மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனைவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 29

கடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32


'பணம்' இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.

குடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ  செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம்.   நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது  இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.

சொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவதுத்  தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும்  ஒரு சில நிமிடங்களில் தொலைந்துச்  சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச்  செய்கிறார்களா? அல்லது மனைவியின் வற்புறுத்தலா? அல்லது  மனைவியின் மீதான அதிக அன்பா? என தெரியவில்லை.  ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்.....

அப்படி அந்த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா ? மனைவியின் பெயரில்  கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின்  பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை.  நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா ... 

எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும்  இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள்  முன்னிலையில்  கணவன், 'என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு' என்று சொல்லும்போது...!  இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான்.  ஒன்று பலவாகி ...மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் !

எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அருமையான மனைவி  ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம்  நண்பர்  ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்  மனைவியை சூழ்ந்துக்  கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப்  பணத்தை எப்போ தர போறிங்க...? சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க? இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார்? ஆதாரம் என்ன? மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பதில் 'உங்களின்  கையெழுத்து போடப்பட்ட  பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்'

கணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும்  கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி.  வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு  மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்' என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து 'சொன்னப்படி கொடுத்துடுங்கமா' என்று சொல்லிவிட்டு கடந்துச்  சென்றே விட்டது அந்த கூட்டம்.

துக்கத்திற்கு வந்த உறவினர்களின்  கூட்டம் அகன்றதும்  கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என   தேடித் பார்த்திருக்கிறார்.  வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே  அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக  ஓரளவு கடன் தொகை அடைக்கப்பட்டது. 'நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்' என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று !!

நன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர்  கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு ?!

'பெண்' என்றால் 

இப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக  இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை  கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார்?  பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது' என்று ஆனால் 'நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி' என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது 'பெண்' எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.

பணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப்  பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக   வேண்டும்,  எனக்கு இங்கெல்லாம் சென்று  பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று  நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்து தான் ஆகவேண்டும்.

கணவன் இறந்தப்பின் அந்த  மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை... அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது... சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.

கணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால்  என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை  புருஷ லட்சணம்  என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

பிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு  போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால்  இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும்  பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.

யாருக்காக சம்பாத்தியம் 

தனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை   வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

குடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது  சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்பம். கடனுக்கு ஈடாக  மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும்  மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும்.  'பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க' என்பதே 'இன்றும்' பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.    

கணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது  என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.

சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.

தனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி, கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்...

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.


புத்தகப் பரிந்துரை : Morgan housel எழுதிய  The Psychology of Money
தமிழில்   பணம் சார் உளவியல்  எழுதியவர் Chandar subramanian. 


செவ்வாய், ஜூன் 7

தாம்பத்தியம் - 24 - மனைவியரே ! ஏன் இப்படி?

முன்னுரை 

தாம்பத்தியம் தொடர், குடும்பத்தில் ஏற்படும் சிக்கலுக்கு காரணமான பிரச்னைக்குரிய கணவன், மனைவி இவர்களின் நிறை, குறைகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு. பெற்றோர்களின் கருத்துவேறுபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை மனதில் வைத்தே எழுதி வருகிறேன். பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ந்த பின்னும் அந்த பாதிப்பில் இருந்து அவ்வளவாக மீண்டு வருவது இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். பாதிக்கப்பட்ட இன்றைய குழந்தைகள், நாளைய பெற்றோர்களாக மாறும் போது அவர்களின் மனநிலை...?! குழந்தைகளின் நலனை மனதில் வைத்தாவது தம்பதிகள் பரஸ்பரம் அன்பை பரிமாறி வாழக்கூடாதா என்கிற ஆதங்கம் இத்தொடரில் எழுத்துக்களாய்...!!


கணவன் மனைவி சம்பந்த பட்ட குடும்ப விசயத்தில் ஆண், பெண் என்று  பாகுபடுத்தி பார்ப்பதே தவறு. பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கலாம் தவறில்லை ஆனால் அதற்கான இடம் குடும்பம் அல்ல !!

பொதுவாக இப்படி பெண்ணுரிமை, சம உரிமை  என்று குரல் கொடுத்து கொண்டிருப்பதால் வீட்டிலும், குடும்பத்திலும் அது எதிரொலித்து எல்லா பிரச்சனைக்கும் ஒரு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. குடும்பம்  வேற...மேடை பேச்சு வேற... புரிந்து கொண்ட பெண்களின் இல்லங்களில் குதூகலமும், புரிந்து கொள்ளாமல் கொடி பிடிப்பவர்களின் வீட்டில் குளறுபடிகளும் கும்மி அடிக்கின்றன !!

மனைவி கணவனுக்கு சமம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரது வீடுகளிலும் மனைவியின் கை தானே ஓங்கி இருக்கிறது...சில வீடுகளில் மனைவி தனக்கு தேவையான உரிமையை மட்டும்  எடுத்துக்கொள்கிறாள், சில வீடுகளில் வலிந்து பெற்றுக்கொள்கிறாள், பல வீடுகளிலும் முழு உரிமையையும் எடுத்துகொண்டு குடும்பத்தை வழி நடத்துகிறாள்...இதுதான் இன்றைய நிதர்சனம்.ஆண்கள் விட்டுகொடுத்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார்கள், அவர்கள் ஆளுமை செய்த காலம் குடும்பத்தை பொறுத்தவரை மிக குறைந்து விட்டது. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)

அத்தகைய பெண்களில் சிலர் 'தான் சொல்வதே சரி' என்பது போல் நடந்து சிக்கல்களை உருவாக்கி கொண்டே செல்கிறார்கள்.

குடும்பத்தைக் கெடுக்கும் அறிவுரைகள் ?!!
  
மனப்பொருத்தம் என்பது ஏதோ கடையில் வாங்கும் பொருளல்ல...இரு மனமும் பொருந்தியதே திருமணம் என்று பெரியவர்கள் சொல்லி வச்சாங்க. இப்போது திருமணம் ஒருவழியாக பொருந்திவிடுகிறது, ஏனோ இரு மனங்கள்  பொருந்துவதே இல்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் மனம் பொருந்தவில்லை என்றால் அது நரக வாழ்க்கை. மனம் பொருந்தாமைக்கு கணவன் மனைவி மட்டும் காரணம்  இல்லை,பெண்களை பொறுத்தவரை திருமணத்தின் போதே அவர்களுக்கு ஓதப்படும் தவறான அறிவுரைகள்....!!?

* கணவனை கைக்குள் போட்டுக்கோ
* மாமியார், நாத்தனாரை தூரமா வை.
* கொஞ்ச நாள் போனதும் தனிக்குடித்தனம் போற வழியைப் பாரு. 
* எந்த முடிவும் நீ எடு, அடக்கி வை.

இந்த நான்கில் ஒன்றாவது நிச்சயம் எல்லா குடும்பத்திலும் திருமணத்தின் போது  பெண்ணின் காதில் ஓத படுபவை.....இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

இப்படி வலுகட்டாயமாக பதிய வைக்கப்படுபவை, புது பெண்ணின் மனதில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணருவதே இல்லை.
கணவன் நல்லவனாக இருந்தாலும் இந்த எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து விடுவதால், கணவனை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பெண் அணுக தொடங்குகிறாள். திருமண முடிந்த ஆரம்பத்தில் இது அவ்வளவாக வெளியே வருவதில்லை, போக போக கணவனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளணும் என்கிற எண்ணம் தலை எடுக்க தொடங்கும்.

இன்றைய பெண்களுக்கு ஆணை விட நாம் எதில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் அதிகம். ஆனால் இதை குடும்பத்தில் நிலைநாட்ட துடிப்பது சரியன்று. தவிரவும் ஆணுக்கு சமம் என்றால் சம மரியாதை கொடுக்க வேண்டுமே,அதுவும் இல்லை, தனக்கு(ள்) அடங்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்...?!

அது என்ன ஆம்பளைங்க என்றாலே ஏதோ வேற்றுக்கிரக ஜந்து மாதிரி பார்க்கிறது...?!!! திருமணம் முடிந்த நாளில் இருந்து  கணவனை எப்படி எல்லாம் தன் வழிக்கு கொண்டு வரலாம் என்று பிளான் போடுவார்கள் சிலர் !! என்னவோ அதுவரை கணவன் ஒன்றும் தெரியாத முட்டாளாக இருந்தது போலவும், இவங்க புத்தி சொல்லி திருத்துற மாதிரியும்,  இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று அட்வைஸ் பண்றதா பார்த்தா......!? பாவம் அப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்த ஆண். எல்லாவற்றிலும் பெண்ணின் பேச்சை கேட்கணும் என்றால் அந்த கணவனின் தனித்தன்மை என்ன ஆகும்? 

ஒரு சில ஆண்கள் மனைவியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாதவனாக, அடக்கி ஆளும் மனம் படைத்தவனாக இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் அணுகுவது அநியாயம். (ஒரு வேளை கணவன் அடக்கி ஆளும் மனம் கொண்டவனாக இருந்தாலும், மனைவியால் சந்தோசமாக குடும்பம் நடத்த இயலும் அது எவ்வாறு என்று பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.....!)

என்ன குறை கண்டாய் பெண்ணே ?

ஆண், பெண் யாராக இருந்தாலும் 100 சதவீதம் நிறைகள் உள்ளவர் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது கணவனிடம் மட்டும் நூறு சதவீத நிறைகள் இருக்கணும் என்று எதிர்பார்காதிங்க...! ஒரு பெண்ணிடம் உங்க கணவன் எப்படி என்று கேட்டு பாருங்க, "அய்யோ அவரா, அதையேன் கேட்குறீங்க..... வேலை  விட்டு வந்தாலும்  வீட்ல இருக்கறதே இல்ல, எப்பவும் நண்பர்கள் கூட வெட்டி பேச்சு தான், வீட்ல ஒரு துரும்பை கூட அசைக்கிறது இல்லை...எல்லாம் நான்தான் பார்க்க வேண்டி இருக்கு, இந்த மனுசனை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்......" இப்படி.....கேட்டவங்க  காது தீப்பிடிக்கிற அளவு போயிட்டே இருக்கு.....இதுவா நல்ல தாம்பத்தியம் ? இல்லவே இல்லை...!

பொதுவா குறைகளை பட்டியல் போடுவதை மனைவிகள் நிறுத்தவேண்டும்.....பதிலுக்கு கணவனும் மனைவியின் குறைகளை பட்டியல் போட தொடங்கிவிட்டால் இதற்கே பொழுது சரியாக இருக்கும், குடும்பம் நடத்த முடியாது. வீட்டில் குறை சொல்வது போதாது என்று உறவினர்கள் ,அக்கம்பக்கமும் சொல்லிவிடுவதால் சின்ன விஷயம் , பெரிய பிரச்னை அளவிற்கு போய்விடும். அடுத்தவர்களுக்கு நம் வீட்டு பிரச்னை ஒரு பொழுது போக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அதை பெரிதாக எண்ணிக்கொண்டு சில பெண்கள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

ஒரு கணவனிடம் குறை என்றால் உதாரணதிற்கு குடிப்பழக்கம்.....

திருமணதிற்கு முன் ஒரு ஆண் குடிக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்/காரணம். ஆனால் திருமணதிற்கு பின் கணவர் குடிக்க தொடங்குகிறார் அல்லது அதிகமாக குடிக்கிறார் என்றால் அதற்கு முழு பொறுப்பு அவரது மனைவி என்பேன்....அது எப்படி அவருக்கு தொழில்/வேலை  நெருக்கடி இருக்கலாம், மன அழுத்தம் காரணமா குடிக்கலாம் அல்லது புதிய நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் இது போன்ற எந்த காரணமாக இருந்தாலும் மனைவியின் அன்பும், அரவணைப்பும், முக்கியமாக புரிதலும் சரியான அளவில் கணவருக்கு கொடுக்கப்பட்டு வந்தால் அங்கே எந்த கெட்டப்பழக்கமும் ஏற்பட வழியே இல்லை. பழக்கம் ஏற்பட்டாலும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும். 'என் கணவன் சரியில்லை' என்று குறை சொல்லி புலம்பும் பெண்களுக்கு எனது ஒரே பதில் "தவறுகளின் ஆரம்பம் நீங்கதான்"

சண்டை போடும்போது ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்களை குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்...!சகித்துக்கொண்டு  இருக்கிறாங்க அவ்வளவு தான். ஆனால் இந்த சகிப்புத்தன்மையும் ஒரு அளவிற்கு தான்.  அளவை தாண்டும் போது கரையை உடைத்துக்கொண்டு போகும் வெள்ளத்தை போல கடந்து சென்றே விடும்.....அப்புறம் தலை கீழாக  நின்றாலும் உங்க பக்கம் திருப்ப முடியாது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கணவனிடம் இருக்கும் குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு இருக்கும் அவரிடம் நிறைகளை கவனத்தில் வையுங்கள். கூடுமானவரை இருக்கும் குறைகளை, நிறைகளாக மாற்ற முயலுங்கள்.....( 'இந்த மனுஷனிடம் நிறையா ? அப்படியெல்லாம் ஒண்ணுகூட இல்ல...!') நல்லா யோசிங்க.....! ஒண்ணு, இரண்டு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்.....!! நிறைகளை அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.....! 

முக்கியமாக சின்ன சின்ன பாராட்டுகள் ! இதற்காக மேடை போடணும், மைக் வைக்கணும்னு அவசியம் இல்ல...அன்றாட வாழ்வில் கேசுவலாக சொல்லலாம்.....சொல்லித்தான் பாருங்களேன் ........!! 

ஒரு சில டிப்ஸ்.....

கணவரிடம்,

* எந்த பிரச்னைக்கும் டக்குனு தீர்வு சொல்றீங்க, எப்படிப்பா இப்படி...சூப்பர் !

* உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ்,சான்சே இல்ல போங்க அபாரம் !

* நடை கம்பீரமா இருக்குங்க ! நெற்றியில் விழும் முன் முடி செம அசத்தல்பா !

* பேசுறப்ப நடுநடுவே சிரிக்கும் இந்த சிரிப்பு என்னை ரொம்ப ஈர்க்குதுங்க ! நீங்க இல்லாதபோதும் அந்த சிரிப்பு என் காதில் கேட்டுட்டே இருக்குங்க !! (ஒருவேளை லவ் பண்ணி இருந்தால் அப்போ இதை விட ஓவரா சொல்லி இருப்பீங்களே !! இப்பவும் சொல்லுங்க, தப்பு இல்ல...!)

இதே ரீதியில் சொல்லி பாருங்க.....(அப்புறம் ரிசல்ட் என்னனு என்கிட்டே சொல்ல வேண்டாம், ரிசல்ட் எப்படி  இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் !! ) 

இது தாங்க வாழ்க்கை...இப்படி சிம்பிளா, ஜாலியா வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கிறதை விட்டுட்டு,   எப்பவும் கணவரை குறை சொல்லி அழுது புலம்பி நீங்களும் மன அழுத்தத்தில விழுந்து , அவரையும் வேற ஒண்ணுல விழ வச்சிட்டு, குழந்தைகளை பற்றியும் சுத்தமா மறந்துவிட்டு என்ன வாழ்க்கை வாழ்றீங்க.....!!? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...!!


************************************************************************

'மனைவியரே ! ஏன் இப்படி...?!' முடியவில்லை, தொடருகிறது.....!?


தாம்பத்தியத்தில் அடுத்து வருவது ,ஆண்களை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ? காத்திருங்கள்....

************************************************************************






படங்கள் - கூகுள் 



இன்றைய சிறகடிப்பில் கழுகு !