செவ்வாய், மார்ச் 6

என்னவாயிற்று நம் குழந்தைகளுக்கு ?!


இன்றைய மாணவர்களின் உலகம் எங்கே செல்கிறது ? தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன், சென்னையை போல இங்கயும் உங்களை கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய மாணவர்கள், வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவன், பிளேடால் கையை கிழித்த மாணவன், இதெல்லாம் போதாது என்று நெல்லையை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறான்...!!?

எதனால் இப்படி?!

பொருளாதார வசதி பெருகிவிட்ட இன்றைய காலத்தில் கை விரல் நுனியில் உலகத்தை கொண்டுவந்து விடும் இணையம், கம்ப்யூட்டர், டிவி, சினிமா போன்ற பொழுதுபோக்குகள் என சுற்றிலும் குழந்தைகளின் உலகம் வண்ணமயமாக இருக்கிறது. ஆனால் அவர்களின் மனது எந்த நிலையில் இருக்கிறது...எதை சிந்திக்கிறது...எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது எண்ணி பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டிருக்கிறோம் . 

மாணவன் தவறு செய்தால் பெற்றோர்கள் பள்ளியை கை காட்டுகிறார்கள், பள்ளிகள்  ஆசிரியர்களை கைகாட்ட , ஆசிரியர்கள் கல்வி முறையை கைகாட்ட , கல்வி முறைக்கு காரணம் அரசாங்கத்தில் வந்து முடிகிறது...இப்படி ஒவ்வொருத்தரும் அடுத்ததின் மேல் பழியை போட்டு தப்பிவிடுகிறார்கள் அல்லது நழுவி விடுகிறார்கள். ஆனால் தொடரும் அவலங்களை தடுத்து நிறுத்த போவது யார் ? கண் முன்னே சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டு போகும் இன்றைய மாணவச் செல்வங்களை காப்பாற்ற வேண்டாமா ? இவர்கள் தானே நாளைய உலகை ஆளப் போகிறவர்கள், ஆனால் எப்படி ஆள முடியும் இவர்களால்...குப்பைகள் சேகரிக்கும் தொட்டியாக மனதை வைத்துள்ளார்களே ?!

ஏதோ ஒரு மாணவன் முதல் மாணவனாக வந்துவிட்டான் என பெருமை பாராட்டி அவன் பின்னால் ஓடும் சமூகம் பிற மாணவர்களின் மனநிலை பற்றி சிறிதாவது யோசிக்கிறதா ?

நெல்லை மாணவனின் தற்கொலை முயற்சி

பாளையங்கோட்டையை சேர்ந்த மார்டின் ஆரோக்கியராஜ் இவருடைய 13 வயது மகன் ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை வைத்து நெற்றிப் பொட்டில் தன்னைத் தானே சுட்டு கொண்டான். அலறி அடித்து மாடிக்கு சென்ற பெற்றோர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.படிப்பு சரியாக வரவில்லை, தேர்வில் நல்ல மார்க் வாங்கவில்லை, அந்த வருத்தத்தில் சாக முடிவு செய்தததாக கூறி இருக்கிறான்.

இதில் எங்கே நடந்தது தவறு ? பள்ளியிலா, கல்வி முறையிலா எதில் தவறு...?! இவை இரண்டையும் விட தவறின் பக்கம் பெற்றோர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பது எனது கருத்து.


இன்றைய பெற்றோர்களே ?!!!

படிப்பு மட்டும் தான் வாழ்க்கை  என பிள்ளைகள் மனதில் பதிய வைத்த பெற்றோர் தான் முக்கிய காரணம். சரியாக படிக்கவில்லை, மார்க் குறைவாக எடுக்கிறான் என்று பெற்றோரை அழைத்து சுட்டி காட்ட வேண்டியது பள்ளியின் கடமை. ஆனால் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்...?!


தங்கள் பிள்ளைக்கு படிப்பில் நாட்டம் இல்லை என்று தெரிந்ததும், " ஏண்டா இப்படி இருக்கிற, அந்த பையனை பாரு, எல்லா சப்ஜெச்டிலும் 90 க்கு மேல, அவனுக்கு மட்டும் எப்படி முடியுது, நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேனே, இருந்தும் ஏண்டா இப்படி இருக்கிற, எனக்குன்னு வந்து பிறந்தியே ,மத்தவங்க முன்னாடி மானத்தை வாங்கிட்டியே...அப்படி இப்படின்னு பையனை படுத்தி எடுக்கிறார்கள் பெற்றோர்கள். தங்களது டென்ஷனை பையனின் மீது திணித்து அவனை மன அழுத்தத்தில் விழ வைத்து விடுகிறார்கள்...

இது போன்ற ஒரு நிலை நமது குழந்தைக்கு ஏற்பட்டால் கலவரமடைந்து விடாமல் நிதானமாக பொறுமையாக அணுகி பாருங்கள்...

* படிப்பது மனதில் பதியவில்லையா

* படிப்பின் மீது விருப்பம் இல்லையா ? அல்லது வேறு எதன் மீதும் விருப்பம் இருக்கிறதா

* பள்ளி/ஆசிரியர்கள் பிடிக்கவில்லையா?

* அவர்கள் நடத்துவது புரியவில்லையா?

* நாங்க சொல்லி கொடுத்தா பிடிக்குமா?

இப்படி எல்லாம் கேட்டு விட்டு எதற்கும் சரியாக பதில் வரவில்லை என்றால்

" கொஞ்சம் விருப்பம் வைத்தால் சுலபமாக படித்து விடலாம்...உன்னை முதல் மாணவனாக வா என சொல்லவில்லை...ஆனால் போதுமான அளவு படிச்சா போதும், குறைவான மார்க் தான் எடுக்கிறான் என்று ஆசிரியர் புகார் பண்ணினால் அவர்களை நான் பேசி சமாளித்து கொள்கிறேன்...இனி அதை பற்றி கவலைபடாத...ஜாலியா படி...நிறைய விளையாடு...எந்த சப்ஜெக்ட் பிடிக்குதுன்னு சொல் அதையே 11 வது வகுப்பிலும் எடுப்போம்...உன் சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம் , உன் மார்க் இல்லை...இதை மனசுல வச்சுக்கோ" சரியாக படிக்காத உங்கள் பிள்ளையிடம் இந்த விதத்தில் சொல்லி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தே இராத  ஒரு மேஜிக் விரைவில் நடக்கும்.

பாண்டிச்சேரியில் மனநல ஆலோசகர் ஒருவர் கவுன்செலிங் கொடுப்பதற்காக சென்றிருக்கிறார். குழுமி இருந்த மாணவர்களிடம்,

" என்ன தப்பு செய்தாலும் தண்டனை  கிடையாது, அப்படின்னு சொன்னா யார் யார் என்ன என்ன தப்பு பண்ணுவீங்க " என்றார்.

* சாக்லேட் திருடி தின்பேன்

* அப்பா மூக்கு கண்ணாடியை உடைப்பேன்

* சாம்பாரில் உப்பு அள்ளி போடுவேன், போன்ற பதில்களை தொடர்ந்து ஒரு சிறுவன் " என் அம்மா அப்பாவை குத்தி கொள்வேன்" என்றான்...! நம்பித்தான் ஆகணும் நடந்து உண்மை இது.

காரணம் கேட்டதற்கு, " பகல் புல்லா ஸ்கூல்ல படிச்சிட்டு வந்தா வீட்டிலும் படி படினு நச்சரிக்காங்க, அப்புறம் டியூசன் , ஹிந்தி ஸ்பெஷல் கோச்சிங் எல்லாம் முடிய 9 மணி ஆகிடும்...சனி, ஞாயிறும் புல்லா ஹோம்வொர்க் கொடுப்பாங்க  ...அதை செய்ய லேட் ஆனா வீட்ல ஒரே திட்டு...இந்த அப்பா அம்மா எனக்கு வேண்டாம் "

அங்கிருந்த ஒருத்தர் முகத்திலும் சிறிதும் சலனமில்லை, வெறித்தபடி இருந்தனர், அவனது பெற்றோர் உட்பட...!! அப்புறம் அந்த பையனுக்கு மட்டும் தனியா கவுன்செலிங் கொடுத்திருக்காங்க...!

ஆகையால்,

" உங்கள் குழந்தை எதுவாக ஆகவேண்டும் என நீங்க எண்ணுகிறீர்களோ அதை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்...தாங்கள் என்னவாக வேண்டும் என குழந்தைகள் எண்ணுகிறார்களோ அதற்கு நீங்கள் உறுதுணையாக இருங்கள், அது போதும் "

தற்கொலைகள் ?!!

கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளியின் விடுதியில் ஆசிரியர் தன்னை துன்புறுத்துகிறார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டான் பிளஸ் 1 மாணவன். இது ஒரு வகையான பழிவாங்கும் மனோநிலை. ஆசிரியரை பலி வாங்குவதாக எண்ணி தன்னை மாய்த்து கொள்ளும் இத்தகைய செயல் மிகவும் ஆபத்தான ஒன்று. வெளியே பார்க்கும் போது சாதாரணமாக காணப்படும் குழந்தைகளின் மனதில் இதை போன்ற எத்தனை ஆபத்துகள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை.

பெற்றோரின் அதீத கண்டிப்பால் வீட்டைவிட்டு வெளியேறும் மாணவர்களும் இருக்கிறார்கள். பெற்றோரின் கவனிப்பு சரி இன்மையால் வன்முறைக்கு மாறுபவர்களும் உண்டு.

அதிக அழுத்தத்தை மாணவர்களால் சமாளிப்பது இயலாது...பெற்றோரின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு தன் பிள்ளை மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிடவேண்டும் அது கல்வியால் மட்டும் தான் முடியும் என்பது என்னை பொறுத்தவரை ஒரு தவறான கண்ணோட்டம்.

ஒரு பக்கம் பெற்றோர்களின் படி படி என்ற வற்புறுத்தல் மற்ற்றொரு பக்கம் தங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற வேண்டும் என்று நெருக்கும் பள்ளி இவற்றுக்கிடையே தத்தளிக்கிறார்கள். அவர்களின் மெல்லிய இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. ஒரு சில பிள்ளைகள் நன்றாக படித்து நெருக்கடியை சுலபமாக சமாளித்துவிடுகிறார்கள். இவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சுமாராக படிக்ககூடியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.


அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்கள் மட்டும் அறிவாளிகள் அல்ல. யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை, முயற்சி,உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும். பள்ளிப்படிப்பை கூட தாண்டாத பலர் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து புரியவைக்க வேண்டும். அது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.


பக்குவபடுத்துங்கள் !! 


தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்று உணராத நாம் தான் பிள்ளைகளை குறை சொல்கிறோம். "ஆமாம், அந்த டீச்சருக்கு வேற வேலை இல்லை, எதையாவது சொல்லி கொண்டே இருக்குங்க, நீ கண்டுக்காத விடு " என்று சொல்லும் பெற்றோரும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். "நானே என் பிள்ளையை அடித்ததில்லை, ஆசிரியர் எப்படி உன்னை அடிக்கலாம்" என்று கூறினால் அந்த பிள்ளைக்கு எப்படி தன் ஆசிரியர் மேல் மரியாதை வரும், ஆசிரியர் தனது நன்மைக்கு தான் கண்டிக்கிறார் என்பது எப்படி புரியும்?!! அறிவுறுத்தும் தனது ஆசிரியரை ஒரு எதிரி போல் தான் எதிர்கொள்வார்கள். 

ஆசிரியருக்கும் மாணவனுக்கும் நடுவில் பெற்றோர் பாலமாக இருக்கவேண்டும்.ஆசிரியரை மதிக்க வேண்டும், யாராக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் நல்லதை மட்டும் தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஒருவேளை ஆசிரியரிடமே தவறு இருந்தாலும், கண்டிப்பில் குறை இருந்தாலும் அதை நம் குழந்தைகள் சுலபமாக சமாளித்துவிடுவார்கள், பெரிது படுத்த மாட்டார்கள்.  அவர்களின் மனம் பக்குவபட்டுவிடும். இந்த பக்குவ பட்ட மனநிலைக்கு நம் பிள்ளைகளை தயார் படுத்தி வைத்துவிட்டால் போதும், அதிக பாட சுமையோ, ஆசிரியரின் அதீத கண்டிப்பா எதுவுமே அவர்களை அசைக்காது, தெளிவாக இருப்பார்கள்.

 "ஐயோ உலகம் இப்போ மோசமா இருக்கே என் பிள்ளை இதன் நடுவில் எப்படி, என்ன பாடுபட போறானோ " என்று கவலைபடாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் மெனகிடத்தான் வேண்டும்.


எந்த சூழ்நிலையையும், எத்தகைய மனிதர்களையும் சமாளிக்க கூடிய விதத்தை குழந்தைகள் மனதில் அவர்கள் வயதின் ஒவ்வொரு கட்டத்திலும் பதிய வைக்க வேண்டும்...சிறிய வயதில் பதிந்தவை நாம் உடன் இல்லாத போதிலும் அவர்களுக்கு கைகொடுக்கும்.

பின்குறிப்பு :

அதிக வேலை பளுவின் காரணமாக முந்தைய பதிவில் சொன்னது போல உடனே அடுத்த பதிவை வெளியிட இயலவில்லை. குழந்தைகள் பற்றி இன்னும் நிறைய எழுதலாம் , அந்த அளவிற்கு இன்று இப்பிரச்சனை மிக முக்கியமானதாக இருக்கிறது. முடிந்த வரை தொடர்ந்து எழுதுகிறேன். மெயில்/பின்னூட்டம் மூலம் கருத்துக்கள் கூறிய உள்ளங்களுக்கும் தோழி ஏஞ்சலின்க்கும் என் நன்றிகள். 


படங்கள் - நன்றி கூகுள் 

திங்கள், பிப்ரவரி 27

நடந்த கொலையில் மாணவன் மட்டுமா குற்றவாளி !?


பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என அனைவரையும் மனம் பதற செய்த ஒரு சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிரியை கொலை ! 15 வயது மாணவன் கத்தியை தூக்கினான், கொலை செய்தான் என்பதை ஒரு செய்தி என்றமட்டில் கடந்து செல்ல இயலவில்லை. இதுகுறித்த பலரின் கருத்துக்கள்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...அதில் சில

* சினிமா , டிவி தான் காரணம்

*கல்வி நிலையங்கள் பணம் பறிப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றன...ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில்லை...?!

* ஆசிரியர்களின் அதிக கண்டிப்பு, பொறுப்பற்றத்தன்மை.

நடக்கும் எந்த ஒரு தவறுக்கும் மனிதன் தன்னை விடுத்து பிற மனிதர்கள் மீது பிற சூழல்களின் மீது பழியை போட்டுவிட்டு தப்பித்து விடுகிறான்.

இந்த சிறுவனின் இத்தகைய கொலை பாதக செயலுக்கு இங்கே குறிப்பிட பட்ட மூன்று காரணங்களும் சரிதானா?!!


மாணவனை குறித்த ஒரு பார்வை 


ஆசிரியையை கிட்டத்தட்ட 14 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறான் ! எத்தகைய வன்மம் மனதை ஆக்கிரமித்து இருந்தால் இவ்வாறு மாறி மாறி தனது ஆத்திரம் தீரும் வரை குத்தியிருப்பான். சிறு அடியோ ரத்தமோ பார்த்தால் மனம் பதறகூடிய வயதில் ஆசிரியையின் உடலில் இருந்து ரத்தம் கொப்பளித்து வந்ததை பார்த்தும், அவர்கள் அலறி துடித்ததை கண்டும் சிறிதும் தயக்கமோ பயமோ இன்றி தொடர்ந்து குத்திக்கொண்டு இருந்திருக்கிறான். நிச்சயமாக ஒரு நாளில் ஏற்பட்டதாக இருந்திருக்க முடியாது. பல நாட்களாக மனதிற்குள் சிந்தித்து இருக்கிறான், இரண்டு நாட்களாக கத்தியுடன் வகுப்பிற்கு வந்திருக்கிறான். சந்தர்ப்பம் கிடைத்ததும் முடித்துவிட்டான்.ஒருவகையில்  திட்டமிட்ட கொலை !!


சினிமாவே காரணம் 

கொலை செய்ய காரணம் தான் அடிக்கடிப் பார்க்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த தமிழ், ஆங்கிலப் படங்கள் காரணம் அதிலும் 'அக்கினிபத்' படத்தில் ஹீரோ வில்லனை கத்தியால் நெற்றியில் குத்தும் காட்சி தனது நெஞ்சில் ஆழமாக பதிவானது எனவும் கூறியிருக்கிறான்.

இவன் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தனது ஆத்திரத்தை கோபத்தை எவ்வாறு தீர்த்து கொள்ளலாம் என சினிமா வழி காட்டி இருக்கிறது அவ்வளவு தான். ஆனால் இதை வைத்தே சினிமாதான் கொலைக்கே காரணம் என்பது சரியா ?! சினிமா காரணம் என்பதும் அந்த கத்தியை தயாரித்தவன் தான் கொலைக்கு காரணம் என்பதும் ஒன்றுதான். அந்த சினிமாவால் பாதிப்பு என்றால் படம்  பார்த்த அனைவருமே கொலையாளிகளாக மாறியிருப்பார்களே ?! காந்தி படம் பார்த்த அனைவரும் மகாத்மாவாக மாறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?!

கத்தியின் மூலம் தனது ஆத்திரத்தை தீர்த்துக்க முடியும்னு ஐடியா கொடுத்த சினிமாவை விட அந்த ஆத்திரம் ஏற்பட அடிப்படை காரணம் என்ன என்பதுதான் இங்கே மிக முக்கியம்

இந்த ஆசிரியை என்றில்லை இவனது கோபத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுதான் எடுப்பான். இன்னும் வேறு யார் மீதெல்லாம் வெறுப்பு கொண்டுள்ளான் என தெரியவில்லை.சொல்லபோனால் இவனை கிண்டல் செய்த சக மாணவர்களும் இதற்கு இலக்காயிருக்கலாம். நல்லவேளை இவனிடம் கத்திக்கு பதில் துப்பாக்கி இல்லை


ஆசிரியை கண்டிப்பது தவறு

ஒரு சாராரின் கருத்து என்னவென்றால் இறந்த ஆசிரியையின் அதீத கண்டிப்பு ! தன் மாணவர்களின் படிப்பின் மீது எவ்வளவு அக்கறை இருந்தால் பாடத்தில் வீக்காக இருக்கும் ஏழு பேரை தனியாக வரச்சொல்லி வகுப்பு எடுத்திருப்பார். சரியாக படிக்கவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்று ஆசிரியர்கள் சொல்வது சகஜம். அப்படி சொன்னாலாவது அக்கறைகொண்டு படிப்பான் என்ற விதத்தில் தான்.

ஒருமாணவன் படித்து தேர்ச்சி பெறவேண்டும் என்ற இயல்பான அக்கறையில் கொடுக்கப்படும் கண்டிப்பை குற்றம் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ?

இந்த சம்பவத்தால் நம் ஆசிரியர்களின் மனம் பாதிக்கபடகூடும்.  யார் படிச்சா என்ன படிக்காவிட்டால் என்ன பாடத்தை நடத்துவதுடன் எங்கள் வேலை முடிந்தது என நம் ஆசிரியர்கள் யோசிக்க தொடங்கிவிடுவார்களோ என அஞ்சுகிறேன். அப்படி யோசிக்க மாட்டார்கள் என நம்புவோம்.

பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகள் கூட அவர்களின் ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டுதலால் நன்கு படிக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அப்படி இருக்கும் போது மாணவன் செய்யும் தவறுக்கு /குற்றங்களுக்கு ஆசிரியர்களையும், பள்ளிகளையும் குறை சொல்லி கொண்டிருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களை பற்றியும் மக்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. இது நல்லதுக்கு இல்லை.


பள்ளிகள் என்னதான் செய்யும் ?

இரண்டு நாட்களாக கத்தியை தனது பையில் வைத்து கொண்டே வகுப்பில் இருந்திருக்கிறான். இதை ஏன் ஆசிரியர்கள் செக் பண்ணவில்லை என்று கேள்வி கேட்பது எல்லாம் ஏற்புடையதா?  வகுப்பில் ஒரு பீரியட் நேரத்தில் பாடத்தை நடத்தவும், கேள்விகள் கேட்டு சந்தேகங்கள் தெளிவு படுத்தவும் நேரம் சரியாக இருக்கும். இதில் வகுப்பில் இருக்கும் 40,50 மாணவர்களை ஒவ்வொருவராக உற்று கவனிப்பது முடிகிற காரியமா?

குடும்பத்தில் இருக்கும் ஒரு பிள்ளையின் நடவடிக்கையை கவனிக்க முடியாத பெற்றோர்கள் தான் இத்தகைய வினாவை எழுப்புகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் ஆச்சர்யம் !?

தனது ஒரு மகன்/மகள் என்ன செய்கிறார்கள் , எங்கே போகிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க இயலாத பெற்றோர்கள் தான் 40, 50 பேரை கட்டிகாக்கும் ஆசிரியர்களை கேள்வி கேட்கிறார்கள்...!

மாணவனின் பெற்றோரின் குணாதிசியங்கள், வளரும் விதம், சுற்றுப் புறச்சூழல்கள், மரபு, புறவிசை தாக்கம் இன்னும் பிற. இவ்வளவும் சரியாக இருந்தால்தான் பள்ளிகள் விதைப்பவை பலமுள்ளதாக மாறும். இவைகளில் ஏதாவது முரண்பாடுகள், கோளாறுகள் இருப்பின் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் நல்லதை போதித்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான். பள்ளிகளை குறை கூறுபவர்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.


இன்றைய கல்வி 

கல்வி முறையில் இருக்கும் பல குளறுபாடுகள் நம் மாணவர்களை மிகுந்த சோர்வடைய செய்கிறது...10 , 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படும் பாடுகள் சொல்லி முடியாது...அதுவும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை பிப்ரவரிக்கு முன்பே முடித்து தேர்வு வைத்து விட்டு பத்தாம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...கோடைவிடுமுறை கிடையாது. எதற்கு இத்தகைய போராட்டம்...?! புத்தகத்தை மட்டும் மனபாடம் செய்து அப்படியே வெளிக்கொணரும் கல்வி முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். ஒரு இறுக்கமான சூழல் மாணவர்களிடையே நிலவுகிறது, சுதந்திரமாக படிக்கும் வாய்ப்பு கொடுக்க படவேண்டும்...அதிகரிக்கும் மாணவர்களின் மனஉளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை பற்றி அரசு கல்வித்துறை அக்கறை கொள்ளவேண்டும்.


இன்றைய பள்ளிகள்

அதிக மதிப்பெண்கள் எடுக்க நிர்பந்திக்கபடுகிறார்கள்...படிப்பில் போட்டி மனப்பான்மையை, ஏற்ற தாழ்வுகளை  அதிகம் வளர்க்கின்றன. தனது பள்ளி பெயர் எடுக்க வேண்டும் என்பது இதில் ஒன்று. முன்பு கல்வி கற்றுகொடுக்கும் முழு பொறுப்பும் அவர்களுடையதாக இருந்தது. இன்று பெற்றோர்களையும் இதில் பங்குகொள்ள வைக்கிறார்கள், வீட்டிலும் சொல்லி கொடுக்க சொல்லி வற்புறுத்துவது அதிகம். பள்ளியில் இருந்து சோர்ந்து போய் வருபவர்கள் வீட்டிலும் அதே முறையிலான மற்றொரு வகுப்பு சூழ்நிலை வெறுக்க வைக்கிறது. வீடு அல்லது டியூசன் ! விளையாட்டையும் குறிப்பிட்ட நேரம் கொடுத்து முடிக்க சொல்லும் போது வெறுப்பின் உச்சத்துக்கே போய் விடுகிறார்கள்.


இன்றைய பெற்றோர்கள் 

நேற்றைய குழந்தைகள் நாம் என்பதை மறந்து விடுகிறோம்...தான் கற்காத கல்வியை தனது பிள்ளை கற்க வேண்டும் என்பதில் முடிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் எதிர்காலம்.

எதிலும் தனது குழந்தை முதன்மையாக வர வேண்டும் என ஆசை படுவதில்  தவறில்லை, அதற்காக பெரும் சுமையை வைப்பதுபோல் எப்போது படி படி என வற்புறுத்தி கொண்டே இருப்பது மன அழுத்தத்தை கொடுத்து விடும். ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்து விட்டாலும், வாழ்க்கையே தொலைந்து விட்டது என்று பெற்றோர் கொள்ளும் பதற்றம் அப்படியே அவர்களது பிள்ளைகளையும் தொற்றிக்கொள்கிறது.

இன்றைக்கு பெரும்பாலான வீட்டில் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை ஆடவும் செய்யணும், பாடவும் செய்யணும், படிக்கவும் செய்யணும், விளையாட்டிலும்,இசையிலும் தேர்ச்சி பெறணும் என்பதெல்லாம் மிக அதிகபடியான எதிர்பார்ப்புகள்.

இங்கே சம்பந்தப்பட்ட மாணவன், மூன்று பெண்பிள்ளைகளுக்கு நடுவில் ஒரே ஆண் , நம் சமூகத்து வழக்கப்படி(?) ஒட்டு மொத்த குடும்பமே போட்டி போட்டு செல்லம் கொடுத்திருக்கிறது...தனி அறை, டிவி, கம்பியூட்டர், செலவுக்கு பணம் இப்படி வளர்க்கப்பட்டவனுக்கு , பள்ளியில் ஆசிரியையின் கண்டிப்பு வெறுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லையே ?!!

குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய முடியாத பெற்றோர்கள் தங்களது குற்றத்தை மறைக்க குழந்தைகள் கேட்டதை உடனே  வாங்கிகொடுத்து பழக்கி  விடுகிறார்கள்...வெளி உலகத்தில் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றபோது எதிர்க்க தொடங்குகிறார்கள்...!

இன்றைய குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்கள் உடனே சுட்டி காட்டபடுவது சினிமா டிவியை தான்...! இந்த சினிமா, டிவியை குழந்தைகளிடம் முதலில் அறிமுகம் செய்வது யார் ? இவை இரண்டும் சரியான வழியை காட்டவில்லை என்றால் அவற்றை ஏன் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்கிறீர்கள்...?! வீட்டில் இருக்கும் டிவியை எடுத்துவிடுங்கள்...சினிமாவிற்கு போவதற்கு எவ்வாறு முடியும், நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால்...ஒரு பதினைந்து வயது பிள்ளையிடம் பணம் எப்படி வருகிறது பெற்றோர்கள் கொடுக்காமல்...


குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. பெற்றோர் இடையே நடக்கும் கருத்துவேறுபாடு சண்டைகள் ! அவர்கள் இடையே நடக்கும் அடி உதையும் வன்முறைதான். அப்போது பேசப்படும் அவதூறான பேச்சுக்கள் கூட குழந்தைகள் வயதிற்கு ஆபாசம் தான்...!


என்னதான் தீர்வு?!

குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை இன்றைய பள்ளிகளும் பெற்றோர்களும் !!?

சுற்றிலும் எங்கும் வன்முறைகள் காட்சிகள் சகஜமாகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அதில் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியம்..  பெரிய மனிதர்கள் பலரின் வாழ்க்கை வரலாறை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்...! விருப்பம் போல் விளையாட அனுமதியுங்கள்...படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை முதலில் உணரவேண்டும், அது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே.  ஒழுக்கம், பண்பாடு,விருந்தோம்பல், நன்னடத்தை, பெரியோரை மதித்தல், இப்படி நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டிய முக்கிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது...குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்...!

அவர்களுக்காகவே வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது முக்கியம் அல்ல 'அருகில் உடலாலும், தூரத்தில் உணர்வுகளாலும்' உங்கள் குழந்தையை  தொட்டு கொண்டே  வாழுங்கள்...!!

பள்ளிகள், அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் குறைகள் சீர் செய்யப்படவேண்டும்...இன்றைய மாணவர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் அவர்கள் மட்டும் அல்ல என்பதை அழுத்தமாக சொல்லி கட்டுரையை முடிக்கிறேன்.

எனது இப்பதிவு கழுகில் வெளிவந்தது

பின்குறிப்பு 

இன்றைய மாணவர்களின் ஆபத்தான மனநிலை குறித்த ஒரு பார்வை இப்பதிவின் தொடர்ச்சியாக நாளை வெளிவரும்...

* * *


படங்கள் - நன்றி கூகுள் 

புதன், பிப்ரவரி 22

அதீதத்தில் பசுமைவிடியல் - நண்பருக்கு நன்றி !!



பதிவுலகம் வந்த புதிதில் எனக்கு அறிமுகமான கார்த்திக்(எல்.கே) அதற்கு பிறகு இப்போது என் கணவருக்கும் நெருங்கிய நண்பராகி விட்டார் ...! தற்போது பிளாக்கில் பதிவுகள் எழுதுவதை குறைத்துவிட்டார். முன்பு பிறரது தளங்களை தனது பாகீரதி தளத்தில் அறிமுகம் செய்து பலரை, பலருக்கும் தெரிய வைத்தவர் எல்.கே. (மீண்டும் பாகீரதியில் 'இவர்களும் பிரபலமானவர்களே' பகுதியை எழுதலாமே !)

நாங்கள் பசுமை விடியல் இயக்கத்தின் இணையதளம் தொடங்கியதை அறிந்து மிக பாராட்டி வாழ்த்தினார். 'அதீதத்தில் பசுமைவிடியல் தளத்தை அறிமுகம் செய்து எழுதட்டுமா?' என ஒரு மாதமாக கேட்டு கொண்டே இருந்தார். தற்போது தான் இருவருக்கும் நேரம் வாய்த்தது...சில கேள்விகளை என்னிடம் கேட்டு பதிலை பெற்றுக்கொண்டு உடனே பதிவை எழுதி வெளியிட்டும் விட்டார். நடந்தது இதுதான் என்றாலும் அதன் பின் நடந்தது தான் நான் சிறிதும் எதிர்பாராத ஒன்று, வெளிவந்த அன்று மாலையே முகநூலில் 'மரத்தை வெட்டுங்கள்' பதிவு சசிதரன் என்பவரால் பகிரப்பட்டு இந்த நிமிடம் வரை 2,083 பகிர்வுகள் வரை பலராலும் கவனிக்கபட்டு கொண்டிருக்கிறது...!!! இரண்டு வருடங்களாக நான் எதிர்பார்த்து கொண்டிருந்த இது போன்ற ஒரு தருணத்திற்கு ஒரு மறைமுக காரணமாக அதீதத்தை நினைக்கிறேன்...! பெருமிதம் கொள்கிறேன் !

பசுமைவிடியல் இயக்கத்தின் சார்பாக நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதீதத்தில் வந்த பதிவு இப்போது உங்கள் பார்வைக்காக...

                                                       * * * * * * * * * * * * * * * * * 


இதுவரை பிற தளங்களை பற்றி வலையோசையில் மட்டுமே பகிர்ந்துள்ளோம்.. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தளத்தை பற்றியக் கட்டுரை இது.. இன்றைக்கு நமது சுற்றுப்புறச் சூழல் பல விதத்திலும் பாதிப்படைந்துள்ளது. பலரும் பலவகையிலும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். இங்கே நமது இணையத்திலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதி வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.அதே நேரம் விழிப்புணர்வை எழுத்தில் வெளிபடுத்துவதுடன் நின்றுவிடாமல் களத்தில் இறங்கி இருக்கும் 'மனதோடுமட்டும்' கௌசல்யாவையும் அவருக்கு உற்றத் துணையாக கை கோர்த்திருக்கும் ISR. செல்வகுமார், பிரபு கிருஷ்ணா , சூர்யபிரகாஷ் போன்றோரையும் பாராட்டுகிறேன்.

இணையத்தின் மூலமாக இணைந்த இவர்கள் 'பசுமைவிடியல்' என்ற இயக்கத்தை தொடங்கி, முறையாக திட்டங்கள் தீட்டி ஒவ்வொரு படியாக நிதானமாக எடுத்து வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்... இதற்கான ஒரு இணையதளம் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து பதிவர்களின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் திரு இசக்கி சுப்பையா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

*அன்றே இயக்கத்தின் முதல் மரமாக செண்பக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது...

*மாபெரும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒன்றையும் சங்கரன்கோவில் ஊரில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

* ISR. Ventures நிறுவனமும் பசுமைவிடியலும் இணைந்து மாங்குரோவ் காடுகளை பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறது...

சீமை கருவேலமரம்


இவ்வியக்கம் மிக முக்கிய பணியாக கையில் எடுத்திருப்பது சீமை கருவேலமரங்களை வேருடன் அழித்தொழிப்பது. சுற்றுச்சூழலையும் , நிலத்தடி நீரையும் பெருமளவில் பாதித்துகொண்டிருக்கும் நச்சு மரமான இதனை வேரறுக்க சீரிய முறையில் பல திட்டங்களை வடிவமைத்து இருக்கிறார்கள். முதல் படியாக தமிழகம் முழுவதும் தன்னார்வலர்களை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறார்கள். மேலும் விவரம் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

இம்மரத்தை குறித்த விவரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல  வேண்டிய ஏற்பாடுகள் ஒரு புறமும், மக்களிடம் நேரில் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றொரு புறத்திலுமாக உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றார்கள்.    
இவர்களை நாம் வாழ்த்துவோம்...நமது வாழ்த்துக்கள் அவர்களை அதிக உற்சாகமாக உழைக்க வைக்கும்.

பசுமைவிடியல் தளம் - www.pasumaividiyal.org

அதீதம் சார்பில் இயக்கத்தை குறித்து நான்கு கேள்விகள் கேட்கப்பட்டது...கேள்விகளுக்கான பதிலை பசுமைவிடியலின் சார்பில்  கௌசல்யா தெரிவித்தார்கள்...

1. எல்லோரும் மரம் நடவேண்டும் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்று ஆரம்பித்து உள்ளீர்கள்? 

உலக வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் சொல்வதும், செய்வதும் மரம் நடுவதுதான். ஆனால் நாங்கள் சொல்வோம் நடுவது முக்கியமில்லை, இந்த சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதுதான் முக்கியம் என்று...! ஏன் என்றால் வயலில்  களைகளை அகற்றினால் தான் பயிர் நன்கு வளரும், களைகள் இருப்பின் பயிரை வளரவிடாது என்பது விவசாயம் ! களை இருக்கும் போது பயிருக்கு தண்ணீர்,உரம் போட்டு பயனேதுமில்லை. அதையே தான் இங்கே நாங்களும் சொல்கிறோம், இந்த நச்சு மரங்களை அழித்தால் தான் நல்ல மரங்கள் வளரமுடியும், நல்ல மரங்களின் பயன் முழுதாக பூமிக்கு கிடைக்கும்.

2. சீமை கருவேலமரத்தின் தீமையை சுருக்கமாக கொஞ்சம் சொல்ல முடியுமா ?

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் சீமைக் கருவேல மரம்(வேலிகாத்தான், சீத்த மரம்,டெல்லி முள் என்று பல வட்டார பெயர் உண்டு அறிவியல் பெயர் ப்ரோசொபிஸ் ஜூலிபிளோரா (Prosopis Juliflora))

விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டுவாக்கில் விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன., இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்...! கடந்த அறுபது ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளைபடர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதை வேருடன் களைய முயற்சி மேற்கொண்டாலும் இன்னும் முழு மூச்சுடன் நடைபெறவில்லை என கருதுகிறோம். மேலே சொன்னபடி களை எடுக்காமல் பயிர் நடுவதும், உரமிடுவதும் வீண் என்ற எண்ணம் தான் இது பற்றிய ஆழமான ஆராய்ச்சியை எங்களுக்குள் உருவாக்கியது மேலும் இதன் தீங்குகள் பற்றி அறிய இங்கே படிக்கவும்
பதிவுலகமே மரத்தை வெட்ட உதவுங்கள்...!

3. களப்பணி தான் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.  பசுமை விடியல் நிர்வாகிகள் நால்வரும் நான்கு திசையில் இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியம்?
இதில் இப்படி ஒன்று இருக்கிறதா ?? உண்மையில் இந்த கேள்வி எங்களுக்குள் ஏன் இதுவரை எழவில்லை என ஆச்சர்யபடுகிறேன்.  இணைந்து செயல்படவேண்டும் என முடிவு செய்தோமே தவிர 'முடியுமா' என்ற வினா யாருக்கும் எழாததே 'சாத்தியம்' என்பதால் இருக்கலாம் அல்லவா...?! நால்வரின் எண்ணங்கள் ஒத்த அலைவரிசை என்ற போது நிச்சயம் எதுவும் சாத்தியமே !

4. சாத்தியம் என்றால் எவ்வாறு ? கொஞ்சம் சொல்லவும்...
நாங்கள் ஒன்றிணைய இணையம் தான் காரணம் என்பதை மறுக்கயியலாது. அதே நேரம் களத்தில் இறங்கி பணியாற்ற நல்ல மனிதர்களின் உதவிதான் வேண்டும். தகவல்களை பரிமாற்ற, சமூக நோக்கு கொண்டவர்களை ஒன்றிணைக்க, செய்திகளை அறிவிக்க, பலரிடம் இயக்கம் பற்றிய செயல்களை கொண்டு சேர்க்க இணையத்தை பயன்படுத்தி கொள்கிறோம். அவ்வளவே.

தற்போது எங்களுடன் இணைந்திருக்கும் தன்னார்வலர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள்...அவர்களுடன் நாங்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம்...அந்தந்த இடத்தில் நடக்க வேண்டிய களப்பணிகளை பற்றிய ஆலோசனைகள், முன்னெடுப்புகள் , கருத்துகள் பற்றி எல்லாம் விவாதித்த பின்னே செயலில் இறங்க இருக்கிறோம். களப்பணிகளின் போது கூடுமானவரை எங்களில் ஒருவர் களத்தில் இருப்பார்.  நாங்கள், தன்னார்வலர்கள் இணையும் போது அனைத்தும் சாத்தியமாகும்.

அதீததிற்கு மனமார்ந்த நன்றிகளை எங்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற நல்ல உள்ளங்கள்  எங்களுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் எங்களுக்கு இன்னும் அதிக உற்சாகத்தை கொடுக்கிறது...நாம் வாழும் இந்த சமூகத்திற்கு நம்மால் இயன்றவரை சிறு துரும்பையாவது கிள்ளி போடுவோம் என்று சொல்வார்கள் நாங்கள் துரும்பை கிள்ள அல்ல மரத்தையே வெட்டி சாய்க்க போகிறோம்...!!

நன்றி - அதீதம்   
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மீண்டும் ஒரு முறை அதீததிற்கு நன்றியையும் , 'மரங்களை வெட்டுங்கள்' பதிவை பலருக்கும் கொண்டு சேர்க்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 

வியாழன், பிப்ரவரி 9

திருநெல்வேலியில் நடைபெற்ற 'நூல் வெளியீடு விழா'

திருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு அழைப்பிதழ் கொடுத்தாங்க என்பது எனக்கு உண்மையில் பெரிய விஷயம் தான்.  வேறு ஒரு மீட்டிங் முடிச்சிட்டு நான், என் கணவர், உணவுஉலகம்  சங்கரலிங்கம் அவர்களும் ஜானகிராம் ஹோட்டலை விட்டு வெளில வந்தபோது திரு.கிருஷி எங்களை எதிர்கொண்டார்...சரி அவருக்கு  தெரிஞ்சவர் போல என்று இருந்தேன்...இரண்டு பேரும் தனியா என்ன பேசினாங்கன்னு தெரியல...திரு .கிருஷி அவர்கள் வேகவேகமா ஒரு அழைப்பிதழ் எடுத்து என் பெயரை எழுதி என்கிட்டே கொடுத்து 'அவசியம் வாங்க' என்றார். அப்போது அருகில் மிகவும் அமைதியாக ஒருத்தர் நின்று கொண்டிருந்தார், கிருஷி 'இவர் பேர் திரு .நாறும்பூ நாதன், இவர் எழுதிய புத்தகத்தை தான் வெளியிட போறோம்' என்றார்.


தன்னை அறிமுகபடுத்திக்கொண்ட அவர் 'நானும் பிளாக் வச்சிருக்கிறேன், ஆனா அவ்வளவா எழுதுவதில்லை, யாருக்கும் தெரியாது' என்றார் அமைதியாக...!!(பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்படிதான் அடக்கமா இருக்கிறாங்க, ஏதோ கொஞ்சம் அப்படி இப்படி எழுதுற நாம என்னனா' ஆஹா ஓஹோ னு கொடுக்குறது எல்லாம் ஓவர் சவுண்ட் !!? )

ஆக இப்படியாக எனக்கு கிடைக்க பெற்றது அழைப்பிதழ்...! இது போதாதுன்னு சென்னையில் இருந்து எறும்பு ராஜகோபால் போன் பண்ணி 'விழா நாள் நினைவு இருக்கா, வண்ணதாசன் சார்,சுகா சார் எல்லாம் வராங்க, சனிக்கிழமைதான் மறந்துடாதிங்க, வேணும்னா அழைப்பிதழை  கழுத்தில மாட்டிகோங்க'னு அடாவடி அட்வைஸ் வேற !!(என்னோட ஞாபக மறதி உலக பிரசித்தம் போல !) உண்மையில் அவர் சொன்னதும் தான் நினைவே வந்தது :))

பெரிய பெரிய எழுத்தாளர்களை பார்க்க போறோம்னு ஊருக்கு முன்னாடி கிளம்பி போயிட்டேன் போல , அப்பத்தான் ஸ்டேஜ் அரேன்ஜ் பண்றாங்க !! கொஞ்ச நேரத்தில எல்லோரும் வந்து சேர விழா தொடங்கியது...முதலில் கரிசல் குயில் கிருஷ்ண சாமி, திருவுடையான் இசை...பாரதியார் பாடல் அரங்கம் நிறைத்தது.

பின்னர் ஒவ்வொரு நிகழ்ச்சியாக தொடர்ந்தது...சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு தி.க.சி அவர்கள் திரு.நாறும்பூ நாதனின் 'ஜமீலாவை எனக்கு அறிமுகபடுத்தியவன்' நூலை வெளியிட, இயக்குனர், எழுத்தாளர் திரு சுகா அவர்கள் பெற்று கொண்டார். வாழ்த்தி பேச வந்த திரு.தி.க.சி அவர்கள் எழுத்தாளர்களின் இன்றைய பங்களிப்பை பற்றி சில வார்த்தைகளும், அதிலும் முக்கியமாக இன்றைய எழுத்தாளர்கள் அரசியல் நையாண்டி போன்றவற்றை கொஞ்சம் எழுதினா நல்லா இருக்கும் என்றும், விழா நாயகனை பற்றி சில வார்த்தைகளும் சொல்லி அமர்ந்தார்...

வண்ணதாசன், செல்வராஜ், தோப்பில் முகமது மீரான், நாறும்பூநாதன், தி க சி, சுகா, கீரனூர் ஜாகிர் ராஜா, உதயகுமார் 

திரு.சுகா 

இவரது எழுத்துகளின் ரசிகை நான்...விகடனில் நெல்லை மணம் கமிழும் 'மூங்கில் மூச்சு' தொடர்ந்து படித்து விடுவேன்...அவரது பிளாக்கில் போட்ட பின்னூட்டத்தில் 'நேரில் சந்தித்தால் எப்படியும் உங்களிடம் இருந்து ஒரு கையெழுத்தை பெற்றுவிடணும்' என்று சொன்னேன், ஆனா நேரில் சந்திச்ச போது என்ன பேசனு தெரியாம பதட்டத்தில எதையோ பேசி கையெழுத்து வாங்க தோணல, இப்ப உட்கார்ந்து 'அடடா போச்சே'ன்னு முழிச்சிட்டு இருக்கிறேன் (ம்...அடுத்து ஒரு சந்தர்ப்பம் வாய்க்காமலா போய்டும்)

இவர் பேசியதில் இருந்து சில,

                                                  எழுத்தாளர் திரு சுகா அவர்கள் 

" நான் திரு.வண்ணதாசன் அவர்களின் வெறி பிடித்த தீவிர வாசகன்...அவர் கதையில் அவருக்கே ஏதாவது மறந்து போய் இருந்தாலும் அதை நான் சரியா சொல்லி விடுவேன்...அந்த அளவிற்கு அவர் எழுத்துக்களை நான் வாசிச்சிருக்கிறேன்...என்னோட இரண்டு தொடரில் எதிலாவது இவரது இரண்டு வரியை சேர்த்திருப்பேன், அது இயல்பா நடக்கிற ஒன்று. தோப்பில் முஹம்மது மீரான்,கீரனூர் ஜாகிர்ராஜா எழுத்துக்களை படிச்சிருக்கிறேன்...இப்பதான் நேர்ல பார்கிறேன்...உதயகுமார் எழுத்தை இரு நாள் முன் படித்தேன்...மூத்த எழுத்தாளர்  தி.க.சி இவர் மட்டும் இல்லைனா திருநெல்வேலியில் பல படைப்பாளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போய் இருப்பார்கள், பலரை உருவாக்கி இருக்கிறார், இவரால் பல எழுத்தாளர்கள் உருவாகியும் இருக்கிறார்கள்...! இவரோட நானும் மேடையில் இருக்கிறேன் என்பதை பெருமையாக நினைக்கிறேன் "


" நாறும்பூ நாதன் அவர்கள் தனது ஒரு கதையில் 'ஒரு கணவனும் மனைவியும் வீட்ல இருக்கிறாங்க, அவங்களுக்கு தெரியாம திருட்டு போயிடுது...' அந்த கதையை படிச்சிட்டு 'இதையெல்லாமா கதையா எழுதுவாங்க' ஆச்சர்யப்பட்டேன். அதிலையும் கதை முடிகிற இடத்தை படிச்சு ரொம்ப சிலாகிச்சேன். என்னுடைய கதையின் இறுதியை வண்ணதாசன் ரொம்ப சிலாகிப்பாங்க, அதுமாதிரி நான் நாறும் பூ அவர்களின் கதையின் இறுதி பகுதியை மிக ரசித்தேன் "


திரு.தோப்பில் முஹம்மது மீரான் 

1997 இல் 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். இவரது எழுத்துக்கள் ஏற்கனவே கொஞ்சம் படித்து இருக்கிறேன்...எல்லா சமூதாயதினரோடும் தொடர்பு உடையது இவரது எழுத்துக்கள்...இவரது 'மரணத்துக்கு பின்' கொஞ்சம் படித்து பாருங்கள்...

வாசகர்களை வாசகன், ரசிகன், சக்ருதையன் என மூணாக பிரித்து சொல்வார். படைப்பாளிக்கு ஒத்த மனதை உடைய சக்ருதையன், படைப்பில் இருக்கும் மௌனத்தை சப்தமாக்கி, இடைவெளியை நிரப்பி, தேடலை உருவாகுபவன், எங்கே இவர்கள் இருவரும் சங்கமிக்கிரார்களோ அங்கே நிறைவு பெறுகிறது ஒரு படைப்பு,அது வரை அப்படைப்பு நிறைவு பெறாது என்பார் இவர். மேலும் ரசிகனும், வாசகனும் படைப்பின் விற்பனைக்கு தான் தேவை,படைப்பிற்கு சக்ருதையன் தான் தேவை, எந்த ஊடகத்தாலும் சக்ருதையனை அசைக்கமுடியாது என்பார். படிப்பவர்களை குறித்த இவரது புரிதல் அருமை.

இந்த விழாவிலும் திரு.நாறும்பூநாதன் அவர்களின் புத்தகத்தின் தலைப்பை பற்றி சிறிது நகைசுவையாக குறிப்பிட்டு பேசினார். கதையில் ஜமீலா என்ற பெண்ணை ஆரம்பத்தில் இருந்து தேடியதாகவும் ஆனால் இறுதியில் அந்த ஜமீலாவின் வருகை ஒரு புத்தக வடிவில் இருந்தது எனவும், இது போன்ற நடை ஒரு வித்தியாசமான டெக்னிக் என்று புகழ்ந்தார்.

எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் சொன்னவற்றில் சில...

*படைப்பாளிக்கு மொழி என்பது தடையாக இருக்காது...முக்கியமாக  படைப்பில் பிழைகளை தேடக்கூடாது...அவங்க படைப்பாகத்தான் பார்க்க வேண்டும்...


* எழுத்திற்காக அதிக நோபல் பரிசை வாங்கி இருப்பவர்கள் யூதர்கள் தான்...அதிகமான கொடுமையை தாங்கியவர்கள் அவர்கள் தானே ! அதனை பதிந்திருக்கிறார்கள்...


"முன்னாடி எழுதினவங்க எல்லாம்  அவங்க நிகழ்காலத்தில் நடந்ததை எழுதினாங்க, அதையே இப்ப நாமும் எழுத வேண்டியது இல்ல...பழைய கதை இப்ப தேவையும் இல்ல...அதை விடுத்து நிகழ்காலத்தில நடக்கிறதை எழுதுங்க...நம் சமூதாயத்தில் இருக்கும் அவலநிலையை எழுதுங்கள், சமூகம், அரசியலில் நிலவும் ஊழலுக்கு எதிராக எழுதுங்கள்...அதற்காக பேருந்தில் கல் எரிந்து போராட சொல்லவில்லை, எழுத்தினால் போராடுங்கள்...அந்நிய சக்திக்கு எதிரானதொரு ஒரு போராட்டத்தை இன்றைய இளம் படைப்பாளிகள் செய்யவேண்டும்..."

மேலும்

" இலங்கையில் நடக்கிறதை பற்றி ஈழ தமிழர்கள் எழுதுகிறார்கள் ...ஆனால்  இங்கே இருக்கிற எத்தனை தமிழ் படிப்பாளிகள் அதை பதிந்தார்கள் ? ஏன் அதை எழுத முடியவில்லை...?!" (இப்படி கேட்ட போது அரங்கில் நிலவிய கனத்த மௌனம் மனதை வெகுவாக தைத்தது !)

திரு.கீரனூர் ஜாகிர்ராஜா 

'ஒடுக்கப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்' என்று பிளாக்கில் எழுதி இருப்பார்...! இது போன்றே இவரது எழுத்துக்கள் பல மனிதர்களின் வாழ்வை அப்படியே வெளிக்கொண்டு வந்திருக்கும்...அதிலும் இவரது 'மீன்காரத்தெரு' நாவலை இயன்றால் படித்து பாருங்கள்...அழுக்கும் வன்முறையும், வறுமையும் நிலவும் இஸ்லாமிய மீன்காரர்களின் தெருவையும், இம்மக்களை சுரண்டி வாழும் மேல்தட்டு பங்களாவாசிகளுக்கும் இடையேயான முரண்பாடுகளை அப்படியே அவர்களின் நடுவில் வாழ்ந்து எழுதியதை போன்று இருக்கும்...மிகவும் உணர்ச்சிகரமான பதிவு...!

இவ்விழாவிலும் திரு .வண்ணதாசன் அவர்கள் இவரது இந்த நாவலை குறித்து மிக பெருமையாக விவரித்தார்.

திரு வண்ணதாசன் 

சுவையாக சுவாரசியமா இப்படி எல்லாம் பேச முடியுமா என்ற ஆச்சர்யத்தில் மெய் மறந்து ரசித்து கேட்டு கொண்டிருந்தேன். கவிதைகளின் வழியே அறிமுகமான இவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பம் அன்று நிறைவேறியது.

நாறும்பூ நாதன் அவர்களின் முதல் நாவலான 'கனவில் உதிர்ந்த பூ' பற்றி பேச தொடங்கியவர் அப்படியே எழுத்தாளர்கள் பற்றி சொல்லி கொண்டே போனார், அதில் என் நினைவில் இருந்தனவற்றில் இருந்து சில...

                                                  எழுத்தாளர் திரு.வண்ணதாசன் அவர்கள் 
 
" கனவு என்பதே ஒரு உதிரும் பூ தான்! எழுத்தாளன் என்பவன் கனவில் உதிர்கின்ற பூவையும், நனவில் மலர்கின்ற பூவையும் தொடுத்துக்கொண்டே இருக்கிறான் . எது கனவு என்பதும் அல்லது எது மலர் என்பதும் அல்லது எது மலர்ந்தது என்பதும், எது உதிர்ந்தது என்பதும் எழுதுபவன் மட்டுமே அறிவான்.....எழுதுகிறவன் செய்கிற வேலை என்ன ?? அறிவது, அறிந்து கொள்வது, தான் அறிந்தவற்றை பிறருக்கு அறியச் செய்வது.....தான் அறிந்த வாழ்வை, தான் அறிந்த மனிதர்களை அவர்கள் அறியாத மனிதர்களிடம், அறிய வைப்பது...!இது தான் வேலை  இதை அறிய விரும்புகிறவர்களுக்கும், அறிய விரும்பாதவர்களுக்கும்,அறிவதை மறுக்கிறவர்களுக்கு அறிமுகபடுத்தி வைக்கிறான் "


"புதுமை பித்தன் யாரை அறிமுகப்படுத்தினார் ?! செல்லம்மாவை மட்டும் அல்ல கந்தசாமியை மட்டுமல்ல கடவுளையே அறிமுகபடுத்தினார்...கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ! சுகா தனது கதைகளில் செல்லப்பா மாமா, குப்பம்மா ஆச்சி, பாலாஜி,குஞ்சு போன்றவர்களை அறிமுகபடுத்தி இருக்கிறார்...! "


" எழுத்தாளர்கள் மனிதர்களை, மனிதர்கள் சார்ந்த வாழ்வை, குடும்பத்தை ,தெருவை, வீட்டை இப்படி எதையாவது அறிமுகபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்..." 


"இசக்கி அண்ணாச்சி அவர்களின் புகைப்படங்கள் நமக்கு எதை அறிமுகப்படுத்தின... நமது அடுத்த சந்ததிக்கு மருத மரத்தை அறிமுகபடுத்தி காலத்தின் சாட்சியாக இருக்கின்றன.நாம் மருதநிலக்காரர்கள் ஆனால் சாலையில் இருக்கும் மருத மரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு  விட்டன...மருத மரத்தின் பறந்து விரிந்த தோற்றத்தையும், அதன்  நிழலையும், அதன் அருகில் குளத்தில் கிடக்கும் ஒடிந்த கிளையையும் அறிமுகபடுத்தி இருப்பார், மரத்தில் ஏற்கனவே ஒரு காக்கா இருக்கும் அதைவிட அழகாய் மற்றொரு காக்காவை தனது தூரிகையால் ஓவியமாக புகைப்படத்தில் கொண்டு வந்திருப்பார், இப்படி ஒரு நல்ல கலைஞன் எதையாவது அறிமுகபடுத்திக்கொண்டே இருப்பான்...!"

உதயசங்கர் குறித்து : " இவர் 22 புத்தகங்கள் எழுதி இருக்கிறார்...இவரை நாம் இன்னும் சரியாக அறிந்து கொள்ளவில்லை...நல்ல கலைஞனை எவ்வாறு அறிவது, அவனது படைப்பின் மூலமாகத்தானே ?! இவரது  'பிறிதொரு மரணம்' நாம் அறியவில்லை என்றால் பிறிதொரு வாழ்வையே நாம் அறியாதவர்கள் ஆகிறோம். பிறிதொரு வாழ்வு என்ன வாழ்வு நான்ம வாழும் வாழ்வையே அறியாமல் இருக்கிறோம்...தயவு செய்து இவரது 'முன்னொரு காலத்திலேயே' என்ற புத்தகத்தை அவசியம் படியுங்கள்...அனைவராலும் கொண்டாடபடவேண்டியவர்...இவரது 22 கட்டுரைகள் 22 மனிதர்களை பற்றிய அற்புதமான தொகுப்பு...அதில் வருபவர்கள் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று ஒதுக்கி விடாதீர்கள், இவர்கள் நம் காலத்து நாயகர்கள் "


இவ்வாறு, இன்னும் பேசிக்கொண்டே சென்றார்...பேச்சை முடித்து திரு. வண்ணதாசன் அவர்கள் அங்கிருந்து அகன்றபின் நேரம் பார்த்தேன் சரியாக 'இருபது நிமிடங்கள்' கடந்திருந்தன...!பேசி முடிக்கும் வரை சிறு சத்தம் எழவில்லை...அனைவரையும் தனது பேச்சால் கட்டி போட்டு இருந்தார். இன்னும் அரைமணி நேரம் பேசி இருந்தாலும் கேட்டுக்கொண்டுதான் இருந்திருப்போம்...!!


திரு.உதயசங்கர்

கோவில்பட்டி நிறைய எழுத்தாளர்களை படைப்புலகிற்கு கொடுத்திருக்கிறது...முப்பது வருடத்திற்கு முன் அங்கிருந்து வந்தவர்தான் எழுத்தாளர் உதயசங்கர்...இவர் நாறும்பூ நாதனின் நெருங்கிய நண்பர். சிலவற்றை மிக சுவாரசியமாக கூறி அரங்கை கலகலப்பாக்கினார். அவரது பேச்சில் இருந்து...

                                                    எழுத்தாளர் திரு.உதயசங்கர் அவர்கள் 

" எழுத்தாளர்களின் மனைவியர் தான் ரொம்ப சிரமப்படுவாங்க...என்னவோ எழுதுறார் என்ற அளவில் தான் அவர்களின் புரிதல் இருக்கும்...இது தெரிஞ்சிதான் நான் கல்யாணத்துக்கு முன்பே நான் ஒரு எழுத்தாளன் அப்படின்னு இப்படின்னு பில்ட்அப் எல்லாம் கொடுத்து தயார் பண்ணி வைத்தேன்...ஆனால் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் வெடித்தது பிரச்சனை, 'என்னை எழுத்தாளர்னு தெரிஞ்சி தானே சம்மதிச்ச, இப்ப என்ன சண்டை போடுற'னு கேட்டேன். அதுக்கு அவங்க, 'ஆமாம் தெரியும், கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் அப்படி இப்படி இருப்பாங்க, அப்புறம் திருத்திவிடலாம்னு நினைச்சேன் ஆனா இது புது கோட்டியால்ல(?) இருக்கு...!?' 

இயல்பாக எல்லோரும் ரசிக்கும் விதமாக நிறைய பேசினார்...

திரு.நாறும்பூநாதன் 

திரு.உதயகுமார் அவர்களை பற்றி பேசியபோது, தங்களது சிறுவயது நினைவுகளை குறிப்பிட்டு சொன்னவை அருமை. உதயசங்கர் தனது அறையில் உடன் இருந்த மலையாள நண்பர் ஒருவரின் மூலமாக மிக குறுகிய காலத்தில் மலையாளம் கற்று பல மலையாள நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்று கூறி ஆச்சர்யபடுத்தினார்...!!

படைப்புலகம் குறித்து திருநெல்வேலியில் ஒரு பெரிய கருத்தரங்கம் நடத்தணும் என்று ஒரு யோசனை இருக்கிறது என தனது என்னத்தை வெளிபடுத்தினார்.

நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது...பல நல்ல நினைவுகளை பெற்ற மகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

ஒரு வித்தியாசமான அனுபவம் 

பொதுவாக எழுத்தாளர்கள் கலந்துக்கிற விழா என்றாலே இப்படி எல்லாம் இருக்கும் என சில புரிதல்கள், சில கற்பிதங்கள் என் மூலையில் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தது...அதை எல்லாம் உடைத்து தூக்கி போட்டுவிட்டது இந்த நிகழ்ச்சி...!! வந்திருந்த ஒவ்வொருவரும் பிற எழுத்தாளர்களை வெளிப்படையாக மனமார பாராட்டினர், அதை விட அடுத்தவர்களின் நாவல்களை நினைவு கூர்ந்து அதில் இருக்கும் கதாபாத்திரம் பெயர் வரை நினைவு வைத்து சொன்ன விதம் பெருமிதம் கொள்ள செய்தது...

                                       ஆர்வமுடன் கவனிக்கும் அரங்கில் ஒரு பகுதியினர்...


அரங்கம் முழுவதும் நிறைந்து பலர் நின்றுகொண்டிருந்தனர்...எழுத்தாளர்கள் பேசும் போது சிறிதும் தேவையற்ற சத்தம் எழவில்லை...கைதட்டல்களும் , சிரிப்பொலியும் மாறி மாறி கேட்டது அழகு...நல்ல தமிழை, ஆங்கில கலப்பில்லாத தமிழை கேட்க வேண்டுமென்றால் இது போன்ற நிகழ்ச்சியை தவறவிட கூடாது. 

'ஜமீலாவை எனக்கு அறிமுகம் செய்தவன்' புத்தகம் வெளியிட்டவர்கள்: வம்சி புக்ஸ்.

இப்படி ஒரு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சங்கரலிங்கம் அண்ணாவுக்கு என் நன்றிகள்.

பின் குறிப்பு

எனக்கு நினைவில் இருந்த வரை எழுதி இருக்கிறேன்...யாருக்கும் ஏதும் குறையாக தெரிந்தால் பொறுத்துக்கொள்ளவும்...உடன் தெரிவித்தால் சரி செய்து கொள்கிறேன்.

நூல் வெளியீட்டு விழா குறித்து தொடர்ந்த எனது பார்வையை அடுத்த ஒரு பதிவில் பதிய இருக்கிறேன்...

இங்கே குறிப்பிடபட்ட எழுத்தாளர்களின் வலைத்தளங்கள் செல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும் அவர்களின் பெயரை கிளிக் செய்யவும்...அவசியம் சென்று அருமையான நல்ல எழுத்துக்களை வாசித்து பயன்பெறுங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன்.

நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா 

புதன், ஜனவரி 25

இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸனா...?!!

பதிவினை படிக்கும் முன்


'இட்லி, தோசை ஒரு ஸ்லோ பாய்ஸன்' என்று ஒரு கட்டுரை மெயில் மூலமாக வந்தது. தலைப்பை பார்த்ததும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது.  உண்மைதானா என்ற யோசனையில் உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா அவர்கள் இது தொடர்பாக எழுதிய ஒரு பதிவை படித்து பார்த்தேன்...அதன் மூலம் எனக்கு சில புரிதல்கள் ஏற்பட்டது...எனவே மெயிலில் வந்த விவரங்களையும் எனது புரிதல்களையும் சேர்த்து இங்கே பதிவாக எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்... 


* * * * * * * *

மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள். 

இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.

ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி
மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை
மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.


முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.

1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை
மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு
ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.

2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.

3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு
நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி
நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம்
ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.

4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப
வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு
சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.

5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும்  ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு  ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது. 

6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.


7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்
போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு
மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால்
இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம்
கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!

9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.

10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை
செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க
வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை
கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.


கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும். இது பற்றிய முழு விபரங்களை காண: http://timesofindia.indiatimes.com/topic/search?q=idli-dosa%20batter (நன்றி-உணவு உலகம்)


நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி,
மாட்டிரைச்சிகளில் காணப்படும்  ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி
சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான  இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.

இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.

தயவு செய்து இயன்றால் இதை பலருக்கும் பகிரவும், முடிந்த அளவுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். 


நன்றி -  தமிழ் உலகம் 


* * * * * * * * 

பின்குறிப்பு 


இன்றைய உலகில் அனைத்தும் மிக வேகமாகி விட்டது. எல்லாமே ரெடிமேட் !! பொதுவாக வெளியில் வாங்கப்படும் எந்த உணவு பொருளாக இருந்தாலும் அதில் முழுமையான சுத்தம் என்பது இருக்காது...சமையல் அறையில் ஒரு மணி நேரம் செலவு செய்வதை கூட நேர விரயம் என நினைக்கிறோம் . ஆண் பெண் இருவரும் வேலைக்கு சென்றாலும், தங்களின் ஆரோக்கியத்திலும் சிறிது அக்கறை காட்டினால் நல்லது. பணம் சம்பாதிப்பது நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்வதற்க்காகத்தான், மருத்துவருக்கு கொடுப்பதற்காக இல்லை என்பதை புரிந்து கொண்டு உணவுகளை கூடுமானவரை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது உத்தமம் ! எந்த உணவு பொருளில் எந்த ஆபத்து ஒளிந்திருக்குமோ தெரியவில்லை...!! அனைத்தையும் விட நமது உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை புரிந்து நடந்துகொள்வோம்.



நன்றி - படங்கள் கூகுள் 

வியாழன், ஜனவரி 19

எல்லோருக்குமல்ல, இந்த பொங்கலும் புத்தாண்டும்...!?



மார்கழி மாதம் பிறந்ததும் வாசலில் புதுக்கோலங்கள் மட்டும் பூக்கவில்லை, சில பண்டிகைகளும் தான்...! புத்தாடைகள், பலகாரங்கள், ஆட்டம் பாட்டம், குதூகலங்கள், வாண வேடிக்கைகள் என்று சுற்றிச் சுழன்றது  மார்கழியும் அதனை தொடர்ந்த தை மாதமும்...!

கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தமிழ் புத்தாண்டு(!) இப்படி மாறி மாறி மக்களின் மணி பர்சை காலி செய்யும் தினங்கள் அணிவகுத்து, அவை  முடியும் தருவாயும் வந்து முடிந்தே விட்டது. பண்டிகைகளை கொண்டாட சில பல காரணங்கள் இருந்தாலும் ஒரே காரணம் மக்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பதுதான். ஆனால் எத்தனை சதவீத மக்கள் உண்மையான மகிழ்ச்சியில் கொண்டாடி இருப்பார்கள்...?! கொண்டாட்டங்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் சில வருத்தமான நிகழ்வுகளையும் நினைக்க தோணுகிறது.

ஏன் இந்த கோபம் ?

கடலூர், புதுச்சேரியில் 'தானே' புயல் கோரதாண்டவம் ஆடி சில வாரங்கள் ஆகின்றன...15 வருட உழைப்பை ஒரே நாளில் தொலைத்துவிட்டு திகைத்து நிற்கிறார்கள். சிதறி போன தங்களின் வாழ்வை மீண்டும் எதில் இருந்து தொடங்குவது என தெரியாமல் தவிக்கிறார்கள். தென்னை, வாழை போன்றவையும் பிரதான மரங்களான பலா, முந்திரியும் வேரோடு சாய்ந்து அவர்களின் வாழ்க்கையையும் சேர்த்து முடக்கிப்போட்டு விட்டது.பிற இடங்களை விட இங்குள்ளவர்களின் விவசாயம் வித்தியாசமானது, நெல்,கரும்பு போன்ற பயிர்களை சில மாதங்களில் உற்பத்தி செய்துவிடலாம். ஆனால் பலா, முந்திரி போன்றவை அப்படி அல்ல.ஒரு பலா மரம் வைத்து அது பலன் தர 15 வருடங்கள் !!


அங்குள்ள எனது நண்பர் ஒருவர் சொன்னார்,'அக்காவின் தோட்டத்திலிருந்த 1,500 பலா,முந்திரி,தென்னை மரங்களும் வீழ்ந்துவிட்டன, குடும்பத்தின் மொத்த வருவாயும் இதனை அடிப்படையாக கொண்டு தான் இருந்தது.  இனி என்ன செய்வார்கள் என தெரியவில்லை' என்று மிக வருந்தினார். ஒரு குடும்பத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து மரங்களாவது இருக்குமாம், அதை வைத்துதான் அவர்களின் வாழ்க்கை ! இப்போது அதையும் இழந்து செய்வதறியாது நிற்கும் இவர்களுக்கு பொங்கல் தினம் என்ற ஒன்று எத்தகைய நினைவை கொடுத்திருக்கும் ?!

சுனாமி கடலோர பகுதிகளை சுருட்டிக்கொண்டு போனபோது, 'நாம ஊருக்குள்ள தானே இருக்கிறோம், பிரச்னை இல்லை' னு ஒரு நொடியாவது நினைத்திருப்போம். இயற்கை இதை புரிந்துகொண்டது போல, 'அப்படியா நினைக்கிற, விட்டேனா பார்' என புயலாய் உருவெடுத்து ஊரை லேசாக தனது கையினால் தட்டி இருக்கிறது. எத்தனை கோடி சேதங்கள், அழிவுகள்...! சாய்ந்த மின்கம்பங்களையும், வீசி எறியப்பட்ட கூரைகளையும் செப்பனிட்டு விடலாம் ஆனால் வாழ்வாதாரமாக நம்பிய மரங்கள் போய்விட்டனவே...என்ன செய்வார்கள் அம்மக்கள் !?


வாழும்போதே நரகத்தை சற்று ருசித்திருக்கிறார்கள் ! தூரத்தில் இருக்கும் நாம் சுலபமாக சொல்லலாம், மாற்றுத் தொழிலை பார்த்துக் கொண்டால் போச்சு என்று ! ஆனால் அனுபவித்தால் தான் தெரியும் அந்த வலி, வேதனை...! அம்மக்கள் விரைவாக மீண்டு எழ இயற்கையை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் தோணவில்லை எனக்கு...!

ஏன் இந்த அவஸ்தை ?

வட தமிழகத்தில் ஒரு பக்கம் பண்டிகை கொண்டாட இயலாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்றால் தென்பகுதியில் வித்தியாசமான அவஸ்தை ஒன்றை இப்பண்டிகை நாட்களில் இந்த மக்கள் சந்தித்தார்கள்

பழி(லி) ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதை போல் எங்கோ நடந்த ஒரு வருந்த தகுந்த ஒரு கொலை சம்பவம் இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்வை சிரமபடுத்திவிட்டது. பண்டிகை நாட்களில் பயணிக்க பேருந்துகள் சரிவர இயங்கவில்லை, எப்போது வரும், வருமா வராதா எனவும் வெளியூர் போனால் திரும்பி வர பேருந்து இருக்குமா எனவும் தெரியாமல் தவித்துவிட்டார்கள்.

ஒரு மணிநேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு சமயங்களில் ஐந்து மணி நேரம் கூட ஆனது...இரவு நேரங்களில் பேருந்து பயணம் என்பது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவிட்டது. பேருந்துகள் தனியாக சென்றால்  வழி மறிக்கப் படலாம் என இரண்டு மூன்று பேருந்துகள் சேர்ந்ததும் அனுப்பப்பட்டது, காவல் துறையினரின் துணையுடன் பயணிக்கின்றன சில பேருந்துகள் !?

பெரும் ஆபத்துகள் நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஓட்டுனரும், மக்களும் பயணிக்கின்றனர். (இதனை விரிவாக எழுதவும் மிக யோசிக்கவேண்டியதாக இருக்கிறது) அதுவும் இந்த பொங்கல் சமயத்தில் அல்லல்படுவதென்னவோ சாமானிய மக்கள்தான்.

இன்னும் கூட எப்போது எத்திசையில் இருந்து எந்தவிதமான பூதங்கள் கிளம்புமோ என்கிற ஒரு வித சிந்தனையில் உழலுகின்றனர் சில மக்கள். ஒரு கை வியாபாரத்தை கவனிக்க கடைக்காரரின் மற்றொரு கை கடையின் ஷட்டரின் மேல் இழுத்து மூட தயாராக !!

நகரங்களில் இதன் பாதிப்புகள் அவ்வளவாக இல்லை என்றாலும் இங்குள்ள சில கிராமங்களில் சிலரிடம் 'என்ன பொங்கலு' என்ற ஒரு சலிப்பு வந்துவிட்டது. விலைவாசி உயர்வு பொதுவான ஒன்றுதான் என்றாலும் அபரீதமான பேருந்து கட்டண உயர்வு போன்றவை சாமானிய மக்களை வருத்தி எடுக்கிறதை பேருந்தில் பயணிக்கும் போது கவனிக்க முடிந்தது.(கணக்கு கேட்டு ஒரு வழி பண்றாங்க ஜனங்கள் ! பாவம் இந்த நடத்துனர்கள் !) 

இயற்கை தனது கோர முகத்தை ஒரு பக்கம் காட்டினால் சில மனிதர்கள் தங்களின் கோரமுகத்தை காட்டுவதால் ஏற்படும் இன்னல்கள் மற்றொரு புறம்.

இது போன்ற நிலையில் வந்து போன பொங்கலும் புத்தாண்டும் வருடத்தில் அதுவும் ஒரு தினம் என்பதாக கடந்து...சென்றே விட்டது...!!

கூடங்குளம் 

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது  மக்களின் உண்ணாவிரதம் ! சுயநல மனிதர்கள் நிறைந்த உலகில் எந்தவித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக போராடி கொண்டிருக்கும் இம்மக்களை பற்றி ஆரம்பத்தில் பெரிதுபடுத்திய மீடியாக்கள், இணையம் உட்பட அனைத்தும் இப்போது சற்று தொய்வடைந்து விட்டன...இவர்களின் போராட்டத்தின் முடிவு எப்போது, எவ்வாறு, யாரால் என்று தீர்மானிக்க முடியா நிலையில் இவர்கள் நடுவிலும் பல பண்டிகைகள் வந்து சென்று விட்டன எந்தவித மகிழ்ச்சியையும் முழுதாய் கொடுக்காமல்...!!

முல்லை பெரியாறு 

ஆறு மாவட்ட மக்கள் தமது பகுதியில் இப்போதும்,எதிர்காலத்திலும் தொடர்ந்து விவசாயம் நல்லமுறையில் நடக்குமா என்ற கேள்விக்குறியுடன் முல்லை பெரியாறை எதிர்பார்ப்புடன் பார்த்துகொண்டிருக்கும் ஒரு நிலை...! இவர்களுக்கும் மிக நெருங்கிய சம்பந்தப்பட்டதுதான் பொங்கல் ! 

பொதுவா சொல்றேனுங்க !!

தன்னம்பிக்கை மிக்க நம் மக்கள் தங்களின் உழைப்பு, திறமை கைக்கொண்டு விரைவில் மீண்டு எழும் அந்நாளே அவர்களுக்கு உண்மையான பண்டிகைநாள்.

பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளை/விவசாயத்தை நினைவு கூறுவதற்காக இருக்கவேண்டும். ஆனால் இப்ப யாருங்க விவசாயத்தை மதிக்கிறாங்க...?! ஊருக்கே உணவு கொடுக்கிற அவர்களை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம், ஒரு சக மனிதராக கூட நினைக்காத நிலை தானே இருக்கிறது. முதலில் விவசாயத்திற்கு நல்ல ஒரு அங்கீகாரம் கொடுக்கபட வேண்டும். சமுதாயத்தின் பார்வையில் சராசரியை விட கீழாக பார்க்கபடுகிற அவர்களின் நிலை மாறவும் வழிவகை(?!) செய்துவிட்டு இந்த பொங்கலை சிறப்பாக அவர்களுடன் இணைந்து கொண்டாடும் வரை இது போன்ற தினங்கள் வெறும் விடுமுறை தினமாக மட்டுமே தெரிகிறது.

தொலைகாட்சிகள், பத்திரிக்கைகளும் நாடே சுபிட்சமாக இருப்பது போல தீவு திடல், பொருட்காட்சிகள், கடற்கரைகள்,திரையரங்குகள்  போன்றவற்றில் அலைமோதும் மக்கள் கூட்டத்தினரை காண்பித்து 'இதோ மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்' என விளம்பரபடுத்துகிறது.அதை பார்த்த மற்றவர்கள் 'அட நாம தான் அல்லல் படுறோம், ஆனா மத்தவங்க சந்தோசமா வாழ்க்கைய எப்படியெல்லாம் அனுபவிக்கிறாங்க' என்று பெருமூச்சுவிடுவதுடன் முடிந்துவிடுகிறது இன்றைய பண்டிகை நாட்கள் !!

எது எப்படியோ !? வார்த்தைகளில் வாழ்த்துக்களை நாம்  பரிமாறிகொள்வோம்...வாழ்த்துக்களில் மட்டுமாவது வாழ்ந்து கொள்ளட்டும் நம் பாரம்பரிய பண்டிகைகள் !!?


பிரியங்களுடன்
கௌசல்யா


படங்கள்-நன்றி கூகுள் 

வெள்ளி, ஜனவரி 13

பசுமை தேசம்...இது எங்கள் நம்பிக்கை !!



புதிய வருடத்தில் ஏற்கனவே உங்களிடம் தெரிவித்துள்ளபடி எனது மற்றொரு தளத்தை உங்கள் முன் இன்று அறிமுகப்படுத்துகிறேன். சுற்றுச்சூழலுக்கு என்று தொடங்கப்பட்டுள்ள அத்தளத்தை பார்வையிட்டு உங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுமென வேண்டுகிறேன். 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எங்களது ஈஸ்ட் தொண்டு நிறுவனம்(EAST TRUST, Sankarankovil)  சார்பில் பசுமைவிடியல் என்ற பெயரில் ஒரு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா அவர்களால் கடந்த வியாழன்(Jan/2012) அன்று குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸில் வைத்து பதிவர்கள் முன்னிலையில் இவ்வியக்கத்தின் இணையத்தளம் தொடங்கி வைக்கப்பட்டது.

  
முதல் களப்பணியாக மரம் நடுதல் விழிப்புணர்வுக்கான முதல் மரக்கன்றை எம்.எல்.ஏ அவர்கள் நட்டு வைத்தார். இனி இதர பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கின்றன... 


பசுமை விடியல் - ஒரு அறிமுகம் 


பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 


ஆனால்... 


மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கைச்  சிறப்பாகச்  செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...


2020 ஆம் ஆண்டில் முழுமையாக உருகிவிடும் என்று கணிக்கப்பட்ட ஆர்ட்டிக் பனிப்படிவுகள் 2015 ஆம் ஆண்டே உருகிவிடும் என்று வேறு தற்போது விஞ்ஞானிகள் பயமுறுத்துகிறார்கள்...!!


உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டேச்  செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான்  இருக்கின்றன...!

மக்களை பற்றி நாடு அக்கறைக்  கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?!   அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டுச்  செயல்  படுத்தப் பட வேண்டும்...!

இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!

கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களைக்  கோர்த்து இருக்கிறோம்...!

இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!

ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!


பதிவுலக உறவுகளே !


உங்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் எங்களை இன்னும் சிறப்பாக வழிநடுத்தும் என்பதால் அவசியம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்கிறேன்.  மேலும் உங்களின் மேலான ஒத்துழைப்பும்,வாழ்த்துக்களும் என்றும் எங்களுடன் இருக்க வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றேன்.


இனி தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்...........அவசியம் செல்லவும். உங்களின் வருகைக்காக அங்கே காத்திருக்கிறோம்.



பிரியங்களுடன்
கௌசல்யா



படங்கள் - நன்றி கூகுள்