சனி, நவம்பர் 28

சகிப்புத்தன்மைக்கு வந்த சோதனை... !

A test of endurance- சகிப்புத்தன்மைக்கு வந்த சோதனை



இந்தியா சகிப்புத்தன்மை உள்ள நாடு என்ற ஒரு நல்ல பேரு நம்ம  நாட்டுக்கு உண்டு, அந்த பேரை சூட்டியதும் நாமதான். ஏகப்பட்ட இனம் மதம் சாதி இங்க இருக்கு, ஆனாலும் நாம ஒற்றுமையா இருக்கிறோம் அப்டினு நாட்டுக்கு வெளில இருக்கிறவங்கள விட நாமதான் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி பெருமைப்பட்டுக்குவோம். ஆனா சொல்றதோட சரி  செயலில் இல்லை அதுதான் நம்ம பிரச்சனையே.

ரோட்ல நடந்து போறப்போ மேல மழை தண்ணிய அடிச்சிட்டு போற பைக் காரன நடந்து போறவனும்,  கார்ல போறவனை பைக் காரனும் கெட்ட வார்த்தையால திட்டித்  தீர்க்கிற நாம  தான் இப்ப சகிப்புத் தன்மையை பற்றி பேசுகிறோம். திட்டுவதால் மேல விழுந்த தண்ணீ உடனே காயாது என்பது தெரிந்தாலும் திட்டினால் தான் அப்போதைக்கு நமது மனசு ஆறும். இப்படிதான் கூட்ட நெரிசலில் பஸ்ல தெரியாமல் கால் மிதி படுவது, மேல இடிபடுவது என்று தினமும் நாம் சந்திக்கும் அத்தனையிலும் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் நாமெல்லாம் மனுஷ லிஸ்ட்லயே சேர்த்தி இல்ல. அப்படிப்பட்ட நாம சகிப்புத்தன்மையை பற்றி இப்ப கிளாஸ் எடுக்கிறோம். குறைந்தபட்சம்  ஊர்ல எத்தனை பேர் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுறாங்க. அதுவும்தவிர  ஆம்புலன்ஸ் பின்னாடியேப்  போனா சுலபமா நமக்கும் வழி கிடைக்கும் என்று போகிற ஜந்துக்கள் எல்லாம் சகிப்புத்தன்மை, தேசபக்தி என்று பேசுதுகள் !!?

சமீப காலமாக  இந்தியா என்றால் இந்து என்ற கூச்சல் அதிகரித்திருப்பதற்கு காரணம் மோடி அரசு என்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது அவர்கள் அப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சர்யம்.  இத்தனை காலமாக பிற மதத்தினரின் காலடியில் நாடு இருந்ததைப்  போலவும் அதை மீட்பதே தங்களின் தலையாய கடமை என்பதுமான அவர்களின் செயல் முட்டாள்தனம் தவிர வேற என்ன. இந்துமதம் பிரதான மதம், மற்றவை அதன் அடிப்பொடிகள் அடங்கிக்  கிடக்கவேண்டும் மீறினால் அடக்கப் படுவீர்கள். இதுதான் இன்றைய நிஜம்.  இந்து மதத்தை விட்டு வெளியேப்  போனவர்கள் தான் கிறிஸ்துவம் முஸ்லிம் புத்தம்  என்றால் ஏன் சென்றார்கள் இந்து மதத்தில் ஏதோ பிடிக்கவில்லை அல்லது அடுத்த மதத்தில் ஏதோ பிடித்திருக்கிறது என்பது தானே அர்த்தம். அவ்வாறு விரும்பிச்  சென்றவர்களை திரும்பி அழைக்க இந்து மதத்தில் உள்ள நல்லதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லி வலியுறுத்தலாம். அதை விடுத்து பிற மதத்தினர் ஒரு கருத்தைக்  கூறினாலும் அதற்கு கண் காது மூக்கு எல்லாம் வைத்து தேசிய பாதுகாப்புச்  சட்டத்தை பாய்ச்சும் லெவலுக்கு கொண்டுப்  போவது மதவெறி அல்லாமல் வேறு என்ன?!

என்னே தேசபக்தி

இத்தனை காலமாக இல்லாத தேசபக்தி இப்ப திடீர்னு பொத்துக்கிட்டு ஊத்துது, தேசபக்தி ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்றால் மத்தவங்க எல்லாம் தேசத்தை(தேசபக்தியை) அடகு வச்சா சாப்ட்டுறாங்க.  பிற மதத்தினரை தேசத்துரோகி என்று  கட்டம் கட்டிவிடுவதில் காட்டும் தீவிரத்தை நாட்டின் வளர்ச்சியில் காட்டினால் நல்லது. ஆனால் அதை செய்ய மாட்டார்கள், ஒவ்வொரு கட்சிக்கும் அரசியல் செய்ய ஏதோ ஒன்று தேவை. மொத்தத்தில் பொதுசனம் பற்றிய அக்கறை யாருக்கும் இங்கே  சுத்தமாக இல்லை.

நாமெல்லோருமே ஏதோ ஒருசமயத்திலாவது நாட்டை குறை சொல்பவர்கள் தான். நாடாடா இதுன்னு காரி துப்பியவர்களும் உண்டு. வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகவும் பலருக்கும் ஆசைதான். இக்கரைக்கு அக்கரை பச்சை தானே.  அப்படிப்பட்ட ஆட்கள் இன்று அமீர்கானை வாரி தூற்றுவதைப்  பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அமீர்கான் சொன்னது  'முஸ்லிம்களுக்கு இப்படியே பிரச்னை தொடர்ந்தால் நாமும் நாட்டை விட்டு போகவேண்டி இருக்குமா என்று என் மனைவி என்னை கேட்டார்' என்பதை தனது பேச்சோடுப்   பேச்சாக குறிப்பிட்டார். இந்த பேச்சுக்குள்  மீடியாக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி காரச்சார பொடியை தூவ அவ்வளவு தான் பத்திக்கிச்சு. ஒரு இந்து இதை சொல்லி இருந்தால் கதையே வேற ஆனா சொன்னது ஒரு முஸ்லிம் ஆச்சே.  

அமீரின் பிகே , சத்யமேவ ஜெயதே ப்ரோகிராம் பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து வரிஏய்ப்பு பிரச்சனையை மறைக்க பிளான் பண்ணியே அமீர் இப்டி பேசினார்னு ஒரு வாரமாக மீடியாக்கள், சமூகத் தளங்களிலும் கருத்து சொல்றேன்னு ஆளாளுக்கு தங்களின் மத துவேசத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்தார் என்றால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு எடுக்க வேண்டியது தானே, மாறாக மத துவேசத்தை கையில் எடுத்து கொடும்பாவி எரிப்பு , பாடை கட்டுறது என்று கீழ்த்தரமா ஏன் இறங்கணும்.  இதையெல்லாம் அரசு செய்யவில்லை சில குரூப்புகள் என்றால் அவர்களை மத்திய அரசு தடுக்காமல் ஏன் வேடிக்கைப் பார்க்கிறது? அவர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களில் இருந்து  பொதுமக்களை  பாதுகாப்பது அரசின் கடமை அல்லவா?  ....... இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நானும் தேசத்துரோகி ஆகிவிடுவேனோ!?  

எது சகிப்புத்தன்மை 

அப்புறம் அம்பேத்காரை எதற்கு இவ்விசயத்தில்  இழுக்கிறார்கள் என்று தான் என் புத்திக்கு  எட்ட மாட்டேன்றது. முஸ்லிம் மக்களுடன் சகோதர அன்பை பாராட்டி மகிழ்ந்தவர், முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு முதல் வெற்றியைப்  பெற்றவர். மத பேதம் பார்க்காமல் பழகிய/வாழ்ந்த அவரது பெயரை தங்களின் தேவைக்கு இப்போதைய அரசியல்வாதிகள் உபயோகிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் காந்தியை கொன்ற  கோட்சேவுக்கு சிலை வைப்பார்கள், அவர் ஒரு போராளி என்று மாணவர்களின் பாட புத்தகத்தில்  எழுதியும்  வைப்பார்கள்.  

பிற மதத்தினரின் நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது, எதை சாப்பிடுவது என்பதிலும் மூக்கை நுழைப்பது,....என்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்கள். கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை  எல்லாம் இந்த நாட்டில் பிறந்த எல்லோருக்கும்  உண்டு. ஒரு பிரபலம் சாதாரணமாக பேசினால் பெரிதாக்குவதும், எளியமக்கள் 'வாழும் உரிமை'க்கு குரல் கொடுத்தால் கண்டுக் கொள்ளப்படாததும் தற்போதைய நிலை.  நீ  சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை சொல்வதற்கான உரிமை உனக்கு உண்டு அதை நான் மதிக்கிறேன் என்று சொல்வதற்கு பெயர் தான் சகிப்புத் தன்மை.

இதை ஆட்சியில் இருப்பவர்கள் முதலில் உணரவேண்டும். அதை விடுத்து சொன்னவர் என்ன சாதி என்ன மதம் என்று அலசி ஆராய்ந்து ஓ நீ அந்த மதமா அதுதான் அப்படி பேசுகிறாய் என தரம் பிரிப்பது அநாகரீகம். இதை அரசு , மீடியா தனி நபர்  யார் செய்தாலும் தவறுதான் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. சகிப்புத்தன்மை உள்ள நாடு என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தால் போதாது... செயல்களில் காட்டவேண்டும் முக்கியமாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இனிமேலாவது இதை செயல்படுத்தினால் நல்லது. ஆனால் அதற்கு சிறிதும் வாய்ப்பே இல்லை.  

சமூக வலைத்தளங்களில் அமீர்கானை இழுத்துவச்சு படு கேவலமாக  கும்மி அடிக்கிறவங்களைப்  பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. கண் முன்னாடி நடக்குற கொடுமையை வேடிக்கை பார்த்துட்டு போற நமக்கெல்லாம் சகிப்புத்தன்மைப்  பற்றி பேச என்ன அருகதை இருக்கு   தனிநபரை தாக்குவதாக கூறிக் கொண்டு அவரது மதத்தை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களை போன்ற மத வெறியர்களுக்குத்  தேவை ஒரு சந்தர்ப்பம்...அது யார் மூலமாக எவ்வகையில் ஏற்பட்டாலும் தங்களின் மன வக்கிரங்களை வெளிக் காட்டியேத் தீருவார்கள்... அரசிற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிப்பவர் முஸ்லிமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு ஓடணும், கிறிஸ்துவராக இருந்தால்  ஜெருசலமிற்கு  ஓடணும் என்பதை சட்டமாக்கி விடுவார்கள் போல ! ஒரு ஜனநாயக நாட்டில் அரசை குறைக் கூற, விமர்சிக்க பொதுமக்களுக்கு உரிமை இல்லை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பொதுமக்களை பொறுத்தவரை 'ம்' என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் ??!!!


சொற்களை சிறை வைத்தீர்கள்
பிரியங்களை கல்லெறிந்தீர்கள்
கருணையை கழுவேற்றினீர்கள்
இவையெல்லாம் பிரபஞ்சம் சாட்சியாக
நீங்கள் தான் பரிசளித்தீர்கள்
உடலில் இருக்கும் சொச்ச உயிரை
கொஞ்சம் மிச்சம் வையுங்கள்
உங்களுக்கு பின்னால் கடவுள் வேற நிற்கிறான் !

(பேஸ்புக்கில் நண்பர் செய்தாலி அவர்கள் எழுதிய இந்த கவிதையை இன்று காலை படிக்க நேர்ந்தது.  எளிமையான இந்த வரிகள் பல அர்த்தங்களை எனக்கு உணர்த்தியது. நன்றி செய்தாலி !!)  

சகிப்புத்தன்மையை சகித்துக்கொள்ளப்  பழகிக் கொண்டோமென்றால் இங்கே வாழ்தல் இனிது !!!


புரிந்தவர்களுக்கு...
கௌசல்யா  





புதன், நவம்பர் 18

காமம் - பெண்ணின் தவிப்பும் ஆணின் புரிதலும் !!!

இதுவரை  பேசாப் பொருளா காமம் - அறிமுகம்  படிக்காதவர்கள்,  அதை படித்தப்பின்  இப்பதிவைப்  படித்தால்  தொடர்ச்சிப்  புரியும். நன்றி.

* * * * *

திருமணமானவர்களே இது உங்களுக்கான கேள்வி...

=> காமத்தை காதலோடு செய்கிறீர்களா ?

* இது என்னங்க கேள்வி ... காதல் இல்லாமலா காமம் வச்சுக்க முடியும்?

=> இன்னும் கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க ... உங்க காமத்தில் காதல் இருக்கிறதா?

* இது என்ன  குழப்பம் உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கான்ற மாதிரி??!! புரியலையே...

=> அப்ப இந்த கட்டுரை உங்களுக்குத்தான் தொடர்ந்து வாசிங்க...

* * * * *

காமத்தை காதலுடன் ரசித்து உணர்ந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள். மற்றவர்கள் வாழாமல் வாழ்க்கையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் !!

தம்பதியருக்கிடையில் காதல் என்று  தனியாக இருக்கவேண்டியதில்லை என்பது உங்களின் எண்ணமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். புது தம்பதியர் இருவரும் காதல் இன்றி முதல்இரவு என்ற கட்டாயத்திற்காக உறவு வைத்துக் கொள்வதும் தற்கொலைக்கு முயலுவதும் ஒன்றுதான்.  காமத்தை கையாள கட்டாயம் அங்கே காதல் இருந்தாக வேண்டும். அத்தகைய குடும்ப உறவுகள் மட்டுமே நீடித்து நிலைத்து நிற்கும். பெரியோர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என்றும்  சம்பிரதாயமாம் என்றும் திருமணத்தன்று இரவே அவசர அவசரமாக நடந்து முடிவதற்கு பெயர் காமமும் அல்ல காதலும் அல்ல... முழுமையான தாம்பத்தியமும் அல்ல.  ஒரே வார்த்தையில் சொன்னால் அது ஒரு  'விபத்து' 

Lust is not a sin. பேசாப் பொருள் அல்ல காமம்


'காதலுடன் காமம்' என்பது உடலின் ஒவ்வொரு செல்லும் மென்மையாக தூண்டப்பட உணர்ச்சிகள் மலரைப்  போல மெல்ல விரிய, தானும் நுகர்ந்து துணையையும் நுகரவைக்கும் அற்புத அனுபவம்... வி(மு)டிந்த பின்னும் அடுத்து எப்போது எப்போது என ஏங்க வைக்கும்! சும்மா தொட்டதும் இந்த நிலை ஏற்பட்டுவிடாது, அதற்குத்தான் காதலை துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும் என்கின்றேன்.

வெறும் காமத்துடன் உடல்கள் ஒன்று சேர்ந்தால்   குழந்தை பெற்றுக் கொள்ளலாமே தவிர இறுதிவரை சந்தோசமாக குடும்பம் நடத்த முடியாது. அதுவும் மன அழுத்தம் மிகுந்த இன்றைய இயந்திர வாழ்க்கையில் காமம் மட்டும் என்றால் வேலைக்காகாது. அட ச்சே இவ்ளோதானா மேட்டர் இதுக்குத்தானா இவ்ளோ பில்ட்அப் என்று அசால்ட்டா தூக்கிப் போட்டுவிட்டு கண்டுக்காமப்  போயிக்கிட்டே இருப்பாள் பெண்! நேசத்திற்கும் வலுக்கட்டாயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

காதலையும் காமத்தையும் போட்டு குழம்பிக் கொள்ளாதீர்கள்.  ஒரு ஆண்,   தன் மனைவியுடன் படுக்கையில் இணைவதையே  காதல் என்கிறான். தன் மனைவியின் மீதான நேசத்தை இவ்வாறு, தான் வெளிப்படுத்துவதாக திருப்திப் பட்டுக் கொள்கிறான்.  என்னிடம் கவுன்செலிங்க்கு வந்த பெண் நாலு பக்கத்திற்கு கணவனின் மீது குறைகளை வாசித்தாள், அதன் மொத்த சாராம்சம் 'தன் மீது கணவருக்கு அன்பில்லை' என்பதே.  கணவனிடம் கேட்டபோது 'நான் அவளை எவ்ளோ நேசிக்கிறேன் தெரியுமா, வாரத்தில் இரண்டு மூணு  தடவை அவளுடன் உறவு வச்சுக்கிறேன், இப்படி என் அன்பை வெளிப்படுத்தியும் அவ புரிஞ்சுக்கலைனா நான் என்னங்க பண்ண'    என்று ரொம்பவே அப்பாவியாக(?) கேட்டார்.

நிறைய ஆண்கள் இவரை போன்றுத்தான் இருக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு மகிழ்ச்சி என்பது செக்ஸ் ஆல் ஏற்படும்  என்பது மிக மிக தவறான புரிதல்.  உங்களைப்   பொருத்தவரை செக்ஸ் என்பது பெரிய மேட்டர் என்றால் பெண்ணோட  தேவையெல்லாம் ரொம்ப  சின்ன  மேட்டர். செல்ல வருடல், மென்மையான தொடுதல்,   கொஞ்சம் டைட்டான முரட்டுத்தனமான அணைப்பு, கொஞ்சலான பேச்சு, எண்ணிக்கை வைக்காமல் கிடைக்கும் முத்தம்... இப்படி ஆரம்பித்து மெல்ல மெல்ல முன்னேறி பெண்ணை உச்சத்திற்கு அழைத்துச் சென்று அப்படியே  ஆண் தனது தேவையை தீர்த்துக் கொள்வது ......இதுதான் முழுமையான செக்ஸ்! ஆணின் ஐந்து நிமிட காமம் பெண்ணிற்கு  வெறுப்பைத்தான் தரும்,  அத்தகைய உடலுறவை சந்தோஷம்/திருப்தி என்று எடுத்துக் கொள்வது ஆண்களின்  அறியாமை!!

பெண்ணின் தவிப்பும் ஆணின் தவறான புரிதலும் 

2 குடும்பங்களை உதாரணத்துக்குப்  பார்ப்போம். சிந்தைக்குள் குடும்பச் சிக்கல்கள்  அலைமோத தூக்கம் தொலைத்துப்  புரண்டுக்  கொண்டிருக்கும் மனைவி தனது தவிப்பு கணவனின் கைக்குள் தஞ்சமடைந்தால் குறையும் என முதுகுக்  காட்டி உறங்கும் கணவனை மெல்ல தன் பக்கம் திருப்ப, ஸ்பரிசம் பட்டு லேசாக அசையும்  கணவன், 'எனக்கு மூடில்லை தூங்க விடு' பட்டென்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு தூக்கத்தைத்  தொடருகிறான்.   அடுத்ததாக வேறு ஒரு குடும்பம் இதே மாதிரியான ஒரு சிச்சுவேசன், ஆனா  இந்த கணவன் கொஞ்சம் நல்லவன், அணைப்பிற்குத்  தவித்தவளைப் பிடித்து இழுத்து அவளது தவிப்பைப்  போக்குகிறேன் பேர்வழி என்று பெருந்தன்மையுடன் போராடி(?) தனது ஐந்து நிமிட தேவையை (மட்டுமே) பூர்த்தி செய்துவிட்டு அப்பாடா முடிந்தது கணவனின் கடமை என்று மீண்டும் மனைவிக்கு முதுகுகாட்டி தூங்கியே விடுகிறான்.  இந்த இரண்டு விதமான படுக்கையறை காட்சிகளிலும் நடந்தது என்ன ?!


அன்பான அணைப்பிற்கு மனைவி ஏங்குவதை காமம் என பொருள் கொள்ளும் விந்தையான கணவர்களைக்  கொண்டது தான்  நம் சமூகம்  !!

முதல் குடும்பத்தில்,  மனைவி அடிபட்ட வலிகொண்ட   உணர்வுடன்  அவமானத்தில் கூனிக் குறுகி இருப்பாள், இரண்டாவது குடும்பத்தில்,   மனைவியோ குழப்பத்தின் உச்சத்தில் இருப்பாள்...  இருவருக்குள்ளும் எழும் ஒரே கேள்வி 'நான் சும்மா அணைக்கத்தானே நெனைச்சேன்??!!' பதிலற்ற கேள்வியின் இறுதியில், இந்த இடத்தில்தான்  அவள் வெறுக்கத் தொடங்குகிறாள், காமத்தையும் புரிதலற்று அதனைக்  கையாளும் கணவனையும்...

விடியும்வரை தூக்கமின்றித்  தவித்து விடிந்ததும் அவமானம்  குழப்பம் மனதை வருத்த எரிச்சலுடன் கணவனின் மீது கோபத்தைக்  காட்டுவாள். காரணம் புரியாமல் அதை எதிர் கொள்ளும் ஆண், காலை நேர டென்ஷன் என்று மனதை சமாதானம் செய்துக் கொண்டு வேலைக்குச்  சென்றுவிடுவான். இரவு வீடு திரும்புகையில் வாசலிலேயே  எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் அதே கோபத்தை வேறு ஏதோ ஒன்றைக்  காரணமாக வைத்து....... இச்சமயத்தில் ஆண் முழுதாக குழம்பி ' அப்படி நாம என்னத்தச்  செஞ்சுட்டோம், இவ இப்படி குதிக்கிறா'  என்று. இரவில் கணவன் சரியாக நடந்துக் கொள்ளாததுதான் காரணம் என்று பொதுவாக  எந்த பெண்ணும் வெளிப்படையாக சொல்ல மாட்டாள், சொல்லப்போனால் அவளுக்குமே தெரியாது, தனது எரிச்சலின்    நெருப்பு?  படுக்கையறையில் தான் புகைய ஆரம்பித்தது என்று.

காமத்தின் குணம் 

இப்படித்தான் பல தம்பதிகள் சிக்கலின் முதல் முடிச்சு எந்த இடத்தில் விழுந்தது என்று  தெரியாமலேயே மேலும் மேலும் முடிச்சுகளைப்  போட்டுக் கொண்டே சென்று சிக்கலைப்  பெரிதாக்கி ஒரு கட்டத்தில்  கோர்ட் படியேறி விடுகிறார்கள்.  விவாகரத்தும்  கிடைக்கிறது, அதன் பிறகு மறுமணம் நடக்கலாம், அங்கேயும் பிரச்னை ஏற்படலாம், மறுபடியும் விவாகரத்து  என்றால் கேலிக்கூத்தாகிவிடுமே என சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டலாம். இதுதான் இதுவேதான் இன்றைய நிஜம்... யதார்த்தம்!!

இப்போது புரிகிறதா காமத்தின் வலிமை என்னவென்று.  வெறும் ஐந்து நிமிட சுகம் தானே என்ற அலட்சியம் குடும்ப உறவுகளையே சிதைத்துவிடுகிறது.  ஆணின் அணுகுமுறையை பெண்ணும் பெண்ணின் தேவையை ஆணும் புரிந்து நடந்துக் கொள்ளவேண்டும். இதனை  சரியாக கையாளத் தெரிந்தவர்கள் மட்டும்தான் சந்தோசமாக வாழ்கிறார்கள், மற்றவர்கள் வாழ்வதாக நடிக்கிறார்கள்!!

காமம் - உடல், காதல் - மனம் இரண்டையும் ஒன்று சேர்த்தால் தான் அங்கே நிறைவு கிடைக்கும். ஆண் அல்லது பெண்  வெறும் காம இச்சையுடன்  மட்டும் துணையை அணுகும்போது எதிர்பாலினத்தை சந்தோசப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தன் உச்சத்தை நோக்கிமட்டுமே செல்வார்கள்... இது அவர்களின் தவறல்ல காமத்தின் பிரத்தியேக குணம்.  ஆனால் காதலுடன் அணுகினால் வேறு சிந்தனையில்  துணை இருந்தாலும்   இழுத்துப் பிடித்து தன்னுடன் பிணைத்து வைத்துக் கொள்ளத் தூண்டும் காதல். அப்புறமென்ன  இருவரும் மற்றொருவருக்குள் கலக்கத் தொடங்கிவிடுவார்கள்.  இதில் இன்னொரு வசதியும் இருக்கிறது, காதலை துணைக்கு அழைத்ததுடன் தேமே என்று இருந்துவிட்டால் கூட  போதும், பிறகு காதல் மற்ற  வேலைகளைப்  பார்த்துக் கொள்ளும்.  காதலுக்கு இருக்கக் கூடிய வீரியம் இது.

காதலுடன் கூடும் போது ஒருவருக்குள் ஒருவர் சுலபமாக ஊடுருவ முடியும்...அது மனதென்றாலும், உடலென்றாலும்...! செல்ல வருடல் , சில பல முத்தங்கள், அன்பான பேச்சு, இறுக்கமான அணைப்பு இவை போதுமே உறவைத்  தொடங்க, இதைதான் காதல் என்கின்றேன். பலரும் உடலுடன் கூடுவதாக எண்ணி உடலுக்கு வெளியேதான் கூடுகிறார்கள்... அது செயற்கை , இயந்திரத்தனம். ஆண் பெண் படைப்பின் அர்த்தமே கூடுவதுதான். அதை இயந்திரத்தனமாக செய்யாமல் இயல்பாக மென்மையாக காதலுடன் செய்யுங்கள். காமம் உடலின் தேடலாக இல்லாமல் ஆன்மாவின் தேடலாக இருந்தால் கூடலுக்குப்பின் தியானத்தில் இருந்து எழுவதைப்  போன்ற ஒரு அனுபவம் கிடைக்கும்... நம்புவர்களுக்கு அங்கே கடவுளின் பிரசன்னமும் தெரியக்கூடும்!!

காமம் அழகானது அருமையானது அதில் முழுமை அடைந்தவர்களுக்கு...!!

விரல் நுனியில் கணினியில் தேடும் இருட்டறை சமாச்சாரம் அல்ல... தெருவோர புத்தகக்கடையில் விலை மலிவாய் கிடைப்பதும் அல்ல... பலரது மூளைக்குள் அமர்ந்துக்  கொண்டு பெண்களின் அங்கங்களை அளவெடுத்துக் கொண்டிருக்கும் சைத்தானும் அல்ல...காலங்காலமாய் அப்பாக்களும் அம்மாக்களும் இதற்காகவே கல்யாணம் முடித்ததாய் எண்ணி ஆற்றிய கடமையும் அல்ல... அரசமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத்  தொட்டுப் பார்க்கும் பெண்களின் வரமும் அல்ல ........ 'மனித பிறப்பின் அர்த்தத்தை அணு அணுவாக ரசித்து தானும் இன்புற்று தன்னைச்  சுற்றி இருக்கும் உயிர்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும், வெகு சிலரே முழுதாய் உணர்ந்த ஒரு உன்னதம்' - காமம் !

* * * * * * * * * *

ஆணின் தேவை/அவசரத்தை சரியாகப்  புரிந்து உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ற விதமாய் நயைந்தும் தளர்ந்தும் ஆணின் தீவிரத்தை தாமதம் செய்து பெண்மையை  முழுமையாய் உணர்த்தி தானும் இன்பத்தில் திளைத்து  ஆணையும் உச்சத்திற்கு அழைத்துச்  செல்வது பெண்ணின் கடமை. அது எவ்வாறு என்ற கேள்வி எழுந்தால் காத்திருங்கள் பதிலுக்காக... தொடர்ந்து தொடரை  வாசியுங்கள்...


தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா


Painting & pic - thanks google

புத்தகப் பரிந்துரை :

written by Om swamy




வெள்ளி, நவம்பர் 6

வாழத்தானே வாழ்க்கை ...!

"நேசிக்காமல் இருப்பது என்பது ஒரு  துரதிர்ஷ்டம் ...இன்று நாம் எல்லோரும் இந்த துரதிர்ஷ்டதிற்கு இரையாகிக் கொண்டிருக்கிறோம்" - ஆல்பெர் காம்யு.

தற்செயலாக இதை வாசிக்க நேர்ந்தது... எவ்வளவு உண்மை !!!  கணினி செல்போன் இணையம் இல்லாத காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.  கணினி வேகத்திற்கு ஈடுக்கொடுத்து மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். ஐஸ்க்ரீம் கரைவதற்குள் சாப்பிட்டு விடவேண்டும் என்பதை போன்று வேக வேகமாக  வாழ்கிறோம் , ஆனால் உண்மையாக வாழ்கிறோமா என்றால்  இல்லை என்றுதான் சொல்வேன்.  யாருக்கு போன் செய்தாலும் பிரீயா இருக்கிங்களா பேசலாமா என கேட்டு பேசுவது எனது வழக்கம், ஏன்னா அவங்க இப்ப நான் பிசி, வை போனைனு சொல்றதுக்கு முன்னாடி நாமலா கேட்டுறது நல்லது பாருங்க. :-) இரண்டு நிமிடம் பேசவும் நேரமில்லாத மனிதர்கள் தானே  நாம், என்னையும் சேர்த்துதான். ஆனால் ஏன் இப்படி வாழ்றோம் என்று யோசிக்கவேண்டும்.      






நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் ஒரு ஹாய் ஹலோ சொல்ல கூட இயலாத நிலை நல்லதா கெட்டதா ? இது யதார்த்தம் தான் என சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உறவுகள் நட்புகளிடம் நேரில் பேசுவது குறைந்து செல்போன் இணையத்துடன் பேசிக் கொண்டும் அல்லது தனக்குள் தானே பேசிக் கொண்டு ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்து வாழ்கையை கடினப் படுத்திக் கொள்கிறோம். 

எனது நெருங்கிய தோழிக்கு  (25 வருட நட்பு)           எப்போது போன் செய்தாலும் 'கால் யூ பேக்'  என்ற sms வரும்,  பிறகு  அவளாக மாலை ஐந்து மணிக்கு அழைப்பாள்,  ஒரு கை காரின் ஸ்டியரிங்கிலும், மறுகையில் போன்னுமாக பேசுவாள், வீட்டை எட்டுவதற்குள் எங்களின் பேச்சு முடிந்துவிடும் அல்லது முடித்துக் கொள்வோம்... இதைத் தவிர வேறு நேரம் அவளுக்கு கிடைப்பதில்லை. சமையல், வீட்டு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும் வீட்டிலும் தோழி பிசியாகவே  இருப்பாள்... கணவன் மனைவி இருவரும் சேர்ந்து லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.   பெங்களூரில் சொந்தமாக மாடி வீடு, சென்னையிலும்  வீடு நிலம் என்று இருக்கிறது, ஒரே மகன், வாரத்திற்கு ஒரு வேளை ஒன்றாக அமர்ந்து உணவருந்தவும் இயலாமல் எப்போதும் எதன்  பின்னோ ஓடிக் கொண்டே இருக்கிறாள், நடுநடுவே சலித்தும் கொள்வாள், ஒரு நாளும் ரிலாக்ஸ் பண்ண முடியவில்லை என்று. அவள் வாழும் வாழ்க்கையை பார்த்து எனக்கு மிகுந்த  ஆயாசமாக இருக்கிறது. 

2015 வருடப் பிறப்பன்று வாழ்த்து சொல்ல தோழியை போனில் அழைத்தேன் 'ஊருக்கு போய்ட்டு இருக்கேன்,  அப்புறம் கூப்பிடுறேன்' என்று SMS, நிச்சயமாக 2016 புது வருட வாழ்த்து நான் சொல்வதற்குள் அவளாக கூப்பிட்டு விடுவாள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.  :-) இதில் சுவாரசியம் என்னவென்றால் அவளது நெருங்கிய ஒரே தோழி நான்தான். இந்த லட்சணத்தில் தான் இருக்கும் போல பலரது நட்புகளும் :-))

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்ததிற்குரியவர்கள். அவர்களால் அவர்களை சேர்ந்தவர்களுக்கு  சிறிய அளவிலான சந்தோசத்தை  கூட கொடுக்க இயலாது . பிசி   பிசி  என்று தானும் தொலைந்து அவர்களை நேசிப்பவர்களின் நேசத்தையும்  அலட்சியம் செய்கிறார்கள்.  பரப்பரப்பான வேலைக்கு நடுவிலும் சிறு புன்னகையை கூட காட்டாமல் வாழும் வாழ்க்கை உண்மையில் நரகம். பிசி என்ற முகமூடியை போட்டுக் கொண்டு அன்பானவர்களிடம் தோற்றுப் போகிறோம். பகிரப் படாத அன்பும் கவனிக்கப் படாத நேசமும் யாருக்கும் பிரயோசனம் இன்றி விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும்  ஒரு சிறிய  நலம் விசாரிப்பு சிறு புன்னகை செய்ய கூட இயலவில்லை என்றால் என்ன வாழ்க்கை.  வலிய வலியச் சென்று உறவுக் கொள்வது ஒரு கட்டத்தில் சலிப்பை வெறுப்பை கொடுக்கும், உலகத்தில் இவர் ஒருவர் தானா இருக்கிறார் நாம் பேச பழக, இந்த உலகம் ரொம்ப பெரியது என்று புது புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் தவறில்லை.  சாதாரண நட்புகள் என்றால் பரவாயில்லை... நெருங்கிய உறவாக இருந்தால் என்னாகும் யோசிக்கவேண்டும் அல்லவா?!

இயந்திர உலகில் எல்லோருக்கும் தான் வேலை, பிரச்னை இருக்கிறது அத்தனைக்கும் நடுவிலும் உறவுகள் நட்புகளுடன் தொடர்பில் இருப்பதுதான் உயிர்ப்பான வாழ்க்கை. பிறரை நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது பேரின்பம், இதனை அலட்சியப்படுத்தி வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்?!!  நேசிப்பவர்களை காயப்படுத்தி அதில் சுகம் காணுவதும் ஒரு மனநோய் தான்.

இவ்வாறுதான் நம்மில் பலரும் இருக்கிறோம், பலவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு 'சே எப்போவும் ஒரே டென்சன், பிரீயா இருக்கவே முடியல' என்று... ரிலாக்ஸ் என்பது வேறு எங்கயோவா இருக்கு, ஓய்வுக்கு தேவையான நேரத்தை நாம் தான் ஒதுக்கவேண்டும். அதையும் நம்மை நேசிக்கிறவர்களுடன் செலவிட்டால்  உற்சாகம் இரட்டிப்பாகும்.   

நட்புகள் உறவுகளை நேரில் சந்தித்து பேச இயலாவிட்டாலும் போனில் தொடர்பு கொண்டு பேசலாம் . ஆனால் சமூக வலைதளங்கள் வந்தப் பின் அதற்கும் நேரமில்லாமல்  'அப்புறம் கூப்டுறேன்' என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப், பேஸ்புக்கில் நுழைந்து   'ஹாய் சொல்லுடா கூப்டியே' என்று டைப் பண்ற அளவுக்கு போய்டுச்சு. போனில்   இரண்டு வார்த்தை பேச வழியில்லை ஆனால் பேஸ்புக்கில் அன்பொழுக  பேசுவது    வேடிக்கை.

அப்புறம் இன்னொன்னும் புரிய மாட்டேங்குது, போன் ல பேச நேரம் இல்ல பிசி பிசி சொல்ற ஆட்கள் பேஸ்புக் ஸ்டேடஸ் ஒரு பக்கத்துக்கு டைப் பண்ண எப்டி முடியுது... லைக் கிடைக்குதுன்றதுக்காவா ?! என்னவோ போங்க ...அன்பு நேசம் பாசம் நட்பு எல்லாம் விரல் நுனிக்குள் அடங்கிவிட்டன.  

தம்மை நேசிக்கும் உறவுகளிடம் ஏன் இந்த அலட்சியம். இயந்திர உலகில் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் மிகவும் குறைவு என்றபோது   மிக சிலரிடம் கூட உறவை சரியாக பேணாமல் வாழும் வாழ்க்கையில்  உயிர்ப்பு இருக்குமா என்ன...நிச்சயமாக இல்லை. இளமையில் நமது இந்த அலட்சியம் பெரிதாக  தெரியாது, காலம் செல்ல செல்ல ஒரு வெறுமை  சூழும்  நம்மை பார்த்து புன்னகைக்கவும் ஒருத்தர் இல்லையே எல்லோரும் எங்கே சென்றார்கள் என்று மனசு ஏங்கும். அன்பிற்கு இன்னொரு பக்கமும்  இருக்கிறது அதற்கு பெயர் வெறுப்பு, ஆம் அதுவரை மென்மையாகவும் பரிவாகவும் நம் ஒரு விழி பார்வைக்காக  ஒரு ஐந்து நிமிட பேச்சுக்காக காத்துக் கிடந்த அன்பு வெறுப்பாக மாறி இருக்கும். அன்பை மதிக்காவரிடத்து செலுத்தப் பட்ட அன்பு இப்படி ஆகிவிடுவது இயல்பு.  ஆனால் இது நல்லது அல்ல. நாம் வாழும் சூழல் அன்பு நேசம் பாசம் பிரியம்  நிறைந்ததாக இருக்க வேண்டும் அத்தகைய இடத்தில் தான் இறைவனின் பார்வை இருக்கும்.

அப்படியல்லாமல் எதன் பின்னோ ஓடி நமக்கான வாழ்க்கையை வாழாமல் போவதுடன், காலமும் அப்படி இப்படி நம்மை  அலைகழித்து ஓடச்செய்துவிடுகிறது.  அத்தகைய ஓட்டத்தில் வாழ்வின் சின்ன சின்ன சந்தோசங்களை கவனிக்காமல் வெற்றுப்புலம்பல் எரிச்சல் சலிப்புடன் மரணித்தேப்  போகிறோம்...


அடிக்கடி இல்லையென்றாலும் சந்திக்கும் நேரத்திலாவது  மெல்லிய புன்னகை சில அன்பான வார்த்தைகளை பிறருக்கு கொடுத்துச் செல்வதை வழக்கமாக்கி கொண்டோம் என்றால் இவையே நம்மை வாழும் காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும்...

இனியாவது இப்படியும் கொஞ்சம் வாழ்ந்துப் பார்ப்போமே... ஆம்  'வாழத்தானே வாழ்க்கை' !!!





பிரியங்களுடன்
கௌசல்யா




   





வெள்ளி, மே 1

உலக மகா சுட்டிப் பெண் - " விசாலினி "




2 1/2 வயது குழந்தை பருவத்தில் Tnpsc குரூப் ஒன் தேர்வுக்கான 1000 வினா விடைகளை ஒப்பித்து தொடங்கிய இவளது சுட்டித்தனம் கணினித் துறையில் 5 உலகச் சாதனைகளை செய்தும் இன்னும் திருப்தி அடையவில்லை... அடுத்து என்ன என்ன  என்று தேடி ஓடிக் கொண்டே இருக்கிறாள்... பல உயரங்களை வெகு சுலபமாக தொட்டு முன்னேறிக் கொண்டே செல்கிறாள். இவள் பெற்ற பரிசுப் பொருட்கள் , கேடயங்கள், கோப்பைகள், சான்றிதல்கள், வாழ்த்துரை இதழ்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. பிரபல தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகை, தினசரிகளில் விசாலினியின் பேட்டி எடுத்து மகிழ்ந்தன...நானும் என் பங்கிற்கு 3 வருடத்திற்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தேன். மூன்று வருடங்களாக பல்வேறு கணினி  தேர்வுகளை தொடர்ந்து எழுதி தேர்ச்சிப் பெற்று வரும் இவளது சாதனைகளை என்னால் முழுமையாக எழுதி முடியாது என்பதால் சிறு குறிப்பு மட்டும் இங்கே, தவிரவும் அடுத்த சிகரம் ஒன்றை நாளை(மே 2ஆம் தேதி) தொட இருக்கிறாள் அதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

சாதனைகள் சிறப்புகள்

BTech MTech BE மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கணினி துறைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறாள். இதுவரை மொத்தம் 25 இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செமினார்கள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என நடத்தி இருக்கிறாள். கணினி நிறுவனங்களுக்கும்  சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறாள். இதுவரை 127 மேடைகளில் உரையாற்றி இருக்கிறாள்.

சென்னை மவுண்ட்ரோட்டில் இருக்கும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின்  தலைமை அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி திரு.ஆனந்தகுமார் அவர்களின் அழைப்பின் பெயரில் அங்கு பணிபுரியும் ஐடி துறைசார்ந்த(IT professionals) 17 பேருக்கு Cloud Computing and networking என்பதை பற்றி இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்திருக்கிறாள். (இதை குறித்த முழு விவரங்கள் அவளது இணையதளத்தில் இருக்கிறது)

மேலும் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் Prestigious customer என்று குறிப்பிட்டு இவளது  புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் யாருக்கும் இல்லாத தனி சிறப்பு இது.

இதுவரை 8 சர்வ தேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு (Keynote Address) உரையாற்றி இருக்கிறாள்.   அடுத்ததாக 9வது முறையாக நாளை அதாவது மே 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற இருக்கும் 'கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்' சிறப்புரை ஆற்ற அழைக்கப் பட்டிருக்கிறாள். கணினி துறையில் Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில் காலை 10.30  - 11.30 ஒரு மணி நேரம் உரை ஆற்றுகிறாள். கூகுள் நிறுவனம் இச்சிறுமிக்காக  ஒதுக்கிய ஒருமணிநேர கால அளவு என்பது வெகு சிறப்பு வாய்ந்த ஒன்று.       

மேலும் இந்த உச்சி மாநாட்டில் ஜப்பான் சாகா பல்கலைக்கழக பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (Andrew Meyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழக கணினிதுறைத்தலைவர் Dr. ராகுல்பானர்ஜி ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளிமாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல்முறை என்பது தமிழர்கள் நமக்கெல்லாம் பெருமை.

கணினி கல்வியில் இவ்வளவு சாதனைகள் புரிந்துக் கொண்டிருக்கும் விசாலினி IIPE லட்சுமி ராமன் மெட்ரிக் பள்ளியில் 9 வது வகுப்பில் படிக்கிறாள் என்பதை விட இருக்கிறாள் என்பது சரியாக  இருக்கும் தானே :-)  

நண்பர்கள் விசாலினிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால்,
மெயில் ஐடி - goldengirlvisalini@gmail.com 
மொபைல் எண் +91 94864 60561, +91 98414 77920

விசாலினியின் இணையத்தளம்
http://www.kvisalini.com
 
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்ப்பெண் விசாலினி மேலும் பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 




புதன், மார்ச் 18

வீட்டுத்தோட்டம் ரொம்ப ரொம்ப ஈசிதான் - 5 இயற்கை உரம் தயாரிப்பு

வீட்டுத்தோட்டம் போடுவதே ரசாயன உரத்தில் இருந்து தப்புவதற்கு தான். அதனால் காய்கறி தோட்டத்துக்கு வேதி உரம் எதையும் வாங்கி போட்டுடாதிங்க. உரம், மருந்து , வளர்ச்சி ஊக்கி என அனைத்தையும் இயற்கை முறையில் நாமே தயாரிக்கலாம்.

இயற்கை உரம் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது மாடு!! அடடா சிட்டியில் மாட்டுக்கு எங்க போகனு கேட்கிறீங்களா? மாட்டின் பயன்பாடு  தெரிந்துவிட்டால் எங்கே கிடைக்கும் என்று அந்த இடங்களை தேடிச் சென்று விடுவீர்கள். அவை கிடைக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் அது தொடர்பான முறைகளையும் இயலாதவர்கள் அது தவிர்த்த வேறு முறைகளை கையாளலாம், அதில் ஒன்றுதான் சமையலறை  கழிவுகள்  உரம். இந்த வீட்டுத்தோட்டம் தொடர் 'சுலபமாக' தோட்டம் போடுவதை பற்றியது என்பதால் கையில்/அருகில்  கிடைப்பதை வைத்தே சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வோம். 

Compost bin - Khamba




கிச்சனில் சேரும் காய்கறிக் கழிவுகளை இதில் போடவேண்டும். மூன்று பாகமாக இருக்கும் இதில் முதலில் மேலே உள்ள பாகத்தில் செய்தித்தாளை விரித்து அதன் மீது கழிவுகளை போட்டு வாருங்கள். கழிவுகள் போடப் பட்டதும் மற்றொரு செய்தித்தாளை கழிவுகளின் மேல் விரித்து khamba மூடியை மூடுங்கள். ஒரு பாகம் நிரம்பியதும் அப்படியே தூக்கி கீழ் பாகமாக வைத்துவிட்டு காலியாக இருப்பதை மேலே வைத்து இப்போது இதில் கழிவுகளை சேகரியுங்கள். மிச்ச இரண்டும் நிரம்புவதற்குள் முதலில் போடப்பட்டது உரமாகியிருக்கும்.  பொதுவாக உரமாக மாற  மூன்று  மாதம் ஆகும்.

khamba இல் காய்ந்த இலைச் சருகுகள், காய்கறிக்  கழிவுகள் போன்றவற்றை போடலாம்.  முடிந்தால் வாரம் ஒரு முறை ஒரு சிறிய குச்சியால் கழிவுகளை கிளறிவிடுங்கள். கழிவுகளில் maggot எனப்படும் சிறு புழுக்கள் உருவாகும், இவைகள் தான் கழிவுகளை மக்க வைப்பவை. உரமாகியதும் இவை பெரும்பாலும் மடிந்துவிடும் அல்லது flies ஆக மாறி வெளியேறிவிடும். kampa முறையில் காய்கறிக்கழிவுகளை உரமாக்குவதால் bad smell ஏதும் இல்லை.



Khambaவில் உரம் தயாரிக்க  சில டிப்ஸ்

* மரத்தூளும் தேங்காய் நார் கழிவும்(coco peat)  காய்கறிக்கழிவில் உள்ள  அதிக நீரை எடுத்துக் கொண்டு உரமாவதை துரிதப் படுத்தும். எனவே இவற்றில் எது கிடைத்தாலும் வாங்கி கழிவுகளின் மீது தூவி விடுங்கள்.

* உரமாவதை துரிதப் படுத்த புளித்த தயிர் / பஞ்சகவ்யா/ தண்ணீரில் கரைத்த சாணம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

* maggots அதிகம் இருந்தால் அதன் உற்பத்தியை கட்டுப்படுத்த சிறிதளவு வேப்பந்தூள் அல்லது மிளகாய்த் தூளை தூவலாம்.

* உரம் அதிக ஈரமாக இருந்தால் நிழலான இடத்தில் இரண்டுநாள் உலர்த்தலாம்.

* கழிவுகளை மேல் விளிம்பு வரை போட்டு அடைக்கக் கூடாது, காற்று செல்ல வசதியாக சிறிது இடம் இருக்க வேண்டும்.

* உரத்திற்கு நைட்ரஜன் (சமையலறை கழிவுகள்) கார்பன்(காய்ந்த இலைகள்) இரண்டும் தேவை... இலைகள் கிடைக்கவில்லைஎன்றால் பழைய செய்தித்தாள் (கிழித்து தண்ணீரில் நனைத்தது) உபயோகிக்கலாம்.

* காய்கறி, பழக் கழிவுகளை அப்படியே போடாமல் பெரிய துண்டுகளை சிறிதாக்கி போடுங்கள்.  

மூன்று மாதம் கழித்து உரம் தயாராகியதும் கடைகளில் கிடைக்கும் vegitable basket(துளைகள் உள்ளது) வைத்து  உரத்தை சலித்து எடுத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகிக்கலாம். Khamba கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் மண் பானையை பயன்படுத்துங்கள். அதில் காற்று உள்ளே செல்ல சிறு துளைகளை கவனமாக ஏற்படுத்தவேண்டும். இரண்டு துளைகள் போடமுடிந்தாலும் போதும். (சந்தேகம் இருந்தால் கமெண்டுங்க அல்லது மெயிலுங்க)

செடிகள்  செழிப்பாக  வளர ...

* காலாவதியான மாத்திரைகளை தூள் செய்து போடலாம். உபயோகம் இல்லாத டானிக், சிரப் போன்றவற்றை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்.(பூச்செடிகளுக்கு மட்டும்)


* வீட்டில் சேகரமாகும் டீத்தூள் தவிர அருகில் டீக்கடை இருந்தால் அவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் கொடுத்து அதில் உபயோகித்த டீத்தூளை போடச்சொல்லுங்கள். (கடைக்காரர் நண்பராக இருந்தால் வசதி) :-)

* அதே  மாதிரி பரோட்டா கடையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து வைத்தால் முட்டை ஓடுகளை வாங்கிக்கொள்ளலாம். இதை தூள் செய்து போடலாம்.கால்சியம் சத்து செடிகளுக்கு அவசியம். 

முள்ளங்கி  

* வாழைப்பழத்தோல் சிறந்த உரம். காயவைத்து துண்டுகளாக கட் பண்ணி மிக்ஸியில் போட்டு தூளாக்கி செடிகளுக்கு தூவலாம். முக்கியமாக தக்காளிக்கு அவசியம் போடவேண்டும். செடிகளுக்கு தேவையான  பொட்டாசியம் சத்தை இது கொடுக்கும்.

* அரிசி ஊறவைத்த/கழுவும் நீரையும், சாதம் வடித்த நீரை ஆறவைத்தும்   ஊற்றலாம். 

* கடைகளில் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு என்று கிடைக்கும். அதை வாங்கி அப்படியே நொறுக்கி போடலாம், ஊறவைத்து கரைத்தும்  போடலாம். ஒரு செடிக்கு ஒரு ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒவ்வொரு செடிக்கும் ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட்டை தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். இந்த சால்ட் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மீன்கழிவில் இருந்து வளர்ச்சி ஊக்கி

மீனை  சுத்தப்படுத்தியதும் வீணாகும் மீன் கழிவை சேகரித்து  (கடைகளில் கிடைக்கும்) அதே அளவிற்கு வெல்லம் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு அதன் மூடியால்  டைட்டாக  மூடி விடுங்கள். இரண்டு நாள் கழித்து திறந்து லேசாக கிளறி விடுங்கள். பிறகு மறுபடியும் நன்றாக மூடி அப்படியே வைத்துவிடுங்கள். bad smell இருக்கவே இருக்காது.  இருபது நாட்கள் கழித்து எண்ணெய் போன்று மேலே மிதப்பதை வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். மீன் வளர்ச்சி ஊக்கி ரெடி.  ஒரு லிட்டர் வளர்ச்சி ஊக்கி, பத்து லிட்டர் தண்ணீர் (1:10) சேர்த்து செடிகளுக்கு தெளிக்கவும், செடி அருகில் ஊற்றவும் செய்யலாம். தேவைப் படும்போது தயாரித்து பயன்படுத்துங்கள்.

பிளாஸ்டிக் கவரில் முட்டைகோஸ் 
படித்ததை அனுபவத்தில் அறிந்து, பயன்பெற்று இங்கே பகிர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் வசதி படவில்லை என்றாலும், வீட்டுத்தோட்டம் தொடரில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு சௌகரியப்படுவதை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.

நேரம் இருந்தால் வீட்டுத் தோட்டம் பற்றிய இந்த வீடியோ பாருங்க...
   
http://www.youtube.com/watch?v=FBmLZ0zwu88

நான் Khamba வை கோயம்புத்தூரில் வாங்கினேன். இதை பற்றிய விவரங்கள் தேவையென்றால் கோவை தெலுங்குப் பாளையத்தை சேர்ந்த திரு. ராஜேந்திரன் அவர்களை தொடர்புக் கொள்ளுங்கள் அவரின் மொபைல் எண் : 9944309603.

ஆன்லைனில் வாங்க பிளீஸ் கிளிக் - www.dailydump.org

Happy Gardening ...


பிரியங்களுடன்
கௌசல்யா
mail id : kousalyaraj10@gmail.com

படங்கள் - எங்கள் பால்கனி தோட்டத்தில் எடுத்தவை 



திங்கள், மார்ச் 9

பேசாப் பொருளா ...காமம் !? ஒரு அறிமுகம்

'தாம்பத்தியம்' தொடர் தொடர்பாக வரும் மெயில்களை வாசிக்கும் போதும் கவுன்சிலிங் செய்யும்போதும்  தம்பதிகளின் சில பிரச்சனைகளை அறிந்து   ஆச்சர்யத்தின் எல்லைக்கு சென்றுவிடுகிறேன். இப்படியெல்லாமா  சந்தேகம் வரும்? இதுக்கூடவாத்  தெரியாது? அதுவும் குழந்தைகள் பிறந்து இத்தனை வருடம் கழித்தா? இதுக்காகவா விவாகரத்து?  என எழும் பல அந்தரங்கக் கேள்விகளுக்கு விடையாக தனியாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று தோன்ற.... இதோ எழுதத்தொடங்கியே  விட்டேன்...

A lust that can be spoken of...

தொடருக்குள் போகும்முன் சில வரிகள் புரிதலுக்காக...

பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக  ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.

பாலியல் உறவுகளைப் பற்றி ஆண் பேசலாம், பெண்ணின் அங்கங்களை வர்ணித்து கவிதைகள் எழுதலாம் ஆனால் இதையே ஒரு பெண் செய்தால் உடனே சமூகம் வெகுண்டு எழும் அப்பெண்ணை பழிக்கும் தூஷிக்கும். அவ்வளவு ஏன்  இதை வைத்தே அந்த பெண்ணின் தரத்தை அவர்களாகவே நிர்ணயித்துவிடுவார்கள். இதுதான் காலகாலமாக நடந்து வருகிறது.

பெண் இதையெல்லாம் செய்யக் கூடாது என்ற கட்டமைப்பை ஏற்படுத்தி அதை மீறும் பெண்களை பெண்ணியவாதி , புரட்சிப்பெண் என்று பெயரிட்டு சக பெண்களை விட்டு அவர்களை தள்ளியே வைத்திருக்கிறது இந்த உலகம்.   ஒரு  ஆண்  மருத்துவராக இருந்தாலுமே அவரால் உணர்ந்துக்கொள்ள முடியாத பல விசயங்கள் பெண்ணிடம் உண்டு என்பதை அறியும்போது தான் பெண் என்பவள் போகப்பொருள் அல்ல போற்றப் படவேண்டியவள், என்பதும்  பாலியல் அத்துமீறல்களுக்கு மறைமுகமாக பெண் எவ்வாறு காரணமாகிறாள்  என்பதையும் உலகம் புரிந்துக் கொள்ளும்.  

பாலியலைப்  பற்றி பெண்  எழுதினால் மட்டுமே இது சாத்தியமாகும். காமம், காதல் பற்றி பெண் அதிகம் பேசவேண்டும், அப்போதுதான் இதுவரை மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்கள் புரட்டிப் பார்க்கப்படும். தற்போது இணையத்தில் இயங்கிவரும் அத்தனை பெண்களும் பாலியல் பற்றி எழுதவேண்டும், பேசவேண்டும்! அவ்வாறு பெண் பேச முன்வரும்போது இந்த உலகம் தனது வாயைகே  கொஞ்சம் மூடிக் கொள்ளட்டும். எனவே  இனியாவது அர்த்தமற்ற கேள்விகள் எழாமல்  இருக்கட்டும் !!!

பேசாப் பொருளா காமம்?   

அற்புதமான ஒரு விஷயம் எவ்வாறு  அசிங்கமான தவறான அருவருப்பான குற்றமாக தவிர்க்கக்கூடிய - மறைக்கக் கூடிய  ஒன்றாக மாறியது அல்லது மாற்றப்பட்டது... யாரால் ஏன் எப்போது என்ற கேள்விகள் எனக்குள் எழும் ...அதற்கான விடையை தேடும் ஒரு தேடல் இந்த தொடர் என்று சொல்வதை விட காமத்தைப்  பற்றிய அரைகுறை கணிப்புகளினால் சமூகத்தில் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை அலசும் ஒரு தொடர் என்று வைத்துக்கொள்வோம்.



சித்தர்கள் யோகிகள் புனிதர்கள் முனிவர்கள் பெரியோர்கள் மூத்தோர்கள் ..... என அத்தனை ஆண்களும்  பெண் என்றால் பேய், பெண்ணுறுப்பு என்பது எமன்,  அருவருப்பு அசிங்கம் பாவத்தின் பிறப்பிடம்... அப்டியாக்கும்  இப்டியாக்கும் என்று இஷ்டத்திற்கு எக்கச்சக்கமாக எழுதி/பாடி வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.  அவ்வாறு எழுதியதன் ஒரு காரணம் என்னவென்றால் காமத்தின் மீதான பயம், எங்கே தான் இதிலேயே மூழ்கி விடுவோமோ என்ற பயம்.  காமத்தில் அவர்களால் முழுமைப்  பெற முடியவில்லை, அனுபவித்தால் தானே முழுமை பெற ... காமத்தை முழுமையாக  உணராமலேயே தூஷிப்பது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை தொடருகிறது. அதில் முழுமை பெற்றவர்  எவரும் காமத்தை நிந்திப்பதில்லை... அமைதியாகவே  இருப்பார்கள். அரைகுறைகள் தான் ஆட்டம் போடும்.  முன்பு பெண்ணை நேரடியாக நிந்தித்து சமாதானம் செய்துக் கொண்டவர்கள் இன்று கலாசாரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.    

 எதிர் பாலினத்திடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது இறைவன் (ஆன்மிகம்) என்றும் இயற்கை (நாத்தீகம்) என்றும் ஹார்மோன் (விஞ்ஞானம்) என்றும்  ஒவ்வொரு கூட்டமும்  ஒன்றை காரணமாக சொன்னாலும் அத்தனை பேரும் ஒன்றாக சொல்வது என்னனா 'காமம் தவறு'. தவறு என்றால் இறைவன் இயற்கை விஞ்ஞானம் அத்தனையும் தவறுதானே. ஈர்ப்பு ஏற்பட்டால்தான் உலகில் ஜனனம் நடைபெறும். உலகின் இயக்கத்திற்கு முக்கியக்  காரணமான ஒன்றிற்குத்தான் காமம் என்று பெயரிட்டு அதை தவறு என்றும் பேசாப்  பொருள் என்றும் மறைத்து வைத்திருக்கிறோம். மனிதன் என்றால் அவனுக்குள் காம உணர்வு எழவேண்டும், அந்த உணர்வை வெளிப்படுத்தும் முறையில்தான் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றவர்கள் தான் பூஜை அறைக்கதவை அடைத்துவிட்டும் கடவுள் படத்திற்குத்  திரையிட்டு மறைத்தும் உடலுறவு கொள்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்! வானத்தை  கூரையாகக்  கொண்டவர்களும் உடலுறவுக் கொண்டு இவ்வுலகில் வாழத்தான்  செய்கிறார்கள். அங்கே எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் கடைபிடிக்கப் படவில்லை.  உறவு கொண்ட அன்று கோவிலுக்கு போனால் தீட்டு,தோஷம்  என்று கடவுளுக்கு சொந்தக்காரர்களாக காட்டிக் கொள்பவர்கள் இந்த கணினி யுகத்திலும் பஜனைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  காம எண்ணங்களை  மனதில் வைத்துக்கொண்டு பூஜை செய்வதை விட அதை வெளியேற்றிவிட்டு பூஜை செய்வது பெட்டெர் என புரிந்து கொண்டவன் கடவுளின் கருவறையை பள்ளியறையாக்கினான் போலும். மனதில் குப்பையும் ஆடையில் தூய்மையுமாய் அத்தனை அக்கிரமங்களையும் ஆண்டவனின் பெயரால் செய்துக்கொண்டு. சின்னஞ்சிறுமிகளிடம் தங்களது வேட்கையை தணித்துக் கொள்ளும் மனித தன்மையற்ற ஈனனுக்கு  பெயர் பாதிரியார்.

புலன்களை அடக்குவது நல்லது என அறிந்ததாலேயே விரதம் என்ற ஒன்றை எல்லா மதத்தினரும்  ஏற்படுத்தினார்கள். ஆனால் நம்மவர்களோ எப்போதடா விரத காலம் முடியும், விட்டக்குறை தொட்டக்குறைகளை மறுபடியும்  புடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே பாதி நேரத்தைச்  செலவிடுகிறார்கள். 

பாலியல் உறவை தவிர்த்தால் தான் புனிதமாக முடியும் என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. முற்றும் துறந்த சாமியார் என்று அழைப்பது சரியல்ல உண்மையில் தங்களின்  ஆசைக்கு முற்றும்(The End) போடாதவர்களே இன்றைய சாமியார்கள். ஆரம்பத்தில் கடவுளே சரணம் என்றுதான் வருகிறார்கள்...போகப்  போக தங்களின் புலன்களிடம் தோற்றுப் போய் விடுகிறார்கள், அப்புறமென்ன அச்சு பிச்சுனு ஏடாகூடமாக நடந்து நம் போன்றோரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். புலன் அடக்கம் என்பது எவ்வாறு ஏற்படும், புலன்களை திருப்திப் படுத்திய பின்தானே. எவ்வாறு திருப்திப் படுத்துவது? இதற்குத்தான் ஈர்ப்பு என்ற ஒன்று  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  

அவரவருக்கு ஒரு நியாயங்களை கட்டுகளை வைத்து பேசுகிறார்களேத்  தவிர பொதுவான ஒரு நியதி எல்லோருக்கும் ஏற்றதான ஒன்றை யாரும் சொல்வதில்லை , காமத்தையும் இவ்வாறேதான் பாவிக்கிறார்கள். இறைவனுக்கு காமம் ஆகாதென்றால் ஏன் கோவில் பிரகாரங்களில் கோபுரங்களில் உடலுறவு காட்சிகள். இல்லை இது வேறு காரணத்திற்காக வைக்கப்பட்டது என்று ஆயிரம் காரணங்களைக்  கூறினாலும் ஒரே காரணம் இறைவனின் விருப்பம் ஆண் பெண் ஈர்ப்பு. உண்ணக்கூடாத கனியை ஏன் உண்டாக்குவானேன், பிறகு  அதை உண்ணாதே என்று ஏன் சொல்வானேன், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கிறது தானே!

ஆன்மீகத்திற்கு எதிரானதா  காமம்.

துறவிகளுக்கும்  புனிதர்களுக்கும் காம உணர்வு எழும், அடக்கிப் பழகினார்கள் அதனால் சாதாரண மக்களிடம் இருந்து தனித்துத்  தெரிந்தார்கள். ஆசைக் கொள்ளாதே என்று உபதேசித்தாலும் அவருக்குள்ளும் ஒரு ஆசை இருக்கத்தானேச்  செய்தது, உலக மக்களை உய்விக்க வேண்டுமென்ற ஆசை சொல்லப் போனால் இது சாதாரண ஆசையல்ல பேராசை ! இவ்வாறுதான் காமம் தவிர் தவிர் என்று சொல்லும் போதே காமத்தை எண்ணியவர்களாயினர். காமத்தை உணராமல் மனிதன் வாழவே முடியாது இயற்கையாக எழும் உணர்வை சாதாரணமாக அடக்கமுடியாது அதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். புத்தனும் அனுபவித்து அறிந்தப் பின்பே அடக்கினான். வயிற்றில் பசி இறுதி மூச்சு வரை இருப்பதைப்  போல காமப் பசியும் இருக்கும், அப்படியெல்லாம் இல்லை நான் உத்தமனாக்கும் என்று சாதிக்கிறவர்கள் ஒன்று பொய் சொல்ல வேண்டும் அல்லது உடல் மனதளவில் ஆரோக்கியக்  குறைபாடுகள்  கொண்டவராக இருக்கவேண்டும் 

ஒன்றை முழுமையாக உணராமல் அனுபவிக்காமல் அதை ஒரேயடியாக  மறுத்தோ ஏற்றோ  பேச இயலாது. பேசினாலும் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கும், அத்தகைய அரைகுறைகள் நிரம்பியது தான் நமது சமூகம். காமம் என்றாலே மூன்றாந்தர புத்தகங்களில் இருப்பவை மட்டும் தான் என அடித்து பேசுவார்கள் மெத்த படித்த மேதாவிகள்.  காமம் சரியாகப் புரிந்துக் கொள்ளப் படாததுதான்,  குடும்பத்தில் அதிகரித்து வரும்  விவாகரத்துகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்திற்கும் காரணம்.

பின் குறிப்பு:-

குடும்பம் முதல் எல்லாவற்றிலும் நடைபெறும் 'குற்றங்களுக்கு' பின்னால் ஒரு காரணமாக காமம் இருக்கிறது என்பதை நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒன்றை பற்றி என் அறிவுக்கு எட்டிய அளவிற்கு எழுதுகிறேன்...சொற்குற்றம் பொருள் குற்றம் இருந்தால் சொல்லுங்கள், சரி படுத்தித்  தெளிவுப் படுத்திகிறேன். அதற்காக விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்காதீர்கள் என அன்பாக வேண்டுகிறேன்.  :-)

கண்டது கேட்டது உணர்ந்தது என எல்லா அனுபவங்களும் சேர்ந்த இந்த தொடரை  மொத்தமாக எழுதி வைத்து வெளியிடலாம் என்ற கான்செப்ட் ஒத்துவரவில்லை... (ஏற்கனவே ஏகப்பட்டது டிராப்ட்ல ஒரு பாராவுடன்  நிற்கிறது) :-) எனவே எழுதி உடனுக்கு உடன் வெளியிடுகிறேன், continunity விட்டுப் போச்சே  என திட்டாதீர்கள். இது கதையல்ல கட்டுரை தானே சோ அட்ஜெஸ்ட்டுங்க  பிளீஸ் ...


தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா



Paintings - Thanks Google 

புதன், மார்ச் 4

பிளஸ் டூ பொதுத் தேர்வு - ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ??!!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை சுற்றிலும் இருக்கிறவங்க  ஏன் இப்படி கொலைவெறி புடிச்சு அலையுறாங்கனு நிஜமாவே எனக்கு புரியல. எந்த பேப்பரை பிரிச்சாலும் டிசைன் டிசைனா அறிவுரைகள்  ஆலோசனைகள் !  வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல், இந்தியா பௌலிங்க்னு வச்சுகோங்க, ஒரு விக்கெட் விழுது அந்த நேரம் நம்மாளுங்க வலது கைல ரிமோட் இருந்துச்சுனு வைங்க , மேட்ச் முடியுற வரை கை வலிச்சாலும் ரிமோட்ட கையை மாத்தாம கீழ வைக்காம இருக்குறது... கூப்டாலும் திரும்பாம சேர்ல கம் போட்டு ஒட்டுன மாதிரி அசையாம இருக்குறது......அப்டி இப்டி ஏகப்பட்ட  short time சென்டிமென்ட்ஸ் இருக்கும்.  அதுக்கு சிறிதும் குறைந்ததில்லை.... இன்றைய மாணவர்களை எல்லோரும்  படுத்தும் பாடு. 




தேர்வை தைரியமாக எதிர்க் கொள்ள வழிமுறைகள் என்று  ஒரு பெரிய லிஸ்ட்... இந்த வழிமுறைகளை பின்பற்றினால் டன் கணக்கில் தைரியம் கிடைச்சு மலையை பொறட்டி தூக்கி அடுத்தவன் தலைல  போட்டுடலாம்னா பார்த்துக் கோங்க என்பதை போன்ற ஓவர் பில்டப்க்கள் !! 

அப்புறம் பெற்றோர்களே இது உங்களுக்கு நல்லா கவனியுங்க -  இருக்குற அத்தனை காய்கறியையும் முக்கியமா பாவக்காய விட்டுடக்கூடாது அப்டியே அரைச்சு உப்பு மிளகு போட்டு பசங்க காலைல எழுந்ததும் கொடுங்க... குடிச்சதும் மூளை அப்டியே ஜிவ்னு உஷாராகி போன ஜென்மத்து ஞாபகத்தையே கொண்டு வரும் அப்புறமென்ன சும்மா ஒரு டைம் வாசிச்சு விட்டா போதும் மூளை அப்படியே கபால்ன்னு புடிச்சுக்கும்.  அப்புறம் காரத்தை சுத்தமா குறைங்க... எண்ணெய் 2 ஸ்பூனுக்கு மேல நோ நோ தான், ஆவில வேக வச்சதுனா பெட்டர்  -  தேர்வு நேர சமையல் குறிப்புகள் என்று  ஒரு லிஸ்ட். 

மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது எப்படி  என்ற மனநல மருத்துவரின் அறிவுரைகள் ஆலோசனைகள் வேறு. யோகா தியானம் எதையும் விட்டுடக் கூடாது...  இப்படி பொதுத்தேர்வை மையப் படுத்தி பக்கம்பக்கமாக எழுதி இருக்கிறார்கள்... அப்பப்பா தலை உடம்பு எல்லாம் சுத்தறது!  ஏற்கனவே பெற்றோர்கள் ஒரு வருஷமா பிபி மாத்திரையும் கையுமா இருக்காங்க, அது போதாது என்று இந்த ஊடகங்கள் வேறு பீதியை கிளப்பி பெற்றோர்களை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்க அவங்களும் அதை அப்படியே தங்களின் குழந்தைகளின் மீது காட்ட பிள்ளைகளின் நிலையோ மனநோய் பீடித்த நிலை. 

இதெல்லாம் விட ஒரு பெரிய கொடுமை என்னனா மாணவ மாணவிகளை மொத்தமா கோவில்ல  உக்கார வச்சு, லிட்டர் கணக்குல நெய்யை ஹோம குண்டத்துல கொட்டி யாகம் வளர்க்குறாங்க... இந்து பேப்பரில் வந்த  போட்டோவை பார்த்தால் மாணவிகளின் கண்களில் பக்தியை விட பயம்தான் தெரிகிறது. மிரண்டு போய் இருக்கிறார்கள். அப்புறம் ஒரு கூட்டம் மாணவ மாணவர்களை நிக்கவச்சு கண்ணை மூட சொல்லி பரிசுத்த ஆவியை நேரா அவங்க மேல இறக்குறாங்க ... இன்னொரு பக்கம் சர்வ மத பிரார்த்தனை என்று ஊர் ஊருக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை போல நடந்துக் கொண்டிருக்கிறது.  

இப்படி சுத்தி சுத்தி ஆளாளுக்கு மாணவர்களுக்கு பயத்தை, பதட்டத்தை வரவழைச்சுட்டு  கடைசியா அசால்ட்டா கொடுப்பாங்க பாருங்க ஒரு லெக்சர், பரிட்சையில் தோல்வி அடைந்தாலும் தற்கொலை செய்துக் கொள்ளாதீர்கள்...  படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை இல்லை என்று அப்டியே ஒரு பல்டி! இவ்வளவு நாள் நீங்களாம் எங்கடா இருந்திங்க, தேர்வுக்கு முன்னாடியே ஊர் உலகத்தை கூப்ட்டு மேடை போட்டு இதை சொல்லவேண்டியதுதானே . அப்பலாம் விட்டுட்டு ஒரு உயிர் போனதும் உண்மையை இப்டி கொட்டுறிங்களே என்று கத்த தோணும். சரி இப்போவாவது தெளிஞ்சுதேனு சந்தோசப்பட முடியாது... மறுபடி அடுத்த வருஷம் பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க......

இந்த ஆர்பாட்டங்களை எல்லாம் பாக்கறப்ப எனக்கு நாலு தடவை விஷம் குடிச்சு ஆறு தடவை தூக்குல தொங்கி பத்து தடவை ரயில முன்னாடி பாய்ஞ்சுனு  மாத்தி மாத்தி தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு. ஏ சமூகமே ஏ பள்ளிக்கூடமே ஏ அரசே ஏ அவனே ஏ இவனே என் இந்த குழந்தைகளை இவ்ளோ கொடுமைப்படுத்துரிங்க. பாவம் விட்டுடுங்க இன்றைய மாணவர்களை !!! பிளஸ் 1 பாடமே நடத்தாமல் பிளஸ் 2 பாடத்தை இரண்டு வருடமாக படிக்க வைத்து எப்போது பொதுத் தேர்வு வரும், முடித்துத் தொலைக்க என அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ...

ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியா வேலை பாக்குற என் தோழி தனது பிளஸ் 2 மகளின் தேர்வை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்னாடியே லீவ் போட்டு மகளின் அருகில் அமர்ந்து படி  படி என்றபடி  இருக்கிறாள். மாற்றாந்தாய் கொடுமைனு  சொல்வாங்களே அதை இப்ப  என் தோழியின்  வீட்டில்  பார்க்கலாம்.

பள்ளிக்கூடமும், வீடு, சமூகமும் கொடுக்கும் மன அழுத்தங்களால் ஒவ்வொரு மாணவனும் ஒரு மனநோயாளிப் போலவே காட்சியளிக்கிறார்கள். மாணவிகள் ஓரளவு பரவாயில்லை, மௌனமாக சமாளித்து விடுகிறார்கள் ஆனால் மாணவர்கள் நிலைதான் மிக பரிதாபம்.  வீட்டில் இருந்து மூச்சுத்திணறி வெளியே வந்தால் தெருவில் போற வர்றவங்க எல்லாம் அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சுடுறாங்க.... மூணு பேர் சேர்ந்து நின்றாலே படிக்குற பசங்களுக்கு ரோட்ல என்ன வேலை என விரட்டப் படுகிறார்கள்...  வீடு பள்ளி சமூகம் எல்லாம் துரத்த வேறு எங்கே செல்வார்கள் ... யோசிங்க !?

நேத்து பேப்பரில் பார்த்தேன். பொதுத்தேர்வு நடக்குற பள்ளிக் கூடங்களில் நடமாடும் மருத்துவக் குழு ஒன்று சகல ஏற்பாடுகளுடன் தயாராக நிற்குமாம். இந்த காட்சியை பார்த்துட்டு உள்ள போற மாணவி வினாத்தாளை கையில் வாங்கியதும் மயங்கி விழாமல் இருந்தால் ஆச்சர்யம் !! 

பெற்றோர்களே !

எல்லாம் என் குழந்தைகளின் நல்லதுக்கு தானே என்று உங்களின் பைத்தியக்கார செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ளாதீர்கள்... இந்த ஒரு வருடத்தில் அவர்கள் தொலைத்த குழந்தைத்தனம் சந்தோசம் நிம்மதியை உங்களால் திருப்பிக் கொடுக்க முடியுமா? கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்திற்காக நிகழ்கால ஜடங்களாக மாற்றிவிடாதீர்கள். 

இதோ நாளை தேர்வு... இப்போதும் இத படிச்சியா அத நோட் பண்ணிக்கோ என்று ஆளாளுக்கு படுத்தி எடுக்காதீர்கள் பிளீஸ்... இத்தனை நாளா அவங்களை வளைச்சு வளைச்சு  கண்காணிச்சுட்டு இருந்தது போதும்...  இனிமேலாவது  சுதந்திரமா  விடுங்க ... இறுக்கம் தவிர்த்து  பிரீயா மூச்சு விடட்டும்... அப்போதுதான் படித்தவரை  சரியாக எழுதமுடியும்... தேர்வை விட நமக்கு நம் குழந்தைகள் முக்கியம் மறந்துவிடாதீர்கள் !!!   

நாளைக்கு பிளஸ் 2 தேர்வை எழுதப் போகும் மாணவர்களுக்கு நாம் சொல்லக் கூடியது ஒன்றே ஒன்றுதான்... 

'படிச்சிருக்கிறோம் எக்ஸாம் எழுதப் போறோம்' என்ற மனநிலையோடு  மட்டும் சந்தோசமாக தேர்வை  எதிர்க் கொள்ளுங்கள் ... என் அன்பு வாழ்த்துக்கள் !!!