வியாழன், நவம்பர் 3

இந்த பெண்களே இப்படித்தான்...!!!



பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு.  பெரும்பாலானப் பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துக்கொள்ளப் படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.

பெண் ஒரு ஆணை புரிந்துக் கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லம்மா புரிந்துக்கொண்ட அளவு அவர் புரிந்துக்கொண்டாரா? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்துக் கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்துக் கொள்ள இயலாது பெண் மனதை. 

தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றேத் தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைப்போட்டு விடுவாள். தான் என்ன புரிந்துக் கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.  

ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள் 

அதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ   அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துக்கொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணைப் பார்த்து அங்கே பெண்மை நகைக்கவேச் செய்யும்...!

* உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்தப்பொய் என்று. 

* சுயத்தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படிப் பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி  வைத்துவிடுவாள். 

* அதே நேரம் அதிகமாக தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்துப் பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமாக இருக்காது...!

மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?

பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.  இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம். 

=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்துச் சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்ப்பதற்கு இது உதவும். 

=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபப்படுபவராக இருந்தால் அப்படிப் பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்துத் தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தைத் தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.

=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்துப் போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள். 

=> இத்தகைய மறைமுகப் பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துக் கொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் சுத்தமாக இல்லை...! தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுகப் பேச்சை புரிந்துக்கொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்துப் போய்விடுகிறாள்...!!
  
இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும் 

ஆண்களைப் பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள்.

=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தைக் கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில்  பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை  ஏற்படுத்திவிடுகிறது. 

=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாகப் போய் சேரும். 

=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது. 

சூப்பர் பவர் 

*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள்...!  கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் !! 

* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டிச் சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பிக் கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள். 

* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சரணாகதி அடைந்துவிடுவார்கள்...!!

* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை  பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...! மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள். 

* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்துக் கொள்ள முடியாது.  

* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட்  பண்ணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.) 

சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !

* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!

* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானப்படுத்து என்று அர்த்தம்.

* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.

* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் !

* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! :)

* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)

இப்படி பெண்ணின் பேச்சிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்...! :)) எதற்கும் கொஞ்சம் பார்த்துப் பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!





படங்கள்- நன்றி கூகுள் 

புதன், நவம்பர் 2

யாருக்கு அறிவுரை... ?!!

Child rearing
அறிவுரை குழந்தைக்கா நமக்கா ?



மாறி வரும் இன்றையச்  சூழலுக்கு ஏற்றபடி நேற்றைய குழந்தைகளான இன்றைய பெற்றோர்களுக்கு தான் அறிவுறுத்த வேண்டியது  இருக்கிறது.
குழந்தைகள் மிகுந்த புத்திசாலிகள், கணினி யுகத்தின் வேகத்திற்கு  ஏற்ப  சிந்திக்கக்  கூடிய  ஆற்றல்  மிக்கவர்கள் . ஆனால்  அவர்களுக்கு  வழிகாட்டுகிறோம்  என்று  பெற்றோர்கள் படுத்தும் பாடு இருக்கே அப்பப்பா !! பாவம் குழந்தைகள் !! அதிக பாடச்சுமை, பெற்றோர்களின் அதிக எதிர்பார்ப்புகள், போட்டி உலகத்தில் தங்களை முன்னிறுத்த எடுக்கும் முயற்சிகள் அத்தனையையும் சமாளித்து வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் பெற்றோர்கள் அவர்களுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஆனால் உண்மையில் பல வீடுகளில் என்ன நடக்கிறது......?!!

கொஞ்சம் யோசியுங்களேன் 

குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரங்கள் மிகக் குறைந்துவிட்டது. பொருளாதாரத் தேவைக்காகவும், வாழ்க்கை வசதியை பெருக்கவும் நிமிட முள்ளை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களே ஒரு நிமிடம் நிதானியுங்கள்,

உங்களின் இந்த ஓட்டம் யாருக்காக ? எதற்காக ? 

வெகு சுலபமாகச்  சொல்வீர்கள் என் பிள்ளைகளுக்காக என்று . ஆனால் இது வெறும் சமாளிப்பு !!

முழுக்க முழுக்க உங்களின் சந்தோசத்துக்காக, பிறர் முன் கௌரவமாக வாழ வேண்டும் என்ற அந்த ஆசைக்காக ! குழந்தைகளின் வசதிக்காக கார்  வாங்கினேன், வீடு கட்டினேன், இதைச்  செய்தேன், அதைச்  செய்தேன் என்று இனியும் சொல்லாதிங்க. எந்த குழந்தையும் எனக்கு வீடு கட்டி வையுங்கள், பேங்கில் பணம் போட்டு வையுங்கள் என்று கேட்டதா ? (சின்ன குழந்தைக்கு என்ன தெரியும் என்று அறிவு பூர்வமா பதில் சொல்லக்  கூடாது !) வீடு,  பேங்க் பேலன்ஸ் முக்கியம் தான். ஆனால் அதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது நல்லது அல்ல. கண்ணுக்கு தெரியாத எதிர்காலம் என்ற ஒன்றுக்காக ஓடி ஓடி சம்பாதித்து பொருள் சேர்க்கும் நீங்கள், கண்முன் இருக்கும் நிகழ்காலத்தில் என்ன செய்கிறீர்கள்...??!

முதலில் உங்கள் குழந்தையின்  இன்றையத்  தேவை என்ன என அறிந்து அதை முதலில் நிறைவேற்றுங்கள். குழந்தையை அருகில் அழைத்து மெதுவாக பொறுமையாகக்  கேட்டுப்  பாருங்கள் ' உனக்கு என்னமா வேண்டும் என்று ' குழந்தை சொல்லும் 'என்கூட விளையாடணும்', 'என்னை வெளியே கூட்டி போங்க' !! வீட்டிற்குள் நுழையும் அப்பாவை பார்த்ததும் ஓடி வரும் குழந்தை அப்பா 'இன்னைக்கு கிளாஸ்ல ஹரிணி இல்ல அவ.....'என்று எதையோச்  சொல்ல ஆரம்பிக்கும் போதே 'அப்பா டியர்டா இருக்கேன்,தொந்தரவு பண்ணாத ' என்று வெறுப்பாகச்  சொல்லாமல் ஒரு இரண்டு நிமிடம் காது கொடுத்துக்  கேளுங்கள் அல்லது வெயிட் பண்ணு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மறுபடி வந்து கட்டாயம் என்னவென்றுக்  கேளுங்கள். குழந்தையும் மிகுந்த ஆர்வமாகிச்  சொல்ல தொடங்கும். 

தன் பேச்சை பெற்றோர்கள் விரும்பிக்  கேட்கிறார்கள் என்ற எண்ணம் அக்குழந்தையின் மனதில் ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். தவிரவும், பள்ளியில் குழந்தையின் நடவடிக்கை, ஆசிரியர்களின் அணுகுமுறைகள்  எப்படி இருக்கிறது, ஏதும் பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  முதலில் உங்கள் குழந்தையின் சின்ன சின்ன தேவையை நிறைவேற்றுங்கள். அப்புறம் பார்க்கலாம் வீடும் காரும்...! 

நாம் இருவர் நமக்கு ஒருவர் !

இன்று பல வீடுகளில் ஒரு குழந்தை தான், காரணம் கேட்டால் 'இத ஒன்னு வளர்த்தாப்  போதாதா இருக்கிற விலைவாசியில' என்று பதில் வரும். ஆனால் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் நாலு, ஐந்து குழந்தைகளைப்  பெற்றார்கள், படிக்க வைத்தார்கள், திருமணம் முடித்து கொடுத்தார்கள் !! அன்றைய விலைவாசிக்குத்  தக்கதாகத்தான் அப்போதைய அப்பாக்களின் சம்பளமும் இருந்தது. பின் அவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று ? காரணம் அவர்களிடம் தேவைக்கு மீறிய ஆசைகள், ஆடம்பரம், போட்டி மனப்பான்மை இல்லை. முக்கியமாக வாழ்க்கை வசதியைப் பெருக்க அவசரம் காட்டவில்லை . ஒவ்வொரு செயலையும் நிதானித்துத் தீர்மானித்தார்கள். இப்போது கணினிகாலம் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டிருக்கிறோம். 

தவறில்லை ஆனால் இந்த ஓட்டத்தை சற்று நிறுத்தி குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். அந்த நேரங்கள் வானவில் நிமிடங்கள் ரசிக்க/பார்க்க  தவறிவிட்டோம் என்றால் க்ஷண நேரத்தில் மறைந்து விடும்.

நாம்  மாறுவோம்

*  தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, மாமா, அத்தை போன்ற உறவுகளின் பெயர்கள் மறந்து/மறைந்து வருகிற காலம் இது. வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற நிலையில் அடுத்த தலைமுறையினருக்கு இந்த உறவுகள் கூட இல்லாமல் போகலாம் !! அதனால் விடுமுறை நாட்களில் பார்க், பீச் , சினிமா என்று போவதை விட உறவினர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லலாம். அவர்களை நம் வீட்டிற்கு வரவழைக்கலாம். சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் நம் குழந்தைகளுக்காக அதை மறந்து உறவுகளின் உன்னதத்தை உணர்த்தலாம். நம்மை பார்த்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டும்.

*  'தொலைகாட்சிப்  பார்க்காதே' என்று சொல்வதற்கு பின்னால் சீரியல் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. பார்க்க அனுமதியுங்கள். டிஸ்கவரி, ஜியாக்கிரபி போன்ற சேனல்கள் பார்க்கட்டும். கார்ட்டூன்(சில தவிர்த்து) பார்ப்பதால் என்ன பாதிப்பு வந்துவிட போகிறது...? அதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பார்க்க செய்யுங்கள். இயன்றால் அவர்களுடன் அவற்றை சிறிது நேரம் நீங்களும் பாருங்கள் இவ்வாறு செய்வதின் மூலம் நமது மன அழுத்தம் குறைந்து குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விடுவோம். அவர்களும் ரிலாக்சாக பீல் பண்ணுவார்கள்.

* குழந்தைகளுக்கான நீதிநெறி கதை புத்தகங்களை வாங்கிக்கொடுத்து வாசிக்க செய்யலாம் . 

*  கல்வி தொடர்பான டிவிடிக்களை போட்டு பார்த்தால் குழந்தைகள் விரைவாக அந்த பாடங்களை கிரகித்து கொள்வார்கள் என்று நாம் எண்ணுவோம், ஆனால் இப்படி திரைகளை பார்த்து தெரிந்து கொள்வதைவிட மற்றவர்களுடன் பேசி பழகும் குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது, விரைவாக எதையும் கற்றுக் கொள்கிறார்கள்  என்று ஆய்வு சொல்கிறது. அதனால் அக்கம் பக்கம் குழந்தைகளுடன் ஒரு ஆரோக்கியமான நட்பை ஏற்படுத்தி கொடுங்கள். நன்கு விளையாடட்டும், பேசி பழகட்டும்.

*  உடலுக்கு பயிற்சி தரக்கூடிய ஷட்டில் காக் , ரிங் பால், ஸ்கிப்பிங், த்ரோ பால்  போன்ற விளையாட்டுகளை அவர்களுடன் இணைந்து விளையாடுங்கள், அவர்களையும்  விளையாட உற்சாகபடுத்துங்கள்.

*  இப்போதுள்ள குழந்தைகளின் முக்கிய பிரச்சனை ஞாபக மறதி, இதற்கு ஒரு எளிய வழியாக பகல் நேர தூக்கத்தைச்  சொல்கிறார்கள் வல்லுனர்கள். தூங்கி எழுந்தபின் எதையும் கற்றுகொண்டால் அது எளிதாக மூளையில் பதியும். விடுமுறை நாட்களில் முடிந்த வரை பகலில் சிறிது நேரம் தூங்க வைத்து பழக்குங்கள். 

*  சில அம்மாக்கள் தங்கள்  குழந்தைகளைக்  காப்பாற்றுவதாக எண்ணி குழந்தைகளின் சில தவறுகளை கணவரிடம் மறைப்பார்கள். இது தவறான வளர்ப்பு முறை. அவ்வாறு செய்யும் போது அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க, அம்மாவை எப்படியும் சமாளித்து விடலாம் என்று துணிச்சலாக தவறுகளைச்  செய்ய தொடங்குவார்கள்.  

*  சில வீடுகளில் கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் தங்கள் குழந்தைகளுக்குப்  பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். இதுவும் சரியன்று. எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்தே, இருவரின் விருப்பத்தின் பெயரிலேயே குழந்தைகளுக்கான பொருட்கள் வாங்கப்பட வேண்டும். 

*  சிலர் கண்டிப்பதில் ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள், அதாவது குழந்தை ஒரு தவறை செய்து விட்டால் ஒருவர்(அப்பா) கண்டிக்க வேண்டும் என்றும் மற்றொருவர்(அம்மா)  சமாதானம் படுத்தணும் என்றும்...! ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது...அப்பாவிற்கு தவறாகப்  படுவது அம்மாவிற்கு சாதாரணமாகப்   படுகிறதே என்று குழந்தை கொஞ்சம் குழம்பி யோசிக்க ஆரம்பித்துவிடும். தவறு என்றால் இருவருக்கும் தவறுதான். இருவரும் கண்டிக்க வேண்டும். 

*  பொதுவாக ஒரு குழந்தையிடம் பலரும் சகஜமாக கேட்கும் கேள்வி உனக்கு அம்மா பிடிக்குமா ? அப்பா பிடிக்குமா ? உண்மையில் இந்த கேள்வியே அபத்தம். அம்மா, அப்பா இருவரும் வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே...இருவருக்கும் சம அளவில் மரியாதையும், அன்பும் கொடுக்கப்பட வேண்டும். இதை முதலில் குழந்தைக்குப்  புரிய வைக்க வேண்டும். 

குழந்தைகளை குழந்தையாக எண்ணி நடந்து கொண்டாலே போதும். வயதிற்கு மீறிய எதிர்பார்ப்பை அவர்கள் மீது திணிக்காமல் இருங்கள். அவர்களுக்கு வழியை மட்டும் காட்டுங்கள், கூடவேச்  செல்ல வேண்டும் என்பது தேவை இல்லை. 

Child rearing



எனது இக்கட்டுரை கழுகில் வெளிவந்தது.
படங்கள் - நன்றி கூகுள் 

செவ்வாய், நவம்பர் 1

மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?!




தமிழ் ஓரளவு எழுத தெரிஞ்சா போதும்னு எழுதவந்த பலரில் நானும் ஒருத்தி. இலக்கியம்,இலக்கணம் தெரிஞ்சவங்க அநேகர் இருக்கும் இடத்தில என்னை போன்றோரும் இருக்கிறோம் என்றால் அதுக்கு ஒரு காரணம் கூகுள். எழுத இலவசமா பிளாக் கொடுத்து என்னத்தையும் எழுதி தொலைங்க, எனக்கு தமிழ் படிக்க தெரியாதது நல்லதா போச்சு என்று சகித்து கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றியோ நன்றி !

ம்...நன்றினு சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனா நம்ம மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல. நன்றி என்பது ஒரு அழகான வார்த்தை தானே, தேவையில்லாம எதை எதையோ சொல்றோம், ஆனா நன்றினு சொல்ல ரொம்ப தயக்கம் காட்டுவது ஏன்னு தெரியல. நன்றி, சாரி, பரவாயில்லை என்பது போன்ற (சம்பிராதய) வார்த்தைகள் மிக முக்கியம். இவையே உறவை வளர்க்க உதவும். இவற்றை உபயோகிக்காததால் நல்ல நட்பை/உறவை இழக்க நேரலாம்.

சின்ன வயசில என் அம்மா சொல்லி கொடுத்த பழக்கம் இது, யாருக்கும், எதற்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பது, இப்ப என் பசங்களிடமும் இது தொடருகிறது. பெரிய விசயங்கள் என்று இல்லை, சின்ன சின்ன சந்தர்பங்களிலும் நன்றி என்ற சொல் தானாக வந்துவிடும். (ஒரு அனிச்சை செயல் போல )

சொல்லி பாருங்களேன் 

பஸ்ல கண்டக்டர் டிக்கெட் கொடுத்ததும் தேங்க்ஸ் சொல்வேன், இதை எதிர்பார்த்து இருக்காததால் நான் சொன்னதும் சட்னு திரும்பி பார்த்து லேசா சிரிப்பார்.வேலை நெருக்கடியில் இந்த நன்றி அவரது இறுக்கத்தை தளர்த்தி முகத்தில் புன்னகையை கொடுக்கிறது. ஒரே ஒரு வார்த்தை பிற மனிதரை ஒரு கணம் மகிழ்வுற செய்கிறது என்றால், ஒரு நன்றி அல்ல  ஆயிரம் நன்றி சொல்லி கொண்டே  இருக்கலாம். 

என் பசங்க எனக்கு குடிக்க தண்ணி எடுத்து கொடுத்தா வாங்கிட்டு உடனே நன்றினு சொல்லிடுவேன்...அவங்களும் அதை அப்படியே பாலோ பண்றாங்க...வீட்ல இப்படி சொல்லி பழகிட்டா வெளியிடங்களிலும் மத்தவங்ககிட்ட சொல்வாங்க... !!

எங்க வீட்டு சின்ன வாண்டு சிஸ்டம்ல கேம்ஸ் ஆர்வமாக விளையாட்டிட்டு இருக்கும்போது Avast! Antivirus , pop up message ல்  'your system is updated ' னு வாய்ஸ் வந்தா, அதே வேகத்தில் உடனே 'ஒ.கே ஒ.கே தேங்க்ஸ்' என்கிறானா  பார்த்துகோங்க...! எந்த அளவிற்கு அவன் மனதில் இந்த நல்ல பழக்கம் பதிந்திருக்கிறது என்று...! 

சிறியவர்கள் இவர்கள்  நாளை சமூகத்தில் பலருடன் பழக நேரும், அப்போது ரொம்ப இறுக்கமாக பேசினால் பிறரது நல்ல நட்பை, உறவை இழக்க நேரும். சிறு குழந்தைகளிடம் இது போன்றவற்றை பேச சொல்லி கற்றுகொடுங்கள். நீங்களும் முன் உதாரணமாக சொல்லி பழகுங்கள். 


நன்றி சொல்ல எதுக்கு ரொம்ப யோசிக்கணும் ? 

தமிழ் வலைதளங்கள் பல இருக்க நம்மை நினைவு வைத்து,மதித்து நேரம் செலவு பண்ணி நம் தளத்தை ஓபன் பண்றதே பெரிசு, தவிர வோட் போட்டு பின்னூட்டமும் போட்டுட்டு போறாங்க என்கிற போது ஒரு நன்றினு சொன்னா என்னங்க ? நிச்சயமா நன்றியை எதிர்பார்த்து அவங்க பின்னூட்டம் போடல...ஆனா நமக்கு நேரம் கிடைக்கும் போது குறைந்தபட்சம் பின்னூட்டதிற்கு பதில் அல்லது நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொல்வது நல்ல பழக்கம். இதை சொல்லகூட பெரிசா யோசிக்கிற நாம், சகமனிதர்களை நேசிக்கிறோம் என்று சொல்வது எப்படி ஏற்புடையதாகும். அது பொய்...வெளிவேசம்...பெரிய சமாளிப்பு...!!

அதெல்லாம் சொல்ல முடியாது, எனக்கு பிடிக்காது, நேரமில்லை என்ற வீம்பில் இருப்பவர்களை விட்டு, நெருங்கிய நண்பர்களும் சற்று விலகியே நிற்பார்கள் என்பது நிதர்சனம். 
  
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?

மன்னிப்பு என்பது அன்பு, இரக்கம், அருள் ஆகியவற்றை வெளிபடுத்தும் ஒரு செயல். மனிதனின் உயர் பண்பு !!

மன்னிப்பு கேட்பது என்பதை ஏதோ தன் கௌரவத்தை அடகு வைப்பதை போல சிலர் பேசுவதை/எண்ணுவதை பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது. தான் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது மனித தன்மை...அதே சமயம் தன் செயல் அல்லது சொல்  பிறரை வருத்தபடுத்திவிட்டது என்பதை அறிந்த பின் மன்னிப்பு கேட்பது தெய்வீக தன்மை. ஆனால் குறைந்தபட்சம் நாம் மனிதராக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. 

ஒரு சொல்லோ செயலோ நம் மனதிற்கு சரியாக படும் அதேநேரம், பிறருக்கு பெரிய மனவருத்தத்தை அல்லது மன காயத்தை ஏற்படுத்திவிடலாம். அது நம் கவனத்திற்கு வந்தால் உடனே வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுவிட்டால் சம்பந்தப்பட்டவர் 'இல்லைங்க பரவாயில்லை என் மீதும் தவறு இருக்கிறது' என்று சமாதானத்துக்கு வந்துவிடுவார். அப்படியும் சொல்லவில்லை என்றால் அவரது மனசாட்சியே அவரை குத்தி காட்டி சிதைத்துவிடும்.

பகைவனுக்கும் அருளவேண்டும் என்று படித்திருந்தாலும் நம்மால் ஏன் அதை பின்பற்ற இயலவில்லை...? அதற்கு தடையாக நம் முன்னால் நிற்பது எது ? கர்வம், ஈகோ, தன்முனைப்பு போன்றவை தானே ?! இவை எதுவும் என்னிடம் இல்லை என்று சொல்பவர்களும் மன்னிப்பு என்று வரும்போது  தயங்கவே செய்கிறார்கள் !?

அனைத்து மதங்களும் மன்னிப்பதை பற்றி தெளிவாக விரிவாக கூறி இருந்தும் அதை ஏனோ பலரும் பெரிதுபடுத்துவதே இல்லை. பிறர் தவறை நாம் மன்னித்தால் நம் தவறை தேவன் மன்னிப்பான் என்று பல முறை பாடம் பயின்றாலும் அதை நடைமுறையில் செயல்படுத்துவதில்லை.

நெருங்கியவர்களிடம் 

தன் நண்பனை பற்றிய தவறான தகவல்கள் நமக்கு சொல்லபட்டிருந்தால் அதை நம்பி அவருக்கு எதிராக தவறுகளை செய்யலாம். உண்மை தெரிய வரும் பட்சத்தில் வலிய சென்று மன்னிப்பு கேட்கலாம். 

மன்னிப்பு எதிரிகள் இரண்டு பேரை நண்பர்களாக்கி விடும். அதே நேரம் நண்பர்களுக்கிடையே என்றால் நட்பு இன்னும் இறுக்கமாகி விடும், இத்தகைய  நட்புகளே மரணபரியந்தம் தொடர்ந்து வரும்.

மன்னிக்க முடியாது 

இப்படி கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தால் அந்த பாதிப்பு உங்களுக்கு தான். தூக்கத்தை தொலைத்து துக்கத்துடன் அலைய நேரும். உங்கள் சந்தோசம், உடல் ஆரோக்கியம்  உங்களுக்கு முக்கியம் என்றால் மன்னித்து பழகுங்கள்...

மன்னிக்க முடியாது என்பது எப்படி இருக்கிறது என்றால், 

* தவறு நடந்தது நடந்ததுதான்
* அதை சரிபடுத்திக்க முயற்சிக்கவே மாட்டேன்
* மறக்கவும் மாட்டேன்
* தவறுக்கு அடுத்தவங்களை காரணமாக சொல்வேன்
* சில நேரம் என்னையும் திட்டிப்பேன்
* மன அழுத்தத்தில் விழுவேன்
* மொத்தத்தில்.....எப்படியோ வீணா போவேன்...?!!!

பலர் இப்படிதான் தேவை இல்லாததை சுமந்திட்டு நிம்மதி இல்லாம வாழ்ந்திட்டு இருக்கிறாங்க...கண்டதையும் சுமக்காம தூக்கி குப்பையில் வீசி எறிந்துவிட்டு, அவர்களை  மன்னித்து மறந்து சுத்தமாக புறக்கணித்து புறந்தள்ளி விடுங்கள்...தெளிவாகுங்கள்...இயந்திர உலகின் நாளைய ஓட்டத்திற்கு நம்மை தயார்படுத்தி கொள்ளவேண்டாமா...?! 

சமூக வாழ்வில் மன்னிப்பும் நன்றியும் ஒரு அற்புதமான மந்திரம். மிக அவசியமானதும் கூட. இதை உங்கள் வாழ்வில் நீங்கள் பின் பற்றினால் உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சொந்தங்கள், உங்க குழந்தைகள், ஒரு தொடர் சங்கலி போல் இதனை பின்பற்றக்கூடும்...

தொற்றுவியாதி போல அடுத்தவரையும் பீடிக்கும், பின்னிக்கொள்ளும்...நல்ல சமூதாயம் அமையும்...சமூகம் மாறவில்லை என்று இருக்காமல் முதலில்  நாம் மாறுவோம் மற்றவர்களையும் நல்ல பண்புகளால் மாற்றுவோம்.  நல்ல மாற்றங்களை நம்மில் இருந்து தொடங்குவோம்...விரைவில் நம் சமூகமும் மாறும்...

பிரியங்களுடன்
கௌசல்யா



படம் - நன்றி கூகுள் 

திங்கள், அக்டோபர் 31

நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் ?!



இந்த கேள்வியை  தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு,  அது பிரசவ வேதனையை  அனுபவிக்கும் அந்த நேரம்!   

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.  நர்ஸ் வந்து செக்  பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.  எனக்கு எப்படி இருக்கும்?!  இந்த வலியே உயிர்  போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும்,  நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.  

என் உறவினர்கள் வேறு உட்காராதே, அப்படியே மெதுவாக  நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள்.  என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.     

பிரசவ நாள் நெருங்கியும் வலி ஏற்படவில்லை என்பதால் வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள்,   வைக்கும்போது அது வேற  வித்தியாசமான ஒரு வேதனையாக  இருந்தது.  இது போதாது என்று குளுக்கோஸ் ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது.  அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான்.  ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப்,  பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36  மணி நேரம் கடந்தது.   இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன்.  'எப்ப குழந்தை பிறக்கும்' என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

டாக்டர் மறுபடி ஜெல் முயற்சி பண்ணுவோம் என்று சொன்னார்கள்,  நல்ல ஹாஸ்பிடல் என்பதால் சிசரியன்  பற்றி யாருமே அங்கே  பேசவில்லை.  (எனக்கு தான் வேற இடம் போய் இருக்கலாம் என்று தோன்றியது !?) மறுபடி ஜெல் என்றவுடன் பயம் அதிகமாகி விட்டது.  

இந்த நரக வேதனையில் தான் என் மனதில் தோன்றியது " ஏண்டா பெண்ணாக  பிறந்தோம்? "  மனதில் தோன்றியதை வாய் விட்டு கதறி சொல்லிவிட்டேன்,  அதற்க்கு என் அத்தை ' என்ன செய்ய நம்ம தலை எழுத்து, அனுபவிக்கத்தான் வேண்டும் '  என்று அவர்களுக்கு தெரிந்த ஆறுதலை கூறினார்கள்.   எனக்கு அந்த கேள்வி மட்டும் அல்ல வேறு ஒன்றும் தோன்றியது, ' எதை எதையோ கண்டுபிடித்தோம் என்று பெருமை பட்டு கொள்கிறோமே,  வலி இல்லாமல் பிள்ளை பெறுவதற்கு ஒரு மாத்திரை மாதிரி எதையாவது கண்டுபிடிக்கலாம் அல்லவா என்பதுதான் அது'.   

என் கதறல்  தாங்காமல் கடைசியில் ஆபரேஷன் ரூமிற்கு அழைத்து சென்றார்கள். போவதற்கு முன் இனிமா என்ற வேறொரு இம்சை, அதையும் அனுபவித்தேன்.  ஆபரேஷன் செய்யலாமா இல்லை மறுபடி  ஜெல் வைக்கலாமா என்று அவர்களுக்குள் ஒரு ஆலோசனை நடந்தது,    அரைமணி நேரம் கழித்து சரியாக 40 மணிநேர அவஸ்தைக்கு பின் பெரிய வலி ஏற்பட்டது.

என்னை சுற்றி பலர் இருந்தனர், வலி கூட கூட என் கதறலும் கூடுகிறது, பயத்தில் என் கைகள் உதவிக்காக அலைபாயுகிறது ,  தானாக என் கரங்கள் அருகில் இருக்கும் நர்சின் கையை பற்றி அழுத்தியது.  நெஞ்சின் படபடப்பு  அதிகரிக்கிறது, இதயம் அதிக ஆக்சிசனுக்காக துடிக்க என் திறந்த வாய் வேகமாக காற்றை உள்ளிழுக்கிறது. அருகில் இருக்கும்  நர்ஸ் என் காதருகில் வேகமாக உந்தி தள்ளுமாறு கூறினார்கள்.  

என் முழு உடலும் என் கட்டுபாட்டில் இல்லை,  என் கண்கள் நிலை குத்த, கைகள் பரபரக்க, இதயம் துடிக்க, நெஞ்சில் ஒரு பந்துபோல் ஏதோ வந்து அடைக்க, வேகமாக என் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி, மரண விளிப்பில் நிற்கையில் உயிர் பிழைக்க மேற்கொள்ளும் கடைசி முயற்சி இதுவென, உள்ளிழுத்த காற்றுடன் அழுத்தம் கொடுத்து உந்தி தள்ள, இதோ குழந்தை பிறந்து விட்டது. என் கதறல் சத்தம் நின்று குழந்தையின் அழுகுரல் தொடங்கியது.   நான் மெதுவாக மூச்சை இழுத்து விட்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கினேன். 

நர்ஸ் அருகில் வந்து 'உங்களுக்கு ஆண் குழந்தை' என்று சொன்னார்கள். எந்த குழந்தை என்றாலும் பரவாயில்லை , பிறந்தால் சரி என்றுதானே இருந்தேன். அதனால் மனதில் ஒன்றும் பெரிதாக பூ எல்லாம் பூக்கவில்லை,  நர்சிடம் சும்மா லேசாக சிரித்து வைத்தேன்.
இன்னும் விட்டார்களா இந்த நர்ஸ்கள், என்னவோ இன்னும் சரியாக வெளியேறவில்லை என்று என்னை அடுத்த 30   நிமிடத்திற்கு பாடாய் படுத்தினார்கள், தையல் போட்டார்கள்.  என்ன மாதிரியான  விதவிதமான வேதனைகள், வலியில் இத்தனை விதங்களா?, அனுபவித்தேன் கொடூரமாக.....!

இதற்குள் குழந்தையை சுத்தம் செய்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வைத்து என்னிடம் கொண்டு வந்து காட்டினர்.  மெதுவாக திரும்பி முகம் பார்த்தேன்...கடவுளே! இது என் குழந்தையா..?  இதன் தாய் நானா..?  நாந்தான் பெற்றேனா..? வெள்ளை துணியில் சிகப்பு ரோஜா மலராய் கண்மூடி என் அருமை மகன்... ! சின்ன சின்ன மணி விரல்கள், இதழ் பிரியா  மல்லிகை  மொட்டுபோல் உதடுகள்,  தாமரை இதழாய் கன்னம், மூடிய இமைக்குள் அலையும் கருவிழிகள்,  வர்ணிக்க வார்த்தைகள் தோணவில்லை,  ஆனந்தத்தில் எனக்கு போதை ஏறி சிறிது மயக்கம் வருவதுபோல் இருந்தது!

என்னே ஆனந்தம்!


இதுவரை நான் அனுபவித்தது வலிகளா இல்லை, என் கண்மணியை தேடி கண்டுபிடிக்க நான் எடுத்த பிரயாசங்களா ....!? ஒரே வினாடியில் என்னை தாய் என்று உணர வைத்தான்.   பால் அருந்த என் அருகில் படுக்க வைத்தனர்,  என் ரத்தம் என் மகனுக்காக பாலாக மாறி அவனை அருந்த வைத்தது....!  

பெண்மை எதுவென இந்த இன்ப வலியை அனுபவிக்கும்போது தான் உணருகிறேன்,  கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும்  பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன் என்பதை... !

பெண்களே இனி ஒரு முறை கூட கூறாதிர்கள் , ' ஏன் பெண்ணாய் பிறந்தேன் என்று '. 

" மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா " 


பின்குறிப்பு அல்ல முக்கிய அறிவிப்பு !!

31.10.2011 இருந்து 06.11.2011 ஞாயிற்றுகிழமை வரை தமிழ்மணத்தில் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து அழைப்பு விடுத்திருந்தார்கள். பதிவுலக உறவுகள் உற்சாகம் கொடுப்பார்கள் என்ற தைரியத்தில் நானும் சம்மதித்துவிட்டேன். மாதத்திற்கு நாலு பதிவு எழுதி கொண்டிருக்கும் என்னை தினம் ஒன்றாக ஏழு பதிவு எழுத சொல்லி இருக்கிறார்கள்...!? என்மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கைக்கு என் நன்றிகளை இங்கே சொல்லிகொள்கிறேன். முதல் பதிவாக எனக்கு பிடித்த பதிவை மீள்பதிவிட்டு இருக்கிறேன். நாளையில் இருந்து புதிய பதிவுகள் வெளிவரும்...ஆதரவு தாருங்கள். நன்றி.

பிரியங்களுடன் 
கௌசல்யா

* மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சு போய்டுமா ?!!  நாளைய பதிவில்..........


   

திங்கள், அக்டோபர் 24

தீபாவளி அன்றும் இன்றும்...!


தீபாவளி என்று சொல்லும் போதே மனசில மத்தாப்பு பூக்கும்...இப்பவே இப்படினா சின்ன வயசில எப்படி இருந்திருக்கும்...!! முக்கியமா பெரியவர்களுக்கான பண்டிகைனு சொல்வதை விட சின்ன குழந்தைகளின் பண்டிகைனு சொல்வது பொருத்தமாக இருக்கும்...

தீபாவளி அன்று...

சின்ன புள்ளையா இருந்தபோ, தீபாவளி வந்தா போதும் நமக்கு கவனிப்பு ரொம்ப பிரமாதமா இருக்கும்......! நமக்காகவே பார்த்து பார்த்து எல்லாம் தயார் பண்ணுவாங்க.....எங்க அம்மா தீபாவளிக்கு இரண்டுநாள் முன்னாடி எப்ப தூங்குவாங்க...? எப்ப எழுதிருப்பாங்க என்றே தெரியாது...எப்பவும் ஒரு நல்ல வாசனை சமையலறையில் இருந்து வந்துட்டே இருக்கும். அப்புறம் தி.நகர் போய் கடை கடையா ஏறி இறங்கி எங்களுக்கு பிடிச்ச மாடல்,கலர்ல தேடி வாங்கிய டிரஸ் தயாரா இருக்கும். புது டிரஸ், பட்டாஸ், அதிரசம், முறுக்கு, ஜாங்கிரி, பாதுசா...பாருங்க இப்ப பலகாரம் பேர் கூட மறந்து போச்சு...

மத்த நாள் அம்மா காலையில எழுப்பினா, 'என்னடா வாழ்க்கை இது'னு புலம்பிட்டே எழுந்திருகிறது, ஆனா தீபாவளி அன்னைக்கு மட்டும் சீக்கிரமாக  எழுந்து விடுவேன்(நைட் தூங்கினாத்தானே...?) அம்மா சொல்றாங்களேனு(!) வேகவேகமா எண்ணெய் தேச்சுகிறதும், குளிக்கிறதும் நமக்கே இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும்...ஆனா எப்ப புது டிரசை போட விடுவாங்கன்னு மனசு பூரா பரபரன்னு இருக்கும். பக்கத்து வீடு, எதிர்வீடு,  அடுத்த  தெருவில  இருக்கிற  வீடுன்னு எல்லா வீட்டுக்கும் பலகாரங்கள் கொடுக்க என்னை அனுப்புவாங்க...அது ஒரு தனி ஜாலியா இருக்கும்...! 

பலகாரம் கொடுக்கிற சாக்குல புது டிரசை காமிக்கிறதுக்கு தான் இந்த அலட்டல்,அவசரம் எல்லாம்...!!கொடுத்துட்டு வீட்டுக்கு திரும்பி வந்தா இங்கேயும் ஒரு பத்து பதினைந்து வீட்டு பலகாரங்கள் டிசைன் டிசைனா டைனிங் டேபிள் மேல நிறைஞ்சி இருக்கும்.

அப்புறம் அம்மா கொடுக்கிற இட்லி, கறி குழம்பு காம்பினேசனை ஒரு வெட்டு வெட்டிட்டு டிவி பார்த்து, தம்பிங்க போடுற வெடிகளை தூரமா இருந்து (பக்கத்துல போக பயம் இல்ல, பட்டாசுக்கு ஒரு மரியாதை? )ரசிக்கிறது என ஒரே ஸ்பெஷல் என்டர்டைன்மென்ட் தான். தம்பிங்க ரொம்ப ஆசை படுறாங்களேனு பொட்டு வெடியை வரிசையா தரையில வச்சு, நீநீநீளமான சுத்தியல் எடுத்து டக் டக்னு அழகா(?) வெடிப்பேன். அப்புறம் மத்தியானம் வாழையிலைல இடம் கொள்ளாம அம்மா வைக்கிற ஐட்டங்களை ஒவ்வொன்னா எடுத்து காலி பண்ணிட்டு மறுபடி தெருவில வெடி போடுற என் குட்டி பிரண்ட்ஸ் கூட ஜாலியா விளையாடி, அன்னைக்கு ரிலீசான படங்கள் பற்றிய கதை பேசி என்று அந்த நாள் மிக இனிதாக கழியும்...

நைட்ல நாம ராக்கெட் விடுறதை விட ஊர்ல மக்கள் விடுற ராக்கெட்டை ரசிக்கிறது செம சூப்பரா இருக்கும்...வானமே ஜெகஜோதியா ஜொலிக்கும். எந்த பக்கம் போறதை பார்க்கிறது ? எதை ரசிக்கிறது ? எதை விடுறது ? எல்லாத்தையும் பார்த்துவிடணும் என்று கால் வலிக்க சுத்தி, கழுத்து வலிக்க பார்த்து, கை வலிக்க தட்டி குதூகளிச்சு...அப்படியே எம்பி வானத்தை தொட்டா என்னனு மனசு குதிக்கும் அந்நேரம் புரிந்தது சுவர்க்கம் வேறு எங்கும் இல்ல என் வீட்டு மொட்டை மாடியில் !!

எல்லாம் அழகாய், நிறைவாய் முடிந்து இரவும் வந்து விழிகளை தூக்கம் தழுவகொள்ளும்...இந்த ஒரு நாளின் உற்சாகம் அடுத்து தொடர்ந்து வரும் நாட்களுக்கு ஒரு சந்தோஷ பூஸ்ட் !!

தீபாவளி இன்று...

அப்படி உற்சாகம் கொடுத்த தீபாவளி இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறி போனது...நம் குடும்பத்தினரிடம் கூட ஆர்வம் குறைந்து போய்விட்டது...பெண்களை பொறுத்தவரை பிற நாட்களை விட பண்டிகை நாட்களில் அதிகரிக்கும் வேலைகள் !! வேலை செல்லும் பெண்கள் என்றால் இன்னும் கஷ்டம் கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையும் தீபாவளி சமயத்தில் அதிகரிக்கும் வேலை பளுவால் இடுப்பொடிந்து போய்விடும். ஆண்களுக்கு தங்கள் பர்ஸ் காலியாகிவிடுமே என்ற யோசனையில்...!! 

போனஸ் கிடைத்தாலும் இப்போதுள்ள விலைவாசிக்கு எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. மட்டன் விலை கிலோ 400 தொடபோகிறது, சிக்கன் கிலோ 180  ஆகிவிடும்...சரி அசைவமே வேண்டாம் காய்கறி வாங்கலாம் என்றால் அங்கே அதுக்கு மேல் இருக்கிறது...என்ன செய்வான் சாமானிய மனிதன்...? பட்டாஸ் விலையும் 50% வரை போன வருடத்தை விட விலை ஏறி விட்டதாம். துணிமணிகளின் விலை பற்றி சொல்ல வேண்டியதில்லை, ரெடிமேட் ஜாஸ்தி விலை என்று துணியாக எடுத்து தைக்க கொடுத்தால் தையல் கூலி, துணி வாங்கிய விலையை விட அதிகமாக இருக்கிறது...புதுத்துணி, பட்டாஸ் இவை எல்லாம் இல்லாமல் தீபாவளி கொண்டாடவும் முடியாது...இதை எல்லாம் யோசிக்கிறப்போ ஏண்டா இந்த பண்டிகைகள் வருகிறது என்ற சலிப்பு ஏற்படுவது சகஜம். 

இனி வரும் காலங்களில் தீபாவளி போன்ற பண்டிகைகள் வசதி உள்ளவர்கள் மட்டுமே கொண்டாடும் படியாக மாறி போனாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை...நடுத்தர குடும்பத்து தாய் தன் மகனை பார்த்து,'தீபாவளி கொண்டாட நாம எல்லாம் ஆசை படலாமா மகனே...? நீ நல்லா படிச்சு நிறைய சம்பாதி அப்ப கொண்டாடலாம் ?' என ஆறுதல் சொல்ல கூடும்...?!!

நம்ம சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய சந்தோசங்களை இழந்து வருவது போல் இருக்கிறது...என்னதான் சொல்லுங்க நம்ம குழந்தைகளை விட முந்தின தலைமுறையினர் நாம ரொம்ப கொடுத்து வச்சவங்க...!!

நம்ம பசங்களுக்கு பண்டிகைகளின் மேல் ஆர்வம் குறைந்துவிட்டது...ஏன்,எதற்காக கொண்டாடுறோம் என்றும் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பவில்லை. அவர்களை பொறுத்தவரை இன்னொரு விடுமுறை நாள் அவ்வளவே...காலையில் பட்டாஸ் போடும்போது இருக்கிற ஆர்வம் கூட நேரம் ஆக ஆக குறைந்துவிடுகிறது...இன்றைய தலைமுறையினருக்கு தொலைக்காட்சியில், கம்ப்யூட்டர், மொபைல், பிளே ஸ்டேஷன் கேம்ஸில் கிடைக்கும் சந்தோசம் பண்டிகைகளை கொண்டாடுவதில் கிடைப்பதில்லையோ...??!  


பெற்றோர்களான என் போன்றோருக்கு   பண்டிகை கொண்டாடி ஆகணும், பசங்களையும் சந்தோசமாக வச்சுக்கணும் என்று கஷ்டப்பட்டு அங்கே இங்கே ஓடி மூச்சுவாங்க எல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிடுகிறது. 

ஒரு உண்மை என்னனா...  

நாம சின்ன புள்ளைகளா இருந்த வரைக்கும் தீபாவளி நல்லா இருந்தது...இப்ப நமக்கு புள்ளைங்க இருக்கிறபோது, தீபாவளியை அவ்வளவாக நம்மால் ரசிக்க இயலவில்லை...!!

உங்கள் மனதோடு கொஞ்சம்...

இந்த தீபாவளி சமயத்தில் நமக்காக எவ்வளவோ செலவு செய்கிறோம். அதில் சிறிய அளவு பணத்தில் உடை, இனிப்பு, வெடி ஏதோ ஒன்றை வாங்கி அருகில், ரோட்டில், தெருவில் பார்க்கும் ஏதோ ஒரு ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு கொடுங்கள்...பிறகு உங்களுக்கு கிடைக்கும் மனநிறைவை உணர்ந்து அனுபவித்து பாருங்கள் !!

நீங்கள் கொடுங்கள்...அப்போது அவர்கள் விழிகளில் தெரியும், உண்மையான தீபாவளி !! 


என் நேசத்துக்குரிய அனைத்து பதிவுலக உறவுகளுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!



படங்கள் - நன்றி கூகுள்

சனி, அக்டோபர் 22

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

கழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது.  அப்பதிவை அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். படித்து உங்களின் மேலான ஒத்துழைப்பை தாருங்கள். நன்றி.

* * * * * * * * *




அன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் முக்கியான செய்திகளில் ஒன்று சாலை விபத்து. அதுவும் நாட்டில் நடக்கிற விபத்தில் 90 % விபத்து வாகனக்களால்   நடக்கிறது . 


Statistics Related To The Road  Accidents In India

• 93% of all accidents are caused due to human 
factors.
• 80% crashes involve driver inattention within 3 
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per 
WHO.
• 20% of GDP covers the accidental portion.


முகப்பு விளக்குகள் 

இதில்  இரவில்  நடக்கும்  விபத்துக்கள்  மிக  அதிகம். எதிரில் வரும் வண்டிகளில் பளிச்சிடும் விளக்குகள்(HEAD LIGHTS) விபத்துக்களுக்கு முக்கிய காரணம் !! அந்தந்த வாகனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள் தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...

முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....


இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???

"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். அரசு ஒரே ஒரு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும். சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...?

பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ... 

National Automotive Testing and R AND D Infrastructure Project.    
Ministry of Road Transport & Highways. 
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009. 
Transport Secretaries OF Government of Tamil Nadu . 

இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும்.

அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.


இந்திய அரசாங்கம்:-

* National Automotive Testing and R AND D Infrastructure Project:- 
* Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in

* Transport Secretaries of Government of Tamil Nadu:-transec@tn.gov.in



அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...

நாம் முயன்றால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!

நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.


மேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள்,தேவையான மெயில் ID-கள் ,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ...

நீங்களாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் பார்மேட்டை உபயோகித்து கொள்ளுங்கள். நன்றி.

மின்னஞ்சல் பார்மேட்

Please save us and others from road accidents by introducing an order that, "all head lights should be manufactured or sold with a black circle inside so that it can’t be removed easily. It should not be allowed to be sold without the black circle inside. Take this obligation as very urgent and do the needful".






வியாழன், அக்டோபர் 20

உண்ணாவிரதத்தின் மற்றொரு முகம்...! கூடல்பாலா !?


எதற்கு எடுத்தாலும் உண்ணாவிரதம் இருக்கிறாங்கபா, நாடு கெட்டுவிட்டது  என்று சலித்து கொள்ளும் சராசரி இந்திய குடிமகன்கள் ஒருமுறை முறையான உண்ணாவிரதம் இருந்து பார்க்கவேண்டும்.அதன்பின் புரியும் இது எத்தகையதொரு வேள்வி, தியாகம் என்று. ஏற்கனவே கூடங்குளத்தில் நடந்து  முடிந்த 11 நாள் உண்ணாவிரதம் எல்லோரும் அறிவோம், அது முடிவுக்கு வந்ததும் அதை அப்படியே மறந்துவிட்டோம். ஆனால் முழு பட்டினி கிடந்த இவர்களின் நிலை...!? உண்ணாவிரதம் இருந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது சற்று சிரமம். இதில் கலந்துகொண்டவர்களில் கூடல்பாலா உடல்நலம் பாதிக்கபட்டுள்ளதாக போனில் பேசும்போது என்னிடம் கூறினார்.

சமூக சேவகி மேதா பட்கருக்கு கை கொடுக்கும் பாலா 

கூடன்குளம் போனபோது முதலில் அவர் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தோம்...பாலாவும் அவரின் அம்மாவும் அன்புடன் வரவேற்றார்கள். சில சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின் அவரது உடல்நிலை பற்றி விசாரித்தேன். விரதம் முடிந்ததும் எப்போதும் போல் சாப்பிட தொடங்கி இருக்கிறார், தனது தொழில் நிமித்தமாக வெளியே சென்ற நேரம், திடிரென்று  இவர்  மயங்கி சரிந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்கள். 

தீவிர சிகிச்சைக்குப்பின், இப்போதும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். குடல் புண்ணாகி அல்சரில் கொண்டுபோய் விட்டு இருக்கிறது. என்னுடன் பேசிகொண்டிருக்கும் போது அடிக்கடி தன் இரு கைகளை நெஞ்சில் வைத்து அமுக்கி பிடித்துவிட்டு கொண்டே இருந்தார். தொடர்ந்து பேசினால் நெஞ்சடைப்பதை போல இருப்பதால் போனில் கூட அவ்வளவாக யாரிடமும் பேச இயலவில்லை என்றார். 

மிக மெதுவாக வித்தியாசமாக நடந்தார், அருகில் இருந்த அம்மாவிடம், 'ஏன் இப்படி நடக்கிறார்' என்று கேட்டேன். 'இப்பதான் இப்படி நடக்கிறான், அவனால் வேகமாக நடக்க இயலவில்லை, அதுதான் நாங்க வெளில எங்கும் அனுப்புறது இல்லை, வீட்டிலையே வச்சுக்கிறோம்' என்றார்.  நாங்கள் வருவது தெரிந்து பாலா சட்டை எடுத்து அணியவும் அவரது நான்கு வயது மகன், 'அப்பா வெளில போறீங்களா, வேண்டாம்பா' என்று கை பிடித்து தடுத்து  இருக்கிறான்...!!? இவருக்கு இப்படி ஆனது தெரிந்ததும் நண்பர்கள் உடனே இரண்டு வாழைதார்களை கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்கள். பழம், மோர், இளநீர், மற்றும் சுத்தமாக காரம் இல்லாத உணவு போன்றவற்றை மட்டும்  எடுத்துகொள்கிறார்.  


அவரிடம் 'உங்க மனைவி எங்கே?' என்றேன் 'காலையில் உண்ணாவிரத பந்தலுக்கு போயிட்டு மாலையில்  தான் வருவா' என்றார் பாலாவின் அம்மா. இவங்க வீட்டில் இருந்து அந்த இடம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. தினமும் சலிக்காம நடந்து சென்று வராங்க. ஊரில் இருப்பவர்களில் உடல்நிலை முடியாதவர்களும், மிக வயதானவர்களும் கலந்துகொள்வதில்லை.

எதற்காக இந்த தவ வாழ்க்கை ? யாருக்காக ? தெரிந்தே துன்பம் அனுபவிப்பதற்கு என்ன காரணம் ? யோசித்து பார்த்தால் இவர்களின் தியாகம் புரியும். இதில் சிறிதும் சுயநலம் இல்லை...

நமக்கு தேர்ந்தவரை பாலா ஒரு பதிவர் அவ்வளவே. ஆனால் அணுமின் நிலையத்தை பற்றிய செய்திகளை விரல் நுனியில் வைத்திருக்கிறார். நான் கேள்விகள் கேட்க கேட்க கணினியில் அது தொடர்பான செய்திகளை படங்களுடன் உடனே எடுத்து காட்டி விளக்கினார். கூடங்குளத்தில் நடக்கும் அனைத்தையும்  உடனுக்கு உடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிற கூடல் பாலாவிற்கு நாம் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். வாழ்த்துவோம்.

                                   இதில் ஆரஞ்ச் கலர் ஷர்ட்டில் இருப்பவர் பாலா 


அவர் நிறைய விஷயம் எங்களிடம் பகிர்ந்து கொண்டாலும் அதில் குறிப்பிட்ட சில மட்டும் இங்கே...

*  இது போன்ற பெரிய அணு உலைகள் மக்கள் தொகை மிக குறைவான பகுதியில்(16 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்)அமைக்கபடவேண்டும். இந்த அணுஉலை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் இங்கே...! 30 கிலோ மீட்டருக்குள் 10  லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள்.

* ஒருவேளை கதிரியக்கம் வெளியானால் கடலில் கலந்து கடல் வளங்கள் அழியும்.

* அணுஉலை கழிவுகள் மண்ணுக்கடியில் புதைக்கபட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.மேலும் இவற்றை 24 ,000 ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்...?!!!  

* அணுஉலைகள் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 9  மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த சுனாமி அலைகள் இரண்டு பனை மரம் உயரத்திற்கு மேல் எழும்பியது நினைவு இருக்கலாம். சமீபத்தில்
ஜப்பான் அணு உலையைத் தாக்கிய சுனாமி 20  மீட்டர் உயரம் .மேலும் அணு
உலையில் விபத்துக்கள் நிகழ சுனாமி மட்டும் காரணமாக இருக்காது ,மனித தவறு மூலமாகக்கூட நிகழலாம் . !! 

சுனாமி இங்கே வர வாய்ப்பு இல்லை என்ற சமாளிப்புகள், சமாதானங்கள் , அறிவியல் அறிவிப்புகள் இயற்கையின் முன் செல்லுபடியாகாது...இயற்கை அன்னை எப்போது, எந்த இடத்தை  தன் காலால் எட்டி உதைப்பாள் என யார் அறிவார்...? 2006 ஆம் ஆண்டுக்கு முன் சுனாமி என்ற வார்த்தை இருக்கிறது என்பதாவது நமக்கு தெரியுமா??    

* கூடங்குளத்தில் மின்னுற்பத்தி தொடங்க இன்னும் வேலைகள் பாக்கி இருக்கின்றன...மிச்சமும் முடிந்து உற்பத்தி பணி தொடங்க இன்னும் 1 1/2 அல்லது  2 ஆண்டுகள் ஆகலாம். (இந்த டிசம்பரில் தொடங்கிவிடும் என்று அரசு சொல்கிறது...?!) இதை இப்ப ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு முறை பதிவுலகில் மின்சாரம் பற்றிய பேச்சு வந்தபோது நட்புகள் என்னிடம் சொன்னார்கள், "உங்களுக்கு என்ன, அங்கே பக்கத்தில் கூடங்குளம் இருப்பதால் மின் வெட்டு பிரச்சனை இல்ல...!!?" சதா இணையத்தில் சுத்தி சுத்தி வந்தாலும் நம்மவர்களின் தெளிவு இந்த அளவில் தான் இருக்கிறது.



காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி 

கூடங்குளத்தில் சுற்றிலும் காற்றாலைகள், அவைகளின் ஒரு மணி நேர மின் உற்பத்தி (ஒரு காற்றாலை, ஒரு மணிநேரம் = 1 1/2 மெகா வாட்) 1,500 மெகா வாட்ஸ் !!

அணுஉலை மின் உற்பத்தியை தொடங்கினால் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்... (தமிழ்நாட்டுக்கு 45% மின்சாரம் கிடைக்கும் )    

இன்னும் அதிக அளவில் காற்றாலைகளை நிறுவினாலே அபிரிதமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அதைவிடுத்து அணுஉலைகள் நமக்கு தேவையா என முடிவு  செய்யவேண்டிய முக்கியமான தருணமிது. 

ஊரை சுற்றி காற்றலைகளின் அணிவகுப்பால் மின் வெட்டு பிரச்சனை இங்கு கிடையாது.

 கல்பாக்கத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு என்று வேறு செய்திகள் வருகின்றன...! கூடங்குளத்தில் நடப்பது அவர்களுக்காக மட்டும் அல்ல, எங்கும் அணு உலைகள் தேவை இல்லை என்பதின் ஒட்டுமொத்த போராட்டம் !!


விடை பெற்றேன் 

நலம் விசாரிப்பு, அணுஉலை செய்திகள், பதிவுலகம், அரசாங்கத்தின் நிலை, மீடியாக்கள், கூடங்குளம் மக்கள், அரசியல் இப்படி கலவையாக பலவற்றை மனதில் ஏந்திக் கொண்டு அங்கிருந்து நானும் என் கணவரும் விடை பெற்றோம். 

உண்மையில் அவ்வூர் மக்களின் வெள்ளை பேச்சில் சிறிது நேரம் மயங்கித்தான் போனேன்.

உண்ணாவிரதத்தால் உடல் சுகவீனமானவர்களுக்கு அங்கே இருக்கும் ஒரு  ஹாஸ்பிடல் இலவசமாக வைத்தியம் செய்து வருகிறது.

இப்படி மனித நேயத்தை நேரில் கண்டும், உணர்ந்தும், கேட்டும் இன்னும் நான் என்னை பக்குவபடுத்தி கொண்டேன். இன,மதம், ஏழை, பணக்காரன் எல்லா வேறுபாட்டையும் மறந்து ஒன்று சேர்ந்திருக்கும் இவர்களின் நடுவில்தான் இறைவன் இருக்கிறான். இறைவனை  நேரில்  தரிசித்த   உணர்வில் இன்று நான் இருக்கிறேன். 

மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! 

இந்த மானுடம் வெல்லட்டும்...!!     

* * * * * * * * * * * * * * * * * *

நேரம் கிடைக்கும் போது இவற்றையும் படியுங்கள்


கூடங்குளம் அணுமின் நிலையம் : மாற்று தீர்வு இல்லையா ?

*  மாற்று வழிகள் பற்றிய ஒரு பார்வை 



* * * * * * * * * * * * * * * * * *