செவ்வாய், மார்ச் 20

காணக் கிடைக்கவில்லை...! சிட்டுகுருவி !!


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... மனிதனை தவிர மற்றவை அனைத்தும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தனது சுயநலத்திற்க்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் பிறவற்றுக்கு ஆபத்தாக முடிந்துவிடுகிறது.


எங்கும் படபடவென்று தன சிறகுகளை விரித்து சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருக்கும் சிட்டுகுருவி இன்று எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. கிராமங்களிலும் காணமுடிவதில்லை. 


உலக சிட்டுக்குருவிகள் தினம்  

அழிவினை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தினத்தை ஏற்படுத்தி கொண்டாடி கொண்டிருக்கிறோம். வெறும் நினைவுகளை மட்டுமே அசை  போட்டு கொண்டிருக்கும் இந்நிலை நிச்சயமாக மனித வாழ்க்கைக்கு நிறைவை தராது. மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் மனிதனை விட்டு விடைபெற்று சென்று கொண்டிருப்பது காலத்தின் கோலம் அன்றி வேறென்ன...?! பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் அன்ன பறவையை காவியங்களில் பார்த்திருக்கலாம், அவை கற்பனைதானோ !?

எங்கும் மனிதர்கள்...ஒருவரோடு ஒருவர் இடித்துகொள்ளும் அளவிற்கு பெருகிவிட்டார்கள்...அதனால் பிற உயிரினங்கள் தங்களுக்கான இடம் பறிபோய்விட்டது என்ற வருத்தத்தில் அழிந்து போய் கொண்டிருக்கின்றனவோ என்னவோ...?

மனிதன் சற்றும் யோசிக்காமல் மரங்களை வெட்டுகிறான், மணலை அள்ளி ஆறுகளை அழிக்கிறான், சுற்றுபுறத்தை மாசு படுத்துகிறான், பசுமை காடுகளை பாலைவனமாக மாற்றிவிட்டன...நம்முடன் இருந்த பல உயிரினங்கள் ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகி போய்கொண்டே இருக்கின்றன...

இயற்கை ஆர்வலர்கள் இதனை பாதுகாக்க தற்போது கணக்கெடுப்பதாக இருக்கிறார்கள்...! கண் கெட்ட பின்.......என்றாகிவிட்டது. சக உயிரில் அக்கறை இல்லாதவர்கள் சக மனிதனை எவ்வாறு மதிப்பார்கள் என தெரியவில்லை...

அழிய என்ன காரணம் ?!


செல்போன் கதிரியக்கத்தால் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மை பாதிக்க படுவதாக சொல்லபட்டாலும் மாசுபட்ட சுற்றுப்புறசூழலும், முன்பு எங்கும் சிந்தி சிதறி கிடந்த  உணவு தானியங்களின் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். முன்பு நிலத்தை சிறிது தோண்டினாலும் மண் புழுக்களை பார்க்கலாம், ஆனால் இப்போது வேதி உரங்கள் போடப்பட்ட மண்ணில் உயிர் சத்து இல்லாமல் புழுக்களை காணமுடிவதில்லை. மேலும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல் புழு பூச்சிகளை அழித்துவிடுகிறது, குஞ்சு குருவிகளுக்கு இவை நல்லதொரு உணவு. 

சோடியம் விளக்குகளாலும் அழிகின்றன என சொல்கிறார்கள். ஆனால் இவை மட்டும் தான் உண்மையான காரணங்களா என தெரியவில்லை. மனிதரின் அலட்சியம் ஒன்று மட்டும்தான் காரணம் என நினைக்க தோன்றுகிறது. ஒரு பொருள் காணவில்லை என்றானபின் தான் அதன் மேல் அதிக அக்கறை வந்து தேட தொடங்குகிறோம்...அது போன்றுதான் மனிதனை எப்போதும் சுத்தி சுத்தி வந்து வளையமிட்ட சிட்டுக்குருவிகளை சட்டை செய்யாமல் இருந்தோம்...வெகு தாமதமாக அவை குறைந்து போனதை உணர்ந்து 'அடடா இப்படி ஆகிபோச்சே என்ன செய்யலாம்' என தவிக்கிறான் மனிதன்...?!    

இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்...


சிட்டுகுருவிகளுக்காக ஒரு செல்ட்டர் ஒன்று அமைத்து வளர்க்கலாம் (முக்கியமாக செல்போன் டவர் இல்லாத இடத்தில் )என யோசித்தேன். அவ்வாறு வளர்க்கலாமா ? இது போன்ற கூண்டுகளில் அவை வளருமா? என பலரிடமும் ஆலோசனை கேட்ட பின்னே முயற்சிகள் மேற்கொண்டேன்.   வெளியிடங்களில் அவை அழிந்துவருகின்றன என்பதால் இயன்றவரை ஒரு பத்து குருவிகளையாவது பாதுகாக்கலாம் என சொந்த ஊரில் மரங்கள் அடர்ந்த எங்களின் பண்ணை வீட்டில் பெரிய மரங்களை உள்ளடக்கி பிரமாண்ட கம்பி வலை கூண்டு ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் செய்து விட்டேன். பறவைகள் அதனுள் சுதந்திரமாக பறக்ககூடிய அளவில் இருக்கவேண்டும் எனவும் அதன் உள்ளேயே பறவைகளுக்கான உணவு, நீர் போன்றவற்றை தினமும் வைத்து பராமரிக்கவேண்டும் என்ற அளவிலே நிர்மாணித்தேன்...!  


ஆனால்...


சிட்டுகுருவி தேவை என பலரிடம் மூன்று மாதங்களுக்கும் மேலாக கேட்டு கொண்டிருக்கிறேன். கிராம புறங்களில் இதற்கென இருப்பவர்களிடம் சொல்லி வைத்தேன், பிடித்து தாருங்கள் பணம் கொடுத்து பெற்றுகொள்கிறேன் என்று...இதுவரை ஒரு சிட்டுக்குருவியும் கிடைக்கவில்லை...?!!   


காணக் கிடைக்கவில்லை என்ற பதில்களை விட எங்கே தேடுவது என்பதே கேள்வி குறியாகிவிட்டது. நமது சிறுவயதில் இருந்து நம்முடன் ஒன்றாக வாழ்ந்து வந்துகொண்டிருந்த ஒரு இனம் இன்று முற்றிலும் அழியும் கட்டத்திற்கு   வந்துவிட்டது...நாளை நம் குழந்தைகள் சிட்டுக்குருவியை புகைப் படங்களில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது நிச்சயம்...!  


தேடுதல் தொடரும்...கிடைக்கும் வரை...!!!


பின் குறிப்பு 


உலக சிட்டுக்குருவிகள் தின வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளும் இந்நாளில் மீதம் இருக்கும் இயற்கையின் அரிய உயிரினங்களையாவது அழிய தொடங்கும் முன்பே அவற்றின்  மீது அக்கறை செலுத்த தொடங்குவோம்...!


படங்கள் - நன்றி கூகுள்


திங்கள், மார்ச் 19

மத்திய அரசே ! கண்டன தீர்மானத்திற்கு ஆதரவு கொடு...!


இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை குழுவில் தீர்மானம் கொண்டுவரபடுவதற்க்கு ஆதரவு தெரிவிப்பதில் மௌனம் சாதிக்கும் மத்திய அரசு !!?



" இலங்கையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. அப்போது 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கூட்டங்கூட்டமாக ஈவு இரக்கமின்றி கொடூரமான முறையில் இனப் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள அரசின் வெறித்தனமான மனிதத் தன்மை அற்ற கொலைவெறி ஆட்டங்கள் சானல் 4  லின் மூலம் தற்போது வெளி உலகிற்கு வந்திருக்கின்றன. சர்வதேச சமுதாயம்  இதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது "-பத்திரிகை  செய்தி 

இப்படி சில வரிகளில் நடந்த அத்தனை கொடுமைகளையும் சொல்லிவிட முடியும் ஆனால் மனித உணர்வு உள்ள யாரும் இதை ஒரு செய்தியாக சாதாரணமாக படித்து விட்டு சென்றுவிட இயலாது. கொடூர கொலைகள் !!அந்த விடியோ காண தைரியம் இல்லாமல் ஒரு சில போட்டோக்களை பார்த்தே மனம் நடுங்குகிறது. நடந்தது நடந்து போச்சு, இனி நடப்பதை பார்ப்போம்  என்று சமாதானம் சொல்ல வாய்ப்பே இல்லாத கொடூர நிகழ்வுகள் இவை. 

கண்டன தீர்மானம் 

இதுநாள் வரை கண்டுகொள்ளாத நாடுகளும் இப்போது இலங்கையை ஒரு வித வெறுப்புடன் நோக்க தொடங்கியுள்ளன என்பதற்கு ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள கண்டன தீர்மானம் ஒரு சாட்சி.   

இந்த தீர்மானம் நிறைவேற வேண்டுமென்றால் மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின்  வாக்குகள்  இருந்தால்  மட்டுமே  முடியும் . இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் தயாராக இருக்கின்றன. ரஷ்யா, சீனா இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன. இத்தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டால் இன அழிப்புக்கு பதில் சொல்ல கூடிய கட்டத்திற்கு இலங்கை வந்துவிடும். விசாரணைகள், பொருளாதார தடைகள் என்று பாயும். ராஜபக்சே என்னும் அரக்கனின் ஆட்டத்தை அடக்க இது ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கும்.  

S. M. கிருஷ்ணா  சொல்கிறார்   "இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக உறுப்பினர்கள் அவையில் வெளியிட்ட கவலை, உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த நாள் முதல் அந்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு செயல்பட்டு வருகிறது " என்று 

யாருக்கு வேண்டும் இவர்களின் கவலை,பரிதாப அறைகூவல்கள், இன்னுமா நாம் இவற்றை எல்லாம் நம்பிக்கொண்டிருக்க வேண்டும். எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் மக்கள் என்பதே அரசியல்வாதிகளின் எண்ணம். ஆனால் அரசுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டால் என்னாகும் என்பதை புரிந்துகொள்ள மறந்துவிடுகிறார்கள்.

"இலங்கை அரசு உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு தமிழ்ச் சமூகத்தினரின் குறைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையைத்தான் இந்திய அரசு வைக்க முடியும்"  - எஸ்.எம்.கிருஷ்ணா 

கொந்தளித்து கொண்டிருக்கும் நம் மன உணர்வுகளை சட்டை செய்யாமல் எத்தகைய அசட்டையான பதில் இது !!?

சிங்கள இனவாத வெறிபிடித்த அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இது ஒரு சந்தர்ப்பம். இனியும் மத்திய அரசு மௌனம் சாதித்து கொண்டும் அலட்சியமான பதில்களை சொல்லிக் கொண்டும்  இருந்தால் தமி(ழ்)ழக மக்கள் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள் என்பதை உணர்த்தியாக வேண்டும்.

புதிய தலைமுறையில், சுதர்சன நாச்சியப்பன் (இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்)

"இலங்கையில் நடந்தது அனைத்தும் விபத்து தான்... விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு...நாங்கள் முதலுதவி செய்கிறோம்... விபத்து ஏன் நடந்தது எப்படி நடந்தது... ஆராய்வது எங்கள் வேலையல்ல... அதை இலங்கை பார்த்து கொள்ளும் "என்கிறார். தமிழ்நாட்டுல இருந்து இவரை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பின மக்களுக்கு நல்லா கொடுக்கிறார் விளக்கம்...?!!

எப்படி இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை சொல்ல முடிகிறது என தெரியவில்லை. பெண்களும், பிஞ்சு குழந்தைகளும் கொத்துகொத்தாக கொல்லப்பட்டதுக்கு பேர் கொலை இல்லாம வேறென்ன...?!  இதை விபத்து என்று சொல்ல எப்படி மனம் வருகிறது. 

மத்திய அரசின் தயக்கம் 

இத்தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக மத்திய அரசு ஆதரித்தால் நாளையே இலங்கை 'இந்தியா சொல்லித்தான் இன படுகொலையை நாங்கள் செய்தோம்' என்ற உண்மையை சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் தான் இந்த விசயத்தில் மத்திய அரசு சமாளிக்கிறதோ என சந்தேகம் வருவது இயற்கை. 

பொதுவாக பார்த்தால் அமெரிக்கா செய்திருக்கும் மனிதஉரிமை மீறல்கள் மிக அதிகம் என்றபோதிலும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருப்பதின் உள்நோக்கம் எதுவாக இருப்பினும், இத்தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்தே ஆகவேண்டும். மக்களுக்காகவே இந்த அரசு என்று சொல்லிகொண்டிருக்கும் தமிழக அரசும், மக்களுக்காக எதையும் செய்வோம் என்று மார் தட்டிகொள்ளும் எதிர்கட்சிகளும் இந்த ஒரு விசயத்திலாவது ஒன்றாக இணைந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். 

மக்களுக்கு எதிராக யார், எந்த நாடாக இருந்தாலும் கொலைபாதக செயலை செய்தால் அதை இந்திய அரசு எதிர்த்தே ஆகும் என்பதை உலகுக்கு தெரியபடுத்த வேண்டும். இப்போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் என சொல்லும் அமெரிக்காவே நாளை மனிதஉரிமை மீறல் செய்தாலும் அதையும் இந்தியா எதிர்க்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தாக வேண்டும். இந்தியா காந்தியம் பேசிகொண்டிருந்தால் மட்டும் போதாது...

அனைத்து தமிழ் நெஞ்சங்களும் ஓங்கி நமது குரலை தெரிவிக்க வேண்டிய  ஒரு நேரம் இது. நம் சகோதர உறவுகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்து அவர்களுக்கு தைரியம் கொடுப்போம். 

ஒன்றிணைந்து நமது குரல் ஒலிக்கட்டும் மூடிக்கிடக்கும் செவிகள் திறக்கும் வரை...மத்திய அரசு இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்றே வலியுறுத்துவோம்...!! 

வாழ்க எம்மக்கள் ! ஓங்குக தமிழ் மக்களின் ஒற்றுமை !!


முக்கிய குறிப்பு


உலகமெங்கும் தமிழர்கள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி,வலியுறுத்தி கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில், இதில் இருக்கும் சில அரசியல் தந்திரங்கள் இவையாகவும்  இருக்கலாம், அது என்ன என்று அவசியம் படித்துத்தான் பாருங்களேன்... 


காய்கள் நகர்த்தும் காங்கிரஸ் ! ஐநாவில் அரங்கேறப் போகும்  இலங்கை எதிர்ப்பு நாடகம்...!

வெள்ளி, மார்ச் 16

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - அவலங்களின் உச்சம் !?






முன்னுரை 

திருநெல்வேலியில் இருந்து சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்குப் போகவே ரொம்ப யோசனையாக இருக்கிறது. இந்த அரசியவாதிகள் காமெடி பண்றாங்களா, சீரியஸா இருக்காங்களா என்றே புரிய மாட்டேன்குது.  என்னவோ போங்க மக்களே !! ரொம்பப் படுத்தி எடுக்கிறாங்க...பேசாம 144  ஊரடங்கு உத்தரவு போட்டாத் தேவல...அமைதியா வீட்டுக்குள்ள இருப்போம் !வெளில தலைக் காட்ட முடியல, எங்கிருந்தோ ஒரு பத்து பேர் ஓடி வந்து 'அம்மா நல்லா நினைவு வச்சுகோங்க, ஞாபகமா(?) இதில தான் ஒட்டு போடணும் மறந்துராதிங்க' அப்படி இப்படின்னு என்னை அம்னீசியா பேசண்ட் லெவெலுக்கு கொண்டுப் போய்டுறாங்க...!?

என் பார்வையில் அதீதமாகப் பட்ட சிலவற்றை என் பார்வையாக இங்கே பகிர்கிறேன்.


எதற்கு இந்த வீணான ஆர்பாட்டங்கள் ?!

இடைதேர்தல் ஒரு தொகுதிக்கு நடைபெறுவதாக எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்...ஆனால் தமிழ்நாட்டிற்கே தேர்தல் நடைபெற போவதைப்  போல் எங்கும் ஒரே பரபரப்பு. தமிழ்நாட்டை அடுத்து ஆளப்போவது யார் என்று நிர்ணயிக்க போவதே இந்த தேர்தல் தானோ என்பதைப் போல மொத்த அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் குவிந்திருக்கின்றனர்.

அரசியல் பற்றி அனா ஆவனா தெரியாத என்னையும் இந்த தேர்தல் ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது. எனக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அங்கே எனக்கு ஓட்டுரிமை இருக்கு என்பதே. 15 வருடமாக பழகிப்போன ஊரில் இப்போது திரும்பிய திசை எங்கும் புதுப்புது முகங்கள்...எல்லோரும் உரக்கப்  பேசுகிறார்கள், வேகவேகமாக நடக்கிறார்கள், எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதற்கு செல்கிறார்கள்...குழப்பத்தில் பாதி மக்கள் , ரொம்ப தெளிவாக மீதி மக்கள்(?) சந்தோசம், வருத்தம், குழப்பம், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து ஒரு வித்தியாசமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 

வாசலில் மாதக்கணக்கில் காத்துக்கிடந்தாலும் தங்கள் முகத்தை  காட்டக்  கூட நேரம் இல்லாத மாண்புமிகுக்கள் இப்போது சர்வ சாதாரணமாக பத்தடிக்குப்  பத்தடி தூரத்தில் தெருவில் மக்களுக்கு முன்னே கடந்துச்  செல்கிறார்கள்...திருநெல்வேலி ராஜபாளையம் மெயின் ரோட்டில் தலையை குனிந்துக்கொண்டு போனால் எதிரில்  இடித்து கொள்ளும் நபர் அனேகமாக ஒரு மாண்புமிகு அமைச்சர், எம் எல் ஏ,  மேயராக இருக்கலாம். எதற்கும் நிமிர்ந்து போவதே நல்லது...! பின்ன இப்ப இடிச்சிட்டுப்  போனா சிரிச்சிட்டுப்  போய்டுவாங்க, ஆனா உங்க அட்ரெஸ் நோட் பண்ணப்பட்டு தேர்தல் முடிந்ததும் வீட்டிற்கு ஆட்டோ அனுப்படலாம்...! (வேற ஒன்னும் இல்ல, கூப்பிட்டு உங்களைப்  பாராட்டத்தான் !!)

சில துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள், இப்போது இருப்பவர்களும் எப்போதும்  கிளம்ப நேரும் என தயாராகவே  இருக்கிறார்கள் போல. தமிழகத்தைச்  சேர்ந்த எல்லா கட்சியினரும் வட்டம் , மாவட்டம், சதுரம், செவ்வகம் என்று தேர்தல் வேலையை மாய்ந்து மாய்ந்து பார்க்கிறார்கள்...ஊரில் இருக்கும் பல வீடுகள் வாடகைக்கு என வலிந்துப்  பெறப்படுகின்றன, ஒரு சில வீடுகளுக்கு வீடு கட்டிய செலவை விட அதிக வாடகை கொடுக்கப்படுகிறது...மக்களும் வாழ்க்கையில் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா என்ற ஒரு சந்தோஷ அதிர்வில் வீட்டினைக்  கொடுத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். (தேர்தல் முடிந்த பின் வீடு எனக்கே சொந்தம் என்று எழுதி வாங்காமல் இருந்தால் சரி...எதுவும் நடக்கலாம் ?!!)
வீட்டிற்கு வெளியே, கட்சியினர் இருவர் என ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் இருக்கிறார்கள். மக்களின் நடவடிக்கை அனைத்தும் ஏறக்குறைய ஏதோ ஒரு கட்சியினரின் கண்காணிப்பில் !! தீப்பெட்டி ஆபிஸ், தறி செட் , சினிமா, கோவில், திருவிழா, டீக்கடை அரட்டை என ரொம்பவே இயல்பாக வாழ்வை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிற சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு இந்த திடீர் ஆர்பாட்டங்கள் என்னதென்று புரியாத  ஒரு அதீத குழப்பத்தை ஏற்படுத்தி  இருப்பது  அந்த ஊர் பிரஜை, என்னால் நன்கு உணர முடிகிறது. இந்த குழப்பத்தின் விளைவு எப்படியும் இருக்கலாம். இது போன்ற ஒரு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும் இன்றைய அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது...?!

'தேர்தல் என்பது மக்கள் சுயமாக சிந்தித்து கட்சிகளின் நிறைகுறைகளை சீர் தூக்கி வாக்கு அளிப்பது' என்ற அடிப்படை மாறி வற்புறுத்தல்கள், வலியுறுத்தல்கள் என்பதாக இன்று இருக்கிறது. 'சென்டிமெண்டல் மிரட்டல்கள்' என்று கூட சொல்ல தோணுகிறது.

ஒரே தெருவில் இந்த பக்கம் ஒரு கட்சி, அந்த பக்கம் மற்றொரு கட்சி பிரச்சாரம் இரண்டையும் ஒரு சேர கேட்கும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும். நேரில் அனுபவித்த எனக்கு எரிச்சல் தான் வந்தது. ஒன்னுமே புரியலன்னு சொல்ல முடியல, எல்லாமே புரியல. ஏன் எதற்கு இந்த ஆர்பாட்டம் , இந்த தேர்தல் ஒன்று தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்  போகிறதா ?! கட்சிகள் இதில் வெற்றி பெற்று எதை நிலைநிறுத்தத்  துடிக்கின்றன ?! 

தமிழ் நாட்டின் அத்தனை முன்னால், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி க்கள், எம் எல் ஏக்கள், மேயர்கள், சேர்மன், கவுன்சிலர்கள், பல துறை சேர்ந்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள்,அடிமட்ட,மேல்மட்ட கட்சி செயலாளர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கைத்துறை, தொலைக்காட்சி நிருபர்கள்,  நடிக, நடிகையர்கள் இன்னும் இதில் சொல்ல விடுபட்டுப்போனவர்கள் அநேகம் என்று உள்ளூர் மக்களை விட மூன்று மடங்கு மக்களால் இத்தொகுதி மூச்சுத்  திணறி விழிப் பிதுங்கிக்  கொண்டிருக்கிறது.

தேர்தல் வேலைப் பார்க்கிறோம் என்று இத்தனை பேர் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், தற்போது தமிழகத்தின் தலைப்  போகிற பிரச்னை இது மட்டும்தான் என்பது போல் துடிக்கும் அரசியல்வாதிகள், மக்களின் பிரச்சனை எதிலும் தலையிடவில்லை.

*பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு எத்தனை அமைச்சர்கள் நேரில் போய் மக்களைச்  சந்தித்தார்கள் ?

* முல்லை பெரியாறு அணைக்கு இத்தனை கூட்டமும் குரல் கொடுத்ததா?!

* மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் கூடங்குளம் மக்கள் போராட்டத்துக்கு எத்தனை அமைச்சர்கள் நேரில் சென்றார்கள். மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம் தானே அதற்கு ஏன் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரும் துணை நிற்கவில்லை. 

அவைக்கூட போகட்டும் , ஆனால் குறைந்தபட்சம்.....

இங்கே நெல்லையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்விக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக செய்து வரும் உள்ளிருப்பு போராட்டத்தை ஒரு அமைச்சரும் ஏன் கண்டுக்கொள்ளவில்லை?! ( மாணவர்களாக கோர்டில் முறையீடு செய்து நல்லதொரு தீர்ப்பைப்  பெற்றுவிட்டார்கள்)

குடிநீருக்காக அன்றாடம் அலைகிற மக்களுக்காக தங்களது சிங்காசனத்தை விட்டு இறங்கி வராத இவர்கள் ஒரு எம் எல் ஏ சீட்டுக்காக இரு வாரமாக மக்களிடம் கை ஏந்தி பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு அவலம் வேறன்ன இருக்கிறது ?!!

தன் கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக சுய கௌரவம் என்பது இல்லாமல் மக்கள் கால்களில் விழும் இவர்கள் தேர்தல் முடிந்ததும் காக்கா கூட்டங்களைப்  போல சிதறி ஓடி விடுவார்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களையும் பார்த்து பொழுதுபோக்கிய மக்கள் வழக்கம் போல தீப்பெட்டி ஆபிஸ், தறி செட், பீடி உருட்ட என தங்களின் வயிற்று பாட்டை பார்க்க போய்விடுவார்கள்
இந்த தேர்தலால் பாமர மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மை என்ன? அதிக அளவு பணம் நடமாடுகிறது...அவ்வளவும் மக்கள் பணம். மக்களுக்கு தானே போகிறது என்று சமாதானம் செய்துக்  கொள்ள முடியவில்லை. இப்படி திடிரென்று கிடைக்கக்கூடிய பணம் நிச்சயமாக அவனது வறுமையை போக்க போவதில்லை, மாறாக அந்த பணம் டாஸ்மார்க் மூலமாக மீண்டும் அரசின் கைகளுக்கு தான் போகப்  போகிறது. உழைக்காமல் கிடைத்த பணம் உற்சாக செலவிற்கு போகும் என்பதுதானே நியதி ?!! டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது, குடிக்க வைத்தே வாக்காளனின் சிந்திக்க கூடிய மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

மக்களுக்கு சிந்திக்கும் திறன் அறவே இல்லை என்றே முடிவு கட்டிவிட்டார்கள். தேர்தல் வரை நெருக்கடிக்கு ஆளாகும் மக்களை பற்றி யாரும் கவலை பட போவதில்லை. மக்களை சுயமாக சிந்திக்கவும் விடப் போவதில்லை. தங்களை முன்னிறுத்துவது மட்டுமே நோக்கமாக இருக்கும் இவர்களா மக்களின் பிரச்சனைகளைத்  தீர்க்கப்  போகிறார்கள்...?!

தேர்தல் கமிசன் ?!!

தமிழகம் முழுவதும் தேர்தலை நடத்த முடிந்தவர்களுக்கு  ஒரு தொகுதியில் நடத்த ஏன் இத்தனை பரபரப்பு, அல்லோகலம் என்பது தான் புரியவில்லை. 50 கிலோமீட்டர் தள்ளி நடக்க போகிற ஒரு தேர்தலுக்காக திருநெல்வேலியின் ஏதோ ஒரு சிறிய தெருவின் சுவற்றில் எழுதி இருக்கும் அரசியல் வாசகங்களை அழித்து கொண்டிருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் பணியாளர்கள் மாற்றபட்டுகொண்டே இருக்கிறார்கள், எதற்காக யார் வசதிக்காக ?! 

பத்திரிகை செய்திகளில் தவறாமல் தினம் இடம் பெற்று விடுகிறது இத்தனை லட்சம் இன்று பிடிபட்டது என்று. அது அரசியல்வாதியிடம் இருந்து என்றா ?! இல்லவே இல்லை. சோதனையில் பிடிபடுபவர்கள் அத்தனை பேரும்  வியாபாரிகளும், சிறு தொழிலதிபர்களும் தான். அரசியல்வாதிகள் புத்திசாலிகள், பணத்தை பல வழிகளில் சம்பாதிக்க தெரிந்தவர்களுக்கு அதை ஊருக்குள் கொண்டு வரும் வழியா தெரியாது...?! தேர்தல் கமிசனும் தான் சரியாக வேலை செய்வதாக காட்ட இப்படி ஏதாவது செய்தி வெளியிட்டு ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பதட்டமான வாக்குசாவடிகள் ?!!

தேர்தல் நடக்க இருக்கின்ற 242 வாக்குசாவடிகளும் பதட்டமானவை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி.  கடந்த வருட தேர்தலில் 16 வாக்கு சாவடிகள் பதட்டமானவை என்றார்கள், இப்போது அனைத்தும் பதட்டமானவை என்றால் எங்கே இருக்கிறது தவறு ?

* ஒரே வருடத்தில் ஊர் அந்த அளவிற்கு மோசமாக மாறிவிட்டதா ?

அல்லது

* இனி நடக்க போகிறவைகளுக்காக முன்கூட்டியே பூசிமெழுக வசதியாக இப்படி ஒரு செய்தி பரப்பப்படுகிறதா ?

எது உண்மை ? யார் விளக்குவது ? தேர்தல் கமிசன் எந்த விதத்தில் செயல் படுகிறது என்பதே சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது.

தீவிர சோதனை ?!!

ஆங்காங்கே நடுவழியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போலீசாரால் ஒவ்வொரு சீட்டாக சோதிக்கபடுகிறது. பயணிக்கும் கிராம மக்கள் என்னமோ ஏதோனு  ஒரு வித பதட்டத்துக்கு ஆளாகிறார்கள்...! இந்திய பாகிஸ்தான் எல்லை போல ஆகிபோச்சு சங்கரன்கோவில் !!

வீடு வீடாக புகுந்து சோதிக்கும் கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது...! பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவதை பற்றி துளியும் அக்கறைகொள்ளாத தேர்தல் கமிசன் !!

மக்களை நெருக்கடிக்கும், பதட்டத்துக்கும், அச்ச உணர்வுக்கும் ஆட்படுத்துவது தான் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் ஒரு நாட்டின் லட்சணமா ?!!

இந் நாட்டின் மன்னர்கள் நாங்கள் ?!! 

இந்தியாவில் இருக்கும் விலையுர்ந்த அத்தனை விதமான மாடல் வாகனங்களையும் சங்கரன்கோவில் தொகுதியில் ஒரே சமயத்தில் பார்க்க முடிகிறது. வீட்டு வாசல்ல நிற்கிற  காரை பார்த்து பெருமிதமா பக்கத்து வீட்டுல சொல்லி பெருமைபட்டுகிற எம் மக்களின் வெகுளித்தனத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றுகொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

நாலாபுறமும் கரைவேட்டி அரசியல்வாதிகளுக்கு நடுவே வெண்ணிற கதராடையில் காந்தியவாதி ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார்...வெகு நிதானமாக அமைதியாக காந்திய கொள்கைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். தனக்கு ஓட்டு போட்டால் பூரண மதுவிலக்கை(?) கொண்டுவருவதாக சொல்கிறார். நாடு தற்போது எதன் பின்னே ஓடிகொண்டிருக்கிறது என்பதை அறிந்து சொல்கிறாரா, அறியாமல் சொல்கிறாரா என தெரியவில்லை...!(ஆனால் அவரோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...!!)

இப்படி மக்களை பாடாய்படுத்தி ஒரு தேர்தலை நடத்தி அதில் வெற்றி(?) பெற்றதாக பெருமை பட்டுக்கொள்ள போகிறார்கள். வழக்கம் போல இந்த நாட்டின் மன்னர்கள் நாங்கள் பட்டாஸ் வெடித்து கொண்டாடபோகிறோம் !!

வாழ்க ஜனநாயகம் ! வாழ்க மக்கள் !!

பின்குறிப்பு

இனி இடைதேர்தலே வரகூடாது என்பது போல் இந்த தேர்தலில் மக்கள் அவதி பட்டுவிட்டார்கள்...ஆனால் வெகு விரைவில் பக்கத்துலையே மற்றொரு இடைதேர்தல் வரபோவதை தவிர்க்க முடியுமா என்ன?! விரைவில் அந்த இடைதேர்தலில் சந்திப்போம்...!

வழக்கம் போல இந்த தேர்தலுக்கும் ஓட்டுரிமையை (மட்டும்) கையில் வைத்துகொண்டு முழித்து கொண்டிருக்கும் வெகு சாதாரணமான ஒரு வாக்காளன்...


* * * * *
எனது இந்த பதிவு கழுகு இணைய தளத்தில் வெளிவந்தது





படங்கள் -  நன்றி கூகுள்


செவ்வாய், மார்ச் 6

என்னவாயிற்று நம் குழந்தைகளுக்கு ?!


இன்றைய மாணவர்களின் உலகம் எங்கே செல்கிறது ? தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன், சென்னையை போல இங்கயும் உங்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய மாணவர்கள், வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவன், பிளேடால் கையை கிழித்த மாணவன், இதெல்லாம் போதாது என்று நெல்லையை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்...!!?

எதனால் இப்படி?!

பொருளாதார வசதி பெருகிவிட்ட இன்றைய காலத்தில் கை விரல் நுனியில் உலகத்தை கொண்டுவந்து விடும் இணையம், கம்ப்யூட்டர், டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்குகள் என சுற்றிலும் குழந்தைகளின் உலகம் வண்ணமயமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் மனது எந்த நிலையில் இருக்கிறது...எதை சிந்திக்கிறது...எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கிறோம் . 

மாணவன் தவறு செய்தால் பெற்றோர்கள் பள்ளியை கை காட்டுகிறார்கள், பள்ளிகள்  ஆசிரியர்களை கைகாட்ட , ஆசிரியர்கள் கல்வி முறையை கைகாட்ட , கல்வி முறைக்கு காரணம் அரசாங்கத்தில் வந்து முடிகிறது...இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்ததின் மேல் பழியை போட்டு தப்பிவிடுகிறார்கள் அல்லது நழுவி விடுகிறார்கள். ஆனால் தொடரும் அவலங்களை தடுத்து நிறுத்த போவது யார் ? கண் முன்னே சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டு போகும் இன்றைய மாணவச் செல்வங்களை காப்பாற்ற வேண்டாமா ? இவர்கள் தானே நாளைய உலகை ஆளப் போகிறவர்கள், ஆனால் எப்படி ஆள முடியும் இவர்களால்...குப்பைகள் சேகரிக்கும் தொட்டியாக மனதை வைத்துள்ளார்களே ?!

ஏதோ ஒரு மாணவன் முதல் மாணவனாக வந்துவிட்டான் என பெருமை பாராட்டி அவன் பின்னால் ஓடும் சமூகம் பிற மாணவர்களின் மனநிலை பற்றி சிறிதாவது யோசிக்கிறதா ?

நெல்லை மாணவனின் தற்கொலை முயற்சி

பாளையங்கோட்டையை சேர்ந்த மார்டின் ஆரோக்கியராஜ் இவருடைய 13 வயது மகன் ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை வைத்து நெற்றிப் பொட்டில் தன்னைத் தானே சுட்டு கொண்டான். அலறி அடித்து மாடிக்கு சென்ற பெற்றோர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.படிப்பு சரியாக வரவில்லை, தேர்வில் நல்ல மார்க் வாங்கவில்லை, அந்த வருத்தத்தில் சாக முடிவு செய்தததாக கூறி இருக்கிறான்.

இதில் எங்கே நடந்தது தவறு ? பள்ளியிலா, கல்வி முறையிலா எதில் தவறு...?! இவை இரண்டையும் விட தவறின் பக்கம் பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.


இன்றைய பெற்றோர்களே ?!!!

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை  என பிள்ளைகள் மனதில் பதிய வைத்த பெற்றோர் தான் முக்கிய காரணம். சரியாக படிக்கவில்லை, மார்க் குறைவாக எடுக்கிறான் என்று பெற்றோரை அழைத்து சுட்டி காட்ட வேண்டியது பள்ளியின் கடமை. ஆனால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்...?!


தங்கள் பிள்ளைக்கு படிப்பில் நாட்டம் இல்லை என்று தெரிந்ததும், " ஏண்டா இப்படி இருக்கிற, அந்த பையனை பாரு, எல்லா சப்ஜெச்டிலும் 90 க்கு மேல, அவனுக்கு மட்டும் எப்படி முடியுது, நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேனே, இருந்தும் ஏண்டா இப்படி இருக்கிற, எனக்குன்னு வந்து பிறந்தியே ,மத்தவங்க முன்னாடி மானத்தை வாங்கிட்டியே...அப்படி இப்படின்னு பையனை படுத்தி எடுக்கிறார்கள் பெற்றோர்கள். தங்களது டென்ஷனை பையனின் மீது திணித்து அவனை மன அழுத்தத்தில் விழ வைத்து விடுகிறார்கள்...

இது போன்ற ஒரு நிலை நமது குழந்தைக்கு ஏற்பட்டால் கலவரமடைந்து விடாமல் நிதானமாக பொறுமையாக அணுகி பாருங்கள்...

* படிப்பது மனதில் பதியவில்லையா

* படிப்பின் மீது விருப்பம் இல்லையா ? அல்லது வேறு எதன் மீதும் விருப்பம் இருக்கிறதா

* பள்ளி/ஆசிரியர்கள் பிடிக்கவில்லையா?

* அவர்கள் நடத்துவது புரியவில்லையா?

* நாங்க சொல்லி கொடுத்தா பிடிக்குமா?

இப்படி எல்லாம் கேட்டு விட்டு எதற்கும் சரியாக பதில் வரவில்லை என்றால்

" கொஞ்சம் விருப்பம் வைத்தால் சுலபமாக படித்து விடலாம்...உன்னை முதல் மாணவனாக வா என சொல்லவில்லை...ஆனால் போதுமான அளவு படிச்சா போதும், குறைவான மார்க் தான் எடுக்கிறான் என்று ஆசிரியர் புகார் பண்ணினால் அவர்களை நான் பேசி சமாளித்து கொள்கிறேன்...இனி அதை பற்றி கவலைபடாத...ஜாலியா படி...நிறைய விளையாடு...எந்த சப்ஜெக்ட் பிடிக்குதுன்னு சொல் அதையே 11 வது வகுப்பிலும் எடுப்போம்...உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் , உன் மார்க் இல்லை...இதை மனசுல வச்சுக்கோ" சரியாக படிக்காத உங்கள் பிள்ளையிடம் இந்த விதத்தில் சொல்லி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தே இராத  ஒரு மேஜிக் விரைவில் நடக்கும்.

பாண்டிச்சேரியில் மனநல ஆலோசகர் ஒருவர் கவுன்செலிங் கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். குழுமி இருந்த மாணவர்களிடம்,

" என்ன தப்பு செய்தாலும் தண்டனை  கிடையாது, அப்படின்னு சொன்னா யார் யார் என்ன என்ன தப்பு பண்ணுவீங்க " என்றார்.

* சாக்லேட் திருடி தின்பேன்

* அப்பா மூக்கு கண்ணாடியை உடைப்பேன்

* சாம்பாரில் உப்பு அள்ளி போடுவேன், போன்ற பதில்களை தொடர்ந்து ஒரு சிறுவன் " என் அம்மா அப்பாவை குத்தி கொள்வேன்" என்றான்...! நம்பித்தான் ஆகணும் நடந்து உண்மை இது.

காரணம் கேட்டதற்கு, " பகல் புல்லா ஸ்கூல்ல படிச்சிட்டு வந்தா வீட்டிலும் படி படினு நச்சரிக்காங்க, அப்புறம் டியூசன் , ஹிந்தி ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் முடிய 9 மணி ஆகிடும்...சனி, ஞாயிறும் புல்லா ஹோம்வொர்க் கொடுப்பாங்க  ...அதை செய்ய லேட் ஆனா வீட்ல ஒரே திட்டு...இந்த அப்பா அம்மா எனக்கு வேண்டாம் "

அங்கிருந்த ஒருத்தர் முகத்திலும் சிறிதும் சலனமில்லை, வெறித்தபடி இருந்தனர், அவனது பெற்றோர் உட்பட...!! அப்புறம் அந்த பையனுக்கு மட்டும் தனியா கவுன்செலிங் கொடுத்திருக்காங்க...!

ஆகையால்,

" உங்கள் குழந்தை எதுவாக ஆகவேண்டும் என நீங்க எண்ணுகிறீர்களோ அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்...தாங்கள் என்னவாக வேண்டும் என குழந்தைகள் எண்ணுகிறார்களோ அதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள், அது போதும் "

தற்கொலைகள் ?!!

கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளியின் விடுதியில் ஆசிரியர் தன்னை துன்புறுத்துகிறார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டான் பிளஸ் 1 மாணவன். இது ஒரு வகையான பழிவாங்கும் மனோநிலை. ஆசிரியரை பலி வாங்குவதாக எண்ணி தன்னை மாய்த்து கொள்ளும் இத்தகைய செயல் மிகவும் ஆபத்தான ஒன்று. வெளியே பார்க்கும் போது சாதாரணமாக காணப்படும் குழந்தைகளின் மனதில் இதை போன்ற எத்தனை ஆபத்துகள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை.

பெற்றோரின் அதீத கண்டிப்பால் வீட்டைவிட்டு வெளியேறும் மாணவர்களும் இருக்கிறார்கள். பெற்றோரின் கவனிப்பு சரி இன்மையால் வன்முறைக்கு மாறுபவர்களும் உண்டு.

அதிக அழுத்தத்தை மாணவர்களால் சமாளிப்பது இயலாது...பெற்றோரின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு தன் பிள்ளை மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிடவேண்டும் அது கல்வியால் மட்டும் தான் முடியும் என்பது என்னை பொறுத்தவரை ஒரு தவறான கண்ணோட்டம்.

ஒரு பக்கம் பெற்றோர்களின் படி படி என்ற வற்புறுத்தல் மற்ற்றொரு பக்கம் தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற வேண்டும் என்று நெருக்கும் பள்ளி இவற்றுக்கிடையே தத்தளிக்கிறார்கள். அவர்களின் மெல்லிய இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. ஒரு சில பிள்ளைகள் நன்றாக படித்து நெருக்கடியை சுலபமாக சமாளித்துவிடுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சுமாராக படிக்ககூடியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.


அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டும் அறிவாளிகள் அல்ல. யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை, முயற்சி,உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும். பள்ளிப்படிப்பை கூட தாண்டாத பலர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து புரியவைக்க வேண்டும். அது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.


பக்குவபடுத்துங்கள் !! 


தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று உணராத நாம் தான் பிள்ளைகளை குறை சொல்கிறோம். "ஆமாம், அந்த டீச்சருக்கு வேற வேலை இல்லை, எதையாவது சொல்லி கொண்டே இருக்குங்க, நீ கண்டுக்காத விடு " என்று சொல்லும் பெற்றோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். "நானே என் பிள்ளையை அடித்ததில்லை, ஆசிரியர் எப்படி உன்னை அடிக்கலாம்" என்று கூறினால் அந்த பிள்ளைக்கு எப்படி தன் ஆசிரியர் மேல் மரியாதை வரும், ஆசிரியர் தனது நன்மைக்கு தான் கண்டிக்கிறார் என்பது எப்படி புரியும்?!! அறிவுறுத்தும் தனது ஆசிரியரை ஒரு எதிரி போல் தான் எதிர்கொள்வார்கள். 

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் பெற்றோர் பாலமாக இருக்கவேண்டும்.ஆசிரியரை மதிக்க வேண்டும், யாராக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஒருவேளை ஆசிரியரிடமே தவறு இருந்தாலும், கண்டிப்பில் குறை இருந்தாலும் அதை நம் குழந்தைகள் சுலபமாக சமாளித்துவிடுவார்கள், பெரிது படுத்த மாட்டார்கள்.  அவர்களின் மனம் பக்குவபட்டுவிடும். இந்த பக்குவ பட்ட மனநிலைக்கு நம் பிள்ளைகளை தயார் படுத்தி வைத்துவிட்டால் போதும், அதிக பாட சுமையோ, ஆசிரியரின் அதீத கண்டிப்பா எதுவுமே அவர்களை அசைக்காது, தெளிவாக இருப்பார்கள்.

 "ஐயோ உலகம் இப்போ மோசமா இருக்கே என் பிள்ளை இதன் நடுவில் எப்படி, என்ன பாடுபட போறானோ " என்று கவலைபடாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் மெனகிடத்தான் வேண்டும்.


எந்த சூழ்நிலையையும், எத்தகைய மனிதர்களையும் சமாளிக்க கூடிய விதத்தை குழந்தைகள் மனதில் அவர்கள் வயதின் ஒவ்வொரு கட்டத்திலும் பதிய வைக்க வேண்டும்...சிறிய வயதில் பதிந்தவை நாம் உடன் இல்லாத போதிலும் அவர்களுக்கு கைகொடுக்கும்.

பின்குறிப்பு :

அதிக வேலை பளுவின் காரணமாக முந்தைய பதிவில் சொன்னது போல உடனே அடுத்த பதிவை வெளியிட இயலவில்லை. குழந்தைகள் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் , அந்த அளவிற்கு இன்று இப்பிரச்சனை மிக முக்கியமானதாக இருக்கிறது. முடிந்த வரை தொடர்ந்து எழுதுகிறேன். மெயில்/பின்னூட்டம் மூலம் கருத்துக்கள் கூறிய உள்ளங்களுக்கும் தோழி ஏஞ்சலின்க்கும் என் நன்றிகள். 


படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், பிப்ரவரி 27

நடந்த கொலையில் மாணவன் மட்டுமா குற்றவாளி !?


பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என அனைவரையும் மனம் பதற செய்த ஒரு சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிரியை கொலை ! 15 வயது மாணவன் கத்தியை தூக்கினான், கொலை செய்தான் என்பதை ஒரு செய்தி என்றமட்டில் கடந்து செல்ல இயலவில்லை. இதுகுறித்த பலரின் கருத்துக்கள்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...அதில் சில

* சினிமா , டிவி தான் காரணம்

*கல்வி நிலையங்கள் பணம் பறிப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றன...ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில்லை...?!

* ஆசிரியர்களின் அதிக கண்டிப்பு, பொறுப்பற்றத்தன்மை.

நடக்கும் எந்த ஒரு தவறுக்கும் மனிதன் தன்னை விடுத்து பிற மனிதர்கள் மீது பிற சூழல்களின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து விடுகிறான்.

இந்த சிறுவனின் இத்தகைய கொலை பாதக செயலுக்கு இங்கே குறிப்பிட பட்ட மூன்று காரணங்களும் சரிதானா?!!


மாணவனை குறித்த ஒரு பார்வை 


ஆசிரியையை கிட்டத்தட்ட 14 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறான் ! எத்தகைய வன்மம் மனதை ஆக்கிரமித்து இருந்தால் இவ்வாறு மாறி மாறி தனது ஆத்திரம் தீரும் வரை குத்தியிருப்பான். சிறு அடியோ ரத்தமோ பார்த்தால் மனம் பதறகூடிய வயதில் ஆசிரியையின் உடலில் இருந்து ரத்தம் கொப்பளித்து வந்ததை பார்த்தும், அவர்கள் அலறி துடித்ததை கண்டும் சிறிதும் தயக்கமோ பயமோ இன்றி தொடர்ந்து குத்திக்கொண்டு இருந்திருக்கிறான். நிச்சயமாக ஒரு நாளில் ஏற்பட்டதாக இருந்திருக்க முடியாது. பல நாட்களாக மனதிற்குள் சிந்தித்து இருக்கிறான், இரண்டு நாட்களாக கத்தியுடன் வகுப்பிற்கு வந்திருக்கிறான். சந்தர்ப்பம் கிடைத்ததும் முடித்துவிட்டான்.ஒருவகையில்  திட்டமிட்ட கொலை !!


சினிமாவே காரணம் 

கொலை செய்ய காரணம் தான் அடிக்கடிப் பார்க்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த தமிழ், ஆங்கிலப் படங்கள் காரணம் அதிலும் 'அக்கினிபத்' படத்தில் ஹீரோ வில்லனை கத்தியால் நெற்றியில் குத்தும் காட்சி தனது நெஞ்சில் ஆழமாக பதிவானது எனவும் கூறியிருக்கிறான்.

இவன் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தனது ஆத்திரத்தை கோபத்தை எவ்வாறு தீர்த்து கொள்ளலாம் என சினிமா வழி காட்டி இருக்கிறது அவ்வளவு தான். ஆனால் இதை வைத்தே சினிமாதான் கொலைக்கே காரணம் என்பது சரியா ?! சினிமா காரணம் என்பதும் அந்த கத்தியை தயாரித்தவன் தான் கொலைக்கு காரணம் என்பதும் ஒன்றுதான். அந்த சினிமாவால் பாதிப்பு என்றால் படம்  பார்த்த அனைவருமே கொலையாளிகளாக மாறியிருப்பார்களே ?! காந்தி படம் பார்த்த அனைவரும் மகாத்மாவாக மாறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?!

கத்தியின் மூலம் தனது ஆத்திரத்தை தீர்த்துக்க முடியும்னு ஐடியா கொடுத்த சினிமாவை விட அந்த ஆத்திரம் ஏற்பட அடிப்படை காரணம் என்ன என்பதுதான் இங்கே மிக முக்கியம்

இந்த ஆசிரியை என்றில்லை இவனது கோபத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுதான் எடுப்பான். இன்னும் வேறு யார் மீதெல்லாம் வெறுப்பு கொண்டுள்ளான் என தெரியவில்லை.சொல்லபோனால் இவனை கிண்டல் செய்த சக மாணவர்களும் இதற்கு இலக்காயிருக்கலாம். நல்லவேளை இவனிடம் கத்திக்கு பதில் துப்பாக்கி இல்லை


ஆசிரியை கண்டிப்பது தவறு

ஒரு சாராரின் கருத்து என்னவென்றால் இறந்த ஆசிரியையின் அதீத கண்டிப்பு ! தன் மாணவர்களின் படிப்பின் மீது எவ்வளவு அக்கறை இருந்தால் பாடத்தில் வீக்காக இருக்கும் ஏழு பேரை தனியாக வரச்சொல்லி வகுப்பு எடுத்திருப்பார். சரியாக படிக்கவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்று ஆசிரியர்கள் சொல்வது சகஜம். அப்படி சொன்னாலாவது அக்கறைகொண்டு படிப்பான் என்ற விதத்தில் தான்.

ஒருமாணவன் படித்து தேர்ச்சி பெறவேண்டும் என்ற இயல்பான அக்கறையில் கொடுக்கப்படும் கண்டிப்பை குற்றம் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ?

இந்த சம்பவத்தால் நம் ஆசிரியர்களின் மனம் பாதிக்கபடகூடும்.  யார் படிச்சா என்ன படிக்காவிட்டால் என்ன பாடத்தை நடத்துவதுடன் எங்கள் வேலை முடிந்தது என நம் ஆசிரியர்கள் யோசிக்க தொடங்கிவிடுவார்களோ என அஞ்சுகிறேன். அப்படி யோசிக்க மாட்டார்கள் என நம்புவோம்.

பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகள் கூட அவர்களின் ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டுதலால் நன்கு படிக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அப்படி இருக்கும் போது மாணவன் செய்யும் தவறுக்கு /குற்றங்களுக்கு ஆசிரியர்களையும், பள்ளிகளையும் குறை சொல்லி கொண்டிருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களை பற்றியும் மக்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. இது நல்லதுக்கு இல்லை.


பள்ளிகள் என்னதான் செய்யும் ?

இரண்டு நாட்களாக கத்தியை தனது பையில் வைத்து கொண்டே வகுப்பில் இருந்திருக்கிறான். இதை ஏன் ஆசிரியர்கள் செக் பண்ணவில்லை என்று கேள்வி கேட்பது எல்லாம் ஏற்புடையதா?  வகுப்பில் ஒரு பீரியட் நேரத்தில் பாடத்தை நடத்தவும், கேள்விகள் கேட்டு சந்தேகங்கள் தெளிவு படுத்தவும் நேரம் சரியாக இருக்கும். இதில் வகுப்பில் இருக்கும் 40,50 மாணவர்களை ஒவ்வொருவராக உற்று கவனிப்பது முடிகிற காரியமா?

குடும்பத்தில் இருக்கும் ஒரு பிள்ளையின் நடவடிக்கையை கவனிக்க முடியாத பெற்றோர்கள் தான் இத்தகைய வினாவை எழுப்புகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் ஆச்சர்யம் !?

தனது ஒரு மகன்/மகள் என்ன செய்கிறார்கள் , எங்கே போகிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க இயலாத பெற்றோர்கள் தான் 40, 50 பேரை கட்டிகாக்கும் ஆசிரியர்களை கேள்வி கேட்கிறார்கள்...!

மாணவனின் பெற்றோரின் குணாதிசியங்கள், வளரும் விதம், சுற்றுப் புறச்சூழல்கள், மரபு, புறவிசை தாக்கம் இன்னும் பிற. இவ்வளவும் சரியாக இருந்தால்தான் பள்ளிகள் விதைப்பவை பலமுள்ளதாக மாறும். இவைகளில் ஏதாவது முரண்பாடுகள், கோளாறுகள் இருப்பின் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் நல்லதை போதித்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான். பள்ளிகளை குறை கூறுபவர்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.


இன்றைய கல்வி 

கல்வி முறையில் இருக்கும் பல குளறுபாடுகள் நம் மாணவர்களை மிகுந்த சோர்வடைய செய்கிறது...10 , 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படும் பாடுகள் சொல்லி முடியாது...அதுவும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை பிப்ரவரிக்கு முன்பே முடித்து தேர்வு வைத்து விட்டு பத்தாம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...கோடைவிடுமுறை கிடையாது. எதற்கு இத்தகைய போராட்டம்...?! புத்தகத்தை மட்டும் மனபாடம் செய்து அப்படியே வெளிக்கொணரும் கல்வி முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். ஒரு இறுக்கமான சூழல் மாணவர்களிடையே நிலவுகிறது, சுதந்திரமாக படிக்கும் வாய்ப்பு கொடுக்க படவேண்டும்...அதிகரிக்கும் மாணவர்களின் மனஉளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை பற்றி அரசு கல்வித்துறை அக்கறை கொள்ளவேண்டும்.


இன்றைய பள்ளிகள்

அதிக மதிப்பெண்கள் எடுக்க நிர்பந்திக்கபடுகிறார்கள்...படிப்பில் போட்டி மனப்பான்மையை, ஏற்ற தாழ்வுகளை  அதிகம் வளர்க்கின்றன. தனது பள்ளி பெயர் எடுக்க வேண்டும் என்பது இதில் ஒன்று. முன்பு கல்வி கற்றுகொடுக்கும் முழு பொறுப்பும் அவர்களுடையதாக இருந்தது. இன்று பெற்றோர்களையும் இதில் பங்குகொள்ள வைக்கிறார்கள், வீட்டிலும் சொல்லி கொடுக்க சொல்லி வற்புறுத்துவது அதிகம். பள்ளியில் இருந்து சோர்ந்து போய் வருபவர்கள் வீட்டிலும் அதே முறையிலான மற்றொரு வகுப்பு சூழ்நிலை வெறுக்க வைக்கிறது. வீடு அல்லது டியூசன் ! விளையாட்டையும் குறிப்பிட்ட நேரம் கொடுத்து முடிக்க சொல்லும் போது வெறுப்பின் உச்சத்துக்கே போய் விடுகிறார்கள்.


இன்றைய பெற்றோர்கள் 

நேற்றைய குழந்தைகள் நாம் என்பதை மறந்து விடுகிறோம்...தான் கற்காத கல்வியை தனது பிள்ளை கற்க வேண்டும் என்பதில் முடிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் எதிர்காலம்.

எதிலும் தனது குழந்தை முதன்மையாக வர வேண்டும் என ஆசை படுவதில்  தவறில்லை, அதற்காக பெரும் சுமையை வைப்பதுபோல் எப்போது படி படி என வற்புறுத்தி கொண்டே இருப்பது மன அழுத்தத்தை கொடுத்து விடும். ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்து விட்டாலும், வாழ்க்கையே தொலைந்து விட்டது என்று பெற்றோர் கொள்ளும் பதற்றம் அப்படியே அவர்களது பிள்ளைகளையும் தொற்றிக்கொள்கிறது.

இன்றைக்கு பெரும்பாலான வீட்டில் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை ஆடவும் செய்யணும், பாடவும் செய்யணும், படிக்கவும் செய்யணும், விளையாட்டிலும்,இசையிலும் தேர்ச்சி பெறணும் என்பதெல்லாம் மிக அதிகபடியான எதிர்பார்ப்புகள்.

இங்கே சம்பந்தப்பட்ட மாணவன், மூன்று பெண்பிள்ளைகளுக்கு நடுவில் ஒரே ஆண் , நம் சமூகத்து வழக்கப்படி(?) ஒட்டு மொத்த குடும்பமே போட்டி போட்டு செல்லம் கொடுத்திருக்கிறது...தனி அறை, டிவி, கம்பியூட்டர், செலவுக்கு பணம் இப்படி வளர்க்கப்பட்டவனுக்கு , பள்ளியில் ஆசிரியையின் கண்டிப்பு வெறுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லையே ?!!

குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய முடியாத பெற்றோர்கள் தங்களது குற்றத்தை மறைக்க குழந்தைகள் கேட்டதை உடனே  வாங்கிகொடுத்து பழக்கி  விடுகிறார்கள்...வெளி உலகத்தில் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றபோது எதிர்க்க தொடங்குகிறார்கள்...!

இன்றைய குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்கள் உடனே சுட்டி காட்டபடுவது சினிமா டிவியை தான்...! இந்த சினிமா, டிவியை குழந்தைகளிடம் முதலில் அறிமுகம் செய்வது யார் ? இவை இரண்டும் சரியான வழியை காட்டவில்லை என்றால் அவற்றை ஏன் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்கிறீர்கள்...?! வீட்டில் இருக்கும் டிவியை எடுத்துவிடுங்கள்...சினிமாவிற்கு போவதற்கு எவ்வாறு முடியும், நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால்...ஒரு பதினைந்து வயது பிள்ளையிடம் பணம் எப்படி வருகிறது பெற்றோர்கள் கொடுக்காமல்...


குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. பெற்றோர் இடையே நடக்கும் கருத்துவேறுபாடு சண்டைகள் ! அவர்கள் இடையே நடக்கும் அடி உதையும் வன்முறைதான். அப்போது பேசப்படும் அவதூறான பேச்சுக்கள் கூட குழந்தைகள் வயதிற்கு ஆபாசம் தான்...!


என்னதான் தீர்வு?!

குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை இன்றைய பள்ளிகளும் பெற்றோர்களும் !!?

சுற்றிலும் எங்கும் வன்முறைகள் காட்சிகள் சகஜமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அதில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியம்..  பெரிய மனிதர்கள் பலரின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்...! விருப்பம் போல் விளையாட அனுமதியுங்கள்...படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை முதலில் உணரவேண்டும், அது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே.  ஒழுக்கம், பண்பாடு,விருந்தோம்பல், நன்னடத்தை, பெரியோரை மதித்தல், இப்படி நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டிய முக்கிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது...குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்...!

அவர்களுக்காகவே வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது முக்கியம் அல்ல 'அருகில் உடலாலும், தூரத்தில் உணர்வுகளாலும்' உங்கள் குழந்தையை  தொட்டு கொண்டே  வாழுங்கள்...!!

பள்ளிகள், அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் குறைகள் சீர் செய்யப்படவேண்டும்...இன்றைய மாணவர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் அவர்கள் மட்டும் அல்ல என்பதை அழுத்தமாக சொல்லி கட்டுரையை முடிக்கிறேன்.

எனது இப்பதிவு கழுகில் வெளிவந்தது

பின்குறிப்பு 

இன்றைய மாணவர்களின் ஆபத்தான மனநிலை குறித்த ஒரு பார்வை இப்பதிவின் தொடர்ச்சியாக நாளை வெளிவரும்...

* * *


படங்கள் - நன்றி கூகுள் 

புதன், பிப்ரவரி 22

அதீதத்தில் பசுமைவிடியல் - நண்பருக்கு நன்றி !!



பதிவுலகம் வந்த புதிதில் எனக்கு அறிமுகமான கார்த்திக்(எல்.கே) அதற்கு பிறகு இப்போது என் கணவருக்கும் நெருங்கிய நண்பராகி விட்டார் ...! தற்போது பிளாக்கில் பதிவுகள் எழுதுவதை குறைத்துவிட்டார். முன்பு பிறரது தளங்களை தனது பாகீரதி தளத்தில் அறிமுகம் செய்து பலரை, பலருக்கும் தெரிய வைத்தவர் எல்.கே. (மீண்டும் பாகீரதியில் 'இவர்களும் பிரபலமானவர்களே' பகுதியை எழுதலாமே !)

நாங்கள் பசுமை விடியல் இயக்கத்தின் இணையதளம் தொடங்கியதை அறிந்து மிக பாராட்டி வாழ்த்தினார். 'அதீதத்தில் பசுமைவிடியல் தளத்தை அறிமுகம் செய்து எழுதட்டுமா?' என ஒரு மாதமாக கேட்டு கொண்டே இருந்தார். தற்போது தான் இருவருக்கும் நேரம் வாய்த்தது...சில கேள்விகளை என்னிடம் கேட்டு பதிலை பெற்றுக்கொண்டு உடனே பதிவை எழுதி வெளியிட்டும் விட்டார். நடந்தது இதுதான் என்றாலும் அதன் பின் நடந்தது தான் நான் சிறிதும் எதிர்பாராத ஒன்று, வெளிவந்த அன்று மாலையே முகநூலில் 'மரத்தை வெட்டுங்கள்' பதிவு சசிதரன் என்பவரால் பகிரப்பட்டு இந்த நிமிடம் வரை 2,083 பகிர்வுகள் வரை பலராலும் கவனிக்கபட்டு கொண்டிருக்கிறது...!!! இரண்டு வருடங்களாக நான் எதிர்பார்த்து கொண்டிருந்த இது போன்ற ஒரு தருணத்திற்கு ஒரு மறைமுக காரணமாக அதீதத்தை நினைக்கிறேன்...! பெருமிதம் கொள்கிறேன் !

பசுமைவிடியல் இயக்கத்தின் சார்பாக நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதீதத்தில் வந்த பதிவு இப்போது உங்கள் பார்வைக்காக...

                                                       * * * * * * * * * * * * * * * * * 


இதுவரை பிற தளங்களை பற்றி வலையோசையில் மட்டுமே பகிர்ந்துள்ளோம்.. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தளத்தை பற்றியக் கட்டுரை இது.. இன்றைக்கு நமது சுற்றுப்புறச் சூழல் பல விதத்திலும் பாதிப்படைந்துள்ளது. பலரும் பலவகையிலும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். இங்கே நமது இணையத்திலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதி வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.அதே நேரம் விழிப்புணர்வை எழுத்தில் வெளிபடுத்துவதுடன் நின்றுவிடாமல் களத்தில் இறங்கி இருக்கும் 'மனதோடுமட்டும்' கௌசல்யாவையும் அவருக்கு உற்றத் துணையாக கை கோர்த்திருக்கும் ISR. செல்வகுமார், பிரபு கிருஷ்ணா , சூர்யபிரகாஷ் போன்றோரையும் பாராட்டுகிறேன்.

இணையத்தின் மூலமாக இணைந்த இவர்கள் 'பசுமைவிடியல்' என்ற இயக்கத்தை தொடங்கி, முறையாக திட்டங்கள் தீட்டி ஒவ்வொரு படியாக நிதானமாக எடுத்து வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்... இதற்கான ஒரு இணையதளம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து பதிவர்களின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் திரு இசக்கி சுப்பையா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

*அன்றே இயக்கத்தின் முதல் மரமாக செண்பக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது...

*மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் சங்கரன்கோவில் ஊரில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

* ISR. Ventures நிறுவனமும் பசுமைவிடியலும் இணைந்து மாங்குரோவ் காடுகளை பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறது...

சீமை கருவேலமரம்


இவ்வியக்கம் மிக முக்கிய பணியாக கையில் எடுத்திருப்பது சீமை கருவேலமரங்களை வேருடன் அழித்தொழிப்பது. சுற்றுச்சூழலையும் , நிலத்தடி நீரையும் பெருமளவில் பாதித்துகொண்டிருக்கும் நச்சு மரமான இதனை வேரறுக்க சீரிய முறையில் பல திட்டங்களை வடிவமைத்து இருக்கிறார்கள். முதல் படியாக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறார்கள். மேலும் விவரம் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

இம்மரத்தை குறித்த விவரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல  வேண்டிய ஏற்பாடுகள் ஒரு புறமும், மக்களிடம் நேரில் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றொரு புறத்திலுமாக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள்.    
இவர்களை நாம் வாழ்த்துவோம்...நமது வாழ்த்துக்கள் அவர்களை அதிக உற்சாகமாக உழைக்க வைக்கும்.

பசுமைவிடியல் தளம் - www.pasumaividiyal.org

அதீதம் சார்பில் இயக்கத்தை குறித்து நான்கு கேள்விகள் கேட்கப்பட்டது...கேள்விகளுக்கான பதிலை பசுமைவிடியலின் சார்பில்  கௌசல்யா தெரிவித்தார்கள்...

1. எல்லோரும் மரம் நடவேண்டும் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்று ஆரம்பித்து உள்ளீர்கள்? 

உலக வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் சொல்வதும், செய்வதும் மரம் நடுவதுதான். ஆனால் நாங்கள் சொல்வோம் நடுவது முக்கியமில்லை, இந்த சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதுதான் முக்கியம் என்று...! ஏன் என்றால் வயலில்  களைகளை அகற்றினால் தான் பயிர் நன்கு வளரும், களைகள் இருப்பின் பயிரை வளரவிடாது என்பது விவசாயம் ! களை இருக்கும் போது பயிருக்கு தண்ணீர்,உரம் போட்டு பயனேதுமில்லை. அதையே தான் இங்கே நாங்களும் சொல்கிறோம், இந்த நச்சு மரங்களை அழித்தால் தான் நல்ல மரங்கள் வளரமுடியும், நல்ல மரங்களின் பயன் முழுதாக பூமிக்கு கிடைக்கும்.

2. சீமை கருவேலமரத்தின் தீமையை சுருக்கமாக கொஞ்சம் சொல்ல முடியுமா ?

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் சீமைக் கருவேல மரம்(வேலிகாத்தான், சீத்த மரம்,டெல்லி முள் என்று பல வட்டார பெயர் உண்டு அறிவியல் பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora))

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டுவாக்கில் விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறோம். மேலே சொன்னபடி களை எடுக்காமல் பயிர் நடுவதும், உரமிடுவதும் வீண் என்ற எண்ணம் தான் இது பற்றிய ஆழமான ஆராய்ச்சியை எங்களுக்குள் உருவாக்கியது மேலும் இதன் தீங்குகள் பற்றி அறிய இங்கே படிக்கவும்
பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

3. களப்பணி தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.  பசுமை விடியல் நிர்வாகிகள் நால்வரும் நான்கு திசையில் இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியம்?
இதில் இப்படி ஒன்று இருக்கிறதா ?? உண்மையில் இந்த கேள்வி எங்களுக்குள் ஏன் இதுவரை எழவில்லை என ஆச்சர்யபடுகிறேன்.  இணைந்து செயல்படவேண்டும் என முடிவு செய்தோமே தவிர 'முடியுமா' என்ற வினா யாருக்கும் எழாததே 'சாத்தியம்' என்பதால் இருக்கலாம் அல்லவா...?! நால்வரின் எண்ணங்கள் ஒத்த அலைவரிசை என்ற போது நிச்சயம் எதுவும் சாத்தியமே !

4. சாத்தியம் என்றால் எவ்வாறு ? கொஞ்சம் சொல்லவும்...
நாங்கள் ஒன்றிணைய இணையம் தான் காரணம் என்பதை மறுக்கயியலாது. அதே நேரம் களத்தில் இறங்கி பணியாற்ற நல்ல மனிதர்களின் உதவிதான் வேண்டும். தகவல்களை பரிமாற்ற, சமூக நோக்கு கொண்டவர்களை ஒன்றிணைக்க, செய்திகளை அறிவிக்க, பலரிடம் இயக்கம் பற்றிய செயல்களை கொண்டு சேர்க்க இணையத்தை பயன்படுத்தி கொள்கிறோம். அவ்வளவே.

தற்போது எங்களுடன் இணைந்திருக்கும் தன்னார்வலர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்...அவர்களுடன் நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்...அந்தந்த இடத்தில் நடக்க வேண்டிய களப்பணிகளை பற்றிய ஆலோசனைகள், முன்னெடுப்புகள் , கருத்துகள் பற்றி எல்லாம் விவாதித்த பின்னே செயலில் இறங்க இருக்கிறோம். களப்பணிகளின் போது கூடுமானவரை எங்களில் ஒருவர் களத்தில் இருப்பார்.  நாங்கள், தன்னார்வலர்கள் இணையும் போது அனைத்தும் சாத்தியமாகும்.

அதீததிற்கு மனமார்ந்த நன்றிகளை எங்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற நல்ல உள்ளங்கள்  எங்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்கு இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது...நாம் வாழும் இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்றவரை சிறு துரும்பையாவது கிள்ளி போடுவோம் என்று சொல்வார்கள் நாங்கள் துரும்பை கிள்ள அல்ல மரத்தையே வெட்டி சாய்க்க போகிறோம்...!!

நன்றி - அதீதம்   
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மீண்டும் ஒரு முறை அதீததிற்கு நன்றியையும் , 'மரங்களை வெட்டுங்கள்' பதிவை பலருக்கும் கொண்டு சேர்க்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 

வியாழன், பிப்ரவரி 9

திருநெல்வேலியில் நடைபெற்ற 'நூல் வெளியீடு விழா'

திருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு அழைப்பிதழ் கொடுத்தாங்க என்பது எனக்கு உண்மையில் பெரிய விஷயம் தான்.  வேறு ஒரு மீட்டிங் முடிச்சிட்டு நான், என் கணவர், உணவுஉலகம்  சங்கரலிங்கம் அவர்களும் ஜானகிராம் ஹோட்டலை விட்டு வெளில வந்தபோது திரு.கிருஷி எங்களை எதிர்கொண்டார்...சரி அவருக்கு  தெரிஞ்சவர் போல என்று இருந்தேன்...இரண்டு பேரும் தனியா என்ன பேசினாங்கன்னு தெரியல...திரு .கிருஷி அவர்கள் வேகவேகமா ஒரு அழைப்பிதழ் எடுத்து என் பெயரை எழுதி என்கிட்டே கொடுத்து 'அவசியம் வாங்க' என்றார். அப்போது அருகில் மிகவும் அமைதியாக ஒருத்தர் நின்று கொண்டிருந்தார், கிருஷி 'இவர் பேர் திரு .நாறும்பூ நாதன், இவர் எழுதிய புத்தகத்தை தான் வெளியிட போறோம்' என்றார்.


தன்னை அறிமுகபடுத்திக்கொண்ட அவர் 'நானும் பிளாக் வச்சிருக்கிறேன், ஆனா அவ்வளவா எழுதுவதில்லை, யாருக்கும் தெரியாது' என்றார் அமைதியாக...!!(பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படிதான் அடக்கமா இருக்கிறாங்க, ஏதோ கொஞ்சம் அப்படி இப்படி எழுதுற நாம என்னனா' ஆஹா ஓஹோ னு கொடுக்குறது எல்லாம் ஓவர் சவுண்ட் !!? )

ஆக இப்படியாக எனக்கு கிடைக்க பெற்றது அழைப்பிதழ்...! இது போதாதுன்னு சென்னையில் இருந்து எறும்பு ராஜகோபால் போன் பண்ணி 'விழா நாள் நினைவு இருக்கா, வண்ணதாசன் சார்,சுகா சார் எல்லாம் வராங்க, சனிக்கிழமைதான் மறந்துடாதிங்க, வேணும்னா அழைப்பிதழை  கழுத்தில மாட்டிகோங்க'னு அடாவடி அட்வைஸ் வேற !!(என்னோட ஞாபக மறதி உலக பிரசித்தம் போல !) உண்மையில் அவர் சொன்னதும் தான் நினைவே வந்தது :))

பெரிய பெரிய எழுத்தாளர்களை பார்க்க போறோம்னு ஊருக்கு முன்னாடி கிளம்பி போயிட்டேன் போல , அப்பத்தான் ஸ்டேஜ் அரேன்ஜ் பண்றாங்க !! கொஞ்ச நேரத்தில எல்லோரும் வந்து சேர விழா தொடங்கியது...முதலில் கரிசல் குயில் கிருஷ்ண சாமி, திருவுடையான் இசை...பாரதியார் பாடல் அரங்கம் நிறைத்தது.

பின்னர் ஒவ்வொரு நிகழ்ச்சியாக தொடர்ந்தது...சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு தி.க.சி அவர்கள் திரு.நாறும்பூ நாதனின் 'ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன்' நூலை வெளியிட, இயக்குனர், எழுத்தாளர் திரு சுகா அவர்கள் பெற்று கொண்டார். வாழ்த்தி பேச வந்த திரு.தி.க.சி அவர்கள் எழுத்தாளர்களின் இன்றைய பங்களிப்பை பற்றி சில வார்த்தைகளும், அதிலும் முக்கியமாக இன்றைய எழுத்தாளர்கள் அரசியல் நையாண்டி போன்றவற்றை கொஞ்சம் எழுதினா நல்லா இருக்கும் என்றும், விழா நாயகனை பற்றி சில வார்த்தைகளும் சொல்லி அமர்ந்தார்...

வண்ணதாசன், செல்வராஜ், தோப்பில் முகமது மீரான், நாறும்பூநாதன், தி க சி, சுகா, கீரனூர் ஜாகிர் ராஜா, உதயகுமார் 

திரு.சுகா 

இவரது எழுத்துகளின் ரசிகை நான்...விகடனில் நெல்லை மணம் கமிழும் 'மூங்கில் மூச்சு' தொடர்ந்து படித்து விடுவேன்...அவரது பிளாக்கில் போட்ட பின்னூட்டத்தில் 'நேரில் சந்தித்தால் எப்படியும் உங்களிடம் இருந்து ஒரு கையெழுத்தை பெற்றுவிடணும்' என்று சொன்னேன், ஆனா நேரில் சந்திச்ச போது என்ன பேசனு தெரியாம பதட்டத்தில எதையோ பேசி கையெழுத்து வாங்க தோணல, இப்ப உட்கார்ந்து 'அடடா போச்சே'ன்னு முழிச்சிட்டு இருக்கிறேன் (ம்...அடுத்து ஒரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போய்டும்)

இவர் பேசியதில் இருந்து சில,

                                                  எழுத்தாளர் திரு சுகா அவர்கள் 

" நான் திரு.வண்ணதாசன் அவர்களின் வெறி பிடித்த தீவிர வாசகன்...அவர் கதையில் அவருக்கே ஏதாவது மறந்து போய் இருந்தாலும் அதை நான் சரியா சொல்லி விடுவேன்...அந்த அளவிற்கு அவர் எழுத்துக்களை நான் வாசிச்சிருக்கிறேன்...என்னோட இரண்டு தொடரில் எதிலாவது இவரது இரண்டு வரியை சேர்த்திருப்பேன், அது இயல்பா நடக்கிற ஒன்று. தோப்பில் முஹம்மது மீரான்,கீரனூர் ஜாகிர்ராஜா எழுத்துக்களை படிச்சிருக்கிறேன்...இப்பதான் நேர்ல பார்கிறேன்...உதயகுமார் எழுத்தை இரு நாள் முன் படித்தேன்...மூத்த எழுத்தாளர்  தி.க.சி இவர் மட்டும் இல்லைனா திருநெல்வேலியில் பல படைப்பாளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போய் இருப்பார்கள், பலரை உருவாக்கி இருக்கிறார், இவரால் பல எழுத்தாளர்கள் உருவாகியும் இருக்கிறார்கள்...! இவரோட நானும் மேடையில் இருக்கிறேன் என்பதை பெருமையாக நினைக்கிறேன் "


" நாறும்பூ நாதன் அவர்கள் தனது ஒரு கதையில் 'ஒரு கணவனும் மனைவியும் வீட்ல இருக்கிறாங்க, அவங்களுக்கு தெரியாம திருட்டு போயிடுது...' அந்த கதையை படிச்சிட்டு 'இதையெல்லாமா கதையா எழுதுவாங்க' ஆச்சர்யப்பட்டேன். அதிலையும் கதை முடிகிற இடத்தை படிச்சு ரொம்ப சிலாகிச்சேன். என்னுடைய கதையின் இறுதியை வண்ணதாசன் ரொம்ப சிலாகிப்பாங்க, அதுமாதிரி நான் நாறும் பூ அவர்களின் கதையின் இறுதி பகுதியை மிக ரசித்தேன் "


திரு.தோப்பில் முஹம்மது மீரான் 

1997 இல் 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். இவரது எழுத்துக்கள் ஏற்கனவே கொஞ்சம் படித்து இருக்கிறேன்...எல்லா சமூதாயதினரோடும் தொடர்பு உடையது இவரது எழுத்துக்கள்...இவரது 'மரணத்துக்கு பின்' கொஞ்சம் படித்து பாருங்கள்...

வாசகர்களை வாசகன், ரசிகன், சக்ருதையன் என மூணாக பிரித்து சொல்வார். படைப்பாளிக்கு ஒத்த மனதை உடைய சக்ருதையன், படைப்பில் இருக்கும் மௌனத்தை சப்தமாக்கி, இடைவெளியை நிரப்பி, தேடலை உருவாகுபவன், எங்கே இவர்கள் இருவரும் சங்கமிக்கிரார்களோ அங்கே நிறைவு பெறுகிறது ஒரு படைப்பு,அது வரை அப்படைப்பு நிறைவு பெறாது என்பார் இவர். மேலும் ரசிகனும், வாசகனும் படைப்பின் விற்பனைக்கு தான் தேவை,படைப்பிற்கு சக்ருதையன் தான் தேவை, எந்த ஊடகத்தாலும் சக்ருதையனை அசைக்கமுடியாது என்பார். படிப்பவர்களை குறித்த இவரது புரிதல் அருமை.

இந்த விழாவிலும் திரு.நாறும்பூநாதன் அவர்களின் புத்தகத்தின் தலைப்பை பற்றி சிறிது நகைசுவையாக குறிப்பிட்டு பேசினார். கதையில் ஜமீலா என்ற பெண்ணை ஆரம்பத்தில் இருந்து தேடியதாகவும் ஆனால் இறுதியில் அந்த ஜமீலாவின் வருகை ஒரு புத்தக வடிவில் இருந்தது எனவும், இது போன்ற நடை ஒரு வித்தியாசமான டெக்னிக் என்று புகழ்ந்தார்.

எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் சொன்னவற்றில் சில...

*படைப்பாளிக்கு மொழி என்பது தடையாக இருக்காது...முக்கியமாக  படைப்பில் பிழைகளை தேடக்கூடாது...அவங்க படைப்பாகத்தான் பார்க்க வேண்டும்...


* எழுத்திற்காக அதிக நோபல் பரிசை வாங்கி இருப்பவர்கள் யூதர்கள் தான்...அதிகமான கொடுமையை தாங்கியவர்கள் அவர்கள் தானே ! அதனை பதிந்திருக்கிறார்கள்...


"முன்னாடி எழுதினவங்க எல்லாம்  அவங்க நிகழ்காலத்தில் நடந்ததை எழுதினாங்க, அதையே இப்ப நாமும் எழுத வேண்டியது இல்ல...பழைய கதை இப்ப தேவையும் இல்ல...அதை விடுத்து நிகழ்காலத்தில நடக்கிறதை எழுதுங்க...நம் சமூதாயத்தில் இருக்கும் அவலநிலையை எழுதுங்கள், சமூகம், அரசியலில் நிலவும் ஊழலுக்கு எதிராக எழுதுங்கள்...அதற்காக பேருந்தில் கல் எரிந்து போராட சொல்லவில்லை, எழுத்தினால் போராடுங்கள்...அந்நிய சக்திக்கு எதிரானதொரு ஒரு போராட்டத்தை இன்றைய இளம் படைப்பாளிகள் செய்யவேண்டும்..."

மேலும்

" இலங்கையில் நடக்கிறதை பற்றி ஈழ தமிழர்கள் எழுதுகிறார்கள் ...ஆனால்  இங்கே இருக்கிற எத்தனை தமிழ் படிப்பாளிகள் அதை பதிந்தார்கள் ? ஏன் அதை எழுத முடியவில்லை...?!" (இப்படி கேட்ட போது அரங்கில் நிலவிய கனத்த மௌனம் மனதை வெகுவாக தைத்தது !)

திரு.கீரனூர் ஜாகிர்ராஜா 

'ஒடுக்கப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்' என்று பிளாக்கில் எழுதி இருப்பார்...! இது போன்றே இவரது எழுத்துக்கள் பல மனிதர்களின் வாழ்வை அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கும்...அதிலும் இவரது 'மீன்காரத்தெரு' நாவலை இயன்றால் படித்து பாருங்கள்...அழுக்கும் வன்முறையும், வறுமையும் நிலவும் இஸ்லாமிய மீன்காரர்களின் தெருவையும், இம்மக்களை சுரண்டி வாழும் மேல்தட்டு பங்களாவாசிகளுக்கும் இடையேயான முரண்பாடுகளை அப்படியே அவர்களின் நடுவில் வாழ்ந்து எழுதியதை போன்று இருக்கும்...மிகவும் உணர்ச்சிகரமான பதிவு...!

இவ்விழாவிலும் திரு .வண்ணதாசன் அவர்கள் இவரது இந்த நாவலை குறித்து மிக பெருமையாக விவரித்தார்.

திரு வண்ணதாசன் 

சுவையாக சுவாரசியமா இப்படி எல்லாம் பேச முடியுமா என்ற ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்து கேட்டு கொண்டிருந்தேன். கவிதைகளின் வழியே அறிமுகமான இவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பம் அன்று நிறைவேறியது.

நாறும்பூ நாதன் அவர்களின் முதல் நாவலான 'கனவில் உதிர்ந்த பூ' பற்றி பேச தொடங்கியவர் அப்படியே எழுத்தாளர்கள் பற்றி சொல்லி கொண்டே போனார், அதில் என் நினைவில் இருந்தனவற்றில் இருந்து சில...

                                                  எழுத்தாளர் திரு.வண்ணதாசன் அவர்கள் 
 
" கனவு என்பதே ஒரு உதிரும் பூ தான்! எழுத்தாளன் என்பவன் கனவில் உதிர்கின்ற பூவையும், நனவில் மலர்கின்ற பூவையும் தொடுத்துக்கொண்டே இருக்கிறான் . எது கனவு என்பதும் அல்லது எது மலர் என்பதும் அல்லது எது மலர்ந்தது என்பதும், எது உதிர்ந்தது என்பதும் எழுதுபவன் மட்டுமே அறிவான்.....எழுதுகிறவன் செய்கிற வேலை என்ன ?? அறிவது, அறிந்து கொள்வது, தான் அறிந்தவற்றை பிறருக்கு அறியச் செய்வது.....தான் அறிந்த வாழ்வை, தான் அறிந்த மனிதர்களை அவர்கள் அறியாத மனிதர்களிடம், அறிய வைப்பது...!இது தான் வேலை  இதை அறிய விரும்புகிறவர்களுக்கும், அறிய விரும்பாதவர்களுக்கும்,அறிவதை மறுக்கிறவர்களுக்கு அறிமுகபடுத்தி வைக்கிறான் "


"புதுமை பித்தன் யாரை அறிமுகப்படுத்தினார் ?! செல்லம்மாவை மட்டும் அல்ல கந்தசாமியை மட்டுமல்ல கடவுளையே அறிமுகபடுத்தினார்...கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ! சுகா தனது கதைகளில் செல்லப்பா மாமா, குப்பம்மா ஆச்சி, பாலாஜி,குஞ்சு போன்றவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறார்...! "


" எழுத்தாளர்கள் மனிதர்களை, மனிதர்கள் சார்ந்த வாழ்வை, குடும்பத்தை ,தெருவை, வீட்டை இப்படி எதையாவது அறிமுகபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்..." 


"இசக்கி அண்ணாச்சி அவர்களின் புகைப்படங்கள் நமக்கு எதை அறிமுகப்படுத்தின... நமது அடுத்த சந்ததிக்கு மருத மரத்தை அறிமுகபடுத்தி காலத்தின் சாட்சியாக இருக்கின்றன.நாம் மருதநிலக்காரர்கள் ஆனால் சாலையில் இருக்கும் மருத மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு  விட்டன...மருத மரத்தின் பறந்து விரிந்த தோற்றத்தையும், அதன்  நிழலையும், அதன் அருகில் குளத்தில் கிடக்கும் ஒடிந்த கிளையையும் அறிமுகபடுத்தி இருப்பார், மரத்தில் ஏற்கனவே ஒரு காக்கா இருக்கும் அதைவிட அழகாய் மற்றொரு காக்காவை தனது தூரிகையால் ஓவியமாக புகைப்படத்தில் கொண்டு வந்திருப்பார், இப்படி ஒரு நல்ல கலைஞன் எதையாவது அறிமுகபடுத்திக்கொண்டே இருப்பான்...!"

உதயசங்கர் குறித்து : " இவர் 22 புத்தகங்கள் எழுதி இருக்கிறார்...இவரை நாம் இன்னும் சரியாக அறிந்து கொள்ளவில்லை...நல்ல கலைஞனை எவ்வாறு அறிவது, அவனது படைப்பின் மூலமாகத்தானே ?! இவரது  'பிறிதொரு மரணம்' நாம் அறியவில்லை என்றால் பிறிதொரு வாழ்வையே நாம் அறியாதவர்கள் ஆகிறோம். பிறிதொரு வாழ்வு என்ன வாழ்வு நான்ம வாழும் வாழ்வையே அறியாமல் இருக்கிறோம்...தயவு செய்து இவரது 'முன்னொரு காலத்திலேயே' என்ற புத்தகத்தை அவசியம் படியுங்கள்...அனைவராலும் கொண்டாடபடவேண்டியவர்...இவரது 22 கட்டுரைகள் 22 மனிதர்களை பற்றிய அற்புதமான தொகுப்பு...அதில் வருபவர்கள் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி விடாதீர்கள், இவர்கள் நம் காலத்து நாயகர்கள் "


இவ்வாறு, இன்னும் பேசிக்கொண்டே சென்றார்...பேச்சை முடித்து திரு. வண்ணதாசன் அவர்கள் அங்கிருந்து அகன்றபின் நேரம் பார்த்தேன் சரியாக 'இருபது நிமிடங்கள்' கடந்திருந்தன...!பேசி முடிக்கும் வரை சிறு சத்தம் எழவில்லை...அனைவரையும் தனது பேச்சால் கட்டி போட்டு இருந்தார். இன்னும் அரைமணி நேரம் பேசி இருந்தாலும் கேட்டுக்கொண்டுதான் இருந்திருப்போம்...!!


திரு.உதயசங்கர்

கோவில்பட்டி நிறைய எழுத்தாளர்களை படைப்புலகிற்கு கொடுத்திருக்கிறது...முப்பது வருடத்திற்கு முன் அங்கிருந்து வந்தவர்தான் எழுத்தாளர் உதயசங்கர்...இவர் நாறும்பூ நாதனின் நெருங்கிய நண்பர். சிலவற்றை மிக சுவாரசியமாக கூறி அரங்கை கலகலப்பாக்கினார். அவரது பேச்சில் இருந்து...

                                                    எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்கள் 

" எழுத்தாளர்களின் மனைவியர் தான் ரொம்ப சிரமப்படுவாங்க...என்னவோ எழுதுறார் என்ற அளவில் தான் அவர்களின் புரிதல் இருக்கும்...இது தெரிஞ்சிதான் நான் கல்யாணத்துக்கு முன்பே நான் ஒரு எழுத்தாளன் அப்படின்னு இப்படின்னு பில்ட்அப் எல்லாம் கொடுத்து தயார் பண்ணி வைத்தேன்...ஆனால் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் வெடித்தது பிரச்சனை, 'என்னை எழுத்தாளர்னு தெரிஞ்சி தானே சம்மதிச்ச, இப்ப என்ன சண்டை போடுற'னு கேட்டேன். அதுக்கு அவங்க, 'ஆமாம் தெரியும், கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்க, அப்புறம் திருத்திவிடலாம்னு நினைச்சேன் ஆனா இது புது கோட்டியால்ல(?) இருக்கு...!?' 

இயல்பாக எல்லோரும் ரசிக்கும் விதமாக நிறைய பேசினார்...

திரு.நாறும்பூநாதன் 

திரு.உதயகுமார் அவர்களை பற்றி பேசியபோது, தங்களது சிறுவயது நினைவுகளை குறிப்பிட்டு சொன்னவை அருமை. உதயசங்கர் தனது அறையில் உடன் இருந்த மலையாள நண்பர் ஒருவரின் மூலமாக மிக குறுகிய காலத்தில் மலையாளம் கற்று பல மலையாள நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்று கூறி ஆச்சர்யபடுத்தினார்...!!

படைப்புலகம் குறித்து திருநெல்வேலியில் ஒரு பெரிய கருத்தரங்கம் நடத்தணும் என்று ஒரு யோசனை இருக்கிறது என தனது என்னத்தை வெளிபடுத்தினார்.

நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது...பல நல்ல நினைவுகளை பெற்ற மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

ஒரு வித்தியாசமான அனுபவம் 

பொதுவாக எழுத்தாளர்கள் கலந்துக்கிற விழா என்றாலே இப்படி எல்லாம் இருக்கும் என சில புரிதல்கள், சில கற்பிதங்கள் என் மூலையில் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தது...அதை எல்லாம் உடைத்து தூக்கி போட்டுவிட்டது இந்த நிகழ்ச்சி...!! வந்திருந்த ஒவ்வொருவரும் பிற எழுத்தாளர்களை வெளிப்படையாக மனமார பாராட்டினர், அதை விட அடுத்தவர்களின் நாவல்களை நினைவு கூர்ந்து அதில் இருக்கும் கதாபாத்திரம் பெயர் வரை நினைவு வைத்து சொன்ன விதம் பெருமிதம் கொள்ள செய்தது...

                                       ஆர்வமுடன் கவனிக்கும் அரங்கில் ஒரு பகுதியினர்...


அரங்கம் முழுவதும் நிறைந்து பலர் நின்றுகொண்டிருந்தனர்...எழுத்தாளர்கள் பேசும் போது சிறிதும் தேவையற்ற சத்தம் எழவில்லை...கைதட்டல்களும் , சிரிப்பொலியும் மாறி மாறி கேட்டது அழகு...நல்ல தமிழை, ஆங்கில கலப்பில்லாத தமிழை கேட்க வேண்டுமென்றால் இது போன்ற நிகழ்ச்சியை தவறவிட கூடாது. 

'ஜமீலாவை எனக்கு அறிமுகம் செய்தவன்' புத்தகம் வெளியிட்டவர்கள்: வம்சி புக்ஸ்.

இப்படி ஒரு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சங்கரலிங்கம் அண்ணாவுக்கு என் நன்றிகள்.

பின் குறிப்பு

எனக்கு நினைவில் இருந்த வரை எழுதி இருக்கிறேன்...யாருக்கும் ஏதும் குறையாக தெரிந்தால் பொறுத்துக்கொள்ளவும்...உடன் தெரிவித்தால் சரி செய்து கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழா குறித்து தொடர்ந்த எனது பார்வையை அடுத்த ஒரு பதிவில் பதிய இருக்கிறேன்...

இங்கே குறிப்பிடபட்ட எழுத்தாளர்களின் வலைத்தளங்கள் செல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும் அவர்களின் பெயரை கிளிக் செய்யவும்...அவசியம் சென்று அருமையான நல்ல எழுத்துக்களை வாசித்து பயன்பெறுங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்.

நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா