எனக்கு ஒரு நாலு நாளாக ஒரு பெரிய பிரச்சனை.....அதை யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்தது தான் மிச்சம்.....! ஆனால் இன்னும் குழப்பம் தான் வருகிறது ஒரு தீர்வும் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிச்ச போது தான் பதிவுலகம் நினைவு வந்தது.சரி தான் நம்ம பிரச்னையை அபாயரட்சர்களிடம் சொல்லி தீர்வு பெறுவோம் என்று இங்கே சொல்ல வந்திருக்கிறேன் . நல்லா படிச்சிட்டு ஏதோ ஒரு வழி சொல்லுங்க நண்பர்களே.
ஓ.கே நேரடியா விசயத்துக்கு வருகிறேன். இது எறும்புகள் பத்தின ஒரு சீரியசான ஒரு விசயங்க. எறும்பை எல்லோருக்கும் நல்லாவே தெரியும் அதனால் நான் புதுசா அவங்களை அறிமுகபடுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். எனக்கு இந்த எறும்புகளால் ஒரு சிக்கல்..... அடடா இருங்க ஓடிடாதிங்க....! (எங்க வீட்டுக்கு எறும்பு வந்திச்சி, என்னை மட்டும் கடிச்சிடிச்சி, ஏன்னு தெரியல அப்படின்னு உலகத்தில் நடக்காத ஒன்ன சொல்லி உங்களின் பொறுமையை நான் சோதிக்க விரும்பவில்லை...!) இது வேற மாதிரியான ஒரு மேட்டர்.....!
ஐந்து நாளுக்கு முன்னால காப்பி போட செல்பில இருக்கிற சர்க்கரை டப்பாவை எடுக்கும் போது கை தவறி கீழே போட்டுட்டேன். கொட்டியது போக மிச்சத்தை மறுபடி டப்பால போட்டு வச்சிட்டு, கீழே இருக்கிற சர்க்கரையை ஓரமா ஒதுக்கிட்டு மத்த வேலையை பார்க்க போயிட்டேன். சாயங்காலம் வரைக்கும் இதை அப்படியே மறந்திட்டேன். ( சிஸ்டம் கிட்ட வந்து உட்காந்தா என்னையே மறந்துடுறேன், சர்க்கரையை எப்படி நினைப்பேன் ....?!)
அப்புறம் சாயங்காலம் பசங்க வந்த பிறகு டிபன் பண்ண kitchen போனப்பதான் அடடா சர்க்கரையை காலையில கொட்டினோமே எறும்பு படை திரட்டி வந்து இருக்குமேன்னு பதட்டமா பார்த்தா, என்ன ஆச்சர்யம்.....சர்க்கரை அப்படியே இருக்கு ஒரு எறும்பு கூட அதன் மேல இல்லை....! (நாம வீட்டை ரொம்ப சுத்தமா வச்சிருக்கோம் அதுதான் எறும்பு இல்லை அப்படின்னு ஒரே பெருமை தான் போங்க....ஆனா இது ரொம்ப நேரம் நீடிக்கல.....அந்த இடத்துக்கு கொஞ்ச தள்ளி தூரத்தில் இவங்க லைன் கட்டி போயிட்டு இருக்காங்க......! அந்த நேரம் ஆரம்பிச்சக் குழப்பம் தாங்க எனக்கு இப்பவரை தீரல...!!
ஏன் எறும்பு சர்க்கரை கிட்ட வரல...? சரி இன்னும் ஒருநாள் வருதான்னு பார்ப்போம் , அப்புறம் சுத்தம் படுத்திக்கலாம்னு அப்படியே விட்டுட்டேன் சர்க்கரையை....! (எல்லாம் ஒரு ஆராய்ச்சிதான்....?!) மூணு நாள் ஆச்சு...ஆனா ஒரு எறும்பு கூட அந்த திசை பக்கம் எட்டி கூட பார்க்கல....என்னுடைய ஆச்சரியமும், குழப்பமும் ஜாஸ்தியானது தான் மிச்சம்....ஏன் சர்க்கரை கிட்ட வரலன்னு புரியவே இல்லை.
சரி கணவர் கிட்ட சொல்வோம் என்று ஆர்வத்தோடு போய் சொன்னேன்.....அதுக்கு அவர், " சர்க்கரையை அஜாக்கிரதையா கீழே கொட்டினது முதல தவறு, அதையும் மூணு நாளா கிளீன் பண்ணாம இருந்தது இரண்டாவது தவறுன்னு..........." லிஸ்ட் போட்டு திட்ட ஆரம்பிச்சிட்டார்......!! அடடா, என்னடா இவர் நம்மளோட ஆராய்ச்சி புத்தியை பத்தி புரிஞ்சிக்காம இருக்காரே என்று ஒரே பீலிங்கா போச்சு.....!?
அதுதான் உங்ககிட்ட இதை கேட்கலாம்னு வந்திருக்கிறேன்....என் சந்தேகங்களை சொல்றேன்......தெளிவுபடுத்துங்கள்.....
சந்தேகம் 1 : மனிதர்களை மாதிரி எறும்புகளுக்கு சர்க்கரை வியாதி வந்திக்குமோ....?
சந்தேகம் 2 : சர்க்கரையில் இனிப்பு தன்மை குறைந்து விட்டதா.....?
சந்தேகம் 3 : எறும்புக்கே பிடிக்கலேன்னா நமக்கு மட்டும் எப்படி பிடிக்கும்....?
சந்தேகம் 4 : இப்போது எல்லாம் காபி குடித்தால் தான் தலைவலியே வருகிறது. அதற்கு காரணம் இந்த சர்க்கரையா இருக்குமோ....??
முக்கியமான
சந்தேகம் 1 : எறும்புக்கு பிடிக்காத வேதி பொருள் ஏதும் அதில் கலந்திருக்கா...??
சந்தேகம் 2 : அப்படி பட்ட வேதி பொருள் என்னவாக இருக்கும் ...?
சந்தேகம் 3 : அந்த வேதி பொருள் கலந்த சர்க்கரையை நாம் உபயோகித்தால் நம் உடம்பிற்கு பாதிப்பு ஏதும் வருமா.....?? அப்படினா அது என்ன பாதிப்பு...?
முன்பு எல்லாம் இப்போது வருவது போல் வெள்ளை வெளேர் என்று இருக்காது...கொஞ்சம் நிறம் கம்மியாக பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். இப்படி வெள்ளையாக இருப்பதற்காக ஏதும் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தெரிந்தவர்கள் இதனை பற்றி விளக்கமாக கூற வேண்டும் என்று தான் என் சந்தேகங்களை இங்கே கேட்கிறேன்....என்னை மாதிரி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவா அதில் பிரச்சனை இருக்கோ இல்லையோ சர்க்கரை சேர்ப்பதை குறைத்து கொண்டால் மிக நல்லது. அதற்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை தூள் செய்து வைத்து கொண்டு உபயோகித்து வந்தால் உடலுக்கு நல்லது. (அப்பாடி கடைசில ஒரு மெசேஜ் சொல்லிட்டேன்...!)
வாசலில் 'அழகு தேவதை நீ....!'
வாசலில் 'அழகு தேவதை நீ....!'







