற்கு இன்றைய பெற்றோர் மாறிப் போனது வருத்தத்திற்குரியது. 

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்தால் போதும் என்று பெருமிதம் கொள்வோர் அதிகம், அதனால் பிள்ளைகளின் வாழ்க்கை திசை மாறுவதையும் அவர்கள் கவனிப்பதில்லை. அவ்வாறு அவர்களை திசை மாற்றுவதில் முக்கியமானவை செல்போன் பைக் இணையம் சினிமா.   


பள்ளிக் குழந்தைகளின் கைகளில் விதவிதமான செல்போன்கள்...வாங்கி தருபவர்கள் பெற்றோர்! அதன் மூலம் பேஸ்புக் வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் இருந்து தனித்தே இருக்கிறார்கள். பெற்றோர்களும் இதை பெரிதுப்படுத்துவதில்லை.. 'ஒருவருக்கு ஒரு காதல்' என்று இல்லாமல் பல சிம் பல காதல் என்றாகிப்போனது.

கிராமத்திற்கு சென்றால் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம் ஏதோ ஒரு மரத்தடி அல்லது கோவிலில் அரசு கொடுத்த விலையில்லா மடிகணினியை சுற்றி அமர்ந்து பள்ளிமாணவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை கண்டுக்களிக்கிறார்கள். நகரத்தில் தனி அறையில் மகன் /மகள் படிக்கிறான் என்ற எண்ணத்தில்  வெளியே பெற்றோர், உள்ளே நடப்பதோ வேறு. வரைமுறையற்ற இணையவெளியில் உலவும் இவர்களுக்கு எது சரி எது தவறு என்ற விழிப்புணர்வை கொடுக்கவேண்டிய பெற்றோர் கண்டும்காணாமல் இருப்பது பல விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது.  
   

மொபைல் போன் அதிகம் உபயோகிப்பதால் தூக்கமின்மை, அமைதியின்மை ஏற்பட்டு மறதியில் முடியலாம்.  தவிர கம்ப்யூட்டர் உட்பட அனைத்து நவீன சாதனங்களையும் தூங்கச்  செல்லும் வரை உபயோகித்தால்  இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற இதுவும் ஒரு காரணம். .

என் குழந்தை எந்த தவறும் செய்யமாட்டான்/ள் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை வைத்துக் கொள்ளாதீர்கள். இன்றையநாளில் இத்தகைய நம்பிக்கை ஆபத்தானது. எங்கள்  வீட்டிற்கு எதிரில் இருக்கும் நகரின்  பெரிய பள்ளியின் 12ம் வகுப்பு மாணவர்கள் ஒரு இருபது பேர் காம்பவுண்ட் சுவரின் அருகே  மரத்தடியில் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் வந்து கூடி விடுவார்கள், ஏழரை மணிவரை மொபைல் போனில் பாட்டு கேட்பது, வீடியோ, பேஸ்புக் என்று அரட்டை அடிப்பார்கள். இது தினமும் நடக்கும் காட்சி. இக்கூட்டத்தில் ஒரு மாணவன் (மூன்று மாணவிகளுடன் காதல் ?!)தனியாக சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போனில் பேசிக்கொண்டிருப்பான். அதே பள்ளியில் படிக்கும் என் மகனிடம் 'இந்த பசங்க மாதிரி கட் அடிக்காம  கேர்ள்ஸ்தான்  ஒழுங்கா ட்யூஷனுக்கு போய் படிக்கிறாங்க'  என்றேன் அவன் சிரித்துக் கொண்டே சொன்னான், 'இவங்க டியூசன் கட் அடிச்சிட்டு பேசுறாங்க, அவங்க டியூசன்ல போய் பேசுறாங்க அவ்ளோதான் வித்தியாசம் !?'

பள்ளி  மாணவர்களுக்கு எதுக்கு செல்போன்? ஏதாவது அவசரம் உதவி என்றால் செல்போன் அவசியம் என்கிறார்கள், செல்போன் வருவதற்கு முன் நாமெல்லாம் தினம்  செத்துச்  செத்தா பிழைத்தோம்?! மேலும் பல பள்ளிகளில் செல்போன், பைக் இரண்டுக்கும் அனுமதி இல்லை ஆனால் இரண்டும் அவர்களிடம் இருக்கிறது...ஒன்று அமைதியாக(சைலென்ட் மோட்) பையில், மற்றொன்று அடுத்தத்  தெரு மரத்தடியில்...! இரண்டையும் வாங்கிக் கொடுப்பது பெற்றோர்கள். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போனில் இவர்களால் பேசமுடிகிறது என்றால் தவறு எங்கே இருக்கிறது.  நம்ம குழந்தைகள் சரியாக டியூசன்,ஸ்கூல் அட்டென்ட் பண்ணுகிறார்களா என்று அந்த இருபது பேரில் ஒருவனின் பெற்றோர் கூடவா  கவனிக்க மாட்டார்கள். பெற்றோர்களின் இத்தகைய மெத்தன அலட்சியப் போக்கு வருத்தத்திற்குரியது. 

ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் சொல்லிக்கொடுப்பதை மாணவர்கள்  அக்கறையுடன் கவனித்துப் படித்தாலே போதும் , தனியாக எதற்கு  டியூசன்? அதுவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு ஸ்கூலில் டியூசன் க்கு செல்லும் மாணவ மாணவிகள் 9-4 ரெகுலர் கிளாஸ் அட்டென்ட் செய்துவிட்டு அதன் பின் மாலை நேர  டியூஷன் முடித்து  வீடு வர இரவு எட்டு, ஒன்பது  மணிக்கு மேல் ஆகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பற்றிச்  சிறிதும் அக்கறை இன்றி ஸ்கூல் டியூஷன் செல்லாதவர்களை பிரைவேட் டியூஷனில் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். சேர்த்துவிட்டால் மட்டும் போதும், குழந்தைகள் படித்து விடுவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை, சுத்த முட்டாள்தனம்.

சினிமா 

வன்முறை, வக்கிரம், ஆபாசம், விரசம், இரட்டை அர்த்த வசனங்கள் இவைதான்  இன்றைய சினிமா. குழந்தைகளைக்  கட்டி போட்டு வைத்திருக்கும் சினிமா அவர்களின்  மனதில் காதல் என்ற விச(ய)த்தை விதைக்கிறது.  பள்ளி  மாணவர்கள் காதலிப்பதைப்  போல படமெடுபவர்களின் வீட்டுப்  பிள்ளைகள் காதல் திருமணம் செய்தால் மட்டும் பெற்றோருக்கு துரோகம் ,  அவமானம் என்று கண்ணீர் விடுகிறார்கள். ஏதேதோ காரணம் சொல்லிப்  பிரித்தும் விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப்  பார்த்து திசை மாறும் குழந்தைகளைப்  பற்றி யாருக்கும் இங்கே அக்கறையில்லை.  அநேக படங்கள் டீன்ஏஜ் காதலை நியாயப்படுத்துவதை போன்றே எடுக்கப் படுகின்றன. ...இதெல்லாம் சினிமாவில் மட்டும்  தான் சாத்தியம் என்பதை டீன் ஏஜ் குழந்தைகளுக்கு  யார் புரிய வைப்பது.? 

மாணவர்களின் பெரும்பாலான பொழுதுகள் இன்று சினிமாவைச்  சுற்றி மட்டுமே பின்னப்பட்டிருக்கிறது...சினிமா ஒரு பொழுது போக்கு என்ற கட்டத்தைத்  தாண்டி சினிமா தான் வாழ்க்கை என்று என்று வந்ததோ அன்றே நம் மாணவர்கள் தொலைந்துவிட்டார்கள்...தங்களின் வாழ்க்கையைத்  தொலைத்துவிட்டார்கள். இன்றைய மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நடிகனின் ரசிகர்கள், அவ்வாறு காட்டிக்கொண்டால்தான்  மாணவர்கள் மத்தியில் மரியாதை கிடைக்கிறதாம்??!

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா  

செவ்வாய், டிசம்பர் 23

பெற்றோர்களால் பாதைத் தவறும் "டீன் ஏஜ் " ??! ஒரு அலசல் - பகுதி - 1





"18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்றவை வழங்குதில் தவறில்லை, அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும், ஆனால் திருமண பந்தத்தில் அடிஎடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு அந்த வயதில்  உடல், மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமணவயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே பெண்ணின் திருமண வயதை 21 என்று உயர்த்த வேண்டும், அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்" என்று சொல்கிறது  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.  

18-21 வயதுவரையான பெண்ணுக்கு  உடல் மன வளர்ச்சி இருக்காது என்கிறார்கள், ஆனால் அதற்கும் குறைந்த வயது   குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் கொடுமைக்கு என்ன தீர்வு எழுதப் போகிறது காலம்....? இளவயது கருத்தரிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எங்கே ஆரம்பிக்கிறது சிக்கல்? ஆண் பெண் இரு குழந்தைகளுமே வன்கொடுமையை அனுபவிக்கிறார்கள்.. நம் குழந்தைகளை  வன்கொடுமைக்கு ஆளாகாமல் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு    முக்கியம் நம் குழந்தைகளின் மூலமாக  இப்படி ஒரு கொடுமை நிகழாமல் இருப்பதும் ?! இதைப் படிக்க அதிர்ச்சியாக இருந்தாலும் இன்றைய நிஜம் இது. 

என் மகன்/மகள் அப்படி நடக்க மாட்டார்கள் என்ற எந்த உத்திரவாதமும் உங்களால் கொடுக்க முடியாது. இன்றைய தொழில்நுட்பம் தான் உங்களையும் அவர்களையும் பிரித்து வைத்திருக்கிறதே, அதன் மூலம் அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் தனி உலகத்தை பற்றியும் உங்களுக்கு அக்கறையில்லை. உங்களுக்கு உங்கள் கவலை , பணத்தின் மீதான கவலை. நல்லதை சொல்லிக் கொடுக்க பெற்றோரும் இல்லை வழிக்காட்ட சமூகமும் இல்லை...தவறுகிறார்கள் தவறிழைக்கிறார்கள்...எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் !! 

காதல் திருமணங்கள் 

டீன்ஏஜ் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சியை காதல் என்ற பெயரிட்டு பழகும் இவர்கள் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு என்றதும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அந்த பெண்ணுக்கு  பதினெட்டு வயது பூர்த்தியாகி இருந்தால் காவல்துறையினரே முன் நின்று திருமணமும் முடித்து வைத்துவிடுகிறார்கள். அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படியாகும் என்பதை பற்றி எல்லாம் சட்டத்திற்கு அக்கறை இல்லை. சட்டத்திற்கு தேவை வயது, பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21. 

அதே சமயம் 21 வயது பெண்ணுக்கே உடல், மன வளர்ச்சி அடைந்திருக்கும் என்ற இன்றைய வாதத்தையும் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் உடல் வளர்ச்சி என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை, அவ்வாறேதான் உளவியல் ரீதியிலான வளர்ச்சியும்...!   

திருமண வயது 18, 21 என்பதல்ல முக்கியம் அவர்கள் தகுந்த மனப்பக்குவம் அடைந்திருக்கிறார்களா என்பதே முக்கியம். 40 வயதாகியும் திருமணத்திற்கேற்ற உடல், மனநிலை பக்குவப்படாதவர்கள் உண்டு. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் குழந்தைகள் முந்தைய  தலைமுறையினரை விட சிந்தனையிலும் செயலிலும் அதிவேகமாக இருக்கிறார்கள், படிப்பாகட்டும் வேறு துறையாகட்டும் துணிந்து இறங்குகிறார்கள், சாதிக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் செய்யக் கூடிய வேலையை ஐந்து நிமிடத்தில் செய்துவிடும் இவர்கள் காதல், திருமணம் என்றதும் தடுமாறிவிடுகிறார்கள். 

உலகத்தில் 1.6 கோடி டீன்ஏஜ் பெண்கள் கர்ப்பமடைவதாக சர்வதேச புள்ளி விவரத்தை குறிப்பிட்டு ஐநா ஒரு அறிக்கையை வெளியிட்டது. தகுந்த உடல் வளர்ச்சி இன்றி ஏற்படும் கருத்தரிப்பின் காரணமாக அதிக மரணங்கள் ஏற்படுகின்றன என்று கூறுகிறது. இத்தகைய மரணங்கள் நமது இந்திய நாட்டில் அதிகம் என்ற புள்ளிவிவரத் தகவல் மகிழ்ச்சிக் கொடுக்கக் கூடியதல்ல. பெங்களுரூவில்  அபார்ஷன் செய்ய வரும் பெண்களில் முக்கால்வாசிப் பேர் 10, +1 படிக்கும்  மாணவிகளாம்!?

இளவயது கருத்தரிப்பினால் ஏற்படக்கூடிய மரணங்களுக்கு நம் நாட்டில் நிலவும் ஏழ்மை, கல்வியறிவு இன்மை, பாலியல் பற்றிய விழிப்புணர்வு இன்மை, ஆரோக்கிய உணவு பற்றாக்குறை இப்படி பல காரணங்களை பட்டியலிட்டாலும் காரணங்களை அறிந்ததுடன் நில்லாமல் தீர்வுகளை விரைந்து காண வேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கிறோம். பள்ளியின் கழிவறையில் சிறுமி குழந்தை பெற்றாள் என்ற செய்திகள் மகிழ்வை தரக்கூடியவை அல்லவே !?

பாலியல் கல்வி அவசியம் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் அதிகளவில் வந்துக் கொண்டிருக்கும் இந்நாளில் பள்ளிகளில்  மாணவ மாணவிகளுக்கு பாலியல் பற்றிய விழிப்புணர்வையாவது கொடுத்தாக வேண்டும். 

டீன் ஏஜ் கருத்தரிப்புக்கு காதல், கல்யாணம் மட்டுமல்ல காரணம், வன் புணர்வு, வன்கொடுமையினால் ஏற்படுவதும் அதிகம். இதற்கு என்ன செய்ய போகிறோம்? சமூகத்தை நோக்கி மட்டும் கையை நீட்டிவிட்டு அமைதியாக இருக்க போகிறோமா? இந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வோரு ஆண் பெண்ணுக்கும் சம பொறுப்புகள் இருக்கின்றன, காரணங்களை பட்டியல் இட்டுவிட்டு இத்துடன் என் பொறுப்பு தீர்ந்தது என்பதல்ல. தீர்வுகளை கண்டு அதை சமூகத்திடம் கொண்டு சேர்க்க வேண்டும். தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டும், பெற்றோர்களின் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு அவை பயிற்றுவிக்கப் படவேண்டும்.  
  
மேலும் 

சமச்சீரான சத்துள்ள உணவை நமது குழந்தைகளுக்கு  கொடுக்க முடியாத சூழல் இன்று. நொறுக்குத்தீனிகள், இரசாயனம்  கலந்த உணவுப் பொருட்கள், பாஸ்ட் புட் உணவு வகைகள் குழந்தைகளுக்கு அபரீதமான  வளர்ச்சியைக் கொடுக்கிறது, பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பூப்படைய இது ஒரு காரணம். இப்பருவ வயதில் ஏற்படும்  இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இவர்களுக்கு நண்பர்கள் கடவுளாகிறார்கள் ...பெற்றோர்கள் எதிரியாகிறார்கள் ...வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள்...கோவிலோ போலிஸ் ஸ்டேசனோ ரெஜிஸ்டர் ஆபிசோ கல்யாணம் முடிந்துவிடுகிறது. இன்றைய எதார்த்த வாழ்வை எதிர்க்கொள்ள தேவையான பணம் படிப்பு வேலை எதுவும் இல்லாமல் அந்த திருமண வாழ்வு தற்கொலையில் முடிந்து விடுகிறது அல்லது கொலையில் முடித்து வைக்கிறார்கள் சாதிப் பிடித்தவர்கள். 

பொறுப்பற்ற பெற்றோர்கள் 

டீன்ஏஜ் பருவக் காதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளைப்  பொறுத்தவரை அவற்றின் ஆரம்பமும், தீர்வும் எங்கே இருக்கிறது என்று சிறிது யோசித்தோம் என்றால் புரிந்துவிடும் நம் வீடுகளில்,பெற்றோர்களிடத்தில் தான்  என்று. ஒரு வீடு நன்றாக இருந்தால் தான் அந்த சமுதாயமும் அதை தொடர்ந்து  நாடும்  நன்றாக இருக்கமுடியும்.  வீட்டிற்குள் ஆயிரம் சிக்கல்களை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே நின்று 'சமுதாயம் கெட்டுவிட்டது இதில் உலவும் என் மகன்/மகள் தடமாறிவிடுவார்கள்' என்று கூச்சலிடுவது முட்டாள்தனம். 

பெற்றோர்கள் குழந்தைகளை கவனித்து வளர்த்தால் அவை நல்லவிதமாக வளரும், மாறாக குழந்தைகள் தானாக வளர்ந்தால் விபரீதங்கள் விளையத்தான் செய்யும்...தானாகவே வளருவது என்றால் பெற்றோரின் அக்கறை, கவனிப்பு, அரவணைப்பு, அன்பு போன்றவை கிடைக்காமல் பெற்றோர் இருந்தும் இல்லாத நிலையில் வளருவது ஆகும். இன்றைய இயந்திர  உலகில் பல பெற்றோர்கள்  இப்படித்தான் இருக்கிறார்கள்.



பருவ வயது வந்த எல்லோருமே இனக்கவர்ச்சியால் பாதிக்கப்படுவதில்லை. பெற்றோரின் கவனிப்பு அற்ற டீன்ஏஜ் குழந்தைகள் ஏதோ ஒன்றை வீட்டிற்கு வெளியே தேடும் போது சந்தர்ப்ப சூழ்நிலை சாதகமாக இருந்தால் எதிர்பாலினம் மேல் ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.  பெற்றோரின் கருத்து வேறுபாடுகளினால் ஏற்படும் சண்டைகள், வீட்டிற்கு வெளியே புது உறவுகள் ஏற்பட முக்கிய காரணம்.  பொருளாதாரத் தேவைக்காக அலையும் பெற்றோரால் தனித்து விடப்படும் குழந்தைகள் பள்ளியில், வெளியிடங்களில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள், குழப்பங்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். சாய்ந்துக் கொள்ள தோள் தேடும் குழந்தைகளே, தவறுகிறார்கள். 

தனிமை, பாடச் சுமை கொடுக்கும் மன அழுத்தம் , மன உளைச்சலால் அவதியுறும் குழந்தைகளிடம் சிறிது நேரத்தையும்  செலவிடமுடியாத பெற்றோர் அவர்களுக்கான பணத்தைத்  தேடுவது வேடிக்கை!



---தொடரும்
                                                                 * * * * * *  * 

'டீன் ஏஜ்' என்பது பயப்படக்கூடிய ஒன்றா என்ன? 
தொடர்ந்துப்  பேசுகிறேன்...உங்களின் 'மனதோடு மட்டும்' 
---கௌசல்யா.