விசாலினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விசாலினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 1

உலக மகா சுட்டிப் பெண் - " விசாலினி "




2 1/2 வயது குழந்தை பருவத்தில் Tnpsc குரூப் ஒன் தேர்வுக்கான 1000 வினா விடைகளை ஒப்பித்து தொடங்கிய இவளது சுட்டித்தனம் கணினித் துறையில் 5 உலகச் சாதனைகளை செய்தும் இன்னும் திருப்தி அடையவில்லை... அடுத்து என்ன என்ன  என்று தேடி ஓடிக் கொண்டே இருக்கிறாள்... பல உயரங்களை வெகு சுலபமாக தொட்டு முன்னேறிக் கொண்டே செல்கிறாள். இவள் பெற்ற பரிசுப் பொருட்கள் , கேடயங்கள், கோப்பைகள், சான்றிதல்கள், வாழ்த்துரை இதழ்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. பிரபல தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகை, தினசரிகளில் விசாலினியின் பேட்டி எடுத்து மகிழ்ந்தன...நானும் என் பங்கிற்கு 3 வருடத்திற்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தேன். மூன்று வருடங்களாக பல்வேறு கணினி  தேர்வுகளை தொடர்ந்து எழுதி தேர்ச்சிப் பெற்று வரும் இவளது சாதனைகளை என்னால் முழுமையாக எழுதி முடியாது என்பதால் சிறு குறிப்பு மட்டும் இங்கே, தவிரவும் அடுத்த சிகரம் ஒன்றை நாளை(மே 2ஆம் தேதி) தொட இருக்கிறாள் அதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

சாதனைகள் சிறப்புகள்

BTech MTech BE மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கணினி துறைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறாள். இதுவரை மொத்தம் 25 இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செமினார்கள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என நடத்தி இருக்கிறாள். கணினி நிறுவனங்களுக்கும்  சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறாள். இதுவரை 127 மேடைகளில் உரையாற்றி இருக்கிறாள்.

சென்னை மவுண்ட்ரோட்டில் இருக்கும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின்  தலைமை அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி திரு.ஆனந்தகுமார் அவர்களின் அழைப்பின் பெயரில் அங்கு பணிபுரியும் ஐடி துறைசார்ந்த(IT professionals) 17 பேருக்கு Cloud Computing and networking என்பதை பற்றி இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்திருக்கிறாள். (இதை குறித்த முழு விவரங்கள் அவளது இணையதளத்தில் இருக்கிறது)

மேலும் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் Prestigious customer என்று குறிப்பிட்டு இவளது  புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் யாருக்கும் இல்லாத தனி சிறப்பு இது.

இதுவரை 8 சர்வ தேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு (Keynote Address) உரையாற்றி இருக்கிறாள்.   அடுத்ததாக 9வது முறையாக நாளை அதாவது மே 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற இருக்கும் 'கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்' சிறப்புரை ஆற்ற அழைக்கப் பட்டிருக்கிறாள். கணினி துறையில் Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில் காலை 10.30  - 11.30 ஒரு மணி நேரம் உரை ஆற்றுகிறாள். கூகுள் நிறுவனம் இச்சிறுமிக்காக  ஒதுக்கிய ஒருமணிநேர கால அளவு என்பது வெகு சிறப்பு வாய்ந்த ஒன்று.       

மேலும் இந்த உச்சி மாநாட்டில் ஜப்பான் சாகா பல்கலைக்கழக பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (Andrew Meyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழக கணினிதுறைத்தலைவர் Dr. ராகுல்பானர்ஜி ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளிமாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல்முறை என்பது தமிழர்கள் நமக்கெல்லாம் பெருமை.

கணினி கல்வியில் இவ்வளவு சாதனைகள் புரிந்துக் கொண்டிருக்கும் விசாலினி IIPE லட்சுமி ராமன் மெட்ரிக் பள்ளியில் 9 வது வகுப்பில் படிக்கிறாள் என்பதை விட இருக்கிறாள் என்பது சரியாக  இருக்கும் தானே :-)  

நண்பர்கள் விசாலினிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால்,
மெயில் ஐடி - goldengirlvisalini@gmail.com 
மொபைல் எண் +91 94864 60561, +91 98414 77920

விசாலினியின் இணையத்தளம்
http://www.kvisalini.com
 
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்ப்பெண் விசாலினி மேலும் பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 




திங்கள், ஜனவரி 9

எங்களை கவர்ந்த மக்கள்பிரதிநிதி...! நேரடி அனுபவம்

நல்ல விசயங்கள் எந்த கணத்தில் நடைபெறும் என்று கணிக்கவே முடியாது...உண்மைதான் அப்படி ஒரு நிகழ்வை சாத்தியமாக்கி காட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி என்ற வார்த்தையில் முடித்துக்கொள்வதை விட தொடர்ந்து அவர்களுடன் அன்பை பரிமாறிகொள்வது ஒன்றே என் கடமை என்று எண்ணுகிறேன். எனவே 'அன்பு தொல்லை இனி தொடரும்' என்ற அன்பான மிரட்டலுடன், நடைபெற்ற ஒரு உன்னத நிகழ்ச்சி பற்றிய சிறு துளிகளை இங்கே பகிர்கிறேன்...



பதிவர் சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்.  ஜனவரி 12 அல்லது  14 அன்று நிகழ்ச்சி நடத்தலாம் என 'நிகழ்ச்சி நிரல்' மாடல் ஒன்றை வடிவமைத்தும், பதிவர்கள் + எம் எல் ஏ கேள்வி நேரம் ஒன்றுக்காக இருபது கேள்விகள் (அரசியல் தவிர்த்து) ரொம்பவே யோசிச்சு(?) டைப் செய்து முன்தினம் இரவு செல்வா(செல்வாஸ்பீக்கிங் ) அண்ணனுக்கு மெயில் செய்தேன். இனி நட்புகளை அழைக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம் தான் இருந்தது...ஆனால் மறுநாள்(5/1/12) காலை 11 மணிக்கு "நாளையே  ஏற்பாடு பண்ண முடியுமா , எம்.எல்.ஏ வை இப்போது விட்டால் அடுத்து ஒரு மாதம் ஆகிவிடும்" என்றார் அண்ணன்...! ஒண்ணும் ஓடல...!! விசாலினியை பற்றி பிளாக்கில  எழுதியதும் தொடர்ந்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு போய் விடவேண்டும், தாமதம் பண்ணகூடாது என்பதால் "சரிணா பண்ணிடலாம்" என்றேன்.

அன்று துவங்கவேண்டும் என முடிவு செய்திருந்த பசுமைவிடியல் தளம் முழுமையாக வடிவமைக்கபடவே இல்லை...பெங்களூரில் இருக்கும் பிரபுவை(பலே பிரபு) தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன். "சரிக்கா கவலை படாதிங்க, இரவுக்குள் முடிச்சிடலாம்" என்றான்.

சங்கரலிங்கம் அண்ணாவிற்கு தெரிந்திருந்தாலும் "எல்லாம் நீங்க இருக்கும் தைரியத்தில்தான்,உதவி பண்ணுங்க"னு புலம்பி தள்ளிட்டேன்...எல்லாம் பொறுமையாக கேட்டவர், 'ஓ.கே ஜி (தங்கையை பெயர் சொல்லாமல் 'ஜி' னு மரியாதையாக அழைக்கும் அன்பு அண்ணன் !!) பண்ணிடலாம்' என்றார்.  

அப்புறம் அங்கும் இங்கும் போன் மேல போன் பண்ணிட்டே இருந்தோம். இந்த மாதிரி இக்கட்டான நேரத்தில் யாரை அழைத்தாலும் நிச்சயமாக வர இயலாது...இது நன்கு தெரிந்தும் அழைத்தோம்...தூரத்தில் இருந்து வந்த சீனா ஐயா, ரத்னவேல் ஐயா, சி.பி.செந்தில்குமார், மதுரை சரவணன் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (தனி போஸ்ட் ரெடி ஆகிட்டு இருக்கு)

நிகழ்ச்சியை அப்படியே சொல்வதை விட என்னை நெகிழ்ச்சி அடைய வைத்த அற்புத தருணங்களை மட்டும் இங்கே...

                        சூரிய சக்தியால் மின்சாரம் பெற்று உபயோகபடுத்துகிறார்கள்-இசக்கி ரிசார்ட்ஸ் 

விழா நடைபெறும் இடமான 'குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்' போனதும் எம்.எல்.ஏ கலந்து கொள்ளும் விழாவாச்சே மேடை, மைக் அப்படி இப்படின்னு பந்தா செட்டப் இருக்கும்னு ஹால் கதவை மெதுவா திறந்தா ...திக்குன்னு ஆச்சு !! மேடைக்கு பதில் சின்னதா ஒரு டீப்பா, நோ மைக், நல்லவேளை வி ஐ பி சேர் இருந்தது...நாங்கள் அமர ஷோபா, பிளாஸ்டிக் சேர் என்று போடப்பட்டிருந்தது. அங்கே இருந்தவர்களை இதை பற்றி கேட்டேன், ) ஆனா அவங்க,' எம் எல் ஏ சார் ரொம்ப சிம்பிளா இருக்கணும்னு கால் பண்ணி சொல்லிட்டார் மேடம் அதான் இப்படி' என்றார்கள்.

அட என்ன அரசியல்வாதி இவர், ஆடம்பரமா ஏன் பண்ணலன்னு கேட்பார்னு பார்த்தா இப்படி சொல்லி இருக்கிறாரே(எத்தனை சினிமாவுல பார்த்திருக்கோம்...!) ம்...சரி சரி வரட்டும் பார்ப்போம்னு நானும் வேறு எந்தவித உள்வேலைகளும்(இன்டீரியர் டெக்கரேஷன் !?) செய்யாம, டென்ஷனை குறைக்க விசாலினியை தோட்டம் நடுவில வச்சு சுத்தி சுத்தி போட்டோ  எடுத்து தள்ளினேன்.

பதிவுலக நட்புகளின் வருகை 

நம்ம நட்புகள் எல்லாம் வந்து சேர்ந்தாங்க...சீனா ஐயா வந்து அமர்ந்ததும் "யார் வரவேற்பு கொடுக்க போறாங்க , ப்ரோக்ராம் லிஸ்ட் எங்க?" அப்படின்னு கிட்டத்தட்ட மிரட்ட தொடங்கினார் அன்பாகத்தான்...நானும் கொஞ்சம் டென்ஷனோட(?) "வேற யாரு நீங்கதான்" டக்குனு சொல்லவும், ஐயா(வாழ்க) மறுப்பார்னு பார்த்தால் ஒரு நோட்ல குறிக்க தொடங்கிட்டார். மதுரை சரவணன் திருக்குறள் சொல்லி தொடங்க, ஐயா வரவேற்பு என முடிவாகியது.

                                             (பதிவுலக நட்புகளுடன் விசாலினி மற்றும் குடும்பத்தினர் )

சட்டமன்ற உறுப்பினர் உள்ளே என்ட்டர், நாங்க அட்டன்ஷன் பொசிஷனுக்கு வந்தாச்சு...பரஸ்பர அறிமுகம்...பிறகு அகரமுதல் எழுத்தெல்லாம் என சரவணன் சொல்ல விழா தொடங்கியது...அமரப் போன (விழா) தலைவர், இந்த சேர் யார் போட்டா, வேண்டாம் எடுங்க"னு சொல்லிட்டு பக்கத்தில இருந்த பிளாஸ்டிக் சேர் எடுத்து போட்டு உட்கார்ந்தே விட்டார். எனக்கு சப்புன்னு ஆகிபோச்சு...!

அப்புறம் பொன்னாடை அணிவிக்க தயார் ஆனதை பார்த்தவர், "என்ன இது", "இது ஷால்...மரியாதைக்கு" னு இழுக்க..."அதெல்லாம் வேண்டாம், இனி இது மாதிரி யாரையும் கௌரவபடுத்தனும்னா இதுக்கு பதிலா ஒரு புக் வாங்கி கொடுங்க போதும்" என்றதும் எனக்கு மயக்கம் வராத குறை...இவர் எம் எல் ஏ இல்லையோ, சந்தேகமே வந்து போச்சு...

சீனா ஐயா மிக அருமையாக வரவேற்பு உரை நிகழ்த்தினார்...எல்லோரை  பற்றியும் சொல்லிவிட்டு 'பசுமை விடியல்' நிர்வாகிகள் நாலு பேரின் பெயர் , இயக்கத்தின் திட்டங்கள், நோக்கங்கள் அனைத்தையும் சுருக்கமாக சிறப்பாக எடுத்துரைத்தார்...இதெல்லாம் இவருக்கு எப்படி தெரிந்தது என ஆச்சரிய பட்டேன், நிகழ்ச்சி முடிந்து வெளில வந்து கேட்டால் 'எனக்கு எப்படி தெரிந்தது' என அவரே வியந்துதான் ஹைலைட் !! (ஒரு வேளை மைன்ட்வாய்ஸ் ரீட் பண்ண தெரியுமோ...?!)

                          இணையதளம் துவக்கம் - M.L.A, விசாலினி,செல்வகுமார் அண்ணா

தொடர்ந்து விழா தலைவர், 'பசுமை விடியல்' இணைய தளத்தினை தொடங்கிவைத்தார். தளத்தினை பார்த்தவர் pages ஒவ்வொன்னும் பார்த்து 'இது என்ன, இது எப்படி' என்று கேட்டு, 'இந்த லிங்கை எனக்கு மெயில் பண்ணிடுங்க' என்று அருகில் இருந்த உதவியாளரிடம் ஐடியை என்னிடம் கொடுக்கசொல்லி சொன்னார்.

பிறகு சட்டுன்னு செல்வகுமார் அண்ணன், 'கௌசல்யா நீ எழுந்து பசுமை விடியல் பத்தி சில வார்த்தைகள் சொல்'லுனு சொல்லிட்டார். சத்தியமா இதை நான் எதிர்ப்பார்க்கல, சும்மா கூட்டத்தில கோவிந்தா போட்டுட்டு இருந்த என்னை தனியா பேச சொன்னா எப்படி ? அதுவும் எம் எல் ஏ முன்னாடி, எத்தனை நாள் பிளான் பண்ணினாரோ தெரியல, நல்லா மாட்டி விட்டுட்டார், அப்புறம் ஏதோ ஒரு வேகத்துல கடகடன்னு ஒப்பிச்சிட்டு வந்துட்டேன். (என்ன பேசி இருப்பேன்னு இப்பவும் யோசிச்சு பார்க்கிறேன் 'ம்ஹூம் சுத்தம், நினைவே இல்ல')என் பேச்சை பொறுத்துக்கொண்ட நட்புகளின் சகிப்புத்தன்மை ரொம்ப பெரியது...!!

சுட்டிப்பெண்ணுக்கு மரியாதை 


விசாலினிக்கு கேடயம் ஒன்று 'தமிழ் இணைய வலைபதிவர்கள்' சார்பில் வழங்கப்பட்டது...அவளை பற்றி அவங்க அம்மா, சட்டமன்ற உறுப்பினரிடம் விவரமாக எடுத்து சொல்லவும், மிக ஆச்சர்யபட்டவர் "நம்ம சி எம் பெண் குழந்தைகளுக்காக நிறைய செஞ்சிட்டு வராங்க,விசாலினி பற்றி சொன்னால் சந்தோசபடுவாங்க,பாராட்டுவாங்க,  கண்டிப்பாக இவளது திறமையை உலகம் அறியச் செய்ய நிச்சயம் சி எம் கிட்ட கொண்டு போவேன்" என்றதும் ஒரே கைதட்டல் !! இதை எதிர்ப்பார்த்து தானே பதிவர்கள் நாங்கள் அனைவரும் குழுமி இருந்தோம் !!


விசாலினி பற்றி அவங்க அம்மா நிறைய சொன்னாங்க...(அவ்வளவையும் சொல்லனும்னா ஒரு தொடர் பதிவு போடணும்...!!)அவளின் பெற்றோர்கள் இவளுக்காக படும் பாடுகள், எடுக்கும் பிரயாசங்கள், செலவு பண்ணும் தொகை எல்லாமே வேறு யாரும் கற்பனை செய்ய கூட இயலாதவை !! இவளுக்காக பெரிய பை நிறைய பைல்கள், போட்டோ ஆல்பம், சான்றிதல்கள் என்று வைத்திருக்கிறார்கள்...இப்பவும் தொடர்ந்து சில கோர்ஸ்கள் படித்து வருகிறாள்...ஒரு தேர்வுக்கு இரண்டு பேப்பர், இதில் ஒரு பேப்பர் தலா ரூபாய் 80,000 என கட்டி இருக்கிறார்கள், இரண்டில் ஒரு பாடத்தில் தோற்றுவிட்டாலும், மொத்தமாக 1,60,000 போய்விடுமாம். என் போன்ற சாதாரண தாய் இப்படிதான் பணத்தை பற்றி யோசிப்பாள் ஆனால் அவர்கள் செலவழித்து கொண்டே இருக்கிறார்கள்...!! பெண்ணின் திறமையை பட்டை தீட்டி கொண்டே இருக்கிறார்கள்...!!


சட்டமன்ற உறுப்பினரின் எளிமை 


எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதி என்றால் மக்களுக்கு(என்னையும் சேர்த்துதான் ) சிலபல  புரிதல்கள் இருக்கின்றன. ஆனால் இவரை பொறுத்தவரை அங்கே இருந்த ஒரு மணி நேரமும் (விழா முடிந்ததும் சென்னை ரயிலை பிடிக்கவேண்டிய அவசரம் வேறு ) எங்களில் ஒருவராக இருந்தார். இவரின் குணம் தெரிந்து தான் செல்வகுமார் அண்ணன் எங்களிடம் அறிமுகம் படுத்திவைக்க 'இப்படி தவித்தாரா ?' என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. மக்களோடு மக்களாக பழகும் இத்தகைய குணம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இருந்து விட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்...!?

'கின்னஸ் சாதனைக்காக ஒரே நாளில் இத்தனை மரங்கள் நடவேண்டும் என்ற ஒரு யோசனை இருக்கிறது, அப்போது 'பசுமை விடியல்' இயக்கத்தை சேர்த்து கொள்கிறோம்' என்றார். அவரின் ஆர்வத்தை மிக வியந்தேன்...தீமை விளைவிக்கும் பிளாஸ்டிக் (துகள்களாக்கி)வைத்து சாலைகள் அமைக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது என பகிர்ந்துகொண்டார். நாங்கள் அதற்கு வாழ்த்து சொன்னோம். சில கேள்விகள் கேட்டோம், ரொம்ப கேஷுவலாக பதில் சொன்னார்...'விழா முடிந்ததா நான் கிளம்பலாமா' என கேட்டு அனுமதி(!) கொடுத்த பின் தான் கிளம்பினார்.

மரக்கன்றை செல்வகுமார் அண்ணனிடம் இருந்து இவர் பெறும்போது விசாலினியை அழைத்து "நான் உன்னைவிட ரொம்ப சின்ன பையன்,நீதான் பெரியவ, உன் கையால் தொட்டு கொடு" னு சொல்ல அனைவரின் முகத்திலும் பிரகாசமான புன்னகை !


மரக்கன்றை அதே இடத்தில் நன்றாக நட்டு பேணி வளர்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் சொன்னார்.அந்த செண்பக மரம் பூத்துகுலுங்கி மணம் வீசும் நாள் அன்று பதிவர்களான நம்மை அம்மரம் நிச்சயம் வாழ்த்தும்...! 

மிக சிறப்பாக விழா நடைபெற பேருதவி புரிந்த மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை இப்பதிவின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன்.

பின்குறிப்பு

தொடரும் பதிவு ஒன்றில் விசாலினியை பற்றியும் , வந்திருந்து வாழ்த்திய பதிவுலக நட்புகள் பற்றியும், ஜெயா டிவி, சன் டிவி, ராஜ் டிவி, விண் டிவி, மக்கள் டிவி, மற்றும் மீடியாக்கள் பற்றியும் சிறிது பகிர்கிறேன்..
 



புதன், ஜனவரி 4

அன்பின் இணைய உறவுகளே...!



அனைவருக்கும் வணக்கம்.

நல்லதொரு செயல், சாதனை எங்கே யாரால் நிகழ்த்தப்பட்டாலும் உங்களால் பாராட்டப்படும், போற்றப்படும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் நேற்றைய பதிவு. என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !

நல்ல எண்ணம் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறைய செய்யலாம், சாதிக்கலாம் என்கிற உத்வேகத்தை உங்களின் ஒத்துழைப்பு நிரூபித்தது. அடுத்து ஒரு நிகழ்வு இதை தொடர்ந்து நடத்தணும் என்று எண்ணி இருந்தோம் ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற போகிறது என்று இன்று காலையில் கூட எண்ணவில்லை...

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒரு இணையதளம் தொடங்க போவதாக ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்...! அதன் தொடக்க விழாவை பதிவர்களின் துணையோடு செய்வதாகவும் மற்றும் இந்தியாவின் விடிவெள்ளி சிறுமி.விசாலினி அவர்களை பதிவர்கள் இணைந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்காக பதிவர்கள் கையால் 'மரம் நடுதல்' என்கிற விழிப்புணர்வு ஒன்று என அனைத்தையும் சேர்த்து ஒரே நிகழ்வாக நிகழ்த்த முடிவு செய்திருந்தோம்.....

ஒரு பத்து நாளுக்கு முன்பே இணையத்தில் இதனை செய்தியாக பகிர்ந்து, பின் அழைப்பிதழ் ஒன்றின் மூலமாக அனைவரையும் அழைக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தோம்.....

ஆனால்

உடனே இந்த நிகழ்வை நாளையே நடத்தக்கூடிய அவசியம் ஏற்பட்டு விட்டது... அதற்கு உங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் எதிர்ப்பார்கிறேன்...

மூன்று முக்கிய நிகழ்வுகள் 

1. பதிவுலக உறவுகள் ஒரு நான்கு பேர் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்கு என்று ஒரு இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்...இதன் மூலம் பல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள பட இருக்கின்றன...தளத்தின் பெயர் 'பசுமை விடியல்' 


பசுமை போராளிகள் 

செல்வகுமார்
பிரபு கிருஷ்ணா 
சூர்யபிரகாஷ் 


(தளத்தை பற்றிய விரிவான விவரங்கள் இனி தொடரும் பதிவுகளில் )

2.இந்தியாவின் விடிவெள்ளி விசாலினியை கௌரவிக்கும் விதமாக பதிவர்களின் சார்பில் நடக்க போகும் இந்த விழாவிற்கு திரு இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் (அம்பாசமுத்திரம்)  அவர்கள் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார். நம் அரசின் பார்வை இனி பட தொடங்கி விடும் என்றே எண்ணுகிறேன்...நம்மால் இயன்ற மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம். அது நமது கடமை அல்லவா...?

3 . பசுமை விடியலின் முதல் விழிப்புணர்வு பணியாக விழாவிற்கு வர இருக்கின்ற பதிவுலக நண்பர்களின் கையால் மரங்கள் நடப்பட்ட இருக்கிறது. 

இவை எல்லாம் நல்ல முறையில் நடைபெற உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.


மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதால் எல்லோரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க இயலவில்லை...இவ்விழாவினை குறித்த செய்தியை முகநூலிலும், ட்விட்டரிலும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைவரும் அவசியம் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

விழாவிற்கு வருகை தருபவர்கள் வசதிக்காக,
எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்

சங்கரலிங்கம் - 9597666800




பிரியங்களுடன் 
கௌசல்யா 


செவ்வாய், ஜனவரி 3

யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!




   பதிவர் திரு.சங்கரலிங்கம்  அவர்கள் தனது உணவுஉலகம் தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட எனக்கு தகுந்த வார்த்தைகள் கிடைக்கவில்லை...! ஆச்சரியத்தின் உச்சத்தில் இருக்கிறேன்...தமிழகத்தில் இப்படி ஒரு அறிவார்ந்த சிறுமி இருப்பது தமிழர்கள் நமக்கு ஒரு பெருமைதானே ? நீங்களும் படித்து பாருங்கள் செய்தியை பலரிடம் கொண்டு சேருங்கள். வாழ்த்துவோம் நாம், மகிழட்டும் இவளை ஈன்றெடுத்த தாயும் , தந்தையும் !! 



ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!


வயது பதினொன்று (பிறந்த தேதி:23.05.2000) IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியா என்பதால் தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லையோ...?! இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

                                         

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே,  பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.


கல்லூரியில் பயிலும் B.E., B.TECH  மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 




15.12.2011 அன்று ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட
பாராட்டு சான்றுடன்
விசாலினியின் பாட்டி,அம்மா மற்றும் விசாலினி.










                                                     
இத்தனை சாதனைகள் படைத்துள்ள இந்தக் குழந்தை சிறு வயதில் பேச, சற்றே சிரமப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் தாய் திருமதி.சேதுராகமாலிகா, மருத்துவர் ஒருவர் அளித்த ஆலோசனையின்படி, அந்தக் குழந்தையுடன் இடைவிடாது அளவளாவியதின் பலன், அடுத்த ஒன்பது மாதங்களில் விசாலினியின் பேசும் திறனை பெருகச் செய்தது.  இன்று உலகமே விசாலினியின் திறனைக்கண்டு வியந்துகொண்டிருக்கிறது. 
   

                                              

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

           MCP     (Microsoft Certified Professional)

   CCNA   (Cisco Certified Network Associate),

   CCNA Security(Cisco Certified Network 

                 Associate Security),

   OCJP   (Oracle Certified Java 
                 Professional).
                                         


CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை. 



                  

உலகமே இந்தக் குழந்தையின் சாதனைகளை உற்றுப்பார்க்கும் இந்த நேரத்திலும்,உள்ளூரில் இன்னும் இந்த குழந்தையை உச்சி முகர்ந்து பார்க்கவில்லையென்பதே இவள் பெற்றோரின் ஆதங்கம். ஆம் நம் மத்திய, மாநில அரசுகளின் பார்வை இந்த உலக சாதனையாளர் மீது இன்னும் படவில்லை.பதிவுலகில் குவியும் பாராட்டுக்களாவது, இந்தத் தெய்வக்குழந்தையை உலக அரங்கிலும், உள்ளூரிலும் உச்சத்திற்குக் கொண்டு செல்லட்டும்.




நன்றி:தகவல் பகிர்வு:திருமதி.சேதுராகமாலிகா மற்றும் http://www.visalini.com



    
வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில், முக நூல், ட்விட்டர் போன்றவற்றில்  பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி:visalini2000@gmail.com. இதற்கு நம்மாலான ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி இச்சுட்டிப்பெண்ணை ஊக்கபடுத்துவோமே...!

நன்றிகள் - இப்பதிவை பகிர எனக்கு ஊக்கம் அளித்த திரு.சங்கரலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.