திங்கள், அக்டோபர் 25

தன்னலமற்ற உதவி ...!



சக பதிவரான திரு. பத்மஹரி அவர்களின் தளத்தை இரண்டு நாளுக்கு  முன் படித்தேன்....அதில் முக்கியமான ஒருவரை பற்றி எழுதி இருந்தார்....அவர் பெயர் திரு நாராயணன் கிருஷ்ணன்.  நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த  சமயம்......தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விடை பெறுவதற்காக  மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.
அங்கே கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிளில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!
நம்மவர்கள்  ஹோட்டல் சென்றாலும் அதிக பணம்  கொடுத்து வாங்கிய உணவையும் நாகரீகம் என்ற பேரில் பட்டும் படாமல் சிறிது  சாப்பிட்டு.... குப்பைக்கும் போகும் அந்த மீத உணவுகள்....?!!  கல்யாண விருந்து போடுகிறேன் என்று சிலர் தன் கௌரவத்தை காட்டுவதற்காக இலையில் இடம் போதாமல் உணவு வகைகளை நிரப்புவார்கள்..... சாப்பிட அமர்ந்த கனவான்களோ பணக்கார நோய்களின் நிர்பந்தத்தால் ஏனோ தானோவென்று கொறித்துவிட்டு செல்வார்கள்......இங்கும் அந்த உணவுகள் போகும் குப்பைக்கு.........?!!  இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து செழிப்பாய் பணம் சம்பாதிப்பதை விட இந்த மாதிரி மக்களுக்கு  நாம ஏன் உணவளிக்ககூடாது....? கண்டிப்பாய் செய்வேன் என்று உறுதி பூணுகிறார்... 

இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21    

இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொள்ளி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   


வெற்றிகரமாக இன்றும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!

பின் குறிப்பு


இந்த பதிவை நான் எழுத காரணமான நண்பர் பத்மஹரி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 











மற்றொரு நண்பர் தனது தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார்...அவருக்கும் என் நன்றிகள்...





திங்கள், அக்டோபர் 18

திருடன் வந்த வேளை.....!


நாலு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு உண்மை  சம்பவம் இது. எங்களது பாக்டரியில் மருந்து பொருட்களை (தீக்குச்சி செய்ய தேவைப்படும் குளோரேட், சல்பர் போன்ற பொருட்கள்) தனி தனி அறைகளில் ஸ்டாக் செய்து வைத்து இருப்போம். அந்த அறைகளை கவனித்து கொள்வதற்காக இரவில் ஒரு காவலாளி அந்த அறைகளுக்கு வெளியில் படுத்து இருப்பார்.  அன்று மழை பெய்து கொண்டிருந்ததால் அதனால் உள்ளே ஒரு இடத்தில் படுத்து இருந்திருக்கிறார்.

நடு ராத்திரியில எங்க வீட்டு கதவை  பலமா தட்டற சத்தம் கேட்டுச்சு .....என்னவோ ஏதோனு பயந்துட்டு (தீ விபத்து நடப்பது இந்த தொழிலில்  சகஜம்) வேகமா நானும் என் கணவரும் எழுந்து வந்து கதவை திறந்தோம் ....வெளியே அந்த காவலாளி நடுங்கிட்டே "முதலாளி குளோரேட் ரூம்ல யாரோ இருக்கிற மாதிரி இருக்கு....நீங்க உடனே வாங்க' ன்னு  சொல்லவும் எங்களுக்கும் ஒரே படபடப்பு.... உடனே என் கணவர் ஒரு கம்பை கைல எடுத்திட்டு வேகமா அந்த இடம் நோக்கி நடக்க தொடங்கிட்டார்....எனக்கு ஒரே பயம் இவர் தனியா போய் என்ன பண்ணுவாரோ...உள்ள இருக்கிறவன் கத்தி, அரிவாள்  ஏதும் வச்சிருந்தா.... ஏடா கூடாம ஆச்சுனா என்ன பண்ணனு....பக்கத்தில இருக்கிற இவரோட அண்ணன்ங்க வீட்டு  கதவுகளையும் ஓடி போய் தட்டினேன்.....ஒருத்தரையும்  விடலையே ...வயதான என் மாமனார், மாமியார் முதல் அத்தனை பேரும் பதறி எழுந்து வந்திட்டாங்க...(எங்க குடும்பம் கொஞ்சம் பெரிசு...மொத்த உருப்படி ஒரு 17 தேறும்...!)

வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி  தான் அந்த அறை உள்ளது.... ஆண்கள் மட்டும் அந்த ரூம் பக்கம் போக நாங்க எல்லோரும் ஒரு வித திகிலோட அந்த பக்கமே பார்த்திட்டு இருந்தோம்....கொஞ்ச நேரம் அமைதியா போச்சு....திடீர்னு  ஒரே அடிதடி சத்தம்...யார் யாரை அடிக்கிறாங்கன்னு  தெரியாம அக்கா'ஸ் 'எல்லோரும் ஆண்டவா என் வீட்டுகாரரை   காப்பாத்து'ன்னு வேண்டிட்டு இருந்தாங்க....ஆனா நான் மட்டும் அந்த திருடனை காப்பாத்துன்னு வேண்டினேன்....(அவ்ளோ நம்பிக்கை எனக்கு எங்க வீட்டு ஆண்கள் மேல....!!) 

அப்புறம் மெதுவா அந்த திருடனை இழுத்திட்டு  வந்தாங்க....(என் நம்பிக்கை  வீண் போகலைங்க...) போன வேகத்தில எங்க ஆட்கள் ஆளுக்கு ஒரு அடிதான் கொடுத்திருக்காங்க....ஆனா அந்த திருடன் ரொம்ப பாவங்க...சோர்ந்து போய்ட்டான்....(எங்க வீட்டு குட்டிஸ் எல்லாத்துக்கும் ஒரே சந்தோசம் இப்பதானே முதல் முறையா திருடனை நேரில் பாக்கிறாங்க.....நாளைக்கு ஸ்கூல்ல  போய் எப்படி பெருமை அடிக்கலாம்னு அப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சிடுசுங்க )


அப்புறம் மாமனார் தலைமையில் ஒரு சின்ன மீட்டிங் 'இந்த திருடனை இப்ப என்ன செய்யலாம் என்று..?' ஆளாளுக்கு ஒவ்வொரு ஆலோசனை சொன்னார்கள்...முடிவாக காலையில் போலீஸ்கிட்ட ஒப்படைச்சிடலாம்.....இப்ப கம்பெனி முன்பாக இருக்கும் லாம்ப் போஸ்டில் கட்டி வைக்கலாம் என்ற  யோசனை குரல் வாக்கெடுப்பில் தேர்ந்து எடுக்க பட்டது.....! ஆனால் கட்டி வைச்ச பிறகு  கயிறை அறுத்திட்டு ஓடிட்டா என்ன செய்ய என்று ஆண்களில் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிட்டு காவல் இருக்கணும்  என்றும் முடிவு செய்திட்டு மத்த எல்லோரும் தூங்க போய்ட்டோம்....நேரம் மூணு மணி ஆச்சு......ஒரு மணி நேரம் நிம்மதியா தூங்கி இருப்போம்....வெளியில் மறுபடியும் சத்தம்....! ஏற்கனவே எல்லோரும் கொஞ்சம் அலர்ட்டா  இருந்ததாலே...சட்டுன்னு எழுந்திட்டோம்....இப்ப என்ன பிரச்சனைன்னு வந்து பார்த்தா, நின்ன போன மழை மறுபடி  சோன்னு கொட்டுது....!! அந்த திருடன் மழையில நல்லா  நனைஞ்சிட்டு  நடுங்கிட்டு இருந்தான் (அடி வாங்கின உடம்பு வேறையா..... நல்லாவே நடுங்கினான் )


என் மாமனார் 'ஏம்பா, அவன் செத்து கித்து போய்ட போறான், ரூம்  உள்ளே கொண்டு போய் அடைங்க' னு சொல்லவும்....அடடா இது என்னடா புது சோதனைன்னு அவனை கொண்டு போய் ஒரு ரூம்ல அடைச்சாங்க....! இப்ப தூக்கம் சுத்தமா போச்சு...எங்க அக்கா மழைக்கு சூடா டீ குடிங்கன்னு 'கருப்பட்டி இஞ்சி போட்டு ப்ளாக் டீ'  கொண்டு வர மொத்தமா நாங்க ரவுண்டு கட்டி உட்கார்ந்து.....அழகா டீ குடிச்சிட்டு பேசி பேசியே  இரவை ஒரு வழியா போக வச்சிட்டு விடியலை வர வச்சிட்டோம்....! மணி 5 ஆனதும் என்னைக்கும்  போல அவங்க அவங்க வேலையை வேகமா பார்க்க ஆரம்பிச்சோம்.....ஏழு மணி ஆனதும் தொழிலாளர்கள் வேற வர தொடங்கிட்டாங்க....அப்புறம் என்ன எல்லோரும் கூடி கூடி பேசி திருடனை ஹீரோவாகிட்டாங்க...


மணி ஒன்பது ஆச்சு....இனிதான் தான் கிளைமாக்ஸ்....அந்த திருடனை காரில் ஏத்திட்டு  காவல் நிலையத்துக்கு என் கணவர் அழைத்து கொண்டு போனார். இங்கிருந்து போகும் போது கொஞ்சம் தள்ளாடிட்டேதான் போனான்...அங்க போனதும் இன்ஸ்பெக்டர் முன்னாடி அப்படியே விழுந்திருக்கான் (ஆனா அது ஆக்டிங்க்னு அப்ப என் கணவருக்கு தெரியல ) இன்ஸ்பெக்டரும் பதறி, 'என்னங்க சார் ரொம்ப அடிச்சிடீங்களா.....ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆக போகுது....அவன்தான் ஒண்ணு திருடலையே...பேசாம அவன் ஊர் பேரை கேட்டுட்டு அந்த ஊருக்கு பஸ் ஏத்தி விட்டுடுங்க' ன்னு சொல்லி இருக்கிறார்....!!? இவரும் நம்ம காவல்துறையின்  மனிதாபிமானத்தை மெச்சிட்டு (திட்டிட்டுதான்.....!) அந்த திருடனுக்கு பூரி செட் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு,  கையில செலவுக்கு ஒரு 200 ரூபாயும் கொடுத்து பஸ் ஏத்தி விட்டுட்டு வீடு வந்து சேர்ந்தார்............!!?


இதில இருந்து நாங்க கத்துகிட்ட பாடம் என்னனா.......அதை நான் எப்படிங்க  சொல்றது...... உங்களுக்கே  இப்ப புரிஞ்சிருக்குமே....!!?

திருட வந்தவனை நல்லா (கவனிச்சு )உபசரிச்சு விருந்தாளி போல அனுப்பி வச்ச இந்த சம்பவம்.....ஒரு மழைநாள் இரவில், திக் திக்னு திரில்லா ஆரம்பிச்சி....அடிதடி சண்டை நடந்து..... ஒரு பஞ்சாயத்து ( இங்க சொம்புக்கு பதிலா டீ கப் ) சீன் வேற....குட்டிஸ் கலாட்டா....பெண்களின் வித்தியாசமான வேண்டுதல்கள்.....கிளைமாக்ஸ் சீன்ல போலீஸ் வருவதற்கு பதிலா  நாங்க ஸ்டேஷனுக்கு போய்....அப்புறம் ஒரு சின்ன டுவிஸ்ட்....கடைசியில் சுபம் (எங்களுக்கு இல்லை அந்த திருடனுக்கு )






வாசலில் என் கவிதை





வெள்ளி, அக்டோபர் 15

'உச்சகட்டம்' எனும் அற்புதம் - தாம்பத்தியம் 19

இதற்கு முந்தைய பதிவைப்  படிக்க உறவு ஏன் மறுக்கப்படுகிறது ?! செல்லவும்


திருமணம் ஆன கணவன் மனைவி இருவருக்குமே  செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு தான் என்பது ஆய்வுகளின் முடிவு.  குழந்தை பிறந்து விட்டது என்பதுடன் உறவில் முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்றுச்  சொல்லிவிட முடியாது.  மருத்துவர்களிடம் ஆலோசனை என்று வருபவர்கள் கேட்கும் சந்தேகங்களை வைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்....!!? இதில்  படித்தவர்களின் சந்தேகங்களை வைத்துப்  பார்க்கும் போது அவர்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்றேத்   தோன்றுகிறது. ஏன் இப்படி தெளிவு இல்லாமல், புரிதல் இல்லாமல் இருக்கிறோம் என்று தெரியவில்லை.

குடும்ப வாழ்வில் பொருள் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட கணவன் , மனைவி இருவருக்குள் கருத்து வேற்றுமை இன்றி வாழ்வது  முக்கியம். அந்த கருத்து வேற்றுமை இருவரின் அந்தரங்கம் பற்றியதாக  இருந்துவிட்டால்...குடும்பத்தின் மொத்த நிம்மதியும் போய்விடும். செக்சைப்  பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை,காரணம் நாம் வளர்ந்த , வாழ்ந்துக்  கொண்டிருக்கும் இந்த சமுதாயம். சந்தேகம் ஏற்பட்டால் பிறரிடம் கேட்க தயக்கம், அச்சம், சமூகத்தில் இதை பேசுவது தவறு, பாவம் என்று கூறப்பட்டு வந்ததால் நாமும் அப்படியேப்  பழகிவிட்டோம்.

கணவன் மனைவி இருவரும் கூட தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை பரிமாறிக்  கொள்வது இல்லை. இதன் விளைவு கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பிரச்சனைகள் பூதாகரமாக எழுகின்றன. இதன் பின்னர் மோசமான முடிவுகளில் கொண்டு வந்து விட்டுவிடுகின்றன. பாலியல் தொடர்பான குற்றங்கள், திருமணம் தாண்டிய உறவுகள் போன்றவை ஏற்பட  செக்சை பற்றிய சரியான அறிவு இல்லாதது தான் காரணம்.

ஒரு சில குழப்பங்களும், சிக்கல்களும் இந்த விசயத்தில் இருக்கின்றன. இந்த தொடர் பதிவில் அவற்றை விளக்குவதின் மூலமே இந்த தொடர் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

உச்சகட்டம் (ஆர்கஸம் )

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நடக்கும் உறவில் மிக முக்கியமானது உச்சகட்டம் எனப்படும்  இறுதி நிலையாகும். ஆண்களைப்  பொறுத்தவரையில் அணுக்கள் வெளியேறும் அந்த தருணத்தில் அவர்கள் உச்சகட்டம் அடைந்து விடுகிறார்கள்.  ஆனால் பெண்களைப்  பொறுத்தவரை இது பெரிய கேள்விக்  குறியாக இருக்கிறது.

இந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்ன என்பது கூட பல திருமணம் ஆன பெண்களுக்கும் தெரியாது என்பது தான் நிதர்சனம். 

* அப்படி என்றால் என்ன..??
* அந்த உணர்வு எப்படி இருக்கும் ??
* அந்த உணர்வு  கட்டாயம் உணரப்பட்டுத்தான் ஆகவேண்டுமா ??
* உச்சகட்டம் ஆகவில்லை என்றால் அதன் பாதிப்பு என்ன ??

* பெண்களின் அந்தரங்க உறுப்பில் கிளிட்டோரிஸ் என்ற சிறு பகுதியில் தான் பல நூற்றுக்கணக்கான உணர்ச்சி நரம்புகள் பின்னிப்பிணைந்து இருக்கின்றன என்பது ஆச்சரியமான ஒரு விஷயம். அதிக உணர்ச்சி மிகுந்த பகுதியும் இதுதான். அந்த பகுதி தூண்டப்பட்டு அடையும் இன்பமே உச்சகட்டம் ஆகும். 

* உச்சகட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில், அங்கே மட்டுமே ஏற்படக்கூடிய நிகழ்வு இல்லை என்பதை முதலில் புரிந்துக்  கொள்ள வேண்டும். முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளையின்  அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன மாற்றங்களும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன.  

இந்த உணர்வலைகளில் உடல் அதிகச்  சூடாக மாறிவிட., அப்படியே சப்த நாடிகளும் அடங்கி மயக்கமான ஒரு நிலைக்கு கொண்டு போய்விடும். உடல் பறப்பதை போன்ற ஒரு பரவச நிலைக்கு தள்ளபடுவதை நன்றாக உணர முடியும். 

* வெறும் உடலுறவு மட்டுமே ஒரு போதும் 'முழு திருப்தியை  ஒரு பெண்ணுக்குத்  தராது' என்பதே ஆய்வுகளின் முடிவு. உச்சகட்டம் அடைந்த ஒரு பெண்ணால் மட்டுமே  மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமாக இருக்க முடியும். அதை எட்டமுடியவில்லை, இருந்தும் நான் உற்சாகமாக இருக்கிறேன் என்று ஒரு மனைவி சொல்கிறாள் என்றால் அது முழு உண்மை கிடையாது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதைப்  பற்றித்   தெரியாதவர்களாக இருக்கலாம் அவ்வளவே. 

* இங்கே நான் சொல்லப்  போகிற விஷயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்...ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்... உறவில் ஆணோ, பெண்ணோ உச்சகட்டத்தை அடையமுடியவில்லை என்றால் அனார்க்கஸ்மியா (Anorgasmia) என்கிற செக்ஸ் குறைபாட்டில் கொண்டு போய்விட்டுவிடும் என்பதே மருத்துவ ஆய்வாளர்களின் எச்சரிக்கை.  .....??!   ஆனால் உச்சகட்டம் போக முயற்சிச்  செய்தும் போக முடியாத ஒரு நிலையும் இருக்கிறது. இதற்கு உளவியல் காரணங்கள்  இருக்கலாம்....சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள், உறவைக்  குறித்த முறையான தெளிவின்மை, உறவைப்  பற்றிய அச்சம் இவை போன்ற சில காரணங்களும்  உச்சகட்டம் அடைய முடியாமல் தடுக்கலாம். இதில் எதில் குறை என்று பார்த்து மருத்துவரிடம் சென்று சரி செய்துக்  கொள்வது இப்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமாகிறது.

எப்படிப்  பார்த்தாலும் கணவன் மனைவி உறவில் அந்தரங்க உறவு என்பது அந்த குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்ந்து முடியக்கூடிய ஒரு சாதாரண நிகழ்வு இல்லை.  அங்கே சரியாக  நடைபெறவில்லை  என்றால் அதன்  எதிரொலி பல வடிவத்தில் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் என்பதை தம்பதியினர் மறந்து விடக் கூடாது. கணவன் தனது மனைவியை உச்சகட்டம் என்றதொரு அற்புத உணர்விற்கு அழைத்துச்  செல்வது மிக அவசியம்...அதன் பிறகு  தனது  தேவையை நிறைவேற்றி கொள்வதே மிக சரியான தாம்பத்திய உறவு நிலையாகும். அப்போதுதான் கணவன்  தன் மனைவியின் மனதை  வென்றவன் ஆகிறான்...!! 

ஆனால் ஆண்களில் சிலருக்கு ஆரம்ப நிலையிலேயே தன் தேவையை முடிக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம்  (அவர்களின் உடல்நிலை காரணமாக இருக்கலாம் ) அந்த நேரம் மனைவியை முழு திருப்திப்  படுத்த இயலாமல் போகலாம்....அப்படியான நிலையில் இருப்பவர்கள் என்ன காரணத்தினால் தங்களால் அதிக நேரம் இயங்க முடியவில்லை என்பதைப்  பற்றி தெளிவுப்படுத்திக்  கொள்ளவேண்டும் இல்லையென்றால்  மருத்துவரை அணுகி முறையான ஆலோசனையைப்  பெற வேண்டியது அவசியம்.  

பெண்ணின் செக்ஸ் வாழ்க்கை திருப்தியாக இல்லையென்றால்  அப்பெண்ணின் பொது வாழ்க்கையும் , குடும்ப வாழ்கையும், அவளின் தன்னம்பிக்கையும் வெகுவாக குறைகிறது, பாதிக்கப்படுகிறது என்கிறது ஆய்வு.

எதிர்பார்ப்புகளும்  ஏமாற்றங்களும் குடும்பத்தில் ஏற்படும் போதுதான் விரிசல்களும் அதிகரிக்கிறது.  ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் நிறைவேறாத தேவைகள், கசப்பான அனுபவங்கள் போன்ற காரணங்கள் தான் வேறு தவறான முடிவுகளை எடுக்க வைக்கின்றன. தடம் மாறுகிறார்கள். ஒரு கட்டத்தில் 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்று புரிய வரும் போது...வருடங்கள் ஓடி போயிருக்கும்....தவறான உறவில் இருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

'ஆண் பெண் இருவருக்குமே தாம்பத்திய உறவு சரி இல்லை' என்றால் அதன் முடிவு தவறான வேறு உறவு தான் என்று அர்த்தம் இல்லை.  ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் மிக மிக அதிகம் என்பதை மறுக்க முடியாது. இந்த பிரச்சனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பார்க்கலாம்.
   
"மரணம் ஏற்படும் முன்பு மனிதன் வாழ்ந்தாக வேண்டும்.
கௌரமாக மரணமடைவதற்கு கௌரமாக வாழ வேண்டும் !"

தாம்பத்தியம் தொடர் தொடரும்...

தொடர்ந்து பேசுகிறேன்... 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

புத்தக பரிந்துரை: Indra K.Nooyi எழுதிய  My Life in Full: Work, Family, and our Future 



வெள்ளி, அக்டோபர் 8

முள்வேலி....!

ஒரு பக்கம் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் அவலங்கள், தீவிர வாதம் போன்ற வன்முறைகளால் அவதி படும் மக்கள், ஆட்கொல்லி நோய்களால் மரணமடையும் மக்கள், விபத்து களால் உயிர் இழக்கும் மக்கள்....ஆனால் மற்றொரு பக்கம் "ஏன் படைக்கப்பட்டோம்.......?", "இன்று ஏன் இந்த சித்திரவதை அனுபவிக்கிறோம்.....??", "உயிர் எங்கள் அனுமதி இல்லாமல் ஏன் பறிக்கபடுகிறது....??" இப்படிப்பட்ட விடை இல்லாத கேள்விகள்.....??!! நாள்தோறும் சிலரின் சுயநலத்திற்காக மொத்த மொத்தமாக அப்பாவி மக்களை வதைத்து கொல்லுகிற கொடூரம்.....!!?

அது ஏன் எதற்காக என்று விவாதிப்பதற்காக இல்லை இந்த பதிவு....!!? எல்லோருக்கும் இருக்கும் மனசாட்சி என்ற ஒன்று ஒரு சிலருக்கு  இல்லாமல் ஏன் போய் விட்டது....?? மனிதம் அவ்வளவு மலிவானதா....?? அடுத்த உயிர் பறி போவதை பார்க்கும் போது நம் கண்ணிற்கு அது ஒரு நிகழ்வு, அவ்வளவே......அடிக்கடி ரத்த காட்சிகளை மீடியாக்கள்  மூலமாக பார்த்து பார்த்து நமக்கும் பழகி போய் விட்டது.....அதே நேரம் தன் ரத்த உறவுக்கு ஒன்று என்றால் துடிக்கிறோம்.....!கதறுகிறோம்....! அப்போது மட்டும் நம்முடைய இரக்க குணம், மனிதாபிமானம், அன்பு, பாசம்  வெளிப்படுவது  ஏன்...?? எனக்குள்ளும் இந்த கேள்வி அடிக்கடி எழுகிறது, நானும் இந்த ஜனசமுத்திரத்தில் ஒருத்தி  தான் என்பதை மறந்துவிட்டு.....!!?? 

சமீபத்தில் நான் பார்த்த ஒரு ஜெர்மானிய படம் 'THE BOY IN THE STRIPED PYJAMAS' என்னை பல விதத்தில் யோசிக்க வைத்தது....அதன் பாதிப்பில் தான்  இந்த பதிவு...

ஹிட்லர்  அரசாட்சி செய்த  காலம் அது.  யூதர்களை கொல்வதை  மட்டுமே முழு நேர வேலையாக செய்யக்கூடிய காலகட்டத்தில் நடந்ததாக சித்தரிக்கப்பட்ட ஒரு கதை. 'நாஸிகள் முகாம்' ஒன்றுக்கு ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவர் தன் குடும்பத்துடன்  வருகிறார். அவரது ஒன்பது வயது மகன் 'ப்ருனோ' அவனை சுற்றி தான் இந்த கதை பயணிக்கிறது.

அந்த பையனுக்கு தனியாக வீட்டில் இருப்பது வெறுப்பாக இருக்கவே வெளியில் விளையாட  செல்கிறான். ஆனால் அருகில் யாரும் இல்லை.  பொறுமையிழந்த அவன் ஒருநாள் வீட்டின் பின் கதவை திறந்து அங்கு ஒரு 'முகாம்' இருப்பதை பார்த்து அங்கே ஓடுகிறான். அங்கே தடுப்பாக 'முள்வேலி' அமைக்கப்பட்டுள்ளது. அதனுள் இவன் வயதையொத்த ஒரு சிறுவன் அகதி உடை அணிந்து மெல்லிய தேகத்துடன் இருப்பதை பார்க்கிறான். அவன் அந்த யூத சிறுவனிடம், "எதுக்கு இந்த முள்வேலி போட்டிருக்காங்க.... விலங்குகள் வராமல் இருக்கவா....??" ,என்று கேட்கிறான். அதற்கு யூத சிறுவன் "மனிதர்கள் வராமல் தடுக்க....!!" என்று பதில் சொல்கிறான். (இந்த  ஒரு பதில் சட்டென்று நம் முகத்தில்  அறைவது போல் இருக்கிறது)

ஜெர்மானிய  சிறுவனுக்கு 'இந்த அகதி முகாம்', 'யூத சிறுவனின்  பதில்' என்று எதுவும் புரியவில்லை. மறுநாள் அந்த அதிகாரியின் வீட்டில் ஒரு விருந்து நடக்கிறது . அதற்கு ஒய்ன் கிளாஸ்  கழுவும் வேலைக்காக முகாமில் இருந்து யூதச் சிறுவன் அழைத்து வரப்படுகிறான்.  ஜெர்மானிய சிறுவன், யூத சிறுவனுக்கு கேக் கொடுத்து சாப்பிட சொல்லும்போது ராணுவ அதிகாரி பார்த்து விடுகிறார்......ஜெர்மானிய சிறுவனும் அப்பாவின் மேல் உள்ள பயத்தில் 'இவனை எனக்கு  தெரியாது' என்று சொல்லவும் கேக் திருடியதாக  எண்ணி யூத சிறுவனை அடிக்கிறார்.

மறுநாள் தன்  தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனை தேடி வருகிறான் ப்ருனோ. ஆனால் யூத சிறுவன் பெருந்தன்மையாக "அகதியாக இருப்பவன், அவமானங்களை தாங்கி பழகி விட்டான் " என்கிறான். இருவருக்குள் நட்பு பூ மலருகிறது.

யூத முகாமில்  இருப்பவர்களை கூட்டங்கூட்டமாக கொல்லும் வேலை (கொடூரம்..!?)  ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த  அந்த ராணுவ அதிகாரியின்  மனைவி அதிர்ச்சி அடைந்து கணவனுடன் சண்டை இடுகிறாள். அதற்கு அந்த ராணுவ அதிகாரி, 'ஹிட்லரின் கட்டளை' மீற  முடியாது... ' என்கிறான்.  இனியும் இங்கிருந்து இந்த கொடுமையை என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது என்று கூறி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊர் கிளம்ப முடிவு செய்கிறாள்.

ஊருக்கு கிளம்பும் முதல் நாளில் யூத சிறுவன் தன் 'அப்பாவை காணவில்லை' என்று தன்  நண்பனிடம் கூறி கவலைபடுகிறான். இருவரும் சேர்ந்து தேடலாம் என்று முடிவு செய்கின்றனர். இதற்காக அகதி உடை ஒன்றை திருடி வந்து ஜெர்மானிய சிறுவனுக்கு தருகிறான்.

இருவரும் அகதி முகாமுக்குள் செல்கின்றனர்...அங்கே நடக்கும் கொடுமைகளை பார்கிறார்கள். அந்த நேரத்தில் ஹிட்லரின் அவசர ஆணைப்படி எல்லோரும் மொத்தமாக கொள்ள அழைத்து போக படுகிறார்கள், அதில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கிறார்கள் .

தன்  மகனை காணாமல்  அந்த தாய் பல இடங்களில் தேடி அலைகிறாள்..... ப்ருனோவின் தந்தை முகாமிற்குள் வந்து தேடுகிறான்..... 'விஷ வாயு' செலுத்தி கொல்வதற்காக  அடைத்து வைக்கப்பட்டுள்ள சேம்பருக்குள் இரண்டு சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ள விவரம் தெரியவருகிறது.  தங்கள்  பிள்ளையை காப்பாற்ற  குடும்பமே தவித்து போராடுகிறது. ஆனால் இருவரும் செத்து விழுகிறார்கள். அவர்களின் கை இறுக்கமாக பின்னபட்டிருக்கிறது. முள் வேலியின் அந்த பக்கம் கழட்டி போடபட்டிருக்கிற  தன் மகனின் உடைகளை கையில் வைத்து  ஜெர்மானிய மகனின் தாய் கதறி அழுகிறாள்.

படுகொலை காட்சிகள், வன்முறை எதுவும் இன்றி உணர்வை மட்டுமே காட்சிகள் பிரதிபலிக்கின்றன.இது கற்பனை கதை என்று சொல்ல முடியவில்லை...மனிதாபிமானம் மறந்த சிலரால் மனிதம் செத்து சீரழிந்து கொண்டிருக்கிறதை நெஞ்சில் அறைவது போல் காட்சியின் பரிமாணம் உணர்த்துகிறது....    !!!??


"தன்  சொந்த ரத்தம் பலியானபோது ஏற்படும் தவிப்பு போராட்டம், ஏன் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை....??" என்று 'ஜெர்மானிய மனசாட்சி' கேள்வி கேட்பதுபோல் இருக்கிறது....படத்தின்  கடைசி காட்சியை பார்க்கும் போது நம் மனதையும்  மெல்ல கீறி பார்க்கிறது இந்த கேள்வி.......!!   






உலகத்தின் சில இடங்களில் வெளியில் தெரிந்தும் தெரியாமலும்...... இந்த கொடுமைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மை படுத்தி சொல்லிய ஒரு சிறந்த படைப்பு இந்த படம்.



செவ்வாய், அக்டோபர் 5

உடல் மீதான உள்ளத்தின் ஆதிக்கம்


நம் மன ஓட்டத்தை சிலநேரம் நம்மாலேயே புரிந்துக்கொள்ள முடியாது. மனதை ஒருமுக படுத்துவதால் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்று நிருபித்தவர்கள் பலர்.  ஒரு தவறான செயலை நாம் செய்ய முயலும் போது உள்ளிருந்து ஒரு குரல் 'வேண்டாம் இதை செய்யாதே ' என்று கட்டளை இடும். இதைதான் நாம் மனசாட்சி என்று சொல்கிறோம். உண்மையில் மனம் நம்மை பெரும்பாலும் தவறிழைக்க விடுவதில்லை. அப்படியே தவறு செய்தாலும் சில நேரங்களில் அடிக்கடி நம் செய்த தவறை சுட்டி காட்டி உணர்த்தி கொண்டே இருக்கும். அந்த உறுத்தல் அதிகமாக இருந்துவிட்டால் நம்மால் சாப்பிடமுடியாது...தூங்க முடியாது...நிலை கொள்ளாமல் தவித்து போய் விடுவோம் . கடைசியில் கடவுளிடம் முறையிட்டு மன்னிப்பு கேட்டு நம் மனதை சாந்தப்படுத்தி கொள்வோம்.  

இப்படி நம் உடலின் மீது  உள்ளத்தின் ஆதிக்கம் பல நேரம் வழி நடத்தும். இப்படிப்பட்ட மனதின் உணர்வுகளை தட்டி எழுப்புவதின் மூலம் நம் உடலின் நோய்களை கூட குணபடுத்த  முடியும் என்று நிரூபித்தவர்தான் மருத்துவர் 'சிக்மன்ட் பிராய்ட்' .

நோய்களை  குணமாக்க முடியுமா?

படுக்கையில் கிடந்த ஒருவரின் உள்ளத்தை தட்டி எழுப்பி, அடி மனதில்  இருக்கும் விவகாரங்களை வெளியே இழுத்து  பேச்சின் மூலம் அவரது நரம்புகளை சரிபடுத்தி அவரை நோயில் இருந்து குணபடுத்த முடியும் என்பது ஆச்சரியமான உண்மை.  உள்ளத்தை நன்கு புரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் உடலுக்கு ஏற்படும் வியாதிகளையும் குணப்படுத்த  முடியும். இந்த  கருத்துக்கு 'பிராய்டிசம்' என்று பெயர். உளவியல் படித்தவர்களுக்கு அறிமுகமானவர், படிப்பவர்களுக்கு தவிர்க்க முடியாத முக்கியமானவர் பிராய்ட். இவரால் தான் 'மனநல மருத்துவம்'  என்று ஒரு தனி துறையே உருவாகப்பட்டது.    

கனவுகள் ஆழ்மனத்தின்  வெளிப்பாடே...!

கனவுகள் காணாத மனிதர்கள் என்று யாருமே இல்லை. தனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று கற்பனை செய்து கனவு காணுவது என்பது வேறு.  ஆனால் நாம் தூங்கும் போது வரும் கனவுகள், நம் மனதின் எண்ணங்களை பிரதி பலிப்பவை. மனிதனின் மனதிற்கும், தூக்க நேரத்தில் உருவாகும் கனவுகளுக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உண்டு. ஒரு நாளில் எட்டு மணி நேரம் நாம் தூங்குகிறோம் என்றால் அதில் கிட்டதட்ட 90 நிமிசங்கள் வரை கனவு காண்கிறோம் என்று அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. சிலருக்கு ஒரு கனவு முடிந்து...வேறொரு கனவு....என்று பல கனவுகள் விடியும் வரை கூட தொடருவது உண்டு.  

இப்படி இயற்கையாக ஏற்படும் கனவு நிலையை மனிதனுக்கு செயற்கையாக ஏற்படுத்தினால் அவன் மனதில் மறைத்து வைத்திருக்கும் பல விசயங்களை வெளிக்கொணர முடியும் என்பதுதான் மனோதத்துவம்.

ஆழ்மனம்

ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் ஆசைகள், ஏக்கங்கள் போன்றவை புதைந்து கிடக்கின்றன. அந்த ஆழ்மனதில் இருந்து வெளிவருபவைதான் கனவுகள், இந்த கனவுகள் மனிதன் விழித்திருக்கும் போது வருவதில்லை. தூங்கும் போதுதான் மனக்கதவுகள் திறந்துக்கொள்கின்றன . ஆழ்மனம் செயல் பட தொடங்குகிறது. அது மூடிய கண்ணுக்குள் காட்சிகளாக உருவெடுக்கிறது.

பொதுவாக நாம் விழித்திருக்கும் போது நமது மனம் பலவற்றை சிந்தித்திக்கொண்டுதான் இருக்கும் அந்த நேரம் நம் வாயில் இருந்து வெளி வரும் சொற்களில் உண்மைத்தன்மையை தேடுவது சிரமம். சரியான உள்ள உணர்வை வெளிப்படுத்தாது ...ஆனால் ஆழ்மனதை கனவு காணும் படி செயற்கையாக தட்டி எழுப்பி பேச வைக்கும் போது உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளி வராது.....

இந்த செயற்கை தூக்கம் ஒரு விதமான மயக்கம் ஆகும். உடலில் அடி பட்டு ரத்தம் வெளியேறுவதால் ஏற்படும்  மயக்கத்திற்கும், தூக்க நிலைபோல் காணப்படும் மயக்கத்திற்கும் வித்தியாசம் உண்டு.  இந்த மயக்கத்தால் அந்த மனிதனுக்கோ அல்லது அவனது உடலுக்கோ எந்த விதமான இழப்பும் ஏற்படுவதில்லை. 

உடலில் ஏற்படும் நோய்களை பெரும்பாலும் கண்டு பிடித்து மருத்துவம் பார்த்துவிடாம். ஆனால் உள்ளத்திற்குள் நடக்கும் போராட்டங்கள் தான் பெரிய அளவில் மனநோயை ஏற்படுத்துகிறது. இதனை வெளியில் இருந்து பார்க்கும் பிறருக்கு புரிந்துகொள்வது சிரமம். இன்றைய காலகட்டத்தில் மனதால் ஏற்பட கூடிய நோய்கள்தான் உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி வருகிறது. 

கொலை பாதகம் , பாலியல் வன்முறை, வன்மம், பழிவாங்குதல், பிறரின் துன்பத்தை கண்டு ரசித்தல், மிருக உணர்ச்சி இவை அனைத்தும் ஆழ்மனதில் மறைந்திருக்கும், வெளியில் தெரியாது. பிரச்சனைக்குரிய மனிதனை  பற்றிய உண்மையின் முழு வடிவத்தையும் பெற வேண்டும் என்றால் அவனது மனதை தான் முதலில் ஆராயவேண்டும்.  இதை  கண்டுபிடித்து சரி பண்ணகூடியதுதான்  'ஆழ்நிலை கனவு மயக்கம்'.  

மாறாக இந்த மயக்கம் சாதாரண மனிதனுக்கு நன்மையை தான் செய்கிறது. மனிதனுக்கு இருக்கும் பயம், கவலை போன்ற உணர்வுகளில் இருந்து அவனை விடுவிக்கிறது, மேலும் மன அழுத்தம் காரணமான ஏற்படும் உடல் சோர்வுகள், மன குழப்பங்கள் போன்றவற்றில் இருந்து மனிதனை வெளி கொண்டுவர இந்த மயக்க மாகிய கனவு நிலை மிகவும் உதவுகிறது.  

கனவு நிலையின் மூன்று கட்டங்கள். 

முதல் நிலை அறிவைச் சார்ந்தது, இரண்டாவது அறிவு சாராத நிலை, மூன்றாவது குழப்பம் நிறைந்த நிலையாகும். இந்த மூன்று நிலைகளின் அடிப்படையின் வித்தியாசத்தை உணராமல் செயல்பட்டால் உண்மையை கண்டுபிடிக்க முடியாத நிலைக்கு மருத்துவர் தள்ளபடுவார். 

*  முதல் நிலையில் சம்பந்த பட்ட மனிதனின் மனதில் இருக்கும் பயத்தையும், கவலைகளையும், குழப்பங்களையும்  அங்கிருந்து விடுவிக்கவேண்டும். இது முதல் நிலை. 

*   இரண்டாவது நிலையில் அம்மனிதனின் பேச்சில் ஒரு தெளிவு இருக்காது, வார்த்தைகளும் தொடர்பின்றி இருக்கும். எனவே அந்த கட்டத்தில் இருந்து அந்த மனிதனை வெளியே கொண்டு வர வேண்டும். 

*  முக்கியமான இறுதி நிலையும் உச்ச கட்ட நிலையும் இது தான். இந்த கட்டத்திற்கு அந்த மனிதனை கொண்டு சென்று விட்டால் அவனது ஆழ்மனதில் புதையுண்டு கிடைக்கும் அத்தனை விசயங்களும் மருத்துவருக்கு எளிதில் கிடைத்து விடும். அவனை பாதித்து இருக்கும் விசயங்கள் அனைத்தையும் அவனே தெளிவாக சொல்லி விடுவான். 

இந்த மூன்று நிலைகளையும் ஒரு மருத்துவர் சரியாக பொறுமையாக கையாண்டுவிட்டார் என்றால் அவரது மருத்துவம் வெற்றி தான். 

சிக்மண்ட் பிராய்ட் இந்த மருத்துவத்தை பற்றி விரிவாக எழுதிய ஒரு நூலின் பெயர்தான் INTERPRETATION OF DREAMS. 






வாசலில் நான் வரைந்த  கோலம் 


வியாழன், செப்டம்பர் 30

கண்டனம் - எது விழிப்புணர்வு....??!!

பதிவுலகில் சில நேரம்  எந்த கட்டுரை எழுதினாலும் 'கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் எழுதலாமே' என்றும், ஒரு பதிவு பொதுவான விசயங்களை    பற்றிய சிந்தனையுடன் எழுதப்பட்டிருந்தால் 'நல்ல விழிப்புணர்வு பதிவு' என்றும் பின்னூட்டங்கள் வரும். விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தமும், புரிதலும் இல்லாமலேயே கருத்துக்கள்  சொல்வதை 'ஏன் சரி செய்து கொள்ள கூடாது...?'  என்பதே என் ஆதங்கம்.  குறிப்பாக இந்த கண்டனம் என்பது 'விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' என்று வாயளவில் சொல்பவர்களை நோக்கித்தான்.

விழிப்புணர்வு

தெரியாத அல்லது புரிந்து கொள்ளப்படாத ஒன்றை அறியாமலும், கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமலும் , பெற வேண்டிய உரிமைகளை பெற்று கொள்ளாமலும், தம்மை பற்றியே உணராமலும் இருப்பதில் இருந்து, தூக்கத்தில் இருந்து ஒருவரை விழித்தெழ வைப்பது போன்று தமது உணர்வுகளை விழித்தெழ வைப்பது தான் விழிப்புணர்வு என்பதின் சரியான அர்த்தம். ஒருவர் தனது பிரச்சனைகளில் இருந்து 'தானாகவே விழிப்புணர்வு அடையவும் முடியும்', மற்றவர்கள் மூலம் 'விழிப்புணர்வு'  ஏற்படுத்தவும் முடியும்.

ஒரு சில பதிவர்கள் அந்த மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவில் நல்ல பதிவுகளை எழுதி வருகின்றனர். ஆனால் அவை சரியாக பலரிடமும் சென்று சேருவது இல்லை. காரணம் என்னவென்றால் அங்கு சென்று யாரும் பார்ப்பதும் இல்லை , படிப்பதும் இல்லை, அப்படியே படித்தாலும் தங்களது கருத்துக்களை அங்கே பதிவு செய்வதும்  இல்லை, அதனை பற்றிய தங்களின் சந்தேகங்களையும், கேள்விகளை எழுப்புவதும்  இல்லை. அதை விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் கட்டுரை  எழுதுங்கள் என்று மட்டும் குரல் ஆங்காங்கே எழுப்பபடுகிறது. சொல்வதுடன் நிற்காமல் செயலில் இறங்கி இன்னும் பல நல்ல பதிவுகள் வர நாம் தூண்டுகோலாய் நாம் இருக்கலாமே இனியாவது......!!

உதாரணத்திற்கு  ஒன்றை இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

ஆண்,பெண் சம்பந்த பட்ட அந்தரங்க உறவுகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு இருக்கிறது என்றால் கருத்துகளை அங்கே பதிவு செய்ய பலரும் தயக்கம் காட்டுகின்றனர், தங்களின் பெயர் அங்கே இடம் பெறுவதை பலரும் விரும்புவது இல்லை. சமுதாய சீர்கேடு இன்றைய காலகட்டத்தில் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் செக்ஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். திருமணம் முடித்தவர்களுக்குமே எத்தனை பேருக்கு இதனை பற்றிய முழு தெளிவு இருக்கிறது...??!

மேல்மட்ட மக்கள் இதற்காக counselling  என்ற பேரில் மருத்துவரை நாட தொடங்கிவிட்டார்கள். ஆனால் நடுத்தர, கீழ்மட்ட மக்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு எய்டஸ் என்பதை பற்றி கூட பெயரளவில் தான் தெரிகிறது. பள்ளிகூடங்களில் ' செக்ஸ் கல்வி '  அவசியம் என்ற குரல்கள் ஒலிக்க  தொடங்கியபோதிலும் அது வேண்டாம் என்று மறுக்கும் பெற்றோர்கள் தான் பெருமளவில் இருக்கிறார்கள். செக்ஸ் கல்வி என்பது வெறும் உறவை மட்டும் எடுத்து கூறுவது மட்டும் இல்லை, ஆண், பெண் உடல் அமைப்பு, டீன் ஏஜ் பருவம், தவறான தொடுதல்கள் என்ன, கருத்தடை பற்றியவை, மனித பாலியல் நடத்தைகள் அதில் இருந்து  மனரீதியான தெளிவு எப்படி பெறுவது என்பது போன்ற பல்வேறு வகை பற்றியும் சொல்லிகொடுப்பது ஆகும்.


நம்  பிள்ளைகள் இப்போது இருக்ககூடிய சமூக அமைப்பு பல தவறுகளின் தூண்டுதல்களை தான் கொடுக்கிறது, அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு இந்த கல்வி உதவும் ஆனால் நம்மிடம் தான் எதை பற்றியும் முறையான விழிப்புணர்வு இன்னும் வரலையே பின் எப்படி இது சாத்தியம்....??! சரி அது போகட்டும்....மற்றவர்களை விடுங்கள்.....


இப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்தை கையாளக்கூடிய நாம் முதலில் எப்படி இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அந்தரங்கத்தை பற்றி அலசகூடிய பதிவு இருக்கிறது என்றால் படிப்பவர்கள் அதை எழுதியது யார் என்றுதான் முதலில் பார்கிறார்கள், எழுதியது ஒருவேளை பெண் என்றால் , அவர்  டாக்டர் என்றாலுமே கூட, உடனே ஒரு முக சுளிப்பு 'ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இப்படி வெளிப்படையாக இதைச் சொல்கிறாரே'  என்ற வியப்பு.....ஏன் இந்த கண்ணோட்டம்.....?? இந்த உறவு என்பதே ஒரு பெண்ணை வைத்துத்தானே...... மேலும் திருமணம் முடிந்த ஒவ்வொரு பெண்ணுமே,  ஒரு ஆணால் உணரவே முடியாத தாய்மையையும், அதன் மூலமாக உடலுக்குள்ளும் , உடலுக்கு வெளியேயும்  நடக்க கூடிய மாற்றங்களையும் நன்கு உணர்ந்தவள் ஆகிறாள். அப்படிப்பட்ட ஒரு பெண் அந்தரங்கம் பற்றி எழுதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்....??  


(உதாரணதிற்கு ஒன்றை தான், இங்கே நான் குறிப்பிட்டேன்...இதை போல் பல விசயங்கள் உள்ளன விழிப்புணர்வை ஏற்படுத்த...அவற்றில் சில பதிவுகளை என் தளத்தில் இணைத்து இருக்கிறேன்...இன்னும் விடுபட்டவை நிறைய இருக்கிறது...தெரிந்தவர்கள் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும் )


யார் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய அளவில் பதிவு எழுதினாலும் ஆனா, பெண்ணா என்று பார்க்காமல் 'தேவையான நல்ல பதிவு' என்றால் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய ஏன் தயங்க வேண்டும் ??   நல்ல பதிவு எழுதினால் மட்டும் நல்ல பதிவர் என்று இருக்காமல் பிற நல்ல பதிவுகளையும் தேடிச் சென்று கருத்துகளை பதிவு செய்வதின் மூலம் நல்லதொரு விழிப்புணர்வை (மறைமுகமாக மட்டுமாவது) ஏற்படுத்த முடியும். அந்த பதிவை பற்றி வரும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள். விஷயம் ஒன்றும் இல்லாத தளத்திற்கு  சென்று எவ்வளவோ நேரம் செலவழிக்கும் அதே நேரம்,  நல்ல பதிவிற்கும் கொஞ்ச  நேரத்தை  செலவு செய்யுங்கள். 

"சந்தேகம் வரும்போது கேள்வி கேட்பவன், அந்த நேரம் மட்டும் அறியாதவனாக  இருக்கிறான்,  கேள்வி கேட்காதவன்  வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளாதவனாகவே போய்விடுகிறான்....?!!"      

வேண்டுகோள்

ஒரு நாட்டிற்கு பத்திரிகை, தொலைக்காட்சி, பிற மீடியாகளின் பங்களிப்பு மிகவும் அவசியம். வெளிநாட்டில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள்  வலைபூக்களை படித்துதான் தங்களுடைய தாய்நாட்டின் அன்றாட நிகழ்வுகளை  தெரிந்து கொள்கிறார்கள். இனி தொடரும் காலங்களில் பெரும்பாலோரின் பார்வையும் இணையத்தை குறிப்பாக வலைபூக்களை நோக்கித்தான் இருக்கும் என்பதே பலரின் அனுமானம். தொலைக்காட்சி, பேப்பரை பார்க்கும் நேரம் கூட இனி குறைந்து வலைபூக்களின் பக்கம்  வருகை அதிகரிக்கும்...அப்படிப்பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருக்கிற பதிவர்களாகிய நாம் நமது பார்வையை கொஞ்சம் சரி செய்து கொள்வோமே... 

பொழுது போக்கு என்று மட்டும் இல்லாமல் உண்மையில் ஏதாவது சமுதாய விழிப்புணர்வுடன்  எழுதுவோம் என்று இருப்பவர்களை நாம் கண்டிப்பாக தேடி கண்டுபிடித்து உற்சாக படுத்த வேண்டும். ரோட்டில் இறங்கித்தான் புரட்சி செய்ய வேண்டும் என்று இல்லை.. இந்த மாதிரி சிறிய அளவிலான நல்ல பதிவுகளை பற்றிய விழிப்புணர்வையாவது பலரிடம் கொண்டு போய் சேர்ப்போமே..... அதனால் தேவையற்ற வீண் விவாதங்களை விடுத்து நல்ல நேர்மையான கருத்துகளை விவாதித்து நம்மை நாம் சீர் படுத்திகொள்வோம். 

செய்வீர்களா...??!! 

ஒன்றை  மட்டும் நினைவில் வைத்து கொள்வோம்....

"படித்த பலரது பார்வையும், இப்போது பதிவுலகத்தை ஊன்றி கவனித்து கொண்டிருக்கிறது "

மற்றவர்கள் எப்படியோ  இருந்துவிட்டு போகட்டும்....ஆனால் படித்து, விவரம் தெரிந்த , அறிவியல் விந்தையான இணையத்தை  நுனி விரல்களில் கையாளுகிற நாம் ஏன் 'பத்தோடு பதினொன்னு' என்பது போல் இருக்கவேண்டும்....நல்ல தகவலை தேடி கண்டு பிடித்து வாழ்த்தும் முதல் குரலாக உங்கள் குரல் இருக்கட்டும்...


"பதிவுலகம் என்பது வெறும் பொழுது போக்குக்கானது மட்டும் அல்ல, சமுதாயத்தில் பல புரட்சிகர மாற்றங்கள் இங்கிருந்தே புறப்பட்டது என்று நாளைய உலகம் புகழட்டும் ...அதை ஓரமாக நின்று நம் வாரிசுகள் ரசிக்கட்டுமே .....!!"





இன்று வாசலில் 'போதிமரம்' 



புதன், செப்டம்பர் 22

நட்பை வளர்ப்போம்....!


அறிவியல் தொழில் நுட்பங்களால் நன்மைகள் பல. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.  அதில் இப்போது முக்கியமாக இருப்பது செல்போனும், இணையமும். இவற்றால்  உலகம் மிகவும் சுருங்கி விட்டதுதான். அதே நேரம் சிலரின்  கையால் தவறாக பயன்படுத்தபடுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.  பெண்கள் இதனை உணர்ந்து இருந்தும் சில நேரம் அவர்களையும் அறியாமல் தங்களுக்கு தாங்களே குழிகளை தோண்டி கொள்கிறார்கள்.

ஜெஸ்ஸி

'செக்ஸ்டிங்' என்ற ஒரு புதிய கலாசாரம் இப்போது பரவிக்கொண்டு  வருகிறது. காதலிக்கும்போது தன் காதலன்தானே என்று தன் நிர்வாணப்படங்களை அனுப்பி இருக்கிறார் ஜெஸ்ஸி லோகன் என்ற இளம் பெண். பின்னர் காதல் கசந்து இருவரும் பிரிந்த பிறகு செல்போனில் இருந்த தன் முன்னால் காதலியின் படத்தை அவன் பலருக்கும் அனுப்பி இருக்கிறான். அதை பார்த்தவர்களின் கேலி பார்வையை  காண  முடியாமல் தவித்து தற்கொலை செய்து கொண்டார் ஜெஸ்ஸி...?!! 

பத்திரிகை வரை வந்த விஷயம் இது.  ஆனால் வெளியில் தெரியாமல் மனதிற்குள் புழுங்கி கண்ணீர் விட்டு தவித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனையோ பெண்கள். பெண்களின் பலகீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். யாரையும் நம்ப முடியாத இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயமாக தங்களை பாதுக்காத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 

நெருங்கிய நண்பனாகவோ , காதலனாகவோ இருந்தாலுமே கவனமுடன் தகவல்களை பரிமாறி கொள்வது  மிக அவசியம். சாதாரண மின்னஞ்சல், செல்போன் தகவல்கள் கூட பிரச்னையை கொண்டு வரலாம். நம்மை  சுற்றிலும் வம்புக்கு வலைவிரிப்பவர்கள் தான் அதிகம்  இருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. 

போனில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால் பேசுவதை உடனே நிறுத்தி விடுங்கள் . உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படலாம் அல்லது பதிவு செய்யப்படலாம்.


நட்பு 

நெருங்கி பழகிய நண்பர்கள் ஒரு கட்டத்தில் ஒரு சில காரணங்களால்  பிரிய நேரலாம். ஆனால் முன்பு பழகிய காலத்தில் நடந்த உரையாடல்களை (உதாரணமாக சாட்டிங், மெயில்)  வேறு பலருக்கும்  அதை அனுப்பி, பழைய நண்பரின் மனதை கொல்கிறார்கள் . இது எவ்வளவு பெரிய துரோகம், அநாகரீகம். நம்பிக்கை வைத்து கருத்துக்களை, சொந்த விசயங்களை பரிமாறிவிட்டு பின் பிரிந்த பின் அவரது சொந்த விசயங்களை பிறரிடம் சொல்லி கேலி பொருளாக்குவது மனவலியைக் கொடுக்கும்.  

மனித நேயம் என்பது கொஞ்சங் கொஞ்சமாக நம்மிடையே கரைந்து , மறைந்து வருகிறது. தூய்மையான அன்பு கொள்ளுங்கள். கருத்து விவாதம் செய்யுங்கள். தேவை இல்லாமல் பிறர் மன உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். 

 " நமக்கு யாரும் துரோகம் செய்தால் எப்படி தவித்து போவோம்? அதை நாம் அடுத்தவருக்கு செய்வது என்ன நியாயம்..??! " 

" நண்பனில் சிறந்தவன் என்று யாரும் இல்லை...நண்பன் என்றாலே சிறந்தவன் தான்....!! "

அத்தகைய நட்புக்கு ஒரு சிலர் ஏற்படுத்தும் கெட்ட பெயரால் நல்ல நண்பர்களுக்கும் அவ பெயர் ஏற்படுகிறது.




ஆச்சரியமான ஒரு தகவல் - காந்தி நியுரான்


சில நேரம் அடுத்தவர்களின் வேதனைகளை, வலிகளை காணும் போதோ அல்லது கேள்வி படும்போதோ நம்மையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் நம்முடைய மூளையில் உள்ள 'எம்பதி நியுரான்கள்' தான். இந்த உணர்வு காந்தியடிகள் அவர்களுக்கு அதிகமாக இருந்ததால் தான் இந்த நியுரான்கள் ' காந்தி நியுரான்கள் ' என்றும் கூட அழைக்கப் படுகின்றனவாம்...!


" கருணையே வடிவானவர்களையே கூட காலம் ஒருநாள் அழைத்து சென்று கணக்கை முடித்து கொள்ளும். துடிக்கின்ற இதயம் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் நிற்கும்போது குடும்பத்துக்கு வெளியேயும்  கொஞ்ச பேரையாவது  மனதளவில் துடிக்கிற வைக்கிற மாதிரி, நல்லவர்களாக வாழ்ந்து வாழ்வை நிறைவு செய்து விட்டு போவோமே..!! "

"எல்லா உயிருக்கும் முடிந்தவரை நன்மையை மட்டுமே செய்வோம் ..!!"

நட்பை போற்றுவோம்....நட்பை வளர்ப்போம்.....

தொடர்ந்து வரும் அடுத்த பதிவு - கண்டனம்.