சீமை கருவேலமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சீமை கருவேலமரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 19

பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

முன்னுரை :

மரங்களை வெட்டுங்கள் என்று ஒரு பதிவை போன வருடம் இதே ஜூலை மாதம் எழுதினேன். அந்த பதிவு பலருக்கும் பதிவுகளாகவும், மெயிலாகவும் சென்று சேர்ந்தது. இன்றும் பகிர்ந்துகொள்ளபட்டு வருகிறது. கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் இந்த பதிவு பல்வேறு தளங்களில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது...இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த மரத்தின் நச்சுத்தன்மை பற்றிய ஒரு விழிப்புணர்வு பலரிடம் சென்று சேர்ந்தது என்பதை குறித்து எனக்கு ஒரு நிறைவு. ஆனால் அது மட்டும் போதாது... அதில் ஒரு சிலர் பின்னூட்டத்தில் கருவேல மரம் என்பது மருத்துவத்திற்கு உரியது, நல்ல மரம் தானே என்று சந்தேகத்தை எழுப்பினர்...அதற்கு ஒரு விளக்கமாக எனது இந்த பதிவு இருக்கும் என நம்புகிறேன்.
            
மண் வளத்தை காக்கவும், மழை பொழியவும் நாடெங்கும் மரங்களை நடவேண்டும் என்று ஒரு பக்கமும், மழை நீரை சேமித்து நிலத்தின் நீர்வளத்தை பெருக்குங்கள் என்றும் அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டு வருகிறது. இதை விட மிக முக்கியம், சீமை கருவேலமரத்தை வேருடன் அகற்றுவது. முழுமுயற்சி எடுத்து இதை செய்தாலே போதும். நம் நாட்டின் மண் வளமும் நீர்வளமும் காக்கப்படும்.

நல்ல மரங்களை வளர்ப்பதற்கு முன் மண் வளத்தை கெடுக்கக்கூடிய நச்சு மரங்களை வெட்டி எறிய வேண்டும் !

இரண்டு மரங்களுக்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நாம் அறிந்துகொள்வது அவசியம்.

கருவேல மரம் என்ற பெயரில் நல்ல மரம் ஒன்று இருக்கிறது. அதன் வேதி பெயர்அகசியா நிலோடிகா (Acacia nilotica).  இம்மரம் இயற்கையாக நம்நாட்டில் வளரக்கூடியது. மருந்துபொருளாக பயன்படுகிறது. 

இம்மரத்தினை பற்றி மேலும் தகவல்கள் தேவை எனில் இங்கே சென்று பார்க்கவும்... 


   மரம் 

இலை, பூ 

                                                                                                  காய் 

* நச்சுமரம் என்று சொல்லபடுவதின் வேதி பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா(Prosopis Juliflora) தமிழில் சீமை கருவேலம், வேலிக்காத்தான்,டெல்லி முள் என்றும் அழைகின்றனர். இதன் பூர்வீகம் மெக்சிகோ, கரிபியன் தீவுகள், தென் அமெரிக்கா ஆகும். 

                                                                              மரம் 
                                                                       

                                                    இலை, பூ 
                                  
                                                                            காய்

இம்மரம் 12 அடி வரை வளரக்கூடியது...இதன் வேர் 175 அடி வரை செல்ல கூடியது...இதனால் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை பாலை நிலமாக மாற்றிவிடுகிறது.

பெரிய பாதிப்புகள் 

நிலத்தடி நீர் வற்றி போய்விடுகின்றன.

புல் பூண்டு போன்றவற்றை வளரவிடுவதில்லை, இதனால் கால்நடைகளுக்கு உணவு கிடைப்பதில்லை.

மழை இல்லாத காலங்களில் காற்றில் இருக்கும் நீரையும் எடுத்துகொள்வதால் இவை விரவி இருக்கும் இடங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. 

இது வெளிவிடும் நச்சு காற்றை சுவாசிப்பதால் மனிதனின் மனநிலையும் பாதிப்படைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. கோபம்,முரட்டுத்தனம் மிகுந்த மனிதனாக மாற்றி  விடுகிறது ! ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்கள் மிகுந்த வறட்சியாக காணபடுவதற்கு இம்மரங்களே காரணம்...!!?  

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறேன்.  

விறகு தேவை என்பதற்காக வளருங்கள் ஆனால் வளர்க்க கூடிய இடம் நல்ல விளைநிலங்கள் அல்ல.....பாலைவனம் !!

அடுப்பெரிக்க ஏழைகள் எங்கே செல்வார்கள் என்று எதிர் கேள்வி எழும். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யபட வேண்டும்.

* இலவச கேஸ் அடுப்பு இணைப்பு அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும்.

* இயற்கை சாண எரிவாயு, காய்கறி கழிவுகளில் இருந்து வாயு உற்பத்தி போன்றவற்றை முழுவீச்சில் செயல்படுத்த முன் வர வேண்டும்.

விவசாய நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. சமைக்க உணவு பொருள் இல்லாமல் வெறும் விறகை வைத்து என்ன செய்ய ?!!

இன்றைய மக்கள் அடுப்பெரிக்க வேண்டும் என்பதற்காக நாளைய தலைமுறையினர் குடிநீருக்கே அவதிப்பட வேண்டுமா ??

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் என்றால் மிக வருத்தமாக இருக்கும், ஆம் இங்கே இருந்து செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.

கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள், ஆனால் அவர்களின்   தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்லும்...!

உடனடி தேவை : வரையறுக்கப்பட்ட திட்டம் 

அறிவொளித்திட்டம் கொண்டுவந்த போது நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நச்சுமரத்தை ஒழிப்பதற்கும் அப்படியொரு திட்டம் அவசியத் தேவை.

இம்மரத்தை பயன்படுத்தி தொழில் நடத்தும் தொழிற்சாலைகள் இதன் தீமையை புரிந்து கொண்டு பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். அரசாங்கமும் இம்மரத்தை கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்களை தடை செய்ய வேண்டும்...இதன் புகை கூட நமக்கு பகை ! 

நமது அரசாங்கம் இவ்விசயத்தை கருத்தில் கொண்டு துரித கதியில் செயல்திட்டம் வரையறுக்க வேண்டும்...மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், வேளாண்மை அமைப்புகளும் அதை நடைமுறைபடுத்த தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். அதற்கு முன் மக்களுக்கு இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். விவசாயிகளால் செலவு செய்வது கடினம் எனவே அரசாங்கம்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.மரம் வளர்க்க, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றிற்கு பணம் செலவாகிறது.....ஆனால் இப்போது மற்ற எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியம் இந்த மரத்தை வெட்டுவது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

ஒருவேளை இம்மரத்தை முற்றிலும் நாம் ஒழித்து விட்டாலும், நம் மண்ணை இவற்றிடம் இருந்து மீட்டு எடுத்தாலும் விவசாயத் தொழிலை உடனே அதில் செய்ய இயலாது, சில காலங்கள் கழித்தே அது வேளாண் பயன்பாட்டுக்கு வரும் என்பது ஒரு வேதனையான நிதர்சனம். அந்த அளவிற்கு இதன் நச்சு தன்மை மண்ணை பாழ்படுத்தி வைத்திருக்கிறது.கூடிய சீக்கிரம் இவை அழிக்கப்படவில்லை என்றால் விவசாய தொழிலே முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது !!?

உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் மரங்களை முதலில் அகற்றுங்கள் (வெட்டினால் போதாது மீண்டும் துளிர்த்துவிடும், வேருடன் அகற்றுங்கள்)


கெட்டதை நாம் எதிர்க்காமல் வளர்த்து வந்தோம் என்றால் அது இன்னும் பல மடங்கு வலிமையுடன் நம் பிள்ளைகளை தாக்கும். நம் குழந்தைகளுக்கு பொருட் செல்வங்களை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை (அவர்கள் சம்பாதித்து கொள்வார்கள்) ஆனால் நல்ல நாட்டை, நல்ல சுற்றுப்புறச் சூழலை, நல்ல நிலத்தை, நல்ல காற்றை, சுத்தமான குடிநீரை விட்டுச் செல்வோம் !! 

தலைமுறை நம்மை வாழ்த்தட்டும் நாம் மறைந்த பின்பும் !

இந்த ஒரு மரத்தை வெட்டுவது...இரண்டு நல்ல மரங்களை புதிதாய் நடுவதற்கு சமம்.

மரம் வளர்க்கணும் என்ற விழிப்புணர்வு நன்றாகவே மக்களிடம் சென்று சேர்ந்து விட்டது. அதனால்... 

 'மரங்களை நடுவோம்' என்ற கோஷங்கள் போதும் 'சீமை கருவையை வேரறுப்போம்' என்றே இனி கோஷமிடுவோம் !! 

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இதில் ஈடுபடவேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  முழு அளவில் உதவி செய்யவேண்டும்.

கடைசியாக ஒரு கேள்வி

இம்மரத்தை ஒழிப்பதற்கு என்று ஒரு பெரிய இயக்கம் தொடங்கினால் என்ன ??!!

சில ஆதாரங்கள் 

http://www.hort.purdue.edu/newcrop/duke_energy/Prosopis_juliflora.html

எனக்கு தெரிந்தவனவற்றை பகிர்ந்திருக்கிறேன், இன்னும் தெளிவான ஆதாரங்கள் நன்மை/தீமை எது இருப்பினும் அறிய விரும்புகிறேன்...மேலும் விவரங்கள்/தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்...


"நச்சு மரத்தை பற்றிய இந்த தகவல்கள் /விவரங்கள் பலரையும் சென்றடைய உங்கள் தளங்களில் இந்த பதிவை வெளியிட்டும், மின் அஞ்சல் செய்தும் கூகுள் பஸ்சிலும், முக நூலிலும் பகிர்ந்து  உதவுவீர்களாக !"




*********************************************









வியாழன், ஜூலை 22

மரங்களை வெட்டுங்கள்





உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. 

மண்ணின் வில்லன் 

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்'(வேலிகாத்தான் மரம்) தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே !

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.

அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!  





நன்றி - தினத்தந்தி