வெள்ளி, ஜூன் 8

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !!?




எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான  ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.....?! பொருட்படுத்துவதும் இல்லை.....!? ஒரு முக்கியமான மாற்றம் தான் பெண் குழந்தைகளின் விரைவான பூப்படைதல். சமீப காலமாக பருவமடையும் வயது குறைந்துக்  கொண்டே செல்கிறது. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் பருவமடைந்திருக்கிறது...இங்கே இல்லை லண்டனில்...?!!


Precocious Puberty causes hormone disorders and  brain abnormalities


அவ்வாறு விரைவில் வயதிற்கு வருவது நல்லதல்ல என்பதே மருத்துவர்கள், ஆய்வாளர்களின் கருத்து.  பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் மனமும் உடலும் ஒன்றாக  சேர்ந்து வளர வேண்டும். உடல் மட்டுமே வளர்ந்து, மனதில் குழந்தையாக இருப்பவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை விட பல ஆபத்துகளுக்கும் இது வழி வகுக்கும்.

இது ஏன் அவ்வாறு விரைவாக ஏற்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருப்பது  அக்குழந்தையின் பெற்றோர் தான் ?!

இதனைப்  பற்றியதே இந்த பதிவு.....

முன்பு எல்லாம் பதினாறு வயதில், பின் அதுவும்  குறைந்து பதினாலு வயதில் பருவமடைதல் என்றானது...இப்போது 12 வயதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதில்....!! பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வருவது என்பது அவர்கள் வளரும் சூழ்நிலை, பரம்பரை, உணவு பழக்க வழக்கம் இவற்றை அடிப்படையாக வைத்து தான் நடை பெறும்.

உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

*  குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

*   பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை பலவிதத்திலும் பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் இது பெண் குழந்தைகள் விரைவில் வயதிற்கு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறும் போது பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது போன்றவை பெண் குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது, இது  ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, பிரச்சனை நேருகிறது. உடல் வளர்ச்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு முடிவில் விரைவாக அக்குழந்தையை பூப்படையச்  செய்து விடுகிறது.

*  ஆணின் அரவணைப்பு இல்லாமல்...

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஆணின் அரவணைப்பு அதாவது தன்  தந்தையின் நெருக்கம் அவசியம் தேவை. தந்தையில்லாத , தந்தை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் படி நேர்ந்தால்,  அவர்களின் பெண் குழந்தைகள் விரைந்து வயதிற்கு வந்து விடுகிறார்கள்....!!

சகோதரனின் பாசமும் ஹார்மோன்களின் குழப்பத்தை சரிச்செய்யும். இப்போது பெரும்பாலான  வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால் அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்துவிட்டால் சகோதரன் என்ற ஒரு உறவேத்  தெரியாமல் தான் அக்குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தந்தையின் அருகாமையும், பாசமான அரவணைப்பும் மட்டுமாவது கண்டிப்பாகத  தேவை.

*  தொலைக்காட்சியும் ஒரு காரணம் !!?

நம் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதில் இந்த தொலைக்காட்சிக்கு அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழப்பமான மனதுடனே  தூங்கவும் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் விரைவில் பூப்படைகிறார்கள்  என்று அறிஞர்கள் தங்களது ஆய்வில் கண்டுப்  பிடித்துள்ளனர்.

சீக்கிரம் வயதிற்கு வருவதால் ஏற்படக்கூடிய அசௌரியங்கள்

* முதலில் இதைப்  பற்றி என்ன வென்றே தெரியாத ஒரு நிலை.
* நிகழ்ந்த பின் ஏற்படக்கூடிய ஒரு அச்சம், குழப்பம், எதனால் என்கிற கேள்வி ?!!
* பள்ளியில் சக மாணவிகள்/மாணவர்கள்  வினா எழுப்பும் பார்வைகள்.
* தனிமையான ஒரு உணர்வு.
* மனதளவில் குழந்தை, உடலளவில் பெண் ?!!

தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்...பெண் குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்

பெற்றோர்கள் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டில் குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல முறையில் தான் வளருவார்கள்....குழந்தைகள் முன்னால் சண்டைப்  போடும் பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவது மட்டும் இன்றி ஹார்மோன் குளறுபாடுகள்  ஏற்பட்டு விரைவில் பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதும் ஏற்படுகிறது.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே! கொஞ்சம் உங்கள் குழந்தையின் மனநிலையிலும் அக்கறைக் காட்டுங்கள்.

இதற்கு ஒரு தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது, குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்புப்  பொருட்களைத்  தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.






பூ மெதுவாய்.....இயல்பாய் மலரட்டுமே....!


வியாழன், ஜூன் 7

அறிவைத் திருடாதே...! இணையதள பதிவு திருடர்களுக்கு கண்டனம் !!


பதிவுலகத்தில் இருக்கும் சிலருக்கு ஒருநாளில் இரண்டு பதிவுக்கு அதிகமாக எழுத இயலும்...ஆனால் என் போன்ற வெகு சிலருக்கு வாரத்திற்கு இரு பதிவு என்பதே அதிகம். இந்நிலையில் கொஞ்சமும் மனசாட்சி இன்றி எனது பதிவுகளை எவ்வித அனுமதியும் பெறாமல் சுலபமாக திருடி தங்கள் தளத்தில் வெளியிடுகிறார்கள்...இதில் எனது பார்வைக்கு வராதவை எத்தனையோ !!?   எங்கிருந்தும் யார் பதிவையும் சுலபமாக இரு நிமிடத்தில் இடம் மாற்றிவிடலாம்...அவ்வாறு செய்வது தவறு என்று பதிவு திருடர்களுக்கு ஏனோ உரைப்பது இல்லை. ஒருவரின் சொந்த கருத்தை அவரறியாமல் திருடுவது அநாகரீகம், அசிங்கம், கேவலம் ...!!

எது ஒன்றும் எங்கிருந்தாவது எடுத்ததாகத்தான் இருக்கும். ரிஷி மூலம் எது என்று யாருக்கும் தெரியாது. ஒரு பதிவை அப்படியே காப்பி செய்து போடுவதை விட அதில் இருக்கும் மூல கருத்தை எடுத்துகொண்டு அத்துடன் தங்களின் சொந்த கருத்துக்களையும் சேர்த்து எழுதுவது ஏற்புடையது. 

அதை விட்டுவிட்டு  ஒரு எழுத்துக்கூட விடாமல் அப்படியே காபி செய்து வெளியிடுவதை பார்க்கும் போது எரிச்சல் தாள முடியவில்லை. இப்போது தான் தெரிகிறது என் போன்ற நிலையை ஏற்கனவே சந்தித்த மற்றவர்களின் நிலை...! சகோதரி ஜலீலா அவர்கள் அப்போது எத்தனை வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை உணருகிறேன். அடுத்தவர்களின் வயிற்றேரிச்சலை கொட்டி திருடர்கள் கண்ட பலன் என்னவோ???

காப்பி  ரைட் வாங்கி வச்சுகோங்கனு நண்பர்கள்  சொன்னாங்க...'நானும் எடுத்து வச்சிருக்கிறேன்' அப்டின்னு சொல்லிக்கலாம்...ஆனா அதை வச்சு கோர்ட்ல கேசா போட முடியும்...?! வேதனை !!

சொந்த(நொந்த) அனுபவங்கள்... 

* முக நூலில் தன்னை சமூக சேவகர் என்று ஒருவர் கூறி கொள்வார், குழந்தைகள் சம்பந்தப்பட்ட எனது பதிவுகளின் சில பாராக்களை காப்பி செய்து முக நூலில் போட்டு இருந்தார். எனது பெயர், லிங்க் எதுவும் இல்லை...அவரது நண்பர்களும் இவர் சொன்ன கருத்து என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்கள், அதை அனுசரித்து இவரும் பதில் கூறி இருந்தார். தொடர்ந்து இங்கிருந்து காப்பி பண்ணி ஸ்டேடஸ் தொடர்ந்து போட்டு கொண்டே இருந்தார்...எனக்கு அதீதமாக படவே, இன்பாக்சில் சுட்டி காட்டினேன், உடனே 'சாரி' என்றதுடன் என் தள லிங்கை அங்கே குறிப்பிட்டார். ஆனால் சற்று நேரத்தில் லிங்க் குறிப்பிட்ட அந்த ஸ்டேடஸ் டெலீட் செய்யப்பட்டு விட்டது... ஏன் இந்த ஈகோ ?! லிங்க் குறிப்பிட்டால் எங்கே தான் அதுவரை போட்டு வந்த பெரிய மனிதன் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சமா ?!! மனதில் சேவை எண்ணம் சிறிதும் இல்லாத, இவர் ஒரு சமூக சேவகர் ?!

* தனி நபர் வளர்த்த காடு பற்றி நான் எழுதிய மற்றொரு பதிவு முக நூலில் சுற்றி வருகிறது...ஆனால் வேறு ஒருவரின் பெயரில்...??! இது எந்த விதத்தில் நியாயம் என புரியவில்லை. நானே எனது இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தான் எழுதி இருந்தேன். ஆனால் லிங்க் , என் பெயர் போடவில்லை என்றாலும் பரவாயில்லை , வேறு ஒருவர் பெயரில் வெளிவருவது  படு அபத்தம் !!?

அந்த பதிவை எழுத எனக்கு  மூன்று வாரம் ஆகியது. The Times of India வில் வந்த செய்தியை பார்த்து அது குறித்த வேறு விரிவான தகவல்கள்  இணையத்தில் இருக்கிறதா என தேடி, மொழிபெயர்த்து என் கருத்துக்களையும் கலந்து எழுதினேன். ஜாதவ் பயேங் போட்டோ தேட இரண்டு நாள் ஆச்சு... இப்படி சிரமப்பட்டு எழுதிய ஒன்றை கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களது பெயரை போட்டு வெளியிடுகிறார்கள்.

கூகுள்ல 'ஜாதவ் பயேங்' என்று டைப் பண்ணினா என் பதிவு மட்டும் தான் இருக்கும் என்பதை பார்க்கலாம்...தமிழ் பிளாக்கில் அவரை பற்றி இதுவரை வேறு யாரும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் (இருந்தால் லிங்க் கொடுக்கவும்)

* மெதுபக்கோடா என்கிற  முக நூல் தளம் ஒன்று சில நாட்களாக எனது தாம்பத்தியம் பதிவுகளை அப்படியே காபி செய்து வெளியிட்டு வருகிறது...அங்கிருந்து பல இடங்களுக்கு பகிரப்பட்டு சென்று கொண்டிருக்கிறது...இப்படி பலராலும் பிற இடங்களுக்கு செல்வது எனக்கு  மன உளைச்சலை கொடுக்கிறது. இதை பலர் ஷேர் செய்வதின் மூலம் அவர்களும் இத்திருட்டுக்கு உடந்தையாகிறார்கள்.

இப்படி மொத்தமாக காபி செய்து போடுவதை விட இன்னார் எழுதியது, இந்த லிங்கில் இருக்கிறது படித்து கொள்ளுங்கள் என்று லிங்க் கொடுக்கலாம்...எல்லோருக்கும் பயன்படதானே எழுதுகிறோம் போய் சேரட்டும் என விட முடியவில்லை...சிலரும், நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? அது தானே எனக்கும்...

மேலும் இந்த தொடரை புத்தகமாக போட இருக்கிறேன்...! நாளை அதை படிப்பவர்கள்  என்னை திருடியாக(?) பார்க்கப்படவும் வாய்ப்பு  இருக்கிறது...!!???  ( வேடிக்கை அல்ல, இப்படியும் நடக்கலாம்...மக்களே !!)

* இந்த பதிவை நேற்று காலையில் எழுதி முடித்தேன்...அதற்குள் மாலையில் சௌந்தர் மெயில் பண்ணி சொல்றான், 'அக்கா உங்க கவிதை இங்க இருக்கு, இது தான் லிங்க்' என்று !! இது ஒரு பெண்(!) சௌந்தர் அங்கே சென்று இது வேறு ஒருவரின் கவிதை, குறைந்த பட்சம் அவங்க பேராவது குறிப்பிடுங்கள் என்று போட்ட அத்தனை கம்மெண்டும் உடனுக்கு உடன் டெலீட் செய்யப்பட்டுவிட்டது...(எவ்வளவு உஷாரா இருக்காங்க ?!)
    
எனது  பல நாள் சிந்தனை, உழைப்பு இப்படி ஒரு நொடியில் திருடபடுவது மனதை மிக வருத்துகிறது...தயவு செய்து பிறரை வேதனைபடுத்தும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்...

பதிவை பாதுகாத்துக்கொள்ள என்ன வழி மேற்கொண்டாலும் பிரயோசனம் இல்லை. எல்லாவற்றுக்கும் குறுக்கு வழி கண்டுபிடித்து விடுகிறார்கள் திருடர்கள்!!

சுத்த  அயோக்கியத்தனம்

சிலர் நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? 

பிறருடைய உழைப்பை, கருத்துக்களை,கற்பனைகளை, படைப்புகளை  திருடி தன்னுடைய பெயரை போடுவது என்பது (வெளிபடையா சொல்ல முடியவில்லை) அவ்வளவு கேவலம்.

எந்த  உரிமையில் தன்னுடையது என்று கூறுகிறார்கள்...கொஞ்சங்கூட யோசிக்க மாட்டார்களா?? அடிப்படை நாகரீகம் என்பதே இல்லாமல் போய்விட்ட மட ஜென்மங்களா...?

தகவல் எடுக்கப்பட்ட எனது தளத்தின் லிங்க் குறிப்பிடாமல் இருப்பது

என் கருத்தை அப்படியே தனது கருத்தாக திரித்து கூறுவது

காபி பேஸ்ட் செய்வது

ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றுவது.

இது  போன்ற எதுவாக இருந்தாலும் தவறு தான்.

முகநூலில் ஒருத்தர் வெளியிட்ட கவிதை, கட்டுரை படிக்கிறவங்க கொஞ்சம் யோசிங்க...இதை வெளியிட்டவர் இந்த மாதிரி எழுத கூடியவர் தானா ? பிளாக் ஏதும் வச்சி அதில் எழுதி இருக்கிறாரா ??  ஒருவேளை வேறு இடத்தில் இருந்து எடுத்தது போல சந்தேகம் வந்தால்/தெரிந்தால் கம்மேண்டில் அதை குறிப்பிடுங்கள்...நண்பர் தானே என்றும் , நேரமின்மை என்றும் ஒருவரின் தவறுக்கு துணை போகாதீர்கள்.
வேண்டுகோள் 

இது  போன்றவை இனி தொடர்ந்து கொண்டே இருந்தால் பிரைவசி செட்டிங்க்ஸ் மூலமாக  குறிப்பிட்ட சிலர் மட்டும் படிக்குமாறு செய்யலாம் என நினைக்கிறேன்...

'மனதோடு மட்டும்' தளத்தில்  உள்ள ஆக்கங்கள் , கட்டுரைகள், தொடர்கள், கவிதைகள் போன்றவற்றை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் எக்காரணம் கொண்டும் என் அனுமதி இன்றி இனிமேல் பிரதி எடுக்க கூடாது என்பதை இங்கே வேண்டுகோளாக வைக்கிறேன்.

                                                                 * * * * *
 
எனது பதிவுகளை என் அனுமதி  இன்றி பிரதி எடுத்து அவர்களின் பதிவு போல் வெளியிட்ட அத்தனை பேர் மேலும்  என் கண்டனத்தை வன்மையாக இங்கே பதிவு செய்கிறேன்...

                                                                 * * * * *
இரண்டு திருடல்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

இந்த படத்தில் உள்ளது என் கவிதை - என்னவனே....!

கவிதை இங்கே - http://sanvishblue.blogspot.in/2010/11/blog-post_5550.html

இந்தப் பதிவை திருடியவர் - Nayaki Krishna

இந்த படத்தில் உள்ளது என் பதிவு - தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

பதிவு இங்கே - http://www.kousalyaraj.com/2011/08/25.html

இந்த பதிவை திருடியவர்[கள்] - மெது பக்கோடா

இன்னும் நிறைய முகப்புத்தகத்தில் உலாவுகின்றன.

நன்றிகள் : 

* தாம்பத்தியம் பதிவுகள் எங்கே திருடப்பட்டன என்பதை கண்டு அங்கே சென்று பல எதிர்ப்பு கமெண்டுகளை பதிவு செய்த தம்பி புவனேஷ்க்கு என் நன்றிகள். இவரது தளம் பிரியமுடன் புவனேஷ்

* வாசல் தளத்தின் பதிவுகள் வெளியிட பட்ட இடத்தை கண்டு எனக்கு தெரிவித்த தம்பி சௌந்தருக்கும் என் நன்றிகள்.

* Screen shot photos எடுத்து கொடுத்த தம்பி பிரபுவுக்கு என் நன்றிகள்.
                                                                    * * * * *

படம் - நன்றி கூகுள் 
               

செவ்வாய், ஜூன் 5

சுற்றுச்சூழல் மீதான அக்கறை நமக்கு இருக்கிறதா ?!!



ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடபடுகிறது...இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துவதற்காக ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டக் குழு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு நாட்டை தேர்ந்தெடுக்கிறது...இந்த ஆண்டு இந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது...

இதற்காக பெருமை கொள்ள முடியாது, எங்கே குறைவு இருக்கிறதோ அங்கே தான் நிறைவு செய்து கொள்ள வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும்...120 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாமல் 60 % மக்கள் இருக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது..!!

இத்தகைய மோசமான நிலையில் நாடு இருக்கும்போது வல்லரசு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறும் அதி மேதாவிகளை என்னவென்று சொல்ல ??!

தரமற்ற குடிநீர்,
சாக்கடையாகும் நீர்பிடிப்பு பகுதிகள்,
பிளாஸ்டிக் கழிவால் சீர்கெட்டுப்  போன சுற்றுப்புறம்,
மணல் கொள்ளையால் காணாமல் போகும் ஆறுகள்,
மரங்களை வெட்டியதால் சுடுகாடாய் மாறிய பசுமை பிரதேசங்கள்

பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 

ஆனால்... 

மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் ஆபத்துகள்...

இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை.

மரங்கள்  நடுவது போன்ற கண் துடைப்புகள்

ஒரு வாரத்தில் இத்தனை மரங்களை நட்டோம் என்று லட்சத்தில் கணக்குகளை சொல்கிறார்கள்...இது சாத்தியமா ?!! எந்த ஊரில் , எந்த தெருவில் என்று விவரமாக கூறினால் நல்லது. நடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அதை பாராமரிப்பது தான் மிக முக்கியம்...மரம் நடுவது என்பது வியாபாரம் அல்ல !! விளம்பரத்துக்காக மரம் நடுபவர்கள் தாங்கள் நட்ட மரங்களை தொடர்ந்து கண் காணிக்கிறார்களா என தெரியவில்லை. தற்போது வி.ஐ.பி கள் ஒரு கன்றை நடுவதை போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதுடன் அவர்களின் சமூக கடமை நிறைவேறி விட்டதாக நிறைவு கொண்டுவிடுகிறார்கள். இப்படி அல்லாமல் முழுமையாக மரம் நடுவதை செயல்படுத்த வேண்டும்...

அரசின்  வீண் ஜம்பங்கள் !!

"வனங்கள்: உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் வனங்களின் பங்கு, குறிப்பாக இந்திய வனங்களின் பங்கு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுசெய்யப்படும். - செய்தி 

 எந்த  வித விளம்பரமும் இல்லாமல் 30 வருடங்களாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய மாமனிதரை இன்று நினைவுகூர்வது ஏற்புடையதாக இருக்கும்...இவரை உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசு தான் இப்படி சொல்கிறது......

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பூமியின் சுற்றுச்சூழலை காப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் சமநிலையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது"

இன்னும்  எத்தனை காலத்திற்கு இது போன்ற பச்சை பொய்களை நம் அரசியல்வாதிகள் கூறி கொண்டிருப்பார்கள் ???!! கேவலம் !!

சுற்றுச்சூழலின் எதிரி பிளாஸ்டிக் !!

2009 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன. அதனையும் உடனுக்கு உடன் அகற்றி விடுகிறார்கள். ஊரின் நுழைவாயிலிலேயே இங்கே 'பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையாக இது இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒத்துழைப்பை பெற்று சிறப்பாக முழுமையாக செயல்படுத்த பட்டு வருகிறது பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் !!

ஜூன் முதல் தேதியில் இருந்து திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும்,அவ்வளவாக கவனிக்க படவில்லை. ஆனால் தற்போது மேயர் அவர்களின் சிறப்பான அக்கறை, ஆர்வத்தினால் முழுமையாக செயல்படுத்த படும் என்று நம்புகிறோம்...! அரசு மட்டும் திட்டங்களை போடும் ஆனால் அதை கடைபிடிக்க வேண்டியது மக்களின் வேலை. 500 ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்கமுடியாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்காமல் தவிருங்கள்.

கூவமாகும் தாமிரபரணி போன்ற அனைத்து நதிகளையும் சுத்தபடுத்த கடுமையான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...!!


நமது கடமையும் கூட

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஏசி அறைக்குள் மீடியா மைக்குகள் சூழ கோட் போட்ட பெரிய மனிதர்கள் மட்டும் பேசி விவாதிக்கும் விஷயம் அல்ல...
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு நல்லதும் நடைபெறாது...இது நமது மண்...நம் பூமி...இதனை காக்கவேண்டியது நம் கடமை...

நம்மால் இயன்றவரை மரங்களை வெட்டாமல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, நதியில் கழிவுகளை/குப்பைகளை போடாமல், மரங்களை நட்டு வளர்த்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம்...

அடுத்த தலைமுறைக்கு நல்லதை மட்டும் விட்டு செல்வோம்...!!


அனைவருக்கும் பசுமைவிடியல் நண்பர்களின் சார்பில் சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்...!! 
 
source - பசுமை விடியல் 

படங்கள்  - நன்றி கூகுள்

வெள்ளி, ஜூன் 1

விவாதம் விவாகரத்தில் முடியும்...?! தாம்பத்தியம் - பாகம் 28

அன்பு நட்புகளே !

விடுமுறைக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்...தாம்பத்தியம் தொடரின் இந்த பாகத்தில் தம்பதிகளின் சாதாரண விவாதங்கள் கூட பெரியப்  பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்த்த எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு நிறை குறைகளை சொல்லுங்கள்...தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

* * *

கணவன் மனைவிக்குள் எந்த  பிரச்சனை என்றாலும் அது வீட்டை விட்டு வெளியேப்  போகக்கூடாது...'நாலு சுவத்துக்குள்ளத்தான் இருக்கணும் துன்பங்களையும் வேதனைகளையும் மனதுக்குள் போட்டுப்  புதைச்சுக்கோ' என்று பெண்ணுக்கும், 'எல்லாத்தையும் மென்னு முழுங்க பழகிக்கோ' என்று ஆணுக்கும் அறிவுரைச்  சொன்ன காலங்கள் மலையேறிப்  போய் லேட்டஸ்டா "சரிப்பட்டு வரலைனா டைவர்ஸ் பண்ணிடு" என்ற அட்வைஸ்கள் அதிகம் கேட்கின்றன.
 

விவாகரத்துக்கு இப்போதெல்லாம் நீண்ட நெடிய காரணங்கள் தேவையில்லை...
 
 ஒரு சில வார்த்தைகள் போதும்...!!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிக மிக முக்கியம். பேச்சு பரிமாற்றங்கள் சரியான விதத்தில் அமையாவிட்டால் பிரிவிற்கு இதுவே அடிப்படை காரணமாகி விடுகிறது. வெறுப்பாக, எரிச்சலுடன் எடுத்தெறிந்து பேசுவது, துணை பேசுவதில் இருக்கும் அர்த்தத்தை சரியாகப்  புரிந்துக்கொள்ளாமல் பேசுவது, ஈகோவைக்  காயப்படுத்துவது மாதிரி பேசுவது போன்றவை. கையாளுவதில் கவனம் இல்லையென்றால் ஆபத்தில் கொண்டுப்  போய் விட்டுவிடும். இன்றைய அவசர யுகத்தில் தம்பதியினர் பரிமாறிக்  கொள்ளும் உரையாடல்களும் sms அளவில் சுருங்கி விட்டன. பேசப்படுவது ஒரு சில வார்த்தைகள் என்கிற நிலையில் அதையும் கவனமின்றி உதிர்த்துவிட்டால் தொலைந்தது இல்லறம் !!

ஒருவரின் குணம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது பேச்சுக்கள் தானே?

உரையாடல்களின் போது...

=>  தம்பதிகள் என்று இல்லை. காதலர்கள் இருவருக்கான உரையாடலில் ஒருவர் மற்றொருவரிடம் "ஏன் டல்லா இருக்கிற" என விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இவர் காரணத்தை சொல்லி விட்டால் ' ஓ ! அப்படியா, சரி சரி கவலைப்படாத, சரியாய் போய்டும்' என்று ஆறுதல் கூறுவதுடன் மேட்டர் ஓவர். மாறாக 'ஒண்ணுமில்ல' என்று பதில் வந்தால் உடனே உஷாராகிவிட வேண்டும். ஆமாம் இனிதான் வார்த்தையை கவனமா கையாளனும் !! ஒண்ணுமில்ல என்றால், "ஏதோ இருக்கிறது அதை என்னவென்றுக்  கேட்கமாட்டியா, மனதில் இருப்பதை உன்னிடம் கொட்டி விட்டால் நான் சரியாகி விடுவேன்" என்ற ஏக்கம் ஆவலுடன் ஒளிந்திருப்பதை புரிந்துக் கொண்டாக வேண்டும்.  (இந்த 'ஒண்ணுமில்ல' வார்த்தையை சொல்வது அதிகமாக  பெண்கள் )

இந்த நிலைமை புரியாம ஏதோ பர்சனல் பிராப்ளம் போலனு விட்டுவிட்டால்  போச்சு. கதை கந்தலாகிவிடும். அந்த ஏக்கம் பொறுத்துப்  பொறுத்துப்  பார்த்து முடிவில் விரக்தியில் போய் விழுந்து விடும். இதனால் பெரிய சிக்கல்கள் அப்போது உடனடியாக வர வாய்ப்பு இல்லை என்றாலும் பல விரக்திகள் ஒன்று சேர்ந்தால்...?! யோசிங்க...!

=> உரையாடல் ஒரு கட்டத்தில் சண்டையின் தொடக்கம் போல தெரிஞ்சா  எதுக்கு வம்புனு   'சரி உன் இஷ்டம்' என்று கூறி ஒதுங்கி விடுவது  அல்லது ஒன்றும் பேசாமல் மௌனமாகி விடுவது. இது இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். இது துணையின் மீதான அக்கறையின்மையை காட்டும்.  அமைதியாகப்   போய்விட்டால் அவர்களை மதிப்பது போலாகும் என்பது எல்லாம் பழைய கதை...இப்போது அப்படியே தலைகீழ், சைலென்ட்டாக  இருந்தால்  ' மதிக்கவில்லை' என்று பொருள்.

=> சிலரது வீடுகளில் பேச்சு சூடுப் பிடிக்கத் தொடங்கியதும் உடனே சட்டையை மாட்டிகொண்டு வெளியே நடையைக்   கட்டிவிடுவார்கள் ஆண்கள்...

ரிலாக்ஸ் பண்ண, சிக்கலைத்  தவிர்க்க வெளியேறுவது  உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால் அங்கே வீட்டில்  மனதிற்குள்  புழுங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மனநிலை !? அதுவும் தவிர எவ்வளவு நேரம் தான் பிரச்னைக்கு பயந்து வெளியில் இருப்பீர்கள், மறுபடி வீட்டிற்குள் வந்து தானே ஆக வேண்டும் அப்போது எவ்வாறு மனைவியின்  முகத்தை எதிர்கொள்வீர்கள்...அசட்டுச் சிரிப்புடனா? முறைத்துக்கொண்டா?  இரண்டையும் அலட்சியப்படுத்தி விட்டு தன்னை(மட்டும்) பற்றிய  சிந்தனைக்குள் விழுந்துக்  கொண்டிருப்பாள் மனைவி.

'நான் தனியாத்  தவிச்சிப்  புலம்பிட்டு இருக்கிறப்போ நீ கண்டுக்காம வெளில போறியா, அப்படியே இரு, எனக்கும் ஒரு காலம் வரும்' என்பதாக இருந்து விட்டால் அதன் பின் அக்கணவனின் நிலை !!? சண்டையிட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மனைவி , பிரச்சனை தான் முடிந்து விட்டதே என சகஜமான நிலையில் இருக்கும் கணவன்!! வசமாக ஒரு சந்தர்ப்பத்தில் அகப்பட்டுக்கொண்டால் என்னாகும் கணவன் நிலைமை...யோசிங்க...!

=> சரிக்கு சரி மல்லு கட்டும் சண்டை கோழிகள் சிலர். சின்னச் சண்டை வந்தாலும் போதும் எடுத்ததுமே உச்சஸ்தாயில் கத்துவது...'வெட்டுவேன், குத்துவேன், நீ ஒழிஞ்சாத் தான் நிம்மதி...' இந்த ரேஞ்சில் போகும் இவர்களது உரையாடல்...அடுத்த சில மணி நேரம்/சில நாள் கழித்து ஒன்றுமே நடக்காத மாதிரி சகஜமாகி விடுவார்கள். இரண்டு நிலையில் எது உண்மை... சண்டை போட்டு கத்தியது உண்மை என்றால் அடுத்துள்ள சமாதானம்? விட்டுக் கொடுத்தலா? விட்டுக்கொடுத்தல் என்றால் அது ஏன் சண்டையின் ஆரம்பத்தில் இல்லை. தெருச்சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாச்சு, அப்புறம் விட்டுக் கொடுக்கிறாங்களாம்...என்ன லாஜிக் இது ?

சண்டையின் போது ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் ! அதன் விளைவு , எங்கேப்  போய் முடியும் யோசிங்க...!

பழி வாங்கும் மனோபாவம்

நடந்த பிரச்சனையில் ஒருவர் வென்றதைப்  போன்று இருந்தால், அதாவது ஒருவரின் பேச்சுடன் அப்பேச்சு முடிவுக்கு(?) வந்தது என்றால் தனக்கு அடுத்து எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என பழி வாங்க காத்திருக்கும் தம்பதிகள் உண்டு. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பழிவாங்குவது என்பது அடுத்ததாக எவ்வாறு எங்கே செல்லும் என்று சொல்ல முடியாது...தற்போது இது போன்ற மனநிலை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை !!

ஈகோ !
(நான் என்னும் முனைப்பு)

"நம்மை பற்றிய நினைப்பும் உணர்வுகளும் தலைத்தூக்கும் வரையில் தான் நமது செயல் ஒழுங்காக இருக்கும்...வாழ்க்கையும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். ஆனால் ஈகோவானது மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு உயர்வு மனப்பான்மையாக மாறுவது தான் தவறு. இது தான் தன்னுணர்வு அகம்பாவமாக மாறும்  நிலை" என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்

தம்பதிக்குள் நீயா நானா என்கிற ஈகோவுக்கு இடமே தரக்கூடாது அன்பான உறவை ஈகோ கொத்திக்  கிழித்து விடும். பெரும்பாலும் இது தலைத்  தூக்கினால் எல்லாவற்றுக்கும் விவாதம் தொடங்கி விடும். இருவரில் ஒருவர் வாய் மூடும் வரை விவாதம்  நடந்துக்  கொண்டே இருக்கும். அதே சமயம் தற்காலிகமாக துணையின் அடக்கி வைக்கப் படும் உணர்ச்சிகள் எந்த நேரத்திலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கலாம்...

பெண்கள்

பொதுவாகச்  சொல்வாங்க ஆண்களுக்குதான் 'தான்' என்கிற ஈகோ அதிகம் இருக்கும் என்று... அப்படியல்ல பெண்களிடமும் உண்டு.ஆணின் ஈகோ பெண்ணை மட்டும் தாக்கும், ஆனால் பெண்களின் ஈகோ மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். உன்னைவிட 'நான் எதில் குறைந்துவிட்டேன் நானும் உன் அளவு படித்திருக்கிறேன், வேலை பார்க்கிறேன் ' இந்த எண்ணம் விவாதத்தின் போது விஸ்வரூபம் எடுத்து ஈகோ பூதாகரமாக வெளிப் படுகிறது.


ஆண்களை பொருத்தவரை அவர்கள் விவாதிப்பதை  அவ்வளவாக விரும்புவதில்லை. சில வார்த்தைகளை வேகமாக உச்சரித்து விட்டு அமைதியாகி விடுகிறார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் அத்தனைக்கும் தனித் தனி அர்த்தம் கண்டுப்பிடித்து வாதத்தை நீட்டித்துக் கொண்டேச்  செல்வார்கள்...வாதத்திற்கு சளைத்தவர்களில்லை பெண்கள் ! இத்தகைய பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை...இதைப்  புரிந்துகொண்டு  பெண்கள் குடும்பத்தைக்  கொண்டுச்  செல்லவேண்டும்....விவாதத்தில்  ஜெயிப்பது  முக்கியமில்லை... உறவில் ஜெயிப்பதே முக்கியம் ...!!

ச்சீ போடா,  முட்டாள், இடியட், ராஸ்கல் இதை தனிமையான நேரத்தில் சொன்னால்  இனிமையாக   இருக்கும், அதையே சண்டை நேரத்தில் கோபமாகச்  சொன்னால்... ?!!

பல விவாதங்கள் விவாகரத்தில் போய்த்தான் முடிந்திருக்கின்றன என்பதை மனதில் வைத்துக்  கொண்டு, பேச்சில் மிகுந்த கவனம் தேவை...'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வாங்க...எப்படிப்பட்டச்  சொல்லை வெளிப்படுத்த வேண்டும் என்பது உங்க சாய்ஸ் !!

பின் குறிப்பு-

இப்படியெல்லாம்  கூட நடந்துக்  கொள்வார்களா என அவரவர் வீட்டுச்  சூழலை ஒற்றுமைப்படுத்தி வினா எழுகிறதா ? பிரச்னையை ஏந்திக் கொண்டு என்னிடம் வந்தவர்களை வைத்துத்தான் தாம்பத்தியம் பதிவு எழுதுகிறேன்...தொடரைத்  தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இது தெரியும். தெரியாதவர்களுக்காக இந்த சிறு  விளக்கம். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...உங்களின் மனதோடு  மட்டும்...

பிரியங்களுடன்
கௌசல்யா

புதன், மே 2

திருமண விழாவில் பசுமை விடியல்...!

உணவு உலகம் திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த புதன் அன்று 25/04/2012  திருநெல்வேலியில் வைத்து நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அண்ணன் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அண்ணன் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினேன், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் எனக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அண்ணனை சரண் அடைந்தேன். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அண்ணன் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு எனக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார். 

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

எனது ஆதங்கம் என்னனா 'எங்கும் பசுமை, எதிலும் பசுமை' என சூளுரைக்கும் அரசு எங்களை போன்று சேவைகள் செய்ய முன்வருபவர்களுக்கு அந்த சட்டம், இந்த சட்டம் என சுட்டி காட்டிக்கொண்டு இராமல் தாராளமாக உதவினால் என்ன ?! விரும்பி கன்றுகளை வாங்கிச் செல்பவர்கள் அதனை எப்படி வீணாக்குவார்கள்...? நட்டு பராமரிக்கவே செய்வார்கள் என்பதை இவர்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். 

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பிரபுவும் நானும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தோம். உதவிக்கு அழைத்ததும் மறுக்காமல் வந்தான் நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ். கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்க யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8  மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி வைத்தேன்...காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அண்ணாவின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் நம் பதிவர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து அரேஞ் பண்ணினார்கள்.(இதை ஏன் விரிவா சொல்றேனா, பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது  .



திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு என் நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்... 

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள் 

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றேன், 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே நான் 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்தேன், திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். பிரபுவுக்கு தான் பாட்டி அங்கிருந்து கிளம்பியது பிடிக்கவில்லை.



* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். எதிர்பார்த்த ஒன்று கண்முன் காட்சியாகி நின்ற சந்தோசத்தில் ஒரு கணம் அப்படியே சிலையாகி விட்டேன். பிரபுவின் முகத்திலோ பெருமித புன்னகை !! பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டேன்...

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் பிரபுவிற்கு போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

*  மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.  

வேலையில் மும்முரமாக இருந்த போது 'ஆன்டி நான்  வந்திருக்கிறேன்' என ஒரு இனிய குரல்...அட 'உலகச் சாதனை சிறுமி' சுட்டிப் பெண் விசாலினி ஆசையுடன் அவளை வேகமாய் இழுத்து கட்டிக் கொண்டேன். அவளோட அம்மா சந்தோசமா 'இப்ப மேலும் இரண்டு கோர்ஸ் முடிச்சிட்டாள்' என்றார்...! மேலும் இரண்டு சாதனைகள் !! அவங்க சொல்ல சொல்ல ஆச்சர்யபட்டுகொண்டே இருந்தேன்...(இன்னும் பல சிறப்பு தகவல்கள் கூறினார்கள் அதை இப்போது சொல்ல அனுமதி இல்லை, மற்றொரு சமயத்தில் தெரிவிக்கிறேன்)

நல்லவை நடந்தேறியது நன்றாகவே...

முதல் முறையாக செய்ய போகிறோம், சங்கரலிங்கம் அண்ணனின் உறவுகள் நண்பர்கள் , அதிகாரிகள் என பெரிய மனிதர்கள் பலர் வரக்கூடிய விழா, தவறாக ஏதும் நிகழ்ந்துவிட கூடாதே என உள்ளுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடித்து கொண்டே இருந்தது, அதனால் தானோ என்னவோ வந்திருந்த பதிவுலக உறவுகளிடம் கூட நன்றாக பேச முடியவில்லை...

இணையம் கொடுத்த ஒரு நல்ல சகோதரன் பிரபு , இரண்டு நாளாக கூடவே சுறுசுறுப்பாக இயங்கினான்...அவனது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் இந்த அளவிற்கு நன்றாக நடத்தி இருக்க முடியாது...அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

வாழ்நாளில் சிறப்பான  ஓர் நாள்  !!

சமுதாயத்தின் மேல் எல்லோருக்கும் அக்கறை இருந்தாலும் ஒரு சிலருக்கே சமூக பணி ஆற்ற சந்தர்ப்பம் அமைகிறது...அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ளாவிட்டால் நான் வாழும் நாட்கள் அர்த்தமில்லாதவை...இந்த மனநிறைவான நிகழ்வும் என் ஒருத்தியால் மட்டும் நடந்துவிடவில்லை...எத்தனை பேர் பங்கு பெற்று இருக்கிறார்கள் என்று எண்ணிக்கையில் அளவிட முடியாது...அவர்களுக்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்துவிட மனம் ஒப்புக்கொள்ளவில்லை, தொடர்ந்து அத்தகையவர்கள் வாழும் இந்த சமூகத்திற்கு தொடர்ந்து சேவை புரிவதே  அவர்களுக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்...!

திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. என்னுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



உங்களின் வாழ்த்துக்கள் ஆசியையும் எங்களுடன் இருக்கிறது என முழுமையாக நம்புகிறேன்...அவை எங்கள் குழுவை வழி நடத்தும் இன்றும், என்றும், எந்நாளும்...
                                                                    
மீண்டும் சந்திக்கிறேன்...

பிரியங்களுடன்
கௌசல்யா. 


வியாழன், ஏப்ரல் 19

துப்பு(பி) கெட்ட மனிதர்களே...!!

ஆறு மாதத்தில் மும்பை மாநகராட்சி பெற்ற வருவாய் 2.24 கோடி ரூபாய் !!எப்படி இந்த வருமானம் கிடைத்தது என தெரிந்தால் மற்ற மாநகராட்சியும் முயற்சி செய்யலாம். ஆமாம் எப்படி கிடைத்தது ?! எல்லாம் மும்பை மக்களின் கைங்கரியம் தான், இல்லை இல்லை வாய்(?) சாமார்த்தியம் தான்...!!? விசயம் ஒன்னும் பெரிசா இல்ல சின்னது தான், முடிஞ்ச வரை கண்ட இடத்துல துப்பி வைக்கணும், இதை மக்கள் ஒழுங்கா கடை பிடிச்சதால மாநகராட்சிக்கு வருமானம்...!! 

எந்த அளவு துப்பினாங்களோ அந்த அளவுக்கு வருமானம்தான். அப்படி மாஞ்சி மாஞ்சி துப்பிய மக்களின்  எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 1 லட்சத்து 10 ஆயிரம் !! பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக தலா 200 அபராதம் வாங்கி சேர்த்த பணம் ! இந்த தப்புக்காக இந்தளவு வருமானம் பார்க்க முடியுங்கிறது மக்களாகிய நமக்கு பெருமையோ பெருமை தான். நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னா எவ்வளவு வேண்டுமானாலும் துப்புங்க...துப்பிகிட்டே இருங்க...

ஆனா விளைவு...??! தொடர்ந்து படிங்க...

தேசிய பழக்கம் ?!


பாக்கு, பான் பீடா, பான் மசாலா, புகையிலை, வெற்றிலை என எதையாவது மென்றுகொண்டே இருப்பது நம்மவர்களின் பழக்கமாகி விட்டது. இவ்வாறு மெல்லுவதால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்...அசை போடுறதோட மட்டுமில்லாம போற வர்ற இடத்திலெல்லாம் துப்பி அசிங்கப்படுத்துகிறார்கள். கூடவே எச்சில் மூலம் பரவும் கிருமிகள் காற்றில் கலந்து காச நோயை ஏற்படுத்துகிறது...??!

மும்பையில் மட்டும் கடந்த வருடம் 9,168 பேர் இருமல் மற்றும் எச்சில் மூலம்  
பரவும் காச நோயால் பலியாகி உள்ளனர். இதனால்தான் பொது இடங்களில் எச்சில் துப்ப அங்கு தடை விதிக்கப்பட்டது. அபராதம் 200 ரூபாய் பிடிபட்டவர்கள் 6 மாதத்தில் ஒரு லட்சம் பேர் என்றால் பல லட்சம் பேர் தப்பி இருப்பார்கள்...!? யார் யார் எங்கே துப்புகிறார்கள் என உற்று பார்த்துக்கொண்டே இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் நிலை பரிதாபம். 'உன் அப்பன் போட்ட ரோடா , நான் அப்படிதான் துப்புவேன்' என விதண்டாவாதம் பண்ணும் இந்திய குடிமகன்களையும் சமாளித்தாக வேண்டும்.


மாநகராட்சிதான் இதில் கவனம் செலுத்தணும் என்றில்லை.அவரவருக்கு சுயகட்டுப்பாடு, ஒழுக்கம் அவசியம். அவ்வாறு துப்புவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , ஏழை, பணக்காரன் என்ற எந்த பேதமும் இல்லை...மிக ஒற்றுமையாக எல்லோரும் சேர்ந்தே துப்பி கெடுக்கிறார்கள்.

'பொது இடத்தில் துப்புவது இந்தியர்களின் குணாதிசயம்' சொல்வது யாரோ சாதாரண நபர் அல்ல, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளே !!

காச நோய் 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 8 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு 1000 பேரும்  ஆண்டுதோறும் 4 லட்சம் பேரும் இறக்கின்றனர். கடந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி தேசிய உலக காசநோய் தினம் கொண்டாடினார்கள்...இதை கொண்டாட்டம் என்று சொல்லகூடாது 'காசநோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்தார்கள்' என்பதே சரி. கொடிய நோயான இது விரைவில் பரவ கூடியது, முக்கியமாக காற்றின் மூலமாக...! காச நோய் பீடித்தவர்களின்  தும்மல், எச்சி, இருமல் மூலமாக பிறருக்கும் தொற்றி விடுகிறது.    

அறிகுறி 

இந்த  நோய் உள்ளவர்களுக்கு முதலில் பசியின்மை தோன்றும், பின் எடை குறைதல் மூச்சு திணறுதல், தொடர் இருமல், சளியுடன் ரத்தம் போன்றவை ஏற்படும்.    

யாருக்கெல்லாம் அதிக ஆபத்து?

80 % நுரையீரலை பாதிக்கிறது. இது போக எலும்பு, மூளை மற்றும் வயிறு போன்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ், சர்க்கரை நோய், கல்லீரல் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் போன்றவர்களைத் தாக்கிறது.



முக்கியமாக, ஒவ்வொரு நோயாளியும் 10 லிருந்து 15 பேருக்கு பரப்பி விடுகிறார்கள்...!!?

ஒருவருக்கு தொடர்ந்து இருமல் இருந்தால் உடனடியாக சளியை பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும். அதுவும் காலையில் தூங்கி எழுந்ததும் முதலில் வரும் சளியை கொடுத்தால் தான் காசநோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியும். ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் 6 மாதத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்.

காசநோய்க்கான மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துமனைகளில் இலவசமாக கொடுக்கப்படுகிறது. காச நோய் பாதிக்கப் பட்ட பெண்களை வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கிற கொடுமையும் நடக்கிறது. சாதாரணமாக எச்சில் துப்புவதின் மூலம் ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடு இல்லாமல் பரவகூடிய இந்த நோயின் மீது கவனம் கொள்வது மிக அவசியம். 

தயவு செய்து பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிருங்கள்...சுத்தம் சுகாதாரம் பற்றி சிறிதாவது அக்கறை கொள்ளுங்கள்...


வாழ பிறந்தவர்கள் நாம், நோயினால் வாட பிறந்தவர்கள் அல்ல...!! 


நோய் வரும் முன் காப்போம்...நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்...கண்ட இடத்தில் எச்சில் துப்புவதை நிறுத்துவோம்...குறைந்தபட்சம் நிறுத்த முயற்சியாவது செய்வோம்...!!

                                                                   * * * * *


படங்கள்+தகவல் - நன்றி கூகுள் 

புதன், ஏப்ரல் 11

'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...?! தாம்பத்தியம் - 27

முன் குறிப்பு

இதற்கு முந்தைய பாகம் வெளிவந்து 6 மாதம் ஆகிவிட்டது...!! பிற பதிவுகளை விட தாம்பத்தியம் தொடருக்கு அதிக காலம் எடுக்கிறேன் என்றாலும் இனி தொடர்ந்து எழுதுகிறேன். நம்புங்க !! 'ஏன் தாமதம்' என கேட்டு வரும் மெயில்கள் இனி குறையணும்...திட்டு வாங்கி முடியல :) உங்களின் பொறுமைக்கு என் நன்றிகள் ! இந்த பதிவைப்  படித்து கருத்துக்களைக்  கூறுங்கள்...அதன் மூலம் இன்னொரு பதிவுக்கு மேட்டர் கிடைக்கட்டும்... :)

                                                         ************


ஏன் அவசியம் ?!

'செக்ஸ்' பற்றி வெளிப்படையாகப்  பேசுவதும், விவாதிப்பதும் மிகத்  தவறான ஒன்றாகப்  பார்க்கபடுகிறது,  நமது கலாச்சாரத்தில் இதற்கு நாம் கொடுக்கும் இடம் கிட்டத்தட்ட கடைசி, அதே நேரம் உலகிற்கு காமசூத்திரம் கொடுத்ததும் நாம் தான் !! கஜூராகோ கோவில் சிற்பங்களாக கலை வடிவிலும் எழுத்து வடிவிலும் பேசிய நாம்தான், இதனை குழந்தைப்  பெறுவதற்காகவும், அற்ப சந்தோசத்துக்காக என்று ஒதுக்கியே வைத்து விட்டோம்.  இதன் மகத்துவம் புரிந்த முன்னோர்கள் சொல்வதை ஏற்காத நாம் சமீபத்திய அறிவியலாளர்கள் இதன் அவசியம் குறித்துச்  சொல்லும் போது அப்படியா என்று புருவத்தை உயர்த்துகிறோம். மன இறுக்கம், மனஅழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை இதன் மூலம் அதிகரிக்கலாம் என்பது எவ்வளவு அருமை!

உடல் எடை போட்டுவிட்டது, சுகர், பிரசர், அப்படி இப்படின்னு பிரச்சனைகளில் இருந்து தம்பதிகள் நிறைவான உடலுறவின் மூலம் தள்ளி இருக்கலாம் என்பது ஆச்சர்யம் தானே ?! மன இறுக்கம் தளர்ந்தாலே உடல் தன்னால் அழகு பெற்றுவிடும்! சிலர் கேட்கலாம், ஒரு சிலர் கண்டபடி இதே நினைப்பாகவே அப்டி இப்டி அலையுறாங்களே அவங்க ரொம்பவே நல்லா இருப்பாங்களே என்று...?!! தன் துணையை தவிர பிறருடனான உறவுகளில் சுகம்,சந்தோசம் இருக்கலாம், ஆனால் மன இறுக்கம் குறைய நிச்சயம் வாய்ப்பேயில்லை மாறாக தவறுச்  செய்கிறோம்(!) என்கிற குற்ற உணர்ச்சியால் மன அழுத்தம் அதிகரிக்கவே செய்யும் !! இந்த சப்ஜெக்ட் இந்த பதிவுக்கு தேவையில்லை என்பதால் இப்போதைக்கு இவ்வளவு போதும் :)

பரிணாம வளர்ச்சி பற்றி சொல்லிய டார்வின்... 

"மூளை, மூட்டுகள், ஜனன உறுப்புகள் உட்பட எந்த ஒரு உறுப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் , அந்த உறுப்பானது நாளடைவில் அதன் செயல் திறனை இழப்பதோடு மட்டுமின்றி தன்னளவில் சுருங்கி இறுதியில் மறைந்தேப் போகும்"

உறுப்புகளுக்கு ஓரளவு மிதமான இயக்கம் இருந்தாக வேண்டியது அவசியம். முற்றிலும் தவிர்த்தால் உடல் ரீதியாக, மன ரீதியாகப்  பாதிப்புகள் வர வாய்ப்புகள் அதிகம். இதயத்தை மாரடைப்பு ஆபத்தில்  இருந்து பாதுகாப்பளிக்கிறது. வெளிநாடுகளில் இன்னும் ஆராய்ச்சிப்  பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள், இதன் பயன்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்று !!

ஆனால் இதைப்  பற்றி எல்லாம் அக்கறையில்லாமல் ஏனோ தானோவென சம்பிரதாயத்துக்காக சலிப்பாகச்  சென்றுக்  கொண்டிருக்கிறது இன்றைய இயந்திர உலகில் தம்பதியரின் தனிப்பட்ட அந்தரங்கம்.

பணம் , படிப்பு, அந்தஸ்து, கௌரவம் இவை போன்றவற்றுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கும் இதே காலத்தில் தான் விவாகரத்துகளும் பெருகி வருகின்றன. விவகாரத்துக்  கோரும் தம்பதியரிடம் ஆழமாக விசாரித்து பார்த்தால் ஒன்று புரியும்,அவர்களுக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக, மூலகாரணமாக இருப்பது செக்ஸ் என்பது...!!

பெண்களின் மனோநிலை

உடலுறவைப்  பொறுத்தவரை தனது விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்த மாட்டாள். ஒரு சில பெண்கள் சுற்றி வளைத்துப்  பேசிக்  குறிப்பால் உணர்த்தலாம்...கேலியும் கிண்டலுமாக வெளியிடலாம். அவரவர் கணவனின் எண்ணவோட்டங்களை பொறுத்து இது மாறுபடும். பொதுவாக நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் பற்றி பேசினால் அவள் அனுபவரீதியாக எல்லாம் அறிந்தவளாக இருப்பாள் என்கிற எண்ணம் உண்டு.ஆண்கள் என்று இல்லை, பெண்ணே மற்றொரு பெண் இவ்விசயத்தை விவரித்துப்  பேசினால் அப்பெண் அனுபவப்பட்டவள் என்று முடிவு பண்ணிவிடுகிறாள்.  இதற்கு அஞ்சியே பல பெண்கள் உறவு குறித்து சந்தேகம் எதுவும் இருப்பினும் வாய் திறக்க மறுக்கிறார்கள். 

இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருப்பதைத்  தான் ஆண் விரும்புகிறான். (எந்த காலமாக இருந்தாலும் !)

எனவே பொதுவாக பெண் இவ்விசயம் குறித்து அதிகம் வெளிப்படையாக பேசுவதையும், ஆணுக்கு முன்னரே செயல்படுவதையும் தவிர்த்தல் நல்லதே. ஒரு சிலர் தனது மனைவி செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதையும், விவாதிப்பதையும் விரும்புவார்கள். கணவன் மனமறிந்து பேசுவது முக்கியம்.

ஆண்களின் மனநிலை 




உறவை பற்றிய எண்ணம் தோன்றியதும் மனைவி உடனே உடன்பட்டே ஆகவேண்டும் என்பதே பெரும்பாலான கணவர்களின் எதிர்பார்ப்பு.அதற்கு முன் மனைவியின் உடலறிந்து, மனமறிந்து என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. பெண்களுக்கு மெதுவாகவே  உடல் கிளர்ந்தெழ தொடங்கும், ஆனால் ஆண் இதனைக்  கவனிப்பது இல்லை. தான் இயங்கி திருப்தி  அடைந்தால் போதும் பெண்ணுக்கு என்று தனியாக திருப்தி அடைதல் இல்லை   என முடிவு செய்துக்  கொள்கிறார்கள், அவளது உணர்வுகளுக்கும் வடிகால் தேவை என்பதை மறந்து...! 

பத்து வருடங்கள் கழிந்தப்  பின் 

தாம்பத்தியத்தில் அந்தரங்க உறவு என்பது மிக முக்கியம் என்றாலும் திருமணம் முடிந்த பத்து ஆண்டுகள் கழிந்த தம்பதியினரின் இது குறித்த விருப்பங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆணின் விருப்பம் ஒரு விதமாகவும் பெண்ணின் விருப்பம் வேறு ஒன்றாகவும் இருக்கின்றன.

உதாரணமாக 

திருமணம் முடிந்த புதிதில் நகைச்சுவையாக பேசக்கூடிய கணவனை மிக விரும்புவாள்  மனைவி...ஆனால் பத்து வருடம் கழிந்த பின் அதே மனைவி கணவனின் நகைச்சுவை பேச்சை அவ்வளவாக ரசிப்பதில்லை. ஒரு காரணம் என்னவென்றால், நம்மிடம் பேசுவதைப்  போலத்தானே பிற பெண்களிடமும் பேசுவார், அது அவ்வளவு நல்லதில்லையே என்ற மனோபாவம் ஒரு காரணம், மற்றொன்று 'இருக்கிற சூழ்நிலைத்  தெரியாம அது என்ன எதுக்கெடுத்தாலும் தத்துபித்துனு உளறிட்டு ?!!' என்பது...

இது போல் முதல் பத்து வருடங்களில் பிடித்தவை எல்லாம், அடுத்து தொடரும் காலங்களில் பிடிக்காமல் வெறுப்பிற்கு இடமாகி விடுகின்றன...! அது போன்றே அந்தரங்க விசயத்திலும் மாற்றம் ஏற்படுகிறது, மற்றவை அவ்வளவாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது, ஆனால் உடலுறவு விஷயம் அப்படி அல்ல...இதில் தவறினால் சமயங்களில் குடும்பத்தில் மிகப்  பெரிய பாதிப்புகளையும், பிரிவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும்.

அப்படி என்ன இதில் இருக்கிறது ? என்ன என்ன பாதிப்பு ஏற்படும் ? இது என்ன அவ்வளவு முக்கியமா ? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்  தொடர்ந்துப்  பார்க்கலாம்.....

பெண்களின் விருப்பமின்மை ?! 

பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும்  இல்லாமல் இரவில்  மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டுப்  போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.

பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு  உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துக் கொள்ளலாம்...

* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்பக்  கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணியச்  செய்து உறவுக்  கொள்ளச் சொல்வார்கள்.

* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.

* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியேத்  தெரியாத காரணங்கள்.

* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்றுச்  சொல்லத்  தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!

கணவனின் புரிதலின்மை 

மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும், உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்கக்  கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவைப்  பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.

உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.

இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாகக்  குறைந்து போகும் என்பதைத்  தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.

உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிடக்  கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?

இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. 

ஒரு உண்மை தெரியுமா??

படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவேச்  செய்வாள்...அப்படிப்பட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்றுப்  புரிந்துக்  கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்துக்  கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

                                                                 * * * * *

படங்கள் - நன்றி கூகுள்