செவ்வாய், ஜூலை 11

வீட்டுத்தோட்டம் - தக்காளி வளர்ப்பதில் சில எளிய முறைகள் + டிப்ஸ்

ஒரு தக்காளி செடியில் இருந்து வேறு சில தக்காளி செடிகளை உருவாக்கலாம்...

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ? எனக்கு முதலில் இதை கேள்விப்  பட்டபோது அவ்வாறுதான் இருந்தது. தோட்டக்கலையைப்  பொறுத்தவரை நாம் தினமும் புதுப்  புது பாடங்களைக்  கற்றுக் கொண்டே இருக்கலாம். நாம சும்மா இருந்தாலும், இந்த இயற்கை தூண்டிக் கொண்டே இருக்கும் இப்படி முயற்சி செய்யலாமா அப்படி முயற்சி செய்யலாமா என்று! இயற்கையின் தூண்டுதலால் மேலும் மேலும் பல வளர்ப்பு முறைகளை முயற்சித்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் ஒரு முறை தான் தக்காளிக் கிளைகளின் மூலம் புது செடியை உருவாக்குவது... இந்த முறைப்படி பயிரிடுவதால் வருடம் முழுவதும் தக்காளிக்குத்  தட்டுப்பாடில்லை.

க்ளோனிங் முறை

தக்காளியின் ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வேர்களை பரப்பக்  கூடிய அளவிற்குப்  போதுமான செல்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிசயம்.
ஒரு தக்காளி செடியில் இருந்து இரண்டு மடங்கு அறுவடையை எடுத்துவிடலாம். ஒரு தக்காளி விதை முளைத்து பலன் தர 2 மாதம் ஆகிறது ஆனால் இந்த முறை  என்றால் 1 மாதம் போதும்.

கிளைகளை கட் பண்ணும் முறை

வளர்ந்தச்  செடியின் பக்கக்  கிளைகளை சிறு கத்தி அல்லது சிசர் வைத்து நறுக்கி எடுத்து மேலே  இரண்டு இலைகளை மட்டும் விட்டுவிட்டு இலை பூ மொட்டு போன்ற மற்றவற்றை அகற்றிவிடவேண்டும்.  கிளைத்தண்டு  ஆறு இஞ்ச் நீளம் இருந்தால் நலம்.

என் வீட்டுத்தோட்டத்து தக்காளி செடி

நாலு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள சிறிய தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் கோகோபீட் மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி நடுவே விரல்  வைத்து ஒரு துளை ஏற்படுத்தி அதில் தக்காளி தண்டை வைத்து மெதுவாக மண்ணை அழுத்திவிடுங்கள்...இந்த தொட்டியை ஜன்னலின் ஓரத்தில் வெயில் படும் இடத்தில் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் போதுமான அளவிற்கு வெயில் கிடைத்ததும்(ஒரு வாரம் போதும்)  வேறு தொட்டிக்கு  இடம் மாற்றிவிடுங்கள்.  அவ்வளவுதான். இதன் தாய்ச்செடி  காய்த்து முடியும் நேரத்தில் இது பலன் கொடுக்கத் தொடங்கி விடும்...

மற்றொரு முறை

pic-google

மேலே இரு இலைகளை விட்டுவிட்டு  நறுக்கப்பட்ட கிளையை   நீர் நிரம்பிய கண்ணாடி  ஜாடி அல்லது டம்ளரில் வைத்து  விடுங்கள். இதனை ஜன்னல் ஓரத்தில் வைத்து தினமும் நீரை மட்டும் மாற்றி வாருங்கள், நான்கு நாளில்  வேர் விட ஆரம்பித்து விடும் நன்கு வேர் விட்டதும்  வேறு தொட்டிக்கு மாற்றிவிடுங்கள்.  இந்த முறையில் செடி பலன் தர சிறிது காலம் அதிகமாகுமே தவிர உற்பத்தியில் எந்த குறைவும் இருக்காது.

இந்த இரு  முறைகளின் படி செய்து வந்தால்  வருடம் முழுவதும் நம் வீட்டில் இருந்து தக்காளி  பழங்களைப்  பறித்துக் கொண்டே இருக்கலாம்.

என் வீட்டுத்தோட்டம் - பறிக்க தயார் நிலையில்

தக்காளிச் செடியில்  பூச்சிகள் தாக்கத் தொடங்கியதும் செடியின் அந்த பகுதி  'சிஸ்டமின்' என்ற ஹார்மோனை சுரந்து பூச்சிகள் மேலும் முன்னேறாதபடி தடுத்துவிடுகின்றன. இது தக்காளியின்   சிறப்பு குணம். 

 பொதுவான டிப்ஸ் 

 * விதைகளை  கடையில் வாங்குவதை தவிருங்கள். வீட்டில் இருக்கும்  நன்கு கனிந்த  தக்காளியை  பிசைந்து விதைகளை சேகரித்து  கோகோபீட்+மண்+மண்புழு உரம் நிரப்பிய தொட்டியில் போட்டு நீர் தெளித்து வந்தால் போதும் விதைகள் முளைத்து விடும். சிறிது வளர்ந்ததும்   வேருடன் அப்படியே எடுத்து தனித்தனியாக வேறு வேறு தொட்டிகளில் நட்டு விடுங்கள்.தக்காளியை குறுக்கு வாட்டில் வெட்டி மண்ணில் புதைத்து வைத்தாலும்போதும் விதைகள்முளைத்து வந்துவிடும்.

* குளிர் காலத்தில் வீட்டினுள் இருக்கும் தக்காளி செடிக்கு தண்ணீரும் உரமும் தவறாது கொடுத்து வரவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது லேசாக செடியை அசைத்து விட்டால் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கும்.

* பக்கக் கிளைகளை   எடுத்துவிடுவது தாய்செடிக்கு மிக சிறந்த நன்மையை  கொடுக்கிறது , சத்துக்கள் பிற கிளைகளுக்கு பரவுவது தடுக்கப் பட்டு தாய் செடி மிகுந்த செழிப்புடன் வளரும். விரைவில் பூ பூத்து காய் காய்ப்பதுடன் மட்டுமல்லாமல் அகன்று விரிந்தும் உயரமாகவும் வளரும்.

* தக்காளி செடி நடும் போதே அதனுடன் ஒரு குச்சியைச்  சேர்த்து கட்டிவிடுங்கள்... இல்லையென்றால் செடி காற்றில் அசைந்து மண்ணில்  வேர் பிடிப்பது பாதிக்கப்படும்.

* முட்டை ஓடுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மிக்ஸ்யில் போட்டு தூள் செய்துக்கொள்ளுங்கள்.வாரத்திற்கு ஒருமுறை  ஒரு ஸ்பூன் ஒரு செடிக்கு என கொடுங்கள் . முட்டை ஓட்டில்  கால்சியம் இருப்பதால்  தக்காளி செடிக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.

* வாழைப்பழத்  தோல்களை சிறிதுச்  சிறிதாக நறுக்கிக்   காய வைத்து மிக்ஸ்யில் போட்டு தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்...இதையும் ஒரு ஸ்பூன் வீதம் 

* சத்துக்களை உறிஞ்சிவிடும் எனச் சொல்லப்படும் suckers என்பவை செடியின் பக்கவாட்டில் வளருவது.  அவை சிறிதாக வளரும்போதே   அதனை கிள்ளி  அகற்றிவிடுங்கள். இது காய் கொடுக்காது என்பதால் இதனை வளரவிடுவது சரியல்ல. இதனை அகற்றியப்பிறகு   செடியின் வளர்ச்சி அபரீதமாக இருக்கும், தக்காளியும் நிறைய காய்க்கும்.

(pic - google) sucker

* தக்காளிச் செடியைப் பொறுத்தவரை பூச்சிகளை அழிக்க தக்காளி இலைகளே போதும். இலைகளில் இருக்கும் விஷம் பூச்சிகளை கொன்றுவிடும், பூச்சிகள் தென்பட்டால் இலைகளை அரைத்து சாறு எடுத்து பூச்சிகளின் மீது தெளிக்கவேண்டும்.

* தவிர 3G (greenchilli, ginger, garlic)என்று சுருக்கமாக சொல்லப்படுகிற பூண்டு +இஞ்சி+பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து  வடிகட்டிய  சாறை  தண்ணீர்(1-10)  சேர்த்து  கலந்து செடியின் மீது  தெளித்தால் பூச்சிகள்  அழிந்துவிடும்.  

* பழுத்த ,காய்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள்.  அழுகிய  தண்டுகள் கிளைகளையும் எடுத்துவிடுங்கள். செடி எப்பொழுதும் சுத்தமாக பசுமையாக இருக்குமாறுப்  பார்த்துக் கொள்ளுங்கள்.

* தக்காளிக்கு வெயில் மிக பிடிக்கும். 14 - 18 மணி நேர நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. பசுமைக்குடிலில்  செடிகள் இருந்தால் செயற்கையான முறையிலாவது வெளிச்சம் வர செய்யவேண்டும்.

* காய் காய்க்கத் தொடங்கியதும்  தண்ணீர்  விடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆழமாக வேர் வரை தண்ணீர் சென்று தொட்டியின் துவாரங்கள் மூலம் வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும். துளைகள் அடைத்திருந்தால் சிறு குச்சியால் குத்தி சரிப்  படுத்த வேண்டும்.

* எப்போது தண்ணீர் ஊற்றினாலும் செடியின் மீது தெளிப்பதை போல ஊற்றவேண்டும்...இலை, தண்டு கிளைகள் தண்ணீரால் நனைவது சிறப்பு.

* தக்காளிச்  செடியை நடும்போது ஆழமாக நடவேண்டும், அப்போதுதான் நிறைய வேர்கள் உருவாக்கி செடியை பலமுள்ளதாக்கும்.தொட்டியின் ஆழம் கம்மியாக இருந்தால் செடியை சிறிது வளைத்து மண் அணைத்து வைக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மண்ணுக்குள் வைக்கப்போகும்  செடியின் பக்கக் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.

இப்போதைக்கு இவைப்  போதும் என நினைக்கிறேன் ... ஆரம்ப நிலையில் இருக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்காகப்  பதிவை எளிமையாக்கி இருக்கிறேன்... வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்ட்,மெயிலில் கேளுங்கள். நன்றி.


Happy Gardening !!
மெயில் ஐடி : kousalyaraj10@gmail.com 

பிரியங்களுடன் 
கௌசல்யா 

* * * * * * * * 
புதியதாக தோட்டம் போடப் போகிறவர்களுக்காக-

*தோட்டத்திற்கு தேவையான கருவிகள் (Tools) வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

*மண் கலவை (Potting mix) செம்மண்,கோகோபீட், மண்புழு உரம்,காய்ந்த சாணத்தூள் அனைத்தையும் சரியான அளவில் கலந்து இங்கே  விற்பனை செய்கிறார்கள். வாங்கி தொட்டியில் போட்டு  செடியை நட்டு வைத்தால் போதும். மிகவும் சுலபம். 

புத்தகப் பரிந்துரைOrganic Home Gardening Made Easy written by Sujit Chakrabarty


செவ்வாய், ஏப்ரல் 4

மனதோடு மட்டும்...!



‘எவ்வாறு தொடங்குவது’ மிக நீண்ட யோசனைக்கு பிறகு தட்டுத் தடுமாறி கொஞ்சம் நடுநடுங்கி முதல் வார்த்தையை 'டைப்'பினால்,   பதிவுலகத்  தொடர்பு எல்லைக்கு வெளியேச்  சென்று ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது என அர்த்தமாகும். எதிரில் பார்க்கும் எதையும் எழுத்தாக்கி பகிரும் வேகம், துடிப்பு, உத்வேகம் எல்லாம் மலையேறி புதிதாய் எழுதவருவதைப்  போல  என் போன்றோர் நிலை கொஞ்சம் பரிதாபம்தான். என்னத்த எழுத என்ற சலிப்பு, வேலை பிஸி என்ற முகமூடி போட்டுக்கொள்கிறதோ என்னவோ!

மறுபடி எழுத வந்ததற்கு தோழி  ஏஞ்சல் ஒரு முக்கிய காரணம். (எழுத போறிங்களா இல்லையானு பேஸ்புக் இன்பாக்ஸ், ஜிமெயில் போதாதுன்னு போன் செய்தும் ஏகப்பட்ட மிரட்டல்கள்) தவிர எங்க போனிங்க என்ன ஆச்சு என்று அடிக்கடி என்னை "அன்புடன்" விசாரித்துக்கொண்டிருக்கும் அந்த நாலு பேருக்கு என் நன்றிகள். மனிதர்களுக்கு எப்போதும் போன், இணையம் என ஏதோ ஒரு தொடர்பில் இருந்தாகவேண்டும்...இல்லனா மத்தவங்க நம்மள சுத்தமா மறந்து போய்டுவாங்க இல்லையா (நினைச்சுகிட்டே இருக்குற அளவுக்கு நாம பெருசா ஒன்னும் பண்ணலன்றது வேற) உயிருடன் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் தொடர்புடன் இல்லையென்றால் மறந்துவிடுவார்கள் என்றால் மரணித்தப் பின்னால் பெரிதாக என்ன இருக்கப்போகிறது  .....முதல் நாள்  கண்ணீர் மறுநாள் சோகம் அடுத்தநாள் அவங்க அவங்க சொந்த வேலை கவலை ... நமது பெயரும் அடுத்த சில வருடங்களில் மறந்துப்  போகும் ....இவ்வளவுதான் வாழ்க்கை! இதை புரிந்துக் கொள்ள இமயமலை தேடி ஓட வேண்டியதில்லை, கண் முன் கடந்து போகும் ஒரு மரணம் போதும்...  

என்னைப்  பொறுத்தவரை எந்த ஊர்ல இப்ப இருக்கிறேன்னு பக்கத்தில் இருக்கிறவங்க நினைவுப் படுத்துகிற அளவுக்கு அதி பிரமாதமாகப்  போகுது வாழ்க்கை...  ஓடி ஓடி   களைத்துச்  சாய ஒரு தோள் கிடைக்காதா என ஏங்கி அவ்வாறு  கிடைத்தாலும் சாய நேரம் இல்லை போன்றதொரு நிலை.  

எதிர்பாராத ஒரு பெரிய இழப்பு அது கொடுத்த வலி சோகம் துக்கம் இவை எல்லாவற்றையும் கடக்க அதிகப்  பிரயத்தனம் எடுத்தும் அதுக்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிந்ததும் சரி ஒரு ஓரமாக அதுவும் இருந்துவிட்டு போகட்டுமே என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். ஒருவரை இழந்த பிறகே, ‘அவருடன் இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே , பிடிச்சதைச்  சமைச்சு  கொடுத்திருக்கலாமே, உடன் ஊர் சுற்றி இருக்கலாமே, அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையேனும் போன் செய்து எப்டி இருக்குற என விசாரித்து இருக்கலாமே என தோன்றுகிறது. இதில் ஒன்றையுமே செய்யாமல் போனப் பின்பு ஐயோ போயிட்டியே என அரட்டுவதை என் மனசாட்சியே சும்மா நடிக்காதே என பரிகசித்தது. ஆமாம் உண்மைச்  சுடுகிறது. இதுநாள் வரை அப்படிதானே நடந்திருக்கிறேன், நான் எனது வீடு குடும்பம் தொழில் என சுயநலமாகவே வாழ்ந்துவிட்டு அன்றைக்கு துக்க வீட்டில் அழுதது கூட அபத்தமாக தோன்றியது.

மரணமல்ல ஜனனம்!

ஒரு மரணம் எனக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது... பிறரிடம் இருக்கும் நல்லது தீயது இரண்டில் நல்லதை மட்டுமே பார்க்கத் தொடங்கி இருக்கிறேன்... இதுவரை பிறரின் தவறுகளை மன்னித்த நான்  இப்போது அதை மறக்கவும் முயற்சித்து அதில் சிறிது வெற்றியும் பெற்றுவிட்டேன். ஒரு தெளிந்த நீரோடையாக மனதை வைத்துக் கொள்ள  முயற்சி செய்கிறேன். உண்மையில் இது மிக பிடித்திருக்கிறது. முன்பை விட அதிகமாக எல்லோரையும் நேசிக்கவேண்டும், இன்னும் அதிகமாக பிறருக்கு உதவவேண்டும், இன்னும் அதிகமாக  இந்த சமூகத்திற்காக   உழைக்கவேண்டும், தெரிந்த சமூக அவலங்களை எழுத்திலாவது எழுதி வைத்துவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது.

நந்தினி,ஹாசினி ரித்திகா என்ற அழகான பெயர்கள் துக்கக்கரமாக மாறிப்போனபோது பச்ச குழந்தைகளை போய் எப்படிடா என்னடா வேணும் உங்களுக்கு என கதறியே விட்டேன். இரவுகளில் தூங்கவிடாமல் ஓலமிடும் மனதிடம் இதோ எழுதி ஆதங்கத்தை தீர்த்துவிடுகிறேன் என சமாதானம் செய்வேன். பாலியல்  பிரச்சனைகளின்  மூலம் எங்கே இருக்கிறது என்பதைப் பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால்  குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கட்டுரையை இனி தொடரலாம்... மூலம் என்று தேடிப்போனால் பேசாப்  பொருளா காமம் பற்றி பேசணும் சரி அதை பற்றியும் தொடர்ந்து எழுதலாம்... இதற்கு  பெற்றோர்கள் எவ்விதம் காரணமாகிறார்கள் என்பதை  தாம்பத்தியம் தொடரில் கொஞ்சம் தொட்டுக்  காட்டலாம்.......அப்படி இப்படி என்று மறுபடி பதிவுகள் எழுத காரணங்களை நானாக யோசித்ததன் விளைவு இதோ எழுத தொடங்கியாயிற்று... எது ஒன்றுக்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும், தூண்டுகோல்  வெளியில் இருந்து வரவேண்டும் என்றில்லை நாமாக உருவாக்கிக் கொள்ளலாம் ... நமக்கு தெரிந்ததை பிறரிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான இடத்தில்(பதிவுலகம்) இருந்துக் கொண்டும் வாளாவிருப்பது வீண்தானே.

என்ன செய்துவிடும் எழுத்து 

இந்த ஒரு வருடத்தில் எத்தனை எத்தனை நிகழ்வுகள் !! மக்களை எப்போதும் பரபரப்பாக்கி வைத்துவிடுகிறது ஊடக உலகம். அதிலும் சமூக வலைத்தளம் முன்னணி, காபி போட்டு குடிகிறார்களோ இல்லையோ காபி கப் போட்டோ வந்துவிடும். மனித மனம் எப்போதும் பிறரது அங்கீகாரத்திற்காகவே காத்துக்கிடக்கிறது... எல்லோருக்கும் பிடித்தவராக யாராலும் இருக்கமுடியாது என்றாலும் தனக்கென்று ஒரு சிறு கூட்டத்தை சம்பாதித்தே தீரவேண்டும் என்ற ஆசை வெறியாக மாறுவதை கண் முன்னால்  பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண்களை மதிக்கவேண்டும் என மகளிர்தின வாழ்த்துக்கள் கூறி மறுநாளே இவ மூஞ்சிக்கு ஐநா கேக்குதா என பகடி செய்யும் முரண்பாட்டு மூட்டைகள் நிறைந்த உலகிது!  'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் ' பாரதி எத்தனை பாடினாலும் போகப் பொருளாகவே  பார்த்து பழகிய கண்கள், எம்பி குதிக்கும் டென்னிஸ் வீராங்கனையின் உள்ளாடையை க்ளோஸ்அப்பில் படம் பிடித்து போடும் பத்திரிகை கேமரா அனர்த்தங்கள்.  

சிறிய பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்த அனுபவம் கூட இல்லாமல் தான் பதிவுலகம் வந்தேன்...பொன்னியின் செல்வன் பற்றி பலரும் சிலாகிக்கும்போது படிச்சுத்தான் பார்ப்போமே என்று வாங்கிப்  படித்தேன், புத்தகம் படிங்க என்று வற்புறுத்தி ஐந்து புத்தகங்கள் அனுப்பி வைத்தார் நண்பர் ஒருவர் அப்படியாவது எனக்கு எழுத்து கைவராதா என்று...  புத்தகங்கள் படித்ததற்கு பிறகு  ‘நாம எழுதுறதெல்லாம் ஒரு எழுத்தா’ என்ற பயம்  வேறு வந்துவிட்டது. ஆனால் உணர்வுகளை கொட்ட ‘தெரிந்த/பழகிய வார்த்தைகள்’  வேண்டுமே தவிர இலக்கியம் இலக்கணம் தேவையில்லை... வாசிப்பவர்களின் மனதோடு எனது எழுத்துக்கள் பேசினால் போதும்... மேடை ஏறி பரிசுகளை வெல்லவேண்டும் என்று இல்லையே... என்றெல்லாம் மனதைத்  தேற்றி என்னை நானே சமாதானம் செய்து இதோ பேச வந்தேவிட்டேன் மறுபடியும் உங்களின் மனதோடு மட்டும்...

“யார் சூறையாடியது காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது ஒன்றாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
யார் சூறையாடியது என்னுடையதாய் இருந்த காலத்தை என்னிடமிருந்து
புன்னகைபுரிந்த முற்றிலும் முழுமையான காலம்
எனது ‘நான்’ தூயதாகவும் உண்மையாகவும் இருந்தது அங்குதானே
கவிதை அதுவாகவே தன்னை எழுதிக்கொண்டதும் அங்குதானே !”

-சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்

 பிரியங்களுடன்
கௌசல்யா

pic : google 

திங்கள், பிப்ரவரி 29

கடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32


'பணம்' இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.

குடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ  செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம்.   நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது  இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.

சொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவதுத்  தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும்  ஒரு சில நிமிடங்களில் தொலைந்துச்  சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச்  செய்கிறார்களா? அல்லது மனைவியின் வற்புறுத்தலா? அல்லது  மனைவியின் மீதான அதிக அன்பா? என தெரியவில்லை.  ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்.....

அப்படி அந்த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா ? மனைவியின் பெயரில்  கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின்  பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை.  நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா ... 

எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும்  இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள்  முன்னிலையில்  கணவன், 'என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு' என்று சொல்லும்போது...!  இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான்.  ஒன்று பலவாகி ...மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் !

எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அருமையான மனைவி  ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம்  நண்பர்  ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்  மனைவியை சூழ்ந்துக்  கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப்  பணத்தை எப்போ தர போறிங்க...? சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க? இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார்? ஆதாரம் என்ன? மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பதில் 'உங்களின்  கையெழுத்து போடப்பட்ட  பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்'

கணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும்  கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி.  வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு  மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்' என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து 'சொன்னப்படி கொடுத்துடுங்கமா' என்று சொல்லிவிட்டு கடந்துச்  சென்றே விட்டது அந்த கூட்டம்.

துக்கத்திற்கு வந்த உறவினர்களின்  கூட்டம் அகன்றதும்  கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என   தேடித் பார்த்திருக்கிறார்.  வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே  அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக  ஓரளவு கடன் தொகை அடைக்கப்பட்டது. 'நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்' என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று !!

நன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர்  கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு ?!

'பெண்' என்றால் 

இப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக  இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை  கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார்?  பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது' என்று ஆனால் 'நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி' என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது 'பெண்' எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.

பணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப்  பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக   வேண்டும்,  எனக்கு இங்கெல்லாம் சென்று  பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று  நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்து தான் ஆகவேண்டும்.

கணவன் இறந்தப்பின் அந்த  மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை... அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது... சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.

கணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால்  என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை  புருஷ லட்சணம்  என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

பிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு  போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால்  இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும்  பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.

யாருக்காக சம்பாத்தியம் 

தனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை   வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

குடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது  சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்பம். கடனுக்கு ஈடாக  மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும்  மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும்.  'பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க' என்பதே 'இன்றும்' பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.    

கணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது  என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.

சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.

தனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி, கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்...

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.


புத்தகப் பரிந்துரை : Morgan housel எழுதிய  The Psychology of Money
தமிழில்   பணம் சார் உளவியல்  எழுதியவர் Chandar subramanian. 


திங்கள், பிப்ரவரி 8

ஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...!

Liquor drinking is injuries to health



பெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது  பதிவு ஒரு சிலருக்கு சரியானப் புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும்  இந்த பதிவு ஒரு புரிதலைக் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது ! :-)  

///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///

இது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிடவில்லை...அதுவும் தவிர  அந்த பதிவிலேயேக் குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதைக் குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று.  நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறானப் புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும்  இயலாத காரியம்.  இருப்பினும் மதுவைக் குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும்  என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின்   பிரச்சனையின்  மூலக் காரணம்  மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவைத்  தொடுகிறார்கள் பிறகு விடமுடியாமல் தொடருகிறார்கள்.   

மது அருந்துவதை குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை அதனால்தான்   அரசாங்கம்  விற்கிறது.  டாஸ்மாக் வாசலில் பெண்கள் குடிக்கக்கூடாது, பெண்களுக்கு இங்கே மது விற்கப்படாது என்ற போர்டு இல்லை. பெண்கள் மதுக் குடிப்பதை பற்றிய கவலை அரசிற்கே இல்லை அதுவும் பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில்... அப்படி இருக்க ஆண் குடித்து கும்மாளம் போட்டால்  ஒதுங்கிப்போகும் ஆண்கள், பெண் என்றதும்  கேலி கிண்டல் கூச்சல் கூப்பாடுப் போடுவதும், அதிலும் பெண் குடித்தால் என்ன தவறு என்று கேட்ட  பெண்ணை, நாலு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதுதான் சரி  என்று சொல்வதும் வக்கிரத்தின் உச்சம். 

பெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும்.   ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும், பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம்.  அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமுதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளைக் கொன்*றாலும், சாட்சிச் சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரேத் தவிர கொன்*றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்)  அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள்.  கொ*லை கொள்*ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்... இருப்பார்கள் !
   
என்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைக்குரியவர்களைத் தூற்றுவது  சரியல்ல.   பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்.   அவள் குடிப்பதைத் தடுக்க அல்லது குறைக்க முயற்சிச் செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால்  பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது  பெண்களின் புத்தியில் புதிதாகப் பதிந்துவிட்டது.   குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்துக் கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை  அடிமையாக நடத்தியதன் விளைவு இது.  கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.  

///This is how it started among men too. First 1% started consuming, now it is almost 100% The same thing would happen with women. I dont understand why women should be treated "gently" and "alcohol should be blamed" rather than blaming consuming women.
I am completely against your view in this issue, my respectable friend, Mrs.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.///

மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ?  சமூகத்தின் மீது இதுவரை  இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது  அதுவே நம் வீட்டுப்பெண்ணாக  இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம்.   ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள்.  திருத்துங்கள்.  வளமாகட்டும் நம் சமூகம்.

மது என்னும் அரக்கன் 

உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளைச் சேகரிக்கும்  பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து  மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை  எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி !   அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையைக் காரணம் காட்டுவது. 

என்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம்  உடுமலைபேட்டையில் நீங்கியது.  செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும்  ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் சேர்ந்துக் குடிக்கும் குடும்பங்களும் உண்டு.  மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது  என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...

தினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்தவர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க  அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு  ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக(?) பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது.  அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.

சந்தோஷம்,  திரில் கிடைக்கும் என்பதற்காகக் குடிக்கத் தொடங்கும்  படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.   அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில்     பெண்ணை துகில் உரித்து வன்*புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் பயப்படுகிற  மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.  கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது.  அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.

பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது  அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம்  குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிக்கிட்டே  இருக்கு'. என்று பேச்சோடுப் பேச்சாகச்  சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம்.  அது உடை தொடங்கி  குடி என்று  தொடருகிறது.  இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...

நான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப்  போகிறது.

எனது நிலைப்பாடு :-

பெண்களுக்கு ஒன்று என்றால்  கண்மூடித்தனமாகப் பொங்குவதல்ல  எனது வேலை... காலங்காலமாக பெண் அடிமைப்பட்டுக்  கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்களின் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை.  பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த  மனித சமுத்திரத்தின் வேரானவள் !

விதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து  பெண்ணை விமர்சிக்கலாம்  நாகரீகமாக... பெண்ணை  கிண்டல் செய்யலாம்  நட்பாக... பெண்ணைப்  பற்றி பேசலாம்  வெளிப்படையாக...!  ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து  நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத்  தவிர்க்கலாம் !!! இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.

பெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும்  பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே.  ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தைப் பெறும் பெண் குடிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளைப் பெற்று வளர்த்து  35/40 வயதைத் தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ? ஆண் பெண் யார்  (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனைத் தான் என்று செய்யப்படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை  சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள்  ஊக்குவிக்கக் கூடாது.

தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்குப் பகுத்தறியத்  தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணைப் பற்றிய எந்த விமர்சனமும் எல்லை  மீறி பெண்மையைக் கேவலப்படுத்தி  துன்புறுத்தும் அளவிற்குப் போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.  

குறிப்பு :-

நண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக  இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர்? எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும்  எழுதவும்   வைப்பது  நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்!


புதன், பிப்ரவரி 3

இறுதிச்சுற்று...!



ஆரம்பம் முதல் இறுதி வரை மிக ரசித்த படம்... ரித்திகா இந்த பெண்ணை எங்கே கண்டுப் பிடித்தார்கள் என்று ஆச்சர்யப் பட வைத்தார். படத்தை பார்க்கும் முன் விஜய் சூப்பர் சிங்கரில் கெஸ்ட்டா இந்த பெண்ணை பார்த்தப் போது ரொம்ப ரொம்ப சிம்பிளாக நடிகை என்ற  எந்த அடையாளமும் இல்லாமல் வந்து அமர்ந்தார். மாதவனுக்கு இந்த சின்ன பொண்ணு ஜோடியா என்ன படமோ எப்படி இருக்குமோ என்று ஒரு சலிப்பு எனக்கு. பொதுவாக ரிலீஸ் ஆகுகிற படமெல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை ரொம்ப யோசிச்சு செலக்ட் பண்ணிப் பார்ப்பேன்

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை 'ஆவி கோவை' தனது பேஸ்புக் ஸ்டேடஸில் மாதவனின் நடிப்பை சிலாகித்ததை  பார்த்ததும் இந்த படத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது. அன்னைக்கு எனது வேலைகள்  முடிந்து  வெட்டியாக வேறு இருந்ததால் நானும் கணவரும் உடனே  கிளம்பியும் விட்டோம். தியேட்டரில் சொற்பக் கூட்டத்தை பார்த்ததும் அடடா தப்பா Choose  பண்ணிட்டோமோ அரண்மனை 2 (ஹவுஸ் புல்) போய் இருக்கலாமோ,  சரி எதுனாலும் நேருக்கு நேராச் சந்திப்போம் என்ற வீராவேசத்துடன் உள்ளே சென்று சீட்டில் அமர்ந்தேன்.

சும்மாச் சொல்லக் கூடாது ஆரம்பம் முதல் சீன் பை சீன் திரையுடன் என்னை ஒன்ற வைத்துவிட்டது. ரித்திகாவை எப்படி பாராட்ட என்றே தெரியவில்லை அந்த பொண்ணு நடிச்சிருக்குனுலாம் சொல்ல முடியாது, என் கணவரிடம் சொன்னேன், இந்த பொண்ணு ஒரு ஸ்போர்ட்ஸ்வுமன் ஆக இருப்பாளோ என்று... அந்த அளவிற்கு ரொம்ப சாதாரணமாக அனைத்தையும் கையாண்டாள்.  அந்த பேச்சு(டப்பிங்கா   நம்ப முடியவில்லை) அந்த ஸ்டைல் அந்த நடை அந்த பார்வை... கண்ணா அது என்னமா உணர்ச்சியை வெளிக் காட்டுது. நடனமா நளினமா என்று இமைக் கொட்டாமல் பார்த்தேன். ஒவ்வொரு அசைவும் தனித் தனியாக ரசிக்கவைத்தது. இதற்கு முன்  ஷோபாவை இப்படி ரசித்திருக்கிறேன்.

பொதுவாக மாதவன் அடிக்குரல்ல பேசுற  படத்தை தவிர்த்துவிடுவேன், டிவியில் படம் போட்டாலும் பார்க்க மாட்டேன். உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கும். இந்த படத்துல ரொம்பவே ஸ்மார்ட்.  இறுக்கமா இருக்கணும் அதே நேரம் இயல்பாவும் தெரியணும் என்பதைப் பார்வையாளனிடம் வெளிப்படுத்திய விதத்தில் மாதவன் நடிப்பு அட்டகாசம். நடிப்பை பொறுத்தவரை நம் தமிழ் திரையுலகம் இவரை அவ்வளவாக பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த  படம், அவரும் தனது பாத்திரத் தன்மையை உள்வாங்கி மன உணர்வுகளை முகத்தில் அருமையாக வெளிப் படுத்தி இருந்தார். தமிழ் நாட்டு மீனவப் பெண்ணுக்கு வடநாட்டுப் பெண் சாயல் எப்படி என யோசிப்பதற்கும் ஒரு சிறு கதை வைத்தது அழகு.   நாசர் ராதாரவி உள்பட நடித்த அனைவருமே நடிப்பில் அவ்வளவு கச்சிதம்  நடிகர்களுக்குள் இருக்கும் நடிப்பை   கதைக்கு ஏற்றப் படி வெளிக் கொணர்ந்து  நடிக்க வைத்தது  இயக்குனரின் திறமை.     

திருமதி. சுதாவின் இயக்கம் மிக பாராட்டத்தக்க ஒன்று...ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். அவரது உழைப்பு வீண் போகவில்லை, இணைய உலகமே கொண்டாடித் தீர்க்கிறது. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கம் எனக்கு. ஒரு குத்து பாட்டு, டாஸ்மாக் விளம்பரப் பாடல், ரத்தம் தெறிக்கத் தெறிக்க கொ*லைவெறித் தாக்குதல், அம்பது பேரை தூக்கி வீசுற ஹீரோயிச  சண்டை, காதைப் பிளக்கும் இசை, வெளிநாட்டில் ஒரு பாடல் இதெல்லாம்  தான்  படத்தின் இலக்கணம் என தமிழ் ரசிகனின் புத்தியில் பதிந்துவிட்டது.  தற்போது பேய்களின் காலம் வேறு, அதுவும் சிறு குழந்தைகளை ஈர்பதற்காக காமெடியை கலந்துக் கட்டி பேய் பிசாசுக்களை தாராளமாக நடமாட விட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் பேய் பிசாசு என்று ஒன்றும் இல்லை எல்லாம் சும்மா லுலுலாயிக்குனுச் சொன்னா சின்னப்பசங்க எங்க கேட்குறாங்க .    சினிமா சொல்றது மூடநம்பிக்கை என்றாலும் நம்பித் தொலைக்குறாங்களே .

இறுதிச்சுற்று காக்கா முட்டை போன்ற படங்கள் குறிஞ்சிப் பூக்கள் போல... சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாடவேண்டும்.  சம்பந்தப் பட்டவர்களை பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும். விளையாட்டுத்துறையில் நிலவும் அரசியலைச் சாடுகிறார்கள். இந்த படத்தில் சமூகத்திற்கான அறிவுரைகளை வசனங்களின் மூலமாகச் சொல்லவில்லை ஆனால் உணர்த்துகிறார்கள்.  கடந்த வாரம் ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை கைப்பற்றிய  பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும், எத்தனை பேர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டோம், என்னையும் சேர்த்துதான். இப்படித்தான் இருக்கிறது நமது சமூக அக்கறை எல்லாம். முடிந்தவரை நல்ல தமிழ் சினிமாக்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம்.    (சினிமாவைப் பற்றிய பதிவில் வேறெப்படி நான் சொல்ல) :-)

சுவாரசியத் துளிகள் 

ரித்திகா ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது படம் பார்த்தப்பிறகு தான் தெரிந்தது . முதலிலேயே தெரியாமல் இருந்ததும் நல்லதுதான், விமர்சனங்கள்  படிக்காமல் படம் பார்ப்பது சுவாரசியமானது என்பதை போல...  

நாயகி நாயகனை புரிந்துக் கொண்டப்பின்  இருவரும் அருகருகே இருக்கும் சந்தர்ப்பங்களில் அது குத்துச் சண்டை பயிற்சியாக இருந்தாலும் மெல்லிய நேச இழை நிழலாடியது அற்புதம். ஒளிக்காட்சி அமைப்பு மனதை ஈர்த்தது.  

குரு சிஷ்யை  காதல் எப்போதுமே தனித்துவமானது...உடல் தாண்டிய உணர்வு ரீதியிலான நேசத்தை பரிமாறியும் சமயங்களில் பரிமாற முடியாமல் தவிக்கும் தவிப்பை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர  முடியும்.  குருவின் ஒற்றைப்பார்வை ஒற்றைப்புன்னகை 'ம்' என்ற ஒற்றை வார்த்தை(?) ஏதோ ஒன்று போதும் சிஷ்யைகள்  ஜீவித்துக் கொள்ள...!  குரு தனக்குச் செய்ததற்கு நன்றி பாராட்ட, தான் எதைக் கொடுப்பது என்றெல்லாம் அதிகம் யோசிக்காமல், வெற்றி பெற்றதும் குருவையும்  தன்னையும் அழிக்க முயன்ற சந்தர்ப்பவாதி எதிரியை இரண்டு குத்தில்  தரையில் வீழ்த்தி, எதிர்வரும் அத்தனை பேரையும் மோதி ஒதுக்கித் தள்ளி , குருவிடம் நேராக  ஓடிச்சென்றுத் தன்னை முழுவதுமாய் ஒப்படைத்து சரணாகதி அடைந்த அந்த ஒரு நொடி... எனது சுவாசத்தை நான் மறந்த தருணம் அது !!!

'நீ  எனக்காகச் செய்யும் விசயமெல்லாம்  காதல் இல்லாமல் வேறென்ன?'  

விழிகளில் வழியும் எனது  கண்ணீரில் இருக்கிறது பெண்ணே உனது கேள்விக்கான எனது பதில்...!!

* * * * * * * * * * 
 பிரியங்களுடன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 





வெள்ளி, ஜனவரி 29

பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும் ??!!





பெண்களை வைத்து இதோ அடுத்து ஒரு விவாதம் தொடங்கியாகிவிட்டது. பெண்களைப்  பேசுப்பொருளாக்கி விவாதிப்பதில் இருக்கும் சுவாரசியம் வேறு எதிலும் இல்லை என்பதை ஊடகங்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. தற்போதைய  தலைப்பு பெண்களும் குடியும்... ஒரு பெண் டிவி ஷோவில் குடித்தால் என்ன தப்பு என்று கேட்டுவிட்டாள், உடனே பத்திக்கிச்சு சமூக வலைத்தளம். விதவிதமாக Memes ரெடி பண்ணித்  தாளித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்களை.  தாளிப்பவர்களில் எத்தனை பேர் குடியை முகர்ந்து கூட பார்க்காத மகாத்மாக்களோ தெரியவில்லை.  விஷயம் இப்போது  எப்படி திசைத்  திரும்புகிறது என்றால் 'குடிப்பழக்கம் சரி ஆனால் பெண்கள் குடிப்பது தவறு'  

சில  நாட்களுக்கு முன்னர் கரூரில் ஒரு பள்ளி மாணவன் குடி*போதையால் மயங்கி விழுந்துக் கிடக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் போட்டிப்போட்டுப்  பகிரப்பட்டு வந்தது. பள்ளி சீருடையுடன் இருந்ததே அப்போது பலரின் கவனத்தை வெகுவாக பாதித்தது. பள்ளி மாணவர்கள் குடி*போதைக்கு  அடிமையாகி ரொம்ப காலமாச்சு. சங்கரன்கோவில் அருகில் ஒரு கிராமத்தில் 9 வது  படிக்கும் இரு  மாணவர்களுக்கும்  சண்டை, காரணம் இருவரும் ஒரே மாணவியைக்  காதலித்தது. குடி*போதையில்  கையில் கத்தியுடன் மலையடிவாரத்தில் கட்டிப் புரண்டுப்  போட்ட சண்டையை காவல்துறை தலையிட்டு அவசர அவசரமாக சமாதானம் செய்து அவர்களின் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. எங்கே இது சாதிச் சண்டையாக மாறிவிடுமோ என்ற கவலை காவல்துறைக்கு !  மாணவர்கள் சார்ந்த இரு பிரிவினருக்கும் பல வருட பகைமை  உண்டு.

குடித்தால் தான் நண்பர்கள் மத்தியில் கௌரவம், குடிப்பது தைரியம் வீரம் இப்படி இன்னும் என்ன கண்றாவி புரிதல்கள்(?) இருக்கிறதோ அத்தனையையும் சினிமா நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.  குடிக்கவைத்து சிறுகச்  சிறுக மக்களைக்   கொன்று அவர்களின் சடலங்கள் மீதேறி நின்று கைக் கொட்டிச் சிரிக்கும் அரசுகள்  வீழ்வதற்குள் இங்கே நாசமாகிப்  போவார்கள்  நம் மாணவ செல்வங்கள் ! பெர்த்டே பார்ட்டி பியருடன் என்ற  கலாச்சாரம்(?) கல்லூரியை  மட்டுமல்ல பள்ளிகளுக்கும் பரவி ரொம்பநாள் ஆச்சு. அதுபோக வாரம் ஒரு முறை வீக் எண்டு செலிபிரேசன் என்ற கண்றாவி  (கலாச்சாரம்=கண்றாவி) வேறு,

இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்தேக்  கொன்று*விட்டான். நினைத்துப்  பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. எவ்ளோ வன்மம் அந்த மாணவனுக்குள் இருந்தால் இத்தகைய கொடூர*த்தை நிகழ்த்த முடியும். அவன் வாழும் சமூகம் அவனுக்குள் விதைத்தது இதை தானா ?  டிவி ஷோவில் குடிகாரத் தகப்பனால் வன்கொடுமைச்  செய்யப்பட்ட சிறுமி தகப்பனை நோக்கிக்  கேட்கிறாள், 'அருகில் படுத்திருப்பது மகளா மனைவியா என்பது கூடவாத்  தெரியாது என்று. குடி*போதையின் விபரீதத்தை சொல்ல இது ஒன்று போதும்?!

சிறந்த பள்ளிகளை தேடி அதிக பணம் கட்டி சேர்த்துவிட்டதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக எண்ணி பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள். தனது மகன்/மகள் எங்கே செல்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. பள்ளி குழந்தைகள் மது அருந்தத் தொடங்கிவிட்டார்கள் என்பது நல்ல செய்தி அல்ல.  விடுமுறை தினத்தன்று  குழந்தைகளுடன் செலவழிப்பதை விட தங்கள் நண்பர்களுடன் இணைந்து தண்ணி அடிக்க செல்லும் பொறுப்பற்ற தகப்பன்கள் அதிகரித்துவிட்டார்கள்.  இதில் வேண்டுமானால் தற்போது தாய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  பெற்றோர்கள்  தங்களை ரிலாக்ஸ் செய்வதில் வைக்கும் கவனத்தை தங்களின் குழந்தைகளின்  மீது வைக்கவில்லை என்றால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் 'சிறுவர் சிறைச்சாலை'யில் கழிவதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டு நாளா நீயா நானா வீடியோவை ஷேர் பண்ணி  ஐயையோ ஒரு பெண் இப்டி பேசலாமா, அது எப்டி பொம்பளக்  குடிக்குறது நாடு என்னாவறது சமூகம் கெட்டு குட்டி சுவராப்  போச்சேனு கதறிக்  கதறி அழுவுறாங்க. பெண் குடிக்கலாமா அதுவும் தமிழ் பெண் குடிக்கலாமா என்ற கேள்விகளை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்றுத்  தெரியவில்லை.  அந்த பெண் விவாதத்திற்கு பேசினாலே ஒழிய தான் குடிக்கிறேன் அதனால் பேசுகிறேன் என்று சொல்லவில்லை. இதைக்  கூட புரிந்துக் கொள்ளாமல் அந்த பெண்ணின் புறத் தோற்றத்தை வைத்தும் கேலிகிண்டல் செய்து தங்களின் ஆணாதிக்க வெறியைச்  சொறிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடிப்பதில் என்ன ஆண் பெண் வித்தியாசம்... விஷ*த்தை யார் குடித்தாலும்  சாவுதான்.  ஆனால்  இதை ஆண்களால் ஒத்துக் கொள்ள முடியாது, இவங்க தான் புதுசா கண்டுப்பிடிச்ச மாதிரி பொண்ணுக்கு  கர்ப்பப்பை இருக்கு,    குடிச்சா அது கெட்டுப் போய்டும் குழந்தைக்கும் பாதிப்புனு என்னா பேச்சுன்றிங்க ...சகிக்கல! அப்புறம் பொண்ணு குடிச்சா பாலியல் ரீதியிலான துன்பத்துக்கு ஆளாவாளாம். பாலியல் கொடுமை அதிகரிக்க பெண் குடிப்பதும் ஒரு காரணமாம். அப்படினா இந்த ஆம்புளைங்க மூக்கு முட்ட குடிச்சிட்டு போறப்போ எதிர்ல பெண் வந்தாக்  கண்டுக்காம தலையைக்  குனிஞ்சிகிட்டு அப்டியே நேரா வீட்டுக்கு போய் குப்புறப்படுத்துடுவாங்கப்  போல... பெண்  குடிப்பதைக்  கண்டித்தும் ஆண் தனது குடிப்பழக்கத்தை நியாயப் படுத்தவும் எப்படி  எல்லாம் சமாளிக்கிறார்கள்

குடிகார ஆண்கள்.  . மதுப்பாட்டில்களை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதும், குடியைப்  பற்றிய   உற்சாகப்பேச்சுக்களை  ஸ்டேடஸ்/கமெண்ட்ஸ்  என்று போடுபவர்களும் சமூகத்தைக்  கெடுக்கும் படு பாதகர்கள். மதுவை விற்கும் அரசின் செயல் கயமைத்தனம் என்றால் மதுவை  மறைமுகமாக உற்சாகப் படுத்தும் உங்களில் சிலரின் செயலுக்கு என்ன பெயர்? கையில் பியர் பாட்டிலை வைத்திருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தைச்  சிறிதும் வெட்கமின்றிப்  பகிர்ந்து கேவலமாய்  திட்டித்தீர்த்துவிட்டு  வாரக்கடைசியில் 'என்னடா மச்சி இன்னைக்கு பார்ட்டி எங்க' என ஸ்டேடஸ் போடும் அதி உன்னதமான ஆண்கள் நிறைந்த உலகமிது. பேஸ்புக்கில் பரவலாக சனிக்கிழமை (வீக் எண்டு)இரவைப் பற்றிய பேச்சுக்கள்/உளறல்கள் நிறைந்திருக்கும்.  இதை விட சிறந்த பொறு*க்கித்தனம் வேறில்லை. 

மக்களின்  நிகழ்காலத்தைச்  சிதைத்து எதிர்காலம் என்ற ஒன்றே  இல்லாமல் போக்கும் குடியை மட்டும் ஏன் எதிர்க்க முடியவில்லை. ஆண் பெண் சமத்துவம் வேண்டும் என்று பேசுபவர்கள் கூட ஒரு பெண் குடியை பற்றி பேசியதும் உடனே புரட்சி புடலங்காயா மாறிடுவாங்க.

புதுமைப் பெண்களே !

உங்களுக்கு விருப்பம் வசதி இருந்தால் மது அருந்துங்கள் ஆனால் ஆணுக்கு பெண் சமம் என்பதை மது அருந்துவதன் மூலம் நிரூபிப்பதாக சொல்லிக் கொண்டுத்  திரியாதீர்கள். ஒரு பெண் மரத்திலோ தரையிலோ சாய்ந்து கண் மூடி இருக்கும் போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்ததும் வரும் முதல் கமென்ட் என்ன மட்டை ஆகிடிங்களா? இன்னைக்கு ஓவரா? ஆண்கள் இப்படி கேட்கவேண்டும் என்றே போட்டோவை பகிரும் பெண்கள் ஒரு தனி ரகம், எதை/யாரை  பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை நான் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.  குடித்தால் என்ன தப்பு என்று பேசிய நீயா நானா பெண்ணும் இவர்களும் ஒன்று.  எதில் சமத்துவம் வேண்டும் என்பதேப்  புரியாத பெண்களால் தான் பெண்மை மேலும் மேலும் கேலிக்கு உரியதாக மாறிக் கொண்டிருக்கிறது.    

அரசின் பொறுப்பின்மை 

மதுக் குடிப்பது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப் பட்டது என்றாலும் அரசே அதை ஊக்குவிப்பது வேதனை. ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த சாராயக் கடைகள் இன்று வீதிக்கு ஒன்று என்ற அளவில் குடியிருப்புப்  பகுதியையும் விடாமல் பள்ளிக்கு அருகில் மருத்துவமனைக்கு அருகில் என்று எதைப்  பற்றியும் யோசிக்காமல் இஷ்டத்திற்குப்   பெருகிவிட்டதை எவ்வாறு நியாயப்படுத்துவது. இந்த அரசு கைக்கெட்டிய தூரத்தில் டாஸ்மாக் கடையை வைத்துவிட்டு குடிக்காதே குடி பழக்கம் உடலுக்கு கேடு என்று பிரச்சாரம் செய்கிறது, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதைப்  போல .

பெண்களின் முன்னேற்றத்தை ஜீரணிக்க ஆண்களால் முடியவில்லை பிற பெண்களாலும் முடியவில்லை. நம் சமூகத்தின் சாபக் கேடு இது. எல்லாவற்றிலும் சமத்துவத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் பெண் குடியிலும் சமத்துவத்தை நாடிவிட்டால் என்னாவது என்பது தான் பெரும்பாலோரின் கேள்வி.

ஆண்கள் தான் இதில் அதிகமாக மிரண்டு விட்டார்கள் என்பதை அவர்களின் கருத்துகளின் மூலம் புரிகிறது, எங்கே தனது மனைவி 'வரும் போது எனக்கு ஒரு பகார்டி ஆப்பிள் பிளேவர் வாங்கிட்டு வாங்க' என்று கேட்டுவிடுவாளோ, அவளுக்கு ஆம்லெட், மட்டன் சுக்கா ரெடி பண்ணிக் கொடுக்கும் நிலைமை தனக்கு வந்துவிடுமோ என்ற பயம். மத்தபடி கலாச்சாரமாவது மண்ணாங்கட்டியாவது.  சுய ஒழுக்கம்  கட்டுப்பாடு நாகரீகம் ஆண் பெண் எல்லோருக்கும் வேண்டும், அளவுக்கு மீறி யார் குடித்தாலும் பாதிப்பு சம்பந்தப்பட்டவங்களுக்கு தான். பெண் குடிப்பது சமூகத்தைப்  பாதிக்கும் என்றால் ஆண் குடிப்பது சமூகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுச்  செல்லுமா என்ன ?!!

ஆண் குடித்து தெருவில் புரண்டால் ஒதுங்கிச் செல்லும் சமூகம் பெண் குடித்து புரளும் போது சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கிறது துணி எப்போது விலகும் என்று. பாலியல் வறட்சிக் கொண்ட மனிதர்களுக்கு அந்த இடத்தில் பெண் குடித்துவிட்டாள் என்பதை விட பிறவற்றின் மீதுதான் அதிக கவனம்.

பாலியல் வன்*புணர்வு செய்யப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிற சமூகத்தில், பெண் குடிப்பதற்கு மதுவைப் பழிக்காமல் பெண்ணை பழிப்பதுத் தானே வழமை 

பெண்கள் குடிப்பதற்கு வக்காலத்து அல்ல இந்த பதிவு  ஆனால் பெண்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்ற கூப்பாடு ஏன். அதுதான் பிரச்சனை.  பெண்களைக்  குடிக்காதீர்கள் என்று வற்புறுத்த  'குடிக்கும்'  எந்த ஆண்களுக்கும் உரிமை இல்லை.  வேண்டுமானால் உங்கள் வீட்டுப் பெண்களைக்  குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரமாக இருக்கட்டும்!!  

 


புதன், டிசம்பர் 23

பெண்ணியவாதிகள் சிலரின் ஆதிக்க வக்கிரங்கள்...!!?




எனக்கு இந்த ஒரு விசயத்தில் மட்டும் எப்பொழுதும்  ஒரே குழப்பம் இந்த பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்களா பெண்களுக்கு  எதிரானவர்களா? பெண்ணுக்கு இழிவு ஏற்பட்டுவிட்டது என்றதும் சிலிர்த்து எழும் பெண்ணியவாதிகள் என்கிற ஒரு குரூப், தங்களின் எழுத்து, பேச்சின் வாயிலாக 'ஏய் ஆணாதிக்க வர்க்கமே' என ஆரம்பித்து கிழி கிழி என கிழித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்... இதை நன்றாக கூர்ந்துக் கவனித்தோம் என்றால் அங்கே பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாட்சாத்  பெண்மை?! பெண்ணுரிமையை  பேணுகிறோம் என்று கூறிக் கொண்டே பெண்மையை இழிவுப்படுத்துவதில் பெண்ணியவாதிகளுக்கு நிகர் அவர்களேதான்.   

ஆம் போற்றப்படவேண்டியவள் தூற்றப்படுகிறாள் ஆண்களாலும் ஒரு சில பெண்களாலும்... அவர்கள் பெண்ணுக்குரிய மதிப்பை, மாண்பை குறைத்துக்கொள்ள சிறிதும் அஞ்சுவதில்லை. சிலரின் போகப்பொருள் சிலரின் கேலிப் பொருள் சிலரின் பொழுதுபோக்கு இப்படி பெண்மையை எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம், உண்மையில்  இதை தட்டிக் கேட்கவும் கண்டிக்கவும் யாருமில்லை. ஆண்கள் தான் தங்களுக்கு எதிரிகள் என்று எண்ணிக் கொண்டே சில பெண்கள் நடந்துக் கொள்ளும் விதம் சகபெண்களாலேயே சகித்துக்கொள்ள முடிவதில்லை.

பெண்ணுரிமை பெண்ணியம் பேசுபவர்கள் தங்களின் தன்முனைப்பை பொதுவெளியில் நிலைநாட்ட துடிக்கிறார்களே  தவிர சக பெண்ணிற்கு உதவுவதாக இல்லை. அதிலும் இவர்களின்  கருத்துகள் பெண்ணை மேலும் மேலும் அவமானப் படுத்துவதாகத்தான் இருக்கிறது. இவர்களை போன்றோரின் கருத்துகளால் பெண் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தை வலுவாக எல்லோரின் மனதிலும் பதிய வைக்கிறார்கள். எந்தவொரு பெண்ணுக்கெதிரான நிகழ்வு என்றாலும் சம்பந்தப்பட்ட நிகழ்வின் முன் பின் சூழல்கள்  எதையும் அலசி ஆராயாமல் பொத்தாம் பொதுவாக ஆணாதிக்கம் என குற்றம் சாட்டுவது அவர்களின் முக்கியமான பொழுதுப் போக்கு.

தற்போது பரபரப்பான விசயமாக மாறிப் போன பீப் சாங் பிரச்சனையில்  சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்குகள், கைது நடவடிக்கை என வந்துக் கொண்டிருக்கும் செய்திகள் ஓகே ரகம் என்றால் இதை குறித்து எழுதப்பட்ட விமர்சனங்கள் ஐயகோ ரகம். நிர்மலா கொற்றவை, லீனா மணிமேகலை, குட்டி ரேவதி போன்றோரின் எழுத்துக்களை படிக்க நேர்ந்தது.  அதிலும்  கொற்றவை எழுதிய கட்டுரையை மூன்று பாராக்களுக்கு மேல் இயல்பாக  படிக்க இயலவில்லை.  முன்பு நண்பர் ஒருவர்  எழுதிய கிராமத்து கதையில் சில வசைச்  சொற்கள் இடம் பெற்றிருந்தன, கதையை வாசிக்கும் போதே, 'இது போன்ற வார்த்தைகளை நானும் வாசிக்க நேர்ந்துவிட்டது, ஏன் இந்த வார்த்தைகள் போடாமல் எழுத முடியாதா' என்றதற்கு கிராமத்து மனிதர்கள் சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகளான இவை  இருந்தால் தான் கதை அதன் இயல்பு குன்றாமல் இருக்கும் என்று அவர் சொன்ன சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.   கண்களாலும் மனதாலும் வாசித்து பெரிய பாவத்தை செய்ததைப் போல படபடப்பாகிவிட்டது.  

ஒரு ஊருக்கு சாதாரணமாக சொல்லாக தெரிவது பிற ஊர்களுக்கு தவறு, குற்றமாக இருப்பது யதார்த்தம் என்றாலும் பாலியலை மட்டுப்படுத்தும் கேவலப்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் இயங்குபவர்கள் தவிர்த்தல் நலம் என்பது எனது கருத்து. உடல் ரீதியில் பெண்ணை துன்புறுத்துவதற்கும் உடல் உறுப்பு வார்த்தைகளை பிரயோகிப்பதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் முன்னது உடலை வருத்துகிறது பின்னது  மனதை வருத்துகிறது. இரண்டுக்குமான வலி என்பது பொது.

அதுபோன்ற ஒரு வலி, பதட்டம்  கொற்றவை அவர்களின் கட்டுரையை படிக்கும் போது ஏற்பட்டது. எதை சிம்பு அனிருத் செய்ததாக குற்றம் சாட்டுகிறோமோ அதே வார்த்தையை பலமுறை பலவிதமாக அழுத்தம் திருத்தமாக சொல்வதுதான் எதிர்வினையா ? ஆண் சொன்ன போது தவறாக தெரிந்த ஒன்று பெண் சொன்னதும் சரி என்றாகிவிடுமா? 

முற்போக்கு பெண்ணியவாதிகள் 

சிம்பு அனிருத் செய்ததற்கு அவர்கள் வீட்டுப் பெண்களை தெருவுக்கு இழுத்து 'அந்த வார்த்தைக்கு அபிநயம் பிடித்து ஆடுவாயா' என்றெல்லாம் கேவலப்படுத்துவது கொஞ்சமும் நியாயம் இல்லை... எந்தவொரு வாக்குவாதத்தின் போதும்  பிறர் வீட்டுப் பெண்களின் பத்தினித்  தன்மையை விலை பேசுவது ஆண்களின்  அதிகபட்ச தாக்குதலாக இருக்கும் அதுபோன்ற ஒன்றை பெண்ணியவாதிகளும் செய்வது வேதனை. ஒட்டுமொத்த தாக்குதலும் சிம்பு அனிருத் வீட்டு பெண்களை நோக்கி மட்டுமே வசதியாக அந்த வீட்டு ஆண்களை மறந்துவிட்டார். பெண்ணுக்கு சார்பாக பேசுகிறோம் என்ற போர்வையில் பெண்மையை விலைபேசுவது வக்கிரத்தின் உச்சம்?! இதுதானா  பெண்ணியம்??!!   

ஆணோ பெண்ணோ சிந்தனையில் நாகரீகம் இருந்தால் தான் வார்த்தை பிரயோகமும் நாகரீகமாக இருக்கும் மாறாக சிந்தனையே வக்கிரமாக இருந்தால் அவர்களின் செயலும் அவ்வாறே... மனதில் இத்தனை அசிங்கத்தை வைத்துக் கொண்டிருக்கும் எவ்வாறு இவர்களால் பொதுவெளியில் பிறரை நேர்மையாக எதிர்க் கொள்ளமுடியும்.  சிம்பு அனிருத் இருவரின் வளர்ப்பு சரியில்லை, பண்பு இல்லை இப்படி ஏகப்பட்ட இல்லைகளை சொன்னவரின் எழுத்தில்  'எதுவுமே' இல்லை. 

அந்த பாடலை பற்றிய இவரது விமர்சனம் அருவருப்பாக குமட்டலை ஏற்படுத்துகிறது... இங்கே லிங்க் கொடுப்பது இந்த பதிவின் உண்மைத் தன்மைக்காகத்தான்,    http://saavinudhadugal.blogspot.qa/2015/12/blog-post.html

பாதிக்கப்படும் பெண்களுக்கு பக்கபலமாக இருப்பது பெண்ணியவாதிகள் என்பது  பலரின் எண்ணமாக இருந்தால் இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். பெண்ணியவாதிகளையும் பிற பெண்களையும் ஒன்றாக இணைத்து இனிமேலும் தயவுசெய்து பேசாதீர்கள்.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் பிளவை ஏற்படுத்தவே  பிறந்தவர்கள் அவர்கள்.   'பெண் மேக்கப் செய்வது ஆணை உடலுறவுக்கு அழைப்பதற்காக' என்று பகிரங்கமாக பொது ஊடகத்தில் டாக்டர் ஷாலினியால் சொல்லமுடிகிறது என்றால் பெண்ணியவாதிகளுக்கு இந்த சமூகம் கொடுத்து வைத்திருக்கும் அந்தஸ்தை புரிந்துக் கொள்ளலாம். நாளையே  ஒரு ஆண் இப்படி சொன்னால் இதே ஷாலினி 'என்ன ஒரு ஆணாதிக்க வக்கிரம் என்று அந்த ஆணை நோக்கி  வாளையும் வீசக் கூடும்.    

பெண்ணியவாதிகள், சமூகம் விதித்த கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வருவதாக எண்ணிக் கொண்டு சமூகத்திற்கு எதிர் திசையில் போகிறார்கள், எதிர்த்து செய்கிறார்கள். ஆறறிவு உள்ள மனிதர்கள் என்பதை மறந்துவிட்டு சுய சிந்தனை அற்று வாய்க்கு வந்ததையும்  நினைப்பதை எல்லாம் பேசுவதும் உடல் உறுப்புகளை இழிவு செய்வதும் சாதி மத ரீதியிலான தாக்குதலுமா  கருத்து சுதந்திரம் ? 

பெண்களை பற்றிய கட்டுரையில் சாதிக்கு என்ன வேலை, இவ்வாறுதான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் எதற்கோ எதையோ இழுத்து பத்தாததுக்கு பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள். அவர் ஏதோ அப்போதையை சூழலுக்கு தனக்கு சரி தவறு என்று பட்டதை எல்லாம் சொல்லி எழுதி வைத்துவிட்டு போய்விட்டார். அப்போதைய சூழலா இப்போதும்  இருக்கிறது? 

ரொம்ப வெளிப்படையாக பேசுவது தான் பெண்ணுரிமை என்ற கட்டமைப்பை இவர்களாக ஏற்படுத்திக்  கொள்வார்கள் , இத்தகையவர்களுக்கு  ஆதரவாக சில ஆண்கள் இருப்பார்கள், ஆனால்  அவர்களுக்கு தெரியாது தங்களையும் சேர்த்தே தான் பெண்ணியவாதிகள் திட்டித் தீர்க்கிறார்கள் என்று. பெண்ணியவாதிகளின் கட்டுரைகள் கவிதைகளை பகிர்ந்தும் விருப்ப கருத்திட்டும்  தான் ஆணாதிக்கவாதி அல்ல என்று காட்டிக் கொள்வதில்  ஆண்களுக்கு அவ்வளவு விருப்பம். பெண்ணியவாதிகள் என்ன சொன்னாலும் வாவ் என்ன ஒரு தைரியமான எழுத்து என்று ஜால்ரா தட்டும் ஆண்கள் பாவம் ... பச்சை பச்சையா பெண் பேசினால் அது தைரியம்,வீரம்  என்றால் தெருகுழாயடியில் சண்டைப் பிடிப்பவர்கள் அத்தனை பேருமே வீரம் செறிந்த போராளிகள்தான் (ஜான்சிராணி வேலுநாச்சியார் போன்றோர்  மன்னிக்க) 

பெண்ணியவாதிகள் பேசாமல் இருந்தாலே போதும், ஆண்களை சாடுவதாக கூறிக் கொண்டே அத்தனை எதிர் வினையும் பெண்களின் மேல் மட்டுமே காட்டும் இவர்கள் தான் முற்போக்கு பெண்ணியவாதிகள். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண் வர்க்கத்தை வார்த்தைகளால் வன்கொடுமை செய்து வக்கிரங்களை பரப்பும் இத்தகைய பெண்ணியவாதிகளுக்கு கட்டுப்பாடு ஒன்றும் கிடையாதா ? 

பெண்கள் சாதாரணமாக பேசவும்  எழுதவும்  கூசும் வார்த்தைகளை சுலபமாக கையாளத் தெரிவதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கு... ... ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என பாடம் எடுத்தவர்கள் ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமலா இருப்பார்கள்... ஆனால் தான் தனித்து தெரியவேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் அந்த வீட்டுக்கு பெண்களை வார்த்தையால் வம்புக்கு இழுத்தது... 

இப்படி பட்ட முற்போக்கு பெண்ணியம் பேசத்தெரியாத பெண்கள் நிறைய நிறைய  எழுதவேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் எனது சிறு வேண்டுகோள்...அப்போதுதான் பெண் என்றால் யார் அவள் எழுத்து எவ்வளவு நாகரிகமானது என்பதை உலகம் தெரிந்துக் கொள்ளும் மாறாக முற்போக்கு பெண்ணியவாதிகள் சூழ் இணையம் மிக ஆபத்தானது... பெண் பற்றிய இவர்களது கருத்துக்களை வைத்து பெண் என்றால் இவர்களைப் போன்றோர் தான் என்ற தவறான பிம்பத்தை உடைத்தாக வேண்டும்... ஆண் என்றால் பெண் மோகம் கொண்டு அலைபவன் மட்டும்தான் என்ற கருத்தியலையும் பெண் தான் உடைக்கவேண்டும். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மனு சாஸ்திரத்தையும் பெரியார் சொன்னதையும் கட்டி அழுவார்களோ தெரியவில்லை.

பிறரைவிட பொதுவெளியில் இயங்கும் ஆண் பெண் இருவருக்குமே பொறுப்புகள் அதிகம் இருக்கிறது. தகுந்த காரணக்  காரியம் இல்லாமல் போகிறபோக்கில் ஒரு கருத்தை தெளித்துவிட்டு போய்விட முடியாது... சுற்றி சுழலும் உலகத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். மாறாக என்  எழுத்து என் உரிமை என்று உளறிக் கொண்டிருந்தால் பிறரால் தவிர்க்கப் படுவார்கள் அல்லது  கேலிக்கு ஆளாகி விரைவில் காணாமல் போய்விடுவார்கள்.

பெண்களை மேலும் மேலும் இழிவுப்படுத்தும் முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கு எனது  வன்மையான கண்டனங்கள் !!!


pic - google