செவ்வாய், டிசம்பர் 27

இது நம்ம பூமி...!



முந்தைய  பதிவின் தொடர்ச்சி......விழிப்புணர்வு பேரணி முடிந்ததும் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஸ்நாக்ஸ்,  ஐஸ்க்ரீம், தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. எனது கணவர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று , பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் திரு. சங்கர்ராம் மற்றும் திரு.நாராயணன் இருவரும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை பற்றி மிக அருமையாக எடுத்துரைத்தனர். அவர்கள் சொன்ன பல விசயங்கள் மிக முக்கியமானவையாக இருந்தன...அனைவருக்கும் மனதில் பதியும் விதத்தில் இருந்தது. மாணவ மாணவர்களுக்கு எந்த விதத்தில் சொன்னால் புரியுமோ அந்த விதத்தில் குட்டி கதை, ஒரு பாடல் இவற்றுடன் சொன்னது அசத்தல்.  இறுதியில் இரு ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்திய போது பசங்க பக்கமிருந்து இருந்து பயங்கர அப்ளாஸ்...!!



பரிசு பொருட்கள் மற்றும் மரக் கன்றுகள் 

ஒவ்வொரு பள்ளியிலும் படிப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவ மாணவிகள் 102 பேருக்கு ஸ்கூல் பேக் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் சிறப்பு அழைப்பாளர் Mr. Mori (Japan) அவர்களால் கொடுக்கப்பட்டது.


                                         
மற்றும் மாணவர்களிடம் மரகன்றுகளை கொடுத்து அவரவர்  பள்ளிகளில் நடவேண்டும் என்றும், அவற்றை தண்ணீர் ஊற்றி பேணி வளர்ப்பது அவர்களின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாணவ  மாணவிகள் போட்டி போட்டு கொண்டு பெற்றுச்  சென்றார்கள்.

இறுதியாக என் கணவர் நன்றியுரை வழங்கினார். அனைவரும் எழுந்து நிற்க தேசிய கீதம் இசைக்க விழா இனிதே நிறைவு பெற்றது.

எவ்வாறு நடத்தி முடிக்க போகிறோம் என்று ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருந்தது...ஆனால் நிகழ்ச்சிகள் அனைத்தும் நாங்க நினைத்ததை விட நன்றாக நடந்து, இன்னும் பல சமூக பணிகளை செய்வதற்கு எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

மனதை கவர்ந்தவை !

பேரணியின் போது பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை குறித்து எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

=> அதை படித்து பார்த்த மாணவர்களில் சிலர் 'மேடம் எனக்கும் கொடுங்க,  வீட்டுக்கு கொண்டு போய் படிச்சி காட்டுறேன், அவங்களும் தெரிஞ்சிக்கட்டும்' சொல்லி என்னிடம் பெற்று கொண்டார்கள். அந்த வாக்கியங்களை எழுத நான் கொண்ட மெனக்கிடலின் பலன் எனக்கு கிடைத்த நிறைவு ஏற்பட்டது.

=> ஆசிரியர் பேசியபோது இறுதியாக மாணவர்களிடம் 'எல்லோருக்கும் புரிந்ததா ?' என்று கேட்கவும், மாணவர்கள் கோரசாக ஒரே குரலில் " பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் சார்" என்ற பதில் எனக்கு மிகுந்த ஆச்சர்யம் ! 'புரிந்ததா' என்று கேள்வி கேட்டால் 'புரிந்தது' என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தேன், ஆனா ஆசிரியர் சொன்னவற்றை உள்வாங்கி கொண்டு அவர்கள் பதில் அளித்த விதம் மனதை தொட்டது.  

=> மரக்கன்றுகளை கொடுத்ததும், 'இது என்ன வகை மரம்' என்று ஆர்வமாக விசாரித்து பெற்று கொண்டார்கள் !

எதையும் தெரிந்து கொள்ளவேண்டும், அதை நடைமுறையில் செயல் படுத்த வேண்டும் என்கிற அவர்களின் ஆர்வத்தை நேரில் கண்டு பிரமித்தேன். இன்றைய 'மாணவர்கள் விளையாட்டுத் தனமாக இருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தை மாற்றிகொண்டாகவேண்டும்' எனக்குள் சொல்லிகொண்டேன் !!

எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்காக மேற்கொண்ட முதல் நிகழ்வு இது...இதனை தொடர்ந்து வேறு பல திட்டங்கள், திட்ட வடிவில் இருக்கின்றன. ஒவ்வொன்றாக முறைப்படி செயல் படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன்...!!

                                              * * * * * * * * * * * * * * * * * * * *
சுற்றுச்சூழல் !!

நாளைய உலகின் அழிவிற்கு உலக வெப்பமயமாதல் முக்கிய காரணம், இதை ஏற்படுத்தியதும் மனிதன் தான்.


மனிதன் எப்போதும் தன்னை பற்றி மட்டுமே நினைப்பவனாக இருக்கிறான்...தன்னை உயர்ந்தவனாகவும் இயற்கை, பிற உயிர்கள் போன்றவற்றை தன்னை விட மிக கீழானதாகவும் எண்ணி கொண்டிருக்கிறான். அதன் காரணமாகத்தான் நாசமானது, இன்றைய சுற்றுச்சூழல்  !! 


தனக்கு எது சாதகம் என்று பார்த்தானே தவிர ஒருபோதும் இயற்கைக்கு சாதகமாக அவன் சிந்தனை, செயல்கள் இருந்ததில்லை !!?
நாம் பிறந்த போது இருந்த பூமி வேறு இப்போது இருப்பது வேறு. மூன்று புறமும் நீரால் சூழப்பட்டும் குடிநீர் பற்றாகுறை ! குடிநீருக்காக மாநிலங்களிடையே நடக்கும் பிரச்சனை நாளை இரு நாடுகளிடையே போராக மாறக்கூடும் !!

தண்ணீருக்காக பிறரை நம்பி இருக்கவேண்டிய நிலையை அரசும் மக்களும் நினைத்தால் மாற்றமுடியும். நம்மிடம் இருக்கும் நீர் நிலைகளை தூர் வாரியும், ஆழப்படுத்தியும், பல ஏரி, குளம், குட்டைகளை வெட்டியும் மழை நீரை சேமித்து வைக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்ச்சி செய்தோ அல்லது முற்றிலும் தவிர்த்தோ அதனால் ஏற்படக்கூடிய தீமையை தவிர்க்கலாம்.


ஒவ்வொரு பத்து கி.மீ சாலை விரிவாக்க பணிக்கும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை சுமார் 2 ,000 !!!!?  


சுலபமாக வெட்ட தெரிந்த மனிதனுக்கு அதை வெட்ட தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற சிந்தனை இல்லையே...?!


இது நம்ம பூமி, இனி நன்றாக பார்த்துகொள்வோம்


வாழ்க்கை ஒரு முறை...இயன்றவரை, நம்மால் இயன்ற நல்லதை செய்து நிறைவாய் வாழ்ந்து முடிப்போம்...!

                                                        * * * * * * * * * * * * * * * * * * * *
பிரியமானவர்களே !


சுற்றுச்சூழலுக்கென்று புதியதொரு தளம் !

இணையத்தின் துணை மிக அவசியம் என்பதை உணர்ந்ததின் காரணமாக சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்தான செயல்கள், திட்டங்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள தளம் ஒன்றை தொடங்கி உள்ளேன். தற்போது இதில், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் பிரபுகிருஷ்ணா(பலே பிரபு) , சூர்யபிரகாஷ் மற்றும் செல்வகுமார் அண்ணா (செல்வா ஸ்பீக்கிங்)  போன்றோரும் இணைந்து செயலாற்ற உள்ளார்கள்.

(தளத்தை பற்றி மற்றொரு பதிவில் விரிவாக பகிர்கிறேன்.)


மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் களமிறங்கி பணியாற்றுவது சுற்றுச்சூழலை பொறுத்தவரை மிக அவசியம் என நினைக்கிறேன். இப்பணியாற்ற எனக்கு கைகொடுக்க கூடிய சமூக ஆர்வம் உள்ளவர்களை தற்போது இனம் கண்டு வருகிறேன். விரைவில் வலிமையான 'பசுமைப் போராளிகள் படை' ஒன்றை திரட்டி விடலாம் என நம்புகிறேன்.

நாட்டை ஒரு வழி பண்ணாம விடகூடாது என்று முடிவே பண்ணியாச்சு :))

உங்களின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எனக்கு என்றும் வேண்டும், தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கௌசல்யா

செவ்வாய், டிசம்பர் 20

நாங்கள் நடத்திய பேரணி...!






அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதற்காகதான். ஆனால் சில கண்டுபிடிப்புகள் இன்று நம் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய அளவிலேயே இருக்கின்றன. அதில் ஒன்று தான் நம் மண்ணை, சுற்றுச்சூழலை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் என்னும் அரக்கன் ! முன்பு துணிப் பைகள் அதிலும் மஞ்சள் நிறப் பைகள் எங்கும் புழக்கத்தில் இருக்கும். இப்போதோ பல நிறத்தில் விதவிதமான பிளாஸ்டிக் பைகள் வந்துவிட்டன...

எது ஒன்றும் ஆரம்பத்தில் அறிமுகமாகும் போது அதன் பின்விளைவுகள் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை, போக போகவே அதன் தீமைகள் புரிந்து 'இப்படி ஆகிபோச்சே' என்று வருந்துகிறோம். பிளாஸ்டிக்கை பொறுத்தவரை இதனால் உருவாக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடு அதிகம், ஆனால் முறைப்படி அதன் கழிவுகளை அப்புறப்படுத்துவதில்தான் நமக்கு சரியான திட்டமிடல் இல்லை.

சுயநல கழிவுகள் !?

தன்னுடைய வீட்டின் நடுவில் சிறிய காகித குப்பை, ஏன் சிறு முடி விழுந்து கிடந்தாலும் உயிரே போற மாதிரி உடனே அப்புறபடுத்த தெரிந்த மனிதனுக்கு, பொது இடங்கள், காடுகள், நீர்நிலைகள், விளை நிலங்களிலும் யோசிக்காமல் வீசி எறியப்படும் பிளாஸ்டிக்கை பற்றிய அக்கறை ஏன் இல்லை...?!! 

சட்டத்தின் மூலமே ஒவ்வொன்றையும் சரி கட்டணும் என்றால் மனிதனுக்கு இருக்கும் சிந்திக்கும் திறன் எதற்கு ? எப்போதும் தீமைகளை பற்றி யாராவது எடுத்து சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா ? மனித குலத்திற்கு தீமை என்று தெரிந்ததும் அதை தவிர்க்க வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் திருந்துங்க,மாறுங்க என்று குரல் கொடுத்து கொண்டே இருப்பது ? 

பிளாஸ்டிக்கை ஒழிக்கணும் என்று ஒரு சாரார் குரல் கொடுத்து வந்தாலும் பலரின் செவியை இது எட்டுவதே இல்லை...ஆனால் அரசு, தொண்டு நிறுவனங்கள் மட்டும் பிளாஸ்டிக் வேண்டாம் என்று குரல் கொடுத்தால் போதுமா? தனி மனிதன் என்ன செய்கிறான்...?! தன் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்து கொண்டால் போதும் என்ற 'சுயநல கழிவுகள் கொண்டவன்' எப்போது மாறுவது...!?


தன் வீட்டு குப்பையை கூட அடுத்த வீட்டின் வாசலில் கொட்டுபவன் முதலில் மாற வேண்டும். பிளாஸ்டிக்கின் உபயோகம் முடிந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் தூக்கி வீசுபவனுக்கு இதன் தீமையை பற்றிய விழிப்புணர்வு வேண்டும். நச்சு என தெரிந்தும் 'தனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை' என்று எண்ணுவான் என்றால் அவனை போல தாய் மண்ணின் துரோகி வேறு ஒருவரும் இருக்க முடியாது.

 "நாளை இங்கே வாழப்போகும் சுயநல மனிதனின் குழந்தைகள், குடிநீர் கிடைக்காமல்,சுகாதாரம் இல்லாத,சுவாசிக்கத் திணறி, நோய்களின் கூடாரமாகி போன உடலுடன், வாழவே தகுதி இல்லாத பூமியில் உழன்று சிதைந்து சின்னாபின்னமாகி போவார்கள்" இது இதுதான் இந்த பூமித்தாயின் சாபமாக இருக்க கூடும்...!?

பொறுமையின் இலக்கணமான பூமித்தாயை இதுக்கு மேல நாம் கொடுமைபடுத்த முடியாது...!  

நம்மை பாதுகாத்து பேணி வளர்த்து கொண்டிருக்கும் இயற்கை அன்னையை போற்றுவோம்.

எல்லாம் சரிதான்,பிளாஸ்டிக் பொருளால் என்ன தீமைனு சொல்லாம இருந்தா எப்படின்னு நினைகிறீங்களா...?!அதுதான் எல்லோருக்கும் நன்றாகவே தெரியுமே ! அதான் இங்கே சொல்லல ! பொதுவா என்னதான் பேரணி, முகாம், கருத்தரங்கம்னு மாத்தி மாத்தி பண்ணினாலும் மக்களும், கடைகாரர்களும் புரிஞ்சிக்கலையேனு வருத்தம்  இருக்கு...!! (அந்த வருத்தத்தை உங்களை தவிர வேற யார்கிட்ட போய் நான் சொல்வேன் !)

* இங்க பக்கத்தில இருக்கிற கன்னியாகுமரி மக்கள் இந்த பிளாஸ்டிக் விசயத்தில் கவனமா,விழிப்புணர்வாக இருந்து கட்டுபடுத்திட்டு வர்றாங்க...கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்வமா செயல்பட்டாலும் மக்கள் ஒத்துழைக்கலைனா எந்த நல்லதையும் நடைமுறை படுத்தவே முடியாது. நெல்லையில் இருந்து அங்கே செல்பவர்கள் விட்டுட்டு போற பிளாஸ்டிக்தான் அவர்களை கொஞ்சம் இம்சை படுத்துகிறது !! 

நாங்கள் நடத்தின பேரணி !

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமையை குறித்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தவேண்டும் என்ற எனது நெடு நாள் எண்ணத்தின்படி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 13 ஆம் தேதி அன்று எங்கள் ஈஸ்ட் தொண்டு நிறுவனத்தின்(EAST TRUST) சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினோம். ஆறு பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.

                                        தினசரியில் வந்த படம் + செய்தி

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி திருமதி.ச.முத்துசெல்வி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்க, ஆணையாளர் திரு.ம. செந்தில்முருகன் முன்னிலை வகிக்க நகராட்சியின் சுகாதார அலுவலர் திரு வே.குருசாமி, மேலாளர் திரு ஆ.இராஜாமணி,கவுன்சிலர் திருமதி ஜெயலக்ஷ்மி,  ஆசிரியர்கள் வே.சங்கர்ராம் மற்றும் ச.நாராயணன், பல்வேறு  பள்ளிகளை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள்,நகராட்சி பணியாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக ஜப்பானின் ஹேப்பி சைன்ஸ் இந்தியா அசோசியேஷன் மேலாளர் Mr. யோஷிகிரோ மோரி, மற்றும் நண்பர்கள்  வந்திருந்தனர்.

விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பேனர்கள் ஏற்கனவே தயாராக வைத்திருந்தோம், வந்திருந்த மாணவர்களிடம் கொடுத்ததுடன் வேலை முடிந்ததுன்னு இருந்தேன். மாணவர்களில் ஒருவன் 'மேடம் நாங்க என்ன சொல்லி கோஷம் போட' புத்திசாலித்தனமா கேட்டான்...அப்போ வேகமா என்கிட்ட வந்த என் கணவர் 'சேர்மன் உட்பட மத்த எல்லோரும் தயார் நிலையில இருக்கிறாங்க, பேரணி முன்னாடி போகாம இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிற ?'னு கேட்க(அவர்கிட்ட எப்படி சொல்ல, 'எல்லாம் சரியா பண்ணிடுவேன் யு டோன்ட் வொர்ரி'னு தைரியம் கொடுத்தவளாச்சே !) 'இதோ வந்துடுறேன், நீங்க போங்க'னு சமாளிச்சு அனுப்பினேன்.


வாசகம் எழுதி கொடுக்க பேப்பர், பேனா வேணுமே என்ன பண்ணனு சுத்தியும் ஒரு லுக் விட்டு ஒரு ஆசிரியர் ஷர்ட் பாக்கெட்ல இருந்த பேனாவை பிடுங்காத குறையா வாங்கி,  ஆசிரியை ஒருவரிடம் பேப்பரை வாங்கி துண்டு துண்டா கிழிச்சு(?) பின்னாடி 'பிளாஸ்டிக்கை தூக்கி எறி, காகிதத்தை கையில் எடு', 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம்' , 'மரம் வளர்ப்போம்' அப்படி இப்படின்னு தோணுறதை எல்லாம் கடகடன்னு எழுதி வரிசைல கடைசில இருந்து 'யார் குரல் கம்பீரமா இருக்கும்'னு கேட்டு அவங்க கைல கொடுத்துட்டு அப்படியே முன்னாடி (ஓடி) போய் சேர்ந்தேன். இதில சில பசங்க, 'பரவாயில்லை மேடம் பேனர்ல இருக்கிறதை அப்ப அப்ப திருப்பி பார்த்து சொல்லிகிறோம்'னு ஆறுதல் வேற !! (ம்...புத்திசாலி புள்ளைங்க !)  


முதல் முறையாக நடத்துறோம்,நல்ல முறையில் நடத்தி முடிக்க வேண்டுமே என்கிற பதட்டம் உள்ளுக்குள் இருந்தாலும் பல பேரணிகளை நடத்திய அனுபவம்(!?) இருக்கிற மாதிரியே எவ்ளோ நேரம் தான் சமாளிக்கிறது...முடியல சாமி !! :) பேரணியில நடந்து போகும் போது, சேர்மன் மேடம் வழியில, கடைல தென்படுற அத்தனை பேரையும் பார்த்து 'பிளாஸ்டிக் இனி பயன்படுத்தாதிங்க சரியா' என சொல்லி வணக்கம் போட்டுட்டே வந்தாங்க...! அவங்க இந்த அளவு ஆர்வமா ஒத்துழைப்பு கொடுப்பாங்கன்னு நான் எதிர்பார்கவே இல்லை.




மாணவர்களையும் சும்மா சொல்ல கூடாது, என்னமா உற்சாகமா இருக்காங்க...?! 'பிளாஸ்டிக் ஒழிக', 'காகிதம் வாழ்க', 'மரம் வாழ்க'ன்னு எக்ஸ்ட்ரா பிட் எல்லாம் போட்டு கலக்கிட்டாங்க...! மெயின் ரோட்ல வாகனங்கள் ஓரமாக ஒதுங்கி வழிவிட கம்பீரமாக ஒவ்வொரு இடமாக பேரணி கடந்து சென்றது...இறுதியாக தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்தது.


பின்னர் திருமண மண்டபம் ஒன்றில் கருத்தரங்கம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்...அதன் விவரங்கள் அடுத்த பதிவில்... 



வெள்ளி, டிசம்பர் 9

நாங்க மாறிட்டோம்...அப்ப நீங்க ?!!







திருநெல்வேலி சாலைகளில் பறக்கும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பது யார் என்றே இனி கண்டுபிடிக்க முடியாது...ஏன்னா இப்ப எங்க தலை ஹெல்மெட்டுக்கு மாறியாச்சு...!! :) எங்கு காணினும் ஹெல்மெட் தலைகள்...பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது...

அது எப்படி மக்களுக்கு தங்கள் உயிர் மேல் அக்கறை வந்துடுசானு கேட்கபடாது...மக்கள் உயிர் மேல எங்க புது கமிஷனருக்கு அக்கறை அதிகம்...நல்ல மனிதர்.புதிதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக திரு. கருணாசாகர் அவர்கள் பதவி ஏற்றதும் போட்ட முக்கியமான உத்தரவே ஹெல்மெட் அணிவது இனி கட்டாயம் என்பதுதான். 


ஒரு வாரம் அவகாசம் கொடுத்தார். எத்தனை நாள் அவகாசம் கொடுத்தாலும் நமக்கு கடைசி நாள்ல முட்டி மோதி கூட்டத்தோட கூட்டமா எதையும் வாங்குறதுதான் பழக்கம்...! நாம தான் அப்படினா ஊரே அப்படிதான் இருக்கு...ஹெல்மெட் வாங்குற இடத்தில செம கூட்டம்...! 

பழசு ஒன்னு உபயோகம்(?) இல்லாம ஸ்டோர் ரூமில இருக்கு, என்ன கொஞ்சம் தூசி அடைஞ்சி போய் பார்க்க ஒரு மாதிரியா இருந்தாலும் 'பரவாயில்லை அதையே தூசி தட்டி போட்டுகோங்க' சொன்னா இவர் கேட்டாதானே...(சிக்கனத்தில  பெண்களை அடிச்சிக்கவே முடியாது ஆமாம் !)

ம்...நான் சொல்றத கேட்ட மாதிரி தெரியல...!! ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க என்னவர் செம புத்திசாலி...நெல்லையில் இப்ப நம்பர் ஒன் பிசினஸ் எது என்றால் ஹெல்மெட் தான்...பிளாட்பாரம், திருமண மண்டபம் என்று குவிச்சு போட்டு விக்கிறாங்க...விலை இஷ்டம்போல சொல்றாங்க...ஆளுக்கு ஏத்தமாதிரி 600 ல இருந்து 1,500 , 1,800, 2000௦ என்று விக்கிறாங்க...மக்களும் வேற வழி இல்லாம (புலம்பிட்டே தான்)வாங்குறாங்க...! 

ஆனா பக்கத்து மாவட்டத்துக்கு ஒரு வேலையா போன கணவர் அங்கேயே  ஹெல்மெட் வாங்கிவிட்டார். விலை 500 மட்டுமே...நெல்லையில் தான் அதிக விலை, அடுத்த மாவட்டத்தில கம்மியா இருக்கும்னு பிளான் பண்ணி வாங்கின என் கணவர் புத்திசாலிதான்...ஆனா வாங்கிட்டு வந்து இதை சொன்னதும் எனக்கு செம கோபம்...நாம சரியாதானே பண்ணி இருக்கிறோம் எதுக்கு இப்படி முறைக்கிறானு அவருக்கு ஒரே யோசனை ! பின்ன என்னங்க வாங்கினது தான் வாங்கினார், கூட நாலு வாங்கிட்டு வந்திருந்தா அதை அக்கம் பக்கத்துல கொடுத்து இரண்டு மடங்கு அதிக பணம் பார்த்திருப்பேனே...! (என்னதான் சொல்லுங்க இந்த ஆண்களுக்கு சாமார்த்தியம் போதவே போதாது !)


* * * * * * * * * * * * * * * 


என்னங்க படிச்சாச்சா ? இனி நேரா விசயத்துக்கு வரேன்...(அப்ப இப்ப வரை சொன்னது !!?) மேலே சொன்னவை நகைசுவை மாதிரி சொன்னாலும் பலபேரின் பேச்சுக்கள் இப்படிதான் இருக்கிறது...எது எதுக்கோ அனாவசியமா பணம் செலவு செய்வது ஆனா உயிரின் பாதுகாப்பு பற்றிய இந்த விசயத்தில ரொம்ப யோசிச்சு மிச்சம் பிடிக்கிறது...?!! 


தலை கவசம் அவசியம் என்று அரசு சொல்வது நமது நம்மைக்காகத்தான் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். வீட்டில் கிடக்கும் பழையதை தூசி தட்டி போடுவது, பிளாட்பாரத்தில் நூறு, இருநூறுக்கு மலிவாக  கிடைக்கிறதே என்று வாங்கி சாமாளிப்பதும் புத்திசாலித்தனம் அல்லவே அல்ல...


ஹெல்மெட் பற்றிய சில தகவல்கள் 




பைபர் கிளாஸ், பைண்டர் ரெசின், யூ.வி.ஸ்டேபிலைசெர் இவற்றின் உதவியுடன் பல அடுக்குகளாக கொண்டு தயாரிக்கபடுகிறது.இதில் ஒவ்வொன்றும் பல தரத்தில் இருக்கிறது. நல்ல தரமான பொருட்கள்  பயன்படுத்தப்பட்டு தயாரிக்க பட்டதை வாங்கவேண்டும். இதை நம்மால் அறிந்து கொள்ள இயலாது என்கிற போது ஒரே வழி சிறந்த கம்பெனிகளின் நேரடி விற்பனை நிலையங்களையே அணுகி வாங்குவதுதான். சாலை ஓரங்களில் விற்கபடுபவை எந்த அளவிற்கு தரமானவை என்று சொல்ல முடியாது. 


* எடை 800 கிராமுக்கும் 2  கிலோவுக்கும் இடைப்பட்டதாக இருக்கும் தரமானவைகள்.


* உள்ளே இருக்கும் துணியை விலக்கி பார்த்தால் கரடு முரடாகவோ, மணல் துகள்கள் இருந்தாலோ வாங்காதீர்கள். இது போலி.


*எடை அதிகமுள்ள ஹெல்மெட் தவிர்த்துவிடுங்கள்...இஞ்ஜக்சன் மோல்டிங் வகையில் கிடைக்கிறது...விலை அதிகம், ஆனால் அணிந்திருப்பது அவ்வளவாக சுமையாக தெரியாது. 


தரமில்லாத ஹெல்மெட் போட்டும் பிரயோசனம் இல்லை, விபத்து நடக்கும்போது அது உடைந்து விட்டால் தலைக்கும் சேர்ந்து அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே விலையை பார்க்காமல் தரத்தை பார்த்து வாங்குங்கள். நம் விலைமதிப்பற்ற உயிர்க்கு முன்னால் வெறும் பணம் பெரிதில்லை. 


ஏன் அணியவேண்டும்?! 

சாலை விபத்துகளில் அதிகமாக நடப்பது இருசக்கரவாகனத்தால் என்கின்றனர். எனவே அவசியம் ஹெல்மெட் அணிவது உயிரிழப்பை தடுக்கும். 


ஹெல்மெட் அணிவதினால் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது என்பது எல்லாம் சும்மா என்று ஆய்வுகள் சொல்கின்றன. எனவே நம்பாதிர்கள். உண்மையில் இதை அணிவதனால் தலைக்கு பாதுக்காப்பு என்பதுடன் மறைமுகமாக வேறு பல நன்மைகள் இருக்கின்றன என்பதை யோசித்து பார்த்தால் புரியும். 


* பிற வாகனங்களின் இருந்து வரும் காதை கிழிக்கும் ஹார்ன் சப்தம், வாகனங்களின் இரைசல் ஒலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.  


* மார்கழி மாத குளிரில் இருந்து ஓரளவு தப்பிக்கும் காது.


* தூசிகள், மாலை இரவு நேரங்களில் சாலையில் எதிர்வரும் பூச்சிகளில் இருந்து கண்ணையும் காதையும் காத்துக்கொள்ளலாம். 


* மிக முக்கியமா செல்போன் அடிச்சா கேட்காது, வைபிரேசன் மூலம் தெரிந்தாலும் வண்டி ஓட்டிகொண்டு போகும் போது பேச முடியாது !! (அதுதான் நாங்க ஹெட் போன் போட்டுப்போமே என்கிறீர்களா ! ம்...விதி யாரை விட்டது!) 


தெருவுக்கு தெரு இங்கே போலிஸ் நிற்கிறார்கள் போடாதவர்களை பிடித்து ஸ்பாட் பைன் போடுகிறார்கள், வழக்கும் பதிவு செய்யபடுகிறது. கமிஷனர் உத்தரவு போட்டதற்காக அணியவேண்டும் என்பதை விட நம் உயிர் முக்கியம் என்பதை உணர்ந்து அணியவேண்டும்...நெல்லையில் தானே இந்த உத்தரவு கடுமையாக்கபட்டிருக்கிறது. நமக்கு இல்லையே என்று நினைக்காமல் ஹெல்மெட் வாங்கி அணியுங்கள்...அனைத்து ஊர்களுக்கும்  உத்தரவு போட பட்டு இருந்தாலும் இன்னும் சரி வர கடைபிடிக்க படவில்லை. 


சிலர் சொல்வாங்க இதை போட்டுட்டு வெயில்ல போக முடியல, வியர்வையால் பெரும் சிரமமாக இருக்கிறது என்று. சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள்...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!

புரிந்து கொண்டு செயல் படுங்கள்...பெறுவதற்க்கறிய இந்த மானிட பிறப்பை சரியாக வாழ்ந்து முடிக்கும் முன்னே, அனாவசியமாக சாலையோரத்தில் உயிரை விட்டு விடகூடாது...


ஹெல்மெட் அணிந்து பயணியுங்கள்...வீட்டில் உங்கள் மனைவியும் குழந்தைகளும் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் என்றும் எப்போதும்...!!


அரசு தொடர்ந்து முழு உத்வேகத்துடன் ஹெல்மெட் அணிவதை கட்டாயம் செயல்படுத்தபடவேண்டும்...உத்தரவிடும் போது இருக்கும் கண்டிப்பு,அதே வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும்...


நெல்லையில் இதை அருமையாக நடைமுறைபடுத்தி கொண்டிருக்கும் எங்கள் கமிஷனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...! 

                                  தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! 

                                                              * * * * * * * * * 





ஹெல்மெட் பற்றிய தகவல்கள், படங்கள் - நன்றி கூகுள் 

புதன், டிசம்பர் 7

ஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'



இதுவரை கட்டுரைப்  போல பதிவுகள் எழுதி இருந்தாலும் கதை எழுதியதில்லை. (எழுதத் தெரியவில்லை என்பதே உண்மை) ஆனால் என் மனதை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப்  பற்றி எழுதவேண்டுமென நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் இருந்தது. தவிர இதை எழுதுவதற்கு  ஒரு முக்கிய காரணம் அவள் என் நெருங்கிய சினேகிதி...! தனது மனக்  குமுறல்களை டைரியிலும்  என்னிடமும் தவறாதுக்  கொட்டிவிடுபவள்...அனைத்தையும் சேர்த்து ஒரு கதையாக(?) என் தோழியின் சுய சரிதையை இங்கே பதிகிறேன் அவளின் அனுமதியுடன்...(அவரது வேண்டுகோளுக்கிணங்க பெயரும் ஊரும் மட்டும் தவிர்க்கப்படுகிறது)

முன் அறிமுகம் !

சந்தோசமான வாழ்க்கை எல்லோருக்கும்  அமைந்துவிடுவதில்லை, பிரச்சனைகளின் நடுவில் வாழ்பவர்களில் ஒரு சிலர் ஒரு கட்டத்தில் மீண்டு எழுந்துவிடுவார்கள் ஒரு சிலரால் முடிவதில்லை. அந்த ஒரு சிலரில் இவளும்  ஒருத்தி. சிறுவயதில் மனதைப்  பாதித்த சம்பவங்கள் திருமணம் முடிந்தபின்னரும் ஏன் வயதான பின்னர் கூட மனதை அழுந்த செய்யும்.அதிலும் இந்த பெண்ணைப்  பொறுத்தவரை சிறு வயதில் மனதை பாதித்தவைகள் திருமணத்திற்கு பின்னரும் தொடருவது வேதனை ! அன்பான கணவன் , குழந்தைகள், செல்வச்செழிப்பான வாழ்வு என எல்லாம் இருந்தும் எதுவுமே தனதில்லை என்பதைப்  போல எந்த வித பிடிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.

யார் இவள் ?

சிறு வயதில் இருந்து எனக்கு அவளைத்  தெரியும்...ஒருவர் குடும்பத்தை பற்றி மற்றொருவருக்கு நன்கு பரிட்சயம் உண்டு.நடுவில் சில வருடங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக அவளது சொந்த ஊரில் இருக்கும் ஹாஸ்டலில் தங்கி தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தாள்...பின் கல்லூரி வாழ்வின் போது மீண்டும் இருவரும் சந்திக்க நேர்ந்தது...இன்று வரை தொடருகிறது எங்களின் நட்பு. 

தாம்பத்தியம் தொடரை நான் எழுத மிக முக்கிய காரணம் என் தோழி தான். இப்போது உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கலாம், அவள் வாழ்வில் எதனால் பிரச்னை என்று ?! ஆம். அவளது பெற்றோரின் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சண்டைகள் ! இது ஒரு பக்கம் என்றால் இவற்றின் நடுவே வேறு சில இம்சைகள்(?) இவையும் சேர்ந்துக்  கொண்டு இவள் மனதை அதிகம் பாதித்தன, கண்டபடி யோசிக்க வைத்தன...

சில அனுபவங்கள்  

தனது பத்தாவது வயதில் திருமணமான ஒரு ஆணின் பாலியல் ரீதியிலான தவறானத்  தொடுதல்...ஹாஸ்டலில் பிளஸ் 1 படித்த போது லெஸ்பியன் பற்றிய அர்த்தம் புரியாமல் அதைப்  பற்றி அறிய நேரிட்ட சூழல்...இப்படி வயதிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் கிடைத்தன சில கசப்பான அனுபவங்கள் !

இதற்கிடையில் இவளது வாழ்வில் அழகான காதல் ஒன்றும் வந்து(!) போனது(?) ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாமல் ஆறு வருடமாக வளர்த்த காதல், பிறகு ஒருநாள் முதல் முறையாக இருவரும் நேரில் சந்தித்து தங்கள் விருப்பங்களை வெளியிட்ட அக்கணத்திலேயே அந்த அழகான காதல் முடிவுக்கும் வந்து விட்டது ?!!

ஆமாம். காதலைச்  சொன்ன அத்தருணத்திலேயே இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட்டனர்...அதன் பின் இந்த நிமிடம் வரை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதே இல்லை...ஆனால் அந்த காதல் இன்னும் ஆத்மார்த்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது இருவரின் நெஞ்சிலும் என்பதை அறிவேன்...!

இப்படி அவளது பல வித்தியாசமான சம்பவங்களை எவ்வித ஜோடனையும் இன்றி அப்படியே பதிய வைக்க எண்ணுகிறேன்.

'இவள்' உங்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்...ஆனால் நிச்சயம் உங்கள் மனதைப்  பாதிப்பாள்...'இவள்' மட்டும் என்று இல்லை இவளைப்  போன்று பலர் நம்மிடையே இருக்கிறார்கள், நமக்கு  தெரிய வாய்ப்பில்லை...! 'இவள்' ஒருவேளை நம் முன்னே நடமாடி கொண்டிருக்கலாம்,நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம், பழகிக்  கொண்டிருக்கலாம்...ஒரு தோழியாக, சகோதரியாக...

ரகசியமாக தனக்குள்ளே இன்னொரு(?)வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவளைப்  போன்றோர் தங்களது சுயத்தை, மனதைத்  தாங்களாக எங்கும் வெளிப் படுத்த விரும்ப மாட்டார்கள்...ஒருவேளை இவளைப்  போன்ற சாயலில் யாராவது உங்களிடம் பேசும்போது ஒரு பலவீனமான கணத்தில் சில வேதனைகளைக்  கொட்டி இருக்கலாம், அதை அசட்டைச்  செய்யாமல் ஒரு ஆறுதல் வார்த்தைச்  சொல்லி ஒரு சின்னப்  புன்னகையைப்  பரிசளியுங்கள்...அவளது கனவுத் தோட்டத்தில் பூக்கும் பூக்களும் மணம் வீசிவிட்டுப்  போகட்டும்...!!

இந்த 'இவள்' பிடித்தால் தொடர்ந்துப்  படியுங்கள், பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படியுங்கள்...ஒரு பெண்ணின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ள...

முன் அறிமுகம் ஒரு வழியாக முடிந்து விட்டது. :) என் தோழியே தனது கதையைச்  சொல்வதாக எழுதி இருக்கிறேன்...உங்களுடன் இனி அவள் பேசுவாள்...நான் விடைப் பெறுகிறேன்...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


இவள்...!

'Born with a Silver spoon in my mouth' என்று சொல்கிற மாதிரியான குடும்பத்தில் இரண்டாவது பெண்ணாகப்  பிறந்தேன். குழந்தையில் குண்டா(!) அழகா இருப்பேனாம், இப்பவும் போட்டோவுலப்   பார்த்தா எனக்கே பெருமை தாளாது...என்னைத்  தூக்கி வச்சுகிறதுக்குனே ரசிகர்கள் கூட்டம் அலையுமாம்...!


ஐந்து வயது வரை மிகச்  செல்லமாக வளர்ந்தேன்...வளர்க்கப்பட்டேன்...!அதற்கு பின் விதி ஒரு ஜோசியக்காரன் வடிவத்தில்  வந்தது...எதிர்காலத்தில எனக்கும் அம்மாவுக்கும் ஒத்தே போகாதாம், எப்பவும் எதிர்த்து பேசுவேனாம்...நடப்பேனாம்...வீட்டிற்கு அடங்க மாட்டேனாம்...!இப்படி வாய்க்கு வந்ததை உளறிக்  கொட்டி இருக்கிறான்...என் மேல அவனுக்கு என்ன கோபமோத்  தெரியல...?! நான்  வளரும் சூழலைப்  பார்க்கிற யாரும் ஈசியா சொல்லிடலாம், இப்படி அதிகச்  செல்லமா வளர்த்தாப்  பின்னாடிச்  சொன்ன பேச்சைக்  கேட்க மாட்டானு...! ஆனால் என் அம்மா புதுசா அவன் எதையோ சொல்லிட்ட மாதிரி அதுக்கு அப்புறமா என்னை கொஞ்சம் யோசனையோடயே   டீல் பண்ணத்  தொடங்கிட்டாங்க...! 

மத்தபடி என்னைக்  கவனிக்கிற விதத்தில எந்த குறையும் இருக்காது... கலர்கலரா கவுன் அதே நிறத்தில பிளாஸ்டிக் கம்மல், வளையல், பொட்டு, ரிப்பன் என்று பார்த்து பார்த்து வாங்கி அலங்கரிப்பாங்க...பள்ளி விழாக்களில் நான்தான் ஸ்பெஷல்...எல்லாம் அம்மாவின் ட்ரைனிங் !! 

பள்ளியில் படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவிற்கு அப்போதைய கவர்னர் பட்வாரி அவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார். அவரை வரவேற்கும் விதமான  பாடல் ஒன்றுக்கு நானும் இன்னும் மூன்று பேரும் நடனம் ஆட ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம், விழாவிற்கு முதல் நாள் காலையில் என் காலில் கொலுசு போடும் இடத்தில் எதனாலோ ஒரு பெரியக்  கட்டி வந்துவிட்டது...வலி இல்லை ஆனா பார்க்க ஒரு மாதிரியாக  இருந்தது.

முட்டி வரை உள்ள கவுன் தைச்சுத்  தயாரா இருக்கு, ஆனா என் கால் இப்படி இருக்கிறதால கவுன் மாடல் டிரஸ் செட் ஆகாது, என்ன பண்ணலாம் என யோசனையில் இருக்கும் போது என் அம்மா உடனே எல்லோருக்கும் மேக்ஸி (நைட்டி மாதிரியான கால்வரை உள்ள மாடல் டிரஸ்)  போடச்  சொல்லிடலாம் என சொல்லவும், எங்க ஆசிரியை கொஞ்சம் யோசிச்சாங்க... உடனே என் அம்மா "நானே நாலு பேருக்கும் மொத்தமா வாங்கிக்  கொடுத்துவிடுகிறேன்" அப்படின்னு சொல்லிடாங்க...அப்பவே கடைக்கு போய், நல்லா அழகா பிரில் வச்ச வேற வேற கலர்ல ஒரே மாதிரியான மேக்ஸி வாங்கி கொடுத்தாங்க...அதை போட்டுகிட்டுச்  சிறப்பா ஆடி முடிச்சோம்.

இப்படி என்னை அருமையாக்  கவனித்துக்  கொண்டாலும் அம்மாவின் மனதோரத்தில் சிறு கசப்பு இருந்துகொண்டே வந்திருக்கிறது...அதை நானே உணர்ந்துக்  கொள்ள கூடிய சூழல் ஒன்றும் வந்தது...


பொதுவாக விடுமுறை நாள் அன்று சோம்பலாய் விடியும் மாணவ மாணவர்களின் பொழுதுகள் !

அப்படிதான் எனக்கும் ஒருநாள் காலைப்  பொழுது விடிந்தது...கலைந்துக்  கிடந்த முடிகளை ஒன்று சேர்த்து கிளிப் போட்டு, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி சோம்பல் முறித்துக்கொண்டே மெல்ல எழுந்தேன்...இன்னும் சற்று நேரத்தில் என் தலையில் இருந்து ரத்தம் கொப்பளிக்கப்  போகிறது என தெரியாமல்...!? 

                                                                   * * * * ** * * * *

'இவள்' உங்களுடன் தொடர்ந்து பேசுவாள்...




படங்கள்- நன்றி கூகுள் 




திங்கள், டிசம்பர் 5

இவர்கள் வாழ்வில் வேண்டும்...நல்ல மாற்றம் !

இவர்கள் ?!

நம் சமூகத்தில் தான் இவர்களும் இருக்கிறார்கள், நமக்கு தெரிந்தவர்கள் தான்...நம்மை சேர்ந்தவர்கள் தான், ஆனால் வேண்டாதவர்கள் போல தனித்தே பார்க்கபடுகிறார்கள். இவர்களின் பெயர் ஊனமுற்றவர்கள் ! தோற்றத்தில் முழு மனிதனாக காட்சியளித்தும் மனதில் ஊனமுடன் அலைகிறார்கள் பலர்...! ஒருத்தரை எந்த விதத்தில் எல்லாம் காயப்படுத்தலாம், வார்த்தையால் எப்படி சிதைக்கலாம், வதைக்கலாம் என்ற எண்ணத்துடன் உலவும் மனிதர்கள், நெருங்கிய நட்பிடம் கூட துரோகம் இழைக்கும்  குறுகிய புத்தி கொண்ட மனிதர்கள், இவர்களே உண்மையில் ஊனமுற்றவர்கள் !!

'ஊனமுற்றவர்கள்' என்று பெயரில் கூட ஊனம் இருக்கக்கூடாது என 'மாற்றுத் திறனாளிகள்' என்று பெயரை மாற்றினார்கள்...ஆனால் பெயரை மாற்றினால் மட்டும் போதுமா...இவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டாமா...?! அதற்காக அரசோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ என்னவெல்லாம் செய்கின்றன, அவை உண்மையில் இவர்களுக்கு பயன் கொடுக்கிறதா என்பதை பற்றி நாம் யோசித்திருக்கிறோமா ?! 

ஒரே டிக், 'ஓஹோ'ன்னு வாழ்க்கை... சாத்தியமா ?!

இதில் அதிகம் யோசிக்க என்ன இருக்கிறது, அதுதான் எந்த ஒரு வேலைக்கான விண்ணப்பத்திலும் இவர்களுக்கு என்று ஒரு கட்டம் ஒதுக்க பட்டு இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? 'அதில் பேனாவால் ஒரு டிக் செய்து விட்டால் போதும் இவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் கிடைத்துவிடும்' என்று உங்களை போலத்தான் நானும் நினைத்துகொண்டிருந்தேன்...ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறதே !

சிறப்பு சலுகைகள் முன்னுரிமைகள் என்பது எல்லாம் சிரமபடாமல் உடனே கிடைத்து விடுவதில்லை...இதில் நிறைய முரண்பாடுகள், வேறுபாடுகள் , வேதனைகள் இருக்கின்றன... சலுகை பெற வேண்டி அரசு அலுவலக வாசலில் காத்து கிடக்கும்(?) இவர்களை போன்ற ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் வேதனை சம்பவங்கள் இருக்கின்றன...


சமீபத்தில் இளைஞன் ஒருவனிடம் பேசிகொண்டிருந்த போது,' சே...நல்லா படிச்சும் வேலைக்கு நாயா அலையறத பார்க்கும் போது ஒரு மாற்றுத்திறனாளியாக பிறந்திருக்கலாம்(?), அவங்களுக்கு தான் எவ்வளவு சலுகைகள்...எங்கே போனாலும் முன்னுரிமைதான். ம்...கொடுத்து வச்சவங்க' என்றார். நானும் வந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல், 'அப்ப ஒன்னு பண்ணுங்க, ஒரு காலை வெட்டிகோங்க, உடனே அரசு வேலை கிடைச்சிடும்' என்றேன் மெதுவாக. 'ஐயோ அது எப்படி முடியும், ஒரு காலை வச்சி எப்படி நடக்க, சிரமமா இருக்குமே' என சொல்ல 'இதுதான், இந்த வலி,சிரமத்திற்கு  தான் சலுகைகள் கொடுக்கபடுகிறது, ஒரு பத்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு நடந்து பாருங்க, அப்ப புரியும் கண் தெரியாதோரின் வேதனை!?' என சொல்லி அப்போதைக்கு அப்பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தேன். ஆனால் யோசித்துப்பார்க்கும் போது,

இவரை போன்றுதான் நம்மில் பலரும் இருக்கிறோம்.

தவிரவும் இந்த வலிக்கு தான் அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சலுகைகள், உதவிகள் செய்கின்றனவா...?!

உதவி என்பது எதற்காக...?!

உதவி என்பது சம்பந்தப்பட்டவர்களின் மனம், உடல் வலியை குறைப்பதற்காக, நீக்குவதற்காக, ஆறுதல் அளிப்பதற்காக, அவர்களின் கண்ணீரை முழுதாக துடைப்பதற்காக இருக்கவேண்டும். மாறாக இத்தனை பேருக்கு இத்தனை எண்ணிக்கையில், இவற்றை கொடுத்தோம் என்று கணக்கு காட்டுவதற்காக, பெருமைப்பட்டு கொள்வதற்காக என்பதை போல இருக்ககூடாது...

முன்னுரிமை என்று போட்டிருக்கும் வேலை வாய்ப்புகளை  பொறுத்தவரை போனதும் அப்படியே வேலையை தூக்கி கையில் கொடுத்துவிட மாட்டார்கள் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல இவர்கள் எடுக்கும் பிரயாசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வலிகள் கொடுக்க கூடியவை, ரத்த கண்ணீரை வரவழைப்பவை.

நமது அரசு செய்வனவற்றில் சில...

* இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 41 மற்றும் 46 ஆவது பிரிவுகள் ஊனமுற்ற சமூதாயத்தின் நிலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. 

* குரூப் சி, குரூப் டி தேர்வுகளில் 3  சதவீதம் வாய்ப்பு.

* வயது வரம்பில் பத்து ஆண்டுகள் சலுகை.      

* மத்திய பெட்ரோலிய அமைச்சகம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின்  டீலர்ஷிப்பு ஏஜென்சிகளில் 15 சதவீதம்.   

* சுய தொழில் செய்வதற்கு 6,500 வரை எந்த பிணையும் இல்லாமல் 4 % வட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனுதவி.

* செயற்கை உறுப்புகள் இலவசமாக.

* பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய சலுகை.

இவை எல்லாம் முறைப்படி கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு அடையாள அட்டை வேண்டும்.

அடையாள அட்டை

ஒவ்வொரு மாவட்ட மறுவாழ்வு மையங்களும் இதனை வழங்குகின்றன. இருப்பினும் இன்னும் இந்த அடையாள அட்டை சரி வர கிடைக்க பெறாமல் அவதி படுபவர்கள் பலர். இந்த அட்டையை வெகு சுலபமாக வாங்கி விட முடியாது...பல சான்றிதல்களை ஆதாரமாக காண்பிக்க வேண்டும். அந்த சான்றிதல்கள் வாங்க முதலில் நடையா நடக்கணும்...!!? அரசு கேட்கும் ஒரு சில ஆவணங்கள் இல்லை என்று பல முறை இவர்கள் திருப்பி அனுப்ப படுகின்றனர். இங்கே இந்த சான்றிதல், அங்கே அந்த சான்றிதல் வாங்கி வா என அலைகழிக்க படுகின்றனர்...சாதாரணமான மக்களுக்கு இதை போன்ற நிலை என்றால் கூட ஓரளவிற்கு பொறுத்து கொள்ளலாம், ஆனால் வலியுடன் இருக்கும் இவர்களை அலைகழிப்பது எந்த விதத்தில் நியாயம்...?!



அடையாள அட்டை வேண்டும் என்று விண்ணப்பிக்க இரு கால்களையும் பாதிக்கு மேல இழந்து தவழ்ந்து வரும் ஒருவரிடம், 'நீ போய் நடக்க இயலாதவன் என்று மருத்துவரிடம் சான்றிதல் வாங்கிவா' என்று திருப்பி அனுப்பி வைக்க படுகிறார் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்...அவர் வரும் கோலத்தை பார்த்தாலே தெரியும், நடக்க இயலாதவர் என்று, இதை நிரூபிக்க அவர் இப்படியே தவழ்ந்து சென்று மருத்துவரை பார்த்து சான்றிதல் வாங்க வேண்டுமா...!!?

இதற்காக ஒரு மருத்துவரை அங்கேயே நியமிக்கலாம் அல்லது மாற்றுதிறனாளிகள் இருக்கும் இடத்திற்கு(வீட்டிற்கு) அரசு பணியாளர் ஒருவர் சென்று இதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்கலாம்...சம்பந்தப்பட்டவர்கள் இதை பற்றி யோசிக்கலாமே...!!


இதை பற்றி நண்பர் ஒருவருடன் பேசிகொண்டிருந்த போது 'ஏன் இவர்களுக்கு நாம் உதவ கூடாது' என்று தோணியது...உடனே இதை குறித்து நெல்லையில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது...

"நீங்கள் கேட்கும் ஒவ்வொருவர் பற்றிய அனைத்து விவரங்களையும் எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் நான் சேகரித்து கொண்டு வந்து தருவதின் மூலம் மாற்றுதிறனாளிகள் அலைச்சல் குறையுமே, எனக்கு இதற்க்கு நீங்கள் அனுமதிப்பீர்களா" என்று வினவினேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் "நாங்களே பார்த்து கொள்கிறோம், மிக்க நன்றி...!" என்பதுதான்.

செயற்கை உறுப்புகள்

அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாற்றுத்திரனாளிகளுக்கு செயற்கை கை கால்களை வழங்கி வருகிறார்கள், இது தான் நமக்கு தெரியும், இதன் பின்னால் உண்மையில் இருப்பது வலி மட்டுமே. ஆம் இவர்களுக்கு கொடுக்ககூடியது  கனம் கூடியதாகவும், உடலுடன் இணைக்கும் இடத்தில் வலி தருவதாகவும் இருக்கிறது. சமயங்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு புண்ணாகி விட கூடும். சுலபத்தில் அசைக்கவும் இயலாது. இதன் விலை நாலாயிரம். ஆனால் இலகு ரகத்தில் செய்யப்படும்  காலிபர் செயற்கை உறுப்புகள் மெல்லியதாக கனம் இன்றி அணிந்திருப்பதே தெரியாத அளவிற்கு இருக்கும். ஆனால் விலை அதிகம்.

வலியை அதிகரிக்ககூடிய ஒன்றை அதிக எண்ணிக்கையில் கொடுப்பதை விட இலகு ரக காலிபர் உறுப்புகளை சிலருக்கு கொடுத்தாலும் வாழ்வின் இறுதி வரை நிம்மதியாக வாழ்வார்கள். கவனிக்குமா அரசும் பிற தொண்டு நிறுவனங்களும்...?!!

அரசே தயாரித்து இலவசமாக அல்லது சலுகை விலையில் இதனை வழங்கலாம்...மாற்றுத்திரனாளிகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். நமது இன்றைய அரசு தாயுள்ளத்துடன் இந்த உதவியை செய்தால் இவர்களின் வாழ்விலும் வெளிச்சம் கிடைக்கும், இவர்களின் வெள்ளை உள்ளம் வாழ்த்தும்...! அவர்களும் வாழ்வார்கள்...!

கேள்வி பட்டேனுங்க...!

ஒரு பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனம் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்களை வழங்கியது.

பிரமாதமாய் போஸ் கொடுத்து போட்டோ எடுத்தாங்க...! அங்கே கொடுக்கப்பட்டது கனம் கூடிய சாதாரண உறுப்புகள் !! 250 பேருக்கு செயற்கை உறுப்புகள் கொடுத்தால் ஆறு பாய்ண்ட்ஸ் கிடைக்குமாம் அது கிடைச்சாத்தான் குறிப்பிட்ட அந்த உயர் பதவிக்கு போக முடியுமாம். 'அதனால் எனக்கு எண்ணிக்கை தான் முக்கியம், அதிக விலையில் கொஞ்ச பேருக்கு கொடுப்பதைவிட (குறைந்த விலையில்) அதிக பேருக்கு கொடுத்ததாக கணக்கு காட்டுவது தான் எனக்கு நல்லது' என்றாராம் அந்த பொது நல தொண்டர் (?!)

சேவை என்பது தங்களின் அந்தஸ்து உயரும், வசதி பெருகும், புகழ் கிடைக்கும் என்ற சுயநலத்துக்காக என்றால் என்ன மனிதர்கள் இவர்கள்...?!

என்னவெல்லாம் செய்யலாம்... 

மொத்த மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை 10 கோடி !! தமிழ்நாட்டில் 2 இலட்சம் பேர் இருக்கிறார்கள்...!! 

இத்தனை பேருக்கு இந்தியா முழுவதும் வெறும் 25 அலுவலங்கள், 18 தொழிற்பயிற்சி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன, இவை மட்டும் போதாது...இந்த அமைப்புகள் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழ்பவர்க்கே அதிகம் பயன்படுகிறது...உதவிக்காக காத்திருப்பவர்கள் கிராமப்புறங்களில் தான் அதிகம் இருக்கிறார்கள்...அனைத்து உதவிகளும் அவர்களுக்கும் போய் சேர வேண்டும். 

* முதலில் இவர்களை பரிதாபமாக பார்ப்பதை நாம் நிறுத்தவேண்டும். அவர்களுக்கு தேவை நமது பரிதாபமோ கண்ணீரோ அல்ல, அவர்களின் தோளை  தட்டி கொடுக்க கூடிய ஒரு கரம் !

* அவர்கள் இழப்பினை நம்மால் ஈடு செய்ய முடியாது ஆனால் எதனை இழந்தவர்கள் என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் மட்டும் வேலை வாய்ப்பினை கொடுக்கலாம். 

* இவர்களுக்கு தேவை இலவசம் அல்ல !அரசு இவர்களை கவனித்துக்கொள்ளும் என்று எண்ணாமல் சுய தொழில் செய்பவர்கள் மற்றும் பிற அனைத்து நிறுவனங்களும் இவர்களை (தகுந்த)வேலையில் அமர்த்தலாம்.

* நாம் கண் தானம் செய்வதின் மூலம் பார்வை இழந்தவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம். இறந்த பின்னும் நம் கண்கள் பார்க்குமே, இவர்களின் மூலம்...!

இவர்களும் நம்மவர்களே !!


மாற்றுத்திறனாளிகளிடம் ஏராளமான திறமைகள் இருக்கின்றன. செயலாற்றும் புத்திசாலித்தனம் அதிகம் உடையவர்கள்., அனைத்தையும் விட உடல்  குறைவற்ற நம்மை விட அதிக தன்னம்பிக்கை உடையவர்கள்... உடனே எதற்கும் சோர்ந்து போகாமல் நேர்மையாக சிந்தித்து செயலாற்ற கூடியவர்கள். இவர்களின் உழைக்கும் திறனுக்கு முன் நாமெல்லாம் மிக சாதாரணம்.  அவர்களால் எதை செய்ய முடியுமோ அந்த வேலையை அவர்களிடம் கொடுத்தால் விரைந்து செயலாற்றி முடிப்பார்கள். இவர்களை நம்மை விட்டு தனியே பிரித்து பார்க்காமல் நம் தோளோடு தோள் சேர்த்து அவர்களின் கை கோர்த்து நடக்க வேண்டும். அப்போதுதான் நம்மிடையே இருக்கும் கர்வம்,சுயநலம், தன்னிரக்கம், துரோக சிந்தனை போன்ற அழுக்குகள் கழுவப்படும்.

நம் போன்றோர் செருப்பு போட்டு கொண்டு போகும் 'பொது கழிப்பறை' போன்ற இடங்களுக்கு இவர்களை போன்ற ஒரு சிலர் தவழ்ந்து போவதை பார்க்கும் போது வேதனை படாமல் இருக்க இயலவில்லை...

உடலில் தான் குறை ஆனால் உணர்வுகள் எல்லாம் நம்மை போன்றது தானே...அசிங்கத்தை பார்த்தால் நமக்கு ஏற்படும் அசுயை எண்ணங்கள் அவர்களுக்கும் உண்டு தானே, அதையும் சகித்துக்கொண்டு வாழும் இவர்கள் மேல் நாம் எல்லோரும் அக்கறை எடுக்கலாமே, மாறாக இவர்களை ஒதுக்கி வைப்பது, மரியாதை குறைவாக நடத்துவது, அசட்டை செய்வது போன்றவை கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று அரசு இவர்களுக்காக சிலவற்றை அறிவித்தது, வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல் உடனே செயலில் நடத்தி காட்ட வேண்டும்...! எது ஒன்றும் இவர்களின் வலியை குறைப்பதாக இருக்க வேண்டுமே தவிர வலியை அதிகரிப்பதாக இருக்ககூடாது என்பதே எனது வேண்டுகோள் !!


பிரியங்களுடன்
கௌசல்யா 



படங்கள் -நன்றி கூகுள் 

திங்கள், நவம்பர் 21

என்னை காப்பாத்துங்க...! ஒரு அபலையின் அழுகுரல் !!!


பக்கத்துல ஒரு மனுசன் ஐயோ அம்மானு கதறிட்டு கிடந்தாலும் காது கேட்காத மாதிரியே ஒரு சிலரு இருந்தாலும், ஐயோ பாவம்னு அனுதாப பட, உதவி செய்ய கோடி பேர் இருக்கிறாங்க...அதுவும் என்ன போல அடுத்தவங்களுக்காக உசுற கைல பிடிச்சிட்டு ஓடிட்டு இருக்கிறதாலத்தான் நாட்ல மழையே பெய்யுது...ஆங் !மழைன்னு சொன்னப்ப ஞாபகம் வருது, அப்ப அப்ப என் உசுற இந்த மழைதான் காப்பாத்திட்டு வருது...இதுவும் என்னை கைவிட்டுடா என் நிலமை அவ்ளோதான்.

யார் இப்படி தன்னந்தனியா புலம்பரதுன்னு யோசிக்கிறீங்களா...?! நான்தான் ஆறு...ம்...வற்றாத ஜீவ நதினு நீங்க பெருமையா பேசுற தாமிரபரணி தான் நானு !! என்னடா ஒரு ஆறு புலம்புதுன்னு சிரிக்காதிங்க...முழுசா படிச்சா என்னை இப்படி புலம்ப வைக்கிறதே உங்களை போன்ற சில மனுசங்கதானு புரிஞ்சி தலை குனிவீங்க...!

நானும் யாராவது என்ன காப்பாத்த வருவாங்களானு காத்து கிடந்ததுதான் மிச்சம், ஒருத்தரும் எட்டி பார்க்கல...?! கலெக்டர், மந்திரி, எம்எல்ஏனு  பெரிய பெரிய ஆளுங்கலாம் என்ன கண்டுக்காம போனாலும் பொது சனங்க எம்மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா...?! ஆனா பாவம், அவங்க ரொம்ப அப்பாவிங்க, என் நிலைய பாத்து கண்கலங்கிறதோட முடிச்சுகுவாங்க, அதுதான் இங்க வந்தா நீங்களாவது என் நிலமைய பார்த்து என்னை காப்பாத்துவீங்கனு வந்திருக்கேன்...

பெருமையும், சீரழிவும்

திருநெல்வேலி அல்வாக்கே என்னாலத்தான் ருசி (ஒரு சுய விளம்பரந்தேன் !) அப்படின்னு வெளில பேசிகிறாங்க ! ஆனா இப்போ இருக்கிற தண்ணிய குடிச்சி பாருங்க, சப்புன்னு இருக்கும்...!? முன்னாடி எல்லாம் காடு கழனிக்கு போற விவசாய சனங்க, தண்ணிய அப்படியே அள்ளி குடிச்சி, 'ஆஹா எம்புட்டு ருசி சோறு கூட வேணாம்ல, வயிறு நிறைஞ்சு போச்சு'னு சந்தோசமா சொல்லுவாக...ம்...அதெல்லாம் ஒரு காலம் !


பொதிகை மலையில் பொறந்து அப்படியே நெல்லையை செழிப்பாக்கிட்டு, தூத்துக்குடி மாவட்டம் புன்னை காயல்ல போய் கடலோட கலந்துடுறேன்.....போற பாதை எல்லாம் செழிப்பா பச்சை பசேல்னு இருக்கும்...ஆனா இப்போ கரையோரத்தில கால் வைக்க முடியாத படி சேறும், சகதியுமா குப்பையும், கூளமா நிறைஞ்சு கிடக்குது...ஆத்துல சில இடத்தில அமலை செடிவேற நிறைய வளந்து மூடி கிடக்குது. மாநகராட்சி ஊருக்குள்ள பன்றிகள வளர்க்க தடை போட்டதால அதுங்க எல்லாம் என் கரையோர ஊர்கள்ல குடும்பமா கும்மாளம் போடுதுங்க...இதால கொசுங்க பெருகி போச்சு குழந்தை குட்டிகளுக்கு நோய் வந்திடுமேனு எனக்குதான் கவலையா இருக்கு...

ஆலை கழிவையும் கொண்டு வந்து கொட்டுறாங்க...தொழிற்சாலை கழிவு நீரை ஆத்துல விடுறாங்க...இதை எல்லாம் யாரு கண்டுகிறாங்க ? தட்டி கேட்குறதும் இல்ல ?!

அட படுபாவிகளா !

இன்னொரு பக்கம் என் மடியில கை வைக்கிற பாவிகளை என்னனு சொல்ல ...அவனுங்கள அந்த காமாட்சிதான் பாக்கணும் ! ஜே சி பி எந்திரத்தை வச்சு மணலை அள்ளி கொண்டு போறாங்க...ஐயோ ! எனக்கு வலிக்குதேனு கத்தி கதறினாலும் அரக்க சென்மங்க காதுல எங்க விழுது...?! இதை பாக்குற சனங்களோ இவன் உருபடுவானானு சாபம் போடுறாங்க...ஆனா எப்படி எதுக் கிறதுன்னு அவங்க பயப்படுறத பார்த்து என் வலியை பொறுத்துகிறேங்க...! 


இந்த மணல் கேரளாவுக்கு லாரி லாரியா போவுது...அந்த சனங்க ரொம்ப புத்திசாலிங்க, எங்க இருந்து மணல் வந்தா என்ன, நம்மூரை நல்லா பார்த்துபோம்னு இருக்காங்க...அங்கிருந்து மாலத்தீவுக்கு வேற போகுதாம்...இது எனக்கெப்படி தெரியும்னு பாக்குறீங்களா, இந்த லாரி டிரைவர்கள் பேசுவதை அப்ப அப்ப கொஞ்சம் கேட்பேன், இப்படிதான் என் பொது அறிவு வளருதுங்க...!

ஆமாம் தெரியாமத்தான் கேட்குறேன், மணலை அள்ளி வேற வேற இடத்தில மலையா குவிச்சு வச்சிருக்காங்களே, அரசாங்கத்தோட ஆளுக யாரும் பார்த்து எப்படி ஆத்து மணல் இங்க வந்ததுன்னு கேட்க மாட்டாங்களா ? இதை பறிமுதல் செய்ய சட்டத்தில இடம் இல்லையா ? (ஓட்டைதான் இருக்குனு சொல்றீங்களா, நீங்க சொன்னா சரிதான் !) 

என்ன ஒரு புத்திசாலித்தனம் ?!


எங்க ஊரு பக்கம் சொல்வாங்க..."கள்ளன் பெருசா, காப்பான் பெருசா" னு. இந்த கள்ளங்க எப்படி எல்லாம் பிளான் போடுறாங்க தெரியுமா... 'மணல் எடுக்க தடை போடுறீங்க சரி, ஆனா நாங்க ஆத்து பக்கத்துல நிலம் வாங்கி, அப்புறம் அந்த பட்டா இடத்தில மணலை வேண்டிய மட்டும் அள்ளுவோம், இப்ப என்ன பண்ணுவீங்களாம்'னு சிரிக்கிறானுங்க...?! அட முட்டா பசங்களே! இப்படி நிலத்த வாங்கி கடும் ஆழத்துல தோண்டுறீங்களே, நாளைக்கு ஆத்துல வெள்ளம் வந்தா ஊருக்குள்ள வந்துடுமேனு கொஞ்சமாவது யோசிசீங்களா...?!! உங்க சுயநலத்துக்காக எத்தன பேர் உசிரோட விளையாடுறீங்க...!? நீங்க நல்லா இருப்பீங்களா !



கைவிட்டுடாதிங்க...

இது ஏதோ புலம்பல்னு கண்டுக்காம விட்டுடாதிங்க...பறந்து விரிந்து ஊருக்கு நடுவில கம்பீரமா ஓட்டிட்டு இருந்த நான், இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு கோடா , ஒரு புள்ளியா சுருங்கி போனாலும் போய்டுவேன்...! மணல் எடுக்குற சாக்குல எங்களை கொஞ்ச கொஞ்சமா ஆக்கிரமிச்சிட்டு இருக்கிற மணல் கொள்ளையர்களை கூட்டமா சேர்ந்து தட்டி கேளுங்க, போராட்டம் பண்ணுங்க ...ஆரம்பத்தில எதிர்ப்பு இருந்தாலும் தொடர்ந்து நீங்க கொடுக்கிற டார்ச்சர்ல அவனுங்க இந்த கொள்ளை தொழிலையே மறந்துறணும்...ஊர் கூடி தேர் இழுத்தா தேர் நகராமலா போய்டும்...!? முயன்றுதான் பாருங்களேன்...!!

இது என்னோட தனிப்பட்ட வேதனைனு இல்ல, என்னப் போல பல ஆறுகளும் இப்படி தான் அழிஞ்சிட்டு வருது...சனங்களின் தாகத்தை தீர்த்து, விவசாயத்துக்கு உதவி செஞ்சி, ஊருக்கே சோறு போடுற எங்க நிலைமை ரொம்ப மோசமா போயிட்டே இருக்குது...! இனியாச்சும் யாராவது கவனம் எடுத்து, சீரழிஞ்சி செத்துக்கிட்டு இருக்கிற எங்கள வாழ வையுங்கனு என் எல்லா உடன்பிறப்பு சார்பில கேட்டுகிறேன்...

இப்ப மழைகாலம் வேற எல்லா தண்ணியும் கெட்டு போய் கிடக்கு...பிளாஸ்டிக் கேன்ல வாங்கினாலும் அதையும் சுட வச்சு குடிங்க...எங்க ஊருகாரவுக உணவு உலகத்தில சங்கரலிங்கம் ஐயாவோட இந்த பதிவை படிச்சி பாருங்க...அவர் சொல்றது உங்க நல்லதுக்கு தான்னு நினைச்சி அதை அப்படியே கடைபிடிங்க... உங்க புள்ள குட்டிகளை நோய் நொடி அண்டாம பத்திரமா பார்த்துகோங்க சனங்களே...

இத்தனை நேரம் பொறுமையா என் வேதனைகளை கேட்ட உங்க நல்ல மனசுக்கு நீங்க எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னு மனசார வாழ்த்துறேன்...முடிஞ்சா மத்தவுககிட்டையும் இதை கொஞ்சம் எடுத்து சொல்லுங்க...உங்களுக்கு புண்ணியமா போகும்...!

இப்படிக்கு 
தாமிரபரணி ஆறு
திருநெல்வேலி.

* * * * * * * * *



தலைப்பு - நன்றி சங்கரலிங்கம் அண்ணா    
படங்கள் - நன்றி கூகுள்     

சனி, நவம்பர் 19

ஒரு நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்...!



நவம்பர் 14 குழந்தைகள் தினம்,  'முன்னாள் பாரத பிரதமர் நேரு குழந்தைகள் மிக நேசித்ததால், அவரது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்' இத்தினம் கொண்டாடபடுவதின் காரணம் நமக்கு தெரிந்து இது ஒன்றுதான். ஆனால் உண்மையில் குழந்தைகளின் கையில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்த்தவே இந்த தினம்.


விழா

இத்தினம் முக்கியமாக பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆசிரியர்களைப் பொறுத்தவரை விழாவினை எப்படி சிறப்பாக நடத்துவது என்பதிலும், பல்வேறு போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதில் குழந்தைகளின் சிந்தனைகள் இருக்கும்...ஆனால் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எந்தவித சலனமும் இன்றி வருடத்தின் மற்றொரு நாள் இது என்பதாகப் போய்விடுகிறது...!!? 

'குழந்தைகள் தினம்' கொண்டாடுவது முக்கியம் இல்லை...குழந்தைகளை கொண்டாடுவோம் முதலில்...!!

சிறையில் நம் குழந்தைகள் 

சிறைப்பட்ட வண்ணத்துப்பூச்சி பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அதன் சிறகுகள் ஒடிக்கப்பட்டிருப்பதை அது அறியாது. இன்றைய குழந்தைகளும் தாங்களாகவே சிறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள்.கம்ப்யூட்டர் கேம்ஸ், தொலைக்காட்சி இன்னும் பிற அறிவியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.ஒரு சிலர் தமது வேலைக்கு இடைஞ்சல் வந்துவிட கூடாது என்று அந்த கதவை தட்டுவதுக் கூட இல்லை, அப்புறம் எங்கே திறப்பது...?!

உடலுக்கு சுறுசுறுப்பை தரும் விளையாட்டுகள் சுத்தமாக குறைந்துவிட்டன...பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் கொடுப்பினை நம் குழந்தைகளுக்கு இல்லை...ஜங்க் புட் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளும் தவறான பழக்கம்...உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் பழக்கம் இல்லை, தங்களின் உறவுகள் யார் எவர் என்றே அறியாத பரிதாபம் !   

பல வீடுகளில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட தனிமை சிறையில் குழந்தைகள் ! சில நிமிட நேரங்கள் கூட குழந்தைகளிடம் செலவு பண்ண நேரம் இன்றி பொருளாதார தேடலுக்குப் பின்னே சில பெற்றோர்கள் !

கண்ணில் தெரியுது வானம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது இவர்கள் தொட்டே விடுகிறார்கள்...எங்கும் வேகம்...எதிலும் வேகம் என்று இருக்கிற இவர்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டாமா...?!! உணவு, உடை, படிப்பு கொடுப்பதுடன் தங்கள் கடமை முடிந்துவிடுகிறது என்று எண்ணுவது தவறு அல்லவா ? நல்ல சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் முக்கிய கடமை தானே ?!

பாட்டு, நடன போட்டிகள்

எல்லா டிவி சேனல்களிலும் ஏதாவது குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தங்கள் குழந்தையும் பங்குபெறவேண்டும் என்ற சில பெற்றோரின் ஆர்வத்தில் தவறு இல்லை. ஆனால் இதற்காக தன் அன்றாட வேலைகளை தங்கள் விருப்பபடி செய்யவிடாமல் பெற்றோர்  இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடும் பிள்ளைகள் பாவம்.தன் குழந்தை ஜெயிக்கவேண்டும் என்று திணிக்கப்படுபவை, தோல்வி அடைந்துவிட்டால் பெற்றோரின் அதிக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் மன அழுத்தத்தில் விழ வைத்துவிடுகிறது. தவிர பலர் முன் தோற்றுவிட்டோம் என்பது ஒருவித சுயபச்சாதாபத்தை, தாழ்வுமனப்பான்மையை  ஏற்படுத்திவிடுகிறது. அதிலும் போட்டியில் எலிமிநேஷன் என்றதும் அவர்கள் முகத்தில் தெரியும் அச்சமும், செலக்ட் ஆகவில்லை என்றால் ஏற்படும் கலக்கமும் டிவியில் பார்க்கும் நமக்கே வேதனையாக இருக்கும்.

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்ளகூடிய அளவிற்கு மனதை தயார் செய்த பின்னர் இது போன்ற போட்டிகளில் பங்குக்  கொள்ளவைப்பது நல்லது. 

அர்த்தம் புரிகிறதோ இல்லையோ குழந்தைகள் பாட்டு போட்டியில் பாடும் இன்றைய ஒரு சில சினிமா பாடல்கள் கேட்கும் போது சங்கடமாகவும், கூச்சத்தில் நெளியவும் வைக்கிறது. இது போன்ற பாடல்களுக்கு பதிலாக பாரதியார், பாரதிதாசன், பாடல்களோ, ஆழ்வார், நாயன்மார்களின் பாசுரங்கள் இன்னும் பல... இவைகளைப் பாட வைக்கலாமே...அதன் மூலம் அப்பாடல்கள் மனதில் பதியும்...மனதில் பதிந்தவை அவர்களை நல் வழிபடுத்தும் !! 

சில பள்ளிகளில் சினிமா பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பதில்லை, அது போன்ற பள்ளிகளை பாராட்டலாம்.

குழந்தைகளை குழந்தைகளாக எண்ணாமல் இதை செய் அதை செய் என்று வறுபுறுத்தி வயதுக்கு மீறியவற்றை செய்யும் போது நம் மனது மகிழவே செய்கிறது...ரசிக்கிறோம்...அதே குழந்தைகள் நாளை பெற்றோரை எதிர்த்து நடக்கும் போது அதையும் ரசிக்க நம்மால் முடியுமா ?! 

என்னவெல்லாம் செய்யலாம்...?!


குழந்தைகள் தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை பள்ளி குழந்தைகளுடன் இணைத்து பெரிய விழாவாக கொண்டாடலாம். அப்போது ஆதரவற்ற குழந்தைகள் என்று ஒரு இனம்(?) இருக்கிறதா என்பது நம் குழந்தைகளுக்கு தெரியவரும்...அவர்களை அணைத்து செல்லவேண்டும், அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வளர இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

உலகெங்கும் குழந்தைகள் மீதான குற்றங்கள்/கொடுமைகள்  பெருகிவிட்டன...இதை பற்றி யாரும் பெரிதாக அக்கறைப் பட்டதாக தெரியவில்லை...அங்கே ஒன்றும் இங்கே ஒன்றும் தானே நடக்கிறது என்று மெத்தனமாக இருக்கும் இந்த நிலை மாறினால் நல்லது.

குழந்தைகள் தினம் கொண்டாடும் நம் இந்திய அரசு குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க பெரிய அளவில் எந்த முயற்சியும் எடுத்து வருவதாக எனக்கு தெரியவில்லை...(தெரிந்தவர்கள் சொல்லலாமே...)குழந்தைகளுக்கு என்று நல சங்கங்கள் இருக்கிறதா ? அவை என்ன செய்கின்றன ?! குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கவோ அல்லது அவற்றை களையவோ முயற்சி செய்கிறதா சங்கங்களும், அரசும் ?!!

மூன்று வயது குழந்தையும் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறது...இதை குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் வேண்டும்...பள்ளிகளில் குழந்தைகளுக்கு அடுத்தவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் குட் டச், பேட் டச் பற்றியும் சொல்லி கொடுக்க வேண்டும். ஒருவர் தவறான இடத்தில் தொடுகிறார் என்றால் உடனே எதிர்ப்பை காட்ட தெரிய வேண்டும், பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு தண்டனை கடுமையாக்க பட்டால் இவை குறையுமா ? 

இவர்களும் குழந்தைகளே !

* முறையான கல்வி பெற வசதி இல்லாதவர்கள்
* ஆதரவற்ற அநாதை குழந்தைகள் 
* பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் 
* குழந்தை தொழிலாளர்கள் 
* சரிவிகித ஊட்டச்சத்து இன்றி நோயில் பிடியில் அவதிப்படும் குழந்தைகள்   
* பிச்சை எடுக்கும்(எடுக்க வைக்கப்படும்) குழந்தைகள்
* குப்பை பொறுக்கும் குழந்தைகள் 

ஆதரவின்றி தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அநேகர் !இத்தகைய குழந்தைகளை பார்க்கும் போது நம்மால் இயன்ற ஒரு உதவியை செய்யலாம், அவர்களிடம் பேசி சம்மதிக்க வைத்து பள்ளிகளில் சேர்த்துவிடலாம்...அல்லது இதற்கென இருக்கும் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு இவர்களை ஒப்படைக்கலாம். நமக்கென்ன வந்தது, இதை செய்ய போனால் வேறு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என அச்சம் கொள்ளாமல் இயன்றவரை நமக்கு தெரிந்தவர்கள் மூலமாக நல்ல இடங்களில் சேர்த்துவிடுவது நல் இதயம் உள்ள எல்லோரின் கடமை.

தொண்டு நிறுவனங்களின் வேலை இதுவென ஒதுங்கி கொள்ளாமல், தனி நபர் ஒவ்வொருவரும் உதவ முன் வரவேண்டும்.

நம்மில் பலரும் செய்வது பிறந்த நாள், நினைவுநாளின் போது அநாதை ஆசிரமங்களுக்கு சென்று இனிப்பும், உணவும் கொடுப்பது, இத்துடன் கடமை முடிந்துவிடுகிறது என்று நமது சுயம் திருப்திப்பட்டு கொள்கிறது.உணவு மட்டும் அவர்களை திருப்திப்படுத்தி விடுமா ? ஒரு சிலர் இத்தகைய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதும் உண்டு. ஆனால் இவை மட்டும் போதுமா ?!! யோசியுங்கள் !!

நம் குழந்தைகளின் மீது வைக்கும் அதே அன்பை பிற ஆதரவற்ற குழந்தைகளின் மீதும் செலுத்துவோம். அக்குழந்தைகளுக்கும் இப்பூமியில் அனைத்தையும் பெறவும், வாழவும் உரிமை இருக்கிறது...!! அவ்வுரிமையை நாம் மதிப்போம்...எந்த குழந்தைகளாக இருந்தாலும் குழந்தைகளை குழந்தைகளாக மட்டுமே பார்ப்போம்...!! அவர்கள் நலனில் அக்கறை காட்டுவோம்...!!

இக்கட்டுரை அதீதத்தில் வெளிவந்தது...நன்றி அதீதம்.

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே ! இனிமேல் தினங்களை விட்டு விட்டு குழந்தைகளை எப்போது கொண்டாட போகிறீர்கள் ?
                                                                  -கவிக்கோ அப்துல் ரகுமான்

நாளை நவம்பர் 20 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம்...உலகம் முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாட படுகிறது...!

நம் குழந்தைகளை நாம் கொண்டாடுவோம்...! அனைத்து குழந்தை செல்வங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...



வெள்ளி, நவம்பர் 18

ஏன் இந்த வெளிநாட்டு மோகம்...!?




பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்ததும் உடனே தேடுவது ஒரு நல்ல வேலை...! கல்லூரியை விட்டு வெளியில் வந்ததும் அரசாங்கமோ, பெரிய கம்பெனியோ 'இந்தா அப்பாயின்மென்ட் ஆர்டர்' என்று தூக்கி கொடுத்து விடாது. வேலைக்கான தகுதியை வளர்த்து கொள்வதுடன், தனக்கு தகுந்த வேலையை தேடுவதும் அவசியம். ஆனால் வெளியிடங்களில் வேலை தேடியே சோர்ந்து போய் விடுகிறான் நம் இளைஞன். எதற்கெல்லாமோ, எதன் பின்னாலோ ஓடி நாட்களை வீணாக கழிப்பவர்கள், வேலை மட்டும் உடனே கிடைத்துவிட வேண்டும் என்று ஆசை படுவது என்ன நியாயமோ தெரியவில்லை.

அதுவும் ஒருசிலர் படிக்கும் போதே வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசையை, ஆர்வத்தை வளர்த்து கொள்கிறார்கள்...இங்கே தகுந்த வேலையோ சம்பளமோ கிடைக்காது என்கிற விதமாக இருக்கும் அவர்களின் பேச்சுக்கள் எல்லாம்...!?

வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் வசதியானவர்களை பற்றி இங்கே சொல்லவில்லை...இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ?? துணிச்சல் இல்லையா ?? முன்ன பின்ன தெரியாத ஊரில் வாழ தைரியத்துடன் செல்லும் இளைஞனுக்கு, அந்த துணிச்சலை மூலதனமாக வைத்து சொந்த நாட்டில் உழைத்து  சம்பாதிக்க தெரியவில்லை எனும் போது வருத்தம் ஏற்படுகிறது.

நம் நாட்டை குறை சொல்ல ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். ஆனால் ஏன் இங்கே உழைக்க முடியவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இருக்கிறதா ? அப்படி உங்களுக்கு சாதகமாக பதில் வைத்திருந்தாலும், இங்கே இருக்கும் மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டி வருமே...?!  அரசாங்கம்,  ஊழல், லஞ்சம் என்று எந்த வித சமாளிப்பும் தேவையில்லை. உழைக்க கூடிய திறன் , மனோதிடம், உத்வேகம், தன்னம்பிக்கை, சுய மரியாதை இருந்தால் எங்கேயும் வாழ முடியும். கை நிறைய சம்பாதிக்க முடியும். 

ஆயிரம் வசதிகள் இருந்தாலும் சொந்த நாட்டில் சொந்த பந்தங்களுடன், மனைவி குழந்தைகளுடன் ஒன்றாக வாழும் வாழ்க்கைக்கு ஈடு இணை ஏதும் இல்லை. 

* மனைவி குழந்தைகளை விட்டு சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் சிலருக்கு,நெருங்கிய அந்த உறவுகளே அன்னியமாகி விட்டதை போல தெரியும் சோகம் மிக கொடுமை ?!

* முதலில் அன்பை பொழிந்த உறவுகள், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை அனுபவித்த பின்னர், வெறும் பணம்காய்ச்சி மரமாக மட்டுமே உங்களை பார்க்க கூடிய நிலை சகஜம் !!

* பணத்தின் ருசி கண்டவர்கள் ஒரு சிலரின் மூணு வருட அக்ரீமென்ட் முடிந்த பிறகும் மீண்டும் போக சொல்லி வற்புறுத்துவது வேதனை !

இன்னும் இருக்கிறது சொல்வதற்கு...(அடுத்த பதிவில் பார்த்துக்கலாம்னு இத்தோட நிறுத்திக்கிறேன்)

வெளிநாட்டு வேலையை பற்றி இப்படி என்னை ஆதங்கப்பட வைத்துவிட்டது நேற்று நடந்த ஒரு சிறிய சம்பவம்... 



உழைக்க என்ன வெட்கம் ?!

சொந்த தொழில், மாதம் செலவு போக வருமானம் 20,000 ரூபாய்...!! இரண்டு  வருடத்தில்,வந்த வருமானத்தில் சொந்தமாக இரு ஆட்டோ (லோன் ), கூட வேலை செய்ய துணைக்கு மற்றொருவர் மட்டுமே !! அப்படி என்ன வேலை என்கிறீர்களா ?? 

இஸ்திரி கடை நடத்துகிறார்...என்னங்க நம்ப முடியவில்லையா?? நானும் இதை வேறு யாரும் என்னிடம் சொல்லி இருந்தால் நம்பி இருக்க மாட்டேன், நேரில் சென்று பேட்டி எடுக்காத குறையாக விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட பிறகே நம்பினேன்... 

நேற்று என் கணவர் வீட்டில் மின்சாரம் இல்லாத போது , அவசரமாக வெளில  அயன்(கரண்ட் அயனிங் அண்ட் கரி பெட்டி அயனிங் இரண்டும் இருக்கும்) பண்ணிட்டு வரேன்னு ஒரு ஷர்ட், பேன்ட் எடுத்து சென்றவர், போன வேகத்தில் திரும்பி வந்துவிட்டார்...'என்னாச்சுங்க' என்றேன். 'இரண்டு நாள் ஆகுமாம், எனக்கு இப்ப தேவை. சரி பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்'னு கிளம்பிட்டார். எனக்கு ஆச்சர்யம் "ஒரு அரைமணி, ஒரு மணி நேரம் வெயிட் பண்ண சொன்னா பரவாயில்லை, இரண்டு நாள் என்றால் எப்படிங்க ?!"

"கடைல ஒரு இடம் பாக்கி இல்லாம வரிசையா பெரிய பெரிய பேக்ல துணிகள் இருக்கு, இருக்கிற துணிய பார்த்தா ஒரு வாரம் ஆகும் போல...!?" 

என கணவர் சொல்லவும் அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடைல என்று எனக்கு ஒரு ஆர்வம் வந்து விட்டது. மாலையில் அந்த வழியாக போனபோது போய் விசாரித்தே விட்டேன். 

(வேலை மும்மரத்தில் இருந்ததால் எனது கேள்விக்கு பதில்கள் இன்ஸ்டால்மென்டில் வந்தன.கால் வலித்தாலும் பரவாயில்லை...முழுதும் தெரிந்து கொள்ளாமல் விடுவதாயில்லை) 

B.com படித்திருக்கிறார், ஒரு வருடம் இப்படி அப்படி என்று கழித்துவிட்டு, வேறு உதவி ஏதும் கிடைக்காத காரணத்தால், எங்க ஏரியாவில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருக்கிறார். அக்கா வீட்டின் வாசல் மர நிழலில், வண்டியில் ஒருவர் இஸ்திரி போட்டு கொண்டிருந்திருக்கிறார். அவரது வண்டியை சுற்றி ஏகப்பட்ட துணி பேக்குகள் இருக்குமாம். சில நாட்கள் வண்டியை ஓரமாக விட்டு விட்டு போய் விடுவாராம்.அந்த ஏரியாவில் அரசாங்க வேலையில் உள்ளவர்கள் அதிகம், கொஞ்சம் வசதியானவர்கள் உள்ள ஏரியா. 'இஸ்திரி போட ஆள் வராத போது எல்லோரும் என்ன செய்வாங்க' என்று யோசித்திருக்கிறார். ஒரு சுப முகூர்த்த நாளில் 'ஏன் இந்த தொழிலை நாம் செய்ய கூடாது' என்ற சிந்தனை தோன்றி இருக்கிறது. 

முறையான வேலை (துணிகளை சரியாக மடித்து வைக்கும் லாவகம்) தெரியாத போதும், ஒரு மாதம் வீட்டில் பழகி பார்த்திருக்கிறார். அக்கா கணவரின் உதவியால் வண்டி, இஸ்திரி பெட்டி, கரி எல்லாம் தயார்.  ஏற்கனவே அங்கே ஒருவர் இருப்பதால், அக்கா வீட்டு வாசல் சரிபடாது என்று அடுத்த தெருவில், வேப்பமரம் இருக்கும் இடமாக பார்த்து வண்டியை நிறுத்தி இருக்கிறார். 

அடுத்த ஸ்டெப் கஸ்டமர்களை தேடுவது...

புதிய நபர்களை நம்பி யாரும் துணிகளை கொடுக்க மாட்டார்கள்...அதற்காக தனது துணிகளை எடுத்து வந்து ஒவ்வொன்றாக மெதுவாக அயன் செய்வாராம். அவரது ஒரு சட்டை பல முறை அயன் செய்ய பட்டு இருக்குமாம் !(தொழில் பழகின மாதிரியும் ஆச்சு, பாக்கிறவங்களுக்கு யார் வீட்டு துணியவோ அயன் பண்றான்  என்று நினைக்கவும் வசதி ஆச்சு) இப்படி இவரது பிளான் வொர்க் அவுட் ஆகி, ஒரு பெண்மணி தனது குழந்தைகள் துணிகளை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க...இவர் அவரை அக்கானு கூப்பிட்டு  மிகுந்த மரியாதையாக, அன்பாக பேசி இருக்கிறார் (முதல் போனி ஆச்சே !) 

அந்த பெண் அப்படியே அடுத்த பெண்களிடமும் போய் 'பார்த்தா நல்ல பையனா இருக்கிறான், உங்க துணி எல்லாம் கொடுங்க, அயன் பண்ணுவான்' அப்படின்னு இவரது விளம்பர பிரதிநிதி ஆகிடாங்க. இப்படியே தொழில் பிக் அப் ஆகி மெய்ன் ரோட்டில் ஒரு கடையை வாடகைக்கு பிடித்து தொழிலை விரிவு படுத்தி விட்டார். அப்புறம் என்ன ஒரே ஏறு முகம் தான், அடுத்து புதிதாக இரு ஆட்டோ வாங்கி சம்பளத்திற்கு டிரைவர்களை அமர்த்திவிட்டார். இப்போது அதில் இருந்தும் வருமானம் வருகிறது...

திருமணத்திற்கு பெண் தயாராக இருக்கிறதாம், இவர்தான் இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று இருக்கிறாராம். 

* * *

என்ன விவரங்கள் போதுமா இன்னும் வேண்டுமா ?! இப்ப மறுபடியும் முதலில் இருந்து படிங்க...என்னோட ஆதங்கம் சரிதானா ? இல்லையானு ?

* நெல்லையில் மதுரம் ஹோட்டல் அருகில் ஒரு கடை இருக்கிறது, இங்கே எப்படி என்றால், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்து கொண்டு வந்து போடும்  துவைக்க/தேய்க்க வேண்டிய துணிகளை மொத்தமாக சேகரித்து ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி நாகர்கோவிலுக்கு(!) கொண்டு செல்கிறார்கள், அங்கே ரெடி ஆனதும் , மறுபடி எடுத்து வந்து கஸ்டமர்களுக்கு  கொடுக்கிறார்கள்...இந்த வேலை தினமும் நடக்கிறது...துணிகளும் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது...!!   

இப்படி ஒவ்வொரு இளைஞரும் உத்வேகத்துடன் உழைக்க தயாராகிவிட்டால் வெளிநாடு செல்வது  என்பது பழங்கதையாகி விடுமல்லவா ? 

இஸ்திரி வேலை என்று இல்லை, எத்தனையோ சிறு தொழில்கள் மலிந்து கிடக்கின்றன...அரசின் மானியம் வேறு இருக்கிறது...எதற்கு யாரை எப்படி அணுக வேண்டும் என்பது தெரிந்து விட்டால் போதும். 

சொல்ல போனால் அரசின் உதவியே தேவையில்லை...சுயமாக பல தொழில்கள் செய்யலாம். படித்த சிலர் கிராமத்தில் தங்கள் படிப்பின் உதவி கொண்டு விவசாயம் பார்த்து வருகிறார்கள்...! சொந்த ஊரில் சொந்த பந்தங்களுடன், தன் குடும்பத்தினர் புடை சூழ வாழும் ஒரு வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மகிழ்ச்சியாக இருக்கும்...?! வெளிநாட்டு வருமானம் அளவு இல்லை என்றாலும் ஒரு நிறைவு இருக்கும் அல்லவா ?! கணவன் ஓர் இடம் மனைவி, குழந்தை  ஓர் இடம் என்பது கசப்பான ஒரு வாழ்க்கை தானே ?(அப்படி வாழ்பவர்களை மட்டும் !)

என்ன செய்வது, எங்க தலைஎழுத்து இப்படி வெளிநாட்டில் லோல் படணும் என்று  இருக்கிறது என்று சலித்து கொள்ளாதீர்கள், உங்களுக்கு நீங்கள் தான் எஜமானன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமையும் உங்களது தானே ?! அப்புறம் என்ன ?! வேறு யாருக்கோ உங்களின் உழைப்பும், சக்தியும் வீணாகிறது, அதை உங்கள் சொந்த முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினால் அபரீதமான வளர்ச்சியை காணவும் முடியும், இறுதி வரை நிம்மதியான ஒரு வாழ்க்கையும் வாழலாம்...!? சிந்தியுங்கள் எம் தேசத்து இளைஞர்களே !! 

வாழ நினைத்தால் வாழலாம்...!வழியா இல்லை நம் பூமியில்...!!


பி.கு.

எனக்கு தெரிந்த சிலரின் வேதனையான வாழ்க்கையை நேரில் பார்த்து , அதன் மீதான என் ஆதங்கம் தான் இந்த பதிவு. யார் மனதையும் புண்படுத்துவது என் விருப்பமல்ல . வருத்தபடுத்தி இருந்தால் மன்னிக்கவும்.


படங்கள் _ நன்றி கூகுள்     

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...