திங்கள், ஜூன் 27

கழுகு பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?!



கழுகு என்ற ஒரு விழிப்புணர்வு தளம் இருப்பது பலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அந்த சிலருக்காக எனது இந்த பதிவு. பொதுவா விழிப்புணர்வு அப்படின்னு அடிக்கடி சொல்றோமே அந்த பொருள் தான் என்ன ? சிலருக்கு இந்த சொல்லே ஒரு சலிப்பை கொடுக்கிறது, இதன் பொருள் புரியாமலேயே !!  சிம்பிளா சொல்லணும் என்றால் விழிப்புணர்வு என்பது எச்சரிக்கையாக இருப்பது, எதை பற்றியும் அதிக விவரங்களை தெரிந்து வைத்துகொள்வது, தெரியாதவர்களுக்கு எடுத்துசொல்லி புரியவைப்பது.

உதாரணமாக ரத்ததானம் செய்ய சொல்லும் போது மக்களிடம் ரத்தம் கொடுக்கணும் என்று பொதுவாக சொல்கிறோம் என்றால் 'ஐயையோ ரத்தம் எடுத்தா நான் என்ன ஆவேன்' என்ற அச்சம் வருவது மக்களின் பொது இயல்பு. ஆனால் அவர்களிடம் ரத்தம் எடுத்தா ஒன்றும் ஆகாது, மிக குறைந்த அளவு  தான் எடுப்பாங்க, அதுவும் குறிப்பிட்ட நாளில் மீண்டும் ஊறி விடும், என்று கூடுதல் தகவல்களையும் சேர்த்து எடுத்து சொன்னா அதற்கு பெயர் தான் விழிப்புணர்வு. 

ஒரே வரியில் சொல்லணும் என்றால் 'உணர்வுகளை விழித்தெழ வைப்பது' 

இத்தகைய ஒரு அளப்பரிய செயலை தான் கழுகு செய்து கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல், அறிவியல்,தனி மனித ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு,  இப்படி பலவற்றிலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதுகிறார்கள் கழுகு தோழமைகள்.
    
யார் நடத்துகிறார்கள் ?

துபாயில் இருக்கும் தேவா அவர்கள், சென்னையில் இருக்கும் விஜய் மற்றும் சௌந்தர் இவர்கள் மூவரும் சேர்ந்து தொடங்கினார்கள். இப்போது  முப்பதுக்கும் மேற்பட்ட  தோழமைகள் கழுகுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் ...கட்டுரைகள்  வடிவமைப்பது , செய்திகளை சேகரித்து  தருவது , விவாதங்களை முன்னிறுத்தி  நடத்தி  செல்வது, பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது, போன்ற பலவேறு வேலைகளை பலரும் பிரித்து வைத்துகொண்டு செயல் படுத்தி கொண்டு வருகிறார்கள்.இத்தனை வேலைகளையும் அவர்கள் தங்களின் சொந்த அலுவலக பணிகளுக்கு மத்தியில் இந்த சமூகத்திற்காக மேற்கொள்கிறார்கள் என்பது பாராட்ட படவேண்டிய ஒன்று.இவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது என்ற பெரிய பொறுப்பான வேலையை தேவா அவர்கள் திறம்பட செய்துகொண்டு வருகிறார்.   

ஏன் தேவை ?

விழிப்புணர்வு நமக்கு தேவையானதா என்று பார்த்தால் அது நிச்சயம் நமக்கு தேவை, ஆனால் சிலர் சொல்லலாம் நான் விழிப்புணர்வுடன்  தான் இருக்கிறேன் என்று..... ஆனால் அது நிச்சயம் போதுமானதாக இருக்காது.

நம் சமூகம் பழமை பற்று மிகுந்த ஒன்று, சாதீய எண்ணமும், ஆழமாக பதிந்த தேவையற்ற மூட நம்பிக்கைகளும் வாழ்வை பற்றிய பயம், கவலையும் சேர்ந்து சாகாமலேயே செத்தவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்பது தான் இன்றைய நிதர்சனம்.

சிந்தனையை தெளிவடைய செய்யும் திருக்குறளும், மற்றும் பல இலக்கிய நூல்களும் இருந்தாலும் அது எல்லோரையும் சென்றடைவது இல்லை...ஏன் படித்தவர்களே அதன் வழித்தடம் ஒற்றி நடக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அவரவருக்கு தனிப்பட்ட கொள்கைகள் , கருத்துக்கள் ! படித்தவர்கள் நிலையே இது என்றால் படிக்காதவர்களை பற்றி என்ன சொல்வது. மக்கள் முன்னேற்றத்துக்கு ஏற்ற கொள்கைகளையும் கருத்துக்களையும் வகுப்பது யார் ? அதை  மக்களிடம் கொண்டு செல்வது யார் ? 

விழிப்புணர்வு அவசியம் 


* நமது அடிப்படை உரிமைகள் எவை என்பதை பற்றி இங்கே எத்தனை பேருக்கு சரியாக தெரியும்.

* சட்டங்கள் பற்றிய முழு தெளிவு இருக்கிறதா ?

* அரசியல் பற்றிய அடிப்படை அறிவு ?

* பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்ன, அதற்கு தீர்வு என்ன, அதை பற்றி பெண்ணுரிமை இயக்கங்கள் என்ன சொல்கிறது ? என்ன செய்கிறது ?
இப்படி நிறைய ????

சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பல ஆகியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் 'ஒட்டு போடுங்கள்' என்று தெரு தெருவாக அறிவிப்பது வருந்தகூடிய ஒன்று. காரணம் ஒட்டு போடுவதின் அவசியத்தை, விழிப்புணர்வை  மக்களிடம் சரியான முறையில் இன்னும் கொண்டு செல்லாதது தான்.

ஊத வேண்டிய சங்கை ஊதினால் போதும் , விடிகிற போது விடியட்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு விழிப்பாவது ஏற்படட்டுமே என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க பட்டது தான் கழுகு என்கிற தளம். 

மேடை போட்டு பிறர் பாராட்ட வேண்டும், பரிசு வழங்க வேண்டும் தம் பெயர் பிரபலம் அடைய வேண்டும் என்பது போன்ற சுயநலம் சிறிதும் இன்றி விழிப்புணர்வு என்ற ஒன்றே லட்சியம் . யார் என்ன சொல்வார்கள், மாற்று கருத்து வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி ஒடுங்கி முடங்குவதை விட உண்மை எதுவென்று காட்டிட துணிந்து செய்பவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலர் சேர்ந்து சீரிய நிலையில் தெளிவான சிந்தனையோடு சிறப்பாக கால் ஊன்றி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் கழுகின் சிறகை வலுபடுத்துவது நல் மனம் படைத்த ஒவ்வொருவரின் கடமை. மீளா தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் அறியாமையில் ஊறிய மக்களை / சமுதாயத்தை எழுப்புவது என்பது எளிய காரியம் அன்று . 

தமிழன் நாம் என்பதே மறந்து பிறர் சொல்லும் போதுதான் 'ஓஹோ நாம் தமிழர்' என்று விழித்து எழுகிறான்.  ஏதோ ஒரு போராட்டம் புரட்சி திடிரென்று வரும் போது தான் 'தன் இனம் இது' என்பது போல உணர்வு கொள்கிறான். தன் இனத்தை நினைவு படுத்தவே இது போன்ற நிகழ்வுகள் தேவை படுகிறது என்னும் போது விழிப்புணர்வு எவ்வளவு அவசியமாகிறது என்பது புரியும். 

விழிப்புணர்வு வேற சமூக சேவை வேற !

விழிப்புணர்வு வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா களத்தில் இறங்கி போராட வேண்டும் என்ற ஒரு வாதம் கழுகின் முன் வைக்கப்பட்டது. உண்மைதான் களத்தில் இறங்கி போராடுவதின் மூலம் மக்களை உடனே சென்று அடைய முடியும். ஆனால் தொடர்ந்து விழிப்புடன் வைத்துகொள்வது மிக அவசியம். உதவி செய்ய ஆள் இருக்கிறது என்று சோம்பி திரிய கூடிய மந்த புத்தி படைத்த மனித இனம் தானே நாம், மனிதனின் ஆழ்மனதை தட்டி எழுப்பவேண்டும்.....அதில் நல்லவைகளை ஆழமாக பதிய வைக்கவேண்டும்.....இதை செய்வது தான் விழிப்புணர்வு.  

இரண்டும் ஒன்று போல் பாவித்து குழம்பி கொள்பவர்கள் பலர். விழிப்புணர்வை  யார் வேண்டும் என்றாலும் எங்கே இருந்தும் ஏற்படுத்த முடியும்...அதற்கு தேவை ஆர்வமும், பல துறைகளை பற்றிய தெளிவும்,புரிதலும் தான். ஆனால் சமூக சேவை என்பது களத்தில் சென்று செயல்படுவது. கண்முன் ஒருத்தர் கஷ்டபடுகிறார் என்றால் என்ன பிரச்சனை பண உதவியா, வேற என்ன தேவை என்று பார்த்து செய்து கொடுப்பது. இது அப்போதைய உடனடி தீர்வாகும். அத்துடன் நின்றுவிடும். ஆனால் விழிப்புணர்வு என்பது சம்பந்த பட்ட மனிதனுடன் நின்றுவிடாமல் காலத்திற்கும் அவனது சந்ததிக்கும் ஆலோசனை சென்று சேரும். புத்தியை தெளிவடைய வைத்துவிட்டால் போதுமே, அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான், பிறர் தயவு தேவையில்லை. இதை தான் கழுகு அமைதியாக செய்து கொண்டிருக்கிறது. 

"குளிரில் நடுங்கும் பிச்சைகாரனுக்கு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்வெட்டர் வாங்கி கொடுப்பது சமூக சேவை என்ற கருத்தினை கொண்டால்.....

பிச்சைக்காரனே உருவாகாமல் இருக்க எல்லா சாத்தியக்கூறுகளையும் மனித மூளைக்குள் விதைப்பதற்கு பெயர் தான் விழிப்புணர்வு.....!" 
                                                                                                                                (நன்றி-தேவா)


மனித மனம் என்றும் நிறைவு அடைவதில்லை பொருளாதார தேவை மற்றும் வேறு சில காரணங்களால்.  ஆனால் ஓரளவு தன்னிறைவு அடைந்த மனிதன் முடிந்தவரை சில விழிப்புணர்வு விதைகளையாவது தூவி விட்டு செல்லலாம், பின் நீர் ஊற்ற வேறு யாரேனும் வருவார்கள்.....சூழல் சரியாக இருக்கும்பட்சத்தில் தன்னால் முளைத்துவிடகூடும்...!!

விழிப்புணர்வு விதைகளை மனங்களில் தூவும் வேலையை இப்போது செய்துகொண்டிருக்கும்   அதே நேரம், தேவைபட்டால் களத்தில் இறங்கி போராடவும் கழுகு தயங்காது.....! அதற்கு வேண்டிய போராட்டகுணம், தைரியம், தோழமைகளின் பலம் அனைத்தும் ஒருங்கே தன்னகத்தே கொண்டிருக்கிறது.....திறக்கப்பட வேண்டிய கதவுகள்  தட்டிபார்த்தும் திறக்கவில்லை என்றால் உடைத்து திறக்ககூடிய ஆற்றல் கொண்டவர்கள் தோழமைகள்...

உயரிய திட்ட வரைமுறைகள் 

நோக்கம் இருக்கிறது என்பதற்காக ஒழுங்கற்ற விதத்தில் ஏனோ தானோ வென்று தளம் செயல் படவில்லை. நேர்த்தியாக, சீராக, கட்டுபாடுடன், ஒழுங்குடன், தங்களுக்கு என்ற விதிமுறைகளுடன் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இந்த தளத்திற்கு குழு என்ற ஒரு அமைப்பும், மீட்டிங் ஹால் என்ற மற்றொரு முக்கிய அமைப்பும் இயங்கி வருகிறது. 

கழுகின் முக்கிய உறுப்பினர்கள் 

தேவா - தீராத சமூக முன்னேற்ற வேட்கை கொண்டவர். இருப்பது கடல் தாண்டி என்றாலும் நினைவுகளால் தாய்நாட்டை ஒரு கணமும் பிரியாதவர். நாட்டின் மீது கொண்ட அதிக பற்றின் காரணமாகவே இந்த தளத்தை உருவாக்கி நடத்திக்கொண்டு வருகிறார். 

சௌந்தர் - மிக முக்கிய பங்கு இவரது...வெளிநாட்டில் இருந்து தேவா  இயக்க இவர் இங்கிருந்து கழுகின் பல பணிகளை ஒருங்கிணைக்கிறார்.

கொக்கரக்கோ - சௌமியன் பல துறை சம்பந்தப்பட்ட விசயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். கழுகில் இவரது பணி மிக அதிகம்.

சமீர் அஹமத் - கழுகின் செயல்கள் அனைத்திலும் பக்க பலமாக இருக்கிறார்.

மகேஸ்வரி - பல கட்டுரைகள் எழுதி தருவதும், விவாதங்களில் கலந்துகொள்வதும் என்று உற்சாகமாக செயலாற்றி வரும் இவர் கழுகின் இன்றியமையாத தோழமை.  

ஆனந்தி - விவாதங்களை உற்சாகபடுத்துவதில் இவங்க ஸ்டைல் தனி. தினம் திருக்குறள் சொல்லி அன்றைய பொழுதை தொடக்கி வைப்பவர்.

எஸ்.கே - எஸ்.கே குழுவின் திட்டமிடுதலில் பங்கெடுத்துக் கொள்வதோடு, வலுவான விவாதங்களை முன்னெடுத்து வைப்பார். மேலும் பிற வலைத்தளங்களில் வெளி வந்த நல்ல பதிவுகள் மிகைப்பட்ட பேரால் வாசிக்கபடாமல் இருப்பதை குழுவினருக்கு அடையாளம் காட்டும் பணியும் செய்து வருகிறார்.

கல்பனா - இவர் கழுகின் விவாதங்களில் ஆர்வமுடன் கலந்து தனது கருத்துக்களை எடுத்துவைக்க தவறமாட்டார்.

இன்னும் பல இளம்புயல்கள் ஆர்வமாக பங்கேற்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள்.முப்பது பேரை பத்தியும்  சொன்னா பதிவு தொடர்தான் போட வேண்டி வரும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...!!

இவர்கள் ஒருவருக்கும் ஒருவர், எந்த உறவும் இல்லை என்றாலும்  ஒரு குடும்பம் போல் செயல் பட்டுவருவது வரவேற்க்கதக்க ஒன்று.

குழு 

குழுவில் இணைய விரும்புவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது...
அதை ஏற்றுகொண்டவர்கள் இணைந்து கொள்ளலாம். விவாதத்திலும் கலந்து கொள்ளலாம், கருத்து வெளியிட இயலாதவர்கள் நடக்கும் விவாதங்களை மெயிலின் மூலம் அறிந்துகொள்ளலாம். முதலில் நமக்கே பல விசயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கும், அதை சரி படுத்திக்கொள்ளவும், ஒரே நேரத்தில் பல துறைகளை பற்றிய செய்திகளை தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும். 

இதனை பற்றி இன்னும் விவரங்கள் தேவை என்றால் கீழே  உள்ள சுட்டியை கிளிக்கவும். 


எல்லோருக்கும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளுக்குள் இருக்கும், ஆனால் வாய்ப்பு இல்லை என்ற ஒரு நிலை இருந்தால் தங்களது வேலை நேரத்தில் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இத்தள கட்டுரையை படித்து இவர்களை உற்சாக படுத்துங்கள். கழுகு இன்னும் அதிக முனைப்போடு செயல்பட உதவியாக இருக்கும்.  இது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே, உடனே கழுகை தொடருங்கள்...கட்டுரைகளை வாசித்து உங்கள் குறைகளையும் நிறைகளையும் வெளிப்படையாக சொல்லுங்கள்.  கழுகு உங்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...!

பல நல்ல பதிவுகளை படித்து நம்மை இன்னும் அதிகமாக தெளிவு படுத்திகொள்வோம்...கழுகு தளத்தில்  இணையுங்கள். கழுகின் சிறகை வலுபடுத்துங்கள்......!! 



ஞாயிறு, ஜூன் 26

இன்று ஒன்று கூடுவோம் தமிழர்களே ! வாருங்கள்...



சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். 

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம். நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!







மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.



மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .

கோவையில்,

இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.


டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!

நன்றி!

சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!




எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு !
பாரதிதாசன்


நன்றி - 'ஸ்டார்ட் மியூசிக்!' ராம்சாமி 


சனி, ஜூன் 25

மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு கடிதம்...!






ஜாக் !

எப்படி இருக்கிறாய்...? நிச்சயம் ஆனந்தமாக இருப்பாய் இந்த உலகில் இருந்ததைவிட ! இன்று உனது நினைவு நாளாம்...உலகமே நினைத்து கொண்டாடுகிறது..... நான் மறந்தால்தானே இன்று உன்னை நினைக்க !! உன் குரல் ஒலிக்காத நாள் என்று ஒன்று இல்லை என் வீட்டில் !




என்று என் மனதில் நுழைந்தாய் இசையின் வடிவில் ?! தேதி நினைவு இல்லை, வயது நினைவு இருக்கிறது.....எனது 11 வது வயதில் என் அண்ணன் முதலில் உன் குரலை எனக்கு அறிமுகம் செய்தான். முதலில் சாதாரணமாகக் கேட்கத் தொடங்கிய நான், எப்படி இன்றுவரை உன் இசையை விட்டு மீள இயலாமல் அதையே சுற்றி வருகிறேனே அறியேன். அச்சிறு வயதில் மொழி புரியாமல் டிக்ஷ்னரியின் கையுமாக அலைந்த நாட்கள் இன்றும் இனிக்கிறதே... வார்த்தை புரியவேண்டும் என இரவின் தனிமையில் கண்மூடி, கூர்ந்து கேட்டு நோட்டில் குறிப்பெடுத்து வைத்ததை இன்று நினைக்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கிறது.....!! புரியவில்லை என்றாலும் நானாக ஒரு அர்த்தப்படுத்தி பாடிபார்ப்பேன் ! 

தோழிகள் 'ஏன் உனக்கு இங்கே உள்ள யார் பாட்டும் பிடிக்காதா? பெரிசா இங்கிலீஷ் பாட்டு கேட்குற' என்று கேலி செய்த போதெல்லாம் எனது ஒரே பதில் 'எனக்கு பிடிச்சிருக்கு'. மொழி புரியாததால் அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற தேடலில் அதிகம் பிடித்துவிட்டதோ என்னவோ ! தெரியவில்லை. வார்த்தையின் பொருள் புரியத்தொடங்கியதும், வேகமான ஆக்ரோசமான இசையை ரசிக்க தொடங்கி,  மனதை நெகிழவைக்கும் உன் குரல்... கேட்க கேட்க... மீண்டும் மீண்டும்... மிக சரியாக உனக்குள் விழுந்து கொண்டே இருந்தேன்...!

அவ்வபோது உன்னை பற்றி வரும் செய்திகள், துணுக்குகள், படங்கள்  சேகரித்து என் அறையின் அலமாரி அலங்கரித்தேன்... அறையின் சுவரை உன் முழு உருவபடத்தால் நிறைத்தேன்...!

எனக்காக என் அண்ணன் தோட்டத்தில், மாமரத்தில் ஒன்றும் , கொய்யா மரத்தில் ஒன்றுமாக இரண்டு பெரிய பானைகளை கட்டி அதில் ஸ்பீக்கர் வைத்து உன் பாடலை ஒலிக்கச் செய்வான். மரங்களுக்கு நடுவே ஊஞ்சலில் அமர்ந்து இந்த உலகையே மறந்து கண்மூடி இருப்பேனே...அந்த இனிய நாள் இன்று நினைவுக்கு வந்து வதைக்கிறதே !  

இசையின் மூலம் ஒருத்தரை வழி நடத்த முடியுமா ? 
சாத்தியமாக்கியது 
உன் இசை ! 
உன் குரல் ! 
உன் புன்னகை ! 
உன் பாடல் வரிகள் !

உனக்கு தெரியாது எதிலெல்லாம் என்னை நேர் படுத்தினாய் என்று !! எதை சொல்வேன்... ஒவ்வொன்றாய் சொல்ல என் ஆயுள் போதாது...இன்று வரை சோர்வு,மனஅழுத்தம்  என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் கை கொடுத்து தூக்கி நிறுத்துகிறதே உன் குரல் ! 

என்ன மனிதன் நீ !!?

பதினோரு வயதில் மேடை ஏறிய நீ சிறுவயதில் அனுபவிக்கவேண்டிய சந்தோசங்கள், குறும்புகள், விளையாட்டுகள்,நண்பர்கள், படிப்பு எல்லாம் இழந்தாய். அந்த இழப்பின் வலி உணர்ந்ததாலேயே  பல கோடி மதிப்பில் பூங்கா அமைத்து சிறுகுழந்தைகளுக்கு அனுமதி இலவசம் என்றாய். உன்னை சுற்றி குழந்தைகள் வலம் வந்தார்கள், ஒன்றாக விளையாடி, ஒன்றாக உணவருந்தி ஆனால் இதை இந்த கேவலமான உலகம் படுகேவலமாக பேசியது..... நீ ஒரு வளர்ந்த குழந்தை என அறியாமல்...! ஒரு உற்சாகத்தில் ரசிகர்கள் பார்க்கட்டுமே என உன் குழந்தையை மாடி ஜன்னலில் தூக்கி காட்டினாய் ...உடனே அய்யோ என்ன இது கொடுமை என அலறியது, கண் முன் அடுத்தவன் குருதி கொட்டுவதை கண்டும்காணாமல் போகும் மனித நேயமற்ற உலகம்...!! பிரபலங்கள் ஆக இருப்பது சாபகேடோ ?!! அனுபவித்தாய் மிக கொடுமையாக !!

தோல் நோயால் உன் மேனி வெள்ளையாக நிறம் மாறியதையும் கதை கட்டியது வேறுவிதமாக. ஒரு முறை டிவி பேட்டியின் போது நீயாக இதை சொன்னபோதும் நம்பவில்லை. நீ விண்ணுலகம் சென்ற சில மாதங்களுக்கு பின் ஒருநாள் உன் மகன் கடலில் நீந்தி விளையாடும் போது அவனது முதுகில் அதே தோல் நோய் சிறு வட்டமாக வந்திருப்பதை பார்த்த அவனது பாட்டி...உன் தாய் ஒரு புன்னகையுடன் பெருமூச்சுவிட்டாளாம் !! 'இரண்டு உண்மை உணர்த்தபட்டுவிட்டதே, என் மகனுக்கு இருந்தது தோல் நோய், இவன் அவனது வாரிசு (மகன்) என்பதையும்..... இனியாவது நம்புமா இந்த உலகம்?' என்று கண்கலங்கினாள். நான் இங்கே கதறினேனே...'குழந்தைகள் அவனுடையது அல்ல' என்று கூச்சல் போட்ட அநாகரீக கூட்டத்திற்கு உன் தாயின் கண்ணீர் சென்று சேர்ந்து இருக்குமா !


எப்படி இத்தனை அசிங்கங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டாய், பொறுத்தாய் ?!! என்ன மனுஷன் டா நீ ! இல்ல   இல்ல நீ மனிதன் இல்லை 'மனிதனில் புனிதன்' இந்த கோமாளி கூட்டத்தில் தப்பி பிறந்தவன் நீ..... இறந்த பின்னும் விட்டார்களா, மென்று தின்று பணம் பார்த்தன பிணம் தின்னும் கழுகுகள் !  எந்த பிரச்னையையும் ஒரு மர்ம புன்னகையால் கடந்து செல்லும் உன் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையே.....!

Heal The World !

உலகம் ஆயிரம் சொன்னாலும் அதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இசையில் உன்னை மூழ்கடித்து கொண்டாய்.....எங்களையும் மூழ்க வைத்தாய் ! ஒரு பாட்டில் தாலாட்டினாய், ஒரு பாடல் காதோரம் சிலிர்க்க வைக்கும்...ஒரு பாடலில் மரத்தை வெட்டாதே என்பாய்...சண்டை போடாதீர்கள் என வேண்டுகோள் விடுவாய்...இன்னும் ஏராளம் ஏராளம்......அனைத்திலும் உன் மாசற்ற  உள்ளம் தெரியும், 'சக மனிதரை நேசி' சொல்லி கொடுத்தாய்.....! இந்த ஒரு பாடல் போதும் உன் மனதை சொல்ல.....! 

இரு வருடங்களுக்கு முன் வரை இந்த பாடலை கேட்டால்  உற்சாகமாக கண்மூடி ரசித்து மகிழ்வேன் ! நீ இல்லாத உலகில் இந்த நாட்களில் இப்பாடலை கேட்கும் போது கண்களில் அருவியாய் பெருக்கெடுக்கும் கண்ணீர் ! காரணம்  அறிவாய் நீயே.....என் ஆறுதலின் தேவனே !! தொலைத்துவிட்டோம் உன்னை !!

'Make a little space to make a better place'




Michael Jackson sang, the world hoped.
Michael Jackson danced, the world smiled.
Michael Jackson laughed, the world laughed.
Michael Jackson died, the world cried, but sang, danced, laughed because we know that's what he would've wanted.
Michael Jackson was Michael Jackson, and always will be.


They Don't Care About Us !

என்னை சிரிக்கவைத்து  கொண்டிருக்கும் உனக்காக இந்த பாடல்.... என்ன அசத்தல்  நடனம் ! என்ன உற்சாக துள்ளல் ! ஸ்டைல் !ஸ்மைல் ! விழுந்ததே தெரியாமல் எழும் நளினம் ! நீ தான் நீயே தான் நீ ஒருவன் தான் ! ஒருவரும் உனக்கில்லை ஈடு !


எத்தனை நடன கலைஞர்கள், எத்தனை இசை கலைஞர்கள் உன்னால் உருவானார்கள்...இன்னும் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.....உன் சாயல் இல்லாத இசையும், நடனமும் இல்லை என்றாகிவிட்டது ஜாக் !
எத்தனை பேரின் வாழ்வை உயர்த்தி இருக்கிறாய்.....! இன்னும் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் உன்னை வைத்து, உன் இசையை வைத்து !! அவர்களின் மனம் நிச்சயம் உன்னை வாழ்த்தும் !

இந்த ஜூன் மாதம் எனக்கு மறக்ககூடாத ஒன்றாகிவிட்டது...வருடம் தோறும் இந்நாளில் உனக்கு நான் எழுதும் கடிதம் தொடரும் என் உயிர் உள்ளவரை !

என் வாழ்வின் இறுதிவரை உன் இசை என்னைவிட்டு அகலாது.....! உன் ரசிகர்களை பொறுத்தவரை நீ இன்னும் எங்கள் மத்தியில் உலவி கொண்டிருக்கிறாய் இசையாய் !


உன் ரசிகை. 


http://kousalya2010.blogspot.com/2010/06/blog-post_25.html


நன்றி - கூகுள், யு டியுப் 


வியாழன், ஜூன் 23

நெல்லையில் உறவுகளின் உற்சாகம் !



கடந்த இரு வாரங்களாக பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் நாங்கள் எடுத்த பிரயாசங்கள் பெரிதல்ல என்று நிரூபித்தது நேச நெஞ்சங்களின் வருகை. எத்தனை போன் கால்ஸ், எத்தனை மெயில்கள், சாட்டிங், நேரில் நடந்த சிறு சந்திப்புகள் அனைத்தையும் ஊதித் தள்ளிவிட்டது நண்பர்களின் உற்சாகமும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும்...!!

எப்போதும் எதையோ தேடி ஓடிகொண்டே இருக்கிற இந்த வாழ்க்கையில் நாம் சற்று இளைப்பாறும் ஒரு சோலைவனம், நல்ல நட்புகளின் இந்த சங்கமம் ...! பதிவர்கள் சந்திப்பு என்றாலும் ஒரு குடும்ப விழா போன்று தாத்தா,அப்பா,அக்கா, அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, நண்பன்,தோழி என்று பல உறவுகள் ஒன்று சேர்ந்தது எனலாம். அன்று பல உறவுகள் புதிதாய் மலர்ந்தது ஒரு இனிய அனுபவம். 

சிறிதும் முன் அறிமுகம் இல்லாத பதிவர்களை தான் நான் கடந்த வெள்ளிகிழமை அன்று (சங்கரலிங்கம் அண்ணா, சித்ரா, பாபு தவிர்த்து) சந்தித்தேன். இருந்தும் பல காலம் பழகியவர்களை போன்று ஒவ்வொருவரும் நடந்த கொண்ட விதம் மீண்டும் மறு சந்திப்பு என்று வரும் என எண்ண வைத்துவிட்டது.  ஆரம்பம் முதல் முடிவு வரை சிறிதும் இடைவெளி இன்றி சிரிப்பு பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தன.....

வந்திருந்து சந்திப்பை பெருமை படுத்திய உறவுகளுக்கு நன்றி சொல்வதில் மகிழ்கிறேன் !


முதலில் சங்கரலிங்கம் அண்ணனுக்கு என் பாராட்டுகள்...ஒரே ஊர்காரர் என்றாலும் அறிமுகமானது பதிவுலகம் மூலமாகத்தான் . சில மாதங்களுக்கு முன் அவரது தளத்தை, என் தளத்தில் அறிமுகம் செய்வதில் தொடங்கியது எங்களின் நேச உறவு. விழிப்புணர்வு வேண்டும், சமூக அக்கறை வேண்டும் என்று இணையத்தின் முன் அமர்ந்து குரல் கொடுப்பதுடன் திருப்தி பட்டுகொள்கிறோம், ஆனால் நடைமுறையில் அதை சாதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ஆரம்பத்தில் பதிவுகளை எழுதுவதுடன் மட்டும் இருந்த இவர் அதன் பின் பல நட்புகளை வளர்த்து இன்று பதிவர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வரை வந்திருக்கிறார் என்பது பெருமையான ஒன்று. அண்ணா உங்களுக்கு என் நன்றிகள்.

பலரும் சந்திப்பில் நடந்தவற்றை ஏற்கனவே பகிர்ந்துவிட்டதால், என் நினைவில் இருப்பவை சிலவற்றை இங்கே சொல்கிறேன்....

Dr.கந்தசாமி சார் - கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்தார்.  தனது பதிவுகளை மற்றவர்கள்  காபி பேஸ்ட் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாக சொன்னார். 'பிறருக்கு உபயோகமாக இருக்கத்தானே பதிவுகள் எழுதுகிறேன், அதை அவர்கள் எடுத்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே' என்று சொன்னவுடன் கைதட்டல் அதிர்ந்தது. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சீனா ஐயா பல பல பதிவர்களை வலைசரத்தில் அறிமுகம் செய்ய பெரிய காரணமாக இருக்கிறார்...ஆனால் நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று தன்னடக்கத்தோடு சொன்னபோது மிக வியந்தோம். வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறாங்க என்று எனக்கு மெயில் வந்தபோது அங்கே அறிமுகம் செய்ற அளவிற்கு நாம எழுதுறோமா என்று சிறு மிதப்பு வந்ததென்னவோ உண்மை...! அவர் தலைமை வகித்து சிறப்பித்தமைக்கு என் நன்றிகள் !

பலாபட்டறை சங்கர், மணிஜி - சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருந்து சந்திப்பை பெருமைபடுத்தினார்கள். பதிவுலகத்தின் மீதான தங்களின் பார்வையை/பங்களிப்பை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார் சங்கர். சந்திப்பின் இறுதிவரை அப்ப அப்ப தன் கருத்துக்களை தெரிவிக்க தவறவில்லை. கூகுள் பஸ்ஸில் பதிவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பதிவுலகத்தில் பதிவுகள் குறைந்து வருகிறது என்பது உண்மைதான், பதிவுகள் எழுதுவதை குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சங்கர் அவர்களின் கருத்துக்கள் மிக உபயோகமாக இருந்தன, நினைவில் வைத்துக்கொண்டேன்.(முக்கியமாக செந்தில் சாரை நன்றாக உற்சாக படுத்தினார்...!!) என் நன்றிகள் !

செந்தில்குமார் - பலரும் இவரை படாதபாடு படுத்திவைக்க கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்ட பாங்கு இவர் ஒரு தெளிந்த நீரோடை என்பதை காட்டியது. (என்ன செந்தில் சார் ??இது போதுமா? ) அவர் மீது வைக்கும் குற்றசாட்டுகளை எங்கள் முன் பகிர்ந்துகொண்டதுடன் தன்னிலை விளக்கம் கொடுத்தார். உண்மையில் இந்த மாதிரி தன்னை பற்றி மற்றவர் முன் எடுத்துரைக்க எல்லோராலும் இயலாது. ரொம்ப வெளிப்படையாக, இயல்பாக எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் சொன்ன விதம் அருமை. இந்த சந்திப்பிற்கு பின் வரும் அவரது பதிவுகளில் ஒரு மாற்றம் தெரியும். கண்டுபிடிங்க !!

பதிவு போடாமல் எப்படி இங்கே அதுவும் வெள்ளிகிழமை வந்தார் என்ற என் ஆச்சரியத்தை உடைத்துபோட்டது அடுத்து அவர் சொன்ன வார்த்தை...'இன்னைக்கு போட வேண்டிய பதிவை அப்பவே போட்டு இருப்பாங்க' அட கடவுளே பதிவு போட என்று ஒரு ஆபீஸ் வச்சு நடத்துறார் போல.....!! இவர் ஒருத்தர் இருக்கும் வரை பதிவுலகம் எப்படி சாகும்...வாழும் நன்றாகவே  வாழும்...!! விழாவை நகைசுவையாக கொண்டு சென்றதில் இவரின் பங்கு அதிகம். அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.


                               செல்வா பக்கத்தில் செந்தில் சார் ! 


பெசொவி- ஒரு வழியாக தனது உண்மையான பெயரை சொல்லிவிட்டார்...தூத்துக்குடியில்  (மத்திய அரசு) வேலை பார்த்து வருவதாக சொன்னதால் நான் சும்மா இருக்காமல் 'அப்ப நல்லதா போச்சு, ஒரு உதவி தேவை படுது, உங்களை பார்க்க வரணும்' என்றேன்...அதற்கு அவரும் 'செய்யலாமே... நீங்க என்னைக்கு வரீங்கன்னு முன்கூட்டியே சொல்லிடுங்க' என்றார். நானும் ஆர்வமாகி 'கண்டிப்பா சொல்லிடுறேனு' சொல்ல, அதுக்கு அவர் 'அப்பத்தான் அன்னைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன்'  சொன்னதும் ரொம்ப வருத்தமா போச்சு. ம்ம்...இருக்கட்டும் சொல்லாம ஒரு நாள் போகணும்...!! நடுநடுவே நகைச்சுவையை வாரி கொட்டிகொண்டே இருந்ததுக்காக  சிரிச்சிட்டே ஒரு நன்றி !



 மத்தவங்க பேச்சை கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இவர் மட்டும் ரொம்ப சீரியஸா பேசுறாராம் - பெசொவி 


சித்ரா - ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடிய அன்பான ஒரு தோழி. அமெரிக்காவில் இருந்து போனில் அவங்க பேசினா எனக்கு வாய் வலிக்கும் !  அது எப்படின்னு கேட்ககூடாது...ஒரு அரைமணி நேரம் அவங்க கிட்ட பேசி பாருங்க அப்ப தெரியும். ஒரு சோக கதை என்னனா, நானும் அவங்களும் போன வாரம் அண்ணனின் ஆபீசில் வைத்து சந்திப்பு விசயமா ஆலோசனை பண்ணினோம்.....அதற்கு மறுநாள் அந்த ஆபீசை இடிச்சிட்டு இருக்காங்க, 'என்ன அண்ணா ஆச்சு'ன்னு கேட்டா, 'நேத்து நீங்க போன பின்னாடி சுவர் விரிசல் விட்டு ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது , அதுதான் பில்டிங் முழுதும் இடிச்சிட்டு புதுசா கட்டபோறாங்க' !!?

                                                     
                       என்ன கொடுமை இது...!?

இப்ப அண்ணனின் ஆபீஸ் வேற இடத்தில் இயங்குகிறது. இந்த சந்திப்பு நடக்க ஒரு முக்கிய காரணம் சித்ராவின் நெல்லை வருகை என்பதால் பெரிய நன்றிகள் தோழி.

பாபு - இவருடன் நான்கு மாதங்களாக தான் பேசிட்டு இருக்கிறேன், என்றாலும் ஒரு சகோதர வாஞ்சையுடன் இவர் பேசுவது பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வை தரும். இந்த சந்திப்பிற்கு இவரது பங்கு அதிகம், கோவில்பட்டியில் இருந்து குடும்பத்துடன் வந்து சந்திப்புக்கான  ஏற்பாடுகளை பேசிவிட்டு சென்றார். சந்திப்பு நடந்த அன்று அவரது கம்ப்யூட்டர்  சென்டரின் பத்தாமாண்டு நிறைவு விழா, அதைவிட இந்த சந்திப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த அன்பிற்கு நன்றி சொன்னால் நல்லா இருக்காது. உங்களை பாராட்டுகிறேன் சகோ.

வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது. இவருக்கு என் நன்றிகள்.


சகாதேவன் சார் பக்கத்தில ஜெயந்த், அட பாபுவை கவர் பண்றாரா ? 


ஷர்புதீன் - எல்லா பிளாக்குக்கும் மார்க் போட்டு கொண்டு சென்றவர் இவர் தான். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அப்படி செய்ததாக கூறினார். அவர் பிளாகிற்கு 55 மதிப்பெண் கொடுத்து கொண்டாராம், (அது எப்படி அவருக்கு நாம தானே மதிப்பெண் போடணும் ?!) இவரிடமும் கலகலப்பிற்கு குறைவில்லை. . .இந்த சந்திப்பிற்கு மார்க் போட்டதாக கூறினார்...எத்தனை மார்க் என்பதை சொல்லவில்லை...! அவர யாரும் பார்த்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. இவரும் அப்ப அப்ப கலாய்ச்சிட்டு இருந்தார். உங்களுக்கு என் நன்றிகள்.   

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்னவேல் நடராஜன் இவர் தனது மனைவியுடன் வந்திருந்து விழாவை சிறப்பித்தார். இருவருக்கும் என் நன்றிகள்.

பதிவு ரொம்ப பெரிசா போற மாதிரி இருக்கு...அதனால அடுத்த பாகம் போட வேண்டியது தான் வேற வழியில்லை.......பொறுத்துக்கோங்க.

கலந்துரையாடலின் போது கிடைச்ச கொஞ்ச கேப்ல ஹாலை விட்டு வெளியே வந்தேன். அப்போ ரொம்ப சீரியஸா போட்டோகிராபர் நம்ம ஜெயந்த்கிட்ட பேசிட்டு இருந்தார்... அவங்களை கிராஸ் பண்ணும் போது காதில் விழுந்தது (நம்புங்க ஒட்டு கேட்கல !! )

போட்டோகிராபர் - உள்ளே எல்லோரும் மொக்கை மொக்கைனு அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்னங்க ?

முதலில் நொந்துபோன ஜெயந்த் பின்பு மெதுவா ரிலாக்சாகி பொறுமையா மொக்கை எனப்படுவது யாதெனில் .....என்று விளக்க ஆரம்பித்தார்...!

போட்டோகிராபர் படபோற அவஸ்தையை எண்ணி வருத்தபட்டுகொண்டே  உள்ளே வந்துவிட்டேன். 

அடுத்த பாகத்தில், இங்கே விடுபட்ட மற்றவர்கள் பற்றியும்...சிறு சமூக சேவை என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம், அதன் முழு விவரத்தையும் பகிர்கிறேன்.                       

                           *************************

செவ்வாய், ஜூன் 14

திருநெல்வேலியில் திருவிழா !




'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' -  சம்பந்தர்
'தண்  பொருநைப் புனல்நாடு'  -  சேக்கிழார்
பொன்திணிந்த  புனல் பெருகும் பொருநைத் திருநதி - கம்பர்

என்று சான்றோர்கள் பாடி பரவசம் அடைந்த பூமி இந்த திருநெல்வேலி !! ஆசியாவின் மிகப் பெரிய சிவன் கோவில், இங்கே உள்ள நெல்லையப்பர் கோவில் என்பது ஒரு சிறப்பு.சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் 'தாமிர சபை' என்று போற்றப்படுவதும் இந்த கோவில் தான்.


திருநெல்வேலி என்றால் இலக்கியம் சுவைத்த டி.கே.சி, விடுதலை உணர்வு தந்த வ.உ.சி, எட்டயபுரத்து பாரதி, உனக்கேன் தரவேண்டும் வட்டி என ஆங்கிலேயரிடம் உறுமிய  கட்டபொம்மன், ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்த மன்னன் பூலித்தேவன், வாஞ்சிநாதன் இப்படி பலரும் நினைவுக்கு வரலாம்.....! பலருக்கு  பாளையங்கோட்டை ஜெயில் நினைவுக்கு வரலாம்.....! முக்கியமாக எல்லோருக்கும் அல்வா நினைவுக்கு வரும்.....!  

இப்ப எதுக்கு இந்த பில்டப்னா,  இனிமேல் பதிவுலகத்திற்கு திருநெல்வேலி என்றால் 'பதிவர்கள் சந்திப்பு' நினைவுக்கு வரணும், வரும்.....!! (இது கொஞ்சம் ஓவர்தான்...!! )

எங்க ஊர்ல விஷேசமுங்க !

ஆம் மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....! 

பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி  அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது  'பதிவர்கள் சந்திப்பு'. 

அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால்  வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு  கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம். 

                      இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி


நிகழ்ச்சி நிரல் 


காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்

 அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
                                                       
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை. 



அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.    

வலைச்சரம் - சீனா ஐயா 
உணவுஉலகம் -சங்கரலிங்கம் 
சாமியின் மன அலைகள் Dr.P. கந்தசாமி 
வெடிவால் - சகாதேவன் 
சங்கவி - சதீஷ் 
அட்ரா சக்க - செந்தில்குமார்
கோமாளி செல்வா 
தமிழ்வாசி - பிரகாஷ் 
எறும்பு - ராஜகோபால்
ஜயவேல் சண்முக வேலாயுதம் 
அன்புடன் எ.மு.ஞானேந்திரன் 
நெல்லை நண்பன் - ராம்குமார் 
வெறும்பய -ஜெயந்த் 
நான் ரசித்தவை - கல்பனா 
ரசிகன் ஷர்புதீன்
ஜோசபின் பாபா 

இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் புதன்கிழமை (நாளை) கன்பர்ம் செய்து,  சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.

உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா  அவர்களின் மெயில் ஐடி   unavuulagam@gmail.com  
அவரது செல் எண் 9442201331.

ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், நம் நட்பை பரிமாறிக்கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த பதிவர்கள் சந்திப்பு இருக்கும்.


அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம் 


தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும்  மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.   

இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை  பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....


வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம்.  இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!


நெல்லையும் நாங்களும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இணையம் என்ற கடலில் வந்து விழுந்த நதிகள் நாம் ! நம்மிடையே இருக்கலாம் பல வேற்றுமைகள், இருந்தும் ஒன்றிணைகின்றோம்  நட்பு என்ற அற்புதத்தால் !! சகோதர பாசத்தையும், தோழமை அன்பையும், மனித மாண்பையும் போற்றுவோம் !!  

கலந்து கொள்ள இயலாத தோழமைகளிடம் இருந்து வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும்  எதிர்பார்கின்றோம்...!

தமிழர்களாய், தமிழால் ஒன்றுபடுவோம் !
அன்பால் மனிதர்களை வசப்படுத்துவோம் ! 
நட்பால் உலகை வெல்வோம் !

வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்கள் ! வளர்க அவர்தம் புகழ் !






படங்கள் - கூகுள் 

செவ்வாய், ஜூன் 7

தாம்பத்தியம் - 24 - மனைவியரே ! ஏன் இப்படி?

முன்னுரை 

தாம்பத்தியம் தொடர், குடும்பத்தில் ஏற்படும் சிக்கலுக்கு காரணமான பிரச்னைக்குரிய கணவன், மனைவி இவர்களின் நிறை, குறைகளை பற்றி சொல்லும் ஒரு பதிவு. பெற்றோர்களின் கருத்துவேறுபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை மனதில் வைத்தே எழுதி வருகிறேன். பாதிக்கப்படும் குழந்தைகள் வளர்ந்த பின்னும் அந்த பாதிப்பில் இருந்து அவ்வளவாக மீண்டு வருவது இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். பாதிக்கப்பட்ட இன்றைய குழந்தைகள், நாளைய பெற்றோர்களாக மாறும் போது அவர்களின் மனநிலை...?! குழந்தைகளின் நலனை மனதில் வைத்தாவது தம்பதிகள் பரஸ்பரம் அன்பை பரிமாறி வாழக்கூடாதா என்கிற ஆதங்கம் இத்தொடரில் எழுத்துக்களாய்...!!


கணவன் மனைவி சம்பந்த பட்ட குடும்ப விசயத்தில் ஆண், பெண் என்று  பாகுபடுத்தி பார்ப்பதே தவறு. பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று குரல் கொடுக்கலாம் தவறில்லை ஆனால் அதற்கான இடம் குடும்பம் அல்ல !!

பொதுவாக இப்படி பெண்ணுரிமை, சம உரிமை  என்று குரல் கொடுத்து கொண்டிருப்பதால் வீட்டிலும், குடும்பத்திலும் அது எதிரொலித்து எல்லா பிரச்சனைக்கும் ஒரு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. குடும்பம்  வேற...மேடை பேச்சு வேற... புரிந்து கொண்ட பெண்களின் இல்லங்களில் குதூகலமும், புரிந்து கொள்ளாமல் கொடி பிடிப்பவர்களின் வீட்டில் குளறுபடிகளும் கும்மி அடிக்கின்றன !!

மனைவி கணவனுக்கு சமம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரது வீடுகளிலும் மனைவியின் கை தானே ஓங்கி இருக்கிறது...சில வீடுகளில் மனைவி தனக்கு தேவையான உரிமையை மட்டும்  எடுத்துக்கொள்கிறாள், சில வீடுகளில் வலிந்து பெற்றுக்கொள்கிறாள், பல வீடுகளிலும் முழு உரிமையையும் எடுத்துகொண்டு குடும்பத்தை வழி நடத்துகிறாள்...இதுதான் இன்றைய நிதர்சனம்.ஆண்கள் விட்டுகொடுத்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார்கள், அவர்கள் ஆளுமை செய்த காலம் குடும்பத்தை பொறுத்தவரை மிக குறைந்து விட்டது. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு)

அத்தகைய பெண்களில் சிலர் 'தான் சொல்வதே சரி' என்பது போல் நடந்து சிக்கல்களை உருவாக்கி கொண்டே செல்கிறார்கள்.

குடும்பத்தைக் கெடுக்கும் அறிவுரைகள் ?!!
  
மனப்பொருத்தம் என்பது ஏதோ கடையில் வாங்கும் பொருளல்ல...இரு மனமும் பொருந்தியதே திருமணம் என்று பெரியவர்கள் சொல்லி வச்சாங்க. இப்போது திருமணம் ஒருவழியாக பொருந்திவிடுகிறது, ஏனோ இரு மனங்கள்  பொருந்துவதே இல்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம், காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் மனம் பொருந்தவில்லை என்றால் அது நரக வாழ்க்கை. மனம் பொருந்தாமைக்கு கணவன் மனைவி மட்டும் காரணம்  இல்லை,பெண்களை பொறுத்தவரை திருமணத்தின் போதே அவர்களுக்கு ஓதப்படும் தவறான அறிவுரைகள்....!!?

* கணவனை கைக்குள் போட்டுக்கோ
* மாமியார், நாத்தனாரை தூரமா வை.
* கொஞ்ச நாள் போனதும் தனிக்குடித்தனம் போற வழியைப் பாரு. 
* எந்த முடிவும் நீ எடு, அடக்கி வை.

இந்த நான்கில் ஒன்றாவது நிச்சயம் எல்லா குடும்பத்திலும் திருமணத்தின் போது  பெண்ணின் காதில் ஓத படுபவை.....இல்லை என்று யாரும் மறுக்க முடியாது.

இப்படி வலுகட்டாயமாக பதிய வைக்கப்படுபவை, புது பெண்ணின் மனதில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணருவதே இல்லை.
கணவன் நல்லவனாக இருந்தாலும் இந்த எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து விடுவதால், கணவனை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பெண் அணுக தொடங்குகிறாள். திருமண முடிந்த ஆரம்பத்தில் இது அவ்வளவாக வெளியே வருவதில்லை, போக போக கணவனை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளணும் என்கிற எண்ணம் தலை எடுக்க தொடங்கும்.

இன்றைய பெண்களுக்கு ஆணை விட நாம் எதில் குறைந்தவர்கள் என்ற எண்ணம் அதிகம். ஆனால் இதை குடும்பத்தில் நிலைநாட்ட துடிப்பது சரியன்று. தவிரவும் ஆணுக்கு சமம் என்றால் சம மரியாதை கொடுக்க வேண்டுமே,அதுவும் இல்லை, தனக்கு(ள்) அடங்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்...?!

அது என்ன ஆம்பளைங்க என்றாலே ஏதோ வேற்றுக்கிரக ஜந்து மாதிரி பார்க்கிறது...?!!! திருமணம் முடிந்த நாளில் இருந்து  கணவனை எப்படி எல்லாம் தன் வழிக்கு கொண்டு வரலாம் என்று பிளான் போடுவார்கள் சிலர் !! என்னவோ அதுவரை கணவன் ஒன்றும் தெரியாத முட்டாளாக இருந்தது போலவும், இவங்க புத்தி சொல்லி திருத்துற மாதிரியும்,  இப்படி பண்ணு, அப்படி பண்ணு என்று அட்வைஸ் பண்றதா பார்த்தா......!? பாவம் அப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்த ஆண். எல்லாவற்றிலும் பெண்ணின் பேச்சை கேட்கணும் என்றால் அந்த கணவனின் தனித்தன்மை என்ன ஆகும்? 

ஒரு சில ஆண்கள் மனைவியின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளாதவனாக, அடக்கி ஆளும் மனம் படைத்தவனாக இருக்கலாம், அதற்காக ஒட்டு மொத்த ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் அணுகுவது அநியாயம். (ஒரு வேளை கணவன் அடக்கி ஆளும் மனம் கொண்டவனாக இருந்தாலும், மனைவியால் சந்தோசமாக குடும்பம் நடத்த இயலும் அது எவ்வாறு என்று பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.....!)

என்ன குறை கண்டாய் பெண்ணே ?

ஆண், பெண் யாராக இருந்தாலும் 100 சதவீதம் நிறைகள் உள்ளவர் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்கும் போது கணவனிடம் மட்டும் நூறு சதவீத நிறைகள் இருக்கணும் என்று எதிர்பார்காதிங்க...! ஒரு பெண்ணிடம் உங்க கணவன் எப்படி என்று கேட்டு பாருங்க, "அய்யோ அவரா, அதையேன் கேட்குறீங்க..... வேலை  விட்டு வந்தாலும்  வீட்ல இருக்கறதே இல்ல, எப்பவும் நண்பர்கள் கூட வெட்டி பேச்சு தான், வீட்ல ஒரு துரும்பை கூட அசைக்கிறது இல்லை...எல்லாம் நான்தான் பார்க்க வேண்டி இருக்கு, இந்த மனுசனை கட்டிட்டு என்ன சுகத்தை கண்டேன்......" இப்படி.....கேட்டவங்க  காது தீப்பிடிக்கிற அளவு போயிட்டே இருக்கு.....இதுவா நல்ல தாம்பத்தியம் ? இல்லவே இல்லை...!

பொதுவா குறைகளை பட்டியல் போடுவதை மனைவிகள் நிறுத்தவேண்டும்.....பதிலுக்கு கணவனும் மனைவியின் குறைகளை பட்டியல் போட தொடங்கிவிட்டால் இதற்கே பொழுது சரியாக இருக்கும், குடும்பம் நடத்த முடியாது. வீட்டில் குறை சொல்வது போதாது என்று உறவினர்கள் ,அக்கம்பக்கமும் சொல்லிவிடுவதால் சின்ன விஷயம் , பெரிய பிரச்னை அளவிற்கு போய்விடும். அடுத்தவர்களுக்கு நம் வீட்டு பிரச்னை ஒரு பொழுது போக்கு வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு போய்விடுவார்கள், ஆனால் அதை பெரிதாக எண்ணிக்கொண்டு சில பெண்கள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

ஒரு கணவனிடம் குறை என்றால் உதாரணதிற்கு குடிப்பழக்கம்.....

திருமணதிற்கு முன் ஒரு ஆண் குடிக்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாகிறார்/காரணம். ஆனால் திருமணதிற்கு பின் கணவர் குடிக்க தொடங்குகிறார் அல்லது அதிகமாக குடிக்கிறார் என்றால் அதற்கு முழு பொறுப்பு அவரது மனைவி என்பேன்....அது எப்படி அவருக்கு தொழில்/வேலை  நெருக்கடி இருக்கலாம், மன அழுத்தம் காரணமா குடிக்கலாம் அல்லது புதிய நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் இது போன்ற எந்த காரணமாக இருந்தாலும் மனைவியின் அன்பும், அரவணைப்பும், முக்கியமாக புரிதலும் சரியான அளவில் கணவருக்கு கொடுக்கப்பட்டு வந்தால் அங்கே எந்த கெட்டப்பழக்கமும் ஏற்பட வழியே இல்லை. பழக்கம் ஏற்பட்டாலும் அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும். 'என் கணவன் சரியில்லை' என்று குறை சொல்லி புலம்பும் பெண்களுக்கு எனது ஒரே பதில் "தவறுகளின் ஆரம்பம் நீங்கதான்"

சண்டை போடும்போது ஆண்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று அவர்களை குறைத்து எடை போட்டுவிடாதீர்கள்...!சகித்துக்கொண்டு  இருக்கிறாங்க அவ்வளவு தான். ஆனால் இந்த சகிப்புத்தன்மையும் ஒரு அளவிற்கு தான்.  அளவை தாண்டும் போது கரையை உடைத்துக்கொண்டு போகும் வெள்ளத்தை போல கடந்து சென்றே விடும்.....அப்புறம் தலை கீழாக  நின்றாலும் உங்க பக்கம் திருப்ப முடியாது. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கணவனிடம் இருக்கும் குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு இருக்கும் அவரிடம் நிறைகளை கவனத்தில் வையுங்கள். கூடுமானவரை இருக்கும் குறைகளை, நிறைகளாக மாற்ற முயலுங்கள்.....( 'இந்த மனுஷனிடம் நிறையா ? அப்படியெல்லாம் ஒண்ணுகூட இல்ல...!') நல்லா யோசிங்க.....! ஒண்ணு, இரண்டு எங்காவது ஒளிந்து கொண்டிருக்கும்.....!! நிறைகளை அடிக்கடி சொல்லி உற்சாகப் படுத்துங்கள்.....! 

முக்கியமாக சின்ன சின்ன பாராட்டுகள் ! இதற்காக மேடை போடணும், மைக் வைக்கணும்னு அவசியம் இல்ல...அன்றாட வாழ்வில் கேசுவலாக சொல்லலாம்.....சொல்லித்தான் பாருங்களேன் ........!! 

ஒரு சில டிப்ஸ்.....

கணவரிடம்,

* எந்த பிரச்னைக்கும் டக்குனு தீர்வு சொல்றீங்க, எப்படிப்பா இப்படி...சூப்பர் !

* உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ்,சான்சே இல்ல போங்க அபாரம் !

* நடை கம்பீரமா இருக்குங்க ! நெற்றியில் விழும் முன் முடி செம அசத்தல்பா !

* பேசுறப்ப நடுநடுவே சிரிக்கும் இந்த சிரிப்பு என்னை ரொம்ப ஈர்க்குதுங்க ! நீங்க இல்லாதபோதும் அந்த சிரிப்பு என் காதில் கேட்டுட்டே இருக்குங்க !! (ஒருவேளை லவ் பண்ணி இருந்தால் அப்போ இதை விட ஓவரா சொல்லி இருப்பீங்களே !! இப்பவும் சொல்லுங்க, தப்பு இல்ல...!)

இதே ரீதியில் சொல்லி பாருங்க.....(அப்புறம் ரிசல்ட் என்னனு என்கிட்டே சொல்ல வேண்டாம், ரிசல்ட் எப்படி  இருக்கும் என்று எனக்கு நல்லா தெரியும் !! ) 

இது தாங்க வாழ்க்கை...இப்படி சிம்பிளா, ஜாலியா வாழ்ந்து வாழ்க்கையை முடிக்கிறதை விட்டுட்டு,   எப்பவும் கணவரை குறை சொல்லி அழுது புலம்பி நீங்களும் மன அழுத்தத்தில விழுந்து , அவரையும் வேற ஒண்ணுல விழ வச்சிட்டு, குழந்தைகளை பற்றியும் சுத்தமா மறந்துவிட்டு என்ன வாழ்க்கை வாழ்றீங்க.....!!? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ...!!


************************************************************************

'மனைவியரே ! ஏன் இப்படி...?!' முடியவில்லை, தொடருகிறது.....!?


தாம்பத்தியத்தில் அடுத்து வருவது ,ஆண்களை பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ? காத்திருங்கள்....

************************************************************************






படங்கள் - கூகுள் 



இன்றைய சிறகடிப்பில் கழுகு !



புதன், ஜூன் 1

தாம்பத்தியம் பாகம் 23 - கணவன்/மனைவி பாதை மாற காரணம்




மனப்பொருத்தம் இல்லாமை



ஜாதக பொருத்தம் சரியாக  இருக்கிறதா என்று பார்த்து சேர்த்து வைப்பதுடன் பெற்றோரின்  கடமை முடிந்துவிடுகிறது. வேறுபட்ட இரு குடும்ப பாரம்பரியங்களில் , சூழ்நிலைகளில் வாழ்ந்தவர்கள் இனி புதியதொரு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டாக வேண்டும். புது சூழல் , புது உறவுகள், புது பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அனுசரித்து பழகி கொள்வார்கள். அதன் பின் பல வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்தாலும் அவர்கள் புரிதலுடன் தான் வாழ்கிறார்கள் என்று முடிவிற்கு வந்துவிட முடியாது. பல உட்பூசல்கள் நீருபூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருப்பது வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை. 

கணவன்/மனைவி ஒருத்தருக்கு கருப்பு நிறம் பிடிக்கும் , மற்றொருவருக்கு  வெள்ளை நிறம்...இப்படி நிறத்தில் தொடங்கி பலவற்றிலும் விருப்பங்கள் எதிரும் புதிருமாக ! விருப்பங்கள் வேறுபட்டாலும் இருவரையும் இணைப்பது  அன்பு என்னும் மகா சக்தி. ஆனால் இந்த அன்பை அடிக்கடி புதுப்பித்துக்  கொள்ளவேண்டும்...நம்ம மனைவி தானே என்று திருப்தி பட்டு கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை வெளிப்படுத்தியாக வேண்டும் நேரம் கிடைக்கும் போதெல்லாம்...!! ஆனால் எத்தனை தம்பதிகள் இதை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் விடை மிக சொற்பமே !!? 

கணவன் மனைவி இருவரையும் சேர்த்து சொல்வதை விட இருவரின் மனநிலைகளை பற்றியும் தனித் தனியா பார்க்கலாம் என்று நினைக்கிறேன் (அவ்ளோ மேட்டர் இருக்கு இதில.....!! )

இன்றைய கணவர்கள் !?

இதை படிக்கிற ஆண்கள் தினசரி வாழ்கையில் எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து பாருங்கள்...(எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் சரியா வருதானு பாருங்க)

காலையில், சுடு தண்ணீர் காலில் கொட்டிய மாதிரி அரக்கபரக்க எழுவதில் இருந்து, குளித்து அவசர அவசரமாக மனைவி கொடுக்கிற டிபனை (சிலர் சாப்பிடுவதும் இல்லை!) நின்றுகொண்டே உள்ளே தள்ளிட்டு , வேலைக்கு கிளம்பி ஓடுவீங்க, அங்கே  போயும் அந்த வேலை, இந்த வேலைன்னு பார்த்துவிட்டு அதீத சோர்வா வீட்டுக்கு வருவீங்க. அந்த நேரம் பார்த்து  உங்கள் குழந்தை உங்களிடம் ஏதும் சொல்ல வந்தா 'அம்மாவிடம் போ,  நான் டயர்டா இருக்கிறேன்'னு சொல்லிட்டு...கொஞ்ச டிவி பார்த்திட்டு இரவு உணவை முடிச்சிட்டு படுத்துவிடவேண்டியது...நடு இரவில் விழிப்பு வந்தால் , கண்டிப்பா விழிப்பு வரும்... அப்போதுதான் அருகில் மனைவி ஒருத்தி இருப்பது நினைவுக்கு வரும்... அப்புறம் என்ன... அந்த கடமையையும் ஒரு ஐந்து நிமிசத்தில முடிச்சிட்டு தூங்கிட வேண்டியது.....இது தான் இன்றைய பெரும்பாலான கணவர்களின் வாழ்க்கை முறை ! எப்படிப்பட்ட விபரீத வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்பது தெரியுமா ??

சிலரிடம் உங்க வாழ்க்கை எப்படி போகிறது என்று கேட்டால் போதும் வாய் வலிக்கும் அளவிற்கு அளந்து விடுவார்கள்.எனக்கு பெரிய லட்சியம் இருக்கு, இதை இப்படி செட்டில் பண்ணனும், அதை அப்படி செட்டில் பண்ணனும்', 'இரண்டு கிரௌன்ட்ல வீடு கட்டிட்டு இருக்கிறேன்', அப்புறம் 'அதுல இன்வெஸ்ட் பண்ணி இருக்கிறேன்', 'இதில லோன் வாங்கி இருக்கிறேன்', 'இன்சுரன்ஸ் இத்தனை லட்சத்துக்கு எடுத்து இருக்கிறேன்', என்று போயிட்டே இருக்கும்......இதுவா வாழ்க்கை ? இதில் மட்டும் நிறைவு கிடைத்து விடுமா ?

இந்த மாதிரியான நபர்களை பொறுத்தவரை வாழ்க்கையின் அர்த்தம் இதுதான். பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டால் அனைத்தும் முழுமை அடைந்துவிடும் என்பது மாதிரியான எண்ணங்களே மனதை ஆக்கிரமித்து இருக்கிறது.....! பொருள் பின்னே ஓடியே மனஅழுத்தம் அதிகரித்து, தாம்பத்திய வாழ்வில் தோல்வியை தழுவி தங்களின் வாழ்நாட்களை கசப்பாக கழித்து ஏனோ தானோவென்று முடித்துவிடுகிறார்கள்.....! ஆனால் இவர்களின் மனகோளாருகளால் பாதிக்கப்படும் அவர்கள் குழந்தைகளின் நிலை !!?

நான் என் மனைவியை அன்பாக தான் வைத்திருக்கிறேன் என்று ஒரு மிதப்பில் இருக்கும் ஆண்கள் பலர் உண்டு...உண்மையில் எப்படி அன்பாக வைத்திருக்கிறீர்கள் ? எந்த விதத்தில் ? என்று கேட்டால் வரும் பதில் மிக அபத்தமாக இருக்கும்.....! அதனால் அவ்வளவையும் இங்கே விரிவாக சொல்வதைவிட மிக முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.....

'என் மனைவியை ரொம்ப காதலிக்கிறேன்', 'அவர்களை சந்தோசமாக வைத்திருக்கிறேன்' என்று வரும் பதிலின் உண்மை தன்மை என்ன தெரியுமா? ஆண்கள் ஒரு அரைமணி நேரம் தங்களை ரிலாக்ஸ் பண்ணி கொள்கிறார்கள் அவ்வளவே ! இதில் மனைவியின் சந்தோசம் எங்கே இருக்கிறது ? அல்லது ஒரு நாளாவது 'என்னுடன் இருக்கும் இந்த தனிமையான நேரம் உனக்கு சந்தோசத்தை கொடுக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்களா ?' கேட்டுபாருங்கள் , வரும் பதிலில் உடைந்து போய்விடும் உங்களின் ஆண்மை !!

அந்த ஒரு அரைமணி நேரம் !!

உங்களின் தேவையை தீர்க்கும் அந்த ஒரு அரைமணி நேரம் நிச்சயம் பெண்ணிற்கு மகிழ்வை கொடுக்கவே கொடுக்காது. பின் என்ன செய்வது ? உங்களின் அந்த அரைமணி நேரத்திற்கு முன் ஒரு அரைமணி நேரம் மனைவிக்காக ஒதுக்குங்கள், நீங்கள் பெரிய அதிகாரியாக இருக்கலாம்,தொழில் அதிபராக இருக்கலாம்..... ஆனால் தனிமையான அந்த நேரத்தில் உங்கள் மனைவியின் கணவன் மட்டுமே என்பது நினைவில் இருக்கட்டும்.'அன்று வீட்டில்/அலுவலகத்தில் என்ன நடந்தது, அதை பற்றி சொல்லு' என்று கேளுங்கள்.உங்களின் அன்றைய அலுவல் வேலை பற்றியும் சொல்லுங்கள், ஆமாம் அது எல்லாம் அவளுக்கு தெரியாது, சொன்னாலும்  புரியவும் புரியாது என்று எண்ணாதீர்கள்.

பதிவர்களுக்கு புரிகிற மாதிரி ஒரு உதாரணம் சொல்றேன்.

நீங்கள் கவிதைகள் எழுத தெரிந்தவராக இருந்தால் அதை பற்றி சொல்லுங்கள் உனக்கு எழுத தெரியுமா என்று வினவுங்கள். அவளுக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்...இன்றைய இளம் மனைவிகள் பல திறமைகளை உள்ளுக்குள் வைத்திருப்பார்கள் , வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததால் வெற்று காகிதம் என்று அலட்சிய படுத்திவிடாதீர்கள்..... பல கவிதைகள் அந்த காகிதத்தில் எழுத பட்டு இருக்கலாம் , ஆண் என்ற கண்ணிற்கு அது தெரியாமல் இருக்கலாம். யாருக்கு தெரியும் அவை உங்களின் (கிறுக்கல்) கவிதைகளை விட அற்புதமாக இருக்கலாம் !!

விளையாட்டாய் கேட்டுப்பாருங்கள் 'என்னை பற்றி இரு வரி கவிதை சொல்' என்று அசந்து போய் விடுவீர்கள் இத்தனை நாள் இதை இழந்துவிட்டோமே என்று வருந்தும் நிலைக்கு தள்ளப்படலாம். ஒரு உதாரணத்துக்கு கவிதை என்று சொன்னேன், பேச்சு கொடுத்து பாருங்கள் பல புதையல்கள் வெளிவரலாம். கருத்துக்களை பரிமாறுங்கள், அவர்களையும் பேசவையுங்கள்...பேச்சின் ஊடே அவள் விரல் பிடித்து மெல்ல நீவி, 'இன்னைக்கு வேலை ஜாஸ்தியாடா' என்று கேட்டுபாருங்கள், அந்த நொடி மிதக்க தொடங்குபவள் விடியும் வரை உங்களில் கரைந்து மயங்கி கிடப்பாள். இது தாங்க பெண்மை. இத விட்டு விட்டு  எத்தனை கோடி பணம் தலையில் கொட்டினாலும் அந்த சந்தோசம் எல்லாம் சில நொடிகளில் (நாட்களில்...!) முடிந்துவிடும். ஆனால் நான் குறிப்பிட்ட அந்த அரைமணி நேரம் வாழ்வின் இறுதிவரை காதலால் நிறைத்து விடும்.


இந்த மாதிரி சில நிமிடங்கள் மனைவிக்காக ஒதுக்க முடியாதா என்று கேள்வி கேட்கிறேன், ஒதுக்க முடியாதவர்கள் அதன் விளைவை கண்டிப்பாக சந்தித்து தான் தீருவார்கள்...வழக்கம் போல அது என்ன விளைவு என்று யோசியுங்கள்...

                                                                                                         *****************

அடுத்த பாகத்தில் 'மனைவிகளே ஏன் இப்படி ?' அடுத்த பதிவு படிச்சா நிச்சயம் பெண்களுக்கு கோபம் வரலாம்...ஆனால் என்ன செய்வது, குறைகள் எங்கே அதிகம் இருக்கிறதோ அதை சொல்லிதானே ஆகணும்...?!!     காத்திருங்கள்.....!!

                                                                                                          *****************

படங்கள் - நன்றி கூகுள் 



கழுகு - கே.ஆர். பி செந்திலுடன் ஒரு சந்திப்பு!



போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...