வீட்டுத் தோட்டம் முதல் பாகத்திற்கு கருத்துக்கள் தெரிவித்த நட்புகளுக்கு நன்றி...மேலும் சிலவற்றை சிறிய அளவில் இங்கே விளக்கி இருக்கிறேன்...தொடரும் பதிவுகளில் ஒவ்வொன்றை குறித்தும் தனித் தனியாக பகிர்கிறேன்...
உருளை கிழங்கு
உருளை கிழங்கு
உருளைகிழங்கை பாதியாக கட் பண்ணி, கட் செய்த பகுதியை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்...ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது. இல்லைஎன்றாலும் பரவாயில்லை.நன்றாக விளைந்ததாக இருந்தா ஒகே.
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமாக பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.
இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.
தக்காளி, மிளகாய், கத்தரி
நன்கு முற்றிய கத்தரிக்காய் வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
விதைக்கும் முறை
விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்...காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்...செடி முளைத்து அரை அடி உயரம் வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்று அல்லது இரண்டாக நட்டு விட வேண்டும்...
தக்காளி காய்க்கத் தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.
பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும். அதுக்கும் சிம்பிளா ஒரு வழி இருக்கு.
பந்தல் முறை
கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்...இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கைப்பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்...கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டிக் கொண்டே வர வேண்டும். பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்...இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.
கயிறுக்கு பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகப் படுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வச்சு உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க...அவ்வளவுதான் !
மற்றொரு பந்தல் முறை
உரம்
இரண்டு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பிளாஸ்டிக் சாக்கில் சமையலறை கழிவுகள்/காய்ந்த இலைகள் போன்றவற்றை சேகரித்து போட்டு கொண்டே வரவேண்டும்...ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் போட்டு வர வேண்டும்...முதலில் போட்டு வைத்தது கொஞ்ச நாளில் மக்கியதும் அதை எடுத்து, செடிகள் இருக்கும் தொட்டியின் மணலை லேசாக கிளறி மக்கிய காய்கறி கழிவை கொஞ்சம் அள்ளி போடலாம்...மீன்,மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் செடிக்கு விடலாம்.நன்கு வளரும். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் எதையும் வீணா சாக்கடையில் கொட்டாமல் , செடிகளுக்கு ஊற்றுங்கள்...
பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(நேரடியாக ஊற்றக்கூடாது) சுத்திகரித்துனு சொன்னதும் என்னவோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சுடாதிங்க...ரொம்ப சிம்பிள் தான்.
கழிவு நீரை சுத்திகரித்தல்
சோப்பு தண்ணீர் /கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன...இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல...எனவே இதை ரொம்ப எளிதான வழியில் சுத்திகரிக்கலாம்...
சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி நீள அகலத்துக்கு ஒரு தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்...விரைவில் வளர்ந்து விடும்...கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்...நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்...கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்...சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்...
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவு தான் . மற்றபடி மேலே கூறிய அதே மெதட் தான். கருங்கல் ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள்,
குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும்
தின்றுவிடும். சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.
ஸ்பெஷல் கேர்
விதைக்காக கடைகளை தேடி வருந்துபவர்களுக்கும் /தூரமாக இருக்கிறது யார் போய் வாங்குறது என்பவர்களுக்கும் தான் இந்த குறிப்பிட்ட வகைகளை மட்டும் கூறினேன்...மற்றவர்கள் கடைகளில் வாங்கி பயிரிடலாம்.
தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை(தார்பாலின் சீட்) விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ் !!
* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்...
* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்...சாணி கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லையென்றால் சாதாரண தண்ணீர் போதும்.
*மண்புழு உரம் ஆன்லைனில் கிடைக்கும். ஒரு செடிக்கு இரண்டு ஸ்பூன் என்றளவில் போட்டால் போதும். அந்த உரத்தில் மண்புழு முட்டைகள் இருக்கும் மண்ணில் போட்டதும் கொஞ்சநாளில் புழுக்களாக மாறி மண்ணிற்கு மேலும் சத்துக்களை கொடுக்கும் .
* * * * *
Happy Gardening !!
அக்கறையும், கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில மெனக்கிடல்கள் அவசியமாகிறது.
நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க, ஒரு பத்துநாள் ஊருக்கு போய்ட்டோம்னா செடிகள் நெலம அதோ கதிதான் , அதுக்கு என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குறீங்களா? கவலையே படாதிங்க அதுக்கும் கைவசம் சில செட் அப் வேலைகள் இருக்கு !! அது என்னனு அடுத்த பாகத்தில் சொல்றேன்...சரிதானா ?! அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க...
உற்சாகமான வீட்டுத் தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!
உற்சாகமான வீட்டுத் தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!
* * * * *
அப்புறம்...
வீட்டுத் தோட்டத்தை ரொம்ப ஆசையா பார்த்துப் பார்த்து செஞ்சிட்டு வர்ற இருவரின் பதிவை அவசியம் படிங்க...இதுக்கு முந்திய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலமாக அந்த இரு தளங்களை காணக் கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது...
* துளசி மேடம் தளம் - http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/yam.html
* சிவா என்பவரின் தளம் - http://thooddam.blogspot.in
அப்புறம்...
வீட்டுத் தோட்டத்தை ரொம்ப ஆசையா பார்த்துப் பார்த்து செஞ்சிட்டு வர்ற இருவரின் பதிவை அவசியம் படிங்க...இதுக்கு முந்திய பதிவிற்கு பின்னூட்டம் போட்டதின் மூலமாக அந்த இரு தளங்களை காணக் கூடிய நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தது...
* துளசி மேடம் தளம் - http://thulasidhalam.blogspot.co.nz/2012/05/yam.html
* சிவா என்பவரின் தளம் - http://thooddam.blogspot.in
நீங்களும் சென்று பாருங்க...மறக்காதிங்க பிளீஸ் !!
* * * * *
Happy Gardening !!
பிரியங்களுடன்
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா
படங்கள் - நன்றி கூகுள்
படங்கள் - நன்றி கூகுள்






















