திங்கள், டிசம்பர் 8

குடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு போதைப் பழக்கம்

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே  விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல்  தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று அரற்றுவதில் பயனென்ன?!!

குடும்ப உறுப்பினரின் நடவடிக்கையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனே எச்சரிக்கை ஆவது எத்தகைய அவசியம் என்பதை ஒரு பெண்ணின் பரிதாப வாழ்க்கை எனக்கு புரியவைத்துவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல குடும்பப் பெண்களிடமும் தாராளமாக இப்பழக்கம் இருக்கிறது என்பதும் அதனால் அவர்களின் குழந்தைகள் படும் துன்பங்கள் மிக கொடுமை என்பதையும் நேரில் கண்டு  அதிர்ந்தேன். அதை பிறருக்கு தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.

அபாயகரமான ஒரு போதைப் பழக்கம் / inhalant addiction ..


சிறுப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   

விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான்  Whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்

சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.  

பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் ள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு  பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க  இந்த திரவத்தை நோட்டு புத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை  மீண்டும் மீண்டும் அதையே நுகர  தூண்டியுள்ளது. அப்படித்தான்  ஆரம்பித்தது இந்த  போதை பழக்கம்..

அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்த பிறகும் இப்பழக்கத்தை விடாமல் அதிகமாக நுகரத் தொடங்கினார். அதற்கு வசதியாக  சூழ்நிலைகளும் அமைந்தன. கணவர் இந்த பழக்கத்தை கண்டுப்பிடித்து கண்டிக்க ஆரம்பித்தார். சிறிது காலம் மறந்ததை போல இருந்துவிட்டு கணவர் வெளிநாடு சென்றதும் மீண்டும் ஆரம்பித்தாள். பாட்டில்களாக வாங்கி குவித்து இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறாள் என்று அவளது தாய் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தைகள் இருவரும் பாட்டி, தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். போதை மயக்கத்தில் இருக்கும்போது அருகில் வரும் குழந்தைகளை அடிப்பதும், கண்டபடி திட்டுவது, பொருட்களை அவர்கள் மீது வீசி எறிவதுமாக இருந்திருக்கிறாள், பயந்து போன இவளது தாய் பேரக்குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

வசதிக்கு குறைவில்லாத வீடு, வேலைக்கு ஆட்கள், தனிமை எல்லாம் வாய்ப்பாக அமைய ஒரு நாளைக்கு நாலு, ஐந்து பாட்டில்கள் என காலியாயின. இவளது நடவடிக்கை மோசமாக செல்வதை புரிந்துக் கொண்ட கணவன் மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகளை மட்டும் பார்த்து விட்டு வெளிநாடு போய்விடுவானாம். ஆரம்பத்தில் இதில் என்ன இருக்கிறது என்ற இந்த பெண்ணின் ஆர்வம் இப்போது ஒரு மன நோயாளியாக்கி விட்டது. கணவனை, குழந்தைகளை பிரிந்தாள், ஆனால் தன்னால் தனது குடும்பமும் சிதறி போனது பிள்ளைகள் தவிப்பது என இவை  எதை பற்றியும் கவலையின்றி தனக்குள் சிரிக்கிறாள், பேசுகிறாள்...பேசிக்கொண்டே இருக்கிறாள் !!?

இவள் மட்டுமல்ல இவளை போல பலர் இன்று இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் கிடக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.   

ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர்  போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச்  சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.

தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.

கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitner முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.


13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .

பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும்  நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் இருவரும் அடிமையாகி உள்ளனர்

இதன் தீமைகள்

* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை  மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .

* மனநிலை பாதிப்பு ஏற்படும்.  இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.

* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன்  மற்றும் trichloroethane,  நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு போதைத் தன்மை உண்டாகும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன. 

தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது  தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .

* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.

* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.

* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டுபிடிக்கலாம்

அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம். 

பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால்,  கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.
இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.


ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!


என்ன செய்யப் போகிறோம் நாம் ??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!

News :http://www.mid-day.com/articles/whitener-sniffing-teens-caught-with-us-made-pistol/15088096
                              * * * * * 


பின் குறிப்பு


இந்த போதைப் பொருளைப்  பற்றி எழுதி இதுவரை தெரியாதவர்களுக்கு தெரியவைத்து விடுவோமோ என்ற தயக்கத்திலேயே கடந்த மூன்று வருடமாக எழுதாமல் இருந்தேன். ஆனால் வெகு தாராளமாக இன்று பள்ளி கல்லூரிகளில் நடமாடுகிறது என்பதை அறிந்த பின்பே இதன் தீமைகளை பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். தயவு செய்து இப்பதிவை படித்தவர்கள் பிறருக்கும் இப்பழக்கத்தை பற்றி பகிர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.

இக்கட்டுரையை எழுத உறுதுணையாக இருந்த தோழி Angelin க்கு என் நன்றிகள்.

கௌசல்யா...

வியாழன், டிசம்பர் 4

இவள் ஒரு தேவதை ...!



பதிவுலகம் எனக்கு நிறைய நல்ல உறவுகளை கொடுத்திருக்கிறது. சகோதர உறவு என்பதிலும் தன்முனைப்பு தலைத்தூக்கும் நட்புகள் வந்த வேகத்தில் நின்றும் விடும். மனம் பார்த்து மலர்ந்த நட்பு ஒன்று தான் தொடரும் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகவும் சொல் செயல் எண்ணம் அனைத்திலும் சக மனிதர்களின் மீதான அக்கறை, அன்பும்  கொண்ட எனக்கு தெரிந்தவர் ஒருவர் உண்டு.

இருவருக்குமான சந்திப்பு எப்போது எப்படி ஏற்பட்டது என்ற நினைவு கூட எனக்கு இல்லை, சாதாரணமான விசாரிப்பில் ஆரம்பித்து இருவரின் அலைவரிசை ஒன்றாக இருக்க நட்பு மேலும் இறுகியது.  வெறும் பொழுது போக்கிற்கான ஒன்றாக இருக்காது எங்களின் பேச்சுக்கள். அவரிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி பேஸ்புக் இன்பாக்சில் எனக்காக எப்போதும் காத்திருக்கும். அந்த செய்தி நிச்சயமாக அவரை பற்றியதாகவோ பரஸ்பர நலம் விசாரிப்பாகவோ இருந்ததில்லை.  உலகின் ஏதோ ஒரு மூலையில் யாருக்கோ நடந்த பிரச்சனை, காஸா பற்றியதோ, மலாலாவின் பேச்சை குறித்தோ, மாவோயிஸ்ட் பற்றியதோ, ஒபாமா, மோடி, பெண்ணியவாதிகள் ,பேஸ்புக் பிரபலங்கள்  என்று யாரை பற்றியும் இருக்கலாம். மதம் சாதி அரசியல் சினிமா  இப்படி எல்லாவற்றையும்  பற்றிய வருத்தங்கள் கோபங்கள் கவலைகள் எல்லாம்  தாங்கியவை அவை.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி நிறைய எழுதுங்க என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் வித விதமான போதை பழக்கத்தை பற்றியும் நிறைய பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு கட்டுரைதான் அடுத்ததாக எழுத இருக்கிறோம்.    

சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் செய்யும் சிறு செயலையும் நாம் கட்டாயம் ஊக்குவிக்கவேண்டும் அப்படிப்பட்ட ஒன்றை தான் நான் அவருக்கு செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் பசுமைவிடியல், நலம் என்ற இரண்டு பேஸ்புக் தளத்திலும் அவரை இணைத்துக் கொண்டேன். இதை மட்டும்தான் நான் செய்தேன், அதற்கு பின்னர் அவர் செய்து வருவது மிக பெரிய காரியங்கள். 

என்டோசல்பான் குறித்து ஒவ்வொரு நிமிடமும் பதறும் ஒரே ஜீவன் இவர் ஒருவராகத்தான் இருக்கும். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லிகள் நம் நாட்டில் தாராளமாக நடமாடுவதை பற்றி ஏன் ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பார், என்ன பதில் சொல்வேன் நான். கேள்வி கேட்பதுடன் நிற்காமல் ஆங்கில தளங்களில் வெளிவரும் விழிப்புணர்வு கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து இரு  பேஸ்புக் பக்கங்களில் வெளியிடுவார்.  அதில் பல நமது தமிழ் பத்திரிகைகளில், பிற சமூக தளங்களில்  வெளிவராதவைகளாக  இருக்கும். (பிறகு வேறு யாரோ ஒருவரின் பெயரில் வெளிவந்துவிடும்)

அழகாக மொழிபெயர்த்து எனக்கு மெயில் செய்துவிட்டு பிழைத் திருத்தம் செய்து வெளியிடுங்க என்று குழந்தை மாதிரி சிரிப்பார். சீரியஸான கட்டுரையிலும் smily போட்டு வைப்பார், கசப்பு மருந்தை சிரித்துக் கொண்டே கொடுப்பதை போல...குழந்தை உள்ளம் கொண்டவரா இவ்வளவு சிக்கலான விசயங்களை புட்டு புட்டு வைக்கிறார் என அடிக்கடி என்னை ஆச்சர்யபடவைப்பார்.  

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மூச்சிலும் பேச்சிலும்  நம் நாட்டின் மீதான அன்பும் அக்கறையும்  வெளிப்படும். இவருடன் பழகி நான் தெரிந்துக் கொண்டதும் கற்றுக் கொண்டதும் நிறைய நிறைய. விழிப்புணர்வு கட்டுரையை வெளியிட்டு பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என சோர்ந்துப் போகும் போதெல்லாம் இவரது பேச்சு எனக்கு ஒரு டானிக். மரம் நடுவது என்பது நட்டவர்களுடன் நின்றுவிடும் ஆனால் மரம் ஏன் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களின் மனதில் விதைத்துவிட்டால் அது அவர்களின் சந்ததி வரை தெளிவை கொண்டுச் செல்லும் என்பதில் இருக்கும் நம்பிக்கைதான் அவரை எழுத வைக்கிறது. 

வீட்டுத்தோட்டம்  போடுவதில் வெளிநாடுகளில் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். அதை எளிய தமிழில் மொழி பெயர்த்து என்போன்ற தோட்ட விரும்பிகளை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.. வீட்டுத்தோட்டம் குறித்து மெயில் மூலம் கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கங்களுக்கு உடனே பதில் அனுப்பி விடுவார். இத்தனை ஷேர் போயாச்சு என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசபட்டுக் கொள்வோம்.

கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறமையானவர், அதிலும் வீணாக தூக்கி எறியும் பல பொருட்கள் இவரது கைவண்ணத்தில் அழகாகும்...சுற்றுப் புற சூழலின் மீதான அக்கறையை மீள் பயன்பாடு மூலமாக தெரிவிப்பார். தான் செய்த பொருட்களை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து மகிழ்வார்.  fish pand இல் மிதக்கும் மீன்கள் , ஜெஸ்சி பூனை எல்லாம் இவரது அன்பு செல்வங்கள் ! அவரது நட்புகள் செல்லப் பெயர் வைத்துத்தான் இவரை அழைப்பார்கள். அதிலும் நம்ம கவிதாயினி குழந்தைநிலா ஹேமா ‘மீனம்மா’ என்று அழைப்பது அழகோ அழகு !!      

போனில் அடிக்கடி என்னை அழைத்து பேசுவார்...அவரது எழுத்தைப் போலவே அவரது பேச்சும் அவ்ளோ இனிமை. சொற்களுக்கு வலிக்குமோ என்று தயங்கித்தயங்கி உதிரும் வார்த்தைகளில், மழலைக் கொஞ்சும் பேச்சில் பலமுறை சொக்கிப் போய் கிடந்திருக்கிறேன் நான். பெயரில் மட்டுமல்ல அழகிலும் குணத்திலும் பண்பிலும் உண்மையில் இவள் ஒரு தேவதை. தேவதைக்கு தெரிந்தவள் என்பதில் எனக்கும் நிறைய பெருமை!! ஆம், எல்லோருக்கும் அருகிலும் ஒரு தேவதை இருக்கத்தான் செய்கிறது...அதை கண்டுணர்ந்தவர்களே வரங்களைப் பெறுகிறார்கள் !!!   

இவரை பற்றி இன்னைக்கு எழுத ஸ்பெஷல் காரணம் என்னனா இன்னைக்குத்தான் அந்த அழகு தேவதையின் பிறந்தநாள் !

என் பிரிய தோழி Angelin க்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் !!!!

    



                                                                    



                                                                        





புதன், நவம்பர் 12

அடிக்கடி சொல்லுங்க... ஐ லவ் யூ ! தாம்பத்தியம் - பாகம் 31



காலில் சக்கரம் கட்டி ஓடிக் கொண்டிருக்கும் தம்பதியினர்  ஒரு நொடி நிதானித்து இந்த வாரத்தில் உங்கள் துணை உங்ககிட்ட எத்தனை முறை ஐ லவ் யூ சொன்னாங்க...கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க... அடடா ஒரு முறை கூட சொல்லலையா? ரொம்ப பாவமுங்க நீங்க ,  பரஸ்பரம் இதைச் சொல்லக் கூட  நேரம் , மூட்  இல்லாம என்ன தாம்பத்தியம் நடத்துரிங்களோ தெரியலன்னு வருத்தப்பட்டதுக்கு, அப்படி என்ன இதுல இருக்கு, நாங்க என்ன லவர்ஸ்ஆ , வயசு நாற்பது மேல ஆச்சு இன்னும் என்ன வேண்டிக்  கிடக்கு? அப்டி இப்டின்னு ஏகப்பட்ட சலிப்பு, புலம்பல்கள்.  ஆனா அதுக்கூட பரவாயில்லை  ‘ஐ லவ் யூ  சொன்னாத்தான் தெரியுமா லவ் பண்றேன்னு” என்று கேட்கும்  அப்பாவிகளுக்காகத்தான்  இந்த பதிவு !

கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்து பத்து வருஷம் ஆச்சு இனியென்ன  என்று ரொமான்ஸ் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இரவின் நடுவில் ஐந்து நிமிட தேடலுடன் முடித்துக்கொண்டு விடிந்ததும் படுக்கையுடன் காதலையும் மடித்து ஓரமாக வைத்துவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாய் பறந்துவிடுகிறார்கள். இதுதான் இன்றைய தாம்பத்தியம் ! பெரிதாக ஈர்ப்பு எதுவும் இருவரிடையே இருப்பதில்லை, அதனால்தான் நடுவில் ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் கோர்ட் படியேறத்  துணிந்துவிடுகிறார்கள். இரு  மனங்களிலும் காதல் இருந்தால் மட்டுமே தாம்பத்தியம் இறுதிவரை சந்தோசமாக கழியும். மகிழ்ச்சியுடன் கூடிய தாம்பத்தியத்தில் அவர்களின் குழந்தைகளும் நன்முறையில் வளருவார்கள். எல்லாம் சரிதான் ஆரம்ப நாட்களில் இருந்த ஈர்ப்பு, காதல், கவர்ச்சி எல்லாம் எங்கையோப்  போய்விட்டது, மறுபடி அதையெல்லாம் எப்படி கொண்டு வருவது என்பது உங்கள் முன் நிற்கும் கேள்வி என்றால் விடை ‘ஐ லவ் யூ’

ஆமாங்க ஆமா ஐ லவ் யூ என்பது ஒரு மந்திரம். எப்படிப்பட்ட உடல், உள சோர்வையும் நொடியில் மாற்றக் கூடியது. உங்கள் துணையின் மீது கடலளவு நேசம் வைத்திருப்பீர்கள் ஆனால் அதை வெளிப்படுத்தத்  தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பீர்கள். இதற்காக கஷ்டப்பட்டு கவிதைலாம் எழுதிடாதிங்க (இருக்குற கவிஞர்கள் இம்சையே தாங்கல) :-) உங்களின் ஒட்டு மொத்த அன்பையும் வெளிப்படுத்த ஒரே வழி ஐ லவ் யூ சொல்வது தான். உங்களுக்கே உங்களுக்கான தனிமையின் போது பேச்சின் நடுவில் துணையின் கைவிரல்களைப்  பற்றி மெதுவாக ஐ லவ் யூ என்று சொல்லிப் பாருங்கள் ...நொடியில் மனதுக்குள் மத்தாப்பு வெடித்து வண்ணத்துப்பூச்சி பறக்கும் (அது எப்படி மத்தாப்புக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும் லாஜிக் இடிக்குதே என்றெல்லாம் அச்சு பிச்சுன்னு யோசிக்கப்படாது, பறக்கும் அவ்ளோதான்)  அடிக்கடி இப்படி பறக்க விடுங்கள்.  அப்புறம் பாருங்க,’ சாம்பார்ல உப்பு போட மறந்துப்  போச்சா, பிரெண்ட்ஸ் கூட வீக் எண்டு பார்ட்டி ஆ‘ கவலையேப்  படாதிங்க, உங்க துணைக்கு கோபமே வராது.

பிடிக்காத குணம் துணையிடம் இருக்கிறதா, அதை நினைத்து கோபம் எரிச்சல் அடையாமல் சிறு புன்னகை, கூடவே ஒரு ஐ லவ் யூ வுடன் அணுகுங்கள். அப்படியே அந்த பிடிக்காத குணத்தை நாசுக்காக வெளிப்படுத்துங்கள். இந்த அணுகுமுறையால் அதுவரை மாறவே வாய்ப்பில்லை என்பதை  ‘ஏன் மாறினால்தான் என்ன’ என்று துணையை யோசிக்கத் தூண்டும், பின் மெல்ல மெல்ல மாறவும் செய்வார்கள்.  இம்முறையில் மற்றொரு அனுகூலமும் இருக்கிறது ஐ லவ் யூ என்று சொல்லும்போது ஆட்டமேட்டிக்காக உங்கள் குரலிலும் ஒரு மென்மை வந்துவிடும், அதன்பின்  நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தேனில் தோய்த்தெடுத்தவையாக வெளி வரும். அப்புறம் என்ன நீங்கள் சுட்டிக் காட்டும் குறை, குற்றம் சொல்வதை போலவே தெரியாது ஏதோ ஆலோசனைச்  சொல்வதை போலவேத்  தோன்றும். கடைசியாக  ‘சீக்கிரம் சரிபண்ணிக்கிறேன் டியர்’ என்பதில் வந்து முடியும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இது எவ்வளவு சுலபமான முறை என்று.      

இன்னொரு மேஜிக்கும் இதில் நிகழும் இயல்பாகவே நீங்கள் கோபம் கொண்டவராகவோ அல்லது எதிர்மறை எண்ணம் கொண்டவராகவோ அல்லது தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவோ இருந்தீர்கள் என்றால் அடிக்கடி சொல்லும் ஐ லவ் யூ உங்களையும் உற்சாகமான ஆளாக மாற்றிவிடும். (முகத்தை கடுகடுன்னு வச்சுட்டு குரல்ல கடுமையை ஏத்திகிட்டு பல்ல கடிச்சிட்டு வெடுக்குனா ஐ லவ் யூ சொல்விங்க!?) சொல்ல ஆரம்பிக்கும்போதே லேசான சிரிப்பு கொஞ்சம் வெட்கம் தன்னாலே வந்து ஒட்டிக்காதா என்ன .  ஐ லவ் யு சொல்லிச் சொல்லி அது ஒரு பயிற்சியாகவே மாறி, உங்க முகமும் பிரகாசமாய் அழகாய் ஜொலிக்கும் ,  நம்புங்க !

அன்பை வெளிப்படுத்தத்  தெரியாததால் தான் பல தம்பதியர் ஒரே வீட்டில் எலியும் பூனையுமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். மௌனமாக இருப்பது நல்லது என்று அன்பை வெளிக்காட்டாமல் இருந்தால் அன்பில்லாதவர் என்ற தோற்றம் தான் கிடைக்கும். எவ்வளவு செஞ்சாலும் அன்பா ஒரு வார்த்தை கிடையாது என்ற சலிப்பு  தான் ஏற்படும். இத்தகைய பல சலிப்புகள் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், அன்பான வார்த்தை எங்கிருந்து வருகிறதோ அங்கே பாயும் என்பதுதானே இயல்பு. மனித மனமே ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காகத்தான் போராடுகிறது. தம்பதியருக்குள் அங்கீகாரம் என்பது அன்பான வார்த்தைகளாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் கணவன் சாப்பாடு நல்லா இருக்கு’ என்பதற்கு பதில்  ‘வெகு ஜோர்டா செல்லம்’ என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது தானே. தம்பதியருக்குள் நெருக்கம் அதிகரிக்க வார்த்தைகள் அருமையாக உதவும்.

FM ல ஒரு விளம்பரம்.  போனில் மனைவியை அழைத்து ஐ லவ் யூ என்பான் கணவன். அதற்கு மனைவி சிரித்துக் கொண்டே 'என்ன திடீர்னு, அடுத்த ரூம்ல தானே இருக்கிங்க நேர்ல வந்து சொல்லலாமே என்பாள். 'போன்ல உன் குரல் கேட்கிறப்போ அவ்ளோ அழகா இருக்கு ' என்று கணவன் சொல்ல அதன் பின் தொடரும்  போன் உரையாடல் அவ்ளோ இனிமையாக  படு ரொமாண்டிக்காக இருக்கும். இப்படிப்பட்ட சின்னச்  சின்ன பேச்சுக்கள் மூலம் தாம்பத்தியத்தை அருமையாக கொண்டுச் செல்ல முடியும். சந்தோசத்தை வெளியே எங்கும் தேட வேண்டாம் நம்மிடமே இருக்கிறது என்பதை தம்பதியர் புரிந்துக் கொள்ள வேண்டும். இயந்திர உலகில் கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்கும் நிலை, வீட்டிற்கு தூங்குவதற்காக மட்டுமே வருவதைப்  போலவே இன்றைய சூழல் இருக்கிறது. வேலையின் நிமித்தம் தொலைதூரம் பிரிந்திருந்தாலும் இணைக்கும் பாலமாக தொலைபேசி இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் பேசும் பேச்சுகளின் நடுநடுவே ஐ லவ் யூ வும் போட்டுக்  கோங்க!!

ஆமா செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஐ லவ் யூ சொன்னா சரியாப்  போச்சா என்று சண்டையும் பிடிப்பாள் பெண், உடனே ஆண்கள் பின்வாங்கக்கூடாது, அப்போ ஒரு பேச்சு இப்போ ஒரு பேச்சு இல்ல எப்போவும் ஒரே பேச்சுன்ற மாதிரி ஸ்டெடியா நிக்கணும். வெளியே சண்டை பிடிச்சாலும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்வாள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

தோல்வி இழப்பு போன்ற சூழலில் நானிருக்கிறேன் என்று தோள் சாய்த்துச்  சொல்லும் ஐ லவ் யூ வின் ஆறுதலுக்கு ஈடு வேறில்லை. துணையை தேற்றுவதை முழு மனதுடன் செய்யுங்கள். தவிக்கும் உள்ளத்திற்கு இது சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும். அன்பை நிலை நிறுத்தும்.

உங்களிடம் பிடிக்காததையும் பிடித்ததாக மாற்றும் சக்தி இந்த ஐ லவ் யூ க்கு உண்டு.

ஏதாவது பிரச்சனை திட்ட வேண்டும் என்று தோன்றினாலும் நீங்கள் சொன்ன ஐ லவ் யூ க்களை நினைத்து சே அவள்/அவர் நம் மீது அவ்ளோ காதலுடன் இருக்கும் போது எப்படி திட்ட என பின்வாங்கவே தோன்றும். 

ஆனால்  

ஐ லவ் யூ சொன்னா காரியம் சாதித்துவிடலாம் என்று மனதளவில் இல்லாமல் உதட்டளவில் பேசுபவர்களின் சாயம் ஒரு நாள் வெளுத்துவிடும். அதன் பிறகு உண்மையான அன்புடன் ஐ லவ் யூ சொன்னாலும் அது நடிப்பாகவே தெரியும், தாம்பத்தியம் சிதையும். கவனம் ! காதலும் அன்பும் தானாகப்  பெருகுவதில்லை இரு மனமும் இணையும் போதே சாத்தியமாகிறது. நீங்கள் அன்பு செலுத்தினால் பதிலுக்கு அன்பு கிடைக்கும், நீங்கள் போலியாக அன்பு காட்டினால் போலியான அன்பையே பதிலாக பெறுவீர்கள்...என்பதை உணர்ந்து மனபூர்வமாக அன்பு செலுத்துங்கள் காதலைக்  கொண்டாடுங்கள் ...உங்களின் அந்திமம் வரை !!       

98 சதவீத பெண்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்று தெரியுமா ? தங்களின் மீதுள்ள காதலை அடிக்கடி கணவன் வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்பதே. இதே அவர்களின் விருப்பமும்... இவை கிடைக்காத போதே விரக்தியின் எல்லைக்கு சென்று 40% பேர் விவாகரத்து கோருகிறார்கள் 42%  பேர் வேறொரு உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த உறவு வேறு ஆணுடன் இருக்கலாம் அல்லது தங்கள் குழந்தையின் மேல் அதிக கவனம் செலுத்தி அதனுடன் மட்டும் நேரத்தை செலவழிக்கலாம் அல்லது ஏதோ ஒரு வேலையில்/தொழிலில்  தங்களை முழுமையாக ஈடுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆக எவ்விதமாக பார்த்தாலும் கணவனை ஒரு பொருட்டாக எண்ணாமல் தவிர்த்து விடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். தம்பதிகளுக்கிடையே பேசப்படும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள். சந்தோசமாக தாம்பத்தியத்தை கொண்டுச் செல்லுங்கள்.

வளவளனு எல்லாம் என்னால அன்பாகப் பேசமுடியாது... பேசவும் தெரியாது... என்பவர்களுக்காகவே உருவாக்கப் பட்டது தான் இந்த ஐ லவ் யூ !

சோ... காசா பணமா... சும்மா சொல்லுங்க... அடிக்கடி ஐ... லவ்... யூ... 
                                                                          
                                                    * * *
                                                            
தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'' 
கௌசல்யா 

  



புதன், செப்டம்பர் 10

ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது - விகடன் கட்டுரையின் அபத்தம்!?




ஜீன்ஸ் பெண்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது -  விகடன் கட்டுரையின் அபத்தம்!?

பெண்களுக்கு தைரியத்தைக் கொடுப்பது ஜீன்ஸ் ஆ புடவையா என்று பட்டிமன்றம் வைத்தால் தோற்பது புடவையாக இருக்குமோ என்று புடவைகளின் சார்பாகப்  புலம்ப ஆரம்பித்ததின் விளைவே எனது இக்கட்டுரை! மூன்று வருடங்களுக்கு முன் ‘ஆபத்தான கலாச்சாரம்’ என்று நான் எழுதியப்  பதிவுக்கு ஒரு தோழி எதிர்பதிவு(கள்) எழுதி இருந்தார், அதில் ஜீன்ஸ் உடையை ஆஹா ஓஹோன்னுப்  புகழ்ந்துத்  தள்ளினார். வெளிநாட்டில் வசிக்கும் அவர் அப்படி எழுதியதில் எனக்கு பெரிதாக வியப்பேதுமில்லை... அதற்குப்பின் ஜீன்ஸைப்  பற்றி அதிசயப்படும்படியான ஒரு எழுத்தை இப்போதுதான் படிக்கிறேன். ஆனந்த விகடனில் ‘பேசாத பேச்செல்லாம்’ தொடரின் போன வார(3-9-14) கட்டுரையை தெரியாமப்படிச்சுத் தொலைச்சுட்டேன், அதுல இருந்து மண்டைக்குள்ள ஒரு வண்டு பிராண்டிக்கிட்டே இருக்கு. சரி நம்ம கருத்து என்னாங்கிறதையும் பதிய வச்சுடுவோம்னு இதோ எழுதியே முடிச்சுட்டேன். அந்த மகா அற்புதக் கட்டுரையை படிக்காதவங்களுக்காக அதுல சிலவரிகள அங்க இங்கக்  குறிப்பிட்டு இருக்கிறேன். (நன்றி விகடன்)

அந்த கட்டுரையாசிரியர் தனது ஆறு வயது மகளுக்கு , தனக்குப்  பிடித்த உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை/சுதந்திரத்தைக்  கொடுத்திருக்கிறார் என்பதை கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். பாராட்டவேண்டிய ஒரே விஷயம் இதுமட்டும்தான். அதுக்குபிறகு அந்த கட்டுரை சென்றவிதம் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தியது......   அந்த பெண் குழந்தை விளையாடுறப்ப தன்னோட டிரஸ் மேல ஒரு துண்டை தாவணியா  போட்டுக்கிட்டுச்  சமைக்கிற மாதிரி, குழந்தை(பொம்மை) வளர்க்குற மாதிரியும் விளையாண்டுச்சாம், அதே குழந்தை குட்டி டிரௌசர் போட ஆரம்பிச்சப்ப ரொம்ப வீரமா தைரியமா கைல கேமரா புடிச்சிட்டு காடு  மலை எல்லாம் சுத்துவேன்னு சொல்லிச்சாம். இதுல இருந்து கட்டுரையாசிரியர்  புரிஞ்சிகிட்டது என்னனா “சர்வ நிச்சயமா நம் உடைக்கும் , நம் எண்ணத்துக்கும் தொடர்பு இருக்கு” அப்டின்றதானாம்...புடவைக்  கட்டுனா சமையல்கட்டோட நம்ம எண்ணம் நின்னு போயிடுமாம். புடவைல இருந்து அப்டியே சுடி, சல்வார்னு ஒவ்வொன்னா மாறி ஜீன்ஸ் போட்டப்போ மனசு அப்டியே ச்ச்ச்சும்மா ஜிவ்வுனு அதோ அந்த பறவையப்  போல பற, இதோ இந்த மானைப்  போல ஓடு, எமனே எதிர்ல வந்தாலும் எட்டி உத ன்ற மாதிரி வீரமும் தைரியமும் நமக்குள்ள போட்டிப் போட்டு வந்துடுமாம். 

‘புடவைய கட்டிண்ட்டு இனியும் வீட்டுக்குள்ள கோழையைப்  போல அடங்கி கிடக்காதிங்க பெண்களே... ஜீன்ஸ் போட்டுக்கிட்டு சுதந்திர வானில் ஒரு பறவையாய் பறந்துத்திரியுங்கள்’ என்று பெண்களுக்கு அறைகூவல் விடுக்கும் இவரை கண்டிப்பாக  பெண்ணிய இயக்கங்கள் எல்லாம் ஒன்னுக் கூடி ஒரு பாராட்டுவிழா நடத்தியே ஆகணும். புடவையைப்  பத்தி ஒரு பெரிய லெக்ட்சர் வேறக்  கொடுத்திருந்தாங்க, அப்டியே அசந்தேப்  போயிட்டேன்.

புடவை என்னும் மகாஇம்சை

புடவைக்  கட்டுனா நிமிசத்துக்கு ஒரு முறை இழுத்து இழுத்து விட்டுகிட்டு, வயிறு,இடிப்பு தெரியுதான்னு அட்ஜெஸ்ட் பண்ணுவதால வேலைல கவனம் சிதறிப் போயிடுமாம். குனிய முடியாது, வேகமா நடக்க முடியாது, வண்டி ஓட்ட முடியாது பஸ்ல ஏற முடியாது... இப்படி ஏகப்பட்ட முடியாதுகள் !!! அதைவிட முக்கியமா  வேலைக்கு போறப்  பெண்கள் ரெஸ்ட் ரூம் போறதும், நாப்கின் மாத்துறதும் மகா கொடுமையா இருக்குமாம். புடவை ஈரமாயிட்டாக்  காயுற வரை அங்கேயே நிக்கணுமாம் என்று எழுதியது எல்லாம் ரொம்பவே ஓவர்! . சொல்லப்போனால் இது போன்ற சமயத்தில் புடவை ஒருவிதத்தில் வசதியும் சுகாதாரமானதும் என்பது பெண்களுக்கு புரியும், பெண்ணியவாதிகளுக்குப் புரியாது. (அதுவும் தவிர புடவை கசங்கிடும் என்றும் காரணம் சொல்லமுடியாது, ஏன்னா அந்த நாட்களில் மொட மொடன்னு கஞ்சிப்  போட்ட காட்டன் புடவையோ, பட்டு புடவையோ நாம கட்ட மாட்டோம்)

கடைசியா நம்மூர் காலநிலைக்கு புடவை கொஞ்சமும் செட் ஆகாதுன்னு ஒரே போடா போட்டாங்க...(ஜீன்ஸ் அப்படியே ச்ச்சும்மா சில்லுனு இருக்குமாமாம்)

* பெண்கள் பிறர் முன் கம்பீரமா தெரியனுமா, ஜீன்ஸ் அணியுங்கள்!

* தேங்காய் வேணுமா, ஜீன்ஸ் போடுங்க, அதாவது தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிக்கச் சொன்னாலும் பறிக்கத் தோணும்.

* ஓடலாம் ஆடலாம் மலை ஏறலாம் பைக் ஓட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (சமையல் மட்டும் செய்யக்கூடாது, தெய்வக்குத்தம் ஆகிடும் ஆமா)

* வெட்கம் பயம் கண்டிப்பாக  இருக்கவே இருக்காது. துணிச்சல் பொங்கும். எவனாவது கிண்டல் பண்ணினாலும் என்னடா நினைச்சுட்டு இருக்கேனு சட்டையைப்  புடிச்சு கேட்க முடியும். ஆனா தாவணி, சேலை கட்டினா பயத்துல நடுங்கியேச்  செத்துடுவாள். (இந்த இடத்துல சமீபத்திய பாலியல் கொடுமைகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை)L

* யாரையும் லவ் பண்ணலாம், அதுமட்டுமில்லாம லவ் பண்றதப்  பத்தி வீட்ல சொல்ற அளவுக்கு தைரியத்தையும் ஜீன்ஸ் கொடுக்கும். (ஜீன்ஸ் போடும் பெண்களின் பெற்றோர்கள் கொடுத்து வச்சவங்க)

ம்ம்...என்னத்த சொல்ல !! இப்படியெல்லாம் ஜீன்ஸ்ஸோட பெருமைகளைப்  பாயிண்ட் பாயிண்டா புட்டுப் புட்டு வச்சது சாட்சாத் அந்த கட்டுரையாசிரியரே தான். (அடைப்பு குறிக்குள் இருப்பது மட்டும் அடியேன்)

இவ்வளவையும் சொல்லிட்டு பாலியல் வன்முறை உடையால் ஏற்படுவது இல்லை என்று சில கருத்துக்களையம்  சொல்லி இருந்தாங்க. எனது கருத்தும் இதே தான் என்றாலும், ஜீன்ஸ் குறித்தான அவர்களின் எண்ணத்திற்கு சாதகமாகவே இக்கருத்தையும் சொன்னதாக எனக்கு தோன்றியது.

ஆகச் சிறந்த கட்டுரையின் இறுதி வரியில் 'சோர்வைத் தொடருவதும், புத்துணர்ச்சியுடன் ஓடத்தொடங்குவதும் நம் தேர்வில் இருக்கிறது தோழிகளே' என்று அந்த கட்டுரையை முடித்திருப்பதன் மூலம் ஜீன்ஸ் மட்டுமே தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். (ஒருவேளை ஜீன்ஸ் கடை ஏதும் புதுசா திறந்திருக்கிறாரா என்று தெரியவில்லை)J

பெண்ணியம் மட்டுமே பேசும் பெண்களே...

பூ, பொட்டு, புடவை, வளையல், கம்மல் இதெல்லாம் போட்டுக் கொள்வது பெண்ணடிமைத்தனம் என்றுச் சொல்லி இதை எல்லாம் தவிர்த்து ஜீன்ஸ் போட்டு இதுதான் பெண்ணியம் அப்படினு என்ன கர்மத்தையும் சொல்லிக்கோங்க...ஆனால்  நமது பாரம்பரியத்தை நமது அடையாளத்தை கேலிச்  செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். 

ஜீன்ஸ் என்பது மேல்நாட்டினர் உடை, அவர்கள் நாட்டின் குளிர்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைத்திருக்கிறார்கள். அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொன்றாக அவர்களை பின்பற்றி வருவது ஒன்று மட்டும் தான் நாகரீகம் என்று இருப்பவர்கள் இருந்துவிட்டு போங்கள், ஜனநாயக நாடு இது, ஆனால் நமது பாரம்பரிய உடையை அவமானப்படுத்துவது என்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ??!!

பெண்கள் என்றால் அவங்க ஓடணும் , பாடணும் , ஆடணும் என்று புதிதாக  ஒரு பிம்பத்தை பெண்ணுக்கு ஏற்படுத்தும் இது போன்ற முயற்சிகள் தேவையற்றது. ஒரு கட்டுரை நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை அபத்தங்களைப்  பேசாமலாவது இருக்கலாம்.

நீங்கள் புதுமையானவர்கள் என்பதற்காக நம் பழமையைக்  குறைச் சொல்லாதீர்கள்...பலரும் பெரிதும் மதிக்கும் மேற்குலகமே இன்று நம்மை பார்த்து மாறிக் கொண்டிருக்கிறார்கள்...ஏன் நாமே இன்று இயற்கை விவசாயம், கம்பு சோளம், திணை, குதிரவாலி, சாமை என்று மாறிக் கொண்டிருக்கிறோமே...!

எந்த உடையாக இருந்தாலும் அதை அணிபவரின் அப்போதைய மனநிலையைப் பொறுத்தே அன்றைய அவரது செயல்பாடு இருக்கலாம். அதற்காக  உடை அணிந்ததும் வீரம் வரும் என்பது எல்லாம் மகா அபத்தம். ஒருவரின் கல்வி, அறிவு, திறமை இவை தராத தைரியத்தையா உடை கொடுத்துவிடும். அவயங்களை மிகவும் இறுக்கிப் பிடிக்காத நாகரீகமான எந்த உடையும் பெண்ணுக்கு கம்பீரத்தைக்  கொடுக்கும். அனைத்தையும் விட அவரவர் உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து அணிவது மிக முக்கியம். ஜீன்ஸ், சுடி, சல்வார், புடவை எதாக இருந்தாலும் அணியும் விதத்தைப்  பொருத்தே பெண்ணுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கும். நாம் பார்க்கும் வேலைக்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுத்து அணியலாம், உடலுக்கு சிறிதும் பொருந்தாத உடைகளை அணிந்தால் அதுவே கேலிக்கூத்தாகிவிடும், அது புடவையாக இருந்தாலுமே!

நவநாகரீக உடைகள் மட்டும்தான் பெண்ணுக்கு தைரியத்தைக்  கொடுக்கும் என்று குருட்டாம்போக்கில் எழுதப் படும் இது போன்ற கட்டுரைகள் உண்மையில் ஆபத்தானவை.

பெண்களின் சாதனை உடையால் மட்டுமே நிர்ணயிக்கப் படுவதில்லை  

புடவை கட்டத்தெரியாது (தெரியும்ன்றது வேற விஷயம்) என்று சொல்வதே 90களில் பெருமையாகத்  தெரிந்தது, ஆனால் நகரங்களில் இப்போது புடவையே தேவையில்லை என்று தூக்கி எறிவதைபோன்ற எழுத்துக்கள், பேச்சுகள் அதிகரித்து வருவதைப் போல இருக்கிறது. பொருளாதாரத் தேவைக்கென்று யாரையும் சார்ந்து நிற்காமல் சுயத்தொழில் மூலமாக உழைத்து தன் குடும்பத்தை உயர்த்தி உன்னத நிலைக்கு கொண்டுவந்த பல பெண்கள் இன்று நம் கண்முன்னே பெண்மையைப்  பெருமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில் இன்று எந்த பெண்ணும் வருமானம் இல்லாமல் இருப்பதில்லை, விவசாயம் , பீடி , செங்கல் தயாரிப்பு போன்ற தொழில்கள் முதல் மகளிர் குழுக்கள் மூலம் லோன் பெற்று சுயத்தொழில் ஆரம்பித்து   அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலரும் நவநாகரீக உடை அணிந்தவர்கள் அல்ல.

அதுவும் தவிர கட்டுரையில் குறிப்பிட்ட மாதிரி, புடவை கட்ட நேரமாகும் என்பது எல்லாம் ஒரு காரணமே இல்லை, இன்றைய பெண்கள் மேக்கப் என்ற பெயரில் முகத்திற்கு மட்டும் செலவு செய்யும் நேரம் குறைந்தபட்சம் ஒருமணிநேரம் (நீயா நானா ல இளம்பெண்கள்  சொன்ன ஸ்டேட்மென்ட்). முகத்துக்கு அவ்ளோ நேரம் செலவு பண்ற பெண்கள் புடவை கட்ட ஒரு பத்து நிமிஷம் செலவு செய்வதில் தப்பில்லை. 

புடவைக்கு ஆதரவாக என்பதற்காக இப்பதிவினை நான் எழுதவில்லை, புடவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளம் என்பது போன்றுக்  குறிப்பிட்டு இருக்கும் இந்த கட்டுரையை குறித்த எனது கோபத்தை, ஆதங்கத்தை இங்கே வரிகளாக்கி இருக்கிறேன். அவ்வளவே! 

இறுதியாக 

ஜீன்ஸ் அணிவதால் உடல் ரீதியிலான பல பிரிச்னைகள் ஏற்படக்கூடும் என்பது  மருத்துவர்களின் கடுமையான  எச்சரிக்கை .  மக்கள் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை போன்று 'டாக்டர் விகடன்' வெளியிடும் விகடன் குழுமம் இது போன்றப்  படு அபத்தமான கட்டுரையை எப்படி பிரசுரித்தது என்று புரியவில்லை. இளைஞர்கள் பலர் விரும்பிப்  படிக்கும் பிரபலமான பத்திரிக்கையான விகடனின் இந்நிலை வருத்ததிற்குரியது.  

ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்துத்  தெரிந்துக் கொள்ள இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் குவிந்துக்  கிடக்கின்றன.  படித்துப் பாருங்கள் . 

கட்டுரையாசிரியர் ப்ரியா தம்பி அவர்களே! 

உங்களுக்கு சரியென்றுப் படுவதை ஒட்டுமொத்த பெண்களின் கருத்தாக எழுதுவது எப்படி சரியாகும். ஜீன்ஸ் தைரியம் தரும் என்று எழுதி இளம் சமுதாயத்தைக்  குழப்பாதீர்கள். பெண்களின் ஆடை இன்னைக்கு கடும் விமர்சனத்துக்கும் விவாதத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதை மனதில் வைத்து அதீத அக்கறையுடன் எழுத வேண்டிய சூழலில் இருக்கிறோம்...உங்களை பலரும் வாசிக்கிறார்கள் என்று ஒரு சார்பாக மட்டும் தயவு செய்து இனியும் எழுதி விடாதீர்கள். மிக அருமையான ஆளுமை நீங்கள், வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெண்களைப்  பற்றி பேச நிறைய இருக்கிறது, எதுவும் பேசப்படாமல் போய்விடக் கூடாது ...தொடர்ந்து பேசுங்கள்...நாங்கள் பேசாத பேச்சையெல்லாம் ...! நன்றி தோழி.



பிரியங்களுடன் 

கௌசல்யா 


திங்கள், செப்டம்பர் 1

நினைவே ஒரு சங்கீதம் - MJ

என் நினைவே ...

கடந்த ஜூன் 25 நினைவு தினத்தன்று எழுத வேண்டிய பதிவு, உன்னை பற்றிய நினைவுகளை எழுதவும் நேரம் இன்றி வேலைகளுக்குள் மூழ்கி போன என்னை, ‘என் பிறந்த தினத்தன்றாவது  வந்து எழுதுறியா’ என்று மிரட்டி கைப்பிடித்து இழுத்து வந்து எழுத வைத்ததும் அதே நினைவுகள் தான். பிறந்த தினமான ஆகஸ்ட் 29 அன்று எழுதி இதோ இன்று போஸ்ட் செய்தாலும் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது...வருடத்தில் ஏதோ ஒரு நாளில் உன்னைப்  பற்றி ஏதாவது கிறுக்கிக் கொண்டுத்தான் இருக்கப் போகிறேன்... உன்னை கொண்டாட அல்ல இந்த நினைவு நாள், பிறந்தநாள் எல்லாம்...அவற்றை எல்லாம் வழக்கம் போல மற்றொரு நாளாகவே கடந்து விடுகிறேன். ஆனால் என்னுள் நீ உயிர்ப்புடன் இருக்கிறாய் என்பதை இந்த ஒரு நாளில் பதிய வைத்து என் உயிர்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவேனும் எழுதுகிறேன் ... முன்பு உனது  சங்கீதம் பல நினைவுகளை கிளறிவிட்டுச் செல்லும், இப்போது உனது நினைவே ஒரு சங்கீதம் என்றாகிவிட்டது!! 


கரடு முரடான வாழ்க்கை பாதையில்  பஞ்சுப் பொதிகளை இறைத்து போட்டிருக்கிறதே உனது இசை... இதில் கடந்த ஐந்து வருடமாக இன்னும் அதிகமாக உன்னை நெருங்கிவிட்டேன் என தோன்றுகிறது... ஆன்மாவால் இறுகத் தழுவிக் கொண்டிருக்கிறாய்.  என்னை மட்டுமல்ல என்னைப்போல பல்லாயிரம் பேர் தினமும் ஏதோ ஒரு விதத்தில்  உன்னுடன் பயணித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். உனது பெயர் தாங்கிய இந்த  பேஸ்புக் தளத்தில்  யாராலோ போடப்படும் உன்னை பற்றிய தகவலுக்கும் விழுந்தோடி வந்து லைக் கொடுப்பதும் கமென்ட் பண்ணுவது என்று உன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களாக வருகிறார்கள் , ரசிக்கிறார்கள், பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள் சென்று விடுகிறார்கள், அங்கே மறுமொழி கொடுக்க உன் போல் யாரும் இல்லை என்று எங்களுக்குத்  தெரியும், மறுமொழிக்காக வருபவர்கள் அல்லவே நாங்கள்.  உணர்வாய் , காற்றாய், இசையாய் எங்களை சுற்றி வியாபித்து இருக்கும் உன்னை, உன் இருப்பை தவிர்த்து வாழ்வது உன் ரசிகர்களுக்கு எங்கணம் இயலும் !

உன்னை பற்றிய பல வித வதந்திகள் போலவே உன் இறப்பும் ஒரு வதந்தியாக இருந்துவிடாதா  என்று இன்றும் எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்... உண்மைதானே உன்னை உனக்காகவே ரசித்தவர்கள் ஆயிற்றே ... இசை, பாடல், குரல் எல்லாம் தாண்டியும் உன்னை நேசிக்கிறார்களே...அவர்களுக்காக நீ செய்ததை போல வேறு யாரும் செய்திருப்பார்களா என்ன...எதிர்பார்ப்பிலேயே வாழும் மனித கூட்டத்திற்கு இந்த நேசம் புரியாது...எங்கோ இருந்து எங்கள்  மனதை ஆளும் உன் ஆன்மா அப்படிப்பட்டவர்களை தவிர்க்கவும்  கற்றுத்தந்திருக்கிறதே. போதும் இவ்வாழ்க்கை என சோர்ந்து விழுந்தப்  போதெல்லாம் பிடித்துத் தூக்கிவிட்டாய்,  நடுவில் போக எண்ணாதே நிறைவாய் வாழ்ந்துவிடு என காதில் ஓதிக் கொண்டே இருக்கிறாய்... வாழ்க்கையை வாழ சொல்லித்தருகிறாய்.......

என் உலகம் அழகானது... உனக்குத் தெரியும், அது உன்னால் தான் என்று !! எனது சிறுவயது முதல் அதை எவ்வாறெல்லாம்  வடிவமைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதையும் அறிவாய் தானே... மரம், செடி கொடி, பூக்கள் பறவை , விலங்கு மழை மலை  என  இயற்கையின் அற்புதங்கள் அனைத்தையும் வெறிப் பிடித்து  நேசிக்கிறேன் , உன்னைப் போலவே ! 

உன் மீதான நேசம் புரிதலுக்கு உட்படாதது, என் எழுத்துக்கள் அதிக உணர்ச்சிவசபட்டதை போல தெரியும், தெரியட்டுமே ... கோவில் கோவிலாக அலைந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முன்னால்  திடீரென்று கடவுள் வந்து நின்றால்   செய்வதறியாது ஒன்றும் பேசாமல்  மெய்சிலிர்த்து கண்ணீர் வழிய காலடியில் பூமி நழுவ விழிமூடி இருகரம் கூப்பி சாஸ்டாங்கமாக அத் தேவனின் பாதத்தில் விழுந்துவிடுவான். பரவச உணர்வுக்குள் ஆட்படும் அச்சமயத்தில் அறிவுக்கு அங்கே வேலை இல்லை...'நான்' என்பதை மறந்து சகலமும் அவனே என்று அவனிடம் சரணாகதி அடைவதே தானே பேரின்பம். இதை பக்தி என்பதும் அசட்டுத்தனம் என்பதும் அவரவர் புரிதல். 

உன் ரசிகர்களாகிய நாங்களும் இப்படியே தான்... எதிர்பார்ப்பு இல்லா உள்ளங்கள் இவை, அதீத அன்பால் சூழப்பட்ட உலகம் இது...அதீத அன்பு தவறென்று வாதிடும் மேதாவிகளை விட்டு என்றும் ஒதுங்கியே இருக்கிறோம்.  நாள்தோறும் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம் உன்னை... உனது இருப்பும் இறப்பும் எங்களை ஒரே நிலையிலேயே வைத்திருக்கின்றது...ஆமாம் நீ தங்கப்பேழையில் உறங்குவதாக எண்ணிக் கொள்வதிலும்  ஒரு நிறைவு இருக்கத்தான் செய்கிறது.

சிறுவயதில் அடிக்கடி ஒரு கனவு வரும் உண்மையில் அது கனவு அல்ல பகல் பொழுதின் கற்பனை என்பதுதான் சரி. கண்டம் விட்டு கண்டம் கடல் தாண்டி நடுவில் இருக்கும் அத்தனை நாட்டையும் ஊரையும் தாண்டி உலகின் இந்த ஒரு  மூலையில் இருக்கும் என் வீட்டிற்கு நீ வருவதாகவும் என் முன்னால் பாடுவதைப்  போன்றதுமான என் கனவிற்குத்தான் எவ்வளவு பேராசை !! கனவு வந்த நாள் அன்று கரைபுரண்டோடிய மகிழ்ச்சியை எவ்வாறு நான் வார்த்தைப்படுத்துவது, தெரியவில்லை. இந்த கனவு என் கல்லூரி காலத்தையும்  உற்சாகப்படுத்தி இருக்கிறது... சாத்தியமில்லாததையும் சாதித்துப் பார்ப்பதற்குப்  பெயர் தானே கனவு.  எட்டிய வானும் எட்டிப் பிடிக்கும் தூரம் தானே மனதுக்கு !  

உன்னை பற்றிய என் உணர்வுகளை எழுத்துகளில் கொண்டு வர முயலும் போதெல்லாம் பெருகும் கண்ணீருடன் தோற்றுப் போகிறேன் வார்த்தைகளிடம்... அவ்வாறு கண்ணீர் வடித்து வடித்து என் நிகழ்காலச் சுமைகளை இறக்கியும் விடுகிறேன்...அதற்காகவேனும் உன் குரலை கேட்டாக வேண்டுமாய் இருக்கிறது...

இப்போதெல்லாம் மனிதர்களை விட்டு நான் விலகியே இருக்கிறேன், அவர்கள் விரும்பிய படி என்னால் நடக்க(நடிக்க) இயலவில்லை என்பதால்... நேசக்  கேடயம் பிடித்து நிர்பந்த வாள் வீசுகிறார்கள்,தோற்று விழும் என்னிடம் பாசப்போர்வை போர்த்தி மீண்டுமாய் மற்றொரு போருக்கு தயார்படுத்துகிறார்கள்... அன்பிற்கு விலை பேசும் வியாபாரிகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கும் வேளையில் எங்கிருந்தோ ஓடி வந்து இளைப்பாற்றும் உன் குரல் .   எனது  தனிமையை உனது  இசை போர்வையால் போர்த்தி சுக நித்திரை கொள்வது மட்டுமே மிகப் பிடித்ததாகி விட்டது. போதும்  இது போதும்  இன்றும் என்றும் எந்நாளும்...



எனக்கு தேவையான அன்பு காதல் நேசம் நட்பு அத்தனையையும் ஏதோ ஒரு பாடலில் இட்டு நிரப்பி நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும் உணர்வுகள் எனும் கூண்டுக்குள்  அகப்பட்டு அடைந்து கிடப்பதை போன்ற ஒரு இன்பம் வேறு இருக்கிறதா என தெரியவில்லை...        அப்படி ஒன்று இருந்தாலும் அதை அல்பமாக எண்ணவும் பக்குவப்பட்டுவிட்டேன் நான்...இல்லை இல்லை பக்குவபடுத்தி விட்டாய் நீ என்பது தான் சரி.   காற்று வீசும் திசைக்கு ஏற்ப தலை ஆட்டும் சிறு மரம் போல உன் நினைவுகள் சொல்லும் இடம் தேடியே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உன் நினைவுகளை கிளறிக் கிளறியே என்னை உயிர்பித்துக் கொள்கிறேன். என் தனிமைகளில் என்னை கூட்டத்தோடும் , கூட்டத்துக்கு நடுவில் தனிமையாகவும் உணர செய்வது பிடித்தவனின்  நினைவுகளன்றி வேறேது. வேடிக்கையும் வினோதமானதும்  தானே உன் நினைவுகள்.

நீ வீசிய அன்பு தூண்டிலில் நானாகவே வந்து மாட்டிக் கொண்டப் பின் மீண்டும் மீண்டு  போவதெங்கே... சுவாசத்தில் வித்தியாசம் கண்டாலும் என்னாச்சு என்று தலைக் கோதி விசாரிக்கும் வரிகளின் நேசத்தில், ஏதாவது எனக்கு ஆனாலும் நன்றாக இருக்குமே என ஏங்க வைக்கிறாயே... திமிர் பிடித்த மனதை ஆண்டு அடிமையாக்கும் கலையை எங்கே கற்றது உன் குரல்... சிறு வயது நாட்களுக்குள் என்னை தள்ளி உற்சாகத்தில் மூழ்கடித்து விளையாடிக் கொண்டிருக்கிறது  உனது ஒவ்வொரு பாடலும்...சந்தோசமும் சோகமும் ஒன்றாய் தாக்கும்  உன் பாடலுக்குள் நான் புதைந்த தருணங்களில் எல்லாம்... 

வருடத்திற்கு ஒரு முறை உன்னுடன் இப்படி எழுதி  எழுதிப் பேசிக்கொண்டிருப்பதை நீ மௌனமாய் கேட்டுக் கொண்டிருப்பாய் என்று உணரும் போது பெருகும் உற்சாகம் ஒன்று போதும் வருடம் முழுவதற்குமாய்...!   


பிரியங்களுடன்
கௌசல்யா 

* * * * * * * * * * * * * * * * *



ஆஸ்கர் மேடையை அலங்கரித்த மைக்கேல் 





இந்த வீடியோவில் 11 வயது கண்களின் துடிப்புதுள்ளல் , முக பாவனை , உடலின் அதிர்வு குரலின் வீச்சு அத்தனையும் காண்பவர்களையும் பீடித்துவிடுகிறதுஒரு வித போதைக்குள் தள்ளிவிடும் பரவச நிலை,  தியானத்தில் இருப்பதை போலவே இருக்கும் இது போன்ற சில பாடல்களில் என்னை இழக்கும் போது !

* * * * * * * * * * * * * * * * *

தொடர்புடைய முந்தைய பதிவுகள்