பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 17

கண்ணகிக்கும் காமம் உண்டு


அன்பின் புதிய வாசகர்கள்  பேசாப் பொருளா காமம்   அறிமுகப்பதிவு , 2 ஆம் பாகம்    வாசித்தப் பிறகு இப்பதிவைத்  தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி.

* * * * *

ஆலோசனைக்காக என்னிடம் வந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி மிகுந்த தயக்கத்திற்கு பிறகு  உணர்ச்சிகளால் தனக்கு  ஏற்படும் அவஸ்தையை கண்கலங்க கூறத் தொடங்கினார்... இதுவரை யாரிடமும் இதை பற்றி  சொல்லாத அவர் எனது தாம்பத்தியம் பதிவுகளை படித்தப்  பிறகு என்னை நாடி இருக்கிறார் ... அவரது கண்ணீர்  தன்னை விட வயது குறைந்த பெண்ணிடம் இதை சொல்கிறோமோ என்பதால் இருக்கலாமே தவிர பிரச்சனைக்கானது அல்ல என்பது புரிந்தது.    வசதிக்கு குறைவில்லாத வீடு, இந்த மாத லாபத்தை இரட்டிப்பாக்க வேறு எதில் இன்வெஸ்ட் பண்ணலாம் என்ற சிந்தனையில் தூங்க வரும் கணவர். முதுகு காட்டி உறங்கும் கணவரை பார்த்தபடி தூங்க முயற்சி செய்யும் ஒவ்வொரு இரவும் தூக்கமின்றியே கழிந்திருக்கிறது. எண்ணத்தை வேறு பக்கம் திருப்பி கடவுள் பூஜை தியானம் எல்லாம் முயற்சித்தும் தோல்வியே. உணர்ச்சிகளின் அதி உந்துதலில் ஏற்படுகிற  'ஆத்திரத்தில் உடல் உறுப்புகளை அப்படியே பிச்சி எறிஞ்சிடலாம்னு வெறி வருது, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் சராசரி பெண் இல்லையா எனக்கு காமவெறி பிடிச்சிருக்கா' என கேட்டவர் இறுதியாக 'நானும் கண்ணகிதான் மேடம், இவரை தவிர வேறு யாரையும் மனதாலும் நினைச்சது இல்லை'  என்று முடித்து மௌனமானபோது பல பெண்களின் பிரதிநிதியாக தான் எனக்கு அவர் தோன்றினார்.

'எல்லோருக்கும் இது இயல்புதான்  நீங்க உடலளவில் மிக  ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் அவ்வளவுதான் பெரிதாக வேறு ஒன்றும் இல்லை'  என்று சமாதானம் செய்து சில முக்கிய உபாயங்களைச்  சொல்லி அனுப்பினேன்.
பணம் செல்வாக்கு அந்தஸ்து புகழ் எல்லாம் இருந்தும்/இல்லாமலும்  உணர்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் மல்லுகட்டுகிறார்கள் பெண்கள். வெளியே சொல்ல வாய்ப்பில்லாததால் பிறருக்கு தெரிய வாய்ப்பில்லை. பெரும்பாலான கணவர்கள்  மனைவியின் தேவையறிந்து நடந்துக் கொள்வதில்லை.  உணர்ச்சி ஏற்பட்டாலும் கணவன் தப்பா எடுத்துப்பாரோ   என தனக்குள் வைத்து புழுங்கி கொள்கிறாள்... கண்ணகி இல்லை என்றாகிவிடுவோமோ என்ற பயம் மனைவிகளுக்கு ! தனது மனைவி கண்ணகி மாதிரி இருக்கவேண்டும் என்பது  ஆண்களின் வசதிக்காக ஏற்படுத்தப் பட்டது.

கண்ணகி ஒரு டிஸைன்! பத்தினி  ஒரு பிராண்ட் !!  

சிறு வயதில் காலில் கட்டப்பட்ட  சிறிய  சங்கிலியை வளர்ந்த  பின்னும்  உடைக்கத்    தெரியாத கோவில் யானையின்  நிலைக்கு சற்றும் குறைந்தது இல்லை பெண்களின் நிலை. பிறந்தது  முதல் 'நீ இப்படி நடக்கணும்' என்ற சமூக சங்கலியால் கட்டி பயிற்றுவிக்கப்பட்ட  பெண்ணால் வளர்ந்து பின்னும் தன்னால் இச்சங்கிலியை உடைத்து வெளியேற இயலாது என்றே இருந்துவிடுகிறாள். அதிலும் குறிப்பாக தனது உடலுக்குள் நிகழும்/எழும்   உணர்வுகளையும் அலட்சியப் படுத்தி அடக்கிவிடுகிறாள்...அதன் கொடிய விளைவுகளை அவளும் அறிவதில்லை  சமூகமும் கண்டுக் கொள்வதில்லை... பிறன்மனை செய்திகள் வெளிவந்ததும் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது...இந்த சமூகத்தால் அதிகபட்சம் இதை மட்டும்தான் செய்யமுடியும்...தீர்வுகளைத்  தேடத் தெரியாத முட்டாள் சமூகம் இது !

உணர்ச்சிகளுடன் போராடிப் போராடி தோற்று தனக்குள்ளேயே சுருண்டு  கணவனிடம் கூட தெரிவிக்க தைரியமற்று ஏதோ பெயருக்கு வாழ்ந்து ஒருநாள் செத்தேப்  போகிறாள். தைரியம் உள்ள பெண்களும் கண்ணகி கான்செப்ட்டுக்கு பிரச்சனையாகி விடும் என்று 'மறைவில் நடத்தி' பத்தினி பிராண்ட்டை காத்துக் கொள்கிறார்கள்.  தங்களுக்கு பிடித்த மாதிரி வாழும்  பெண்கள் மிக மிக சந்தோசமாக வாழ்கிறார்கள், மாறாக வாழ்வதைப்  போலவே  நடிக்கிறார்கள் கண்ணகிகள் !

ஒரிஜினல் கண்ணகி கதையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தாம்பத்தியம் என்றால் என்னவென்று முழுமையாக அறிவதற்குள் உணர்வுகளைத்  தூண்டிவிட்டவன் பிரிந்துச்  சென்றுவிடுகிறான். அதன் பிறகான ஒவ்வொரு இரவையும் இன்னதென்று தெரியாத உணர்ச்சிக்  குவியலுக்குள் புதையுண்டு விடியலில் உள்ளுக்குள் கனன்ற நெருப்பை நீரூற்றி அணைத்திருக்கக் கூடும்.  கணவன் வேறோருவளிடம் இருக்கிறான் அவளிடம் இன்பம் துய்க்கிறான்  என்பதும்  உணர்வுகளை அதிகப்படுத்தி இருக்கலாம், (இருந்தும் அத்தனையையும் உள்ளுக்குள் மறைத்து பிறந்தவீடு போதித்தவைகளை அடிப்பிறலாமல் நிறைவேற்றி இருக்கிறாள்)  ஒருநாள் திரும்பி வந்தவனைக்  கண்டு குதூகலித்த அவளது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு,  அடுத்ததாக  கோவலன் மாண்டதும் இனி வரவே வழியில்லை என்றானப் பின் ஒட்டுமொத்த உடலியக்கமும் ஸ்தம்பித்து வெறுப்பை உமிழ அது கட்டுக்கடங்காத பெரும் நெருப்பாக மாறி இருக்கலாம்... ஆம் மதுரையை எரித்தது கண்ணகியின் காமமாகக்  கூட இருக்கலாம்,   ஆனால் கற்பு என்று சொன்னால் தானே  கண்ணகி தெய்வம் ஆவாள்.  ஆணாதிக்கச்  சமூகம் தனது  வசதிக்காக சிலப்பதிகாரம் எழுத  நமது சமூகம்  'புனிதம்' என்ற போர்வையை போர்த்திக் கொண்டது.   கோவலன் ஒருவனை மட்டுமே தனக்கானவனாக வரித்து காமத்தை தனக்குள் எரித்து அவன் நினைவாக மட்டுமே வாழ்ந்து மறைந்த தாசிக்குலத்தில் பிறந்த மாதவியை பத்தினி லிஸ்டில் சேர்க்க ஏனோ நம்மால் முடியவில்லை!?

கண்ணகி விசயத்தில்  இப்படியும் நடந்திருக்கலாம், மாதவியிடம் சென்று திரும்பிய கோவலனை ஏற்றுக் கொண்டதால் தான் கண்ணகி பத்தினியானாள், கண்ணகி பத்தினியாக வேண்டும் என்றால் மாதவி என்றொருவள் தேவை,  ஆண் செய்யும் துரோகத்தை மனைவி என்பவள் ஏற்றுக்  கொண்டாக வேண்டும் என்பதை பெண்களின் மனதில் பதிய வைக்க கிடைத்தவள் தான் இந்த கண்ணகி. நடக்கவே முடியவில்லை என்றாலும் கூடையில் சுமந்துச்  சென்று தாசி வீட்டில் விட்டால் தான் அவள் பத்தினி.  பெண்ணை தெய்வமாக்கி மூலையில் உட்கார வைப்பதன் பின்னணியில் இருப்பது ஆணின் பெருந்தன்மை அல்ல  ஆதி பயம்.

எல்லா காலத்திலும் கண்ணகிகள் இருக்கிறார்கள் , என்னவொன்று அவர்கள் மதுரைக்கு மாற்றாக தன்னையே எரித்துக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் உடன் இருப்பவர்களையும் சேர்த்து எரித்து விடுகிறார்கள்... ஏற்படும் அத்தனை சமூக அவலங்களுக்கும் இது மறைமுகக் காரணமாகிறது. குழந்தை வளர்ப்பில் இருந்து அவளது பொறுப்பில் இருக்கும் அத்தனையிலும் குளறுப்படிகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியம் குறைந்த வீடுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் நோயாளியாக்கி விடுகிறது.

கற்பு என்ற ஒன்று இருக்கிறது என்றும் அதற்கு 'நெறி' வகுத்தவர்கள்  கண்டிப்பாக பெண்ணுடன் அன்னியோனியமாக சரிக்கு சமமான உரிமையை பகிர்ந்து வாழ்ந்தவர்களாக இருக்க முடியாது. கண்ணகி  வெளியே சென்று, திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய கோவலன்கள் இருந்தால் அதுவே சம  தர்ம சமூகம் !

பெண்களின் காமம் பேசப்படுவதே இல்லை ஆண்களின் காமம் 'அவன் ஆம்பள அப்படித்தான்' என்பதில் மறைந்துவிடும். ஆனால் பெண்களின் காமம் வலுக்கட்டாயமாக ஆணுக்குள் அடக்கிவைக்கப் படுகிறது. அவனை மீறி வெளிப்படக் கூடாது அப்படி வெளிப்பட்டால் அது காம வெறி, அவளுக்கு பெயர் வேசி. நடுஇரவில் 'இப்படித்   திரும்பு' என்று கணவன் சொல்வதைப்  போல மனைவி சொல்ல முடியாது. காமத்தை மறைக்கத் தெரிந்தவள் மட்டுமே பத்தினி.   'அவனுக்கு தேவை என்றால் படு' என்பதே காலக்காலமாக பெண்ணின் மனதில் பதிய வைக்கப் பட்டிருக்கிறது. இதில் இருந்து வெளிவர பெண்ணும் விரும்புவதில்லை. சில பெண்கள் மட்டும் ஆணுக்கு கட்டுப்பட்டவள் இல்லை நான் சுதந்திரமானவள் என பிரகடனப்படுத்தி பெண்ணியவாதியாகிறார்கள். வெகுசீக்கிரத்தில் அவர்களும் பெண்ணுக்கு வியாதியாகி விடுகிறார்கள் !!??

குழந்தை வளர்ப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் பெண்களின் காமம் கரைந்துவிடுவதாக எண்ணும் ஆண்களும் ஏன் பெண்களுமே  மாறவேண்டும். ஆண் பெண் இருவருமே தனது தேவை எது என உணர்த்த வேண்டும் பரஸ்பர தேவைகளை வெளிப்படுத்தி திருப்தி அடைவதுதான் ஒரு நல்ல தாம்பத்தியம். சந்தோசமான தம்பதிகளிடம் வளரும் குழந்தைகளால் தான் நல்ல வீடும் நல்ல சமூகமும் உண்டாகும். 

அடக்கி வைக்கப்பட்ட பெண்ணின்  உணர்ச்சிகள்  கண்டிப்பாக ஒரு கட்டத்தில் வெளிப் பட்டேத் தீரும் ஆனால் அது எதிர்கொள்ளவே முடியாத உக்கிர கோபம் வெறுப்பு எரிச்சல் கலந்த  கடுஞ்சொற்களாக/வாதங்களாக  இருக்கும்.  எப்போதும் அமைதியாக இருப்பவள் ஏன் இன்று இவ்வாறு  நடக்கிறாள் என்ற குழப்பத்தில் ஆண் அதிர்ந்துப்  போவான், கூடவே அந்த பெண்ணுக்கும் தான் ஏன் இப்படி நடக்கிறோம் என்பது தெரியாதது தான் உச்சபட்ச பரிதாபம்.  விவாகரத்து கள்ளக்காதல் முதல் மாமியார் மருமகள் பிரச்சனைகள் வரை ஏதோ ஒரு வடிவத்தில் அங்கே பெண்களின் காமம் மறைந்திருக்கிறது. மனைவியை புரிந்து மதித்து உணர்வுகளை  திருப்திப்படுத்தும் ஆண்  இருக்கும் வீட்டில் அதே ஆண் சகல சந்தோசங்களையும் அனுபவிக்கிறான். அவன் வெளி விடும் ஒவ்வொரு மூச்சும் சந்தோஷத் தூறலாய் மழையாய் அந்த வீட்டை மூழ்கடிக்கும்.

மனைவிக்கும்  நடு இரவில் விழிப்பு ஏற்படும் என்பதைப்  புரிந்து உணர்ந்து நடக்கும் கணவன் இருக்கும் வீட்டில்தான்  நல்லவை மட்டுமே நடக்கும்!!!


                                                                              * * * * *

ஆண்கள் நெருங்கினால் விலகும்/வெறுக்கும்  பெண்களை குறித்தும் பேசியாக வேண்டுமே !

தொடர்ந்துப்  பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

திங்கள், பிப்ரவரி 8

ஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...!

Liquor drinking is injuries to health



பெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது  பதிவு ஒரு சிலருக்கு சரியானப் புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும்  இந்த பதிவு ஒரு புரிதலைக் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது ! :-)  

///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///

இது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிடவில்லை...அதுவும் தவிர  அந்த பதிவிலேயேக் குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதைக் குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று.  நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறானப் புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும்  இயலாத காரியம்.  இருப்பினும் மதுவைக் குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும்  என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின்   பிரச்சனையின்  மூலக் காரணம்  மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவைத்  தொடுகிறார்கள் பிறகு விடமுடியாமல் தொடருகிறார்கள்.   

மது அருந்துவதை குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை அதனால்தான்   அரசாங்கம்  விற்கிறது.  டாஸ்மாக் வாசலில் பெண்கள் குடிக்கக்கூடாது, பெண்களுக்கு இங்கே மது விற்கப்படாது என்ற போர்டு இல்லை. பெண்கள் மதுக் குடிப்பதை பற்றிய கவலை அரசிற்கே இல்லை அதுவும் பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில்... அப்படி இருக்க ஆண் குடித்து கும்மாளம் போட்டால்  ஒதுங்கிப்போகும் ஆண்கள், பெண் என்றதும்  கேலி கிண்டல் கூச்சல் கூப்பாடுப் போடுவதும், அதிலும் பெண் குடித்தால் என்ன தவறு என்று கேட்ட  பெண்ணை, நாலு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதுதான் சரி  என்று சொல்வதும் வக்கிரத்தின் உச்சம். 

பெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும்.   ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும், பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம்.  அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமுதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளைக் கொன்*றாலும், சாட்சிச் சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரேத் தவிர கொன்*றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்)  அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள்.  கொ*லை கொள்*ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்... இருப்பார்கள் !
   
என்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைக்குரியவர்களைத் தூற்றுவது  சரியல்ல.   பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்.   அவள் குடிப்பதைத் தடுக்க அல்லது குறைக்க முயற்சிச் செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால்  பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது  பெண்களின் புத்தியில் புதிதாகப் பதிந்துவிட்டது.   குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்துக் கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை  அடிமையாக நடத்தியதன் விளைவு இது.  கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.  

///This is how it started among men too. First 1% started consuming, now it is almost 100% The same thing would happen with women. I dont understand why women should be treated "gently" and "alcohol should be blamed" rather than blaming consuming women.
I am completely against your view in this issue, my respectable friend, Mrs.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.///

மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ?  சமூகத்தின் மீது இதுவரை  இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது  அதுவே நம் வீட்டுப்பெண்ணாக  இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம்.   ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள்.  திருத்துங்கள்.  வளமாகட்டும் நம் சமூகம்.

மது என்னும் அரக்கன் 

உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளைச் சேகரிக்கும்  பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து  மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை  எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி !   அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையைக் காரணம் காட்டுவது. 

என்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம்  உடுமலைபேட்டையில் நீங்கியது.  செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும்  ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் சேர்ந்துக் குடிக்கும் குடும்பங்களும் உண்டு.  மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது  என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...

தினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்தவர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க  அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு  ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக(?) பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது.  அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.

சந்தோஷம்,  திரில் கிடைக்கும் என்பதற்காகக் குடிக்கத் தொடங்கும்  படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.   அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில்     பெண்ணை துகில் உரித்து வன்*புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் பயப்படுகிற  மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.  கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது.  அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.

பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது  அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம்  குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிக்கிட்டே  இருக்கு'. என்று பேச்சோடுப் பேச்சாகச்  சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம்.  அது உடை தொடங்கி  குடி என்று  தொடருகிறது.  இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...

நான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப்  போகிறது.

எனது நிலைப்பாடு :-

பெண்களுக்கு ஒன்று என்றால்  கண்மூடித்தனமாகப் பொங்குவதல்ல  எனது வேலை... காலங்காலமாக பெண் அடிமைப்பட்டுக்  கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்களின் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை.  பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த  மனித சமுத்திரத்தின் வேரானவள் !

விதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து  பெண்ணை விமர்சிக்கலாம்  நாகரீகமாக... பெண்ணை  கிண்டல் செய்யலாம்  நட்பாக... பெண்ணைப்  பற்றி பேசலாம்  வெளிப்படையாக...!  ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து  நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத்  தவிர்க்கலாம் !!! இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.

பெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும்  பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே.  ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தைப் பெறும் பெண் குடிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளைப் பெற்று வளர்த்து  35/40 வயதைத் தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ? ஆண் பெண் யார்  (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனைத் தான் என்று செய்யப்படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை  சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள்  ஊக்குவிக்கக் கூடாது.

தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்குப் பகுத்தறியத்  தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணைப் பற்றிய எந்த விமர்சனமும் எல்லை  மீறி பெண்மையைக் கேவலப்படுத்தி  துன்புறுத்தும் அளவிற்குப் போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.  

குறிப்பு :-

நண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக  இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர்? எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும்  எழுதவும்   வைப்பது  நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்!


புதன், நவம்பர் 18

காமம் - பெண்ணின் தவிப்பும் ஆணின் புரிதலும் !!!

இதுவரை  பேசாப் பொருளா காமம் - அறிமுகம்  படிக்காதவர்கள்,  அதை படித்தப்பின்  இப்பதிவைப்  படித்தால்  தொடர்ச்சிப்  புரியும். நன்றி.

* * * * *

திருமணமானவர்களே இது உங்களுக்கான கேள்வி...

=> காமத்தை காதலோடு செய்கிறீர்களா ?

* இது என்னங்க கேள்வி ... காதல் இல்லாமலா காமம் வச்சுக்க முடியும்?

=> இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க ... உங்க காமத்தில் காதல் இருக்கிறதா?

* இது என்ன  குழப்பம் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கான்ற மாதிரி??!! புரியலையே...

=> அப்ப இந்த கட்டுரை உங்களுக்குத்தான் தொடர்ந்து வாசிங்க...

* * * * *

காமத்தை காதலுடன் ரசித்து உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழாமல் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !!

தம்பதியருக்கிடையில் காதல் என்று  தனியாக இருக்கவேண்டியதில்லை என்பது உங்களின் எண்ணமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். புது தம்பதியர் இருவரும் காதல் இன்றி முதல்இரவு என்ற கட்டாயத்திற்காக உறவு வைத்துக் கொள்வதும் தற்கொலைக்கு முயலுவதும் ஒன்றுதான்.  காமத்தை கையாள கட்டாயம் அங்கே காதல் இருந்தாக வேண்டும். அத்தகைய குடும்ப உறவுகள் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும். பெரியோர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்றும்  சம்பிரதாயமாம் என்றும் திருமணத்தன்று இரவே அவசர அவசரமாக நடந்து முடிவதற்கு பெயர் காமமும் அல்ல காதலும் அல்ல... முழுமையான தாம்பத்தியமும் அல்ல.  ஒரே வார்த்தையில் சொன்னால் அது ஒரு  'விபத்து' 

Lust is not a sin. பேசாப் பொருள் அல்ல காமம்


'காதலுடன் காமம்' என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் மென்மையாக தூண்டப்பட உணர்ச்சிகள் மலரைப்  போல மெல்ல விரிய, தானும் நுகர்ந்து துணையையும் நுகரவைக்கும் அற்புத அனுபவம்... வி(மு)டிந்த பின்னும் அடுத்து எப்போது எப்போது என ஏங்க வைக்கும்! சும்மா தொட்டதும் இந்த நிலை ஏற்பட்டுவிடாது, அதற்குத்தான் காதலை துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றேன்.

வெறும் காமத்துடன் உடல்கள் ஒன்று சேர்ந்தால்   குழந்தை பெற்றுக் கொள்ளலாமே தவிர இறுதிவரை சந்தோசமாக குடும்பம் நடத்த முடியாது. அதுவும் மன அழுத்தம் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில் காமம் மட்டும் என்றால் வேலைக்காகாது. அட ச்சே இவ்ளோதானா மேட்டர் இதுக்குத்தானா இவ்ளோ பில்ட்அப் என்று அசால்ட்டா தூக்கிப் போட்டுவிட்டு கண்டுக்காமப்  போயிக்கிட்டே இருப்பாள் பெண்! நேசத்திற்கும் வலுக்கட்டாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

காதலையும் காமத்தையும் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள்.  ஒரு ஆண்,   தன் மனைவியுடன் படுக்கையில் இணைவதையே  காதல் என்கிறான். தன் மனைவியின் மீதான நேசத்தை இவ்வாறு, தான் வெளிப்படுத்துவதாக திருப்திப் பட்டுக் கொள்கிறான்.  என்னிடம் கவுன்செலிங்க்கு வந்த பெண் நாலு பக்கத்திற்கு கணவனின் மீது குறைகளை வாசித்தாள், அதன் மொத்த சாராம்சம் 'தன் மீது கணவருக்கு அன்பில்லை' என்பதே.  கணவனிடம் கேட்டபோது 'நான் அவளை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, வாரத்தில் இரண்டு மூணு  தடவை அவளுடன் உறவு வச்சுக்கிறேன், இப்படி என் அன்பை வெளிப்படுத்தியும் அவ புரிஞ்சுக்கலைனா நான் என்னங்க பண்ண'    என்று ரொம்பவே அப்பாவியாக(?) கேட்டார்.

நிறைய ஆண்கள் இவரை போன்றுத்தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி என்பது செக்ஸ் ஆல் ஏற்படும்  என்பது மிக மிக தவறான புரிதல்.  உங்களைப்   பொருத்தவரை செக்ஸ் என்பது பெரிய மேட்டர் என்றால் பெண்ணோட  தேவையெல்லாம் ரொம்ப  சின்ன  மேட்டர். செல்ல வருடல், மென்மையான தொடுதல்,   கொஞ்சம் டைட்டான முரட்டுத்தனமான அணைப்பு, கொஞ்சலான பேச்சு, எண்ணிக்கை வைக்காமல் கிடைக்கும் முத்தம்... இப்படி ஆரம்பித்து மெல்ல மெல்ல முன்னேறி பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே  ஆண் தனது தேவையை தீர்த்துக் கொள்வது ......இதுதான் முழுமையான செக்ஸ்! ஆணின் ஐந்து நிமிட காமம் பெண்ணிற்கு  வெறுப்பைத்தான் தரும்,  அத்தகைய உடலுறவை சந்தோஷம்/திருப்தி என்று எடுத்துக் கொள்வது ஆண்களின்  அறியாமை!!

பெண்ணின் தவிப்பும் ஆணின் தவறான புரிதலும் 

2 குடும்பங்களை உதாரணத்துக்குப்  பார்ப்போம். சிந்தைக்குள் குடும்பச் சிக்கல்கள்  அலைமோத தூக்கம் தொலைத்துப்  புரண்டுக்  கொண்டிருக்கும் மனைவி தனது தவிப்பு கணவனின் கைக்குள் தஞ்சமடைந்தால் குறையும் என முதுகுக்  காட்டி உறங்கும் கணவனை மெல்ல தன் பக்கம் திருப்ப, ஸ்பரிசம் பட்டு லேசாக அசையும்  கணவன், 'எனக்கு மூடில்லை தூங்க விடு' பட்டென்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூக்கத்தைத்  தொடருகிறான்.   அடுத்ததாக வேறு ஒரு குடும்பம் இதே மாதிரியான ஒரு சிச்சுவேசன், ஆனா  இந்த கணவன் கொஞ்சம் நல்லவன், அணைப்பிற்குத்  தவித்தவளைப் பிடித்து இழுத்து அவளது தவிப்பைப்  போக்குகிறேன் பேர்வழி என்று பெருந்தன்மையுடன் போராடி(?) தனது ஐந்து நிமிட தேவையை (மட்டுமே) பூர்த்தி செய்துவிட்டு அப்பாடா முடிந்தது கணவனின் கடமை என்று மீண்டும் மனைவிக்கு முதுகுகாட்டி தூங்கியே விடுகிறான்.  இந்த இரண்டு விதமான படுக்கையறை காட்சிகளிலும் நடந்தது என்ன ?!


அன்பான அணைப்பிற்கு மனைவி ஏங்குவதை காமம் என பொருள் கொள்ளும் விந்தையான கணவர்களைக்  கொண்டது தான்  நம் சமூகம்  !!

முதல் குடும்பத்தில்,  மனைவி அடிபட்ட வலிகொண்ட   உணர்வுடன்  அவமானத்தில் கூனிக் குறுகி இருப்பாள், இரண்டாவது குடும்பத்தில்,   மனைவியோ குழப்பத்தின் உச்சத்தில் இருப்பாள்...  இருவருக்குள்ளும் எழும் ஒரே கேள்வி 'நான் சும்மா அணைக்கத்தானே நெனைச்சேன்??!!' பதிலற்ற கேள்வியின் இறுதியில், இந்த இடத்தில்தான்  அவள் வெறுக்கத் தொடங்குகிறாள், காமத்தையும் புரிதலற்று அதனைக்  கையாளும் கணவனையும்...

விடியும்வரை தூக்கமின்றித்  தவித்து விடிந்ததும் அவமானம்  குழப்பம் மனதை வருத்த எரிச்சலுடன் கணவனின் மீது கோபத்தைக்  காட்டுவாள். காரணம் புரியாமல் அதை எதிர் கொள்ளும் ஆண், காலை நேர டென்ஷன் என்று மனதை சமாதானம் செய்துக் கொண்டு வேலைக்குச்  சென்றுவிடுவான். இரவு வீடு திரும்புகையில் வாசலிலேயே  எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் அதே கோபத்தை வேறு ஏதோ ஒன்றைக்  காரணமாக வைத்து....... இச்சமயத்தில் ஆண் முழுதாக குழம்பி ' அப்படி நாம என்னத்தச்  செஞ்சுட்டோம், இவ இப்படி குதிக்கிறா'  என்று. இரவில் கணவன் சரியாக நடந்துக் கொள்ளாததுதான் காரணம் என்று பொதுவாக  எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல மாட்டாள், சொல்லப்போனால் அவளுக்குமே தெரியாது, தனது எரிச்சலின்    நெருப்பு?  படுக்கையறையில் தான் புகைய ஆரம்பித்தது என்று.

காமத்தின் குணம் 

இப்படித்தான் பல தம்பதிகள் சிக்கலின் முதல் முடிச்சு எந்த இடத்தில் விழுந்தது என்று  தெரியாமலேயே மேலும் மேலும் முடிச்சுகளைப்  போட்டுக் கொண்டே சென்று சிக்கலைப்  பெரிதாக்கி ஒரு கட்டத்தில்  கோர்ட் படியேறி விடுகிறார்கள்.  விவாகரத்தும்  கிடைக்கிறது, அதன் பிறகு மறுமணம் நடக்கலாம், அங்கேயும் பிரச்னை ஏற்படலாம், மறுபடியும் விவாகரத்து  என்றால் கேலிக்கூத்தாகிவிடுமே என சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டலாம். இதுதான் இதுவேதான் இன்றைய நிஜம்... யதார்த்தம்!!

இப்போது புரிகிறதா காமத்தின் வலிமை என்னவென்று.  வெறும் ஐந்து நிமிட சுகம் தானே என்ற அலட்சியம் குடும்ப உறவுகளையே சிதைத்துவிடுகிறது.  ஆணின் அணுகுமுறையை பெண்ணும் பெண்ணின் தேவையை ஆணும் புரிந்து நடந்துக் கொள்ளவேண்டும். இதனை  சரியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும்தான் சந்தோசமாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதாக நடிக்கிறார்கள்!!

காமம் - உடல், காதல் - மனம் இரண்டையும் ஒன்று சேர்த்தால் தான் அங்கே நிறைவு கிடைக்கும். ஆண் அல்லது பெண்  வெறும் காம இச்சையுடன்  மட்டும் துணையை அணுகும்போது எதிர்பாலினத்தை சந்தோசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தன் உச்சத்தை நோக்கிமட்டுமே செல்வார்கள்... இது அவர்களின் தவறல்ல காமத்தின் பிரத்தியேக குணம்.  ஆனால் காதலுடன் அணுகினால் வேறு சிந்தனையில்  துணை இருந்தாலும்   இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் காதல். அப்புறமென்ன  இருவரும் மற்றொருவருக்குள் கலக்கத் தொடங்கிவிடுவார்கள்.  இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது, காதலை துணைக்கு அழைத்ததுடன் தேமே என்று இருந்துவிட்டால் கூட  போதும், பிறகு காதல் மற்ற  வேலைகளைப்  பார்த்துக் கொள்ளும்.  காதலுக்கு இருக்கக் கூடிய வீரியம் இது.

காதலுடன் கூடும் போது ஒருவருக்குள் ஒருவர் சுலபமாக ஊடுருவ முடியும்...அது மனதென்றாலும், உடலென்றாலும்...! செல்ல வருடல் , சில பல முத்தங்கள், அன்பான பேச்சு, இறுக்கமான அணைப்பு இவை போதுமே உறவைத்  தொடங்க, இதைதான் காதல் என்கின்றேன். பலரும் உடலுடன் கூடுவதாக எண்ணி உடலுக்கு வெளியேதான் கூடுகிறார்கள்... அது செயற்கை , இயந்திரத்தனம். ஆண் பெண் படைப்பின் அர்த்தமே கூடுவதுதான். அதை இயந்திரத்தனமாக செய்யாமல் இயல்பாக மென்மையாக காதலுடன் செய்யுங்கள். காமம் உடலின் தேடலாக இல்லாமல் ஆன்மாவின் தேடலாக இருந்தால் கூடலுக்குப்பின் தியானத்தில் இருந்து எழுவதைப்  போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்... நம்புவர்களுக்கு அங்கே கடவுளின் பிரசன்னமும் தெரியக்கூடும்!!

காமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு...!!

விரல் நுனியில் கணினியில் தேடும் இருட்டறை சமாச்சாரம் அல்ல... தெருவோர புத்தகக்கடையில் விலை மலிவாய் கிடைப்பதும் அல்ல... பலரது மூளைக்குள் அமர்ந்துக்  கொண்டு பெண்களின் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருக்கும் சைத்தானும் அல்ல...காலங்காலமாய் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காகவே கல்யாணம் முடித்ததாய் எண்ணி ஆற்றிய கடமையும் அல்ல... அரசமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத்  தொட்டுப் பார்க்கும் பெண்களின் வரமும் அல்ல ........ 'மனித பிறப்பின் அர்த்தத்தை அணு அணுவாக ரசித்து தானும் இன்புற்று தன்னைச்  சுற்றி இருக்கும் உயிர்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும், வெகு சிலரே முழுதாய் உணர்ந்த ஒரு உன்னதம்' - காமம் !

* * * * * * * * * *

ஆணின் தேவை/அவசரத்தை சரியாகப்  புரிந்து உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ற விதமாய் நயைந்தும் தளர்ந்தும் ஆணின் தீவிரத்தை தாமதம் செய்து பெண்மையை  முழுமையாய் உணர்த்தி தானும் இன்பத்தில் திளைத்து  ஆணையும் உச்சத்திற்கு அழைத்துச்  செல்வது பெண்ணின் கடமை. அது எவ்வாறு என்ற கேள்வி எழுந்தால் காத்திருங்கள் பதிலுக்காக... தொடர்ந்து தொடரை  வாசியுங்கள்...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


Painting & pic - thanks google

புத்தகப் பரிந்துரை :

written by Om swamy




திங்கள், மார்ச் 9

பேசாப் பொருளா ...காமம் !? ஒரு அறிமுகம்

'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும் போதும் கவுன்சிலிங் செய்யும்போதும்  தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து   ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுகிறேன். இப்படியெல்லாமா  சந்தேகம் வரும்? இதுக்கூடவாத்  தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து?  என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே  விட்டேன்...

A lust that can be spoken of...

தொடருக்குள் போகும்முன் சில வரிகள் புரிதலுக்காக...

பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக  ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.

பாலியல் உறவுகளைப் பற்றி ஆண் பேசலாம், பெண்ணின் அங்கங்களை வர்ணித்து கவிதைகள் எழுதலாம் ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் உடனே சமூகம் வெகுண்டு எழும் அப்பெண்ணை பழிக்கும் தூஷிக்கும். அவ்வளவு ஏன்  இதை வைத்தே அந்த பெண்ணின் தரத்தை அவர்களாகவே நிர்ணயித்துவிடுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வருகிறது.

பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம்.   ஒரு  ஆண்  மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும்  பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள்  என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.  

பாலியலைப்  பற்றி பெண்  எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயைகே  கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும். எனவே  இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல்  இருக்கட்டும் !!!

பேசாப் பொருளா காமம்?   

அற்புதமான ஒரு விஷயம் எவ்வாறு  அசிங்கமான தவறான அருவருப்பான குற்றமாக தவிர்க்கக்கூடிய - மறைக்கக் கூடிய  ஒன்றாக மாறியது அல்லது மாற்றப்பட்டது... யாரால் ஏன் எப்போது என்ற கேள்விகள் எனக்குள் எழும் ...அதற்கான விடையை தேடும் ஒரு தேடல் இந்த தொடர் என்று சொல்வதை விட காமத்தைப்  பற்றிய அரைகுறை கணிப்புகளினால் சமூகத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அலசும் ஒரு தொடர் என்று வைத்துக்கொள்வோம்.



சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும்  பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன்,  அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும்  இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.  அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம், எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம்.  காமத்தில் அவர்களால் முழுமைப்  பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக  உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர்  எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே  இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும்.  முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.    

 எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும்  ஒவ்வொரு கூட்டமும்  ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக்  காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசாப்  பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்குத்  திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை  கூரையாகக்  கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான்  செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை.  உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம்  என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  காம எண்ணங்களை  மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனனுக்கு  பெயர் பாதிரியார்.

புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும்  ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும்  புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச்  செலவிடுகிறார்கள். 

பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின்  ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போகப்  போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களேத்  தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களைக்  கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு  அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே!

ஆன்மீகத்திற்கு எதிரானதா  காமம்.

துறவிகளுக்கும்  புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத்  தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானேச்  செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதைப்  போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக்  குறைபாடுகள்  கொண்டவராக இருக்கவேண்டும் 

ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக  மறுத்தோ ஏற்றோ  பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும், அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள்.  காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான்,  குடும்பத்தில் அதிகரித்து வரும்  விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.

பின் குறிப்பு:-

குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தித்  தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன்.  :-)

கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை  மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன்  நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே  என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க  பிளீஸ் ...


தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Paintings - Thanks Google 

புதன், செப்டம்பர் 10

ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது - விகடன் கட்டுரையின் அபத்தம்!?




ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது -  விகடன் கட்டுரையின் அபத்தம்!?

பெண்களுக்கு தைரியத்தைக் கொடுப்பது ஜீன்ஸ் ஆ புடவையா என்று பட்டிமன்றம் வைத்தால் தோற்பது புடவையாக இருக்குமோ என்று புடவைகளின் சார்பாகப்  புலம்ப ஆரம்பித்ததின் விளைவே எனது இக்கட்டுரை! மூன்று வருடங்களுக்கு முன் ‘ஆபத்தான கலாச்சாரம்’ என்று நான் எழுதியப்  பதிவுக்கு ஒரு தோழி எதிர்பதிவு(கள்) எழுதி இருந்தார், அதில் ஜீன்ஸ் உடையை ஆஹா ஓஹோன்னுப்  புகழ்ந்துத்  தள்ளினார். வெளிநாட்டில் வசிக்கும் அவர் அப்படி எழுதியதில் எனக்கு பெரிதாக வியப்பேதுமில்லை... அதற்குப்பின் ஜீன்ஸைப்  பற்றி அதிசயப்படும்படியான ஒரு எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஆனந்த விகடனில் ‘பேசாத பேச்செல்லாம்’ தொடரின் போன வார(3-9-14) கட்டுரையை தெரியாமப்படிச்சுத் தொலைச்சுட்டேன், அதுல இருந்து மண்டைக்குள்ள ஒரு வண்டு பிராண்டிக்கிட்டே இருக்கு. சரி நம்ம கருத்து என்னாங்கிறதையும் பதிய வச்சுடுவோம்னு இதோ எழுதியே முடிச்சுட்டேன். அந்த மகா அற்புதக் கட்டுரையை படிக்காதவங்களுக்காக அதுல சிலவரிகள அங்க இங்கக்  குறிப்பிட்டு இருக்கிறேன். (நன்றி விகடன்)

அந்த கட்டுரையாசிரியர் தனது ஆறு வயது மகளுக்கு , தனக்குப்  பிடித்த உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை/சுதந்திரத்தைக்  கொடுத்திருக்கிறார் என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். பாராட்டவேண்டிய ஒரே விஷயம் இதுமட்டும்தான். அதுக்குபிறகு அந்த கட்டுரை சென்றவிதம் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது......   அந்த பெண் குழந்தை விளையாடுறப்ப தன்னோட டிரஸ் மேல ஒரு துண்டை தாவணியா  போட்டுக்கிட்டுச்  சமைக்கிற மாதிரி, குழந்தை(பொம்மை) வளர்க்குற மாதிரியும் விளையாண்டுச்சாம், அதே குழந்தை குட்டி டிரௌசர் போட ஆரம்பிச்சப்ப ரொம்ப வீரமா தைரியமா கைல கேமரா புடிச்சிட்டு காடு  மலை எல்லாம் சுத்துவேன்னு சொல்லிச்சாம். இதுல இருந்து கட்டுரையாசிரியர்  புரிஞ்சிகிட்டது என்னனா “சர்வ நிச்சயமா நம் உடைக்கும் , நம் எண்ணத்துக்கும் தொடர்பு இருக்கு” அப்டின்றதானாம்...புடவைக்  கட்டுனா சமையல்கட்டோட நம்ம எண்ணம் நின்னு போயிடுமாம். புடவைல இருந்து அப்டியே சுடி, சல்வார்னு ஒவ்வொன்னா மாறி ஜீன்ஸ் போட்டப்போ மனசு அப்டியே ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு அதோ அந்த பறவையப்  போல பற, இதோ இந்த மானைப்  போல ஓடு, எமனே எதிர்ல வந்தாலும் எட்டி உத ன்ற மாதிரி வீரமும் தைரியமும் நமக்குள்ள போட்டிப் போட்டு வந்துடுமாம். 

‘புடவைய கட்டிண்ட்டு இனியும் வீட்டுக்குள்ள கோழையைப்  போல அடங்கி கிடக்காதிங்க பெண்களே... ஜீன்ஸ் போட்டுக்கிட்டு சுதந்திர வானில் ஒரு பறவையாய் பறந்துத்திரியுங்கள்’ என்று பெண்களுக்கு அறைகூவல் விடுக்கும் இவரை கண்டிப்பாக  பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் ஒன்னுக் கூடி ஒரு பாராட்டுவிழா நடத்தியே ஆகணும். புடவையைப்  பத்தி ஒரு பெரிய லெக்ட்சர் வேறக்  கொடுத்திருந்தாங்க, அப்டியே அசந்தேப்  போயிட்டேன்.

புடவை என்னும் மகாஇம்சை

புடவைக்  கட்டுனா நிமிசத்துக்கு ஒரு முறை இழுத்து இழுத்து விட்டுகிட்டு, வயிறு,இடிப்பு தெரியுதான்னு அட்ஜெஸ்ட் பண்ணுவதால வேலைல கவனம் சிதறிப் போயிடுமாம். குனிய முடியாது, வேகமா நடக்க முடியாது, வண்டி ஓட்ட முடியாது பஸ்ல ஏற முடியாது... இப்படி ஏகப்பட்ட முடியாதுகள் !!! அதைவிட முக்கியமா  வேலைக்கு போறப்  பெண்கள் ரெஸ்ட் ரூம் போறதும், நாப்கின் மாத்துறதும் மகா கொடுமையா இருக்குமாம். புடவை ஈரமாயிட்டாக்  காயுற வரை அங்கேயே நிக்கணுமாம் என்று எழுதியது எல்லாம் ரொம்பவே ஓவர்! . சொல்லப்போனால் இது போன்ற சமயத்தில் புடவை ஒருவிதத்தில் வசதியும் சுகாதாரமானதும் என்பது பெண்களுக்கு புரியும், பெண்ணியவாதிகளுக்குப் புரியாது. (அதுவும் தவிர புடவை கசங்கிடும் என்றும் காரணம் சொல்லமுடியாது, ஏன்னா அந்த நாட்களில் மொட மொடன்னு கஞ்சிப்  போட்ட காட்டன் புடவையோ, பட்டு புடவையோ நாம கட்ட மாட்டோம்)

கடைசியா நம்மூர் காலநிலைக்கு புடவை கொஞ்சமும் செட் ஆகாதுன்னு ஒரே போடா போட்டாங்க...(ஜீன்ஸ் அப்படியே ச்ச்சும்மா சில்லுனு இருக்குமாமாம்)

* பெண்கள் பிறர் முன் கம்பீரமா தெரியனுமா, ஜீன்ஸ் அணியுங்கள்!

* தேங்காய் வேணுமா, ஜீன்ஸ் போடுங்க, அதாவது தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கச் சொன்னாலும் பறிக்கத் தோணும்.

* ஓடலாம் ஆடலாம் மலை ஏறலாம் பைக் ஓட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (சமையல் மட்டும் செய்யக்கூடாது, தெய்வக்குத்தம் ஆகிடும் ஆமா)

* வெட்கம் பயம் கண்டிப்பாக  இருக்கவே இருக்காது. துணிச்சல் பொங்கும். எவனாவது கிண்டல் பண்ணினாலும் என்னடா நினைச்சுட்டு இருக்கேனு சட்டையைப்  புடிச்சு கேட்க முடியும். ஆனா தாவணி, சேலை கட்டினா பயத்துல நடுங்கியேச்  செத்துடுவாள். (இந்த இடத்துல சமீபத்திய பாலியல் கொடுமைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை)L

* யாரையும் லவ் பண்ணலாம், அதுமட்டுமில்லாம லவ் பண்றதப்  பத்தி வீட்ல சொல்ற அளவுக்கு தைரியத்தையும் ஜீன்ஸ் கொடுக்கும். (ஜீன்ஸ் போடும் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்து வச்சவங்க)

ம்ம்...என்னத்த சொல்ல !! இப்படியெல்லாம் ஜீன்ஸ்ஸோட பெருமைகளைப்  பாயிண்ட் பாயிண்டா புட்டுப் புட்டு வச்சது சாட்சாத் அந்த கட்டுரையாசிரியரே தான். (அடைப்பு குறிக்குள் இருப்பது மட்டும் அடியேன்)

இவ்வளவையும் சொல்லிட்டு பாலியல் வன்முறை உடையால் ஏற்படுவது இல்லை என்று சில கருத்துக்களையம்  சொல்லி இருந்தாங்க. எனது கருத்தும் இதே தான் என்றாலும், ஜீன்ஸ் குறித்தான அவர்களின் எண்ணத்திற்கு சாதகமாகவே இக்கருத்தையும் சொன்னதாக எனக்கு தோன்றியது.

ஆகச் சிறந்த கட்டுரையின் இறுதி வரியில் 'சோர்வைத் தொடருவதும், புத்துணர்ச்சியுடன் ஓடத்தொடங்குவதும் நம் தேர்வில் இருக்கிறது தோழிகளே' என்று அந்த கட்டுரையை முடித்திருப்பதன் மூலம் ஜீன்ஸ் மட்டுமே தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். (ஒருவேளை ஜீன்ஸ் கடை ஏதும் புதுசா திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை)J

பெண்ணியம் மட்டுமே பேசும் பெண்களே...

பூ, பொட்டு, புடவை, வளையல், கம்மல் இதெல்லாம் போட்டுக் கொள்வது பெண்ணடிமைத்தனம் என்றுச் சொல்லி இதை எல்லாம் தவிர்த்து ஜீன்ஸ் போட்டு இதுதான் பெண்ணியம் அப்படினு என்ன கர்மத்தையும் சொல்லிக்கோங்க...ஆனால்  நமது பாரம்பரியத்தை நமது அடையாளத்தை கேலிச்  செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

ஜீன்ஸ் என்பது மேல்நாட்டினர் உடை, அவர்கள் நாட்டின் குளிர்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொன்றாக அவர்களை பின்பற்றி வருவது ஒன்று மட்டும் தான் நாகரீகம் என்று இருப்பவர்கள் இருந்துவிட்டு போங்கள், ஜனநாயக நாடு இது, ஆனால் நமது பாரம்பரிய உடையை அவமானப்படுத்துவது என்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ??!!

பெண்கள் என்றால் அவங்க ஓடணும் , பாடணும் , ஆடணும் என்று புதிதாக  ஒரு பிம்பத்தை பெண்ணுக்கு ஏற்படுத்தும் இது போன்ற முயற்சிகள் தேவையற்றது. ஒரு கட்டுரை நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை அபத்தங்களைப்  பேசாமலாவது இருக்கலாம்.

நீங்கள் புதுமையானவர்கள் என்பதற்காக நம் பழமையைக்  குறைச் சொல்லாதீர்கள்...பலரும் பெரிதும் மதிக்கும் மேற்குலகமே இன்று நம்மை பார்த்து மாறிக் கொண்டிருக்கிறார்கள்...ஏன் நாமே இன்று இயற்கை விவசாயம், கம்பு சோளம், திணை, குதிரவாலி, சாமை என்று மாறிக் கொண்டிருக்கிறோமே...!

எந்த உடையாக இருந்தாலும் அதை அணிபவரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தே அன்றைய அவரது செயல்பாடு இருக்கலாம். அதற்காக  உடை அணிந்ததும் வீரம் வரும் என்பது எல்லாம் மகா அபத்தம். ஒருவரின் கல்வி, அறிவு, திறமை இவை தராத தைரியத்தையா உடை கொடுத்துவிடும். அவயங்களை மிகவும் இறுக்கிப் பிடிக்காத நாகரீகமான எந்த உடையும் பெண்ணுக்கு கம்பீரத்தைக்  கொடுக்கும். அனைத்தையும் விட அவரவர் உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து அணிவது மிக முக்கியம். ஜீன்ஸ், சுடி, சல்வார், புடவை எதாக இருந்தாலும் அணியும் விதத்தைப்  பொருத்தே பெண்ணுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கும். நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுத்து அணியலாம், உடலுக்கு சிறிதும் பொருந்தாத உடைகளை அணிந்தால் அதுவே கேலிக்கூத்தாகிவிடும், அது புடவையாக இருந்தாலுமே!

நவநாகரீக உடைகள் மட்டும்தான் பெண்ணுக்கு தைரியத்தைக்  கொடுக்கும் என்று குருட்டாம்போக்கில் எழுதப் படும் இது போன்ற கட்டுரைகள் உண்மையில் ஆபத்தானவை.

பெண்களின் சாதனை உடையால் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை  

புடவை கட்டத்தெரியாது (தெரியும்ன்றது வேற விஷயம்) என்று சொல்வதே 90களில் பெருமையாகத்  தெரிந்தது, ஆனால் நகரங்களில் இப்போது புடவையே தேவையில்லை என்று தூக்கி எறிவதைபோன்ற எழுத்துக்கள், பேச்சுகள் அதிகரித்து வருவதைப் போல இருக்கிறது. பொருளாதாரத் தேவைக்கென்று யாரையும் சார்ந்து நிற்காமல் சுயத்தொழில் மூலமாக உழைத்து தன் குடும்பத்தை உயர்த்தி உன்னத நிலைக்கு கொண்டுவந்த பல பெண்கள் இன்று நம் கண்முன்னே பெண்மையைப்  பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் இன்று எந்த பெண்ணும் வருமானம் இல்லாமல் இருப்பதில்லை, விவசாயம் , பீடி , செங்கல் தயாரிப்பு போன்ற தொழில்கள் முதல் மகளிர் குழுக்கள் மூலம் லோன் பெற்று சுயத்தொழில் ஆரம்பித்து   அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் நவநாகரீக உடை அணிந்தவர்கள் அல்ல.

அதுவும் தவிர கட்டுரையில் குறிப்பிட்ட மாதிரி, புடவை கட்ட நேரமாகும் என்பது எல்லாம் ஒரு காரணமே இல்லை, இன்றைய பெண்கள் மேக்கப் என்ற பெயரில் முகத்திற்கு மட்டும் செலவு செய்யும் நேரம் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் (நீயா நானா ல இளம்பெண்கள்  சொன்ன ஸ்டேட்மென்ட்). முகத்துக்கு அவ்ளோ நேரம் செலவு பண்ற பெண்கள் புடவை கட்ட ஒரு பத்து நிமிஷம் செலவு செய்வதில் தப்பில்லை. 

புடவைக்கு ஆதரவாக என்பதற்காக இப்பதிவினை நான் எழுதவில்லை, புடவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்பது போன்றுக்  குறிப்பிட்டு இருக்கும் இந்த கட்டுரையை குறித்த எனது கோபத்தை, ஆதங்கத்தை இங்கே வரிகளாக்கி இருக்கிறேன். அவ்வளவே! 

இறுதியாக 

ஜீன்ஸ் அணிவதால் உடல் ரீதியிலான பல பிரிச்னைகள் ஏற்படக்கூடும் என்பது  மருத்துவர்களின் கடுமையான  எச்சரிக்கை .  மக்கள் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை போன்று 'டாக்டர் விகடன்' வெளியிடும் விகடன் குழுமம் இது போன்றப்  படு அபத்தமான கட்டுரையை எப்படி பிரசுரித்தது என்று புரியவில்லை. இளைஞர்கள் பலர் விரும்பிப்  படிக்கும் பிரபலமான பத்திரிக்கையான விகடனின் இந்நிலை வருத்ததிற்குரியது.  

ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்துத்  தெரிந்துக் கொள்ள இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் குவிந்துக்  கிடக்கின்றன.  படித்துப் பாருங்கள் . 

கட்டுரையாசிரியர் ப்ரியா தம்பி அவர்களே! 

உங்களுக்கு சரியென்றுப் படுவதை ஒட்டுமொத்த பெண்களின் கருத்தாக எழுதுவது எப்படி சரியாகும். ஜீன்ஸ் தைரியம் தரும் என்று எழுதி இளம் சமுதாயத்தைக்  குழப்பாதீர்கள். பெண்களின் ஆடை இன்னைக்கு கடும் விமர்சனத்துக்கும் விவாதத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதை மனதில் வைத்து அதீத அக்கறையுடன் எழுத வேண்டிய சூழலில் இருக்கிறோம்...உங்களை பலரும் வாசிக்கிறார்கள் என்று ஒரு சார்பாக மட்டும் தயவு செய்து இனியும் எழுதி விடாதீர்கள். மிக அருமையான ஆளுமை நீங்கள், வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப்  பற்றி பேச நிறைய இருக்கிறது, எதுவும் பேசப்படாமல் போய்விடக் கூடாது ...தொடர்ந்து பேசுங்கள்...நாங்கள் பேசாத பேச்சையெல்லாம் ...! நன்றி தோழி.



பிரியங்களுடன் 

கௌசல்யா 


வியாழன், செப்டம்பர் 19

மகளிர் அமைப்புகளின் குறுகிய கண்ணோட்டம் - ஒரு அனுபவம்



பெண்களுக்கு எதிராக  எங்கே என்ன நடந்தாலும் மகளிர் அமைப்புகள் முதலில் குரல் கொடுத்துவிடும். ஆபாச சுவரொட்டி கிழிப்பது முதல் பாலியல் வன்முறைக்கு எதிராக கொடிப் பிடித்து கோஷம் போட்டுப்  போராடுவது வரை  இவர்களைப்  பற்றி ஓரளவு அறிந்திருக்கிறேன். உண்மையில் இவர்களின் வேகம் எதுவரை  எந்த விதத்தில் என்று மகளிர் அமைப்பில் என்னை இணைத்துக் கொள்ளும் வரை எனக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட பெண்கள்  இவர்களிடம் பிரச்னையைக்  கொண்டுச்  செல்லும்போது அதை இவர்கள் கையாளும் விதத்தை அனுபவத்தில் கண்டு அதிர்ச்சியும், கோபமும்,  சலிப்பும்  வந்து விட்டது. அனைத்து இடத்திலும் இப்படித்தானா? இல்லை எனது முதல் அனுபவம் இப்படியா என தெரியவில்லை. (நமக்குனே இப்படி எல்லாம் வந்து சேருமோ என்னவோ ?!)

பதவி(?) ஏற்றதும் முதல் பணி, பிரச்சனையுடன் ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அவள் சொன்னதின் சுருக்கம் - ஒரு ராங் கால் மூலமாக(?!)  லீவ்ல இருக்குற ராணுவ வீரருக்கும் இந்த பெண்ணுக்கும் பழக்கம். திருமணம் செய்து கொள்வதாகச் சத்தியம் செய்தப்  பின் முதல் முறையாக நேரில் சந்திப்பு. கோவில் வாசலில்(?) வைத்து திருமணம். பெண்ணின் சொந்த ஊரில் சில வாரங்கள் குடித்தனம். பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பம். தற்போது  இவளை விட்டுவிட்டு முதல் மனைவியிடம்(?) போய்விட்டாராம். ஆமாம்ங்க ஆமா  அவர் ஏற்கனவே திருமணமானவர். இது முன்பே இந்த பெண்ணுக்கு தெரியுமாம், இருந்தும்   காதல் தெய்வீகம்(?) என்பதால் திருமணம் !?? இதில் எனது வேலை என்னனா இந்த இருவரையும் சேர்த்து வைக்கணும். அதுதான் எப்படினுனே எனக்கு புரியல. இவங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சுட்டா, அந்த பாவப்பட்ட முதல் மனைவி, இரு சிறு குழந்தைகளின் நிலை !

முதல் மனைவி பேச்சைக்  கேட்டுவிட்டு கர்ப்பிணி என்னை கைவிட்டுட்டார்னு ஒரே அழுகை. இந்த பிரச்சனையில் நான் என்ன செய்யணும் என்று எனக்கு ஆலோசனை என்ற பெயரில் கட்டளை வந்தது வட  மாவட்டத்  தலைவியிடம் இருந்து... சமூக நலத்துறையிடம் ஒரு புகார் மனு எழுதிக்கொடுக்கணும், அவங்க அனுப்புகிற  கடிதத்தைப்  பார்த்து அவன் வருவான், பேசி முடிக்கணும் என்று. நானும் அந்த தலைவி சொன்னபடி எல்லாம் செஞ்சேன். எனக்கு முதல் கேஸ் வேறயா ? நீதி நியாயம் எல்லாத்தையும்  கொஞ்சம் ஓரமா வச்சுட்டு ரொம்ப சின்சியராப்  பொறுமையைக்  கையாண்டேன்.

இதற்கிடையில் இந்த பெண்ணை இவளோட பெற்றோர் வீட்டை விட்டு வெளில அனுப்பிட்டாங்க, சில துணிகளை தோழி வீட்டில் வைத்துவிட்டு மொபைல் போன், ஹான்ட் பேக் உடன் தினம் பஸ்ஸில் திருநெல்வேலி வருவதும் சாயங்காலம் ஊருக்குப்  போவதுமாக இருந்தாள். செலவுக்கு பணம் இல்லன்னு பணம் கொடுத்துச்  செலவுக்கு வச்சுக்க சொன்னேன். இரண்டு நாள் கழிச்சு "என் வீட்டுக்காரரும் அவர் மனைவியும் என்னை அடிக்கிறாங்க  , நெல்லை பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன்" னு போன். பதறியடிச்சு ஓடி வந்தால் , அடியால் வீங்கிப் போன  முகத்துடன் இவ மட்டும் நிற்கிறாள்...! ஜூஸ் வாங்கிக்  கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன்.

"கால் பண்றேன், அவங்ககிட்ட நீங்க பேசுங்க" என்றாள்,  போனை எடுத்தது  முதல் மனைவி, 'ஏன் இப்படி அடிச்சிங்க' னு நான் கேட்ட அடுத்த செகண்ட் 'ஓ அந்த லெட்டர் அனுப்புனது  நீதானா, அவளுக்கு தான் புத்தி இல்லைனா  உனக்கு எங்க போச்சு புத்தி, அவளுக்கு போய் பரிஞ்சுட்டு வரியே , கல்யாணம் ஆனவர்னு தெரிஞ்சும் வந்துருக்கானா அவளுக்கு பேர் என்ன' அப்டி இப்டின்னு கெட்ட வார்த்தைல திட்ட அப்படியே ஆடிப் போயிட்டேன், டக்னு போன்ன கட் பண்ணிட்டேன்.  ஆனா அவ கேட்டதுல இருந்த நியாயம் புரிந்தது.  'நீ ஊர் கிளம்பிப்  போ நாளைக்கு பேசிக்கலாம்னு இந்த பொண்ண அனுப்பி வச்சேன்.  

ஏதோ ஒரு வேகத்துல காதல், கல்யாணம் என்று போனாலும் இப்போது இந்த பெண்ணை விட்டு விலகுவது தான் அந்த ஆணின் நோக்கமாகத்  தெரிகிறது. ஏற்கனவே என்னிடம் பேசிய அந்த மாவட்டத்  தலைவி மறுபடி கால் பண்ணி, "அவன் மாசம் இருபதாயிரம் வாங்குறான் இல்லை அதுல பத்தாயிரம் மாசாமாசம் இவளுக்கு கொடுத்துத்தான் ஆகணும், இவளுக்கும் உரிமை(?!) இருக்கு, அதனால அவனோட ஊருக்கு நீங்க கிளம்பிப்  போங்க , போய் பேசுங்க, அதுக்கு பிறகு தான் இந்த பொண்ணு தன்கிட்ட இருக்குற அவனோட சர்டிபிகேட் , ரேசன் கார்ட் எல்லாம் தருவா, அப்டின்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டு வாங்க"னு !! எனக்கு அப்போதான் புரியுது , இந்த பெண் முன்னாடியே  உஷாரா அவனுடைய முக்கிய ஆவணங்கள் எல்லாம் கைப்பத்திக்கிட்ட விஷயம்...அவங்கக்கிட்ட மெதுவாகச்  சொன்னேன், 'மேடம் இந்த பொண்ணு சம்பந்தப்பட்ட எதுவும் என் மனசுக்கு சரினு படல, மேற்கொண்டு இதுல  நான் தலையிடுறதா இல்லை சாரி' னு சொல்லி போனை வைத்துவிட்டேன்  .

நல்லது பண்ணலாம்னு நினைச்சா 'எது நல்லது' என்பதில் எனக்கு குழப்பம்.

எனக்குள்  நிறைய கேள்விகள் !! இந்த விசயத்தில் நிறைய தவறுகள், குளறுபடிகள்... என் மனசாட்சிக்கு விரோதமாக என்னால் செயல்பட முடியவில்லை. அந்த பெண்ணைப்  பொருத்தவரை உதவி என்று கேட்டுச்  செய்ய முடியாமல் போனது வருத்தம் என்றாலும் ஒரு பெண்ணிற்கு உதவுவதாகச்  சென்று இன்னொரு பெண்ணுக்கு துரோகம் எவ்வாறு இழைப்பது...

* முதல் மனைவி உயிருடன் இருக்க இரண்டாவது திருமணம் எப்படி ?

* திருமணம் கோவிலில் வைத்து  நடைபெறவில்லை, கோவில் குருக்கள் மறுக்கவே கோவில் வாசலில் தாலியைக்  கட்டிக் கொண்டாயிற்று.

* செல்போன்

ஒரு ராங் காலோ, மிஸ்டு காலோ போதும் காதல் என்ற பெயரில் ஒரு கலாசாரச் சீரழிவு அரங்கேற...குரலை வைத்து ஒருவரது குணம், படிப்பு, அழகு, அந்தஸ்து கண்டுபிடித்து விட முடியும் என்று நம்பி தொலைந்துப் போகும் ஆண்களும், பெண்களும் இன்று அனேகம். தனக்கு திருமணமானது எங்கே பெண்ணுக்கு தெரியப் போகிறது என்று பெண்ணை ஏமாற்றும் ஆண்கள்...ஆணை எப்படி தன் பிடிக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று பல சூழ்ச்சிகளைச்  செய்யும் பெண்கள் ! இப்படி நம் சமூகம் ஏதோ ஒன்றை நோக்கி வேகமாகச் செல்வதை போலத் தெரிகிறது. இது மிக மோசமான ஒரு நிலை!    

இத்தனை குளறுபடிகள், தவறுகள்  உள்ள ஒரு பிரச்னையை ஒரு பெரிய அமைப்பு எப்படி ஒரு தலைபட்சமாகப்   பார்க்கிறது என்று எனக்கு புரியவில்லை. அமைப்பு என்பது ஒரு சிலர் சுயமாக எடுக்கும் முடிவா ? பலர் கலந்துப் பேசி எடுக்கும் முடிவா ? பலர் கலந்துப்  பேசி எடுப்பதாக இருந்தால் அதில் இடம் பெற்ற ஒருவருக்குமா இது ஒரு தவறான வழிகாட்டுதல் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணிற்கு வாழ்வு பெற்றுக்  கொடுப்பதாக கூறிக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்ணின் வாழ்க்கையை சிதைப்பதல்லவா இது.  

ஒரு பெண்ணின் வாழ்வைக்  கெடுத்தவன் என்று அந்த ஆணுக்கு வேண்டுமானால் தண்டனை கொடுக்கலாம், அப்படிக் கொடுத்தாலும் பாதிப்பு அந்த மனைவிக்கும் இரு  குழந்தைகளுக்கும் தான்...அனைவரையும் அழைத்து யாருக்கும் பாதகம் இல்லாமல் பேசி முடிப்பது ஒன்றுதான் இப்போதைக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் ஆனால் இது நடப்பதற்கு ஒரு சதவீதமும் வாய்ப்பு இல்லை என்பதுதான் என் வருத்தம். 
   
ஒருதலை பட்சமானதா மகளிர் அமைப்புகள், மனித உரிமைக்  கழகங்கள் போன்றவை !!??

மகளிர்க்கு பாதுகாப்பாய் இருக்கவேண்டியது தான் அதற்காக  ஒரு பெண் சொல்லிவிட்டாள்  என்று  சம்பந்தப்பட்ட ஆணை  மட்டுமே குற்றவாளியாக கூண்டில் நிற்க வைப்பது என்பது தவறான ஒன்று. இந்த பெண் விசயத்தில் அந்த தலைவி நடந்துக்  கொண்ட விதம் மனித உரிமை அமைப்புகள் ,மகளிர் அமைப்புகள் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்திவிட்டது. கடிவாளம் கட்டிய குதிரையை போல ஒரே திசையை மட்டும் பார்ப்பார்கள் போலும். அவர்களின் ஒரே எண்ணம் அந்த ஆணிடம் இருந்து மாதம் பத்தாயிரத்தை வாங்கி இந்த பெண்ணிடம் கொடுத்துவிட வேண்டும் என்பதாக இருந்தது. அதே நேரம் அந்த முதல் மனைவியின் நிலைமையைப்  பற்றிய அக்கறை துளியும் இல்லை. முறையாய் கல்யாணம் முடித்து இரு குழந்தைகளுடன் அந்த பெண் வாழ்க்கையை எப்படி சமாளிப்பாள் என்பதைப்  பற்றி சிறிதாவது யோசிக்க வேண்டாமா?

மகளிர் அமைப்பை நாடி வந்த பெண் சிறிதும் குற்றமற்றவள் என்றும் , அவள் கைக்  காட்டும் அத்தனை பேரும் தவறானவர்கள் என்பதைப்  போல பார்க்கும் பார்வையை முதலில் மாற்றுங்கள், இல்லையென்றால் அப்பாவிகள் பலரின் நிலை மிக பரிதாபம் தான். 

மகளிர் அமைப்புகள், சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்து யார் மீது உண்மையில் தவறு என்பதை ஆராய்ந்தப் பின்னரே ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஆலோசனை கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில்  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இறங்கி அமைதியாய் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைச்  சிதைத்துவிடக் கூடாது.

'அவன விட்டேனா பார், ஒரு வழி பண்ணிடுவேன், கால்ல விழ வைக்கிறேன், ஆம்பளைனா அவ்ளோ திமிரா, இவன மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கிறேன், அவன்கிட பணத்தை வாங்காமல் விட கூடாது' என்பதை போன்ற கூப்பாடுகள் போடும் இடமா மகளிர் அமைப்புகள்...??!!! ஒரு பெண் புகார் கொடுத்துவிட்டாள் என்றதும் சம்பந்தப்பட்ட ஆணை எப்படியாவது குற்றவாளிக்  கூண்டில் ஏற்றியே ஆகவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் செயல்பட்டால் அந்த ஆண் நிச்சயம் ஏதோ ஒரு விதத்தில் இறுதியில் குற்றவாளி ஆகிவிடுவான். 

இந்த பெண் விஷயத்தை பொருத்தவரை இந்த பெண்ணிடமே  அதிக தவறுகள் இருக்கின்றன. செல்போன் காதலை உண்மை என்று நம்புவதும், திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் திருமணம்(?) முடித்தது,  இறுதியாக அவனது ஆவணங்கள் வைத்துக் கொண்டு மாதம் பத்தாயிரம் பணம் கொடுத்தாக வேண்டும் என்ற ரீதியில் மிரட்டுவதும் அநியாயம்.

ஒருகட்டத்தில் சமாதானமாக போய்விடலாம் என்று சம்பந்தப்பட்ட பெண் முன்வந்தாலும் இவர்கள் விட மாட்டார்கள் போல...ஆண்கள் என்றாலே அயோக்கியர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே மகளிர் அமைப்புகள் செயல்பட்டால் அதன் உதவியை நாடும் பெண்களின் கணவன்/காதலன் குடும்பத்தினரின்  நிலை நிச்சயமாக கேள்விக்குறிதான் !!

பின்குறிப்பு

எனக்கு கிடைத்த ஒரு அனுபவத்தின் வைத்து  எழுதி இருக்கிறேன். யாரையும் குற்றம் சொல்லவேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம் அல்ல. நிறைகளை சொல்ல பலர் இருப்பதை போல சமூகத்தில் தெரியும் சில குறைகளை நான் சொல்கிறேன் அவ்வளவே!  அது எப்படி இப்படி சொல்லலாம் என பெண்ணிய கொடிப் பிடிப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்!

                                                               * * * * *

இன்னும் பேசுவேன்...

கௌசல்யா  


திங்கள், மே 17

பெண்களின் அறியாமை - தாம்பத்தியம் -2

கணவனின் மென்மையான அணைப்பில்தான்  ஒரு பெண் 'தான் பாதுகாப்பாக' இருப்பதாக உணருகிறாள்.  எல்லோருக்கும் அந்த பாதுகாப்பு உணர்வு கடைசிவரை கிடைக்கிறதா? இல்லை என்று தான் சொல்லமுடிகிறது.  ஏன் இல்லை, காரணம் என்ன என்பதை பற்றிய ஒரு பகிர்வுதான் இந்த தாம்பத்தியம் என்ற தொடர் பதிவு!     

தான் யார் என்பதும் , தனது மதிப்பு என்ன என்பதையும் அறியாமல் இருக்கிறாள் பெண். பெண்களின் அறியாமை
ignorance of women


தாம்பத்தியம் சுகமானதாக இருப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது பெண்கள்தான்.  பெண்மை அங்கே  திருப்தி அடையவில்லை என்றால் அந்த வீடு வாழ தகுதி அற்றதாகி விடுகிறது,  ஒரு குடும்பத்தின் கெளரவமே அந்த குடும்பத்தின் பெண்ணின் கையில் தான் இருக்கிறது,  வீடு சொர்க்கமாவதும், நரகமாவதும் அந்த பெண்ணை பொறுத்துத் தான் அமைகிறது.  முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கணவன் ராமனாக இருப்பதும் கிருஷ்ணனாக மாறுவதும் கூட அந்த மனைவியை வைத்துதான் இருக்கிறது என்பது என் கருத்து. கணவனுக்கு எல்லாமுமாக ஒரு மனைவி இருந்து விட்டால் அந்த கணவனுக்கு வேறு எண்ணங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.  


அதனால் தாம்பத்தியம் என்று பார்க்கும்போது முதலில் பெண்களின் பலம், பலவீனங்கள் போன்றவற்றை கொஞ்சம் சுருக்கமாக (இயன்றவரை) பகிர்வது  சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.   


(நான் எழுதுவது அனைத்தும் சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்தவைதான்.    தவிர இது யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். யார் மனதையும் கஷ்டப்படுத்துவது என் நோக்கம் அல்ல,  தாம்பத்தியத்தில் தடுமாறிக்  கொண்டிருக்கும்  ஒரு சில மனங்களில் ஒரு மனதை மட்டுமாவது  எனது ஏதாவது ஒரு வரி கொஞ்சம் தொட்டுவிடாதா  என்ற ஒரு நப்பாசை தான் காரணம்)      

பெண்களின் அறியாமை :

பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறி இருந்தாலும் இன்னும் அவர்களுக்குள் இருக்கும் அறியாமை போகவில்லை என்று தோன்றுகிறது. நான் அறியாமை என்று சொல்வதின் அர்த்தம் எது என்றால், ' தங்களை பற்றி இன்னும் சரியாக அறிந்துக் கொள்ளவில்லை ', என்று சொல்வேன்.  

நீண்ட காலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் தொடர்ந்து சம உரிமை வேண்டும் என்று போராடி வருகின்றன,  அது எதற்காக.......?  பெண்கள் எப்போது தாழ்ந்து போனார்கள்? இப்போது உயர்த்தணும் என்று போராடுவதற்கு.  உண்மையில் பெண்கள் ஆண்களை விட 'எப்போதுமே ஒரு படி மேலே தான்' அப்படி இருக்கும்போது எதற்கு சம உரிமை என்று கேட்டு தங்கள் இடத்தை விட்டு கீழே  இறங்கி வர வேண்டும்.     


குழந்தை பேறு என்ற மகத்தான சக்தி நம்மிடம் இருக்கும்போது நாம் எப்படி ஆண்களுக்கு குறைந்து போவோம்...!?   அவர்களைவிட மேலே மேலே தான்!! ஆண்கள்  உடலளவில் பலமுள்ளவர்களாக இருந்தாலும் மனவலிமையில் பெண்களுக்கு ஈடாக மாட்டார்கள்.  இதை பெண்கள் மனதில் வைத்து கொண்டால் சரிசமமாக   சண்டைக்கு போக மாட்டார்கள், பரவாயில்லை  என்று விட்டுக் கொடுத்துவிடுவார்கள்!!      

சம வயது உடைய ஆண், பெண் இரண்டு பேரில் ஆணை விட பெண்ணின் அறிவு வளர்ச்சி, மன முதிர்ச்சி  அதிகமாக இருக்கும்,  இதை நான் சொல்லவில்லை விஞ்ஞானம் சொல்கிறது. அதனால் தான் திருமணத்திற்கு பெண்  தேடும்போது 2 , 3  வயதாவது குறைந்த பெண்ணை நம் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.  வயது அதிகமான பெண்ணை மனம் முடித்த ஒரு சிலர்  பாவம் அந்த பெண்ணிற்குக்  கட்டுப்பட்டுப்   போக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  

பெண்களுக்கே தங்களை பற்றிய தாழ்வுமனப்பான்மை  அதிகமாக இருப்பதால் தான் இன்னும் பலர் முன்னேறாமல் தங்கள் திறமைகளை தங்களுக்குள் போட்டு புதைத்து விட்டு வெறும் சவமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.  

பெண்களின் சிறப்பு  இயல்புகள்  :

இயல்பிலேயே பொறுமை, விடாமுயற்சி, உறுதி, உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம் ஆகிய திறமைகளை பெற்றவர்கள்தான்.  தவிர தாய்மை, அன்பு, கருணை, தயாளகுணம், விருந்தோம்பல்,  புன்னகை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றில் சில குணாதிசியங்களை மட்டும் பார்போம்.  


நவீன ஜான்சிராணிகள்!


நமக்கு ஆண் உடை தரித்து வாளெடுத்து   போரிட்ட ஒரு ஜான்சிராணியை நன்றாக தெரியும். அவர் இருந்த  அப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வாளேடுத்து போரிட்டு   ஆகவேண்டும் என்ற கட்டாயம், எனவே துணிந்து போரிட்டார்.  இன்றுவரை வீரப்பெண்மணி என்று புகழுகிறோம்.  


ஆனால் எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஜான்சிராணி இருக்கத்தான் செய்கிறாள்.  தேவைப்பட்டால் போரிடவும் தயங்க மாட்டாள்.   உண்மையில் அன்றைய ஜான்சிராணிக்கு   குறிக்கோள் ஒன்று,  போர்க்களம் ஒன்று.   ஆனால் இன்றைய பெண்களுக்குக்கோ தினம் தினம் பலவித போராட்டங்கள், விதவிதமான போர்களங்கள், அத்தனையையும் தனி ஒருவளாக சமாளிக்கும் ஆற்றல் பெற்றவள்!!           


கரண்டிப் பிடிக்கும் அதே கையால் துப்பாக்கி பிடிக்கவும் தயங்காதவள் பெண்!
  
தைரியம்:

பெண்களின் தைரியத்தை பலர் நேரில் பார்த்திருக்கலாம், சிலர் அவர்களால் வாழ்க்கையில் மேல் நிலைக்கு வந்திருக்கலாம்,  பல ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருந்திருக்கிறார்கள்.  உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று  பிரச்சனை வந்து விட்டால் கலங்கி விடாமல் முதலில் சுதாரித்து எழுபவள் பெண்..........!  கணவனையும் சோர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டு, பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று ஆராயத்  தொடங்கி விடுபவள் பெண்.........!  தன் புன்சிரிப்பால் சூழ்நிலையை மாற்றி அடுத்த கட்டத்திற்கு போக தன் கணவனை ஊக்கப்படுத்துபவள் பெண்........!  பிரச்சனை பொருளாதாரமாக இருந்துவிட்டால் கொஞ்சமும் தயங்காமல் தன் கையில்  இருக்கும் தங்க வளையலை கழட்டி கணவனிடம் கொடுத்து நிலைமையை சமாளிக்க சொல்லுபவளும் பெண்.........! பிரச்சனை  தங்கள் குழந்தைகளுக்கு தெரியக்கூடாது என்று  மறைத்து   அவர்களை உற்சாகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்பவளும்  பெண்தான் !! 


இவ்வாறு  பெண்களின் சமயோசித்த செயல்களைச்  சொல்லிக்கொண்டே போகலாம்.  

பெண்ணடிமை:

பெண்கள் ஆணுக்கு அடிமையாக அடங்கி இருந்தார்கள் என்பதை முழுமையாக ஏற்றுக்  கொள்ளமுடியாது,  அப்படி ஒரு நிலைமை இருந்திருந்தால் பல பெண்கள் அந்த காலத்தில் சில பல புரட்சிகள் படைத்திருக்க முடியாது!  (உதாரணங்களை அடுக்கிக்  கொண்டிருந்தால் தாம்பத்தியம் என்ற படைப்பு வேறு பாதையில்  பயணிக்கத்  தொடங்கிவிடும், அதனால் ஒரு வரி தகவல் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்)  பலரும் வீட்டை விட்டு வெளியில் வந்து பல வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு புகழ் பெற்று இருந்தார்கள்.  வீட்டில் இருந்த பெண்களும் நல்ல குடும்ப தலைவிகளாக இருந்து தத்தம் பிள்ளைகளை நன்மக்களாக வளர்த்து உயர்த்தினார்கள்.

பெண்களின் மனநிலை எந்த காலத்திலும் ஒன்று தான்,  மாற்றங்கள் சூழ்நிலையை  பொறுத்து மாறுமே தவிர பெண், பெண்ணாகத்தான் எப்போதும் பரிமளிக்கிறாள்.  

தான் எப்படி வாழவேண்டும் என்பதை அந்த பெண்தான் தீர்மானிக்கவேண்டும்.   கோபுரகலசமாகவா?   குத்துவிளக்காகவா?  அல்லது சாதாரண தெருவிளக்காகவா?  என்பது அவள் முடிவிலும், அவள் வாழும் வாழ்க்கையை பொறுத்தும்தான் இருக்கிறது!
   
கணவன், மனைவி உறவு பாதிக்கப் படுவது ஏதோ ஒருநாள் பிரச்சனையால் மட்டும்  ஏற்படுவது இல்லை, இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.  மிக முக்கியமான காரணமாக இருப்பது ஆண், பெண் வளர்ந்த விதம்தான்.   
 
பெண்கள் வளர்ந்த விதம்:


முதலில் பெண்கள் வளர்ந்த விதத்தில் இரண்டு வகைகளை கொஞ்சமாக பார்ப்போம்.    பெண்களை அதிகமாக அடக்கி வைப்பது எப்படி தவறோ அந்த அளவிற்கு சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதும் தவறு என்பது என் கருத்து.  

அடக்கி வைத்து வளர்க்கப்படும் பெண்கள் எப்போது இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்ற எண்ணத்திலேயே வளருவார்கள், பின் திருமணம் முடிந்ததும் தன் மேல் திணிக்கப்பட்ட அடக்கு முறையை தன் கணவன் மேல் காட்ட தொடங்குவார்கள்,   ஒருவகையில் இதை  superiority complex என்றுகூட சொல்லலாம்.   தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு வித மயக்கத்தில் நடப்பார்கள், தனது அடிமைத்தன  வளர்ப்பு கணவனுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் தொடங்கி தன் பேச்சை மட்டும்தான் கேட்கவேண்டும் என்பதில் முடியும். எதை எடுத்தாலும் சண்டை, சச்சரவு என்று தான் இருக்கும். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் தற்கொலை என்ற ஆயுதம் பிரவோகிக்கப்படும்.   கணவன் அப்பாவி ஆக இருந்துவிட்டால் தப்பித்து விடுவார்,  மாறாக விவரமானவராக இருந்து  விட்டால் தினம் இங்கே தாம்பத்தியம் பயங்கரமாக அடி வாங்கும்.

மாறாக சுதந்திரமாக செல்லமாக வளர்க்கப்பட்ட பெண்களில் சிலர் திருமணத்திற்கு பிறகு கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.  புகுந்த வீட்டினரை எதிரிகளாக பார்க்கிறார்கள்,  மாமியார், மருமகள் சண்டையே இந்த வீட்டில் தான் அதிகமாக நடக்கிறது.  தனது விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தனது கணவனிடம் காட்ட தொடங்குவாள்,  கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனை தனிக்குடித்தனம் போகத்   தூண்டுவாள், கணவன் ஆரம்பத்தில் தவித்தாலும் வேறு வழி இன்றி இதற்கு உடன்பட்டு விடுவான்.  

தனியாக போனாலும் பிரச்சனை தீர்ந்து விட்டது என்றால் இல்லை என்பது பல அனுபவசாலிகளின் பதில்.  கணவன் தன்னை எப்போதும் தாங்கவேண்டும்,  சின்ன தலைவலி என்றாலும் ஓடி வந்து உபசாரம் செய்யவேண்டும்,  தன்னை ஆகா, ஓகோ என்று புகழவேண்டும், ரோட்டில் போகும்போது சும்மா கூட வேறு பெண்ணை ஏறிட்டுப்  பார்த்து விடக்  கூடாது என்பது  மாதிரி highly possessive ஆக இருப்பார்கள்.  மொத்தத்தில் இங்கே தாம்பத்தியம் தள்ளாடும்.

பெற்றோர்களால் பாதிக்கப்படும் பெண்கள்:


கருத்து வேறுபாடுகள் நிறைந்த எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் பெற்றோர்களுக்கு மகளாக பிறந்து வளர்ந்த பெண்ணின் மனம் கவலைகள், குழப்பங்கள் நிறைந்ததாகவே  இருக்கும். வெளிப்பார்வைக்கு சகஜமானவளாக தோன்றினாலும், அவளது மனம் அடிக்கடி தனிமையையே நாடும்.  எதிர்காலத்தை பற்றிய பயம் அதிகமாகவே இருக்கும். படிப்பிலும் கவனம் இருக்காது, மிக குறைந்த அளவிலேயே தோழியர் இருப்பர்.  வெளி இடங்களில் சிரித்து பேசியபடியும், வீட்டில் எப்போதும் இறுக்கமாக, அமைதியாக  இருப்பார்கள். ஏன் வீட்டிற்கு வருகிறோமோ என்ற எண்ணம் ஒவ்வொருமுறை வீடு திரும்பும்போதும் மனதில் எழும்.  

கற்பனையாக ஒரு துணையை உருவாக்கி அதனுடன் சந்தோசமாக  வாழ்வதாக கருதி எப்போதும் ஒரு கற்பனை உலகில் வலம் வந்து சுகம் காணுவார்கள்.   இவர்களில் ஒரு சிலர் தாழ்வு மனப்பான்மையுடனும்,  ஒரு சிலர் உயர்வான மனப்பான்மையுடனும்   இருப்பார்கள்.  இவர்களது எதிர்கால திருமண வாழ்கையில் இதன் பாதிப்பு நிச்சயமாக   எதிரொலிக்கும்.   அந்த புகுந்த வீடும், கணவனும்  எவ்வளவு நன்றாக, நல்லவனாக  இருந்தாலும் இந்த மோசமான பாதிப்பு கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டே தீரும்.....!!     

பல தாம்பத்தியங்கள் தடுமாற இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களும் ஒரு காரணம்!?   ஆனால் இந்த அடிப்படை காரணம் அந்த கணவனுக்கு முழுவதுமாக தெரிய வாய்ப்பில்லை என்றே சொல்லவேண்டும்.  அந்த பெண்ணிற்கும் தனது ஆழ்மனதில் பதிந்தவைதான் தனது நிகழ்கால குழப்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தாலும் பெரும்பாலும் அவளது பலவீனம் அதை ஒத்துக் கொள்ள விடுவது இல்லை.   விளைவு நல்ல குடும்பம், நல்ல கணவன் கிடைத்தும் அற்புதமான இந்த தாம்பத்தியம் உடைய தொடங்கிவிடுகிறது.........!!

               தவிரவும் ஒரு சில பெண்களின் குணங்கள்,  பெற்றோர்கள் மட்டும் உறவினர்களின் தவறான வழிகாட்டுதல்,  சொல்லப்போனால் பக்கத்து வீட்டினர்கூட குடும்பம் பிளவுப்பட காரணமாக  இருந்து விடுகிறார்கள்.   அதில் முக்கியமான ஒரு சிலவற்றை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.   தொடர்ந்து வரும் சில தலைப்புக்கள்,  


பெண்களின் மனோபாவங்கள் 
ஆண்களின் சிறப்பியல்புகள் 
ஆண்களின் மனோபாவங்கள் 
திருமண பந்தம் (இரு குடும்பங்களின் இணைப்பு விழா)
கருத்து வேறுபாடுகள் ( பிரிவு, விவாகரத்து)
தீர்வுதான் என்ன? 
சுகமான தாம்பத்தியம் இப்படித்தான் இருக்கும்.


தொடர்ந்து படியுங்கள், இதனை குறித்த உங்களது விமர்சனங்களையும் (அர்ச்சனைகளையும்),  மேலான ஆலோசனைகளையும்,   கருத்துகளையும் தயவுசெய்து தெரிவியுங்கள் அப்போதுதான் என்னால் பிற தலைப்புகளை நன்றாக தொடரமுடியும்.  


 காத்திருங்கள்.........!!    எழுத்துக்களை சுவாசிக்க... மன்னிக்கவும் வாசிக்க......!!!  

பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்
கௌசல்யா