வியாழன், டிசம்பர் 30

கல்யாண நினைவலைகள் தொடருகிறது...!


இதுக்கு முந்தைய பாகத்தின் தொடர்ச்சி இந்த பதிவு...

வெடி சத்தம் பயங்கரமா கேட்டதும்,மறுபடியும் ஒரு சந்தோசம்...?! யார் வக்கிராங்கனு பார்த்திட்டு முழுசா சந்தோஷ பாடலாம்னு காரில் இருந்து எட்டி பார்த்தேன். அட வெடி பத்த வைக்கிறது எல்லாம் என் பெரியம்மா பசங்க...! அவங்க ஊர் சிவகாசி என்பதை அட்டகாசமாய்,  சத்தமா நிரூபிச்சிடாங்க...!                    

ஊர்வலம் ஒரு வழியா என்னவரின் வீட்டுக்கு (ம்...இனி என் வீடு !)  வந்து சேர்த்தது...அங்கே வைத்து தான் வரவேற்ப்பு. ஆரத்தி எடுக்க மக்கள்ஸ்  வெய்டிங்...சினிமால மாதிரி தட்டுல எடுக்கல, ஒரு பாத்திரத்தை வச்சு எடுத்தாங்க...மூணு பேரு மாத்தி மாத்தி தனி தனியா  எடுத்தாங்க...(ரொம்ப திருஷ்டி பட்டுடுச்சு போல...?!) 

இப்ப கரெக்டா ஒரு பாட்டு பாடணுமே...உங்கள் யூகம் சரிதான் 'மணமகளே மருமகளே வா வா' பாட்டுதான். இன்னும் எத்தனை காலம் தான் இதே பாட்டு போடுவாங்களோ தெரியலை (இதுக்கு புதுசா ரீமிக்ஸ் யாரும் இன்னும் ரெடி பண்ணலையா...?) ஆரத்தி எடுத்து வீட்டினுள் மெதுவா வலது காலை எடுத்து வச்சு போனோம். 

எங்க மாமியார், மாமனாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் ஒரு போட்டி ஒண்ணு இருக்குனு சொல்லி எங்க இரண்டு பேருக்கும் நடுவில ஒரு குடத்தை வச்சாங்க. குடத்தில இருக்கும் தண்ணிக்குள்ள  ஒரு மோதிரத்தை போட்டு இரண்டு பேரையும் ஒண்ணா ரெடி ஸ்டார்ட் சொல்லி மோதிரத்தை எடுக்க சொன்னாங்க. அடடா போட்டியான்னு ஒரு குஷில வேகமா தண்ணிக்குள்ள கையை விட்டேன், ஒரு ஐந்து செகண்ட்ல மோதிரம் மாட்டிகிச்சு, சந்தோசமா எடுத்து அருகில் இருந்த அக்காவிடம் கொடுத்தேன். உடனே பக்கத்தில் இருந்த மாமியார் 'நீ எடுக்ககூடாதுமா, வீட்டுகாரனுக்காக நீ விட்டு கொடுத்திடணும்' அப்படின்னு சிரிச்சிட்டே அட்வைஸ் பண்ணினாங்க...?! (அப்ப எதுக்குங்க போட்டின்னு சொல்லணும், அதுக்கு பதிலா இவரை போட்டியின்றி தேர்ந்து எடுக்க பட்டதா அறிவிச்சு இருக்கலாமே...?!) 

எனக்கு ஒரே எரிச்சல் சரி இவர் என்னடா பண்றார்னு நிமிர்ந்து பார்த்தேன், அவங்க அம்மா மாதிரியே அழகா சிரிச்சிட்டு 'இந்தா மோதிரம்'னு நீட்டுறார்...இது என்னனு வாங்கி பார்த்தா, அட இது நான் கைல போட்டு இருந்த மோதிரம்...?! அது எப்படி இவர் கிட்ட போச்சு...குடத்துக்குள்ள இருந்த மோதிரம் மேலேயே  என் கவனம் இருக்கிறப்ப இவர் என் கைல இருந்து கழட்டி இருக்கிறார். (அட ச்சே இது கூட தெரியாம...?!) பல்பு தொடருதோ...?!!!

மறுபடி உப்பு நிரம்பிய பாத்திரத்தில் இதே போல் மோதிரம் போட்டு எடுக்க சொன்னார்கள்...இநத முறை எதுக்குடா வம்பு என்று தேமே என்று கையை மட்டும் வச்சிட்டு எடுத்திட்டேன். (ரொம்ப விட்டு கொடுக்க வேண்டி இருக்குமோ என்று இநத நொடியில் தான் எனக்குள்  ஒரு கேள்வி எழுந்தது...)ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு குரல் ரொம்ப அசடா இருந்தது போதும், அலர்ட்டா இருன்னு சொல்லிட்டே இருந்தது.

அப்புறம் சில கலாட்டாக்கள் நடந்து எங்களை ஸ்டேஜில் அமர வைத்தனர். ஒவ்வொருத்தரா வந்து வாழ்த்திட்டு கிப்ட் கொடுத்திட்டு போயிட்டே இருந்தாங்க...நிறைய பேர் வந்திட்டே இருந்தாங்க...கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் செட் செட்டா வந்து சின்ன சின்ன கலாட்டா பண்ணி கிப்ட் கொடுத்திட்டு சென்றார்கள் ஆனா என் நிலைமை கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது... எனக்கு  தெரிஞ்ச ஆள்கள் ஒருத்தர் கூட பக்கத்தில இல்லை (சாப்பிட போய்டாங்களா...?? இல்லை வேலை முடிஞ்சதுன்னு ஊருக்கே போயிட்டாங்களான்னு வேற தெரியலை...?!!!)

நானும் பேந்த பேந்த முழிச்சிட்டு என்னவர் அறிமுக படுத்தி வச்சவங்களுக்கு எல்லாம் ஒரு வணக்கம் சொல்லிட்டு ஒரு இயந்திரம்  மாதிரி அவர் இன்ட்ரோ கொடுத்தவுடன்(சுவிட்ச் போட்டவுடன்...!)  கை தன்னால ஒண்ணு சேர்ந்துடும்...!

அப்புறம் நாங்களும் சாப்பிட போனோம்...அங்கே எல்லோர்  கல்யாணத்திலும்   போல நடக்குற கலாட்டா செவ்வனே நடந்தேறியது...நான் மட்டும் இந்த உம்மணாமூஞ்சி கெட்டப்பை அப்படியே மெயின்டெயின் பண்ணினேன். என்னவோ சிரிக்கவே தோணல...அது பதட்டமா, சோர்வா, அச்சமா சொல்ல தெரியல. 

மறு வீடு போன்ற பிற சடங்குகள் எல்லாம் முடிந்து இரவு 11 மணிக்கு தனி அறை ஒன்றுக்கு வந்து சேர்ந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுகென்று விழித்தேன் இருந்த களைப்பில் அப்படியே தூங்கிட்டேன் போல...நேரம் பார்த்தேன் மணி 12 அவர் வருவதை பார்த்து எழுந்து நின்றேன், அவர் வந்ததும், 'தூங்கியாச்சா, சரி கொலுசை கழட்டு' என்றார் (தூங்கிரப்ப கொலுசு போடகூடாதானு நினைச்சிட்டே வேகமா கழட்டி வச்சேன்) 'சரி பேசாம (எனக்கு பேச தெரியும்கிறத மறந்து இரண்டு நாள் ஆச்சே என்னை போய் பேசாதே என்கிறாரே...ம்...!!?)  என் கூட வா'னு சொல்லிட்டு நடக்க தொடங்கிட்டார். வரிசையா உறவினர்கள் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க, சத்த கேட்டு அவங்க எழுந்துவிடாம மெதுவா (கொலுசை இதுக்குதான்  கழட்ட சொன்னாரா...ம்...!) மேல கால் படாம மெதுவா ஒவ்வொருத்தரா தாண்டி போயிட்டே இருந்தோம். அப்புறம் ஒரு கதவை திறந்து வெளியே வந்தோம், தோட்டம் போல இருந்தது. (காற்றில் மல்லிகை மணம் வந்ததே...!) 

ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம். அவர் பேச தொடங்கினார், 'நகரத்தில் வளந்தவ, இந்த கிராமத்து சூழ்நிலை பழகிக்க சிரமமா இருக்கும் போக போக சரியாகிவிடும். ஞானஸ்தானம் எடுக்கும் போது உன் கண்ணீர் பார்த்தேன், மனதில் இந்து கடவுளை நினைச்சிட்டு வேற மதம் மாறும் போது இருக்கும் வருத்தத்தை என்னால் உணர முடிகிறது. அதே போல் உன் நெற்றி பொட்டை என் அண்ணி எடுக்கும் போது உன் முகம் மாறுவதையும் கவனித்தேன்,திருமணம் இந்த முறையில் நடக்கவேண்டும் என்பது என் பெற்றோரின் விருப்பம் அதை மீற முடியாது  . அதே நேரம் இனி 'உனது எனது விருப்பம்' தான் நம் சந்தோசத்தை தீர்மானிக்கும். பெரியவர்களின் மனம் வருத்தபடாமல் நாம் இருவரும் நடந்து கொள்வது நம் கடமை அவ்வளவே. 

உன் விருப்பத்திற்கு நடக்க உன்னை யாரும் இங்கே தடை சொல்ல மாட்டாங்க...எல்லோரும் ரொம்ப அன்பானவர்கள்...யாருக்காகவும் உன் சுயத்தை நீ இழக்க கூடாது...பொட்டு வச்சுக்கோ அது உன் முகத்திற்கு முழுமை கொடுக்கிறது...அப்புறம் இருக்கமா இருக்காத, உன் வீடு மாதிரி  நினைச்சுக்க...இந்த வீடு, இந்த உறவுகள் அப்புறம் நான் எல்லாம் சகஜம் ஆகட்டும். நம் கல்யாணம் அவசரமா முடிந்து இருக்கலாம், ஆனால் இன்றே வாழ்ந்து விடணும் என்பதற்கு எந்த அவசரமும் இல்லை, இந்த ஊரில் இருக்கிற கோமதி அம்மன் கோவில் ரொம்ப பிரபலம், கல்யாண சந்தடி எல்லாம் ஓயிந்தபின் முதலில் அந்த கோவிலுக்கு போவோம், ஆசைதீர சாமி கும்பிடு...வேண்டுதல் எதுவும் இருந்தா நிறைவேற்றிகோ...சந்தோசமா இயல்பா ஆனபின்னாடி நம் வாழ்கையை தொடங்குவோம் சரியா...??!" என்றார்.

நான் அப்படியே மெய் மறந்து அவர் பேசுவதை கேட்டுட்டே இருந்தேன்...கடவுள் என்னை மட்டும் ரொம்ப ஸ்பெசலா ஆசிர்வதிச்ச மாதிரி இருந்தது. (என்னவோ நான் இந்திய மண்ணையே  மிதிக்காத மாதிரியும், அப்பதான் பிளைனில் இருந்து  இருந்து இறங்கியது மாதிரியும் ஓவரா சீன் போட்ட என்னை என்ன பண்ணலாம்...?!!!)சற்று   முன்வரை  எனக்கிருந்த மாறுபாடான எண்ணம் முழுவதையும் அப்படியே நொறுக்கி போட்டுட்டார்.                          


தவறான எண்ணங்களே பெரிய தவறுதான் என்பதை அப்போது தான் உணர்ந்தேன். 


மனதினுள் மெல்ல  கவிதை ஒன்று வளர தொடங்கியது...கவிதை மட்டுமா...?!!




பின் குறிப்பு
இதுவரை என் நினைவலைகளை பொறுமையாக படித்த(முழுசா படிசீங்களா...?!) உங்கள்  அனைவரையும் மீண்டும்  புது வருடத்தில் புது உற்சாகத்துடன், நல்ல பதிவுகளுடன் சந்திக்கிறேன்.


உங்கள் அனைவருக்கும் என் அன்பான 'புத்தாண்டு வாழ்த்துக்கள்' !!


  






பிரியங்களுடன் கௌசல்யா
  

திங்கள், டிசம்பர் 20

கல்யாண நினைவலைகள்...!



கல்யாண நினைவுகள்  என்ற பதிவில் சில நினைவுகளை உங்களிடம் பகிர்ந்திருந்தேன்... அடுத்த பாகம் எழுத கொஞ்சம் நாள் ஆகிவிட்டது...இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு தொடர்ந்து படிக்குமாறு அன்புடன் கேட்டுகிறேன். 

திருமணம் என்ற பந்தம் வேறுபட்ட கலாச்சாரம், சூழ்நிலையில் வளர்ந்த இருவரை இணைத்து வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வைக்கிறது. இந்த பயணத்தில் பல மேடு, பள்ளங்கள் இருந்தாலும் அதை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கு பரஸ்பர அன்பு அவசியப்படுகிறது. அந்த அன்பு சட்ரென்று வரவழைக்கக்  கூடிய   மந்திர செயல் அல்ல. மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து மணம் பரப்பும் அழகிய ரோஜா மலரை போன்றது. எங்கள் இருவருக்கும் இடையிலும் அன்பு ஒரே நாளில் வந்துவிடவில்லை,  பூ மலருவதே தெரியாத மாதிரி மலர்ந்த அந்த அன்பு தான் இன்று வரை மணம் பரப்பி கொண்டிருக்கிறது. 

முதல் நாள்


திருமணதிற்கு முன் தினம் எங்களின் நிச்சயதார்த்தம் எங்கள் சொந்த ஊரில் வைத்து  நடந்தது.....! மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊர் பக்கம் (குற்றால  சாரல் கொட்டமடிக்கும் தென்காசி) அதுவும் ஒரு வாரம் மட்டும் எட்டி பார்க்கும்  எங்களுக்கு, இந்த சூழ்நிலை எல்லாமே ரொம்ப புதுசு...! எங்கு பார்த்தாலும் உறவினர்கள் சூழ்ந்து அந்த இடமே கலகலப்பாய் இருந்தது....என் அண்ணனின் நண்பர்கள் வேறு அவர்கள் பங்கிற்கு சவுண்ட் கொடுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆங்கிலோ இந்தியன் நண்பன் ஒருவர் , அவரை வயதான பாட்டிகள் எல்லாம் சூழ்ந்திட்டு அவர் கடிச்சி துப்பின தமிழை ரசிசிட்டு இருந்தது நல்ல காமெடியா இருந்தது. 

ஆனால் நானும் என் சகோதரர்கள் மட்டும்  திருதிருனு (ஏன் திருமதி திருமதின்னு போடகூடாது...??!) முழிச்சிட்டு இருந்தோம். அப்ப சினிமாவில் பார்த்த மாதிரியான ஒரு கெட்டப்பில் பின்னால் சிலர் புடை சூழ வெள்ளையும் வேஷ்டியுமாய் நாட்டாமை ஒருவர் வந்தார். அதுவரை ஸ்லோமோஷனில் நடந்து கொண்டிருந்த எல்லோரும் என்னவோ ஏதோ என்று ஓடுவதை பாவம்போல பார்த்திட்டு இருந்தேன். 

பெரியவர்கள் அனைவரும் முன்னாடி உள்ள ஹாலில் போய் அமர தொடங்கினர். நான் இரு அறைகள் தள்ளி இருந்தேன். இருபது பேர் வட்டமாக அமர்ந்து மும்முரமா எதை பற்றியோ விவாதித்து கொண்டு  இருந்தார்கள். அங்கே என்ன பேசுகிறார்கள் என்று என் தம்பி அடிக்கடி வந்து நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தான். திடீரென்று சத்தமாக ஒரு குரல் (வேற யாரு நாட்டாமை தான்...! ) "தாய் மாமா எங்கப்பா ?? ", இதோ வந்திட்டேன் என்று என் அம்மாவின் அண்ணன் குரல் கொடுத்து கொண்டே வந்தார். ஊரில் (ஸ்ரீவில்லிபுத்தூர்) இருந்து அப்போது தான் வந்திருக்கிறார் (அது எப்படி சரியான நேரம் உள்ளே என்ட்டர் ஆனார் ஆச்சரியம்....??!! ) 

சம்பிரதாய  பேச்சுகள் எல்லாம் ( ஒரு மணி நேரமாவா....??!!)  நடந்து முடிந்து என்னை அழைத்தார்கள். என்னை  அழைத்து வந்த அக்கா (பெரியம்மா மகள்) என் காதில் அப்ப அப்ப மெதுவா ரன்னிங் கமெண்டரி சொல்லிட்டே வந்தாங்க. தலையை குனி...... மெதுவா நட.... எல்லோருக்கும் பொதுவா ஒரு வணக்கம் சொல்.....!!  சரி என்று வணக்கம் சொன்னதும் ஒரு தட்டை கொடுத்தார்கள். "சீக்கிரமா 5 நிமிசத்தில இந்த புடவையை மாத்தி பொண்ணை கூட்டிட்டு வாங்க (ஒரு மணி நேரம் பேசினப்ப தெரியலையா...நான்  டிரஸ் மாத்த  மட்டும் வெறும் 5 நிமிஷமா...? நாட்டாமை தனியா மாட்டின நீ  தொலைஞ்ச...  )  ஒரு வழியா பத்து நிமிசத்தில் மறுபடி  அழைத்து வரப்பட்டேன்....

அப்ப நாட்டாமை என்னை பார்த்து ஒரு லுக் விட்டார் பாருங்கள் நடிகர் திலகம் மாதிரி....நானும் ஒண்ணும் புரியாம அன்பா ஒரு சிரிப்பு சிரிச்சேன்....?! "தாயீ எல்லார் கால்லையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ" (இதுக்கு தான் அந்த லுக்கா...?!)  நானும் சரி ஆசிர்வாதம் தானே  என்று புடவையை நல்லா இடுப்பில் ஒரு சொருகு சொருகிட்டு விழ தயார் ஆனேன்...முதலில் சாஷ்டாங்கமா அம்மா, அப்பா அப்புறம்.... மெதுவா திரும்பி பார்த்தா,  ஒரு இருபது பேருக்கு மேல வரிசை கட்டி நிக்கிறாங்க....?! இது என்னடா சோதனை என்று பரிதாபமாக அம்மாவை தேடினா ஆள்  எஸ்கேப் (ஏற்கனவே தெரியும் போல ...!!?)  

அந்த நேரம் பார்த்து என் சின்ன தம்பி கீழ விழுந்து வணங்கிட்டு இருந்த  என்னை மெதுவா தூக்கி விட்டான். அடடா ! அம்மா கைவிட்டாலும் தம்பி இருக்கிறானே (தம்பி உடையாள் இந்த படைக்கு அஞ்சாள் !) அப்படின்ற மகிழ்ச்சியில் வேகமா அடுத்த காலில் விழுந்தேன். விழுந்து எழுந்ததும் என் கையில் பணம் கொடுத்தாங்க 'அட இது வேறயா..?!'என்று சந்தோசமா வாங்கினேன்...'அக்கா என்கிட்டே கொடு நான் பத்திரமா வச்சிக்கிறேனு' என்கிட்டே இருந்து பிடுங்காத குறையா வாங்கிட்டான்..அப்பதான் புரிஞ்சது என் தம்பியோட திடிர் பாசம்....?!! (ரொம்ப அப்பாவியா இருக்கமோ...!?) ம்...தொடக்கத்தில் இருந்த வேகம் மெதுவா குறைஞ்சு ஒரு மாதிரி ஆகிட்டேன்....'வராண்டாவிலும் நிறைய பேர் இருக்காங்க தாயீ இங்க வா' என்று அதே வெண்கல குரல் அடபாவிகளா உங்க கொடுமைக்கு அளவே இல்லையா என்று மனசுக்குள் நொந்து கிட்டே மெதுவா அங்கயும் போய் விழுந்தேன் இல்லை ஆசிர்வாதம் வாங்கினேன்...!!

இனி முடியாது சாமிகளா என்று ஒரு சேரில் போய் அப்படியே உட்கார்ந்துட்டேன்...அப்ப திடீரென்று வாசலில் கட்டி இருக்கிற  ஸ்பீக்கரில் இருந்து மைகேல்  ஜாக்சன் குரல் ( அட பாட்டு தாங்க )அப்படியே என் சோர்வு எல்லாம் என்னை விட்டு பறந்தது போல் ஒரு உணர்வு....! ஆனா இந்த பாட்டு  இங்க எப்படி  சாத்தியம்...?!எல்லாம்  என் அண்ணனின் நண்பர்களின் கைங்கரியம்...என் மூடை மாத்ரான்கலாம். (அட தேவுடா ! பயங்கரமா  யோசிச்சி 007 நம்பர் செட் பண்ணி இருந்த என் சூட்கேசை எப்படி தெரந்தாங்க...அதுல நான் வச்சிருந்த காசெட் தான் இது !)இப்ப புதுசா இந்த குழப்பம் வேற...!  

" யாருலே அது புரியாத பாட்டை போடுறது ??" நாட்டாமை. இந்த நாட்டாமை எனக்கு தாத்தா முறையாம். சரியா போச்சு...!(இது தெரியாம மனசுக்குள்ள ரொம்ப திட்டிடோமோ...?!)

நாளை கல்யாணம்....ஆனா இன்றே சோர்ந்து போய்விட்டேன்...'எப்படி இருக்கும் அந்த திருமணம்' என்ற புது  குழப்பத்துடன் நடு இரவை தாண்டி பின் அப்படியே தூங்கி போனேன்..

விடிந்தது பொழுது.....(அப்படின்னு சொல்லி எழுப்பினாங்க.....?!)

என் கணவர் ஊரில் திருமணம், ஒரு தேவாலயத்தில் நடந்தது. வெகு சிறப்பா நடந்தது என்று தான் சொல்லணும், ஏன்னா அவ்வளவு கூட்டம். அந்த கூட்டத்தை பார்த்து எனக்கு பெருமை பிடிபடல. அப்புறம் தான் தெரிந்தது அன்னைக்கு மட்டும் அந்த சர்ச்சில ஆறு கல்யாணமாம்...?!(ம்...அது தெரியாம பெருமை பட்டுடேனே...!)ஒரு வழியா என் திருமணம் முடிந்து சர்ச் விட்டு வெளியே வந்தோம். 

அப்போது அங்கே பெரிய கூட்டத்தின் நடுவே பேண்டு வாத்தியங்கள், டிரம்ஸ் அடிச்சிட்டு இருந்தாங்க. அப்ப என் கூட நடந்து வந்திட்டு இருந்த என் அண்ணனிடம் "நல்லா அடிக்கிராங்கல்ல... கொஞ்சம் நின்னு கேட்டுட்டு போலாமே" என்றேன். "அட லூஸ், இது உன் கல்யாணத்துக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏற்பாடு,எல்லாம்  வீடியோவில் இருக்கும், அப்போ பார்த்துக்கோ" என்றான். (என்னவோ என்னை கேட்டுத்தான் புக் பண்ணின மாதிரி இவன் என்னை லூஸ் என்கிறான்...!டேய் அண்ணா,சமயம் கிடைக்கட்டும் அப்ப இருக்கு உனக்கு, ஏற்கனவே பழைய பாக்கி வேற ஓன்னு இருக்கு...!? மாப்பிளை பிடிக்கலை சொல்வான்னு, போய் பார்த்திட்டுவானு இவனை நான் அனுப்பி வச்சா, போய் பார்த்திட்டு வந்து 'இதை விட நல்ல சாய்ஸ் உனக்கு கிடைக்காது'ன்னு பல்டி அடிச்சவன் ஆச்சே இவன்...!)

ஊர்வலம் சும்மா சொல்லகூடாது முன்னாடி நாலு காரு, பின்னாடி வேற வரிசையா நிறைய கார்கள், திரும்பி திரும்பி பார்த்து ரசிச்சிட்டே வந்தேன். மறுபடியும் எனக்கு பெருமை தாங்கல மனசுக்குள் சிரிச்சிட்டே வந்தேன்...! ஆனா அதுவும் ரொம்ப நேரம் நீடிக்கல...?! டிரைவர்  கிட்ட என்னவர் 'இந்த ரோட்ல எப்பவும் டிராபிக் தான்' வர வண்டி எல்லாம் நம்மள பாலோ பண்ணற மாதிரியே இருக்குனு கிண்டல் பண்ணி ஒரே சிரிப்பு. (அட ச்சே ஒருத்தி எத்தனை பல்புதான் வாங்குவா...?!)
( நன்றி 'பல்போ பல்பு' இ.அ.பாபு) 

கொஞ்ச தூரம் கடந்ததும் ஒரே டமால் டுமீல்னு பயங்கர சத்தம்...!?

பதிவு பெரிதாகி விட்டதால் மீதி அடுத்த பதிவில் தொடரும்...





திங்கள், டிசம்பர் 13

என் பார்வையில் - சமகால கல்வி



நண்பர் தேவா   சமகால கல்வி என்பதை பற்றி ஒரு பதிவை எழுத சொல்லி இருந்தார். ஏற்கனவே சகோதரர்கள்  எஸ் கே , பாபுசெல்வா ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். நானும் எனக்கு தெரிந்த இன்றைய கல்வியின் நிலைபற்றி இங்கே சொல்ல முயற்சித்து  இருக்கிறேன்..படித்துவிட்டு சொல்லுங்கள். 

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, விவசாயம், மருத்துவம் என்ற இவை மூன்றையே சார்ந்து இருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருக்கும் கல்வி இன்று எந்த நிலையில் இருக்கிறது ? உண்மையில் இன்றைய கல்வியால் மாணவர்கள் பயன் பெறுகிறார்களா?? இல்லையா ?? என்ற கேள்விகளை முன் வைத்து பதிவை தொடருகிறேன்.

இன்றைய மாணவர்கள் 

இன்றைய இளைய சமுதாயத்தினர் மிகவும் வித்தியாசமான பார்வை உள்ளவர்களாக  இருக்கிறார்கள். அவர்கள் கிராமப்புறங்களில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் என்றாலும் சரி ஒரே கோணத்தில் தான் பார்க்கிறார்கள். எல்லோருமே நல்ல வேலையில் சேர வேண்டும், வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறவேண்டும் என்பதையுமே லட்சியமாக வைத்துள்ளனர். இப்படி பட்ட தாகத்துடன் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டுவதும், அதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவதும் நம் அரசாங்கத்தின் கடமை மட்டும் அல்ல, சமுதாயத்தின் பொறுப்பும் கூடத்தான்.

இப்போது நம்மிடையே இருக்கும் கல்வி கற்பிக்கும் முறை என்பது பல விதங்களில் இருக்கிறது. ஆங்கிலோ இந்தியன்  முறை, மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு (CBSC) என்று பலவித  பள்ளிகள் மூலமாக கல்வி கற்றுக்கொடுக்க படுகிறது. பாடங்கள் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இதில் உள்ள சிரமங்கள் ஏற்ற தாழ்வுகளை மனதில் வைத்து தான் நமது அரசாங்கம் சமச்சீர் கல்வி ஒன்றை சில வகுப்புகள் வரை தற்போது கொண்டு வந்துள்ளது....அதிலும் அடுத்த வருடத்தில் இருந்து தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளுக்கும் ஒரே விதமான பாட திட்டங்கள் கொண்ட ஒரு சமச்சீர் கல்வியை கொண்டு வர போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாடத்திட்டங்கள் ஒன்றாக இருக்கும்...தேர்வுகளும் அனைவருக்கும் ஒன்றாக  நடக்கும். நல்ல ஒரு முடிவு தான். மேலும் பாடங்களை பயிற்றுவிக்கும் முறைகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

பயிற்றுவிக்கும் முறை 

கடந்த வருடத்தில் இருந்து ஒரு சிறந்த முறை ACTIVE LEARNING METHOD (ALM) ஒன்று நமது அரசாங்க பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது என்பது பலருக்கும்  தெரியுமா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் எளிய முறையில் சொல்கிறேன்,

ஒரு சப்ஜெக்டில் ஒரு பாடம் ஆசிரியரால் எடுக்க படும் முன்னரே மாணவர்கள் பல சிறு குழுக்களாக பிரிக்க வைக்க படுகிறார்கள்....அதில் படிப்பில் கொஞ்சம் பின் தங்கிய மாணவன், நன்கு படிக்கும் மாணவன் என்று கலந்து குழுக்களை பிரிக்கிறார்கள். ஒவ்வொரு குழுவும் தங்களுக்குள் அந்த புதிய பாடத்தை படிக்க வேண்டும், யாருக்கு எந்த இடத்தில் சந்தேகம் வருகிறதோ அந்த இடத்தில் அடிகோடிட்டு கொண்டே வரவேண்டும். பின் எல்லோரும் அந்த பாடத்தை முடித்ததும் ஆசிரியர் பாடம் நடத்தி ஒவ்வொருத்தரின் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறார். (கார்டு ஒன்று  கொடுக்கபடுகிறது அதில் உள்ள பாடங்களை வரிசையாக முடித்து கொண்டே வர வேண்டும், ஒன்றில் தெளிவில்லாமல் அடுத்ததிற்கு போக இயலாது என்று நினைக்கிறேன்)

இதன் மூலம் ஒரு சின்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியலைனாலும், அதனுடன் சேர்ந்த பிற அர்த்தங்களையும் விளக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர் இருக்கிறார். முன்பு  மொத்தமாக எல்லோரையும் அமரவைத்து புத்தகத்தை வாசித்து, அர்த்தங்களை மட்டும் சொல்லி கொடுத்துவிட்டு, சிலரின் சந்தேகங்களை விளக்குவதுடன் முடிந்துவிடும். சிலர் மட்டும் தான் சந்தேகம் கேட்பார்கள்...எழுந்து சந்தேகம் கேட்கவும் தயக்கம் இருக்கும்...ஆனால் இந்த புதிய முறையில் அனைவரின் சந்தேகமும்  தெளிவிக்க பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு பாடம் முடிந்த பின் அதில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு அதற்கும் விளக்கம் கொடுக்க படுகிறது. இதில் ஒரு பாடம் நன்கு புரிந்த பின்னே அடுத்த பாடத்திற்கு செல்ல கூடிய வாய்ப்பு வருகிறது.

தவிரவும் ஆசிரியர்களின் பணி சுமை இதனால் கூடுவது போல் இருந்தாலும் மாணவர்களின் படிப்பு நன்றாக இருக்கிறது என்பது உண்மை. (அப்படி படித்த சில மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்)

பெற்றோரின் ஆங்கில பள்ளி மோகம்

நம்ம ஊர்ல என்னதான் அரசாங்க பள்ளியில் நன்றாக சொல்லி கொடுத்தாலும் ஆங்கில பள்ளியின் மேல் உள்ள மோகம் குறைய போவது இல்லை. இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்வது கிடையாது . அரசாங்க பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் பி எட், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களாகத்தான் இருப்பார்கள்....ஆனால் சில ஆங்கில பள்ளிகளில் ஒரு டிகிரி முடிச்சிருந்தால் கூட போதும் பணிக்கு அமர்த்தி விடுகிறார்கள். (அவர்கள் தான் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்பார்கள்) 

இங்கே ஒரு பிரபலமான பள்ளியில் தன் குழந்தையை பள்ளிக்கு அழைத்து கொண்டு வரும் தாயார் ஒருவர்  டிகிரி முடித்திருக்கிறார்கள் என்பதை மட்டும் வைத்து வேலைக்கு சேர்த்து கொண்டார்கள், முறையான பயிற்சி இல்லாமல் எப்படி இவர்களால் நன்றாக சொல்லி கொடுக்க முடியும்.....?!! ஆனால் இது தெரிந்துமே நாம் அந்த மாதிரி பள்ளியில் சேர்ப்பதற்கு தான் முயலுகிறோம் (நான் உள்பட) காரணம் பிரபலமான பள்ளி என்ற ஒரு பெருமையும், நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் தான்....! இந்த மாதிரி ஆசிரியர்களின் சம்பளமும் குறைவு  தான் ஆனால் அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் இவர்களை விட மூன்று மடங்கு அதிகம். (அதிக சம்பளம் வாங்கிரவங்களை விட குறைந்த சம்பளம் வாங்கிற ஆசிரியர்கள் கடினமாக அதிக உழைப்பை கொடுத்து  சொல்லி கொடுப்பார்கள் என்பது என்ன நம்பிக்கையோ தெரியவில்லை....! என்ன லாஜிக்....? )

மாண்டிசொரி கல்வி முறை  

முன்பு இத்தாலியில் கொலை கொள்ளை போன்ற பாதகங்கள் அதிகம் நடைபெற்று கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் ஆசிரியர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு மாநாட்டை நடத்தினர். பிள்ளைகளுக்கு கல்வியில் சில மாறுதல்களை கொண்டு வரலாமா ? அதன் மூலம் அவர்களின் மனோபாவம் மாறி இந்த மாதிரியான  செயல்கள் இனி நடைபெறுவதை தடுக்க முடியுமா என்றும் பலவாறாக வாதிட்டனர். முதல் இரண்டு நாளாக விவாதங்கள் நடைபெற்றன, முடிவுகள் ஒன்றும் எட்டப்படவில்லை. மூன்றாம் நாள் ஒரு பெண்மணி எழுந்து தனது கருத்துகளை கூறலானார்.........  

" நீங்கள் போதிக்கும் பாடங்களை மாற்றுவது ஒரு தீர்வு ஆகாது....அதற்கு பதில் மாணவர்களின் அடிப்படை குண நலன்களை அறிய முயல வேண்டும் "

" எல்லா குழந்தைகளும் ஒரே குண நலன்களை பெற்று இருப்பது இல்லை. உதாரணமாக ஜீரண சக்தி நன்றாக இருக்கும் ஒரு குழந்தைக்கு வெறும் கஞ்சியை மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் பலமற்றவனாக மாறி விடுவான். அப்புறம் ஜீரண சக்தி சரியாக இல்லாதவனுக்கு ஆரம்பத்திலேயே கடின உணவை கொடுத்தால் விபரீதமாகிவிடும். பலவீனமானவனுக்கு மெது மெதுவாக முதலில் கஞ்சி போன்ற லேசான ஆகாரம் கொடுத்து ஜீரண சக்தியை உண்டாக்கி, பிறகே கடினமான புஷ்டியான உணவு கொடுக்க படவேண்டும் "

" இதே போன்று தான் கல்வியையும் புகட்ட வேண்டும்....குழந்தைகளின் இயற்கையை அறியாமல் போதிப்பது தவறு...! "

இவரது இந்த கருத்து அங்குள்ளவர்களால் ஏற்று கொள்ளப்பட்டது. உண்மையில் இவர் ஆசிரியர் இல்லை, இவர் ஒரு மருத்துவர்...! இவரது இந்த ஆலோசனை ஏற்று கொள்ள பட்டு, இவரது தலைமையின் கீழ் ஒரு பள்ளி கூடம் ஏற்படுத்தி தீய குணங்களும், கெட்ட பழக்க வழக்கங்களும் கொண்ட அடங்காத பிள்ளைகளை எல்லாம் அதில் சேர்த்தனர். அந்த பெண்மணி அந்த பிள்ளைகளை வைத்து நடத்தின பல ஆராய்ச்சிகளின் முடிவில் அநேக விசயங்களை அறிந்து புதிதாக கல்வி கற்பிக்கும் முறை   ஒன்றை கையாள தொடங்கினார். அதன்பின் அந்த பிள்ளைகளின் துர் குணங்கள் மறைய தொடங்கின...! 

அந்த பெண்மணியி பெயர் தான் மாண்டிசொரி, அவர் தோற்றுவித்த கல்வி முறையின் பெயர் தான் மாண்டசொரி கல்விமுறை.  

இந்த முறையில் சில சிறப்புகள்

* மாணவ மாணவியர்கள் தன் ஆசிரியைகளை ஆன்ட்டி என்று தான் அழைக்க வேண்டும். இந்த உறவு முறையினால் இவர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் வர வாய்ப்பு இருக்கிறது. பயம் என்பது குறைந்து மரியாதை, நேசம்  வளருகிறது.

*  ஒரு பாடம் எடுத்து முடித்ததும், மாணவர்கள் பாடத்தை பற்றிய ஒரு கட்டுரை தயார் செய்து செமினார் மாதிரி பிரசென்ட் பண்ணவேண்டும். இதே முறையில் சிறு குழந்தைகளுக்கு ஒரு பண்டிகை, மிருகம், பறவை இப்படி எதை பற்றியாவது ஒரு நாலு  வரிகளாவது சொல்ல வேண்டும். இது ஆரம்பத்தில் இருந்து சொல்லி கொடுக்க படுவதால் மேடை கூச்சம் என்பது சுத்தமாக போய் விடும். மேலும் சம்பந்த பட்ட பாடத்தை பற்றிய தெளிவும் அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

* ஒவ்வொருத்தருக்கும் அவர்களது செயல் திறனுக்கு ஏற்றபடி சொல்லிகொடுக்க படுகிறது.

* உணவு உண்பதில் இருந்து சுத்தமாக தங்களை பேணி கொள்வது வரை ஒரு தாய் சொல்லி கொடுப்பது போல் சொல்லி கொடுக்கிறார்கள். நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், முக்கியமாக நான் கவனித்தது சரியான தொடுதல், தவறான தொடுதல் என்பதை கூட குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்லிகொடுக்கிறார்கள்.

முன்னேற வழிகாட்டுங்கள்

பிற மொழிகள் கற்றுகொடுக்க படுவதிற்கு ஊக்கம் கொடுக்க படவேண்டும். நம் நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கி உள்ளன. இதில்  வேலை வாய்ப்பும் அதிகம்.  ஒரு மாணவன் ஜப்பான் மொழியோ கொரிய மொழியோ படித்துவிட்டு , என்ஜினியரிங் படிப்போ அல்லது பட்டப்படிப்போ படித்தால் போதும் இந்த நிறுவனங்களில் உடனே வேலையுடன் அதிக சம்பளமும் நிச்சயம். ஜப்பான் மொழி படித்த மாணவன் ஜப்பான் சென்றாலும் அங்கே ரோபோடிக் என்ஜினியரிங் படித்தால் மிக உன்னத நிலைக்கு போய்விடலாம்.  

ஆனால் இந்த மாதிரி வேற்று மொழிகள் மத்திய கல்வி திட்டத்தில் தான் இருக்கிறது...!? பணக்கார மாணவர்கள் மட்டுமே நிறைய பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில்(CBSC)  சேர்ந்து படித்து விடுகிறார்கள்.  இதை நமது மாநில கல்வி திட்டத்தில் கொண்டு வந்தால்,  திறமை, ஆர்வம் இருந்தும்  அதிக பணம் கொடுத்து படிக்க வசதி இல்லாத மாணவர்களும் பயன் பெறுவார்கள். நம்ம நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் நம் மக்கள் தான் அதிகம் இருப்பார்கள்...! இங்கே படித்துவிட்டு அதிக சம்பளத்திற்காக வெளிநாட்டை தேடி போக வேண்டிய நிலையும் நம் மக்களுக்கு ஏற்படாது.    

குறைகள் களைய பட வேண்டும்

குறிப்பாக இன்றைய நமது அரசாங்க பள்ளிகள் பற்றி பார்க்கும் போது நல்ல முன்னேற்றம் தெரிகிற்து...கல்வியை எளிதாக்கவும், அதில் ஆர்வம் வருவதற்கும், இதனால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பயன்  கிடைக்கணும் என்ற நோக்கத்தில் இப்போது மேற்கொண்டு வருகிற முயற்சிகள் பாராட்ட பட வேண்டியவைதான்.  ஆனால் வேறு சில களையப்பட வேண்டிய குறைகள் மலிந்து கிடக்கின்றன அதையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயல் பட்டால் எதிர்காலத்தில் அரசாங்க பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க இடம் கிடைக்காமல் கூட போய்விடலாம்....!!  

பின் குறிப்பு.

கல்வியை கற்க இன்றைய மாணவர்கள் தயார்தான், ஆனால் அதை சரியான விதத்தில் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இங்கே குறிப்பிட பட்டுள்ள சில தகவல்கள் என் பார்வையில் சரி என்று பட்டவைதான். தவறுகள் குறைகள் ஏதும் இருப்பின் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். (ரொம்ப முயற்சி பண்ணியும் பதிவு கொஞ்சம் பெரிதாகி  விட்டது...பொறுத்துகொள்ளுங்கள்)



திங்கள், டிசம்பர் 6

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!

    காதலியை, மனைவியை
    தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர் 
    வாழும் இங்கே தான் 
    வேறு சில புல்லுருவிகள் !
  
    அன்பு, அக்கறை காட்ட வீட்டில் 
    அவளுக்கும்  ஆட்கள்  உண்டு 
    என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய 
    உன் அறியாமை என்னே !
  
    பெண் வீழ்ந்தாள்  என்று நினைத்தாயோ
    வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும்
    உன் வித்தை புரியா
    பேதையவள் அன்றோ !
  
    தாய்க்கும் தாரதிற்க்கும்
    வித்தியாசம் உண்டென்பதை
    உணரா மூடன் நீ அன்றோ !
  
    அடுத்தவன் பெண் தானே
    எடுத்தாள சுலபம் என்று எண்ணியது
    உன் மடமை அன்றோ !
  
    உன் வீட்டு பெண்ணை அடுத்தவன் பார்த்தால்
    மட்டுமே வெகுண்டெழும்  உன் ஆண்மை
    என்ன  வேடிக்கையடா,மானிடா !?
  
    காதலை விட புனிதமான நட்பை 
    காமத்திற்கு என்றே கடைவிரிக்கும் 
    கூட்டத்தின் தலைவன் பதவி உனக்கே !
  
    பாரதியின் ரௌத்ரம் பழகினால் 
    மட்டும் போதாது பெண்ணே....
    செயலிலும் காட்டு,
    அழிந்தொழியட்டும் கயமை ! 
    களை எடுக்க ஏன் தயக்கம்
    தோள் கொடுக்க நல்லவர் பலர் 
    உண்டு இங்கே !
  
    'தேரா  மன்னா' இயம்பிய 
    வழி வந்தவள் அன்றோ நீ !
    உள்ளே கொந்தளிக்கும்
    நெருப்பை  அள்ளி எறி
    எரிந்து சாம்பலாகட்டும்
    அற்ப பதர்கள்... !!

இதை நான் சொல்லியே ஆகணும்...!!

பதிவுலக தோழி ஒருவர் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நிஜ நிகழ்வு,,,,பதிவுலகம் வந்த புதிதில் ஆண் பதிவர்  ஒருவர் ஒரு பெண் பதிவரிடம் நட்பாக பேசி பழகி இருக்கிறார்....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!?  காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த  ஆண் பதிவரின் நட்பு  தொடர்ந்து இருக்கிறது......!

நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...! நட்பு கொஞ்சம் பாதை மாறுவதை உணர்ந்து,  நட்பை  முறித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு அந்த  பெண் பதிவர் வந்ததை தெரிந்து டார்ச்சர் இன்னும் அதிகரித்து இருக்கிறது...கடைசியில் இந்த விவகாரம் அந்த பெண் பதிவரின் கணவன் காதிற்கு போய்விட்டது....அதன் பின் பிரச்சனை வேறு விதமாக திரும்பி விட்டது...தன் மனைவியை சந்தேகப்பட தொடங்கிவிட்டார்....மூணு மாதம் கழித்து அந்த பதிவரின் கணவன் இப்போது கோர்டில் போய் நிற்கிறார்.....!? பெண் பதிவரோ மன உளைச்சலில் சிக்கி பிளாக் எழுதுவதை தற்சமயம்  நிறுத்திவிட்டார். 

வேறு மாதிரியான பிரச்சனைகளையும் இந்த நபர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை பெண் பதிவர் நட்பை முறித்துக்கொண்ட பின் அந்த பதிவரை பற்றி மற்றவர்களிடம் இந்த பெண் அப்படி, இப்படி என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்...(என்ன செய்து இந்த மாதிரியான ஆட்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.) 

வேலையற்ற சில வீணர்களின் விளையாட்டால் இணையத்தில் பெண்கள் இப்படியும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் புதிய பெண் பதிவர்கள் ரொம்பவே கவனமாக பேசவேண்டியது அவசியம். அக்கறையாக, அன்பாக பேசுகிறாரே என்று நெருங்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். மேலும் இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் அளவுக்கு மீறி வரும் பாசம் எதில்  போய் முடியும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை...! கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.

மறுத்தல் அவசியம்

உங்க மெயில் id பெரும்பாலும் கொடுக்காமல் இருந்தால் நலம்...மீறி கொடுத்தாலும் சொந்த விசயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது...செல்போன் எண்ணையும் கொடுக்காமல் தவிர்க்கலாம் .எந்த கேள்விக்கும் நாகரீகமாக மறுப்பு சொல்வது பின்னால் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.....சிலருக்கு பொழுது போக்கே பெண்களின் மெல்லிய  உணர்வுகளோடு விளையாடுவது தான்.....?!

செல்போனில் ஏதாவது நம்பரை டயல் பண்ண வேண்டியது, எதிர்புறத்தில் பெண் குரல் கேட்டால் "சாரிங்க என் பிரண்ட்  நம்பருக்கு டயல் பண்ணினேன், தப்பா உங்களுக்கு வந்துவிட்டது, சரி விடுங்க....நீங்க என்ன பண்றீங்க.....உங்க குரல் காலேஜ் பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கு...எந்த காலேஜ்  படிக்கிறீங்க....?" இந்த மாதிரி உரையாடல் நீண்டு கொண்டே போகும். உடனே கட் பண்ணினாலும் கண்ட நேரத்தில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தொடரும். இந்த ராங் கால் விஷயத்தால் பெண்களில் சிலர் பாதிக்க படுகிறார்கள். 

இதைப்போலத்தான் இணையத்திலும் பெண் பதிவர்களுக்கு தொல்லைகள் தொடருகின்றன.....இந்த சங்கடங்களை வெளியில் சொல்ல இயலாமல் மனதிற்குள் புழுங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.  இரு பெண் தோழிகளிடம் (பதிவர்கள்) இடையே கூட இந்த மாதிரி ஆட்கள் சிண்டு முடித்து, பிரித்து விடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது பொழுது போக்கு, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு....?!! அவர்கள் பாதிப்பு அடைந்தால் அவர்களின் குடும்பமும் பாதிக்கும் என்பதை உணருவார்களா இந்த மாதிரியான ஆட்கள்...??! 

   
" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் " 

எச்சரிக்கை !!



சனி, நவம்பர் 27

பதிவர் எழுதிய நூல் - ஒரு அறிமுகம்


இந்த பதிவு வாழ்க்கைக்கு மிக அவசியமான விஷயத்தை பற்றி விரிவாக சொல்லகூடிய ஒரு நூலை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.  தமிழில் அந்தரங்க உறவை பற்றி பல நூல்கள் வெளி வந்திருக்கலாம், ஆனால் நான் குறிப்பிட கூடிய இந்த நூல் மற்றவற்றை விட சற்று மாறுபட்டது என்று சொல்வேன். இந்த நூலை பற்றி நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் அவர் சக பதிவர் என்பதுதான். அவரது பதிவுகள் பலவற்றை நான் படித்து இருக்கிறேன். பதிவுகளை நகைச்சுவையுடனும்,  நவீன அறிவியல் ஆய்வுகள் பாலியல் உறவுகள்  பற்றி என்ன சொல்கிறது என்பதையும் விரிவான விளக்கத்துடன் எழுதி இருப்பார். அவரது அந்த பதிவுகள் தான் இன்று அவரை ஒரு எழுத்தாளராகவும் உயர்த்தி  இருக்கிறது.

யார் இவர்.....? 

அவரது பெயர் ஹரிநாராயணன், அவர் பத்மஹரி என்ற பெயரில் பதிவுகள் எழுதி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமம் தான் இவரது சொந்த ஊர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரிதொழில்நுட்பவியலில் முதுகலைப்பட்டம் பயின்று முதலிடத்தையும், தங்கபதக்கத்தையும் வென்றவர். தற்போது ஜப்பானில் புற்றுநோய் ஸ்டெம் செல் குறித்த ஆய்வை (Ph.D) தொடர்ந்து வருகிறார். பெண்களின் மார்பகப்புற்று நோய்க்கான அடிப்படைக் காரணங்களை அறியும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். ஒரு தமிழனாய் இவரது ஆய்வு பயணம் மேலும் தொடர்ந்து சாதனை நிகழ்த்த நாம் இவரை வாழ்த்துவோம்.

நூலை குறித்த எனது விமர்சனம்

 உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் அறிவியல் மற்றும் மருத்துவ துறை சார்ந்த ஆய்வுகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்ட தமிழின் முதல் நூல் என்பதில் சந்தேகம் இல்லை. கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லாமல்,  மிக எளிமையான எழுத்து நடையில் எழுத பட்டிருக்கிறது. மேலும் செக்ஸ் என்பது உடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு ஆராய்ச்சியாளரான இவர்  அறிவியலுடன் சம்பந்த படுத்தி எழுதி இருப்பது செக்ஸ் பற்றிய குழப்பங்களையும், பயத்தையும் கண்டிப்பாக போக்கும் என்பது நூலை படித்த பின் எனக்கு தோன்றிய ஒரு எண்ணம்.

செக்ஸ் பற்றி பேசுவதே பெரிய குற்றம் என்ற மனோபாவம் நம்மிடையே இருப்பதால் தான் பல புரிதல்கள்  இல்லாமல் தாம்பத்தியம் பல வீடுகளில்  தள்ளாடி கொண்டு இருக்கிறது. சில தெளிவுகள் நிச்சயம் தேவை. அதற்கு இந்த நூல் கண்டிப்பாக உதவும்.

ஹார்மோன்களுடன் தொடர்புடைய சில நோய்கள், பாலியல் உறவுகளின் இயல்பு, பாலியல் வக்கிரங்கள், குற்றங்கள் போன்றவற்றையும், திருநங்கைகள், ஓரினச்சேர்கையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் உருவாக காரணம் என்ன என்பதையும் எழுதியுள்ளார். இவற்றை  பற்றி சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பதையும் சேர்த்து எழுதி இருப்பதன் மூலம்  சொல்லப்பட்டு இருக்கும் விசயத்தின் நம்பகத்தன்மையை புரிந்து கொள்ளமுடிகிறது.


மேலும் சில சுவாரசிய துளிகள்

* கள்ளகாதல் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் ஒரு காரணமாக மரபணுக்கள் இருக்கின்றன என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது...

40 %  மரபணுக்கள் காரணம்
60 %  வளர்க்கப்பட்ட விதம் மற்றும் சுற்றுபுறசூழல்

மரபணுக்களில் இருந்தால் இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதற்கு தீர்வையும் சொல்லி இருக்கிறார்.

* பெண்கள் வயதாக வயதாக பிறருக்கு உதவுவதையும், சேவை செய்வதையும் விரும்புகிறார்கள் என்பதை ஆய்வு சொல்கிறது.

*  திருமணதிற்கு பின் பலவருடங்களாக தான் குடும்பத்துக்கு உழைக்கும் பெண்கள் முதுமையில் அவர்களுடைய ஆசாபாசங்கள், லட்சியங்கள் போன்றவற்றிற்காக அதிக நேரம் செலவிடவே விரும்புகிறார்கள்...... தீர செயல்களை புரிய துணிகிறார்கள்...!

* பெண்கள் உள்ளுணர்வு மிக்கவர்கள், முகபாவங்கள் சைகைகள் போன்றவற்றில் ஒளிந்திருக்கும் பேசாத வார்த்தைகளின் அர்த்தங்களை கண்டறியும் திறன் பெற்றவர்கள் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன...


நூலின் உள்ளே…..
பாலியல் சுவாரசியங்கள்!
முத்தமும் வைரஸும்.
மதுவும் செக்ஸும்…..
அரிதான பாலியல் உடலியக்கங்களும், விளைவுகளும்!
திருநங்கைகள்/அரவாணிகள் பற்றிய முழுவிவரங்கள்; அறிவியல் பின்புலத்திலிருந்து மருத்துவம் வரை…..
ஓரினச்சேர்க்கையாளர்கள்; ஏன் பிறக்கிறார்கள், எப்படி உருவாகிறார்கள் இன்னும் பல தகவல்கள்…..
சமுதாயத்தின் சில பாலியல் பேரவலங்கள்/வக்கிரங்களும், தீர்வுகளும்!
கள்ள உறவுகள்; அதிர வைக்கும் அறிவியல் பின்புலம், உளவியல் காரணங்கள் மற்றும் தீர்வுகள்…..
பீடோஃபீலியா; குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: காரணங்கள், தீர்வுகள்…..
பாலியல் புதிர்கள்!
உச்சகட்டம்; புதிரா புனிதமா?: உச்சகட்டம் குறித்த பலவகையான விளக்கங்கள் மற்றும் பயன்கள்…..
இதில் முத்தமும் வைரசும் என்பதை படிக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.....முத்தம் கொடுத்தால் பரவுகிற கிருமி ஒண்ணு இருக்கிறதாம்...(இதற்கு மேல் இங்கே விரிவாக சொன்னால் நூலை படிக்கும் போது சுவாரசியம் இருக்காது... ) ஆனால் ஒரே ஆடவனை/கணவனை  கர்ப்பம் தரிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு  முன் மனைவி முத்தமிட்டால் சைட்டோமேகாலோ வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அப்பெண் பெற்று விடுகிறாள் என்கிறது ஆய்வு.  கருவுற்றபின் பிறக்க போகும் குழந்தையையும் ஆபத்தான வைரசிடம் இருந்து காப்பாற்றுகிறதாம்.


(முத்தம் கொடுப்பதிலும் கலந்திருக்கிறது
காதல் வைரஸ். ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கலாச்சாரம்தான் சரியானது என்பதை 
அறிவியலும் அங்கீகரிக்கும் அதிசயம்.....!)

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தான் சரி என்பதை அறிவியலும் அங்கீகரிக்கிறதை புரிந்து கொள்ள முடிகிறது....! (இந்த இடத்தில் லிவிங் டுகெதர்  நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லைங்க ......?!)  

ஜேம்ஸ்பாண்டையும் விட்டுவைக்கவில்லை இவர்....! ஒவ்வொரு தலைப்பும் வித்தியாசம் தான், படிக்கவும்  வெகு சுவாரசியமாக இருக்கிறது.

சமீப காலமாக  மருத்துவரிடம்  கவுன்செல்லிங் செல்வது அதிகரித்து வருகிறது , அப்படி செல்பவர்கள் இந்த நூலை படித்தால் தெளிவு பெறுவார்கள் என்பது நிச்சயம்....

ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது...
நூலின் விலையும் அதிகம் இல்லை 130/- மட்டுமே  

இந்த நூல் கிடைக்குமிடம்:
Blackhole Media  Publication Limited,
No.7/1, 3-rd Avenue, Ashok nagar,
Chennai-600 083. India
மேலும் அனைத்து ஊர்களிலும் இந்த நூல் கிடைக்கிறது.

இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:admin@blackholemedia.in  
செல்பேசி:+91 9600086474 ,+91 9600123146



புதன், நவம்பர் 24

' வேண்டும் பாதுகாப்பு ' - ஆண்கள்



'நவம்பர் 19 '  ஒரு முக்கியமான நாள் ஆண்களை பொறுத்தவரை....! பெண்கள் தினம் ஒன்று இருப்பது போல் ஆண்களுக்கும் ஒரு தினம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது, ஏன் சில ஆண்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஆண்களைக் கௌரவபடுத்தவும்,ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காகவும் தான் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடபடுகிறது....இதை படிக்கும் போது ஆண்களுக்கு என்ன ஆனது, நல்லாதானே இருக்கிறார்கள்.....இந்த உரிமை, பாதுகாப்பு என்ற வார்த்தையெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா என்று நினைக்கலாம்....! ஆனால் பதிவை தொடர்ந்து படிக்கும் போதுதான்  நான் சொல்வது எந்த அளவிற்கு சரி என்பது புரியும்.


இன்றைய அவசர யுகத்தில் ஆண்கள் குடும்பத்திலும், வெளியிலும் பல பொறுப்புகளை கவனித்து வந்தாலும் அவர்களின் தியாகங்கள் பெரும்பாலும் மறக்கடிக்கபடுகின்றன அல்லது மறைக்கப் படுகின்றன.  அதை நினைவு கூறி 'ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாளை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்' என்ற கேள்வியை முன் வைத்து இந்த தினம் கொண்டாடி முடிக்கப்பட்டுவிட்டது.            


எனது தாம்பத்திய தொடரின்  ஒரு பதிவில்  'ஒரு ஆதங்கத்தில் ஆண்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூடிய சீக்கிரம் போராட போகிறார்கள்' என்று எழுதி இருந்தேன். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம்  நடக்கும் என்று நினைக்கவில்லை. இப்போது ஆண்கள் சங்கம் சார்பில் எங்களுக்கும்  பாதுகாப்பு சட்டம்  கொண்டு வர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். இது நாளிதழில் வந்த செய்தி. 

எவ்வளவு காலம் தான் இந்த ஆண்களும் பொறுமையா இருப்பார்கள்....?!!

ஏன் இந்த நிலை..?

முன்பு ஆண்கள், பெண்களை அடிமை படுத்தினார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் ஆணாதிக்க உலகம் என்றும் பெயரும் வைத்தார்கள். என்னை பொறுத்த வரை இந்த ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற வார்த்தைகளில்  என்றும் முழு உடன்பாடு இருந்தது இல்லை. (தவிரவும் இந்த பதிவிற்கு அதை பற்றிய வாதங்களும் , கருத்துக்களும் தேவை இல்லை என்பதால் ஒரு சில வார்த்தைகளுடன் நிறுத்தி கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) பெண் உடல்ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்த பட்டாள், பல திறமைகள் அவளிடம் இருந்தும்  வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்க பட்டாள். அப்புறம் நம்ம பாரதியார் வந்தார், புதுமை பெண்களாக மாறவேண்டும் என்றார். 'அடிமை விலங்குகளை அறுத்து எறிந்து விட்டு வெளியே வாருங்கள் புதுமைகளை சமையுங்கள்' என்று பெண்களுக்காக குரல் எழுப்பினார், புதுமை கவிஞன் நம் பாரதி.

இன்றைய நம் பெண்களும் இது தான் பாரதி சொன்ன புதுமை போல என்று புரிந்துக்கொண்டு பலவிதங்களில் தங்களை மாற்றிக்கொண்டு நடை பயிலுகிறார்கள். அவர்களுக்கு தவறாக தெரியாத வரை எதுவும் தவறில்லை தான் . ஆண்களுடன் எல்லா துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு கொண்டு முன்னேறி கொண்டே செல்கிறார்கள். சந்தோசமாக இருக்கிறது. 'ஆணிற்கு பெண் இளைப்பில்லைக் காண்'  என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணாக பெருமையாக இருக்கிறது. ஆனால் இன்றைய சில பெண்களால் பல ஆண்களும் கடுமையாக அவதி படுகிறார்கள் என்பதை எண்ணி வருந்துகிறேன். 

அரசாங்கமும் பெண்களுக்கு சாதகமான பல சட்டங்களை இயற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவிற்கு அவசியமான இரண்டு சட்டங்களை இங்கே குறிபிடுகிறேன்.

1. வரதட்சணை கொடுமை 
2. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்.

இரண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மிக முக்கியமான சட்டங்கள் தான். இதே சட்டங்கள் ஆண்களை படுத்தும் பாடு சொல்லி முடியாது. சில பெண்கள் தங்களின் சுயநலத்திற்காக இந்த சட்டங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் பாதிக்கப்பட்ட ஆண்களின் வேதனைக்கு காரணம். தன்  கணவன் மேல் ஏதும் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டால் உடனே அந்த பெண் கொஞ்சமும் யோசிக்காமல் போலீஸ்  ஸ்டேஷன் சென்று தன் கணவன் மேல் புகார் கொடுத்து விடுகிறாள்.

அங்கேயும் இந்த ஆணை ஒருதலை பட்சமாகவே தான் விசாரிக்கின்றனர். இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் விசாரிப்பதே இல்லை. பெண் வந்து புகார் செய்து விட்டால் அந்த ஆண் குற்றவாளி தான் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப் படுகிறான். அவனது சொல், வாதம்  பெரும்பாலும் ஏற்க படுவதில்லை  என்பதே உண்மை. சில நேரம் அந்த ஆணுடன் அவனது அம்மா, அப்பா , உடன் பிறந்தோர் போன்றோரும் சேர்த்தே  குற்றவாளி ஆக்கப்பட்டு தண்டிக்க படுகிறார்கள். (மாமியார், நாத்தனார் போன்ற பெண்களும் இந்த சட்டத்தால் பாதிக்கபடுகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.....!)

என்னை மிகவும் பாதித்த  ஒரு உண்மை சம்பவம் ஒன்று,

கடந்த  மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது. எனது உறவினர் ஒருவரின்  மகனுக்கு அப்போது திருமணம் முடிந்து ஆறு மாதமே முடிந்த சமயத்தில் மகனுக்கும் மருமகளுக்கும் நடந்த ஒரு சண்டையின் முடிவில் அந்த பெண் கொஞ்சமும் யோசிக்காமல் தனக்கு தீவைத்து கொண்டு இறந்து விட்டாள். திருமணம் முடிந்த ஆறு மாதத்திற்குள்  இந்த சம்பவம் நடைபெற்றதால், போலீஸ் விசாரணையின் முடிவில் அந்த பெண்ணின் கணவன், மாமனார், மாமியார், கணவனின் தம்பி உள்பட நாலு பேரையும் குற்றவாளிகள் என்று கைது செய்து விட்டார்கள். இதில் பரிதாபம்  என்னவென்றால் இதில் கொஞ்சமும் சம்பந்த படாதவன்  இந்த கணவனின் தம்பி. அவன்  அப்போது  ஹாஸ்டலில் தங்கி மருத்துவ  கல்லூரியில் படித்து கொண்டிருந்தான்   

அதற்கு பிறகு இரண்டு வருடங்களாக கோர்ட், கேஸ் என்று பல்வேறு அலைகழிப்புக்கு பிறகு இப்போது விடுதலை செய்யப் பட்டுள்ளனர். அந்த பெண்ணின் அவசர புத்தியும், பிடிவாதமும் தான் அவளது தற்கொலைக்கு காரணம் என்றும் அவளது கணவன் மற்றும் வீட்டினர் அப்பாவிகள் என்றும் தீர்ப்பளித்து உள்ளனர். (திருமணத்திற்கு முன்பே அந்த பெண் தனது தாழ்வு மனப்பான்மையால் இரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றபட்டு இருக்கிறாள் என்பது  பின்னர் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது....!?)
(பையனின் வீட்டாரும் பெண் வீட்டார் கொடுத்த அத்தனை சீதனங்களையும் பெண் இறந்த சில நாட்களில் கொடுத்து விட்டனர்..... தன் பெண்ணை பற்றி சரியாக தெரிந்து இருந்தும் பெண் இறந்த வருத்தத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள்)

காரணம் எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும்...இரண்டு வருடமாக இந்த நால்வரும் பட்ட அவமானங்கள்,சந்தித்த ஏளன பார்வைகள், அனுபவித்த இன்னல்கள், மன உளைச்சல்கள்.......என்னவென்று சொல்வது....?!!மருத்துவம் படித்து வந்த அந்த பையனின் படிப்பு நின்றுவிட்டது....இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான் . அந்த பெண் ஒரே நாளில் தன்  வாழ்க்கையை முடித்து நிம்மதி அடைந்து விட்டாள்...ஆனால் இவர்கள் இன்று வரை நடைபிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல உதாரணங்கள் இருக்கின்றன இது போல்.


இந்த மாதிரியான சென்சிடிவான விசயங்களில் நிதானமாக ஆராய்ந்து  அனைத்தையும், சம்பந்த பட்ட இரண்டு  பக்கங்களையும் விசாரிக்க வேண்டியது முக்கியம்.  

குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்

தன் கணவனை கட்டுபடுத்த சில பெண்கள் எடுக்கும் ஒரு ஆயுதம் தான் இந்த குடும்ப வன்முறை தடுப்பு சட்டம். ஆண், பெண் இருவருக்கும் இடையிலான பெரும்பாலான பிரச்னைகள்  எல்லாம் செக்ஸ் குற்றங்களாகவே பார்க்க படுவதால் பல ஆண்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். பிடிக்காத ஆண் மேல் செக்ஸ் புகார் கொடுத்து ஆண்களை சில பெண்கள் பழி வாங்குகின்றனர். 

அப்படி எல்லாம் இல்லை என்று மறுப்பு சொல்ல முடியாத அளவிற்கு சில புள்ளி விவரங்கள் இதை நிரூபிக்கின்றன...

சில புள்ளி விவரங்கள் 

*  கடந்த 12 ஆண்டுகளில் மனைவியால் விளைந்த கொடுமையால் 1,70,000 மணமான ஆண்கள்  தற்கொலை செய்துள்ளனர்.  

*  2001   ஆம் ஆண்டு வரை 13 லட்சம் ஆண்கள் வேலை  இழந்துள்ளனர்......!?

*  திருமணம் ஆன மூணு ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள் பலவிதமான சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.  

*  ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றசாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைது தேவை இல்லாதவை என்று தேசிய போலீஸ் கமிசன் கருத்து தெரிவித்துள்ளது....!? கைதான நபர்களில் இருபது சதவீத பேர் மீதான குற்றம் மட்டும்தான் நிரூபிக்கப்பட்டுள்ளது.....! 

* இந்த புள்ளிவிவரங்களை வைத்து ஆண்கள் மீதான குற்றங்களை விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க ஆண்களுக்கான தேசிய கமிசன் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆண்கள் சங்கம் தங்களது கோரிக்கைகள் என்று சிலவற்றை முன் வைத்துள்ளன அதில் சில......


* பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விசயத்தில் அக்கறை காட்டுவதில்லை. 

* கள்ள உறவு, அதன் தொடர்பான கொலைகளை தடுத்திட இ.பி.கோ 497 சட்டத்தினை திருத்தி ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்கிட வேண்டும்.

* குடும்ப வன்முறை சட்டம் 205 ஐ நீக்க வேண்டும்

இவை எல்லாம் சமீபத்தில் ஆண்கள் சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிய கோரிக்கைகள்....
                                                                                                                               நன்றி - நாளிதழ்கள்   
ஆண்களுக்கு மறுக்கப்படும் சில நல்லவைகள்

* பெண்களின் பலவகை நோய்களையும் கண்டறிய கட்டாய ஸ்க்ரீனிங் (screening) செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களை மட்டுமே தாக்கும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், இதய அடைப்பு போன்ற நோய்களை ஆரம்பத்தில் கண்டறியக்கூடிய வசதி  இல்லை என்பது ஆண்களின் வருத்தம். இந்த வசதி இல்லாததால் பல மரணங்கள் ஊக்கிவிக்கபடுகின்றன. 

* சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் முடிந்தும் ஆண்கள் நலனுக்காக என்று இந்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை என்பது நல்ல செய்தி இல்லை....!

*  குடும்ப வன்முறை என்பதே ஆண் தான் செய்வான் பெண்கள் செய்யவே மாட்டார்கள் என்று திட்டவட்டமாக சட்டத்தில் இருக்கிறதாம்...!?

*  விவாகரத்து பெறும் போதும் சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் வளர பெரும்பாலும் அனுமதி  மறுக்கபடுகிறது (பெண் குழந்தைகள் விதிவிலக்கு) ஏன் தாய்க்கு இருக்கும் அதே பாசமும் அன்பும், அக்கறையும் அந்த தந்தைக்கு இருக்காதா....?? தந்தையை பிரிந்து  வாழும் அந்த குழந்தைக்கு தந்தை என்ற உறவின் மீதே வெறுப்பு வந்து விடுவதை தவிர்க்க முடியாது. எதிர்காலத்தில் தந்தை என்ற உறவை அறியாத இளம் சமூகம் உருவாகும் அபாயமும் உள்ளது. 

*  பல பணிகளுக்கு  ஆண்கள் மறுக்கபடுகிறார்கள்.

*  பெண்களும் நன்றாக சம்பாதித்து வரும் இன்றைய காலகட்டத்தில் விவாகரத்திற்கு  பின் ஆண் அதிக அளவில் ஜீவனாம்சம் (குழந்தைகளை காரணம் வைத்து) கொடுக்க வேண்டி இருக்கிறது வாழ் நாள் முழுதும்...!  

இதை போல் பல விசயங்கள் இன்னும் இருக்கின்றன...!  

'இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம்' என்னும் அமைப்பு துவங்கப்பட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறது....! 






போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...