எவ்வளவு ஆபாசமாகவும் படம் எடுக்கலாம், மிக வக்கிரமாக பெண்களை வர்ணிக்கலாம், பெண்ணை இழிவுப் படுத்தி வசனங்களால் வன்புணர்வு செய்யலாம், நடிகைகளின் ஆடைகளை கிழித்து அலங்கோலப்படுத்தி பேஷன் இது என காட்டலாம், பாடல் வரிகளில் நேரடியாக பெண்ணை கேவலமாக வசை பாடி கவிதை என கொக்கரிக்கலாம் ...இது எல்லாமே சாத்தியம் இன்றைய சினிமாக்களில்!? யாரும் இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள், ஏன் அதில் நடிக்கும் பெண்ணுக்கே அதை பற்றி எந்த கவலையும் இல்லை. பணம் புகழ் மட்டுமே முக்கியம் தன்மானம் சுயகௌரவம் எல்லாம் வெறும் வார்த்தைகளாகிவிட்டன!
இப்படிதான் ஒரு சினிமா எடுக்கப்படவேண்டும் என்ற எந்த சட்ட திட்டமும் திரைத்துறைக்கு கிடையாது, எடுத்து முடித்த பிறகும் தணிக்கை துறை சர்டிபிகேட் கொடுத்து தனது கடமையை முடித்துக்கொள்ளும். வக்கிரம் வன்முறை ஆபாசத்தில் ஊறிய சினிமாக்களால் சீரழியும் இளைய சமுதாயத்தை பற்றி நினைக்கக் கூட இங்கே நமக்கும் நேரமில்லை. அதனால்தான் கொளுத்திவிட்டு கொழுப்பெடுத்துத் திரிகிறார்கள் சிம்பு, அனிருத் போன்ற ஆட்கள்.
சிம்புவுக்கு ஏற்பட்ட காதல்கள் எல்லாம் தோல்வி ஆனதன் பலனை சம்பந்த பட்ட பெண் அனுபவிக்கிறதோ இல்லையோ நாம் நன்றாகவே அனுபவிக்கிறோம், இவனது காதல் தோல்விகளை(?) காரணமாக வைத்து தொடரும் அவனது படங்கள், பாடல்கள் அனைத்திலும் பெண்களை இழிவுப் படுத்தி வக்கிரமாக வசனம் பாடல் என எழுதி ஆபாச நடனம் அமைத்து என்று தனது மன வக்கிரத்தை ஒவ்வொன்றாக மேடை ஏற்றிக் கொண்டிருக்கும் சிம்புவின் சமீபத்திய அழிச்சாட்டியம் அனிருத் இசையில் பாடி யூ டுயூப்பில் வெளிவந்திருக்கும் 'BEEP SONG'
சிம்பு நல்ல திறமையான மனிதரின் மகன்...அப்பாவைப் போன்றே சிம்புவும் திறமைசாலிதான் ஆனால் மன பக்குவமின்மையால் தடம் மாறி வாய்க்கு வந்ததை எல்லாம் பொது வெளியில் படையல் போடும் லெவலுக்கு போய்விட்டது மகா கேவலம். காதலித்ததாக சொன்ன நயன்தாரா சோர்ந்துப் போகாமல் சிம்புவை சிறிதும் லட்சியம் செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வரிசையாக படங்களில் நடித்து முன்னேறி சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை, ஆனால் சிம்புவோ இன்னும் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கும் பரிதாபம்...?!!
காதலில் தோல்வி கண்டவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று செல்வது நல்ல மனிதர்களின் குணம் ஆனால் தான் ஒரு மன நோயாளி என்பதற்கு தற்போதைய உதாரணம் இந்த பாடல். கேலி செய்யும் ஆண்களை பெண்கள் 'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல' என்று திட்டுவார்கள், ஆனால் கூட பிறந்த தங்கச்சி, பெத்த அம்மா இருந்தும் பெண்ணை கேவலப் படுத்தும் இந்த பாடல் எந்த எண்ணத்தில் பாடப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே கூசுகிறது. அவர்கள் இதை கேட்டு இருப்பார்களா கேட்டும் ஒன்றும் சொல்லவில்லையா ? உடன் நடிக்கும் நடிகையை தொட்டுக்கூட நடிக்காத அப்பாவிற்கு (டி.ராஜேந்தர்) இப்படி ஒரு பிள்ளை ... அந்த அப்பாவும் இந்த பாடலை கேட்டும் பெருசா ரியாக்சன் காட்டாம தொலையுது சனியன் என்று இருந்துவிட்டார் போல
எவண்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று பாடியபோது ரசித்த அதே கூட்டம் தான் இந்த பாடலையும் ரசிக்கிறது...ரசிக்கப் போகிறது. ஆகச் சிறந்த பாடலான கொலவெறி பாடலை போல இதையும் ஹிட் ஆக்காமல் ரசிகர்களும் ஓயப் போவதில்லை. பெண்ணைத் திட்டி வசனம் பாடல் வைத்தால் அதை எல்லோரும் விரும்புவார்கள் குறிப்பாக இளைஞர்கள் என்ற எண்ணம் இருக்கவேதான் இது போன்றவை பிரபலமாகின்றன. ஆனால் தாய் மனைவி அக்கா தங்கை என்று பெண்களுடன் இணைந்து நன்றாக வாழ்கிற எந்த ஒரு நல்ல ஆண்மகனும் இந்த பாடலை காரித்துப்புவானே தவிர ரசிக்க மாட்டான்.
எனக்கு என்ன கவலை என்றால் நாளையே இந்த பாடல் சூப்பர் சிங்கரிலும், சன் சிங்கரில் சின்ன சின்ன குழந்தைகளினால் பாடப்படுமே , பாடுவதற்கு முன் பலமுறை மனப் பாடம் செய்வார்களே, நினைச்சுப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.
சினிமாக்களில் வசனம் என்றால் கூட சில நொடிகளில் கேட்டதும் மறந்துவிடலாம், ஆனால் பாடலாக வரும்போது பலமுறை ஒலிக்கும், கேட்டு கேட்டு மக்களுக்கும் பழகிவிடும், நாளை வீட்டில் சாதாரணமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக இந்த வார்த்தை மாறிவிடும்!!???
இன்னொரு கொடுமை என்னவென்றால் மழை வெள்ளப் பாதிப்பை பற்றிய செய்திகளை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை இந்த பாட்டு பிடித்துக் கொண்டதுதான்.
இந்த பாட்டுக்கு எதிர்வினை காட்டினால் அதுவே இதற்கு ஒரு விளம்பரம் ஆகிவிடும் என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டது எனது கோபம். உடல் முறுக்கி நெளியும் சிறு புழுவென எனது எதிர்ப்பை இங்கே காட்டிவிட்டேன். எதிர்ப்புகள் பல ஒன்று சேர்ந்தால் அந்த பாடல் நீக்கப்படவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மது வேண்டாம் என்ற பாட்டிற்கு சிறை இந்த பாட்டிற்கு குறைந்தபட்சமாக தடை... ???!!!
#BAN BEEP SONG#








