செவ்வாய், ஜனவரி 20

PM 5:05
6

முந்தையப் பதிவுகள்

வீட்டுத்தோட்டம் - அனுபவம் 1 
வீட்டுத்தோட்டம் - அனுபவம் 2 

வீட்டுத்தோட்டம் ஏன் அவசியம் என்ற கேள்வி கேட்டவர்களுக்காக
இந்த எச்சரிக்கை ரிப்போர்ட் :-

'எண்டோசல்பான்' என்ற  பூச்சிக்கொல்லியை  2 ஆம் நிலை விஷப் பொருள் என்று உலக சுகாதார நிறுவனமும் முதல் நிலையில் 2 ஆம் பிரிவை சேர்ந்த விஷப் பொருள் என அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் அறிவித்திருக்கிறது. ஆனால் உலக அளவில் எண்டோசல்பான் தயாரிப்பில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது...!! 

மேலும்

தடை செய்யப்பட்ட  இரசாயன பூச்சிக்கொல்லி  மருந்துகள் நமது உடலில் இருப்பதாக மத்திய அரசின் உணவு தரக்கட்டுப்பாடு அமைச்சகம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  Cypermethrinheptachlor, quinalphos, aldrin, chlorodane, dichlorvas, cypermethrin ஆகியவை அரசால் தடை செய்யப்பட்ட இரசாயன பூச்சிமருந்துகள் காலிப்ளவர் முட்டைகோஸ் கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் மீதும் பிற தானியங்களின் மீதும் தெளிக்கப்பட்டிருக்கின்றன என்றும்  கடைகளில் விற்கப் படும் காய்கறிகளில் அதிகளவு அதாவது ஆயிரம் மடங்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகள் இருப்பதாகவும்  கண்டறியப்பட்டுள்ளன .

* கத்திரிக்காயில் மட்டும் சாதாரண அளவை விட 860% தடை செய்யப்பட பூச்சிக்கொல்லி மருந்துகளின் தடயம் இருந்ததாம். இதற்கு அடுத்த இடத்தில் காலிபிளவரும் மூன்றாம் இடத்தில் முட்டை கோஸ் இருக்கிறதாம்.

இந்த இரசாயனப்  பூச்சி மருந்துகள் அனைத்துமே neurotoxins அதாவது நரம்பு மண்டலத்தை தாக்கி பாதிப்புக்குள்ளாகும் நச்சுப் பொருள்கள். மேலும் இவை நாளமில்லா சுரப்பிகள் ஈரல் சிறுநீரகம் அனைத்தையும் பாதிப்பவை. உணவில் நச்சுத்தன்மை மற்றும் பல ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா ஆகியவற்றின் மூலக்காரணம் இந்த தடைச் செய்யப்பட பூச்சிக் கொல்லி மருந்துகளே !

கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறான பூச்சிக்கொல்லிகள் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் மரபணு மாற்றங்கள் placenta மூலம் கருவையும் தாக்குகின்றன. ஆப்பிள் சாப்பிட்டால் நோய் வராது என்பதெல்லாம்  அந்தகாலம். ஆப்பிள் , ஆரஞ்சு பழங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தடை செய்யப்பட அளவினை விட 140% அதிகம் இருக்கின்றன.
இதோடு மட்டுமல்லாமல் மூன்று மடங்குக்கும் அதிக அளவு இரசாயனப்  பூச்சி மருந்து கலவையில்  பழங்கள், காய்கறிகள் கீரைகளை  முக்கி எடுத்த பின்னர்தான் கடைகளுக்கு  விற்பனைக்கு அனுப்புகிறார்களாம். விரைவாக அழுகி விடக் கூடாது என்பதற்காக...!

பெரிய சூப்பர் மார்கெட்டுகளில் பளப்பளப்பாக பிளாஸ்டிக் கவர்களில் இருப்பவை சுத்தமானவை என்று நம்பிவிடாதீர்கள். அதில் எவ்வளவு இரசாயனம், மெழுகுப்பூச்சு இருக்குமோ ?  
(Reference :Times of India)

மேலும்

2025 ஆம் ஆண்டிற்குள் பிறக்கும்  இரண்டு குழந்தைகளில் ஒருவர் (பிறக்கும் குழந்தைகளில் பாதி பேர்) ஆட்டிசம் பாதிப்பிற்குள்ளாவார்கள் என்ற  அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். பாதிப்பிற்கு காரணமாக கூறப்படுவது மான்சான்டோ !! இந்நிறுவனத்தின் அரும் பெரும் கண்டுப்பிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி ஒரு எமன்.


நேரம் இருப்பின் இந்த லிங்க் சென்று படித்துப் பாருங்கள்.

தாவரங்களை தாக்கும் பூச்சிகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நன்மை செய்யும் பூச்சி, மற்றொன்று தீமை செய்யும் பூச்சி. சைவ பூச்சி, அசைவ பூச்சி என்றும் சொல்வார்கள். நன்மை செய்யும் பூச்சி அசைவ இனம் பிற பூச்சிகளை ஸ்வாஹா செய்யும், இதனால் தாவரத்திற்கு பாதிப்பு இல்லை. இவற்றில் நன்மை செய்யும் பூச்சி இலையின் மேலே இருக்கும், தீமை செய்யும் பூச்சி இலையின் அடியில் இருக்கும். நாம் என்ன செய்கிறோம் பூச்சி மருந்து அடித்து நன்மை செய்யும் பூச்சிகளைக்  கொன்றுவிடுகிறோம்,  (இது சின்ன உதாரணம்தான், தொடர்ந்து பூச்சிகளின் நன்மை, தீமை பற்றி பகிர்கிறேன்)

இவ்வளவும் தெரிந்துக்கொண்ட பிறகாவது  நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் எப்படி? நம் வீட்டிற்கு பாதிப்பில்லை என்று இனிமேலும் மெத்தனமாக இருக்கக் கூடாது. நமது குழந்தைகள்/சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது?? பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதாது. நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும். என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதை விட ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற முடிவிற்கு வருவோம். தொடர்ந்து வாசிங்க, அந்த ஏதாவது என்ன என்று இப்போது உங்களுக்கு  புரியும்.

ஒன்றே செய் அதை இன்றே செய் 

ஒரே வழி இயற்கைக்கு மாறுவது தான் ! இயற்கைக்கு மாறுவது என்றால் இயற்கையை  நோக்கி நாம் சென்றாக வேண்டும், செயற்கையை தவிர்க்கவேண்டும் என்பதே. அபரீத விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியின் மறுபக்கம் வேதனையானது என்பதை   ஒத்துக் கொண்டு இயற்கையிடம் சரண் அடைந்தே ஆகவேண்டும்.  சேர்ந்தாற்போல் ஒரு வாரம் எந்தவித உடல் உபாதையும் இன்றி நம்மால் இருக்க இயலவில்லை என்பதை மறுக்க முடியாது. மாத வருமானத்தில் ஒரு கணிசமான அளவு பணம் மருத்துவத்திற்காக செலவாகிறது.  இது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா ? டாக்டரை பார்க்கிறோம், ஊசி போடுகிறார், சரி ஆனதும் அத்தோடு விட்டுவிடுகிறோம்...ஆனால் ஒவ்வொரு முறை காய்ச்சல், அலர்ஜி, வலி ஏற்படும் போதும் உள்ளுறுப்புகளில் ஏதோ பிரச்சனை இருக்கலாம் என நாம் எண்ணுவதே இல்லை. 'நோய் நாடி நோய் முதல் நாடி' என்ற குறளின் பொருளை மறந்தேவிட்டோம்.

எவ்வாறு இயற்கையை நோக்கிச் செல்வது

இது பெரிய வித்தை எல்லாம் இல்லை, நமது சுற்றுப்புறத்தை பசுமைச்  சூழ இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே போதும். மேலும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள் போடப்பட்டவைகளை அறவே தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் விளைந்த தானியங்கள்,காய்கறிகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் மேம்படும். ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான ஒரே தீர்வுதான்  வீட்டுத்தோட்டம். நெருக்கடி மிகுந்த அப்பார்ட்மென்டிலும் தோட்டம் போட வழிமுறைகள் இருக்கின்றன.  பலர் இணைந்தும் செய்யலாம்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள் வெறும் உணவு பொருள் மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை மருந்துப் பொருள்கள்.

இந்த காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மருத்துவ செலவு மிச்சம் என்பதை விரைவில் தெரிந்துக் கொள்வீர்கள்.

how old are you என்ற ஒரு மலையாளப் படத்தை பலரும் பார்த்திருக்கலாம், ரசித்திருக்கலாம். அட இப்படியுமா என ஆச்சர்யப்பட்டிருக்கலாம். அந்த படத்தை தமிழில் ஜோதிகாவை வைத்து எடுப்பதையும் கேள்வி பட்டிருக்கலாம். நிச்சயமாக அதில் சொல்லப்பட்ட விஷயம் பலரின்  மனதையும் பாதித்திருக்கும்,  மலையாளப் படம்  பார்க்காதவர்கள் தமிழில் வெளி வந்த பிறகாவது கட்டாயம் பாருங்கள்.

நடிகை மஞ்சுவாரியரின் முக்கியமான மேடைப் பேச்சு உங்களின் பார்வைக்காக...



வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தோட்டம் போடத் தொடங்குங்கள்...சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் எனது மெயில் ஐடியில் அல்லது கமெண்டில் தெரிவியுங்கள். பதில் சொல்ல காத்திருக்கிறேன்.


ப்ரியங்களுடன்
கௌசல்யா
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com


தகவல் உதவி :Angelin 
படம்:கூகிள் 
Tweet

6 கருத்துகள்:

  1. மிக அருமையான , தேவையான காலத்துக்கு ஏற்ற கட்டுரை.

    இயற்கையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், உணவு பொருள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை உணர்த்தும் விழிப்புணர்வு கட்டுரைக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பூச்சிக்கொல்லிகளை நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்துகிறோம் என்பது உண்மைதான். பளபளப்பிற்கு காரணமே நிச்சயம் மெழுகு பூச்சுதான். நல்ல பயனுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. @@திண்டுக்கல் தனபாலன்...

    உண்மையில் இது கவலைக்கொள்ளவேண்டிய விஷயம் தான். இயற்கை விவசாயத்தில் விளைந்தவைகள் மட்டும்தான் உடலுக்கு ஆரோக்கியம்.

    நன்றிகள் சார்.

    பதிலளிநீக்கு
  4. @@கோமதி அரசு...

    மிக்க நன்றிகள் தோழமை.

    பதிலளிநீக்கு
  5. @@விச்சு...

    மிக்க நன்றிகள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...