வெள்ளி, ஜனவரி 21

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ! ஏன் ??



செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும்  ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3  வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!"

ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம்,  அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும். 

பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்டிருந்தாலும்  நம் மக்களின் விழிப்புணர்வு இந்த அளவில் தான் இருக்கிறது. 

மக்களை பொறுத்த வரை குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்புள்ள மனிதர்களைச் சமுதாயத்தில் நடமாட விடுவது ஆபத்து என்பதே. ஒருமுறை இதில் ஈடுபடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலை இது.

சமீபத்தில் கூட சென்னையில் ஒரு வீட்டு ஓனரின் மகன் தங்கள் வீட்டில் குடி இருக்கும் இரண்டு  சிறு வயது குழந்தைகளிடம் இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டு இருக்கிறான். அவர்களிருவரும் அண்ணன், தங்கை ஆவர். அவர்களின் தாய் காவல் துறையிடம் புகார் செய்ததின் பெயரில் இப்போது சிறையில். அவனுக்காக  யாரும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு  செய்து இருக்கிறார்கள்.

கொஞ்ச நாள் முன்பு கூட கோவையில் ஒரு சம்பவம் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது...அதில் சம்பந்த பட்ட ஒருவனை போலீஸ் என் கவுண்டர் செய்தார்கள்  என்பதையும்  அனைவரும் அறிவர். 

மனிதர்களாக பிறந்த இவர்கள் ஏன் இப்படி மனம் மாறி முரண் பட்டு நடக்கிறார்கள் என்பதை பற்றிய ஆய்வுகளை படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

உளவியல் மற்றும் மருத்துவம் என்ன சொல்கிறது ?

* இந்த தன்மை பற்றி  உளவியல் அறிஞர்கள் பலவாறு விவரிக்கிறார்கள் . இது பீடோப்பீலியா என்னும் ஒரு வகை உளவியல் நோய்.  இந்த எண்ணங்கள் ஒருவருக்கு வயது வந்தவுடனே வந்து விடுமாம். பெரியவர்களுடன் அத்தகைய செயல்களில் ஈடு பட முடியாதவர்கள் அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படி  குழந்தைகளை பயன் படுத்திகொள்கிறார்கள். 

* மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலர் சிறு வயதில் இதே போன்ற ஒரு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்ககூடும் என்கிறது ஆய்வு.

*  மரபியல் காரணங்களும் இருக்கலாம் !! ஒரு குடும்பத்தில் இத்தகைய மனநிலை கொண்டவர்கள் இருந்திருந்தார்கள் என்றால் அடுத்து வரும் வாரிசுகளிடம் இத்தகைய எண்ணம் வருவதிற்கு வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக்கள் சொல்லி இருந்தாலும், அத்தகைய மரபணு இன்று வரை கண்டுபிடிக்க படவில்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல். 

* இவர்களை வெறும் குற்றவாளியாக மட்டும் பார்க்காமல் உளவியல் குறைபாடுள்ள நோயாளிகளாகவும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இத்தகையவர்களை உளவியல் ரீதியாகவும் , மருந்து சிகிச்சைகளின் மூலமாகவும் குணபடுத்தலாம் என்றாலுமே அதற்கு மிகுந்த சிரமப்படவேண்டும், தவிரவும் இத்தகைய இச்சைகளை கட்டுபடுத்த இவர்கள் வாழ்க்கை முழுவதும் மிக கஷ்டப்பட்டு முயலவேண்டும் என்பதே...!? 

யோசியுங்கள் மக்களே !

ஆய்வுகள் எதையும் சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் பெரியவர்களாகிய நாம் நம்மிடையே சாதாரணமாக நடமாடி கொண்டிருக்கும் இத்தகைய ஆபத்தானவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதே இந்த பதிவில் நான் உங்களிடம் எழுப்பும் ஒரு கேள்வி. 

இத்தகையவர்களுக்கு குழந்தைகள் எதிர்க்க மாட்டார்கள் என்பதே ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் பெரும்பாலும் தங்களது உறவினர்கள், பக்கத்து  வீட்டினர், பள்ளிக்கு அழைத்து செல்லும் நபர்கள் போன்றவர்களாலேயே மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். 

பாதிக்கப்படும் அனைத்து குழந்தைகளுமே தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்க  முடியாது. அப்படி ஒரு வேளை சொன்னால் பெற்றோர்கள் தங்களைத்தான் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மறைத்து விடுவார்கள். 

ஆண் குழந்தைகள் !

சிலர் நினைக்கலாம் நமக்கு தான் ஆண் குழந்தைகள் ஆச்சே என்று ! பெண் குழந்தைகளுக்கு தான் இந்த பாதிப்பு அதிகம் நேரும் என்றாலுமே ஆண் குழந்தைகளும் இந்த கொடுமைக்கு தப்புவதில்லை.  கயவர்கள்  அந்த நேரத்தில் யாரை எப்படினாலும் பயன் படுத்தி கொள்வார்கள்.  அவர்களது தேவை தற்காலிகமாக தங்களது எண்ணம் ஈடேரனும் அவ்வளவே.  

எதிர்காலத்தில் ?!

இதனால் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடைய போகும் பாதிப்புகள் மிக அதிகம். பாதிக்க பட்ட குழந்தைகள் ஒருவேளை  இதில் இருந்து தப்பித்தாலும் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். பல விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னணியில் இந்த பாதிப்பு காரணமாக  இருப்பது சம்பந்த பட்ட ஆண், பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான் இதில் பெரும் சோகம். 

நம்மால் என்ன செய்ய முடியும் ??

எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்கிற போது இதை படிக்கும் ஒவ்வொருத்தரும் இனிமேலாவது தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம். 

* சிறு குழந்தைகளுக்கு குட் டச், பேட்  டச் பற்றி சொல்லி கொடுங்கள். 

* அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது. 

*  ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்...(எந்த புற்றில் எந்த பாம்போ...?!) 

*   சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். 

* பிறர் முத்தமிடுவதை அனுமதிக்க  கூடாது  என்று  சொல்லுங்கள். (நெருங்கிய  உறவினர்களாக இருந்தாலுமே !)  

கட்டாயம் சொல்லி கொடுங்கள் 

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நட்பாய் பழகி அவர்களுடன் பேசி அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள். சிறிதளவாவது உடல் அமைப்பை பற்றியும், ஆண் பெண் உறவை பற்றியும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்  சொல்லி கொடுப்பது காலத்தின் கட்டாயம். மறவாதீர் !!     

இத்தகைய இழி செயலை நாம் கண்டிக்க வேண்டும். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்...இத்தகைய நபர்களிடம் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை பற்றி ஒரு விவாதம் கூட பதிவுலகில் நடத்தலாம். 

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு பிரச்சனை பற்றி நண்பர் பத்மஹரி தனது புத்தகத்தில் விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை இணையத்தில் படிக்க இங்கே செல்லவும்.


படம் - நன்றி கூகுள் 


வெள்ளி, ஜனவரி 14

எனதருமை பச்சைத் தமிழர்களே.....!



வந்து விட்டது வழக்கம் போல்
வருடத்தின் அடுத்த பண்டிகை !

ஒட்டடை அடித்து பழையனவற்றை  கழித்து
வெளியே கொட்டி வீதியில் அசுத்தபடுத்துங்கள்,
நம் வீடு சுத்தமாகட்டும் !!?

கண்டதையும் கொளுத்தி போட்டு 
காற்றை மாசு படுத்துங்கள்
தென்றல் காற்றை நூலகத்தில் தேடுவோம் !?

விவசாயத்தில் விளைந்த புதுநெல்லை வைத்து கொண்டாட 
அருகதை அற்றவன் தமிழன் என்று அரசு தருகிறதாம் 
இலவச  பொங்கல் பொருட்கள் !?

யானை கட்டி போரடித்த மரபு என்று பழங்கதை பேசிக்கொண்டு 
வீணாய் போகாமல் ரேசன் கடை முன் கையேந்துங்கள்  
சோழன் அன்றே செத்துவிட்டான் !?

உழைக்க வழி செய்து கொடுப்பதை விடுத்து  
உழைத்தவர்கள் உட்கார்ந்து பொழுது போக்க 
தொலைக்காட்சி பெட்டி, உணவிற்கு ஒரு ரூபாய் அரிசி !?

விவசாய நிலங்கள் பிற மாநிலத்தவரின் ரியல் எஸ்டேட்களாக 
மாறி கொண்டிருப்பதை கண்டு கொள்ளாத 
சுயநல அரசு , கையாலாகாத மக்கள் !?

தீமையை கொளுத்த முயன்று தன்னையே 
கொளுத்தி கரிகட்டையான தமிழன் முத்துகுமார் 
மறைந்து மறக்கடிக்கபட்டு விட்டான்  !?

பச்சை தமிழனாய் பிறந்தது பாவம் என்று 
தாமதமாய் உணர்ந்து சிகப்பு தமிழனாய் 
கடல் தாண்டி அழிந்து கொண்டிருக்கிறான் !?

மீன் பிடிக்க போன தமிழனின் உயிர் பிடித்து செல்லும் 
வாடிக்கை இன்று வேடிக்கையாகி 
எமக்கு பழகிவிட்டது தினசரி செய்திகளும் !?
  
அக்கறையில்லை எதைபற்றியும், எம்மக்களுக்கு 
பண்டிகை வாழ்த்து செய்தி சொன்னால் மறந்துவிடுவார்கள் 
அறிக்கையிடும் நரித்தன அரசியல்வாதிகள் !?

மறதி நோய் பிடித்த மக்களும் மூணு நாள் விடுமுறை 
கிடைத்த மகிழ்ச்சியில் தொலைகாட்சி முன் அமர்ந்து 
பண்டிகை கொண்டாடி திருப்தி அடைந்து கொள்வார்கள் !?

மாட்டு பொங்கல் !


பக்கத்து மாநில மக்களின் உடல் சதையை வளர்க்க அடிமாட்டை அனுப்புங்கள், அது வியாபாரம். பத்து மாடுகள் நிற்கும் இடத்தில் அம்பது மாடுகளை அடைத்து தலை வெட்டப்படும் முன்னரே உயிர் வதைக்கும் சித்திரவதையை செய்து கொண்டு அல்லது பார்த்துக்கொண்டு மற்றொரு பக்கம் அவற்றை அலங்கரித்து மாட்டுபொங்கலாம்...?!!மாடுகள் கூட மன்னிக்காது மனிதனை !!?

காணும் பொங்கல் !

இன்றாவது கைவிடப்பட்ட உறவுகளை, முதியோர்களை சென்று காணுங்கள், அவர்களுடன் கூடி களியுங்கள்.....சுயநலத்தால் பலவீனப்பட்டுக் கிடைக்கும் இதயத்திற்கு அன்பு என்னும் புது இரத்தம் பாயட்டும்...தழைக்கட்டும் நல் உறவுகள்.....புத்தன், இயேசு,கீதை, குரான் சொன்ன அன்பு வழியில்.....!!

வருடந்தோறும் தை மட்டும் பிறக்கிறது !
தமிழனுக்கு வழிமட்டும் பிறக்கிறதா தெரியவில்லை !!

வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!

பொங்கட்டும் பொங்கல்...தங்கட்டும் மகிழ்ச்சி இல்லந்தோறும் !








படங்கள் - நன்றி கூகுள்

செவ்வாய், ஜனவரி 11

இன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1


பதிவுலகத்தில் சினிமா துறையை பற்றியும் புதிதாக வெளியாகும் சினிமாக்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுதபடுகின்றன. பதிவுலகத்தில் இருந்துகொண்டு பதிவர்கள் பற்றியும் , பதிவுகள் பற்றியும் விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு. இனி இது போல் தொடந்து பதிவுகள் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.....?!! அவ்வாறு விமர்ச்சிக்கும் போது நிறைகள், குறைகள் இரண்டும் அலசப்படும். (எதுக்கு இந்த வேண்டாத  வேலை என்று உள்ளிருந்து ஒரு குரல் வந்தாலும் இப்போதைக்கு என் முடிவை மாத்திக்கிற மாதிரி இல்லை...!!?)

பதிவர் - ஒரு சின்ன அறிமுகம் 

முதலில் இந்த வாரம் என்னிடம் வகையாக வந்து மாட்டியவர் எங்க ஊர்க்காரர் ஒருவர் தான். இவர் ரொம்ப பெரிய ஆள்.  நாள் தவறாமல் செய்திதாளில் வலம் வருபவர்...அதை விட அதிகமாக  ஊர் முழுவதும் வலம் வருபவர்...! இவர் ஒரு இடத்திற்கு வந்தால் அங்கே ஏதோ விபரீதம்  (சம்பந்த பட்டவங்களுக்கு...!?),  நல்ல காரியம் (மக்களுக்கு...!?) நடக்க போகிறது என்று அர்த்தம். சினிமாவில் ஹீரோ அதிரடியா சாகசம் பண்ணினா உடனே நாம அடிக்கிற விசில் என்ன ? கைதட்டல் என்ன ? ஆனா இவர் சத்தமே இல்லாமல் பல நல்ல விசயங்களை அதிரடியாக செய்து கொண்டு வருகிறார்.


                                                          (இடது  புறம் நிற்பவர்)

யார் இவர் ?

இவரது பெயர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் . திருநெல்வேலி மாநகராட்சியில் உணவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பொது  சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறையில் 26   ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த அனுபவங்கள் அனைத்தையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லனும் என்கிற தீராத வேட்கையுடன் இருக்கிறவர். 

இவரது நண்பர் திரு. ஜோசப்  சார் அவர்களின் விருப்பத்தின்  காரணமாக வலையுலகில் கால் பதித்து எழுதி வருகிறார் . பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை அனாயசமாக சொல்லி தெளிவு படுத்துகிறார். 

எத்தகைய பதிவுகள் ?! 

உணவு பொருள்களில் கலப்படம் எவ்வாறு எல்லாம் கலக்கப்படுகிறது, எந்த பொருளில் என்ன கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது ? அவற்றை  எப்படி கண்டறிவது ? எப்படி தவிர்ப்பது என்று பல விசயங்களை  பற்றியும்  எழுதி வருகிறார். நெல்லையில் இவர் தலைமையில் செய்யப்படும் ஆய்வுகள், இவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்  போன்றவற்றை பற்றியும் அதை குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள், வீடியோக்களையும்  பதிவில் இணைத்திருக்கிறார். 

இரண்டு நாளுக்கு முன்பு ஆங்கிலத்திலும்  பதிவுகளை வெளியிட எண்ணி புதிதாக ஆங்கில மொழி பேசும் தளம் ஒன்றும்  தொடங்கி இருக்கிறார். தமிழில் பதிவிடும் போதெல்லாம் அப்படியே ஆங்கிலத்திலும் வெளி வரும் என்று சொல்லி இருக்கிறார். தமிழ் தெரியாதவர்களுக்கும்  உதவியாக  இருக்கும்.
அதன் லிங்க் http://way2foodsafety.blogspot.com/

அனைத்து பதிவுகளுமே நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இருநூறு பதிவுகளை எட்ட போகிறார்...எந்த பதிவு முக்கியம் என்று குறிப்பிட்டு சொல்வது மிக கடினம்.  

* தயிரில் கலப்படம் என்ற பதிவை படித்து ஆச்சரியம் ஆகிவிட்டது...அந்த பதிவின் லிங்க்  

* இவரது இந்த பதிவை பார்த்தால் ஆப்பிள் மேல்  ஒரு பயம் கலந்த மரியாதை வருவது நிச்சயம். 

* இவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒரு சாம்பிள் இதோ, http://unavuulagam.blogspot.com/2010_11_01_archive.html

* தூதுவாளை மிட்டாயில் கலப்படம்...மிக கொடுமைங்க இது. பாதிக்கபடுவது குழந்தைகள் என்கிற போது மனம் பதைக்கிறது...இதையும் படிங்க http://unavuulagam.blogspot.com/2010/11/blog-post_14.html 


சிறிய டீ கடை முதல் பெரிய  ஹோட்டல் வரை சென்று ஆய்வு செய்து உணவு பொருளில் கலப்படம் செய்ய பட்டோ அல்லது சுகாதார மற்ற வகையில் வைக்க பட்டிருந்தாலோ உடனே அதிரடியாக எதிரான நடவடிக்கை எடுக்கிறார். பல கடைகள் சீல் வைக்க பட்டு இருக்கின்றன. இவர் ஆய்வு செய்கிறார் என்றால் பல கடைகளின் உரிமையாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும். 

உலகத்திற்க்கே அல்வா கொடுக்கிற திருநெல்வேலியில் இருக்கிற அல்வா கடைகளையும்  இவர் விட்டு வைக்கவில்லை.....! சமீபத்தில் ஒரு பிரபல கடையை அடைத்து சீல் வைத்தவர்.    

நேரில் இவரிடம் பலரும் கேட்கும்  கேள்விகளில் முக்கியமான ஒன்று,

இத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும் போது மிரட்டல் வராதா ?? அடியாட்கள் வரமாட்டார்களா ?? என்று 

அதற்கு இவரின் அதிரடி பதில் " வராமல் என்ன, வரத்தான் செய்யும், அதையும் சமாளிக்க தெரிய வேண்டும், அதுதான்  சாமார்த்தியம்" என்பது தான்.

விருதுகள் 

இவரது சீரிய பணிக்காக பல விருதுகள் வாங்கி கொண்டே இருக்கிறார்...!! எண்ணிக்கை அவருக்கே தெரியாது என்று நினைக்கிறேன்.  

ஒரு பதிவில் விருது வாங்கியதை பற்றி குறிப்பிட்டு இந்த விருதுகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றாலுமே பதிவிற்கு வருகை தரும் நண்பர்கள் தரும் ஊக்கம் ஒரு அலாதி மகிழ்ச்சிதான் என்று சொல்லி இருப்பார். 

ஒரு வேண்டுகோள் நண்பர்களே 

தனது ஓய்வில்லாத வேலைகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி, பதிவுகளை எழுதி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்கிற இவரது ஆர்வம் பாராட்டபடகூடியது.  

இவர் நமது தளத்துக்கு வருவாரா, பின்னூட்டம் இடுவாரா என்று யோசிக்காமல் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதை கருதி இந்த நல்ல மனிதரை நாம் உற்சாகபடுத்த வேண்டும். 

நல்ல அதிகாரிகள் நம்மிடையே இல்லையே என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும், நமக்கு இப்போது அறிமுகமாகிற இவரை உற்சாகபடுத்துவத்தின் மூலம் சிறிது நிம்மதி நமக்கு ஏற்படுவது நிச்சயம். 
   
நேரம் கிடைக்கும் போது அவசியம் எல்லோரும் இவரது தளம் சென்று பதிவுகளை படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

நல்ல விஷயம், நல்ல மனிதர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சி முதலில் பாராட்டுவது பதிவுலகம் தான் என்பதை மற்றவர் தெரிந்து கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பம்  இது.
  
நிறைகள், குறைகள் :

இவரது தளத்தை பொறுத்தவரை நிறைகள் தான் நிறைய இருக்கிறது...குறைகள் எதுவும் தெரியவில்லை. குறைகள் ஏதும் உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள், அதை ஏற்று கொண்டு சரி செய்து கொள்ள கூடிய உயரிய நல்ல பண்பு கொண்டவர்.   

லேட்டஸ்ட் செய்தி 

நேற்று நெல்லை நகரில் இருந்த அனைத்து கட்சி சம்பந்த பட்ட போர்டுகள் (விளம்பர பலகைகள் ) அகற்றபட்டன. 

 பின் குறிப்பு 

ஒரு வழியாக  முதல் விமர்சனம் திருப்தியா முடிந்தது...அடுத்த பதிவர் யார் என்று முடிவு செய்து விட்டேன்...அவரை பற்றிய விமர்சனம் விரைவில்...க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர் !!?


பிரியங்களுடன்
கௌசல்யா 



சனி, ஜனவரி 8

ரிலாக்ஸ் பிளீஸ்...!



உற்சாகம் எதில் இருக்கிறது ?? என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்...?! வேலை,  விலைவாசி,கல்யாணம், குடும்பம்.  குழந்தை, படிப்பு.......இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.  

உற்சாகத்தை தேடி வேற எங்கும் போக வேண்டாம்...உங்களுக்குள்ளேயே இருக்கு அப்படின்னு பலரும் சொல்லி இருப்பாங்க நான் புதுசா ஒண்ணும் சொல்ல போறது இல்லை.  ஆனா அதையே அடிக்கடி கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணித்  தான் பார்ப்போமே என்று தோன்றும் அல்லவா...?!

எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் சொல்லி இருப்பார் "ஒருநாள்  பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...!" நம்மிடமும், நம்மை சுற்றியும் பார்த்து வியப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. எங்கேயும், எப்போதும் அபூர்வங்கள் நம்மை சூழ்ந்து இருந்தும் நாமோ பூர்வமானவற்றை  பற்றி  யோசித்து, முந்தினவற்றையே  நினைத்து கவலைக் குழியில் விழுந்துக்கிடக்கிறோம். 

கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி  கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.  

உற்சாகமாக வைத்துகொள்வது அடுத்தவர் கையில் இல்லை, நிச்சயமாக நம்மிடையே தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் கூட 'ஆமாம் எல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று நீங்க நினைக்கலாம்' உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிசு தான். அதே சமயம் வலி தலையை பிளந்தாலும் காபி குடிக்கும் போது அதன் நறுமணத்தை நல்லா ஆழமாக, உள்ளிழுத்து, சுவாசித்து ரசித்து பார்க்கும் போது அந்த தலைவலியை கொஞ்சம் மறக்க முடியுமே. 

ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!

முதலில் நம்மை நாமே ரசிக்க பழகிக்க வேண்டும். காலை எழுந்ததும், ஏண்டா விடியுதேனு புலம்பிட்டே எழுந்திருக்காம உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வெளியில் சூரியன் காத்திட்டு இருக்கிற மாதிரி நினைச்சிட்டு உற்சாகமா எழுந்து வெளியே வந்து ஒளிவீசிட்டு இருக்கிற சூரியனை பார்த்து ஒரு ஹாய்,குட் மார்னிங் சொல்லிப் பாருங்க (பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there  னு  எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! ) மழை காலத்தில சூரியன் வரலைனா என்ன பண்றதுன்னு புத்திசாலித்தனமா, நீங்க  கேட்டா 'மழைக்கு welcome சொல்லுங்களேன்' என்று சொல்வேன். 

உற்சாகத்தை பத்தியும் வாழ்க்கையை ரசிக்கணும், கடின படுத்திக்க கூடாதுன்னு நான் ஏன் சொல்றேன்னு தொடர்ந்து படிங்க புரியும். 

சொந்த அனுபவம்

எனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும்  என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு...!! என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும்  ஒரு குட்டி மரம் போல இருக்கும்.  அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.

காலையில் எழுந்ததும் எப்பவும் தொட்டிகளின் பக்கம் வந்து பூக்களை ரசித்துவிட்டு (பேசிட்டு...!) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம்  சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான்  எனக்கு...?! சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்...எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே  தெரியல...கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்...அதை ஏன் கேட்கிறீங்க...இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்...(தொட்டி எப்படி நடந்து படி ஏறி  மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல...?!!)

பக்கத்து வீட்டல இருக்கிறவங்க கிட்ட சரியா பேசினது கூட இல்லை. எனக்கு இருந்த வேகத்தில அவங்க கிட்டயும் போய் "ரோஜா  தொட்டியை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, நீங்க பார்த்தீங்களா ?" கேட்க, அவங்களும் "அச்சச்சோ, அப்படியா ? நீங்க ஏங்க சுவர் மேல வச்சீங்க, நல்ல பெரிய ரோஜா பூவாச்சே, ரத்த கலர்ல செவாப்பா அழகா  இருக்குமே " அப்படின்னு எண்ணைய  கொஞ்சம் ஊத்திட்டு போனாங்க. 

அந்த நேரம் ரோட்டில வாக்கிங் போறவங்க நான் புலம்பறதை ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு  ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே  இருந்தேன்...! (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால  செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க...! எத்தனை பேர் வந்திருப்பாங்க ......? எதில வச்சி கொண்டு போய் இருப்பாங்கனு, வேற சம்பந்தம் இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்......

என் கூச்சல் கேட்டு மெதுவா...?!!வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்...என் மண்டைக்கு எதுவும் ஏறல...புலம்பறதையும் நிறுத்தல...அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, "ஏம்மா வருத்த படுறீங்க,  உங்களை விட அதிகமா ரோஜா செடியை  லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி  எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா  இருங்க...டென்ஷன் படாதிங்க"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.


என்ன ஒரு தெளிவு ! என்ன அழகான நேர்மையான எண்ணம் ! இது ஏன் எனக்கு  இல்லை?? அந்த நிமிஷம் , " எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்...?!"     

சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அன்றைக்கு என் மகன் எனக்கு தகப்பன்சாமியாக தெரிந்தான்...!!

தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...!!) 


       


"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம், 
நீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை"                     -- யாரோ 



செவ்வாய், ஜனவரி 4

ஹிட்ஸ்..........தீருமா இந்தக் கொடுமை???


நான் எப்பவும் பதிவுலகம் பத்தி பெருமையாக நினைச்சிட்டு இருப்பேன். கடந்த போஸ்டில் கூட போன வருடத்தில் இனிய நினைவுகள் என்றால் பதிவுலகம்  வந்ததை பற்றிதான் எழுதினேன். இனி வருங்காலத்தில் பதிவுலகம் தான் பலரின் பார்வையில் இருக்கும் என்றே நினைக்க வேண்டியது இருக்கிறது. உதாரணமாக இங்கே வெளியிடப்படும் சினிமா விமர்சனங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்க  கூடிய அளவிற்கு போய்விடலாம். அத்தகைய பதிவுலகத்தின் தற்போதைய ஒரு நிலை வருத்தப்படும் நிலையிலேயே இருக்கிறது.

தரமான பதிவுகள்

பதிவுகளின் அளவு கோள் எப்படி நிர்ணயம் செய்ய படிக்கிறது என்பதில் நம்மிடையே ஒரு தெளிவு இல்லை, குழப்பமே மிஞ்சுகிறது. சிலர் ஹிட்ஸ் அதிகம் வாங்கி இருப்பதை பார்க்கும் மற்றவர் இது எப்படி அவரால் முடிகிறது...நாம இந்த மாதிரி அதிக ஹிட்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்...? ஒரு வேளை நாம  எழுதுற பதிவு நல்லா இல்லையா...
மத்தவங்களுக்கு பிடிக்கலையா என்று என்னை கேட்கும் போது என்னிடம் பதில் இல்லை. இப்படி கேட்டவர்கள் கொஞ்ச நாளில் பதிவு எழுதவே பிடிக்காமல் ஒரு விரக்தியின் உச்சத்தில் போய் விடுவதும் நடக்கிறது இங்கே...?! எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்...அது கிடைக்காத போது ஏற்படும் விரக்தி கொஞ்சம் ஆபத்தானது...மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும்.

இந்த மாதிரியான ஆட்கள் நம்மளை மத்தவங்க கவனிக்கணும் என்பதற்காக மேற்கொள்ளும் ஒரு வழியே ஆபாசமான தலைப்புகளை வைப்பது, பதிவுகளிலும் அதிக பட்ச அநாகரீக வார்த்தைகளை சேர்ப்பது என்பது. தொடக்கத்தில் நல்லா எழுதிக்கொண்டு வரும் சிலர் இந்த ஹிட்ஸ் மோகத்தால் பாதை மாறி விடும் அபாயம் தற்போது அதிகரித்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஒன்று அவர்கள் தங்கள் பாதையை  மாற்றி  கொள்கிறார்கள், இரண்டாவது தங்களது மோசமான பதிவுகளால் பிறரை அந்நிலைக்கு போக மறைமுகமாக தூண்டி விடுகிறார்கள். இது இரண்டுமே சரியல்லவே !!?

என் பிளாக் என் இஷ்டம் !

சிலரின் தவறுகளை நாம் சுட்டி காட்டினால் உடனே அவர்களின் இயலாமை இப்படி தான் வெளிப்படுகிறது , 'இது என்னுடைய தளம்...என் இஷ்டம் நான் எதையும் எழுதுவேன்...உனக்கு பிடிச்சா வா...இல்லைனா வராத...' இப்படி சொல்லி சமாளிக்கிறது  சரிதான். 

'எனக்கு பிடிக்கல நான் வருவது இல்லை, ஆனால் பலரை வரவழைகிறதே உங்களின் கவர்ச்சிகரமான தலைப்புக்கள், பதிவுகள்...?!' வாசகர்கள் எல்லோருமே ஆபாசத்திற்கு அடிமைகள் , இதற்கு மட்டும்  தான் லாயக்கு என்ற உங்களின் கண்ணோட்டத்தை மாற்றுங்களேன்.  உங்கள் ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நஞ்சை ஆழமாய் விதைத்து, நீரூற்றி வளர்த்து விடாதீர்கள் தயவு செய்து. (களைச் செடிகள், விஷச் செடிகள் தான் விரைவில் வளர்ந்துவிடும்...? இது இயற்கை !! )

சில விமர்சனங்கள் 

விஷயம் இருக்கிறவங்க எழுதுறாங்க திறமை இல்லாதவங்க ஏன் பொறாமை படுரீங்கனு கூட ஒரு கேள்வி வரும். சரக்கு இருக்கிறவங்க எல்லாம் கொட்டினா பரவாயில்லை, ஆனா...??! தவிரவும் மக்களை திருத்தணும் என்று முடிவு பண்ணிட்டு யாரும் இங்கே எழுத வரல, முதல நாம சரியா இருக்கிறோமா இல்லையா என்றே  தெரியாத போது நாம எப்படி மக்களை திருத்த முடியும்...?!

ஆபாசமாக எழுதுங்கள்

பெண்களை பத்தி கவர்ச்சியா  எழுதியோ, ஆபாச வர்ணிப்பு, ஆபாச படங்களை போட்டு வாசகர்களை நீங்கள் இழுங்கள்...ஆனால் அதற்கு முன் ஒரு காரியம் பண்ணுங்கள், கூகிள்ல adult content warning என்கிற ஒரு வசதி இருக்கிறது அதையும்  போட்டுடீங்கனா ஹிட்ஸ் இன்னும் அதிகமா அள்ளிட்டு போகும். நீங்களும் இந்த ஹிட்ஸ் சாதனை பத்தி பலரிடம் சொல்லி பெருமை பட்டுக்கலாம்...?!! 'பதிவர்கள்' என்கிற போர்வையில் சின்னத்தனமான வேலைகள் செய்வது அநாகரீகம்.    

திரட்டிகள் என்ன செய்யும் ??

திரட்டிகள் என்பது பல பதிவுகளை ஒரே இடத்தில் சேர்த்து தருவது, மற்றும் பதிவர்களை ஊக்கபடுத்துவதற்காக இந்த வார சிறந்த பதிவர்கள் என்பது போல் தேர்ந்து எடுத்து வெளியிடுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது ? திரட்டிகள் எதன் அடிப்படையில் இதை முடிவு செய்கிறார்கள் என்பதை விட இது போன்ற திரட்டிகளை சில பதிவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் பக்கமாக திருப்பி கொள்கிறார்கள் என்பதே என் கருத்து. திரட்டிகளையும் அவர்கள் வழிக்கு கொண்டு செல்கிறார்கள்.

ஒரு போஸ்ட் போட்டவுடன் 'போஸ்ட் போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு, ஏன் வோட் அதிகம் வரல' என்று தங்கள் மனதை போட்டு குழப்பி கொள்ளும் ஒரு சிலரை பார்க்கும் போது எனக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. அதற்கு மாறாக எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை...எதிர்பார்ப்பதும்  இல்லை...இந்த மாதிரியான பதிவர்கள் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள். 

வேண்டுகோள் 

உங்கள் தளம் எதையும் எழுதிட்டு போங்க, ஆனால் ஹிட்ஸ் புராணம் பாடி பிற பதிவர்களின் மனதையும் அவர்களின் எழுத்தையும் நோகடிக்காதீர்கள்.  

எந்தவொரு பதிவுக்கும்  நல்லா இருக்கு, அருமை இந்த மாதிரி டெம்பிளேட் கமெண்ட்  வருவதை விட காரசாரமான கருத்துக்களை பின்னூட்டமாக பார்க்கும் போது தான் பதிவின் வீரியம் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  அதனால் ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.  

திங்கள், ஜனவரி 3

திரும்பி பார்க்கிறேன் - 2010



கடந்த வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி தோழி ஆசியா உமர் அழைப்பு விடுத்து இருந்தார். அவருக்கு முதலில் எனது நன்றிகள். இந்த மாதிரி தொடர் பதிவுகள் எழுத  சொல்லி அழைப்பு வந்தால் கொஞ்சம் தயக்கம் வரும் சரியா எழுதி விடுவோமா என்று. இப்பவும் அந்த தயக்கத்துடன் தான் எழுதி இருக்கிறேன். படிச்சிட்டு சொல்லுங்க.

2010 இல் நடந்த இனிமையான நிகழ்வுகள் பல அதில் மிக முக்கியமா இங்கே சொல்ல விரும்புவது பதிவுலகத்திற்கு நான் வந்தது தான்.

அறிமுகம்

இந்த மாதிரி ஒரு உலகம் இருக்கிறது என்றே முதலில் எனக்கு தெரியாது...!? தொழில் ரீதியாக ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக என்னை ஆசுவாச படுத்திக்கொள்ள ஒரு space தேவைப்பட்ட நேரத்தில் என் கணவர் தான் ப்ளாக் எழுத சொல்லி யோசனை சொன்னார். அதற்கு முன் வரை இணையம் என்பது புதிதாக ரீலீஸ் ஆகும் படங்களை நோகாமல் பார்ப்பதற்கு தான் பயன்பட்டுவந்தது...! எனக்கு என்ன தெரியும், என்னால் எழுத முடியுமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது...! 'என்கிட்டே புலம்புறதை எல்லாம் எழுது அதுவே போதும்', என்று உற்சாகம் கொடுத்தது என் கணவர்தான்...?!!

2010 இல்  நல்ல நிகழ்வுகள்,பிடித்த நல்ல விஷயம் 
   
2009 டிசம்பரில் ப்ளாக் தொடங்கினாலும் சரியாக எழுத ஆரம்பித்தது 2010 மார்ச்சில் இருந்து தான். முதலில் மனம் என்று தான் டைட்டில் வைத்தேன்...அப்புறம் தான் அதில் ஏதோ மிஸ்ஸிங் என்று தோன்றியது அப்புறம் தான் 'மனதோடு மட்டும்' என்றானது, கவிதைகளும் இதில் எழுதி வந்தேன்...கவிதைகள் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானது தான் 'வாசல்'

'மனதோடு மட்டும்' தளத்தில் எனக்கு மிக பிடித்த ஒரு தொடர் என்றால் தாம்பத்தியம் என்று சொல்வேன். இந்த தொடர் எழுத முக்கிய காரணம் சில பெற்றோர்களின் கருத்து வேறுபாட்டால் தடுமாறும் பிள்ளைகளின் நிலையை பற்றிய வருத்தம் தான். இந்த தொடரில் எழுதப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் நான் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த சில அனுபவங்கள் தான்.

மறக்க முடியாத சம்பவம் 

அப்புறம் சில விழிப்புணர்வு பதிவுகள் விரும்பி எழுதினேன், இனியும் நிறைய எழுத வேண்டும் என்று இருக்கிறேன். 'கண்டனம்' என்ற தலைப்பில் எழுதிய சில பதிவுகள் விமர்சனதிற்கு உட்பட்டன. அதிலும் முக்கியமாக நான் எழுதிய ஆபத்தான கலாச்சாரம் என்ற பதிவுக்கு எதிர் பதிவு எழுதும் அளவிற்கு சென்றது நான் எதிர்பார்க்காத ஒன்று.  அதற்கு பின் பல காரசாரமான விவாதங்கள், மோதல்கள் என்று மூன்று  வாரத்திற்கு   பதிவுலகம் இதை பற்றியே பேசும் அளவிற்கு போய்விட்டதுதான்  ஆச்சரியம். அதிலும் பல பதிவர்களும் லிவிங் டுகெதர் என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதி தங்களின்  கருத்துகளை,ஆதங்கங்களை, கோபங்களை வெளிபடுத்தி இருந்தனர். அதன் மூலம் பல நல்ல கருத்துக்கள் வெளி கொணரப்பட்டன என்பதே உண்மை.

மற்றொரு பதிவு 'பெண் பதிவர்கள் என்பவர்கள் கேலி பொருளா ?' ஒரு குழுமத்தில் பெண் பதிவர்களை கேலி செய்து போடபட்டதிற்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவு. எனது பதிவில் பலரும் தங்களது கண்டனத்தை அந்த தளத்திற்கு எதிராக தெரிவித்திருந்ததின் பலனாக சம்பந்த பட்ட குழுமத்தில் இருந்த அந்த கேலி சித்திரம் நீக்கப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சக பதிவர்களுக்கு இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன்.

மற்றும் நான் எழுதிய 'மரங்களை வெட்டுங்கள்' என்ற ஒரு பதிவு சூறாவளிபோல் பல இடங்களையும் சுற்றி வந்தது. பல பதிவர்களுக்கும் பலரால்  மெயிலின் மூலம் இந்த பதிவு சென்றதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் பலரும் என் பதிவை அப்படியே அவர்கள் பெயரில் வெளியிட்டு  இருப்பதை பார்த்தேன் . இதில் ஒரு ரசிக்க தகுந்த ஒன்றையும் பார்த்தேன், ஒரு குழுமத்தில் இந்த பதிவு வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர் தன் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த பதிவை எழுதி இருக்கிறார் என்று இருந்தது. எப்படியோ ஒரு விழிப்புணர்வு பதிவு பலரையும்  சென்று அடைந்திருப்பதை பார்க்கும் போது  பதிவுலகம் முயன்றால் நல்ல விதைகளை விதைத்தால்  அது நிச்சயம் பலன் தரும் என்பதை எனக்கு உணர்த்தியது.

பெரிய சந்தோசம்

ஒரு புது உலகத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வை தருகிறது இந்த பதிவுலகம்...பல நட்புகள் கிடைத்தன. ஆண் பெண் நட்பு கத்தியில் நடப்பதை போன்றது என்பார்கள் ஆனால் இங்கே எனக்கு கிடைத்த நட்புகள் மிக உன்னதமானவை தங்களது எல்லை எது என்பதை உணர்ந்த நாகரிகமானவர்கள். அன்பான தோழிகள், சகோதரர்கள் என்று எனது உறவுகள் எனக்கு உற்சாகத்தையும் வாழ்க்கையின் மேல் இன்னும் அதிக பிடிப்பையும் கொடுத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.

பிடித்த நல்ல மனிதர்கள் 

நண்பர்களில் முக்கியமானவராக ஒருவரை சொல்லவேண்டும் என்றால் தேவா என்று சொல்வேன். அவரது எழுத்துகளின் ரசிகை, தொடரும் அவர் பதிவுகளின் தீவிர வாசகி, அவரது எழுத்துகள் எனக்கு படிப்பினையை கொடுக்கிறது என்பதே உண்மை. (நல்ல தமிழை கற்றுக்கொள்ள அவரது பதிவை தொடர்ந்து படிக்கலாம்) அப்புறம் கே ஆர் பி செந்தில் , நர்சிம், ஈரோடு கதிர், பா.ராஜாராமன், இராமசாமி,பத்மஹரி,ஆதிரன்(மகேந்திரன்),அப்பாதுரை ,வானம்பாடிகள் பாலா, எஸ்.கே,விஜய், எஸ்.வி ,யோவ் ,ராமலக்ஷ்மி,தேனம்மை,  பத்மா ,முத்துலட்சுமி ,மனோ சாமிநாதன் இவங்க எழுத்துக்கள் மிக பிடிக்கும்.


எனது உடன் பிறக்காத சகோதரர்கள்  சௌந்தர்,கணேஷ். அப்புறம் சித்ரா,  ஹேமா, ஆசியா,வானதி, ஆனந்தி,தெய்வசுகந்தி, அப்பாவி தங்கமணி,ஜலீலா கமால்,இந்திரா,   நிலாமதி, சசிகுமார்,  LK , பாலாஜி, பாபு, செல்வா,ரமேஷ், terror ,அருண் பிரசாத்,சங்கவி, r.கோபி,அன்பரசன் மேலும் பலர் இருக்கிறார்கள் சொல்வதற்கு இங்கே இடம் கொள்ளாத அளவிற்கு...! இத்தகைய உறவுகளை கொடுத்த இந்த ஆண்டிற்கு (2010 ) நான் நன்றி சொல்லி கொள்கிறேன்.

இன்னும் சாதிக்க வேண்டியவை என்று சொல்லணும் என்றால் இந்த நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், இன்னும் பல நல்ல பதிவுகளை எழுதவேண்டும், இந்த பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்ற பெருமை கெடாமல் பார்த்து கொள்ள வேண்டும், முக்கியமாக பதிவுலகம் விட்டு செல்லும்  போது மனதில் ஒரு நிறைவுடன் விடை பெறணும் என்பதே !

சொந்த வாழ்வில் சாதிக்க விரும்பும் எண்ணங்கள் என்றால் சில லட்சியங்கள் இருக்கிறது பொதுவாழ்வில் குறிப்பா சமூக சேவையில் ஈடுபடனும் என்ற எண்ணம் நிறைவேற இப்போது முயற்சி எடுத்திட்டு வருகிறேன்.....அது நிறைவேறனும் என்பதே புது வருடத்தின்  எனது முதல் முக்கியமான பிராத்தனை.  

என் டைரியே !

உனக்கு என் மேல் மிகுந்த கோபம் 
உன்  பக்கங்கள் அதிக சுமையாகி விட்டது என்று !
உன் மேனி முழுவதும் பல நினைவுகள் 
எழுத்துக்களாய் இன்பச் சுமைகளாய்  !
என் மனச் சுமையை குறைக்கிறேன் என்று
புரிந்து கொள்ளேன் நீ !! 

இந்த தொடரை தொடர மத்தவங்கள  அழைக்கணும் என்பது விதிமுறையாம்...?!!  எல்லோரையும் அழைத்து யோசிக்க வைக்கணும் என்று ஒரு ஆசைதான். ஆனா பத்து பேரை மட்டும் தான் என்பதால் ரொம்ப கஷ்டப்பட்டு இவங்களை முன் மொழிகிறேன்......

சௌந்தர்
கணேஷ்
பாலாஜி சரவணன் 
இம்சை அரசன் பாபு
செல்வா  
வெறும்பய 
ஆனந்தி (அன்புடன் ஆனந்தி)
ஹேமா 
காயத்ரி (கவிநா)
தெய்வசுகந்தி

மேலும் தொடரை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும் 
  


வியாழன், டிசம்பர் 30

கல்யாண நினைவலைகள் தொடருகிறது...!


 முதல்  பாகத்தின் தொடர்ச்சி இந்த பதிவு...

வெடி சத்தம் பயங்கரமா கேட்டதும்,மறுபடியும் ஒரு சந்தோசம்...?! யார் வைக்கிராங்கனு பார்த்திட்டு முழுசா சந்தோஷப் படலாம்னு காரில் இருந்து எட்டி பார்த்தேன். அட வெடிப்பத்த வைக்கிறது எல்லாம் என் பெரியம்மா பசங்க...! அவங்க ஊர் சிவகாசி என்பதை அட்டகாசமாய்,  சத்தமாக  நிரூபிச்சிடாங்க...!                    

ஊர்வலம் ஒரு வழியாக  என்னவரின் வீட்டுக்கு (ம்...இனி என் வீடு !)  வந்துச்  சேர்த்தது...அங்கே வைத்து தான் வரவேற்ப்பு. ஆரத்தி எடுக்க மக்கள்ஸ்  வெய்டிங்...சினிமால மாதிரி தட்டுல எடுக்கல, ஒரு பாத்திரத்தை வச்சு எடுத்தாங்க...மூணு பேரு மாத்தி மாத்தி தனித் தனியாக   எடுத்தாங்க...(ரொம்ப திருஷ்டி பட்டுடுச்சு போல...?!) 

இப்ப கரெக்டா ஒரு பாட்டு பாடணுமே...உங்கள் யூகம் சரிதான் 'மணமகளே மருமகளே வா வா' பாட்டுதான். இன்னும் எத்தனை காலம் தான் இதே பாட்டு போடுவாங்களோ தெரியலை, ஆனா சூப்பர் பாட்டு  (இதுக்கு புதுசா ரீமிக்ஸ் யாரும் இன்னும் ரெடி பண்ணலையா?) ஆரத்தி எடுத்து வீட்டினுள் மெதுவாக  வலது காலை எடுத்து வச்சு போனோம். 

எங்க மாமியார், மாமனாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் ஒரு போட்டி ஒண்ணு இருக்குனு சொல்லி எங்க இரண்டு பேருக்கும் நடுவில ஒரு குடத்தை வச்சாங்க. குடத்தில இருக்கும் தண்ணிக்குள்ள  ஒரு மோதிரத்தைப்  போட்டு இரண்டு பேரையும் ஒண்ணா ரெடி ஸ்டார்ட் சொல்லி மோதிரத்தை எடுக்கச்  சொன்னாங்க. அடடா போட்டியான்னு ஒரு குஷில வேகமா தண்ணிக்குள்ள கையை விட்டேன், ஒரு ஐந்து செகண்ட்ல மோதிரம் மாட்டிக்கிச்சு, சந்தோசமாக  எடுத்து அருகில் இருந்த அக்காவிடம் கொடுத்தேன். உடனே பக்கத்தில் இருந்த மாமியார் 'நீ எடுக்கக்கூடாதுமா, வீட்டுகாரனுக்காக நீ விட்டு கொடுத்திடணும்' அப்படின்னு சிரிச்சிட்டே அட்வைஸ் பண்ணினாங்க...?! (அப்ப எதுக்குங்க போட்டின்னு சொல்லணும், அதுக்கு பதிலா இவரைப்  போட்டியின்றி தேர்ந்து எடுக்கப் பட்டதா அறிவிச்சு இருக்கலாமே...?!) 

எனக்கு ஒரே எரிச்சல், சரி இவர் என்னடா பண்றார்னு நிமிர்ந்து பார்த்தேன், அவங்க அம்மா மாதிரியே அழகாக  சிரிச்சிட்டு 'இந்தா மோதிரம்'னு நீட்டுறார்...இது என்னனு வாங்கி பார்த்தா, அட இது நான் கைலப்  போட்டு இருந்த மோதிரம்...?! அது எப்படி இவர் கிட்ட போச்சு...குடத்துக்குள்ள இருந்த மோதிரம் மேலேயே  என் கவனம் இருக்கிறப்ப இவர் என் கைல இருந்து கழட்டி இருக்கிறார். (அட ச்சே இது கூட தெரியாம...?!) பல்பு தொடருதோ...?!!!

மறுபடி உப்பு நிரம்பிய பாத்திரத்தில் இதே போல் மோதிரம் போட்டு எடுக்க சொன்னார்கள்...இந்த  முறை எதுக்குடா வம்பு என்று தேமே என்று கையை மட்டும் வச்சிட்டு எடுத்திட்டேன். (ரொம்ப விட்டுக்  கொடுக்க வேண்டி இருக்குமோ என்று இந்த  நொடியில் தான் எனக்குள்  ஒரு கேள்வி எழுந்தது...)ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு குரல் ரொம்ப அசடா இருந்தது போதும், அலர்ட்டா இருன்னு சொல்லிட்டே இருந்தது.

அப்புறம் சில கலாட்டாக்கள் நடந்து எங்களை ஸ்டேஜில் அமர வைத்தனர். ஒவ்வொருத்தரா வந்து வாழ்த்திட்டு கிப்ட் கொடுத்திட்டு போயிட்டே இருந்தாங்க...நிறைய பேர் வந்திட்டே இருந்தாங்க...கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் செட் செட்டா வந்து சின்ன சின்ன கலாட்டா பண்ணி கிப்ட் கொடுத்திட்டு சென்றார்கள் ஆனா என் நிலைமை கண்ணைக்  கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது... எனக்கு  தெரிஞ்ச ஆள்கள் ஒருத்தர் கூட பக்கத்தில இல்லை (சாப்பிடப்  போய்டாங்களா...?? இல்லை வேலை முடிஞ்சதுன்னு ஊருக்கேப்  போயிட்டாங்களான்னு வேற தெரியலை?!!!)

நானும் பேந்த பேந்த முழிச்சிட்டு என்னவர் அறிமுகப்படுத்தி வச்சவங்களுக்கு எல்லாம் ஒரு வணக்கம் சொல்லிட்டு ஒரு இயந்திரம்  மாதிரி அவர் இன்ட்ரோ கொடுத்தவுடன்(சுவிட்ச் போட்டவுடன்...!)  கை தன்னால ஒண்ணு சேர்ந்துடும்!

அப்புறம் நாங்களும் சாப்பிடப் போனோம்...அங்கே எல்லோர்  கல்யாணத்திலும்   போல நடக்குற கலாட்டா செவ்வனே நடந்தேறியது.நான் மட்டும் இந்த உம்மணாமூஞ்சி கெட்டப்பை அப்படியே மெயின்டெயின் பண்ணினேன். என்னவோ சிரிக்கவே தோணல...அது பதட்டமா, சோர்வா, அச்சமா சொல்லத் தெரியல. 

மறுவீடு போன்ற பிற சடங்குகள் எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு தனி அறை ஒன்றுக்கு வந்து சேர்ந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கென்று விழித்தேன், இருந்த களைப்பில் அப்படியே தூங்கிட்டேன் போல...நேரம் பார்த்தேன் மணி 12 அவர் வருவதைப்  பார்த்து எழுந்து நின்றேன், அவர் வந்ததும், 'தூங்கியாச்சா, சரி கொலுசைக்  கழட்டு' என்றார் (தூங்கிரப்ப கொலுசு போடக்கூடாதானு நினைச்சிட்டே வேகமா கழட்டி வச்சேன்) 'சரி பேசாம (எனக்கு பேசத்  தெரியும்கிறத மறந்து இரண்டு நாள் ஆச்சே, என்னை போய் பேசாதே என்கிறாரே...ம்...!!?)  என் கூட வா'னு சொல்லிட்டு நடக்கத் தொடங்கிட்டார். வரிசையா உறவினர்கள் படுத்துத்  தூங்கிட்டு இருந்தாங்க, சத்தம்  கேட்டு அவங்க எழுந்துவிடாம மெதுவாக  (கொலுசை இதுக்குதான்  கழட்ட சொன்னாரா...ம்...!) மேல கால் படாம மெதுவா ஒவ்வொருத்தரா தாண்டிப்  போயிக்கிட்டே இருந்தோம். அப்புறம் ஒரு கதவைத்  திறந்து வெளியே வந்தோம், தோட்டம் போல இருந்தது. (காற்றில் மல்லிகை மணம் வந்ததே...!) 

ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம். அவர் பேச தொடங்கினார், 'நகரத்தில் வளந்தவ, இந்த கிராமத்து சூழ்நிலை பழகிக்க சிரமமா இருக்கும் போகப்  போக சரியாகிவிடும். ஞானஸ்தானம் எடுக்கும் போது உன் கண்ணீர் பார்த்தேன், மனதில் இந்துக்  கடவுளை நினைச்சிட்டு வேற மதம் மாறும் போது இருக்கும் வருத்தத்தை என்னால் உணர முடிகிறது. அதே போல் உன் நெற்றி பொட்டை என் அண்ணி எடுக்கும் போது உன் முகம் மாறுவதையும் கவனித்தேன், திருமணம் இந்த முறையில் நடக்கவேண்டும் என்பது வயதான என் பெற்றோரின் விருப்பம் அதை மீற முடியாது  . அதே நேரம் இனி 'உனது எனது விருப்பம்' தான் நம் சந்தோசத்தைத்  தீர்மானிக்கும். பெரியவர்களின் மனம் வருத்தப்படாமல் நாம் இருவரும் நடந்துக்  கொள்வது நம் கடமை அவ்வளவே. 

உன் விருப்பத்திற்கு நடக்க உன்னை யாரும் இங்கே தடைச்  சொல்ல மாட்டாங்க...எல்லோரும் ரொம்ப அன்பானவர்கள்...யாருக்காகவும் உன் சுயத்தை நீ இழக்கக் கூடாது...பொட்டு வச்சுக்கோ அது உன் முகத்திற்கு முழுமைக்  கொடுக்கிறது...அப்புறம் இறுக்கமா இருக்காத, உன் வீடு மாதிரி  நினைச்சுக்க...இந்த வீடு, இந்த உறவுகள், அப்புறம் நான், எல்லாம் சகஜம் ஆகட்டும். நம் கல்யாணம் அவசரமாக  முடிந்து இருக்கலாம், ஆனால் இன்றே வாழ்ந்து விடணும் என்பதற்கு எந்த அவசரமும் இல்லை, இந்த ஊரில் இருக்கிற கோமதி அம்மன் கோவில் ரொம்ப பிரபலம், கல்யாண சந்தடி எல்லாம் ஓய்ந்தப்பின் முதலில் அந்த கோவிலுக்குப்  போவோம், ஆசைத்தீர சாமி கும்பிடு...வேண்டுதல் எதுவும் இருந்தா நிறைவேற்றிக்கோ...சந்தோசமா இயல்பா ஆனப்பின்னாடி நம் வாழ்க்கையைத்  தொடங்குவோம் சரியா...??!" என்றார்.

நான் அப்படியே மெய் மறந்து அவர் பேசுவதைக்  கேட்டுட்டே இருந்தேன்...கடவுள் என்னை மட்டும் ரொம்ப ஸ்பெசலா ஆசிர்வதிச்ச மாதிரி இருந்தது. (என்னவோ நான் இந்திய மண்ணையே  மிதிக்காத மாதிரியும், அப்பத்தான் பிளைனில்  இருந்து இறங்கியது மாதிரியும் ஓவரா சீன் போட்ட என்னை என்ன பண்ணலாம்?!!!)சற்று   முன்வரை  எனக்கிருந்த மாறுபாடான எண்ணம் முழுவதையும் அப்படியே நொறுக்கி போட்டு விட்டார்.
                          
'தவறான எண்ணங்களே பெரிய தவறுதான்' என்பதை அப்போது நான்   உணர்ந்தேன். 

மனதினுள் மெல்ல  கவிதை ஒன்று வளரத் தொடங்கியது...கவிதை மட்டுமா...காதலும் தான்?!!

*****

பின் குறிப்பு
இதுவரை என் நினைவலைகளை பொறுமையாக படித்த(முழுசா படிச்சீங்களா...?!) உங்கள்  அனைவரையும் மீண்டும்  புது வருடத்தில் புது உற்சாகத்துடன், நல்ல பதிவுகளுடன் சந்திக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் என் அன்பான 'புத்தாண்டு வாழ்த்துக்கள்' !!


  




பிரியங்களுடன் 
கௌசல்யா