வியாழன், அக்டோபர் 20

AM 9:36
28


எதற்கு எடுத்தாலும் உண்ணாவிரதம் இருக்கிறாங்கபா, நாடு கெட்டுவிட்டது  என்று சலித்து கொள்ளும் சராசரி இந்திய குடிமகன்கள் ஒருமுறை முறையான உண்ணாவிரதம் இருந்து பார்க்கவேண்டும்.அதன்பின் புரியும் இது எத்தகையதொரு வேள்வி, தியாகம் என்று. ஏற்கனவே கூடங்குளத்தில் நடந்து  முடிந்த 11 நாள் உண்ணாவிரதம் எல்லோரும் அறிவோம், அது முடிவுக்கு வந்ததும் அதை அப்படியே மறந்துவிட்டோம். ஆனால் முழு பட்டினி கிடந்த இவர்களின் நிலை...!? உண்ணாவிரதம் இருந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது சற்று சிரமம். இதில் கலந்துகொண்டவர்களில் கூடல்பாலா உடல்நலம் பாதிக்கபட்டுள்ளதாக போனில் பேசும்போது என்னிடம் கூறினார்.

சமூக சேவகி மேதா பட்கருக்கு கை கொடுக்கும் பாலா 

கூடன்குளம் போனபோது முதலில் அவர் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்தோம்...பாலாவும் அவரின் அம்மாவும் அன்புடன் வரவேற்றார்கள். சில சம்பிரதாய பேச்சுக்களுக்கு பின் அவரது உடல்நிலை பற்றி விசாரித்தேன். விரதம் முடிந்ததும் எப்போதும் போல் சாப்பிட தொடங்கி இருக்கிறார், தனது தொழில் நிமித்தமாக வெளியே சென்ற நேரம், திடிரென்று  இவர்  மயங்கி சரிந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்கள். 

தீவிர சிகிச்சைக்குப்பின், இப்போதும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். குடல் புண்ணாகி அல்சரில் கொண்டுபோய் விட்டு இருக்கிறது. என்னுடன் பேசிகொண்டிருக்கும் போது அடிக்கடி தன் இரு கைகளை நெஞ்சில் வைத்து அமுக்கி பிடித்துவிட்டு கொண்டே இருந்தார். தொடர்ந்து பேசினால் நெஞ்சடைப்பதை போல இருப்பதால் போனில் கூட அவ்வளவாக யாரிடமும் பேச இயலவில்லை என்றார். 

மிக மெதுவாக வித்தியாசமாக நடந்தார், அருகில் இருந்த அம்மாவிடம், 'ஏன் இப்படி நடக்கிறார்' என்று கேட்டேன். 'இப்பதான் இப்படி நடக்கிறான், அவனால் வேகமாக நடக்க இயலவில்லை, அதுதான் நாங்க வெளில எங்கும் அனுப்புறது இல்லை, வீட்டிலையே வச்சுக்கிறோம்' என்றார்.  நாங்கள் வருவது தெரிந்து பாலா சட்டை எடுத்து அணியவும் அவரது நான்கு வயது மகன், 'அப்பா வெளில போறீங்களா, வேண்டாம்பா' என்று கை பிடித்து தடுத்து  இருக்கிறான்...!!? இவருக்கு இப்படி ஆனது தெரிந்ததும் நண்பர்கள் உடனே இரண்டு வாழைதார்களை கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்கள். பழம், மோர், இளநீர், மற்றும் சுத்தமாக காரம் இல்லாத உணவு போன்றவற்றை மட்டும்  எடுத்துகொள்கிறார்.  


அவரிடம் 'உங்க மனைவி எங்கே?' என்றேன் 'காலையில் உண்ணாவிரத பந்தலுக்கு போயிட்டு மாலையில்  தான் வருவா' என்றார் பாலாவின் அம்மா. இவங்க வீட்டில் இருந்து அந்த இடம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. தினமும் சலிக்காம நடந்து சென்று வராங்க. ஊரில் இருப்பவர்களில் உடல்நிலை முடியாதவர்களும், மிக வயதானவர்களும் கலந்துகொள்வதில்லை.

எதற்காக இந்த தவ வாழ்க்கை ? யாருக்காக ? தெரிந்தே துன்பம் அனுபவிப்பதற்கு என்ன காரணம் ? யோசித்து பார்த்தால் இவர்களின் தியாகம் புரியும். இதில் சிறிதும் சுயநலம் இல்லை...

நமக்கு தேர்ந்தவரை பாலா ஒரு பதிவர் அவ்வளவே. ஆனால் அணுமின் நிலையத்தை பற்றிய செய்திகளை விரல் நுனியில் வைத்திருக்கிறார். நான் கேள்விகள் கேட்க கேட்க கணினியில் அது தொடர்பான செய்திகளை படங்களுடன் உடனே எடுத்து காட்டி விளக்கினார். கூடங்குளத்தில் நடக்கும் அனைத்தையும்  உடனுக்கு உடன் வெளி உலகத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிற கூடல் பாலாவிற்கு நாம் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். வாழ்த்துவோம்.

                                   இதில் ஆரஞ்ச் கலர் ஷர்ட்டில் இருப்பவர் பாலா 


அவர் நிறைய விஷயம் எங்களிடம் பகிர்ந்து கொண்டாலும் அதில் குறிப்பிட்ட சில மட்டும் இங்கே...

*  இது போன்ற பெரிய அணு உலைகள் மக்கள் தொகை மிக குறைவான பகுதியில்(16 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்)அமைக்கபடவேண்டும். இந்த அணுஉலை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் இங்கே...! 30 கிலோ மீட்டருக்குள் 10  லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள்.

* ஒருவேளை கதிரியக்கம் வெளியானால் கடலில் கலந்து கடல் வளங்கள் அழியும்.

* அணுஉலை கழிவுகள் மண்ணுக்கடியில் புதைக்கபட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.மேலும் இவற்றை 24 ,000 ஆண்டுகள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்...?!!!  

* அணுஉலைகள் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 9  மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த சுனாமி அலைகள் இரண்டு பனை மரம் உயரத்திற்கு மேல் எழும்பியது நினைவு இருக்கலாம். சமீபத்தில்
ஜப்பான் அணு உலையைத் தாக்கிய சுனாமி 20  மீட்டர் உயரம் .மேலும் அணு
உலையில் விபத்துக்கள் நிகழ சுனாமி மட்டும் காரணமாக இருக்காது ,மனித தவறு மூலமாகக்கூட நிகழலாம் . !! 

சுனாமி இங்கே வர வாய்ப்பு இல்லை என்ற சமாளிப்புகள், சமாதானங்கள் , அறிவியல் அறிவிப்புகள் இயற்கையின் முன் செல்லுபடியாகாது...இயற்கை அன்னை எப்போது, எந்த இடத்தை  தன் காலால் எட்டி உதைப்பாள் என யார் அறிவார்...? 2006 ஆம் ஆண்டுக்கு முன் சுனாமி என்ற வார்த்தை இருக்கிறது என்பதாவது நமக்கு தெரியுமா??    

* கூடங்குளத்தில் மின்னுற்பத்தி தொடங்க இன்னும் வேலைகள் பாக்கி இருக்கின்றன...மிச்சமும் முடிந்து உற்பத்தி பணி தொடங்க இன்னும் 1 1/2 அல்லது  2 ஆண்டுகள் ஆகலாம். (இந்த டிசம்பரில் தொடங்கிவிடும் என்று அரசு சொல்கிறது...?!) இதை இப்ப ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு முறை பதிவுலகில் மின்சாரம் பற்றிய பேச்சு வந்தபோது நட்புகள் என்னிடம் சொன்னார்கள், "உங்களுக்கு என்ன, அங்கே பக்கத்தில் கூடங்குளம் இருப்பதால் மின் வெட்டு பிரச்சனை இல்ல...!!?" சதா இணையத்தில் சுத்தி சுத்தி வந்தாலும் நம்மவர்களின் தெளிவு இந்த அளவில் தான் இருக்கிறது.



காற்றாலையின் மூலம் மின் உற்பத்தி 

கூடங்குளத்தில் சுற்றிலும் காற்றாலைகள், அவைகளின் ஒரு மணி நேர மின் உற்பத்தி (ஒரு காற்றாலை, ஒரு மணிநேரம் = 1 1/2 மெகா வாட்) 1,500 மெகா வாட்ஸ் !!

அணுஉலை மின் உற்பத்தியை தொடங்கினால் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்... (தமிழ்நாட்டுக்கு 45% மின்சாரம் கிடைக்கும் )    

இன்னும் அதிக அளவில் காற்றாலைகளை நிறுவினாலே அபிரிதமான மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். அதைவிடுத்து அணுஉலைகள் நமக்கு தேவையா என முடிவு  செய்யவேண்டிய முக்கியமான தருணமிது. 

ஊரை சுற்றி காற்றலைகளின் அணிவகுப்பால் மின் வெட்டு பிரச்சனை இங்கு கிடையாது.

 கல்பாக்கத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு என்று வேறு செய்திகள் வருகின்றன...! கூடங்குளத்தில் நடப்பது அவர்களுக்காக மட்டும் அல்ல, எங்கும் அணு உலைகள் தேவை இல்லை என்பதின் ஒட்டுமொத்த போராட்டம் !!


விடை பெற்றேன் 

நலம் விசாரிப்பு, அணுஉலை செய்திகள், பதிவுலகம், அரசாங்கத்தின் நிலை, மீடியாக்கள், கூடங்குளம் மக்கள், அரசியல் இப்படி கலவையாக பலவற்றை மனதில் ஏந்திக் கொண்டு அங்கிருந்து நானும் என் கணவரும் விடை பெற்றோம். 

உண்மையில் அவ்வூர் மக்களின் வெள்ளை பேச்சில் சிறிது நேரம் மயங்கித்தான் போனேன்.

உண்ணாவிரதத்தால் உடல் சுகவீனமானவர்களுக்கு அங்கே இருக்கும் ஒரு  ஹாஸ்பிடல் இலவசமாக வைத்தியம் செய்து வருகிறது.

இப்படி மனித நேயத்தை நேரில் கண்டும், உணர்ந்தும், கேட்டும் இன்னும் நான் என்னை பக்குவபடுத்தி கொண்டேன். இன,மதம், ஏழை, பணக்காரன் எல்லா வேறுபாட்டையும் மறந்து ஒன்று சேர்ந்திருக்கும் இவர்களின் நடுவில்தான் இறைவன் இருக்கிறான். இறைவனை  நேரில்  தரிசித்த   உணர்வில் இன்று நான் இருக்கிறேன். 

மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! 

இந்த மானுடம் வெல்லட்டும்...!!     

* * * * * * * * * * * * * * * * * *

நேரம் கிடைக்கும் போது இவற்றையும் படியுங்கள்


கூடங்குளம் அணுமின் நிலையம் : மாற்று தீர்வு இல்லையா ?

*  மாற்று வழிகள் பற்றிய ஒரு பார்வை 



* * * * * * * * * * * * * * * * * * 



Tweet

28 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி சகோ...உங்களுக்கு எங்கள் நன்றிகள்...தெளிவான நிலவரத்தை புரிய வைத்ததற்கு....திரு. பாலா சீக்கிரத்தில் குணமடைய வேண்டுகிறேன்...தர்மம் வெல்லும் நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி
    விரைவிக் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. //மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!!


    இந்த மானுடம் வெல்லட்டும்...!! //

    தெளிவான நிலவரத்தை புரிய வைத்ததற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பகிர்வுக்கு நன்றி........
    தொடர்ந்து எழுதுங்கள்.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  5. திரு.கூடல் பாலா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. நண்பர் கூடல் பாலா விரைவில் உடல் நலம் தேற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ,

    தாங்கள் சொல்வது போல் காற்றாலை மூலம் அந்தளவு மின்சாரம் கிடைக்கும் பொழுது அதையே நிறுவலாமே

    தகவலுக்கு நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  7. காற்றாலைகள் மூலம் நீங்கள் சொல்லியபடி மின்சாரம் தயாரிக்க இயலாது . கொஞ்சம் இந்த வலைப்பதிவை பாருங்களேன்

    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  8. நல்ல பல தகவல்கள் அறிய முடிந்தது. பகிர்வுக்கு நன்றி. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  9. மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!! //
    'நச்'னு முடிச்சிட்டீங்க கௌசல்யா. அத்தனையும் அழிந்து போன பின் நீயென்ன? நானென்ன? இது புரியாம சண்டை போடுறாங்களே?

    பதிலளிநீக்கு
  10. அன்பு சகோதரி,
    நண்பர் கூடல்பாலா பற்றிய செய்திகள் நெஞ்சை பிசைகிறது.
    சுயநலமற்ற எண்ணம் கொண்ட நம் நண்பரின் முயற்சிகள்
    வெற்றியடைய மனதார வேண்டுகிறேன்.

    நண்பர் கூடல்பாலா அணுசக்தி பற்றிய செய்திகளை விரல்நுனியில் வைத்திருக்கிறார்
    என்பது நிதர்சனமான உண்மை.
    நண்பர் சூர்யஜீவாவின் பணியும் மிகச் சிறந்தது.
    நண்பர் கூடல்பாலாவின் எண்ணங்களுக்கு தோள் கொடுப்போம்.

    தெற்காசிய நாடுகளில் இப்போது நடுக்கடலில் காற்றாலைகள் போடும்
    திட்டத்தில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள்.
    சூர்யா சக்திக்கு இணையாக நமக்கு மின்சாரம் தயாரிக்க
    காற்றாலைகள் உதவுகின்றன.
    நேரலைக் காட்சிகளை எங்களுக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. சகோ . உங்களின் கட்டுரை வரைந்த விதம் அருமை. ஆனால் எனக்கு கொஞ்சம் மாற்று கருத்துகள் உள்ளன .
    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த எனது வலைபதிவுக்கு சென்று வாருங்கள். உங்கள் ஐயம் கொஞ்சம் தீரும் .
    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html
    நன்றி

    பதிலளிநீக்கு
  12. @@ விக்கியுலகம்...

    நன்றிகள்.



    @@ இராஜராஜேஸ்வரி...

    நன்றி தோழி.



    @@ சே.குமார்...

    நன்றி குமார்.



    @@ Kannan...

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. @@ M.R...

    கருதிட்டமைக்கு நன்றிகள்.



    @@ Anonymous said...

    //காற்றாலைகள் மூலம் நீங்கள் சொல்லியபடி மின்சாரம் தயாரிக்க இயலாது//

    காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது என்பது போல் உள்ளது உங்கள் கருத்து. :))

    வீசும் காற்றின் அளவு கூடும் குறையும்...அது இயற்கை !! காற்றாலைகள் இயங்கி மின் உற்பத்தி செய்ய காற்றின் வேகம், வினாடிக்கு மூன்று மீட்டர் என்ற அளவில் இருக்கவேண்டும்.

    வினாடிக்கு 15 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் மின் உற்பத்தியின் அளவு முழுமையாக இருக்கும். அதிக அளவில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு இருந்தால், இந்த அளவு வீசும் போது உற்பத்தி செய்து சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

    ஆனால் அரசு இங்கே உற்பத்தி செய்யபடுற காற்றலை மின்சாரத்தை ஒரு யூனிட் விலை 3.39 க்கு வாங்கி வெளிமாநிலத்துக்கு இலவசமா வழங்கி கொண்டு இருக்கிறது...!! முடிவு தொடரும் மின்வெட்டு இங்கே !
    தமிழ்நாட்டின் தலைஎழுத்து !!

    வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. @@ வை.கோபாலகிருஷ்ணன்...

    நன்றிகள் ஐயா.



    @@ நாய்க்குட்டி மனசு said...

    //அத்தனையும் அழிந்து போன பின் நீயென்ன? நானென்ன?//

    அதானே, இது புரிந்தும் மறந்து போறோம்னு நினைக்கிறேன்.

    நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  15. மகேந்திரன் said...

    //தெற்காசிய நாடுகளில் இப்போது நடுக்கடலில் காற்றாலைகள் போடும்
    திட்டத்தில் மும்முரமாக இறங்கிவிட்டார்கள்.
    சூர்யா சக்திக்கு இணையாக நமக்கு மின்சாரம் தயாரிக்க
    காற்றாலைகள் உதவுகின்றன.//

    நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க. நம் அரசும் காற்றாலை மற்றும் சூர்ய சக்தி இரண்டையும் அதிகளவில் பயன்படுத்துவதை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    கருத்துக்களுக்கு நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  16. பாலாவைப்போல் இன்னும் எத்துணை பேர் பாதிக்கபட்டிருப்பார்கள் என என்னும் போது மிகவும் கவலையாக உள்ளது...
    ஒரு மனிதனை உண்டு இன்னொரு மனிதன் வாழக்கூடிய நிலை மாறவேண்டும்...ஆனால் இதுதான் அறிவியல் என்றால் என்ன செய்வது ?

    பதிலளிநீக்கு
  17. @@ இருதயம் said...

    //எனக்கு கொஞ்சம் மாற்று கருத்துகள் உள்ளன .
    கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்த எனது வலைபதிவுக்கு சென்று வாருங்கள். உங்கள் ஐயம் கொஞ்சம் தீரும் .//

    வருகைக்கு நன்றிங்க. எனக்கு ஐயம் இருக்கு என்று எங்கும் சொல்லவில்லையே...! ஓரளவு தெளிவாகதான் இருக்கிறேன்னு நினைக்கிறேன் :)

    அவசியம் தங்கள் தளம் வருகிறேன், உங்களின் கட்டுரைகளை வாசிக்க...

    மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. @@ Surya Prakash said...

    //ஒரு மனிதனை உண்டு இன்னொரு மனிதன் வாழக்கூடிய நிலை மாறவேண்டும்...ஆனால் இதுதான் அறிவியல் என்றால் என்ன செய்வது ?//

    ஆதங்கத்துடனான கருத்துக்கள்.

    கருதிட்டமைக்கு நன்றிகள் சூர்யா.

    பதிலளிநீக்கு
  19. போராட்டத்தின் காரணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, என்றாலும் கொள்கைத் தீவிரம் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் நல்லெண்ணங்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நல்ல coverage கொடுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் சமூகப் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  21. சகோ நான் சற்று நேரதிர்க்கு முன் கூடன்குள அணு உலையை பற்றி கீழ் கண்ட வலைப்பதிவில் படித்தேன், நீங்கள் நேரம் இருக்கும் போது அதை வாசித்துவிட்டு எனக்கு தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html?showComment=1319115902921#c6618282259285605487)

    பதிலளிநீக்கு
  22. பாலா அவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப பிராத்திப்போம்.அவருடன் இணைந்து போராடிய அனைவுக்கும் சேர்த்து!

    பதிலளிநீக்கு
  23. மனிதர்களிடம் சண்டை இடாதீர்கள்.....மனிதர்களுக்காக சண்டை இடுங்கள்...!!

    இந்த மானுடம் வெல்லட்டும்...!!

    //
    நிச்சயம் வெல்லும் சகோ!

    பதிலளிநீக்கு
  24. மண்ணுக்கு உரமாகாமல் மக்களுக்கு உரமாகும் சிந்தனை உள்ளவர் கூடல் பாலா, அவரை போன்ற தன்னலம் கருதாத மனிதர்கள் தான் கடவுள்... வேறு எங்கும் தேட வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  25. தன்னலம் கருதாத மனிதர்

    விரைவில் உடல் நலம் குணமடைய பிரார்த்திக்கிறேன்

    நேரடி ரிப்போர்ட் அனுபவ பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு
  26. அவருடன் தொலைபேசியில் பேசிய போதே அவரின் நல்ல எண்ணம் குறித்து அறிந்தேன்.

    அவர் நலமடைவதுடன், அவர்களின் கோரிக்கையும் வெற்றி பெறட்டும்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...