வியாழன், ஆகஸ்ட் 26

அவசர உலகில் நம் குழந்தைகள்



ஒரு சமுதாயம் நல்ல விதத்தில் இருப்பதற்கு இன்றைய குழந்தைகளின் வளர்ப்பு மிகவும் அவசியம், இவர்கள் தான் நாளைய சமுதாயம். அதனால் இந்த விசயத்தில் நாம்  அசட்டையாக இருக்காமல் இன்னும் அதிகமாக கவனம் எடுத்து கொள்வது காலத்தின் கட்டாயம்.    




இன்றைய அவசர உலகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன்  செலவு செய்யும்  நேரம் மிகவும் குறைவு தான். குழந்தைகள் நம்முடன்  வீட்டில் இருக்கும் நேரத்தை விட ஸ்கூல், டியூஷன், playground , டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ்  இந்த மாதிரி இன்னும் பல காரணங்களால் வெளியே தான் பல நேரத்தை செலவு செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் கொஞ்ச நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் அவர்களை ஆக்கிரமித்து கொள்கின்றன.


பெற்றோர்களும் நம்மை தொந்தரவு செய்யாமல்  விட்டால் சரி தான் என்று விட வேண்டியதாகி விடுகிறது. பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது, பெரும்பாலான இளம் பெற்றோர்களில்  இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பார்கள், அலுவலக களைப்புடன் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்ய வேண்டி இருப்பதால் சோர்ந்து விடுவார்கள். தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவே அவர்களுக்கு நேரம் கிடைப்பது இல்லை. இதில் குழந்தைகளுடன் இருக்க இயலாத நிலையே உள்ளது.

ஆனால் இதையே காரணமாக சொல்லி தங்களை தாங்களே சமாதானம்  செய்து கொள்வது சரி இல்லை.

சமுதாயதிற்கு நல்ல பிள்ளைகளை கொடுப்பது உங்கள் கடமை.  ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்ககூடிய 'தார்மீக பொறுப்பு' இளம் பெற்றோருக்கு இருக்கிறது. நம்முடைய அன்பான, கண்டிப்புடன் கூடிய அரவணைப்பில் வளராத பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமாக சுபிட்சமாக, வளமாக இருக்காது !!


'குழந்தை வளர்ப்பு பற்றிய திட்டமிடல்' இப்போது கண்டிப்பாக தேவை படுகிறது. குழந்தைகளை நோய்கள், விபத்துகள் இவற்றில் இருந்து பாதுகாத்து வளர்க்கணும்... நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுக்கணும், படிப்பு மற்றும் பள்ளி சம்பந்தமான விவகாரங்களை பார்த்துக்கொள்ளவேண்டும். இது மாதிரி இன்னும் பல உள்ளன..அவற்றை சொல்லி கொண்டே போகலாம். இந்த மாதிரியான விசயங்களை  பெற்றோர்கள் நேரடியாக கண்காணித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக  உருவாகும்.      

சர்வதேச கணக்கெடுப்பு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதை படிக்கும் போதுதான் இன்றைய நமது நிலை அதிர்ச்சி அளிக்கிறது...அந்த விவரங்கள் கீழே.....

*  பெற்றோர் இருவரும் வேலை பார்க்கும் சராசரி குடும்பங்களில் ஒரு வாரம் முழுமைக்கும் ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்றாக இருந்து செலவழிக்கும் நேரம் வெறும் 45 நிமிடங்கள் மட்டும்தானாம்....??!!

*   சுமார் 5 முதல் 16  வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒருவர் வாரத்துக்கு இரண்டு நாள்களாவது தம் பெற்றோரை பார்க்காமலேயே உறங்கச் செல்கிறார்களாம்...??!

*   வெறும் 20 சதவீத குடும்பத்தினர்தான் வாரத்துக்கு ஒரு நாளோ இரண்டு நாட்களோ குடும்பத்துடன் மொத்தமாக அமர்ந்து காலை உணவோ மதிய உணவோ அல்லது இரவு உணவோ உட்கொள்கிறார்கள்...??! 

*   கிட்டத்தட்ட இரண்டாயிரம் பெற்றோரிடம் கணக்கெடுப்பு  நடத்தியதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் ஒத்து கொண்ட  ஒரே  கருத்து , 'தங்கள் குழந்தைகளின் ஒரே பொழுது போக்கு, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்ற நவீன சாதனங்கள்தான் ' என்பது தானாம்.....!!?

இது நிச்சயம் ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை. என்ன செய்ய போகிறோம் பெற்றோர்களே...!!? 

நாம் எல்லோருமே வாழ்கையில் நம் குழந்தைகளுக்கு மிக சிறந்த விசயங்கள் எல்லாவற்றையும் கிடைக்க செய்ய  வேண்டும் என்று தானே விரும்புவோம்..அப்படி நல்ல விசயங்களை கொடுத்து வளர்க்க செய்ய சில நல்ல வழி முறைகள் இருக்கின்றன. 

அவை என்ன வென்று தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்...  


         ௦      

செவ்வாய், ஆகஸ்ட் 24

'முதல் இரவு' - தாம்பத்தியம் - பாகம் 16

இதற்கு முந்தைய பதிவைப்  படிக்காதவர்கள்,


தாம்பத்தியம் பாகம் 15 படித்து விட்டு வந்தால் தொடர்ச்சிப்  புரியும் என்று நினைக்கிறேன். 

தாம்பத்தியத்தின் முக்கியக்  கட்டமாகிய அந்தரங்கம் பற்றியது தான் இனி வரும் பதிவுகள். நான் ஏற்கனவே சொன்னதைப்   போல் பல குடும்பங்களின் தலையெழுத்து அங்கே நடக்கும் விவகாரங்களை வைத்தே  எழுதப்படுகிறது. ஆனால் பல குடும்பங்களிலும் இதை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.

இதைவிட முக்கியம் வேறு ஒன்றும்  இல்லையா என்பதே...? முக்கியமானதில்,  இதுவும் ஒன்று அவ்வளவுதான்.  'பல ஊடலும்  சரியாவது, கூடலில்  தான்' அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை ஏனோ பலரும் சரிவர கையாளுவது இல்லை.  ஒரு கணவன்,  மனைவி ஆகிய இருவரின் புரிதல் அங்கிருந்தேத்  தொடங்குகிறது...

முதல் நாள் இரவு

சாந்தி முகூர்த்தம் என்றால் " காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது " என்பது தான் அதன் அர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்

ஆனால் முதல் நாளே நடந்துதான்  ஆகவேண்டுமா  என்பதுதான் இப்போதைய காலக் கட்டத்தை மனதில் வைத்து எழும் கேள்வி.

இருவேறு கலாச்சாரம், குடும்பச்  சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஆண், பெண் இருவரையும் திருமணம் என்ற பந்தம் இணைக்கிறது என்பது அற்புதமான ஒரு நிகழ்வு.  மாறுபட்ட எண்ணங்கள், வேறுபட்ட உணர்வுகள் என்று வளர்ந்த இருவரையும் அந்த ஒரு நாள் இணைக்கிறது. ஒருவருடைய  விருப்பு, வெறுப்பு என்னவென்று மற்றொருவருக்கு அந்த ஒரே  நாளில் எவ்வாறு  தெரிந்துக்கொள்ள முடியும்.  அப்படி எதையும் தெரிந்துக் கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல், உணர்வுகள் கலக்காமல் வெறும் இரு உடல்கள் மட்டும் கலப்பது என்பது ஒரு வித ஆர்வகோளாரில்  கொண்டுப் போய்விட்டு விடுகிறது ...??

தவிரவும் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் கூட இன்னும் ஒருவரின் ஆசைகள், தேவைகள், எண்ணங்கள் என்ன என்றேப்  புரியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காலையில் தாலி கட்டி பின் அன்று இரவுக்குள் அவர்களுக்குள் எப்படி புரிதல் வந்து இருக்க முடியும் ?? அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமைப்  பெற்றதாக இருக்கமுடியும்...??  அவசர கோலத்தில் அள்ளித்  தெளித்த ஒன்றாகத்தான் முடியும்.

அது இருவரில் ஒருவரின் ஏமாற்றத்தில் கூட முடிந்து விடலாம், அந்த ஏமாற்றம் வாழ்வின் இறுதி வரை கூட தொடரக்கூடிய வாய்ப்புகள்  இருக்கிறது. " first impression is the best impression " என்று சொல்வார்கள். அதனால் மிகவும் சென்சிடிவான இந்த விஷயத்தை கையாளுவதில் இருவருக்கும்  மிகுந்த கவனம் தேவைபடுகிறது.

நம் முந்தைய காலத்தில் பெரியவர்கள் நல்ல நேரம், காலம் பார்த்து இதனை நடத்தினர் . பிறக்க  போகும் குழந்தையை மனதில் வைத்து நேரத்தை முடிவு செய்தனர்.  அப்போது இருந்த ஆண், பெண் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் என்பது இப்போது இருப்பது போல் அதிகம் இல்லை. அதனால் பெரியோர்களின் வழி நடத்தலின் படி நடந்தார்கள்...., அதனால் இருவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சனை என்றால் அவர்கள் தலையிட்டுத்  தீர்த்து வைத்துவிடுவார்கள்.  அதனால் பிரச்ச்னை  அந்த நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருந்தன.

இந்த அவசர உலகத்தில் இருவரும் புரிந்துக்  கொண்டு கலப்பது மட்டுமே  தொடர்ந்து வாழ்க்கை நல்ல விதத்தில் பயணிப்பதற்கு உதவியாக இருக்கும்.

அன்றே முடியவேண்டும் என்பது கட்டாயமா??
என்ற  கேள்வி அவசியமா என்றால் அவசியமான கேள்விதான் . சில குடும்பங்களில் பிரிவினைக்கு அதாவது கருத்து வேறுபாட்டுக்கு  காரணம் என்ன என்று விரிவாக விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர்கள் சொல்லும் ஒரு வியப்பான பதில் , " அன்னைக்கு ராத்திரியிலேயே தெரிந்து விட்டது இவர் அல்லது இவளுடன் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று...!! " .

அது எப்படி ஒரே இரவில் ஒருவர் சரி இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்...?? காரணம் ரொம்ப சுலபம். அங்கே தான் முழு வாழ்க்கைக்கும் தேவையான அஸ்திபாரம்   போடப்படுகிறது. அது அங்கே சரிவர போடப்படவில்லை என்றால் , வாழ்க்கை என்ற முழு கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஏன் பேச தயங்க வேண்டும்...??

சில ஆலோசனைகள்

பூ மலரட்டுமே இயல்பாய்..!!

எதையும் முடிவுச்  செய்ய வேண்டியது திருமணம் முடிந்த அந்த 'புதுமண தம்பதிகள்' தான். இருவருமே ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்...அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பே 'நான்' என்பதை மறந்து விட்டு புது களி மண் போல மனதை வைத்துக்  கொண்டுச்  செல்லவேண்டும். படித்த படிப்பு, அந்தஸ்து, செல்வாக்கு, அழகு குறித்த பெருமை  அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும்....! (புது  மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது  அழகான சிலையாகவோ ??  'எதை'  என்பது அவர்களைப்  பொறுத்தது).

தோழிகள், நண்பர்கள் என்று பலரும் சொல்லும் அறிவுரைகளை மனதில் வைத்து கொண்டுதான் பலரும் நடந்துகொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் வெளியில் விட்டுவிட்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் தான் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள், புதிதாய் பார்க்கும் நண்பர்களின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் உங்களின் உரையாடல். அதுவே உங்களின் படபடப்பு, பயம், அச்சம், வெட்கம் அனைத்தையும் விரட்டும். உங்கள் மனமும், உடலும் அப்போதே உற்சாகமாகி விடும். தெளிவாக  தயக்கம் இன்றி பேசுங்கள்...

இங்கு ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்வில் நடந்த, 'பிறரிடம் பகிர்ந்துக்  கொள்ளக்கூடாத' காதல் மாதிரியான சென்சிடிவான விசயங்களை சொல்லிவிடுவார்கள்.(பொய் சொல்ல சொல்றீங்களா  என்று நினைக்காதீர்கள்...உண்மையை சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அது இனி தொடரப்போகும் வாழ்க்கைக்கு முக்கியமும் இல்லை, தேவையும் இல்லை) காதல், ஈர்ப்பு போன்ற விசயங்கள் இப்போது சகஜமான ஒன்று. துணையிடம்  உண்மையைச்  சொல்கிறேன் பேர்வழி என்று கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிந்தது கதை.

எந்த ஒரு பெண்ணும், எந்த ஒரு ஆணும் தனது துணை இன்னொருவரால் காதலிக்கபட்டவர் என்பதை ஜீரணிப்பது என்பது சிரமம். அவர்களும் அந்த நேரம் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார்கள்  " இதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி உனக்கு நான் எனக்கு நீ " என்று கூட வசனம் பேசலாம்.  ஆனால் கொஞ்ச நாள் சென்றதும், இந்த உண்மை அவர்களின் மனதைக்  கண்டிப்பாக யோசிக்க வைத்து குழப்பும். சாதாரணமாக  வேறு யாரிடம் பேசினாலும் மனதில் கேள்வி குறி தோன்றும்..அப்புறம்  சந்தேகமாக உருவெடுக்கும்.......அப்புறம் என்ன உங்கள் நிம்மதி குலையும்.....தினம் போராட்டம் தான்.

அதனால் பழைய கதை பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை... எல்லோரின்  வாழ்விலும் ஏற்படக்கூடிய ஈர்ப்புதான் என்று ஒதுக்கி விட்டு இனி வாழப்போகும் பாதையை ஒழுங்குப்படுத்துவது தான் முக்கியம் என்ற திட  நம்பிக்கை கொண்டு கருத்துகளைக்  கவனமுடன் பரிமாறி கொள்ளுங்கள்.

இறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம்  நடக்கட்டும் இயல்பாக.  ஆனால் கல்யாணக்  களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது.  இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாகக்  கேட்கப்பட வேண்டும். அவளின்  விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்கப்படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை. 

விருப்பம் இல்லை என்ற மாதிரி தெரிந்தால் பெரியக்  கட்டத்திற்கு போகாமல் சின்னச்சின்ன சீண்டல்கள், சில அன்பான வருடல்கள், மென்மையான சில முத்தங்கள் , ஆதரவான அணைப்பு இவற்றுடன் அந்த நாளை நிறைவுப்படுத்துங்கள். தன்னுடைய எண்ணத்திற்கும் கணவன் மதிப்புக்  கொடுக்கிறாரே என்று  எண்ணி நீங்கள் அவளின் மனதில் விரைவாய் குடியேறி விடுவீர்கள். முதலில் தனது துணையை  காதலிக்கத் (கற்றுக்கொள்ளுங்கள்)தொடங்குங்கள்...! அப்புறம் பாக்கலாம் மற்றதை...!!

அற்புதமான இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து சுவையானதாக மாற்றுங்கள். எல்லாம் அந்த ஒரு நாளில் மட்டுமே முடிந்துப்  போய் விடுவது இல்லை. அந்த நாள் ஒரு இனிய  தொடக்கம் மட்டுமே...இனி தொடரும் நாட்களில் மெது மெதுவாய் முன்னேறி அடுத்து  வெல்லுங்கள் அவளின் மனதையும், அழகையும்..... !

பின் குறிப்பு 

ஒருவேளை அன்றே நடக்கவில்லை என்றால் சில விரும்பத்  தகாத நிகழ்வுகள் அடுத்து நடக்கலாம்....??!!  அவை என்ன என்று அடுத்து தொடர்ந்துப் பார்க்கலாம்.

தொடர்ந்துப் பேசுகிறேன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.     

திங்கள், ஆகஸ்ட் 23

நண்பர்களே ஒரு உதவி...!



இதை இந்த பதிவில்  படித்தேன். 



பூஜா என்ற இளந்தளிரை ஒரு கொடூரன் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்திருக்கின்றான்.  நாம் பல பேருந்து நிலையங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பிச்சையெடுப்பதை , கையில் தட்டினை வைத்துகொண்டு அவர்கள் கெஞ்சும்போது விழும் தட்டில் தானாகவே காசும் கண்ணீரும்..


பூஜாவை வைத்து பிச்சை எடுக்கும்போது அவன் கேரளா போலீசிடம் சிக்கியுள்ளான்.


பூஜா தற்போது திருவனந்தப்புரத்தில்  உள்ள நிர்மலா சிசு பவனில் சேர்க்கப்பட்டுள்ளாள்
போலீசார் அந்த பிச்சைகாரன் மூலம் குழந்தையின் இருப்பிடத்தை
கண்டறியலாம் என அவனிடம் விசாரிக்கும்போது , குழந்தையின் துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்....


அந்த குழந்தை மழலை மொழியில் சொன்ன விபரங்கள்.:


தந்தை பெயர் : ராஜு  , தாயின் பெயர் : முன்னிதேவி ,
பிறந்த இடம் நாகலுப்பி ,
தனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருப்பதாக கூறியுள்ளாள்.
விசாரித்துப் பார்த்ததில் அதுபோன்ற ஒரு இடம் யாரும்
கேள்விப் பட்டதாகவே தெரியவில்லை...

யாருக்கேனும் இந்த குழந்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ.அல்லது குழந்தையைத் தேடும் பெற்றோர் பற்றி தெரிந்திருந்தாலும் கேரளாவில் உள்ள நிர்மலா சிசு பவனுக்கு தெரிவிக்கலாம்.
  தொலைபேசி  எண்   0471 - 2307434 
  இதைப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

 பதிவர்கள் அனைவரும் இதனை ஒரு இடுகையாக  இடலாமே...


இதன் மூலம் நிறைய  பேரை இந்தச் செய்தி சென்றடையும் என்று ஓர் நம்பிக்கை..


இதைப் படிப்பவர்கள் யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம்.எத்தனையோ தொடர் பதிவுகளைப் போடுகிறோம். ஒரு நல்ல காரியாத்துக்கு இதை செய்வோமே ?? இதனை forward  செய்ய எதுவும் நீங்கள் செலவழிக்க போவதில்லை.
உங்கள் நல்ல மனது மட்டுமே போதும்...


செய்வீர்களா நண்பர்களே.!!!!

புதன், ஆகஸ்ட் 18

கண்டனம் 3 - பெண்பதிவர் என்பவர்கள் இங்கே கேலி பொருளா...??


எனது இந்த கண்டனமும் பதிவுலகத்தை நோக்கியே தான்...??!! எங்கே நான் இருக்கிறேனோ அங்கே நிகழும் முறையற்ற செயல்களையே என்னால் சுட்டி காட்ட முடியவில்லை என்றால் வெளி உலகில் நிகழுவதை என்னால் எப்படி சாட முடியும்....

இந்த பதிவுலகில் கடந்த சில தினங்களாக என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்று சிலருக்கு தெரியும் ...பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பெண் பதிவர்களை பற்றிய இந்த பிரச்னைக்கு அவர்கள் சார்பில்  எனது இந்த கண்டனத்தை தெரிவிக்கிறேன். சில விசயங்களை ஆற போடுவது சரி இல்லை.

எழுதியவனை நோக்கி 

வலிமை மிகுந்த ஆயுதமான எழுத்து தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதலாமா ?? அதுவும் முறையற்ற விதத்தில் பதிவுலக பெண் எழுத்தாளர்களை கேலி சித்திரமாகவும் , கேளிக்கை பொருளாகவும் உருவகபடுத்தி....??!!

பொதுவாக ஒரு பெண் கட்டாயம் விமர்சனத்துக்கு உட்பட்டுதான் ஆக வேண்டுமா....?? 

எழுதியவனிடம்  'ஏன் இப்படி எழுதுகிறாய்'  என்று கேள்வி கேட்டதிற்கு 'தன்  தளத்தை விளம்பரபடுத்த இப்படி எழுதுகிறேன்' என்று கேவலமான மட்டமான பதில் வருகிறது.. உன் விளம்பரத்திற்கு கூட பெண்கள் தான் தேவைபடுகிறதா...? பெண் பதிவர்களாகிய எங்கள் புடவையின் பின்னால் மறைந்து நின்று தான் நீ பிரபலம் ஆகவேண்டுமா..... ??  மதி கெட்ட மூடனே வெட்கமாக இல்லையா  உனக்கு.....?? 

உனக்கு இரண்டு சகோதரிகள் உண்டு என்பதை அறிவேன்...அவர்களை இப்படி கேவலமாக சித்திரம் வரைந்து நாலு பேர் பார்க்கும் இடத்தில் வைக்க வேண்டியது தானே...?? 

அன்பு பெண் பதிவர்களே...

நீங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால்.......இன்று,  இவன் நம்மை பற்றி எழுதுவான....நாளை வேறொருவன் எழுதுவான்...இது தொடர்கதையாகும்....சிலருக்கு பெண்மையை இகழ்வது ஒரு மனோவியாதி......அப்படிபட்ட வியாதி உள்ளவர்கள் இங்கே அதிகம் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்..... 

மேலும் ஒன்றை நினைவு கொள்ளுங்கள்...பெண்மை கேலி பொருள் அல்ல....நம் எழுத்தை விமர்சிக்கலாம்...நம் உருவத்தை விமர்சரிக்க கண்டவனுக்கும் இடம் கொடுக்க கூடாது....இப்போது இவர்களை வம்பிற்கு இழுத்தவன் நாளை உங்களையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்....இதைவிட மோசமாக...விபரீதமாக...!!

என் மரியாதைக்குரிய பதிவுலக தோழர்களுக்கு

சாதி, மத , கடவுள் பற்றி ஏதாவது பதிவுகள் வெளி வந்தால் உடனே முகமற்று வரும் அனானிகளின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு காற்றில் கத்தி சண்டை போட்டு கொண்டு இருக்கிறீர்கள்... அதை தவறு என்று சொல்லவில்லை. ..... 

ஆனால் அதே நேரம் இப்போது முழு விலாசத்துடன் , முகம் காட்டி எழுதிக்கொண்டு இருக்கிறவனை என்ன செய்ய போகிறீர்கள்....???  இவனுக்கு உங்கள் கண்டனத்தை தீவிரமாக தெரிவிக்க வேண்டும்...


விஷ செடியை ஆரம்பத்தில் பிடுங்க வேண்டும்...இதுவரை ஆறு பெண் பதிவர்களை பற்றி எழுதி உள்ளான்...இது தொடரும்...எப்போதும் போல் நம் வீடு பாதுகாப்பாக தானே இருக்கிறது என்று மெத்தனமாக இருக்காமல் அந்த செடியை வேர் அறுத்து போடுங்கள்...

உங்கள் வீட்டு பெண்ணிற்கு இந்த மாதிரி நடந்தால், " நாம் நடக்கும் பாதையில் கல், முள் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்கணும் அல்லது எடுத்து போட்டு விட்டு நடக்கணும் "என்று தத்துவம் பேசி கொண்டு இருப்பீர்களா...??  தெளிவு படுத்துங்கள்.  

நண்பர்களே..., நான் சொல்வது சரியென்று பட்டால் உங்கள் கண்டனம் பாயட்டும்..அவனை நோக்கியும் அவனை  போன்றவர்களுக்கு  எதிராகவும் ......

பின் குறிப்பு.

1  அவனது தவறை நான் சுட்டி காட்டியபின் பெண்களின் பெயரை எடுத்துள்ளான். ஆனால் வெறுப்பிற்கு உரிய அந்த சித்திரம் நீக்கப்படவில்லை. 

2  அந்த தளத்தின் முகவரி கொடுக்கவில்லை காரணம்...இந்த  பதிவு சம்பந்தபட்டவனுக்கு போய் சேரணும் என்ற நோக்கில் எழுதப்பட்டது   இப்படி ஒரு கேவலமான பதிவினை வெளியிட்ட தளத்தையும், ஆளையும் குறிப்பிட்டு சொல்லி பிரபலபடுத்தும் அளவிற்கு அவன் பெரிய ஆளில்லை. இந்த பதிவின் சாரம் போய்ச்சேரந்தால் சரிதான்.



திங்கள், ஆகஸ்ட் 16

மின்சாரம் - மகிழ்ச்சியான செய்திகள்

நம் நாட்டில் இப்ப இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றுதான் 'மின்தட்டுப்பாடு'.  நம்ம அரசும் என்ன என்னவோ முயற்சி செய்தாலும் (உண்மை தாங்க ) இதை மட்டும் சரி படுத்தவே  முடியவில்லை...??!! தினம் இரண்டு மணி நேரம் இல்லை மூணு மணி நேரம் விருப்பம் போல் கரண்ட் கட் தான். ஆனால் மின் உற்பத்திக்காக பல இடங்களில் மின் காற்றாலைகளை  நிறுவி வந்தாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. ஆனால் மின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை இங்கே பார்க்கலாம். 

அதில் முக்கியமான ஒன்றுதான் 'மரபு சாரா எரிசக்தி'. அதாவது விவசாய கழிவுகள், நெல் உமி, தேங்காய் மட்டை, காடுகளின் கழிவுகள், கோதுமை கழிவு, குப்பை இவைகளில் இருந்தும்  மின் உற்பத்தி பண்ண முடியும், இவை எல்லாம் மரபு சாரா எரிசக்திகள். இவற்றில் இருந்து எல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாத  புது தகவல்  என்று நினைக்கிறேன். (ஒருவேளை உங்களுக்கு தெரிந்து இருந்தால் விவரங்களை சொல்லுங்கள் , உபயோகமாக இருக்கும் )

பல பொறியாளர்கள் பரிந்துரை செய்தும், நம் தமிழ் நாடு அரசு இவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய இதுவரை முயற்சி எடுத்ததாக  தெரியவில்லை ??  காரணம் தெரியவில்லை...?? ஆந்திராவில் நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய  45 மின் உற்பத்தி நிலையங்கள் 4 வருடங்களாக செயல்பட்டு வருகின்றன...??!!  அங்கே அனுபவமிக்க பொறியாளர்களின் ஆலோசனையினை   பெற்று அதன்படி வெகு ஜோராக மின் உற்பத்தி செயல்படுத்தபட்டு வருகிறது. இன்று 45 நிலையங்களில் ஒவ்வொன்றும் தலா 6  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது கொஞ்சம் மகிழ்ச்சியான செய்திதான். 

மின் உற்பத்தி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்......இருக்கும் மின்சாரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோம் என்பது தெரிந்தால் நம்முடைய ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகும்.....

முறையற்ற மின் விநியோகம்

மின்சாரத்தை கொண்டு போய் விநியோகம் செய்யும் வழிமுறைகளினால் மட்டும் 30௦%  மின்சாரம் வீணாகிறது என்பதே அந்த  அதிர்ச்சியான செய்தி. ஆனால் பெருமையான விஷயம் என்னனா இந்த ஒழுங்கற்ற மின் விநியோகத்தால் மின்சாரத்தை வீணாக்குவதில் உலகத்திலேயே இந்தியாவிற்க்குதான் முதல் இடமாம்..... என்ன கொடுமைங்க இது ??!!

இதிலும் தமிழகத்தின் நிலை இன்னும் மோசம். மத்திய மின்சார ஆய்வு நிறுவனம் தமிழகத்தில் தற்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பார்மர்களை  மாற்றச் சொல்லி 5 வருடம் ஆகிறதாம்....இதுவரை மாற்றவில்லை. ( இன்னும் பல வருடம் ஆகும்....?! முதல் இடத்தை அவ்வளவு சீக்கிரம் இழக்க மனசு வராதே  ??)

கழிவில் இருந்து மின்சாரம்

இந்த முறையில் ஆஸ்திரேலியா தனது மின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது.  கழிவு நீரை வடிகட்டி, அதில் இருக்கும் கழிவுகளை உருண்டைகளாக்கி  , அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுதான் 'கழிவு நீர் மின் உற்பத்தி'. இந்த முறையை நாம் செயல்   படுத்தினால் நமக்கு இரண்டு விதத்தில் ஆதாயம்.



 'பல கோடி  ரூபாய்' செலவு செய்து கூவத்தை சுத்தபடுத்த போவதற்காக  சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து இருக்கிறது 'தமிழகம்'.  அதற்கு மாற்றாக  கூவத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்தால் கூவமும்  சுத்தமாகும், நமக்கு மின்சாரமும் கிடைக்கும். அதற்காக கூவம் கரைகளின் ஓரத்தில்  பெரிய அளவிலான 'நீரேற்று நிலையங்களை' அமைத்து கூவம் நீரை சுத்திகரிக்கவேண்டும். பின்னர்  அந்த சுத்திகரிக்கபட்ட நீரை தொழிற்சாலை தேவைகளுக்கும், சேகரித்த  கழிவு உருண்டைகளை  மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.  (ஒரு கல்லில் இரண்டு மாங்காய் )

சூரிய ஒளி மின்சாரம்



சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.  இதற்கு கட்டிடங்களின் உச்சியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான 'சோலார் பேனல்' களை பொருத்தினால் போதும். ஆரம்ப முதலீடு காஸ்ட்லி என்றாலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் போது , 'இதுதான் நிரந்தர தீர்வு' என்று அடித்து சொல்லலாம்.

இவை எல்லாம் அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை நம்பி இருப்பதற்கு பதில் நம்மால் முடிந்தவரை இவற்றை நாமே செய்து கொள்ள முடியும் என்று ஒரு குடும்பம் நிரூபித்து உள்ளது. இங்கே இல்லை பக்கத்தில் பெங்களூருவில் தான் அந்த அற்புதம்.

சிவகுமார் என்பவர் கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் முதுநிலை விஞ்ஞானி. அவரது மனைவி திருமதி சுமா. இவர்களின் இல்லத்தில் தான் அந்த அதிசயம்.  10 வருடங்கள் முன் வீடு கட்டியதில் இருந்து இன்று வரை 'மின் இணைப்போ', 'குடிநீர் இணைப்போ', 'சமையல் எரிவாயு இணைப்போ' இல்லை...!! மாற்றாக சூரிய ஒளியும், மழை நீரும் தான்....!!??

வீட்டின் ஒவ்வொரு அறையின் கூரையிலும் நேரடியாக சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அந்த கட்டிடம் வடிவமைக்க பட்டுள்ளது. மின்சார தேவைக்கு 10 வருடங்களுக்கு முன் 7000  ரூபாய்  செலவில் மொட்டை மாடியில் 'சூரிய ஒளி மின் உற்பத்தி சிஸ்டத்தை' அமைத்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு




தண்ணீர் தேவைக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'மழைநீர் சேகரிப்பு'  தான். 45 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேகரிக்கும் தொட்டிகள் அமைத்து அதை சுத்திகரிக்க பில்டரை அவரே வடிவமைத்துள்ளார்.  அந்த 'பில்டர்'தான் இப்போது மாநில அரசுகளால் பரிந்துரை செய்யபடுகிறது.  இவர்கள் வீட்டை உதாரணமாக வைத்து மழைநீர் சேகரிப்பு முறையை வீட்டில்  அனைவரும் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று சட்டமே போட்டு விட்டதாம் அரசாங்கம்.

ஆனால் நம்ம ஊர்ல போடப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம் என்ன ஆச்சுனு... எப்படி சொல்ல....ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தது...மக்களிடம் சரியான விழிப்புணர்வை  ஏற்படுத்தாமல் போய்விட்டதால், ஏதோ கடமைக்கு செய்வது போல் மக்கள் செயல் படுத்தினார்களே  ஒழிய முழு மனதுடன் , முழு ஈடுபாட்டுடன் செய்யவில்லை....

எந்த ஒரு 'நல்லதுமே ஒரு வீட்டில் இருந்துதான்' தொடங்குகிறது என்பார்கள். அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி குரல் கொடுப்பது அவசியம் தான்.  அதே சமயம் நம்மால் முடிந்தவரை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வரலாமே....

அடுக்குமாடி குடியிருப்பவர்களில் சேரும் கழிவு நீரை அவர்களே தகுந்த ஆட்களை வைத்து தேவையான மின்சாரம் தயாரித்து, மிச்ச நீரை செடிகளுக்கு உபயோகபடுத்தி கொள்ளலாம். வழிமுறைகளை சொல்லி கொடுக்க பொறியாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.  முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும் 

சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் 'இச்செய்தியை செவிமடுத்து, (செல் எடுத்து') சம்பந்த பட்டவர்களிடம் பேசி உங்கள் வீட்டையும்  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக்கி காட்டுங்களேன் எனதருமை பதிவுலக தோழர்களே....

நன்றி ஜூனியர் விகடன்    

வெள்ளி, ஆகஸ்ட் 13

'அந்தரங்கம்' பற்றிய ஒரு அலசல் - தாம்பத்தியம் - 15


இதற்கு முந்தைய பதிவு - ஏன் விட்டுக்கொடுக்கணும் 

அந்தரங்கம்

தாம்பத்தியம் சீர்குலையப்  பல காரணிகள் இருக்கிறது என்று இதுவரை பார்த்தோம், மற்றொரு முக்கியமான காரணம்  ஒன்றும் உள்ளது, அதுதான் கணவன், மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். 

கடந்துப்  போன கவலைகளிலும் வர இருக்கிற சிந்தனைகளிலும் மூழ்கி, நிகழ்கால ஆனந்தங்களை அனுபவிக்காமலேயே இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிந்துக்  கொள்ளும் முன்பே இளமை முடிந்து முதுமை வந்து வாழ்க்கை அவர்களைத்  தாண்டிப்  போயே விடுகிறது.

வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்பதை விட, சிக்கல் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் எப்படி ஓட்டிச்  செல்வது என்பதே பலரது கவலையாக இருக்கிறது. 

அந்தரங்கம் என்று சொல்லிவிட்டு அதை எப்படி வெளியில் விவரமாக சொல்வது...? என்ற கேள்வி எழுவதைத்  தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதுதான் பல குடும்பங்கள் பிரிவதற்கு மிக மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பல சண்டைகளின் ஆரம்ப  அடிப்படை காரணமே இதுதான் என்று என்னால் உறுதியாகக்  கூற முடியும். என்னவொன்று கணவன், மனைவி இருவருமே இதுதான் எங்களுக்குள் பிரச்சனை என்று வெளிப்படையாகச்  சொல்வது இல்லை , இதுதான் என்று அவர்களுக்கும் தெரிவது இல்லை!!!

ஒரு ஆணின் அந்தரங்கம் வீட்டில் சரியாக இருக்காத  பட்சத்தில் வெளியில் மாற்று இடம் சுலபமாகத்  தேட முடியும் அது மற்றொரு பெண்ணை தேடும் வழி என்று சொல்லவில்லை... தங்களை நண்பர்கள், வேலை, பொழுதுப்போக்கு என்ற விதத்தில் ரிலாக்ஸ் செய்துக்  கொள்ளமுடியும் .   ஆனால் பெண்கள் , தங்களின் ஆசை நிராசையாக போய்விட்டால் அது வார்த்தைகளில் எரிச்சலாக, கோபமாக, ஆத்திரமாக வெளிப்படுகிறது. நாளடைவில் மன அழுத்தம், மனதெளிவின்மை, ரத்த அழுத்தம், தலைவலி போன்றவற்றில் கொண்டுப்போய் விட்டு விடுகிறது..... ஆனால் இதுதான் பிரச்சனைக்கான சரியான  காரணம் என்று அந்த பெண்ணுக்கே சில நேரம் புரிவது இல்லை.

" பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் செக்ஸ் உறவு வெற்றி " இவை இரண்டும் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன என்பது க்ரூகர் என்பவரின் கூற்று.  ஆனால் இதனால் பெண்களை விட ஆண்கள் தான் பெரும்பாலும் பாதிக்க படுகிறார்களாம்...??!!


கல்யாணம் முடிந்தவர்களில் எத்தனை பேர்கள் முழுமையானத்  தெளிவை இந்த விசயத்தில் பெற்று இருக்கிறார்கள்..?? மிக சொற்பமே..!!?? குடும்பத்தில்  சண்டை என்று சொல்பவர்களிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது...பிரச்சனையின் வேர் படுக்கை அறையில் இருக்கிறது என்பது...!!? 

வெளியில் பேசக்கூடாத ஒரு விசயமாக தானே இன்றும் இருக்கிறது. காரணம் நாம் வாழும் சமூதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள். மற்றவர்களுடன் பேசக்கூடாத ஒரு அருவருப்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.  கட்டுப்பாடுகள் இருப்பது நல்லதே, ஆனால் ஆரம்ப தெளிவுக்  கூட இல்லாமல் போய்விடுவது சோகம்.
இதனாலேயே வெளியில் சொல்ல முடியாத சிக்கல்கள் குடும்பத்தில் ஏற்படுகின்றன.

துணிந்து வெளியில் சொல்லமுடியாத நிலையில் இதனைப்  பற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் விடை தெரியாமல் ஒரு தொடர்கதை போல் போய் கொண்டே  இருக்கிறது. இம்மாதிரியான பதில் இல்லா கேள்விகள் பலரை  மனதளவிலும், உடலளவிலும் பயங்கரமாகப்  பாதிக்கிறது. 

 " இதனால்  அவர்களின் வாழ்க்கை தரமே குறைந்துப்  போகக்  கூடிய நிலையில்  இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும் " என்கிறார்கள் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம்  என்னவென்றால் , பலரின், குறிப்பாக பல பெண்களின் கேள்வியே, " இதை விட வேற ஒன்றும்  முக்கியம் இல்லையா ? இது மட்டும் தான் வாழ்க்கையா? "  அப்படி உள்ளவர்களுக்கே இந்த பதிவு என்று நினைக்கிறேன். 

'அதற்காக எல்லாம்  எங்களால் நேரம் ஒதுக்க முடியாது' என்று அலட்சியமாக சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணம், புகழ், பெயர் இவற்றைச்  சம்பாதிக்க அவைகளின் பின்னால் ஓடவே நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் அந்த நேரத்தை 'தகவல் தொழில் நுட்பங்களும்', 'பொழுதுபோக்கு அம்சங்களும்' விழுங்கி விடுகின்றன.  

தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே பலருக்கும் தெரிவது இல்லை. அந்த 'பொன்னான நேரத்தை' எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப பெற இயலாது என்பதை பலரும் உணருவதே இல்லை.  

அந்த நாலு சுவற்றுக்குள் ஒரு கணவனும் மனைவியும்  இருப்பதை பொறுத்தே  அவர்களின் வெளி உலக நடவடிக்கை இருக்கும்.

'செக்ஸ்' என்பதின் அர்த்தம்தான் என்ன ??

உடலுறவு என்பது அறிவியல்/மருத்துவரீதியாக சொல்லவேண்டும் என்றால், "உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகபடியாக வேலை செய்யும் , சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான நல்ல  உடற்பயிற்சி என்பதே".

" பொதுவாக மூளை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய சில ஹார்மோன்களின் தன்மையை மகிழ்ச்சித் தரக்கூடிய (உடலுறவு) அனுபவங்களின் மூலம் மாற்றியமைக்க முடியும் " என்கிறது பிரின்ஸ்டன் பல்கலைகழக ஆய்வாளர்களின் அறிக்கை.

'காதல் உணர்வு' என்பது ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வது உண்டு. அதன் பெயர்தான் 'ஆக்சிடோசின்'. இது பொதுவாக  பிரசவ நேரத்திலும் , உடலுறவு சமயத்திலும் அதிகமாக சுரக்கக்  கூடியது. 'இதுதான் அடிப்படை'

இதைப்பற்றி அறிய  அதீத ஆர்வம், இனம் புரியாத தயக்கம், ஒரு புத்துணர்ச்சி என பலவகையான உணர்வுகள் நம்மை ஆட்க்கொண்டு விடுகின்றன. 

கணவன் , மனைவிக்கு இடையில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, கோபத்தாபங்கள் அனைத்தும் இங்கே தான்  மறக்கப்படுகின்றன(மறக்கடிக்கப் படுகின்றன). 

பின்குறிப்பு 

தாம்பத்தியத்தில் முக்கியமானப்  பகுதியான இதை கொஞ்சம் விளக்கமாக விவரிக்க சொல்லி, பலர் கேட்டதின் காரணமாக பதிவு விரிவாக இருக்கும்...பதிவைப்  பற்றிய சந்தேகங்கள்  மட்டும் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். உங்கள் பெயர் வருவதை நீங்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டால் பின்னூட்டம் பப்ளிஷ் பண்ணப்பட மாட்டாது என்பதைச்  சொல்லிக் கொள்கிறேன். 

அடுத்து இந்த பதிவின் தொடர்ச்சியாக வருவது...தாம்பத்தியம் 18+

தொடர்ந்து பேசுகிறேன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 


புதன், ஆகஸ்ட் 11

கண்டனம் 2- மத உணர்வோடு விளையாடாதீர்கள்....!

எனது இந்த கண்டனம் பதிவுலகில் மத உணர்வுகளை  கண்டபடி கூறுபோட்டு விளாசி தள்ளும் சிலருக்காக.... 

மதம் என்ற வார்த்தை வேண்டாம்...சமயம் என்றே சொல்லுங்க என்றே சிலர் கூறுவர்.
எனக்கு மதம் என்பதே சரியாக தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நாத்திக மதமும், இருக்கிறது என்று வாதம் புரிபவர்களுக்கு ஆன்மீக மதமும் பிடித்து இருக்கிறது என்பதால் மதம் என்று சொல்வது ரொம்ப சரியே.

மதம் பிடித்த யானை எது சரி எது தவறு என்று உணராமல் தன் பாகனையே மிதித்து கொல்லும். அப்படியேதான் இந்த இரண்டு (நாத்தீகம், ஆன்மிகம் ) மதம்  பிடித்தவர்களும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

உங்களின் கருத்துக்களை சரி என்று புரிய வைப்பதற்காக ஏன் மற்றவர்களின் நம்பிக்கையை குறை சொல்ல வேண்டும்....?? கடவுளை வைத்து மனிதனை பிரிக்காதீர்கள். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

அறியாமை

கடவுளை மறுத்தவர் என்ற உதாரணத்துக்கு எல்லோரும் கைகாட்டுவது தந்தை பெரியார் அவர்களை தான்.  அவரும் கடவுளின் பெயரால்  நடக்கும் மூடநம்பிக்கையை தான் அதிகம் சாடினார்... கடவுளையும் மூட நம்பிக்கையையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்.

ஆதி காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து மிரண்டவர்கள் அதை சக்தி , கடவுள் என்று வழிபட்டனர்.  நெருப்பை, மரத்தை, கல்லை என்று விருப்பம்போல் வணங்கினர். ஆனால் இன்றும் சில வழக்கங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வேதனை.  (ரோட்டின் ஓரத்தில் இருக்கும் மைல்கல்லையும் வணங்கும் அளவில் தான் அறியாமை இருக்கிறது, பாதி புதைந்த அளவில் இருக்கும் ஒரு ஆட்டு கல்லில் கூட மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்து ஒரு மஞ்சள்  துணியை சுற்றி வைத்து இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்.)

எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒதுக்கு புறமாய் இருக்கும் ஒரு கல் குவாரியில் இருக்கும் ஒரு வேப்பமரத்தில் ஒரு நாள் வெள்ளை நிறத்தில் திரவம் சுரந்து இருக்கிறது.  இதை கேள்வி பட்ட கொஞ்ச நேரத்தில் அந்த காட்டு பகுதி முழுக்க மக்கள் கூட்டம், அந்த மரத்தை மஞ்சள் , குங்குமத்தால் அலங்கரித்து ஒரே வேண்டுதல்கள் தான். 

என்னதான்  வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை தேடி அங்கே ஓடினார்கள் ....?? அங்கே போனதால் எதை அடைந்தார்கள்....?? ஒன்றுமே புரியவில்லை....??!!

அவர்களின் பக்தி பரவசத்தின் முன் விவரம் தெரிந்த  ஒருத்தர் " இது கடவுள் இல்லைங்க, மரத்தினுள் நடக்கும் சில வேதிவினை மாற்றத்தால் இந்த வெண்மை திரவம் சுரக்கிறது , இரண்டு, மூணு நாளில் வருவது நின்றுவிடும் " என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம், அவ்வளவு தான் அவர் உடம்பை பதம் பார்த்து விடுவார்கள். (இப்போது பால் வருவது நின்றுவிட்டது...ஆனால் அதை சொல்லி பணம் பார்த்தவர், இன்றும் பணம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். )
    
இது மூடத்தனம், கடவுளின் பெயரால்  நடக்கும் இந்த அறியாமையை களைய தான் நாம் முற்படவேண்டுமே தவிர, கடவுளை பழிப்பது சரி இல்லை.  மதத்தை இழிவு  படுத்துவதை ஊக்குவிக்க கூடாது.

அனைத்து மதத்திலும் நம்பிக்கை , மூட நம்பிக்கை என்பது சரி விகிதத்தில் தான் இருக்கிறது.....இதில் மாற்று கருத்து இல்லை....  எனக்கு தெரிந்த ஒன்றை இங்கே சொல்லி இருக்கிறேன்...அவ்வளவே.
  
கடவுளை மறுப்பவர்கள், ஏன் மறுக்கிறோம் என்பதற்கு வலுவான காரணத்தை கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அதை விடுத்து தேவை அற்ற வீண் விவாதங்களை பேசி மத நம்பிக்கை உள்ளவர்களின் மன உணர்வை குத்தி கிளறி நெருப்பு மூட்டி அதில் குளிர்  காயாதீர்கள்...

கடவுளை முழு மனதுடன் விசுவாசத்துடன் தேடுபவர்களே கடவுளை உணருகிறார்கள்.  உங்களால் தேடி அடைய முடியவில்லை  என்பதற்காக அப்படி  ஒன்று இல்லை என்று ஆகிவிடுமா...?? ஒன்று நீங்கள் சரியாக தேடவில்லை அல்லது தேட முயற்சி எடுக்க வில்லை என்று தானே அர்த்தம்.......பழம் கைக்கு எட்டவில்லை  என்பதற்காக இந்த பழம் புளிக்கும் என்று குறை சொல்லி நழுவும் நரியை போல் இருக்காதீர்கள்.....

கடவுள் என்ன செய்வார்...??

அன்பை போதித்த புத்தரை வணங்குகிற இலங்கையில் தான் மனித உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி பந்தாடபடுகின்றன....என்பதற்காக புத்தரை பழிக்க முடியுமா? பிற உயிர்களிடத்தும் சகோதர  பாசம் காட்டுங்கள் என்று வலியுறித்திய முகமது நபி அவர்களை பின்பற்றுகிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக அவரை பழிக்க முடியுமா ?? பைபிளை படிக்கிறவர்கள் தான் ஈரானில் பிற மதத்தவர்களை கொன்று குவித்தார்கள்....நம்மையும் அடிமைபடுத்தி உயிர்களை கொன்று வதைத்தார்கள். அவர்களை இப்படி செய்ய சொல்லி ஏசுநாதர் எங்கே சொன்னார்....??

இப்படி மனித உருவில்  மிருகங்கள் செய்யும் கொடுமைகளுக்கு கடவுளை குறை சொல்வது எவ்வளவு மடத்தனமோ அந்த அளவு மடத்தனம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை பழிப்பதும்...

'கடவுள் பெயரால்' அல்லது 'அந்த பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்பவர்களை',  மனிதனை 'கடவுள்' என்று சொல்லி கொண்டு அலைபவர்களை அலட்சிய படுத்துங்கள், மூட நம்பிக்கையில் உழலுபவர்களை அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லுங்கள்.  மனிதத்தை போதியுங்கள் ...சக மனிதர்களை அன்பால் வசபடுத்த பாருங்கள். மூட நம்பிக்கையை சுட்டி காட்டுகிறேன் என்று மனிதர்களின் நம்பிக்கையை எள்ளி நகையாடாதீர்கள். 

எத்தனை பெரியார்   வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்று வீராவேசமா வசனம் பேசின விவேக், வாஸ்து படி தன் வீட்டை மாற்றியமைத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? எல்லாம் அறியாமையால் வரும் பயம் தான் காரணம்...கடவுள் மேல் இருக்கும் பக்தி இல்லை. 

நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்து கிறது என்று எண்ணி பாருங்கள்..நமக்குள் ஒரு தைரியம் வரும்.....!  அச்சம் விலகும்...! வாழும் நாட்கள் அர்த்தமானதாக தோணும்....! அந்த சக்தி உங்களை  தீய வழியில் போக சொல்லி தூண்டாது.....! பிறருக்கு உதவக்கூடிய எண்ணத்தை கொடுக்கும்....! அந்த சக்தி  அன்பைத்தான் சொல்லும்.... !  அந்த சக்திக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்....!! உங்கள் விருப்பம்.  

தவிரவும் கடவுளை தேடி எங்கேயும்  போக வேண்டாம்....உங்களுக்குள் தேடுங்கள்... கண்டடைவீர்கள்....பிற மனிதனிடம் நீங்கள் அன்பை பரிமாறும் போதே அந்த இடத்தில் கடவுள் நிற்பதை உணரமுடியும்...அதுதான் சிவன், இயேசு, அல்லா,புத்தர்......
கடவுள் இருக்கிறார் , இல்லை என்று வாதிடுவதை விட கண்முன் இருக்கும் மனிதனை அன்பால் அனைத்து  கொள்ளுங்கள்....உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்....அர்த்தமற்ற வீண் விவாதம் புரிந்து உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்.....

கடைசியாக ஒன்று நம் அன்னை தெரேஸா அவர்கள் முதலில் இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தை எடுத்து  கூற  தான் வந்தார்கள்....ஆனால் உண்மையில் நடந்தது என்ன  ..?!!  அன்பை கையில் எடுத்தார்கள்....சக மனிதனை என்று சொல்வதை விட வாழ்வின் இறுதி நாட்களில் ஆதரவற்று தவித்து கொண்டு  இருந்தவர்களை தன் கரத்தால் அணைத்து அன்பால் உதவினார். நம்மிடையே வாழ்ந்த ஒரு தெய்வம்  அவர்கள்....! அந்த மக்களிடையே தான் தன் கடவுளை அவர் கண்டார்.....! அர்த்தத்துடன் வாழ்ந்து முடித்தார்....! 

ஆனால் நாம் வறட்டு விவாதம்  செய்து கொண்டு வீணாய் போய் கொண்டு இருக்கிறோம்.....உணர்வடையுங்கள் மக்களே...!!  




         

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...