வெள்ளி, நவம்பர் 6

வாழத்தானே வாழ்க்கை ...!

"நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு  துரதிர்ஷ்டம் ...இன்று நாம் எல்லோரும் இந்த துரதிர்ஷ்டதிற்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்" - ஆல்பெர் காம்யு.

தற்செயலாக இதை வாசிக்க நேர்ந்தது... எவ்வளவு உண்மை !!!  கணினி செல்போன் இணையம் இல்லாத காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.  கணினி வேகத்திற்கு ஈடுக்கொடுத்து மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். ஐஸ்க்ரீம் கரைவதற்குள் சாப்பிட்டு விடவேண்டும் என்பதை போன்று வேக வேகமாக  வாழ்கிறோம் , ஆனால் உண்மையாக வாழ்கிறோமா என்றால்  இல்லை என்றுதான் சொல்வேன்.  யாருக்கு போன் செய்தாலும் பிரீயா இருக்கிங்களா பேசலாமா என கேட்டு பேசுவது எனது வழக்கம், ஏன்னா அவங்க இப்ப நான் பிசி, வை போனைனு சொல்றதுக்கு முன்னாடி நாமலா கேட்டுறது நல்லது பாருங்க. :-) இரண்டு நிமிடம் பேசவும் நேரமில்லாத மனிதர்கள் தானே  நாம், என்னையும் சேர்த்துதான். ஆனால் ஏன் இப்படி வாழ்றோம் என்று யோசிக்கவேண்டும்.      






நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் ஒரு ஹாய் ஹலோ சொல்ல கூட இயலாத நிலை நல்லதா கெட்டதா ? இது யதார்த்தம் தான் என சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உறவுகள் நட்புகளிடம் நேரில் பேசுவது குறைந்து செல்போன் இணையத்துடன் பேசிக் கொண்டும் அல்லது தனக்குள் தானே பேசிக் கொண்டு ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்து வாழ்கையை கடினப் படுத்திக் கொள்கிறோம். 

எனது நெருங்கிய தோழிக்கு  (25 வருட நட்பு)           எப்போது போன் செய்தாலும் 'கால் யூ பேக்'  என்ற sms வரும்,  பிறகு  அவளாக மாலை ஐந்து மணிக்கு அழைப்பாள்,  ஒரு கை காரின் ஸ்டியரிங்கிலும், மறுகையில் போன்னுமாக பேசுவாள், வீட்டை எட்டுவதற்குள் எங்களின் பேச்சு முடிந்துவிடும் அல்லது முடித்துக் கொள்வோம்... இதைத் தவிர வேறு நேரம் அவளுக்கு கிடைப்பதில்லை. சமையல், வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் வீட்டிலும் தோழி பிசியாகவே  இருப்பாள்... கணவன் மனைவி இருவரும் சேர்ந்து லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.   பெங்களூரில் சொந்தமாக மாடி வீடு, சென்னையிலும்  வீடு நிலம் என்று இருக்கிறது, ஒரே மகன், வாரத்திற்கு ஒரு வேளை ஒன்றாக அமர்ந்து உணவருந்தவும் இயலாமல் எப்போதும் எதன்  பின்னோ ஓடிக் கொண்டே இருக்கிறாள், நடுநடுவே சலித்தும் கொள்வாள், ஒரு நாளும் ரிலாக்ஸ் பண்ண முடியவில்லை என்று. அவள் வாழும் வாழ்க்கையை பார்த்து எனக்கு மிகுந்த  ஆயாசமாக இருக்கிறது. 

2015 வருடப் பிறப்பன்று வாழ்த்து சொல்ல தோழியை போனில் அழைத்தேன் 'ஊருக்கு போய்ட்டு இருக்கேன்,  அப்புறம் கூப்பிடுறேன்' என்று SMS, நிச்சயமாக 2016 புது வருட வாழ்த்து நான் சொல்வதற்குள் அவளாக கூப்பிட்டு விடுவாள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.  :-) இதில் சுவாரசியம் என்னவென்றால் அவளது நெருங்கிய ஒரே தோழி நான்தான். இந்த லட்சணத்தில் தான் இருக்கும் போல பலரது நட்புகளும் :-))

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்ததிற்குரியவர்கள். அவர்களால் அவர்களை சேர்ந்தவர்களுக்கு  சிறிய அளவிலான சந்தோசத்தை  கூட கொடுக்க இயலாது . பிசி   பிசி  என்று தானும் தொலைந்து அவர்களை நேசிப்பவர்களின் நேசத்தையும்  அலட்சியம் செய்கிறார்கள்.  பரப்பரப்பான வேலைக்கு நடுவிலும் சிறு புன்னகையை கூட காட்டாமல் வாழும் வாழ்க்கை உண்மையில் நரகம். பிசி என்ற முகமூடியை போட்டுக் கொண்டு அன்பானவர்களிடம் தோற்றுப் போகிறோம். பகிரப் படாத அன்பும் கவனிக்கப் படாத நேசமும் யாருக்கும் பிரயோசனம் இன்றி விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும்  ஒரு சிறிய  நலம் விசாரிப்பு சிறு புன்னகை செய்ய கூட இயலவில்லை என்றால் என்ன வாழ்க்கை.  வலிய வலியச் சென்று உறவுக் கொள்வது ஒரு கட்டத்தில் சலிப்பை வெறுப்பை கொடுக்கும், உலகத்தில் இவர் ஒருவர் தானா இருக்கிறார் நாம் பேச பழக, இந்த உலகம் ரொம்ப பெரியது என்று புது புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் தவறில்லை.  சாதாரண நட்புகள் என்றால் பரவாயில்லை... நெருங்கிய உறவாக இருந்தால் என்னாகும் யோசிக்கவேண்டும் அல்லவா?!

இயந்திர உலகில் எல்லோருக்கும் தான் வேலை, பிரச்னை இருக்கிறது அத்தனைக்கும் நடுவிலும் உறவுகள் நட்புகளுடன் தொடர்பில் இருப்பதுதான் உயிர்ப்பான வாழ்க்கை. பிறரை நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது பேரின்பம், இதனை அலட்சியப்படுத்தி வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்?!!  நேசிப்பவர்களை காயப்படுத்தி அதில் சுகம் காணுவதும் ஒரு மனநோய் தான்.

இவ்வாறுதான் நம்மில் பலரும் இருக்கிறோம், பலவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு 'சே எப்போவும் ஒரே டென்சன், பிரீயா இருக்கவே முடியல' என்று... ரிலாக்ஸ் என்பது வேறு எங்கயோவா இருக்கு, ஓய்வுக்கு தேவையான நேரத்தை நாம் தான் ஒதுக்கவேண்டும். அதையும் நம்மை நேசிக்கிறவர்களுடன் செலவிட்டால்  உற்சாகம் இரட்டிப்பாகும்.   

நட்புகள் உறவுகளை நேரில் சந்தித்து பேச இயலாவிட்டாலும் போனில் தொடர்பு கொண்டு பேசலாம் . ஆனால் சமூக வலைதளங்கள் வந்தப் பின் அதற்கும் நேரமில்லாமல்  'அப்புறம் கூப்டுறேன்' என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக்கில் நுழைந்து   'ஹாய் சொல்லுடா கூப்டியே' என்று டைப் பண்ற அளவுக்கு போய்டுச்சு. போனில்   இரண்டு வார்த்தை பேச வழியில்லை ஆனால் பேஸ்புக்கில் அன்பொழுக  பேசுவது    வேடிக்கை.

அப்புறம் இன்னொன்னும் புரிய மாட்டேங்குது, போன் ல பேச நேரம் இல்ல பிசி பிசி சொல்ற ஆட்கள் பேஸ்புக் ஸ்டேடஸ் ஒரு பக்கத்துக்கு டைப் பண்ண எப்டி முடியுது... லைக் கிடைக்குதுன்றதுக்காவா ?! என்னவோ போங்க ...அன்பு நேசம் பாசம் நட்பு எல்லாம் விரல் நுனிக்குள் அடங்கிவிட்டன.  

தம்மை நேசிக்கும் உறவுகளிடம் ஏன் இந்த அலட்சியம். இயந்திர உலகில் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் மிகவும் குறைவு என்றபோது   மிக சிலரிடம் கூட உறவை சரியாக பேணாமல் வாழும் வாழ்க்கையில்  உயிர்ப்பு இருக்குமா என்ன...நிச்சயமாக இல்லை. இளமையில் நமது இந்த அலட்சியம் பெரிதாக  தெரியாது, காலம் செல்ல செல்ல ஒரு வெறுமை  சூழும்  நம்மை பார்த்து புன்னகைக்கவும் ஒருத்தர் இல்லையே எல்லோரும் எங்கே சென்றார்கள் என்று மனசு ஏங்கும். அன்பிற்கு இன்னொரு பக்கமும்  இருக்கிறது அதற்கு பெயர் வெறுப்பு, ஆம் அதுவரை மென்மையாகவும் பரிவாகவும் நம் ஒரு விழி பார்வைக்காக  ஒரு ஐந்து நிமிட பேச்சுக்காக காத்துக் கிடந்த அன்பு வெறுப்பாக மாறி இருக்கும். அன்பை மதிக்காவரிடத்து செலுத்தப் பட்ட அன்பு இப்படி ஆகிவிடுவது இயல்பு.  ஆனால் இது நல்லது அல்ல. நாம் வாழும் சூழல் அன்பு நேசம் பாசம் பிரியம்  நிறைந்ததாக இருக்க வேண்டும் அத்தகைய இடத்தில் தான் இறைவனின் பார்வை இருக்கும்.

அப்படியல்லாமல் எதன் பின்னோ ஓடி நமக்கான வாழ்க்கையை வாழாமல் போவதுடன், காலமும் அப்படி இப்படி நம்மை  அலைகழித்து ஓடச்செய்துவிடுகிறது.  அத்தகைய ஓட்டத்தில் வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களை கவனிக்காமல் வெற்றுப்புலம்பல் எரிச்சல் சலிப்புடன் மரணித்தேப்  போகிறோம்...


அடிக்கடி இல்லையென்றாலும் சந்திக்கும் நேரத்திலாவது  மெல்லிய புன்னகை சில அன்பான வார்த்தைகளை பிறருக்கு கொடுத்துச் செல்வதை வழக்கமாக்கி கொண்டோம் என்றால் இவையே நம்மை வாழும் காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்...

இனியாவது இப்படியும் கொஞ்சம் வாழ்ந்துப் பார்ப்போமே... ஆம்  'வாழத்தானே வாழ்க்கை' !!!





பிரியங்களுடன்
கௌசல்யா




   





வெள்ளி, மே 1

உலக மகா சுட்டிப் பெண் - " விசாலினி "




2 1/2 வயது குழந்தை பருவத்தில் Tnpsc குரூப் ஒன் தேர்வுக்கான 1000 வினா விடைகளை ஒப்பித்து தொடங்கிய இவளது சுட்டித்தனம் கணினித் துறையில் 5 உலகச் சாதனைகளை செய்தும் இன்னும் திருப்தி அடையவில்லை... அடுத்து என்ன என்ன  என்று தேடி ஓடிக் கொண்டே இருக்கிறாள்... பல உயரங்களை வெகு சுலபமாக தொட்டு முன்னேறிக் கொண்டே செல்கிறாள். இவள் பெற்ற பரிசுப் பொருட்கள் , கேடயங்கள், கோப்பைகள், சான்றிதல்கள், வாழ்த்துரை இதழ்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. பிரபல தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகை, தினசரிகளில் விசாலினியின் பேட்டி எடுத்து மகிழ்ந்தன...நானும் என் பங்கிற்கு 3 வருடத்திற்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தேன். மூன்று வருடங்களாக பல்வேறு கணினி  தேர்வுகளை தொடர்ந்து எழுதி தேர்ச்சிப் பெற்று வரும் இவளது சாதனைகளை என்னால் முழுமையாக எழுதி முடியாது என்பதால் சிறு குறிப்பு மட்டும் இங்கே, தவிரவும் அடுத்த சிகரம் ஒன்றை நாளை(மே 2ஆம் தேதி) தொட இருக்கிறாள் அதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

சாதனைகள் சிறப்புகள்

BTech MTech BE மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கணினி துறைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறாள். இதுவரை மொத்தம் 25 இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செமினார்கள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என நடத்தி இருக்கிறாள். கணினி நிறுவனங்களுக்கும்  சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறாள். இதுவரை 127 மேடைகளில் உரையாற்றி இருக்கிறாள்.

சென்னை மவுண்ட்ரோட்டில் இருக்கும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின்  தலைமை அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி திரு.ஆனந்தகுமார் அவர்களின் அழைப்பின் பெயரில் அங்கு பணிபுரியும் ஐடி துறைசார்ந்த(IT professionals) 17 பேருக்கு Cloud Computing and networking என்பதை பற்றி இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்திருக்கிறாள். (இதை குறித்த முழு விவரங்கள் அவளது இணையதளத்தில் இருக்கிறது)

மேலும் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் Prestigious customer என்று குறிப்பிட்டு இவளது  புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் யாருக்கும் இல்லாத தனி சிறப்பு இது.

இதுவரை 8 சர்வ தேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு (Keynote Address) உரையாற்றி இருக்கிறாள்.   அடுத்ததாக 9வது முறையாக நாளை அதாவது மே 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற இருக்கும் 'கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்' சிறப்புரை ஆற்ற அழைக்கப் பட்டிருக்கிறாள். கணினி துறையில் Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில் காலை 10.30  - 11.30 ஒரு மணி நேரம் உரை ஆற்றுகிறாள். கூகுள் நிறுவனம் இச்சிறுமிக்காக  ஒதுக்கிய ஒருமணிநேர கால அளவு என்பது வெகு சிறப்பு வாய்ந்த ஒன்று.       

மேலும் இந்த உச்சி மாநாட்டில் ஜப்பான் சாகா பல்கலைக்கழக பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (Andrew Meyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழக கணினிதுறைத்தலைவர் Dr. ராகுல்பானர்ஜி ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளிமாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல்முறை என்பது தமிழர்கள் நமக்கெல்லாம் பெருமை.

கணினி கல்வியில் இவ்வளவு சாதனைகள் புரிந்துக் கொண்டிருக்கும் விசாலினி IIPE லட்சுமி ராமன் மெட்ரிக் பள்ளியில் 9 வது வகுப்பில் படிக்கிறாள் என்பதை விட இருக்கிறாள் என்பது சரியாக  இருக்கும் தானே :-)  

நண்பர்கள் விசாலினிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால்,
மெயில் ஐடி - goldengirlvisalini@gmail.com 
மொபைல் எண் +91 94864 60561, +91 98414 77920

விசாலினியின் இணையத்தளம்
http://www.kvisalini.com
 
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்ப்பெண் விசாலினி மேலும் பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 




புதன், மார்ச் 18

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - 5 இயற்கை உரம் தயாரிப்பு

வீட்டுத்தோட்டம் போடுவதே ரசாயன உரத்தில் இருந்து தப்புவதற்கு தான். அதனால் காய்கறி தோட்டத்துக்கு வேதி உரம் எதையும் வாங்கி போட்டுடாதிங்க. உரம், மருந்து , வளர்ச்சி ஊக்கி என அனைத்தையும் இயற்கை முறையில் நாமே தயாரிக்கலாம்.

இயற்கை உரம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மாடு!! அடடா சிட்டியில் மாட்டுக்கு எங்க போகனு கேட்கிறீங்களா? மாட்டின் பயன்பாடு  தெரிந்துவிட்டால் எங்கே கிடைக்கும் என்று அந்த இடங்களை தேடிச் சென்று விடுவீர்கள். அவை கிடைக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அது தொடர்பான முறைகளையும் இயலாதவர்கள் அது தவிர்த்த வேறு முறைகளை கையாளலாம், அதில் ஒன்றுதான் சமையலறை  கழிவுகள்  உரம். இந்த வீட்டுத்தோட்டம் தொடர் 'சுலபமாக' தோட்டம் போடுவதை பற்றியது என்பதால் கையில்/அருகில்  கிடைப்பதை வைத்தே சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வோம். 

Compost bin - Khamba




கிச்சனில் சேரும் காய்கறிக் கழிவுகளை இதில் போடவேண்டும். மூன்று பாகமாக இருக்கும் இதில் முதலில் மேலே உள்ள பாகத்தில் செய்தித்தாளை விரித்து அதன் மீது கழிவுகளை போட்டு வாருங்கள். கழிவுகள் போடப் பட்டதும் மற்றொரு செய்தித்தாளை கழிவுகளின் மேல் விரித்து khamba மூடியை மூடுங்கள். ஒரு பாகம் நிரம்பியதும் அப்படியே தூக்கி கீழ் பாகமாக வைத்துவிட்டு காலியாக இருப்பதை மேலே வைத்து இப்போது இதில் கழிவுகளை சேகரியுங்கள். மிச்ச இரண்டும் நிரம்புவதற்குள் முதலில் போடப்பட்டது உரமாகியிருக்கும்.  பொதுவாக உரமாக மாற  மூன்று  மாதம் ஆகும்.

khamba இல் காய்ந்த இலைச் சருகுகள், காய்கறிக்  கழிவுகள் போன்றவற்றை போடலாம்.  முடிந்தால் வாரம் ஒரு முறை ஒரு சிறிய குச்சியால் கழிவுகளை கிளறிவிடுங்கள். கழிவுகளில் maggot எனப்படும் சிறு புழுக்கள் உருவாகும், இவைகள் தான் கழிவுகளை மக்க வைப்பவை. உரமாகியதும் இவை பெரும்பாலும் மடிந்துவிடும் அல்லது flies ஆக மாறி வெளியேறிவிடும். kampa முறையில் காய்கறிக்கழிவுகளை உரமாக்குவதால் bad smell ஏதும் இல்லை.



Khambaவில் உரம் தயாரிக்க  சில டிப்ஸ்

* மரத்தூளும் தேங்காய் நார் கழிவும்(coco peat)  காய்கறிக்கழிவில் உள்ள  அதிக நீரை எடுத்துக் கொண்டு உரமாவதை துரிதப் படுத்தும். எனவே இவற்றில் எது கிடைத்தாலும் வாங்கி கழிவுகளின் மீது தூவி விடுங்கள்.

* உரமாவதை துரிதப் படுத்த புளித்த தயிர் / பஞ்சகவ்யா/ தண்ணீரில் கரைத்த சாணம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* maggots அதிகம் இருந்தால் அதன் உற்பத்தியை கட்டுப்படுத்த சிறிதளவு வேப்பந்தூள் அல்லது மிளகாய்த் தூளை தூவலாம்.

* உரம் அதிக ஈரமாக இருந்தால் நிழலான இடத்தில் இரண்டுநாள் உலர்த்தலாம்.

* கழிவுகளை மேல் விளிம்பு வரை போட்டு அடைக்கக் கூடாது, காற்று செல்ல வசதியாக சிறிது இடம் இருக்க வேண்டும்.

* உரத்திற்கு நைட்ரஜன் (சமையலறை கழிவுகள்) கார்பன்(காய்ந்த இலைகள்) இரண்டும் தேவை... இலைகள் கிடைக்கவில்லைஎன்றால் பழைய செய்தித்தாள் (கிழித்து தண்ணீரில் நனைத்தது) உபயோகிக்கலாம்.

* காய்கறி, பழக் கழிவுகளை அப்படியே போடாமல் பெரிய துண்டுகளை சிறிதாக்கி போடுங்கள்.  

மூன்று மாதம் கழித்து உரம் தயாராகியதும் கடைகளில் கிடைக்கும் vegitable basket(துளைகள் உள்ளது) வைத்து  உரத்தை சலித்து எடுத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம். Khamba கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் மண் பானையை பயன்படுத்துங்கள். அதில் காற்று உள்ளே செல்ல சிறு துளைகளை கவனமாக ஏற்படுத்தவேண்டும். இரண்டு துளைகள் போடமுடிந்தாலும் போதும். (சந்தேகம் இருந்தால் கமெண்டுங்க அல்லது மெயிலுங்க)

செடிகள்  செழிப்பாக  வளர ...

* காலாவதியான மாத்திரைகளை தூள் செய்து போடலாம். உபயோகம் இல்லாத டானிக், சிரப் போன்றவற்றை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.(பூச்செடிகளுக்கு மட்டும்)


* வீட்டில் சேகரமாகும் டீத்தூள் தவிர அருகில் டீக்கடை இருந்தால் அவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்து அதில் உபயோகித்த டீத்தூளை போடச்சொல்லுங்கள். (கடைக்காரர் நண்பராக இருந்தால் வசதி) :-)

* அதே  மாதிரி பரோட்டா கடையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து வைத்தால் முட்டை ஓடுகளை வாங்கிக்கொள்ளலாம். இதை தூள் செய்து போடலாம்.கால்சியம் சத்து செடிகளுக்கு அவசியம். 

முள்ளங்கி  

* வாழைப்பழத்தோல் சிறந்த உரம். காயவைத்து துண்டுகளாக கட் பண்ணி மிக்ஸியில் போட்டு தூளாக்கி செடிகளுக்கு தூவலாம். முக்கியமாக தக்காளிக்கு அவசியம் போடவேண்டும். செடிகளுக்கு தேவையான  பொட்டாசியம் சத்தை இது கொடுக்கும்.

* அரிசி ஊறவைத்த/கழுவும் நீரையும், சாதம் வடித்த நீரை ஆறவைத்தும்   ஊற்றலாம். 

* கடைகளில் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு என்று கிடைக்கும். அதை வாங்கி அப்படியே நொறுக்கி போடலாம், ஊறவைத்து கரைத்தும்  போடலாம். ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு செடிக்கும் ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட்டை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். இந்த சால்ட் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மீன்கழிவில் இருந்து வளர்ச்சி ஊக்கி

மீனை  சுத்தப்படுத்தியதும் வீணாகும் மீன் கழிவை சேகரித்து  (கடைகளில் கிடைக்கும்) அதே அளவிற்கு வெல்லம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு அதன் மூடியால்  டைட்டாக  மூடி விடுங்கள். இரண்டு நாள் கழித்து திறந்து லேசாக கிளறி விடுங்கள். பிறகு மறுபடியும் நன்றாக மூடி அப்படியே வைத்துவிடுங்கள். bad smell இருக்கவே இருக்காது.  இருபது நாட்கள் கழித்து எண்ணெய் போன்று மேலே மிதப்பதை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீன் வளர்ச்சி ஊக்கி ரெடி.  ஒரு லிட்டர் வளர்ச்சி ஊக்கி, பத்து லிட்டர் தண்ணீர் (1:10) சேர்த்து செடிகளுக்கு தெளிக்கவும், செடி அருகில் ஊற்றவும் செய்யலாம். தேவைப் படும்போது தயாரித்து பயன்படுத்துங்கள்.

பிளாஸ்டிக் கவரில் முட்டைகோஸ் 
படித்ததை அனுபவத்தில் அறிந்து, பயன்பெற்று இங்கே பகிர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் வசதி படவில்லை என்றாலும், வீட்டுத்தோட்டம் தொடரில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு சௌகரியப்படுவதை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.

நேரம் இருந்தால் வீட்டுத் தோட்டம் பற்றிய இந்த வீடியோ பாருங்க...
   
http://www.youtube.com/watch?v=FBmLZ0zwu88

நான் Khamba வை கோயம்புத்தூரில் வாங்கினேன். இதை பற்றிய விவரங்கள் தேவையென்றால் கோவை தெலுங்குப் பாளையத்தை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள் அவரின் மொபைல் எண் : 9944309603.

ஆன்லைனில் வாங்க பிளீஸ் கிளிக் - www.dailydump.org

Happy Gardening ...


பிரியங்களுடன்
கௌசல்யா
mail id : kousalyaraj10@gmail.com

படங்கள் - எங்கள் பால்கனி தோட்டத்தில் எடுத்தவை 



திங்கள், மார்ச் 9

பேசாப் பொருளா ...காமம் !? ஒரு அறிமுகம்

'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும் போதும் கவுன்சிலிங் செய்யும்போதும்  தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து   ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுகிறேன். இப்படியெல்லாமா  சந்தேகம் வரும்? இதுக்கூடவாத்  தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து?  என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே  விட்டேன்...

A lust that can be spoken of...

தொடருக்குள் போகும்முன் சில வரிகள் புரிதலுக்காக...

பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக  ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.

பாலியல் உறவுகளைப் பற்றி ஆண் பேசலாம், பெண்ணின் அங்கங்களை வர்ணித்து கவிதைகள் எழுதலாம் ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் உடனே சமூகம் வெகுண்டு எழும் அப்பெண்ணை பழிக்கும் தூஷிக்கும். அவ்வளவு ஏன்  இதை வைத்தே அந்த பெண்ணின் தரத்தை அவர்களாகவே நிர்ணயித்துவிடுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வருகிறது.

பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம்.   ஒரு  ஆண்  மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும்  பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள்  என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.  

பாலியலைப்  பற்றி பெண்  எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயைகே  கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும். எனவே  இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல்  இருக்கட்டும் !!!

பேசாப் பொருளா காமம்?   

அற்புதமான ஒரு விஷயம் எவ்வாறு  அசிங்கமான தவறான அருவருப்பான குற்றமாக தவிர்க்கக்கூடிய - மறைக்கக் கூடிய  ஒன்றாக மாறியது அல்லது மாற்றப்பட்டது... யாரால் ஏன் எப்போது என்ற கேள்விகள் எனக்குள் எழும் ...அதற்கான விடையை தேடும் ஒரு தேடல் இந்த தொடர் என்று சொல்வதை விட காமத்தைப்  பற்றிய அரைகுறை கணிப்புகளினால் சமூகத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அலசும் ஒரு தொடர் என்று வைத்துக்கொள்வோம்.



சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும்  பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன்,  அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும்  இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.  அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம், எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம்.  காமத்தில் அவர்களால் முழுமைப்  பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக  உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர்  எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே  இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும்.  முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.    

 எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும்  ஒவ்வொரு கூட்டமும்  ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக்  காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசாப்  பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்குத்  திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை  கூரையாகக்  கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான்  செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை.  உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம்  என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  காம எண்ணங்களை  மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனனுக்கு  பெயர் பாதிரியார்.

புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும்  ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும்  புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச்  செலவிடுகிறார்கள். 

பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின்  ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போகப்  போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களேத்  தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களைக்  கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு  அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே!

ஆன்மீகத்திற்கு எதிரானதா  காமம்.

துறவிகளுக்கும்  புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத்  தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானேச்  செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதைப்  போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக்  குறைபாடுகள்  கொண்டவராக இருக்கவேண்டும் 

ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக  மறுத்தோ ஏற்றோ  பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும், அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள்.  காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான்,  குடும்பத்தில் அதிகரித்து வரும்  விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.

பின் குறிப்பு:-

குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தித்  தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன்.  :-)

கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை  மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன்  நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே  என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க  பிளீஸ் ...


தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Paintings - Thanks Google 

புதன், மார்ச் 4

பிளஸ் டூ பொதுத் தேர்வு - ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ??!!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றிலும் இருக்கிறவங்க  ஏன் இப்படி கொலைவெறி புடிச்சு அலையுறாங்கனு நிஜமாவே எனக்கு புரியல. எந்த பேப்பரை பிரிச்சாலும் டிசைன் டிசைனா அறிவுரைகள்  ஆலோசனைகள் !  வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல், இந்தியா பௌலிங்க்னு வச்சுகோங்க, ஒரு விக்கெட் விழுது அந்த நேரம் நம்மாளுங்க வலது கைல ரிமோட் இருந்துச்சுனு வைங்க , மேட்ச் முடியுற வரை கை வலிச்சாலும் ரிமோட்ட கையை மாத்தாம கீழ வைக்காம இருக்குறது... கூப்டாலும் திரும்பாம சேர்ல கம் போட்டு ஒட்டுன மாதிரி அசையாம இருக்குறது......அப்டி இப்டி ஏகப்பட்ட  short time சென்டிமென்ட்ஸ் இருக்கும்.  அதுக்கு சிறிதும் குறைந்ததில்லை.... இன்றைய மாணவர்களை எல்லோரும்  படுத்தும் பாடு. 




தேர்வை தைரியமாக எதிர்க் கொள்ள வழிமுறைகள் என்று  ஒரு பெரிய லிஸ்ட்... இந்த வழிமுறைகளை பின்பற்றினால் டன் கணக்கில் தைரியம் கிடைச்சு மலையை பொறட்டி தூக்கி அடுத்தவன் தலைல  போட்டுடலாம்னா பார்த்துக் கோங்க என்பதை போன்ற ஓவர் பில்டப்க்கள் !! 

அப்புறம் பெற்றோர்களே இது உங்களுக்கு நல்லா கவனியுங்க -  இருக்குற அத்தனை காய்கறியையும் முக்கியமா பாவக்காய விட்டுடக்கூடாது அப்டியே அரைச்சு உப்பு மிளகு போட்டு பசங்க காலைல எழுந்ததும் கொடுங்க... குடிச்சதும் மூளை அப்டியே ஜிவ்னு உஷாராகி போன ஜென்மத்து ஞாபகத்தையே கொண்டு வரும் அப்புறமென்ன சும்மா ஒரு டைம் வாசிச்சு விட்டா போதும் மூளை அப்படியே கபால்ன்னு புடிச்சுக்கும்.  அப்புறம் காரத்தை சுத்தமா குறைங்க... எண்ணெய் 2 ஸ்பூனுக்கு மேல நோ நோ தான், ஆவில வேக வச்சதுனா பெட்டர்  -  தேர்வு நேர சமையல் குறிப்புகள் என்று  ஒரு லிஸ்ட். 

மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது எப்படி  என்ற மனநல மருத்துவரின் அறிவுரைகள் ஆலோசனைகள் வேறு. யோகா தியானம் எதையும் விட்டுடக் கூடாது...  இப்படி பொதுத்தேர்வை மையப் படுத்தி பக்கம்பக்கமாக எழுதி இருக்கிறார்கள்... அப்பப்பா தலை உடம்பு எல்லாம் சுத்தறது!  ஏற்கனவே பெற்றோர்கள் ஒரு வருஷமா பிபி மாத்திரையும் கையுமா இருக்காங்க, அது போதாது என்று இந்த ஊடகங்கள் வேறு பீதியை கிளப்பி பெற்றோர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்க அவங்களும் அதை அப்படியே தங்களின் குழந்தைகளின் மீது காட்ட பிள்ளைகளின் நிலையோ மனநோய் பீடித்த நிலை. 

இதெல்லாம் விட ஒரு பெரிய கொடுமை என்னனா மாணவ மாணவிகளை மொத்தமா கோவில்ல  உக்கார வச்சு, லிட்டர் கணக்குல நெய்யை ஹோம குண்டத்துல கொட்டி யாகம் வளர்க்குறாங்க... இந்து பேப்பரில் வந்த  போட்டோவை பார்த்தால் மாணவிகளின் கண்களில் பக்தியை விட பயம்தான் தெரிகிறது. மிரண்டு போய் இருக்கிறார்கள். அப்புறம் ஒரு கூட்டம் மாணவ மாணவர்களை நிக்கவச்சு கண்ணை மூட சொல்லி பரிசுத்த ஆவியை நேரா அவங்க மேல இறக்குறாங்க ... இன்னொரு பக்கம் சர்வ மத பிரார்த்தனை என்று ஊர் ஊருக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை போல நடந்துக் கொண்டிருக்கிறது.  

இப்படி சுத்தி சுத்தி ஆளாளுக்கு மாணவர்களுக்கு பயத்தை, பதட்டத்தை வரவழைச்சுட்டு  கடைசியா அசால்ட்டா கொடுப்பாங்க பாருங்க ஒரு லெக்சர், பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் தற்கொலை செய்துக் கொள்ளாதீர்கள்...  படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை இல்லை என்று அப்டியே ஒரு பல்டி! இவ்வளவு நாள் நீங்களாம் எங்கடா இருந்திங்க, தேர்வுக்கு முன்னாடியே ஊர் உலகத்தை கூப்ட்டு மேடை போட்டு இதை சொல்லவேண்டியதுதானே . அப்பலாம் விட்டுட்டு ஒரு உயிர் போனதும் உண்மையை இப்டி கொட்டுறிங்களே என்று கத்த தோணும். சரி இப்போவாவது தெளிஞ்சுதேனு சந்தோசப்பட முடியாது... மறுபடி அடுத்த வருஷம் பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க......

இந்த ஆர்பாட்டங்களை எல்லாம் பாக்கறப்ப எனக்கு நாலு தடவை விஷம் குடிச்சு ஆறு தடவை தூக்குல தொங்கி பத்து தடவை ரயில முன்னாடி பாய்ஞ்சுனு  மாத்தி மாத்தி தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு. ஏ சமூகமே ஏ பள்ளிக்கூடமே ஏ அரசே ஏ அவனே ஏ இவனே என் இந்த குழந்தைகளை இவ்ளோ கொடுமைப்படுத்துரிங்க. பாவம் விட்டுடுங்க இன்றைய மாணவர்களை !!! பிளஸ் 1 பாடமே நடத்தாமல் பிளஸ் 2 பாடத்தை இரண்டு வருடமாக படிக்க வைத்து எப்போது பொதுத் தேர்வு வரும், முடித்துத் தொலைக்க என அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ...

ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியா வேலை பாக்குற என் தோழி தனது பிளஸ் 2 மகளின் தேர்வை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னாடியே லீவ் போட்டு மகளின் அருகில் அமர்ந்து படி  படி என்றபடி  இருக்கிறாள். மாற்றாந்தாய் கொடுமைனு  சொல்வாங்களே அதை இப்ப  என் தோழியின்  வீட்டில்  பார்க்கலாம்.

பள்ளிக்கூடமும், வீடு, சமூகமும் கொடுக்கும் மன அழுத்தங்களால் ஒவ்வொரு மாணவனும் ஒரு மனநோயாளிப் போலவே காட்சியளிக்கிறார்கள். மாணவிகள் ஓரளவு பரவாயில்லை, மௌனமாக சமாளித்து விடுகிறார்கள் ஆனால் மாணவர்கள் நிலைதான் மிக பரிதாபம்.  வீட்டில் இருந்து மூச்சுத்திணறி வெளியே வந்தால் தெருவில் போற வர்றவங்க எல்லாம் அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க.... மூணு பேர் சேர்ந்து நின்றாலே படிக்குற பசங்களுக்கு ரோட்ல என்ன வேலை என விரட்டப் படுகிறார்கள்...  வீடு பள்ளி சமூகம் எல்லாம் துரத்த வேறு எங்கே செல்வார்கள் ... யோசிங்க !?

நேத்து பேப்பரில் பார்த்தேன். பொதுத்தேர்வு நடக்குற பள்ளிக் கூடங்களில் நடமாடும் மருத்துவக் குழு ஒன்று சகல ஏற்பாடுகளுடன் தயாராக நிற்குமாம். இந்த காட்சியை பார்த்துட்டு உள்ள போற மாணவி வினாத்தாளை கையில் வாங்கியதும் மயங்கி விழாமல் இருந்தால் ஆச்சர்யம் !! 

பெற்றோர்களே !

எல்லாம் என் குழந்தைகளின் நல்லதுக்கு தானே என்று உங்களின் பைத்தியக்கார செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ளாதீர்கள்... இந்த ஒரு வருடத்தில் அவர்கள் தொலைத்த குழந்தைத்தனம் சந்தோசம் நிம்மதியை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா? கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்திற்காக நிகழ்கால ஜடங்களாக மாற்றிவிடாதீர்கள். 

இதோ நாளை தேர்வு... இப்போதும் இத படிச்சியா அத நோட் பண்ணிக்கோ என்று ஆளாளுக்கு படுத்தி எடுக்காதீர்கள் பிளீஸ்... இத்தனை நாளா அவங்களை வளைச்சு வளைச்சு  கண்காணிச்சுட்டு இருந்தது போதும்...  இனிமேலாவது  சுதந்திரமா  விடுங்க ... இறுக்கம் தவிர்த்து  பிரீயா மூச்சு விடட்டும்... அப்போதுதான் படித்தவரை  சரியாக எழுதமுடியும்... தேர்வை விட நமக்கு நம் குழந்தைகள் முக்கியம் மறந்துவிடாதீர்கள் !!!   

நாளைக்கு பிளஸ் 2 தேர்வை எழுதப் போகும் மாணவர்களுக்கு நாம் சொல்லக் கூடியது ஒன்றே ஒன்றுதான்... 

'படிச்சிருக்கிறோம் எக்ஸாம் எழுதப் போறோம்' என்ற மனநிலையோடு  மட்டும் சந்தோசமாக தேர்வை  எதிர்க் கொள்ளுங்கள் ... என் அன்பு வாழ்த்துக்கள் !!! 



திங்கள், மார்ச் 2

வாழ்தல் இனிது ...!

'பிறந்துவிட்டோம் அதனால் வாழ்கிறோம்' என்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தாலும் 'அடடா ஏன் இப்படி, வாழத்தானே வாழ்க்கை' என்று  கையை பிடித்து இழுத்து வந்து எங்கே சிரிங்க எங்கே ரசிங்க என்று உற்சாகப் படுத்துபவர்கள் சூழ வாழ்வது வரம். அதே வரம் இரட்டிப்பாய் கிடைத்தால் எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எனது குழந்தைகள்.  அரிதாய்  கிடைத்த இந்த வாழ்க்கையின்  ஒவ்வொரு  நிமிடத்தையும்  பெற்றோரை அனுபவிக்க  வைத்து   ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்  !!   

முதல் வரம் 

பிளஸ் 2 படிக்கும் எனது மூத்த மகன் பள்ளியில் 'பிரிவு உபச்சார விழா'விற்காக A Tribute to Teachers  என்ற ஆறு நிமிட வீடியோ ஒன்றை தயாரித்தான். மூன்று நண்பர்களுடன் ஆலோசனை செய்து  கம்ப்யூட்டர் சம்பந்தமான வேலைகளை இவன் செய்து முடித்தான்.சும்மா செய்து பார்ப்போமே என்று செய்த இவனது முதல் முயற்சி  ஸ்கூல் பிரின்சிபால் , ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றதில் அம்மாவா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. வீடியோ ரெடி  ஆகும் வரை நாலுபேரை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இவர்கள் மறைக்கப் பட்ட பாட்டை நேரில் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பேன். ஸ்கூல் எதிரில்  தான் எங்களின் வீடு என்பதால் பசங்க வருவதும் போவதுமாக இருக்கும்.  ஆசிரியர்களின் போட்டோக்களை பழைய குரூப் போட்டோக்களில் இருந்தும்  மாணவர்களின் போட்டோக்களை அவர்களின்  பேஸ்புக்(!) ப்ரோபைலில் இருந்தும் சம்பந்தப்பட்ட இசை, காட்சிகளை நெட்டில் எடுத்தும் இணைத்திருந்தான். தங்களின் போட்டோக்களை பார்த்தவர்களுக்கு ஒரு ஆச்சர்ய சந்தோசம் கூடவே மனதை தொட்ட கான்செப்ட்,  இவனது கையை பிடித்து வாழ்த்தி சந்தோஷத்தில் கத்தி தீர்த்துவிட்டார்கள்.

ஒரு வாரத்தில் பப்ளிக் எக்ஸாம் , அந்த டென்ஷனை குறைக்க இந்த வீடியோ தயாரிப்பு  உதவும் என்பதை போல அவனும் ஜாலியாக இந்த வீடியோ பண்ணிய விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. முதலில் சிலைட் ஷோ பண்ண போவதாக இருந்தான், பிறகு என்ன நினைத்தானோ ஒரு கான்செப்டுடன் ஆறு நிமிட விடியோவானது. அதில் புகைப்படம் கிடைக்காமல் விடுபட்ட ஆசிரியர்களுக்கு  சாரி சொன்ன விதம், மூன்று நண்பர்களின் பெயரை சேர்த்தவன் தனது பெயரை (சந்தோஷ்) போடாமல் sam workshop என்று முடித்திருந்தான். காரணம் கேட்டதற்கு 'எதுக்குமா  பேரு, பண்ணினது யாருன்னு யோசிக்கட்டுமே' என்று சிரித்தான்.

 ஸ்கூல்ல ஒரு டீச்சர்,  'பப்ளிக் எக்ஸாம்  வச்சிட்டு இதை பண்ண வீட்டுல எப்டி அலோ பண்ணினாங்க' னு கேட்டதுக்கு 'என் பக்கத்துல உக்காந்து என்கரேஜ் பண்ணுனதே எங்க அம்மாதானே' என்றதும் டீச்சர் அப்படியே சைலென்ட்.  you tube யில் வீடியோவை ராத்திரி  அப்லோட் செய்த மறுநாள் எழுதிய கெமிஸ்ட்ரி மாடல் எக்ஸாமில் 93 சதவீத மதிப்பெண். சந்தோசமாக பரிட்சையை எதிர்க் கொள்ளனும் என்பதற்கு இதை விட வேறென்ன உதாரணத்தை நான் சொல்ல.:-) வீடியோவில்  பப்ளிக் எக்ஸாம் பற்றிய இடத்தில் விஜய் டயலாக் வர சிரிப்பை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல. அந்த இடத்திற்கு பொருத்தமாக இருந்தது என்பதை விட அவனது மனநிலை அது என்பது எனக்குதானே தெரியும் :-) (ஒரு வருசமா இந்த பரீட்சையை சொல்லியே  ஸ்கூல் கொடுக்குற டார்ச்சரால எப்படா முடிச்சு தொலைப்போம்னு இல்ல இருக்கிறான்) :-)

நேரம் இருப்பின் வீடியோ பாருங்க.




இன்றைய குழந்தைகளின் ஆர்வம் ஈடுபாடு அலாதியானது தான். அதிலும் நம் பிள்ளை செய்கிறது என்றால் உலகத்திலேயே அதுதானே  ரொம்ப ரொம்ப பெரிசு இல்லையா :-)

இரண்டாவது வரம்

கடந்த வெள்ளிகிழமை(20/2/15)பிறந்தநாள் அன்று ஹாஸ்டலில் நண்பர்கள் போட்டிப் போட்டு பரிசுகள் கொடுத்து வாழ்த்தியதும் சந்தோஷத்தில்  கண் கலங்கி அழுதிருக்கிறான் எங்களின் இளைய மகன் விஷால். கிப்ட்ஸ்  எதையும் பிரிக்காமல் அப்படியே வீட்டுக்கு எடுத்துவந்தவன் என் முன்னால் வேகவேகமாக பிரித்தான். ஒவ்வொரு கிப்டும் வெள்ளை காகிதத்தால் சுற்றப்பட்டு சிகப்பு நிற ரிப்பனால் கட்டப்பட்டிருந்தது.  டியர் விஷால், ஹேப்பி பர்த்டே என்று எழுதி இருந்தவை அனைத்தும் ஓவியம்.  பேக்கிங்கின் உள்ளே இருந்தவை வெறும் பொருளாக எனக்கு தெரியவில்லை ... அங்கே சில பொருட்களின்  வடிவில் அமைதியாக உட்கார்ந்திருந்தது  நேசம் !!  நட்பிற்கு உருவம் கொடுத்தால் அது இப்படி இந்த புகைப்படத்தில் இருப்பதைப் போலத்தான்  இருக்கும் !!





ரெசிடென்சியல் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பரிசு பொருள்கள் வாங்க  கடைகளுக்கு எவ்வாறு செல்ல முடியும். ஆனாலும் தங்களின் நேசத்தை இவ்வாறேனும்  வெளிப்படுத்துவோம் என்று  தங்களிடம் இருக்கும் பொருட்களில் கையில் அகப்பட்டதை எல்லாம் எடுத்து பேக்கிங் செய்து பரிசளித்த அச்சிறு குழந்தைகளின் முன்னால் பெரிய மால்களில் இருக்கும் பொருள்கள் கட்டாயம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்.  கிப்ட் கொடுத்ததும் என் மகன் அழுததின் காரணம் எனக்கும் புரிந்தது. ஹாஸ்டலில் இருந்தால் என்ன  நண்பனுக்கு பரிசளித்தே ஆகணும் என்று ரகசியக்கூட்டம் போட்டு முடிவு செய்தபின்னர் என்ன பொருளை கொடுக்க என்றெல்லாம் அதிகம் யோசிக்கவில்லை அவர்கள்... மூன்று நாளாக  அதுவும் என் மகனுக்கு தெரியக்கூடாது சஸ்பென்சாக இருக்கணும் என்று ஒளிந்திருந்து பேக் செய்திருக்கிறார்கள்.

மகன் விடுமுறை முடிந்து ஹாஸ்டலுக்கு சென்றபின் தான், இந்த பொருட்களை  மறுபடி எப்போது பார்த்தாலும்  அழகிய அத்தருணம் அவனுக்கு நினைவுக்கு வருமே என்று போட்டோ எடுத்தேன்.  முன்பே இந்த யோசனை இருந்தால் பிரிக்கும் முன்பே எடுத்திருக்கலாம்.பேக்கிங்கை அவ்வளவு அழகாய் நேர்த்தியாய் செய்திருந்தார்கள்   ஆறாவது  மட்டுமே படிக்கும் அச்சிறு குழந்தைகள் !!

ஹாஸ்டலுக்கு ஒவ்வொரு திங்கள்கிழமை மாலையும் போன் செய்து நமது குழந்தையுடன் பேசலாம்...   அவ்வாறு என் மகனுடன் பேசும்போதெல்லாம் தவறாமல் இரண்டு எண்களையாவது கொடுத்து 'இந்த நம்பருக்கு போன் பண்ணி அவங்க பையனுக்கு உடனே போன் பண்ண சொல்லுங்க, ரொம்ப நேரமா வெயிட் பண்றான் என் பிரெண்ட்' என்பான் அக்கறையுடன். பொருள் தேடும் அவசரத்தில் ஹாஸ்டலில் இருக்கும் குழந்தையிடம் பேசணும் என்பதையே மறந்துவிடுகிறார்களே பெற்றோர்கள்.

பொருளின் பின்னே ஓடி ஓடி ஒருநாள் திரும்பிப் பார்க்கும் போது அங்கே நம்  குழந்தைகள் இருக்க மாட்டார்கள், நம் குழந்தைகளின்  சாயலில் வளர்ந்த ஒரு இயந்திரம் அங்கே  இருக்கும், கூடவே முதியோர் இல்லத்திற்கான முகவரியும்...!!  இதை புரிந்துக் கொண்டால் குழந்தைகளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடுவோம். நமது குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை எவ்வளவு விலை  கொடுத்தாலும் மீண்டும்  வாங்கவே  முடியாது.  நமது எல்லா வேலைகளையும் விட மிக மிக முக்கியம் குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் கொஞ்சம் நேரம்  மட்டுமே.

'இருபது பேருக்கு மேல் இருக்கும், உங்க மகனுக்கு வந்த பரிசுகளைப் போல இங்க வேற யாருக்கும் இப்படி நடக்கல' என்று ஹாஸ்டல் வார்டன் என் கணவரிடம் ஆச்சர்யப் பட்டதை அறிந்ததும்  இத்தனை பேரின் அன்பை சம்பாதித்த மகனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.  சக மனிதர்களை நேசிக்கும் இந்த ஒரு பண்பு போதும் படிப்பு பணம் புகழ் அனைத்தும் தானாகவே  அவனிடம் மண்டியிட்டு விடும்.  

பையனின் பிறந்தநாளுக்கு நான் எழுதிய போஸ்ட் பார்த்து  கமெண்ட்ஸிலும் பேஸ்புக் இன்பாக்சிலும் போன் செய்தும் வாழ்த்திய நட்புகளின் அன்பில் நெகிழ்ந்து விட்டேன். அதிலும் போனில் அழைத்து  'போஸ்ட்ட  காலைல போடுறத விட்டுட்டு, போடவா வேண்டாமான்னு சாயங்காலம் வரைக்கும்  யோசிச்சி போட்டிங்களாக்கும்' என்று  என் தலையில் நறுக்குனு குட்டிய அன்பு நண்பர், எனது மகனின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து அவனை வாழ்த்தி மகிழ்ந்த அன்பு நண்பர் கே.ஆர்.பி.செந்தில்   போன்றவர்களை பெற்றிருக்கிறேன் என்பதை விட இந்த வாழ்க்கையில் சந்தோசம் வேறென்ன இருக்கப் போகிறது.



அன்புள்ளங்கள் சூழ வாழ்வது வரம் !! ஆம்... வாழ்தல் இனிது !!!


பிரியங்களுடன்
கௌசல்யா ...





வெள்ளி, பிப்ரவரி 20

பிள்ளைக் கனியமுதே ...கண்ணம்மா !!



எப்படித் தொடங்க என்று வேறு எந்த போஸ்டுக்கும் இவ்ளோ  யோசிக்கல ...சரி மனசுல வர்றத எழுதிவுடுவோம்  ...படிக்கிறவங்க பாடு ! :-)  ஆனா உண்மையில் எனக்கு இந்த பதிவு ஒரு அழகான நினைவுகளின் மீட்டல். அவனை பற்றி எழுத அமர்ந்ததும் இதயத் துடிப்பு அதிகரிக்க மனசு உளற கை நடுங்க கணினியின் மீது மெல்ல விரல்களை ஒத்தி எடுக்க ஆரம்பிக்கிறேன்... அவன் சில சமயம் இப்படித்தான் என் நினைவுகளில் உட்கார்ந்துக் கொண்டு என்னை நினைவிழக்கச் செய்வான் ... என்னை அதிகம் சிரிக்கவைப்பவன்... அவனுக்கு என்னை அடிக்கடி கட்டிக்கணும்... ஐ லவ் யூ சொல்லேன் என கெஞ்சினால் சரி சரி நானும் ஐ லவ் யூ  என்று சொல்லி போனஸாக என் கன்னத்தில் முத்தமிட்டு சிரிப்பான்.

அப்படி சிரிக்கும் போது அவன் கன்னத்தில் விழும் சின்ன குழிக்காக என் செல்லம், என் பட்டு , புஜ்ஜிமா, கண்ணம்மா என நீளும் என் கொஞ்சல்கள். மாதா பிதா குரு தெய்வம் நாலையும் விட மேலான ஒன்று இருக்குமென்றால் அதுதான் அவன்.  ஒருமுறை ஊசி குத்தி என் விரலில் ரத்தம் போது ஷ் ஆ என்று கொஞ்சம் சத்தமா கத்திட்டேன் போல... first aid பாக்சை தூக்கி வந்து  (கண்ணுக்கே தெரியாத காயத்திற்கு) கட்டுப் போட ஆரம்பித்துவிட்டான். அவனது செய்கையால் கலங்கிய என் கண்களை பார்த்தவன் வலிக்குதா சரியாப் போய்டும்  என விரலை நீவிவிட்ட அன்பில் கரைந்தே போய்விட்டேன். அவன் வந்தபிறகே பிரிக்கவேண்டும் என்று கட்டுடன் பகல் முழுவதும் சுற்றினேன், ஸ்கூல் முடிந்து வந்தவன் இப்போ எப்டிமா இருக்கு கேட்டுக் கொண்டே கட்டை பிரித்து பார்த்திங்களா சரியா போச்சு , நானும் அட ஆமால என்றேன் அவனை ரசித்துக்   கொண்டே ...

அவன் எப்போதும் அப்படித் தான்... பிறரின் மீதான நேசத்தை காட்டுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.  ஒரு குழந்தை போதும் என்று ஐந்தரை வருடங்களை கடந்த சமயத்தில் தற்செயலாக சந்தித்த ஒரு தூரத்து உறவினர், 'ஆணோ பெண்ணோ இன்னொன்னு பெத்துக் கோங்க, நம்ம காலத்துக்கு பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் கவனிச்சுப்பாங்க' என்றதுடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை தொடர்ந்தவர் 'உங்க பையனின் மீது உங்களுக்கு அன்பும் அக்கறையும் இருந்தால் அவனுக்கு ஒரு துணையை கொடுங்க,  ஒரு  பையனா தனியா வளருவது சரியல்ல' என்றார். அதன் பின் நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை... அதற்கு அடுத்த மாதம் ஜனித்து பத்தாவது மாதத்தில் கையில் தவழ்ந்தான் எங்களின் இரண்டாவது மகன் விஷால்!

இவன் பிறந்து மூணு வருடம் கழித்து ஒருநாள் பெரிய மகனிடம் விஷாலின் பிளாஷ் பேக் பற்றி 'அந்த அங்கிள் சொன்னதும் கடவுள்கிட்ட கேட்டோம் இவன் பொறந்தான்'னு கதை மாதிரி சொன்னேன், பொறுமையா கேட்டவன் 'அந்த ஆள் மட்டும் என் கைல கிடைச்சான், அத்தோட தொலைஞ்சான்' அப்டினு ஒரு வெறியோட சொல்லவும், உண்மை புரிந்து சிரித்துவிட்டேன்.   அவ்ளோ அட்டகாசம் அராஜகம் பண்ணுவான் சின்னவன். கோபம், பிடிவாதம், வைராக்கியம் எல்லாமே ஜாஸ்தி. நினைச்சதும் நடந்தாகணும் இல்லைனா பக்கத்துல இருக்குறவங்க தலைமுடில பாதி இவன் இரண்டு கைக்கும்  போய்டும்.  அவன் வளர வளர எங்களின் பயமும் அதிகமாச்சு. கவுன்சிலிங் பண்ணா சரியாகிடும்னு நண்பர் ஒருத்தர் சொன்னதால பாளையங்கோட்டையில் இருக்கும் பன்னீர்செல்வம் டாக்டரை பார்க்கப் போனோம்.  ஹாஸ்பிடல் வாசலில் மனநல மருத்துவமனை என்ற போர்டை பார்த்ததும் என் மனசு என்னவோ பண்ண, உள்ள போகாம திரும்பி வந்துட்டோம்.

அவனோட ஸ்கூல்ல  டீச்சர்ஸ் இவனை பத்தி நிறைய கம்பிளைன்ட் பண்ணுவாங்க, கிளாஸ்ல பசங்ககிட்ட பேசிட்டே இருக்கிறான், பாடத்தை கவனிக்காம படம் வரைஞ்சிட்டு இருக்கிறான்னு....பரவாயில்லை கண்டிக்காதிங்க , நான் பார்த்துக்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு வருவேன். ஹோம் வொர்க் செய்யமாட்டான், சொல்லிகொடுக்க உட்கார்ந்தாலும் இரண்டு நிமிசத்துல அவன் பார்வை  வேற பக்கம் போய்டும்.   A  for Apple என்று தொடங்கி  Z  வரைகூட சரியாக சொல்லமாட்டான். இப்படியே நாலாவது வகுப்பு முடித்தான்.  கம்ப்யூட்டர் கேம்ஸ், படம் வரையறது என ரொம்ப சுதந்திரமாக சந்தோசமாக  வளர்ந்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் நிறைய பேசுவேன், அவனையும் பேச வைப்பேன். அவங்க அப்பா பஞ்சதந்திர கதைகள், விக்கரமாதித்தன்,தெனாலி ராமன் கதைகள் என்று புக்ஸ் வாங்கி படித்து இரவு இவனுக்கு கதை சொல்வார். படிப்பை விட அவனது குழந்தைமையை கெடுக்காம இருக்கணும் என்பதில் கவனமாக இருந்தேன்.   

ஒருநாள் அவன் கைப்பிடித்து ரேகைபார்த்து, குட்டிமா நீ பெரிய சைன்டிஸ்ட் ஆ வருவ போலிருக்கே' என்றதற்கு அவனும் 'ஆமாமா எனக்கும்  ஏதாவது ஆராய்ச்சிப் பண்ணனும்னு தோணிட்டே இருக்குமா' என்றான். எனது ரேகை ஜோஸ்யமும் அவன் மனதை படித்து சொன்னதுதானே. எங்க ஊரில் பல வசதியான வீட்டு பிள்ளைகள் சைனிக் மிலிட்டரி ஸ்கூலில் சேருவதற்கு  வருடாவருடம் முயற்சி செய்வதை பற்றி என் கணவர் பேசிக் கொண்டிருந்தார்.  6 ஆம் அல்லது  8 ஆம் வகுப்பில் மட்டுமே சேர்க்க முடியும். அங்கே இடம் கிடைப்பது மிக கடினம்,  அங்க படிச்சா ஆர்மி ,  நேவி , ஏர்போர்ஸ் போன்றவற்றில் ஆபிசர் ஆகலாம் என்று சொல்லவும், அருகில் இருந்த விஷால் அந்த ஸ்கூலை பற்றி கூகுளில் தேடி எடுத்தான். ஹார்ஸ் ரைடிங், ட்ரெக்கிங் என்று போட்டோஸ் இருந்ததை பார்த்ததும் நான் அங்க படிக்கப் போறேன்மா என சீரியசாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டான்.  போட்டி அதிகம் இருக்கும் என்பதால் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத தயார் செய்வதற்கு கோச்சிங் சென்டரில் முதலில் சேர்க்கணும். 'ஒகே அப்போ அங்க சேருங்க' என விஷால் சொல்லவும் எனக்கு வயித்தில் புளியை கரைக்க ஆரம்பித்தது.

நீண்ட ஆலோசனை விவாதத்திற்கு பிறகு உடுமலைபேட்டை அருகில் அமராவதி நகர்  சைனிக் ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்தோம். இங்கேயும் இண்டர்வியூ வைத்தே செலக்ட் செய்கிறார்கள். இவனுடன் எங்கள் ஊர் பசங்க மூணு பேரும் அங்கேயே   சேர்ந்தார்கள். சேர்த்துவிட்டு கிளம்பும் நேரம் என் மனதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக, 'இருந்துப்பியா குட்டி' என்று கேட்டேன், அவனோ கொஞ்சமும் தயங்காமல்  'நான் இருந்துப்பேன், உங்களாலத்தான் முடியாது, அம்மாவ பார்த்துக்கோங்க அப்பா' என்று  பெரிய மனுஷன் மாதிரி சொல்லிவிட்டு வேகவேகமா ஹாஸ்டலுக்கு  உள்ளே சென்றே விட்டான்.   

அங்கிருந்து பழனி திண்டுக்கல் வரையும் தொடர்ந்தது என் அழுகை.  என் கணவர், 'அவனுக்கு எவ்ளோ வைராக்கியம் பாரேன், விரும்பியது நிறைவேறனும்ன்ற பிடிவாதம் இருக்குற இவன் நல்லா இருந்துப்பான், நீ தைரியமா இரு' என்றார். உண்மைதான். ஆறு மாதம் கோச்சிங் முடிந்து  போன வருடம் 2014 ஜனவரியில் எக்ஸாம் நடந்தது. Written exam, Interview இரண்டும் சைனிக் ஸ்கூலிலும் மெடிக்கல் பிட்நெஸ் செக்கப்  கோவையிலுமாக நடந்து முடிந்து ஊர் திரும்பினோம்.  மூன்றிலும் நல்ல மார்க் எடுத்து தேர்ச்சிப் பெற்றான், ஆனால் செலக்ட் ஆகவில்லை. தமிழகத்தில் ஒன்றுமாக  இந்தியாவில் மொத்தம் 23 சைனிக் ஸ்கூல்கள் இருக்கின்றன. தமிழக ஸ்கூல் சீட்க்கு ஆயிரக்கணக்கில் போட்டி போட்ட மாணவர்களில் மொத்தம் 90 பேரை செலக்ட் செய்திருந்தார்கள். இதில் அதிக சதவீதத்தில் வட நாட்டினர் இருந்தார்கள்.  விசாரித்ததில்  நம்ம பசங்க +2 முடித்ததும் டாக்டர், இஞ்சினியர் என்று போய்விடுகிறார்கள், ஸ்கூல் நடத்துவதின் குறிக்கோள் பூர்த்தி அடைவதில்லையாம். காரணம் என்னவோ இருக்கட்டும் என் மகனின் விருப்பம் நிறைவேறலையே என்ற வருத்தத்தில் அவனிடம், 'அடுத்து என்னமா பண்றது'  என்று கேட்டேன். கொஞ்சம் வருத்தம் நிறைய யோசனை என்றிருந்த அவன் சொன்னான், 'இந்த லெவல்ல இருக்குற வேற ஸ்கூல் பாருங்க, படிக்கிறேன்'.  அதை கேட்டதும் 'மறுபடியும் ஹாஸ்டலா வேண்டாம்டா' என்றதற்கு 'அடப்போமா உன்கூட இருந்தா படிக்க மாட்டேன், நான் சைன்டிஸ்ட் ஆகணும் நிறைய படிக்கணும்' 

அப்புறமென்ன மறுபடியும் ஸ்கூல் தேடும் படலம். மதுரையை அடுத்த திருப் புவனம் ஊரில் இருக்கும் வேலம்மாள் ரெசிடென்சியல் ஸ்கூலை முடிவு செய்தோம். அங்கேயும் ஒரு Interview + 1 1/2 லட்சத்தில் பீஸ். வாரா வாரம் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவோம். ஆச்சு இதோ ஒரூ வருடம் முடியப்போகிறது.  எல்லா பாடத்திலும் 95, 97 என்று எடுக்கிறான். கூடவே டிரம்ஸ் , டென்னிஸ், ஸ்விம்மிங், யோகா என்று என்னவெல்லாம் விருப்பமோ அதை எல்லாம் கற்று வருகிறான்.  ஸ்கூல் உள்ளே இருக்கும் லைப்ரரியில்  எடுத்து படிக்கும் புக்ஸ் பத்தி நிறைய பேசுவான். எங்களிடம் கதை கேட்டு கேட்டு கதை சொல்ற பழக்கம் அவனுக்கும் வந்துவிட்டது. போன வாரம் போனில் பேசும்போது சொன்னேன், நீயா கதை எழுத டிரை பண்ணிப் பாரேன் என்று. சரி என்றவன் இன்று வீட்டுக்கு வந்ததும்  நோட்டை காட்டினான்,அழகான கையெழுத்தில் ஐந்து பக்கத்திற்கு கதை அங்கே இருந்தது... எனக்கு முன்னால் அவன்  புக் போட்டுட்டுவான்னு நினைக்கிறேன். :-)

அப்பா அம்மாவை விட தனது அண்ணன் மேல் உயிரையே வைத்திருக்கிறான். இரண்டு வருடமாகிறது இருவரும் சண்டைப்போட்டு, லீவுக்கு இவன் வந்ததும் தனது லேப்டாப்பை இவனிடம் ஒப்படைத்துவிடுவான் பெரியவன். கேம்ஸ் , ஆங்கில படங்கள் என்று முழு நேரமும் அதில் மூழ்கிவிடுவான். மகன்கள்  இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக பேசி விளையாடுவதை ஓரமாக நின்று ரசிப்பதுதான் எங்கள் இருவரின் பெரிய சந்தோசமே, வாழ்தல் இனிது !!

இப்போ ஆறாவது படிக்கிற இவரு ஒரு மாசமா 'டென்த் முடித்ததும் அமெரிக்கா போய் படிக்கப் போறேன், பணத்தை ரெடி பண்ணிக் கோங்க' என்று சொல்றாரு. ஏண்டா அங்க போகணும்னு கேட்டதுக்கு, எனக்கு பிடிச்ச வில்ஸ்மித், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், கார்ட்டூன் காரெக்டர்ஸ் எல்லாம் நியூயார்க்லதான் இருக்காங்க, சோ ஹேப்பியா ஜாலியா படிப்பேன்னு சொல்றான். என்னத்த சொல்ல... குழந்தைகளின் உலகம் ஆச்சரியங்கள் நிரம்பியதுமட்டுமல்ல, இப்படி சில திடீர் திருப்பங்களும் தான். :-)  விஷாலிடம் இப்போதும் அதே பிடிவாதம் வைராக்கியம் உண்டு, தனது விருப்பத்தை நிறைவேற்ற இவை இருக்கட்டும் என்பதை புரிந்தவனாச்சே  அவன் !

புதிதாக நிறைய தெரிந்துக் கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இன்றைய குழந்தைகளிடம் அதிகம். சுதந்திரமாக சிந்திக்கவும்  செயல்படவும் விட்டுவிட்டால்  அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதை புரியவைத்தவன் விஷால்.  எல்லாவற்றையும்விட  குழந்தையை ஒரு குழந்தையாக எப்படி வளர்க்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான்.

* * *

இது வெறும் கட்டுரை அல்ல பதினோரு வயது வரையிலான அவனது அனுபவங்களின் சிறிய தொகுப்பு, என்றாவது ஒரு நாள் இந்த அனுபவங்களை, அவனது பார்வையில் அவன் எழுதலாம் ஒரு பிளாக் ஆரம்பித்து...! பேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருப்பவனுக்கு  பிளாக்கில்  அக்கவுன்ட் வைக்க ரொம்ப நாளாகுமா என்ன  !!! :-)   

அப்புறம்

சொல்ல மறந்துட்டேனே  இந்த பதிவு யார் கண்ல எல்லாம்படுதோ  அவங்கலாம் என் மகனை அவசியம் (மனதிலாவது) வாழ்த்தியே ஆகணும்... பின்ன இன்னைக்கு(20/2/15) அவனுடைய பிறந்தநாள் ஆச்சே ... 

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா 
பேசும் பொற்ச்சித்திரமே...
அள்ளி அணைத்திடவே 
என் முன்னே ஆடி வரும் தேனே... !!

பெரியோர்களின் பரிபூர்ண அன்பும் ஆசியும் பெற்று தமிழ் போல் செம்மையாய் நீ வாழ வேண்டுமாய் இறைவனை வேண்டுகிறேன்.

என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிமா !!!


பிரியங்களுடன்
விஷால் அம்மா. 


பின்குறிப்பு : சைன்டிஸ்ட் ஆவாய் என்று நான் சொன்னதற்கு காரணம்  அவனுக்கு படிப்பின் மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தணும் என்பதற்காக... அந்த ஐடியா நல்லவிதமாக வொர்க் அவுட் ஆனது. குழந்தைகளுக்கு இப்படி எதையாவது மறைமுகமாக சொல்லி அவர்களின் கவனத்தை நல்ல விதத்தில் திசைதிருப்பலாம் என்பது எனது அனுபவம்.