திங்கள், பிப்ரவரி 29

கடனுக்காக மனைவி பலியாவதை அறிந்தும் அறியாத கணவர்கள் ?! தாம்பத்தியம் - 32


'பணம்' இது ஒன்றிற்காக மனிதன் எதையும் செய்வான் என்பதை கண் முன்னே காணும் துர்பாக்கிய நிலை நமக்கு இன்று. நாளை என்ன நடக்கும் என்று தெரியாத உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே மனிதன் சமயங்களில் மறந்துவிடுகிறான். ஒரே பாடல் ஓஹோனு வாழ்க்கை சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்பதை நம்பாமல் மனிதன் ஆடும் ஆட்டத்தில் அவன் குடும்பத்தினரே அதிகம் அவதிக்குள்ளாகிறார்கள். முக்கியமாக இறுதிவரை கை விடமாட்டான் என்றெண்ணிய கணவன் பணத்திற்காக தன்னை பலியிடுவதை அறியாமலேயே மனைவி இருப்பது இன்றைய குடும்பங்களில் சகஜமான ஒன்றாகி விட்டதோ என அச்சம் ஏற்படுகிறது.

குடும்பத்தில் கணவன்/மனைவி தனது பணியின் காரணமாகவோ சொந்த விஷயமாகவோ  செய்து வரும் விசயங்கள் தங்களின் துணைக்கு தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய் விடும் என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கிறோம்.   நமக்கெல்லாம் நடந்தபிறகு தானே ஞானோதயம் பிறக்கும், வரும்முன் காப்பது என்ற ஒன்றே தற்போது  இல்லாமல் போய்விட்டது. இன்றைய நாள் முடிந்தது நாளையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற அசட்டுத் தனம் நல்லது அல்ல.

சொந்தத் தொழில் செய்பவர்கள், அரசாங்க வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் பணத்திற்காக அகலக் கால் வைப்பது வெகு சாதாரணமாகி விட்டது. இருப்பதை வைத்து திருப்தியாக வாழலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. எதில் இன்வெஸ்ட் பண்ணினால் பணம் பல மடங்காகும் என யோசிக்காதவர்கள் இல்லை. கடன் வாங்கியாவதுத்  தொழிலை பெரிதாக்கணும் என்ற ஆசை, வெறியாக மாறி பல குடும்பங்களை நிம்மதியில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தின் ஒத்துமொத்த சந்தோசமும்  ஒரு சில நிமிடங்களில் தொலைந்துச்  சிதைந்துப் போக ஆண் காரணமாகிறான். இதை ஆண்கள் விரும்பிச்  செய்கிறார்களா? அல்லது மனைவியின் வற்புறுத்தலா? அல்லது  மனைவியின் மீதான அதிக அன்பா? என தெரியவில்லை.  ஆனால் என்றாவது ஒருநாள் எல்லோரின் முன்பும் அவமானப்பட்டு தலைக் கவிழ்ந்து நிற்பது அந்த பெண் தான்.....

அப்படி அந்த கணவன் என்ன தான் செய்து விட்டான் என்கிறீர்களா ? மனைவியின் பெயரில்  கார், வீடு, நிலம், தோட்டம் என சொத்துக்களை வாங்குவது அல்லது தன் பெயரில் இருந்து மனைவியின்  பெயருக்கு மாற்றுவது. பெரும்பாலான அப்பர் மிடில்கிளாஸ் குடும்பங்களில் இதுதான் நடை முறை.  நல்லது தானே. இதில் என்ன பிரச்னை உங்களுக்கு என தோன்றுகிறதா ... 

எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கும் வரை எந்த பிரச்சனையும்  இல்லை. மனைவிக்கும் பெருமையாக இருக்கும், உறவினர்கள்/நண்பர்கள்  முன்னிலையில்  கணவன், 'என் பெயரில் எதுவும் இல்லப்பா எல்லாம் என் மனைவி பேர்ல தான் இருக்கு' என்று சொல்லும்போது...!  இதே கணவன் ஒரு சூழ்நிலையில் மனைவியின் கையொப்பம் இட்ட காசோலையை கொடுத்து வட்டிக்கு பணம் கடன் வாங்குவான்.  ஒன்று பலவாகி ...மனைவியும் கணவன் தானே அவருக்கு தெரியாதா என கேட்கும் போதெல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறாள் என்றால் அவள் தலையில் அவளே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கிறாள் என்று அர்த்தம் !

எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவரது குடும்பம் வசதியானது, சொந்த தொழில், அருமையான மனைவி  ஆண் ஒன்று பெண் ஒன்று என இரு குழந்தைகளுடன் சந்தோசமான நிறைவான வாழ்க்கை. வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தெரிந்தது இவை மட்டும் தான். கடந்த வருடம்  நண்பர்  ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். துக்கத்திற்கு வந்தவர்களில் கடன்காரர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். அத்தனை பேரும் கணவரை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்  மனைவியை சூழ்ந்துக்  கொண்டு எனக்கு கொடுக்க வேண்டியப்  பணத்தை எப்போ தர போறிங்க...? சீக்ரம் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க? இவருக்கு இப்படி திடீர் சாவு வரும்னு எதிர்பார்கலையே, எங்களுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு மறுவேலை பாருங்க' என்ற மிரட்டும் விதத்திலுமாக பலரும் மாறி மாறி பேச நிலைகுலைந்துப் போய்விட்டார் மனைவி. இத்தனை பேரிடமா பணம் வாங்கி இருப்பார்? ஆதாரம் என்ன? மனதில் தோன்றியதை கேட்டும் விட்டார். எல்லோரின் ஒட்டு மொத்த பதில் 'உங்களின்  கையெழுத்து போடப்பட்ட  பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார்'

கணவர் கேட்கிறார் என்பதற்காக சரியாக விசாரிக்காமல் கேட்டதும்  கையெழுத்து போட்டு கொடுத்ததன் பலன் இதுவென மிக தாமதமாக புரிந்து கொண்டார் மனைவி.  வந்தவர்கள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் தொகை 2 கோடியை தாண்டுமாம். எல்லோரையும் பார்த்து ஒரு நாலு  மாசம் டைம் கொடுங்க, அடைச்சிடுறேன்' என மெல்லிய குரலில் கூற இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிய மனிதனின் சடலத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து 'சொன்னப்படி கொடுத்துடுங்கமா' என்று சொல்லிவிட்டு கடந்துச்  சென்றே விட்டது அந்த கூட்டம்.

துக்கத்திற்கு வந்த உறவினர்களின்  கூட்டம் அகன்றதும்  கணவரின் டைரியில் விவரங்கள் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா என   தேடித் பார்த்திருக்கிறார்.  வங்கியில் லோன் வாங்கியது உட்பட ஒரு சில கணக்குகள் மட்டுமே இருந்தன. வாய் மூலமாக நம்பிக்கையின் பெயரில் வாங்கியவையே  அதிகம் என்ற உண்மை புரிந்து அதிர்ந்துவிட்டார். இன்சூரன்ஸ் பணம், வங்கி சேமிப்பு, நகைகள் மூலமாக  ஓரளவு கடன் தொகை அடைக்கப்பட்டது. 'நான் ஜாமீன் போட்டு வாங்கிக் கொடுத்தது மேடம்' என்று அவரது கம்பெனியின் மேனேஜரும் ஒரு செக்கை நீட்ட யாரை நம்பி எந்த காரியத்தை ஒப்படைப்பது என திணறிவிட்டார். குழப்பத்தின் உச்சத்தில் ஆறு மாதங்கள் ஓடி விட்டது, . அப்போது கோர்ட்டில் இருந்து இவரது பெயருக்கு ஒரு நோட்டிஸ் வந்தது செக் மோசடி என்று !!

நன்றாக சென்றுக் கொண்டிருந்த நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டு புதிதாக இரண்டு தொழில்களில் கணவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் வெளியே தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார், இறக்கும் வரை வட்டியை சரியாக கட்டியே வந்திருக்கிறார், இன்னும் இரண்டு வருடங்களில் வட்டியுடன் அசலையும் அடைத்துவிடலாம் என்று அவர்  கணக்கு போட்டிருக்கிறார். ஆனால் விதியின் கணக்கு ?!

'பெண்' என்றால் 

இப்படியாக ஏற்படும் பிரச்சனை ஒரு விதம் என்றால் அடுத்தவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது அடுத்தவருக்காக  இவர் கடன் பெற்றுத் தருவது என மற்றொரு விதம் இருக்கிறது. இது மிக ஆபத்தானது, இதில் இருவருக்கும் நடுவில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை  கணவன் சொல்லாமல் மனைவிக்கு தெரிய வாய்ப்பே இல்லை. பணம் திருப்பித் தருவது தாமதமானால் கணவன் இருக்கும்/இல்லாத பட்சத்தில் மனைவியை மிரட்டுவது கண்டிப்பாக நடக்கும், கொடுமை என்ன வென்றால் சம்பந்தப் பட்ட இருவருமே இவரை சாடுவார்கள். ஏதுமறியா மனைவி என்ன செய்வார்?  பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் என் முன் வைத்தா என் கணவரிடம் பணத்தை கொடுத்தீர்கள், எனக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது' என்று ஆனால் 'நீதானமா அவரோட மனைவி உனக்கு சம்பந்தம் இல்லைனா எப்படி' என தொடங்கும் பேச்சு ஒரு கட்டத்தில் ஆபாசப் பேச்சாக மாறும். எதிரில் நிற்பது 'பெண்' எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பது நமது சமூகத்தின் சாபக்கேடு ஆயிற்றே.

பணத்தேவை அவசரம் என்றால் வெகு சுலபமாக செக் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள், சில காலம் கழித்து கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை என்றதும் சிறிதும் யோசிக்காமல் கோர்ட் படியேறி விடுகிறார்கள். பெண் பெயரில் கொடுக்கப்  பட்ட செக் என்றால் அவசியம் பெண் நீதிமன்றம் சென்றாக   வேண்டும்,  எனக்கு இங்கெல்லாம் சென்று  பழக்கமில்லை என்று சமாளிக்க முடியாது. கூண்டில் ஏறி நின்று  நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்து தான் ஆகவேண்டும்.

கணவன் இறந்தப்பின் அந்த  மனைவி படும் துன்பம் கொஞ்ச நஞ்சமில்லை... அடுப்படி, வாசப்படி, குழந்தைகள் என்று இருந்தவர் தற்போது கோர்ட்டுக்கும் வக்கீல் வீட்டுக்குமாக அலைந்துக் கொண்டிருக்கிறார். சொத்துகளின் மீது வாங்கப்பட்ட கடன் என்பதால் அவற்றை விற்பதும் சிக்கலாக இருக்கிறது... சந்தர்ப்பவாதிகள் மிக குறைவான விலைக்கு கேட்பதுவும் நடக்கிறது.

கணவனின் சந்தோசத்தில் பங்கு கொண்டவர் கஷ்டத்திலும் பங்கு கொண்டால்  என்ன என்ற கேள்வி எழலாம். கணவருக்காக எதையும் செய்யலாம் தான் ஆனால் நேற்று வரை மனைவி என்பவள் தன்னில் சரிபாதி எதாக இருந்தாலும் இருவருக்கும் தெரிந்தே இருக்கவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேலை  புருஷ லட்சணம்  என்பதை போல கணவர்கள் இருந்தால் அவர்களின் மனைவி உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

பிசினஸ் மக்களுக்கு கடன் வாங்குவது என்பது ஒரு வகை பணப் பரிமாற்றம் அவ்வளவு தான். பிசினஸ் பொறுத்தவரை அவர் செய்தது அனைத்தும் சரியே. ஆனால் குடும்பத்தை நடுத்தெருவில் அல்லவா அவர் நிறுத்திவிட்டு  போய்விட்டார். யாருக்கு எப்போது என்ன நேரும் என்று சொல்லமுடியாது. நிலையாமை என்பதை அடிக்கடி நினைத்துப் பார்த்தால்  இது போன்ற சிக்கல்கள் ஏற்படாது. மனைவியின் பெயருக்கு இடம் வாங்குவதும், தனது சொத்தை எழுதி வைப்பதும்  பெரிதல்ல, அதை பற்றிய முழு வரவு செலவையும் மனைவியிடம் அவ்வபோது சொல்லிவிடவேண்டும். அப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பவர்கள் மனைவியின் பெயருக்கு சொத்துக்களை மாற்றாமல் இருப்பது உத்தமம்.

யாருக்காக சம்பாத்தியம் 

தனது பெயரில் கணவருக்கு சொத்துக்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட கணக்குகளை   வீட்டினருக்கு தெரியும் அளவில் எழுதி வைக்கவேண்டும். கம்பெனியின் நிர்வாகத்திற்காக மேனேஜர், அக்வுண்டன்ட், ஆடிட்டர் , குடும்ப வக்கீல் என்று பலர் இருந்தாலும் யாரையும் நம்பமுடிவதில்லை. பண வரவு செலவுகளைப் பொறுத்தவரை கணவன் மனைவி இருவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

குடும்ப நண்பரின் மனைவி படித்தவராக இருந்தும் தொழில் சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை மனைவிடம் பகிர்ந்துக் கொள்ளாதது  சுத்த அசட்டுத்தனம். தொழிலை விரிவுப் படுத்துகிறேன் பேர்வழி என்று அகலக்கால் வைப்பது அவரவர் விருப்பம். கடனுக்கு ஈடாக  மனைவியின் செக்கை பயன்படுத்துவதும் தவறில்லை, ஆனால் அதன் முழு விவரத்தையும்  மனைவிக்கு தெரிவித்து விடவேண்டும்.  'பொம்பளைங்கிட்ட எல்லாத்தையுமா சொல்லிக்கிட்டு இருப்பாங்க' என்பதே 'இன்றும்' பல ஆண்களின் எண்ணமாக இருக்கிறது.    

கணவன் மனைவி உறவு என்பது ஒளிவுமறைவு அற்ற வெளிப்படையான ஒன்றாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவர் தனக்கு பிடித்த மாதிரி மட்டும் சுயநலமாக செயல்படுவதால் நேரக் கூடிய இன்னல்களால் நேரடியான பாதிப்பு அவர்களின் குழந்தைகளுக்குதான். டீன்ஏஜ் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரிந்திருப்பது நல்லது. பல சமூக அவலங்கள் பணத்தால் தான் ஏற்படுகிறது  என்ற நினைவில் வைத்து ஒவ்வொன்றையும் கவனமாக கையாளவேண்டும்.

சம்பாதிப்பதும் சொத்து சேர்ப்பதும் குடும்பத்தினரின் நிம்மதியான வாழ்வுக்காகத்தான். நமது இருப்பும் இறப்பும் நல்ல நினைவுகளாக மட்டுமே பதிய வேண்டும், அது ஒன்றுதான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாகும்.

தனது பெயரில் சொத்துகள் இருப்பதால் மனைவி கணவருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் பற்றி அடுத்த பதிவில்...

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா.

  



திங்கள், பிப்ரவரி 8

ஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...!

Liquor drinking is injuries to health



பெண்கள் மது குடிப்பது தொடர்பான எனது  பதிவு ஒரு சிலருக்கு சரியானப் புரிதலை ஏற்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். நண்பர் வருண் நெகடிவ் வோட் போட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார். அவ்வாறு நேரடியாக தெரிவிக்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கும்  இந்த பதிவு ஒரு புரிதலைக் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமலும் போகலாம் ஆனால் தெளிவுப் படுத்துகிறேன் பேர்வழி என எழுதுவது எனது ஆகச் சிறந்த கடமையாகிவிட்டது தற்போது ! :-)  

///நீங்க புதுமைப் பெண்களுக்கு,புருஷன் குடிச்சான்னா நீயும் அவனைவிட ரெண்டு மடங்கு குடி! அப்போத்தான் அந்த நாய் திருந்தும் என்பதுபோல் அறிவுரை சொல்வது மொத்தமாக எல்லோரும் நாசமாப்போவதுக்கு வழி வகுப்பது.///

இது போன்ற ஒரு அறிவுரையை எனது பதிவில் நான் குறிப்பிடவில்லை...அதுவும் தவிர  அந்த பதிவிலேயேக் குறிப்பிட்டு இருந்தேன், 'பெண்கள் குடிப்பதற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை, ஆணுக்கு சமம் என்பதைக் குடிப்பதன் மூலம் பெண்கள் நிரூப்பிக்கக் கூடாது' என்று.  நண்பர் வருணின் மொத்த கருத்துரையும் தவறானப் புரிதலின் காரணமாக வெளிவந்தவை. புரிதலின்மை என்பதற்காக ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும்  இயலாத காரியம்.  இருப்பினும் மதுவைக் குறித்து சமயம் வாய்க்கும்போதே எழுதிவிட வேண்டும்  என்பது எனது எண்ணம். ஏனென்றால் என்னிடம் ஆலோசனைக்கு வருபவர்களின்   பிரச்சனையின்  மூலக் காரணம்  மது. ஏதோ ஒன்றை மறக்க/நினைக்க மதுவைத்  தொடுகிறார்கள் பிறகு விடமுடியாமல் தொடருகிறார்கள்.   

மது அருந்துவதை குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை அதனால்தான்   அரசாங்கம்  விற்கிறது.  டாஸ்மாக் வாசலில் பெண்கள் குடிக்கக்கூடாது, பெண்களுக்கு இங்கே மது விற்கப்படாது என்ற போர்டு இல்லை. பெண்கள் மதுக் குடிப்பதை பற்றிய கவலை அரசிற்கே இல்லை அதுவும் பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில்... அப்படி இருக்க ஆண் குடித்து கும்மாளம் போட்டால்  ஒதுங்கிப்போகும் ஆண்கள், பெண் என்றதும்  கேலி கிண்டல் கூச்சல் கூப்பாடுப் போடுவதும், அதிலும் பெண் குடித்தால் என்ன தவறு என்று கேட்ட  பெண்ணை, நாலு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்வதுதான் சரி  என்று சொல்வதும் வக்கிரத்தின் உச்சம். 

பெண் குடிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பது எனக்கும் தெரியும். ஆணுக்கு ஏற்படுவதை விட அதிகமான பிரச்சனைகள் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும்.   ஒரு குடும்பம் ஆண் குடித்தாலும் தெருவுக்கு வரும், பெண் குடித்தாலும் தெருவுக்கு வரும். மேல் தட்டு மக்களில் ஆண் பெண் குடிப்பது தற்போது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. பார்ட்டிகளில் குடிப்பது தான் அவர்களை பொறுத்தவரை நாகரீகம்.  அவர்கள் குடிப்பதால் அவர்களுக்கோ சமுதாயத்திற்கோ பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை... (அவர்கள் குடித்து விட்டு கார் ஒட்டி ஆளைக் கொன்*றாலும், சாட்சிச் சொன்ன எளியவர் பாதிக்கப்படுவாரேத் தவிர கொன்*றவர் சகல சௌபாக்கியத்தோடு வாழலாம்)  அதே சமயம் மதுவால் எளிய மக்களின் வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வீடுகளில் யாரோ ஒருவராவது குடிக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.  அதிகரித்துவிட்ட குடிப்பழக்கத்தால் பெண்கள் தான் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்படுகிறாள்.  கொ*லை கொள்*ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் புரியும் அத்தனை பேரும் குடிப் பழக்கம் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்... இருப்பார்கள் !
   
என்னைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன காரணம் என்று பார்க்கவேண்டுமே தவிர பிரச்சனைக்குரியவர்களைத் தூற்றுவது  சரியல்ல.   பெண் குடிக்கிறாள் என்று கூச்சலிடுவதை விட அவளும் குடிக்கத் தொடங்கியதற்குக் காரணம் என்ன என்று பார்க்கவேண்டும்.   அவள் குடிப்பதைத் தடுக்க அல்லது குறைக்க முயற்சிச் செய்வதை விட்டுவிட்டு குடிக்கிறாளே என்று கூச்சலிட்டு அவளை இழிவுப் படுத்துவதால் பிரச்சனை இன்னும் தீவிரமாகும். ஏனென்றால்  பெண்ணுக்கு எதிராக எதை செய்தாலும் சொன்னாலும் அதை மீற வேண்டும் என்பது  பெண்களின் புத்தியில் புதிதாகப் பதிந்துவிட்டது.   குடிப்பது தவறு என்று அவளுக்கும் நன்கு தெரியும், ஆனால் அதை ஆண் கேவலப்படுத்தும் போது குடித்தால் என்ன தப்பு என்று எதிர்த்துக் கேட்கிறார்கள் செய்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக பெண்ணை  அடிமையாக நடத்தியதன் விளைவு இது.  கர்சீப் கூடவே கூடாது என்று வற்புறுத்திப் பாருங்கள், நாளையே கர்சீப் உடுத்தும் போராட்டம் தொடங்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. முத்தப்போராட்டதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.  

///This is how it started among men too. First 1% started consuming, now it is almost 100% The same thing would happen with women. I dont understand why women should be treated "gently" and "alcohol should be blamed" rather than blaming consuming women.
I am completely against your view in this issue, my respectable friend, Mrs.Raj! We should not use two different balances to weigh men and women's alcohol consumption. Let us blame the consumer not the ethyl alcohol, even if it is a "poor woman"! Then only it is fair after all.///

மது அருந்தாத ஆண்கள் குடித்து கும்மாளம் போடும் ஆண்களை திட்டி தீர்க்காமல் பெண்களை மட்டும் திட்டுவது ஏன்? பெண்கள் குடித்தால் சீரழியும் சமூகம் ஆண்கள் குடித்தால் வளர்ச்சி அடையுமா என்ன ?  சமூகத்தின் மீது இதுவரை  இல்லாத அக்கறை பெண் குடிக்கிறாள் என்றதும் வந்துவிடுகிறது  அதுவே நம் வீட்டுப்பெண்ணாக  இருந்தால் பொதுவெளியில் இழுத்து வைத்து கும்மி அடிக்க மாட்டோம்.   ஒவ்வொரு ஆணும் உங்கள் வீட்டுப் பெண்கள் குடிப்பவர்கள் என்பதை அறிந்தால் விமர்சனத்தை அங்கே இருந்து தொடங்குங்கள்.  திருத்துங்கள்.  வளமாகட்டும் நம் சமூகம்.

மது என்னும் அரக்கன் 

உடுமலைபேட்டையில் நாங்கள் குடியிருந்த போது தெருவில் குப்பைகளைச் சேகரிக்கும்  பெண்கள் வேலை முடிந்ததும் ஒரு ஓரமாக சுற்றி அமர்ந்து  மிக கேசுவலாக இடுப்பில் இருக்கும் பாட்டிலை  எடுத்து ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி பேசிக் கொண்டே மெதுவாக அருந்துவார்கள். பெண்கள் குடிப்பதை நேரடியாக முதல் முறை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யம் + அதிர்ச்சி !   அவர்களிடம் சென்று ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிக்க இப்படி குடிக்கிறீர்களா என்று கேட்பது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் பெண்கள் குடிக்க பெண்ணுரிமையைக் காரணம் காட்டுவது. 

என்றோ ஒருநாள் மதுவை கையில் எடுப்பதற்கும். தினமும் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கும் வித்தியாசம் அதிகம். ஆண்கள் அளவிற்கு பெண்களால் தினமும் குடிக்க முடியுமா என்ற சந்தேகம்  உடுமலைபேட்டையில் நீங்கியது.  செய்யும் வேலையில் ஏற்படும் களைப்பை /உடல் வலியை மறக்கலாம் என்று மதுவை நாடும்  ஏழை எளிய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  கணவன் மனைவி இருவரும் சேர்ந்துக் குடிக்கும் குடும்பங்களும் உண்டு.  மதுவை கையில் எடுத்தால் தான் அன்றைய தினம் நன்கு தூங்கி மறுநாள் வேலைக்கு ஆயுத்தமாக முடிகிறது  என தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள் போல...

தினமும் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை குடிக்க என்று ஒதுக்குகிறார்கள். எங்கள் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு வந்தவர்களிடம் ஐநூறு ரூபாய் சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சா கம்பியூட்டர் வேலை பாக்குறவங்க  அளவு மாச வருமானம் வரும் அப்புறமென்ன கவலை என்றதற்கு  ' வீட்ல முன்னூறு ரூபா கொடுப்பேன் மிச்சம் என் செலவுக்கு உடம்பு வலிக்கு மருந்து போட்டாத்தான் நாளைக்கு வேலைக்கு வரமுடியும்' என்று அவ்வளவு பொறுப்பாக(?) பதில் சொன்னார்கள். மது உடல் வலி போக்கும் மருந்து என புரிந்து வைத்திருக்கும் எளிய மக்களிடம் எதை சொல்லி மது குடிக்காதீர்கள் என சொல்வது.  அற்ப ஆயுசு என்றாலும் எல்லோரும் ஒரு நாள் சாகத்தானே போகிறோம் என்று தத்துவம் பேசுகிறார்கள்.

சந்தோஷம்,  திரில் கிடைக்கும் என்பதற்காகக் குடிக்கத் தொடங்கும்  படித்த பெண்கள் ஒரு கட்டத்தில் முழுமையாய் போதையில் மூழ்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.   அப்படிப் பட்டவர்களை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறோம் . ஒரு பிரச்சனையின் வேர் எங்கே இருக்கிறது அதை களைவது எவ்வாறு என்று தான் வலியுறுத்த வேண்டுமே தவிர வீணான வெட்டிப் பேச்சுக்களில்     பெண்ணை துகில் உரித்து வன்*புணர்வு செய்துவிடுவேன் என்று மிரட்டுவதில் இல்லை என்பதை இளைய சமூகம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் பயப்படுகிற  மாதிரி ஒரு சதவீத குடிக்கும் பெண்கள் அதிக சதவீதத்தை எட்டும் என்ற பயம் எனக்கும் இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் மது விற்பனையை முறைப்படுத்த வேண்டும் அல்லது மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்.  கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் மதுவை மாநிலம் தாண்டியோ , உள்ளூரில் திருட்டுத் தனமாகவோ எல்லா பெண்களாலும் வாங்க முடியாது.  அப்படியென்றால் குடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை தானே.

பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது  அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது. சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வந்த ஒரு இளம்பெண், இப்ப கேர்ள்ஸ் டிரிங்க்ஸ் பண்றாங்களாம்  குடிச்சா என்ன மேடம் தப்பு, அப்டி அதுல என்ன இருக்கு குடிச்சு பார்ப்போமேனு எனக்கு தோணிக்கிட்டே  இருக்கு'. என்று பேச்சோடுப் பேச்சாகச்  சொன்னாள். உண்மை என்ன தெரியுமா அந்த பெண் ஏற்கனவே குடிப்பழக்கம் உள்ளவள், அதற்கு நியாயம் கற்பிக்க என்னிடம் இப்படி கேட்கிறாள். இதே மனநிலை நிறைய பெண்களுக்கு இருக்கிறது ஆண் வேண்டாம் என்று எதையெல்லாம் சொல்கிறானோ அதை எல்லாம் செய்து பார்க்கணும் என்ற எண்ணம்.  அது உடை தொடங்கி  குடி என்று  தொடருகிறது.  இதற்கு தான் நான் அஞ்சுகிறேன். எதிர்பாலினம் எதிரி பாலினமாக மாறிக் கொண்டிருக்கும் விபரீதத்தை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஏற்பட்ட அச்சம் இது...

நான் பதிவில் குறிப்பிட்ட 'வற்புறுத்த' என்ற வார்த்தை முக்கியம். மது அருந்தினால் ஆரோக்கியம் கெடும் என அறிவுறுத்தலாம் ஆனால் வற்புறுத்துவது என்பது எதிர்விளைவையே கொடுக்கக்கூடும். எதை வலியுறுத்த முயலுகிறோமோ அது வலிமையாகிக் கொண்டேப்  போகிறது.

எனது நிலைப்பாடு :-

பெண்களுக்கு ஒன்று என்றால்  கண்மூடித்தனமாகப் பொங்குவதல்ல  எனது வேலை... காலங்காலமாக பெண் அடிமைப்பட்டுக்  கிடக்கிறாள் ஆதரவு தந்து இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவும் நான் வரவில்லை... சொல்லப் போனால் உங்களின் கழிவிரக்கம் பெண்ணுக்கு தேவையேயில்லை.  பெண் அனைத்தையும் விட மேலானவள்...இந்த  மனித சமுத்திரத்தின் வேரானவள் !

விதிவிலக்குகள் இருக்கலாம் அதை தவிர்த்து  பெண்ணை விமர்சிக்கலாம்  நாகரீகமாக... பெண்ணை  கிண்டல் செய்யலாம்  நட்பாக... பெண்ணைப்  பற்றி பேசலாம்  வெளிப்படையாக...!  ஒவ்வொரு பெண்ணை விமர்சிக்கும் முன்பும் உங்கள் வீட்டுப் பெண்களை தயவுசெய்து  நினைத்துக் கொள்ளுங்கள் தரக்குறைவான வார்த்தைகளைத்  தவிர்க்கலாம் !!! இதைத்தான் ஆண் பெண் இருவரிடமும் எதிர்பார்க்கிறேன்.

பெண் குடித்தால் அவள் உடல் மனம் பாதிக்கப் படும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், பலருக்கும்  பெண்களை இழிவுப் படுத்த இது இன்னொரு வழி அவ்வளவே.  ஆண் குடிகாரனாக மாறுவதற்கும் பெண்ணே காரணம் என குற்றம் சாட்டவும் ஒரு கூட்டம் இங்கே உண்டு. குழந்தைப் பெறும் பெண் குடிப்பது குழந்தையைப் பாதிக்கும் என்பதே பலரின் ஆகச் சிறந்த அறிவுரை, அப்படியென்றால் குழந்தைகளைப் பெற்று வளர்த்து  35/40 வயதைத் தாண்டிய பெண் குடிக்கலாம் என்றால் ஒத்துக்கலாமா ? ஆண் பெண் யார்  (அளவுக்கு மீறி) குடித்தாலும் பிரச்சனைத் தான் என்று செய்யப்படும் விழிப்புணர்வு ஒன்றுதான் தற்போது சமூகத்திற்கு அவசியம். அதை விடுத்து பெண்ணை கைக்காட்டிவிட்டு ஆண் தப்பித்துக்கொள்வதை  சமூக வலைத்தளத்தில் இயங்குபவர்கள்  ஊக்குவிக்கக் கூடாது.

தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்குப் பகுத்தறியத்  தெரியும். தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது. பெண்ணைப் பற்றிய எந்த விமர்சனமும் எல்லை  மீறி பெண்மையைக் கேவலப்படுத்தி  துன்புறுத்தும் அளவிற்குப் போகக் கூடாது. அவ்வாறு போகும் போதெல்லாம் பெண்கள் குரல் கொடுக்கத்தான் செய்வார்கள்.  

குறிப்பு :-

நண்பர் வருணின் பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக  இந்த பதிவை எழுதினேன், ஆனால் எழுதி முடித்ததும் பொதுவான ஒரு பதிவாக மாறி இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் தோன்றிவிட்டது. கருத்துக்களில் என்ன எதிர் நேர்? எதாக இருந்தாலும் என்னை யோசிக்கவும்  எழுதவும்   வைப்பது  நல்லது தானே. அதற்காக நண்பர் வருணுக்கு என் அன்பான நன்றிகள்!


புதன், பிப்ரவரி 3

இறுதிச்சுற்று...!



ஆரம்பம் முதல் இறுதி வரை மிக ரசித்த படம்... ரித்திகா இந்த பெண்ணை எங்கே கண்டுப் பிடித்தார்கள் என்று ஆச்சர்யப் பட வைத்தார். படத்தை பார்க்கும் முன் விஜய் சூப்பர் சிங்கரில் கெஸ்ட்டா இந்த பெண்ணை பார்த்தப் போது ரொம்ப ரொம்ப சிம்பிளாக நடிகை என்ற  எந்த அடையாளமும் இல்லாமல் வந்து அமர்ந்தார். மாதவனுக்கு இந்த சின்ன பொண்ணு ஜோடியா என்ன படமோ எப்படி இருக்குமோ என்று ஒரு சலிப்பு எனக்கு. பொதுவாக ரிலீஸ் ஆகுகிற படமெல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை ரொம்ப யோசிச்சு செலக்ட் பண்ணிப் பார்ப்பேன்

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை 'ஆவி கோவை' தனது பேஸ்புக் ஸ்டேடஸில் மாதவனின் நடிப்பை சிலாகித்ததை  பார்த்ததும் இந்த படத்தை பார்த்தால் என்ன என்று தோன்றியது. அன்னைக்கு எனது வேலைகள்  முடிந்து  வெட்டியாக வேறு இருந்ததால் நானும் கணவரும் உடனே  கிளம்பியும் விட்டோம். தியேட்டரில் சொற்பக் கூட்டத்தை பார்த்ததும் அடடா தப்பா Choose  பண்ணிட்டோமோ அரண்மனை 2 (ஹவுஸ் புல்) போய் இருக்கலாமோ,  சரி எதுனாலும் நேருக்கு நேராச் சந்திப்போம் என்ற வீராவேசத்துடன் உள்ளே சென்று சீட்டில் அமர்ந்தேன்.

சும்மாச் சொல்லக் கூடாது ஆரம்பம் முதல் சீன் பை சீன் திரையுடன் என்னை ஒன்ற வைத்துவிட்டது. ரித்திகாவை எப்படி பாராட்ட என்றே தெரியவில்லை அந்த பொண்ணு நடிச்சிருக்குனுலாம் சொல்ல முடியாது, என் கணவரிடம் சொன்னேன், இந்த பொண்ணு ஒரு ஸ்போர்ட்ஸ்வுமன் ஆக இருப்பாளோ என்று... அந்த அளவிற்கு ரொம்ப சாதாரணமாக அனைத்தையும் கையாண்டாள்.  அந்த பேச்சு(டப்பிங்கா   நம்ப முடியவில்லை) அந்த ஸ்டைல் அந்த நடை அந்த பார்வை... கண்ணா அது என்னமா உணர்ச்சியை வெளிக் காட்டுது. நடனமா நளினமா என்று இமைக் கொட்டாமல் பார்த்தேன். ஒவ்வொரு அசைவும் தனித் தனியாக ரசிக்கவைத்தது. இதற்கு முன்  ஷோபாவை இப்படி ரசித்திருக்கிறேன்.

பொதுவாக மாதவன் அடிக்குரல்ல பேசுற  படத்தை தவிர்த்துவிடுவேன், டிவியில் படம் போட்டாலும் பார்க்க மாட்டேன். உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கும். இந்த படத்துல ரொம்பவே ஸ்மார்ட்.  இறுக்கமா இருக்கணும் அதே நேரம் இயல்பாவும் தெரியணும் என்பதைப் பார்வையாளனிடம் வெளிப்படுத்திய விதத்தில் மாதவன் நடிப்பு அட்டகாசம். நடிப்பை பொறுத்தவரை நம் தமிழ் திரையுலகம் இவரை அவ்வளவாக பயன்படுத்தவில்லை என்ற வருத்தம் ஏற்பட்டது.

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த  படம், அவரும் தனது பாத்திரத் தன்மையை உள்வாங்கி மன உணர்வுகளை முகத்தில் அருமையாக வெளிப் படுத்தி இருந்தார். தமிழ் நாட்டு மீனவப் பெண்ணுக்கு வடநாட்டுப் பெண் சாயல் எப்படி என யோசிப்பதற்கும் ஒரு சிறு கதை வைத்தது அழகு.   நாசர் ராதாரவி உள்பட நடித்த அனைவருமே நடிப்பில் அவ்வளவு கச்சிதம்  நடிகர்களுக்குள் இருக்கும் நடிப்பை   கதைக்கு ஏற்றப் படி வெளிக் கொணர்ந்து  நடிக்க வைத்தது  இயக்குனரின் திறமை.     

திருமதி. சுதாவின் இயக்கம் மிக பாராட்டத்தக்க ஒன்று...ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். அவரது உழைப்பு வீண் போகவில்லை, இணைய உலகமே கொண்டாடித் தீர்க்கிறது. ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வேண்டுமே என்ற ஆதங்கம் எனக்கு. ஒரு குத்து பாட்டு, டாஸ்மாக் விளம்பரப் பாடல், ரத்தம் தெறிக்கத் தெறிக்க கொ*லைவெறித் தாக்குதல், அம்பது பேரை தூக்கி வீசுற ஹீரோயிச  சண்டை, காதைப் பிளக்கும் இசை, வெளிநாட்டில் ஒரு பாடல் இதெல்லாம்  தான்  படத்தின் இலக்கணம் என தமிழ் ரசிகனின் புத்தியில் பதிந்துவிட்டது.  தற்போது பேய்களின் காலம் வேறு, அதுவும் சிறு குழந்தைகளை ஈர்பதற்காக காமெடியை கலந்துக் கட்டி பேய் பிசாசுக்களை தாராளமாக நடமாட விட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் பேய் பிசாசு என்று ஒன்றும் இல்லை எல்லாம் சும்மா லுலுலாயிக்குனுச் சொன்னா சின்னப்பசங்க எங்க கேட்குறாங்க .    சினிமா சொல்றது மூடநம்பிக்கை என்றாலும் நம்பித் தொலைக்குறாங்களே .

இறுதிச்சுற்று காக்கா முட்டை போன்ற படங்கள் குறிஞ்சிப் பூக்கள் போல... சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாடவேண்டும்.  சம்பந்தப் பட்டவர்களை பாராட்டி உற்சாகப் படுத்த வேண்டும். விளையாட்டுத்துறையில் நிலவும் அரசியலைச் சாடுகிறார்கள். இந்த படத்தில் சமூகத்திற்கான அறிவுரைகளை வசனங்களின் மூலமாகச் சொல்லவில்லை ஆனால் உணர்த்துகிறார்கள்.  கடந்த வாரம் ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை கைப்பற்றிய  பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி எத்தனை பேருக்கு தெரியும், எத்தனை பேர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டோம், என்னையும் சேர்த்துதான். இப்படித்தான் இருக்கிறது நமது சமூக அக்கறை எல்லாம். முடிந்தவரை நல்ல தமிழ் சினிமாக்களை வாழ்த்துவோம் பாராட்டுவோம்.    (சினிமாவைப் பற்றிய பதிவில் வேறெப்படி நான் சொல்ல) :-)

சுவாரசியத் துளிகள் 

ரித்திகா ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது படம் பார்த்தப்பிறகு தான் தெரிந்தது . முதலிலேயே தெரியாமல் இருந்ததும் நல்லதுதான், விமர்சனங்கள்  படிக்காமல் படம் பார்ப்பது சுவாரசியமானது என்பதை போல...  

நாயகி நாயகனை புரிந்துக் கொண்டப்பின்  இருவரும் அருகருகே இருக்கும் சந்தர்ப்பங்களில் அது குத்துச் சண்டை பயிற்சியாக இருந்தாலும் மெல்லிய நேச இழை நிழலாடியது அற்புதம். ஒளிக்காட்சி அமைப்பு மனதை ஈர்த்தது.  

குரு சிஷ்யை  காதல் எப்போதுமே தனித்துவமானது...உடல் தாண்டிய உணர்வு ரீதியிலான நேசத்தை பரிமாறியும் சமயங்களில் பரிமாற முடியாமல் தவிக்கும் தவிப்பை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர  முடியும்.  குருவின் ஒற்றைப்பார்வை ஒற்றைப்புன்னகை 'ம்' என்ற ஒற்றை வார்த்தை(?) ஏதோ ஒன்று போதும் சிஷ்யைகள்  ஜீவித்துக் கொள்ள...!  குரு தனக்குச் செய்ததற்கு நன்றி பாராட்ட, தான் எதைக் கொடுப்பது என்றெல்லாம் அதிகம் யோசிக்காமல், வெற்றி பெற்றதும் குருவையும்  தன்னையும் அழிக்க முயன்ற சந்தர்ப்பவாதி எதிரியை இரண்டு குத்தில்  தரையில் வீழ்த்தி, எதிர்வரும் அத்தனை பேரையும் மோதி ஒதுக்கித் தள்ளி , குருவிடம் நேராக  ஓடிச்சென்றுத் தன்னை முழுவதுமாய் ஒப்படைத்து சரணாகதி அடைந்த அந்த ஒரு நொடி... எனது சுவாசத்தை நான் மறந்த தருணம் அது !!!

'நீ  எனக்காகச் செய்யும் விசயமெல்லாம்  காதல் இல்லாமல் வேறென்ன?'  

விழிகளில் வழியும் எனது  கண்ணீரில் இருக்கிறது பெண்ணே உனது கேள்விக்கான எனது பதில்...!!




போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...