வீட்டுத்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுத்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 11

வீட்டுத்தோட்டம் - தக்காளி வளர்ப்பதில் சில எளிய முறைகள் + டிப்ஸ்

ஒரு தக்காளி செடியில் இருந்து வேறு சில தக்காளி செடிகளை உருவாக்கலாம்...

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ? எனக்கு முதலில் இதை கேள்விப்  பட்டபோது அவ்வாறுதான் இருந்தது. தோட்டக்கலையைப்  பொறுத்தவரை நாம் தினமும் புதுப்  புது பாடங்களைக்  கற்றுக் கொண்டே இருக்கலாம். நாம சும்மா இருந்தாலும், இந்த இயற்கை தூண்டிக் கொண்டே இருக்கும் இப்படி முயற்சி செய்யலாமா அப்படி முயற்சி செய்யலாமா என்று! இயற்கையின் தூண்டுதலால் மேலும் மேலும் பல வளர்ப்பு முறைகளை முயற்சித்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் ஒரு முறை தான் தக்காளிக் கிளைகளின் மூலம் புது செடியை உருவாக்குவது... இந்த முறைப்படி பயிரிடுவதால் வருடம் முழுவதும் தக்காளிக்குத்  தட்டுப்பாடில்லை.

க்ளோனிங் முறை

தக்காளியின் ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வேர்களை பரப்பக்  கூடிய அளவிற்குப்  போதுமான செல்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிசயம்.
ஒரு தக்காளி செடியில் இருந்து இரண்டு மடங்கு அறுவடையை எடுத்துவிடலாம். ஒரு தக்காளி விதை முளைத்து பலன் தர 2 மாதம் ஆகிறது ஆனால் இந்த முறை  என்றால் 1 மாதம் போதும்.

கிளைகளை கட் பண்ணும் முறை

வளர்ந்தச்  செடியின் பக்கக்  கிளைகளை சிறு கத்தி அல்லது சிசர் வைத்து நறுக்கி எடுத்து மேலே  இரண்டு இலைகளை மட்டும் விட்டுவிட்டு இலை பூ மொட்டு போன்ற மற்றவற்றை அகற்றிவிடவேண்டும்.  கிளைத்தண்டு  ஆறு இஞ்ச் நீளம் இருந்தால் நலம்.

என் வீட்டுத்தோட்டத்து தக்காளி செடி

நாலு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள சிறிய தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் கோகோபீட் மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி நடுவே விரல்  வைத்து ஒரு துளை ஏற்படுத்தி அதில் தக்காளி தண்டை வைத்து மெதுவாக மண்ணை அழுத்திவிடுங்கள்...இந்த தொட்டியை ஜன்னலின் ஓரத்தில் வெயில் படும் இடத்தில் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் போதுமான அளவிற்கு வெயில் கிடைத்ததும்(ஒரு வாரம் போதும்)  வேறு தொட்டிக்கு  இடம் மாற்றிவிடுங்கள்.  அவ்வளவுதான். இதன் தாய்ச்செடி  காய்த்து முடியும் நேரத்தில் இது பலன் கொடுக்கத் தொடங்கி விடும்...

மற்றொரு முறை

pic-google

மேலே இரு இலைகளை விட்டுவிட்டு  நறுக்கப்பட்ட கிளையை   நீர் நிரம்பிய கண்ணாடி  ஜாடி அல்லது டம்ளரில் வைத்து  விடுங்கள். இதனை ஜன்னல் ஓரத்தில் வைத்து தினமும் நீரை மட்டும் மாற்றி வாருங்கள், நான்கு நாளில்  வேர் விட ஆரம்பித்து விடும் நன்கு வேர் விட்டதும்  வேறு தொட்டிக்கு மாற்றிவிடுங்கள்.  இந்த முறையில் செடி பலன் தர சிறிது காலம் அதிகமாகுமே தவிர உற்பத்தியில் எந்த குறைவும் இருக்காது.

இந்த இரு  முறைகளின் படி செய்து வந்தால்  வருடம் முழுவதும் நம் வீட்டில் இருந்து தக்காளி  பழங்களைப்  பறித்துக் கொண்டே இருக்கலாம்.

என் வீட்டுத்தோட்டம் - பறிக்க தயார் நிலையில்

தக்காளிச் செடியில்  பூச்சிகள் தாக்கத் தொடங்கியதும் செடியின் அந்த பகுதி  'சிஸ்டமின்' என்ற ஹார்மோனை சுரந்து பூச்சிகள் மேலும் முன்னேறாதபடி தடுத்துவிடுகின்றன. இது தக்காளியின்   சிறப்பு குணம். 

 பொதுவான டிப்ஸ் 

 * விதைகளை  கடையில் வாங்குவதை தவிருங்கள். வீட்டில் இருக்கும்  நன்கு கனிந்த  தக்காளியை  பிசைந்து விதைகளை சேகரித்து  கோகோபீட்+மண்+மண்புழு உரம் நிரப்பிய தொட்டியில் போட்டு நீர் தெளித்து வந்தால் போதும் விதைகள் முளைத்து விடும். சிறிது வளர்ந்ததும்   வேருடன் அப்படியே எடுத்து தனித்தனியாக வேறு வேறு தொட்டிகளில் நட்டு விடுங்கள்.தக்காளியை குறுக்கு வாட்டில் வெட்டி மண்ணில் புதைத்து வைத்தாலும்போதும் விதைகள்முளைத்து வந்துவிடும்.

* குளிர் காலத்தில் வீட்டினுள் இருக்கும் தக்காளி செடிக்கு தண்ணீரும் உரமும் தவறாது கொடுத்து வரவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது லேசாக செடியை அசைத்து விட்டால் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கும்.

* பக்கக் கிளைகளை   எடுத்துவிடுவது தாய்செடிக்கு மிக சிறந்த நன்மையை  கொடுக்கிறது , சத்துக்கள் பிற கிளைகளுக்கு பரவுவது தடுக்கப் பட்டு தாய் செடி மிகுந்த செழிப்புடன் வளரும். விரைவில் பூ பூத்து காய் காய்ப்பதுடன் மட்டுமல்லாமல் அகன்று விரிந்தும் உயரமாகவும் வளரும்.

* தக்காளி செடி நடும் போதே அதனுடன் ஒரு குச்சியைச்  சேர்த்து கட்டிவிடுங்கள்... இல்லையென்றால் செடி காற்றில் அசைந்து மண்ணில்  வேர் பிடிப்பது பாதிக்கப்படும்.

* முட்டை ஓடுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மிக்ஸ்யில் போட்டு தூள் செய்துக்கொள்ளுங்கள்.வாரத்திற்கு ஒருமுறை  ஒரு ஸ்பூன் ஒரு செடிக்கு என கொடுங்கள் . முட்டை ஓட்டில்  கால்சியம் இருப்பதால்  தக்காளி செடிக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.

* வாழைப்பழத்  தோல்களை சிறிதுச்  சிறிதாக நறுக்கிக்   காய வைத்து மிக்ஸ்யில் போட்டு தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்...இதையும் ஒரு ஸ்பூன் வீதம் 

* சத்துக்களை உறிஞ்சிவிடும் எனச் சொல்லப்படும் suckers என்பவை செடியின் பக்கவாட்டில் வளருவது.  அவை சிறிதாக வளரும்போதே   அதனை கிள்ளி  அகற்றிவிடுங்கள். இது காய் கொடுக்காது என்பதால் இதனை வளரவிடுவது சரியல்ல. இதனை அகற்றியப்பிறகு   செடியின் வளர்ச்சி அபரீதமாக இருக்கும், தக்காளியும் நிறைய காய்க்கும்.

(pic - google) sucker

* தக்காளிச் செடியைப் பொறுத்தவரை பூச்சிகளை அழிக்க தக்காளி இலைகளே போதும். இலைகளில் இருக்கும் விஷம் பூச்சிகளை கொன்றுவிடும், பூச்சிகள் தென்பட்டால் இலைகளை அரைத்து சாறு எடுத்து பூச்சிகளின் மீது தெளிக்கவேண்டும்.

* தவிர 3G (greenchilli, ginger, garlic)என்று சுருக்கமாக சொல்லப்படுகிற பூண்டு +இஞ்சி+பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து  வடிகட்டிய  சாறை  தண்ணீர்(1-10)  சேர்த்து  கலந்து செடியின் மீது  தெளித்தால் பூச்சிகள்  அழிந்துவிடும்.  

* பழுத்த ,காய்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.  அழுகிய  தண்டுகள் கிளைகளையும் எடுத்துவிடுங்கள். செடி எப்பொழுதும் சுத்தமாக பசுமையாக இருக்குமாறுப்  பார்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளிக்கு வெயில் மிக பிடிக்கும். 14 - 18 மணி நேர நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. பசுமைக்குடிலில்  செடிகள் இருந்தால் செயற்கையான முறையிலாவது வெளிச்சம் வர செய்யவேண்டும்.

* காய் காய்க்கத் தொடங்கியதும்  தண்ணீர்  விடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆழமாக வேர் வரை தண்ணீர் சென்று தொட்டியின் துவாரங்கள் மூலம் வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும். துளைகள் அடைத்திருந்தால் சிறு குச்சியால் குத்தி சரிப்  படுத்த வேண்டும்.

* எப்போது தண்ணீர் ஊற்றினாலும் செடியின் மீது தெளிப்பதை போல ஊற்றவேண்டும்...இலை, தண்டு கிளைகள் தண்ணீரால் நனைவது சிறப்பு.

* தக்காளிச்  செடியை நடும்போது ஆழமாக நடவேண்டும், அப்போதுதான் நிறைய வேர்கள் உருவாக்கி செடியை பலமுள்ளதாக்கும்.தொட்டியின் ஆழம் கம்மியாக இருந்தால் செடியை சிறிது வளைத்து மண் அணைத்து வைக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மண்ணுக்குள் வைக்கப்போகும்  செடியின் பக்கக் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

இப்போதைக்கு இவைப்  போதும் என நினைக்கிறேன் ... ஆரம்ப நிலையில் இருக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்காகப்  பதிவை எளிமையாக்கி இருக்கிறேன்... வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்ட்,மெயிலில் கேளுங்கள். நன்றி.


Happy Gardening !!
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com 

பிரியங்களுடன் 
கௌசல்யா 

* * * * * * * * 
புதியதாக தோட்டம் போடப் போகிறவர்களுக்காக-

*தோட்டத்திற்கு தேவையான கருவிகள் (Tools) வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

*மண் கலவை (Potting mix) செம்மண்,கோகோபீட், மண்புழு உரம்,காய்ந்த சாணத்தூள் அனைத்தையும் சரியான அளவில் கலந்து இங்கே  விற்பனை செய்கிறார்கள். வாங்கி தொட்டியில் போட்டு  செடியை நட்டு வைத்தால் போதும். மிகவும் சுலபம். 

புத்தகப் பரிந்துரைOrganic Home Gardening Made Easy written by Sujit Chakrabarty


புதன், மார்ச் 18

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - 5 இயற்கை உரம் தயாரிப்பு

வீட்டுத்தோட்டம் போடுவதே ரசாயன உரத்தில் இருந்து தப்புவதற்கு தான். அதனால் காய்கறி தோட்டத்துக்கு வேதி உரம் எதையும் வாங்கி போட்டுடாதிங்க. உரம், மருந்து , வளர்ச்சி ஊக்கி என அனைத்தையும் இயற்கை முறையில் நாமே தயாரிக்கலாம்.

இயற்கை உரம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மாடு!! அடடா சிட்டியில் மாட்டுக்கு எங்க போகனு கேட்கிறீங்களா? மாட்டின் பயன்பாடு  தெரிந்துவிட்டால் எங்கே கிடைக்கும் என்று அந்த இடங்களை தேடிச் சென்று விடுவீர்கள். அவை கிடைக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அது தொடர்பான முறைகளையும் இயலாதவர்கள் அது தவிர்த்த வேறு முறைகளை கையாளலாம், அதில் ஒன்றுதான் சமையலறை  கழிவுகள்  உரம். இந்த வீட்டுத்தோட்டம் தொடர் 'சுலபமாக' தோட்டம் போடுவதை பற்றியது என்பதால் கையில்/அருகில்  கிடைப்பதை வைத்தே சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வோம். 

Compost bin - Khamba




கிச்சனில் சேரும் காய்கறிக் கழிவுகளை இதில் போடவேண்டும். மூன்று பாகமாக இருக்கும் இதில் முதலில் மேலே உள்ள பாகத்தில் செய்தித்தாளை விரித்து அதன் மீது கழிவுகளை போட்டு வாருங்கள். கழிவுகள் போடப் பட்டதும் மற்றொரு செய்தித்தாளை கழிவுகளின் மேல் விரித்து khamba மூடியை மூடுங்கள். ஒரு பாகம் நிரம்பியதும் அப்படியே தூக்கி கீழ் பாகமாக வைத்துவிட்டு காலியாக இருப்பதை மேலே வைத்து இப்போது இதில் கழிவுகளை சேகரியுங்கள். மிச்ச இரண்டும் நிரம்புவதற்குள் முதலில் போடப்பட்டது உரமாகியிருக்கும்.  பொதுவாக உரமாக மாற  மூன்று  மாதம் ஆகும்.

khamba இல் காய்ந்த இலைச் சருகுகள், காய்கறிக்  கழிவுகள் போன்றவற்றை போடலாம்.  முடிந்தால் வாரம் ஒரு முறை ஒரு சிறிய குச்சியால் கழிவுகளை கிளறிவிடுங்கள். கழிவுகளில் maggot எனப்படும் சிறு புழுக்கள் உருவாகும், இவைகள் தான் கழிவுகளை மக்க வைப்பவை. உரமாகியதும் இவை பெரும்பாலும் மடிந்துவிடும் அல்லது flies ஆக மாறி வெளியேறிவிடும். kampa முறையில் காய்கறிக்கழிவுகளை உரமாக்குவதால் bad smell ஏதும் இல்லை.



Khambaவில் உரம் தயாரிக்க  சில டிப்ஸ்

* மரத்தூளும் தேங்காய் நார் கழிவும்(coco peat)  காய்கறிக்கழிவில் உள்ள  அதிக நீரை எடுத்துக் கொண்டு உரமாவதை துரிதப் படுத்தும். எனவே இவற்றில் எது கிடைத்தாலும் வாங்கி கழிவுகளின் மீது தூவி விடுங்கள்.

* உரமாவதை துரிதப் படுத்த புளித்த தயிர் / பஞ்சகவ்யா/ தண்ணீரில் கரைத்த சாணம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* maggots அதிகம் இருந்தால் அதன் உற்பத்தியை கட்டுப்படுத்த சிறிதளவு வேப்பந்தூள் அல்லது மிளகாய்த் தூளை தூவலாம்.

* உரம் அதிக ஈரமாக இருந்தால் நிழலான இடத்தில் இரண்டுநாள் உலர்த்தலாம்.

* கழிவுகளை மேல் விளிம்பு வரை போட்டு அடைக்கக் கூடாது, காற்று செல்ல வசதியாக சிறிது இடம் இருக்க வேண்டும்.

* உரத்திற்கு நைட்ரஜன் (சமையலறை கழிவுகள்) கார்பன்(காய்ந்த இலைகள்) இரண்டும் தேவை... இலைகள் கிடைக்கவில்லைஎன்றால் பழைய செய்தித்தாள் (கிழித்து தண்ணீரில் நனைத்தது) உபயோகிக்கலாம்.

* காய்கறி, பழக் கழிவுகளை அப்படியே போடாமல் பெரிய துண்டுகளை சிறிதாக்கி போடுங்கள்.  

மூன்று மாதம் கழித்து உரம் தயாராகியதும் கடைகளில் கிடைக்கும் vegitable basket(துளைகள் உள்ளது) வைத்து  உரத்தை சலித்து எடுத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம். Khamba கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் மண் பானையை பயன்படுத்துங்கள். அதில் காற்று உள்ளே செல்ல சிறு துளைகளை கவனமாக ஏற்படுத்தவேண்டும். இரண்டு துளைகள் போடமுடிந்தாலும் போதும். (சந்தேகம் இருந்தால் கமெண்டுங்க அல்லது மெயிலுங்க)

செடிகள்  செழிப்பாக  வளர ...

* காலாவதியான மாத்திரைகளை தூள் செய்து போடலாம். உபயோகம் இல்லாத டானிக், சிரப் போன்றவற்றை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.(பூச்செடிகளுக்கு மட்டும்)


* வீட்டில் சேகரமாகும் டீத்தூள் தவிர அருகில் டீக்கடை இருந்தால் அவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்து அதில் உபயோகித்த டீத்தூளை போடச்சொல்லுங்கள். (கடைக்காரர் நண்பராக இருந்தால் வசதி) :-)

* அதே  மாதிரி பரோட்டா கடையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து வைத்தால் முட்டை ஓடுகளை வாங்கிக்கொள்ளலாம். இதை தூள் செய்து போடலாம்.கால்சியம் சத்து செடிகளுக்கு அவசியம். 

முள்ளங்கி  

* வாழைப்பழத்தோல் சிறந்த உரம். காயவைத்து துண்டுகளாக கட் பண்ணி மிக்ஸியில் போட்டு தூளாக்கி செடிகளுக்கு தூவலாம். முக்கியமாக தக்காளிக்கு அவசியம் போடவேண்டும். செடிகளுக்கு தேவையான  பொட்டாசியம் சத்தை இது கொடுக்கும்.

* அரிசி ஊறவைத்த/கழுவும் நீரையும், சாதம் வடித்த நீரை ஆறவைத்தும்   ஊற்றலாம். 

* கடைகளில் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு என்று கிடைக்கும். அதை வாங்கி அப்படியே நொறுக்கி போடலாம், ஊறவைத்து கரைத்தும்  போடலாம். ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு செடிக்கும் ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட்டை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். இந்த சால்ட் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மீன்கழிவில் இருந்து வளர்ச்சி ஊக்கி

மீனை  சுத்தப்படுத்தியதும் வீணாகும் மீன் கழிவை சேகரித்து  (கடைகளில் கிடைக்கும்) அதே அளவிற்கு வெல்லம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு அதன் மூடியால்  டைட்டாக  மூடி விடுங்கள். இரண்டு நாள் கழித்து திறந்து லேசாக கிளறி விடுங்கள். பிறகு மறுபடியும் நன்றாக மூடி அப்படியே வைத்துவிடுங்கள். bad smell இருக்கவே இருக்காது.  இருபது நாட்கள் கழித்து எண்ணெய் போன்று மேலே மிதப்பதை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீன் வளர்ச்சி ஊக்கி ரெடி.  ஒரு லிட்டர் வளர்ச்சி ஊக்கி, பத்து லிட்டர் தண்ணீர் (1:10) சேர்த்து செடிகளுக்கு தெளிக்கவும், செடி அருகில் ஊற்றவும் செய்யலாம். தேவைப் படும்போது தயாரித்து பயன்படுத்துங்கள்.

பிளாஸ்டிக் கவரில் முட்டைகோஸ் 
படித்ததை அனுபவத்தில் அறிந்து, பயன்பெற்று இங்கே பகிர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் வசதி படவில்லை என்றாலும், வீட்டுத்தோட்டம் தொடரில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு சௌகரியப்படுவதை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.

நேரம் இருந்தால் வீட்டுத் தோட்டம் பற்றிய இந்த வீடியோ பாருங்க...
   
http://www.youtube.com/watch?v=FBmLZ0zwu88

நான் Khamba வை கோயம்புத்தூரில் வாங்கினேன். இதை பற்றிய விவரங்கள் தேவையென்றால் கோவை தெலுங்குப் பாளையத்தை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள் அவரின் மொபைல் எண் : 9944309603.

ஆன்லைனில் வாங்க பிளீஸ் கிளிக் - www.dailydump.org

Happy Gardening ...


பிரியங்களுடன்
கௌசல்யா
mail id : kousalyaraj10@gmail.com

படங்கள் - எங்கள் பால்கனி தோட்டத்தில் எடுத்தவை 



வியாழன், ஜனவரி 29

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 4


இதற்கு முந்தையப்  பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - 1 
வீட்டுத்தோட்டம் - 2 
வீட்டுத்தோட்டம் - 3

வீட்டுத் தோட்டம் என்பது சுவையான, சத்துள்ள, இரசாயனத்தன்மை அற்ற காய்கறிகளை உற்பத்திச்  செய்வது மட்டுமல்ல...பழையப்  பொருட்களை மறு சுழற்சிச்  செய்வதும் தான். பழைய பிவிசி பைப் , பிளாஸ்டி டப்பாக்கள் , பெயின்ட் வாளி, ஓட்டை உடைசல் பாத்திரங்கள், அட்டைப் பெட்டிகள்  மட்டுமல்ல வீணாக குப்பைக்கு போகும் சமையலறைக்  கழிவுகள், காய்கறிக் கழிவுகள், காய்ந்த இலைத் தழைகள், முட்டை ஓடு, தேயிலை, காபித்  தூள் கழிவுகள் போன்றவற்றை மறுஉபயோகம் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மிக பெரிய  நன்மையை செய்தவர்களாகிறோம். (இனி யாரும் உங்களைப் பார்த்து நீ பொறந்த இந்த மண்ணுக்கு பெருசா என்ன  செஞ்சனுக்  கேக்கவே முடியாது) :-)

ஊரில் எங்களின்  சொந்த வீட்டைச்  சுற்றி நிறைய இடம் அதுவும் வளமான செம்மண் இருப்பதால் தொட்டிகளில் காய்கறித்தோட்டம் போட வாய்ப்பில்லை.  ஆனால் தொட்டியில் வளர்த்துப் பார்க்க  ஒரு சந்தர்ப்பம் தற்போது அமையவே பயன்படுத்திக் கொண்டேன். இது எனக்கு முற்றிலும் ஒரு இனிய அனுபவமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. அவற்றை இங்கே பகிருகிறேன். நிச்சயமாக  எனது இந்த அனுபவங்கள் உங்களுக்குப்  பயன்படும். 
  
பால்கனித் தோட்டம்

ஒரு சொந்த வேலையாக உடுமலைபேட்டையில்  ஏழு  மாதம் தங்கவேண்டிய சூழல். மாடியில் வீடு, முன்னாடி சிறிய பால்கனி, நல்ல காற்றோட்டமான இடம் மனதை வசீகரிக்கத்  தோட்ட வேலையை ஆரம்பித்துவிட்டேன். தினமும் ஒரு மணி நேரம் இங்கே செலவுச்  செய்கிறேன். நான்கு மாதம் ஆகிறது... தற்போது இங்கே இருப்பவை பாகற்காய், சுரைக்காய், தட்டைபயிறு, சௌசௌ, அவரைக்காய் போன்ற கொடி வகைகள், தக்காளி, மிளகாய், கத்தரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி போன்ற செடி வகைகள், மணத்தக்காளி, மஞ்சள் கரிசிலாங்கண்ணி, பச்சை, சிகப்பு பசலை கீரைகள், பாலக் கீரை,  புளிச்சக் கீரை, பொன்னாங்கண்ணி, புதினா  போன்ற கீரை வகைகள், பிரண்டை, லெமன் கிராஸ், வெற்றிலை , துளசி, சோற்றுக் கற்றாழை, கற்பூரவல்லி (ஓமவல்லி) போன்ற மூலிகைகள் இவை தவிர  அன்னாசி , 2 ரோஜா செடிகள், changing ரோஸ் ஒன்று, செவ்வந்தி, இரண்டு வகை செம்பருத்தி, நான்கு வகை குரோட்டன்ஸ், மற்றும் ஒரு அவகோடா, ஒரு செண்பக மரக்கன்று, செவ்வாழை கன்று, இரண்டு பாக்கு மரக்கன்றும் (ஊர் போனதும் மண் தரையில் எடுத்து வைக்கவேண்டும்) இருக்கின்றன.  

இயற்கை முறையில் மாடித்தோட்டம் ,
அட்டைப் பெட்டியில் பாகற்காய் கொடி  

அனைத்தும் பிளாஸ்டிக் தொட்டிகள், அட்டைப் பெட்டிகள்,  மினரல் வாட்டர் கேன்கள், அரிசி சாக்குகள் , பிளாஸ்டிக் கவர்கள் தவிர கையில் கிடைக்கும் எந்த பொருளும் தொட்டியாக மாறிவிடும். இளநீர் குடிச்சதும் அவற்றையும்    தொட்டியாக மாற்றியாச்சு.

முக்கியமாக இவை எதற்கும் மண் போடவில்லை. உடுமலைபேட்டை,பொள்ளாச்சியை சுற்றி  தேங்காய் நார் கழிவு (coco peat) கம்பெனிகள் இருப்பதால் அவர்களிடம் coco peat blocks வாங்கி
அதனுடன் ஊரில் இருந்து கொண்டு வந்த மக்கிய ஆட்டுச் சாணம் கலந்திருக்கிறேன். இவை இரண்டும் தவிர கிச்சன் கழிவுகள் அனைத்தையும் உரமாக மாற்றிப் போட்டுவிடுவேன்.  அரிசி கழுவிய தண்ணீர், மீன், சிக்கன், மட்டன் கழுவிய தண்ணீர் , முட்டை ஓடுகள் என அனைத்தும் பால்கனிக்கு வந்துவிடும். தேங்காய் நார் கழிவு, நீரை பிடித்துவைத்து கொள்வதால் மூன்று  நாள் தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடிகள் வாடுவதில்லை. coco peat இன் எடை லேசாக இருப்பதால்  தொட்டிகளின் கனம் தாங்காமல் வாடகை வீட்டு மாடி பால்கனி  டமால்னு கீழே விழுந்துவிடும் என்ற பயம் இல்லவே இல்லை :-)

மனதோடு மட்டும் - மாடித்தோட்டம்
மிதிப் பாகற்காய் என்ற ஒரு வகை , சுவை மிகுந்தது 

பூக்கள் பூக்கத் தொடங்கியதும் வண்ணத்துப்பூச்சிகள் வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டன. தேன்சிட்டு ஒன்று ரெகுலர் விசிட்டர்,  வீட்டினுள்ளே பரவும் பூக்களின் மணம்  அவ்ளோ ரம்யம் !! தக்காளி, பாகற்காய், அவரைக்காய் காய்த்து தற்போது சமையலறைக்கும் வந்துவிட்டன. புதினாவை இருமுறை துவையலுக்கும் மூன்று முறை பிரியாணிக்கு சேர்க்கவும் பறித்தாகிவிட்டது. பறிக்கப்  பறிக்க வேக வேகமாக வளருவதே ஒரு அழகுதான்.

செடிகளில் எறும்பு தெரிந்தால் மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் தூவுவேன். பூச்சிகள் இருந்தால் பூண்டு,பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் அரைத்து சாறு  எடுத்து தண்ணீர் கலந்துத்  தெளிப்பேன்.  வேப்ப இலைகளை அரைத்து கலந்த தண்ணீரையும் தெளிக்கலாம். இன்னும் பல முறைகள் இருக்கின்றன...அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாகச்  சொல்கிறேன்.

மாடியில் தோட்டம் போடுவதால் பூச்சிகளின் தொல்லை சுமார் 70 சதவீதம் குறையும் என்கிறார்கள்.

எளிய பந்தல்  முறை


கொடி படர ஆரம்பித்தப்போது ...

பாகற்காய் பந்தல் போட பால்கனியில் வசதி இல்லை. ஸ்லாபில் மழை நீர் வடிய அரை அடி நீள பிவிசி பைப் இரு பக்கமும் இருந்தது.  இரண்டுக்குமாய் கட்டுக்கம்பியை இழுத்துக்  கட்டினேன். (4 அடி நீளத்திற்கு கட்டு கம்பியை 14 துண்டு  வெட்டி வைத்துக் கொண்டேன்)  ஓரத்தில் இருந்து ஒவ்வொரு கம்பியாக  கட்டி தொங்க விட்டேன். கீழ் நுனியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை கட்டினேன்,   கம்பி வளையாமல் ஸ்ட்ரைடாக இருப்பதற்காக. (பாட்டில்களில் cocopeat + compost  நிரப்பி புதினா,தக்காளி , பசலை கீரைகளை நட்டு வைத்திருக்கிறேன்) இப்படி வரிசையாக ஏழு  கம்பிகளையும் கட்டி பாட்டில்களைத்  தொங்க விட்ட பின் குறுக்காக  மிச்ச ஏழு கம்பிகளையும் சிறிது இடைவெளி விட்டு கட்டினேன்.  குறுக்கும் நெடுக்கும் இணைக்க கம்பியை சிறிது வளைத்து ஒரு சுற்று சுற்றினால் போதும். அவ்வளவுதான்.  பந்தல் ரெடி.  இருக்கும் இடத்திற்கு ஏற்ப நமது கற்பனையை சிறிது கலந்தால் போதும், எத்தகைய சிறு இடத்திலும் தோட்டம் போட்டுவிடலாம்.

காய்கறிக் கழிவு உரம்

கடைகளில் இதற்கென மண் கலன்கள் கிடைக்கின்றன. கிடைக்காதவர்கள் வீட்டில் இருப்பதை வைத்தே தயாரிக்கலாம். மண் தொட்டி, மண்பானையையும் பயன்படுத்தலாம். நான் பழைய இருபது லிட்டர் மினரல் வாட் கேன் ஒன்றின் அடி பகுதியில் சிறு துளை இட்டு அதனடியில் ஒரு பிளாஸ்டிக் பிளேட்  என தயார் செய்தேன்.. மேல் பகுதி வழியாக கழிவுகளை போட்டுக் கொண்டு வர  கழிவு நீர் பிளேட்டில் சேகரமாகும். வாரம் ஒரு முறை அதை எடுத்து தண்ணீர் கலந்துச்  செடிகளுக்கு ஊற்றலாம். கழிவு நீர் வீரியம் ஜாஸ்தி என்பதால் அப்படியே ஊற்றக் கூடாது, செடி கருகிவிடும்.  maggot எனப்படும் புழுக்கள் கழிவுகளில் உருவாகும், இவைதான் கழிவுகளை மக்க வைப்பவை. கழிவுகள் போடப்பட்டதும் கேனின் வாய் பகுதியை மூடி விட  வேண்டும். ஒரு நீளமான குச்சியால் கிளறிவிடலாம்.  கேன் நிறைந்ததும் அடுத்த கேனில் போட்டுவரவேண்டும்.  அறுபது நாளில் அதிகபட்சம் மூன்று மாதத்தில் உரம் தயாராகிவிடும். கருமைநிறமாக மாறி இருக்கும் உரத்தை கேனின் வாய்பகுதி வழியாக எடுக்கலாம்.

( காய்கறிக் கழிவுகளை உரமாக மாற்றும்  Kamba என்னும் compost bin ஒன்றை கோயம்புத்தூரில் வாங்கினேன். அதைப்  பற்றிய விவரம்  அடுத்த பதிவில்...)

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவச்  செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.


தோட்டம் போடுவது பொழுதுபோக்கு, சந்தோசம்  தவிர தேவையான காய்கறிகள்,பழங்கள்  கைக்கெட்டும் தூரத்தில் ப்ரெஷாக கிடைக்கும் என்றளவில் இருந்த என் எண்ணம் பசுமைவிடியல் அமைப்பு ஆரம்பித்ததும் இயற்கையின் மீதான ஈடுபாடு தீவிரமடைந்து தற்போது இயற்கை விவசாயம் செய்ய  நிலம் வாங்குவதில் முடிந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல்  பலரையும் வீட்டுத்தோட்டத்தின் பால் அவசியம் இழுத்தே ஆகவேண்டும் என்ற விருப்பத்தில் எனக்கு தெரிந்த குறிப்புகள் தகவல்களை பலர் கேட்க, சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  

பசுமைவிடியல் பேஸ்புக் தளத்திலும் பகிர்ந்து வருகிறேன்.  வீட்டுத்தோட்டம் பற்றிய இந்த தொடரைத்  தொடர்ந்து எழுத உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இயலாது...படித்துவிட்டு தோன்றும் சந்தேகங்கள் , உங்களுக்கு தெரிந்த தகவல்களை மெயில், கமென்ட் மூலமாக தெரிவியுங்கள். பலரையும் இதில் ஈடுபட வைப்போம். வெறும் நாலே  மாதத்தில் சிறிய இடத்தில்  பால்கனியில் இத்தனை வகையான செடிக் கொடிகளை வளர்ப்பது சாத்தியம் என்றால் உங்களாலும் முடியும் தானே  ... இதுவரை வீட்டுத்தோட்டம் போடவில்லை என்றால் இன்றேனும் ஆரம்பியுங்கள்...

வீட்டுத் தோட்டம்


ஆரோக்கியமான குடும்பமாக எல்லோரின் குடும்பமும் இருக்கவேண்டும் என்ற நமது விருப்பம் சிறிதாவது நிறைவேறும் என்ற  நம்பிக்கையில் ...

ப்ரியங்களுடன்
'மனதோடு மட்டும் ' கௌசல்யா

மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


செவ்வாய், ஜனவரி 20

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் 3

முந்தையப் பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - அனுபவம் 1 
வீட்டுத்தோட்டம் - அனுபவம் 2 

வீட்டுத்தோட்டம் ஏன் அவசியம் என்ற கேள்வி கேட்டவர்களுக்காக
இந்த எச்சரிக்கை ரிப்போர்ட் :-

'எண்டோசல்பான்' என்ற  பூச்சிக்கொல்லியை  2 ஆம் நிலை விஷப் பொருள் என்று உலக சுகாதார நிறுவனமும் முதல் நிலையில் 2 ஆம் பிரிவை சேர்ந்த விஷப் பொருள் என அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் அறிவித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் எண்டோசல்பான் தயாரிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது...!! 

மேலும்

தடை செய்யப்பட்ட  இரசாயன பூச்சிக்கொல்லி  மருந்துகள் நமது உடலில் இருப்பதாக மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  Cypermethrinheptachlor, quinalphos, aldrin, chlorodane, dichlorvas, cypermethrin ஆகியவை அரசால் தடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிமருந்துகள் காலிப்ளவர் முட்டைகோஸ் கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் மீதும் பிற தானியங்களின் மீதும் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்றும்  கடைகளில் விற்கப் படும் காய்கறிகளில் அதிகளவு அதாவது ஆயிரம் மடங்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும்  கண்டறியப்பட்டுள்ளன .

Home Garden

* கத்திரிக்காயில் மட்டும் சாதாரண அளவை விட 860% தடை செய்யப்பட பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இருந்ததாம். இதற்கு அடுத்த இடத்தில் காலிபிளவரும் மூன்றாம் இடத்தில் முட்டை கோஸ் இருக்கிறதாம்.

இந்த இரசாயனப்  பூச்சி மருந்துகள் அனைத்துமே neurotoxins அதாவது நரம்பு மண்டலத்தை தாக்கிப்  பாதிப்புக்குள்ளாகும் நச்சுப் பொருள்கள். மேலும் இவை நாளமில்லா சுரப்பிகள் ஈரல் சிறுநீரகம் அனைத்தையும் பாதிப்பவை. உணவில் நச்சுத்தன்மை மற்றும் பல ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா ஆகியவற்றின் மூலக்காரணம் இந்த தடைச் செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளே !

கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் மரபணு மாற்றங்கள் placenta மூலம் கருவையும் தாக்குகின்றன. ஆப்பிள் சாப்பிட்டால் நோய் வராது என்பதெல்லாம்  அந்தகாலம். ஆப்பிள் , ஆரஞ்சு பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட்ட அளவினை விட 140% அதிகம் இருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் மூன்று மடங்குக்கும் அதிக அளவு இரசாயனப்  பூச்சி மருந்துக்  கலவையில்  பழங்கள், காய்கறிகள் கீரைகளை  முக்கி எடுத்த பின்னர்தான் கடைகளுக்கு  விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். விரைவாக அழுகி விடக் கூடாது என்பதற்காக...!

பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் பளப்பளப்பாக பிளாஸ்டிக் கவர்களில் இருப்பவை சுத்தமானவை என்று நம்பிவிடாதீர்கள். அதில் எவ்வளவு இரசாயனம், மெழுகுப்பூச்சு இருக்குமோ ?  
(Reference :Times of India)

மேலும்

2025 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும்  இரண்டு குழந்தைகளில் ஒருவர் (பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர்) ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்ற  அதிர்ச்சித்  தகவலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். பாதிப்பிற்குக்  காரணமாக கூறப்படுவது மான்சான்டோ !! இந்நிறுவனத்தின் அரும் பெரும் கண்டுப்பிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி ஒரு எமன்.



நேரம் இருப்பின் இந்த லிங்க் சென்று படித்துப் பாருங்கள்.

தாவரங்களைத்  தாக்கும் பூச்சிகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நன்மை செய்யும் பூச்சி, மற்றொன்று தீமைச்  செய்யும் பூச்சி. சைவ பூச்சி, அசைவ பூச்சி என்றும் சொல்வார்கள். நன்மை செய்யும் பூச்சி, அசைவ இனம் பிற பூச்சிகளை ஸ்வாஹா செய்யும், இதனால் தாவரத்திற்குப்  பாதிப்பு இல்லை. இவற்றில் நன்மை செய்யும் பூச்சி இலையின் மேலே இருக்கும், தீமை செய்யும் பூச்சி இலையின் அடியில் இருக்கும். நாம் என்ன செய்கிறோம் பூச்சி மருந்து அடித்து நன்மைச்  செய்யும் பூச்சிகளைக்  கொன்றுவிடுகிறோம்,  (இது சின்ன உதாரணம்தான், தொடர்ந்து பூச்சிகளின் நன்மை, தீமை பற்றி பகிர்கிறேன்)

இவ்வளவும் தெரிந்துக்கொண்ட பிறகாவது  நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எப்படி? நம் வீட்டிற்குப்  பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது?? பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதாது. நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். தொடர்ந்து வாசிங்க, அந்த ஏதாவது என்ன என்று இப்போது உங்களுக்கு  புரியும்.

ஒன்றே செய் அதை இன்றே செய் 

ஒரே வழி இயற்கைக்கு மாறுவது தான் ! இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை  நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை   ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும்.  சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது.  இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா ? டாக்டரை பார்க்கிறோம், ஊசி போடுகிறார், சரி ஆனதும் அத்தோடு விட்டுவிடுகிறோம்...ஆனால் ஒவ்வொரு முறை காய்ச்சல், அலர்ஜி, வலி ஏற்படும் போதும் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என நாம் எண்ணுவதே இல்லை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறளின் பொருளை மறந்தேவிட்டோம்.

எவ்வாறு இயற்கையை நோக்கிச் செல்வது

இது பெரிய வித்தை எல்லாம் இல்லை, நமது சுற்றுப்புறத்தை பசுமைச்  சூழ இருக்குமாறுப்  பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போடப்பட்டவைகளை அறவேத்  தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த தானியங்கள்,காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான ஒரே தீர்வுதான்  வீட்டுத்தோட்டம். நெருக்கடி மிகுந்த அப்பார்ட்மென்டிலும் தோட்டம் போட வழிமுறைகள் இருக்கின்றன.  பலர் இணைந்தும் செய்யலாம்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.

how old are you என்ற ஒரு மலையாளப் படத்தை பலரும் பார்த்திருக்கலாம், ரசித்திருக்கலாம். அட இப்படியுமா என ஆச்சர்யப்பட்டிருக்கலாம். அந்த படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து எடுப்பதையும் கேள்விப்  பட்டிருக்கலாம். நிச்சயமாக அதில் சொல்லப்பட்ட விஷயம் பலரின்  மனதை பாதித்திருக்கும்,  மலையாளப் படம்  பார்க்காதவர்கள் தமிழில் வெளி வந்த பிறகாவது கட்டாயம் பாருங்கள்.

நடிகை மஞ்சுவாரியரின் முக்கியமான மேடைப் பேச்சு உங்களின் பார்வைக்காக...




வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தோட்டம் போடத் தொடங்குங்கள்...சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் எனது மெயில் ஐடியில் அல்லது கமெண்டில் தெரிவியுங்கள். பதில் சொல்லக்  காத்திருக்கிறேன்.



ப்ரியங்களுடன்...
கௌசல்யா.
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


தகவல் உதவி :Angelin 
படம்:கூகிள் 

வெள்ளி, ஜூன் 22

சில புரிதல்களும், விளக்கங்களும்...! வீட்டுத் தோட்டம்

பதிவர் வவ்வால் அவர்கள் வீட்டுத் தோட்டம் பதிவில் நான் சொல்லியிருந்த கீரை வளர்ப்பதற்கான எளிய வழிமுறையினால் நீர் கசிவு ஏற்படும், தளம் பாதிக்கப்படும் என்று பின்னூட்டத்தில் கூறி இருந்தார். அத்துடன் தொடர்ந்து துணை பதிவு ஒன்றும் (பசுமை மாடி - வீட்டுத்தோட்டம் ) எழுதி இருந்தார். கடந்த ஒரு வாரமாக என்னால் இணையம் வர இயலாத சூழ்நிலை. அதனால் உடனே வாசித்து பதில் சொல்லமுடியவில்லை. அப்பதிவில் மிகவும் விளக்கமாக எல்லா நுணுக்கங்கள்  பற்றியும் விரிவாக தெளிவாக எழுதி இருந்தார். உபயோகமான நல்ல பல தகவல்கள். அப்பதிவை பற்றி சொல்லும் முன் ஒரு சிறு தன்னிலை(வீட்டுத் தோட்டம் தொடரை குறித்த) விளக்கம்...

ஆர்வமின்மை 

தோட்டம் போடுவது என்பது அக்ரி படித்தவர்கள் , விவசாயம் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்டது, அவர்களுக்கு தான் தெரியும் நமக்கும் இதுக்கும் ஒத்துவராது என்பதே பலரின் எண்ணம்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூட முயற்சி செய்து பார்ப்பது  இல்லை. சுலபம் இல்லை மிகவும் கடினம் என்று தெரிஞ்சவங்க சிலர் என்னிடம் கேட்கிறப்போ 'என்னடா இது சோதனை' என்பது போல இருக்கும்...எங்க வீட்டு தோட்டத்துல ரோஜா செடிகள் நிறைய பூ பூக்கும் அதை பார்க்கிறவங்க 'உன் கை ராசி, அதுதான் இப்படி, நானும் எத்தனையோ வச்சு பார்த்துட்டேன் ஒரு பூவோட நின்னுடுது'னு சொல்வாங்க...அவங்களுக்கு பொறுமையா சில நுணுக்கங்களை சொல்வேன். மொத்தமா எல்லாம் கேட்டு விட்டு 'நீ என்னதான் சொல்லு, இதுகெல்லாம் ராசி வேணும்'...!!?? மறுபடியும் முதல்ல இருந்தான்னு எரிச்சல் வரும்.

இப்படி நம்மில் பலரும் ஒவ்வொன்னுக்கும் ஏதோ சில சமாளிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கிறோம்...தோட்டத்தை பொறுத்தவரை செய்து பார்ப்போமே, அதன் நெளிவு சுளிவுகளை கத்துக்கணுமேன்னு முயற்சி பண்றதே இல்ல. பணம் சம்பாதிக்க காட்டும்  ஆர்வம், முயற்சிகள் இதில் சிறிதும் இல்லை. உடம்பிற்கு ஏதும் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய தயங்காத நாம் இதற்கு மிகவும் யோசிப்பது சரியில்லை. தோட்டம் போடுவது என்பது நம் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது...!! உடல்நலத்துடன் மனநலமும் பேணப்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  இதில் ஆர்வம் வரணும், இனியும் அசட்டையாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்தவே தான் இந்த வீட்டு தோட்டம் தொடரே எழுதத் தொடங்கினேன். 

ஆர்வம், அக்கறை வர வைத்துவிட்டால் போதும், இதில் இருக்கும் சாதக பாதகங்களை அவங்களே புரிஞ்சிப்பாங்க. கூகுள்ல தட்டினா வந்து விழும் பல தகவல்களை விட அனுபவத்தில் பெற்றதை சொல்லும் போது " அட இவ்வளவுதானா மேட்டர், நாமும் செஞ்சு பார்த்தால் என்ன?" என ஒரு ஆர்வம் வந்துவிடாதா என்கிற ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கையில் எழுதுகிறேன். படிக்கும் ஒருவர் இரண்டு பேர் முயன்றால் கூட போதும் என்கிற விருப்பம் காரணமாகவே எளிமையாக பெரிய மேற்கோள்களை காட்டாமல் எழுதுகிறேன்.

அரிசி மண்ணுக்கு மேலா, அடியிலா என்பது தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத தலைமுறையினருக்கு நடுவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மில் பலரும் விவசாய பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விவசாயத்தை வெறுக்கிற, அதன் மேல் பற்று இல்லாதவர்களாக இருக்கிறோம். இது நல்லதுக்கல்ல. வீட்டில் தோட்டம் போடுவதின் மூலமாக இயற்கையுடன் நம்மை பிணைத்து கொள்ளமுடியும். இயந்திரங்களின் துணையுடன் வாழும் வாழ்க்கைக்கு நடுவில் கொஞ்சம் பசுமையுடன் வாழ்ந்து மனதை மென்மையாக்கி கொள்வோம்.

'இது செடி, இதுதாங்க மண், இதில் நட்டுவிட்டால் போதும்' என்று சொல்வதற்கு பல இணைப்புகள் கூகுளில் இருந்தாலும் ஆர்வம் இல்லாதவர்கள் எப்படி தேடி போவார்கள்...?! நிச்சயம் போக மாட்டார்கள்...அவர்களை தேட வைக்கணும்...தேடி கண்டடைந்த பின்னர் முயற்சி செய்து பார்க்கலாம்...பலன் கிடைத்ததும் புது புது நுணுக்கங்களை அவர்களாகவே கண்டு பிடிப்பார்கள்...பின் செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்...ஒரு முறை தோட்டம் போட்டு அதன் மகத்துவத்தை அனுபவித்து விட்டார்கள் என்றால் இறுதிவரை விட மாட்டார்கள். மரம், செடிகளுடனான காதல் இன்பம் எத்தகையது என்பதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும் !! மீளவே முடியாத போதை அது !! 

ஒகே, இப்ப நேரா விசயத்துக்கு வரேன்...அப்ப இதுவரை சொன்னது விசயமே இல்லையானு கேட்ககூடாது :)

ஆர்வத்தை கொண்டுவருவது முதல் படி என எண்ணியதால் சில வரிகளில் மட்டும் முடித்துக்கொண்டேன்...தொடராக எழுத போவதால் ஒவ்வொன்றை பற்றியும் தனித்தனியாக மேலும் பல தகவல்களை சேர்த்து எழுதுகிறேன். 

தோட்டக்கலை பொறுத்தவரை நாள்தோறும் ஏதாவது புது புது முறைகள்  வரும், போகும். வீட்டுத்தோட்டத்தில் அவரவர் கிரியேடிவிட்டிக்கு  தகுந்த மாதிரி கண்டுபிடித்து செய்து கொண்டே போகலாம்...சட்டதிட்டங்கள் இருக்குமோனு யோசிச்சிட்டே இருக்ககூடாது...சில விதங்கள் இப்படி இருந்தால் நல்லது என வழி  காட்ட முடியும் அவ்வளவே. அடிப்படை தேவையான மண், நீர், விதை இவற்றை வைத்து இருக்கிற இடத்திற்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ள வேண்டியது தான்.

முன்னாடி எல்லாம், மொட்டை மாடியில் தொட்டிகள் வைத்தால் ரூப் கனம் தாங்காமல் இறங்கிவிடும்(சேதமாகி விடும்) என்று கூட பயந்திருக்கிறோம் ??! :) 

மாடியில் கீரைத்தோட்டம் போடுவதில் சிறந்தது  என்பது கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்கை/விரிப்பை சரியான விதத்தில் பயன்படுத்துவதில் இருக்கிறது. தென்னை நார் கழிவை அடியில் பரவலாக விரிக்கலாம்...நீரை உறிஞ்சி வைத்துகொள்ளும்...மண்ணில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்...அதிகபடியான நீர் வெளியேறவும் செய்யாது...தொட்டியில் செடி வைக்கும் போதும் இதை பயன்படுத்தி கொண்டால் நல்லது. தினம் தண்ணீர் ஊற்றவேண்டுமே என கவலை படவேண்டாம்.3 அல்லது 4 நாள் வரை தாங்கும்.

திரு வின்சென்ட் சார் அவர்களின் இந்த பதிவும், காணொளியும் உங்களுக்கு மாடியில் கீரை பயிரிடுவதை பற்றிய ஒரு தெளிவினை/புரிதலை கொடுக்கும்.

மாடியில் கீரை வளர்ப்பு - லிங்க் சென்று பார்க்கவும்.

http://youtu.be/s5gXutQws8E


'வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்' என்று வலியுறுத்துகிறது வின்சென்ட் சாரின் இந்த  Powerpoint Presentation. அவசியம் பாருங்க...

 http://www.authorstream.com/Presentation/vincent2511-607128-home-garden/

மொட்டை மாடியில் கீரைத் தோட்டம் அமைக்க

"ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது." - வவ்வால் 
கழிவு நீர் சுத்திகரிக்கும் முறை,தொழு உரம் தயாரிப்பது என்பதை குறித்து விரிவாக பதிவிட்டதையும் அவசியம் படிங்க...

(காய்கறி கொடி பந்தலின் கீழே கீரை வளர்ப்பதை போல் அமைத்து கொள்வது நன்று)

பதிவர் வவ்வால் அவர்களுக்கு,

உங்கள் பின்னூட்டத்துக்கும் துணை பதிவுக்கும் முதலில் என் நன்றிகள். 

எனது பதிவை ஊன்றி படித்து அதில் தங்கள் பார்வையில் குறையாக தெரிந்ததை பின்னூட்டத்தில் குறிப்பிட்டதோடு அல்லாமல் விரிவான விளக்கம் கொடுக்கவேண்டும் என தனி பதிவு எழுதிய உங்களுக்கு  என் பாராட்டுகள். 

அதிலும் துணை பதிவு என்று குறிப்பிட்டது என் கவனத்தை மிக ஈர்த்தது...(எனக்கு தெரிந்ததெல்லாம் எதிர்பதிவு?!) :) இச்சமயத்தில் எதிர்பதிவுகள் எழுதிய சகோதர, நண்பர்கள் என் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பதிவின் கருத்தை குறித்த விமர்சனத்தை விட எழுதியவரை பற்றிய கடும்விமர்சனத்தை தான் இதுவரை பார்த்திருக்கிறேன். அத்தகையோரை பற்றி மட்டும் தெரிந்த எனக்கு வவ்வால் அவர்களின் துணை பதிவை படித்து ஆச்சர்யம் ஏற்பட்டது ! சக மனிதரை மதிக்கக்கூடிய இந்த பண்பை கற்றுக்கொள்ளவேண்டும் நான் உட்பட...பதிவில் இருக்கும் குறைகளை(?) சுட்டிக்காட்டுகிறேன் என்ற போர்வையில் தனிமனித தாக்குதல் நடத்தும் பதிவுலகத்தில் நாகரீகமான இவரது அணுகுமுறையை எண்ணி உண்மையில் மகிழ்கிறேன். ஒருவருக்கொருவர் நல்ல கருத்துக்களை, நிறை குறைகளை பரிமாறும் ஆரோக்யமான நிலை தொடர இவரை போன்றோர் இருக்கிறார்கள் என்ற மன நிறைவுடன் இப்பதிவை முடிக்கிறேன். 

கௌசல்யா  

தகவல்,படங்கள் உதவி 
நன்றி வின்சென்ட் சார்