பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலானப் பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துக்கொள்ளப் படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.
பெண் ஒரு ஆணை புரிந்துக் கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லம்மா புரிந்துக்கொண்ட அளவு அவர் புரிந்துக்கொண்டாரா? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்துக் கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்துக் கொள்ள இயலாது பெண் மனதை.
தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றேத் தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அரைமணி நேரத்தில் அவனது முழு குணத்தையும் எடைப்போட்டு விடுவாள். தான் என்ன புரிந்துக் கொண்டோம் என்பதை அந்த ஆணிடம் கடைசிவரை தெரிவிக்கவும் விரும்பமாட்டாள்.
ஆணுடனான பெண்ணின் பேச்சுக்கள்
அதிகம் பேசுவாள் ஆனால் அர்த்தமே இருக்காது என்பார்கள். அந்த அர்த்தம் பிறருக்கு சீக்கிரம் பிடிபடாது அதுதான் நிஜம். ஒரு பெண் பேசிக்கொண்டே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. எந்த இடத்தில் மௌனிக்கிறாளோ அங்கே அவள் மனதில் எதிரில் இருக்கும் நபரை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதை ஆண்கள் புரிந்துக்கொள்ளாமல் நம்ம பேச்சை ரசிக்கிறாள் போல என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள் அந்த ஆணைப் பார்த்து அங்கே பெண்மை நகைக்கவேச் செய்யும்...!
* உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணுடனும் பேசுவது இல்லை என்று சொல்லும் எந்த ஆணையும் பெண் நம்ப மாட்டாள், அவளுக்கு நன்கு தெரியும் இது சுத்தப்பொய் என்று.
* சுயத்தம்பட்டம் அடிக்கும் ஆணை எந்த பெண்ணுக்கும் பிடிக்காது. அப்படிப் பட்ட ஆண்கூட பேசும் போது பெரும்பாலும் அமைதியாகவே இருப்பாள், ஒரு கட்டத்துக்கு மேல் இவளும் கூட சேர்ந்து கொண்டு 'ஆமாம் நீங்க ஆஹா, ஓஹோ' என்பாள், நம்மள புகழ்கிறாள் போல என்று அந்த ஆண் இன்னும் அதிகமா உளற அன்றே அந்த ஆணின் நட்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.
* அதே நேரம் அதிகமாக தன்னை புகழ்கிற எந்த ஆணையும் பிடிக்காது. இது தெரியாமல் 'உன் குரல் குயில் மாதிரி இருக்கு, நீ அப்படியாக்கும், இப்படியாக்கும்' என்று கதை விடுகிற ஆணை தவிர்க்க மாட்டாள் , தொடர்ந்துப் பேசுவாள் ஆனால் மனதில் அவன் மேல் மரியாதை சுத்தமாக இருக்காது...!
மறைமுகமாக பேசுகிறாள் ஏன் ?
பெண் பல நேரம் சுத்தி வளைத்து பேசுவாள், நேரடியாக எதையும் சொல்ல மாட்டாள். எதிரில் இருக்கும் ஆணுக்கு பொருள் புலப்பட அதிக சிரமப்படும் அளவிற்கு இருக்கும். ஆனால் பெண்கள் தெளிவாகத்தான் இருப்பார்கள், ஆண்கள் ஊகிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதை கொஞ்சம் யோசித்து பார்த்தால் பல நல்ல விசயங்கள் அதில் மறைந்திருப்பதை உணரலாம்.
=> சில சிக்கலான விஷயத்தை நேரடியாக சொல்லும்போது அதை எதிர்கொள்கிற பக்குவம் எதிரில் இருக்கும் நபருக்கு இல்லாமல் இருக்கும். விசயத்தையும் சொல்லணும் அதேநேரம் அவங்க மனதும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சுத்தி வளைத்துச் சொல்வாள். இது போல் எல்லோரிடமும் பேச மாட்டாள் பெரும்பாலும் தனக்கு பிடித்தவர்களிடம் மட்டும். உறவை வளர்ப்பதற்கு இது உதவும்.
=> தவிரவும் எதிரில் இருப்பவர் அதிக கோபப்படுபவராக இருந்தால் அப்படிப் பட்டவர்களிடம் எதை ஒன்றையும் சுத்தி வளைத்துத் தான் பேசுவாள், இதன் மூலம் அவர்களின் கோபத்தைத் தவிர்க்க பார்க்கிறாள் என்பது பொருள்.
=>கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல், இணைந்துப் போக விரும்புவதால் இப்படி பேசுவாள். மொத்தத்தில் அவருடனான சண்டையை தவிர்க்கவே இது போன்ற பேச்சினை கையாளுகிறாள்.
=> இத்தகைய மறைமுகப் பேச்சை ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசினால் அப்பெண் புரிந்துக் கொள்கிறாள், ஆனால் ஆண்களால் இது முடிவதில்லை. ஆண்களுக்கு இந்த மறைமுக பேச்சை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் சுத்தமாக இல்லை...! தர்மசங்கடம் என்ன என்றால் ஆணும் தனது மறைமுகப் பேச்சை புரிந்துக்கொள்ளணும் என்று எதிர்பார்த்து ஏமாந்துப் போய்விடுகிறாள்...!!
இதில் சில நேரம் சிக்கலும் ஏற்பட்டு விடும்
ஆண்களைப் பொறுத்தவரை நேரடியாக பேசிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள்.
=> பெண்களின் இது போன்ற பேச்சு அவர்களுக்கு குழப்பத்தைக் கொடுத்து விடுகிறது, இப்பேச்சில் முதிர்ச்சி இல்லை,நோக்கமும் இல்லை என்று சலிப்புடன் கூடிய வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது குறையையும் , குற்றத்தையும் வைத்துவிடுகின்றனர் ஆண்கள். முடிவில் பெண்ணுடன் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்திவிடுகிறது.
=> தவிரவும் வேலை செய்யும் இடத்தில் இது போன்ற பேச்சுக்கள் அவ்வளவாக வரவேற்கப்படுவதில்லை. அங்கே நேரடியான பதில்கள் தான் வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களிடம் சரியாகப் போய் சேரும்.
=> வேலை செய்யும் இடத்தில் ஒரு ஆணிடம் இப்படி பேசி அது புரியவில்லை என்றாலும் புரிந்ததுபோல் ஆமாம் என்று சொல்லிவிடுவார்கள். இதை வைத்து பெண் முடிவுக்கு வந்துவிட கூடிய விபரீதம் இருக்கிறது. அதனால் அங்கே இது போன்ற பேச்சுக்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது.
சூப்பர் பவர்
*ஒரு பிரச்சனையின் முடிவு தவறாக போய்விட்டால் அதையே சிந்தித்துக்கொண்டு சோர்ந்து விட மாட்டார்கள் அடுத்த ஆல்டர்நேடிவ் எதுவென பார்த்துகொண்டு போய்க் கொண்டே இருப்பார்கள்...! கைவசம் எப்பவும் பல ஆல்டர்நேடிவ் ஐடியாக்கள் இருக்கும் !!
* எத்தகைய சிக்கலான விசயத்தையும் வெகு சுலபமாக தாண்டிச் சென்று விடுவார்கள். பிறரின் பார்வையில் பெண் அதையே நினைத்து புலம்பிக் கொண்டிருப்பது போல் தோன்றும் உண்மையில் அவள் மனது இதில் இருந்து எப்படி வெளியில் வருவது என்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் இதை ஆண்கள் அறிய மாட்டார்கள்.
* சமாளிப்பதில் வல்லவர்கள். தவறு செய்திருந்தாலும் அதை அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மனசுக்கு பிடித்தவர்களிடத்தில் மட்டும் விரைவில் தவறை ஒப்பு கொண்டு சரணாகதி அடைந்துவிடுவார்கள்...!!
* பெண்கள் ரகசியத்தை காப்பாற்ற தெரியாதவர்கள் என்பார்கள். உண்மைதான் சிறு சிறு அல்ப விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள் வெளியில் சொல்லி விடுவார்கள் ஆனால் முக்கியமான அல்லது தங்களை பற்றிய ரகசியத்தை உயிர் போனாலும் வெளிவிட மாட்டார்கள்...! மிக நெருங்கியவர்களிடம் கூட சொல்லமாட்டார்கள்.
* ஒரு விஷயத்தை மறைக்கணும் என்று ஒரு முறை முடிவு செய்துவிட்டால் இறைவனே முயன்றாலும் தெரிந்துக் கொள்ள முடியாது.
* பெண்களின் மனம் ஒரு சமயத்தில் பல விஷயங்களை அசை போடும். ஒவ்வொரு விசயத்திற்கும் பல தீர்வுகளை யோசித்து வைத்து விடுவார்கள். (என்ன ஒன்று சமயத்தில் இதில் எந்த தீர்வு சரியாக வரும் என்பதை செலக்ட் பண்ணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்கள் தான் பெண்கள் சொல்லும் தீர்வுகளை கவனம் எடுத்து கேட்டுக்கொள்ளவேண்டும்.)
சில கேள்விகள் வேறு அர்த்தங்கள் !
* ஆணிடம் ஒன்றை எதிர்பார்த்து வேறு ஒன்றை பேசுவார்கள்...நீ என்னை விரும்புகிறாயா என்ற கேள்வி கேட்டால் ஆமாம் இல்லை என்ற நேரடி பதிலுக்காக இருக்காது...அன்பு காட்டுவதில் எங்கையோ தவறி விட்டாய் என்பதை குறிப்பால் உணர்த்தவே இந்த கேள்வி...!
* கோபமாக இல்லை என்று சொன்னால் ரொம்ப கோபமான இருக்கிறேன், சமாதானப்படுத்து என்று அர்த்தம்.
* எனக்கு மனசு சரியில்லை வருத்தமாக இருக்கிறது என்றால் நீயும் வருந்து என்று அர்த்தம்.
* 'எந்த அளவிற்கு என்னை பிடிக்கும்' என்று கேட்டால் அவனுக்கு பிடிக்காத எதையோ செய்திருக்கிறாள், 'என்னை பிடிக்கும் அல்லவா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ' என்று அர்த்தம் !
* 'பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது' என்று கேட்டால் ஏதோ விலை உயர்ந்த பொருள் வாங்க அடி போடுகிறாள் என்று அர்த்தம் !! :)
* 'அழகாக இருக்கிறேனா' என்று கேட்டால், தான் மட்டும் உன் கண்ணிற்கு அழகாக தெரியவேண்டும் என்று அர்த்தம். :)
இப்படி பெண்ணின் பேச்சிற்குப் பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம் புரியாமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு இப்ப முடிஞ்ச அளவிற்கு ஏதோ சிலவற்றை சொல்லி இருக்கிறேன். ஒரு அகராதி தொகுக்கும் அளவிற்கு உள்ளதால் இனி வரும் காலங்களில் சொல்லலாம் என நினைக்கிறேன்...! :)) எதற்கும் கொஞ்சம் பார்த்துப் பக்குவமா நடந்துகோங்க...ஏன்னா பெண் ஒரு புதிர் !!
படங்கள்- நன்றி கூகுள்








