சனி, நவம்பர் 20

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.....!


எனக்கு ஒரு நாலு நாளாக ஒரு பெரிய பிரச்சனை.....அதை யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்தது தான் மிச்சம்.....! ஆனால் இன்னும் குழப்பம் தான் வருகிறது ஒரு தீர்வும் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிச்ச போது தான் பதிவுலகம் நினைவு வந்தது.சரி தான் நம்ம பிரச்னையை அபாயரட்சர்களிடம் சொல்லி தீர்வு பெறுவோம் என்று இங்கே சொல்ல வந்திருக்கிறேன் . நல்லா படிச்சிட்டு ஏதோ ஒரு வழி சொல்லுங்க நண்பர்களே.

ஓ.கே நேரடியா விசயத்துக்கு வருகிறேன். இது  எறும்புகள் பத்தின ஒரு சீரியசான ஒரு விசயங்க.  எறும்பை எல்லோருக்கும் நல்லாவே தெரியும் அதனால் நான் புதுசா அவங்களை  அறிமுகபடுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். எனக்கு இந்த எறும்புகளால் ஒரு சிக்கல்..... அடடா இருங்க ஓடிடாதிங்க....! (எங்க வீட்டுக்கு எறும்பு வந்திச்சி, என்னை மட்டும் கடிச்சிடிச்சி, ஏன்னு தெரியல அப்படின்னு உலகத்தில் நடக்காத ஒன்ன சொல்லி உங்களின் பொறுமையை நான் சோதிக்க  விரும்பவில்லை...!)  இது வேற மாதிரியான ஒரு  மேட்டர்.....!

ஐந்து நாளுக்கு முன்னால காப்பி போட செல்பில இருக்கிற சர்க்கரை டப்பாவை எடுக்கும் போது கை தவறி கீழே போட்டுட்டேன். கொட்டியது போக மிச்சத்தை மறுபடி டப்பால போட்டு வச்சிட்டு, கீழே இருக்கிற சர்க்கரையை ஓரமா ஒதுக்கிட்டு மத்த வேலையை பார்க்க போயிட்டேன். சாயங்காலம் வரைக்கும் இதை அப்படியே மறந்திட்டேன். ( சிஸ்டம் கிட்ட வந்து  உட்காந்தா என்னையே மறந்துடுறேன், சர்க்கரையை  எப்படி  நினைப்பேன் ....?!)

அப்புறம் சாயங்காலம் பசங்க வந்த பிறகு டிபன் பண்ண kitchen போனப்பதான் அடடா சர்க்கரையை காலையில கொட்டினோமே எறும்பு படை திரட்டி வந்து  இருக்குமேன்னு பதட்டமா பார்த்தா, என்ன ஆச்சர்யம்.....சர்க்கரை அப்படியே இருக்கு ஒரு எறும்பு கூட அதன் மேல இல்லை....! (நாம வீட்டை ரொம்ப சுத்தமா வச்சிருக்கோம் அதுதான் எறும்பு இல்லை அப்படின்னு ஒரே பெருமை தான் போங்க....ஆனா இது ரொம்ப நேரம் நீடிக்கல.....அந்த இடத்துக்கு கொஞ்ச தள்ளி  தூரத்தில் இவங்க லைன் கட்டி போயிட்டு இருக்காங்க......! அந்த  நேரம் ஆரம்பிச்சக்  குழப்பம்  தாங்க எனக்கு இப்பவரை தீரல...!!

ஏன் எறும்பு சர்க்கரை கிட்ட வரல...? சரி இன்னும் ஒருநாள் வருதான்னு பார்ப்போம் , அப்புறம் சுத்தம் படுத்திக்கலாம்னு அப்படியே விட்டுட்டேன் சர்க்கரையை....! (எல்லாம் ஒரு ஆராய்ச்சிதான்....?!) மூணு நாள் ஆச்சு...ஆனா ஒரு எறும்பு கூட அந்த திசை பக்கம் எட்டி கூட பார்க்கல....என்னுடைய ஆச்சரியமும், குழப்பமும் ஜாஸ்தியானது தான் மிச்சம்....ஏன் சர்க்கரை கிட்ட வரலன்னு புரியவே இல்லை.

சரி கணவர் கிட்ட சொல்வோம் என்று ஆர்வத்தோடு போய் சொன்னேன்.....அதுக்கு அவர், " சர்க்கரையை அஜாக்கிரதையா கீழே கொட்டினது  முதல தவறு, அதையும் மூணு நாளா கிளீன் பண்ணாம இருந்தது இரண்டாவது தவறுன்னு..........."  லிஸ்ட் போட்டு திட்ட ஆரம்பிச்சிட்டார்......!! அடடா, என்னடா இவர் நம்மளோட ஆராய்ச்சி புத்தியை பத்தி புரிஞ்சிக்காம இருக்காரே என்று ஒரே பீலிங்கா போச்சு.....!?

அதுதான் உங்ககிட்ட இதை கேட்கலாம்னு வந்திருக்கிறேன்....என் சந்தேகங்களை சொல்றேன்......தெளிவுபடுத்துங்கள்.....

சந்தேகம் 1 : மனிதர்களை மாதிரி எறும்புகளுக்கு சர்க்கரை வியாதி வந்திக்குமோ....?

சந்தேகம் 2  : சர்க்கரையில் இனிப்பு தன்மை குறைந்து விட்டதா.....?

சந்தேகம் 3  : எறும்புக்கே  பிடிக்கலேன்னா நமக்கு மட்டும் எப்படி பிடிக்கும்....?

சந்தேகம் 4 : இப்போது எல்லாம் காபி குடித்தால் தான் தலைவலியே வருகிறது. அதற்கு காரணம் இந்த சர்க்கரையா  இருக்குமோ....??

முக்கியமான 
சந்தேகம் 1 :  எறும்புக்கு பிடிக்காத வேதி பொருள் ஏதும் அதில் கலந்திருக்கா...??

சந்தேகம் 2 : அப்படி பட்ட வேதி பொருள் என்னவாக இருக்கும் ...?

சந்தேகம் 3 :  அந்த வேதி பொருள் கலந்த சர்க்கரையை நாம் உபயோகித்தால் நம் உடம்பிற்கு பாதிப்பு ஏதும் வருமா.....?? அப்படினா அது என்ன பாதிப்பு...?

முன்பு எல்லாம் இப்போது வருவது போல் வெள்ளை வெளேர் என்று இருக்காது...கொஞ்சம் நிறம் கம்மியாக பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். இப்படி வெள்ளையாக இருப்பதற்காக ஏதும் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.  

தெரிந்தவர்கள் இதனை பற்றி விளக்கமாக கூற வேண்டும் என்று தான் என் சந்தேகங்களை இங்கே கேட்கிறேன்....என்னை மாதிரி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

பொதுவா அதில் பிரச்சனை இருக்கோ இல்லையோ சர்க்கரை சேர்ப்பதை குறைத்து கொண்டால் மிக நல்லது.  அதற்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை தூள் செய்து வைத்து கொண்டு உபயோகித்து வந்தால் உடலுக்கு நல்லது. (அப்பாடி கடைசில ஒரு மெசேஜ் சொல்லிட்டேன்...!)







வாசலில் 'அழகு தேவதை நீ....!'







புதன், நவம்பர் 17

வரப்போகிறது ஒரு யுத்தம்....!


"2030 ம் ஆண்டில், உலகில் பாதி பேருக்கு குடிநீர் கிடைக்காது....தண்ணீரை மையமாக வைத்து நாடுகள் ஒன்றை ஒன்று அடித்து கொள்ள கூடும்......! இஸ்ரேல், சூடான், மத்திய ஆசியா என்று உலகம் முழுதும் யுத்தம் பரவ கூடும்"  இதை  நான் சொல்ல வில்லை.....! நம்ம ஐ. நா தான் சொல்கிறது....இதற்கு மாற்று ஏற்பாடு செய்தே  ஆக வேண்டும், அதுவும் உடனே என்று எச்சரிக்கை விடுக்கிறது....!!? அதற்கான ஆலோசனையாக மழை நீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் சொல்கிறது......!!

2030 வர இன்னும் 20 வருடம் இருக்கே என்று மெத்தனமாக இருக்காமல் அப்போது அவதி பட போகிறவர்கள் நம் பிள்ளைகள் தான் என்று சுயநலமாக எண்ணியாவது முயற்சிகளை இன்றே எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே முயற்சி செய்தால் போதாது....!? தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அக்கறை கொள்ளவேண்டும்......(நம்ம வீட்டை பார்க்கவே நேரம் போதவில்லை. இது வேறையா என்று புலம்புவர்களை தவிர்த்து !)

முதலில் எந்த விதங்களில் எல்லாம் நீர் ஆதாரங்களை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்....! மழைநீர் சேகரிப்பு பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அடுத்து முக்கியமானது ஆறுகளில் ஓடும் தண்ணீரை பாதுகாத்து கொள்வது.....அதனை பற்றி இங்கே பார்க்கலாம். 

விவசாயிகளின் முக்கிய தேவைகளில் ஒன்று ஆற்று நீர்......

'ஆற்று வளம் ஒரு நாட்டு வளம் ' என்று விவசாயிகள் சொல்வார்கள். ஆற்று வளம் நன்றாக இருந்தால் தான் நாட்டில் விவசாயமும், குடிநீரின் தேவையும் பூர்த்தி ஆகும். இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் நம்ம ஊரில் இருக்கும் ஆறுகளின் நிலைமையை  நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது.  எனக்கு தெரிந்த ஒரு ஆற்றை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஓடி தூத்துக்குடி வழியாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றை பற்றி சொல்லலாம். இந்த ஆறு ஒன்று தான் இப்போதைக்கு ஓரளவிற்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கிறது. ஆனால் இந்த ஆற்றின்  நிலைமை இப்போது பெருமையா சொல்லிக்கிற  மாதிரி இல்லை.

மணல் வளம்

ஆற்றுக்கு மிக இன்றியமையாதது அங்கே இருக்கும் மணல் தான் ஆனால் அந்த மணலை கொஞ்ச கொஞ்சமா சுரண்டி கொண்டிருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னனா இங்கே மணல் எடுக்கிறதே தவறு, இந்த மணலும் நமக்கு பயன்படாம பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு கடத்த படுகிறது. (அவங்க எப்பவுமே ரொம்ப விவரமான புத்திசாலிங்க...!) அவங்க மாநில ஆற்றில் மணல் எடுக்க கூடாதுன்னு தடை விதித்துவிட்டார்கள். (பின்ன எப்படி அவங்க ஊர்ல கட்டிடம் கட்டுவாங்க....?! அதுக்குதான் தமிழ் நாடு பக்கத்தில இருக்கிறதே......?! மணலை கடத்தி கொண்டு வந்திட்டா போச்சு)

ஆனால் நாம, அதுதாங்க தமிழன் தன் வீட்டை பற்றி நினைக்காமல் அள்ளிக்கொண்டு போய் அங்கே கொட்டிட்டு வராங்களே....! எல்லாம் விசயத்திலும் நாம எல்லா பக்கமும் சுரண்ட பட்டு கொண்டே இருக்கிறோம், அதுவும் தன் கையை வைத்தே தன் கண்ணை குத்துவது போல் அதுக்கு துணை செல்பவர்களை என்னவென்று சொல்வது....!?

இப்படி மணல் எடுப்பதால் ஆற்றின் நீரின் அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. மணல் நிறைய இருந்தால் தான் மழை பெய்யும்போது தண்ணீர் பூமிக்குள் நன்றாக இறங்கும், நீரின் ஓட்டமும் சீராக இருக்கும். ஆற்றின் ஜீவன் போல் இருக்கும் இந்த மணலை திருடுபவர்களை கொலைகாரர்கள் என்று சொல்லகூட  தகுதியானவர்கள் தான்.  மணல்  எடுக்கும் போது எந்திரங்களை வைத்து பெரிய பள்ளம் ஏற்படும் அளவிற்கு தோண்டுகிறார்கள்....இதனால் நீரின் ஓட்டமும் திசை மாறி ஒழுங்கின்றி சென்று வீணாகி போய்விடுகிறது. இன்னும் சொல்ல போனால் இவர்களாகவே நிரந்தரமாக ஆற்றின் நடுவே ரோடு வேற போட்டு விடுகிறார்கள். மீன் வளம் வேறு பாதிக்க படுகிறது....இப்படி கேடுகளை  சொல்லிட்டே போகலாம்....

அரசாங்கம் என்ன செய்கிறது ??

தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 'இனி எந்திரங்களை பயன்படுத்தி மணல் எடுக்க கூடாது' என்று அரசாங்கம் கடுமையான உத்தரவு போட்டு இருக்கிறது. குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆற்றில் மணல் எடுப்பதை தடை செய்யவேண்டும் என்று ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். இனி இதை    சரியாக கவனித்து கடத்தலை தடுக்க வேண்டியது சம்பந்த பட்ட அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது. மேலும் விவசாயிகளின் மூலம் பொது  நல வழக்கு போடப்பட்டதால் தான் தாமிரபரணி ஆறும் அரசாங்கத்தின் பார்வைக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமக்கு என்ன என்ற போக்கு கொஞ்சம் மறைய தொடங்கிவிட்டது என நினைக்கிறேன் . பொது மக்களும் கொஞ்சம் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகிறது. இரவில் தான் இந்த கடத்தல் முழு வேகத்தில் நடக்கிறது....அதை தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருந்தால் இந்த மணல் திருட்டை தடுக்கலாம்.

குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான ஆறுகளின் மணல் வளத்தை குறையாமல் பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியம். இப்போதே பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி படுகிறார்கள்....இனியும் நாம் இந்த மணல் கடத்தல் விசயத்தில் விழித்து  கொள்ளவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாக போய்விடும்.  

நாட்டில இருக்கிற எவ்வளவோ பிரச்சனைகளில் இதுவே முக்கியமானதாக தோன்றுகிறது....! உயிர் வாழ ஆதாரமான தண்ணீர் பற்றாக்குறையை முதலில் சரி செய்ய முயலுவோம்.....! இனி வரும் சந்ததிகளுக்கு தண்ணீரை கொஞ்சம் விட்டு செல்வோம்.....! தண்ணீருக்காய் நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்து கொள்ளும் என்பதை நினைக்கையில் வருத்தமே வருகிறது.....! 


அடுத்து நீரின் பற்றாக்குறைக்கு வேறு ஒரு முக்கிய காரணமாக இருப்பது சுற்றுச்சூழல் இதனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பாப்போம்... 







படம் உதவி : சௌந்தர்


வாசலில் 'துளிகள்....!'

ஞாயிறு, நவம்பர் 14

இன்று மட்டும் தான் குழந்தைகள் தினமா..?



எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்...குழந்தைகளை நாம் வாழ்த்த வேண்டும்.....ஆனால் 'இந்த ஒரு நாளில் மட்டும் நாம் நம் குழந்தைகளை வாழ்த்தினால் போதுமா ?' என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்...யோசித்து கொண்டே பதிவை தொடர்ந்து படியுங்கள்.


ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்காக படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. குழந்தை பிறந்து நடக்க தொடங்கியது முதல் அவர்களின் டென்ஷன் அதிகரிக்க தொடங்கி விடும். கணவன் சம்பாத்தியம் மட்டும் போதுமா என்று மனைவியும் வேலைக்கு செல்ல தொடங்குவார்கள். நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்..... இன்றைய ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்கிறோம் என்று ஒரு லிஸ்ட் போடுவோமே....



* கணவன், மனைவி இருவரும் போட்டி போட்டு கொண்டு பொருள் தேட உழைக்கிறோம்.



* பிள்ளைகள் பெயரில் பாங்கில் பணம் சேர்த்து வைக்கிறோம்.



* நகரத்தில் இருப்பதிலேயே சிறந்த பள்ளி எதுவென்று சல்லடை போட்டு அலசாத குறையா தேடி சேர்க்கிறோம். (டொனேசன் அதிகமா  கொடுத்து இடம் பிடிச்சேன்...?! சலிப்பாக பெருமை பட்டு கொண்டுதான்...!) 



* இன்னும் நல்லா படிக்க வேண்டுமே என்று ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் என்று வேறு சேர்த்துவிடுகிறோம்.



* தன் குழந்தை எல்லா கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று டான்ஸ், பாட்டு, கராத்தே, குங்க்பூ, ஸ்கேடிங்....இப்படி பல கிளாஸ்களில் சேர்த்து விடுகிறோம். (அவங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ...!) 



* பண்டிகை விசேச நாட்களில் விலை கூடுதலான துணியா பார்த்து பார்த்து வாங்கி அணிவித்து மகிழ்கிறோம்..(பக்கத்து வீட்டு குழந்தை போட்டு இருக்கிற டிரெஸ்ஸை விட விலை கூடுதலா...! ) 



* குழந்தைகள் அதிகம் உண்ண விரும்பும் பிஸ்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவற்றை வாங்கி கொடுக்கிறோம். (உடம்பிற்கு இவை ஆரோக்கியம் இல்லை என்றாலும் குழந்தை விரும்புதே என்று...!)



ஒரு பெற்றோரா இதை விட வேற என்னங்க செய்ய முடியும்....?! உண்மைதான் ஆனால் உங்களிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே.......! 



பதில் : இன்னும் யோசிச்சிட்டு இருக்கிறோம்....!?



சரி விடுங்க நானே சொல்றேன்....என் பதில் சரிதானா என்று மட்டும் சொல்லுங்க... 



உங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஓடி ஓடி எல்லாம் செய்றீங்க, மிக சிறந்த பெற்றோர் நீங்க தான், ஆனால் ஒண்ணு தெரியுமா...?? 



'உங்கள் குழந்தை உண்மையில் சந்தோசமா இருக்கா ? ஒரு நாளாவது இந்த கேள்வியை உங்க குழந்தைகளிடம் கேட்டு இருக்கீங்களா...?? இது வரை கேட்கவில்லை என்றால் இன்னைக்கு கண்டிப்பாக கேளுங்க...! நீங்கள் அவர்களுக்காக செய்ய கூடிய எல்லாம் விசயமும் அவர்களுக்கு பிடித்து இருக்கிறதா என்று இன்று கேளுங்க....! 



உங்களின் விருப்பங்களை அவர்கள் மேல் திணித்து வளர செய்வதை விட அவர்களின் விருப்பங்கள் என்னவென்று அறிந்து, அதையும் தெரிந்து கொண்டு  அதன் படி வளர்ப்பது நன்மை பயக்கும். நம் குழந்தைகள் நம்மை விட புத்திசாலிகள். 



குழந்தைகளை ரசித்து கொண்டாட இந்த ஒரு தினம் போதாது....தினம் தினம் ரசியுங்கள், செல்லமாய் உச்சியில் முத்தமிடுங்கள், உற்சாக படுத்துங்கள், பாராட்டுங்கள் நம் பிள்ளைகள் தானே சந்தோசமாக இருந்து விட்டு போகட்டுமே....! என்ன நான் சொல்ற பதில் சரிதானே...? மறுபடியும் யோசிச்சு பாருங்கள், சரியாதான் இருக்கும்....! 



குழந்தையை முதலில்  'குழந்தையா சந்தோசமாக இருக்க விடுங்கள்' என்று இந்த நாளில் உங்களிடம் கேட்டு கொள்கிறேன்.



சரிங்க நான் இத்துடன் முடிக்கிறேன்...என் பசங்களை இன்னைக்கு இன்னும் நான் கொஞ்சவில்லை...அப்புறம் கோவிச்சுக்க போறாங்க......




உங்களுக்கும் , உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும்.... என்னுடைய மற்றும்  என் இரு சுட்டி வாண்டுகளின் 'குழந்தைகள் தின வாழ்த்துக்கள்'   
  
                                                   

வெள்ளி, நவம்பர் 12

ஆபத்தான கலாச்சாரம்.....!



நம் இந்திய கலாச்சாரம் பிற நாட்டினரும் பார்த்து பொறாமை பட கூடிய அளவில் தான் இருந்தது சிறிது காலம் வரை....!? அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள்,  கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும்  நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமண வழக்கங்கள். மோதிரம், தாலி என்று எந்த முறையில் நடந்தாலும் எல்லா திருமணங்களும் பதிவு செய்ய பட்டுதான் வருகிறது, அதுவே கணவன், மனைவி இருவருக்கும் ஒரு சமூதாய அங்கீகாரமாகும்.  அதுவே முறையான திருமணமாக இருக்கிறது .எல்லாவற்றிலும் மேலை நாட்டினரை பார்த்து முன்னேறி (பின்னேறி) பழகி போன சிலரால் ஒரு புது கலாச்சாரத்தையும் பின்பற்றுவது என்பதும்  சரியானதாகவே தான் தெரிகிறது போலும். 

அப்படிப்பட்ட ஒரு புது கலாசாரம் தான் LIVING TOGETHER  என்று சொல்லகூடிய ஒன்று.  மனதிற்கு பிடித்த ஆண், பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வது....!!எப்போது இருவருக்கும் ஒத்து போகவில்லையோ அப்போதே பரஸ்பரம் பேசி  'இனி நண்பர்களாக மட்டும் இருப்போம்' என்று சொல்லி பிரிவது....?! இது என்ன கொடுமைங்க...!!? சென்னை போன்ற பெரிய நகரங்களில் இந்த கலாசாரம் பரவி கொண்டிருக்கிறது என்பதை பத்திரிக்கைகளின் மூலம் தெரிந்து அதிர்ச்சியாகிவிட்டது.

ஒருவேளை  இந்த மாதிரியான வாழ்க்கையில் தவறி குழந்தை ஏதும் பிறந்து விட்டால், பிரிந்த பின் அந்த குழந்தையை என்ன செய்வார்கள்....! ஏதும் பிரச்னை என்றால் உதவிக்கு யாரிடம் செல்வார்கள்....?! இது எந்த அளவுக்கு  அந்த பெண்ணிற்கு பாதுகாப்பை கொடுக்கும்......? அல்லது எதுவரை...??! முறையான திருமணம் முடித்த  கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்னை என்றால் வீட்டு பெரியவர்கள் பேசி தீர்த்து வைப்பார்கள், அல்லது முடியாத பட்சத்தில் போலீஸ் ஸ்டேஷன், அதையும் மீறி போனால் கோர்ட்  உதவியை  நாடுவார்கள்.

ஆனால் இது எதை பற்றியும் ஒரு கவலை இல்லாமல் படித்து நல்ல வேலையில் இருக்கும் நாகரீகமானவர்களிடம் இத்தகைய புதிய கலாசாரம் இப்போது வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.  இது மிகவும் ஆபத்தான, அதே சமயம் வருத்தப்பட கூடிய ஒரு நிகழ்வு.

இந்த முறையானது 'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' என்று சிலர் கொதிக்கும் அதே நேரம், இந்த மாதிரியான சீர் கேட்டையும்  'தனி மனித சுதந்திரம்' என்று சப்பை கட்டு கட்டி விதண்டாவாதம் செய்கிறார்கள் வேறு சிலர்.

இப்படி பட்ட ஒரு முறை தவறு என்றே உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி உள்ளது. இந்த மாதிரி சேர்ந்து வாழ்பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை. மேலும் இந்த மாதிரி வாழ்பவர்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் கோர்டில் வழக்கு தொடர்ந்தாலும் செல்லுபடியாகாது. மேலும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இந்த மாதிரியான உறவுகள் வராது என்றும் திடமாக தீர்ப்பு அளித்துவிட்டனர்.  இந்த தீர்ப்பு தான் இப்போது நம்மவர்களின் பொழுது போக்கு நேர பேச்சே....!

எது கலாசாரம்...?

இனி வரும் தலைமுறையினர் பண்பாடு  , கலாசாரம்னு சொல்றங்களே அப்படினா என்ன என்று கேட்க கூடிய நிலையில் இருப்பது வருத்தம் தான்.  பெரியவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்பை கற்க வைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒழுக்கம், பண்பாடு, விருந்தோம்பல் பண்பு, நம் கலாசாரம் போன்றவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும். (இதை கற்று கொடுக்க ஏதாவது கோச்சிங் சென்ட்டர் இருந்தா தேவலை....?!!) நம் வீட்டில் கல்லூரி செல்லும் பிள்ளைகளோ, அல்லது வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்கும் பிள்ளைகளோ  இருந்தால் இனியாவது அவர்கள் மேல் ஒரு கண் வைத்து கவனியுங்கள்....சொல்லமுடியாது உங்கள் பிள்ளை வீட்டுக்கு வெளியே ஒரு வீட்டை ரெடி செய்து குடும்பம் நடத்தி கொண்டிருக்கலாம்...!?? (உண்மையை சொல்றேங்க...!?) 

யோசியுங்கள் பெற்றோர்களே !

பிள்ளைகள் இப்படி செய்வதற்கு பெற்றோர்கள்  எப்படி காரணமாவார்கள் என்று நினைக்ககூடாது. வீட்டில் கிடைக்காத  அன்பு, அரவணைப்பு, பாசம் இந்த மாதிரியான முறையில் கிடைக்கலாம் என்று போகலாம்...! மேலும் இது  முழுவதும் உடல் தேவைக்காக மட்டும் தான்  என்று ஒதுக்கி விடமுடியாது. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன. எல்லோரின் மனதுமே  ஒரு சின்ன அங்கீகாரம், ஆதரவாய் சாய ஒரு தோள், அன்பாய் தலை வருட ஒரு கரம், நிம்மதியாய் உறங்க ஒரு மடி இவற்றுக்காக தான் ஏங்குகிறது என்று கருதுகிறேன்..... இல்லை என்று யாரும் மறுக்க முடியாது  அல்லவா  ....?!

இதை தேடித்தான் ஓடுகிறார்கள், அவர்களாகவே இப்படி ஒன்றை ஏற்படுத்தி நிம்மதி, சந்தோசம் காண முயலுகிறார்கள், அவசர முடிவு   என்று தாமதமாக உணர்ந்து அதில் இருந்து அதே அவசரமாக விடுபடுகிறார்கள்....ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடுவதில்லை....பழகிய நாட்களின் எண்ணங்களில் இருந்து அவர்களால் முழுதும் விடுபட இயலாது.....விளைவு குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வேதனை கடைசியில் மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறது.....!!? என்ன படிச்சி, என்ன சம்பாதித்து என்ன பலன்....இனி வாழ்க்கையின் பக்கங்கள் அனைத்தும் வெறும் வெள்ளை காகிதம் போன்றது தான்....!?        

என்ன முடிவு...?

மற்ற மாநிலத்தவர்களை விடுங்கள்...தமிழர்களுக்கு என்று பெரிய பாரம்பரிய கலாசாரம் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து போக போய்தான் இந்த மாதிரி சீர்கேடான  புது நாகரீகம் தலையெடுக்க தொடங்கிவிட்டது. என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...? நாடு முழுவதும் யோசிக்க வேண்டிய சர்ச்சைக்குரிய  ஒரு விஷயம் இது. பல பட்டிமன்றங்கள் கூட நடை பெறலாம், இப்படி சேர்ந்து வாழ்வதை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமா அல்லது தடுத்து நிறுத்த
வேண்டுமா என்று ...??







வாசலில் விடை கொடு.....!



புதன், நவம்பர் 10

தாம்பத்தியம் 21 - தம்பதியினர் பாதை தவறுவது எதனால் ?!

கணவன் மனைவி பாதை தவறுவது (மாறுவது )எதனால்??


பல காரணங்கள் இருக்கிறது. இது தான் என்று எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது. ஆனால் பொதுவாக சில காரணங்களை இங்கே கூறலாம் என்று இருக்கிறேன்.

* ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகபடியான பொசசிவனெஸ்
*  உடல் ரீதியான திருப்தியின்மை
*  மன பொருத்தம் இல்லாமை
*  கணவன் மனைவிக்கு இடையில் அதிகபடியான வயது வித்தியாசம்.

அதிகபடியான பொசசிவ்னெஸ்

பாதை தவறி செல்வதற்கு இது எப்படி காரணமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கு அதிகபடியான அன்பு, காதல் இருப்பது எப்படி தவறாகும். அந்த அன்பின் காரணமாகத்தான் தன்  துணையை சந்தேகபடுவதும் , கண்டிப்பதும் ஆகும். இதை  காரணமாக வைத்து எப்படி தவறான பாதைக்கு போவார்கள் என்று கேள்வி எல்லாம்...!!  அதிக  அன்பு வைப்பது கூடாதா....??

அன்பு வைப்பது  தவறாகாது....ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அதீத அன்பு ஒரு கட்டத்தில் வெறுப்பில் கொண்டு போய் விட்டு விடுகிறது....அன்பு எப்படி வெறுப்பாகும் என்று முதலில் பார்போம்.....

ஒருவர் மீது ஒருவர் 'நீ இப்படித்தான் இருக்கணும், வேற யாரிடமும் அன்பா இருக்க கூடாது, உன் அன்பு முழுவதும் எனக்கு மட்டும்தான் ' என்று சொல்லும் போது தொடக்கத்தில் மிகவும் மகிழ்வாக இருக்கும். அன்பை மழையாய் பொழியும் போது பரவஸத்தில் அப்படியே ஆழ்ந்து போய் விடுவார்கள். ஆனால் போக போக இந்த பேரன்பு கொடுக்கிற அதிகபடியான அழுத்தம் நம்மை நாமாக இருக்க விடாது...!!

எப்படி இதில் இருந்து வெளிவர போகிறோம் என்று துடிக்க வைத்துவிடும்...ஒருவரின் இயல்பை மாற்ற முயற்சிக்கும் போது அது இருவருக்கும் இடையிலான உறவையே கெடுத்து முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது.....அதற்கு பிறகு, தன் இயல்பை அப்படியே ஏற்றுகொள்ளும் வேறு ஒருத்தரின் பால் கவனத்தை திசை திருப்பி விடுகிறது....!?

சிறு பிள்ளை அல்லவே நாம்

நம் குழந்தைகளிடம் கூட நீ இப்படி இருக்கணும், இப்படி இருக்க கூடாதுன்னு நம் விருப்பத்தை திணிக்க முடியாது. ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் உண்டு. இதை விடுத்து நாம் பிரஷர் கொடுத்தோம் என்றால் நம்மிடமிருந்து கொஞ்சங்  கொஞ்சமாக  விலகி தள்ளி போவார்களே தவிர பாசிடிவாக எந்த பலனும் கிடைக்காது. எல்லோரின் மனதும் தன் நிம்மதி , தன் சந்தோசம் என்ற ஒன்றுக்காகத்தான்  ஏங்கிக்கொண்டிருக்கிறது.....! இந்த நிம்மதியையும், சந்தோசத்தையும் கொடுக்கிற ஒரு நல்ல அன்பு நெஞ்சம் தான் தேவையே தவிர, அன்பு என்ற பெயரில் நம்மை அழுத்தும்  ஒரு சக்தி தேவை  இல்லை.....!!?

திருமணம் முடிந்த புதிதில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பொசசிவ்வாக   இருப்பது அப்போது இனிமையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் , வேலை  பளு என்று வந்த பின்னும், இது தொடர்ந்தால் காலபோக்கில் சந்தேகமாக மாற கூடிய வாய்ப்புகள் தான் அதிகம்.  'ஆரம்பத்தில் நீ எங்க போனாலும், என்ன செய்தாலும் என்கிட்ட சொல்லுவ...., இப்ப வர வர எதுவும் சொல்றது இல்லை , ஏன் இப்படி மாறிட்ட...??'  இப்படிப்பட்ட வார்த்தைகள் வரத்  தொடங்கும்....! பின்னர் இந்த வார்த்தைகள் தடிக்க தொடங்கி பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கும்... ஆனால் இந்த மாதிரி ஆட்கள் ஒன்றை புரிந்துக் கொள்வதில்லை.    

திருமணம் முடிந்த புதிதில் புதிய சூழல், புது மனிதர்கள் சுற்றி இருக்க, தன் துணையை மட்டுமே முழுதாய் சார்ந்து இருக்க வேண்டி இருப்பதாலும், பெரிய பொறுப்புகள் ஏதும் இல்லாத அந்த சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர், மாறி மாறி அன்பை பொழிந்து தள்ளுவார்கள். அந்த சமயத்தில் சின்ன சின்ன விஷயம் கூட  ரொம்ப முக்கியமாகப்படும்    தன் துணையிடம் பகிர்ந்து கொள்ள நேரமும் கிடைத்து இருக்கும், ஆனால் சில வருடங்கள் கடந்த  பின் இருவருக்குமே பொறுப்புகளும், கடமைகளும் அதிகரித்திருக்கும். எதையும் சொல்லகூடாது என்று யாரும் வேண்டும் என்றே மறைக்க போவது இல்லை. ஆனால் 'சின்ன விசயம் தானே, இதை போய் எதுக்கு சொல்லிக்கிட்டு'  'மெதுவாக சொல்லிகொள்ளலாம்' என்று அசட்டையாக இருந்திருக்கலாம்.  

தன் கைக்குள்....!

தன் துணை தன் கைக்குள் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவன், சின்ன சின்ன விசயத்துக்கும் அம்மாவின் அனுமதியை எதிர்பார்ப்பது போல், துணையின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல்  மட்டும் தான் நடக்க வேண்டும் என்று வற்புறுத்துவது தான் தவறு.

"வளைந்து நெளியும் நாணலுமே, குறிப்பிட்ட அளவிற்கு மேல்  வளைத்தால் ஒடிந்துதான் போகும்"

நிதர்சனம்

கணவன் மனைவியாக இருந்தாலுமே, இருவருமே தனி தனி நபர்கள் , தனிப்பட்ட விருப்பங்கள், தனிப்பட்ட இயல்புகள் என்று இருக்கும். ஒருவருக்காக மற்றொருவர் முழுதாய் மாறுவது என்பது முடியாத காரியம்.  தனது சுயத்தை இழப்பது யாராலும் இயலாது. ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு மாறாக  அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது துணையாக இருந்தாலுமே, இன்றைய காலகட்டத்தில் தவறுதான்.  'துணை தன் இயல்பு படி செயல்படுவதே, அவர்களுக்கு  நிம்மதியை  தரும்' என்பதை மற்றொருவர்  புரிந்து கொண்டு நடப்பதே, தாம்பத்தியதிற்கு நல்லது.   

எதிர் விளைவு 

முக்கியமான எதிர் விளைவு ஏற்படக்கூடிய  வாய்ப்பு ஒன்றும் உள்ளது....?! ஒருவர் விருப்பத்திற்கு மாறாக மற்றொருவர் வளைக்க முயலும்போது, தனக்கு சாதகமான விசயங்களை மட்டும் சொல்லிவிட்டு பாதகமான விசயங்களை மறைக்க பார்ப்பார்கள். நீங்களாகவே  அவர்களை திருட்டுத்தனத்தை செய்ய வைக்கிறீர்கள்.....??! இறுக்கி பிடித்தால் திமிறத்தான் பார்ப்பார்களே தவிர பிடிக்குள் இருக்க மாட்டார்கள். இப்படியும் கணவன்/மனைவி பாதை மாற வழி ஏற்பட்டுவிடுகிறது. 

கணவன் மனைவி இரண்டு பேருக்குமே இப்படி over possesssive   என்ற விதத்தில் அழுத்தும் அதீத அன்பே துணையை மூச்சு திணறடித்து விடும்.  இதில் இருந்து வெளிவர space தேவை.  இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் வெளியிடங்களில் பேச பழகி கொண்டிருக்கிற ஒரு நட்புடன் சாதாரணமாக ஏற்படும் ஒரு பழக்கம் ஈர்ப்பில் கொண்டுபோய் விட்டு விடுகிறது.....?? 

பாதைகள் மாறுகின்றன....விருப்பம் இன்றி பயணமும் தொடர்ந்து விடுகிறது....!!??

தாம்பத்தியத்தில் அடுத்து தொடருவது 'உடல் ரீதியான திருப்தி இன்மை.....?!' 

  


வாசலில் விடை கொடு.....!



திங்கள், நவம்பர் 8

உச்சம் ஏன் அவசியம் ?! தாம்பத்தியம் பாகம் - 20



முந்தைய பதிவில் பெண்கள் சம்பந்தப் பட்ட உச்சகட்டம் என்ன என்பதைப்  பற்றி சிறிது சொல்லி  இருந்தேன். பதிவைப்  பற்றி வந்த மெயில்களில் பல சந்தேகங்களை கேட்டு இருந்தனர், இதனை பற்றி இவ்வளவு சந்தேகங்களா என்று ஆச்சரியம் வரவில்லை மாறாக ஏன் இப்படி தெளிவில்லாமல் இருக்கிறோம் என்ற ஒரு ஆதங்கம் தான் இருக்கிறது. படித்த கணவன்  மனைவிக்கு இடையில் கூட இதனைப்  பற்றிய தெளிவு இல்லை என்பதை என்னவென்று சொல்வது...?! எது பரவச நிலை என்பது தெரியாமல் அல்லது உணராமல் இருக்கும் போது, தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாட்டுக்கு காரணம் எந்த புள்ளியில் தொடங்கியது என்பதை எப்படி புரிந்துக்  கொள்ளமுடியும்....?? 

திருமணம் முடித்தோம், பிள்ளை பெற்றோம், பள்ளிக்கு அனுப்பினோம், சம்பாதிக்கிறோம், பேங்க்கில் (Bank Balance)  சேமிப்பை அதிகரித்தோம் என்று வாழ்வது எப்படி ஒரு நிறைவான வாழ்வாகும்...?? கடைசிவரை ஒன்றாக எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் சுகமாக ஒருவருக்கு ஒருவர் அன்பாக வாழ்ந்து முடிப்பது தானே ஒரு நிறைவான வாழ்க்கையாகும்...!! அப்படி வாழ்கின்ற பெற்றோர்களால் தான் இந்த சமூகத்திற்கு சிறந்த சந்ததியினரை விட்டு செல்ல முடியும்.      

/////பெண்களின் உச்சக்கட்டத்துக்கும் ஆண்களின் உச்சக்கட்டத்துக்குமிடையே இருக்கும் அடிப்படை வேறுபாடும் இந்த புரிதல் குறைவின் காரணமாக இருக்கலாம். காதல் வயப்பட்ட ஆண்-பெண் இருவரின் அண்மையிலும் கூட அந்தரங்க உறவு என்று வரும்பொழுது தயக்கமும் கூச்சமும் இருப்பது இன்னொரு காரணம் என்று நினைக்கிறேன். பெண்களுக்குத் தோன்றும் பரவச இடைவெளிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆண்களும் (பெண்களும் கூட) "திருப்தி அடைந்து விட்ட" தாக நினைப்பதும் உண்டு. ஆண் பெண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதும் ஒரு காரணம் தான் (உங்கள் பதிவில் கூட கணவன் மனைவியை ஆள்கிறான் என்று தான் எழுதியிருக்கிறீர்கள் :). பெண் ஆணை அடக்கக் கூடாது என்று நினைக்கிறோமா? கருத்தொருமித்த காதலருக்கிடையே யார் யாரை ஆளுவது? எந்தக் கட்டத்தில் அத்தகைய பாகுபாடு மறைகிறதோ அந்தக் கட்டத்தில் தான் uninhibited (மன்னிக்கவும் தமிழ் தெரியவில்லை) உறவு தொடங்குகிறது. பரவசங்கள் இருபுறமும் ஏற்படுகின்றன. தவறாக நினைக்கவேண்டாம்.. ஒரு பெண் உடல்சுகத்தை விரும்பினாள் என்றாலே - கணவனே கூட அதைத் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கும் கலாசாரத்தில் இது போன்ற சாதாரண எதிர்பார்ப்புகள் கூட ரேடிகல் முற்போக்குத்தனமாகத் தான் தெரிகிறது. முழுமைப் புணர்ச்சியின் உடல்சுகத்துக்கு அப்பாற்பட்ட உள/உடல் பலன்களை அறியாமல் போகிறோம். டிப்ரெஷனில் இருப்பது கூடத் தெரியாமல் வாழ்கிறோம்./////

உச்சக்கட்டம் என்னும் அற்புதம்  கட்டுரைக்கு  வந்த நண்பர் அப்பாதுரை  அவர்களின் பின்னூட்டம் தான் மேலே உள்ளது. நல்ல கருத்துரை. அவர் குறிப்பிட்ட நிலைதான் நம்மிடையே இருக்கிறது...

ஒரு பெண்  தான் விரும்பியதைச்  சொல்லக்  கூடாது மீறிச்  சொன்னால் அவளது அடிப்படை வளர்ப்பின் மீதே சந்தேகம் வரக் கூடிய அளவிற்கு தான் நம் கலாச்சாரக்  கணிப்பு இருக்கிறது....!!? ஆனால் நம் கலாச்சாரம்  என்றோ மாறத் தொடங்கி விட்டது பல விசயங்களில்...?! இன்னும் மாறிக்  கொண்டிருக்கிறது...இல்லை மாற்றிக் கொண்டிருக்கிறோம்....! மாறும் காலத்திற்கு ஏற்ற  மாதிரி கணவனும் தன் மனைவியின் விருப்பம்  என்ன என்று தெரிந்து அதற்கு மதிப்பு கொடுக்கும் நிலை வர வேண்டும்...கட்டாயம் வந்துதான் ஆக வேண்டும் இந்த அந்தரங்க விசயத்தில்...! கணவன், மனைவி இருவருமே ஒன்றை புரிந்துக்  கொள்ளவேண்டும் இது வெறும் உடல் சார்ந்தது என்பது மட்டும் இல்லை.  உடல், மனம் இரண்டுக்குமான ஆரோக்கியம் இதை வைத்துத்தான் இருக்கிறது.  

ஆணின் ஆசை விரைவில் அடங்கிவிடும் பெண்ணின் ஆசை தொடர்ந்து வரும். ஆண் தனது தேவை முடிந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கிவிடுவான். ஆனால் அவனுக்கு தெரியாது அதற்கு  பிறகு தான் அந்த மனைவிக்கு கணவனின் அணைப்பு தேவைப்படும் என்று ,  இதை உணர்ந்த கணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம் ...!?  இந்த மாதிரியான சிறிய அளவிலான ஒரு அணைப்பு கூட மறுக்கப்படும்போது தான், இயலாமையால் மனதிற்குள் புழுங்கத்  தொடங்குகிறாள். இதற்கு ஆண்களையும்  குறைச்  சொல்ல முடியாது அவர்களின் உடல் அமைப்பு அப்படி....! அதனால் மனைவியை முதலில் திருப்தி அடைய வைத்துவிட்டு பின்னர் ஆண்  தனது  தேவையை கவனிப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

கணவன் மனைவி உறவில் முழு திருப்தி அடையாதவர்கள்,  நிச்சயமாக மன அழுத்தத்தில் விழுவார்கள். சமீப காலமாக ஒவ்வொருவரும் தங்களது சந்தோசம் தங்களது நிம்மதி என்று பிரித்து சுயநலமாக வாழ தொடங்கிவிட்டார்கள். வாழும் காலம் குறைவுதான் என்பது போலவும் அதற்குள் அனைத்தையும்  அனுபவித்து விட வேண்டும் என்ற குறுகிய எண்ணங்கள்  பெருகி விட்டன. இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்பட போய் தன் மனதை ஒரு நிலைப்படுத்த என்று யோக நிலையங்களும், தியானம் செய்யுங்கள் என்ற போதனைகளும் அதிகரித்துவிட்டன. இயன்றவர்கள் மன நல  மருத்துவரை நாடுகின்றனர். 'கவுன்செலிங்' என்ற வார்த்தைகூட இப்போது நாகரீகமான வார்த்தையாக மாறிவிட்டது.  மனதை தடுமாற செய்யக்  கூடிய காரணிகள் அதிகம் இருக்கிறது என்பதை அறிந்ததால்தான் 'மனதை ஒரு நிலைப்படுத்துங்கள்' என்ற கோஷமும் வலுக்கிறது...வேறு சிலரோ தீவிர ஆன்மீகத்தை நோக்கிச்  சென்று தங்களை காத்துக்  கொள்ள போராடுகின்றனர்.  

திருமணம் முடிந்தவர்கள் இல்லறத்தை நல்லறமாக மாற்ற அந்தரங்கத்தை அவசியமானதாக எண்ணுங்கள். அதற்கு தேவையான நேரத்தை ஒதுக்குங்கள் உறவையும் முழுமையாக நிறைவேற்றுங்கள்..அந்த நேரம் முழுவதும்  உங்களுக்கான  நேரம் என்பதை மறவாதீர்கள். அந்த ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் பெறக்  கூடிய உற்சாகம் பல மடங்காய் அதிகரித்து, தொடரும் நாட்களில் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதை  உணருவீர்கள். இந்த உறவு சரியாக இருக்கும் பட்சத்தில்,  தேவையில்லை  யோகாவும், தியானமும் இதைவிட சிறந்த உடற்பயிற்சியும் வேறில்லை....என்று நான் சொல்லவில்லை மருத்துவர்கள் சொல்கிறார்கள் .

உறவு என்ன என்று தெரியவைக்க இப்போது மீடியாக்கள் முக்கியமாக இணையம் இருக்கிறது. ஆண்கள் மட்டும் தான் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல இயலாது, கணவன் மூலமாக அல்லது காதலன் மூலமாக சில பெண்களும் தெரிந்து வைத்திருக்கலாம். இந்த பட்சத்தில் மன அளவில், உடல் அளவில் அதை உணர , அனுபவிக்க விரும்புவது  இயல்புதான். முறையாக கிடைக்க வேண்டிய ஒன்று முறையற்ற  விதத்திலாவது கிடைத்துதானே ஆகும், அதுதானே நியதி....?! சந்தர்ப்பம் வாய்த்தவர்கள்  பெறுகிறார்கள், முடியாதவர்கள் மருகுகிறார்கள். மற்றபடி  மனதை சமாதானப்படுத்திக்   கொண்டு வாழ்கிறார்கள் என்பது குறிப்பிட்ட அளவு வரை தான். (இந்த அளவு நல்ல குடும்ப உறவில் இருப்பவர்களை குறிப்பிடாது.)

கணவர்களின் புரிதலுக்காக

குழந்தை பெற்றுத் தர வேண்டும் என்று மட்டும் எண்ணாமல் அவளது உணர்வுகளுக்கும் ஒரு வடிகாலாய் அந்த பெண்ணின் கணவன் இருந்தாக வேண்டும். கணவனால் முழு  இன்பம் கிடைக்கப்  பெறாதவர்கள் அல்லது அந்த உச்சகட்டம் என்ற நிலையை அறியாதவர்கள் தான் வெகு சுலபமாக தவறான உறவில் விழுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்புக்  கொள்ள நேரிடும் போது, அந்த ஆண் முதலில் இந்த பெண்ணை தனது பிடிக்குள் அல்லது கட்டுபாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புவான். முழுவதுமாக அவள் மனதை தானே ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவன் கையாளும் முக்கியமான ஒன்று தான் இந்த கிளைமாக்ஸ் உணர்வை அந்த பெண்ணை அடையச் செய்வது. ஒரு முறை இதை உணர்ந்த/அனுபவித்த  பெண் (தனது கணவனால் கிடைக்காத அல்லது இதுவரை சரியாக உணராத அந்த ஒன்றை ) இவன் தன்னை எவ்வளவு சந்தோசமாக வைத்திருக்கிறான் என்று எண்ணி முழுவதுமாக புதியவனை விரும்ப தொடங்கி விடுகிறாள். (தவறுகள் தெய்வீகமாகி விடுகின்றன....!?) 

மனைவியரின்  புரிதலுக்காக

ஆண் மட்டுமே இயங்க வேண்டும் என்பதுதான் இந்திய பெண்களின் மனோபாவம் !? ஆனால் இந்த மனோபாவம் சிறிது மாற வேண்டும். மனைவியரும் தங்கள் கணவனின் விருப்பம் அறிந்து நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். (இதை பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் சொல்லி விட்டேன்)   வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்று (மனம்  அல்லது உடல்  சம்பந்தப் பட்டதாக இருக்கலாம்) வெளியே  கிடைக்கிறது என்று தான் பல நல்ல கணவர்களும் தவறுகிறார்கள்....அது என்னவென்று அறிந்து சரி செய்துக்  கொள்ளவேண்டியது அந்த மனைவியின் கடமை. ஒரு முறை தவற விட்டுவிட்டால் திரும்பப்  பெறுவது மிக கடினம் என்பதை பெண்கள் (மனைவியர் ) மறந்து விடக் கூடாது.

பெண்கள் நடுத்தர வயதை கடந்தாலும் இன்னும்  சொல்லப்  போனால் மெனோபாஸ் நிலை வந்த பின்னரும் கூட உறவில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் (மனைவியரின்) ஒத்துழைப்பு கிடைக்காததால் தான் நடுத்தர வயதைத்  தாண்டிய பல ஆண்களும் தவறான வேறு வழிகளை எண்ணத்  தொடங்குகிறார்கள்.

அதிலும் பெண்களின் முழு ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே  இருவரும்  உச்சகட்டத்தை அடைய முடியும் என்பதை பெண்கள் மறந்து விடக்  கூடாது. உடலும்  மனமும் இணைந்து  
ஈடுபடும் போது தான் பெண்களுக்கும் இன்பம் அதிகரிக்கிறது.

ஒரு கருத்து 

கணவன், மனைவி  இருவரும் பொதுவான ஒன்றை புரிந்துக்  கொள்ள வேண்டும். தவறு செய்யும் யாரும் கணவன்/மனைவி பிடிக்கவில்லை என்பதற்காக மற்றொரு உறவை ஏற்படுத்திக்  கொள்வதில்லை.....'வேறொரு நபரையும் பிடித்து இருக்கிறது' என்பதற்காகத்  தான் தவறுகிறார்கள்....??!! 

கணவன் அல்லது மனைவி பாதை தவறுவது எதனால்.....??!

எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் சொல்ல இயலாது ஆனால் பொதுவாக சில காரணங்களை கூற முடியும் அதில் முக்கியமான ஒன்று....

ஒருத்தருக்கு மற்றொருவர் மீதான அதிகப்படியான பொசசிவ்னெஸ் என்கிற அதீத அன்பு (தமிழில் அர்த்தம் சரியா என்று  தெரியவில்லை மன்னிக்கவும்) ....!!

* ஒருவர் மீது ஒருவருக்கு அதிகப்படியான காதல் இருப்பது எப்படி தவறாகும்....?
* அதீத அன்பு எப்படி பாதை மாற காரணம் ஆகும்....??

இப்படி நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான்...அது எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்....

தாம்பத்தியத்தின் அடுத்த பாகம் நாளை மறுநாள்....




  வாசலில் புதிய தொடர் இனியது காதல்...!



திங்கள், அக்டோபர் 25

தன்னலமற்ற உதவி ...!



சக பதிவரான திரு. பத்மஹரி அவர்களின் தளத்தை இரண்டு நாளுக்கு  முன் படித்தேன்....அதில் முக்கியமான ஒருவரை பற்றி எழுதி இருந்தார்....அவர் பெயர் திரு நாராயணன் கிருஷ்ணன்.  நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த  சமயம்......தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விடை பெறுவதற்காக  மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.
அங்கே கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிளில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!
நம்மவர்கள்  ஹோட்டல் சென்றாலும் அதிக பணம்  கொடுத்து வாங்கிய உணவையும் நாகரீகம் என்ற பேரில் பட்டும் படாமல் சிறிது  சாப்பிட்டு.... குப்பைக்கும் போகும் அந்த மீத உணவுகள்....?!!  கல்யாண விருந்து போடுகிறேன் என்று சிலர் தன் கௌரவத்தை காட்டுவதற்காக இலையில் இடம் போதாமல் உணவு வகைகளை நிரப்புவார்கள்..... சாப்பிட அமர்ந்த கனவான்களோ பணக்கார நோய்களின் நிர்பந்தத்தால் ஏனோ தானோவென்று கொறித்துவிட்டு செல்வார்கள்......இங்கும் அந்த உணவுகள் போகும் குப்பைக்கு.........?!!  இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து செழிப்பாய் பணம் சம்பாதிப்பதை விட இந்த மாதிரி மக்களுக்கு  நாம ஏன் உணவளிக்ககூடாது....? கண்டிப்பாய் செய்வேன் என்று உறுதி பூணுகிறார்... 

இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21    

இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொள்ளி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   


வெற்றிகரமாக இன்றும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!

பின் குறிப்பு


இந்த பதிவை நான் எழுத காரணமான நண்பர் பத்மஹரி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 











மற்றொரு நண்பர் தனது தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார்...அவருக்கும் என் நன்றிகள்...