திங்கள், நவம்பர் 26

'வயாகரா' வில் அப்படி என்ன இருக்கிறது ?!! தாம்பத்தியம் பாகம் - 29


தாம்பத்தியம்  தொடரில் பலவித பிரச்சனைகளைப்  பேசிவந்தாலும் அதில் இது கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் மிகத்  தேவையானதும் கூட ! வாசகி ஒருவர் நீண்ட மடல் ஒன்றை எனக்கு எழுதி இருந்தார். அதன் மொத்தம் உள்ளடக்கம் இது...

"எனது கணவரின் வயது 46, மது,புகை  பழக்கம் உள்ளவர். 6 மாதங்களாக தாம்பத்திய ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். என்னுடன் ஒத்துழைப்பதில் சிரமப்படுகிறார்.முக்கியமான நேரத்தில் இயங்க 
முடிவதில்லை" என தொடர்ந்தவர் "இதற்கு வயாகரா உபயோகிக்கலாமா? " அதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?"  என கேட்டிருந்தார்.

அவருக்கு சொன்ன பதில் பிறருக்கும் தேவைப்படலாம் என்பதால் கொஞ்சம் விரிவாக இங்கே பகிர்கிறேன். படித்துக் கருத்துக்களை கூறுங்கள்.

இன்பம்  எங்கே...?


இன்றைய இயந்திர உலகில் தாம்பத்ய இன்பம் என்பது வேறெங்கோ இருப்பதைப்  போலவும் அதை சுலபமாக சீக்கிரமாக அடைய மருந்து மாத்திரைகள் போட்டுக்கொண்டால் போதும் என்பதே சிலரது
முடிவு...!!

ஆனால் உடல்  தயார் நிலையில் இருந்தால்  மட்டும், அங்கே உறவு நடந்துவிடுவதில்லை, (இருவர்) மனமும் ஒத்துழைக்க வேண்டும். 


இப்போதெல்லாம்  ஆண்கள் 30-40 வயதிலேயே ஆர்வம் குன்றிவிடுகிறார்கள். ஆர்வம் என்று கூறுவதை விட இயலாமை என்பதே சரி. இதற்கு மன சார்ந்த உடல் ரீதியிலான காரணங்கள் இருக்கலாம். அவை என்ன என்று கவனித்து சரி செய்ய வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றை நாடுவது சரியல்ல. செயற்கை தூண்டுதல்கள் அந்த நேரம் சுவைக்கலாம் தொடர்ந்து அவை எடுத்துக்கொள்ளப்பட்டால் சாதாரண அணைப்பு கூட, அந்த மருந்து இல்லாமல் நடக்காது  என்றாகிவிட்டால்...?!! யோசியுங்கள்!

உறுப்பு  செயல்படும் விதம்

ஆணுக்கு உடலுறவு பற்றிய எண்ணமோ, செயலோத்  தேவைப்படும் போது மட்டும் விரிந்து நீளக் கூடிய தன்மை கொண்டதாக உறுப்பின் அமைப்பு  இருக்கிறது. விரியவோ சுருங்கவோ கூடிய இத்தன்மையை மூளையில்  உள்ள  'சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டம்' என்ற பகுதி பார்த்துக் கொள்ளும் . இரண்டு விதமான நரம்பு அமைப்புகளில் ஒன்று சரியாக வேலை செய்யாவிட்டாலும் பிரச்சனைதான்.

பெண்ணை நினைத்ததும்  இந்த நரம்பு மண்டலம் உஷாராகி நியுரோடிரான்ஸ் மீட்டர்களை வெளியிடும், அடுத்து நைட்ரிக் ஆக்சைடு, அசிடைல் கோலைன், டோப்பாமைன் போன்றவை சுரக்க ஆரம்பிக்கின்றன. இவை ஆணுருப்புக்குள் செல்லக்கூடிய ரத்தக் குழாய்களைப்  பெரிதாக்குகின்றன. அதிகமான ரத்தம் அங்கேச்  சென்று அங்கிருக்கும் பஞ்சு போன்ற அறைகளை ரத்தத்தால் நிரப்புகின்றன. அறைகள் பெரிதானதும் ரத்தக்குழாய்கள் மூடிவிடுவதால் ரத்தம் தேங்கி உறுப்பு நீண்டு பெரிதாகி கடினமாகிறது.

உடலுறவு  நிகழ்ந்து முடிந்ததும் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குக்  கொண்டு வர மூளையின் இரண்டாவது நரம்பு மண்டலம் உடனே செயல்படத்  தொடங்குகிறது. இறுக்கத்தை குறைத்து விரிந்திருக்கும் தன்மையை தடுத்துவிடும்.

வயாகராவின் வேலை 

வயாகரா என்பது சில்டினாபில் என்கிற ஒரு கெமிக்கல். நைட்ரிக் ஆக்சைடு செய்யக்கூடிய வேலையை இதுவும் செய்யும்.  ரத்தக்குழாய்களை பெரிதாக்கி அதிக ரத்தத்தை செலுத்துவதும் அப்படியே இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையைச்  செயலற்றதாக ஆக்குவதும் இதன் வேலை, அதாவது விறைப்பு தன்மையை! இதனால் உறுப்பு நீண்ட நேரம் விரிந்தே இருக்கும். மீண்டும் பழைய நிலைக்கு மாற்றும் இரண்டாவது நரம்பு மண்டலத்தின் வேலையை கொஞ்ச நேரம் தடுத்து வைக்கிறது வயாகரா.

ஆனால்  இந்த நிலைக்கு வருவதற்கு முன் மனதால் செக்சை நினைக்க வேண்டும். மனம் ஒத்துழைக்காமல் வயாகராவை மட்டும் போட்டு கொண்டால் எந்தவித பிரயோசனமும் இல்லை.

ஆரோக்கியமான மனதும் உடம்பும் அமைய பெற்றவர்களுக்கு எந்த வித செயற்கையான தூண்டுதலும் தேவையில்லை. அதே சமயம் குறைபாடு உள்ளவர்களுக்கு, குறை மனதிலா உடலிலா என்பது தெரியாமல் வயாகரா போட்டுக்  கொண்டால் சரியாகி விடும் என்பது முற்றிலும் தவறு.

இந்த  பெண்ணின் கணவரைப்  பொருத்தவரை அவரது புகை மது பழக்கவழக்கங்கள் அவருக்கு தாம்பத்திய ஆர்வத்தை குறைத்ததோடு மட்டுமல்லாமல் உறுப்பு எழுச்சியையும் முடக்கிப்  போட்டு விட்டது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். மற்றொன்று சர்க்கரை நோய், இது ஆண்மை குறைவை ஏற்படுத்தும். எனவே குடி, புகை சர்க்கரை நோய் இவற்றின் பாதிப்பை குறைப்பதில் அக்கறை எடுக்க வேண்டுமே தவிர வயாகரா போன்றவற்றையும்,  இத்தனை நாளில் குணப்படுத்துகிறோம் என்ற விளம்பரங்கள் பின்னேயும் செல்வதும்  சரியல்ல!

பெண்களுக்கும் வயாகரா?!

இந்த வயாகரா பெண்களுக்காகவும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது...!! ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனி பிளிபான்செரின் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. உறவில் முழு திருப்தியை அளிக்க வல்லது என்றும் இதனை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. நேரடியாக மூளையை சென்றடைந்து  தேவையான கெமிக்கல்களை மூளையில் அதிக அளவில் சுரக்க வைத்து ஆர்வத்தை தூண்டுகிறது.

ஆனால் பெண்கள் இது போன்றவற்றை உபயோகிக்கும் போது வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

ஆண்,பெண் யாராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை, அனுமதி இன்றி எதையும் உட்கொள்வதை தவிர்தல் நலம்.

வயாகரா தீர்வு இல்லை?

தாம்பத்திய உறவு பற்றிய விருப்பம், ஆர்வம்  இல்லாதவர்களுக்கு, 'சர்க்கரை நோய் இருக்கிறதா' என சோதனை செய்வது முக்கியம். இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சைப்  பெற வேண்டும். சர்க்கரை நோயை மருந்து மாத்திரையினால் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் சிம்பதடிக் நெர்வஸ் சிஸ்டத்தை இந்நோய் இயங்கவிடாமல் தடுத்துவிடும் அல்லது பாதிக்கும். இந்நிலையில் எவ்வளவு தான் செக்ஸ் தூண்டுதலை வெளியே இருந்து ஏற்படுத்தினாலும் அவரது உடல் ஒத்துழைக்காது. இத்தகையவர்களுக்கு வயாகரா தீர்வு இல்லை. (ஒருவேளை ஈடுபட்டாலும் முழுமைப்  பெறாது.) ஆணிடம் இருந்து விந்தணுக்கள் வெளியேறுவதை போல் தோன்றினாலும் பெண்ணை அடைவதற்கு பதிலாக அவர்களின் சிறுநீர்பையினுள் சென்று விடும் !

பொதுவாக  சர்க்கரை நோய் உள்ளவர்கள், புகை, குடி பழக்கம் இருப்பவர்களின் ரத்த குழாய்கள்  அதிக அளவு சுருங்கும். அதோடு ஆண் உறுப்புக்கு செல்லும் ரத்த குழாய்களும் சுருங்கும் என்பதால் அங்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிக்கும். இதனால் எழுச்சியின்மை ஏற்படும். ஆர்வம் குறையும்.

மேலும் 

இம்மாத்திரையை உடலுறவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். அந்த நேரத்திற்குள்ளாக ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை எட்டிவிடும். கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுடன் உட்கொள்ளப்பட்டால் ரத்தத்தில் உறிஞ்சப்படுவது தாமதமாகும். முக்கியமாக இதய நோய்க்கு எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளோடு(ISMN /ISDN) வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கே ஆபத்தாகலாம். 

சுலபமான வழி  - சூரிய குளியல் 

பாலியல் ஆர்வத்தைத்  தூண்ட ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன்  உதவுகிறது. இந்த ஹார்மோன்  சுரக்க   வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் எடுத்தாலே போதும் என்று ஆஸ்திரியா ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்போது டெஸ்டோ டெரோன் 69 சதவீதம் அதிகரிக்கிறது. (நம்ம ஊர் சூரிய நமஸ்காரம் !!)
   
இறுதியாக ஒரு முக்கிய தகவல்

உடல் ரீதியினாலான குறைபாடுகள்   எதற்கும் சரியாக சிகிச்சை பெறாமலோ மது, புகை பழக்கத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தாலோ நாளடைவில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயப்பாதிப்பு ஏற்படும்.  100  சர்க்கரை நோயாளிகளில் 50 பேர் ஆண்மைகுறைவுக்கு  ஆளாகிறார்கள். இதில் 40 % பேர் மாரடைப்புக்குள்ளாகிறார்கள். இத்தகைய ஆபத்தை முதலில்  சரிப்படுத்த முயலவேண்டும். அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் ஆகியவை மிக அவசியம். இதெல்லாம் முறையான பழக்கத்திற்கு வந்த பிறகே உடல் தயாராகும். அதனுடன் மனமும்...!!

மனது நினைக்க நினைக்க அந்நினைவுகள் மூளையின் நரம்பு மண்டலத்தை மெல்ல  மீட்ட, அங்கே பிறக்கும் இசை அதிர்வுகள், உடலெங்கும் பரவி வியாபித்து ஆனந்திக்க வைக்கும்...!! அப்புறம் என்ன உற்சாக அலைகள் கரைகளை வந்து முத்தமிட, நிலவின் மடியில், இரவின்  அமைதியில், சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுங்கள்...!

இனியும் வயாகரா போன்றவை பற்றிய சிந்தனை வேண்டுமா!? தவிர்த்திடுங்களேன் !!


பின் குறிப்பு :

தாம்பத்தியம் தொடரைப்  படிக்கும் வாசகர்கள் என்னிடம் கேட்கக்கூடிய சந்தேகங்களை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்.  பல சந்தேகங்களை டாக்டரிடம் தான் கேட்கவேண்டும், என்னிடம் அல்ல.  தவிர அந்தரங்கம் பற்றிய ஆழமான(?) பல கேள்விகள்  என்னை பதில் சொல்ல இயலாத படி செய்கின்றன. உண்மையில், பதில் தெரியாமல் கேட்கிறார்களா அல்லது எனக்கு தெரியுமா என சோதிக்கிறார்களா தெரியவில்லை. :-)

ஒருவர் கேட்டிருந்தார், 'பெண்ணிற்கு உச்சம் ஏற்பட்டதை ஒரு ஆணால்  எவ்வாறு தெரிந்து கொள்ளமுடியும்?' என்று ...அதற்கு நான் சொன்னேன், ஒரு கணவனால் மனைவியின் அத்தகைய நிலையை புரிந்துக்கொள்ளமுடியும் என்று... மறுபடி அவர் பதில் சொல்கிறார், மேடம் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று !! கல்யாணம் ஆகாதவருக்கு இந்த கேள்வி எதற்கு??!!

கணவன்  மனைவியின்  கருத்துவேறுபாடு பிரச்சனைகளால்  பாதிக்கப்படும் குழந்தைகளை மனதில் வைத்தே இந்த தொடரை எழுதி வருகிறேன். அனாவசியமான  கேள்விகள்  கேட்பதைத் தயவுசெய்து தவிருங்கள். மேலும் அத்தகைய விவரங்கள்தான் தேவையென்றால் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன, தேடிக்கொள்ளலாமே...! ஒவ்வொருவரிடம் தனித்தனியாக சொல்ல முடியாததால் பொதுவில் இங்கே கூறுகிறேன். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...

உங்களின் 'மனதோடு மட்டும்'...!!

* * * * * 


படங்கள்- கூகுள் 

வெள்ளி, நவம்பர் 9

அரசின் உதவி இன்றி ஒரு சாதனை - யார் இவர் ?!!

சாதிக்க பிறந்தவர்கள் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும்...! அவர்களின் சாதனை பலருக்கும் தெரிய வேண்டும், தெரியவைக்கப்பட வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்து திறமை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் நேர்மையாக வாழ்ந்து, பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.   தங்களின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதை விரும்பாதவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.

எதற்க்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டும் அரசை விமர்சித்து எதிர்த்தும் பேசிக்கொண்டிருப்பதை விட துணிச்சலுடன் செயலில் இறங்கி சாதித்துக் காட்ட வேண்டும். அப்படியான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார் ஆம்ஸ்ட்ராங் பமே !! கிட்டத்தட்ட 100 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க ஏற்பாடு செய்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் !

யார் இவர் ?


மணிப்பூர் மாநிலம்  டமீலாங் மாவட்டத்தில்  ஜெமி என்னும் பழங்குடி  இனத்தை சேர்ந்த முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் திரு. ஆம்ஸ்ட்ராங் பமே, 2005 ஆம் ஆண்டு டெல்லி செயின்ட்  ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். தற்போது தன் சொந்த மாவட்டமான டமீலாங்கின் துணை கலெக்டராக உள்ளார். 

1993ஆம் ஆண்டு 9 வயதில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது படிப்பில் சிறந்து விளங்கிய இவர், எல்லா பாடங்களிலும் 90 சதவீத மதிப்பெண்களை எடுத்து  இரு முறை டபுள் பிரமோசன் பெற்றார்.

இவரது அறிவியல் ஆசிரியர் இவருக்கு 120 மார்க் வழங்குவார் என்றும் 100 மார்க் பாடத்திற்கும், 20 மார்க் தனது கையெழுத்துக்கும் வழங்கினார் என குறிப்பிடுகிறார்.


டமீங்லாங் மாவட்டம், மணிப்பூர்

இம்மாவட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. மக்களால் அவசரத்துக்கு மருத்துவரை சென்று பார்க்க இயலாது. மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் வெளியூர்களில் இருந்து மருத்துவர்கள் இங்கே வர மறுத்த நிலையில் கிராம மக்கள் சொல்லொண்ணா துன்பம் அனுபவித்து வந்தனர்.  

கடந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால் இங்குள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களின் அவல நிலையை நேரில் பார்த்த இவர், தனது டாக்டர் நண்பர்களின் உதவியை நாடினார், அதில் ஒரு தோழி இந்த ஊருக்கு வந்திருந்து தேவையான மருத்துவ உதவிகளை செய்ய  சம்மதித்தார். அவரது உதவியால் 500 க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர், உயிர் பிழைத்தனர் என்றே சொல்லலாம். 

மக்களின் துன்பத்திற்கு சாலை வசதி இல்லாததே ஒரு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டார்  ஆம்ஸ்ட்ராங்.

அரசின் கவனமின்மை 

1982ம் ஆண்டு, மத்திய அரசு 101 கோடி ரூபாய் பணத்தை இங்கு சாலை போடுவதற்காக  ஒதுக்கி, திட்டத்திற்கும் அனுமதியளித்தது.ஆனால், சாலைகள் போடப்படவில்லை...!!?  போன வருடம் டிசம்பர் மாதத்தில் மணிப்பூர் வந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாலைகள் போடப்படாததை பற்றி விசாரித்தற்கு அங்குள்ள மாநில அதிகாரிகள் உடனே சாலை போட்டு விடுவதாக உறுதி கூறினார்களாம். உறுதி அளித்ததுடன் இந்த முறையும் நின்றுவிட்டது சாலை போடுவதை பற்றிய அரசின் பேச்சுக்கள் !!??


இப்படி பட்ட நிலையில் இனி அரசின் உதவியை எதிர்ப்பார்ப்பதை விட நாமாக முயற்சி செய்வோம் என்று மக்களின் துணையுடன் வேலையில் இறங்கினார்.
குறைந்தது 150 கிராம மக்கள் தங்களுக்குள் முறை வைத்து தினமும் சாலை போடும் வேலையை பார்த்து வருகிறார்கள். புதர் அடர்ந்த பகுதிகளை சுத்தம் செய்வது, சிறு மண் மேடுகளை சமப்படுத்துவது  போன்ற பணிகளை மக்கள் மேற்கொள்ள, கரடுமுரடான பகுதிகளையும் , விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் வேர் பகுதிகளையும் வெட்டி அகற்ற வாடகைக்கு அமர்த்திய  புல்டவுசர், JCB யை பயன்படுத்துகிறார்கள். 

நிதி வசதி 
டெல்லி பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரியும் இவரது  சகோதர் இவருக்கு உறுதுணையாக இருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்தும் , அரசு துறையில் பணியாற்றும் சில நல்ல அதிகாரிகள் ஆகியோரிடமும் நிதி பெற்றிருக்கிறார்கள். மேலும் இவரது குடும்பத்தினர்  அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, இளைய சகோதரன் மற்றும் இவரது சம்பளம் எல்லாமுமாக சேர்த்து மொத்தம் 4 லட்சம்  ரூபாய் பணம் செலவிட்டு இருக்கிறார்கள்.
முகநூலில் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் உதவி கேட்டதின் மூலமாக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,20,000.00 ரூபாய் டொனேசன் கிடைத்திருக்கிறது.

டெல்லி, பூனா, பெங்களூரு, சென்னை, கௌகாத்தி, ஷில்லாங், திமாப்பூர் போன்ற ஊர்களில் டொனேசன் சென்டர்களை அமைத்து நிதி உதவி பெற்றிருக்கிறார்கள்.

இதை தவிர அந்த கிராம மக்களின் ஒத்துழைப்பும உதவியும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கு தகுந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பது, தங்க வசதி செய்து தருவது , இயந்திரங்களுக்கு டீஸல், பெட்ரோல் வழங்குவது என்று சுயநலம் சிறிதும் இன்றி உதவி இருக்கிறார்கள்.

மாதம் ஆயிரம் ரூபாய் பென்சன் வாங்கும் ஒரு முதியவர் தனது ஒரு மாத பென்சன் தொகையை இப்பணிக்காக கொடுத்துவிட்டு, "என் ஆயுளுக்குள் எப்படியாவது ஊருக்குள் மோட்டார் வாகனங்கள் வருவதை பார்த்துவிட வேண்டும் " என்று சாலைவசதி  வரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறாராம்...!!

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இப்பணி இடையில் கடுமையான மழை பொழிவினால் சிறிது தடைபட்டிருக்கிறது. பின் முழு வீச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 70 கி மி தூரப்  பணிகள் முடிவடைந்து விட்டது. இது மணிப்பூர் , அசாம், நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ளது !! 

இத்தகைய சிறந்த செயல் இன்னும் மாவட்டத்தின் வெளியில் இருக்கும் பலரால் கவனிக்கப்படவில்லை. அதை இவர்கள் பெரிது படுத்தவும் இல்லை, அரசாங்கத்தின் நிதி உதவி இன்றி தனி ஒரு மனிதனாக மேற்கொண்ட இம்முயற்சி  பொது மக்கள், நண்பர்கள் உறவினர்கள், போன்றோரின் துணையுடன் வெற்றிகரமாக செயல்பட்டு முடியும் தருவாயை நெருங்கிவிட்டது. வரும் டிசம்பருக்குள்  வேலை நிறைவடைந்து மக்களுக்கு கிறிஸ்மஸ் பரிசா இந்த சாலை வசதி இருக்கும் என்று  சந்தோசமாக நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆம்ஸ்ட்ராங் பமே அவர்கள் !

ஐ ஏ எஸ் ஆனால் தான் இதை எல்லாம் செய்ய முடியும் என்று இல்லை. நமது தகுதி, திறமை, வேலை, வசதிகளுக்கு ஏற்ற மாதிரி குறைந்த பட்சம் நாம் வசிக்கும் தெருவிலாவது ஏதோ ஒரு நல்லதை செய்யலாம்.  ஒவ்வொன்றுக்கும் அரசு செய்யும், அரசின் கடமை என்று சொல்லாமலும், நாமதான் வரி கட்டுறோமே என்று வரி கொடுப்பதே பெரிய உபகாரம்  என்பதை போல் நடந்துகொள்ளும் சராசரிகளாக இல்லாமல் இருப்போம் !!

நாம் வாழும் சமூகம், நாளை நம் குழந்தைகள் வாழபோகும் சமூகம் நன்றாக இருக்க வேண்டாமா ?! வாழ்நாளில் ஒரு மரம்  நடாதவர்கள் கூட நம்மிடையே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று ஒரு மரத்தையாவது நடுங்கள் !

தன் வீட்டை சுத்தப்படுத்தி அடுத்த வீட்டு வாசலில் குப்பையை கொட்டும் தேசிய பழக்கத்தை மட்டுமாவது இன்றே நிறுத்துவோம், நிறுத்த முயற்சியாவது செய்வோம்.

தமிழ்நாட்டிலும் பல கிராமங்கள் சாலை வசதி இன்றி இருக்கின்றன...மாணவர்கள் கல்வி கற்க பல கிலோ மீட்டர் தூரம் கல்லிலும் முள்ளிலும், ஆற்றை கடந்தும் பயணிக்கிறார்கள். இங்கும்  ஆம்ஸ்ட்ராங் போல ஒருவர் தேவைப் படுகிறார்...!!

திரு.ஆம்ஸ்ட்ராங் பமே அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். 

                                    வாழிய எம்  நாடு !! வாழிய எம் மக்கள் !!

                                                            * * * * *
Sources:

http://e-pao.net/epSubPageExtractor.asp?src=education.Jobs_Career.Armstrong_Pame_as_I_see
http://www.northeasttoday.in/our-states/nagaland/northeast-villagers-pool-money-to-build-road-set-christmas-deadline
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-03/india/34892690_1_tamenglong-village-motorable-road

photos: Google

செவ்வாய், நவம்பர் 6

இணையம் - ஒரு 'சின்'ன விவகாரமும், ஆணாதிக்கமும்...!!?

இணையத்தில் விவாதிப்பதற்கு காரச்சாரமாக ஒரு விஷயம் கிடைத்து ஒரு மாதம் ஓடிவிட்டது, இந்த ஒன்று பலவாகி, பலரையும் பலவிதத்தில் யோசிக்க,வசைபாட,விவாதிக்க,எழுதவும் வைத்துக்கொண்டிருக்கிறது... அவர்கள் எல்லோரின் புண்ணியத்தில் எனக்கு பூர்வ ஜென்ம ஞாபகமே வந்துவிடும் போல...!? :) அந்த அளவிற்கு பல தலைமுறை வரலாறுகளை தோண்டி கிளறிக் கொண்டிருக்கிறார்கள். எதைப்  பற்றிய பிரச்சனை என்பதே இந்த நிமிஷம் மறந்து பின்நவீனத்துவம்னா என்னனு யோசிச்சிட்டு இருக்கேன்.:) 

நண்பர் ஒருத்தர் கேட்டார், பெண் சம்பந்தப்பட்ட இதை பற்றி பெண் பதிவர்கள் அவ்வளவா ஏன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்று...ஆதரவாக, எதிராக, நடுநிலை என்று மூன்றில் எதையோ ஒன்றை சார்ந்து பேசணும் இல்லைனா மௌனமா இருக்கணும். இந்த விசயத்தின் ஆரம்பம், முடிவு பற்றி எதுவும் தெரியாமல் என்னனு எழுத??!  (சம்பந்தப்பட்ட அத்தனையும் படிச்சிட்டு பதிவு எழுதணும்னா எனக்கு இரண்டு மாசம் ஆகும்) :) நான் பதிவுலகம் வந்த புதிதில் ஒரு பெண் பதிவரை சுற்றி பாலியல் சார்ந்த கருத்து மோதல்கள், சாதியை சாடுதல் என பிரச்சனைகள் பல கட்டங்களில் நடந்தேறின. இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இது பெண் பதிவரின் குடும்பத்திலும் எதிரொலித்து பிரச்னை பெரிதானது. இணைய உலகில் இது போன்றவையும் நிகழும் என்ற யதார்த்தம் அப்போது புரிந்தது. அதே போல் சமீபத்திய விஷயம் இன்று பலருக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. எனது சொந்த(?) தளம் எதுவும் எழுதுவேன் என்று இனி சொல்ல கூட ரொம்ப யோசிக்கணும் போல !?  

இந்த பிரச்னையை பேசவோ, விவாதிக்கும் அளவிற்க்கோ எனக்கு விவரம் போறாது. அதற்குள் போகவும் விரும்பவில்லை. ஆனா இந்த பிரச்சனையை வைத்து ஒரு சிலர் சொல்லும் கருத்துக்கள் ஆண் பெண் என பிரித்து பார்பதாகவே இருக்கிறது. யாராக இருந்தாலும் சொல்லப்பட்ட கருத்தை விவாதிப்பது என்று இல்லாமல் எழுதியவரை தாக்குவது குறித்த என் வருத்தத்துடன் கூடிய  ஒரு ஆதங்கம் தான் இந்த பதிவு.

பேதம் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஆண் பெண் பேதம் பிரித்தும் பெண் என்றால் பாலியல் ரீதியாக விமர்சிப்பது என்பதும் மிக கேவலம், கண்டிக்கப்படவேண்டும். இச்செயல் படித்தவர்களிடத்தில் மிகுந்திருப்பது கொடுமை !! பணம் சம்பாதிக்க, அறிவை வளர்க்க பயன்படும் கல்வி, ஒழுக்கத்தை போதிக்கிறதா அல்லது அந்த போதனை அலட்சியபடுத்தபடுகிறதா ?!

முகநூலில் ஒரு பிரபல பெண்மணி ஒருவர் நடுநிலையாக பேசுகிறேன் என்று எழுதிய அந்த நோட்ஸில்  முழுக்க முழுக்க ஆண்களின் மீதான தாக்குதல் மட்டுமே அதிகம். அங்க சுத்தி இங்க சுத்தி தவறுகள் அத்தனையையும் தூக்கி ஒருசாராரின் மீது போடுவது எப்படி நடுநிலைமை ஆகும்...??!

ஆண்  பெண்ணை வசைபாட முதலில் தேர்ந்தெடுக்கும் வழி பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் என்கிறதாம் பெண்ணிய உலகம்...??!!

அதனால் இனிமேல்,

சாதி, மதம், மொழி போன்ற பிரச்சனைக்குரிய தலைப்புகளின் வரிசையில் ஆண்களையும் சேர்த்து விடலாம் போல ...!

ஒருவர் இப்படியா பேசினார் ?! எப்படி பேசலாம் ?! என்று பாலினம் ரீதியாக மட்டும் பார்த்து பேசுவது சரியா ?!

இணையம் மூலமாக ஒரு சில வரிகளில் எவ்வளவு பெரிய பிரபலங்களையும் நெருங்கிவிடமுடியும், அதிகம் நெருங்கினால் வம்பில் முடிந்து வாழ்வே கேள்வி குறியாகிவிடும் என்பதை தற்போது காலம்  எச்சரிக்கிறதா ?!

அவ்வளவு பெரிய குற்றமா ?

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் தவறுகள் இருக்கிறது, அதற்கு சிறைத் தண்டனை என்பது மிக அதிகம் என்பதே எனது புரிதல். தெருவில் ஒரு பெண் மானபங்கபடுத்தபடும் போது  வேடிக்கை பார்க்கும் கூட்டமும்,  காவல் நிலையம் வரை பந்தாடப்படும் பெண்மை பற்றி கூட பெரிதாக கவலைபடாதவர்கள் தானே நாம்...

பெண்ணுக்கெதிராக அரங்கேறும் கேவலங்கள் தான் எத்தனை எத்தனை ?! அருவருக்கச்செய்யும் அவலங்கள்,கொடுமைகள் பார்த்து  கலங்காத மக்கள், அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை கூட கள்ளகாதல் என்று நாமகரணம் சூட்டி அதிலும் பெண்ணை மட்டுமே சாடும் விவஸ்தைகெட்ட சமூகம் !! பெண் கெடுக்கப்படுகிறாள் என்றால் அவளது சம்மதமும் அதில் இருக்கிறது என்று வாய்கூசாமல் சொல்பவர்கள் வாழும் சமூகத்தில், எழுத்துக்கள் மன உளைச்சலை கொடுத்ததால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் என்பதும் அதுக்கு சிறைத்தண்டனை என்பதும் வினோதம் !

தண்டனை சரியென்றால் இதுவரை இங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நீதி கிடைத்திருக்கிறதா? இப்போது ஊடகம் எங்கும் ஒரே பேச்சாக பேசப்படும் அளவிற்கு பிற விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா?  காரணங்கள் என்னவேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும், பெண் என்றால் பெண்தான். இன்று அந்த பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து பொங்குகிறவர்கள் பிற பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் உடன் நின்றிருக்க வேண்டுமே...??!

பெண்களுக்கெதிராக  நடக்கும் பல பெரிய மோசமான கொடுமைகளுக்கு மத்தியில் இந்த விவகாரம் எனக்கு சிறியதாகவே தெரிகிறது.

சாதி,  மதம், இனம் என்பதன் முழுமையான புரிதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்படுதல் மட்டுமே இன்று மேலோங்கி நிற்கின்றது. இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற விதிவிலக்கு இல்லை. சாதியை குறித்து ஏதும் கருத்து வந்தால் என்ன ஏது என்று தீர யோசிக்காமல் ஆவேசகருத்துக்களை அள்ளி விடுபவர்கள் அதிகம். கல்வி, அரசியல் , சமூகம் என்று அனைத்து இடத்திலும் சாதி பெருமைகள் கொண்டாடபடுகிறது. அதன் அடிப்படையில் வளரும் மாணவர்களின் நிலை சுயநலத்துடன் கூடிய ஒன்றாக மட்டும் இருக்கிறது. தனது கல்வி, தனது வாழ்க்கை , தன் சந்தோசம் என்ற குறுகிய வட்டத்தில் சுற்றிவர சாதி உதவலாம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல...?!

சக  மனிதனை மதித்து அன்பும் அக்கறையும் செலுத்தும் மனப்பான்மை தற்போது குறைந்து சுயநலம் மிகுந்திருப்பதால் யார் என்ன சொன்னாலும் அதை குறையாக மட்டுமே பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நல்லவை குறைந்து தீயவை நிறைந்துவிட்டது. 

எது கருத்து சுதந்திரம் ?

சக மனிதனை பாதிக்காத எந்த கருத்தையும் தெரிவிக்கலாம், அதுதான் கருத்து சுதந்திரம் அப்படின்னு நினைக்காதிங்க. தனக்கு என்ன சொல்ல வருதோ அதை சொல்லலாம் அதுதான் கருத்து சுதந்திரம்...!!!!? ஒரு விஷயத்தை பலவிதமாக திரித்து கூறுவது, ஆபாசமாக கருத்திடுவதை நியாயபடுத்துவது, எழுதிய கருத்தை அழிப்பது, வக்கிரமாக வன்மமாக பேசுவது, வேறு பல பெயரில் ஒளிந்து கொண்டு கருத்திடுவது, சாதி, மதம் என்ற போர்வையை போர்த்தி கொண்டு பேசுவது இது எல்லாமே கருத்து சுதந்திரத்தில் சேரும் என்கிறார்கள். மொத்தத்தில் எதன் அர்த்தமும் புரியாத ஒரு குழப்பத்தில் நான் !!

ஒருவருக்கு சாதாரண வார்த்தையாக இருப்பது பிறருக்கு மிக ஆபாசமான வார்த்தையாக தெரியும். அது போன்றவைகளை கேட்டு பழகாத சூழலில் வளர்ந்திருக்கலாம். ஊருக்கு ஒரு தமிழ்,  சென்னையில் வா போ என்றால் சாதாரணம், ஆனால் இங்கே,  என்ன'ப்பா' என்றால் 'நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா?' என்கிறார்கள். வார்த்தைகளை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அழுத்தமாக சொல்கிறது தற்போதைய பிரச்சனை !

எதிரான கருத்து ஒன்று எங்கோ வெளியிடப்படும் போதும், அது ஒருவேளை தன்னை குறித்துத்தானோ என்ற சந்தேகமே பல பிரச்சனைகளுக்கு ஆரம்பம் என்பது  பதிவுலகில் சகஜம்.  நம்மை குறித்த தவறான கருத்துக்களுக்கு பதில் சொல்லிகொண்டிருப்பது பிரச்சனையை அதிகரிக்குமே தவிர குறைக்காது .

முகநூல், பிளாக், டுவிட்டர் எதாக இருந்தாலும் நாம் முன் வைக்கும் கருத்துக்களை வைத்துதான் நாம் அறியபடுகிறோம். நம்ம சொந்த தளம் நான் எதுவும் சொல்வேன் என்ற ரீதியில் கருத்துக்கள் இருந்தால் பிறரும் அதே ரீதியில் தான் நடந்துகொள்வார்கள். பிறரது கருத்துக்கள் பிடித்தால் ஏற்றுக்கொள்வதும், பிடிக்கவில்லை என்றால் நிராகரிப்பதும் நமது உரிமை என்பதை நினைவில் வைத்துகொள்வது நம் மனதிற்கும் உடலுக்கும் நல்லது !

பெண்களே

ஆண்களை குறை சொல்றப்போ தவறாம பெண்கள் நாம சொல்றது 'உங்க அக்கா, தங்கை, அம்மா பத்தி கூட இப்படித்தான் பேசுவீங்களா?' என்று... ஆண்களை ஒட்டுமொத்தமாக மோசமானவங்க,ஆணாதிக்கவாதிகள், பாலியல் துன்புறுத்தல் பண்றவங்க என்று சொல்லும் போது நம்ம வீட்லயும் அப்பா,சகோதரன்,கணவர், மகன் என்று இருப்பார்களே அப்போ அவர்களையும் சேர்த்து தான் சொல்றோமா ?!

இதுவரை ஆண்கள் யாரும் பெண்களை பார்த்து இப்படி கேட்டார்களா என தெரியவில்லை !!?

இதுவும் ஆணாதிக்கம் ??!

தற்போது நடந்த பிரச்சனையிலும் இது முழுக்க ஆணாதிக்கம் அடிப்படையிலானது என்று கூறப்படுவது தவறு. பெண்ணை பற்றி ஆண் பேசினாலே அது ஆணாதிக்கம் என்று முத்திரை குத்தபடுவதை எண்ணி வருந்துகிறேன். இந்த பெண்ணியம் பேசுபவர்கள் எந்த ஒரு விசயத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும் என்பதையே பார்க்க மாட்டார்களா ?! ஆணாதிக்கம் என்ற கண் கொண்டு மட்டுமே பார்ப்பதால் உண்மையில் அந்த ஆண் எதை குறித்து சொல்ல வருகிறான் என்பதன் உட்கருத்து, பொருள் புரிந்து கொள்ளபடாமலேயே போய் விடுகிறது...!!? சமயங்களில் சிறந்த பொருள் பொதிந்த வாதங்களும் திசை மாறி போய்விடுகின்றன...!! 

ஒரு பெண்ணை அதிகபட்சமாக இழிவு படுத்த எவரும் கையில் எடுக்கும் ஆயுதம் பாலியல் ரீதியிலான கருத்திடல் . இதை ஆண்கள் மட்டும் செய்வது இல்லை, பெண்ணே மற்றொரு பெண்ணை அப்படி பார்க்கலாம், பேசலாம். இதை யாரும் ஆணாதிக்கம் மாதிரியான கருத்து என்று வசைபாடுவதில்லை, அதே சமயம் ஒரு ஆண் கூறும் போது மட்டும் ஏன் ஆணாதிக்கம் என்று பெரிதாக கூச்சலிட வேண்டும்...?

ஒரு ஆணை எதை சொல்லி, எந்த இடத்தில் தட்டினால் அவனுக்கு வலிக்கும் என்று ஒரு பெண்ணுக்கு நன்றாகவே தெரியும். இரக்கத்தை சம்பாதிக்க தன் விருப்பத்தை பூர்த்தி செய்ய எந்தவிதமாக பேசவும் சிலரால் முடியும். பெண் என்பதால் சலுகை கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்பில் அதிகம் அடிபடுவது ஆண்கள் தான்.  ஆண் ஒரு பெண்ணை பழிவாங்க வார்த்தைகளை பிரயோகிப்பது முதலில் அவளது உடலை நோக்கி என்றால் ஒரு சில பெண்கள் கையில் எடுப்பதும் அதே உடலை(வைத்துத்தான்) நோக்கிதான்  என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை !!?   

சுயபரிசோதனை

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள்  ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் கருத்துகளை அள்ளித் தெளிக்கிறார்கள். எப்போதோ தாங்கள் பட்ட காயத்திற்கு இப்போது மருந்திடுகிறார்கள் போலும். ஆனால் இணையத்தில் இயங்கும் அனைவரையும் நன்றாக சுய பரிசோதனை செய்ய வைத்திருக்கிறது டுவிட்டர் விவகாரம் ! பேசத் தெரியும் என்பதற்காக எதையும் பேசலாம் என்று கண்டபடி உளறிக்கொட்டிக் கொண்டிருந்தவை இனிகுறையலாம்.
ஆண் பெண் இருவரும் தங்களின் எல்லை, நிலை, தகுதி அறிந்து நடந்து கொள்வது அவசியம். அது வீடாக இருந்தாலும் சரி பொதுவெளியாக இருந்தாலும் சரி! பகுத்தறியும் சுயசிந்தனை அற்று வார்த்தைகளை வீசுவது பூமாராங் போல திரும்பி வந்து தாக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்வது நலம்.

பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட தங்கள் நிலை உணர்ந்து மனிதநேயம் என்ற ஒன்றை மட்டுமே எண்ணி விட்டுகொடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது ஒன்றே இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை வாழ்வதற்காக மட்டுமே, பிறரை தூற்றவோ, பழிவாங்கவோ  இல்லை. பிறரையும் நோகடித்து தானும்  மன அழுத்தத்தில் விழும் இது போன்றவை இனியும் நிகழாமல் இருக்கவேண்டும். 

சிலரின் சுயநலம், பலரின் தூண்டுதல் என மாறி மாறி சொல்லப்படும் கருத்துக்களால் பிரச்சனை இன்னும் பெரிதாகாமல் விரைவில் நல்லதொரு முடிவுக்கு வரவேண்டுமென  இறைவனை வேண்டுகிறேன்.


பிரியங்களுடன்
கௌசல்யா




படம்  -நன்றி கூகுள்

திங்கள், அக்டோபர் 8

பிரபஞ்ச காதலன் !



பதிவர்களைப்  பற்றி விமர்சனம் எழுதவேண்டும் என முடிவு செய்து முதல் பதிவராக உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்களைப்  பற்றி எழுதினேன். அதன் பின் தொடர்ந்து எழுதணும் , ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை. இரண்டாவதாக எழுதவேண்டும் என குறித்து வைத்திருந்த ஒருவரின் பதிவுகளில் இருந்து 'இந்த பதிவை பற்றி சொல்லலாம்' என சிலவற்றைக்  குறித்து எழுதி வைப்பேன், மறுநாளே அவர் வேறு ஒரு போஸ்ட் எழுதி விடுவார், அது இதை விட சிறப்பா இருக்கும்...ஏற்கனவே எழுதியதை டெலீட் பண்ணிட்டு புது போஸ்டை பற்றி எழுதி வைப்பேன், இப்படியே கடந்த பல மாதங்களாக மாத்தி மாத்தி எழுதி எழுதி ஒரு வழியாகி(?!) விட்டேன்...!!

இப்படியே நாட்கள் போய் கொண்டு இருந்ததே தவிர விமர்சனப்  பதிவு வெளியிடவே இல்லை, (இவரை பற்றி எழுதி விட்டு தான் மற்றவர்களை பற்றி எழுதணும்னு  முடிவு வேற பண்ணி வச்சிட்டேன்) பதிவரைப் பற்றிய விமர்சனம் தானே பதிவுகள் எதுக்கு, பதிவுகளை விட்டுடுவோம்னு இப்பதான் ஒரு புதுசா  ஞானோதயம் வந்து இதோ எழுதிட்டேன்...இனி படிக்கிற உங்க பாடு...!! என்னிடம் மாட்டிக்கொண்ட அந்த பதிவர் பாடு ?!

யார் அந்த பதிவர் ?

தமிழ்ல சுமாரா எழுதுற எனக்கு இவரது எழுத்துக்கள் ஒரு பெரிய தாக்கத்தை கொடுத்தது. பொதுவாக  அனைத்து புத்தகங்களும் விரும்பிப்  படிப்பேன் ஆனால் குறிப்பிட்ட எந்த எழுத்தாளரின்  எழுத்திற்கும் தீவிர வாசகி இல்லை. பதிவுலகம் வந்த புதிதில் பல தளங்கள் சுற்றி வந்த போது தற்செயலாக இவரது கவிதை ஒன்றைப்  படித்தேன்...என்னமோ ரொம்ப பிடிச்சது...அதிலிருந்து ஆன்லைன் வரும்போதெல்லாம் இவர் தளம் செல்வது வழக்கமாகிவிட்டது...நேரம் கிடைத்தால் படிக்க வரும் நான், பின்பு இவரது எழுத்தைப்  படிப்பதற்காக நேரத்தை ஒதுக்க தொடங்கினேன்...!

ஒரு தடவை படிக்க ஆரம்பிச்சா மறுபடி அங்க இருந்து வெளில வர்றது ரொம்ப சிரமம்னு லேட்டா புரிஞ்சது  :)

ஒவ்வொருவருக்கும் சுஜாதா,ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்,பாலகுமாரன்  மாதிரி எனக்கு இவர் !!

இவர்தான் அவர்...

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அருகிலிருக்கும் குருக்கத்தி இவரது சொந்த ஊர் என்றாலும் இவர் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், இவர் தற்போது வசிப்பது துபாயில்...வாரியர் என்ற பெயரில் எழுதிவரும் திரு.தேவா  இன்று வரை 475 பதிவுகள் எழுதியுள்ளார். தமிழின் மேல் தீராக்  காதல் கொண்ட இவரது எழுத்துக்கள்  ஒவ்வொன்றும்  செந்தமிழால் செதுக்கி சீர்திருத்த சிந்தனையால் வடித்த அற்புத படைப்புகள்...


பாலகுமாரனின் எழுத்துகள் பால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகராக இருப்பவர். இவரது எழுத்துக்களில் பாலகுமாரனின் தன்மை இருப்பது இயல்பு என்று  வெளிப்படையாக ஒத்துக்கொள்வார். தனது பதிவுகளுக்கு தேர்ந்தெடுக்கும் படங்கள் இவரது படைப்பை பிரதிபலிப்பதாக, ஆயிரம் அர்த்தங்கள் உள்ளடக்கியதாக இருப்பது ஆச்சர்யம்...!

வானத்தின் தூரங்களை
என் எண்ணங்களால் அளந்துவிடுவேன்
கற்பனையில் வரும் வார்த்தைகளுக்கு
அலங்காரம் செய்து கவிதைகள் என்பேன்
தனிமையில் இருந்து கொண்டே
உற்சாக ஊர்வலங்கள் செல்வேன்
கனவுகளில் எனக்கான காதலியின்
கைப் பிடித்து போகாத தூரங்கள் போய் வருவேன்

இறை என்ற விசயத்தை....என்னுள்ளே
தேக்கி வைத்து நான் ஏகாந்த புருஷனென்பேன்
புல்லோடு சர்ச்சைகள் செய்வேன்
புயலோடு காதல் செய்வேன்
கடலோடு காவியம் பேசுவேன்
மெல்ல நடக்கையில் 

சிறகு விரித்து பறந்தே போய்விடுவேன்...!

இப்படி தன்னைத் தானே கவிதையில் விமர்சிக்கிறார். உண்மையும் அதுதான் என்பதைப்  போல அவரது எழுத்துக்கள் இருக்கும். எழுதுவதை சுவாசமாக எண்ணுபவர். 

காதல் 

மரம், செடி, பூ, மழை, காற்று, நதி, நிலா, மொட்டை மாடி என்று எதன் மீதும் காதல் கொள்வார். காதலிப்பதுடன் நில்லாமல் கவிதைகளாக எழுதி தள்ளுவார்...படிக்கும் பலருக்கும் இவர் காதலை பெற்ற பெண் யாராக இருக்கும் என்ற ஆவல் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படி உருகி உருகி இவர் எழுத்தில் கொண்டு வந்திருப்பது ஒரு மலை, சிறு பூ, ஒரு வண்ணத்துபூச்சி, நதி இவை மீதான காதலாக கூட  இருக்கலாம். இயற்கையை இவர் அளவுக்கு நேசிக்க வேண்டுமென்றால் நாம் இவரது கண்ணால் காண வேண்டும், உணரவேண்டும்...!!  பிரபஞ்சக்  காதலன் இவர் !!

//உடலோடு சம்பந்தப்படாமல் நாம் நேசிக்கும் எல்லாமே காதல்தான்...உடல் வரும்போதுதான் அங்கே சுயநலங்கள் உயிர்த்துக் கொண்டு உண்மையை அழித்து விடுகின்றன.....//

காதல் மொழி பேசிக்கொண்டே மறுபக்கம்  'ஏனடா வீளுகிறாய் எழு' என்ற புரட்சி கொந்தளிக்கும் வரிகளை வீசி திணறடிப்பார்...!

ஈழம் 

தனி ஈழம் கிடைத்தே தீரும் என அழுத்தமாக பதிவு செய்வார். ஈழ மக்களுக்காக இவர் எழுதிய பதிவுகள், கவிதைகளைப்  படிக்கும் போது இமைகள் நனைவதை தவிர்க்க முடியாது. அந்த எழுச்சியை நம் மீதும் ஏற்றிவிடுவார். தமிழனாய் பிறந்ததை பெருமையாக எண்ணுகிறேன் என ஒவ்வொரு முறையும் சொல்லி ஆனந்தப்   பட்டுக்கொள்ளும் இவரது தமிழ் காதல் படிக்கும் நம்மையும் பெருமைக்  கொள்ளச் செய்யும்...

ஆன்மிகம்

சிவனின் ருத்ரதாண்டவம் இவரது எழுத்தில் !! ஆன்மீகத்தை பற்றிய இவர் எழுத்துக்களை வாசிக்கும் போது தேர்ந்த முதிர்ச்சி தெரியும்...சாமியாராக போய்விடுவாரோ என்று கூட தோன்றவைக்கும். ஆனால் இவரது தேடல்கள் தொலைந்துப்  போன ஒன்றை தேடுவதாக இல்லை...பிரபஞ்சத் தேடல் ! கடவுளைப் பற்றியதான   தேடல்,  இப்போது மனிதர்களின் தேடலாக மாறி இருக்கிறது ! இரண்டும் வேறல்ல என்பதைப்  போன்ற எழுத்தை நான் இதுக்கு மேல சொல்லக் கூடாது, அவை படித்து உணரக்கூடியவை !

ஆன்மிகம் தொடர்பான பதிவுகள் சாதாரணமாக எழுதியதை போல் அல்லாமல் ஆழ்ந்த தியானத்தில்  அமர்ந்தபின் எழுதியதை போல் இருக்கும், ஆழ்ந்து வாசித்தால் நாமும் தியான நிலைக்குள் ஆட்படுவது சத்தியம் ! இதை  அநேக தடவைகள் நான் உணர்ந்திருக்கிறேன்.

காமம் பற்றி குறிப்பிடும் வரிகளில் ஒரு நளினமும் நாகரீகமும் இருக்கும்...ஆன்மீகத்தையும்  காமத்தையும் இணைத்து இதோ ஒரு சில வரிகள்,

//பிரபஞ்ச சூட்சுமத்தின் இத்தியாதிகளை தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் காமமென்னும் கடலை நாம் கடந்த இடம்.

மோகத்தில் மேகங்கள் உரசி பெருமழை பெய்விப்பது போல தாகத்தில் நாம் உரசி...சாந்தியடைந்து தட்சிணாமூர்த்தி தத்துவத்தை கற்று தேர்ந்து கலவி செய்த இடம். இருந்ததனை இருந்ததுபோல இருந்து காட்டி வாய் பேசாமல் பிரபஞ்ச ரகசியத்தின் நிழல்தனை தொட்ட இடம்...!

நானற்று, நீயுமற்று வெறுமனே இருந்து மூல இருப்பினை உணரவைத்த காமத்தின் உச்சத்தில் கடவுளைக் கண்டோம் என்று மானசீகமாய் எழுதி கையெழுத்திட்ட ஒரு மடம்
.//

//விழிகளால் தீட்சைக் கொடுத்து காதலை எனக்குள் ஊற்றி, உள்ளுக்குள் அழுத்தமாய் இருந்த எல்லா ஆளுமைகளையும் அவள் உடைத்துப் போட சரணாகதியில் இறைவனின் பாதம் தேடும் பக்தனாய் நான் எனக்குள் கதறத் தொடங்கி இருந்தேன். காமம் உடல் வழியே உச்சம் தேடி அந்த உச்சத்தின் வழியே கடவுள் என்னும் சூட்சுமத்தை உணரும் ஒரு வழிமுறை... , //

இவரது எல்லா பதிவுகளையும் படித்தாலும், சிலவற்றுக்கு கமென்ட் எப்படி, என்ன  போடனு யோசிச்சிக்கிட்டே வெளில வந்துடுவேன். ஏதோ நாம ஒன்னை எழுத அது அந்த படைப்பையே திசைத்  திருப்பிக்  கெடுத்துவிடுமோனு  ஒரு பயம் தான் !! :)  என்னை மாதிரிதான் நிறைய பேர் இருக்காங்கனு நினைக்கிறேன் . :)
 

அவரது படைப்புகளில் சில அறிமுகங்கள்...

ரஜினியின் தீவிர ரசிகர். அவர் நடித்த படங்களை விட ரஜினி என்ற மனிதரின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். பல பதிவுகள் இவரைப்  பற்றி எழுதி இருக்கிறார். அதில் ஒன்று  ரஜினி என்னும் வசீகரம் 

தனது 200 வது பதிவில் தந்தையைப்  பற்றி எழுதி இருப்பார், படித்தவர்கள் கண்கலங்காமல் வெளிவர இயலாது. உணர்வுப்  பூர்வமான உணர்ச்சி கலவை அப்பா 

காதலை ரசித்துக்  கொண்டாடுபவர்களுக்காக  சுவாசமே காதலாக  

கவிதைகள் அதிலும் காதல் கவிதைகளின் ரசிகரா நீங்கள், அப்படினா கண்டிப்பா இந்த காதல் கவிதைகள் படித்துப்  பாருங்கள். காதலை உணருவீர்கள், காதலிக்க தொடங்கிவிடுவீர்கள்

ஆன்மிகம் என்பது மதம் சம்பந்தப்பட்டதா இல்லையா என உங்களுக்குள் ஒரு கேள்வி இருந்தால் அவசியம் இங்கே கிளிக் செய்யுங்கள், படித்து முடித்ததும் பதிலும் கிடைக்கும் கூடவே ஒரு தெளிவும் பிறக்கும்.

ஆன்மிகம் எழுதியவர் இந்த கிராமத்தான் தானா என வியக்கவைக்கும்,
கிராமத்தாய்ங்க தான்  நாங்க 

கண்களை கலங்கவைத்து, மனதை கொந்தளிக்க வைக்கும் ஈழம் 

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு வீரத்தமிழச்சி இந்த வெட்டுடையாள் 

லோக்கல் தமிழ், சென்னை தமிழ், அந்த தமிழ், இந்த தமிழ்னு பல விதமா எழுதுற திறமையை நிஜமா பாராட்டனும். அப்புறம் சீரியஸ், நக்கல், நையாண்டி, தெய்வீகம், அன்பு, பாசம், காதல், சிநேகம், வீரம்,செண்டிமெண்ட், கோபம், துக்கம், ஆதங்கம், ஆவேசம், ஏக்கம் அப்டி இப்டின்னு எல்லாம் உணர்ச்சியையும் கலந்துக்  கட்டி எழுதுற இவரது எழுத்தை இதுவரை படிக்கவில்லை என்றால் லைப்ல எதையோ மிஸ் பண்ணிட்டீங்கனு அர்த்தம் !

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம், ஆனால் முடிச்சாகனுமே என்ற ஒரு யோசனையிலும் எப்படி முடிக்க என்ற தர்மசங்கடத்திலும், ஒருவழியாக முடிக்கிறேன்.

அப்புறம் விமர்சனம் என்றால் நிறைகுறைகளை சொல்லணும். நிறை சொல்லிட்டேன், குறையும் சொல்லிடுறேன். (இங்க சொன்னா தான் உண்டு) :)

தேவா, 

* உங்களின் சில படைப்புகளின் பொருள் எல்லோராலும் புரிந்துக்கொள்ள முடியாதவை, கொஞ்சம் எளிய நடையில் இருந்தால்  புரிந்துக்கொள்ள முடியும். சாதாரண தமிழையே சிறிது ஆங்கிலம் கலந்து சொன்னால் தான் புரிகிறது. ஆன்மிகம் பற்றியவை செந்தமிழில் இருந்தால் போதுமானது, ஆனால் அன்றாட சம்பவங்களை பற்றி எழுதும் போது  எளிய முறையை கையாண்டால் நன்றாக இருக்கும். வேகமாக படித்து கடந்து செல்லும் மனநிலையில் தான் இங்கே பலரும் இருக்கிறார்கள், தவிரவும் மற்றவர்கள் படிக்கவேண்டும் என்று தானே இங்கே எழுதுகிறோம்.

ஒரு படைப்பாளியின் படைப்பு பலருக்கும் சென்று சேர்ந்தால் தான் அந்த படைப்பு முழுமை பெறும்.  நல்ல எழுத்துக்களை பலர் அறியாமல் போனால் மோசமான எழுத்துக்கள் தான் இங்கே பரவி நிரவி இருக்கும். நாளைய தலைமுறைகள் அத்தகைய எழுத்துக்களைப்  படித்துவிட்டு இதுதான் நம் முன்னோர்களின் நிலை என்று எண்ணிவிட கூடிய ஆபத்து இருக்கிறது. கம்பனையும் வள்ளுவனையும் பாரதியையும் இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு தெரியும்...??! அந்த எழுத்துக்களை புரிந்துகொள்ளக் கூடிய அளவில் இல்லை இன்றைய நம் கல்விமுறை...!! புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்ட இந்நாளில் இணையம் ஒன்றே அவர்கள் முன் இருக்கிறது. இங்கே நல்ல எழுத்துக்கள் அதிகம் படிக்கப்படணும், படிக்க வைக்கப்படணும்.

* 'புரிதல் உள்ள ஒருவர், இருவர் என் எழுத்தை படித்தால் போதும்' என்று எண்ணாதீர்கள். எளிய தமிழில் அதிகம் எழுதுங்கள்.

பாரதி அவர் வாழ்ந்த காலத்தில் அவ்வளவாக கொண்டாடப்படவில்லை காரணம் அவர்களை விட்டு தனித்து தெரிந்தார்...!!சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட நீங்கள், சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எழுதிவிட்டேன் என்பதுடன் நின்றுவிடக்கூடாது...!!

*  அப்புறம் ஒரு தொடர் பதிவை முடித்துவிட்டு அடுத்ததை தொடர்ந்தால் வாசகர்களுக்கு தொடர்ச்சி புரியும். (முன்னாடி என்ன படிச்சோம்னு மறந்து போய்  மீண்டும் தேடிப்  பிடித்து படிக்கிறேன்)

*  சிறந்த தளங்களின் பதிவுகளை படித்தால் அங்கே உங்களின் கருத்துகளை பதிய வைக்கலாம். பதிவுலகில் எழுதுவதை பலர் குறைத்து கொண்டிருக்கிறார்கள். உங்களது கருத்துக்கள் அவர்களை உத்வேகம், உற்சாகம் கொள்ள வைக்கலாம். இதற்காக உங்களின் நேரத்தில் கொஞ்சம் இதுக்கு  ஒதுக்கினால் என்ன ?! 

இணைய உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள் 

இணையத்தில் நல்லதும் கெட்டதுமாய் பல விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நமக்கு நல்லது எது என தேடி எடுத்துக்கொள்வதை போல இவரை போன்றோரின் எழுத்துகளையும் தேடி எடுக்கவேண்டும்.

அங்கே சென்று பின்னூட்டம் இட வேண்டும் என சொல்லவில்லை ஆனால் அவசியம் படியுங்கள்...இது வேண்டுகோள் அல்ல விருப்பம்...நான் சுவைத்த நல்ல தமிழை, நல்ல பண்பை , நல்ல எழுத்தை நீங்களும் சுவைத்து பாருங்கள் !! மோசமான எழுத்துக்களும் மலிந்து கிடக்கும் இங்கே இவரை போன்றோரது எழுத்துக்களை நாம் கவனிக்கத்  தவறிவிடக்கூடாது.

படைப்பாளிகள் பலர் அவர்கள் வாழும் காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்ட துர்பாக்கிய நிலை நாம் அறிந்ததே...! அதே தவறை இவரை போன்றோருக்கும் நாம் செய்துவிட கூடாது...நம்மால் கண்டுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கபட்டால் மேலும் பலர் வெளி வருவார்கள்...நம்மால் நல்ல எழுத்தை படைக்க இயலாவிட்டாலும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவோம்...ஒரு சமூகம் நல்ல எழுத்தாளர்களாலேயே கட்டமைக்கப் படுகிறது.

பின் குறிப்பு 

இனி எப்படியாவது தொடர்ந்து எனக்கு தெரிந்த படைப்பாளிகளை பற்றி எழுதவேண்டும். மூணாவதாக  ஒருத்தரை எழுதனும்னு முடிவு பண்ணி இருக்கிறேன்...! அவர் ரொம்ப பிரபலமா தான் இருந்தாரு, இப்போ கொஞ்ச நாளா சிலருக்கு பிராபளமா தெரிய ஆரம்பிச்சு இருக்காரு...!! (நான் எழுதினதுக்கு அப்புறம் எனக்கும் பிராபளமா ஆகிடுவாரோ !?) முடிவு பண்ணியாச்சு பார்ப்போம். அப்புறம் இந்த தடவை சீக்கிரம் எழுதிடுவேன்னு நினைக்கிறேன் :-)




பிரியங்களுடன்
கௌசல்யா 

வியாழன், அக்டோபர் 4

பசுமை விடியல் நிர்வாகிகளின் முதல் சந்திப்பு - காஞ்சிபுரம்

பசுமைவிடியல் அமைப்பை சேர்ந்த   அனைத்து நிர்வாகிகளின்  சந்திப்பு கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரத்தில் மிக இனிமையாக நடந்து முடிந்தது. இணையத்தின் மூலம் அறிமுகமாகி, ஒத்த கருத்தில் ஒன்றிணைந்து, அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு கொண்டிருந்த நாங்கள் அன்றுதான் நேரில் முதல்முறையாக சந்தித்தோம்.  ஒரு கிராமத்தில் ஏதாவது ஒரு பெரிய மரத்தடியில் மண் வாசனையுடன் மீட்டிங் வைக்கலாம் என கேஆர்பி செந்தில் அவர்களிடம் கேட்டபோது, 'நன்றாக இருக்கும் ஆனா இப்போ இங்க மழை காலமாக இருக்கிறது, ஏதாவது ஹால்னா பெட்டெர்'னு சொன்னதால் ஹால் என முடிவு செய்தோம் 


மண்ணோட சம்பந்தப்பட்ட பசுமைவிடியலுக்கு ஹால்,பேனர்,மைக், ஸ்பீக்கர் இந்த மாதிரி எதுவும் தேவையில்லை என்பதே நிர்வாகிகள் எல்லோரின் விருப்பமாக இருந்தது.  மண்டபம், உணவு அரேஞ்ச்மென்ட் எல்லாம் காஞ்சிபுரம் தன்னார்வலர் திரு.அருள் செய்திருந்தார். 

கலந்து கொண்டவர்கள் 

சென்னையில் இருந்து திரு.செல்வகுமார், திரு கேஆர்பி.செந்தில், திரு சிவகுமார் மற்றும் பெங்களூருவில் இருந்து திரு.பிரபு கிருஷ்ணா, திரு.சூர்ய பிரகாஷ், திருநெல்வேலியில் இருந்து திரு.ஜோதிராஜ், திருமதி கௌசல்யா கலந்து கொண்டனர். மேலும் பசுமைவிடியலின் தன்னார்வலர்கள் காஞ்சிபல்லவன் கல்லூரிபேராசிரியர்திரு.சண்முகம்,திரு.அருள்,திரு.பூபாலன், திரு.ஜெய்சங்கர் திரு.மாதேஷ், திரு.செந்தில்,திரு.கணேஷ் ,   மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

காலையில் நிர்வாகிகளின் சந்திப்பு மிக இனிமையாக நகைச்சுவையுடன் சென்றது. பசுமைவிடியல் பற்றிய பேச்சுக்கு நடுவே கேஆர்பி அவரது சில அனுபவங்களை முக்கியமாக அவர் நடித்த குறும்படம் படப்பிடிப்பு சம்பவங்களை விவரித்தபோது சிரிப்பால் ஹால் அதிர்ந்தது. எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் பேசக்கூடிய வெகு சில மனிதரில் ஒருவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்கள் என்றும் என் நினைவில்...!  


உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்த கலந்துரையாடலில் எல்லோரும் தங்கள் கருத்தை கூறியது  மிக இயல்பாக இருந்தது. ஒவ்வொருத்தர் பேச்சிலும் சமூகத்தை பற்றிய அக்கறை அதிகம் தெரிந்தது. சொல்லப்பட்ட யோசனைகள், ஆலோசனைகள் குறித்துக்கொண்டோம். வந்திருந்த உறுப்பினர் ஒருவர் "பள்ளி, கல்லூரிகளில் இருந்து நமது விழிப்புணர்வை தொடங்கவேண்டும், அவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றி பேச ஒருநாளில் ஒரு பத்துநிமிட நேரம் செலவிட்டால் போதும், அவர்கள் தான் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்படுவார்கள்" என்று சொன்னார். குறும்படம், சிலைட் ஷோ, பவர்பாயின்ட் ப்ரசன்டேசன் போன்றவை மூலமாக இன்னும் சரியாக மனதில் பதியவைத்துவிடலாம் என்பதால் அதனை தயாரிக்கும்,திரட்டும் வேலைகளில் விரைவில் இறங்க வேண்டும் என முடிவு செய்தோம். 

                                  (சிவகுமார் பேச அருகில்  KRP.செந்தில், சண்முகம் சார் )
திரு.சிவகுமார் , இயற்கையின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறை அன்று இவரது பேச்சில் முழுமையாக வெளிப்பட்டது. சாதனை மனிதர் திரு.யோகநாதன் அவர்களை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். தனிநபராக பல ஏக்கர் நிலபரப்பில் ஒரு காட்டை உருவாக்கிய திரு.ஜாதவ் பயேங் பற்றியும் பேசப்பட்டது. 

சில நிகழ்வுகள், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-

பசுமைவிடியலின் மூன்றாவது திட்டமான கிராமம் தத்து எடுப்பது குறித்த யோசனைகள் பரிமாறப்பட்டன. அந்த கிராமத்தில் என்னவெல்லாம் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை குறித்துப் பேசப்பட்டன.

                                                           (வெகு உற்சாகமாக...!!)

* கிராமத்தின் முக்கியஸ்தர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் அடிப்படையில் முதல் கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழம்பி முடிவு செய்யப்பட்டு அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமைவிடியல் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மரம் நடுவது கிராமம் முழுமைக்குமாக விரிவு படுத்தப்பட இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் ஊர் குளத்தை சுற்றி கன்றுகள்  நடப்படுகிறது.   

                                         (ஒரே சமயத்தில் ஒன்றாக வரிசையாக நடப்பட்டது) 

* இரண்டாவதாக 'திடக் கழிவு மேலாண்மை திட்டம்' (குப்பைகள் மறுசுழற்சி) குறித்த யோசனை ஒன்று  முன்  வைக்கப்பட்டது. இதனை பல்வேறு கட்டமாக படிப்படியாக செயல்படுத்த என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி நிர்வாகிகள் கலந்து முடிவு செய்தார்கள்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தின் பசுமைவிடியல் PROJECT EXECUTIVE வாக திரு.அருள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரு.கேஆர்பி.செந்தில் அவர்களால் முன் மொழியப்பட்டது. 
 
* அன்று மாலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி அருகில் உள்ள வள்ளலார் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பசுமைவிடியல் சார்பில் ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.

முக்கிய துளிகள்

திரு.சிவகுமார் அவர்கள், வருடந்தோறும் சென்னையில் நடக்கும் யூத் பதிவர் சந்திப்புக்கு அடுத்த  முறை   'PROJECT EXECUTIVE' திரு.அருள் அவர்களை அழைத்து கௌரவிப்பதாக கூறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

                                          (மரம் நடுபவர் அருள், அருகில் செல்வா அண்ணா )

திரு.அருளை பற்றி குறிப்பிட்டாக வேண்டும், பசுமைவிடியலில் இணைவதற்கு முன்பே ஊரில் பல பகுதிகளில் மரங்களை நட்டு, தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருபவர். MBA படித்திருக்கும் இவர் கெவின் கேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும் பல உறுப்பினர்களை பசுமைவிடியலில் இணைத்தும் வருகிறார்.

நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆட்களை பசுமைவிடியலின் ஆலோசனையின் படி திரு. அருள் ஏற்பாடு செய்து கவனித்துக் கொள்கிறார்.

மன நிறைவு 

கிராம மக்களின் அனுமதி, ஒத்துழைப்பு, ஆர்வம், அக்கறை இல்லாமல் வெளியில் இருந்து மற்றவர்கள் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை அறிந்திருப்பதால்  அங்குள்ள பெரியவர்களை  அவ்வப்போது கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். வெகு விரைவில் அங்கே அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திலும் களப்பணிகளை தொடர இருக்கிறோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட சந்திப்பு, களப்பணிகள் சிறப்பாக இருந்தது.  மழை குறைந்த வரண்ட பகுதிகளில் மரம் நடுவதை அதிக அளவில் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சந்தர்ப்பம் அமைந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பசுமைவிடியல் திட்டங்களை செயல்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்.


பிரியங்களுடன்                                     
கௌசல்யா
பசுமைவிடியல்

வெள்ளி, செப்டம்பர் 14

ஒத்துழைப்பு தாருங்கள், திட்டத்தில் இணையுங்கள் !!

பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவுங்கள், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் இப்படி மாய்ந்து மாய்ந்து அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் ரசாயன உரம், பிளாஸ்டிக் என்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கும் ஒரு முரண்பாட்டு மூட்டை அரசாங்கம்...!!

அரசை திருத்துவது நம் வேலை அல்ல எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் தனி மனிதன் நம் கடமை ? தண்ணீருக்காக போர் போட்டால் சில அடிகளில் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர், பல நூறு அடிகள் போடப்பட்டும் கல்லை கரைத்து துப்பிக்கொண்டிருக்கிறது. திரளும் கருமேகங்களை குளிர்வித்து கீழே கொண்டுவரும் திறனற்ற வறண்ட பூமி !!? கான்கிரீட் பூமியில் கண்ணுக்கு தெரியாத பசுமை !

பசுமைவிடியல் 

அமைதியாக இருந்தால் போதுமா ஏதாவது செய்ய வேண்டாமா என யோசித்ததின் முடிவில் பிறந்ததுதான்  'பசுமை விடியல்'

கடந்த சில மாதகாலமாக சிறு குழந்தை போல தவழ்ந்து நிமிர்ந்து எழுந்து மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இணைந்த தன்னார்வலர்களின் கரங்களை பிணைத்து கொண்டிருக்கும் தைரியத்தில் பசுமைவிடியல் பெரிய அளவில் செயல் பட திடங்கொண்டு  பல வியத்தகு முடிவுகளை எடுத்திருக்கிறது. முதலில் இரண்டு திட்டம் தொடங்கினோம்.

* 'தினம் ஒரு மரம்' திட்டம்

* 'இலவச மரக்கன்று' திட்டம் 

சில முயற்சிகள் செய்யலாம் 

தன்  வீடு தன் வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் நாம் நின்றுவிடாமல் அதை தாண்டி வெளியே வந்து சில கடமைகளை இயன்றவரை செய்யலாமே. யாருக்கோ செய்யவேண்டாம். நம் குழந்தைகள் பேரன் பேத்திகள் நாளை வாழப்போகும் இடம் இது, இதை சரி செய்து கொடுக்க வேண்டியது நம் கடமை. 'வாழ தகுதியில்லாத பூமியை நமக்கு விட்டுச் சென்றுவிட்டார்கள் இரக்கமற்றவர்கள்' என்று நம்மை நம் குழந்தைகள் சபிக்க வேண்டுமா ??

வீட்டுக்குள் ரோஜா செம்பருத்தி குரோட்டன்ஸ் வளர்த்துவிட்டு நாங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறோம் என்று திருப்தி பட்டுவிடக் கூடாது. 

*   நாம் வசிக்கும் தெருவின் ஓரத்தில்...

*   வீட்டு வாசலில், காம்பௌன்ட் உள்ளே...

* வீட்டை சுற்றி இடம் இல்லை என்றால் தெரிந்தவர்கள் வீட்டில் இடம் இருந்தால் வாங்கி கொடுத்து வைக்க சொல்லலாம். நீங்களே நட்டு, நேரம் கிடைக்கும் போது சென்று பார்த்து வரலாம்.    

* உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது  மரக்கன்றுகளை பரிசாக கொண்டு செல்லலாம்.

*  பள்ளி கல்லூரிகளுக்கு சென்று கொடுக்கலாம். முக்கியமாக உங்கள் குழந்தைகளிடம்(அவங்க பிறந்தநாளின் போது) கொடுத்து அவங்க பள்ளியில் நட சொல்லலாம். தினம் தண்ணீர் ஊற்றி எப்படி வளர்ந்திருக்கு என்று குழந்தைகளிடம் கேட்டு அவர்களின் ஆர்வத்தை தூண்டலாம்.

* விதைகள் சேகரித்து மலைவாசஸ்தலம் எங்காவது சென்றால் அங்கே விதைகளை  தூவிவிட்டு வரலாம். (இதெல்லாம் காக்கா, குருவி, பறவைகள் பண்ற வேலை அவைதான் இப்போ கண்ணுல படலையே)

 ஏதோ ஒரு விதத்தில் நமக்கு இயன்றவரை செய்து வரலாம்.

இப்படியும் சொன்னாங்க 

*  எங்க வீட்ல இடம் இல்ல... எங்க நட.
* தெருவுல போய் நடவா ? வேற வேலை இல்ல...பாக்குறவங்க என்ன நினைப்பாங்க.

இதெல்லாம் கூட பரவாயில்லை ஒரு காலேஜ் ப்ரோபசர் சொன்னார், "நீங்க நட்டு வச்சுட்டு போய்டுவீங்க, யாருங்க தண்ணீ ஊத்த? அதுக்கும் ஒரு ஆள நீங்களே ரெடி பண்ணி வச்சுட்டா நல்லது !!"

அவர் சொன்னப்போ சுர்ருன்னு கோபம் வந்துடுச்சு. ஆனாலும் அவர் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. அவர் பாட(பாடத்தை) கவனிப்பாரா செடிக்கு தண்ணி  ஊத்திட்டு இருப்பாரா? இருந்தாலும் நானும் விடாமல் "காலேஜ்க்குனு தோட்டக்காரங்க இருப்பாங்களே" னு கேட்டேன், "இதுவரை செய்றதுக்கு சம்பளம் கொடுப்போம், இது எக்ஸ்ட்ரா  வேலை"

இப்படி சொன்னதும் நான் வேற என்ன செய்ய "சரிங்க நான் ஆள் ரெடி பண்ணிட்டு உங்க கிட்ட பேசுறேன்"னு போன் வச்சுட்டேன்.

ஆக

கன்றை கொடுப்பது  சின்ன வேலை அதை பராமரிப்பதுதான் பெரிய வேலை என்ற ஒன்றை புரிய வச்சாங்க. அதன் பின் தான் மூன்றாவது திட்டம் உதயமானது. ஒரு கிராமத்தை தத்து எடுத்து அங்கே மரக்கன்றுகளை ஊரை சுற்றி நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்க அங்க உள்ள சிலரை பணியில் அமர்த்தி பசுமைவிடியல் மூலமாக சம்பளம் கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம். முதல் இரண்டு திட்டங்கள் படிப்படியாக செயல்படதொடங்கியதும் மூன்றாவது திட்டம் தொடங்க இருக்கிறோம். 

* * * * * * * * * *

முகநூலில் பார்த்து சிலர் போன் பண்ணிகேட்டது மனதிற்கு நிறைவாக இருந்தது. முக்கியமாக சென்னையில் கொடுப்பிங்களானு கேட்டாங்க. பிற மாவட்டங்களுக்கும் கொடுக்கிறதுக்காக சில ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறோம்...விரைவில் நல்ல செய்தியை  பகிர்கிறேன்

சந்தோசமான செய்தி ஒன்று 

இலவச மரக்கன்று அறிவித்த மூன்றாவது நாளில் Rotaract Club of Kovilpatti Chairman திரு செந்தில் குமார் என்னை தொடர்புகொண்டு பேசினார். "ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு உங்களால் உதவ முடியுமா" என்று கேட்டார். இது போன்ற ஒரு வாய்ப்புக்காகத் தானே காத்திருக்கிறேன் என்பதால் சந்தோசமாக 'ஏற்பாடு செய்கிறேன்' என்றேன்.

உடனே "முதலில் அடுத்த வாரம் பத்தாயிரம் மரக்கன்று வேண்டும்" என்றார். 

ஒரே சமயத்தில் இவ்வளவு கன்றுகள் ரெடி செய்வது முதல் முறை என்பதால் கொஞ்சம் தயங்கினாலும் ,தயார் செய்து விட்டோம். அடுத்தவாரம் கொடுக்க போகிறோம்.

மரக்கன்றுகள் சென்று சேர போகும் இடம்

Junior Red Cross Convener
தென்காசி கல்வி மாவட்டம்
இ.மா. அரசு மேல்நிலை பள்ளி
பண்பொழில்.
* * * * * * * * * * * * * *                             

2 வது திட்டம் குறித்த பதிவு  - ஒரு புதிய முயற்சி -தினம் ஒரு மரம் 

அன்பின் உறவுகளே!!

 * இலவச மரக்கன்றுகள் பெற்று இயன்றவரை உங்களை சுற்றி இருக்கிற இடங்களில் நட முயற்சிசெய்யுங்கள்...
* தினம் ஒரு மரம் திட்டத்தில் அனைவரும் அவசியம் பங்குபெற வேண்டுகிறேன்.
தொடர்புக்கு tree@pasumaividiyal.org

உங்களின் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும்  நாடுகிறேன். 
 
மரம் நடுவோம், மண்ணை காப்போம்


பிரியங்களுடன்
கௌசல்யா


 

   

செவ்வாய், செப்டம்பர் 11

கொலைக்களமாகும் கூடங்குளம்...??!


தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தும் வேலை தமிழகத்தில் மிக அருமையாக நடந்துகொண்டிருக்கிறது. போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கிக்கொண்டு அலறி துடிக்கும் மக்கள். பெண்கள் சிறுவர் சிறுமியரை போராட்டத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்கள் என்ற அதிகாரவர்க்கத்தின் பேச்சுகள் ஆத்திரத்தை மூட்டுகிறது. ஏன் பெண்கள், சிறு பிள்ளைகள் சிந்திக்க திறனற்றவர்களா? தங்கள் அச்சத்தை தெரியபடுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு ஆட்சி நடக்கிறது. ஓட்டு போட மக்களை நாடி வரும் அரசியல் கட்சிகள்  ஓடி சென்று ஒளிந்து கொண்டன. மக்களுக்கான அரசு என்று மார்தட்டி கொள்ளும் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்திருக்கும் இந்த அடக்குமுறை மக்களின் மீதே என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம். 

கூடங்குளம் மக்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க கூடிய நிலையில் யாருமில்லை...அதை தாண்டி வெளியில் இருக்கும் நாம் கூட !!?

உதயகுமார் என்ற தனிமனிதன் தன் சுயநலத்துக்காக மக்களை தூண்டிவிடுவதை போல சித்தரிக்கப்பட்டு கூடங்குளம் வெளியே இருக்கும் மக்கள் மூளை சலவை செய்ய வைக்கப் படுகிறார்கள்.

காலங்காலமாக அங்கே வாழ்ந்து வந்த மக்களுக்கு அந்த மண்ணின் மீது உரிமை இல்லை. அங்கிருக்கும் மக்கள் நல்வாழ்வு முக்கியம் இல்லை, ஆனால் மின்சாரம் தான் வேண்டும் என நிர்பந்திக்கும் அணுஉலை ஆதரவாளர்கள் !!?

போன வருடம்  செப் 11 இல் தீவிரமடைந்த இந்த போராட்டம் ஒரு வருடமாக கட்டுக்கோப்பாக நடந்து வருகிறது. (நேரில் பார்த்து தெரிந்துகொண்ட ஒன்று) பெரிய தலைவர்கள் எவரின் ஒத்துழைப்பும் இன்றி மக்களால் மக்களுக்காக நடந்துகொண்டிருக்கும் இதை தீவிரவாதிகளின் போராட்டம் என சித்தரித்தார்கள். தனது சொந்த நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்துக்காக  போராடினால் அவர்கள் தீவிரவாதிகள் !! அருமை !!

மது  அருந்திவிட்டு போராட்டபந்தலுக்கு வரக் கூடாது , மீறி வருபவர்கள் ஊர் கமிட்டியால் விரட்டபடுவார்கள் என்று ஊர் கட்டுப்பாடு போடப்பட்டது, அவ்வாறு  ஒருவரும் வெளியேற்றபடவில்லை என்ற ஒரு உதாரணம் போதும் போராட்டம் எத்தகைய ஒழுங்கின் கீழ் நடந்துவருகிறது என்பதற்கு...!

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்களுக்கு ஏற்படும்  அச்சத்தை மத்திய மாநில அரசுகள் போக்கவேண்டும் என்பது தான் அவர்களின் அடிப்படை கோரிக்கை.
"எங்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும் இதை ஒரு வருடகாலமாக அமைதியான முறையில் கேட்டுகொண்டிருக்கிறோம். மிக தெளிவாக சொல்கிறோம் எங்களின் அச்சத்தை போக்கவேண்டும் !!" 

ஆனால் மக்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படும் போது சாவின் விளிம்பை தொட்டு பார்க்கவும் துணிந்து விடுவார்கள் என்பது கண் முன் காட்சிகளாக விரியும் போது நெஞ்சம் பதறுகிறது.

மகாத்மாவின் உண்ணாவிரதம் இன்றுவரை பெரிது படுத்தபடுகிறது ஆனால் இந்த மக்களின் உண்ணாவிரதம் கேலிகூத்தாக பார்க்கப்படுவது வேதனை.


கலைந்து போக கொடுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம், அமர்ந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மொத்தமாக எழுந்து நிற்க கூட இந்த நேரம் போதாது. பின் எப்படி அந்த இடம் விட்டு செல்ல...?! உடனே பிரயோகிக்கப்பட்டது தடியடி, கண்ணீர்புகை...!! எத்தனையோ காரணங்கள், பேச்சுக்கள், சப்பைக்கட்டுகள், சமாளிப்புகள் சக மனிதனை கொலை வெறியோடு அணுகும் நிலை கண்கொண்டு காண இயலவில்லை!!

தமிழ் நாட்டில் மின்சாரம் பற்றாக்குறை, அதனால் தான் மின்தடை...கூடங்குளம் வேலை தொடங்கிவிட்டால் தமிழகமே ஒளிர்ந்துவிடும் என மக்கள் மூளை சலவை செய்யபடுகிறார்கள் கை தேர்ந்த அரசியல்வாதிகளால் !!  தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு தரை வார்க்கபடுகிறதே அதை கேள்வி கேட்ட முடியுமா நம்மால்...கேட்டால் இது எப்பவோ போட்ட ஒப்பந்தம் என்பார்கள். ஒப்பந்தத்தை மீறி நமக்கு தரவேண்டிய தண்ணியை ஒரு சொட்டு கூட தரமுடியாது என திமிராக சொல்வார்கள் நாம மட்டும் சரிங்க என்று கேட்டுக்கணும்.

40 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம் அதுவும் சலுகை விலையில் !! ஆனால் மக்கள் இருளில் கிடக்கவேண்டும். பாகிஸ்தானுக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்துக்கு கொடுக்க மாட்டார்கள். 

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் அதிக அளவு மின்சாரம் வீணாகிறது. அரசியல் வாதிகள், அதிகாரிகள்  இதில் கவனம் செலுத்தலாம். எந்த விதங்களில் எல்லாம் மின் இழப்பு ஏற்படுகிறது என கவனித்து சரி படுத்தினாலே தமிழகம் ஒளிர்ந்துவிடும்.



நாட்டின் வளர்ச்சி கருதி ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று கூறும்  அணுஉலை ஆதரவாளர்களின் வீரம், தன் வீடு பாதுகாப்பாக இருக்கிறது என்ற ஒன்றினால் மட்டும் தான். அணு உலை ஆதரவாளர்கள் புத்திசாலிகள் என்றும் அணுஉலையை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்பதை போல எண்ணுவது பேதைமை.

அணுஉலை கழிவுகள் அகற்றுவதை பற்றி இன்றுவரை சரியான விளக்கம் இல்லை. அணு விஞ்ஞானிகள் பாதிப்பில்லை என்று கூறுகிறார்கள் என்பது அங்கே வேலை செய்பவர்கள் தங்கள் வேலை குறைவு உள்ளது என்று எப்படி கூறுவார்கள் இவர்கள் சொன்னார்களாம் அதை நம்பி ஆகணும் என்று மக்களை வலுக்கட்டாயமாக சம்மதிக்க சொல்வது வேடிக்கை.

வன்முறையற்ற வழியில் போராடும் கூடங்குளம் மக்களை போராட்டகாரர்கள் என்று சித்தரித்து வரலாறு காணாத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்களுக்கான பிரச்சனை என்று மட்டும் எண்ணி வாய்மூடி மௌனியாக இருக்கும் மக்களே! எங்கோ ஈழத்தில் கொத்துகொத்தாய் மடிந்த போது அமைதியாக இருந்ததை போல இப்போதும் இருக்குறீர்களே...கண்ணீர் புகையினால் பாதிக்கபடும் சிறுகுழந்தைகள் பற்றி யாரும் யோசிக்கமாட்டார்களா? அடிதடி, கதறல், வேதனை, வலி இதில் பாதிக்கப்படும்  அவர்களின் மனநிலை, அவர்களின் எதிர்காலம் !!!!???
 
வீடு புகுந்து ஆண்களை கைது செய்து இழுத்து போகிறது காவல்துறை. வாழும்  உரிமை கேட்டு போராடியதற்கு சிறை. மற்றொரு சுதந்திர போர் இப்போது நமக்கு எதிரி வெள்ளைக்காரன் அல்ல, அவனுக்கு பரிந்துகொண்டே சொந்த மக்களை கொல்ல துணிந்துவிட்டது மத்திய மாநில அரசுகள். 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கவேண்டுமே தவிர பாதகமாக அல்ல...   

எங்கென்றாலும் அழிவதும், அடிவாங்குவதும் தமிழ் இனமாகவே இருக்கிறது !

மனித உரிமை கமிஷன்னு ஒன்னு உண்டு, இப்ப எங்கேன்னு வேற தெரியல...!!?

நமக்கென்ன, நேற்று ஒரு சிவகாசி இன்று ஒரு கூடங்குளம் எப்படியோ நமக்கு பொழுது போனால் சரி !! வெறும் சராசரிகளாக இன்னும் எத்தனை காலம் தான் தமிழன் என்றொரு இனம் இருக்குமோ தெரியவில்லை. புரட்சி, போராட்டம் என்று முழக்கமிட்டவர்கள் எல்லாம் செத்து அழிந்துவிட்டார்கள் போலும்...

கூடங்குளம் மக்கள் 
உடலில் உயிர் இருக்கும் வரை கத்தி ஓயட்டும்
அந்த பிணங்களின் மீதிருந்து வரும் மின்சாரம் 
பெற்று பலகாலம் சுகித்து சுகமாய் வாழுவோம் 
வாழ்த்தட்டும் அம்மக்களின் ஆத்மா !!

சொந்த  நாட்டில் அகதிகளாகிக்கொண்டிருக்கும் கூடங்குளம் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை கூறி என் இயலாமையை இங்கே வரிகளாக்குவதுடன் சகமனுசி என் வேலை முடிந்துவிட்டது என்ற நிறைவுடன்(?) முடிக்கிறேன்.

கூடங்குளத்தில் இருந்து கூடல்பாலா  'ஒவ்வொரு வீடாக புகுந்து ஆண்களை இழுத்து கொண்டு செல்கிறார்கள் நான் பாத்ரூமில் மறைந்து கொண்டு உங்களுக்கு போன் செய்கிறேன்...தெருவில் பெண்கள்  கத்தி கதறி முறையிட்டு(யாரிடம்?!) அழுது கொண்டிருக்கிறார்கள் ' என்றார்.

அவர் பேசியபோது அவரது குரலில் தெரிந்த நடுக்கம், பின்னால் ஒலித்த துப்பாக்கிச்சத்தம் நெஞ்சை பிசைய செய்வதறியாது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னே என் கையாலாகாத்தனம்...!? வெட்கப்படுகிறேன் !!



திங்கள், செப்டம்பர் 10

ஒரு புதிய முயற்சி - 'தினம் ஒரு மரம்'

அருமை இணைய உறவுகளே,

வணக்கம். 

சில நிமிடங்கள் உங்கள் பார்வையை இங்கே பதியுங்கள்...படித்து கடந்து செல்லும் முன் ஒரு உறுதியுடன் செல்வீர்கள் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் பாதுக்காப்புக்கென்று ஒரு புதுமையான திட்டம் 'தினம் ஒரு மரம்' யார் தொடங்கினாங்க? எப்படி? எதுக்கு? என்னவென்று கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்களேன்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் EAST TRUST ஆல்  தொடங்கப்பட்ட 'பசுமைவிடியல் அமைப்பு' கடந்த சில மாதங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென்று பல செயல்களை செய்துவருகின்றது. அதன் அடுத்தகட்ட ஒரு முயற்சிதான் 'தினம் ஒரு மரம்' என்ற திட்டம். நாம் வாழும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற தேடல், ஆர்வம் இருப்பவர்கள் பங்கு பெற ஒரு நல்ல சந்தர்ப்பம் .  

 

தினம் ஒரு மரம்!
பசுமை விடியல் குழுவின் புதிய பசுமைத் திட்டம்!

இத் திட்டத்தின் நோக்கம் என்ன?
பசுமை விடியல் சார்பில் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் தினம் ஒரு மரம் நடப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் யார் யார் எல்லாம் பங்கு கொள்ளலாம்?
உலகில் பசுமை நிலைத்திருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும் பங்கு கொள்ளலாம்

இத்திட்டம் எப்படி செயல்படுகிறது?
ஒரு சங்கிலித் தொடர்போல, மரம் நடும் நண்பர்கள், தினம் தினம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முதல் ஆர்வலரை பசுமைவிடியலே பரிந்துரை செய்து இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறது. முதல் நபர் மரத்தை நடும் முன்பே, அடுத்த நபரை பரிந்துரைக்க வேண்டும். அவர் நண்பராகவோ, உறவினராகவோ, பசுமை விடியல் அங்கத்தினராகவோ இருக்கலாம். அவர் அவருக்கடுத்த நபரை பரிந்துரைப்பார். இப்படியே தினம் ஒரு மரம் பசுமை விடியல் சார்பில் உலகில் எங்காவது ஒரு மூலையில் நடப்படும். வருடத்திற்கு 365 மரங்கள். சங்கிலித் தொடர்போல இந்த பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சங்கிலித் தொடருக்குள் இணைவது எப்படி?
மிக எளிது. தினம் ஒரு மரம் திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயரையும், ஊரையும் குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் பெயர் தினம் ஒரு மரம் ஆர்வலர்களின் பட்டியலில் இணைக்கப்படும். அந்தப் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை மற்றவர்கள் பரிந்துரைப்பார்கள். நீங்கள் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஒரு மரம் நட வேண்டும்.

மரம் நடப்பட்டது என்பதை எப்படி உறுதி செய்வது?
 மரம் நடும் காட்சியை ஒரு புகைப்படமாக tree@pasumaividiyal.org என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப் புகைப்படம் தேதிவாரியாக ஒரே ஆல்பத்தின் கீழ் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைக்கப்படும். இந்த ஆல்பம் மற்றவர்களை  நிச்சயம் ஊக்கப்படுத்தும்

                                                                               * * * * *                                                                      

விழிப்புணர்வு ஏற்படுத்துவதே...

உலகம் தற்போது இருக்கும் நிலையில் ஒருநாளைக்கு ஒரு மரம் நட்டால் போதுமா? என்ற கேள்வி சிலருக்கு ஏற்படக்கூடும். இத்திட்டம் ஒரு மரம் வைக்கணும் என்பதாக இருந்தாலும், உலகின் பல இடங்களில் இருந்தும் பலர் இணைந்து தினமும் தொடர்ச்சியாக செய்து வரும் போது பிறருக்கு நிச்சயம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

இத்திட்டத்தின் நோக்கம் பலரை தட்டி எழுப்புவது தான். அவர் செய்துவிட்டார் நாமும் செய்வோம் என்ற மறைமுக ஊக்கப்படுத்துதல். மரம் நடுவது அனைவரின்  இன்றியமையாத கடமை என்றில்லாமல், அதை ஏன் செய்யவேண்டும், அதனால் என்ன பலன் என்ற கேள்வியை இன்னமும் கேட்கும் பலர் இங்கே உண்டு...! அப்படிபட்டவர்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம் என்பதே போதுமானது. பின் அவர்களாக தொடர்ந்து செய்ய தொடங்கிவிடுவார்கள்.

எந்த ஒன்றும் எல்லோரின் ஒத்துழைப்பு இன்றி செயல்வடிவம் பெற இயலாது என்பதை தெரிந்தே இருக்கிறோம்.  அதனால் உங்களின் மேலான ஆதரவையும், பங்கெடுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சிறிதும் தயக்கம் இன்றி முழுமனதாக ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என திடமாக நம்புகிறேன்.

இனிமேல் இது  'எங்க திட்டம்' இல்லை 'நம்ம திட்டம்'. 

இணைந்து செயலாற்றுவோம். 
                                    வாழ்த்தட்டும் இயற்கை !! வணங்கட்டும் தலைமுறை !!

தினம் ஒரு மரம்!
இந்த பூமி உள்ள வரை...
 
ஆம் சங்கிலித் தொடராக தினம் ஒரு மரம்.

இன்று நீங்கள், நாளை நண்பர், அடுத்த நாள் மற்றொருவர்!

ஆளுக்கொரு மரம்!
                                       மரம் நடுவோம்! 
                                                                           மண் காப்போம்!!

                                                                                      * * * * *

பிரியங்களுடன்

கௌசல்யா 
பசுமைவிடியல்.


வெள்ளி, செப்டம்பர் 7

நெருப்புக்கு இன்னும் பசி அடங்கவில்லை...!? உடல் தாருங்கள்...!!!



சிவகாசி என்றதும் பட்டாசு நினைவுக்கு வரும், கூடவே வெடித்து சிதறிய கருகிய உடல்களும்...  வருடாவருடம் இத்தகைய விபத்துகள் நடந்துகொண்டு இருக்கின்றன...தீபாவளியும் மகிழ்ச்சியுடன்(?) கொண்டாடப்படுகிறது. எதுவும் யாருக்காகவும் மாறப்போவதில்லை.  இதோ இப்ப நடந்த இந்த கோர விபத்து பத்தி 'பாவம் அப்பாவிகள்' என்று அனுதாபம் தெரிவித்து  இரண்டு நாள் பேசுவோம்  பிறகு புதிதாய் வேறு ஒரு பரபரப்பு செய்தி...!!
 
ஆனால் சில மணித்  துளிகளில் பொட்டல் காடாக மாறிய அந்த பிரதேசம், காற்றில் கலந்திருக்கும் நெடியுடன் கூடிய அந்த கந்தக வாசம்,  தீயில் வெந்த, கருகிய உடல்களின் வாடை அந்த பூமியை விட்டு அவ்வளவு சீக்கிரம் அகலாது.

வெடி விபத்தை நேரில் பார்த்ததில்லை ஆனால் தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரும் விபத்துகளின் பாதிப்பை நேரில் கண்டு அதிர்ந்திருக்கிறேன். தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தே கோரமாக இருக்கும் என்றால் அதை விட பல மடங்கு வீரியம் உள்ள வெடிவிபத்து எத்தகைய மோசமான விளைவை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எண்ணி உடல் நடுங்குகிறது. 

நினைக்காமல் இருக்க முடியவில்லை 

தீப்பெட்டி தயாரிக்க முக்கிய மூல பொருளான  குளோரேட் வைக்க தனி அறையும், சல்பர் பிற மருந்து பொருட்கள் வைக்க தனி அறையும் எல்லா தொழிற்சாலைகளிலும் இருக்கும். இதில் குளோரேட் மிக ஆபத்தானது...சிந்தி கிடப்பதின் மேல் கால் லேசா உரசினால் கூட பற்றிக்கொள்ளும். ஒரு பாக்டரியில் குளோரேட் எடுக்க அந்த அறைக்கு சென்ற ஒரு தொழிலாளி கை தவறுதலாக தராசு எடை கல்லை கீழே போட சிந்தி கிடந்த குளோரேட் சட்டென தீப்பிடித்து வெடித்து எரிய தொடங்கியது. தனியாளாக உள்ளே மாட்டிகொண்ட தொழிலாளியை  சிரமப்பட்டு (சிறிது நேரம் கழித்து) மீட்டு எடுத்தார்கள். இரண்டுநாள் கழித்து மருத்துவமனையில் உயிர் பிரிந்துவிட்டது.

அந்த இளைஞன் சிறுவயதில் இருந்து எங்கள் பாக்டரியில் வேலை பார்த்தவன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தான் அங்கே இடம் மாறினான். காதுகேளாத வாய் பேச முடியாத, அவனால் தீப்பிடித்த போது உதவிக்கு ஆட்களை கூப்பிட கூட இயலாமல் போய்விட்டது. அப்போது அவன் மனது எப்படி துடித்திருக்கும் !! தீப்பிடித்தால் கத்த கூட வாய்ப்பில்லாத ஒருவனுக்கு வேறு வேலை கொடுக்காமல் இந்த வேலைக்கு அமர்த்தியது யார் தவறு...! இறந்த பின் ஒரு லட்சம் கொடுத்தது அந்த நிர்வாகம். பணத்தை வழங்கி இறப்பினை, இழப்பினை மறக்கச் சொல்கிறது (முதலாளிகள்) சமூகம்!!

கண் முன் நிகழ்ந்த விபத்து 

ஒருமுறை எங்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை  நடந்து கொண்டிருந்த மதிய நேரத்தில், மருந்து கட்டைகள் அடுக்கி வைத்திருந்த பெரிய அறையில் தீப் பிடித்துவிட்டது. பெண் தொழிலாளி ஒருவர் கட்டையை (மருந்து குச்சிகள் அடுக்கி வைக்கப்பட்ட மரபிரேம்) மர ஸெல்ப்பில் இருந்து எடுக்கும்போது உரசி தீ பிடித்து விட்டது. அந்த பெண் அப்படியே கீழே போட்டுவிட்டு வெளியே (உடனே வெளியேறி விடவேண்டும் என்று ட்ரைன் பண்ணுவோம்) ஓடிவந்து விட்டாள். தீ மளமளவென பிற  ஸெல்ப்களுக்கும் பரவி விட்டது. சில நிமிடங்கள் கழித்து நான் சென்று பார்த்தபோது எட்டடி உயரத்துக்கு தீ எரிகிறது. நாலு பேர் வெளியே இருந்து Fire Extinguisher மூலமா அணைக்க முயற்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது...

அருகில் போக முடியாத படி வெப்பம், புகை, மெதுவாக உள்ளே எட்டி பார்த்தேன் தீக்குள்  இரு கரிய உருவங்கள், "அங்க என்ன பண்றீங்க, வெளில வாங்க" பதறி நான் கத்த, மூச்சிரைக்க ஓடி வந்த அவங்க, "ஒண்ணுமில்லமா, தீ பிடிக்காத நல்ல கட்டைகளை தனியா எடுத்து வெளில வீசுறோம், இல்லைனா அதும் எரிஞ்சிடும்"  னு சொல்ல எனக்கு பேச வாய் வரல. அவங்க கண்ணில் சுத்தமா உயிர் மீதான பயம் இல்லை...மாறாக கண் முன்னே சேதமாகும் பொருளை காப்பாற்ற முடியலையே என்ற வருத்தம்  மட்டுமே தெரிந்தது.   

சுற்றிலும் சூழ்ந்த (மருந்து)புகையால்  தொண்டை அடைக்க எனக்கு இருமல் வந்துவிட்டது (ஆழமாக சுவாசித்துவிட்டால் மயக்க நிலைக்கு ஆளாக நேரும், கண் எரிச்சல், பாதிப்பு ஏற்படும்) 'நீங்க போங்கமா இங்க நிக்காதிங்க' என்று என்னை அங்கிருந்து போக வைப்பதில் கவனமாக இருந்த அவர்களின் அக்கறைக்கு முன்னால் யார் அங்கே முதலாளி !? முதலாளி என்ற எண்ணம் எனக்குள் சுத்தமாக அழிந்தே விட்டது !

இப்படி பட்ட தொழிலாளியை தான் நாம் சுலபமாக சொல்கிறோம் அப்பாவி மக்கள்னு...இத்தகைய மாமனிதர்களின் உழைப்பில், உயிர் தியாகத்தில் தான் பல முதலாளிகள் கொழுத்து திரிகிறார்கள்.

பணத்தை போடுவதுடன் முதலாளிகளின் வேலை முடிந்து விடுகிறது , ஆனால் தொழிலாளிகள் செய்யும் தொழிலை தாய்க்கும் மேலாக வழிபடுகிறார்கள். விபத்து நேரிட்டால் முதலாளிகளுக்கு நஷ்டம் பணம் மட்டும், ஆனால் தொழிலாளி தன் வாழ்க்கையை தொலைக்கிறானே...!? இந்த காலத்திலும் முதலாளி விசுவாசம் என்பது இன்னும் நீர்த்துபோகவில்லை.

சிவகாசி விபத்தில் ஒரேநாளில் எத்தனை குழந்தைகள்  அநாதையோ, எத்தனை பெண்கள் தாலியை , எத்தனை கணவன்வர்கள் மனைவியை, எத்தனை தாய்மார்கள் தங்கள் வாரிசுகளை இழந்தார்களோ !! வேதனை சூழ்ந்து விட்ட அவர்களின் வாழ்வை மீட்டு தர யாரால் முடியும்...?!

நிவாரண பிச்சை போட அதிகார கூட்டம்
அஞ்சலி செலுத்த ஒரு கூட்டம்
ஆறுதல் சொல்ல ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்
அத்தனைக்கும்  நடுவில்
கையில் கேமராகளுடன் ஒரு கூட்டம்
எல்லாம் சில மணி நேரங்களில் காணாமல் போய்விடும்
அப்பாவிகள் இனி அனாதைகள் !!

'சிவகாசியில் சரியான மருத்துவமனைகள் இல்லை' இப்படி சொல்றது ரோட்ல போற யாரோ இல்ல விருதுநகர் எம்.எல்.ஏ !! அதுவும் எதிர்கட்சி என்பதால் அவர்களுக்கு ஆளும் கட்சியை குறை சொல்ல கிடைத்த ஒரு வாய்ப்பு. பதவியில் அமரவைத்த மக்களின் அடிப்படை வசதி எது குறை, என்ன என்ன இல்லை என்று இத்தனை மாதமாக ஏன் இவர் பார்க்கவில்லை...! 'சொன்னோம், மேலிடம் கவனிக்கவில்லை' என்பார்கள்...! ஓம்சக்தி  முதலாளி ஆளுங்கட்சி கவுன்சிலர் !! பேஷ் இப்படிதான் இருக்கணும்...!! 

அரசியல்வாதிகள் , அதிகாரிகள் மத்தியில் மக்கள் விளையாட்டு பொம்மைகள்...சுற்றிலும் ஆபத்தான தொழில்சாலைகள் இருக்கும் ஊரில் தீவிபத்து தனி பிரிவு உள்ளடக்கிய,அனைத்து வசதிகள் கொண்ட  சிறப்பு மருத்துவமனை இல்லை. சுத்தம்,சுகாதாரம்,பாதுகாப்பு எல்லாம் வசதியானவர்களுக்கு மட்டுமானப் பேச்சுக்கள்.  

முதலாளிகள் என்னும் மனிதநேயமற்றவர்கள் 

உரிய விதிமுறையின்(40 விதிமுறை மீறல்) கீழ் நடத்தப்படவில்லை என்று லைசென்ஸ் ரத்து செய்ய தெரிந்தவர்களுக்கு ஆலையை இழுத்து மூடி சீல் வைக்க மறந்து போய்விட்டது. மறக்கவைத்தது பணம் தரும் போதை. 

முதலாளிகள் அறைக்குள் பேசப்படும் பேரங்கள் பாவம் இந்த தொழிலாளிகளுக்கு எங்கே தெரியபோகிறது. நம்ம முதலாளி எல்லாம் சரியா முறைப்படி  செய்து வைத்திருப்பார், நமக்கு ஒண்ணுனா  அவர் தானே பார்க்க போறார்...என்ற நம்பிக்கை. (இப்போது அவரையே அவர் பார்த்துக்க முடியாதபடி,எங்க  எப்படி இருக்கிறாரோ ??!)

மழை  இல்லை, விவசாய வேலை இல்லை , தீபாவளி சமயம் வேலை அதிகம் ஓவர்டைம் சம்பளம் தரேன் என்ற முதலாளிகளின் பசப்பு வார்த்தைகள் இப்படி ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது கருகி போவதற்கு...!

ஏழை மக்களின் வாழ்வில் மட்டும் ஏன் மேலும் மேலும் இத்தனை கோரங்கள்...உயிர் இழந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள். தீக்காயத்துடன் மருத்துவமனையில் இருப்பவர்களின் உடலில் உயிர் ஓடும் ஒவ்வொரு நொடியிலும் மரண வேதனை ! நரகத்தை தவணை முறையில் தரிசிப்பார்களே.....! தீ நாக்குகள் தீண்டிய தேகத்தை தாயும் தீண்ட அஞ்சுவாள்...வெயிலில் வெறுங்கால் வைக்க அஞ்சுபவர்களுக்கு எங்கே புரியும்  பத்து மாதம் தான்   இவர்களுக்கும் என்பது !!

அரசையும் அதிகாரிகளையும் குறை சொல்லி ஆகபோவது ஒன்றுமில்லை. மனிதநேயம் மறந்த முதலாளிகளே  முழு பொறுப்பு. பணத்தை மட்டுமே பார்க்கும் முதலாளிகள் திருந்தாதவரை இது போன்ற விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கும். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தொழிலாளிகளின் நலன் முக்கியம் அதற்கு பின்தான் லாப கணக்கு என என்று ஒவ்வொரு முதலாளிலும் நினைக்கிறானோ அன்று தான் தொழிலாளர்களின் வாழ்வு விடியும். அதை தவிர எந்த சட்டங்களும் மக்களை பாதுகாக்க முடியாது. போடப்பட்ட சட்டங்களை எப்படி வளைப்பது என்று முதலாளிகளுக்கு  நல்லாவே தெரியும். 

இதுவரை நடந்த பட்டாசு ஆலை விபத்துகள் விபரம்:


1998ம் ஆண்டு சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 150 பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.
2002ம் ஆண்டு கோவில்பட்டியில் 16 பேர் பலி
2005ம் ஆண்டு மீனாம்பட்டியில் 20 பேர் பலி
2006ம் ஆண்டு பர்மா காலனியில் 12 பேர் பலி
2007ம் ஆண்டு நாராயணபுரத்தில் 4 பேர் பலி
2009ம் ஆண்டு மதுரை வடக்கம்பட்டியில் 19 பேர்,
நமஸ்கரித்தான்பட்டியில் 18 பேர்,
சிவகாசியில் 3 பேர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 32 பேர் பலி
2010ம் ஆண்டு சிவகாசியில் 8 பேர் பலி
2011ம் ஆண்டு விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடியில் 14 பேர் பலி
                                                                                                       (தகவல் -இணையம்)

இப்படி வருடந்தோறும் மனிதர்கள் கருகிக் கொண்டு இருக்கிறார்கள் நாம் தீபாவளி கொண்டாடி கொண்டுதான் இருக்கிறோம். 

யார் அப்பாவி?

ஏழை மக்கள் பாதிக்கபடுகிறார்கள் என்றதும் வெகு சுலபமாக 'பாவம் அப்பாவி மக்கள்' என்று சொல்வது படு அபத்தம். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இப்படியே சொல்லியே  அவர்களை ஓரங்கட்டுவது. ஓட்டு போட, கொத்தடிமையாய் உழைக்க மட்டும் இவர்கள் வேண்டும்.இவர்களின் உழைப்பில், ஓட்டு பிச்சையில் வாழ்ந்து கொண்டு சொல்கிறோம் அப்பாவிகள் என்று. அனுதாபம் என்ற பெயரில் அவர்களை தயவுசெய்து இனியும் இப்படி சொல்லாதீர்கள். அவர்கள் நமக்கெல்லாம் மேலே, நம்மைவிட மிக பெரியவர்கள் அப்படி எண்ணி அவர்களை நடத்துவோம்...இயற்கை நம்மை வாழ்த்தட்டும்...!!

எதற்கு எதை முடிச்சு போடுவது   என சிலர் நினைக்கலாம், அதிகார வர்க்கத்தினருக்கு பல்லக்கு தூக்கி மனிதர்களின் எதிர்ப்பை சம்பாதித்து அவர்களின் அச்சத்தை அலட்சியம் செய்து பின் யாருக்காக மின்சாரம் ?! என்றாவது ஒருநாள் கூடங்குளத்தில் ஒரு குரல் கேட்கக்கூடும் "அப்பாவிகளே உடல் தாருங்கள், நெருப்புக்கு பசி இன்னும் அடங்கவில்லை !!?"

மனிதத்தை தொலைத்துவிட்டு எங்கே சென்று எதை சாதிக்கபோகிறோம்...! எதிர்பார்ப்புகள் இன்றி ஏற்றத்தாழ்வுகள் பாராமல் சக மனிதர்களை நேசிக்கும் உள்ளம் அனைவருக்கும் வேண்டும் எங்கள் இறையே...!

இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற வெற்று வார்த்தைகள் இனியும் எதற்கு...!? சக மனிதனை உள்ளன்போடு உண்மையாக நேசியுங்கள், அது போதும் !!


                                                                                    * * * * *

படங்கள்  - நன்றி கூகுள்