வியாழன், ஜனவரி 27

நாதியற்ற தமிழன்.....?!!




தமிழனாய் பிறக்க வேண்டும் என்று யாரும் தவம் இருக்கவில்லை...இருந்தும் பிறந்துவிட்டு ஏன் பிறந்தோம் என்று எண்ணி வெந்தே உருக்குலைந்து அழிந்து போய் கொண்டிருக்கிறான்.

"தமிழன் என்று சொல்லடா, தலை அறுபட்டு சாவுடா"

கடல் கடந்த தீவில் தான் தமிழன் செத்து கொண்டிருக்கிறான்  என்றால் இங்கிருந்து மீன் பிடிக்க கடலுக்கு போகும் தமிழனும் வேட்டையாடப் படுகிறான்.

இலங்கை அரக்கர்களின் உயிர் பறிக்கும் வெறி என்று தீரும்....?? 

இராவணன் ஒருவனை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்தது பழைய கதை..... இப்போது தீவெங்கும் நிறைந்து கிடக்கும் பல இராவணன்களை     அழிக்க ஏன் எந்த கடவுளும் இதுவரை அவதாரம் எடுக்கவில்லை....கடவுளுக்கும் உயிர் பலி பிடித்து போய் விட்டதோ ??

வேதனைபட்டே  சலித்துவிட்டது !!?

என்றோ ஒருநாள்  என்றால் வருத்தப்படலாம், கண்ணீர் விடலாம்.... இதுவே  வாடிக்கை என்றால் சலிப்பாக இருக்கிறது வருத்தப்படவும்.....?!! அரசிற்கு மட்டும் சலிப்பதே இல்லை அறிக்கை விடவும், மத்திய அரசிற்கு கடிதங்களை எழுதவும்.....?!!

தமிழக மீனவன் இலங்கை மீனவர்களாலும், இலங்கை கடற்படையினராலும் கொல்லப்பட்டு கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மீனவன் கொல்லப்படும் போதும், இன உணர்வால் தமிழகம் துடிப்பதும், மத்திய அரசுக்கு குரல் கொடுப்பதும், அறிக்கைகள் மாறி மாறி பறப்பதும், ஒரு வார காலத்திற்கு பரபரப்பாக இருக்கும். வழக்கம் போல இலங்கை அரசு "இனிமேல் இதுபோல் நடக்காது" என்று உறுதி (?) அளிப்பதுடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி (செத்தவனுக்கும் சேர்த்துத்தான்...?!) வைக்கப்படும்.

வழக்கம் போல போராடி வெறுத்துப்போன மீனவர்களும் தங்களை ஆசுவாசபடுத்திக்கொண்டு தொடர்ந்து கடலுக்கு செல்வார்கள், உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல்....!? (பாழும் வயிறு இருக்கிறதே ??)

சில நாட்களுக்கு முன் ஜெகதாபட்டினத்தில் இருந்து சென்ற மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் கண்மூடித்  தனமாக சுட்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டார்.  'சம்பந்தப்பட்ட இடத்தில் எங்கள் கப்பலே செல்லவில்லை' என்று இலங்கை தூதர் சொல்கிறார். உயிர் பிழைத்த இருவரும் சுட்டவர்கள் இலங்கைப்படையினர் தான் என்று சொல்கிறார்கள்...பொய் பேசுவது அரக்கர்களுக்கு சாதாரணம் தானே ?!!

முரண்பாடு

பல முறை இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிட்ட பின்னரும், ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை பத்திரமாக அழைத்து வந்து  பாதுகாத்து திருப்பி அனுப்புகிறார்கள். இதுதான் நாம் ?!! ஆனால் இனி ஒருத்தரையாவது நம்ம கடற்படை சுட்டு கொல்லணும்... அப்போது தான்  இழப்பின்  வலி அவர்களுக்கும்  புரியும் என்கிற கோபம் வருகிறது.

இன்னும் அதிகமாக நமது எல்லையில் கடற்படை கப்பல்கள் சுற்றி வரவேண்டும்.....அவர்கள் கையில் இருக்கும் துப்பாக்கிகள் ரவைகள்(குண்டுகள்) நிரப்பப்பட்டு  இருக்க வேண்டும்....அதைவிட அவைகளுக்கு கோபத்தைக்  காட்ட தெரியணும்.....! வெறுப்பை உமிழ தெரிய வேண்டும்....!!

நமது எல்லை !

வரையறுக்க பட்டுள்ள இந்திய எல்லைக்குள் தான் நம் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். சில பதட்டமான பகுதிகளை தவிர பிற பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று இலங்கை தெரிவித்த பின்னும், அந்த பக்கம் செல்ல அஞ்சி ஒருவரும் செல்வதில்லை. இருந்தும் நமது எல்லைக்குள் வந்து சர்வ சாதாரணமாக சுட்டு விட்டு செல்கிறார்கள். மீன் வேட்டைக்கு  போன இடத்தில் மனிதன்  வேட்டையாட  படுகிறான்  ?!!

ஐந்து நாட்களுக்கு முன் வேதாரண்யம் பகுதியில் உள்ள புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது அவர்களை சுற்றி வளைத்து பிடித்த இலங்கை கடல்படையினர், மூவரையும் கடலில் குதிக்க சொல்லி இருக்கின்றனர்...அதில் இருவர் குதித்து விட ஜெயக்குமார் என்ற மீனவர் தனது ஒரு கை ஊனமாக இருப்பதால் நீந்த இயலாது, தன்னை விட்டுவிடும் படி கெஞ்சி கேட்டு இருக்கிறார், சிறிதும் மனம் இறங்காத கல் நெஞ்சக் காரர்கள் அவரது கழுத்தை கயிற்றால் கட்டி இறுக்கி கொன்றுவிட்டார்கள்.

இவ்வளவிற்கும், கோடியக்கரையில் இருந்து 11 கடல் மைல் தூரத்தில் தான் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்ததாக சொல்கிறார்கள் , இலங்கை கடல் எல்லை 15 வது கடல் மைலில் இருந்துதான் தொடங்குகிறது \. எவ்வளவு தைரியமாக நமது பகுதிக்குள் வந்து வேட்டையாடுகிறார்கள்...?! நம்பிக்கை நம் அரசின் மீதும் (கண்டுக்க மாட்டாங்க ?) எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் தமிழனின் மீதும் (நாதியற்றவன் ?)

தமிழன் ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் !? இந்த கொடூர செயலுக்கு ஏன் இன்னும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. தடுத்து நிறுத்த முடியா கோழைகள் அரசா, தமிழனா ?? ஏழை மீனவன் உயிர் என்ற இளப்பமா ? மாநில அரசு வெறும் முகாரி ராகம் பாடினால் மட்டும் போதாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிரந்தரமாக என்று தான் முடிவு எடுக்க போகிறார்களோ தெரியவில்லை தேர்தல் வேற நெருங்கி வருகிறது.....??!

பிப்ரவரி மாதத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க போகிறது என்று சொல்கிறார்கள்.(நிறைய தமிழன் வருவான் என்று எதிர்பார்த்து கொண்டிருக்க போகிறது அங்கிருக்கும் துப்பாக்கிகள்...?!!)

தமிழர்களை கொன்று குவிக்கும் நாட்டுடன் மத்திய அரசு நட்புறவு பாராட்டுகிறது. தமிழனுக்கு எதிரி வெளியில் இல்லை.....?! இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் சிறையடைப்பு, நாளை இங்கிருக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுத்தாலும் சிறையடைப்பு என்ற நிலை வரும் முன் பிழைத்து கொள்ளுங்கள் என் மக்களே !!

ஏசி ரூமில் ஹாயாக அமர்ந்து மீன் குழம்பு, மீன் வறுவல் ருசித்து கொண்டிருக்கும்   பெரியோர்களே ! ஒரு நொடி நிதானியுங்கள்.....'அந்த மீனில் பாவப்பட்ட தமிழக மீனவனின் கண்ணீர் இருக்கலாம்... சில நேரம் ரத்தமும் !?'

பதிவுலக நண்பர்களே நாம் கண்டனம் என்று  தெரிவிக்காவிட்டாலும்  பரவாயில்லை .....ஒரு குரல் கொடுங்கள்..... அரசின் காதில் விழுகிறதா பாப்போம்....விழாவிட்டாலும் பரவாயில்லை.....'நம் இனத்திற்காக குரல் கொடுத்தோம்' என்று திருப்தியடையட்டும்  நம் இயலாமை.....?!!  



படம் - நன்றி கூகுள் 



திங்கள், ஜனவரி 24

ஒரு அலசல்......! குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு !


Child abuse - Sexual attraction to children


முந்தைய பதிவில் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என்பதை பற்றியும், அதில் இருந்து நம் பிள்ளைகளை எப்படி பாதுகாத்துக்கொள்வது  என்பதைப்  பற்றியும் சொல்லி இருந்தேன். அதற்கு பலரும் பின்னூட்டங்களின் மூலம் தங்களதுக்  கருத்துக்களைக்  கூறியிருந்தனர்.அப்படி வந்தவை எனக்கு வெறும் பின்னூட்டங்களாகத்  தெரியவில்லை...ஒவ்வொருவரின் ஆழமான உணர்வுகளாக வெளி வந்திருந்தன....அதில் ஒரு இரண்டு  பின்னூட்டங்களை பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

அதில் சகோதரர்  ஜோதிஜி அவர்கள் இதற்கு கடுமையான தண்டனைகள் என்று இருந்தால் தவறுச்  செய்ய என்னும் நபர்கள் அச்சம் கொண்டு இந்த செயலைத்  தவிர்ப்பார்களா என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மேலோட்டமாகப்  பார்க்கும் போது சரி என்றுத்  தோன்றினாலும், சமீபத்தில் அரேபிய நாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வை கேட்டறிந்த பின் தண்டனைக்கு பலன் இருக்குமா என்று யோசிக்க வேண்டியதாகிவிட்டது. கடுமையான தண்டனைகளுக்கு பெயர் பெற்ற அரேபிய நாட்டிலேயே இத்தகைய குற்றம் சாதாரணமாக நடைபெறும்  போது தண்டனை மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. தவிரவும் நம்ம நாட்டில் இச்செயலுக்கு, 

*  தண்டனை என்று பார்த்தால் பெண்கள் பாதிக்கபட்டால் கொடுக்கப்படும் அதே 7  ஆண்டு முதல் 10  ஆண்டுகள் சிறைவாசம்தான்  குழந்தைகள் பாதிக்கப் பட்டாலும் என்கின்றனர்...?! 

இது மட்டும் போதாது இந்த விசயத்தில் தண்டனை இன்னும் கடுமையாக்கப்படணும்.   

2002  வது ஆண்டின் கணக்கின் படி 89 ,000 குழந்தைகள் பாதிக்க பட்டுள்ளனர். இந்த கணக்கு வெளியில் வந்தவை மட்டுமே, வராதவை எத்தனை ஆயிரமோ....?! 

என்  மனதை மிக பாதித்த மற்றொரு பின்னூட்டம் சகோதரர் அப்பாதுரை அவர்கள் கொடுத்து இருந்தார்.

//பெண்களைப் போலவே, maybe more often and discreetly, ஆண்கள் இளம் வயதுப் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதற்கு மதம், கலாசாரம், அறிவு (அறியாமை), சூழல் என்று பல காரணங்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு வடிவெடுக்கின்றன. பாலியல் வக்கிரங்களிடையே வளர்ந்தவன் என்ற முறையில் இவை சாகும் வரை அழியாத வடுக்கள் என்று அனுபவத்தோடு சொல்வேன். அறியாத வயது என்றாலும், அறிந்த பின் தொலையாத கொடுமை. எத்தனை எழுதினாலும் எச்சரித்தாலும் வீட்டுப் பூனை பாலைத் திருடிக் குடிக்கும் பொழுது ஒன்றுமே செய்ய முடியாது. புதைந்து போன எலும்புகளை, நினைவுகளைத் தோண்டிய, தூண்டிய பதிவு.//

ஒவ்வொரு வரிகளும் வேதனைத்  தாங்கி இருந்ததை உணரமுடிந்தது. ஆண் குழந்தைகளும் அதிகமாகப்  பாதிக்கபடுகிறார்கள் என்பதை இவரது பின்னூட்டம் ஊர்சிதப் படுத்தியது.  

இந்த பதிவிற்கு மிக நெருங்கிய சிறுகதை ஒன்றை இவர் எழுதி இருக்கிறார்.....மனம் நடுங்கச்  செய்யக்கூடிய  ஒரு விஷயத்தை கருவாக எடுத்து சிறிதும் ஆபாசம் இன்றி எழுதி இருக்கிறார். தயவுசெய்து அதை அனைவரும் படியுங்கள்... 

அந்த கதை படிக்க  இங்கே செல்லுங்கள்.  



மற்றொரு வேதனையான அனுபவம் ஒன்று 

மேலும் எனது பதிவை படித்து விட்டு ஒரு சகோதரி மெயில் மூலம் தனது இன்றைய நிலையை மிகுந்த துயரத்துடன் எழுதி இருந்தார். மிக பெரிய மடலின் சுருக்கத்தை மட்டுமே இங்கே பகிர்கின்றேன் (அவர்களின் அனுமதியுடன் ) அவரது பெயர் சுசீலா, ஆந்திர மாநில தலைநகரில் வசிக்கிறார், படித்த பட்டதாரி பெண்,  பல்கலைகழகத்தில் படிப்பிற்காக தங்க மெடல் வாங்கியவர், பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.   திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தைகள் இல்லை, முக்கியமாக கணவன் மனைவியருக்குள் எது நடக்க வேண்டுமோ அது இன்று வரை நடக்கவில்லை...!? 

காரணம் சிறு வயதில் அந்த பெண் அனுபவித்திருந்த பாலியல் துன்புறுத்தல்கள் ??! நெருங்கிய உறவினர் ஒருவரால் பத்து வயதில் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள் இந்த பெண்ணின் மனதில் ஆற்றாமல் வடுவாக இருந்திருக்கிறது. இப்படி வடு ஒன்று இருப்பதை,  முதல் இரவில் கணவனின் முதல் தொடுதலின்  போதுதான் இவரே உணர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாள் இரவிலும் கணவனின் அருகாமை என்றாலே உடலில் ஒரு படபடப்பு சேர்ந்து கொண்டு , முகம் எல்லாம் வியர்த்து அலறி அடித்து படுக்கையின் ஓரமாக ஒரு குழந்தை போல் சுருண்டு படுத்துக்  கொள்வாராம். 

ஆரம்பத்தில் இவரது கணவன், புது பெண்தானே போகப்  போக சரியாகி விடும் என்று மனதைத்  தேற்றி கொண்டுள்ளார், மாதக்கணக்கில் தொடரவும், வற்புறுத்தி  மருத்துவரிடம் அழைத்துச்  சென்று உள்ளார். தொடர்ந்த சிகிச்சைகளின் மூலம் உடல் சிறிது தேறி வந்திருக்கிறது, மனமோ அதே பழைய நிலையில் !!? நல்ல வேளை இவருக்கு அமைந்த கணவன் நல்லவராக இருப்பதால் காலப்போக்கில் மனைவி சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக்  கொண்டுவருகிறார்.

இந்த பெண்ணின் மடல் ஒரு உதாரணம் தான் , இது போல் இன்னும் எத்தனையோ.....?? பாவம் ஓரிடம்  பழி ஓரிடம்  என்பது போல், தவறு செய்தவன் எங்கோ நிம்மதியாக இருக்கிறான், இந்த பெண்ணை போன்றவர்கள் வாழ வகையற்று நரகத்தில் உழன்றுக்  கொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரச்சனை முந்தைய பதிவில் சொன்ன மாதிரி உளவியல் நோய் உள்ளவர்களால் மட்டும் ஏற்படுவது இல்லை. சாதாரணமாக குடும்ப வாழ்வில் இருப்பவர்களும் சில சூழ்நிலைகளில் இந்த பாவத்தைச்  செய்ய நேரிடுகிறது என்பது நிதர்சனம்.  

சூழ்நிலைகள்

*  திருமணம் முடிந்த பின்னர் மனைவி பிரசவத்திற்காக தாய் வீடு சென்ற சமயங்களில்.....

*  விவாகரத்தான கணவர்கள் தனிமையில் இருக்கும் போது.....

*  மனைவி இறந்த சமயங்களில்.....

* மனைவி நோய்வாய்ப்பட்ட சமயங்களில்..... 

*  பணியில் இருக்கும் இல்லாத ஒரு சில வயதானவர்கள் (தனிமை கிடைத்தால்)....

இது போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் ஒரு சிலர் சந்தர்ப்பம் வாய்த்தால் தவறவேச்  செய்கிறார்கள். தங்களுக்கு வசதியாக சிறுவர், சிறுமிகளை பயன்படுத்திக்கொள்(கொல்)கின்றனர்.

தீர்வு என்ன ?? 

சகோதரர் ரஜின் அவர்கள் இந்த பாதக செயலுக்கு தீர்வு ஒன்றை தனது பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார். 

//இப்படிப்பட்ட கிராதகர்களை முன்னோக்கும் போதும்,எப்படி எதிர்கொள்ளவேண்டும் என கற்றுத்தருவது அவசியமான ஒன்று,,,

இதை ஸ்பெஷல் கோச்கள்,மனநலமருத்துவர்கள் கொண்டு,பள்ளிகளே வாரமோ,அல்லது மாதம் ஒரு முறையோ வகுப்புகள் நடத்தினால் நன்மை பயக்கும்...
செய்வார்களா?//
  
மிகவும் சரியான யோசனையாக எனக்குத்  தெரிந்தது...பள்ளிகளின்  மூலமாக இந்த பிரச்சனையின் தீவிரத்தை பிள்ளைகள் உணரும்படி அறிவுறுத்த வேண்டும்.  பொதுவாக பெற்றோர்களின் அறிவுரைகளை விட ஆசிரியர்களின் அறிவுறுத்தல் பிள்ளைகளின் மனதில் நன்றாக பதிந்து விடும். தவிரவும் சக மாணவர்களுடன் இது பற்றி அவர்கள் கலந்து பேசிக்கொள்ளவும் எதுவாக இருக்கும்.

நம்  பிள்ளைகள் எந்த வித மோசமான பாதகத்திற்கும் ஆளாகிவிடாமல் அவர்களைப்  பாதுகாத்துக்  காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை.  அவர்களின் எதிர்காலத்திற்காக சொத்துக்களை சேர்த்து வைக்க காட்டும் தீவிரத்தை, அவர்களின் நிகழ்கால வளர்ப்பிலும் கொஞ்சம் காட்டுங்கள்.  

எதிர்காலச்  சமுதாயம் சிறப்பாக அமைய பதிவுலகத்தில் இருக்கும் நாம் அனைவரும் நம்மால் முடிந்தவரை ஒத்துழைப்புக்  கொடுப்போம்.....

இந்த பிரச்சனைச்  சம்பந்தப்பட்ட பதிவுகளைத்  தேடி எடுத்து படியுங்கள், பலரிடம் இத்தகைய பதிவுகளைக்  கொண்டுப்  போய் சேருங்கள், பிரச்சனையின் தீவிரம் பலரையும் சென்று அடைய உதவுங்கள்.  




படம் - நன்றி கூகுள் 


வெள்ளி, ஜனவரி 21

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு ! ஏன் ??



செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும்  ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3  வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!"

ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம்,  அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும். 

பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்டிருந்தாலும்  நம் மக்களின் விழிப்புணர்வு இந்த அளவில் தான் இருக்கிறது. 

மக்களை பொறுத்த வரை குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்புள்ள மனிதர்களைச் சமுதாயத்தில் நடமாட விடுவது ஆபத்து என்பதே. ஒருமுறை இதில் ஈடுபடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலை இது.

சமீபத்தில் கூட சென்னையில் ஒரு வீட்டு ஓனரின் மகன் தங்கள் வீட்டில் குடி இருக்கும் இரண்டு  சிறு வயது குழந்தைகளிடம் இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டு இருக்கிறான். அவர்களிருவரும் அண்ணன், தங்கை ஆவர். அவர்களின் தாய் காவல் துறையிடம் புகார் செய்ததின் பெயரில் இப்போது சிறையில். அவனுக்காக  யாரும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு  செய்து இருக்கிறார்கள்.

கொஞ்ச நாள் முன்பு கூட கோவையில் ஒரு சம்பவம் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது...அதில் சம்பந்த பட்ட ஒருவனை போலீஸ் என் கவுண்டர் செய்தார்கள்  என்பதையும்  அனைவரும் அறிவர். 

மனிதர்களாக பிறந்த இவர்கள் ஏன் இப்படி மனம் மாறி முரண் பட்டு நடக்கிறார்கள் என்பதை பற்றிய ஆய்வுகளை படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

உளவியல் மற்றும் மருத்துவம் என்ன சொல்கிறது ?

* இந்த தன்மை பற்றி  உளவியல் அறிஞர்கள் பலவாறு விவரிக்கிறார்கள் . இது பீடோப்பீலியா என்னும் ஒரு வகை உளவியல் நோய்.  இந்த எண்ணங்கள் ஒருவருக்கு வயது வந்தவுடனே வந்து விடுமாம். பெரியவர்களுடன் அத்தகைய செயல்களில் ஈடு பட முடியாதவர்கள் அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படி  குழந்தைகளை பயன் படுத்திகொள்கிறார்கள். 

* மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலர் சிறு வயதில் இதே போன்ற ஒரு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்ககூடும் என்கிறது ஆய்வு.

*  மரபியல் காரணங்களும் இருக்கலாம் !! ஒரு குடும்பத்தில் இத்தகைய மனநிலை கொண்டவர்கள் இருந்திருந்தார்கள் என்றால் அடுத்து வரும் வாரிசுகளிடம் இத்தகைய எண்ணம் வருவதிற்கு வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக்கள் சொல்லி இருந்தாலும், அத்தகைய மரபணு இன்று வரை கண்டுபிடிக்க படவில்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல். 

* இவர்களை வெறும் குற்றவாளியாக மட்டும் பார்க்காமல் உளவியல் குறைபாடுள்ள நோயாளிகளாகவும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இத்தகையவர்களை உளவியல் ரீதியாகவும் , மருந்து சிகிச்சைகளின் மூலமாகவும் குணபடுத்தலாம் என்றாலுமே அதற்கு மிகுந்த சிரமப்படவேண்டும், தவிரவும் இத்தகைய இச்சைகளை கட்டுபடுத்த இவர்கள் வாழ்க்கை முழுவதும் மிக கஷ்டப்பட்டு முயலவேண்டும் என்பதே...!? 

யோசியுங்கள் மக்களே !

ஆய்வுகள் எதையும் சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் பெரியவர்களாகிய நாம் நம்மிடையே சாதாரணமாக நடமாடி கொண்டிருக்கும் இத்தகைய ஆபத்தானவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதே இந்த பதிவில் நான் உங்களிடம் எழுப்பும் ஒரு கேள்வி. 

இத்தகையவர்களுக்கு குழந்தைகள் எதிர்க்க மாட்டார்கள் என்பதே ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் பெரும்பாலும் தங்களது உறவினர்கள், பக்கத்து  வீட்டினர், பள்ளிக்கு அழைத்து செல்லும் நபர்கள் போன்றவர்களாலேயே மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். 

பாதிக்கப்படும் அனைத்து குழந்தைகளுமே தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்க  முடியாது. அப்படி ஒரு வேளை சொன்னால் பெற்றோர்கள் தங்களைத்தான் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மறைத்து விடுவார்கள். 

ஆண் குழந்தைகள் !

சிலர் நினைக்கலாம் நமக்கு தான் ஆண் குழந்தைகள் ஆச்சே என்று ! பெண் குழந்தைகளுக்கு தான் இந்த பாதிப்பு அதிகம் நேரும் என்றாலுமே ஆண் குழந்தைகளும் இந்த கொடுமைக்கு தப்புவதில்லை.  கயவர்கள்  அந்த நேரத்தில் யாரை எப்படினாலும் பயன் படுத்தி கொள்வார்கள்.  அவர்களது தேவை தற்காலிகமாக தங்களது எண்ணம் ஈடேரனும் அவ்வளவே.  

எதிர்காலத்தில் ?!

இதனால் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடைய போகும் பாதிப்புகள் மிக அதிகம். பாதிக்க பட்ட குழந்தைகள் ஒருவேளை  இதில் இருந்து தப்பித்தாலும் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். பல விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னணியில் இந்த பாதிப்பு காரணமாக  இருப்பது சம்பந்த பட்ட ஆண், பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான் இதில் பெரும் சோகம். 

நம்மால் என்ன செய்ய முடியும் ??

எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்கிற போது இதை படிக்கும் ஒவ்வொருத்தரும் இனிமேலாவது தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம். 

* சிறு குழந்தைகளுக்கு குட் டச், பேட்  டச் பற்றி சொல்லி கொடுங்கள். 

* அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது. 

*  ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்...(எந்த புற்றில் எந்த பாம்போ...?!) 

*   சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். 

* பிறர் முத்தமிடுவதை அனுமதிக்க  கூடாது  என்று  சொல்லுங்கள். (நெருங்கிய  உறவினர்களாக இருந்தாலுமே !)  

கட்டாயம் சொல்லி கொடுங்கள் 

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நட்பாய் பழகி அவர்களுடன் பேசி அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள். சிறிதளவாவது உடல் அமைப்பை பற்றியும், ஆண் பெண் உறவை பற்றியும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்  சொல்லி கொடுப்பது காலத்தின் கட்டாயம். மறவாதீர் !!     

இத்தகைய இழி செயலை நாம் கண்டிக்க வேண்டும். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்...இத்தகைய நபர்களிடம் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை பற்றி ஒரு விவாதம் கூட பதிவுலகில் நடத்தலாம். 

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு பிரச்சனை பற்றி நண்பர் பத்மஹரி தனது புத்தகத்தில் விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை இணையத்தில் படிக்க இங்கே செல்லவும்.


படம் - நன்றி கூகுள் 


வெள்ளி, ஜனவரி 14

எனதருமை பச்சைத் தமிழர்களே.....!



வந்து விட்டது வழக்கம் போல்
வருடத்தின் அடுத்த பண்டிகை !

ஒட்டடை அடித்து பழையனவற்றை  கழித்து
வெளியே கொட்டி வீதியில் அசுத்தபடுத்துங்கள்,
நம் வீடு சுத்தமாகட்டும் !!?

கண்டதையும் கொளுத்தி போட்டு 
காற்றை மாசு படுத்துங்கள்
தென்றல் காற்றை நூலகத்தில் தேடுவோம் !?

விவசாயத்தில் விளைந்த புதுநெல்லை வைத்து கொண்டாட 
அருகதை அற்றவன் தமிழன் என்று அரசு தருகிறதாம் 
இலவச  பொங்கல் பொருட்கள் !?

யானை கட்டி போரடித்த மரபு என்று பழங்கதை பேசிக்கொண்டு 
வீணாய் போகாமல் ரேசன் கடை முன் கையேந்துங்கள்  
சோழன் அன்றே செத்துவிட்டான் !?

உழைக்க வழி செய்து கொடுப்பதை விடுத்து  
உழைத்தவர்கள் உட்கார்ந்து பொழுது போக்க 
தொலைக்காட்சி பெட்டி, உணவிற்கு ஒரு ரூபாய் அரிசி !?

விவசாய நிலங்கள் பிற மாநிலத்தவரின் ரியல் எஸ்டேட்களாக 
மாறி கொண்டிருப்பதை கண்டு கொள்ளாத 
சுயநல அரசு , கையாலாகாத மக்கள் !?

தீமையை கொளுத்த முயன்று தன்னையே 
கொளுத்தி கரிகட்டையான தமிழன் முத்துகுமார் 
மறைந்து மறக்கடிக்கபட்டு விட்டான்  !?

பச்சை தமிழனாய் பிறந்தது பாவம் என்று 
தாமதமாய் உணர்ந்து சிகப்பு தமிழனாய் 
கடல் தாண்டி அழிந்து கொண்டிருக்கிறான் !?

மீன் பிடிக்க போன தமிழனின் உயிர் பிடித்து செல்லும் 
வாடிக்கை இன்று வேடிக்கையாகி 
எமக்கு பழகிவிட்டது தினசரி செய்திகளும் !?
  
அக்கறையில்லை எதைபற்றியும், எம்மக்களுக்கு 
பண்டிகை வாழ்த்து செய்தி சொன்னால் மறந்துவிடுவார்கள் 
அறிக்கையிடும் நரித்தன அரசியல்வாதிகள் !?

மறதி நோய் பிடித்த மக்களும் மூணு நாள் விடுமுறை 
கிடைத்த மகிழ்ச்சியில் தொலைகாட்சி முன் அமர்ந்து 
பண்டிகை கொண்டாடி திருப்தி அடைந்து கொள்வார்கள் !?

மாட்டு பொங்கல் !


பக்கத்து மாநில மக்களின் உடல் சதையை வளர்க்க அடிமாட்டை அனுப்புங்கள், அது வியாபாரம். பத்து மாடுகள் நிற்கும் இடத்தில் அம்பது மாடுகளை அடைத்து தலை வெட்டப்படும் முன்னரே உயிர் வதைக்கும் சித்திரவதையை செய்து கொண்டு அல்லது பார்த்துக்கொண்டு மற்றொரு பக்கம் அவற்றை அலங்கரித்து மாட்டுபொங்கலாம்...?!!மாடுகள் கூட மன்னிக்காது மனிதனை !!?

காணும் பொங்கல் !

இன்றாவது கைவிடப்பட்ட உறவுகளை, முதியோர்களை சென்று காணுங்கள், அவர்களுடன் கூடி களியுங்கள்.....சுயநலத்தால் பலவீனப்பட்டுக் கிடைக்கும் இதயத்திற்கு அன்பு என்னும் புது இரத்தம் பாயட்டும்...தழைக்கட்டும் நல் உறவுகள்.....புத்தன், இயேசு,கீதை, குரான் சொன்ன அன்பு வழியில்.....!!

வருடந்தோறும் தை மட்டும் பிறக்கிறது !
தமிழனுக்கு வழிமட்டும் பிறக்கிறதா தெரியவில்லை !!

வழக்கம் போல் இதையும் படித்துவிட்டு பொங்கல் வாழ்த்து சொல்லி பதிவுலக தர்மத்தை காத்து கொள்வோம் எனதருமை பச்சை தமிழர்களே.....!!

பொங்கட்டும் பொங்கல்...தங்கட்டும் மகிழ்ச்சி இல்லந்தோறும் !








படங்கள் - நன்றி கூகுள்

செவ்வாய், ஜனவரி 11

இன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1


பதிவுலகத்தில் சினிமா துறையை பற்றியும் புதிதாக வெளியாகும் சினிமாக்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுதபடுகின்றன. பதிவுலகத்தில் இருந்துகொண்டு பதிவர்கள் பற்றியும் , பதிவுகள் பற்றியும் விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியதின் விளைவே இந்த பதிவு. இனி இது போல் தொடந்து பதிவுகள் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.....?!! அவ்வாறு விமர்ச்சிக்கும் போது நிறைகள், குறைகள் இரண்டும் அலசப்படும். (எதுக்கு இந்த வேண்டாத  வேலை என்று உள்ளிருந்து ஒரு குரல் வந்தாலும் இப்போதைக்கு என் முடிவை மாத்திக்கிற மாதிரி இல்லை...!!?)

பதிவர் - ஒரு சின்ன அறிமுகம் 

முதலில் இந்த வாரம் என்னிடம் வகையாக வந்து மாட்டியவர் எங்க ஊர்க்காரர் ஒருவர் தான். இவர் ரொம்ப பெரிய ஆள்.  நாள் தவறாமல் செய்திதாளில் வலம் வருபவர்...அதை விட அதிகமாக  ஊர் முழுவதும் வலம் வருபவர்...! இவர் ஒரு இடத்திற்கு வந்தால் அங்கே ஏதோ விபரீதம்  (சம்பந்த பட்டவங்களுக்கு...!?),  நல்ல காரியம் (மக்களுக்கு...!?) நடக்க போகிறது என்று அர்த்தம். சினிமாவில் ஹீரோ அதிரடியா சாகசம் பண்ணினா உடனே நாம அடிக்கிற விசில் என்ன ? கைதட்டல் என்ன ? ஆனா இவர் சத்தமே இல்லாமல் பல நல்ல விசயங்களை அதிரடியாக செய்து கொண்டு வருகிறார்.


                                                          (இடது  புறம் நிற்பவர்)

யார் இவர் ?

இவரது பெயர் திரு.அ.ரா.சங்கரலிங்கம் அவர்கள் . திருநெல்வேலி மாநகராட்சியில் உணவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பொது  சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறையில் 26   ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இந்த அனுபவங்கள் அனைத்தையும் உலகத்திற்கு எடுத்துச் சொல்லனும் என்கிற தீராத வேட்கையுடன் இருக்கிறவர். 

இவரது நண்பர் திரு. ஜோசப்  சார் அவர்களின் விருப்பத்தின்  காரணமாக வலையுலகில் கால் பதித்து எழுதி வருகிறார் . பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை அனாயசமாக சொல்லி தெளிவு படுத்துகிறார். 

எத்தகைய பதிவுகள் ?! 

உணவு பொருள்களில் கலப்படம் எவ்வாறு எல்லாம் கலக்கப்படுகிறது, எந்த பொருளில் என்ன கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது ? அவற்றை  எப்படி கண்டறிவது ? எப்படி தவிர்ப்பது என்று பல விசயங்களை  பற்றியும்  எழுதி வருகிறார். நெல்லையில் இவர் தலைமையில் செய்யப்படும் ஆய்வுகள், இவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள்  போன்றவற்றை பற்றியும் அதை குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள், வீடியோக்களையும்  பதிவில் இணைத்திருக்கிறார். 

இரண்டு நாளுக்கு முன்பு ஆங்கிலத்திலும்  பதிவுகளை வெளியிட எண்ணி புதிதாக ஆங்கில மொழி பேசும் தளம் ஒன்றும்  தொடங்கி இருக்கிறார். தமிழில் பதிவிடும் போதெல்லாம் அப்படியே ஆங்கிலத்திலும் வெளி வரும் என்று சொல்லி இருக்கிறார். தமிழ் தெரியாதவர்களுக்கும்  உதவியாக  இருக்கும்.
அதன் லிங்க் http://way2foodsafety.blogspot.com/

அனைத்து பதிவுகளுமே நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இருநூறு பதிவுகளை எட்ட போகிறார்...எந்த பதிவு முக்கியம் என்று குறிப்பிட்டு சொல்வது மிக கடினம்.  

* தயிரில் கலப்படம் என்ற பதிவை படித்து ஆச்சரியம் ஆகிவிட்டது...அந்த பதிவின் லிங்க்  

* இவரது இந்த பதிவை பார்த்தால் ஆப்பிள் மேல்  ஒரு பயம் கலந்த மரியாதை வருவது நிச்சயம். 

* இவரது அதிரடி நடவடிக்கைக்கு ஒரு சாம்பிள் இதோ, http://unavuulagam.blogspot.com/2010_11_01_archive.html

* தூதுவாளை மிட்டாயில் கலப்படம்...மிக கொடுமைங்க இது. பாதிக்கபடுவது குழந்தைகள் என்கிற போது மனம் பதைக்கிறது...இதையும் படிங்க http://unavuulagam.blogspot.com/2010/11/blog-post_14.html 


சிறிய டீ கடை முதல் பெரிய  ஹோட்டல் வரை சென்று ஆய்வு செய்து உணவு பொருளில் கலப்படம் செய்ய பட்டோ அல்லது சுகாதார மற்ற வகையில் வைக்க பட்டிருந்தாலோ உடனே அதிரடியாக எதிரான நடவடிக்கை எடுக்கிறார். பல கடைகள் சீல் வைக்க பட்டு இருக்கின்றன. இவர் ஆய்வு செய்கிறார் என்றால் பல கடைகளின் உரிமையாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைக்கும். 

உலகத்திற்க்கே அல்வா கொடுக்கிற திருநெல்வேலியில் இருக்கிற அல்வா கடைகளையும்  இவர் விட்டு வைக்கவில்லை.....! சமீபத்தில் ஒரு பிரபல கடையை அடைத்து சீல் வைத்தவர்.    

நேரில் இவரிடம் பலரும் கேட்கும்  கேள்விகளில் முக்கியமான ஒன்று,

இத்தனை ரெய்டுகள், இத்தனை வழக்குகள், அத்தனையும் செய்யும் போது மிரட்டல் வராதா ?? அடியாட்கள் வரமாட்டார்களா ?? என்று 

அதற்கு இவரின் அதிரடி பதில் " வராமல் என்ன, வரத்தான் செய்யும், அதையும் சமாளிக்க தெரிய வேண்டும், அதுதான்  சாமார்த்தியம்" என்பது தான்.

விருதுகள் 

இவரது சீரிய பணிக்காக பல விருதுகள் வாங்கி கொண்டே இருக்கிறார்...!! எண்ணிக்கை அவருக்கே தெரியாது என்று நினைக்கிறேன்.  

ஒரு பதிவில் விருது வாங்கியதை பற்றி குறிப்பிட்டு இந்த விருதுகள் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றாலுமே பதிவிற்கு வருகை தரும் நண்பர்கள் தரும் ஊக்கம் ஒரு அலாதி மகிழ்ச்சிதான் என்று சொல்லி இருப்பார். 

ஒரு வேண்டுகோள் நண்பர்களே 

தனது ஓய்வில்லாத வேலைகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி, பதிவுகளை எழுதி மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தணும் என்கிற இவரது ஆர்வம் பாராட்டபடகூடியது.  

இவர் நமது தளத்துக்கு வருவாரா, பின்னூட்டம் இடுவாரா என்று யோசிக்காமல் நமக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக இதை கருதி இந்த நல்ல மனிதரை நாம் உற்சாகபடுத்த வேண்டும். 

நல்ல அதிகாரிகள் நம்மிடையே இல்லையே என்கிற ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும், நமக்கு இப்போது அறிமுகமாகிற இவரை உற்சாகபடுத்துவத்தின் மூலம் சிறிது நிம்மதி நமக்கு ஏற்படுவது நிச்சயம். 
   
நேரம் கிடைக்கும் போது அவசியம் எல்லோரும் இவரது தளம் சென்று பதிவுகளை படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

நல்ல விஷயம், நல்ல மனிதர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சி முதலில் பாராட்டுவது பதிவுலகம் தான் என்பதை மற்றவர் தெரிந்து கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பம்  இது.
  
நிறைகள், குறைகள் :

இவரது தளத்தை பொறுத்தவரை நிறைகள் தான் நிறைய இருக்கிறது...குறைகள் எதுவும் தெரியவில்லை. குறைகள் ஏதும் உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள், அதை ஏற்று கொண்டு சரி செய்து கொள்ள கூடிய உயரிய நல்ல பண்பு கொண்டவர்.   

லேட்டஸ்ட் செய்தி 

நேற்று நெல்லை நகரில் இருந்த அனைத்து கட்சி சம்பந்த பட்ட போர்டுகள் (விளம்பர பலகைகள் ) அகற்றபட்டன. 

 பின் குறிப்பு 

ஒரு வழியாக  முதல் விமர்சனம் திருப்தியா முடிந்தது...அடுத்த பதிவர் யார் என்று முடிவு செய்து விட்டேன்...அவரை பற்றிய விமர்சனம் விரைவில்...க்ளு - அவர் ஒரு பிரபல ஆண் பதிவர் !!?


பிரியங்களுடன்
கௌசல்யா 



சனி, ஜனவரி 8

ரிலாக்ஸ் பிளீஸ்...!



உற்சாகம் எதில் இருக்கிறது ?? என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்...?! வேலை,  விலைவாசி,கல்யாணம், குடும்பம்.  குழந்தை, படிப்பு.......இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.  

உற்சாகத்தை தேடி வேற எங்கும் போக வேண்டாம்...உங்களுக்குள்ளேயே இருக்கு அப்படின்னு பலரும் சொல்லி இருப்பாங்க நான் புதுசா ஒண்ணும் சொல்ல போறது இல்லை.  ஆனா அதையே அடிக்கடி கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணித்  தான் பார்ப்போமே என்று தோன்றும் அல்லவா...?!

எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் சொல்லி இருப்பார் "ஒருநாள்  பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...!" நம்மிடமும், நம்மை சுற்றியும் பார்த்து வியப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. எங்கேயும், எப்போதும் அபூர்வங்கள் நம்மை சூழ்ந்து இருந்தும் நாமோ பூர்வமானவற்றை  பற்றி  யோசித்து, முந்தினவற்றையே  நினைத்து கவலைக் குழியில் விழுந்துக்கிடக்கிறோம். 

கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி  கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.  

உற்சாகமாக வைத்துகொள்வது அடுத்தவர் கையில் இல்லை, நிச்சயமாக நம்மிடையே தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் கூட 'ஆமாம் எல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று நீங்க நினைக்கலாம்' உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிசு தான். அதே சமயம் வலி தலையை பிளந்தாலும் காபி குடிக்கும் போது அதன் நறுமணத்தை நல்லா ஆழமாக, உள்ளிழுத்து, சுவாசித்து ரசித்து பார்க்கும் போது அந்த தலைவலியை கொஞ்சம் மறக்க முடியுமே. 

ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!

முதலில் நம்மை நாமே ரசிக்க பழகிக்க வேண்டும். காலை எழுந்ததும், ஏண்டா விடியுதேனு புலம்பிட்டே எழுந்திருக்காம உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வெளியில் சூரியன் காத்திட்டு இருக்கிற மாதிரி நினைச்சிட்டு உற்சாகமா எழுந்து வெளியே வந்து ஒளிவீசிட்டு இருக்கிற சூரியனை பார்த்து ஒரு ஹாய்,குட் மார்னிங் சொல்லிப் பாருங்க (பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there  னு  எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! ) மழை காலத்தில சூரியன் வரலைனா என்ன பண்றதுன்னு புத்திசாலித்தனமா, நீங்க  கேட்டா 'மழைக்கு welcome சொல்லுங்களேன்' என்று சொல்வேன். 

உற்சாகத்தை பத்தியும் வாழ்க்கையை ரசிக்கணும், கடின படுத்திக்க கூடாதுன்னு நான் ஏன் சொல்றேன்னு தொடர்ந்து படிங்க புரியும். 

சொந்த அனுபவம்

எனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும்  என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு...!! என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும்  ஒரு குட்டி மரம் போல இருக்கும்.  அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.

காலையில் எழுந்ததும் எப்பவும் தொட்டிகளின் பக்கம் வந்து பூக்களை ரசித்துவிட்டு (பேசிட்டு...!) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம்  சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான்  எனக்கு...?! சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்...எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே  தெரியல...கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்...அதை ஏன் கேட்கிறீங்க...இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்...(தொட்டி எப்படி நடந்து படி ஏறி  மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல...?!!)

பக்கத்து வீட்டல இருக்கிறவங்க கிட்ட சரியா பேசினது கூட இல்லை. எனக்கு இருந்த வேகத்தில அவங்க கிட்டயும் போய் "ரோஜா  தொட்டியை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, நீங்க பார்த்தீங்களா ?" கேட்க, அவங்களும் "அச்சச்சோ, அப்படியா ? நீங்க ஏங்க சுவர் மேல வச்சீங்க, நல்ல பெரிய ரோஜா பூவாச்சே, ரத்த கலர்ல செவாப்பா அழகா  இருக்குமே " அப்படின்னு எண்ணைய  கொஞ்சம் ஊத்திட்டு போனாங்க. 

அந்த நேரம் ரோட்டில வாக்கிங் போறவங்க நான் புலம்பறதை ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு  ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே  இருந்தேன்...! (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால  செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க...! எத்தனை பேர் வந்திருப்பாங்க ......? எதில வச்சி கொண்டு போய் இருப்பாங்கனு, வேற சம்பந்தம் இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்......

என் கூச்சல் கேட்டு மெதுவா...?!!வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்...என் மண்டைக்கு எதுவும் ஏறல...புலம்பறதையும் நிறுத்தல...அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, "ஏம்மா வருத்த படுறீங்க,  உங்களை விட அதிகமா ரோஜா செடியை  லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி  எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா  இருங்க...டென்ஷன் படாதிங்க"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.


என்ன ஒரு தெளிவு ! என்ன அழகான நேர்மையான எண்ணம் ! இது ஏன் எனக்கு  இல்லை?? அந்த நிமிஷம் , " எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்...?!"     

சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அன்றைக்கு என் மகன் எனக்கு தகப்பன்சாமியாக தெரிந்தான்...!!

தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...!!) 


       


"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம், 
நீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை"                     -- யாரோ 



செவ்வாய், ஜனவரி 4

ஹிட்ஸ்..........தீருமா இந்தக் கொடுமை???


நான் எப்பவும் பதிவுலகம் பத்தி பெருமையாக நினைச்சிட்டு இருப்பேன். கடந்த போஸ்டில் கூட போன வருடத்தில் இனிய நினைவுகள் என்றால் பதிவுலகம்  வந்ததை பற்றிதான் எழுதினேன். இனி வருங்காலத்தில் பதிவுலகம் தான் பலரின் பார்வையில் இருக்கும் என்றே நினைக்க வேண்டியது இருக்கிறது. உதாரணமாக இங்கே வெளியிடப்படும் சினிமா விமர்சனங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்க  கூடிய அளவிற்கு போய்விடலாம். அத்தகைய பதிவுலகத்தின் தற்போதைய ஒரு நிலை வருத்தப்படும் நிலையிலேயே இருக்கிறது.

தரமான பதிவுகள்

பதிவுகளின் அளவு கோள் எப்படி நிர்ணயம் செய்ய படிக்கிறது என்பதில் நம்மிடையே ஒரு தெளிவு இல்லை, குழப்பமே மிஞ்சுகிறது. சிலர் ஹிட்ஸ் அதிகம் வாங்கி இருப்பதை பார்க்கும் மற்றவர் இது எப்படி அவரால் முடிகிறது...நாம இந்த மாதிரி அதிக ஹிட்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்...? ஒரு வேளை நாம  எழுதுற பதிவு நல்லா இல்லையா...
மத்தவங்களுக்கு பிடிக்கலையா என்று என்னை கேட்கும் போது என்னிடம் பதில் இல்லை. இப்படி கேட்டவர்கள் கொஞ்ச நாளில் பதிவு எழுதவே பிடிக்காமல் ஒரு விரக்தியின் உச்சத்தில் போய் விடுவதும் நடக்கிறது இங்கே...?! எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்...அது கிடைக்காத போது ஏற்படும் விரக்தி கொஞ்சம் ஆபத்தானது...மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும்.

இந்த மாதிரியான ஆட்கள் நம்மளை மத்தவங்க கவனிக்கணும் என்பதற்காக மேற்கொள்ளும் ஒரு வழியே ஆபாசமான தலைப்புகளை வைப்பது, பதிவுகளிலும் அதிக பட்ச அநாகரீக வார்த்தைகளை சேர்ப்பது என்பது. தொடக்கத்தில் நல்லா எழுதிக்கொண்டு வரும் சிலர் இந்த ஹிட்ஸ் மோகத்தால் பாதை மாறி விடும் அபாயம் தற்போது அதிகரித்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஒன்று அவர்கள் தங்கள் பாதையை  மாற்றி  கொள்கிறார்கள், இரண்டாவது தங்களது மோசமான பதிவுகளால் பிறரை அந்நிலைக்கு போக மறைமுகமாக தூண்டி விடுகிறார்கள். இது இரண்டுமே சரியல்லவே !!?

என் பிளாக் என் இஷ்டம் !

சிலரின் தவறுகளை நாம் சுட்டி காட்டினால் உடனே அவர்களின் இயலாமை இப்படி தான் வெளிப்படுகிறது , 'இது என்னுடைய தளம்...என் இஷ்டம் நான் எதையும் எழுதுவேன்...உனக்கு பிடிச்சா வா...இல்லைனா வராத...' இப்படி சொல்லி சமாளிக்கிறது  சரிதான். 

'எனக்கு பிடிக்கல நான் வருவது இல்லை, ஆனால் பலரை வரவழைகிறதே உங்களின் கவர்ச்சிகரமான தலைப்புக்கள், பதிவுகள்...?!' வாசகர்கள் எல்லோருமே ஆபாசத்திற்கு அடிமைகள் , இதற்கு மட்டும்  தான் லாயக்கு என்ற உங்களின் கண்ணோட்டத்தை மாற்றுங்களேன்.  உங்கள் ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நஞ்சை ஆழமாய் விதைத்து, நீரூற்றி வளர்த்து விடாதீர்கள் தயவு செய்து. (களைச் செடிகள், விஷச் செடிகள் தான் விரைவில் வளர்ந்துவிடும்...? இது இயற்கை !! )

சில விமர்சனங்கள் 

விஷயம் இருக்கிறவங்க எழுதுறாங்க திறமை இல்லாதவங்க ஏன் பொறாமை படுரீங்கனு கூட ஒரு கேள்வி வரும். சரக்கு இருக்கிறவங்க எல்லாம் கொட்டினா பரவாயில்லை, ஆனா...??! தவிரவும் மக்களை திருத்தணும் என்று முடிவு பண்ணிட்டு யாரும் இங்கே எழுத வரல, முதல நாம சரியா இருக்கிறோமா இல்லையா என்றே  தெரியாத போது நாம எப்படி மக்களை திருத்த முடியும்...?!

ஆபாசமாக எழுதுங்கள்

பெண்களை பத்தி கவர்ச்சியா  எழுதியோ, ஆபாச வர்ணிப்பு, ஆபாச படங்களை போட்டு வாசகர்களை நீங்கள் இழுங்கள்...ஆனால் அதற்கு முன் ஒரு காரியம் பண்ணுங்கள், கூகிள்ல adult content warning என்கிற ஒரு வசதி இருக்கிறது அதையும்  போட்டுடீங்கனா ஹிட்ஸ் இன்னும் அதிகமா அள்ளிட்டு போகும். நீங்களும் இந்த ஹிட்ஸ் சாதனை பத்தி பலரிடம் சொல்லி பெருமை பட்டுக்கலாம்...?!! 'பதிவர்கள்' என்கிற போர்வையில் சின்னத்தனமான வேலைகள் செய்வது அநாகரீகம்.    

திரட்டிகள் என்ன செய்யும் ??

திரட்டிகள் என்பது பல பதிவுகளை ஒரே இடத்தில் சேர்த்து தருவது, மற்றும் பதிவர்களை ஊக்கபடுத்துவதற்காக இந்த வார சிறந்த பதிவர்கள் என்பது போல் தேர்ந்து எடுத்து வெளியிடுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது ? திரட்டிகள் எதன் அடிப்படையில் இதை முடிவு செய்கிறார்கள் என்பதை விட இது போன்ற திரட்டிகளை சில பதிவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் பக்கமாக திருப்பி கொள்கிறார்கள் என்பதே என் கருத்து. திரட்டிகளையும் அவர்கள் வழிக்கு கொண்டு செல்கிறார்கள்.

ஒரு போஸ்ட் போட்டவுடன் 'போஸ்ட் போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு, ஏன் வோட் அதிகம் வரல' என்று தங்கள் மனதை போட்டு குழப்பி கொள்ளும் ஒரு சிலரை பார்க்கும் போது எனக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. அதற்கு மாறாக எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை...எதிர்பார்ப்பதும்  இல்லை...இந்த மாதிரியான பதிவர்கள் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள். 

வேண்டுகோள் 

உங்கள் தளம் எதையும் எழுதிட்டு போங்க, ஆனால் ஹிட்ஸ் புராணம் பாடி பிற பதிவர்களின் மனதையும் அவர்களின் எழுத்தையும் நோகடிக்காதீர்கள்.  

எந்தவொரு பதிவுக்கும்  நல்லா இருக்கு, அருமை இந்த மாதிரி டெம்பிளேட் கமெண்ட்  வருவதை விட காரசாரமான கருத்துக்களை பின்னூட்டமாக பார்க்கும் போது தான் பதிவின் வீரியம் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  அதனால் ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.