வீதிக்கு வீதி பிரச்சாரங்கள்
வறட்டு பேச்சுக்கள்
செல்லரித்துப்போன அறிக்கைகள்
திரைக்கு பின் நடித்தவர்கள்
இன்று மக்கள் முன்.....!!
வாக்காளன் ஏமாளி அதிலும் தமிழன்
ஏமாளிகளின் தலைவன் !
அரங்கேறும் நாடகங்கள் ஒரு பக்கம்
விமர்சிக்கும் பண்பாளர்கள் மற்றொரு பக்கம் !
காரசார விவாதங்கள் நடந்தென்ன லாபம்
முடிவு ஊழலுக்கு சாதகம் தான் !!
அரசியல் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது...நம்மில் பலருக்கும், நடப்பவை அனைத்தையும் பார்க்கும்போது வெறுப்பும், எரிச்சலும் வருவது நியாயம் தான். ஆனால் இவனுக்கு வாக்களிக்காதே , அவனுக்கு வாக்களிக்காதே என்றும் எனக்கு வாக்களிக்க மனம் இல்லை என்றும் சொல்வதால் எதையும், யாரையும் தடுத்து நிறுத்த இயலுமா நம்மால் ? முடியாது..... நடப்பது நடந்தே தீரும், நான் வாக்கு போடவில்லை என்றால் மற்றொருவன்.....! எப்படியும் கிழக்கில் சூரியன் உதித்தே தீரும் , மாற்ற இயலுமா ??
இந்த பதிவுலகம் முதல் தெருவோர டீக் கடை பெஞ்சு வரை திரும்பும் திசை எல்லாம் வீண் வாதங்கள், புலம்பல்கள், சாடல்கள், தனிமனித தாக்குதல்கள் !! இந்த ஜன சமுத்திரத்தில் இருந்துகொண்டுத் துப்பினால் அது நம் மீதும் விழும் என்பதை மறந்தே போனோம்.....?!
இருக்கும் கட்சிகள் அனைத்தையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன மாற்றம் வந்து விடும்...? பேசி பேசி வீணாய் போவதுதான் தமிழனின் தலை எழுத்தா ? அதை தவிர தமிழன் மூளை வேறு ஒன்றையும் சிந்திக்காதா ?? வெட்டிப் பேச்சினால் எதை சாதிக்கமுடியும் ? ஆனால் நாம் நினைத்தால் முயன்றால் நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும்.....
எவ்வாறு ??
இங்கே தவறுகள் தட்டிக் கொடுக்கப்படுகின்றன, யாரால் மக்களால்...?!
'நமக்கென்ன' என்கிற அலட்சிய மனப்பான்மை கொண்ட நமக்கு விமர்சிக்க மட்டும் என்ன தகுதி இருக்கிறது ?!
அரசியல்வாதிகளை வளர்த்துவிட்டது மக்கள்.....
அவர்களின் ஊழலை கண்டுகொள்ளாதது மக்கள்.....
ஊழல் கண்டதும் வேர் அறுக்காதது யார் தவறு ?
தேர்தலின் போது மட்டும் குரல் கொடுப்பவனாகவும், தேர்தல் முடிந்ததும் சொந்த வேலை பார்க்க சென்றுவிடும் சராசரியாக இனியும் இருக்கணுமா?? யோசியுங்கள் !!
ஆட்சிக்கு வருவது எந்த கட்சியாகவும் இருந்துவிட்டு போகட்டும்.....! ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின், யார் தவறு செய்தாலும் தவறுகளை தட்டி கேட்கவேண்டும்.உதாரணத்துக்கு சொல்லணும் என்றால் எழுச்சியாக பேசுபவர்கள்,பத்திரிக்கைகளில், இணையத்தில் எழுதுபவர்கள் எங்கே தவறு என்றாலும் துணிந்து குரல் கொடுங்கள். அரசியல்வாதி, அரசு அதிகாரி யார் நேர்மைக்கு மாறாக செயல்பட்டாலும் எதிர்த்து கேளுங்கள். அரசாங்க அலுவலகத்தில் லஞ்சம் கேட்கபடுகிறதா, கொடுக்காதீர்கள், அதற்கும் மேலிடம் சென்று புகார் அளியுங்கள், ஒருவேளை அங்கேயும் நீங்கள் கண்டுகொள்ளபடவில்லையா ?
சோர்ந்து போகாதீர்கள், அதே அலுவலக வாசலில் கோஷம் போடுங்கள்.....உங்களை போன்ற நிலையில் பலரும் அங்கே நின்று கொண்டு இருக்கலாம்.....அவர்கள் வருவார்கள் உங்கள் துணைக்கு, ஒரு குரல் இரண்டாகும் , இரண்டு மூன்றாகும் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் நிச்சயம் மேலிடத்தால் கவனிக்க படுவீர்கள், நீங்கள் சென்ற காரியம் தாமதமானாலும், எல்லோராலும் இந்த சம்பவம் கவனிக்கப்படும், முக்கியமாக மீடியாக்களால்.....! ஒரு இடத்தில் மட்டும் நடைபெற்றால் சாதாரண செய்தி, அதே செயல் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றால் யோசித்து பாருங்கள்...இந்த விழிப்புணர்ச்சி எத்தகைய மாற்றத்தை கொண்டுவரும் என்று...?!!
ஒரே நாளில் எதுவும் மாறிவிடாது.....ஆனால் நல்ல மாற்றங்கள் இப்போதைக்கு அவசியத்தேவை. அத்தகைய மாற்றங்கள் அரசியல்வாதிகளால் அல்ல மக்களால் என்னும் போது விரைவில் நடக்கும். நம் முன்னோர்கள் நாட்டை குறை சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் அமர்ந்திருந்தால் நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்திருக்குமா ?
'வெள்ளையனே வெளியேறு' என்றார்கள் வெளியேறினார்கள் வெள்ளையர்கள் ! இன்று கொள்ளையனே வெளியேறு என்று சொல்ல கூடிய தைரியம் நமக்கு வேண்டும் !!
இது சரியில்லை, அது சரியில்லை, நாடா இது என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் முதலில் அப்படி பேசுவதை நிறுத்துங்கள், உங்கள் வீரத்தை செயலில் காட்டுங்கள்...இது உன் தேசம் , உன் மக்கள், அரசியல் தலைவிதியை மாற்றி எழுத வை, உன்னால் முடியும்.....இனி மக்களை கண்டு அரசியல்வாதியும், அதிகாரிகளும் அஞ்ச வேண்டும்...நம் வரி பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் அவர்கள்...நாமே எஜமானர்கள் நினைவில் வைப்போம் இன்றே.....
நாட்டை மாற்று அதற்கு முன் நீ மாறு.................
நாட்டை குறை சொல்வதை விடுத்து
நம்மை சீர்தூக்கி பார்ப்போம் முதலில் !
அயலான் கண்ணில் துரும்பை பார்க்கும் முன்
உன் கண்ணில் இருக்கும் உத்ரம்
நினைவுக்கு வரட்டும் !
எங்கும் ஊழல், விமர்சிக்கும் முன்
மேசைக்கடியில் நேற்று நீ கை நீட்டியது
நினைவுக்கு வரட்டும் !
யாரோ துப்பிய எச்சிலை அருவருக்கும்முன்
சற்றுமுன் நீ துப்பியது
நினைவுக்கு வரட்டும் !
தனிநபர் ஒவ்வொருவரும் நம்மை முதலில் திருத்திகொள்வோம், மாற்றம் நம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.....
சொல்லாதீர்கள்...!!
வேற்றுகிரகவாசி போல சந்திரனில் இருந்து அப்போதுதான் இறங்கின மாதிரி படு மட்டமா பிறந்த நாட்டை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் ? குறைகளை விமர்சியுங்கள் ஆனால் அத்துடன் நின்று விடாதீர்கள் தீர்வு ஒன்றையும் சொல்லுங்கள். தீர்வு சொல்ல இயலவில்லையெனில், குறைகளை சொல்வதையும் விட்டுவிடுங்க.....குறைகளை மட்டுமே தொடர்ந்து ஒருத்தர் சொல்லும்போது அது பலரின் மனதிலும் வலு கட்டாயமாக போய் உட்கார்ந்து கொள்கிறது....முடிவில் பலரின் மனதிலும் நாட்டை பற்றிய தவறான எண்ணமே மிஞ்சுகிறது...இந்நிலை நாளைய தலைமுறையினருக்கு நல்லதில்லையே...ஊழல் அற்ற ஒரு நல்ல நாட்டை நம் வாரிசுகளுக்கு விட்டு செல்வோம்...பிற நாடுகளை உதாரணம் காட்டுவது இனியும் இருக்காது அவர்கள் நம்மை பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.....!
ஊழல் நிறைந்த தேசத்தில் வாழ்வது தவறில்லை, அதை சகித்துக்கொண்டு போவது மாபெரும் தவறு !!
நாடு வல்லரசு ஆவது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் நல்லரசாக்க 'மக்கள்' நாம் முயற்சி மேற்கொள்ளுவோம்.
வாழ்க்கை ஒருமுறை, அதை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிப்போம் !!
வாழ்க பாரதம் ! வாழிய எம்மக்கள் !!
பின்குறிப்பு :
ஊழலற்ற இந்தியா சாத்தியமா ? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததால் எழுதப்பட்ட பதிவு இது. முழுதும் களையப்பட இயலாது என்றாலும் முயற்சி செய்யலாமே என்ற ஒரு ஆசை என்போல் எல்லோர் மனதிலும் இருக்கும். இந்த தலைப்பில் விவரம் நன்கு தெரிந்த மற்ற நண்பர்கள் பதிவுகள் எழுதினால் தெரியாத பல விசயங்கள் தெரிய வரும். நாட்டின் மேல் அக்கறையுள்ள/இல்லாத பலருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும் . இது என் வேண்டுகோள். இயன்றவர்கள் எழுதுங்களேன்......
இந்த கேள்விக்கு பதில் இதுதான் என்பதுபோல் அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரத போராட்டம் பற்றி எண்ண தோன்றுகிறது...அவரை பற்றி நண்பர் அருண்பிரசாத் அவர்கள் ஒரு பதிவு போட்டு உள்ளார். அவசியம் அதை படிக்க வேண்டுகிறேன்....
கழுகு - என்ன படிக்கலாம்...? +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டும் தொடர்







