புதன், நவம்பர் 12

AM 10:26
12



காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதியினர்  ஒரு நொடி நிதானித்து இந்த வாரத்தில் உங்கள் துணை உங்ககிட்ட எத்தனை முறை ஐ லவ் யூ சொன்னாங்க...கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க... அடடா ஒரு முறை கூட சொல்லலையா? ரொம்ப பாவமுங்க நீங்க ,  பரஸ்பரம் இதைச் சொல்லக் கூட  நேரம் , மூட்  இல்லாம என்ன தாம்பத்தியம் நடத்துரிங்களோ தெரியலன்னு வருத்தப்பட்டதுக்கு அப்படி என்ன இதுல இருக்கு, நாங்க என்ன லவர்ஸ்ஆ , வயசு நாற்பது மேல ஆச்சு இன்னும் என்ன வேண்டி கிடக்கு? அப்டி இப்டின்னு ஏகப்பட்ட சலிப்பு, புலம்பல்கள்.  ஆனா அதுக்கூட பரவால ‘ஐ லவ் யூ  சொன்னாத்தான் தெரியுமா லவ் பண்றேன்னு” என்று கேட்கும்  அப்பாவிகளுக்காகத்தான்  இந்த பதிவு !

கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்து பத்து வருஷம் ஆச்சு இனியென்ன  என்று ரொமான்ஸ் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இரவின் நடுவில் ஐந்து நிமிட தேடலுடன் முடித்துக்கொண்டு விடிந்ததும் படுக்கையுடன் காதலையும் மடித்து ஓரமாக வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பறந்துவிடுகிறார்கள். இதுதான் இன்றைய தாம்பத்தியம் ! பெரிதாக ஈர்ப்பு எதுவும் இருவரிடையே இருப்பதில்லை அதனால்தான் நடுவில் ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் கோர்ட் படியேற துணிந்துவிடுகிறார்கள். இரு  மனங்களிலும் காதல் இருந்தால் மட்டுமே அந்த தாம்பத்தியம் இறுதிவரை சந்தோசமாக கழியும். மகிழ்ச்சியுடன் கூடிய தாம்பத்தியத்தில் அவர்களின் குழந்தைகளும் நன்முறையில் வளருவார்கள். எல்லாம் சரிதான் ஆரம்ப நாட்களில் இருந்த ஈர்ப்பு, காதல், கவர்ச்சி எல்லாம் எங்கையோ போய்விட்டது, மறுபடி அதையெல்லாம் எப்படி கொண்டு வருவது என்பது உங்கள் முன் நிற்கும் கேள்வி என்றால் விடை ‘ஐ லவ் யூ’

ஆமாங்க ஆமா ஐ லவ் யூ என்பது ஒரு மந்திரம். எப்படிப்பட்ட உடல், உள சோர்வையும் நொடியில் மாற்றக் கூடியது. உங்கள் துணையின் மீது கடலளவு நேசம் வைத்திருப்பீர்கள் ஆனால் அதை வெளிப்படுத்த தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பீர்கள். இதற்காக கஷ்டப்பட்டு கவிதைலாம் எழுதிடாதிங்க (இருக்குற கவிஞர்கள் இம்சையே தாங்கல) :-) உங்களின் ஒட்டு மொத்த அன்பையும் வெளிப்படுத்த ஒரே வழி ஐ லவ் யூ சொல்வது தான். உங்களுக்கே உங்களுக்கான தனிமையின் போது பேச்சின் நடுவில் துணையின் கைவிரல் பற்றி மெதுவாக ஐ லவ் யூ என்று சொல்லிப் பாருங்கள் ...நொடியில் மனதுக்குள் மத்தாப்பு வெடித்து வண்ணத்துப்பூச்சி பறக்கும் (அது எப்படி மத்தாப்புக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் லாஜிக் இடிக்குதே என்றெல்லாம் அச்சு பிச்சுன்னு யோசிக்கப்படாது, பறக்கும் அவ்ளோதான்)  அடிக்கடி இப்படி பறக்க விடுங்கள்.  அப்புறம் பாருங்க,’ சாம்பார்ல உப்பு போட மறந்து போச்சா, பிரெண்ட்ஸ் கூட வீக் எண்டு பார்ட்டி ஆ‘ கவலையே படாதிங்க, உங்க துணைக்கு கோபமே வராது.

பிடிக்காத குணம் துணையிடம் இருக்கிறதா, அதை நினைத்து கோபம் எரிச்சல் அடையாமல் சிறு புன்னகை கூடவே ஒரு ஐ லவ் யூ வுடன் அணுகுங்கள். அப்படியே அந்த பிடிக்காத குணத்தை நாசுக்காக வெளிப்படுத்துங்கள். இந்த அணுகுமுறையால் அதுவரை மாறவே வாய்ப்பில்லை என்பதை  ‘ஏன் மாறினால்தான் என்ன’ என்று துணையை யோசிக்கத் தூண்டும், பின் மெல்ல மெல்ல மாறவும் செய்வார்கள்.  இம்முறையில் மற்றொரு அனுகூலமும் இருக்கிறது ஐ லவ் யூ என்று சொல்லும்போது ஆட்டமேட்டிக்காக உங்கள் குரலிலும் ஒரு மென்மை வெட்கம் வந்துவிடும், அதன்பின்  நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேனில் தோய்த்தெடுத்தவையாக வெளி வரும். அப்புறம் என்ன நீங்கள் சுட்டிக் காட்டும் குறை, குற்றம் சொல்வதை போலவே தெரியாது ஏதோ ஆலோசனை சொல்வதை போலவே தோன்றும். கடைசியாக  ‘சீக்கிரம் சரிபண்ணிகிறேன் டியர்’ என்பதில் வந்து முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இது எவ்வளவு சுலபமான முறை என்று.      

இன்னொரு மேஜிக்கும் இதில் நிகழும் இயல்பாகவே நீங்கள் கோபம் கொண்டவராகவோ அல்லது எதிர்மறை எண்ணம் கொண்டவராகவோ அல்லது தாழ்வு மனப் பான்மை கொண்டவராகவோ இருந்தீர்கள் என்றால் அடிக்கடி சொல்லும் ஐ லவ் யூ உங்களையும் உற்சாகமான ஆளாக மாற்றிவிடும். (முகத்தை கடுகடுன்னு வச்சுட்டு குரல்ல கடுமையை ஏத்திகிட்டு பல்ல கடிச்சிட்டு வெடுக்குனா ஐ லவ் யூ சொல்விங்க) :-)

அன்பை வெளிப்படுத்த தெரியாததால் தான் பல தம்பதியர் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். மௌனமாக இருப்பது நல்லது என்று அன்பை வெளிக்காட்டாமல் இருந்தால் அன்பில்லாதவர் என்ற தோற்றம் தான் கிடைக்கும். எவ்வளவு செஞ்சாலும் அன்பா ஒரு வார்த்தை கிடையாது என்ற சலிப்பு  தான் ஏற்படும். இத்தகைய பல சலிப்புகள் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், அன்பான வார்த்தை எங்கிருந்து வருகிறதோ அங்கே பாயும் என்பதுதானே இயல்பு. மனித மனமே ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காகத்தான் போராடுகிறது. தம்பதியருக்குள் அங்கீகாரம் என்பது அன்பான வார்த்தைகளாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் கணவன் சாப்பாடு நல்லா இருக்கு’ என்பதற்கு பதில்  ‘வெகு ஜோர்டா செல்லம்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே. தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்க வார்த்தைகள் அருமையாக உதவும்.

FM ல ஒரு விளம்பரம்.  போனில் மனைவியை அழைத்து ஐ லவ் யூ என்பான் கணவன். அதற்கு மனைவி சிரித்துக் கொண்டே 'என்ன திடீர்னு, அடுத்த ரூம்ல தானே இருக்கிங்க நேர்ல வந்து சொல்லலாமே என்பாள். 'போன்ல உன் குரல் கேட்கிறப்போ அவ்ளோ அழகா இருக்கு ' என்று கணவன் சொல்ல அதன் பின் தொடரும்  போன் உரையாடல் அவ்ளோ இனிமையா படு ரொமாண்டிக்காக இருக்கும். இப்படிப்பட்ட சின்ன சின்ன பேச்சுக்கள் மூலம் தாம்பத்தியத்தை அருமையாக கொண்டுச் செல்ல முடியும். சந்தோசத்தை வெளியே எங்கும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறது என்பதை தம்பதியர் புரிந்துக் கொள்ள வேண்டும். இயந்திர உலகில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலை, வீட்டிற்கு தூங்குவதற்காக மட்டுமே வருவதை போலவே இன்றைய சூழல் இருக்கிறது. வேலையின் நிமித்தம் தொலைதூரம் பிரிந்திருந்தாலும் இணைக்கும் பாலமாக தொலைபேசி இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் பேசும் பேச்சுகளின் நடுநடுவே ஐ லவ் யூ வும் போட்டு கோங்க!

ஆமா செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஐ லவ் யூ சொன்னா சரியா போச்சா என்று சண்டையும் பிடிப்பாள் பெண், உடனே ஆண்கள் பின்வாங்கக்கூடாது, அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு இல்ல எப்போவும் ஒரே பேச்சுன்ற மாதிரி ஸ்டெடியா நிக்கணும். வெளியே சண்டை பிடிச்சாலும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்வாள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி இழப்பு போன்ற சூழலில் நானிருக்கிறேன் என்று தோள் சாய்த்துச்  சொல்லும் ஐ லவ் யூ வின் ஆறுதலுக்கு ஈடு வேறில்லை. துணையை தேற்றுவதை முழு மனதுடன் செய்யுங்கள். தவிக்கும் உள்ளத்திற்கு இது சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும். அன்பை நிலை நிறுத்தும்.

உங்களிடம் பிடிக்காததையும் பிடித்ததாக மாற்றும் சக்தி இந்த ஐ லவ் யூ க்கு உண்டு.

ஏதாவது பிரச்சனை திட்ட வேண்டும் என்று தோன்றினாலும் நீங்கள் சொன்ன ஐ லவ் யூ க்களை நினைத்து சே அவள்/அவர் நம் மீது அவ்ளோ காதலுடன் இருக்கும் போது எப்படி திட்ட என பின்வாங்கவே தோன்றும். 

ஆனால்  

ஐ லவ் யூ சொன்னா காரியம் சாதித்துவிடலாம் என்று மனதளவில் இல்லாமல் உதட்டளவில் பேசுபவர்களின் சாயம் ஒரு நாள் வெளுத்துவிடும். அதன் பிறகு உண்மையான அன்புடன் ஐ லவ் யூ சொன்னாலும் அது நடிப்பாகவே தெரியும், தாம்பத்தியம் சிதையும். கவனம் ! காதலும் அன்பும் தானாக பெருகுவதில்லை இரு மனமும் இணையும் போதே சாத்தியமாகிறது. நீங்கள் அன்பு செலுத்தினால் பதிலுக்கு அன்பு கிடைக்கும், நீங்கள் போலியாக அன்பு காட்டினால் போலியான அன்பையே பதிலாக பெறுவீர்கள்...என்பதை உணர்ந்து மனபூர்வமாக அன்பு செலுத்துங்கள் காதலை கொண்டாடுங்கள் ...உங்களின் அந்திமம் வரை !!       

98 சதவீத பெண்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்று தெரியுமா ? தங்களின் மீதுள்ள காதலை அடிக்கடி கணவன் வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இதே அவர்களின் விருப்பமும்... இவை கிடைக்காத போதே விரக்தியின் எல்லைக்கு சென்று 40% பேர் விவாகரத்து கோருகிறார்கள் 42%  பேர் வேறொரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உறவு வேறு ஆணுடன் இருக்கலாம் அல்லது தங்கள் குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்தி அதனுடன் மட்டும் நேரத்தை செலவழிக்கலாம் அல்லது ஏதோ ஒரு வேலையில்/தொழிலில்  தங்களை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆக எவ்விதமாக பார்த்தாலும் கணவனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தவிர்த்து விடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். தம்பதிகளுக்கிடையே பேசப்படும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக தாம்பத்தியத்தை கொண்டுச் செல்லுங்கள்.

வளவளனு எல்லாம் என்னால அன்பாக பேசமுடியாது பேசவும் தெரியாது என்பவர்களுக்காகவே உருவாக்கப் பட்டது தான் இந்த ஐ லவ் யூ !

சோ... காசா பணமா... சும்மா சொல்லுங்க... அடிக்கடி ஐ... லவ்... யூ... 
                                                                          
                                                    * * *
                                                            
தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'' 
கௌசல்யா 

  



Tweet

12 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. என்றாலும் இந்த " ஐ லவ் யு" நம்ம ஆட்களுக்கு ஒத்து வராது. இதை சில மாதங்களுக்கு முன்னே விரிவாக எழுதி இருந்தேன். நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.

    http://vishcornelius.blogspot.com/2014/08/i-love-you.html

    பதிலளிநீக்கு
  2. @@ விசுAWESOME...

    தங்களின் பதிவை படித்தேன், அருமையான நகைச்சுவை எழுத்துநடை. ரசித்தேன்.

    ஆனால் அதில் குறிப்பிட்டபடியான நிலை தற்போது இங்கே இல்லை, மாறி வருகிறது. இயந்திர வாழ்க்கையில் அன்பாக இருக்கிறேன் என்று செயலில் காட்டக் கூட நேரம் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு தேவையான ஒரு சுலபமான விஷயம் தான் இந்த ஐ லவ் யூ.

    பிரச்னையுடன் வந்த ஒரு தம்பதியிடம் இதை ஆலோசனையாக சொன்னேன். வொர்க் அவுட் ஆனது என்று ஒரு மாதம் கழித்து பதில் வந்தது :-))

    வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  3. அட்டகாசமான பதிவு !! :)

    40 இல் தான் அடிக்கடி ஐ லவ் யூ சொல்லணும் :) வாழ்க்கை எப்பவும் இளமையா இருக்கணும்னா நாம சந்தோஷமா இருக்கணும் அதுக்கு பரிபூரண அன்பு அவசியம் ..அதுக்கு இப்படி சின்ன சின்ன சந்தோசம் கண்டிப்பா அவசியம் ..
    இங்கெல்லாம் மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு ரெஸ்டாரண்டுக்கு கணவனும் மனைவியும் போவாங்க ..
    பிள்ளைகளை யாரிடமாவது விட்டோ இல்லை நண்பர்கள் வீட்டில் விட்டோ செல்வது வழக்கம் ..இதெல்லாம் உறவுகளை பலப்படுத்த !! பெற்றோர் சந்தோஷமாக இருந்தா வீட்டில் அவர்களின் பிள்ளைகளும் சந்தோஷமாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
  4. மிகச் சிறப்பான பகிர்வு.
    எப்பவுமே இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தால் வாழ்க்கை ருசிக்கும்..

    பதிலளிநீக்கு
  5. தாம்பத்ய பந்தம் புரியாதவர்களுக்கு இது இனிப்பான அருமருந்து!எல்லோர் வாழ்வும் இனிக்க நாசுக்காக வெளியிடப்பட்ட உயர்வான பதிவு....சான்றாக நம் மேல்திகாரி அபத்தமான வார்த்தைகளால் நம்மை திட்டும்போது ஏற்படும் வலி...அவர் நம்மை பாராட்டும் போது காணாமல் போவதை னாம் எல்லொரும் உணர்ந்திருப்போம்...இல்வாழ்வும் அப்படிப்பட்டதே...கூடியவரை இழையோடும் காதல் வார்த்தைகளை பயன்படுத்துவோம்....பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
  6. @@Angelin...

    //பிள்ளைகளை யாரிடமாவது விட்டோ இல்லை நண்பர்கள் வீட்டில் விட்டோ செல்வது வழக்கம் ..இதெல்லாம் உறவுகளை பலப்படுத்த !!//

    பசங்க ஸ்கூல்க்கு போனதும் business க்கு நாம லீவ் விட்டுட்டு சினிமா போய் பாக்குறதும் இதில் அடங்கும்!! :-))

    //பெற்றோர் சந்தோஷமாக இருந்தா வீட்டில் அவர்களின் பிள்ளைகளும் சந்தோஷமாக இருக்கும் //

    கண்டிப்பா !!! குழந்தைகள் சந்தோசமா வளரணும் என்பதை விரும்புறவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் காதலை வார்த்தைகளால் பரிமாறிக்கத்தான் வேணும்.

    குட்டியா கருத்து சொன்னாலும் அருமையா சொன்னதுக்கு நன்றி நன்றி அன்பு தோழி !

    பதிலளிநீக்கு
  7. @@-'பரிவை' சே.குமார்...

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  8. @@Ganesh R said...

    //நம் மேல்திகாரி அபத்தமான வார்த்தைகளால் நம்மை திட்டும்போது ஏற்படும் வலி...அவர் நம்மை பாராட்டும் போது காணாமல் போவதை னாம் எல்லொரும் உணர்ந்திருப்போம்..//

    நல்ல உதாரணம்.

    வருகைக்கும் கருத்திட்டமைக்கும் என் அன்பான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. மிக எளிமையாகப் புரியும்படி, நிதர்சனத்தை எழுதியிருக்கிறீர்கள்.

    உங்கள் எழுத்து செறிவாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கு ரொம்ப நன்றி சகோ, முயற்சிக்கிறேன். பிறகு சொல்கிறேன். நன்றி நன்றி,,,,

    பதிலளிநீக்கு
  11. சுவாரஸ்யமான பதிவு...இதை ஆண்கள் மட்டும் கூறாமல் பெண்களும் கூறினால் நன்றாக இருக்கும்!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...