இனிய அனுபவம்
நானும் என் கணவரும் சந்தித்த அந்த நாளையும் அதன்பின் நாங்கள் திருமணம் மூலம் ஒன்று சேர்ந்த அந்த நாளும் இன்று வரை பசுமையாய் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் ஒன்று நாங்கள் இருவரும் கணவன், மனைவியாய் மாறவே இல்லை என்பதுதான் ஒரு வருத்தம், வேற எப்படிங்க சொல்றது, காதலர்களாய் இன்னும் காதலித்தே முடியவில்லை. ( காதலில் சலிப்பு வந்தால் அப்புறம் மெதுவாய் தம்பதிகளாய் மாறி கொள்ளலாம்...நான் சொல்றது சரிதானே...?!)
தற்செயலாக நடந்த சம்பவம் ஒன்று, வாழ்நாள் முழுவதும் தொடரும் இனிய அனுபவமாக அமைவது மிகவும் அபூர்வம். ஆனால் என் வாழ்வில் அந்த அதிசயம் நடந்தது . அந்நினைவுகளை இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்வது மற்றொரு சிறந்த நினைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என் பெற்றோருடன் சென்னையில் இருந்து எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கு வந்திருந்தோம். விசேஷம் முடிந்து கிளம்பும் நேரம், எங்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் அருகில் ஒரு ஊரில் பெரிய தொழிலதிபர் குடும்பம் இருப்பதாவும் 'மிகவும் வயதான அவர்கள் உங்களை சந்திக்கணும் என்று அடிக்கடி சொல்வார்கள், காரில் தானே வந்து இருக்கிறீர்கள், ஊருக்கு போற வழியில் அப்படியே அவர்களைப் பார்த்து விட்டு போகலாம்' என்று பலவாறு சொல்லி எங்களை வற்புறுத்தி அழைத்தார். என் பெற்றோரும் சரி வயதானவர்கள் தானே சென்றுப் பார்த்து விட்டு போகலாம் என்று முடிவு செய்ததால் கிளம்பினோம்.
கிராமத்து பசுமையான வயல்களை கடந்து அந்த ஊரை அடைந்தோம். அவர்களும் மிக அன்பாக எங்களை வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்றனர். (நாங்கள் வருவது முன்பே எப்படி தெரிந்தது என்ற யோசனையுடன் உள்ளே சென்றோம்) அங்கிருந்த வயதானவர்களை எங்கள் உடன் வந்த உறவினர் இவங்க உனக்கு தாத்தா, பாட்டி வேணும் என்று கூறி அறிமுகப் படுத்தினார். என் அப்பா வழி சொந்தமாம்...இந்த விவரமே என் அப்பாவிற்கு அங்கு சென்றப்பின் தான் தெரிந்தது.( வேலை நிமித்தமாக சென்னையில் செட்டில் ஆனதால் சொந்தகாரர்கள் யார் என்றே தெரியாமல் தான் போய் விடுகிறது ) அந்த பாட்டி என் அப்பாவிற்கு அத்தை முறையாம்...!
நானும் மரியாதையுடன் ஒரு வணக்கம் போட்டு விட்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்தேன்... அமர்ந்த பின் தான் கவனித்தேன் என்னை சுற்றி கிட்டத்தட்ட 10 பேர்க்கு மேல் இருந்தனர்...??! எல்லோரின் பார்வையும் என்மேல் தான்..நானும் 'என்னடா இப்படி பார்கிறாங்க' என்று லேசாக எட்டிப் பார்த்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சும்மா சிரித்து வைத்தேன். திடீரென்று எல்லோரிடமும் ஒரு சின்ன பரபரப்பு..! வாட்டசாட்டமாக தாதா மாதிரி ஒருவர் உள்ளே வந்து எனக்கு எதிர் சோபாவில் அமர்ந்தார். என்னை பார்த்து லேசா சிரித்து என் பேரை கேட்டார்...நானும் இவர் யார் என்ற யோசனையுடன் கொஞ்சம் தயக்கத்துடன் (பயத்துடன்...! ) 'கௌசல்யா' என்றேன். அதுவே அதிகம் என்று எண்ணினாரோ என்னவோ எழுந்துச் சென்று விட்டார்.
கொஞ்ச நேரம் சென்றதும் என் அம்மா என்னை தனியே அழைத்து அந்த பையனை பார்த்தியா, "அவர்தான் மாப்பிள்ளை...எல்லோருக்கும் உன்னை பிடித்து விட்டது. உன் முடிவைக் கேட்கிறார்கள்" ,என்று ஒரு குண்டை அசால்டாக தூக்கிப் போட்டாங்க. " ஐயோ கடவுளே ! என்னமா இது, இந்த மாதிரி எந்த ஊரிலும் நடக்குமா...? தயவுசெய்து சரின்னு சொல்லிடாதிங்க. எனக்கு இந்த கூட்டத்தைப் பார்த்தாலே என்னவோ போல் இருக்கு அதுவும் அவர பார்த்தா தாதா மாதிரி...நாட்டில வேற ஆளா இல்லை ...!?" அப்படி இப்படின்னு ஒரே கத்துக் கத்திட்டேன். நல்லவேளை என் புத்தி தெரிஞ்சதால அம்மா எல்லோரையும் விட்டு தள்ளி தனியாக போய் கேட்டதால பரவாயில்லை. 'எங்களுக்கும் இங்கு வந்த பிறகு தான்மா தெரிகிறது' என்று சொல்லி என்னை சமாதானம் செய்த பின்னர் என் அம்மா அவர்களிடம் சென்று , 'ஊரில் போய் எங்கள் பசங்களிடமும் பேசிட்டுச் சொல்கிறோம் ' என்று ஒரு வழியாக சமாளிச்சு சொல்லிட்டு கிளம்பினோம்.
எங்கள வழி அனுப்புறேன் பேர்வழி என்று நான் இருந்த பக்கம் வந்து கார் கதவை அடைத்தார் பாருங்க (வேற யாரு, தாதா தான் ) அப்படியே ஆடிப் போயிட்டேன்.
வண்டியில் ஏறியதும் முதல் வேலையா எங்களை அழைத்துச் சென்ற உறவினரை முறைத்தேன் ஆனா அவர் கொஞ்சமும் அசரவே இல்லை !? எங்களை இங்கு அழைத்து வருவது அவரது ஒரு வார ஏற்பாடாம். ( என்னவொரு வில்லத்தனம்...??! )
ஊர் சென்றதும் இந்த விஷயத்தை அப்படியே மறந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து அம்மா மெதுவாய் பேச்சு எடுத்தார், "என்னமா செய்யப்போற, உன் முடிவு என்ன" என்று . நான் 'என்ன சொல்ல கொஞ்ச நாள் போகட்டும்' என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தேன். அம்மா விடவில்லை, அந்த பையனின் அப்பா உடல்நிலை மோசமாக இருப்பதால் சீக்கிரமாக கடைசி பையனின் கல்யாணத்தை பார்க்க நினைக்கிறாராம். ( அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்...? ) சரி வேற எப்படி தப்பிக்கலாம் என்று ஒரு நாள் முழுவதும் யோசித்து கடைசியாக என் உடன் பிறந்த அண்ணனை போய் பார்த்து விட்டு வர சொல்லுவோம் , கண்டிப்பா அவனுக்கும் பிடிக்காது. நாம சாதித்து விடலாம் (ரொம்ப புத்திசாலித்தனமா திட்டம் போட்டதா பெருமை வேறு பட்டுக்கொண்டேன்) என்று முடிவு பண்ணி அம்மாவை அழைத்தேன், " அம்மா அண்ணனை போய் பார்த்து விட்டு வர சொல்லுங்க, அவனுக்கு ஓ.கேனா ? எனக்கும் ஓ.கே தான் " என்றேன் ரொம்ப தெம்பாக. அவனும் தன்னுடன் இரண்டு நண்பர்களையும் அழைத்து கொண்டுக் கிளம்பினான்.
சந்தோசமாக அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்....சென்றவன் திரும்பினான்...மனதிற்குள் எல்லா கடவுளையும் வேண்டிக் கொண்டு அவன் பதிலுக்காய் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரே வார்த்தைதான் என் அன்பு அண்ணன் சொன்னான், "ரொம்ப நல்லவராகத் தெரிகிறார், இவரை மிஸ் பண்ணிடாத" அடப்பாவி கவுத்துட்டீயே டா.... (மனதிற்குள்தான் )
அப்புறம் என்ன, அவன் சம்மதமே என் சம்மதமாக எடுத்துக் கொள்ளப்பட்டு (அப்படித்தானே அக்ரீமென்ட்) வேகமாக திருமண வேலைகள் நடக்க ஆரம்பித்தன. பத்திரிக்கையும் அடித்து வந்து சேர்ந்தது....அம்மா 'மாடல் நல்லா இருக்கா ?" என்று என்னிடம் ஒன்றைக் கொடுத்தார். பார்த்ததும் அப்படியே நொறுங்கிப் போயிட்டேன்....?! திருமணம் நடக்கக்கூடிய இடம் என்பதில் St.Pauls Church என்று இருக்கிறது. 'முருகா இது என்னப்பா இப்படி ஒரு சோதனை' என்று அம்மாவை பார்க்க இதில் என்னமா இருக்கிறது, அவங்க வேதக்காரங்க தான், அவங்க முறைபடித் தானே கல்யாணம் நடக்கணும். ( என் அம்மாவிற்கு கிறிஸ்டியன்ஸ் என்றால் கொஞ்சம் பிடிக்கும், ஏன்னா அவங்க படிச்சது கிறிஸ்டியன் கான்வென்ட்) ஆனா நான் அப்படி இல்லையே எப்பவும் மனதிற்குள் 'முருகா, முருகா' என்று தானே சொல்லிட்டே இருப்பேன். இனி அப்படி சொல்ல முடியாதே. எனக்கு இந்த மஞ்சள் கயிறு, 'மாங்கல்யம் தந்துனானே' மந்திரம் இது தான் கல்யாணம் என்ற நினைப்பிலேயே இருந்திட்டேனே அதிலும் மண் விழுந்துவிட்டதே....?!!
என்னை சுத்தி எதுவோ நடக்கிறது என்று மட்டும் நல்லா தெரியுது. ஆனா சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி நானும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டே இருந்திருக்கிறேன். இப்படியாங்க சோதனை மேல் சோதனையா வரும்.
அடுத்து இரண்டு நாளில் மறுபடியும் என் பொறுமையைச் சோதிக்க ஒரு வேலை வந்தது. "கல்யாணத்திற்கு முன் ஞானஸ்தானம் கொடுக்க வேண்டும் அதனால் பெண்ணை அழைத்துக் கொண்டு வாருங்கள்" என்று போன் வந்தது. ம்... என் கையில் எதுவும் இல்லை என்று நன்றாக தெரிந்து விட்டது..நடப்பது நடக்கட்டும் என்று என் அம்மா , அண்ணன் தம்பியருடன் சென்னையில் இருந்து கிளம்பினோம். கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாள் தான் இருப்பதால் அப்பா மற்ற வேலைகளை முடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று எங்களுடன் வரவில்லை.
நாங்கள் வருவதற்கு முன்பே அவர்கள் சர்ச்சில் காத்திருந்தனர். என்னை உள்ளே அழைத்துச் சென்றனர்...பலி ஆடு மாதிரி நானும் என்ன நடக்க போகிறது என்றே தெரியாமல் தரையைப் பார்த்து கொண்டே பின் சென்றேன்...!!?
அப்போது அக்கா ஒருத்தர் என் அருகில் வந்து என் மெதுவாக, ' கௌசல்யா உன் நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்துவிடு ' என்றார்....? அதை கேட்டதுமே கண்கள் நீரை சொரியத் தயாராகி விட்டன.... பின்னர் ரிஜிஸ்டர் ஒன்றில் என்னை பற்றிய விவரங்களை கேட்டு எழுதிக்கொண்டு என்னை கையெழுத்திட சொன்னார்கள்...அது முடிந்ததும் பாதிரியார் அருகில் சென்று அவர் முன்னால் நின்றேன், சில வாசகங்களை வாசித்து என்னையும் தொடர்ந்துச் சொல்லச் சொன்னார், நானும் சொல்லிக்கொண்டே வந்தேன்...அதில் முக்கியமாக ஒரு வரி வரும், 'இன்று முதல் இயேசுவை உன் இரட்சகராய் (ஆண்டவராய்) ஏற்றுக் கொள்வாயா என்று ?? அதற்கு நான் 'ஆம்' என்று பதில் சொல்ல வேண்டும்.
மற்ற எல்லா சத்தியங்களுக்கும் ஆம் என்று உடனே சொல்ல முடிந்த என்னால் இதற்கு சிறிது தயங்கினேன்...பின் மனதைத் தேற்றிக் கொண்டு முருகனையும் மனதில் நினைத்துக் கொண்டு மெதுவாய் 'ஆம்' என்றேன். பின் புனித நீரை என் மேல் தெளித்தார் பாதிரியார்.அந்த நீருடன் மெதுவாய் என் கண்ணீரும் இறங்கியதை யாரும் கவனிக்கவில்லை.
அங்கு முழங்கால் போட்டு நின்ற என் தலைமேல் கை வைத்து பாதிரியார் ஜெபம் பண்ணினார்.. முடிந்ததும் என் பக்கமாக ஒரு கை நீண்டது அதில் பணம் இருந்தது, என்னை தன்னுடையவளாக மாற்றிக் கொண்டிருக்கும் அவரது கரம் தான் அது...! 'இந்த காணிக்கையை பாதிரியாரிடம் கொடு' என்ற மெல்லிய குரல் வந்ததும் முழங்காலில் இருந்த நான் மெதுவாய் மேல் நோக்கி பார்த்துப் பணத்தை வாங்கினேன். வேறு ஒரு ஆடவனிடம் கை நீட்டுகிறோம் என்பதையும் மறந்து ஒரு உணர்வு 'இவன் தான் உனக்கானவன்' என்று உள்ளே ஒரு குரல். ஏசுநாதரையும் எனக்கானவரையும் ஒன்றாக மனதால் நான் ஏற்று கொண்ட அந்த ஒரு தருணத்தை இன்று நினைக்கும் போதும் உணர்ச்சி பெருக்கால் கண் கலங்குகிறது. ஆண்டவன் சன்னதியில் வைத்து என் மனதில் குடியேறியவர் நிரந்தரமாக அதிரடியாக அமரவைக்கவேண்டிய சந்தர்ப்பம் ஒன்றும் இதன் தொடர்ச்சியாக நடந்தது.
இனிய நினைவுகள் தொடரும்...
மேலும் வாசிக்க கிளிக்கவும்...
சிறு குறிப்பு.
அந்த இனிய கல்யாண நாள் இன்று தான். பதினான்கு வருடங்களை இனிமையாக முடித்து பதினைந்தாவது வருடத்தில் இன்று அடி எடுத்து வைத்து இருக்கிறோம்.
ப்ரியங்களுடன்
கௌசல்யா
