தாம்பத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாம்பத்தியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 8

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33






couple showing fake love in relationship



"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????" 

ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆறு மாதத்திற்கு முன்பு  ஆலோசனை தேவை என்று இமெயில் மூலம் தொடர்பு கொண்டவர் போன் நம்பர் கேட்கவே  கொடுத்தேன். அந்த பெண்தான் எடுத்ததுமே ஒட்டு மொத்த ஆண்களையும் சாடும்  கேள்வியை என்னிடம் கேட்டார். அடுத்ததாக '"என் கணவரை  டைவர்ஸ் பண்ணப் போறேன், வக்கீலை பார்க்குறதுக்கு முன்னாடி உங்ககிட்ட போனில் ஒரு முறை பேசினா என்னனு தோணிச்சு" என்றார். 

வழக்கம் போல நானும், ஆலோசனைக்கு வருபவர்களை முழுதாக பேசவிடுவதைப்  போன்று இவரையும், 'சரி எல்லாம் சொல்லி முடியுங்கள்' என்றேன். ஒரு  மணி  நேரமாக அவர் சொன்னதின் மொத்தப் பொருளே இரண்டே வரிகள் தான். கணவர் சலனப்  புத்திக்காரர், வேறு தொடர்பு ஏற்பட்டு இருக்கும் என்று சந்தேகம். "எதை வைத்து சொல்கிறீர்கள்" என்றேன், "முன்பை விட என்மீது மிகுந்த அன்பாக இருக்கிறார். கேட்ட பொருளை உடனே வாங்கி கொடுத்து விடுகிறார். வேறு எங்கோ தவறு நடக்கவே தான் உறுத்தல் ஏற்பட்டு என்னிடம் அன்பைக் கொட்டுகிறார் போல" என்று தனது துப்பறியும் புத்தியை மெச்சிக் கொண்டார்.  திடீரெனப்  பெருகும் அன்புக்கு பின்னால் இப்படியும் காரணங்கள் இருக்கலாம்  என்பதை இந்த சமூகம் தெரிந்துக் கொள்ளவேண்டும்!

சில பல ஆலோசனைகளைச்  சொல்லி போனை வைத்தேன். அப்போதைய விவாகரத்து முடிவை சிறிது காலம் தள்ளிப்  போடும் அளவிற்கு மனதை மாற்றிவிட்டதாக எனக்கு தோன்றியது. அதன் பிறகு ஆறு மாதமாக தொடர்புக்  கொள்ளவில்லை. கடந்த  வாரம் அவராக தொடர்புக் கொண்டு சொன்னவற்றைச்  சத்தியமாக என்னால் நம்பவே  முடியவில்லை.

பெண் எடுத்த வித்தியாசமான ஆயுதம் 

"An idle mind is the devil's workshop"   என்று சொல்வார்கள்.   அந்த பெண் பலவிதமாக சிந்தித்து முடிவாக தனது கணவனின் நடவடிக்கையை வேவுப்  பார்க்க ஆரம்பித்துவிட்டார்.  சந்தேகம் என்பது வந்துவிட்டால் அதன் பிறகு அமைதி என்பது எது?!  ஆனால் இவர் கொஞ்சம் வித்தியாசமாக கணவரின் மொபைல் ஐ ஆராய்ச்சிச் செய்யவில்லை அதற்கு பதிலாக புதிதாக fake ஐடி ஒன்றை பேஸ்புக்கில் ஓபன் செய்து  குட் மார்னிங், குட் நைட் சொல்வது, கவிதை எழுத வரும் என்பதால் காதல் கவிதைகளாக தினம் இரண்டு என்று பகிர்ந்திருக்கிறார். பிறகு  கணவரின் ப்ரெண்ட்  லிஸ்டில் இருக்கும் இரண்டு மூன்று நபருக்கு request அனுப்பி இணைத்திருக்கிறார். அப்புறம் என்ன people you may know  இவரது கணவரையும் காட்டி இருக்கிறது. இவருக்கு காட்டியதை அவருக்கும் காட்டி இருக்கும் அல்லவா, ஒரு சுபயோக சுபதினத்தில் தானாக வந்து விழுந்திருக்கிறார் request கொடுத்து...!!!

அதன் பிறகுதான் இவரது வாழ்கையில் மிகப் பெரிய டுவிஸ்ட் ?! திரைப்படங்களில் நடக்கும் சம்பவங்கள் கற்பனை  என்று சொல்லப்பட்டாலும் உண்மை   கொஞ்சமாவது இருக்கும்.  தற்போதைய நமது சமூக சூழல்களில் திரைப்படத்தையும் விஞ்சக்கூடிய பல சம்பவங்கள் நமது குடும்பங்களில் நடந்தேறி வருகிறது என்பது இந்த பெண்மணி தனது கதையைச்  சொல்லும் போது புரிந்தது. 

ஆண் எவ்வளவு தான் தனது மனைவியை நேசித்தாலும் தெரிந்தோ தெரியாமலோ வெளியில் புதிதாக ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பில் விழுந்துவிடுகிறான், தனது மனசாட்சியிடம் நட்பு தானே  என்று சமாளித்தும் விடுவான்...அதிலும் இன்றைய ஆண் பெண் இருவரும் தேடித்தேடி  தைரியமாகவே   நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வாழ்க்கைச் சூழலின் மன அழுத்தம் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. புதிய உறவை ஆரம்பிப்பது ஆணாக இருந்தாலும் அதை இன்னும் நெருக்கமாக்கி விடுவது பெண். எல்லாவற்றையும் மனைவியிடம் பகிர்ந்துக் கொள்ள  முடியாத ஆண்கள் அடுத்த பெண்ணின் சிநேகிதத்தைத்  தேடுகிறார்கள்... கிடைத்ததும் அதில் தொலைந்தும் விடுகிறார்கள்!

ஆறுதலாக பேச அக்கறையாக விசாரிக்க, திரைப்படம் சமூகம் அரசியல் கதை கவிதை பற்றி எல்லாம் விவாதிக்க, மற்றொரு உயிர் ஒன்று தேவைப்படுகிறது அது எதிர்பாலினமாக இருந்தால் ஈர்ப்பு அதிகமாகிறது, ஆணிற்கு ஒரு பெண்ணும் பெண்ணிற்கு ஒரு ஆணும்!! ஏன் இதையெல்லாம் தனது துணையிடம் பேசலாமே என கேட்கலாம்.  'இவளுக்கு என்ன தெரியும்' என்ற கணவனின் மெத்தனமும், 'ஆமா நாம பேசுறதை எங்க காதுக் கொடுத்து கேட்கப்போறாரு' என்ற பெண்ணின் சலிப்பும் இருவரையும் நெருக்கமாக பேச விடுவதில்லை. தவிரவும் வீடு என்றால் குழந்தைகள் வளர்ப்பு, கல்வி,  EMI உட்பட்ட  பொருளாதார சிக்கல்கள், சொந்தங்கள் சார்ந்த உறவு பேணுதல் போன்றவற்றில் உழன்றுக் கொண்டிருக்கும் தம்பதிகள் தங்களுக்கான நேரம் என்ற ஒன்றை ஒதுக்குவதே இல்லை. நேரம் கிடைக்க மாட்டேங்குது என்று நேரத்தின் மேல் தவறைப் போட்டுவிட்டுத்  தப்பித்து விடுகிறார்கள்.  

அதேசமயம் வெளியே ஏற்படும்  நட்புடன் பேச வேண்டும் என்பதற்காக நேரத்தை உருவாக்கிக் கொள்பவர்களும் இவர்கள் தான்.  எங்கிருந்தோ முகம் தெரியாத ஒரு நட்பு அனுப்பும்  சின்ன டெக்ஸ்ட் மெசேஜ்  கொடுக்கும் மகிழ்ச்சி ,உற்சாகம், சிலிர்க்க வைக்கும்  'கிக்'  உடனிருக்கும் துணையிடம் ஏன் ஏற்படுவதில்லை !   மனித மூளையின் ஒரு ஓரம் மட்டும் தாறுமாறாக  டிசைன் செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ ?!!! 

ஹார்மோன்களின் முக்கியத்துவம் 

நமது மூளையில் இருக்கிற 'ஹைப்போதாலமஸ்' உடலின் உணர்ச்சிகளை தூண்டவும் கட்டுப்படுத்தவும் கூடிய முக்கியப்  பங்கு வகிக்கிறது. சாப்பிடத்  தூண்டுவது,  உடல் சூட்டினை  சமநிலைப்  படுத்துவது, நினைவாற்றல், தூக்கம், கோபம், செக்ஸ் குறிப்பாக சொல்லணும்னா  ஹார்மோன்களை ஆட்டிவைக்கிறதே இவர் தான்!!  எதிர்பாலினத்தவரிடம் ஈர்க்கப்படும்போது டோபோமைன் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இது ஹைபோதாலமஸில் மிகச் சிறப்பு என்று மூளையில் பதிவுச்  செய்யப்பட்டு இருப்பதால்  'எதிர்பாலின ஈர்ப்பு', போதையை போன்றதொரு  மெக்கானிஸத்திற்குள் மனிதனைத் தள்ளி விடுகிறது.  .

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான ஹார்மோன்கள் அதாவது ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன், ப்ரோஜெஸ்டிரோன் இருந்தாலும் உறுப்புகள் உள்ளிட்ட வேறுபாடுகள் அவற்றின் இயங்கங்களை பொறுத்து மாறுபடுகின்றன. பாலியல் ஈர்ப்பு சம்பந்தப்பட்ட ஹார்மோன்களான     டெஸ்டோஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜன் போன்றவற்றின்  உற்பத்தியை சில சமயம் ஹைபோதாலமஸ் தொந்தரவு செய்துவிடுவதால் மனிதனின் நடத்தையில் மாறுபாடுகள் ஏற்படலாம். 

உடல் ரீதியிலான உறவு ஏற்படவில்லை என்றாலும் அதீத ஈர்ப்பு இருவருக்கிடையில் இருப்பது சாத்தியமா என்றால் ஆம் என்று தான் சொல்லவேண்டும்.  அந்த நபருடன் பேசும்போது மட்டுமே ஏற்படும் மகிழ்ச்சியான மனநிலை தொடர்ந்து அதே நபருடன் அதிக நேரத்தைச்  செலவிடச் சொல்கிறது. ஆனால் அறிவியல் பல சொன்னாலும் இன்றைய மனித மனங்களை இது இப்படிதான் என்று குறிப்பிட்டுச் சொல்வது அறிவியலாலும் முடியாது போல. 

எண்ணங்களில் மாறுபாடு   

தற்போது பலரும் இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டார்கள் , (கொரானாவிற்கு பிறகு)  "இருப்பது ஒரே வாழ்க்கை, காலையில் எழுந்தா தான் நாம உயிரோட இருக்கோம்ன்றதே தெரியுது ...யாருக்கு எப்ப, என்ன ஆகும் என்றே தெரியாத நெலம... இதுல மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது...பாவமாவது புண்ணியமாவது... இருக்கிறவரை அப்படியே ஜாலியா நமக்கு புடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போய்டணும் " இதை  இன்றையத்  தத்துவம் என்று சொல்வதை விட ஒரு கொள்கையாகவே எண்ணத் தொடங்கிவிட்டார்கள்!!

இதை  சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கும், ஆனால் இங்கே நிஜம்  வேறு !  ஒரு தம்பதியினர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை மட்டுமே சமூகம்/உறவுகள்  பார்க்கும் ஆனால் தனது பெற்றோர் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை அவர்களின் குழந்தைகள் கண்டிப்பாகப் பார்க்கும்.  பெற்றோரை பார்த்தே ஒரு குழந்தை பாடம் படிக்கிறது. யாருக்காக இல்லை என்றாலும் தனது குழந்தைக்காக ஒவ்வொருவரும் சரியாக வாழ்ந்துதான் ஆக வேண்டும்.  பிறரை துன்புறுத்தக் கூடிய, கொடுமை விளைவிக்கக் கூடிய ஒரு மகனை/மகளை நாம் இந்த சமூகத்துக்கு கொடுத்துவிட்டுச் செல்கிறோமா அல்லது நல்ல பண்பு, ஒழுக்கம்,  மனிதத்தன்மை கொண்டவர்களையா என்பதைப்பற்றி  பெற்றோர்கள் யோசித்தாக வேண்டும். 

Fake மனிதர்களின்  அதீத அன்பு  

ஆலோசனைக்கு வந்த பெண்ணும் அவரது கணவரும் chatting செய்ய ஆரம்பித்து அந்தரங்கமாக  பேசும் அளவிற்கு தொடர்பு நெருங்கமாகி இருக்கிறது...??!!! போட்டோ கேட்டதற்கு 'என்னை நம்பலைனாப்  பேச வேண்டாம். என் முகத்தை பார்த்து பழகினால் அது உண்மையாக இருக்காது' அப்படி இப்படி என்று செண்டிமெண்டாக தாக்கி இருக்கிறார் இந்த பெண்! 

"மன ஆறுதலுக்காக உங்ககிட்ட பேசுறேன் பேசப்  பிடிக்கலைனா விட்டுடுங்க, என்று ஒரு போடு போட்டேன், அதோட ஆள் மறுபடி அந்த பேச்சை எடுப்பதே இல்லை"  

"உன் குரலை ஒரு முறை கேட்கணும், ஆம்பளப்  பசங்க கூட பொண்ணு  மாதிரி chatting பண்ணி ஏமாத்துவாங்க அதுக்காக கேட்கிறேன்" என்று கேட்டார், அதுக்காக 'ஒரு முறை தான் சரியா' என்று கண்டிசன் போட்டு ஒரு இரண்டு நிமிஷம் வாய்ஸ் சாட்டில் கொஞ்சம் லேசா ஹஸ்கி வாய்ஸ்ல பேச்சை மாத்திப் பேசி அனுப்பினேன். அவரால கண்டுப்பிடிக்க கூட முடியல, தேன் மாதிரி இருக்குன்னு   ஒரே வழிசல் வேற.  அப்படி பேசி அனுப்பும் போது எனக்கு எவ்ளோ த்ரில் ஆ இருந்துச்சு தெரியுமா ? ஒரே வெட்கமா போச்சு மேடம்" 

என்று என்னிடம் சொல்லிச் சிரிக்கிறார் விவாகரத்து பண்ணப்போகிறேன் என்ற முடிவில் இருந்த  அந்த பெண்.

கவிதை வழியாக  காதலை தினமும் இவர் கொட்ட அதற்கு அவர்  இதயம் போட்டு  குதூகலிக்க என இருப்புறமும் உற்சாகம் கரைப்  புரண்டு ஓடியிருக்கிறது. வீட்டில் இருக்கும் போது கணவர் தனது மனைவிக்கு தெரியாமல் ஆனால் மனைவிக்கே(?) 'குட் மார்னிங் டியர் என்ன பண்ற' என்று மெசெஜ் அனுப்ப, மனைவியும் 'வீட்டுக்காரர் இருக்கிறார், அவர் போனதும் மெசேஜ் பண்றேன் டார்லிங்' என்று பதில் மெசேஜில் சிணுங்க??!! 

பருவ வயதில் ஏற்படும் முதல் காதல் அனுபவத்தை விவரிப்பதைப் போல உற்சாகமாக அந்த பெண் பேசப் பேச எனக்கு பைத்தியம் பிடிக்காதக்  குறை . இது எப்படி சாத்தியம் ?!  

"ஏங்க இப்படி பண்றிங்க, உண்மை தெரிஞ்சா என்னாகும்?"

"ஒன்னும் ஆகாது மேடம். உண்மையை எதுக்கு சொல்லணும் கடைசிவரை தெரியாமப்  பார்த்துப்பேன்... அவர் இப்படி என்கிட்ட பேசுறதால மத்த பொண்ணுங்க கூட  பேசவோப்  பழகவோ  வாய்ப்பே இல்லை, அந்த அளவிற்கு அவரை நான் மயக்கி வச்சிருக்கேன்... FB ல கவிதை வரலைனா தவிச்சுப் போய்டுவார். இதனால இணையத்தில  மத்தவங்க எழுதிய  கவிதையை லைட் ஆ மாத்தி  போஸ்ட் பண்ணிவிடுவேன்... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்... வீட்டுவேலைகளை ஜாலியாப்  பண்றேன், குழந்தைகளை சந்தோசமாப்  பாத்துக்குறேன். வீட்டில என் கண் முன்னாடி இருக்காரு,  வெளில போனாலும் என்கிட்டே தான் மெசேஜ் பண்ணிப்பேசிட்டு இருக்காரு. 24 மணி நேரமும் ஒன்னாவே இருக்கோம். இதை விட ஒரு பெண்ணுக்கு வேற என்ன வேணும்?!!!" 

"என்ன இருந்தாலும் இது தப்பில்லையா" என அப்பாவியாக  நான் கேட்க,  

"என்னங்க தப்பு என் வீட்டுக்காரரைத் தானே லவ் பண்றேன். அவரும் என்னை தானே லவ் பண்றாரு" 

உங்களைத்  தான் என்றாலும் அவரது கற்பனையில் வேறு ஒரு பெண் தானே இருப்பார் என்று சொல்லத் தோன்றியது,  ஆனால் சொல்லவில்லை. அவரது சந்தோசத்தை எனது லாஜிக் கேள்வியால் சிதைக்க விரும்பவில்லை. சில சுவாரசியங்களை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது. 

"நல்லா இருக்குங்க... வாழ்த்துகள்" என்று வாழ்த்திப்  போனை வைத்துவிட்டேன்.

இந்த மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது...!!! ரத்தமும் சதையுமாய் உடன் இருக்கும் போது வராத/ஏற்படாத காதல் வெற்று எழுத்துக்களைப் பார்த்து ஏற்படுகிறது என்றால் நமது ஆழ்மனதிற்கு எதுதான் தேவை... எதை நோக்கி அது காத்திருக்கிறது... எதற்காக ஏங்குகிறது...?!!! 


தொடர்ந்துப்  பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'

கௌசல்யா. 

திங்கள், பிப்ரவரி 29

கடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32


'பணம்' இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.

குடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ  செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம்.   நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது  இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.

சொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவதுத்  தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும்  ஒரு சில நிமிடங்களில் தொலைந்துச்  சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச்  செய்கிறார்களா? அல்லது மனைவியின் வற்புறுத்தலா? அல்லது  மனைவியின் மீதான அதிக அன்பா? என தெரியவில்லை.  ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்.....

அப்படி அந்த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா ? மனைவியின் பெயரில்  கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின்  பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை.  நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா ... 

எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும்  இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள்  முன்னிலையில்  கணவன், 'என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு' என்று சொல்லும்போது...!  இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான்.  ஒன்று பலவாகி ...மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் !

எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அருமையான மனைவி  ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம்  நண்பர்  ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்  மனைவியை சூழ்ந்துக்  கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப்  பணத்தை எப்போ தர போறிங்க...? சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க? இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார்? ஆதாரம் என்ன? மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பதில் 'உங்களின்  கையெழுத்து போடப்பட்ட  பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்'

கணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும்  கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி.  வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு  மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்' என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து 'சொன்னப்படி கொடுத்துடுங்கமா' என்று சொல்லிவிட்டு கடந்துச்  சென்றே விட்டது அந்த கூட்டம்.

துக்கத்திற்கு வந்த உறவினர்களின்  கூட்டம் அகன்றதும்  கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என   தேடித் பார்த்திருக்கிறார்.  வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே  அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக  ஓரளவு கடன் தொகை அடைக்கப்பட்டது. 'நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்' என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று !!

நன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர்  கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு ?!

'பெண்' என்றால் 

இப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக  இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை  கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார்?  பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது' என்று ஆனால் 'நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி' என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது 'பெண்' எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.

பணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப்  பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக   வேண்டும்,  எனக்கு இங்கெல்லாம் சென்று  பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று  நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்து தான் ஆகவேண்டும்.

கணவன் இறந்தப்பின் அந்த  மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை... அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது... சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.

கணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால்  என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை  புருஷ லட்சணம்  என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

பிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு  போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால்  இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும்  பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.

யாருக்காக சம்பாத்தியம் 

தனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை   வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

குடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது  சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்பம். கடனுக்கு ஈடாக  மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும்  மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும்.  'பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க' என்பதே 'இன்றும்' பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.    

கணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது  என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.

சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.

தனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி, கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்...

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.


புத்தகப் பரிந்துரை : Morgan housel எழுதிய  The Psychology of Money
தமிழில்   பணம் சார் உளவியல்  எழுதியவர் Chandar subramanian. 


புதன், நவம்பர் 12

அடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ ! தாம்பத்தியம் - பாகம் 31



காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதியினர்  ஒரு நொடி நிதானித்து இந்த வாரத்தில் உங்கள் துணை உங்ககிட்ட எத்தனை முறை ஐ லவ் யூ சொன்னாங்க...கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க... அடடா ஒரு முறை கூட சொல்லலையா? ரொம்ப பாவமுங்க நீங்க ,  பரஸ்பரம் இதைச் சொல்லக் கூட  நேரம் , மூட்  இல்லாம என்ன தாம்பத்தியம் நடத்துரிங்களோ தெரியலன்னு வருத்தப்பட்டதுக்கு, அப்படி என்ன இதுல இருக்கு, நாங்க என்ன லவர்ஸ்ஆ , வயசு நாற்பது மேல ஆச்சு இன்னும் என்ன வேண்டிக்  கிடக்கு? அப்டி இப்டின்னு ஏகப்பட்ட சலிப்பு, புலம்பல்கள்.  ஆனா அதுக்கூட பரவாயில்லை  ‘ஐ லவ் யூ  சொன்னாத்தான் தெரியுமா லவ் பண்றேன்னு” என்று கேட்கும்  அப்பாவிகளுக்காகத்தான்  இந்த பதிவு !

கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்து பத்து வருஷம் ஆச்சு இனியென்ன  என்று ரொமான்ஸ் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இரவின் நடுவில் ஐந்து நிமிட தேடலுடன் முடித்துக்கொண்டு விடிந்ததும் படுக்கையுடன் காதலையும் மடித்து ஓரமாக வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பறந்துவிடுகிறார்கள். இதுதான் இன்றைய தாம்பத்தியம் ! பெரிதாக ஈர்ப்பு எதுவும் இருவரிடையே இருப்பதில்லை, அதனால்தான் நடுவில் ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் கோர்ட் படியேறத்  துணிந்துவிடுகிறார்கள். இரு  மனங்களிலும் காதல் இருந்தால் மட்டுமே தாம்பத்தியம் இறுதிவரை சந்தோசமாக கழியும். மகிழ்ச்சியுடன் கூடிய தாம்பத்தியத்தில் அவர்களின் குழந்தைகளும் நன்முறையில் வளருவார்கள். எல்லாம் சரிதான் ஆரம்ப நாட்களில் இருந்த ஈர்ப்பு, காதல், கவர்ச்சி எல்லாம் எங்கையோப்  போய்விட்டது, மறுபடி அதையெல்லாம் எப்படி கொண்டு வருவது என்பது உங்கள் முன் நிற்கும் கேள்வி என்றால் விடை ‘ஐ லவ் யூ’

ஆமாங்க ஆமா ஐ லவ் யூ என்பது ஒரு மந்திரம். எப்படிப்பட்ட உடல், உள சோர்வையும் நொடியில் மாற்றக் கூடியது. உங்கள் துணையின் மீது கடலளவு நேசம் வைத்திருப்பீர்கள் ஆனால் அதை வெளிப்படுத்தத்  தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பீர்கள். இதற்காக கஷ்டப்பட்டு கவிதைலாம் எழுதிடாதிங்க (இருக்குற கவிஞர்கள் இம்சையே தாங்கல) :-) உங்களின் ஒட்டு மொத்த அன்பையும் வெளிப்படுத்த ஒரே வழி ஐ லவ் யூ சொல்வது தான். உங்களுக்கே உங்களுக்கான தனிமையின் போது பேச்சின் நடுவில் துணையின் கைவிரல்களைப்  பற்றி மெதுவாக ஐ லவ் யூ என்று சொல்லிப் பாருங்கள் ...நொடியில் மனதுக்குள் மத்தாப்பு வெடித்து வண்ணத்துப்பூச்சி பறக்கும் (அது எப்படி மத்தாப்புக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் லாஜிக் இடிக்குதே என்றெல்லாம் அச்சு பிச்சுன்னு யோசிக்கப்படாது, பறக்கும் அவ்ளோதான்)  அடிக்கடி இப்படி பறக்க விடுங்கள்.  அப்புறம் பாருங்க,’ சாம்பார்ல உப்பு போட மறந்துப்  போச்சா, பிரெண்ட்ஸ் கூட வீக் எண்டு பார்ட்டி ஆ‘ கவலையேப்  படாதிங்க, உங்க துணைக்கு கோபமே வராது.

பிடிக்காத குணம் துணையிடம் இருக்கிறதா, அதை நினைத்து கோபம் எரிச்சல் அடையாமல் சிறு புன்னகை, கூடவே ஒரு ஐ லவ் யூ வுடன் அணுகுங்கள். அப்படியே அந்த பிடிக்காத குணத்தை நாசுக்காக வெளிப்படுத்துங்கள். இந்த அணுகுமுறையால் அதுவரை மாறவே வாய்ப்பில்லை என்பதை  ‘ஏன் மாறினால்தான் என்ன’ என்று துணையை யோசிக்கத் தூண்டும், பின் மெல்ல மெல்ல மாறவும் செய்வார்கள்.  இம்முறையில் மற்றொரு அனுகூலமும் இருக்கிறது ஐ லவ் யூ என்று சொல்லும்போது ஆட்டமேட்டிக்காக உங்கள் குரலிலும் ஒரு மென்மை வந்துவிடும், அதன்பின்  நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேனில் தோய்த்தெடுத்தவையாக வெளி வரும். அப்புறம் என்ன நீங்கள் சுட்டிக் காட்டும் குறை, குற்றம் சொல்வதை போலவே தெரியாது ஏதோ ஆலோசனைச்  சொல்வதை போலவேத்  தோன்றும். கடைசியாக  ‘சீக்கிரம் சரிபண்ணிக்கிறேன் டியர்’ என்பதில் வந்து முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இது எவ்வளவு சுலபமான முறை என்று.      

இன்னொரு மேஜிக்கும் இதில் நிகழும் இயல்பாகவே நீங்கள் கோபம் கொண்டவராகவோ அல்லது எதிர்மறை எண்ணம் கொண்டவராகவோ அல்லது தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவோ இருந்தீர்கள் என்றால் அடிக்கடி சொல்லும் ஐ லவ் யூ உங்களையும் உற்சாகமான ஆளாக மாற்றிவிடும். (முகத்தை கடுகடுன்னு வச்சுட்டு குரல்ல கடுமையை ஏத்திகிட்டு பல்ல கடிச்சிட்டு வெடுக்குனா ஐ லவ் யூ சொல்விங்க!?) சொல்ல ஆரம்பிக்கும்போதே லேசான சிரிப்பு கொஞ்சம் வெட்கம் தன்னாலே வந்து ஒட்டிக்காதா என்ன .  ஐ லவ் யு சொல்லிச் சொல்லி அது ஒரு பயிற்சியாகவே மாறி, உங்க முகமும் பிரகாசமாய் அழகாய் ஜொலிக்கும் ,  நம்புங்க !

அன்பை வெளிப்படுத்தத்  தெரியாததால் தான் பல தம்பதியர் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். மௌனமாக இருப்பது நல்லது என்று அன்பை வெளிக்காட்டாமல் இருந்தால் அன்பில்லாதவர் என்ற தோற்றம் தான் கிடைக்கும். எவ்வளவு செஞ்சாலும் அன்பா ஒரு வார்த்தை கிடையாது என்ற சலிப்பு  தான் ஏற்படும். இத்தகைய பல சலிப்புகள் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், அன்பான வார்த்தை எங்கிருந்து வருகிறதோ அங்கே பாயும் என்பதுதானே இயல்பு. மனித மனமே ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காகத்தான் போராடுகிறது. தம்பதியருக்குள் அங்கீகாரம் என்பது அன்பான வார்த்தைகளாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் கணவன் சாப்பாடு நல்லா இருக்கு’ என்பதற்கு பதில்  ‘வெகு ஜோர்டா செல்லம்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே. தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்க வார்த்தைகள் அருமையாக உதவும்.

FM ல ஒரு விளம்பரம்.  போனில் மனைவியை அழைத்து ஐ லவ் யூ என்பான் கணவன். அதற்கு மனைவி சிரித்துக் கொண்டே 'என்ன திடீர்னு, அடுத்த ரூம்ல தானே இருக்கிங்க நேர்ல வந்து சொல்லலாமே என்பாள். 'போன்ல உன் குரல் கேட்கிறப்போ அவ்ளோ அழகா இருக்கு ' என்று கணவன் சொல்ல அதன் பின் தொடரும்  போன் உரையாடல் அவ்ளோ இனிமையாக  படு ரொமாண்டிக்காக இருக்கும். இப்படிப்பட்ட சின்னச்  சின்ன பேச்சுக்கள் மூலம் தாம்பத்தியத்தை அருமையாக கொண்டுச் செல்ல முடியும். சந்தோசத்தை வெளியே எங்கும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறது என்பதை தம்பதியர் புரிந்துக் கொள்ள வேண்டும். இயந்திர உலகில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலை, வீட்டிற்கு தூங்குவதற்காக மட்டுமே வருவதைப்  போலவே இன்றைய சூழல் இருக்கிறது. வேலையின் நிமித்தம் தொலைதூரம் பிரிந்திருந்தாலும் இணைக்கும் பாலமாக தொலைபேசி இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் பேசும் பேச்சுகளின் நடுநடுவே ஐ லவ் யூ வும் போட்டுக்  கோங்க!!

ஆமா செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஐ லவ் யூ சொன்னா சரியாப்  போச்சா என்று சண்டையும் பிடிப்பாள் பெண், உடனே ஆண்கள் பின்வாங்கக்கூடாது, அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு இல்ல எப்போவும் ஒரே பேச்சுன்ற மாதிரி ஸ்டெடியா நிக்கணும். வெளியே சண்டை பிடிச்சாலும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்வாள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி இழப்பு போன்ற சூழலில் நானிருக்கிறேன் என்று தோள் சாய்த்துச்  சொல்லும் ஐ லவ் யூ வின் ஆறுதலுக்கு ஈடு வேறில்லை. துணையை தேற்றுவதை முழு மனதுடன் செய்யுங்கள். தவிக்கும் உள்ளத்திற்கு இது சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும். அன்பை நிலை நிறுத்தும்.

உங்களிடம் பிடிக்காததையும் பிடித்ததாக மாற்றும் சக்தி இந்த ஐ லவ் யூ க்கு உண்டு.

ஏதாவது பிரச்சனை திட்ட வேண்டும் என்று தோன்றினாலும் நீங்கள் சொன்ன ஐ லவ் யூ க்களை நினைத்து சே அவள்/அவர் நம் மீது அவ்ளோ காதலுடன் இருக்கும் போது எப்படி திட்ட என பின்வாங்கவே தோன்றும். 

ஆனால்  

ஐ லவ் யூ சொன்னா காரியம் சாதித்துவிடலாம் என்று மனதளவில் இல்லாமல் உதட்டளவில் பேசுபவர்களின் சாயம் ஒரு நாள் வெளுத்துவிடும். அதன் பிறகு உண்மையான அன்புடன் ஐ லவ் யூ சொன்னாலும் அது நடிப்பாகவே தெரியும், தாம்பத்தியம் சிதையும். கவனம் ! காதலும் அன்பும் தானாகப்  பெருகுவதில்லை இரு மனமும் இணையும் போதே சாத்தியமாகிறது. நீங்கள் அன்பு செலுத்தினால் பதிலுக்கு அன்பு கிடைக்கும், நீங்கள் போலியாக அன்பு காட்டினால் போலியான அன்பையே பதிலாக பெறுவீர்கள்...என்பதை உணர்ந்து மனபூர்வமாக அன்பு செலுத்துங்கள் காதலைக்  கொண்டாடுங்கள் ...உங்களின் அந்திமம் வரை !!       

98 சதவீத பெண்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்று தெரியுமா ? தங்களின் மீதுள்ள காதலை அடிக்கடி கணவன் வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இதே அவர்களின் விருப்பமும்... இவை கிடைக்காத போதே விரக்தியின் எல்லைக்கு சென்று 40% பேர் விவாகரத்து கோருகிறார்கள் 42%  பேர் வேறொரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உறவு வேறு ஆணுடன் இருக்கலாம் அல்லது தங்கள் குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்தி அதனுடன் மட்டும் நேரத்தை செலவழிக்கலாம் அல்லது ஏதோ ஒரு வேலையில்/தொழிலில்  தங்களை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆக எவ்விதமாக பார்த்தாலும் கணவனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தவிர்த்து விடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். தம்பதிகளுக்கிடையே பேசப்படும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக தாம்பத்தியத்தை கொண்டுச் செல்லுங்கள்.

வளவளனு எல்லாம் என்னால அன்பாகப் பேசமுடியாது... பேசவும் தெரியாது... என்பவர்களுக்காகவே உருவாக்கப் பட்டது தான் இந்த ஐ லவ் யூ !

சோ... காசா பணமா... சும்மா சொல்லுங்க... அடிக்கடி ஐ... லவ்... யூ... 
                                                                          
                                                    * * *
                                                            
தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'' 
கௌசல்யா 

  



செவ்வாய், ஜூலை 23

தாம்பத்தியம் - 30 'பழையக் காதலை கணவரிடம் சொல்லலாமா ?!'



ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலை கடந்துப் போவதும் சகஜம். சிலர் திருமணத்தில் இணைவர், பலர் வேறு ஒருவருடன் திருமணத்தில் இணைவர். இதில் ஒரு பெண்ணை காதலித்து வேறு பெண்ணை மணக்கும் ஆணுக்கு அவ்வளவாக பிரச்சனை இருக்காது. ஆனால் ஒருவரை காதலித்து மற்றொருவரை மணக்கும் பெண் ஆரம்பம் முதலே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறாள். காதலனை எப்படி மறக்க  என்பது ஒரு பக்கம் என்றாலும் அக்காதலை கணவனிடம் சொல்லவா  மறைக்கவா என்ற கேள்வி ஒரு பக்கம் !!

ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்தேன் என்று எல்லா ஆண்களும் தன் மனைவியரிடம் சொல்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக ஒரு ஆணின் கடந்த காலத்தை பெண் பெருந்தன்மையுடன்  கடந்துவிடுகிறாள்.(விதிவிலக்கின் சதவீதம் குறைவு) 

அதைப்  போல ஒரு பெண் தனது கடந்தகால காதலை கணவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிலைமை என்ன? சொல்லாமல் மறைத்தாலும் என்றாவது ஒரு நாள் யாரோ ஒருவரின் மூலமாக கணவனின்  காதுக்கு விஷயம் தெரியவரலாம். யார் மூலமாகவோ தெரிந்து பிரச்சனையாவதை விட நாமே சொல்லிவிடுவது பெட்டர் என்று சில பெண்கள் சொல்லிவிடுகிறார்கள் ...அவ்வாறு சொன்ன ஒரு பெண்ணின் நிலை இன்று மிக பரிதாபம். சந்தேகம் கொண்டு தேளாய் கொட்டுகிறான் கணவன், உறவினர்களிடம் போனில் பேசினாலும்  'அவன்கிட்ட தானே பேசுற, உருகி உருகி காதலிச்சிட்டு எப்படி மறக்க முடியும்?' 'அவன விட்டுட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்ட அப்போ அவனுக்கு உண்மையா இல்ல, இப்போ எனக்கு மட்டும் எப்படி உண்மையா இருக்க முடியும்?' 'காதல் எதுவரை கை வரையா இல்ல அதுக்கு மேலயா?' என்று வித விதமான கொடிய வார்த்தைகளால் தினமும் அர்ச்சனை. துன்புறுத்தல் தொடர இப்போது விவாகரத்துதான் ஒரே முடிவு என்ற நிலை.

பருவ வயதில் காதல் வந்தது தவறா ? தன் காதலை ஏற்காமல் வற்புறுத்தி இவரை திருமணம் செய்வித்த பெற்றோரின் தவறா ?  கணவனிடம் எதையும் மறைக்காமல் உண்மையாக வாழ எண்ணிய தனது தவறா ? இப்படி பல கேள்விகளுக்குள் தன்னை புதைத்துக்கொண்டிருக்கிறாள்...

இன்றைய சூழலில் பல குடும்பங்களில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இச்சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்பது ஆண் பெண்ணின் பரஸ்பர புரிதலைப்  பொறுத்து அமைகிறது.  இந்த விசயத்திற்கு  எப்படி  கவுன்சிலிங்  கொடுத்தேன்?! என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதுவரை கணவரிடம் சொல்லாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சியுடன் உள்ள பெண்கள் அல்லது கடந்த காலத்தைப்  பற்றிய குழப்பத்துடன் திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அவர்களுக்கு  இங்கே சொல்லப் போகிறவைகள் உபயோகப்படலாம். தொடர்ந்து வாசியுங்கள்... 

ஆண்களின் கடந்த காலம் எப்படி இருந்தாலும்  அட்ஜெஸ்ட் செய்து வாழ பெண்கள் பழகிக் கொள்வார்கள். இந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியே !

நம் திரைப் படங்களில் ஏற்கனவே ஒருவரால் காதலித்து கைவிடப்பட்ட கதாநாயகியை திருமணம் செய்யும் கதாநாயகன் தியாகச்சீலனை போல காட்டப்படுவான். அப்புறம் மறுமணத்திற்கு தயாராகும் கதாநாயகிக்கு குழந்தை இருக்காது, அதாவது முதல் கணவன் முதலிரவுக்கு முன்னரே இறந்துவிடுவான் அல்லது குடும்ப வாழ்விற்கு தகுதி இல்லாதவனாக இருப்பான். திரைப்படங்கள் என்றில்லை நம் சமூகமே இப்படித்தான் பெண்ணைச்  சித்தரித்து வைத்திருக்கிறது.

நம் சமூகத்தில் ஆண்கள் பலருடன்  நட்பாக இருக்கலாம், காதலிக்கலாம், சில பல திருமணங்கள் கூட செய்துக்  கொள்ளலாம். அவர்களின் மதிப்பு எவ்விதத்திலும் குறைவதில்லை. நான் ஆம்பளை என்பதில் அடங்கிவிடுகிறது அத்தனையும்...! ஆனால் பெண்கள் தாங்கள் காதலித்ததையே மறைத்தாக வேண்டும் !! காதல் வயப்பட்டவள் என்றால் அவள் இங்கே மதிப்பிழந்தவளாக  கருதப்படுகிறாள். பெண் என்பவள் ஒருவனுக்காகவே பிறந்து அவனுக்காகவே வாழ்ந்து அவனுடனே இறந்து விடவேண்டும் என்ற ஆழ்மன புதைக்குழியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை இந்த சமூகம். (அதனால்தானோ என்னவோ  முறைத்தவறிய பொருந்தாக்  காதல்கள்,  கல்யாணங்கள் பல !)

காதல்

காதல் என்பது அழகான ஒரு உணர்வு. பலரின் மனதிலும் முதல் காதல் ஒன்று என்றும் இருக்கும். அந்த காதல் உங்களை அழகாய் பார்த்துக் கொள்ளும் சோர்வுறும் நேரம் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தும். தோளில் சாய்த்து ஆறுதல் படுத்தும். நிகழ்கால குடும்பச் சுமைகளை உங்களிடம் இருந்து பகிர்ந்து எதிர்காலத்தை பற்றிய ஆவலை ஏற்படுத்தி வாழவைக்கும்! ஆனால்   கணவரிடம் கடந்தக்  காலத்தை வெளிப்படுத்தும் போது அதன் அழகு , இயல்பு ஒருவேளை குறைந்துப்போகலாம். காதலின்  உண்மையான வடிவம் சிதைந்து போகலாம். கணவனுக்கு உண்மையாக இருப்பதாக எண்ணிக் கொண்டு கடந்த காலத்தைச்  சொல்வது புத்திசாலித்தனம் அல்ல. உண்மையாக இருப்பது என்பது வேறு, உண்மையைப் போட்டு உடைப்பது என்பது வேறு. உண்மையைச்  சொல்லி அதுவரை தெளிவாக இருக்கும் கணவனின் மனதில் குழப்பத்தை குடி வைத்து விடக்கூடாது. அதன்பின் ஆயிரம் சத்தியங்கள் செய்தாலும் குழப்பத்தை வெளியேற்றுவது மிகக் கடினம்.

தீக்குளிக்கச்  சொல்லும் ராமன்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்காக நாம் சீதையாகிவிட முடியாது. கடந்தகாலத்தை கூறி... நிகழ்காலத்தை நரகமாக்கி... எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் !!

பொய் சொல்லக் கூடாதே தவிர உண்மையை மறைப்பதில் தவறில்லை. 

பொய் சொல்லக்கூடாது என்றால் காதல் அனுபவம் உண்டா என்று கணவன் கேட்கும் போது என்ன செய்வது என யோசிக்கிறீர்களா ? இந்த கேள்வி வந்தவுடனே உஷாராகி விட வேண்டியதுதான். பரந்த உள்ளம் கொண்ட ஒரு ஆண் தன் மனைவியின் கடந்த காலத்தை ஆராய விரும்ப மாட்டான், அவளாக சொல்லாதவரை !  மீறி கேட்கிறான் என்றால் இவனை போன்றவர்களிடம் பொய் சொல்வதைத்  தவிர வேறு வழியில்லை. பிறகு  வேறு யாரோ மூலமாக காதல் விவகாரம் தெரியவந்தாலும் 'ஆமாம், அதை நானே மறந்துவிட்டேன், மறந்த ஒன்றைப்  பற்றி இப்போது  ஏன் பேசணும் ...இப்போது என் சிந்தனை எல்லாம் நீங்க, குழந்தைகள் பற்றி மட்டும்தான்' என்று கூறி அத்துடன்  முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்.  

பெண்களே...

திருமணத்திற்கு முன் பல நம்மை கடந்துச்  சென்றிருக்கும். பெற்றோரின் கருத்து வேறுபாடுகள், யாரோ ஒருவரின் தவறான தொடுதல், ஏமாற்றம், தோல்வி இப்படி ஏதாவது இருக்கலாம் இதை எல்லாம் அப்படியே சொல்லிவிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிகழ்கால நிம்மதியான வாழ்க்கைக்கு ஆண், பெண் யாருடைய கடந்த (கசந்த)காலமும் தேவையில்லை. இது உங்கள் இருவருக்கும் மட்டுமேயான ஒரு புதிய வாழ்க்கை. இதில் தேவையற்ற பழையன கழிதல் வேண்டும். இந்த வாழ்க்கையில் குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் இவர்களுடன் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை பற்றிய பேச்சுக்கள் மட்டும்தான் கணவன் மனைவியரிடம் இருக்க வேண்டும். 

கண்ணைவிட்டு மறைந்த கடந்த காலம் பற்றிய கவலை இன்றி
கண்ணுக்கே தெரியாத எதிர்காலம் பற்றிய அதிக எதிர்பார்ப்பும் இன்றி
கண்முன் தெரியும் நிகழ்காலத்தில் எவ்வாறு சந்தோசமாக வாழ்வது என்பதைப்  பற்றி மட்டுமே நினையுங்கள்...பேசுங்கள்... வாழ்வு வளமாகும்... தாம்பத்தியம் மகிழ்ச்சி வெள்ளத்தில் கரைபுரண்டு ஓடட்டும்...........

இது ஆண்களுக்காக...


பெண் நம்மை போன்ற உயிரும் உணர்வும் உள்ளவள், பருவ வயதில் உண்டாகும் ஈர்ப்புக்கு ஆளாவது சகஜம் தான்' என்று ஒத்துக் கொள்ளும் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு வேண்டும்.  தன் மனைவியானவள் தன் கடந்தகால காதலை தெரிவித்தால் 'பரவாயில்லை போனதுப்  போகட்டும், உன் தவறு ஏதுமில்லை...கடந்த காலத்தை காதலனுடன் சேர்த்துத்  தூக்கிப் போட்டுவிடு... இனி உனக்கு நான்தான் எனக்கு நீ தான்' என்று பெண்ணின் மனதில் இருக்கும் குற்றவுணர்ச்சியை முதலில் போக்குங்கள். ஆண்கள் இந்த விசயத்தில் கட்டாயம் மாறித்தான் ஆகவேண்டும். உண்மையை வெளிப்படையாக சொன்ன மனைவியின் வெள்ளை மனதைப்  புரிந்து அகமகிழ்ந்து அணைத்துக் கொள்ளும் அளவு மனம் பக்குவப்பட்டாக வேண்டும். அப்போதுதான் மனைவியும் கணவனிடம் தான் எதையும் மறைக்கவில்லை என்ற ஒரு மனநிம்மதியுடன் தன்னை புரிந்துக் கொண்ட கணவனைப்  போற்றுவாள், மனதார முழுமையாக காதலிக்கத் தொடங்குவாள் அந்த நொடியில் இருந்து ...!  இனிவரும் நாட்கள் நிச்சயமாக நலமுடன் அமையும்.   

* * *

ஒரு ஆண் தனது கடந்த காலத்தை மனைவிடம் "சொல்லாமல் தவிர்ப்பதா? சொல்லி தவிப்பதா?" எப்படி என்றும் பாக்கணுமே :) அதையும் பார்த்துடுவோம் இனி வரும் பதிவில் ... 

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


திங்கள், நவம்பர் 26

'வயாகரா' வில் அப்படி என்ன இருக்கிறது ?!! தாம்பத்தியம் பாகம் - 29


தாம்பத்தியம்  தொடரில் பலவித பிரச்சனைகளைப்  பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிகத்  தேவையானதும் கூட ! வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். அதன் மொத்தம் உள்ளடக்கம் இது...

"எனது கணவரின் வயது 46, மது,புகை  பழக்கம் உள்ளவர். 6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க 
முடிவதில்லை" என தொடர்ந்தவர் "இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா? " அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?"  என கேட்டிருந்தார்.

அவருக்கு சொன்ன பதில் பிறருக்கும் தேவைப்படலாம் என்பதால் கொஞ்சம் விரிவாக இங்கே பகிர்கிறேன். படித்துக் கருத்துக்களை கூறுங்கள்.

இன்பம்  எங்கே...?


இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதைப்  போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக்கொண்டால் போதும் என்பதே சிலரது
முடிவு...!!

ஆனால் உடல்  தயார் நிலையில் இருந்தால்  மட்டும், அங்கே உறவு நடந்துவிடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும். 


இப்போதெல்லாம்  ஆண்கள் 30-40 வயதிலேயே ஆர்வம் குன்றிவிடுகிறார்கள். ஆர்வம் என்று கூறுவதை விட இயலாமை என்பதே சரி. இதற்கு மன சார்ந்த உடல் ரீதியிலான காரணங்கள் இருக்கலாம். அவை என்ன என்று கவனித்து சரி செய்ய வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றை நாடுவது சரியல்ல. செயற்கை தூண்டுதல்கள் அந்த நேரம் சுவைக்கலாம் தொடர்ந்து அவை எடுத்துக்கொள்ளப்பட்டால் சாதாரண அணைப்பு கூட, அந்த மருந்து இல்லாமல் நடக்காது  என்றாகிவிட்டால்...?!! யோசியுங்கள்!

உறுப்பு  செயல்படும் விதம்

ஆணுக்கு உடலுறவு பற்றிய எண்ணமோ, செயலோத்  தேவைப்படும் போது மட்டும் விரிந்து நீளக் கூடிய தன்மை கொண்டதாக உறுப்பின் அமைப்பு  இருக்கிறது. விரியவோ சுருங்கவோ கூடிய இத்தன்மையை மூளையில்  உள்ள  'சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம்' என்ற பகுதி பார்த்துக் கொள்ளும் . இரண்டு விதமான நரம்பு அமைப்புகளில் ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டாலும் பிரச்சனைதான்.

பெண்ணை நினைத்ததும்  இந்த நரம்பு மண்டலம் உஷாராகி நியுரோடிரான்ஸ் மீட்டர்களை வெளியிடும், அடுத்து நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல் கோலைன், டோப்பாமைன் போன்றவை சுரக்க ஆரம்பிக்கின்றன. இவை ஆணுருப்புக்குள் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களைப்  பெரிதாக்குகின்றன. அதிகமான ரத்தம் அங்கேச்  சென்று அங்கிருக்கும் பஞ்சு போன்ற அறைகளை ரத்தத்தால் நிரப்புகின்றன. அறைகள் பெரிதானதும் ரத்தக்குழாய்கள் மூடிவிடுவதால் ரத்தம் தேங்கி உறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது.

உடலுறவு  நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குக்  கொண்டு வர மூளையின் இரண்டாவது நரம்பு மண்டலம் உடனே செயல்படத்  தொடங்குகிறது. இறுக்கத்தை குறைத்து விரிந்திருக்கும் தன்மையை தடுத்துவிடும்.

வயாகராவின் வேலை 

வயாகரா என்பது சில்டினாபில் என்கிற ஒரு கெமிக்கல். நைட்ரிக் ஆக்சைடு செய்யக்கூடிய வேலையை இதுவும் செய்யும்.  ரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிக ரத்தத்தை செலுத்துவதும் அப்படியே இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையைச்  செயலற்றதாக ஆக்குவதும் இதன் வேலை, அதாவது விறைப்பு தன்மையை! இதனால் உறுப்பு நீண்ட நேரம் விரிந்தே இருக்கும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை கொஞ்ச நேரம் தடுத்து வைக்கிறது வயாகரா.

ஆனால்  இந்த நிலைக்கு வருவதற்கு முன் மனதால் செக்சை நினைக்க வேண்டும். மனம் ஒத்துழைக்காமல் வயாகராவை மட்டும் போட்டு கொண்டால் எந்தவித பிரயோசனமும் இல்லை.

ஆரோக்கியமான மனதும் உடம்பும் அமைய பெற்றவர்களுக்கு எந்த வித செயற்கையான தூண்டுதலும் தேவையில்லை. அதே சமயம் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறை மனதிலா உடலிலா என்பது தெரியாமல் வயாகரா போட்டுக்  கொண்டால் சரியாகி விடும் என்பது முற்றிலும் தவறு.

இந்த  பெண்ணின் கணவரைப்  பொருத்தவரை அவரது புகை மது பழக்கவழக்கங்கள் அவருக்கு தாம்பத்திய ஆர்வத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் உறுப்பு எழுச்சியையும் முடக்கிப்  போட்டு விட்டது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். மற்றொன்று சர்க்கரை நோய், இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும். எனவே குடி, புகை சர்க்கரை நோய் இவற்றின் பாதிப்பை குறைப்பதில் அக்கறை எடுக்க வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றையும்,  இத்தனை நாளில் குணப்படுத்துகிறோம் என்ற விளம்பரங்கள் பின்னேயும் செல்வதும்  சரியல்ல!

பெண்களுக்கும் வயாகரா?!

இந்த வயாகரா பெண்களுக்காகவும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது...!! ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனி பிளிபான்செரின் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. உறவில் முழு திருப்தியை அளிக்க வல்லது என்றும் இதனை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. நேரடியாக மூளையை சென்றடைந்து  தேவையான கெமிக்கல்களை மூளையில் அதிக அளவில் சுரக்க வைத்து ஆர்வத்தை தூண்டுகிறது.

ஆனால் பெண்கள் இது போன்றவற்றை உபயோகிக்கும் போது வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆண்,பெண் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை, அனுமதி இன்றி எதையும் உட்கொள்வதை தவிர்தல் நலம்.

வயாகரா தீர்வு இல்லை?

தாம்பத்திய உறவு பற்றிய விருப்பம், ஆர்வம்  இல்லாதவர்களுக்கு, 'சர்க்கரை நோய் இருக்கிறதா' என சோதனை செய்வது முக்கியம். இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சைப்  பெற வேண்டும். சர்க்கரை நோயை மருந்து மாத்திரையினால் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டத்தை இந்நோய் இயங்கவிடாமல் தடுத்துவிடும் அல்லது பாதிக்கும். இந்நிலையில் எவ்வளவு தான் செக்ஸ் தூண்டுதலை வெளியே இருந்து ஏற்படுத்தினாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. இத்தகையவர்களுக்கு வயாகரா தீர்வு இல்லை. (ஒருவேளை ஈடுபட்டாலும் முழுமைப்  பெறாது.) ஆணிடம் இருந்து விந்தணுக்கள் வெளியேறுவதை போல் தோன்றினாலும் பெண்ணை அடைவதற்கு பதிலாக அவர்களின் சிறுநீர்பையினுள் சென்று விடும் !

பொதுவாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை, குடி பழக்கம் இருப்பவர்களின் ரத்த குழாய்கள்  அதிக அளவு சுருங்கும். அதோடு ஆண் உறுப்புக்கு செல்லும் ரத்த குழாய்களும் சுருங்கும் என்பதால் அங்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கும். இதனால் எழுச்சியின்மை ஏற்படும். ஆர்வம் குறையும்.

மேலும் 

இம்மாத்திரையை உடலுறவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். அந்த நேரத்திற்குள்ளாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை எட்டிவிடும். கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுடன் உட்கொள்ளப்பட்டால் ரத்தத்தில் உறிஞ்சப்படுவது தாமதமாகும். முக்கியமாக இதய நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளோடு(ISMN /ISDN) வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தாகலாம். 

சுலபமான வழி  - சூரிய குளியல் 

பாலியல் ஆர்வத்தைத்  தூண்ட ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன்  உதவுகிறது. இந்த ஹார்மோன்  சுரக்க   வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் எடுத்தாலே போதும் என்று ஆஸ்திரியா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்போது டெஸ்டோ டெரோன் 69 சதவீதம் அதிகரிக்கிறது. (நம்ம ஊர் சூரிய நமஸ்காரம் !!)
   
இறுதியாக ஒரு முக்கிய தகவல்

உடல் ரீதியினாலான குறைபாடுகள்   எதற்கும் சரியாக சிகிச்சை பெறாமலோ மது, புகை பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ நாளடைவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயப்பாதிப்பு ஏற்படும்.  100  சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் ஆண்மைகுறைவுக்கு  ஆளாகிறார்கள். இதில் 40 % பேர் மாரடைப்புக்குள்ளாகிறார்கள். இத்தகைய ஆபத்தை முதலில்  சரிப்படுத்த முயலவேண்டும். அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். இதெல்லாம் முறையான பழக்கத்திற்கு வந்த பிறகே உடல் தயாராகும். அதனுடன் மனமும்...!!

மனது நினைக்க நினைக்க அந்நினைவுகள் மூளையின் நரம்பு மண்டலத்தை மெல்ல  மீட்ட, அங்கே பிறக்கும் இசை அதிர்வுகள், உடலெங்கும் பரவி வியாபித்து ஆனந்திக்க வைக்கும்...!! அப்புறம் என்ன உற்சாக அலைகள் கரைகளை வந்து முத்தமிட, நிலவின் மடியில், இரவின்  அமைதியில், சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுங்கள்...!

இனியும் வயாகரா போன்றவை பற்றிய சிந்தனை வேண்டுமா!? தவிர்த்திடுங்களேன் !!


பின் குறிப்பு :

தாம்பத்தியம் தொடரைப்  படிக்கும் வாசகர்கள் என்னிடம் கேட்கக்கூடிய சந்தேகங்களை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.  பல சந்தேகங்களை டாக்டரிடம் தான் கேட்கவேண்டும், என்னிடம் அல்ல.  தவிர அந்தரங்கம் பற்றிய ஆழமான(?) பல கேள்விகள்  என்னை பதில் சொல்ல இயலாத படி செய்கின்றன. உண்மையில், பதில் தெரியாமல் கேட்கிறார்களா அல்லது எனக்கு தெரியுமா என சோதிக்கிறார்களா தெரியவில்லை. :-)

ஒருவர் கேட்டிருந்தார், 'பெண்ணிற்கு உச்சம் ஏற்பட்டதை ஒரு ஆணால்  எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்?' என்று ...அதற்கு நான் சொன்னேன், ஒரு கணவனால் மனைவியின் அத்தகைய நிலையை புரிந்துக்கொள்ளமுடியும் என்று... மறுபடி அவர் பதில் சொல்கிறார், மேடம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று !! கல்யாணம் ஆகாதவருக்கு இந்த கேள்வி எதற்கு??!!

கணவன்  மனைவியின்  கருத்துவேறுபாடு பிரச்சனைகளால்  பாதிக்கப்படும் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த தொடரை எழுதி வருகிறேன். அனாவசியமான  கேள்விகள்  கேட்பதைத் தயவுசெய்து தவிருங்கள். மேலும் அத்தகைய விவரங்கள்தான் தேவையென்றால் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன, தேடிக்கொள்ளலாமே...! ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்ல முடியாததால் பொதுவில் இங்கே கூறுகிறேன். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'...!!

* * * * * 


படங்கள்- கூகுள் 

வெள்ளி, ஜூன் 1

விவாதம் விவாகரத்தில் முடியும்...?! தாம்பத்தியம் - பாகம் 28

அன்பு நட்புகளே !

விடுமுறைக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்...தாம்பத்தியம் தொடரின் இந்த பாகத்தில் தம்பதிகளின் சாதாரண விவாதங்கள் கூட பெரியப்  பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்த்த எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு நிறை குறைகளை சொல்லுங்கள்...தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

* * *

கணவன் மனைவிக்குள் எந்த  பிரச்சனை என்றாலும் அது வீட்டை விட்டு வெளியேப்  போகக்கூடாது...'நாலு சுவத்துக்குள்ளத்தான் இருக்கணும் துன்பங்களையும் வேதனைகளையும் மனதுக்குள் போட்டுப்  புதைச்சுக்கோ' என்று பெண்ணுக்கும், 'எல்லாத்தையும் மென்னு முழுங்க பழகிக்கோ' என்று ஆணுக்கும் அறிவுரைச்  சொன்ன காலங்கள் மலையேறிப்  போய் லேட்டஸ்டா "சரிப்பட்டு வரலைனா டைவர்ஸ் பண்ணிடு" என்ற அட்வைஸ்கள் அதிகம் கேட்கின்றன.
 

விவாகரத்துக்கு இப்போதெல்லாம் நீண்ட நெடிய காரணங்கள் தேவையில்லை...
 
 ஒரு சில வார்த்தைகள் போதும்...!!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிக மிக முக்கியம். பேச்சு பரிமாற்றங்கள் சரியான விதத்தில் அமையாவிட்டால் பிரிவிற்கு இதுவே அடிப்படை காரணமாகி விடுகிறது. வெறுப்பாக, எரிச்சலுடன் எடுத்தெறிந்து பேசுவது, துணை பேசுவதில் இருக்கும் அர்த்தத்தை சரியாகப்  புரிந்துக்கொள்ளாமல் பேசுவது, ஈகோவைக்  காயப்படுத்துவது மாதிரி பேசுவது போன்றவை. கையாளுவதில் கவனம் இல்லையென்றால் ஆபத்தில் கொண்டுப்  போய் விட்டுவிடும். இன்றைய அவசர யுகத்தில் தம்பதியினர் பரிமாறிக்  கொள்ளும் உரையாடல்களும் sms அளவில் சுருங்கி விட்டன. பேசப்படுவது ஒரு சில வார்த்தைகள் என்கிற நிலையில் அதையும் கவனமின்றி உதிர்த்துவிட்டால் தொலைந்தது இல்லறம் !!

ஒருவரின் குணம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது பேச்சுக்கள் தானே?

உரையாடல்களின் போது...

=>  தம்பதிகள் என்று இல்லை. காதலர்கள் இருவருக்கான உரையாடலில் ஒருவர் மற்றொருவரிடம் "ஏன் டல்லா இருக்கிற" என விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இவர் காரணத்தை சொல்லி விட்டால் ' ஓ ! அப்படியா, சரி சரி கவலைப்படாத, சரியாய் போய்டும்' என்று ஆறுதல் கூறுவதுடன் மேட்டர் ஓவர். மாறாக 'ஒண்ணுமில்ல' என்று பதில் வந்தால் உடனே உஷாராகிவிட வேண்டும். ஆமாம் இனிதான் வார்த்தையை கவனமா கையாளனும் !! ஒண்ணுமில்ல என்றால், "ஏதோ இருக்கிறது அதை என்னவென்றுக்  கேட்கமாட்டியா, மனதில் இருப்பதை உன்னிடம் கொட்டி விட்டால் நான் சரியாகி விடுவேன்" என்ற ஏக்கம் ஆவலுடன் ஒளிந்திருப்பதை புரிந்துக் கொண்டாக வேண்டும்.  (இந்த 'ஒண்ணுமில்ல' வார்த்தையை சொல்வது அதிகமாக  பெண்கள் )

இந்த நிலைமை புரியாம ஏதோ பர்சனல் பிராப்ளம் போலனு விட்டுவிட்டால்  போச்சு. கதை கந்தலாகிவிடும். அந்த ஏக்கம் பொறுத்துப்  பொறுத்துப்  பார்த்து முடிவில் விரக்தியில் போய் விழுந்து விடும். இதனால் பெரிய சிக்கல்கள் அப்போது உடனடியாக வர வாய்ப்பு இல்லை என்றாலும் பல விரக்திகள் ஒன்று சேர்ந்தால்...?! யோசிங்க...!

=> உரையாடல் ஒரு கட்டத்தில் சண்டையின் தொடக்கம் போல தெரிஞ்சா  எதுக்கு வம்புனு   'சரி உன் இஷ்டம்' என்று கூறி ஒதுங்கி விடுவது  அல்லது ஒன்றும் பேசாமல் மௌனமாகி விடுவது. இது இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். இது துணையின் மீதான அக்கறையின்மையை காட்டும்.  அமைதியாகப்   போய்விட்டால் அவர்களை மதிப்பது போலாகும் என்பது எல்லாம் பழைய கதை...இப்போது அப்படியே தலைகீழ், சைலென்ட்டாக  இருந்தால்  ' மதிக்கவில்லை' என்று பொருள்.

=> சிலரது வீடுகளில் பேச்சு சூடுப் பிடிக்கத் தொடங்கியதும் உடனே சட்டையை மாட்டிகொண்டு வெளியே நடையைக்   கட்டிவிடுவார்கள் ஆண்கள்...

ரிலாக்ஸ் பண்ண, சிக்கலைத்  தவிர்க்க வெளியேறுவது  உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால் அங்கே வீட்டில்  மனதிற்குள்  புழுங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மனநிலை !? அதுவும் தவிர எவ்வளவு நேரம் தான் பிரச்னைக்கு பயந்து வெளியில் இருப்பீர்கள், மறுபடி வீட்டிற்குள் வந்து தானே ஆக வேண்டும் அப்போது எவ்வாறு மனைவியின்  முகத்தை எதிர்கொள்வீர்கள்...அசட்டுச் சிரிப்புடனா? முறைத்துக்கொண்டா?  இரண்டையும் அலட்சியப்படுத்தி விட்டு தன்னை(மட்டும்) பற்றிய  சிந்தனைக்குள் விழுந்துக்  கொண்டிருப்பாள் மனைவி.

'நான் தனியாத்  தவிச்சிப்  புலம்பிட்டு இருக்கிறப்போ நீ கண்டுக்காம வெளில போறியா, அப்படியே இரு, எனக்கும் ஒரு காலம் வரும்' என்பதாக இருந்து விட்டால் அதன் பின் அக்கணவனின் நிலை !!? சண்டையிட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மனைவி , பிரச்சனை தான் முடிந்து விட்டதே என சகஜமான நிலையில் இருக்கும் கணவன்!! வசமாக ஒரு சந்தர்ப்பத்தில் அகப்பட்டுக்கொண்டால் என்னாகும் கணவன் நிலைமை...யோசிங்க...!

=> சரிக்கு சரி மல்லு கட்டும் சண்டை கோழிகள் சிலர். சின்னச் சண்டை வந்தாலும் போதும் எடுத்ததுமே உச்சஸ்தாயில் கத்துவது...'வெட்டுவேன், குத்துவேன், நீ ஒழிஞ்சாத் தான் நிம்மதி...' இந்த ரேஞ்சில் போகும் இவர்களது உரையாடல்...அடுத்த சில மணி நேரம்/சில நாள் கழித்து ஒன்றுமே நடக்காத மாதிரி சகஜமாகி விடுவார்கள். இரண்டு நிலையில் எது உண்மை... சண்டை போட்டு கத்தியது உண்மை என்றால் அடுத்துள்ள சமாதானம்? விட்டுக் கொடுத்தலா? விட்டுக்கொடுத்தல் என்றால் அது ஏன் சண்டையின் ஆரம்பத்தில் இல்லை. தெருச்சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாச்சு, அப்புறம் விட்டுக் கொடுக்கிறாங்களாம்...என்ன லாஜிக் இது ?

சண்டையின் போது ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் ! அதன் விளைவு , எங்கேப்  போய் முடியும் யோசிங்க...!

பழி வாங்கும் மனோபாவம்

நடந்த பிரச்சனையில் ஒருவர் வென்றதைப்  போன்று இருந்தால், அதாவது ஒருவரின் பேச்சுடன் அப்பேச்சு முடிவுக்கு(?) வந்தது என்றால் தனக்கு அடுத்து எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என பழி வாங்க காத்திருக்கும் தம்பதிகள் உண்டு. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பழிவாங்குவது என்பது அடுத்ததாக எவ்வாறு எங்கே செல்லும் என்று சொல்ல முடியாது...தற்போது இது போன்ற மனநிலை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை !!

ஈகோ !
(நான் என்னும் முனைப்பு)

"நம்மை பற்றிய நினைப்பும் உணர்வுகளும் தலைத்தூக்கும் வரையில் தான் நமது செயல் ஒழுங்காக இருக்கும்...வாழ்க்கையும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். ஆனால் ஈகோவானது மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு உயர்வு மனப்பான்மையாக மாறுவது தான் தவறு. இது தான் தன்னுணர்வு அகம்பாவமாக மாறும்  நிலை" என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்

தம்பதிக்குள் நீயா நானா என்கிற ஈகோவுக்கு இடமே தரக்கூடாது அன்பான உறவை ஈகோ கொத்திக்  கிழித்து விடும். பெரும்பாலும் இது தலைத்  தூக்கினால் எல்லாவற்றுக்கும் விவாதம் தொடங்கி விடும். இருவரில் ஒருவர் வாய் மூடும் வரை விவாதம்  நடந்துக்  கொண்டே இருக்கும். அதே சமயம் தற்காலிகமாக துணையின் அடக்கி வைக்கப் படும் உணர்ச்சிகள் எந்த நேரத்திலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கலாம்...

பெண்கள்

பொதுவாகச்  சொல்வாங்க ஆண்களுக்குதான் 'தான்' என்கிற ஈகோ அதிகம் இருக்கும் என்று... அப்படியல்ல பெண்களிடமும் உண்டு.ஆணின் ஈகோ பெண்ணை மட்டும் தாக்கும், ஆனால் பெண்களின் ஈகோ மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். உன்னைவிட 'நான் எதில் குறைந்துவிட்டேன் நானும் உன் அளவு படித்திருக்கிறேன், வேலை பார்க்கிறேன் ' இந்த எண்ணம் விவாதத்தின் போது விஸ்வரூபம் எடுத்து ஈகோ பூதாகரமாக வெளிப் படுகிறது.


ஆண்களை பொருத்தவரை அவர்கள் விவாதிப்பதை  அவ்வளவாக விரும்புவதில்லை. சில வார்த்தைகளை வேகமாக உச்சரித்து விட்டு அமைதியாகி விடுகிறார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் அத்தனைக்கும் தனித் தனி அர்த்தம் கண்டுப்பிடித்து வாதத்தை நீட்டித்துக் கொண்டேச்  செல்வார்கள்...வாதத்திற்கு சளைத்தவர்களில்லை பெண்கள் ! இத்தகைய பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை...இதைப்  புரிந்துகொண்டு  பெண்கள் குடும்பத்தைக்  கொண்டுச்  செல்லவேண்டும்....விவாதத்தில்  ஜெயிப்பது  முக்கியமில்லை... உறவில் ஜெயிப்பதே முக்கியம் ...!!

ச்சீ போடா,  முட்டாள், இடியட், ராஸ்கல் இதை தனிமையான நேரத்தில் சொன்னால்  இனிமையாக   இருக்கும், அதையே சண்டை நேரத்தில் கோபமாகச்  சொன்னால்... ?!!

பல விவாதங்கள் விவாகரத்தில் போய்த்தான் முடிந்திருக்கின்றன என்பதை மனதில் வைத்துக்  கொண்டு, பேச்சில் மிகுந்த கவனம் தேவை...'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வாங்க...எப்படிப்பட்டச்  சொல்லை வெளிப்படுத்த வேண்டும் என்பது உங்க சாய்ஸ் !!

பின் குறிப்பு-

இப்படியெல்லாம்  கூட நடந்துக்  கொள்வார்களா என அவரவர் வீட்டுச்  சூழலை ஒற்றுமைப்படுத்தி வினா எழுகிறதா ? பிரச்னையை ஏந்திக் கொண்டு என்னிடம் வந்தவர்களை வைத்துத்தான் தாம்பத்தியம் பதிவு எழுதுகிறேன்...தொடரைத்  தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இது தெரியும். தெரியாதவர்களுக்காக இந்த சிறு  விளக்கம். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...உங்களின் மனதோடு  மட்டும்...

பிரியங்களுடன்
கௌசல்யா

புதன், ஏப்ரல் 11

'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...?! தாம்பத்தியம் - 27

முன் குறிப்பு

இதற்கு முந்தைய பாகம் வெளிவந்து 6 மாதம் ஆகிவிட்டது...!! பிற பதிவுகளை விட தாம்பத்தியம் தொடருக்கு அதிக காலம் எடுக்கிறேன் என்றாலும் இனி தொடர்ந்து எழுதுகிறேன். நம்புங்க !! 'ஏன் தாமதம்' என கேட்டு வரும் மெயில்கள் இனி குறையணும்...திட்டு வாங்கி முடியல :) உங்களின் பொறுமைக்கு என் நன்றிகள் ! இந்த பதிவைப்  படித்து கருத்துக்களைக்  கூறுங்கள்...அதன் மூலம் இன்னொரு பதிவுக்கு மேட்டர் கிடைக்கட்டும்... :)

                                                         ************


ஏன் அவசியம் ?!

'செக்ஸ்' பற்றி வெளிப்படையாகப்  பேசுவதும், விவாதிப்பதும் மிகத்  தவறான ஒன்றாகப்  பார்க்கபடுகிறது,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான் !! கஜூராகோ கோவில் சிற்பங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம்தான், இதனை குழந்தைப்  பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்துச்  சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!

உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே ?! மன இறுக்கம் தளர்ந்தாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம்,சந்தோசம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறுச்  செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !! இந்த சப்ஜெக்ட் இந்த பதிவுக்கு தேவையில்லை என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும் :)

பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... 

"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்தேப் போகும்"

உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாகப்  பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சிப்  பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!

ஆனால் இதைப்  பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயத்துக்காக சலிப்பாகச்  சென்றுக்  கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.

பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்துக்  கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!

பெண்களின் மனோநிலை

உடலுறவைப்  பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்துப்  பேசிக்  குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்துப்  பேசினால் அப்பெண் அனுபவப்பட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். 

இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதைத்  தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும் !)

எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.

ஆண்களின் மனநிலை 




உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு.அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனைக்  கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்துக்  கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...! 

பத்து வருடங்கள் கழிந்தப்  பின் 

தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.

உதாரணமாக 

திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி...ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதைப்  போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலைத்  தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...

இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விசயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிகப்  பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கியமா ? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்  தொடர்ந்துப்  பார்க்கலாம்.....

பெண்களின் விருப்பமின்மை ?! 

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டுப்  போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துக் கொள்ளலாம்...

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்பக்  கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணியச்  செய்து உறவுக்  கொள்ளச் சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியேத்  தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்றுச்  சொல்லத்  தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

கணவனின் புரிதலின்மை 

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும், உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்கக்  கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவைப்  பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாகக்  குறைந்து போகும் என்பதைத்  தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிடக்  கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 

ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவேச்  செய்வாள்...அப்படிப்பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்றுப்  புரிந்துக்  கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்துக்  கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

                                                                 * * * * *

படங்கள் - நன்றி கூகுள்

திங்கள், செப்டம்பர் 12

'தலையணை மந்திரம்' எனும் கவர்ச்சி நல்லுணர்வுகளின் வெளிப்பாடா?! தாம்பத்தியம் - 26

முன்குறிப்பு :
எனது கடந்த தாம்பத்தியம் தொடரில் சகோ.திரு.அப்பாதுரை அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார்...

//தலையணை மந்திரம் என்ற ஜாடிக்குள் இருக்கும் கவர்ச்சி - நல்லுணர்வுகளின் தீவிர வெளிப்பாடு தானே? தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நிலைக்கும் சக்தி இருந்தால் திருமண உறவுகள் செழிக்குமோ?//

எதையும் நேர்மறையாகப் பார்க்கும் அவரது பண்பிற்கு வணக்கங்கள்.

தலையணை மந்திரம் - அவசியம் தேவை

தலையணை மந்திரம் என்பதின் பின்னால் இருக்கும் கவர்ச்சி திருமண உறவைக்  கெடாமல் வைத்திருக்கும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை. ஒரு மனைவி, கணவனை வசீகரித்து மகிழ கூடிய இடம் தனியறை. இந்த இடத்தில் ஒரு கணவன் தன் மனைவியின் அன்பு பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் போய்விடுவான் என்பது இயல்பு. ஆனால் இந்நிலை அந்நேரம் மட்டுமா அல்லது விடிந்த பின்னருமா என்பது அவரவர் மனநிலைகளைப்  பொறுத்தது. 

மனைவி கணவனை கவர்ச்சியின் மூலம் மட்டுமே தன்னைச்  சுற்றி வரும்படி செய்வது என்பது மிக நல்லதா இல்லையா என்பதே இந்த பதிவில் என் முன் நிற்கும் கேள்வி ? இந்த ஈர்ப்பு சரியென்றால் அவர்களின் வாழ்க்கையில் எடுக்கப்படும் எந்த தீர்மானமும் ஒருதலைபட்சமாகப்  போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது...அப்படி இல்ல, ஒருவரை ஒருவர் கலந்துதான் முடிவு பண்றோம் என்று சொன்னாலும் இறுதி முடிவு சந்தேகமே இல்லாமல் மனைவியுடையதாகவே இருக்கும். ஒருவேளை மனைவியின் முடிவு தவறான தீர்வாக போய்விட்டால்...!?

முந்தைய தலைமுறையில் 

முழுமையான தாம்பத்தியதிற்கு தம்பதிகளின் அன்னியோனியம் மிக முக்கியம், தலையணை மந்திரத்துக்கு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சக்தி இருந்திருக்கலாம், ஒரு காலத்தில்...!

அன்றைய பெரியோர்கள் திருமணம் முடிந்தப்  பெண்களுக்குச்  சிலவற்றை அறிவுறுத்தினார்கள்...ஆண்கள் கவனம் வேறு பக்கம் சிதறி விடக்  கூடாது என்பதற்காக சில வார்த்தைகளைச்  சொல்லி வைத்தார்கள். நன்கு கவனிக்கவும்...! வார்த்தைகள் தான் 'தலையணை மந்திரங்கள்' இல்லை. இவை காலப்  போக்கில் ஆணை வசியப்படுத்தும் ஒரு கவர்ச்சி ஆயுதமாக வலுப்பெற்று விட்டன...!!

'அக்கம்பக்கம் திரும்ப விட்டுடாத, உன்னையேச்  சுத்தி வர்ற மாதிரிப்  பக்குவமா நடந்துக்க' என்று சொன்னதின் பின்னால் சில அந்தரங்க சூட்சமங்கள் இருக்கிறது. "ஆண்களின் உடம்பில் வயதாகி ஆயுள் முடியும் வரை கூட விந்து அணுக்கள் சுரக்கும் , எனவே அதன் உந்துதலால் அவர்கள் பெண்ணுடன் இறுதிவரை உறவுக்  கொள்ளவே விரும்புவார்கள். இதற்கு மனைவி நீ சரியாய் ஒத்துழைக்கலைனா வீட்டுக்காரன் அடுத்த பக்கம் திரும்பிவிடுவான்...அதனால உன் அழகால, பேச்சால, வருடுதலால், தொடுதலால், இன்னும் பிறவற்றால் கணவனைப்  பார்த்துக்கோ ,கைக்குள்ள போட்டு வச்சுக்க" என்பது தான் அவர்கள் சொன்னதின் உட்கருத்து.

ஆனால் இன்று அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. இன்றைய குடும்பங்கள் இருக்கின்ற சூழல்,பொருளாதாரத்தை நோக்கிய ஓட்டம், சுயநலம் மிகுந்த மனிதர்கள், கவனத்தைத்  திசைத்  திருப்பக்கூடிய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு, தொலைத்  தொடர்பு வசதிகள், பெருகிவிட்ட ஆடம்பர மோகம், இவற்றின்  பிடியில் சிக்கிக்கொண்ட தம்பதிகள், தங்களுக்கு என்று செலவிடும் நேரம் மிக மிகக்  குறைந்துவிட்டது.அவர்களின் அந்தரங்கமும் அள்ளித்  தெளித்த கோலம் போன்றே ஆகிவிட்டது !

அதனால் இன்றையக்  காலகட்டத்திற்கு அந்த அறிவுரை, மந்திரம் எல்லாம் உதவாது. இத்தகைய மந்திரத்துக்கு (கவர்ச்சிக்கு) மயங்கும் ஆண்கள் இருந்துவிட்டால் நாட்டில் கள்ள உறவுகள், விவாகரத்துக்கள் அதிகரித்து இருக்காதே ?!! இது போன்றவை வீட்டிற்கு வெளியே  மிக தாராளமாக கிடைக்கக்கூடிய காலம் இது. எனவே உடல் கவர்ச்சி மட்டும் போதாது என்பதே எனது உறுதியான முடிவு.

* தலையணை(?) தேவையின்றி போனில் கூட மந்திரம் போட்டு மாங்காய் பறித்துவிடும் காலமிது.

'அகத்தில் அன்பில்லாத பெண்டிரை மனதாலும் தீண்டேன்' என ஆண்கள் உணரும்வரை அவர்களுக்கு ஏற்றபடி இன்றைய பெண்கள் மாறித்தான் ஆகவேண்டும்...!!



இப்போதைய தலையணை மந்திரம்,

* கணவனின் குடும்பத்தினரை கணவனை விட்டு தூரத்  தள்ளி வைக்க, முக்கியமாக கணவனின் பெற்றோர்களை...

* தன் தனிப்பட்ட விருப்பத்தை, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள

* தன் தவறுகளைக்  கண்டுக்கொள்ளாமல் இருக்க

* தன் சுயத்தைத்  திருப்திப்படுத்த

* பெருமைக்காக

இவை போன்றவைகளுக்காகப்  பயன்படுகிறது. குடும்பத்தின் நல்வாழ்வுக்காக என்பது இப்போது மிக குறைவு !

ஒரு உதாரணம் 

சென்னையில் இருக்கும் மகளுக்கு இங்கிருக்கும் தாய் ஒருவர் செல்பேசினார் , அதுவும் பொது இடத்தில் பஸ்ஸில் !!

என் பதிவுக்கு பாய்ண்ட்ஸ் தேவைப்படுவதால் இப்போதெல்லாம் பொது  இடத்தில் என் காதுகள் கூர்மையாகி விடுகிறது .(அதாங்க ஒட்டு கேட்கிறது)

///"என்னடி எங்க அது (மருமகனைத் தான் !) எங்க ஊர் சுத்தப்  போயாச்சா  ? இன்னைக்கு லீவ் தானே கூட மாட ஒத்தாசைக்கு வச்சுக்கலையா நீ தனியாக்  கிடந்துக்  கஷ்டபடுற(?)"

''சரி சரி எப்போ கடைக்குப்  போன, அவருக்குப்  பிடிச்ச புடவையா ? ஏண்டி இப்படி இருக்கிற?.....அது உனக்கு பிடிச்சாலுமேப்  பிடிக்கலச்  சொல்லு.....அப்பத்தான் எல்லாம் உன் விருப்பப்படி என்று ஆகும்.....ஓ ! நாத்தனார் பையன் வந்திருக்கானா .....அதுதான் கேட்கிறதுக்கு எல்லாம் ம் கொட்ற? (மகளை பேச விட்டாத்தான?) அவன் எதுக்கு இங்கே வரான், இன்டர்வியூவா ஏதோ ஒரு சாக்கு கிளம்பி வந்துறாங்க.....உன் வீட்ல என்ன கொட்டியாக்  கிடக்கு? பரவாயில்லைன்னு சமாளிக்காத.....எல்லாம் உன் நல்லதுக்கு(?) தான் சொல்றேன்"

"இன்னைக்கு இன்டர்வியூ, நாளைக்கு வேலைக் கிடைச்சு, 'வெளிலத்  தங்கினா செலவு ஆகும் இங்கேயே இருக்கட்டும்' னு இவர் சொல்லப்  போறார்.....அதுக்கு முன்னாடி உஷாரா இருந்துக்கோ.....இவங்க எல்லோரையும் பத்து அடி தள்ளி வை, சொல்றதுக்  கேட்குதா முந்தானையில முடிஞ்சி வச்சுக்கோ...இல்லை உன்னை தெருவுக்குக்  கொண்டு வந்துவிடுவான்.....சாயந்தரம் அந்தாளு வந்ததும், நல்லா டிரஸ் பண்ணிட்டு சினிமா ஏதும் போய்ட்டுவா, அனுசரணையா(!) நடந்துக்க.....தகுந்த நேரம் பார்த்து நாத்தனார் மகனைப்  பத்திச்  சொல்லு !"///

இதுபோல பல உதாரணங்கள் இருக்கிறது. போதாததுக்கு டிவி சீரியல்கள் வேற இப்படி நிறையச்  சொல்லிக்  கொடுக்கிறது...!!
  
இது போன்ற எந்த தவறான ஆலோசனைக்கும் தயவுசெய்துச்  செவிசாய்த்து விடாதீர்கள். உங்கள் குடும்ப சந்தோசம் உங்கள் கையில் மட்டும் !! தவறான வழிமுறைகள் எதையும் கைக்கொண்டு குடும்பத்தை நாடகமேடையாக மாற்றிவிடாதீர்கள். நித்தம் ஒரு வேஷம், நித்தம் ஒரு நாடகம் என்பதாக இருக்குமே தவிர குடும்பமாக இருக்காது...!

(உடல் கவர்ச்சி தாண்டிய மந்திரங்கள் பற்றி போனப் பதிவில் சொல்லிவிட்டேன் , நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)



மெல்ல
என்
தலைகோதி
கை
விரல்களை
சொடுக்கெடுக்கும்
உன் தளர்ந்த விரல்கள்
மட்டும் போதுமடி
என் வயோதிகம்
பிழைத்துக்கொள்ளும்!!

அழகான குடும்ப வாழ்க்கைக்கு ஒருவரின் மேல் ஒருவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தாக வேண்டியது அவசியம். முக்கியமாக கணவனும், மனைவியை தன் அன்புப்பிடிக்குள் வைத்தாக வேண்டும். கணவனின் பிடிக்குள் மனைவி இல்லாவிட்டால் எடுத்ததுக்கு எல்லாம் எதிர்வாதம் கிளம்பும். அதை தவிர்க்க மனைவியின் பிரியத்தைச்  சம்பாதியுங்கள். மனைவியை அதிகமாக நேசிக்கிறேன் என்று எண்ணி கொண்டிருந்தால் மட்டும் போதாது, அதை சொல்லில்,செயலில் வெளிப்படுத்துங்கள் !

தாம்பத்தியம் ஒரு வீணை , அதை மீட்டும் விதமாக மீட்டுங்கள் ! சுகமான இசை வெள்ளத்தில் மூழ்கி, வாழ்வை ரசித்து,உணர்ந்து,மகிழ்ந்து வாழுங்கள் ! வாழ்த்துக்கள் !!

*******************************************************************

தம்பதிகளுக்குள் உடல் , மனம் காரணமாக ஏதோ சிறு விருப்பமின்மை என்றாலும் விரைவில் சலித்து வெறுப்பின் எல்லைக்கு போய்விடுகிறார்கள். ஒருவேளை இந்த விருப்பமின்மைகள் மூன்று, நான்கு முறை என தொடர்ந்தால் மனவிரிசல் அதிகரித்து வேறு வடிகால்களை(?) தேடிக் கொள்கிறார்கள்.  

அடுத்த பதிவில் 'இல்லறத்திற்கு உடலுறவு ஏன் அவசியம் ?'  தொடர்ந்து பேசுவோம்...காத்திருங்கள் !!

*******************************************************************


நினைவிற்காக !

ஏற்கனவே விளக்கமாகச்  சொல்லி இருக்கிறேன்...மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் . எனது இந்த தொடர் கணவன், மனைவி பற்றியது...ஆண் பெண் என்ற பிரிவினை/பேதம் பற்றி இங்கே பேசப்படவில்லை.பெண்ணைக்  குறைச்  சொல்லி எழுதப்பட்டு இருக்கிறது என்று யாரும் பொங்கிடாதிங்க !? எதைப்  பற்றிச்   சொல்கிறேன் என்றே புரியாமல் விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது...!? தொடரில் சில உண்மைகளைச்  சொல்லும் போது எனக்கும் கசக்கவே  செய்கிறது.

குற்றாலமலையில் இருக்கிற ஆணாதிக்க ஞானசித்தர் வேற 'எது என்றாலும் வெளிப்படையாகச் சொல்லிடு, இல்லைனா பாவம் சேர்ந்துடும்'னு பயமுறுத்துகிறார்...!!! :))


                                                                           *****************

தொடர்ந்து பேசுகிறேன் 
கௌசல்யா