வெள்ளி, ஜூன் 22

சில புரிதல்களும், விளக்கங்களும்...! வீட்டுத் தோட்டம்

பதிவர் வவ்வால் அவர்கள் வீட்டுத் தோட்டம் பதிவில் நான் சொல்லியிருந்த கீரை வளர்ப்பதற்கான எளிய வழிமுறையினால் நீர் கசிவு ஏற்படும், தளம் பாதிக்கப்படும் என்று பின்னூட்டத்தில் கூறி இருந்தார். அத்துடன் தொடர்ந்து துணை பதிவு ஒன்றும் (பசுமை மாடி - வீட்டுத்தோட்டம் ) எழுதி இருந்தார். கடந்த ஒரு வாரமாக என்னால் இணையம் வர இயலாத சூழ்நிலை. அதனால் உடனே வாசித்து பதில் சொல்லமுடியவில்லை. அப்பதிவில் மிகவும் விளக்கமாக எல்லா நுணுக்கங்கள்  பற்றியும் விரிவாக தெளிவாக எழுதி இருந்தார். உபயோகமான நல்ல பல தகவல்கள். அப்பதிவை பற்றி சொல்லும் முன் ஒரு சிறு தன்னிலை(வீட்டுத் தோட்டம் தொடரை குறித்த) விளக்கம்...

ஆர்வமின்மை 

தோட்டம் போடுவது என்பது அக்ரி படித்தவர்கள் , விவசாயம் தெரிந்தவர்கள் சம்பந்தப்பட்டது, அவர்களுக்கு தான் தெரியும் நமக்கும் இதுக்கும் ஒத்துவராது என்பதே பலரின் எண்ணம்னு நினைக்கிறேன். கொஞ்சம் கூட முயற்சி செய்து பார்ப்பது  இல்லை. சுலபம் இல்லை மிகவும் கடினம் என்று தெரிஞ்சவங்க சிலர் என்னிடம் கேட்கிறப்போ 'என்னடா இது சோதனை' என்பது போல இருக்கும்...எங்க வீட்டு தோட்டத்துல ரோஜா செடிகள் நிறைய பூ பூக்கும் அதை பார்க்கிறவங்க 'உன் கை ராசி, அதுதான் இப்படி, நானும் எத்தனையோ வச்சு பார்த்துட்டேன் ஒரு பூவோட நின்னுடுது'னு சொல்வாங்க...அவங்களுக்கு பொறுமையா சில நுணுக்கங்களை சொல்வேன். மொத்தமா எல்லாம் கேட்டு விட்டு 'நீ என்னதான் சொல்லு, இதுகெல்லாம் ராசி வேணும்'...!!?? மறுபடியும் முதல்ல இருந்தான்னு எரிச்சல் வரும்.

இப்படி நம்மில் பலரும் ஒவ்வொன்னுக்கும் ஏதோ சில சமாளிப்புகளை கொடுத்து கொண்டு இருக்கிறோம்...தோட்டத்தை பொறுத்தவரை செய்து பார்ப்போமே, அதன் நெளிவு சுளிவுகளை கத்துக்கணுமேன்னு முயற்சி பண்றதே இல்ல. பணம் சம்பாதிக்க காட்டும்  ஆர்வம், முயற்சிகள் இதில் சிறிதும் இல்லை. உடம்பிற்கு ஏதும் வந்துவிட்டால் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய தயங்காத நாம் இதற்கு மிகவும் யோசிப்பது சரியில்லை. தோட்டம் போடுவது என்பது நம் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது...!! உடல்நலத்துடன் மனநலமும் பேணப்படும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.  இதில் ஆர்வம் வரணும், இனியும் அசட்டையாக இருக்க கூடாது என்பதை வலியுறுத்தவே தான் இந்த வீட்டு தோட்டம் தொடரே எழுதத் தொடங்கினேன். 

ஆர்வம், அக்கறை வர வைத்துவிட்டால் போதும், இதில் இருக்கும் சாதக பாதகங்களை அவங்களே புரிஞ்சிப்பாங்க. கூகுள்ல தட்டினா வந்து விழும் பல தகவல்களை விட அனுபவத்தில் பெற்றதை சொல்லும் போது " அட இவ்வளவுதானா மேட்டர், நாமும் செஞ்சு பார்த்தால் என்ன?" என ஒரு ஆர்வம் வந்துவிடாதா என்கிற ஒரு எதிர்பார்ப்பு, நம்பிக்கையில் எழுதுகிறேன். படிக்கும் ஒருவர் இரண்டு பேர் முயன்றால் கூட போதும் என்கிற விருப்பம் காரணமாகவே எளிமையாக பெரிய மேற்கோள்களை காட்டாமல் எழுதுகிறேன்.

அரிசி மண்ணுக்கு மேலா, அடியிலா என்பது தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத தலைமுறையினருக்கு நடுவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மில் பலரும் விவசாய பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விவசாயத்தை வெறுக்கிற, அதன் மேல் பற்று இல்லாதவர்களாக இருக்கிறோம். இது நல்லதுக்கல்ல. வீட்டில் தோட்டம் போடுவதின் மூலமாக இயற்கையுடன் நம்மை பிணைத்து கொள்ளமுடியும். இயந்திரங்களின் துணையுடன் வாழும் வாழ்க்கைக்கு நடுவில் கொஞ்சம் பசுமையுடன் வாழ்ந்து மனதை மென்மையாக்கி கொள்வோம்.

'இது செடி, இதுதாங்க மண், இதில் நட்டுவிட்டால் போதும்' என்று சொல்வதற்கு பல இணைப்புகள் கூகுளில் இருந்தாலும் ஆர்வம் இல்லாதவர்கள் எப்படி தேடி போவார்கள்...?! நிச்சயம் போக மாட்டார்கள்...அவர்களை தேட வைக்கணும்...தேடி கண்டடைந்த பின்னர் முயற்சி செய்து பார்க்கலாம்...பலன் கிடைத்ததும் புது புது நுணுக்கங்களை அவர்களாகவே கண்டு பிடிப்பார்கள்...பின் செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்...ஒரு முறை தோட்டம் போட்டு அதன் மகத்துவத்தை அனுபவித்து விட்டார்கள் என்றால் இறுதிவரை விட மாட்டார்கள். மரம், செடிகளுடனான காதல் இன்பம் எத்தகையது என்பதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும் !! மீளவே முடியாத போதை அது !! 

ஒகே, இப்ப நேரா விசயத்துக்கு வரேன்...அப்ப இதுவரை சொன்னது விசயமே இல்லையானு கேட்ககூடாது :)

ஆர்வத்தை கொண்டுவருவது முதல் படி என எண்ணியதால் சில வரிகளில் மட்டும் முடித்துக்கொண்டேன்...தொடராக எழுத போவதால் ஒவ்வொன்றை பற்றியும் தனித்தனியாக மேலும் பல தகவல்களை சேர்த்து எழுதுகிறேன். 

தோட்டக்கலை பொறுத்தவரை நாள்தோறும் ஏதாவது புது புது முறைகள்  வரும், போகும். வீட்டுத்தோட்டத்தில் அவரவர் கிரியேடிவிட்டிக்கு  தகுந்த மாதிரி கண்டுபிடித்து செய்து கொண்டே போகலாம்...சட்டதிட்டங்கள் இருக்குமோனு யோசிச்சிட்டே இருக்ககூடாது...சில விதங்கள் இப்படி இருந்தால் நல்லது என வழி  காட்ட முடியும் அவ்வளவே. அடிப்படை தேவையான மண், நீர், விதை இவற்றை வைத்து இருக்கிற இடத்திற்கு ஏற்ற மாதிரி செய்துகொள்ள வேண்டியது தான்.

முன்னாடி எல்லாம், மொட்டை மாடியில் தொட்டிகள் வைத்தால் ரூப் கனம் தாங்காமல் இறங்கிவிடும்(சேதமாகி விடும்) என்று கூட பயந்திருக்கிறோம் ??! :) 

மாடியில் கீரைத்தோட்டம் போடுவதில் சிறந்தது  என்பது கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்கை/விரிப்பை சரியான விதத்தில் பயன்படுத்துவதில் இருக்கிறது. தென்னை நார் கழிவை அடியில் பரவலாக விரிக்கலாம்...நீரை உறிஞ்சி வைத்துகொள்ளும்...மண்ணில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்...அதிகபடியான நீர் வெளியேறவும் செய்யாது...தொட்டியில் செடி வைக்கும் போதும் இதை பயன்படுத்தி கொண்டால் நல்லது. தினம் தண்ணீர் ஊற்றவேண்டுமே என கவலை படவேண்டாம்.3 அல்லது 4 நாள் வரை தாங்கும்.

திரு வின்சென்ட் சார் அவர்களின் இந்த பதிவும், காணொளியும் உங்களுக்கு மாடியில் கீரை பயிரிடுவதை பற்றிய ஒரு தெளிவினை/புரிதலை கொடுக்கும்.

மாடியில் கீரை வளர்ப்பு - லிங்க் சென்று பார்க்கவும்.

http://youtu.be/s5gXutQws8E


'வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்' என்று வலியுறுத்துகிறது வின்சென்ட் சாரின் இந்த  Powerpoint Presentation. அவசியம் பாருங்க...

 http://www.authorstream.com/Presentation/vincent2511-607128-home-garden/

மொட்டை மாடியில் கீரைத் தோட்டம் அமைக்க

"ஒரே ஷீட்டாக ஹை டென்சிட்டி பாலித்தீன் ஷீட்டினை(HDPE sheet)பயன்ப்படுத்த வேண்டும். இது கடைகளில் கிடைக்கிறது.

தேவையான அளவில் வாங்கிக்கொண்டு ,பின்னர் மேல் மாடியில் நான்கு புறமும் சுவர் போல செங்கற்களை அடுக்கி விட்டு அதன் மீது ,பிளாஸ்டிக் ஷீட்டினை பரப்பி நான்கு புறமும் வெளிப்புறமாக கொஞ்சம் மடக்கி விட்டு விட வேண்டும். இப்போது தண்ணீர் கசியாத சதுர பிளாஸ்டிக் குளம் போல ஒரு அமைப்பு கிடைத்திடும்.

இந்த அமைப்பில் நீர் ஊற்றி சேகரித்தால் கூட கசியாது." - வவ்வால் 
கழிவு நீர் சுத்திகரிக்கும் முறை,தொழு உரம் தயாரிப்பது என்பதை குறித்து விரிவாக பதிவிட்டதையும் அவசியம் படிங்க...

(காய்கறி கொடி பந்தலின் கீழே கீரை வளர்ப்பதை போல் அமைத்து கொள்வது நன்று)

பதிவர் வவ்வால் அவர்களுக்கு,

உங்கள் பின்னூட்டத்துக்கும் துணை பதிவுக்கும் முதலில் என் நன்றிகள். 

எனது பதிவை ஊன்றி படித்து அதில் தங்கள் பார்வையில் குறையாக தெரிந்ததை பின்னூட்டத்தில் குறிப்பிட்டதோடு அல்லாமல் விரிவான விளக்கம் கொடுக்கவேண்டும் என தனி பதிவு எழுதிய உங்களுக்கு  என் பாராட்டுகள். 

அதிலும் துணை பதிவு என்று குறிப்பிட்டது என் கவனத்தை மிக ஈர்த்தது...(எனக்கு தெரிந்ததெல்லாம் எதிர்பதிவு?!) :) இச்சமயத்தில் எதிர்பதிவுகள் எழுதிய சகோதர, நண்பர்கள் என் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. பதிவின் கருத்தை குறித்த விமர்சனத்தை விட எழுதியவரை பற்றிய கடும்விமர்சனத்தை தான் இதுவரை பார்த்திருக்கிறேன். அத்தகையோரை பற்றி மட்டும் தெரிந்த எனக்கு வவ்வால் அவர்களின் துணை பதிவை படித்து ஆச்சர்யம் ஏற்பட்டது ! சக மனிதரை மதிக்கக்கூடிய இந்த பண்பை கற்றுக்கொள்ளவேண்டும் நான் உட்பட...பதிவில் இருக்கும் குறைகளை(?) சுட்டிக்காட்டுகிறேன் என்ற போர்வையில் தனிமனித தாக்குதல் நடத்தும் பதிவுலகத்தில் நாகரீகமான இவரது அணுகுமுறையை எண்ணி உண்மையில் மகிழ்கிறேன். ஒருவருக்கொருவர் நல்ல கருத்துக்களை, நிறை குறைகளை பரிமாறும் ஆரோக்யமான நிலை தொடர இவரை போன்றோர் இருக்கிறார்கள் என்ற மன நிறைவுடன் இப்பதிவை முடிக்கிறேன். 

கௌசல்யா  

தகவல்,படங்கள் உதவி 
நன்றி வின்சென்ட் சார் 

புதன், ஜூன் 13

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2

வீட்டுத் தோட்டம் முதல் பாகத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி...மேலும் சிலவற்றை சிறிய அளவில் இங்கே விளக்கி இருக்கிறேன்...தொடரும் பதிவுகளில் ஒவ்வொன்றை குறித்தும் தனித் தனியாக பகிர்கிறேன்...

உருளை கிழங்கு

                                                              (photo courtesy - Siva)

உருளைகிழங்கை பாதியாக கட் பண்ணி, கட் செய்த பகுதியை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்...ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது. இல்லைஎன்றாலும் பரவாயில்லை.நன்றாக விளைந்ததாக இருந்தா ஒகே.

சேப்பங்கிழங்கு



சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமாக  பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.

தக்காளி, மிளகாய், கத்தரி


நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு தக்காளியை பிசைந்து விட வேண்டும்....விதைகள் தனியே பிரியும்...பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்...

நன்கு முற்றிய கத்தரிக்காய்  வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்துக்  கொள்ள வேண்டும்

பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

விதைக்கும் முறை 

விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்...காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்...செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்று அல்லது இரண்டாக  நட்டு விட வேண்டும்...


தக்காளி காய்க்கத்  தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.

பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும். அதுக்கும் சிம்பிளா ஒரு வழி இருக்கு. 

பந்தல் முறை  

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்...இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கைப்பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்...கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டிக்  கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்...இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.

கயிறுக்கு  பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகப் படுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வச்சு உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க...அவ்வளவுதான் !

மற்றொரு பந்தல் முறை 

நாலு சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்...இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்...மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.

 உரம்  

இரண்டு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பிளாஸ்டிக் சாக்கில் சமையலறை கழிவுகள்/காய்ந்த இலைகள் போன்றவற்றை சேகரித்து போட்டு கொண்டே வரவேண்டும்...ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் போட்டு வர வேண்டும்...முதலில் போட்டு வைத்தது கொஞ்ச நாளில் மக்கியதும் அதை எடுத்து, செடிகள் இருக்கும் தொட்டியின் மணலை லேசாக கிளறி மக்கிய காய்கறி கழிவை கொஞ்சம் அள்ளி போடலாம்...மீன்,மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் செடிக்கு விடலாம்.நன்கு வளரும். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் எதையும் வீணா சாக்கடையில்  கொட்டாமல் , செடிகளுக்கு ஊற்றுங்கள்... 

பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(நேரடியாக ஊற்றக்கூடாது) சுத்திகரித்துனு சொன்னதும் என்னவோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சுடாதிங்க...ரொம்ப சிம்பிள் தான்.

கழிவு நீரை சுத்திகரித்தல்

சோப்பு தண்ணீர் /கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன...இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல...எனவே இதை ரொம்ப எளிதான வழியில் சுத்திகரிக்கலாம்...

சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி  நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்...விரைவில் வளர்ந்து  விடும்...கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்...நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்...கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்...சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்... 

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவு தான் . மற்றபடி மேலே கூறிய அதே மெதட் தான். கருங்கல்  ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.

ஸ்பெஷல் கேர் 

விதைக்காக கடைகளை தேடி  வருந்துபவர்களுக்கும் /தூரமாக இருக்கிறது யார் போய் வாங்குறது என்பவர்களுக்கும் தான்   இந்த குறிப்பிட்ட வகைகளை மட்டும் கூறினேன்...மற்றவர்கள் கடைகளில் வாங்கி பயிரிடலாம்.

தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை(தார்பாலின் சீட்) விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி  விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ்  !!

* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்...

* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்...சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லையென்றால் சாதாரண தண்ணீர் போதும்.

* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

*மண்புழு உரம் ஆன்லைனில் கிடைக்கும். ஒரு செடிக்கு இரண்டு ஸ்பூன் என்றளவில் போட்டால் போதும். அந்த உரத்தில் மண்புழு முட்டைகள் இருக்கும் மண்ணில் போட்டதும் கொஞ்சநாளில் புழுக்களாக மாறி மண்ணிற்கு மேலும் சத்துக்களை கொடுக்கும் . 

அக்கறையும், கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில மெனக்கிடல்கள் அவசியமாகிறது.

நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க, ஒரு பத்துநாள் ஊருக்கு போய்ட்டோம்னா செடிகள் நெலம அதோ கதிதான் , அதுக்கு என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குறீங்களா? கவலையே படாதிங்க அதுக்கும் கைவசம் சில செட் அப் வேலைகள் இருக்கு !! அது என்னனு அடுத்த பாகத்தில் சொல்றேன்...சரிதானா ?! அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க... 

உற்சாகமான வீட்டுத்  தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!
                                                               * * * * *
அப்புறம்...

வீட்டுத் தோட்டத்தை ரொம்ப ஆசையா பார்த்துப்  பார்த்து செஞ்சிட்டு வர்ற இருவரின் பதிவை அவசியம் படிங்க...இதுக்கு முந்திய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலமாக அந்த இரு தளங்களை காணக்  கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது...

* துளசி மேடம் தளம் - http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/yam.html

* சிவா என்பவரின் தளம் - http://thooddam.blogspot.in

நீங்களும் சென்று பாருங்க...மறக்காதிங்க பிளீஸ் !!

                                                                   * * * * *


Happy Gardening !!

பிரியங்களுடன் 
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

படங்கள் - நன்றி கூகுள் 


புத்தகப் பரிந்துரை : Your One Stop Guide to Growing Plants at Home 

திங்கள், ஜூன் 11

'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...!! அறிமுகம் - 1

கொஞ்சம் கேளுங்க... 

பதிவுக்கு உள்ள போறதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கணும் என்பதே இந்த பதிவின் நோக்கம்...ஆர்வம் இல்லைனாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம். 'மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய பிராசஸ் நமக்கு ஒத்து வராது'னு சொல்றவங்க முதலில் கட்டுரையைப்  படிங்க...ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே...!!


அனைவரின் வீட்டிலும் எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா 'டென்ஷன்' இருக்கும். சின்ன பையன் கூட "போம்மா நானே டென்ஷன்ல இருக்குறேன், நீங்க வேற அதச்  செய் இதச்  செய்னு சொல்லிட்டு " இப்படி யாரைக்  கேட்டாலும், யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை...காரணம் இன்றைய பரபரப்பான சூழல்...!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிக்கிட்டே இருந்தா உங்களை யார் கவனிக்கிறது...உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்...காய்கறிகள், பூக்களைப்  பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்...!!

ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை...நன்கு கழுவிக்  சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயமா இருக்கு !?

சென்னை உட்பட பல ஊர்களில்  முழுவதும் இயற்கை உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் என தனி கடைகள் வந்துவிட்டன.  ஆனால் எல்லோராலும் அங்கே சென்று வாங்க இயலாது. 

எதுக்கு  தயக்கம்?!

'நீங்க சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லைங்க' என சாமார்த்தியமா தப்பிக்க கூடாது...தூங்க, சமைக்க, டிவி பார்க்க, அரட்டை அடிக்க எல்லாம் இடம் இருக்குதுல அது மாதிரி இதுக்கும்  ஒரு இடத்தை ஒதுக்குங்க...மாடி,பால்கனி,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே...!! வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்...அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்...! நீங்க மனசு வச்சு வேலைல இறங்குங்க முதல்ல, அப்புறம் பாருங்க இவ்ளோ இடம் நம்ம வீட்ல இருக்குதான்னு ஆச்சர்யமா இருக்கும்...?!!

ஓகே...! ஒருவழியா இடம் ரெடி பண்ணிடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சா? அடுத்தது விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை...உங்களுக்காகவே சில சுலபமான வழிமுறைகள் இருக்கு...கொஞ்சம் ஆர்வம், உழைப்பு இருந்தா போதும்...தண்ணி வசதி இல்லைன்னு சொல்றீங்களா...அதுக்கும் பல ஐடியா கை வசம் இருக்கு...தொடர்ந்து படிங்க...அதை பத்தியும் சொல்றேன்...நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லிச்  சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க...கலக்கிடலாம்...!!

எளிய முறையில் வீட்டிலேயே காய்கறி உற்பத்தி
ஆரம்பத்துல தோட்டக்  கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்...ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்திப்  பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில்  இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க...உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல... 


அடடா பேசிட்டே இருக்கேனே, சரி சரி வாங்க வாங்க... ஏற்கனவே நாம ரொம்ப லேட்...இனியும் தாமதிக்காம வேலையில இறங்குவோம்...காய்கறிகளை பயிரிடுவோம்...சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்...! ஒகே தயாரா...? அப்டியே படிக்க படிக்க கற்பனை பண்ணி மனதில் பதிய வச்சுகோங்க...அப்பத்தான் உடனே காரியத்தில் இறங்கக்கூடிய ஒரு உத்வேகம் வரும்...

அடிப்படை தேவைகள் 

* மண் அல்லது சிமென்ட் தொட்டி
* பிளாஸ்டிக் அரிசி சாக்
* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)   

20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்) 

ஓகே!  இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது...)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க. 

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால் தூள் செய்து கலந்து  வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.

காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணைப்  போட்டு நிரப்புங்கள்...இலைகள்  மக்கி உரமாகி விடும்...அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்...வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !

தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும்  தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.

ஒவ்வொன்றையையும் தனி தனியாக பார்க்கலாம்...

புதினா,கீரை

புதினா இலைகளை ஆய்ந்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்...வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.   

கொத்தமல்லி

கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் கட் பண்ணி சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்...மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்...

சின்ன வெங்காயம்

வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்...மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது...வளர வளர பார்க்க அழகாக இருக்கும்...வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்...உடம்பிற்கு அவ்வளவு நல்லது...

ஓகே...இன்னைக்கு இவ்வளவு போதும்...

காலை அல்லது மாலையில் ஒரு அரை மணி நேரம் இதற்காக செலவு செய்தால் போதும்... மனதுக்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி இதை விட வேறு என்ன இருக்கிறது...?!

உற்சாகமாக ஈடுபடுங்கள்... 

சந்தோசமான  வீட்டுத் தோட்டத்துக்கு என் வாழ்த்துக்கள்...

உருளை கிழங்கு நம்ம வீட்லையேவா ?? எப்படி ??  அடுத்த பதிவில் பார்த்துடுவோம்...!


பின் குறிப்பு 

தோழிகள் சிலர் என்னிடம் 'எங்களுக்கும் வீட்ல விளையவச்சு அதைப்  பறிச்சு சமைக்கணும்னு தான் ஆசை , ஆனா அந்த உரம், இந்த மண் போடணும் அப்டி இப்படினு பெரிசா சொல்றாங்க...ஈசியான வேலை மாதிரி சொல்லி தந்தா நல்லா இருக்கும்' என கேட்டுகொண்டதின் காரணமாக இந்த பதிவை எளிமையாக  எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு சந்தேகம் ஏதும் இருப்பின் கேட்கவும்...காத்திருக்கிறேன். நன்றி.

பிரியங்களுடன்
கௌசல்யா 

படங்கள்  - நன்றி கூகுள்

வெள்ளி, ஜூன் 8

மெதுவாய் மலரட்டுமே பூக்கள் !!?




எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்ற ஒரு இயந்திரத்தனமான  ஒரு காலம் இது. இந்த இயந்திர உலகில், நமக்கு தெரியாமல் நம் உடலில் ஏற்பட கூடிய ஹார்மோன் மாற்றங்களை பற்றி நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.....?! பொருட்படுத்துவதும் இல்லை.....!? ஒரு முக்கியமான மாற்றம் தான் பெண் குழந்தைகளின் விரைவான பூப்படைதல். சமீப காலமாக பருவமடையும் வயது குறைந்துக்  கொண்டே செல்கிறது. ஒரு பெண் குழந்தை ஆறு வயதில் பருவமடைந்திருக்கிறது...இங்கே இல்லை லண்டனில்...?!!


Precocious Puberty causes hormone disorders and  brain abnormalities


அவ்வாறு விரைவில் வயதிற்கு வருவது நல்லதல்ல என்பதே மருத்துவர்கள், ஆய்வாளர்களின் கருத்து.  பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் மனமும் உடலும் ஒன்றாக  சேர்ந்து வளர வேண்டும். உடல் மட்டுமே வளர்ந்து, மனதில் குழந்தையாக இருப்பவர்களின் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்காது என்பதை விட பல ஆபத்துகளுக்கும் இது வழி வகுக்கும்.

இது ஏன் அவ்வாறு விரைவாக ஏற்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருப்பது  அக்குழந்தையின் பெற்றோர் தான் ?!

இதனைப்  பற்றியதே இந்த பதிவு.....

முன்பு எல்லாம் பதினாறு வயதில், பின் அதுவும்  குறைந்து பதினாலு வயதில் பருவமடைதல் என்றானது...இப்போது 12 வயதாக இருக்கிறது. சில குழந்தைகள் பத்து வயதில்....!! பொதுவாக ஒரு பெண் வயதிற்கு வருவது என்பது அவர்கள் வளரும் சூழ்நிலை, பரம்பரை, உணவு பழக்க வழக்கம் இவற்றை அடிப்படையாக வைத்து தான் நடை பெறும்.

உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

*  குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

*   பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகள் குழந்தைகளை பலவிதத்திலும் பாதிக்கும் என்பது உண்மை. ஆனால் இது பெண் குழந்தைகள் விரைவில் வயதிற்கு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று உளவியல் அறிஞர்கள் கூறும் போது பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது போன்றவை பெண் குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது, இது  ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, பிரச்சனை நேருகிறது. உடல் வளர்ச்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு முடிவில் விரைவாக அக்குழந்தையை பூப்படையச்  செய்து விடுகிறது.

*  ஆணின் அரவணைப்பு இல்லாமல்...

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை ஆணின் அரவணைப்பு அதாவது தன்  தந்தையின் நெருக்கம் அவசியம் தேவை. தந்தையில்லாத , தந்தை வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் படி நேர்ந்தால்,  அவர்களின் பெண் குழந்தைகள் விரைந்து வயதிற்கு வந்து விடுகிறார்கள்....!!

சகோதரனின் பாசமும் ஹார்மோன்களின் குழப்பத்தை சரிச்செய்யும். இப்போது பெரும்பாலான  வீடுகளில் ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால் அதுவும் ஒரு பெண் குழந்தையாக இருந்துவிட்டால் சகோதரன் என்ற ஒரு உறவேத்  தெரியாமல் தான் அக்குழந்தைகள் வளருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தந்தையின் அருகாமையும், பாசமான அரவணைப்பும் மட்டுமாவது கண்டிப்பாகத  தேவை.

*  தொலைக்காட்சியும் ஒரு காரணம் !!?

நம் குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதில் இந்த தொலைக்காட்சிக்கு அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. குறைந்தது ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் டிவி பார்க்கும் குழந்தைகளின் தூக்கம் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. குழப்பமான மனதுடனே  தூங்கவும் செல்கிறார்கள். இதன் காரணமாகவும் விரைவில் பூப்படைகிறார்கள்  என்று அறிஞர்கள் தங்களது ஆய்வில் கண்டுப்  பிடித்துள்ளனர்.

சீக்கிரம் வயதிற்கு வருவதால் ஏற்படக்கூடிய அசௌரியங்கள்

* முதலில் இதைப்  பற்றி என்ன வென்றே தெரியாத ஒரு நிலை.
* நிகழ்ந்த பின் ஏற்படக்கூடிய ஒரு அச்சம், குழப்பம், எதனால் என்கிற கேள்வி ?!!
* பள்ளியில் சக மாணவிகள்/மாணவர்கள்  வினா எழுப்பும் பார்வைகள்.
* தனிமையான ஒரு உணர்வு.
* மனதளவில் குழந்தை, உடலளவில் பெண் ?!!

தகுந்த சரியான முறையான நேரத்தில் நடக்காத எது ஒன்றுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவரும்...பெண் குழந்தைகளின் வளர்ப்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம்

பெற்றோர்கள் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டில் குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நல்ல முறையில் தான் வளருவார்கள்....குழந்தைகள் முன்னால் சண்டைப்  போடும் பெற்றோர்கள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவது மட்டும் இன்றி ஹார்மோன் குளறுபாடுகள்  ஏற்பட்டு விரைவில் பெண் குழந்தைகள் வயதிற்கு வருவதும் ஏற்படுகிறது.

பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களே! கொஞ்சம் உங்கள் குழந்தையின் மனநிலையிலும் அக்கறைக் காட்டுங்கள்.

இதற்கு ஒரு தீர்வு உங்கள் கையில் தான் இருக்கிறது, குழந்தைகளின் மனம் பாதிக்காத அளவிற்கு அவர்கள் முன் நடந்து கொள்ளுங்கள் , உணவு பழக்கவழக்கத்தை முறைப் படுத்தணும் , கொழுப்புப்  பொருட்களைத்  தவிர்க்க வேண்டும், அவர்கள் வளரும் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.






பூ மெதுவாய்.....இயல்பாய் மலரட்டுமே....!


வியாழன், ஜூன் 7

அறிவைத் திருடாதே...! இணையதள பதிவு திருடர்களுக்கு கண்டனம் !!


பதிவுலகத்தில் இருக்கும் சிலருக்கு ஒருநாளில் இரண்டு பதிவுக்கு அதிகமாக எழுத இயலும்...ஆனால் என் போன்ற வெகு சிலருக்கு வாரத்திற்கு இரு பதிவு என்பதே அதிகம். இந்நிலையில் கொஞ்சமும் மனசாட்சி இன்றி எனது பதிவுகளை எவ்வித அனுமதியும் பெறாமல் சுலபமாக திருடி தங்கள் தளத்தில் வெளியிடுகிறார்கள்...இதில் எனது பார்வைக்கு வராதவை எத்தனையோ !!?   எங்கிருந்தும் யார் பதிவையும் சுலபமாக இரு நிமிடத்தில் இடம் மாற்றிவிடலாம்...அவ்வாறு செய்வது தவறு என்று பதிவு திருடர்களுக்கு ஏனோ உரைப்பது இல்லை. ஒருவரின் சொந்த கருத்தை அவரறியாமல் திருடுவது அநாகரீகம், அசிங்கம், கேவலம் ...!!

எது ஒன்றும் எங்கிருந்தாவது எடுத்ததாகத்தான் இருக்கும். ரிஷி மூலம் எது என்று யாருக்கும் தெரியாது. ஒரு பதிவை அப்படியே காப்பி செய்து போடுவதை விட அதில் இருக்கும் மூல கருத்தை எடுத்துகொண்டு அத்துடன் தங்களின் சொந்த கருத்துக்களையும் சேர்த்து எழுதுவது ஏற்புடையது. 

அதை விட்டுவிட்டு  ஒரு எழுத்துக்கூட விடாமல் அப்படியே காபி செய்து வெளியிடுவதை பார்க்கும் போது எரிச்சல் தாள முடியவில்லை. இப்போது தான் தெரிகிறது என் போன்ற நிலையை ஏற்கனவே சந்தித்த மற்றவர்களின் நிலை...! சகோதரி ஜலீலா அவர்கள் அப்போது எத்தனை வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை உணருகிறேன். அடுத்தவர்களின் வயிற்றேரிச்சலை கொட்டி திருடர்கள் கண்ட பலன் என்னவோ???

காப்பி  ரைட் வாங்கி வச்சுகோங்கனு நண்பர்கள்  சொன்னாங்க...'நானும் எடுத்து வச்சிருக்கிறேன்' அப்டின்னு சொல்லிக்கலாம்...ஆனா அதை வச்சு கோர்ட்ல கேசா போட முடியும்...?! வேதனை !!

சொந்த(நொந்த) அனுபவங்கள்... 

* முக நூலில் தன்னை சமூக சேவகர் என்று ஒருவர் கூறி கொள்வார், குழந்தைகள் சம்பந்தப்பட்ட எனது பதிவுகளின் சில பாராக்களை காப்பி செய்து முக நூலில் போட்டு இருந்தார். எனது பெயர், லிங்க் எதுவும் இல்லை...அவரது நண்பர்களும் இவர் சொன்ன கருத்து என்று ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தார்கள், அதை அனுசரித்து இவரும் பதில் கூறி இருந்தார். தொடர்ந்து இங்கிருந்து காப்பி பண்ணி ஸ்டேடஸ் தொடர்ந்து போட்டு கொண்டே இருந்தார்...எனக்கு அதீதமாக படவே, இன்பாக்சில் சுட்டி காட்டினேன், உடனே 'சாரி' என்றதுடன் என் தள லிங்கை அங்கே குறிப்பிட்டார். ஆனால் சற்று நேரத்தில் லிங்க் குறிப்பிட்ட அந்த ஸ்டேடஸ் டெலீட் செய்யப்பட்டு விட்டது... ஏன் இந்த ஈகோ ?! லிங்க் குறிப்பிட்டால் எங்கே தான் அதுவரை போட்டு வந்த பெரிய மனிதன் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சமா ?!! மனதில் சேவை எண்ணம் சிறிதும் இல்லாத, இவர் ஒரு சமூக சேவகர் ?!

* தனி நபர் வளர்த்த காடு பற்றி நான் எழுதிய மற்றொரு பதிவு முக நூலில் சுற்றி வருகிறது...ஆனால் வேறு ஒருவரின் பெயரில்...??! இது எந்த விதத்தில் நியாயம் என புரியவில்லை. நானே எனது இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தான் எழுதி இருந்தேன். ஆனால் லிங்க் , என் பெயர் போடவில்லை என்றாலும் பரவாயில்லை , வேறு ஒருவர் பெயரில் வெளிவருவது  படு அபத்தம் !!?

அந்த பதிவை எழுத எனக்கு  மூன்று வாரம் ஆகியது. The Times of India வில் வந்த செய்தியை பார்த்து அது குறித்த வேறு விரிவான தகவல்கள்  இணையத்தில் இருக்கிறதா என தேடி, மொழிபெயர்த்து என் கருத்துக்களையும் கலந்து எழுதினேன். ஜாதவ் பயேங் போட்டோ தேட இரண்டு நாள் ஆச்சு... இப்படி சிரமப்பட்டு எழுதிய ஒன்றை கொஞ்சமும் வெட்கமில்லாமல் தங்களது பெயரை போட்டு வெளியிடுகிறார்கள்.

கூகுள்ல 'ஜாதவ் பயேங்' என்று டைப் பண்ணினா என் பதிவு மட்டும் தான் இருக்கும் என்பதை பார்க்கலாம்...தமிழ் பிளாக்கில் அவரை பற்றி இதுவரை வேறு யாரும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் (இருந்தால் லிங்க் கொடுக்கவும்)

* மெதுபக்கோடா என்கிற  முக நூல் தளம் ஒன்று சில நாட்களாக எனது தாம்பத்தியம் பதிவுகளை அப்படியே காபி செய்து வெளியிட்டு வருகிறது...அங்கிருந்து பல இடங்களுக்கு பகிரப்பட்டு சென்று கொண்டிருக்கிறது...இப்படி பலராலும் பிற இடங்களுக்கு செல்வது எனக்கு  மன உளைச்சலை கொடுக்கிறது. இதை பலர் ஷேர் செய்வதின் மூலம் அவர்களும் இத்திருட்டுக்கு உடந்தையாகிறார்கள்.

இப்படி மொத்தமாக காபி செய்து போடுவதை விட இன்னார் எழுதியது, இந்த லிங்கில் இருக்கிறது படித்து கொள்ளுங்கள் என்று லிங்க் கொடுக்கலாம்...எல்லோருக்கும் பயன்படதானே எழுதுகிறோம் போய் சேரட்டும் என விட முடியவில்லை...சிலரும், நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? அது தானே எனக்கும்...

மேலும் இந்த தொடரை புத்தகமாக போட இருக்கிறேன்...! நாளை அதை படிப்பவர்கள்  என்னை திருடியாக(?) பார்க்கப்படவும் வாய்ப்பு  இருக்கிறது...!!???  ( வேடிக்கை அல்ல, இப்படியும் நடக்கலாம்...மக்களே !!)

* இந்த பதிவை நேற்று காலையில் எழுதி முடித்தேன்...அதற்குள் மாலையில் சௌந்தர் மெயில் பண்ணி சொல்றான், 'அக்கா உங்க கவிதை இங்க இருக்கு, இது தான் லிங்க்' என்று !! இது ஒரு பெண்(!) சௌந்தர் அங்கே சென்று இது வேறு ஒருவரின் கவிதை, குறைந்த பட்சம் அவங்க பேராவது குறிப்பிடுங்கள் என்று போட்ட அத்தனை கம்மெண்டும் உடனுக்கு உடன் டெலீட் செய்யப்பட்டுவிட்டது...(எவ்வளவு உஷாரா இருக்காங்க ?!)
    
எனது  பல நாள் சிந்தனை, உழைப்பு இப்படி ஒரு நொடியில் திருடபடுவது மனதை மிக வருத்துகிறது...தயவு செய்து பிறரை வேதனைபடுத்தும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்...

பதிவை பாதுகாத்துக்கொள்ள என்ன வழி மேற்கொண்டாலும் பிரயோசனம் இல்லை. எல்லாவற்றுக்கும் குறுக்கு வழி கண்டுபிடித்து விடுகிறார்கள் திருடர்கள்!!

சுத்த  அயோக்கியத்தனம்

சிலர் நல்ல விஷயம் தானே பகிரப்படுகிறது என்று சொல்கிறார்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு படைப்பாளி, தன் படைப்பு மற்றவர் பெயரில் வெளியாவதை பார்க்கும் போது எவ்வளவு கோபம் வரும்? 

பிறருடைய உழைப்பை, கருத்துக்களை,கற்பனைகளை, படைப்புகளை  திருடி தன்னுடைய பெயரை போடுவது என்பது (வெளிபடையா சொல்ல முடியவில்லை) அவ்வளவு கேவலம்.

எந்த  உரிமையில் தன்னுடையது என்று கூறுகிறார்கள்...கொஞ்சங்கூட யோசிக்க மாட்டார்களா?? அடிப்படை நாகரீகம் என்பதே இல்லாமல் போய்விட்ட மட ஜென்மங்களா...?

தகவல் எடுக்கப்பட்ட எனது தளத்தின் லிங்க் குறிப்பிடாமல் இருப்பது

என் கருத்தை அப்படியே தனது கருத்தாக திரித்து கூறுவது

காபி பேஸ்ட் செய்வது

ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றுவது.

இது  போன்ற எதுவாக இருந்தாலும் தவறு தான்.

முகநூலில் ஒருத்தர் வெளியிட்ட கவிதை, கட்டுரை படிக்கிறவங்க கொஞ்சம் யோசிங்க...இதை வெளியிட்டவர் இந்த மாதிரி எழுத கூடியவர் தானா ? பிளாக் ஏதும் வச்சி அதில் எழுதி இருக்கிறாரா ??  ஒருவேளை வேறு இடத்தில் இருந்து எடுத்தது போல சந்தேகம் வந்தால்/தெரிந்தால் கம்மேண்டில் அதை குறிப்பிடுங்கள்...நண்பர் தானே என்றும் , நேரமின்மை என்றும் ஒருவரின் தவறுக்கு துணை போகாதீர்கள்.
வேண்டுகோள் 

இது  போன்றவை இனி தொடர்ந்து கொண்டே இருந்தால் பிரைவசி செட்டிங்க்ஸ் மூலமாக  குறிப்பிட்ட சிலர் மட்டும் படிக்குமாறு செய்யலாம் என நினைக்கிறேன்...

'மனதோடு மட்டும்' தளத்தில்  உள்ள ஆக்கங்கள் , கட்டுரைகள், தொடர்கள், கவிதைகள் போன்றவற்றை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் எக்காரணம் கொண்டும் என் அனுமதி இன்றி இனிமேல் பிரதி எடுக்க கூடாது என்பதை இங்கே வேண்டுகோளாக வைக்கிறேன்.

                                                                 * * * * *
 
எனது பதிவுகளை என் அனுமதி  இன்றி பிரதி எடுத்து அவர்களின் பதிவு போல் வெளியிட்ட அத்தனை பேர் மேலும்  என் கண்டனத்தை வன்மையாக இங்கே பதிவு செய்கிறேன்...

                                                                 * * * * *
இரண்டு திருடல்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

இந்த படத்தில் உள்ளது என் கவிதை - என்னவனே....!

கவிதை இங்கே - http://sanvishblue.blogspot.in/2010/11/blog-post_5550.html

இந்தப் பதிவை திருடியவர் - Nayaki Krishna

இந்த படத்தில் உள்ளது என் பதிவு - தாம்பத்தியம் - பாகம் 25 - போடுங்க ' தலையணை மந்திரம் ' !?

பதிவு இங்கே - http://www.kousalyaraj.com/2011/08/25.html

இந்த பதிவை திருடியவர்[கள்] - மெது பக்கோடா

இன்னும் நிறைய முகப்புத்தகத்தில் உலாவுகின்றன.

நன்றிகள் : 

* தாம்பத்தியம் பதிவுகள் எங்கே திருடப்பட்டன என்பதை கண்டு அங்கே சென்று பல எதிர்ப்பு கமெண்டுகளை பதிவு செய்த தம்பி புவனேஷ்க்கு என் நன்றிகள். இவரது தளம் பிரியமுடன் புவனேஷ்

* வாசல் தளத்தின் பதிவுகள் வெளியிட பட்ட இடத்தை கண்டு எனக்கு தெரிவித்த தம்பி சௌந்தருக்கும் என் நன்றிகள்.

* Screen shot photos எடுத்து கொடுத்த தம்பி பிரபுவுக்கு என் நன்றிகள்.
                                                                    * * * * *

படம் - நன்றி கூகுள் 
               

செவ்வாய், ஜூன் 5

சுற்றுச்சூழல் மீதான அக்கறை நமக்கு இருக்கிறதா ?!!



ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடபடுகிறது...இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துவதற்காக ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டக் குழு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு நாட்டை தேர்ந்தெடுக்கிறது...இந்த ஆண்டு இந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது...

இதற்காக பெருமை கொள்ள முடியாது, எங்கே குறைவு இருக்கிறதோ அங்கே தான் நிறைவு செய்து கொள்ள வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும்...120 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாமல் 60 % மக்கள் இருக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது..!!

இத்தகைய மோசமான நிலையில் நாடு இருக்கும்போது வல்லரசு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறும் அதி மேதாவிகளை என்னவென்று சொல்ல ??!

தரமற்ற குடிநீர்,
சாக்கடையாகும் நீர்பிடிப்பு பகுதிகள்,
பிளாஸ்டிக் கழிவால் சீர்கெட்டுப்  போன சுற்றுப்புறம்,
மணல் கொள்ளையால் காணாமல் போகும் ஆறுகள்,
மரங்களை வெட்டியதால் சுடுகாடாய் மாறிய பசுமை பிரதேசங்கள்

பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 

ஆனால்... 

மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் ஆபத்துகள்...

இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை.

மரங்கள்  நடுவது போன்ற கண் துடைப்புகள்

ஒரு வாரத்தில் இத்தனை மரங்களை நட்டோம் என்று லட்சத்தில் கணக்குகளை சொல்கிறார்கள்...இது சாத்தியமா ?!! எந்த ஊரில் , எந்த தெருவில் என்று விவரமாக கூறினால் நல்லது. நடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அதை பாராமரிப்பது தான் மிக முக்கியம்...மரம் நடுவது என்பது வியாபாரம் அல்ல !! விளம்பரத்துக்காக மரம் நடுபவர்கள் தாங்கள் நட்ட மரங்களை தொடர்ந்து கண் காணிக்கிறார்களா என தெரியவில்லை. தற்போது வி.ஐ.பி கள் ஒரு கன்றை நடுவதை போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதுடன் அவர்களின் சமூக கடமை நிறைவேறி விட்டதாக நிறைவு கொண்டுவிடுகிறார்கள். இப்படி அல்லாமல் முழுமையாக மரம் நடுவதை செயல்படுத்த வேண்டும்...

அரசின்  வீண் ஜம்பங்கள் !!

"வனங்கள்: உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் வனங்களின் பங்கு, குறிப்பாக இந்திய வனங்களின் பங்கு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுசெய்யப்படும். - செய்தி 

 எந்த  வித விளம்பரமும் இல்லாமல் 30 வருடங்களாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய மாமனிதரை இன்று நினைவுகூர்வது ஏற்புடையதாக இருக்கும்...இவரை உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசு தான் இப்படி சொல்கிறது......

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பூமியின் சுற்றுச்சூழலை காப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் சமநிலையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது"

இன்னும்  எத்தனை காலத்திற்கு இது போன்ற பச்சை பொய்களை நம் அரசியல்வாதிகள் கூறி கொண்டிருப்பார்கள் ???!! கேவலம் !!

சுற்றுச்சூழலின் எதிரி பிளாஸ்டிக் !!

2009 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன. அதனையும் உடனுக்கு உடன் அகற்றி விடுகிறார்கள். ஊரின் நுழைவாயிலிலேயே இங்கே 'பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையாக இது இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒத்துழைப்பை பெற்று சிறப்பாக முழுமையாக செயல்படுத்த பட்டு வருகிறது பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் !!

ஜூன் முதல் தேதியில் இருந்து திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும்,அவ்வளவாக கவனிக்க படவில்லை. ஆனால் தற்போது மேயர் அவர்களின் சிறப்பான அக்கறை, ஆர்வத்தினால் முழுமையாக செயல்படுத்த படும் என்று நம்புகிறோம்...! அரசு மட்டும் திட்டங்களை போடும் ஆனால் அதை கடைபிடிக்க வேண்டியது மக்களின் வேலை. 500 ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்கமுடியாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்காமல் தவிருங்கள்.

கூவமாகும் தாமிரபரணி போன்ற அனைத்து நதிகளையும் சுத்தபடுத்த கடுமையான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...!!


நமது கடமையும் கூட

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஏசி அறைக்குள் மீடியா மைக்குகள் சூழ கோட் போட்ட பெரிய மனிதர்கள் மட்டும் பேசி விவாதிக்கும் விஷயம் அல்ல...
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு நல்லதும் நடைபெறாது...இது நமது மண்...நம் பூமி...இதனை காக்கவேண்டியது நம் கடமை...

நம்மால் இயன்றவரை மரங்களை வெட்டாமல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, நதியில் கழிவுகளை/குப்பைகளை போடாமல், மரங்களை நட்டு வளர்த்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம்...

அடுத்த தலைமுறைக்கு நல்லதை மட்டும் விட்டு செல்வோம்...!!


அனைவருக்கும் பசுமைவிடியல் நண்பர்களின் சார்பில் சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்...!! 
 
source - பசுமை விடியல் 

படங்கள்  - நன்றி கூகுள்

வெள்ளி, ஜூன் 1

விவாதம் விவாகரத்தில் முடியும்...?! தாம்பத்தியம் - பாகம் 28

அன்பு நட்புகளே !

விடுமுறைக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்...தாம்பத்தியம் தொடரின் இந்த பாகத்தில் தம்பதிகளின் சாதாரண விவாதங்கள் கூட பெரியப்  பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்த்த எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு நிறை குறைகளை சொல்லுங்கள்...தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

* * *

கணவன் மனைவிக்குள் எந்த  பிரச்சனை என்றாலும் அது வீட்டை விட்டு வெளியேப்  போகக்கூடாது...'நாலு சுவத்துக்குள்ளத்தான் இருக்கணும் துன்பங்களையும் வேதனைகளையும் மனதுக்குள் போட்டுப்  புதைச்சுக்கோ' என்று பெண்ணுக்கும், 'எல்லாத்தையும் மென்னு முழுங்க பழகிக்கோ' என்று ஆணுக்கும் அறிவுரைச்  சொன்ன காலங்கள் மலையேறிப்  போய் லேட்டஸ்டா "சரிப்பட்டு வரலைனா டைவர்ஸ் பண்ணிடு" என்ற அட்வைஸ்கள் அதிகம் கேட்கின்றன.
 

விவாகரத்துக்கு இப்போதெல்லாம் நீண்ட நெடிய காரணங்கள் தேவையில்லை...
 
 ஒரு சில வார்த்தைகள் போதும்...!!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிக மிக முக்கியம். பேச்சு பரிமாற்றங்கள் சரியான விதத்தில் அமையாவிட்டால் பிரிவிற்கு இதுவே அடிப்படை காரணமாகி விடுகிறது. வெறுப்பாக, எரிச்சலுடன் எடுத்தெறிந்து பேசுவது, துணை பேசுவதில் இருக்கும் அர்த்தத்தை சரியாகப்  புரிந்துக்கொள்ளாமல் பேசுவது, ஈகோவைக்  காயப்படுத்துவது மாதிரி பேசுவது போன்றவை. கையாளுவதில் கவனம் இல்லையென்றால் ஆபத்தில் கொண்டுப்  போய் விட்டுவிடும். இன்றைய அவசர யுகத்தில் தம்பதியினர் பரிமாறிக்  கொள்ளும் உரையாடல்களும் sms அளவில் சுருங்கி விட்டன. பேசப்படுவது ஒரு சில வார்த்தைகள் என்கிற நிலையில் அதையும் கவனமின்றி உதிர்த்துவிட்டால் தொலைந்தது இல்லறம் !!

ஒருவரின் குணம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது பேச்சுக்கள் தானே?

உரையாடல்களின் போது...

=>  தம்பதிகள் என்று இல்லை. காதலர்கள் இருவருக்கான உரையாடலில் ஒருவர் மற்றொருவரிடம் "ஏன் டல்லா இருக்கிற" என விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இவர் காரணத்தை சொல்லி விட்டால் ' ஓ ! அப்படியா, சரி சரி கவலைப்படாத, சரியாய் போய்டும்' என்று ஆறுதல் கூறுவதுடன் மேட்டர் ஓவர். மாறாக 'ஒண்ணுமில்ல' என்று பதில் வந்தால் உடனே உஷாராகிவிட வேண்டும். ஆமாம் இனிதான் வார்த்தையை கவனமா கையாளனும் !! ஒண்ணுமில்ல என்றால், "ஏதோ இருக்கிறது அதை என்னவென்றுக்  கேட்கமாட்டியா, மனதில் இருப்பதை உன்னிடம் கொட்டி விட்டால் நான் சரியாகி விடுவேன்" என்ற ஏக்கம் ஆவலுடன் ஒளிந்திருப்பதை புரிந்துக் கொண்டாக வேண்டும்.  (இந்த 'ஒண்ணுமில்ல' வார்த்தையை சொல்வது அதிகமாக  பெண்கள் )

இந்த நிலைமை புரியாம ஏதோ பர்சனல் பிராப்ளம் போலனு விட்டுவிட்டால்  போச்சு. கதை கந்தலாகிவிடும். அந்த ஏக்கம் பொறுத்துப்  பொறுத்துப்  பார்த்து முடிவில் விரக்தியில் போய் விழுந்து விடும். இதனால் பெரிய சிக்கல்கள் அப்போது உடனடியாக வர வாய்ப்பு இல்லை என்றாலும் பல விரக்திகள் ஒன்று சேர்ந்தால்...?! யோசிங்க...!

=> உரையாடல் ஒரு கட்டத்தில் சண்டையின் தொடக்கம் போல தெரிஞ்சா  எதுக்கு வம்புனு   'சரி உன் இஷ்டம்' என்று கூறி ஒதுங்கி விடுவது  அல்லது ஒன்றும் பேசாமல் மௌனமாகி விடுவது. இது இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். இது துணையின் மீதான அக்கறையின்மையை காட்டும்.  அமைதியாகப்   போய்விட்டால் அவர்களை மதிப்பது போலாகும் என்பது எல்லாம் பழைய கதை...இப்போது அப்படியே தலைகீழ், சைலென்ட்டாக  இருந்தால்  ' மதிக்கவில்லை' என்று பொருள்.

=> சிலரது வீடுகளில் பேச்சு சூடுப் பிடிக்கத் தொடங்கியதும் உடனே சட்டையை மாட்டிகொண்டு வெளியே நடையைக்   கட்டிவிடுவார்கள் ஆண்கள்...

ரிலாக்ஸ் பண்ண, சிக்கலைத்  தவிர்க்க வெளியேறுவது  உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால் அங்கே வீட்டில்  மனதிற்குள்  புழுங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மனநிலை !? அதுவும் தவிர எவ்வளவு நேரம் தான் பிரச்னைக்கு பயந்து வெளியில் இருப்பீர்கள், மறுபடி வீட்டிற்குள் வந்து தானே ஆக வேண்டும் அப்போது எவ்வாறு மனைவியின்  முகத்தை எதிர்கொள்வீர்கள்...அசட்டுச் சிரிப்புடனா? முறைத்துக்கொண்டா?  இரண்டையும் அலட்சியப்படுத்தி விட்டு தன்னை(மட்டும்) பற்றிய  சிந்தனைக்குள் விழுந்துக்  கொண்டிருப்பாள் மனைவி.

'நான் தனியாத்  தவிச்சிப்  புலம்பிட்டு இருக்கிறப்போ நீ கண்டுக்காம வெளில போறியா, அப்படியே இரு, எனக்கும் ஒரு காலம் வரும்' என்பதாக இருந்து விட்டால் அதன் பின் அக்கணவனின் நிலை !!? சண்டையிட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மனைவி , பிரச்சனை தான் முடிந்து விட்டதே என சகஜமான நிலையில் இருக்கும் கணவன்!! வசமாக ஒரு சந்தர்ப்பத்தில் அகப்பட்டுக்கொண்டால் என்னாகும் கணவன் நிலைமை...யோசிங்க...!

=> சரிக்கு சரி மல்லு கட்டும் சண்டை கோழிகள் சிலர். சின்னச் சண்டை வந்தாலும் போதும் எடுத்ததுமே உச்சஸ்தாயில் கத்துவது...'வெட்டுவேன், குத்துவேன், நீ ஒழிஞ்சாத் தான் நிம்மதி...' இந்த ரேஞ்சில் போகும் இவர்களது உரையாடல்...அடுத்த சில மணி நேரம்/சில நாள் கழித்து ஒன்றுமே நடக்காத மாதிரி சகஜமாகி விடுவார்கள். இரண்டு நிலையில் எது உண்மை... சண்டை போட்டு கத்தியது உண்மை என்றால் அடுத்துள்ள சமாதானம்? விட்டுக் கொடுத்தலா? விட்டுக்கொடுத்தல் என்றால் அது ஏன் சண்டையின் ஆரம்பத்தில் இல்லை. தெருச்சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாச்சு, அப்புறம் விட்டுக் கொடுக்கிறாங்களாம்...என்ன லாஜிக் இது ?

சண்டையின் போது ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் ! அதன் விளைவு , எங்கேப்  போய் முடியும் யோசிங்க...!

பழி வாங்கும் மனோபாவம்

நடந்த பிரச்சனையில் ஒருவர் வென்றதைப்  போன்று இருந்தால், அதாவது ஒருவரின் பேச்சுடன் அப்பேச்சு முடிவுக்கு(?) வந்தது என்றால் தனக்கு அடுத்து எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என பழி வாங்க காத்திருக்கும் தம்பதிகள் உண்டு. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பழிவாங்குவது என்பது அடுத்ததாக எவ்வாறு எங்கே செல்லும் என்று சொல்ல முடியாது...தற்போது இது போன்ற மனநிலை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை !!

ஈகோ !
(நான் என்னும் முனைப்பு)

"நம்மை பற்றிய நினைப்பும் உணர்வுகளும் தலைத்தூக்கும் வரையில் தான் நமது செயல் ஒழுங்காக இருக்கும்...வாழ்க்கையும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். ஆனால் ஈகோவானது மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு உயர்வு மனப்பான்மையாக மாறுவது தான் தவறு. இது தான் தன்னுணர்வு அகம்பாவமாக மாறும்  நிலை" என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்

தம்பதிக்குள் நீயா நானா என்கிற ஈகோவுக்கு இடமே தரக்கூடாது அன்பான உறவை ஈகோ கொத்திக்  கிழித்து விடும். பெரும்பாலும் இது தலைத்  தூக்கினால் எல்லாவற்றுக்கும் விவாதம் தொடங்கி விடும். இருவரில் ஒருவர் வாய் மூடும் வரை விவாதம்  நடந்துக்  கொண்டே இருக்கும். அதே சமயம் தற்காலிகமாக துணையின் அடக்கி வைக்கப் படும் உணர்ச்சிகள் எந்த நேரத்திலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கலாம்...

பெண்கள்

பொதுவாகச்  சொல்வாங்க ஆண்களுக்குதான் 'தான்' என்கிற ஈகோ அதிகம் இருக்கும் என்று... அப்படியல்ல பெண்களிடமும் உண்டு.ஆணின் ஈகோ பெண்ணை மட்டும் தாக்கும், ஆனால் பெண்களின் ஈகோ மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். உன்னைவிட 'நான் எதில் குறைந்துவிட்டேன் நானும் உன் அளவு படித்திருக்கிறேன், வேலை பார்க்கிறேன் ' இந்த எண்ணம் விவாதத்தின் போது விஸ்வரூபம் எடுத்து ஈகோ பூதாகரமாக வெளிப் படுகிறது.


ஆண்களை பொருத்தவரை அவர்கள் விவாதிப்பதை  அவ்வளவாக விரும்புவதில்லை. சில வார்த்தைகளை வேகமாக உச்சரித்து விட்டு அமைதியாகி விடுகிறார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் அத்தனைக்கும் தனித் தனி அர்த்தம் கண்டுப்பிடித்து வாதத்தை நீட்டித்துக் கொண்டேச்  செல்வார்கள்...வாதத்திற்கு சளைத்தவர்களில்லை பெண்கள் ! இத்தகைய பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை...இதைப்  புரிந்துகொண்டு  பெண்கள் குடும்பத்தைக்  கொண்டுச்  செல்லவேண்டும்....விவாதத்தில்  ஜெயிப்பது  முக்கியமில்லை... உறவில் ஜெயிப்பதே முக்கியம் ...!!

ச்சீ போடா,  முட்டாள், இடியட், ராஸ்கல் இதை தனிமையான நேரத்தில் சொன்னால்  இனிமையாக   இருக்கும், அதையே சண்டை நேரத்தில் கோபமாகச்  சொன்னால்... ?!!

பல விவாதங்கள் விவாகரத்தில் போய்த்தான் முடிந்திருக்கின்றன என்பதை மனதில் வைத்துக்  கொண்டு, பேச்சில் மிகுந்த கவனம் தேவை...'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வாங்க...எப்படிப்பட்டச்  சொல்லை வெளிப்படுத்த வேண்டும் என்பது உங்க சாய்ஸ் !!

பின் குறிப்பு-

இப்படியெல்லாம்  கூட நடந்துக்  கொள்வார்களா என அவரவர் வீட்டுச்  சூழலை ஒற்றுமைப்படுத்தி வினா எழுகிறதா ? பிரச்னையை ஏந்திக் கொண்டு என்னிடம் வந்தவர்களை வைத்துத்தான் தாம்பத்தியம் பதிவு எழுதுகிறேன்...தொடரைத்  தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இது தெரியும். தெரியாதவர்களுக்காக இந்த சிறு  விளக்கம். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...உங்களின் மனதோடு  மட்டும்...

பிரியங்களுடன்
கௌசல்யா