ஜாக் !
எப்படி இருக்கிறாய்...? நிச்சயம் ஆனந்தமாக இருப்பாய் இந்த உலகில் இருந்ததைவிட ! இன்று உனது நினைவு நாளாம்...உலகமே நினைத்து கொண்டாடுகிறது..... நான் மறந்தால்தானே இன்று உன்னை நினைக்க !! உன் குரல் ஒலிக்காத நாள் என்று ஒன்று இல்லை என் வீட்டில் !
என்று என் மனதில் நுழைந்தாய் இசையின் வடிவில் ?! தேதி நினைவு இல்லை, வயது நினைவு இருக்கிறது.....எனது 11 வது வயதில் என் அண்ணன் முதலில் உன் குரலை எனக்கு அறிமுகம் செய்தான். முதலில் சாதாரணமாகக் கேட்கத் தொடங்கிய நான், எப்படி இன்றுவரை உன் இசையை விட்டு மீள இயலாமல் அதையே சுற்றி வருகிறேனே அறியேன். அச்சிறு வயதில் மொழி புரியாமல் டிக்ஷ்னரியின் கையுமாக அலைந்த நாட்கள் இன்றும் இனிக்கிறதே... வார்த்தை புரியவேண்டும் என இரவின் தனிமையில் கண்மூடி, கூர்ந்து கேட்டு நோட்டில் குறிப்பெடுத்து வைத்ததை இன்று நினைக்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கிறது.....!! புரியவில்லை என்றாலும் நானாக ஒரு அர்த்தப்படுத்தி பாடிபார்ப்பேன் !
தோழிகள் 'ஏன் உனக்கு இங்கே உள்ள யார் பாட்டும் பிடிக்காதா? பெரிசா இங்கிலீஷ் பாட்டு கேட்குற' என்று கேலி செய்த போதெல்லாம் எனது ஒரே பதில் 'எனக்கு பிடிச்சிருக்கு'. மொழி புரியாததால் அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற தேடலில் அதிகம் பிடித்துவிட்டதோ என்னவோ ! தெரியவில்லை. வார்த்தையின் பொருள் புரியத்தொடங்கியதும், வேகமான ஆக்ரோசமான இசையை ரசிக்க தொடங்கி, மனதை நெகிழவைக்கும் உன் குரல்... கேட்க கேட்க... மீண்டும் மீண்டும்... மிக சரியாக உனக்குள் விழுந்து கொண்டே இருந்தேன்...!
அவ்வபோது உன்னை பற்றி வரும் செய்திகள், துணுக்குகள், படங்கள் சேகரித்து என் அறையின் அலமாரி அலங்கரித்தேன்... அறையின் சுவரை உன் முழு உருவபடத்தால் நிறைத்தேன்...!
எனக்காக என் அண்ணன் தோட்டத்தில், மாமரத்தில் ஒன்றும் , கொய்யா மரத்தில் ஒன்றுமாக இரண்டு பெரிய பானைகளை கட்டி அதில் ஸ்பீக்கர் வைத்து உன் பாடலை ஒலிக்கச் செய்வான். மரங்களுக்கு நடுவே ஊஞ்சலில் அமர்ந்து இந்த உலகையே மறந்து கண்மூடி இருப்பேனே...அந்த இனிய நாள் இன்று நினைவுக்கு வந்து வதைக்கிறதே !
இசையின் மூலம் ஒருத்தரை வழி நடத்த முடியுமா ?
சாத்தியமாக்கியது
உன் இசை !
உன் குரல் !
உன் புன்னகை !
உன் பாடல் வரிகள் !
உனக்கு தெரியாது எதிலெல்லாம் என்னை நேர் படுத்தினாய் என்று !! எதை சொல்வேன்... ஒவ்வொன்றாய் சொல்ல என் ஆயுள் போதாது...இன்று வரை சோர்வு,மனஅழுத்தம் என்னை ஆட்கொள்ளும் போதெல்லாம் கை கொடுத்து தூக்கி நிறுத்துகிறதே உன் குரல் !
என்ன மனிதன் நீ !!?
பதினோரு வயதில் மேடை ஏறிய நீ சிறுவயதில் அனுபவிக்கவேண்டிய சந்தோசங்கள், குறும்புகள், விளையாட்டுகள்,நண்பர்கள், படிப்பு எல்லாம் இழந்தாய். அந்த இழப்பின் வலி உணர்ந்ததாலேயே பல கோடி மதிப்பில் பூங்கா அமைத்து சிறுகுழந்தைகளுக்கு அனுமதி இலவசம் என்றாய். உன்னை சுற்றி குழந்தைகள் வலம் வந்தார்கள், ஒன்றாக விளையாடி, ஒன்றாக உணவருந்தி ஆனால் இதை இந்த கேவலமான உலகம் படுகேவலமாக பேசியது..... நீ ஒரு வளர்ந்த குழந்தை என அறியாமல்...! ஒரு உற்சாகத்தில் ரசிகர்கள் பார்க்கட்டுமே என உன் குழந்தையை மாடி ஜன்னலில் தூக்கி காட்டினாய் ...உடனே அய்யோ என்ன இது கொடுமை என அலறியது, கண் முன் அடுத்தவன் குருதி கொட்டுவதை கண்டும்காணாமல் போகும் மனித நேயமற்ற உலகம்...!! பிரபலங்கள் ஆக இருப்பது சாபகேடோ ?!! அனுபவித்தாய் மிக கொடுமையாக !!
தோல் நோயால் உன் மேனி வெள்ளையாக நிறம் மாறியதையும் கதை கட்டியது வேறுவிதமாக. ஒரு முறை டிவி பேட்டியின் போது நீயாக இதை சொன்னபோதும் நம்பவில்லை. நீ விண்ணுலகம் சென்ற சில மாதங்களுக்கு பின் ஒருநாள் உன் மகன் கடலில் நீந்தி விளையாடும் போது அவனது முதுகில் அதே தோல் நோய் சிறு வட்டமாக வந்திருப்பதை பார்த்த அவனது பாட்டி...உன் தாய் ஒரு புன்னகையுடன் பெருமூச்சுவிட்டாளாம் !! 'இரண்டு உண்மை உணர்த்தபட்டுவிட்டதே, என் மகனுக்கு இருந்தது தோல் நோய், இவன் அவனது வாரிசு (மகன்) என்பதையும்..... இனியாவது நம்புமா இந்த உலகம்?' என்று கண்கலங்கினாள். நான் இங்கே கதறினேனே...'குழந்தைகள் அவனுடையது அல்ல' என்று கூச்சல் போட்ட அநாகரீக கூட்டத்திற்கு உன் தாயின் கண்ணீர் சென்று சேர்ந்து இருக்குமா !
எப்படி இத்தனை அசிங்கங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டாய், பொறுத்தாய் ?!! என்ன மனுஷன் டா நீ ! இல்ல இல்ல நீ மனிதன் இல்லை 'மனிதனில் புனிதன்' இந்த கோமாளி கூட்டத்தில் தப்பி பிறந்தவன் நீ..... இறந்த பின்னும் விட்டார்களா, மென்று தின்று பணம் பார்த்தன பிணம் தின்னும் கழுகுகள் ! எந்த பிரச்னையையும் ஒரு மர்ம புன்னகையால் கடந்து செல்லும் உன் பக்குவம் இன்னும் எனக்கு வரவில்லையே.....!
Heal The World !
உலகம் ஆயிரம் சொன்னாலும் அதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இசையில் உன்னை மூழ்கடித்து கொண்டாய்.....எங்களையும் மூழ்க வைத்தாய் ! ஒரு பாட்டில் தாலாட்டினாய், ஒரு பாடல் காதோரம் சிலிர்க்க வைக்கும்...ஒரு பாடலில் மரத்தை வெட்டாதே என்பாய்...சண்டை போடாதீர்கள் என வேண்டுகோள் விடுவாய்...இன்னும் ஏராளம் ஏராளம்......அனைத்திலும் உன் மாசற்ற உள்ளம் தெரியும், 'சக மனிதரை நேசி' சொல்லி கொடுத்தாய்.....! இந்த ஒரு பாடல் போதும் உன் மனதை சொல்ல.....!
இரு வருடங்களுக்கு முன் வரை இந்த பாடலை கேட்டால் உற்சாகமாக கண்மூடி ரசித்து மகிழ்வேன் ! நீ இல்லாத உலகில் இந்த நாட்களில் இப்பாடலை கேட்கும் போது கண்களில் அருவியாய் பெருக்கெடுக்கும் கண்ணீர் ! காரணம் அறிவாய் நீயே.....என் ஆறுதலின் தேவனே !! தொலைத்துவிட்டோம் உன்னை !!
'Make a little space to make a better place'
Michael Jackson sang, the world hoped.
Michael Jackson danced, the world smiled.
Michael Jackson laughed, the world laughed.
Michael Jackson died, the world cried, but sang, danced, laughed because we know that's what he would've wanted.
Michael Jackson was Michael Jackson, and always will be.
They Don't Care About Us !
என்னை சிரிக்கவைத்து கொண்டிருக்கும் உனக்காக இந்த பாடல்.... என்ன அசத்தல் நடனம் ! என்ன உற்சாக துள்ளல் ! ஸ்டைல் !ஸ்மைல் ! விழுந்ததே தெரியாமல் எழும் நளினம் ! நீ தான் நீயே தான் நீ ஒருவன் தான் ! ஒருவரும் உனக்கில்லை ஈடு !
எத்தனை நடன கலைஞர்கள், எத்தனை இசை கலைஞர்கள் உன்னால் உருவானார்கள்...இன்னும் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.....உன் சாயல் இல்லாத இசையும், நடனமும் இல்லை என்றாகிவிட்டது ஜாக் !
எத்தனை பேரின் வாழ்வை உயர்த்தி இருக்கிறாய்.....! இன்னும் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் உன்னை வைத்து, உன் இசையை வைத்து !! அவர்களின் மனம் நிச்சயம் உன்னை வாழ்த்தும் !
இந்த ஜூன் மாதம் எனக்கு மறக்ககூடாத ஒன்றாகிவிட்டது...வருடம் தோறும் இந்நாளில் உனக்கு நான் எழுதும் கடிதம் தொடரும் என் உயிர் உள்ளவரை !
என் வாழ்வின் இறுதிவரை உன் இசை என்னைவிட்டு அகலாது.....! உன் ரசிகர்களை பொறுத்தவரை நீ இன்னும் எங்கள் மத்தியில் உலவி கொண்டிருக்கிறாய் இசையாய் !
எத்தனை பேரின் வாழ்வை உயர்த்தி இருக்கிறாய்.....! இன்னும் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் உன்னை வைத்து, உன் இசையை வைத்து !! அவர்களின் மனம் நிச்சயம் உன்னை வாழ்த்தும் !
இந்த ஜூன் மாதம் எனக்கு மறக்ககூடாத ஒன்றாகிவிட்டது...வருடம் தோறும் இந்நாளில் உனக்கு நான் எழுதும் கடிதம் தொடரும் என் உயிர் உள்ளவரை !
என் வாழ்வின் இறுதிவரை உன் இசை என்னைவிட்டு அகலாது.....! உன் ரசிகர்களை பொறுத்தவரை நீ இன்னும் எங்கள் மத்தியில் உலவி கொண்டிருக்கிறாய் இசையாய் !
உன் ரசிகை.














