பள்ளி மாணவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளி மாணவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 4

பிளஸ் டூ பொதுத் தேர்வு - ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ??!!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றிலும் இருக்கிறவங்க  ஏன் இப்படி கொலைவெறி புடிச்சு அலையுறாங்கனு நிஜமாவே எனக்கு புரியல. எந்த பேப்பரை பிரிச்சாலும் டிசைன் டிசைனா அறிவுரைகள்  ஆலோசனைகள் !  வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல், இந்தியா பௌலிங்க்னு வச்சுகோங்க, ஒரு விக்கெட் விழுது அந்த நேரம் நம்மாளுங்க வலது கைல ரிமோட் இருந்துச்சுனு வைங்க , மேட்ச் முடியுற வரை கை வலிச்சாலும் ரிமோட்ட கையை மாத்தாம கீழ வைக்காம இருக்குறது... கூப்டாலும் திரும்பாம சேர்ல கம் போட்டு ஒட்டுன மாதிரி அசையாம இருக்குறது......அப்டி இப்டி ஏகப்பட்ட  short time சென்டிமென்ட்ஸ் இருக்கும்.  அதுக்கு சிறிதும் குறைந்ததில்லை.... இன்றைய மாணவர்களை எல்லோரும்  படுத்தும் பாடு. 




தேர்வை தைரியமாக எதிர்க் கொள்ள வழிமுறைகள் என்று  ஒரு பெரிய லிஸ்ட்... இந்த வழிமுறைகளை பின்பற்றினால் டன் கணக்கில் தைரியம் கிடைச்சு மலையை பொறட்டி தூக்கி அடுத்தவன் தலைல  போட்டுடலாம்னா பார்த்துக் கோங்க என்பதை போன்ற ஓவர் பில்டப்க்கள் !! 

அப்புறம் பெற்றோர்களே இது உங்களுக்கு நல்லா கவனியுங்க -  இருக்குற அத்தனை காய்கறியையும் முக்கியமா பாவக்காய விட்டுடக்கூடாது அப்டியே அரைச்சு உப்பு மிளகு போட்டு பசங்க காலைல எழுந்ததும் கொடுங்க... குடிச்சதும் மூளை அப்டியே ஜிவ்னு உஷாராகி போன ஜென்மத்து ஞாபகத்தையே கொண்டு வரும் அப்புறமென்ன சும்மா ஒரு டைம் வாசிச்சு விட்டா போதும் மூளை அப்படியே கபால்ன்னு புடிச்சுக்கும்.  அப்புறம் காரத்தை சுத்தமா குறைங்க... எண்ணெய் 2 ஸ்பூனுக்கு மேல நோ நோ தான், ஆவில வேக வச்சதுனா பெட்டர்  -  தேர்வு நேர சமையல் குறிப்புகள் என்று  ஒரு லிஸ்ட். 

மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது எப்படி  என்ற மனநல மருத்துவரின் அறிவுரைகள் ஆலோசனைகள் வேறு. யோகா தியானம் எதையும் விட்டுடக் கூடாது...  இப்படி பொதுத்தேர்வை மையப் படுத்தி பக்கம்பக்கமாக எழுதி இருக்கிறார்கள்... அப்பப்பா தலை உடம்பு எல்லாம் சுத்தறது!  ஏற்கனவே பெற்றோர்கள் ஒரு வருஷமா பிபி மாத்திரையும் கையுமா இருக்காங்க, அது போதாது என்று இந்த ஊடகங்கள் வேறு பீதியை கிளப்பி பெற்றோர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்க அவங்களும் அதை அப்படியே தங்களின் குழந்தைகளின் மீது காட்ட பிள்ளைகளின் நிலையோ மனநோய் பீடித்த நிலை. 

இதெல்லாம் விட ஒரு பெரிய கொடுமை என்னனா மாணவ மாணவிகளை மொத்தமா கோவில்ல  உக்கார வச்சு, லிட்டர் கணக்குல நெய்யை ஹோம குண்டத்துல கொட்டி யாகம் வளர்க்குறாங்க... இந்து பேப்பரில் வந்த  போட்டோவை பார்த்தால் மாணவிகளின் கண்களில் பக்தியை விட பயம்தான் தெரிகிறது. மிரண்டு போய் இருக்கிறார்கள். அப்புறம் ஒரு கூட்டம் மாணவ மாணவர்களை நிக்கவச்சு கண்ணை மூட சொல்லி பரிசுத்த ஆவியை நேரா அவங்க மேல இறக்குறாங்க ... இன்னொரு பக்கம் சர்வ மத பிரார்த்தனை என்று ஊர் ஊருக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை போல நடந்துக் கொண்டிருக்கிறது.  

இப்படி சுத்தி சுத்தி ஆளாளுக்கு மாணவர்களுக்கு பயத்தை, பதட்டத்தை வரவழைச்சுட்டு  கடைசியா அசால்ட்டா கொடுப்பாங்க பாருங்க ஒரு லெக்சர், பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் தற்கொலை செய்துக் கொள்ளாதீர்கள்...  படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை இல்லை என்று அப்டியே ஒரு பல்டி! இவ்வளவு நாள் நீங்களாம் எங்கடா இருந்திங்க, தேர்வுக்கு முன்னாடியே ஊர் உலகத்தை கூப்ட்டு மேடை போட்டு இதை சொல்லவேண்டியதுதானே . அப்பலாம் விட்டுட்டு ஒரு உயிர் போனதும் உண்மையை இப்டி கொட்டுறிங்களே என்று கத்த தோணும். சரி இப்போவாவது தெளிஞ்சுதேனு சந்தோசப்பட முடியாது... மறுபடி அடுத்த வருஷம் பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க......

இந்த ஆர்பாட்டங்களை எல்லாம் பாக்கறப்ப எனக்கு நாலு தடவை விஷம் குடிச்சு ஆறு தடவை தூக்குல தொங்கி பத்து தடவை ரயில முன்னாடி பாய்ஞ்சுனு  மாத்தி மாத்தி தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு. ஏ சமூகமே ஏ பள்ளிக்கூடமே ஏ அரசே ஏ அவனே ஏ இவனே என் இந்த குழந்தைகளை இவ்ளோ கொடுமைப்படுத்துரிங்க. பாவம் விட்டுடுங்க இன்றைய மாணவர்களை !!! பிளஸ் 1 பாடமே நடத்தாமல் பிளஸ் 2 பாடத்தை இரண்டு வருடமாக படிக்க வைத்து எப்போது பொதுத் தேர்வு வரும், முடித்துத் தொலைக்க என அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ...

ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியா வேலை பாக்குற என் தோழி தனது பிளஸ் 2 மகளின் தேர்வை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னாடியே லீவ் போட்டு மகளின் அருகில் அமர்ந்து படி  படி என்றபடி  இருக்கிறாள். மாற்றாந்தாய் கொடுமைனு  சொல்வாங்களே அதை இப்ப  என் தோழியின்  வீட்டில்  பார்க்கலாம்.

பள்ளிக்கூடமும், வீடு, சமூகமும் கொடுக்கும் மன அழுத்தங்களால் ஒவ்வொரு மாணவனும் ஒரு மனநோயாளிப் போலவே காட்சியளிக்கிறார்கள். மாணவிகள் ஓரளவு பரவாயில்லை, மௌனமாக சமாளித்து விடுகிறார்கள் ஆனால் மாணவர்கள் நிலைதான் மிக பரிதாபம்.  வீட்டில் இருந்து மூச்சுத்திணறி வெளியே வந்தால் தெருவில் போற வர்றவங்க எல்லாம் அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க.... மூணு பேர் சேர்ந்து நின்றாலே படிக்குற பசங்களுக்கு ரோட்ல என்ன வேலை என விரட்டப் படுகிறார்கள்...  வீடு பள்ளி சமூகம் எல்லாம் துரத்த வேறு எங்கே செல்வார்கள் ... யோசிங்க !?

நேத்து பேப்பரில் பார்த்தேன். பொதுத்தேர்வு நடக்குற பள்ளிக் கூடங்களில் நடமாடும் மருத்துவக் குழு ஒன்று சகல ஏற்பாடுகளுடன் தயாராக நிற்குமாம். இந்த காட்சியை பார்த்துட்டு உள்ள போற மாணவி வினாத்தாளை கையில் வாங்கியதும் மயங்கி விழாமல் இருந்தால் ஆச்சர்யம் !! 

பெற்றோர்களே !

எல்லாம் என் குழந்தைகளின் நல்லதுக்கு தானே என்று உங்களின் பைத்தியக்கார செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ளாதீர்கள்... இந்த ஒரு வருடத்தில் அவர்கள் தொலைத்த குழந்தைத்தனம் சந்தோசம் நிம்மதியை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா? கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்திற்காக நிகழ்கால ஜடங்களாக மாற்றிவிடாதீர்கள். 

இதோ நாளை தேர்வு... இப்போதும் இத படிச்சியா அத நோட் பண்ணிக்கோ என்று ஆளாளுக்கு படுத்தி எடுக்காதீர்கள் பிளீஸ்... இத்தனை நாளா அவங்களை வளைச்சு வளைச்சு  கண்காணிச்சுட்டு இருந்தது போதும்...  இனிமேலாவது  சுதந்திரமா  விடுங்க ... இறுக்கம் தவிர்த்து  பிரீயா மூச்சு விடட்டும்... அப்போதுதான் படித்தவரை  சரியாக எழுதமுடியும்... தேர்வை விட நமக்கு நம் குழந்தைகள் முக்கியம் மறந்துவிடாதீர்கள் !!!   

நாளைக்கு பிளஸ் 2 தேர்வை எழுதப் போகும் மாணவர்களுக்கு நாம் சொல்லக் கூடியது ஒன்றே ஒன்றுதான்... 

'படிச்சிருக்கிறோம் எக்ஸாம் எழுதப் போறோம்' என்ற மனநிலையோடு  மட்டும் சந்தோசமாக தேர்வை  எதிர்க் கொள்ளுங்கள் ... என் அன்பு வாழ்த்துக்கள் !!! 



செவ்வாய், பிப்ரவரி 17

மாணவர்களை தரம் பிரிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை...??!



குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற   கனவுகளுடன் தேடித் தேடி பள்ளிகளில் சேர்த்தால் மட்டும் போதாது  அங்கே நமது  குழந்தைகளுக்கு உளவியல் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுகிறதா எனவும் கண்காணிப்பதும் இன்றைக்கு அவசியமாகிவிட்டது. 

எனது மகன்  படிக்கும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் டாப்பர்ஸ்(Toppers), ஸ்லோலேனர்ஸ்(slow learners) என்ற பிரிவுகள்  உண்டாம். அதாவது  மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிக்கிறார்கள். பாடங்கள் அனைத்தும் நடத்தி முடித்திவிட்ட நிலையில் ஸ்லோலேனர்ஸ் தினமும் பள்ளிக்கு சென்று தனியாக படிக்க வைக்கப் படுகிறார்கள். டாப்பர்ஸ்(முதல் நிலை மாணவர்கள்) தேர்வுகளின் போது மட்டும் வகுப்பிற்கு செல்கிறார்கள், தவிர எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம் என்ற ஸ்பெஷல் சுதந்திரம் உண்டு. பாடங்கள்  குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவென்று தனி சலுகை வேறு .

இந்த முறை கீழ் சாதி மேல் சாதி என்ற பிரிவினைக்கு சிறிதும் குறைந்ததில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஸ்லோலேனர்ஸ் என்பவர்கள் பிறரின் பார்வையில் படிக்காத முட்டாள்கள் எதற்கு லாயக்கேற்றவர்கள்..  இது அவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை எண்ணங்களை எல்லாம் ஏற்படுத்தும் என்று சிறிது சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஆசிரியர் அடித்தால் உடனே பள்ளிக்கு சென்று சண்டை போடுவதில் காட்டும் வேகத்தை பெற்றோர்கள் இதை குறித்தும் காட்டவேண்டும். அடிபட்ட புண் ஆறிவிடும். ஆனால் மனதில் ஏற்பட்ட காயம் ??! அவர்களின் எதிர்காலத்தை முடக்கிவிடும் செயல் இது.

எல்லா பெற்றோர்களுக்கும் இதைப் பற்றி தெரியுமா என தெரியவில்லை தெரிந்தாலும் வருத்தப்பட இதில் என்ன இருக்கிறது, நல்லதுதானே அப்படியாவது படிப்பார்களே என்ற எண்ணம் இருந்தால் ஸ்லோலேனர்ஸ் லிஸ்டில் இருக்கும் ஒரு மாணவனை அழைத்து சாதாரணமாக விசாரித்துப் பாருங்கள், அந்த எண்ணத்தை உடனடியாக மாற்றிக் கொள்வீர்கள்,

எனது மகனின் நண்பனிடம் இது பற்றி விசாரித்தேன், அவன் சொன்னதில் இருந்து ...

* முதல்நிலை மாணவர்களிடம் நகைச்சுவையாக பேசினாலும் நோஸ்கட் பண்ணுவார்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கும்.  படிப்பின் மீது இருந்த கொஞ்ச ஆர்வமும் குறைந்துவிட்டது.

* ஆசிரியரின் 'என் தலையெழுத்து முட்டாள் பசங்க உங்களை வச்சு மேய்க்கணும்' என்ற  புலம்பலை அடிக்கடி கேட்க நேரும்.

* பள்ளிகளுக்கிடையே நடைபெறும் district level , state level விளையாட்டுப் போட்டிகளுக்கு Toppers மட்டுமே அனுப்பப்படுவார்களாம். (இந்த மாணவன் ஒரு foot boll player) திறமை இருந்தும் ஸ்லோலேனர்ஸ் விளையாட்டில் தவிர்க்கப் படுகிறார்கள்.

* சாதாரண குறும்புகளும் ஸ்லோலேனர்ஸ் செய்யும் போது பெரிதுப் படுத்தி பார்க்கப் படுகின்றன.

* மாணவர்களிடையே நட்பு இருக்கும் ஆனால் ஒற்றுமை இருக்காது !!

* பள்ளிக்குள்  உள்ளே ஏற்படும் வெறுப்பு வெளியிடங்களிலும் எதிரொலிக்கும்.

ஸ்லோலேனர்ஸ் என்ற பதம் மாணவர்களின் மனதை புண்படுத்தும் என்பதை உணர்ந்த ஆசிரியை ஒருவர் late blumers என்று மாற்றினார் .

என்றும் கூறினான்.

மாணவர்களிடம் பாகுபாடு காட்டும் போது அவர்களுக்குள் போட்டி பொறாமைகள் ஏற்படுகின்றன. ஒரு கட்டத்தில் இவை கைகலப்புக்கு கொண்டு செல்லும். இளவயது குற்றங்களின் காரணம் இன்றைய பள்ளிகளில் அல்லவா இருக்கிறது என்றெல்லாம் எண்ணி தனியார் பள்ளிகளில் நடக்கும் இந்த கொடுமையை  அரசு கவனிக்காதா தட்டி கேட்காதா என் மனம்  புழுங்கினேன்.

ஆனால்,  தற்போது தமிழக பள்ளி கல்வித்துறையே தரம் பிரிக்கச்சொல்லி  அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது என்பதை செய்திகளின் மூலம் அறிந்து அதிர்ந்தே விட்டேன்.

அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் பள்ளிக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உள்ள சில மட்டும் உங்கள் பார்வைக்கு...

* அரையாண்டு தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் இடை கடை என்று மாணவர்களை பிரிக்க வேண்டும்.

* கடைநிலை மாணவர்கள் சிறிதும் சிந்தனையில்லாத பரிதாபத்திற்குரியவர்கள்.

* இதில் நம்பர் 1 & 2 பிரிவுகள் டிவி பக்கமே திரும்ப கூடாது. அதே தரத்தில் உள்ள பிற மாணவர்களுடன்  மட்டுமே பேச வேண்டும். கடை நிலை மாணவர்களுடன் பிற மாணவர்கள் பேசக் கூடாது.

* பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 நிமிடங்களுக்குள் மதிய உணவை உண்டு முடித்துவிட வேண்டும். உடனே படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இந்த ரீதியில் தொடரும் அரசின் விளக்கெண்ணை அறிக்கையை இதுக்கு மேல் சொல்லவே வெறுப்பாக இருக்கிறது. 100/100 தேர்ச்சி விகிதம் இருக்கவேண்டுமென்றால் இதையெல்லாம் கண்டிப்பாக செய்யுங்கள் என்று ஆசிரியர்களுக்கு கட்டளை இட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு விடப் பட்ட இந்த அறிக்கை முட்டாள்தனத்தின் உச்சம். பெருந்தகை காமராஜர் அவர்களின் வரலாறு தெரியாத இது போன்றவர்கள் கல்வித்துறையில் இருப்பதே சாபக்கேடு.  விஞ்ஞானிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை பலர் பள்ளி இறுதியை கூட முடிக்காமல் வாழ்க்கையில் சாதித்ததை கல்வித்துறைக்கு யார் எடுத்துச் சொல்வது.

மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் தரத்தை நிர்ணயிப்பதும்  அதையும் பள்ளிக் கல்வித்துறையே வழிமொழிவதும் இங்கே மட்டும்தான் நடக்கும் . ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களை நீ அறிவாளி நீ முட்டாள் நீ எதுக்கும் லாயக்கற்றவன் என மற்றவர்கள் முன்னாள் சுட்டிக்காட்டி பிரித்து வைத்த பின்னர் அவர்களுக்குள் ஒற்றுமை என்பது எப்படி இருக்கும். அரையாண்டுத் தேர்வு முடிவுக்கு பிறகு நேற்று வரை நண்பனாக தோளில் கைப் போட்டுப் பேசிக் கொண்டிருந்தவனிடம் இனி அவனிடம் பேசாதே என்பது எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும். அதிர்ச்சி அவமானம் தாழ்வு மனப்பான்மை அனைத்தும் ஒரு சேர மனதை தாக்க வெளியே சிரித்து உள்ளே அழும்  நிலை பரிதாபம். தனது நண்பன் தன்னைவிட இரண்டு மார்க் அதிகமாக எடுத்தாலே முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பருவம் இது.  அதும் தவிர பெற்றோர்களே நீ வீக் என்று பள்ளியே சொல்லிடுச்சே என குத்தி காட்டும் விபரீதமும் இருக்கிறது.

நன்றாக படிப்பவர்களுடன் பிற மாணவர்களும் கலந்து அமர்ந்து படிக்கும் முந்தைய குரூப் ஸ்டெடி முறை நல்லதொரு முறை. மாறாக     சமத்துவத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய பள்ளிகளை மாணவர்களை தரம் பிரிக்கச்  சொல்லும் பள்ளி கல்வித்துறையின் செயல்  கடும் கண்டனத்திற்குரியது.  (இன்று மதிப்பெண்கள் அடிப்படையில் தரம் பிரிப்பார்கள் நாளை சாதி, மத அடிப்படையில் பிரித்தாளும் பிரிப்பார்கள்)



Slow learners  மன உளைச்சலை ஏற்படுத்தும் இம்முறை Toppers மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதே உண்மை.  தரம் பிரிப்பதை பற்றி பிளஸ் 2 படிக்கும் என் மகனிடம் கேட்டேன்,

'Toppers க்கு அதிக  பிரசர் இருக்கும். பள்ளியின் கெளரவமே உன் கைல தான் இருக்குன்ற மாதிரி ஓவர் பில்டப், டார்சர் எல்லாம் இருக்கும். ஒட்டுமொத்த ஆசிரியர்கள், பள்ளியின் கவனமும் நம்ம மேலேயே  இருந்தால் சுதந்திரமாக இயல்பாக நடக்க முடியாது.  இப்போ என்னை எடுத்துக்கோங்க இந்த இரண்டு category  பத்தியும் நான் கேர் பண்ணமாட்டேன். நான் free bird, படிக்கிறதும் படிக்காததும் என் இஷ்டம், யாரும் வலுகட்டாயமா என்மேல பிரஷரை ஏத்த முடியாது, சோ சந்தோசமா இருக்கிறேன்' என்று கூறினான்.  இந்த மனப்பக்குவம் எல்லா மாணவர்களுக்கும் இருக்குமா என்று சொல்ல முடியாது.

 குழந்தைகளுக்கு இந்த மனப்பக்குவத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கையில் இருக்கிறது. ஒருபோதும் என் மகனை நான் படி படி என்று வற்புறுத்த மாட்டேன், படிப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி, அதுவே வாழ்க்கையல்ல என்றே சிறு வயதில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். என் மகனும் டியுஷன்,ஸ்பெஷல் கிளாஸ் என்று இதுவரை போனதில்லை, பத்தாம் வகுப்பில் 468 மார்க் எடுத்தான், அவ்வாறே  பிளஸ் 2 விலும் எடுப்பான்,  மேல்படிப்பு என்ன என்பதையும் அவன் முடிவு செய்திருக்கிறான்.  அதனால் அதற்கேற்றாற்போல் மார்க்  எடுக்கவேண்டும் என்று படிக்கிறான். அது போதும்.

பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளின் மனதை பக்குவபடுத்தி வைத்துவிட்டால் பள்ளியும், கல்வித்துறையும் மாத்தி மாத்தி எத்தகைய பிரஷர் கொடுத்தாலும் அது நம் குழந்தைகளை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை.  பள்ளிகளுடன் மல்லு கட்டுவதை விட  இது சுலபம் அல்லவா ?!

இதோ தேர்வு நெருங்கியே  விட்டது. டிவி, கிரிக்கெட் பார்க்கட்டும் தப்பில்லை. மாணவர்களுக்கு தேர்வை பற்றிய பயம் அதிகம் இருக்கும், அதை களைந்து அவர்களின் மனதை ரிலாக்ஸ் ஆக  இருக்குமாறு மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.  மதிப்பெண்ணை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நம்புங்கள் !! அவர்கள் உங்கள் குழந்தைகள் !!