வியாழன், மார்ச் 18

கவிதைகள் பாகம் 3

       "  காதலனை மறக்க முடியும்!,
                 அவன் விட்டு சென்ற காதலை ?! "

       " உனக்கும் எனக்குமான தனி உலகில்
                வேறு யாருக்கும் இடம் இல்லை! "

       "  உன் உள்ளங்கையில்
                  நான் இருக்கிறேன் ரேகையாக "

        "  உன்னுடைய  ஞாபகங்கள்
                       மனதில் இருக்கிறது  ரணமாக  "

        "  மொத்தத்தில்  என் காதல்
                        மரண படுக்கையில் "           

கவிதைகள் பாகம் 2

     "  மழை பெய்யும் போது 
        அதில் நனைந்து பார்
         என் கண்ணீர்
         துளிகள்  அதில்
         கலந்திருக்கும்  .  "


"         உன்னை பிரிந்திருக்கும்
          சோகம் எனக்கு
           இப்போது இல்லை, 
            தயவுசெய்து கனவில்
            வருவதை
            நிறுத்திவிடாதே! "


            இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
                          எனக்கு வேண்டும்,  என் உயிரை
             எடுத்துகொள், உன் கண்ணில்  நான்
                           இருக்கும்போது இந்த உடல் எதற்கு?  

 
           "  நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
              என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
              கேட்ப்பாய் என்று தெரியாது,  ஏதோ
              கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
              சொன்னால்,  இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய் "

காதல் மனதில்...

  
காதல் மனதில் இருந்தால் வேறுவழியே இல்லை கவிதை எழுதிதான் ஆகவேண்டும்.  காதலுக்கு பலரும் பலவிதமா விளக்கம் சொல்லிட்டாங்க.  
நானும் ஏதாவது சொல்லணும்,  காதல்னா இளமைனு சொல்வேன், எப்படினா  இரண்டு குழந்தை பெற்றபின்னரும் இன்னும் காலேஜ் போற பொண்ணு மாதிரியே feel  பண்ணிட்டு இருக்கிறேன்னா அதுக்கு காரணம்
காதல் காதல் தாங்க.  


என் மனதில் காதல் நிறைந்து இருப்பதால் தான் கவிதையும் காதலை பற்றியே வருகிறது.   கவிதைன்னு நினைச்சிதான் எழுதுகிறேன், உங்களுக்கு அப்படி தெரியலைனா மறுபடி மறுபடி படிங்க ஒருவழியா 
கவிதை மாதிரி தோன்றிவிடும்.    ஸோ மனதில் எழுவதை  எழுதுகிறேன்,  தொடர்ந்து படிங்க கருத்துக்களை சொல்லுங்க.


திட்டனும்னா தனியா மெயில சொல்லிடுங்க...பொதுவுல வேண்டாம் சரியா ?!   

புதன், மார்ச் 17

காதல் கவிதைகள்



       " எத்தனை சோதனைகள்
         என் காதல் மீது 
         மனதை கேட்டுபார் 
         உன் உயிர் சொல்லும் 
         நான் உன் மீது கொண்ட 
         காதலை, நம்பிக்கையை "

     "  மௌனமாய் இருக்க 
         மனதும் இடம் 
         கொடுக்கவில்லை, 
         விடை பெற பாதையும்
         தெரியவில்லை. 
         என்னை சித்திரவதை 
         செய்வதை விட, உன்
         கையால் கொன்றுவிடு  "

      "   நேரில் நீ வரும்போது பேச
          பல நினைத்து ஒத்திகை பார்த்து 
          காத்திருப்பேன்,  கடைசியில் ஒரு
          வார்த்தையும் பேசாமல் அந்த நாள் 
          முடிந்து போகும்!,  
          கேள்விகள் கேட்க மறந்து 
          பேசாமல் உன்னை அணைத்து கொண்டு 
          மெய் மறந்து மடியில் கிடப்பேன்!!  "

       "  என் மனதில்  இன்னும் மாறாமல் இருக்கிறது,   
                   நாம் சேர்ந்து வாழ்ந்த இனிய நாட்கள் !
          கொஞ்சி பேசி மகிழ்ந்த நேரங்கள்!
                   செல்லமாய் சண்டை போட்ட நிமிடங்கள்!
          கோபத்தில் கொட்டி தீர்த்த வார்த்தைகள்! 
                   மறுபடி சமாதானத்தில் ஒன்று கலந்த உணர்வுகள்!
          பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட தருணங்கள்! 
                    கண்களால் மட்டுமே பார்த்து கழிந்த பொழுதுகள்! 
          பிரிவின்போது தவித்த துடித்த நெஞ்சம்! 
                    எதுவுமே மாறவில்லை மறைவில்லை, 
          ஆனால் நீ மாறிவிட்டாய், மறைந்து விட்டாய்??. 

                                                                                                         இன்னும்   தொடரும்......  

மனம் கவர்ந்த சில கவிதைகள்

' இடைவிடாது
      எனக்குள்
 ஒலிக்கிறது
      உன் குரல் '

நட்சத்திரங்களை எண்ணலாம்,
        நான் உன்னை
தொடரும் ஜென்மங்களை
        எண்ணமுடியாது !! '

     '  உன்னை
        தொடர  
        வேண்டும் 
        என் நிழல் 
        என்றும் 
        எங்கும் 
        எப்போதும்  '

   '  நீ என்னை நினைக்கிறாயோ
      இல்லையோ, நான் நினைக்கிறேன்
      எனக்கு விக்கல் வரும்போது எல்லாம்
      நீதான் என்னை நினைக்கிறாய்  என்று  '            


                                                         ( யாரோ எழுதியது,  அவங்களுக்கு நன்றி ) 

செவ்வாய், மார்ச் 16

கள்ளகாதல் தவறில்லை

தலைப்பை படித்ததும் என்ன ஒரு குடும்பப்பெண் இதை தவறில்லை என்று சொல்றாளே என்ற  சந்தேகம் எழுகிறதா? உங்கள் சந்தேகம் நியாயம் தான். ஆனால் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது என்னவென்றால், கள்ளகாதல் என்ற வார்த்தைதான் தவறு என்கின்றேன்.

ஆமாம் அது என்ன காதலில் நல்ல காதல், கள்ள காதல்!?. கல்யாணத்திற்கு முன் வரும் காதல் நல்ல காதல் என்றால் அதற்கு ஏன் அத்தனை எதிர்ப்பு, கொலைவெறி. நல்ல காதல்தானே என்று சேர்த்து வைக்கவேண்டியது தானே. நம் சமூகத்தை பொறுத்தவரை காதலே தவறு என்பதுதான் எழுதப்படாத சட்டம் அப்படியிருக்க கல்யாணத்திற்கு பின் வரும் காதலை மட்டும் கள்ளகாதல் என்று ஏன் கொச்சை படுத்தவேண்டும், பத்திரிக்கைகளும், media க்களும் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்பது தான் என் ஆதங்கம்.

முன்பு எவை எல்லாம் தவறு என்று சொல்லப்பட்டதோ அவை எல்லாம் இப்போது பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம் என்று சப்பைகட்டு கட்டப்பட்டு வரும்போது இது மட்டும் ஏன் இன்றுவரை தவறு என்றே சொல்லப்பட்டு வருகிறது.சொல்லப்போனால் 
சம்பந்தப்பட்டவர்களுக்கு இது சந்தோசம் என்கிறபோது மற்றவர்களுக்கு 
மட்டும் ஏன் வருத்தம்?  ஏன் நமக்கு இந்த மாதிரி 
சினேஹம் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமா? அடுத்தவர்களின் அந்தரங்கத்தில்  நுழைவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது.  

இந்த உறவு உடலை மட்டும் சார்ந்து  வருவது இல்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.  குடும்ப வாழ்வில் இழந்த ஏதோ ஒன்றை பெறுவதற்காக தேடப்போய் இறுதியில் தவறான உறவில் வந்து நின்று விடுகிறது.  இந்த உறவும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு relaxation .  அவர்கள் பார்வையில் இது தவறில்லை.  ஏன் இந்த தலைப்பு வைத்தேன் என்பது தொடர்ந்து படிக்கும் போது புரியும் என்று நினைக்கிறேன்.சமூகத்தின் மேல் எனக்கும் அக்கறை உண்டு என்பதால் இதைப்  பற்றி அதிகமாக  எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த  வசதியான குடும்பங்களில் நடக்கும் இத்தகைய
விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதின் மூலம் சில
மூடிய மன கதவுகளை திறக்கமுடியும் என்று நம்புகிறேன்.

மீண்டும் நான் அடுத்த பதிவில் எழுதுகிறேன். 



திங்கள், மார்ச் 15

மொட்டைமாடியில் தோட்டம்

பொதுவாகவே இதில் நல்ல விஷயம் நிறைய உள்ளது. மாடியில் தோட்டம் போடுவதால் வெயில் காலத்திலும் வீடு சில்லுனு இருப்பதை உணரலாம். சுத்தமான காற்று, பசுமை, குளுமை இவை எல்லாம் இலவசமாக கிடைக்கும். இதற்காக பார்க்,பீச் தேடிப்  போகவேண்டாம்.

வீட்டுத்தோட்டம் - உணவே மருந்து - நலம் நம் தோட்டத்தில்
                                                   என் வீட்டுத்  தோட்டத்து தக்காளி :-) 

செடி,கொடிகளின் மீது ஆர்வம் கொஞ்சம் இருந்தால் மட்டும் போதும். என்னங்க மாடியில் தோட்டம் போட நீங்க ரெடியா?

தேவையானவை என்று பார்த்தால் பிளாஸ்டிக் சாக், மண் கலவை (ஏற்கனவே தொட்டியில் ரோஜாசெடி தலைப்பில் மண்கலவை பற்றி விரிவாக கூறியுள்ளேன்), பந்தல் போட சணல் கயறு,சிறிய குச்சிகள், காய்கறி விதைகள். விதைகளை நைட் முழுவதும் சாணி கரைத்த தண்ணிரில் ஊறவைத்தால் நல்லது.

மண் நிரப்பிய சாக்கை மாடியில் இடைவெளி விட்டு வைத்து அதில் விதைகளை ஊன்ற வேண்டும். நீர் குறைந்த அளவு
ஊற்றினால் போதும். விதை வளரும்முன் கொடி வகைகளுக்கு பந்தல் போடவேண்டும். மாடி கைப்பிடி சுவர் ஓரமாக இரண்டு பெரிய கம்புகளை பத்து அடி இடைவெளியில் வைக்க வேண்டும். கயிறையும் பத்தரை அடியாக வெட்டி வைக்கவும். பின் ஒரு கம்பில் கயிறின் ஒரு முனையை கட்டி விட்டு அடுத்த முனையை இன்னொரு கம்பில் கட்டவேண்டும். இப்படியே கால் அடி இடைவெளிவிட்டு உங்களுக்கு வேண்டிய அளவிற்கு கட்டியபின் இனி குறுக்காக அதே மாதிரி இடைவெளிவிட்டு கட்ட வேண்டும். பந்தல் வேலை முடிந்தது. பிறகு கொடி வளர்ந்ததும் இதன் மேல் விட்டு படரவைக்கவேண்டியது தான்.

உங்கள் வசதிக்கு ஏற்ப கயறுக்கு பதிலாக கம்பியும் கட்டலாம். ஒருமுறை பந்தல் போட்டால் போதும், மேலும் மேலும் புதிதாக கொடிவகைகளை படரவைக்கலாம். சுவர் ஓரமாக உள்ளதை அப்படியே தலைக்குமேல் மாற்றி பந்தலாக போடலாம். இதில் ஒரு வசதி என்னன்னா பந்தலின் அடியில் மற்ற கத்தரி, வெண்டை, தக்காளி, கீரை வகை செடிகளை வைக்கலாம். ஒவ்வொரு சாக்கிலும் செடியின்  அருகில் சிறு குச்சியை நட்டு  வைத்தால் செடி சாயாமல் நிமிர்ந்து வளரும். செடி சாயும்போது கயிறு அல்லது  நூலால் குச்சியுடன் சேர்த்துக்  கட்டிவிடலாம்.


பொன்னாங்கண்ணி கீரையை சிறிய தண்டுகளாக ஒடித்து அப்படியே நட்டாலே போதும் வளர்ந்துவிடும். புதினாவையும் இந்த முறையில் வளர்க்கலாம். கொத்தமல்லிஐ பாதிவரை கட்பண்ணிய பின் வேறுடன் கூடிய பகுதி ஐ நட்டால் அதுவும் வளரும்.

கீரைக்கு வேர் அதிகம் போகாது என்பதால் பிளாஸ்டிக் சாக்கை பிரித்து தரையில் விரித்து செங்கலை சுற்றிவரை வைத்து அதில் மண் பரப்பி கீரையை நடலாம்.

இதே பிளாஸ்டிக் சாக்கில் முருங்கை மரத்தை கூட வளர்க்கமுடியும்
என்பது கூட என் அனுபவம்தான். சென்னையில் வாடகை வீட்டில் குடிஇருந்தபோது குறைந்த இடத்தில் இப்படித்தான் தோட்டம் போட்டோம்.

பூச்சித்  தொல்லை இருந்தால் வேப்ப எண்ணெய் கலந்த நீரை தெளித்தால் போதும், மண்புழு உரத்தை போட்டால் நல்லது. இந்த உரத்தைப்  பற்றிய எனது பதிவைப்  பாருங்கள்.

செடிகளுக்கு நீர் ஊற்றுவது கண்டிப்பாக  பெரிய வேலையாக  இருக்காது. ஏன்னா எல்லோர் வீட்டிலும் மாடியில் தான் water tank இருக்கும் ஓகேயா. வேற சந்தேகம் இருந்தால் மெயில் பண்ணுங்க வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன் பதில் சொல்ல.

மாடியில் இடம் இருந்தால் சின்னதாக  water fountain பண்ணலாம். அதை பற்றி பிறகு சொல்கிறேன். இது எல்லாம் பண்ணியப் பிறகு பாருங்கள்... சொர்க்கம் வேறு எங்கும் இல்லை நம் வீட்டு மொட்டை மாடியில் தான் என்பதை உணருவீர்கள்.